Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கிரேக்கச் சிந்தனை

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

கிரேக்கச் சிந்தனை - எஸ்.வி. ராஜதுரை

(`எக்ஸிஸ்டென்ஷியலிசம்' என்ற நூலிலிருந்து )

பண்டைய கிரேக்க - ரோமானிய ஞானத்தின் அடிப்படைப் பண்பு மனிதனை ஒரு முழுமைக்குள் வைத்து அவனைப் பற்றிய வரையறுப்பை வழங்கியது தான். இம்முழுமையுடன் மனிதனுக்குள்ள உறவு, அதில் அவன் வசிக்கும் இடம் ஆகியவற்றின் அடிப்படையில் மனிதன் பற்றி விளக்கத்தை இந்த ஞானம் வழங்கியது. இந்த முழுமை பேரண்டமாக இருக்கலாம். நகர-அரசாக இருக்கலாம். இயற்கையாக இருக்கலாம். அல்லது ஒரு கருத்தாக்க அமைப்பாகவும் இருக்கலாம். இதில் எதுவாயினும் அதில் மனிதனுக்குரிய இடம் இன்னது தான் என வரையறுத்துக் கூறப்பட்டது.

பண்டையக் கிரேக்கனின் பேரண்டத்தில் ஒவ்வொன்றுக்கும் நிலையான இடம் உண்டு; கதிரவன், நிலா, விண்மீன் ஆகியவை போலவே, மனிதனுக்கும் இப்பேரண்டத்தில் நிலையான இடம் உண்டு; எல்லாமே முறைப்படி இயங்கிக் கொண்டிருக்கின்றன; அறிவைக் கொண்டு எல்லாவற்றையும் விளக்கி விடலாம்; அதன் துணைகொண்டு தனது ஆற்றலைப் பெருக்கிக் கொள்ளலாம் என்ற தன்னிறைவு கொண்டவன் அக்கால கிரேக்கன். தான் செயலாக்கத்துடன் மேற்கொள்ளும் ஒவ்வொரு காரியத்தைப் பற்றியும் அவனுக்கு உறுதியான நம்பிக்கை உண்டு. அவனுக்கு வேண்டியதெல்லாம் திறமையும் அறிவைப் பயன்படுத்தலுமே. மனிதன் தன்னறிவைக் கொண்டு தொழில் நுணுக்கத்தை வளப்படுத்தி, பேரண்டத்தில் தனக்கு விதிக்கப்பட்ட வாழ்வை வாழ வேண்டியவன் என்று அவன் நம்பினான்.

அவனது பேரண்டம் காரண - விளைவுக்குட்பட்ட, குறையற்ற, நிறைவான ஒன்று. இத்தகைய பேரண்டம் அவனது உள் நம்பிக்கைக்கான அடிப்படையாக இருந்தது; புற உலகைக் கட்டுப்படுத்த முடியும் என்ற நம்பிக்கையைத் தந்ததே இக்கருத்துதான். அவனைப் பொருத்தவரை, நிகழ்ச்சிகள் திரும்பத் திரும்பச் சக்கரம் போல் நிகழ்ந்து கொண்டிருக்கின்றன; அவன் வரலாற்றின் போக்கைப் பற்றிக் கவலைப்படுவதில்லை. மனிதனைப் பொருத்தவரை, அவனது ஆளுமையைப் பொருத்தவரை, `அறிவு' தான் அவனது மையம். இப்பேரண்டத்தைப் பொருத்தவரை, `விதி' தான் மனிதனுக்குரிய அடையாளங்களை வழங்குகிறது. அவனது நிலையை விளக்குகிறது. மனிதனின் சாதனைகள் `விதி'க்குக் கட்டுப்பட்டவை.

தேல்ஸ் முதல் டெமாக்ரிடஸ்வரை, உலகம் என்பது முன்கூட்டியே நிர்ணயிக்கப்பட்டுவிட்ட ஒன்றாகக் கருதினர். மனிதனால் இவ்வவுலகின் அடிப்படைகளை அறிந்து கொள்ள முடியும். மனிதன் ஈட்டுகிற பெருமைகள் அனைத்திலும் சாலச் சிறந்தது இந்த அறிவு தான் என கிரேக்க மரபு கருதியது. தனக்கு விதிக்கப்பட்டது இன்னதுதான் என்பதைப் பற்றிய தனக்குரிய பேரின்பத்தையும் பற்றிய உணர்வு பெறுதல்தான் கௌரவமிக்கதாகக் கருதப்பட்டது.

