Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

விபூதி தூஷண மறுப்பு

Featured Replies

இன்று பல கிறிஸ்தவர்கள் சைவ சமயத்தை பல வேறாக நிந்தனை செய்து வருவதைக் காண்கிறோம். அவர்கள் விபூதி அணிவதையும், உருத்திராக்கம் அணிவதையும் நிந்தனை செய்வர்.

அவர்களுக்கு தக்க மறுப்பு கொடுத்த புத்தகம் யாழ்ப்பாணத்து ஸ்ரீலஸ்ரீ நா.கதிரைவேற் பிள்ளை எழுதிய "சைவ பூஷண சந்திரிகை" என்னும் புத்தகம். அந்த புத்தகத்தின் ஒரு பகுதி உங்களது பார்வைக்கு

கிறிஸ்தவர்கள் "மாட்டுச் சாம்பர் பாவத்தைப் போக்குமா" என்றும், "இலந்தைக் காய்போன்ற உருத்திராக்கக் காய்கள் மோக்ஷத்தைக் கொடுக்குமா" என்றும், உங்கள் ஞானிகளாகிய பட்டினத்தடிகள் முதலாயினோரே "நீற்றைப் புனைந்தென்ன நீராடப்போயென்ன" என்றின்னன போன்ற வாக்கியங்களால் நீறு உருத்திராக்கங்களாற் பிரயோசனமில்லை யென்றுங் கூறியிருக்கின்றனர் என்றும், நம்மவர்களை மருட்டித் திரிகின்றனர். அக்கிறஸ்தவர்கள் தமது பைபிலில் கூறப்பட்ட வாசகங்களையெல்லாம் மறந்து இவ்வாறு கூறுதல் பொருந்துமா? ஆகலால் சைவசமயிகள் யாவரும்பின் வருவனவற்றைக் கேட்டு அவர் தூஷணங்களை நிராகரித்தல் முக்கிய கடமையாம். அக்கிறிஸ்தவர்களது பைபில் நீற்றை யணியவேண்டும் எனவும், தேவனது முத்திரைகளைத் தரிக்கவேண்டும் எனவும், அவற்றாற் பாவம் நீங்கப்படும் எனவும் கூறுகின்றன. அவை வருமாறு:-

எண்ணாகமம் - 19 - அதிகாரம். 5-9 வசனங்கள்

"கடாரியின் தோலும் மாமிசமும் இரத்தமுஞ் சாணியும் எரிக்கப்படவேண்டும். சுசியாயிருக்கிறவ னொருவன் அந்தக் கடாரியின் சாம்பலைப் பாளயத்திற்குப் புறம்பேசுசியான ஒரு இடத்திலே கொட்டி வைக்கக்கடவன். அது இஸ்ரவேற் சந்ததியின் சபையார் நிமித்தஞ் சுசிசெய்யுஞ் சலத்தின்பொருட்டு வைக்கப்பட வேண்டும். அது பாவத்தைப் பரிகரிக்கும்."

  • தொடங்கியவர்

எபிரேயர் - 9 - அதி. 13 - வச.

"காளை, வெள்ளாட்டுக்கடா இவைகளின் இரத்தமும், கடாரியின் சாம்பலும் அசுசிப்பட்டவன் மேலே தெளிக்கப்பட்டுச் சரீர அசுசி நீக்கி அவனைச் சுத்திகரிக்கும்."

யாத்திராகமம் - 12 அதி, 22, 23, வச.

"இஸ்ரவேலர் எகிப்து தேசத்தி லிருந்தபொழுது யெகோவா விதித்தபடி ஆட்டு இரத்தத்தினாலே தங்கள் தங்கள் வாசல் நிலைக்கா லிரண்டிலும், நிலையின் மேல்விட்டத்திலும் அடையாளமிட்டு வைத்தார்களென்றும், அந்தத் தேவவம்சத்தாரைக் கொல்லும்படி யெகோவாவாலனுப்பப்பட்ட தூதர் அவ்வடையாளமுள்ள விடுகளிற் போகாமல் அவ்வடையாளம் இல்லாத வீடுகளிற் போய் அங்குள்ள தலைப்பிள்ளைகளைக் கொன்றார்" என்றுஞ் சொல்லப்பட்டிருக்கின்றன.

