Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

போர் நிறுத்தத்திற்கு எப்போதும் தயார்: தமிழக முதல்வருக்கு புலிகளின் அரசியல்துறை பொறுப்பாளர் பா.நடேசன் விளக்கம்

Featured Replies

போர் நிறுத்தத்திற்கு எப்போதும் தயார்: தமிழக முதல்வருக்கு புலிகளின் அரசியல்துறை பொறுப்பாளர் பா.நடேசன் விளக்கம்

[புதன்கிழமை, 12 நவம்பர் 2008, 09:44 மு.ப ஈழம்] [க.நித்தியா]

சிறிலங்கா அரசுதான் போர் நிறுத்தத்தை தன்னிச்சையாக முறித்துக் கொண்டபோதும் தமிழீழ விடுதலைப் புலிகள் எப்போதும் போர் நிறுத்தத்துக்கு தயாராகவே உள்ளனர் என்று தமிழக முதல்வர் கலைஞர் கருணாநிதியின் வேண்டுகோளுக்கு தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் பா.நடேசன் விளக்கம் அளித்துள்ளார்.

தமிழ்நாட்டிலிருந்து வெளியாகும் 'தமிழோசை" நாளேட்டுக்கு அவர் அளித்துள்ள நேர்காணல் வருமாறு:

வடக்குப் பகுதியில் களமுனை நிலவரம் எப்படி இருக்கிறது?

வடக்கில் பல முனைகளிலும் சிங்கள இராணுவம் பாரிய இராணுவ நடவடிக்கைகளை மேற்கொண்ட வண்ணமுள்ளது. இதற்காக தனது முப்படைகளையும் பயன்படுத்தி வருகின்றது. குறிப்பாக வானூர்தி படையின் உதவியுடன் குண்டுவீச்சுக்களை அதிகளவில் மேற்கொண்டு வருகின்றது. இதன்போது ஏராளமான பொதுமக்கள் கொல்லப்படுவதுடன் ஆயிரக்கணக்கான வீடுகள் அழிக்கப்பட்டும் வருகின்றன. சிங்கள அரசின் இந்த இராணுவ நடவடிக்கைகளுக்குப் பல நாடுகள் உதவி புரிகின்றன. பாகிஸ்தான் அரசு ஏராளமான இராணுவ உபகரணங்களையும், வெடிப்பொருட்களையும், குண்டுகளையும் பத்து நாட்களுக்கு ஒரு தடவை இலங்கை கொழும்புத் துறைமுகத்திற்குக் கப்பல் வழியாக அனுப்பி வைப்பதாகக் கேள்விப்படுகின்றோம். சிங்கள அரசின் இராணுவ நடவடிக்கை காரணமாக இரண்டரை இலட்சத்திற்கும் அதிகமான மக்கள் இடம்பெயர்ந்து காடுகளிலும், மரநிழல்களிலும் வாழ்ந்து வருகின்றனர். ஒரு இலட்சத்திற்கும் அதிகமான படைகளைக் கொண்ட சிங்கள இராணுவத்துடன் எமது விடுதலைப் போராளிகள் வீரமுடன் போராடி வருகின்றனர். பல நூற்றுக்கணக்கான போராளிகள் களத்தில் வீரமுடன் போராடி வீரச்சாவைத் தழுவிக்கொண்டுள்ளனர். பல வல்லரசு நாடுகள் சிறிலங்கா அரச படைகளுக்கு உதவி செய்து வருவதால் அவர்கள் பீரங்கிக் குண்டுகளையெல்லாம் மழைபோல் பொழிந்த வண்ணமுள்ளனர். வானூர்தி குண்டுவீச்சுக்களும் அவ்வாறேதான். ஆனால் எமது விடுதலைப் போராளிகள் மனம் சலிக்காது ஆவேசத்துடன் தொடர்ந்தும் போராடிக் கொண்டிருக்கின்றனர். மக்கள் எமக்குப் பல வழிகளிலும் களமுனைகளில் பக்க பலமாக இருந்து சிங்கள இராணுவத்தைத் தோற்கடிப்பதற்கு உதவி செய்து வருகின்றனர்.

