Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மஞ்சள் மற்றும் கறுப்புக் கயிறுகள் பற்றிய கதை

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சயந்தன் தான் காதலித்த நிலாந்தியையே கல்யாணமும் கட்டினான் என்றெனக்குத் தெரியவந்தபோது அவனுக்கு இரட்டை ஆண்குழந்தைகளும் பிறந்திருந்தன. அதை வன்னியிலிருந்து பிரான்சுக்கோ கனடாவுக்கோ போக கொழும்பு வந்த பெடியனொருவன் பம்பலப்பிட்டி பஸ் ஸ்ரான்ட்டில் வைத்து எனக்குச் சொன்னான். கொழும்பு பஸ்களில் சிங்களப் பெட்டைகளுக்கு அருகில் சீட் கிடைக்குமா என்று தேடித்திருந்த என் இருபத்தியொரு வயதில் அவன் அப்பாவாகியிருந்தான். காதலித்தவளையே கல்யாணம் கட்டுவது ஒருவரமென அப்போது நான் நம்பியிருந்தேன். அவன் வரம் பெற்றவனாயிருந்தான். “அட்ரசைத் தாரும், நான் கடிதம் போடுறன்” அட்ரஸை கேட்டு வாங்கினேன். சயந்தன், c/o கே ஆர் வாணிபம், உடையார்கட்டு, முல்லைத்தீவு என்ற அதே பழைய முகவரி. கே. ஆர் வாணிபம், கடை அவனது கொட்டிலிலிருந்து இரண்டு மூன்று காணிகள் கடந்து வீதியிலேறும் முடக்கில் இருந்தது. அவன் பாதைகள் சென்று சேராத ஒரு காணியின் அடித்தொங்கலில் இருந்தான். நிறையப்பேர் அப்படித்தான் இருந்தார்கள். காடுகளுக்குள்ளும் வீதிகளுக்கும் இடைப்பட்ட துண்டு நிலங்களில் புதிய முகவரிகளைத் தேடிக் கண்டுபிடிக்க முடியாதிருந்த தபாற்காரர்களுக்கு கடைகளும் டிஸ்பென்சரிகளும் முகங்களாயிருந்தன. “சயந்தன் இப்ப என்ன செய்யிறார்” என்று கேட்டேன். அவன் மீசையற்ற ஒருவர் கடக்கும்வரை அமைதியாயிருந்துவிட்டுச் சொன்னான். “அவர் ஏ எல் எடுத்துட்டு இருக்கிறார். நிலாந்திதான் ரீச்சிங்குக்கு ட்ரை பண்ணுறா..” “சரி நான் கடிதம் போடுறன்.” அன்றிரவு சயந்தனுக்கு நிறைய வாழ்த்துக்களையும் அவசரப்பட்டுக் கல்யாணம் கட்டியதற்காகக் கொஞ்சம் அட்வைஸ்களையும் நிரப்பி நீண்டதொரு கடிதம் எழுதினேன். நீண்ட காலத்திற்கு அது எனது டயறிக்குள் தூங்கியது. பின்பொருநாள் கிழித்தெறிந்த அந்தக் கடிதத்தில் அவனை விட அதிகமாக நாமகளையே விசாரித்தெழுதியிருந்தேன்.