வெளி - 9 அதி, 4 வச.

"தேவனுடைய முத்திரையை நெற்றிகளில் தரியாத மனுடர்களை மாத்திரமே வருத்தப்படுத்துகிறதற்கு அவைகளுக்குக் கட்டளை கொடுக்கப்பட்டது."

  • தொடங்கியவர்

இங்ஙனஞ் சொல்லப்பட்டிருக்கவும் கிறிஸ்தவர்கள் அநியாயமாகத் தூஷித்துத் திரிதல் பாவமேயாம். சிவத்தின் அறிகுறியாகவுள்ள விபூதி ருத்திராக்கங்களைச் சைவர்கள் அணிதல் அறியாமையும் பயனின்மையுமாய் முடியுமெனின், கிறிஸ்தவர்கள் கோதுமை அப்பத்தையும் திராட்ச ரசத்தையும் முறையே இயேசுக் கிறிஸ்துவின் மாமிசமாகவும், இரத்தமாகவும், அல்லது அவைகளுக்கு அறிகுறியாகவேனும் பாவித்து உட்கொண்டு வருவது அறிவும் பயனுமாமா? இங்ஙனனே மத்தேயு 26-ம் அதிகாரம் இருபத்தாறாம் இருபத்தெட்டாம் வாகனங்களில் "யேசு அப்பத்தை யெடுத்துத் துதிசெய்து அதனைப்பிட்டுச் சீஷருக்குக் கொடுத்து நீங்கள் எடுத்துப் புசியுங்கள்; இதுவே என்சரீரமென்றார்" எனவும், பின்பு பாத்திரத்தையும் எடுத்துக் கொடுத்து நீங்கள் எல்லாரும் இதிற் பானம் பண்ணுங்கள். இதுவே புதிய உடன்படிக்கைக்கேற்ப, பாவமன்னிப்புக் கென்று அநேகருக்காகச் சிந்தப்படுகின்ற என்னுடைய இரத்தமென்றார் எனவுஞ் சொல்லப்பட்டிருக்கின்றது. இப்படியே கிறிஸ்துவினாலே அப்பமுந் திராட்ச ரசமும், மாமிசமாகவும், இரத்தமாகவும் விசேஷமடைந்தன வென்று பைபிலிலேயே காணப்படுகின்றன. அவ்வாறே கிறிஸ்தவர்களும் அவை இரண்டனையும் ஒப்பி இராப்போசனமென்று பீடத்தின்மேல் வைத்து மாமிசமாகவும் இரத்தமாகவும் பாவித்து உட்கொள்கின்றனர். அங்ஙனமாயவர்கள் சிவத்துவப் பேற்றிற்கும் திருவருட் பேற்றிற்கும் அறிகுறியாக நம்பெருமானாற் கொடுக்கப்பட்டு அணியப்பட்டுவருஞ் சிவசின்னங்களைத் தூஷித்தல் யாதாய் முடியும்? சிலுவைக்குறியைக் கழுத்தில் தரித்திருப்பதும், வீடுகள், பிரதிமைகள், சிகரங்கள், சுடுகாடு முதலியவற்றில் அதனை காட்டுதலும் அவையாமா? இவற்றைச் சிந்தித்து அடங்காது நிந்தித்தல் தாயைப்பழித்து மகள் குற்றத்துக்குள்ளாய தன்மை போலுமாம்.