சண்டை நிறுத்தம் முறிந்து 3 ஆண்டுகள் நிறைவடையப் போகின்றன. இதுவரை சிறிலங்கா படையினர்தான் தாக்குதல் நடத்தி கிழக்கு மாநிலம் உள்ளிட்ட பல பகுதிகளைக் கைப்பற்றியுள்ளனர். நீங்கள் இதுவரை ஒருமுறை கூட வலிந்த தாக்குதல்களை நடத்தவில்லை. தந்திர உத்தியாக பின்வாங்கி வருவதாகக் கூறுகிறீர்கள். இதற்குக் காரணம் என்ன?

யுத்த முனையில் வலிந்த தாக்குதலை மேற்கொள்வதென்பது எமக்குச் சாதகமான சூழல் ஏற்படும்போதே மேற்கொள்ளலாம். அதுவரை நாம் எமது இழப்புகளைத் தவிர்ப்பதற்காகவும், எதிரியின் பலவீனமான சூழலை எதிர்பார்த்தும் காத்திருக்க வேண்டிய நிர்ப்பந்தம் ஒன்றுள்ளது. சிங்கள அரச படைகள் ஒரு இலட்சத்திற்கும் அதிகமான படை வலுவைக் கொண்டதாகும். எமது படை வீரர்களின் எண்ணிக்கை அதைவிட மிகக் குறைவானதே. குறைந்த மனித வலுவையுடைய படையணிகளையுடைய நாம் மிகவும் தந்திரமாகவும், சமயோசிதமாகவும் செயற்பட வேண்டியுள்ளது. ஆனால்,எமது படை வீரர்களின் மனவலிமை அரச படைகளை விட அதிகமானது. தேசிய ரீதியாக, அனைத்துலக ரீதியாக எமக்குச் சாதகமான அரசியல் இராணுவ சூழ்நிலைகளை வைத்தே நாம் வலிந்த தாக்குதல்களை மேற்கொள்ள வேவண்டும். இதுவே களமுனைகளில் வெற்றியை ஈட்டித் தரும்.

போர் நிலவரம் குறித்தும், உயிரிழப்புகள் குறித்தும் சிறிலங்கா அரசு அவர்கள் விருப்பம்போல செய்திகளை வெளியிட்டு வருகின்றனர். உங்கள் தரப்பிற்குப் பல ஊடகங்கள் இருந்தும், போர் தொடர்பான செய்திகள் பொது ஊடகங்களுக்குப் பல நேரங்களில் வழங்கப்படாதது ஏன்?

போர் நிலவரம் குறித்து சிங்கள அரசு தரப்பினால் வெளியிடப்பட்டு வரும் செய்திகள் சிங்கள மக்களையும் அனைத்துலக சமூகத்தையும் ஏமாற்றுவதற்கேயாகும். தினமும் களமுனை தொடர்பான பொய்யான செய்திகளையே வெளியிட்டு வருகின்றனர். இது இலங்கையின் எதிர்க்கட்சிகளாலேயே விமர்சிக்கப்பட்டு வருகின்றன. உண்மையான செய்திகளை வெளியிட்டு வரும் ஊடகங்களுக்குப் பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. வாய்ப்பூட்டுக்கள் போடப்பட்டுள்ளன. கொழும்பில் பல ஊடகவியலாளர்கள் கடத்தப்பட்டும், அச்சுறுத்தப்பட்டும் வருகின்றனர். நாம் உண்மையான செய்திகளையே வெளியிட்டு வருகின்றோம். நாம் எந்தவொரு செய்தியையும் ஊடகங்களுக்குக் கொடுப்பதற்கு முன்னர் உறுதிப்படுத்திய பின்னரே வெளியிடுவோம். பொய்யான செய்திகளை ஒருபோதும் வெளியிடுவதில்லை. அதுமட்டுமல்ல, எமது கட்டுப்பாட்டுப் பிரதேசத்திற்கான தொலைத்தொடர்புகளும் சிங்கள அரசால் துண்டிக்கப்பட்டுள்ளன.