0 0 0

“உம்மடை பேர் என்ன” என்று ஏகாம்பரம் சேர் கேட்டார். “சயந்தன்” எனது முதுகுப்பின்னாலிருந்து பதில் வந்தபோதே அவனைப்பார்த்தேன். நடு நெற்றியில் ஒரு வீபூதிக்குறியோடு அவன் நின்றான். அது விபூதியல்ல. முகப்பவுடர் என்பதே அவனைப்பற்றிய என் முதல் நினைப்பாக இருந்தது. பள்ளிக்கூடம் தொடங்கி இரண்டு மூன்று வாரங்களுக்குப்பிறகு வந்து சேர்ந்திருக்கிறான். ஒவ்வொரு நாளும் புதியவர்கள் வருகிறார்கள். மரங்களுக்கு கீழே மேசைகள் போடப்படுகின்றன. மரங்களால் நிரம்பியிருந்த அந்த வளவில் நான்கோ ஐந்து வகுப்புக்கள் இருந்தன. வன்னியின் மரங்கள் பெயரறியாத புதியவை, பரந்து நிழல் பரப்பின. வேலிக்குள்ளால் பள்ளிக்கூடம் வீதியைக் கடந்து தெரிந்தது. அங்கே வகுப்பறைகளில் குழந்தைகள் ஏணைகளில் தூங்கிக்கொண்டிருந்தார்கள். ஏணைகளுக்கு அருகிலேயே அடுப்புக்களும் எரிந்தன. பெரிய மனிதர்கள் சுவர்மூலைகளுக்குள் சுருண்டிருந்தார்கள். சிறுவர்களே விளையாடித்திரிந்தனர். கடந்தநாட்களின் தங்களது அழுகைகளையும் வீரிடல்களையும் அவர்கள் மறந்துவிட்டிருந்தார்கள். நானும் மறந்திருந்தேன்.

ஆண்டு பதினொன்று, பி பிரிவில் எல்லோரும் புதியவர்களாக இருந்தார்கள். யாழ்ப்பாணத்தின் பெரியபள்ளிக்கூடம், சிறியபள்ளிக்கூடம், இங்கிலிஸ் கதைக்கும் பள்ளிக்கூடம், கதைக்கமுடியாத பள்ளிக்கூடமென்று எல்லோருமிருந்தார்கள் மரத்தின் கீழே. கறுத்தச்சப்பாத்துப் போடவில்லையென்பதற்காக யாரும் இங்கே அடிக்கவில்லை. வெள்ளைச் சேர்ட்டை இன் பண்ணாவிட்டால் யாரும் காதினைத் திருகுவதில்லை. எத்தனை பேரை அடிக்க..? எத்தனை காதுகளைத் திருக..? எனக்கு எல்லாமே புதிதாக இருந்தது. பக்கத்திலிருந்த பெட்டைகள் உட்பட. பள்ளிக்கூட பெட்டைகளின் அருகாமையை நான் ரசிக்கத்தொடங்கியிருந்தேன். “எடியே இஞ்சை பாரடி” என்ற வார்த்தைகளும் “என்னப்பா நீர்” என்ற அவர்களுக்குள்ளான சிணுங்கல்களும் எனக்கு விசித்திரமாக இருந்தன. முன்னைய பள்ளியில் தயாபரன் சேர் இப்படி நடித்துக்காட்டுவார். பாடங்களுக்கிடையில் அவர் இப்படிக்கதை சொல்லத்தொடங்கினால் பிறகு ஓ.. என்ற கூச்சல்தான் நிறையும். கடைசி வாங்கில் இருக்கிற யாராவது “சேர் சரியாக்கேட்கேல்லை” என்றுகொண்டே முன்னால் வருவார்கள். கதை முடியும் போது எல்லோருமே மேசையைச்சுற்றி நிற்பார்கள் கிளைக்கதையெதையாவது அவர் தொடர மாட்டாரா என. அடுத்த ஆண்டில் விஞ்ஞானப் புத்தகத்தில் நூற்று நாற்பதாம் பக்கத்தில் இனவிருத்தித் தொகுதியென்றொரு பாடம் இருந்தது. தயாபரன் சேர் அதனைப்படிப்பிக்கப்போகும் நாட்களுக்காக, படபடப்புக்களையும் கிளுகிளுப்புக்களையும் சேமித்தபடி தயாராயிருந்தோம். ஒரு ஒக்டோபரின் இறுதி நாளில் எல்லாம் கரைந்து போயின. பள்ளிக்கூடம் இல்லையென்றானது. பாடப்புத்தகங்களும் இல்லையென்றாயின. பாடசாலைக்கீதம் முடிந்த ஒரு பொழுதில் “நாளைக்கு யார் கூட்டுமுறை? நேரத்தோடை வரவேணும்” என்று போனவர்கள் இரவோடிரவாகத் தொலைந்து போனார்கள். அடுத்த காலையில் யாரும் பள்ளிக்கு போயிருக்க மாட்டார்கள். பிரேயர் கோலில் குசுகுசுவெனப்பேசும் சத்தங்கள் கேட்டிருக்காது. செவ்வாய்க்கிழமையின் இரண்டாம் பாடத்தில் பி.டி மைதானம் ஆளரவம் இன்றி தனிமையில் விரிந்திருக்கும். மதிலோரம் சைக்கிளைச் சாத்தி நிற்கும் ஐஸ்பழகாரரும் நின்றிருக்க மாட்டார்.

