Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

போராளிகளை தீவிரவாதிகள் என்று சொல்லக்கூடாது - ஈழப்பிரச்சனையில் எரிமலையாகும் நடராஜன் -குமுதம் ரிப்போட்டர்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

போராளிகளை தீவிரவாதிகள் என்று சொல்லக்கூடாது - ஈழப்பிரச்சனையில் எரிமலையாகும் நடராஜன்.

pg4hr3.jpg

அரசியல் வட்டாரத்தில் `நிழல் மனிதர்' என அறியப்படும் எம்.நடராஜன், உண்மையிலேயே அ.தி.மு.க.வுடன் உறவில் இருக்கிறாரா? அல்லது உரசலில் இருக்கிறாரா? என்பது அ.தி.மு.க. சீனியர்கள் பலருக்கே புரியாத புதிர். எனினும், எப்போதும் அ.தி.மு.க.வுக்கு நோகாமல் கருத்துக்களைச் சொல்வதுதான் நடராஜனின் பாலிஸி. ஆனால் ஈழப் பிரச்னையில் மட்டும் ஏனோ அ.தி.மு.க.வுக்கு முற்றிலும் எதிரான நிலையெடுத்து நம்மிடம் பொங்கித் தீர்த்துவிட்டார் மனிதர்.

கன்னியாகுமரி அருகே சாமிதோப்பில் நடந்த தனது நண்பர் பாலபிரஜாபதி அடிகளாரின் மகள் திருமண விழாவுக்கு வந்திருந்த அவரை, நாம் தனியே சந்தித்துப் பேசியபோதுதான் அவர் நம்மிடம் இப்படி கொட்டித் தீர்த்தார்...

"ஈழப் பிரச்னைக்குள் போகும் முன்பு, முதலில் ஒரு வரலாற்று உண்மையை நீங்கள் புரிந்து கொள்ளவேண்டும். இலங்கை என்பது லெமூரியா கண்டமாக தமிழகத்துடன் இணைந்திருந்த பகுதிதான். கடல்கோள் காரணமாகவே அது பிரிந்து, இடையில் நீர்ப்பரப்பு உருவாகி விட்டது. தமிழர்கள்தான் அங்கு பூர்வீகக் குடி. அப்படியானால், சிங்களர்கள் யார் என்று கேட்கிறீர்களா? 12_ம் நூற்றாண்டில் ஒரிஸா பகுதியிலிருந்து கிளம்பிய `களப்பிரர்கள்' என்று சொல்லப்படும் கடற்கொள்ளையர்கள்தான் அவர்கள். இன்றளவும் அவர்கள் மொழியில் சமஸ்கிருதம் கலந்திருப்பதை நீங்கள் காணலாம். நாளடைவில் அவர்கள் அங்கு பெருமளவில் குடியேறி, பூர்வீகக் குடியான தமிழ் மக்களை இரண்டாம் தர, மூன்றாம் தர குடிமக்களாக்கி விட்டனர்.

அமெரிக்காவுக்கு அடிமைகளாக அழைத்துச் செல்லப்பட்ட நீக்ரோ இனத்தினர், இன்று அங்கு ஆட்சி பீடத்தையே பிடித்து விட்டனர். ஆனால் இலங்கையில், ஆண்ட தமிழினம், வீழ்ச்சியடைந்து கிடக்கிறது. இதில் பெரிய சோகம், உரிமைக்காக அவர்கள் போராடுவதை இங்குள்ள சிலரே, `தீவிரவாதம்' என முத்திரை குத்துவதுதான். ஒரு இனவெறித் தாக்குதலில் இருந்து அப்பாவி மக்களைப் பாதுகாக்க தங்களை முன் நிறுத்துபவர்களை எப்படி தீவிரவாதிகளாகச் சொல்ல முடியும்?. அவர்கள் போராளிகள் அல்லவா? ஆப்பிரிக்க நாடான காங்கோவில் கறுப்பர் இனத்தவருக்குள்ளேயே இரு உட்பிரிவுகளுக்குள் மோதல்! அங்கு அமைதியை நிலைநாட்டுவதற்காக ஐ.நா. தனது படையைக் கொண்டுபோய் நிறுத்துகிறது. ஏன் இலங்கையில் அதைச் செய்ய மறுக்கிறார்கள்?. காரணம், இந்தியா! இவர்கள் இன்னொரு நாட்டுப் பிரச்னையில் தலையிட மாட்டார்களாம்.