  • தொடங்கியவர்

பட்டினத்தடிகள் முதலாய சிவஞானிகள் சொல்லியவற்றிக்குச் சமாதானமாக உண்மைப் பொருளைக் கூறுவாம். பட்டினத்தடிகளூக்கு விபூதி தரித்தல் பிரயோசனமில்லை யென்பது கருத்தாயின், அவரே பின்னரும் "ஐயுந் தொடர்ந்து" என்னுஞ் செய்யுளில், "செய்யுந் திருவொற்றியூருடையீர்திரு நீறுமிட்டுக் - கையுந் தொழப்பண்ணியஞ் செழுத் தோதவுங் கற்பியுமே" எனவும், "ஊரீருமக்கோ ருபதேசங் கேளு முடம்படங்கப் - போரீர் சமணைக் கழுவேற்று நீற்றை" எனவும், "நாய்க்குண்டு," என்னுஞ் செய்யுளில், "மதி யாமல்வரும் - பேய்க்குண்டு நீறு" எனவும், "உரைக்கைக்கு நல்ல திருவெழுத் தைந்துண்டுரைப்படியே செருக்கித் தரிக்கத் திருநீறுமுண்டு" எனவும் கூறியருளியது என்னையோ? மற்றைய சிவஞானிகள் வாக்கியமும் இப்படியே இருக்கும். இப்படி யிரண்டையும் ஒருவர் தாமே திருவாய் மலர்ந்தருளினமையால் அவைகள் ஒன்றை யொன்றழிக்க மாட்டாவாம். அவைகட்குச் சமாதானமிருக்கின்றது. அவ்வுண்மையைக் கேட்டு அறியாமல் எங்கேயாயினும் ஒரு செய்யுளை யெடுத்துப் படித்து, இப்படிச் சொல்லியிருக்க நீங்கள் செய்வது தவறு தவறு என்று சொல்வது அறியாமையாம். மருந்துண்பவ னொருவன் வைத்திய சாத்திரத்தில் விதித்தவாறே அநுமானத்தோடு உண்ணாமையையும், அவபத்தியங்களைத் தள்ளிப் பத்தியங்களைக் கொள்ளாமையையும், வைத்திய சாத்திரம் வல்லானொருவன் கண்டிரங்கி, நீ உண்ணும் இம்மருந்தினாற் பயன் யாது என்றக்கால் அவற்கு அம்மருந்து உண்ணக் கூடாது என்பது கருத்தாகுமோ? அன்றே.

  • தொடங்கியவர்

அதுபோல மலபரிபாகம் வரும்படி கிரியைகளைச் செய்வோர் சிவசாத்திரத்தில் விதித்தவாறே அன்போடு செய்யாமையையும், கொலைமுதலிய பாவங்களைத் தள்ளி இரக்கம் முதலிய புண்ணியங்களைக் கொள்ளாமையையும் சிவசாத்திரம் வல்லார் கண்டிரங்கி, நீர்செய்யும் இக்கிரியைகளாற் பயன்யாது என்றக்கால். அவர்க்கு அக்கிரியைகள் செய்யற்க வென்பது கருத்தாமோ? அன்றே அங்ஙனமே விபூதிருத்திராக்க தாரணஞ் செய்வோர் அன்புடன் செய்யாமைகண்டு அதனாற் பிரயோசனமில்லையெனின், அவர்க்கு அது செய்யவேண்டாமென்பதுகருத்தோ? இல்லை! இல்லை!!

  • தொடங்கியவர்

உருத்திராக்க தூஷண மறுப்பு

சிவசின்னங்கள் என்னும் விபூதி ருத்திராக்கங்கள் அணிவதனால் யாதோர் பிரயோசனமுமில்லையென்று கிறிஸ்தவர்களும், திருநீற்றை அணிதலும், உருத்திராக்கந் தரித்தலும் உறுதிப் பயனைக் கொடுக்காவென்றும், அவைகள் நாராயணமூர்த்திக்கு உகந்தனவல்ல வென்றும், திருமண் கொண்டு ஊர்த்துவ புண்டர மிடுதலும், துளசிமணி தரித்தலுமே வேத சம்மதமும், உறுதிப்பயனைக் கொடுப்பவும், சீநாதனுக்கு உகந்தனவுமா யுள்ளவென்றும், அவனாலும் அவனடியாராலுந் தரிக்கப்படுவனவும் அவைகளே என்றும், வைணவர்களுட் பெரும்பாலாருங் கூறித்திரிகின்றனர். இவ்விரு மதத்தினருமே சிவசின்ன தூஷணஞ் செய்ய முன்வந்து நிற்பவராகலின், அவர் கூற்றையெல்லாம் நிராகரித்து உண்மையை யவர்க்குப் புகட்டுநிமித்தம், கிறிஸ்தவர்கள் சத்திய நூல் என்று கொண்டாடும் பைபிலில் இருந்தும், வைணவர்கள் ஒப்பக் கூடிய இராமாயணம், அத்தியாத்ம ராமாயணம், பஸ்மசாபால உபநிடதம் என்னு மிவைகளினின்றும் பிரமாணங்களைக் காட்டிக் கண்டித்து, எமது பக்கத்தை முன்னரே வலியுறுத்தியுள்ளேம். ஆயினும் இன்னுஞ் சில நியாயங்கள் காட்டி யவர்க்கு நல்லறிவுச்சுடர் கொளுத்தல் நனிதக்கதென்று மனத்து நசை முளைத்தெழுந்து பிடர் பிடித்துந்தலாற் பின்னரும் அநுவதித்தெழுதத் தொடங்கினம்.