இலங்கையில் இப்போது நடைபெற்று வருவது இறுதிப் போர் என ஊடகங்களும், பாதுகாப்பு வல்லுநர்களும் கூறுவதை ஏற்றுக் கொள்கிறீர்களா?

போரில் எந்தவொரு தரப்பும் முற்று முழுதாகத் தோற்கடிக்கப்படும் வரை இறுதிப்போர் என்ற சொற்பிரயோகத்தைத் தவிர்க்க வேவண்டும். சில ஊடகங்கள் இறுதிப்போர் என்ற வார்த்தைப் பிரயோகத்தை பிரயோகித்தாலும் போரின் முடிவை அது இறுதிப்போரா அல்லது அதற்கு முந்தியவையா என்பதைத் தீர்மானிக்கும். கடந்த முப்பது வருட காலமாகச் சிங்கள அரசால் எமக்கு எதிராக மேற்கொள்ளப்பட்டு வரும் ஒவ்வொரு இராணுவ நடவடிக்கைகளையும் இறுதிப்போர் என்று அவர்களது ஊடகங்கள் வெளியிட்டு வருகின்றன.

இலங்கை இனச்சிக்கலில் இந்தியா தலையிட வேண்டும் என்று கோருகிறீர்கள். இந்தியாவின் தலையீடு எந்த வடிவில் இருக்க வேண்டும் என எதிர்பார்க்கிறீர்கள்?

சிறிலங்காவுக்கு இந்திய அரசால் வழங்கப்படும் இராணுவ உதவிகளை நிறுத்தினாலேயே தமிழ் மக்களின் விடுதலைப் போராட்டத்திற்குப் பெரிய உதவியாக இருக்கும். இந்தியாவின் உதவி மட்டுமல்ல. பாகிஸ்தான் போன்ற நாடுகளின் உதவிகளையும் பெற்று சிங்கள அரசானது தமிழ் இனப்படுகொலையைப் புரிவதற்கே அவற்றைப் பயன்படுத்தி வருகின்றது. ஆகவேதான் நாம் எவ்வித இராணுவ உதவிகளையும் இந்தியா, சிறிலங்கா அரசிற்கு வழங்கக்கூடாது எனக் கேட்டுக்கொள்கிறோம்.

இலங்கைச் சிக்கலுக்குத் தமிழீழம்தான் ஒரே தீர்வு என்பது உங்களின் நிலைப்பாடு. இலங்கைத் தமிழர்களுக்கு அதிக அதிகாரம் கிடைக்க 13 ஆவது அரசியல் சட்டத் திருத்தத்தைச் செயல்படுத்தினால் போதும் என்பதுதான் இந்திய அரசின் நிலைப்பாடு. இரண்டுக்கும் இடையே மிகப்பெரிய இடைவெளி இருக்கும் நிலையில், உங்களின் இலக்கை எட்ட இந்தியா எந்த வகையில் உதவியாக இருக்க முடியும்?