பிரச்னை என்னவென்றால், மத்திய ஆட்சி லகானை கையில் வைத்திருக்கும் சோனியாவுக்கு காங்கோ, கொசாவா பிரச்னைகள் மட்டுமின்றி, பக்கத்திலுள்ள வங்கதேசத்தின் வரலாறு கூட தெரியாது. இவர்கள் வியாக்கியானப்படி பார்த்தால், வங்கதேசத்தை இந்திரா காந்தி பிரித்துக் கொடுத்ததும் தவறல்லவா?. ஈழப் போராளிகளுக்குப் பயிற்சியும், ஆயுதங்களும் அப்போது கொடுக்கப்பட்டது தவறல்லவா?. ராஜிவ்காந்தி ஈழ மக்களுக்காக ஒப்பந்தம் போட்டதும் தவறல்லவா? அதையெல்லாம் `தவறுதான்' என, இன்றைய காங்கிரஸ்காரர்கள் நெஞ்சை நிமிர்த்திச் சொல்வார்களா? அல்லது இந்திராவையும், ராஜிவையும், `பிரிவினைவாதிகள்' என்றுதான் சொல்வார்களா?.

இலங்கையில் தமிழர்களுக்குத் தனி நாடு அமைவதுதான் அங்குள்ள பிரச்னைக்கு ஒரே தீர்வு என இந்திரா நம்பினார். அதனால் போராளிகளுக்கு ஆயுதமும் பயிற்சியும் கொடுத்தார். அவர் உயிருடன் இருந்திருந்தால் ஈழப் பிரச்னை எப்போதோ தீர்ந்திருக்கும். அவரது மறைவு, இலங்கைத் தமிழர்களின் துரதிர்ஷ்டம் என்றுதான் சொல்வேன். பின்னர் வந்த ராஜிவ்காந்தி, அதிகாரிகளின் சொல் கேட்டு சில தெளிவற்ற முடிவுகளை எடுத்தார். ஆனாலும் அவர் போட்ட ஒப்பந்தத்தை நிறைவேற்றினாலே ஈழத்தமிழர்களுக்கு ஓரளவு உரிமை கிடைத்துவிடும். அதற்குக்கூட இப்போதைய மத்திய அரசு முயற்சிக்க வில்லையே? இதையெல்லாம் நான் பேசுவதால், ராஜிவ் கொலையை நியாயப்படுத்துபவனாக என்னை எடுத்துக்கொள்ளக்கூடாது. ராஜிவுடன் இன்றைய முதல் அமைச்சர் கொண்டிருந்த நட்பைவிட எனக்கு நெருக்கம் அதிகம்.

போராளிகளில் யாரோ சிலர் திருடினார்கள் என்பதற்காகவோ, யாரோ சிலர் கொலை செய்தார்கள் என்பதற்காகவோ மொத்த தமிழ் இனத்தையும் பழி வாங்காதீர்கள். வேலூர் சிறையில் நளினியை, பிரியங்கா போய் பார்க்கும் வரைகூட இந்தப் பிரச்னையில் தமிழர்கள் கொஞ்சம் ஒதுங்கித்தான் இருந்தனர். `அவரே போய் பார்த்து மன்னித்து விட்டார்' எனத் தெரிந்த பிறகுதான் ஈழத் தமிழர்களுக்கு மக்கள் ஆதரவு பெருகியது. மக்களின் இந்த உணர்வு தப்பென்றால், நளினியை பிரியங்கா சந்தித்ததும் தவறுதானே? அதற்கு என்ன தண்டனை?