  • தொடங்கியவர்

கிறிஸ்தவர்களுட் பற்பலர் இக்காலத்தும் ஒவ்வோர் வருட மாசி மாதங்கடோறும் வருகின்ற (Ash Wednesday) சாம்பரடிப் பெருநாள் என்ற தினத்தில் திருநீறு தரிக்கின்றனர் என்பது யாவருமறிந்த விடயமே. இதுவன்றிச் சைவ சமயிகள் உருத்திராக்கந் தரிப்பதுபோலச் சிலுவைக் குறியைத் தரித்து வருதலும் உண்மையே. அச்சிலுவைக்குறியை நோக்குமிடத்துச் சைவர்களுக்குரிய திரிபுண்டரமும், சிவபெருமானது சூலக்குறி யென்னும் ஊர்த்துவபுண்டரமுஞ் சேர்ந்த வடிவாக் காணப்படுகின்றது. சைவ சமயிகளின் முன் மாதிரியைக் கண்டே அவர்கள் நெடுமையாகத் தரிக்குங் குறியையும், குறுக்காகத் தரிக்குங் குறியையும் சிலுவையாகக் கொண்டார்கள் என்பதிற் சந்தேகமில்லை. இங்ஙனம், அவைகளாற் பாவம் மன்னிக்கப்படும் என்று கொண்டொழுகும் அக்கிறிஸ்தவர்கள் விபூதி ருத்திராக்கங்களாகிய சிவசின்ன தாரணஞ் செய்தலாற் பிரயோசனமில்லை யென்பதும், இழிந்தன வென்பதும் அநியாயமேயாம். இங்ஙனந் தரிப்பவர் சரியான கிறிஸ்தவர் அல்ல என்று சொல்லின். தரியாதவர்களையும் அப்படியே தரிக்கின்ற கிறிஸ்தவர்கள் சொல்லுகின்றனர். இப்படித் தங்களுக்குள்ளேயே அறியாமையையும், மாறுபாடும், தூஷணங்களு மிருப்பவும், அவைகளை யெல்லாம் பரிகரிக்காமல் "தன்கண்ணுள்ள உத்திரத்தைப் பிடுங்காது பிறர் முதுகிலுள்ள துரும்பை எடுக்கப்போவார்" போலச் சிவசின்னங்களைத் தூஷித்தல் அடாதென் றறிவாராக.