இவ்வாறான கேள்விகளுக்கு இலகுவான முறையில் பதிலளிக்க விரும்புகின்றேன். நோர்வேயின் அனுசரணையுடன் 2002 இல் ஏற்பட்ட யுத்த நிறுத்த காலத்தின்போது எமக்கும் சிறிலங்காவுக்கும் ஏற்பட்ட ஒப்பந்தத்தின்படி வடக்குக் கிழக்கை அபிவிருத்தி செய்வதற்கு கட்டமைப்பொன்று உருவாக்கப்பட்டது. ஆனால் அதனை நடைமுறைப்படுத்துவதற்கு சிங்கள அரசு பின்வாங்கியது. பல இழுத்தடிப்புக்களைச் செய்தது. அதேபோன்று ஆழிப்பேரலையால் எமது தாயகப்பிரதேசம் பேரழிவிற்கு உள்ளானபோது எமது பிரதேசத்தை மீளக்கட்டியெழுப்புவதற்காக P-TOMS என்ற அமைப்பு எமக்கும், சிறிலங்கா அரசிற்கும் இடையே கைச்சாத்திடப்பட்டு உருவாக்கப்பட்டது. இது அரச தரப்பும் நாமும் ஏற்றுக்கொண்டு ஒப்பமிட்டு உருவாக்கப்பட்ட கட்டமைப்பாகும். ஆனால் இலங்கை அரசு இந்த அமைப்பைக்கூட நடைமுறைப்படுத்துவதற்குப் பின்வாங்கியது. அது மட்டுமல்ல கடந்த காலங்களில் தமிழர் தரப்பிற்கும், சிங்களத் தரப்பிற்கும் அரசியல் தீர்வு காண்பதற்காக உருவாக்கப்பட்ட அரசியல் ஒப்பந்தங்களான பண்டா - செல்வா ஒப்பந்தம் (1956) டட்லி - செல்வா ஒப்பந்தம் (1965) என்பவையெல்லாம் சிங்கள அரசு தரப்பினால் நடைமுறைப்படுத்தாமல் கிழித்தெறியப்பட்டன. மாறாக இராணுவ அடக்குமுறைகள் தமிழ்மக்கள் மீது கட்டவிழ்த்து விடப்பட்டன. சிறிலங்கா - இந்தியா ஒப்பந்தத்தால் (1987) உருவாக்கப்பட்ட வடக்கு - கிழக்கு இணைப்பைக்கூட தங்களது நீதிமன்ற அதிகாரங்களைப் பயன்படுத்தி வடக்கு வேறு கிழக்கு வேறாகப் பிரிக்கப்பட்டது. அதுமட்டுமல்ல நோர்வே அனுசரணையுடன் சமாதான யுத்த நிறுத்த உடன்படிக்கையிலிருந்து சிங்கள அரசு தானாகவே விலகிக்கொண்டதுடன், தமிழ்மக்கள் மீது பாரிய இராணுவ நடவடிக்கை ஒன்றைத் தொடர்ச்சியாக மேற்கொண்டு வருகின்றது. இந்த நிலையில் சிங்கள அரசிடம் எத்தகைய தீர்வை எதிர்பார்க்க முடியுமென நினைக்கின்றீர்களா? இவற்றையெல்லாம் விளங்கிக் கொண்டு இந்திய அரசு எம்மீதான தடையை நீக்கி எமது விடுதலை இயக்கத்தை அங்கீகரிக்க வேண்டுமென எதிர்பார்க்கின்றோம்.

சிறிலங்கா நாடாளுமன்றத்தில் ராஜபச்ச தாக்கல் செய்த நிதி நிலை அறிக்கையில், போருக்கான நிதி ஒதுக்கீடு 160 கோடி அமெரிக்க டாலராக உயர்த்தப்பட்டிருக்கிறது. இதன் மூலம் ஆயுதங்களை வாங்கிக் குவித்து சிறிலங்கா படையினர் போர் முனைக்கு வரும்போது அதை நீங்கள் எவ்வாறு எதிர்கொள்வீர்கள்?

உலகெங்கும் பரந்து வாழ்கின்ற உலகத்தமிழினத்தின் தார்மீக ஆதரவு எம்பக்கமே உள்ளது. எம்மக்கள் எம்மோடு முற்றுமுழுதாக உள்ளனர். எம்மக்களுடைய பலமும் எமது மனோபலமும் எத்தகைய சக்திகளையும் எதிர்கொள்கின்ற ஆற்றலை எமக்கு வழங்கும். குறிப்பாகத் தமிழக மக்களின் உணர்வுபூர்வமான ஆதரவும், எழுச்சியும் எமக்கு மேலும் மேலும் எமது மனோ பலத்தை வளர்த்தெடுக்கும் சக்தி படைத்தது.

