Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

காற்றில் கரையும் உயிர்கள்! -ஆனந்த விகடன

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

காற்றில் கரையும் உயிர்கள்!

மீண்டும் தமிழீழத் தகிப்பு தமிழகத்திலும் அனலாகப் பிரதிபலிக்கிறது. விடுதலைப் புலிகள் இயக்கத்தினர் பதுங்கியிருக்கும் காட்டுக்குள் அப்பாவித் தமிழர்கள் தஞ்சம் அடைகிறார்கள். பொதுமக்களின் வாழ்விடங்கள், சிங்கள ராணுவ முகாம்களாக உருமாறுகின்றன. இதற்கிடையில் தமிழக மீனவர்களைத் துளைக்கத் தவறுவதில்லை சிங்கள ராணுவத்தினரின் தோட்டாக்கள். அவர்களைக் கட்டுப்படுத்த முடியாத மத்திய அரசு, 'இனி, இந்திய மீனவர்கள் சுடப்பட மாட்டார்கள்!' என்று பாதுகாப்பு ஆலோசகர் நாராயணன் மூலம் தனக்குத்தானே ஆறுதல் சொல்லிக்கொள்கிறது. 'பிரபாகரன் இனி பதுங்கு குழிகளில் இருக்க முடியாது!' என்று சிங்கள ராணுவ அதிகாரி கொக்கரிக்கிறார். 'இலங்கை ராணுவம் இனி எங்களிடம் தஞ்சம் கேட்டு வரும்!' என்று புலிகள் தரப்பு கொந்தளிக்கிறது. இதற்கு மத்தியில் இலங்கை அரசுக்கு இந்திய அரசாங்கம் மறைமுகமாக உதவி வருவதாகத் தகவல்கள்... உண்மையில் என்னதான் நடக்கிறது?

கவிஞர் காசி ஆனந்தன்

''இலங்கையில் நடப்பது இனப் படுகொலைதான் என்று முதன்முதலாகக் குரல் கொடுத்த இந்திரா காந்தியை இன்றும் தமிழீழம் நன்றியுடன் நினைவுகூர்கிறது. 1983-ல் குட்டிமணியின் கண்கள் பிடுங்கப்பட்டபோது அம்மையார் அப்படிச் சொன்னார். ஆனால், இன்று அதைவிட நூறு மடங்குக் கொடுமைகள் ஈழத்தில் அரங்கேறுகின்றன. செஞ்சோலையில் 63 பிஞ்சுக் குழந்தைகள் குண்டு வீசி கொல்லப்பட்ட கொடூரம் நாட்டுக்கு வெளியே தெரிந்தது. ஆனால், வெளியில் தெரியாமல் நடப்பவை அதிகம். அம்பாறை மாவட்டம் மல்வத்தை என்ற ஊரைச் சேர்ந்த கோனேஸ்வரி என்ற தமிழச்சியின் பிறப்பு உறுப்பில் வெடிகுண்டைச் செருகி வெடிக்கவைத்த கொடுமையெல்லாம் ஹிட்லர் காலத்தில்கூட நடந்ததில்லை.

கடந்த 2 மாதங்களாக 2 லட்சம் ஈழத் தமிழர்கள் வன்னிக் காட்டுக்குள் வாழ்ந்து வருகிறார்கள். டென்ட் அடிக்கக்கூட துணி இல்லாமல், சேலைகளால் கூடாரம் அமைத்துத் தங்கியுள்ளார்கள். உணவு கிடைக்காமல் 20 ஆயிரம் குழந்தைகளின் உயிர் காற்றில் கரைந்துகொண்டு இருக்கிறது.

பயிர் செய்ய முடியாது, மீன் பிடிக்க முடியாது, வேலைக்குப் போக முடியாது, வீடு கிடையாது.. பிறகு எப்படி வாழ்வதாம்..? இதைவிட மேலாக, தமிழர்கள் வாழ்ந்த மட்டக்களப்புப் பகுதியில் சிங்களவர்கள் குடியேற்றப்பட்டு வருகிறார்கள். தமிழனின் வாழ்க்கை மட்டுமல்ல, மண்ணும் பறிக்கப்படுகிறது. வடக்கையும் கிழக்கையும் இணைக்க வேண்டும் என்பதுதான் ராஜீவ் - ஜெயவர்த்தனே ஒப்பந்தத்தின் சாராம்சம். அதைப் பிரிக்கும் சதியில் இறங்கியிருக்கிறார் ராஜபக்ஷே.