மாநில அரசைப் பொறுத்தவரை, விலைவாசி உயர்வு, மின்வெட்டு... உள்ளிட்ட பிரச்னைகளைத் திசை திருப்ப இலங்கைப் பிரச்னையைப் பயன்படுத்திக் கொண்டுள்ளது. சினிமாக்காரர்களை இந்தப் பிரச்னையில் ஆளும்கட்சி இறக்கி விட்டது மற்றொரு தவறு. சினிமாத் துறையினரில் பாரதிராஜா, அமீர் போன்ற சிலர் உண்மையான உணர்வுடையவர்களாக இருக்கலாம். ஆனால், 95 சதவிகிதம் பேர், `தொழிலே கதி' என இருக்கக் கூடியவர்கள். அவர்களை இந்தப் பிரச்னையில் இறக்கி விட்டதன் மூலம் ஈழத்தமிழர்களுக்கு ஆதரவான உண்மையான எழுச்சியை நீர்த்துப் போகச் செய்துவிட்டனர்.

அதேபோல கருணாநிதி ரோட்டில் இறங்கி மனிதச் சங்கிலி நடத்தியதும் ஒரு கேலிக்கூத்து. இலங்கைக்கு நம் மத்திய அரசு ஆயுதங்களும், நிதியும் கொடுப்பது தமிழக முதல்வரான இவருக்குத் தெரியாதா? அல்லது தி.மு.க. மத்திய மந்திரிகளுக்குக் கூடவா அது தெரியாது? அங்கே அதை எதிர்க்காமல் ஒரு மாநில முதல்வர் ரோட்டில் இறங்கிப் போராடுவது, யாரை ஏமாற்ற? பிரணாப் முகர்ஜி சென்னைக்கு வந்து பேசினாராம். உடனே இவர் ராஜினாமா நாடகத்தை முடித்துக் கொண்டாராம். பிரணாப் முகர்ஜி இலங்கையில் போய் அல்லவா போரை நிறுத்த பேசியிருக்க வேண்டும்? தேவையானால், கருணாநிதி உள்ளிட்ட தமிழக குழுவினரையும் அழைத்துக்கொண்டு போயிருக்க வேண்டும். அதை விடுத்து சென்னையில் பேச என்ன இருக்கிறது? மொத்தத்தில் வருகிற தேர்தலில் இலங்கைப் பிரச்னையே மத்திய அரசையும், மாநில அரசையும் மண்ணைக் கவ்வ வைத்துவிடும்!'' என்றவரிடம், `தி.மு.க.வை இவ்வளவு சாடுகிற நீங்கள், விடுதலைப்புலிகளுக்கு எதிராக தீவிரமான நிலைப்பாட்டை எடுத்திருக்கும் அ.தி.மு.க. பற்றி எதுவும் சொல்லவில்லையே?' என நாம் கேட்டோம்.

"`ஒரு பிரபாகரன் போனால் ஓராயிரம் பிரபாகரன்கள் உருவாவார்கள்' எனச் சொன்னவர் ஜெயலலிதாதான். ராஜிவ் கொலைக்குப் பிறகு அவர் தனது நிலையை மாற்றிக் கொண்டிருக்கிறார். இது பற்றி மேலும் விவரிக்க நான் அ.தி.மு.க.காரன் அல்ல'' என்றார் நடராஜன். `இப்போது உங்களுக்கு அ.தி.மு.க.வுடன் தொடர்பே இல்லையா?' என நாம் கேட்டதற்கு, "அதை விடுங்க..! நான் அவர்களுக்கு சில உதவிகள் செய்தேன். அவர்கள் அதை நினைக்கவில்லை. எனக்காக யாரிடமும் போய் எதையும் கேட்பவன் இல்லையே நான்'' எனக் கூறி அ.தி.மு.க. சம்பந்தமான கேள்விகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துவிட்டார் அவர்.

படம்: என்.செந்தில்குமார்

செல்வா

-குமுதம் ரிப்போட்டர்

Edited by கந்தப்பு

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.