  • தொடங்கியவர்

இவர்கள் ஒருவாறிருப்பினும் மற்றைய வைட்டிணவராயுள்ளாரோ கண்ணாடி வீட்டிலிருந்து கல்லெறிவாரைப் போலத் தமக்குத் தாமே வஞ்சகராய், அபராதத்தைத் தேடுகின்றவர்களேயாம். அவர்கள் செய்யும் நிந்தனைகளுக்கோ ஓரளவின்று. நாராயண மூர்த்திக்கும் அவரதடியார்கட்கும் சிவசின்னங்களாகிய விபூதி ருத்திராக்க தாரணம் உண்டு உண்டென்று யுத்தி யநுபவங்களுக்குக் கியைய எவ்வளவு சுருதிகளையும் நம்மவர் காட்டினாலுங் கொண்டது விடாக் குணமுடையராய், ஆழ்வாராதி பாகவதர்கள் அப்படிச் சொல்லியிருக்கின்றனரா? என்று முழங்குகின்றனர். வைணவ பக்த சிகாமணிகளாய் விளங்கும் அவ்வாழ்வார்கள் அருளிச் செய்த வாக்குகளைக் கொண்டே நிலைநிறுத்துகின்றேம். அப்படியே எந்த வைணவர்களாவது நஞ் சைவசமயிகளுக்குரிய சிறப்பு நூல்களில் எங்கேயாவது, சிவபெருமான் அல்லது அவ்வடியார்கள் வைணவக் குறியாகிய மண்ணையுந் துளசிமணியையுந் தரித்தனர் எனப் பிரமாணம் காட்டுவரேல், யாமொப்புவதற்குத் தடையின்று. அங்ஙனம் ஒரு நூல்களிலாவது ஓரிடத்திலாவது கூறப்படாதிருக்கவும், நாம் அவர்கட்கும் எமக்கும் பொதுவான வேதங்கள் உபநிடதங்களினின்றும், அவர்கட்கே சிறப்பு நூல்களாயுள்ள இராமாயணம், பாரதம், நாலாயிரப் பிரபந்தங்களி னின்றும், விஷ்ணுவும் அவரடியாரும் விபூதி ருத்திராக்க தாரணரேயன்றி, மண்ணையுந் துளசி மணியையுந் தரித்தவர் அல்லது தரிப்பவர் அல்லர் எனக்காட்டி நிலைநிறுத்தும்போது, அதனை யொப்பித் தாமுந் தம்மைச் சார்ந்தாரும் விபூதி ருத்திராக்கங்களைத் தரித்து உய்தலும் உய்வித்தலும் முக்கிய கடமையேயாம். இராமாயணப் பிரமாணம், வேதோபநிடதப் பிரமாணம் முன்னர்க் காட்டியுள்ளாம். மற்றையவற்றையுங் காட்டுவாம்.

  • தொடங்கியவர்

ஆயுஷ் காமோத வராஜந் பூதி காமோதவா நர:

நித்யம் வைதாரயேத் பஸ்ம மோக்ஷ காமீச வைத்விஜ:

-மகாபாரதம் - சாந்திபருவம்.

"தர்மன் முதலிய பாண்டவர்களே! ஆயுள் விருத்தியை விரும்புகின்றவனும், செல்வத்தை இச்சிக்கின்றவனும் மோக்ஷத்தையடைய அலாவுகின்றவனும், நாடோறும் பசுமத்தையே (திருநீற்றையே) தரித்தல் வேண்டும்" என்னுஞ் சுலோகத்தின்படி விபூதிதாரணம் பெறப்படுகின்றது.

அங்ஙனமே, தருமன் முதலிய பஞ்சபாண்டவர்களுஞ் சிவசின்ன தாரணராய்ச் சிவபூசை செய்தனர் என்பதும், வீமன் சிவபூசையில் விசேஷித்தவன் என்பதும், கண்ணபிரானைத் தேர்ச் சாரதியாகவும், மைத்துனனாகவும் பெற்ற இந்திர குமரனாய அர்ச்சுனன் பசுபதியை நோக்கித் தவஞ் செய்தான் என்பதும், அவ்வர்ச்சுனன் "பூசையிலாதாலுண்டி புழுப்பினம் புலையன் கட்டம்" என்னுஞ் சிவாகம வாக்கியத்தை மேற்கொண்டு, சிவபூசை செய்தன்றி உணவு கொள்ளாப் பெருந்தகையினன் என்பதும், கண்ணமூர்த்தியானவர் தம்மைச் "சிவனைப் போலப் பாவித்துப் பூசை செய்க" என்று வற்புறுத்தியபோது அங்ஙனம் ஒருவாறு ஒப்பிச் செய்தானென்பதும், சிவபூசைக்கு விபூதி யபிடேகஞ் செய்தலும், விபூதிருத்திராக்கந் தரித்தலும் இன்றியமையாதனவாய் இருத்தலின் விஷ்ணுவுக்கும் அங்ஙனஞ் செய்தான் என்பதும், அவனது குமாரருள் ஒருவனாய், கண்ணபிரான் தங்கையாய சுபத்திரை வயிற்றிற் பிறந்தவனாயுள்ள அபிமன் என்பவனும் யுத்தகளத்திலே தன்னுயிர் நீங்குங்கதியில் அகப்படும், பகைவர்களால் வளைத்திடப்பட்ட கொன்றைமாலை, சிவபெருமான் தரித்தருளிய மாலை போன்ற தொன்றென்று அதனைக் கடக்காது நின்று, பொருத பேரன்புடையவன் என்பதும் மகாபாரதத்தாற் பெறப்படுதலால், நாரணரும் அவரைச்சார்ந்தாருஞ் சிவசின்னதாரணர் என்பது உள்ளங்கை நெல்லிக்கனிபோல் அறியப்படும்.