இதையெல்லாம் மறைக்க புலிகள் பலவீனமடைந்து வருவதைப் போலச் செய்திகள் பரப்புகிறார்கள். புலிகள் தங்கள் படையணிகளில் பாதிக்கும் மேற்பட்டவற்றை இன்னும் களத்தில் இறக்கவில்லை. அவையும் முழுமை யாகக் களம் கண்டால், அது நிச்சயம் தனித் தமிழீழத்தை உதயமாக்கும்!''

பழ.நெடுமாறன், தமிழர் தேசிய இயக்கம்.

''கடந்த இரண்டாண்டு காலத்தில் சிங்கள ராணு வத்தில் இருந்து பல்லாயிரக்கணக்கான சிங்கள வீரர்கள் ஓடிப் போயிருக்கிறார்கள். தங்கள் பலவீனத்தைமறைப்ப தற்காகப் புலிகளின் தளத்தைக் கைப்பற்றிவிட்டோம், 100 புலிகளைக் கொன்றுவிட்டோம் என்று ராணுவம் சொல்லும் தகவலை அங்குள்ள ஊடகங்கள் பரப்பிக் கொண்டு இருக்கின்றன.

மன்னார், வன்னிப் பகுதியை நோக்கி முன்னேற ராணுவம் முயற்சி செய்கிறது என்பது உண்மை. யாழ்ப்பாணம் குடா நாட்டில் பலாலி விமான தளம் இருக்கிறது. காங்கேசன் துறை, காரை நகர், நெடுந்தீவு ஆகிய இடங்களில் கடற்படைத் தளங்கள் இருக்கின்றன. பலாலி, நாகர்கோயில், முகமாலை ஆகிய இடங்களில் சிங்கள ராணுவத் தளங்கள் இருக்கின்றன. இத்தனை தளங்களையும் தொடர்ந்து பாதுகாக்க வேண்டுமானால், ஆனையிறவும் பூநகரியும் ராணுவத்தின் வசமாக வேண்டும். யாழ்குடா நாட்டின் நுழைவாயில் என்று சொல்லப்படும் இந்த இரண்டு இடங்களும் புலிகள் வசம் உள்ளன. எனவே வன்னி, மன்னார் பகுதிகளில் நுழைந்து நெருக்கடி கொடுக்கிறது ராணுவம். அதற்காகத்தான் இரண்டு ஆண்டுகளாகப் போராடிக்கொண்டு இருக்கிறார்கள். ஆனால், யாழ்குடா நாட்டில் புலிகளின் முற்றுகை இறுகத்தான் செய்திருக்கிறது.

அதேபோல் சிங்கள ராணுவத்துக்கு இந்தியா செய்து வரும் உதவியும் மறைக்கப்படுகிறது. செப்டம்பர் 8-ம் தேதி வன்னிப் பகுதியில் இருந்த சிங்கள ராணுவ தலைமையகத்தின் மீது வான்புலிகள் நடத்திய தாக்குதலில் இந்தியா அளித்த ராடார் கருவி அழிக்கப்பட்டது. ராடாரை இயக்கிய இந்திய ராணுவப் பொறியாளர்கள் ஏ.கே.தாகூர், சிந்தாமணி ரவுத் ஆகிய இருவரும் காயம் பட்டார்கள். ஆயுத உதவி மட்டுமல்ல... ஆள் உதவி செய்ததும் வெளிச்சத்துக்கு வந்தது. இவர்கள் ராணுவ வீரர்கள் அல்ல, சிவிலியன்கள் என்று இந்திய ராணுவ அதிகாரி சொல்கிறார். சிங்கள ராணுவத்துக்கு சிவிலியன்கள் உதவி செய்யலாம் என்றால், புலிகளுக்கு ஆதரவாகத் தமிழர்கள் அங்கு போய் உதவிகள் செய்யக் கூடாதா?''

வைகோ, ம.தி.மு.க.

''தனது மக்களுக்கு அடிப்படை வசதிகளைக்கூடச் செய்து கொடுக்கத் தெரியாத சிங்கள அரசாங்கம், ஆயுதங்களைக்கொண்டு தமிழர்களைக் கொன்று குவித்துக்கொண்டு இருக்கிறது. ஐ.நா. சபை தன் கிளை அலுவலகத்தைக் கொழும்புவில் திறக்க ஏற்பாடுகளைச் செய்தபோது, அதற்கு அனுமதி மறுக்கிறார் ராஜபக்ஷே. ஐ.நா-வின் கிளை அங்கே வந்துவிட்டால், தனது கோர முகம் உலகுக்குத் தெரிந்துவிடும் என்று பயப்படுகிறார்.