பிளேட்டோ முதல் ஸ்டாயிக்குகள் வரையிலானவரிடையே `அறிதல்' என்பது மீண்டும் ஒரு முக்கியத்துவம் பெறுகிறது. மனிதனுக்கு விடுதலையையும், கடந்த நிலையையும், பேரின்பத்தையும் வழங்கக்கூடியது. `அறிதல்' என்பதுதான் என்று கருதப்பட்டது. முதல் மூல உண்மை என்பது புலனறிவுக்குப் புலப்படக்கூடியது என்ற நிலைப்பாடு இருந்தபோதும் சரி, அது மனத்துக்கு மட்டுமே புரியக்கூடியது என்ற நிலைப்பாடு இருந்தபோதும் சரி, `அறிதல்' என்பதே மிகச் சிறப்பான பண்பாகக் கருதப்பட்டது. கருத்துமுதல் கொள்கையினரானாலும் சரி, பொருண்மைக் கொள்கையினரானாலும் சரி, கிரேக்க - ரோமானியத் தத்துவ மரபில் அழுத்தம் தரப்பட்ட கருத்து, அறிதல்.

அடிமை - ஆண்டான் என்ற வர்க்க வேறுபாட்டை நியாயப்படுத்துகிற, இதன்காரணமாக உடல், உழைப்பு, புலனுணர்வு, பொருளுலகு ஆகியவற்றை மறுத்தொதுக்குகிற பிளேட்டோ வாகட்டும், சமூக முரண்பாட்டுச் சுழலிலே சிக்கித் தவிக்கிற மனிதனை எல்லாவகை அச்சங்களிலிருந்தும் விடுவிக்க அறிவு தர முயலும் லூக்ரிஷியஸ் ஆகட்டும். `அறிவு' என்பதை மனிதனின் மாட்சி எனக் கொண்டனர்.

இந்த அறிவு மரபு பிளேட்டோவையும் உருவாக்கியது. பிற்காலத்தே மறுமலர்ச்சித் சிந்தனையாளர்களையும் உள்ளடக்கியது.

இவ்வுலகை மறுத்து, சாரங்களின் உலகில் சரணடைந்த பிளேட்டோவுக்கும் இவ்வுலகை வென்றெக்கப் புறப்பட்ட மறுமலர்ச்சிச் சிந்தனையாளர்களுக்குமிடையே ஒரு மறைமுகமான தொடர்பு இருக்கிறது.

மனித வாழ்வுக்கு ஒளியூட்டியது அறிவு மரபு என்ற உண்மைக்கு அடியிலே மற்றொரு உண்மை ஒளிந்துள்ளது.

மனிதனின் மற்றெல்லாச் செல்களைக் காட்டிலும் மேன்மையானது எனக்கருதப்பட்ட அறிவுதான், சாரங்களின் உலகைத் தேடுமாறும், இவ்வுலகின் தீமைகளைக் களைந்தெறிய சக மனிதருடன் ஒன்றிணைந்து போராடுவதற்குப் பதிலாக, தனிமனித விமோசனம் தேடுமாறும் பிளேட்டோவைத் தூண்டியது.

மனித அவலங்களின் ஊற்றுக் கண்ணாக இருப்பது வர்க்க சமுதாயம் என்ற முழுமுதற் காரணத்தை அறிய முனைப்பு காட்டாமல், இப்பேரண்டம் முழுவதற்கும் முழுமுதற்காரணமாக இருப்பவரைப் பற்றிய தேடலில் அரிஸ்டாட்டிலை ஈடுபடுத்தியது. `அறிதல்' என்பது இவ்விரு சிந்தனையாளர்களிடையே எத்தகைய பாத்திரம் வகித்தது என்பதை நாம் சிறிது காண்போம்.