விடுதலைப் புலிகள் இயக்கத்திலிருந்து வெளியேறியவர்களுக்கு வாழ்வாதாரம் வழங்குகிறோம் என்ற பெயரில், கருணா குழுவினருக்கு ரூ. 300 கோடி வழங்க சிறிலங்கா அரசு முடிவு செய்திருந்தது. இந்தப் பணத்தைக் கொண்டு கருணா குழுவினர் விடுதலைப் புலிகள் இயக்கத்திற்கு எதிராகச் செயல்பட்டால் அதை எப்படி எதிர்கொள்வீர்கள்?

கருணா தமிழ் மக்களால் முற்று முழுதாக நிராகரிக்கப்பட்டவர். எமது விடுதலைப் போராட்ட வரலாற்றில் முழுத்தமிழ் மக்களாலும் துரோகியாகக் கருதப்படுபவர். சிங்கள அரசு அவருக்கு வழங்கும் பணபலமோ, படைபலமோ எம்மை ஒன்றும் செய்துவிட முடியாது. அதனை எதிர்கொள்கின்ற சக்தி எம் மக்களுக்குண்டு.

ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாகத் தமிழகத்தில் ஏற்பட்டுள்ள எழுச்சியைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?

தமிழக மக்கள் ஈழத் தமிழர்களின் தொப்புள் கொடி உறவு போன்றவர்கள். ஒரே குடும்பத்து இரத்த உறவுகள். எமக்கொன்றென்றால் அது முழுத் தமிழகத்தையும் எழுச்சிக்கொள்ள செய்யும். எமது விடுதலைப் போராட்ட வரலாற்றில் ஒவ்வொரு காலக்கட்டத்திலும் முழுத் தமிழக மக்களும் அரசியல் வேறுபாடுகளுக்கு அப்பால் எமக்காகக் குரல் கொடுப்பது மட்டுமல்ல, எமக்காக எத்தகைய தியாகங்களையும் செய்வதற்குக்கூட தயாராக இருக்கின்றார்கள். தற்போது தமிழகத்தில் ஏற்பட்டுள்ள எழுச்சி தமிழக மக்களின் இரத்தத்தின் இரத்தங்களான ஈழத்தமிழர்களுக்கு ஏற்படுகின்ற இன்னல்களைக் கண்டேயாகும். இதனை எந்தவொரு சக்தியாலும் தடுத்து நிறுத்த முடியாது.

இலங்கையில் சண்டை நிறுத்தத்திற்கு விடுதலைப் புலிகள் தயாராக இருக்கிறார்களா? எனத் தெரியவில்லை என்றும், அது தெரிந்தால்தான் அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்க முடியும் என்றும் முதல்வர் கலைஞர் கூறியிருக்கிறார். போர் நிறுத்தத்திற்கு நீங்கள் தயாரா?

நாம் எப்போதும் யுத்த நிறுத்தத்திற்குத் தயாராகவே இருந்து வருகின்றோம். 2002 இல் நோர்வேயின் அனுசரணையுடன் செய்துகொள்ளப்பட்ட யுத்த நிறுத்த ஒப்பந்தத்திலிருந்து சிங்கள அரசுதான் தானாகவே விலகிக்கொண்டது. நாம் ஒருபோதும் விலகிக்கொள்ளவில்லை. இன்றும் நாம் அந்த யுத்த நிறுத்தத்தைத் தொடரவே விரும்புகின்றோம். ஆனால் சிங்கள அரசு விடுவதாகத் தெரியவில்லை. இதனை உலக நாடுகளும் அனைத்துலக சமூகமும் புரிந்துகொள்ள வேண்டும் என்றார் நடேசன்.

புதினம்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.