இலங்கைப் பிரச்னைகளை பிரதமரின் கவனத்துக்குக் கொண்டுபோகும்போதெல்லாம், 'இலங்கைக்கு இந்தியா எந்த ராணுவ உதவியும் செய்யாது' என்று சொல்வார். ஆனால், இந்திய அதிகாரிகளும் இலங்கை அதிகாரிகளும் இரவு விருந்து உண்டு தமிழனை அழிக்கக் கரம் கோக்கிறார்கள் என்பதுதான் உண்மை. 'செத்துக்கொண்டு இருக்கும் தமிழனைக் காப்பாற்ற ஏதாவது செய்யுங்கள்!' என்று கதறும்போதெல்லாம், 'அங்கு நடப்பது உள்நாட்டுப் போர்' என்று சொன்ன இந்தியா, இப்போது தனது அதிகாரிகளை அங்கு ஏன் அனுப்ப வேண்டும். 'இந்திய அரசாங்கம் நம் பக்கம் இருக்கிறது' என்று வெளிப்படையாகச் சொல்கிறார் அங்குள்ள ராணுவ அதிகாரி. இதையும் இங்குள்ள மத்திய அரசு மறுக்க வில்லை.

இது இலங்கையில் என்றால், தமிழ்நாட்டு மீனவர்களை சிங்களக் கடற்படை சுட்டுத் துளைப்பது இன்னும் நிற்கவில்லை. 'தமிழக மீனர்களைச் சுட்டது இலங்கை கடற்படை அல்ல' என்று இந்திய கடற்படை அதிகாரி ஒருவரே சான்றிதழ் கொடுக்கிறார். இதை பிரதமரிடம் சொன்னேன். அவர் தட்டிக் கேட்கவில்லை. நெடுமாறன் அவர்கள் சேகரித்த மருந்துப் பொருட்களை செஞ்சிலுவைச் சங்கம் மூலமாக இலங்கைக்குக் கொண்டுசெல்ல அனுமதி மறுக்கப்படுகிறது. அதாவது, தமிழனுக்கு உதவிகள் செய்ய பொருட்களை அனுப்ப முடியவில்லை.ஆனால், தமிழனைக் கொல்ல ஆயுதங்களை அனுப்ப முடிகிறது. இன்று குற்றவாளிக் கூண்டில் நிறுத்தப்பட வேண்டியது இலங்கை அரசாங்கம் மட்டுமல்ல, இங்குள்ள மத்திய அரசும்தான். அப்படிப்பட்ட மத்திய அரசை ஆதரித்து வரும் ஒவ்வொரு அரசியல் கட்சியும் பதில் சொல்ல வேண்டும்.''

திருமாவளவன், விடுதலைச் சிறுத்தைகள்.

''சிங்கள ராணுவத்தின் ஒரே இலக்கு வன்னியைக் கைப்பற்ற வேண்டும் என்பதுதான். இந்தச் சிறு பகுதியைக் கைப்பற்ற உலகத்தின் மிகப் பெரிய ராணுவமான அமெரிக்காவின் உதவியையும் இந்திய அரசாங்கத்தின் உதவியையும் ரகசியமாகப் பெற்று வருகிறது இலங்கை.

உலகில் எந்த நாட்டிலும் இதுவரை நடக்காத கொடுமை இலங்கையில் அரங்கேறுகிறது. வேதி நச்சுப்பொருள் அடங்கிய குண்டுகளை சிங்கள ராணுவம் பயன்படுத்தத் தொடங்கியுள்ளது. விமானம் மூலம் இந்த வேதி நச்சுப்பொருள் குண்டை வீசும்போது, அதன் பண்பு சுற்றுவட்டாரத்தில் உள்ள ஆக்சிஜனை உறிந்து இழுத்துவிடுமாம். இதனால், அந்த வட்டாரத்தில் இருப்பவர்கள் சுவாசிக்கச் சுத்தமான காற்று இருக்காது. மூச்சுத் திணறித் திண்டாடும் போராளிகளையும் தமிழர்களையும் கொன்று குவிக்க வேண்டும் என்று இலங்கை அரசு வஞ்சகத்தோடு கங்கணம் கட்டிச் செயல்படுகிறது. பிரபாகரனைப் போரில் வெல்ல முடியாத அவர்கள், இப்படி மறைந்திருந்து தாக்கக் காத்திருக்கிறார்கள். இதில் சர்வதேச விதிமுறைகள் அப்பட்டமாக மீறப்படுகின்றன. நியாயமற்ற போர் தமிழன் மீது திணிக்கப்பட்டுள்ளதை எவ்வளவு காலத்துக்கு வேடிக்கை பார்த்துக்கொண்டு இருக்கப் போகிறோம்?''

- ஆனந்த விகடன

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.