அறிவின் துணைகொண்டு தனது ஆற்றலைப் பெருக்கிக் கொள்ள நினைக்கும் கிரேக்கனிடமும் ஹேட் என்னும் பாதாளத்திலிருந்து மரண தேவதை தன் இறக்கைகளை விரித்துக் கொண்டு வருகிறது. `மரணம்' என்ற பிரச்சினை பிளேட்டோவை மிகவும் பாதிக்கிறது. அப்போது பேரண்டம் ஒளியுடன் இருட்டையும் கொண்டுள்ளதாகத் தெரிகிறது. நன்மையைக் காட்டிலும் தீமையே பெரிதாகத் தோன்றுகிறது. எதேனிய அடிமைக் குடியாட்சியின் தத்துவவாதியான பிளேட்டோ நிலை குலைந்து போகிறார். எக்காலத்தையும், எல்லா வாழ்க்கையையும் பார்வையிடுபவராக இருக்க விரும்புகிறவர் பிளேட்டோ. எல்லாமே மாறிக் கொண்டிருக்கின்றன. நிலையானது ஏதும் இல்லை என்று யெராக்லிடஸின் சீடன் கூறுவதும் பிளேட்டோவின் காதுகளில் விழுகிறது. நான் நிலையற்றவனா? என் கிரேக்க சமுதாயம் நிலையற்றதா? நான் இறவாமை பெற்றவனா? என் கிரேக்க சமுதாயம் நிலையற்றதா? நான் இறவாமை பெற்றவனா? இல்லையா? நான் அழிந்து போவேனா? எனது ஆர்வங்களைச் சிதறடிக்கும் ஏதோ வொன்று இப்பேரண்டத்தில் உள்ளதா? அதை நான் அறிந்து கொள்ள முடியுமா? என் மரணத்தை நான் வெல்ல முடியுமா? இவ்வாறெல்லாம் பிளேட்டோ சிந்திக்கிறார்.

இப்பேரண்டம் முற்றிலும் நல்லதாகவோ அல்லது முற்றிலும் தீயதாகவோ இருந்தால் பிரச்சினையே இல்லை. நாம் நிம்மதியுடன் இருப்போம். ஆனால் இப்பேரண்டம் நல்லதாக இருக்குமானால், தீமை எங்கிருந்து வருகிறது? இப்பேரண்டம் நோக்கம் அற்றதாக இருக்குமானால், நன்மை எங்கிருந்து வருகிறது? பிளேட்டோ இப்பிரச்சனையைத் தீர்க்க ஒரு த்வைதக் கொள்கையைக் கையாள்கிறார். மாற்றமும் அழிவும் கொண்ட பொருண்மை உலகைவிட்டு, மாற்றமே இல்லாத, நிலைத்த தன்மை கொண்ட கருத்துகளின் உலகுக்கு வருகிறார் பிளேட்டோ. இக்கருத்துகள் கூட, ஒரு வகையில், புறப்பொருள்களால் வழங்கப்பட்ட அனுபவத்தின் அடிப்படையில் சுருக்கப்பட்ட கருத்தமைப்புகள்தான் என்பதை அவர் உணரவேயில்லை.

மனிதன் சாகிறான், ஆனால் மனிதகுலம் இருந்துகொண்டே இருக்கிறது. குதிரை சாகிறது. ஆனால் குதிரையினம் இருந்துகொண்டே இருக்கிறது. குறிப்பிட்ட, தனிப்பட்ட, திட்டவட்டமான ஒன்றைக் காட்டிலும், பொதுவான, அருவமான ஒன்றே நிலையானது என்று பிளேட்டோ கருதுகிறார். பிறகு அவற்றைப் பற்றிய கருத்தே நிலைத்துவிடுகிறது. இறவாமை, அழியாமை, எல்லையில்லாத் தன்மை இவற்றில் தம் கவனத்தைச் செலுத்தும் பிளேட்டோவுக்கு பிதகோரஸின் கணிதம் பெரும் நம்பிக்கையைத் தருகிறது. கணிதம் அழிவற்ற, நிலையான உண்மைகளைச் சொல்கிறது. அதன் துணைகொண்டு முதலும் முடிவுமற்ற சாரங்களை அறிந்து கொள்ளலாம்!