  • தொடங்கியவர்

இது நிற்க, மயர்வற மதிநல மருளப்பெற்ற பிரபன்னசன கூடஸ்தர் என்றும், மாறன் பணித்த மறைக்கு ஆறங்கங் கூறப்பிறந்த வீறுடைய வடையார் சீயமென்றும், அவர்களாற் புகழ்ந்து உரைக்கப்படும் நம்மாழ்வார், பேயாழ்வார், திருமங்கையாழ்வார் என்னும் இவர்கள் கூற்றுக்களை எடுத்துக் காட்டுகின்றாம். அவைகளையெல்லாம் ஒப்பாது விடமாட்டாரென நம்புகின்றேம். அவை வருமாறு:-

தாழ்சடையு நீண்முடியு மொண்மழுவுஞ் சக்கரமுஞ்

சூழரவும் பொன்னாணுந் தோன்றுமாற் - குழுந்

திரண்டருலி பாயுந் திருமலைமே லெந்தைக்

கிரண்டுருவு மொன்றா யிசைந்து. -நாலாயிரப் பிரபந்தம்.

என்னும் பேயாழ்வார் அருளிச் செய்த மூன்றாந் திருவந்தாதி, 63-ம் செய்யுளின்படி, சிவபெருமானும் விஷ்ணு மூர்த்தியும் ஒவ்வோர் பாதித் திருமேனியை யுடையராய்ச் சேர்ந்து, ஒருவடிவராய் இருக்கின்றனர் என்பது பெறப்படுதலானும்,

  • தொடங்கியவர்

பிறைதங்கு சடையானை வலத்தே வைத்துப்

பிரமனைத்தன் னுந்தியிலே தோற்றுவித்து.

எனத் திருமங்கையாழ்வார் அருளிச் செய்த பெரிய திருமொழி, 3 பத்து, ஐந்தாந் திருவாய் மொழியில், 9-ம் செய்யுட்படி, வலப்பாகத் திருமேனி சிவபெருமானாகவும், இடப்பாகத் திருமேனி நாராயண மூர்த்தியாகவும் இருக்கின்றனர் எனத் தெரிதலால், வலப்பாகம் ஆண்பாலும், இடப்பாகம் பெண்பாலு மென்று கொள்ளும் வழக்கின்படி, சிவபெருமான் ஆண்டன்மையையுடைய சத்திமான் என்பதும், நாராயணமூர்த்தி "நால்வகைப்பட நண்ணிய சத்தியுண் - மாலு மொன்றாதலின் மற்றது காட்டுவான்" என்னுங் கந்தபுராணக் கருத்தின்படி, பெண்தன்மையையுடைய நால்வகைச் சத்திகளுள் ஒன்றாய சத்தி வடிவர் என்பதும் பெறப்படுதலானும், சிவபெருமான் றிருமேனி பரவப் பூசிய விபூதியை யுடைத்தாகலின், நாரணன் றிருமேனியும் அப்படியே திருநீறு பூசப்பட்டதெனவும் அறிதற்பாற்று.

  • தொடங்கியவர்

கரிய மேனிமிசை வெளிய நீறு சிறிதேயிடும்

பெரிய கோலத் தடங்கண்ணன் விண்ணோர் பெருமான்றன்னை

யுரிய சொல்லா விசை மாலைக ளேத்தி யுள்ளப் பெற்றேற்

கரிய துண்டோ வெனக்கின்று தொட்டு மினி யொன்றுமே.

- நம்மாழ்வார் நான்காம் திருவாய்மொழி.