பிளேட்டோ இரு உலகங்களையும் காண்கிறார். ஒன்று வெறும் தோற்றங்களின் உலகம், மாறிக்கொண்டிருக்கிற, அழிந்து விடுகின்றவற்றைக் கொணட உலகம். மற்றொன்று உண்மையான உலகம். சாரங்களின் உலகம். அதிலிருந்தே நிலையற்ற உலகத்திலுள்ளவை தம் தோற்றங்களைப் பெறுகின்றன. ஒரு உலகம், அழிகின்ற உடலின் உலகம். மற்றது, அழிவற்ற ஆன்மாவின் உலகம். சாராம்ச உலகினை அறிந்துகொண்டால், இந்த உலகின் நிலையற்ற வாழ்க்கை பற்றிய அச்சத்தைத் தவிர்த்துக் கொள்ளலாம். `தூய அறிவைப் போற்று' `அறிவே துணை' - இவையே பிளேட்டோவின் முழக்கங்கள். பிளேட்டோ போற்றும் அறிவு, நாம் சாதாரணமாகப் புரிந்துகொள்ளும் அறிவைக் காட்டிலும் மாறுபட்டது. புலன்களால் பெறப்படும் அறிவைக்காட்டிலும் உயர்ந்தது.

இறவாமை பற்றிய உரையாடலில், பிளேட்டோ தன் கருத்துகளைக் `குதிரைகள் பூட்டிய தேர்' என்ற படிமத்தின் வழியே விளக்குகிறார். தேர்ப்பாகன்தான் அறிவு. வெண் குதிரைகளும் கருப்புக் குதிரைகளும் தேரை இழுக்கின்றனர். இவற்றின் கடிவாளக் கயிறுகள் பாகனான அறிவின் கரங்களில் உள்ளன. மனிதனின் ஆன்மீக, உணர்ச்சிப் பகுதிகளின் குறியீடாக வெண்குதிரைகள் இருக்கின்றன. இவை அறிவின் ஆணைக்கு எளிதில் கட்டுப்பட்டவை. முரட்டுத்தனமான கருப்புக் குதிரைகளோ, ஆசைகள், வேட்கைகள் ஆகியவற்றுக்கான குறியீடுகள். தேர்ப்பாகன் அவற்றைச் சாட்டைகளைக் கொண்டு அடக்க வேண்டியுள்ளது. சாட்டையும் கடிவாளமும் முறையே அத்தியாவசியம். கட்டுப்பாடு கியவற்றைக் குறிக்கின்றன. அறிவு, மனிதனின் தெய்வீகத் தன்மையாகவும் மற்ற கூறுகள் விலங்குத் தன்மையாகவும் சித்தரிக்கப்படுகின்றன.

உடல் ஆன்மாவுக்கான தடையாக இருக்கிறது என்று பிளேட்டோ முடிவுக்கு வந்தார். உடலானது உண்மையையும் ஞானத்தையும் அடைவதற்காகச் சிரமப்பட விடுவதில்லை. அது நமக்கு ஆசைகளையும், அச்சங்களையும், ஆர்வங்களையுமே தருகிறது. நாம் உடலின் இயல்பான தன்மைகளால் களங்கப்பட்டு விடுகிறோம். இவ்வுடலிலிருந்து நம்மை நாமே விடுவித்துக் கொள்ள வேண்டும். தூய்மைப்படுத்திக் கொள்ள வேண்டும். சாராம்ச உலகை அறியும் வரை தியானிக்க வேண்டும். அறிவுதான் அதற்குள்ள ஒரே வழி. அதைக் கொண்டு சாரங்கள் வாழும் உலகினைக் கண்டுபிடிக்க முயலுகிறார் பிளேட்டோ.