எனவரும் நான்காம் பத்து, ஏழாஞ் செய்யுட்படி, நாராயணமூர்த்தி சிவசின்னங்களுள் ஒன்றாய திருநீற்றைத் தமது கரிய திருமேனிக்கண் நன்றாகப் பிரகாசிக்கும்படி அன்புடன் தரித்திருக்கின்றனர் என்பதும்,

உடையார்ந்த வாடையன் கண்டிகைய னுடைநாணினன்

புடையார்பொன் னூலினன் பொன்முடியன் மற்றும் பல்கலன்.

-ஏழாந் திருவாய்மொழி.

எனவரும் மூன்றாம் பத்தில், நான்காஞ் செய்யுட்படி, அக்கடவுள் கண்டிகையை (உருத்திராக்க மாலையை) தரித்திருக்கின்றனர் என்பதும்,

  • தொடங்கியவர்

எறிய பித்தினோ டெல்லா வுலகு கண்ணன் படைப்பென்னு

நீறு செவ்வே யிடக்காணி னெடுமா லடியா ரென்றோடு

நாறு துழாய் மலர் காணி னாரணன் கண்ணி யீதென்னுந்

தேறியுந் தேறாது மாயோன் றிறத்தின ளேயித் திருவே.

- நான்காம் திருவாய்மொழி

எனவரும் நான்காம்பத்தின் ஏழாஞ் செய்யுட்படியும்,

  • தொடங்கியவர்

தணியும் பொழிதில்லை நீரணங் காடுதி ரன்னைமீர்

பிணியு மொழிகின்ற தில்லைப் பெருகு மிதுவல்லான்

மணியி லணிநிற மாயன் றமரணி நீறு கொண்டு

வணிய முயலின்மற் றில்லைகண் டீரிவ் வணங்குக்கே.

- ஆறாம் திருவாய்மொழி.

எனவரும் நான்காம் பத்தில், ஆறாஞ் செய்யுட்படியும், விஷ்ணு மூர்த்தியின் அடியவர்கள் அன்புடன் தரித்தற்குரியது திருநீறென்பதும், "ஒருமொழி யொழிதன்னினங்கொளற் குரித்தே" என்னும் இலக்கணப்படி விபூதியணிபவர் எனவே, மற்றைய சின்னமாகிய உருத்திராக்கமுந் தரிப்பவர் என்பதும், வெள்ளிடைமலைபோற் றெள்ளிதின் விளங்கக் கிடக்கின்றன. நீறு, கண்டிகை என்னுஞ் சொற்களுக்கு இவ்விடத்து வேறு பொருள் என்னோ? விபூதியும் உருத்திராக்கமுமன்றி மற்றையதன்றாம், என்னெனில், சாந்து என்று இவர்கள் விரிக்கும் பொருளுக்கு நீறு என்னும் பெயர், வடமொழி தென்மொழி நிகண்டுகளாகிய அமரம், திவாகரம், பிங்கலந்தை, சூடாமணி முதலியவற்றினும், ஏனைய இலக்கியங்களினும் ஆளப்படாமையாலென்க. இவற்றையெல்லா மோர்ந்து உண்மை கடைப்பிடித்துச் சிவசின்னதாரணரா யொழுகி உய்யுமாறு, எல்லாம் வல்ல இறைவனாகிய சிவ குருநாதன் திருவருள் செய்யும்படி பிரார்த்திக்கின்றோம்.

வாழ்க வந்தனர் வானவ ரானினம்

வீழ்க தண்புனல் வேந்தனு மோங்குக

வாழ்க தீயதெல் லாமர னாமமே

சூழ்க வையக முந்துயர் தீர்கவே.

  • தொடங்கியவர்

சைவ சமயமே சமயஞ் சமயாதீதப் பழம்பொருளைக்

கைவந்திடவே மன்றுள் வெளிநாட்டு மிந்தக்கருத்தை விட்டுப்

பொய்வந் துழலுஞ் சமயநெறி புகுதவேண்டா முத்திதருந்

தெய்வ சபையைக் காண்பதற்குச் சேரவாருஞ் சகத்தீரே.

  • 1 year later...
  • தொடங்கியவர்

God-shiva-wallpaper-with-12-jyoti-ling.jpg

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.