சிந்தனையை உலகிலிருந்தும், உடலிலிருந்தும், உணர்வுகளிலிருந்தும், புலன்களிலிருந்தும் பிளேட்டோ துண்டித்து விடுகிறார். செயலையும் சிந்தனையையும் வெவ்வேறாக்குகிறார். ஒரு காலத்தில் பேரண்டத்துடன் ஒன்றிப்போன கிரேக்கன், பின்னொரு காலத்தில் அதிலிருந்து பிரிக்கப்பட்டு ஆய்வுக்குரிய புறப்பொருளாகிநான். இப்போது, அவனே இரண்டாகப் பிளவுபட்டு ஆன்மாவாகவும் உடலாகவும் மாறிவிட்டான். பிளேட்டோவின் சிந்தனை, நடைமுறை மனிதனைச் சாடுகிறது. புலன் உணர்வுகளாலும், உள்ளுணர்வுகளாலும் கிளர்ந்தெழுகிறது. கவிஞர்களைச் சாடுகிறது. ஹோமரை வெறுத்தொதுக்குகிறது. `உன்னையே நீ அறிவாய்' என்ற சாக்ரடீசுக்கு எதிராகக் கச்சை கட்டுகிறது. தத்துவ வாழ்க்கை நடைமுறை வாழ்க்கைக்கு மேலானது என்கிறது. அறிவைக் கொண்டு கருத்துகளின் அழிவற்ற வடிவங்களை நிலையற்ற பொருள்களின் மூலாதாரங்களைக் கண்டுபிடித்துவிட்டதாகக் கருதும் பிளேட்டோ, கூறுகிறார். `நீ உன் கண்களால் காணும் குதிரை, குதிரைத் தனம் என்ற கருத்தின் தோற்றமே. கலைகளா? அவை புலன்களைச் சேர்ந்தவை. அவையும் பொய்மையின் பகுதிகளே. கருத்துகளே மெய்யான மெய்ம்மை. விடுதலை பெறுவது எவ்வாறு? ஒதுங்கி நில் - செம்மைப்படு. மெய்ம்மையின் நிழல்களை ஆராய்வதில் தொடங்கி மெய்ம்மையை அடை. தோற்றங்களில் தொடங்கிச் சாரங்களைச் சேர். இந்தச் சாரங்களின் உலகைச் சேர்ந்த ஆன்மாவுக்கு, உடலில் இருந்து விடுதலை கொடு!

பிளேட்டோவின் விசாரணை, உலகு பற்றிய உண்மையைக்கண்டறிவதற்கான கருத்துமுதல் அறிவுக் கோட்பாடுதானா? கணக்கற்ற நிகழ்ச்சிப் போக்குகளை இப்பேரண்டத்தில் உள்ள ஏதோ ஒரு அந்நியத் தன்மையை விளக்குவதிலுள்ள சிக்கலா? நடைமுறை வாழ்க்கையை அடிமைகளுக்கு ஒதுக்கி வைத்துவிட்டு, சிந்தனை வாழ்க்கையை ஆண்டைகளுக்குத் தந்த வர்க்க நிலைப்பாடா? ஆம்! ஆனால் இக்கேள்விகள் அனைத்தும் மற்றொரு பிரச்சினையைப் பார்க்கத் தவறுகின்றன. பிளேட்டோவின் சிக்கல், இவ்வுலகில் உள்ள தீமையை நடைமுறையில் கடப்பதில் உள்ள சிக்கலே. தனது ஆன்மாவைக் காலத்திலிருந்தும், மரணத்திலிருந்தும் காப்பாற்றிக் கொள்ள வெளியுணர்வுடன் பிளேட்டோ தேடிக் கொண்ட பாதையே அது. இறவாமை பெறத் துடித்த பிளேட்டோ கூறிய வழி அது.

webdunia.com

தலைக்குள்ள பூச்சி பறக்கிற மாதிரி இருக்கு....... :lol:

தலைக்குள்ள பூச்சி பறக்கிற மாதிரி இருக்கு....... :lol:

ம்ம்..பூச்சி பறக்குதோ வசி அண்ணா.. :wub: (அப்ப அடுத்த சிந்தனையாளர் வந்து நம்ம வசி அண்ணா தான் :wub: )..எங்க எல்லாரும் ஒருக்கா ஜோரா கையை தட்டி விடுங்கோ.. :wub:

அப்ப நான் வரட்டா!!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.