இங்கே தயாபரன் சேர்போல யாரும் கதை சொல்வதில்லை. பெடியங்களும் சொல்வதில்லை. பெட்டைகளை நேருக்குநேர் கண்டாலே படபடப்பாக இருக்கிறது. இடம்பெயர்ந்தவர்களுக்கெனத் தொடங்கும் மதியம் இரண்டுமணிப்பள்ளியை நான் வெறுக்கத் தொடங்கியிருந்தேன். சும்மா தோட்டங்களையும் துரவுகளையும் அளைவதே எனக்குப் பிடித்திருந்தது. ஒவ்வொருநாளும் ஆக்கினைப்படுத்தியே அம்மா என்னை அனுப்பி வைத்தாள். பாழாய்ப்போன கிபிர் காலைநேரங்களில் மட்டும் வந்து போகிறது. கள்ளமொழிக்கக் கிபிரைக்கூப்பிடுவதும் அது வந்தபிறகு பிச்சைவேண்டாம் நாயைப்பிடியென்பதும் இன்னமும் தொடர்ந்தது. சாமியறைக்குள் பிள்ளையாருக்கு பூப்போட்டு “பிள்ளையாரே நாளைக்கு காலமை மாதகலில இருந்து ஆமி மூவ் பண்ணினால் நாளையிண்டைக்கு மஞ்சள்பூ நிறைய வைப்பன்” என்றெல்லாம் இப்போது கேட்பதில்லை. அப்போதெல்லாம் பிள்ளையார் மஞ்சள்பூவுக்கு சில சமயங்களில் ஆசைப்பட்டிருந்தார். “பிள்ளையாரே உமக்கு பகிடியும் தெரியா வெற்றியும் தெரியா, முதல்ல ஆமிக்காரனை நிப்பாட்டும். வெள்ளைப்பூ வைக்கிறன்” என கை நடுங்க நடுங்க கும்பிட்டதையும் அவர் ஏற்றிருந்தார். ஒக்டோபர் இரவொன்றில் அவருக்கு வெள்ளைப் பூக்கள் திடீரென பிடிக்காமல் போனது. டிசம்பரில், பெப்ரவரியில், ஏப்ரலிலென அவருக்கு ஒரேயடியாகப் பூக்கள் பிடிக்காமல் போனது.

udaiஇரண்டு மூன்று வாரங்களாகக் கிபிரெதுவும் வரவில்லை. ஆனால் சனங்கள் வந்துகொண்டிருந்தார்கள். லான்ட் மாஸ்ரர்களும் மினி பஸ்சுகளும் வெறித்த முகங்களோடு அவர்களை ஏற்றிவந்தன. கிளாலியில் புறப்பட்ட இறுதிப்படகு வன்னிக்கு வந்து சேரவில்லையென்றார்கள். அந்தக்கடற்கரையில் குவிந்து நின்ற சனத்தை ஆமிக்கட்டுப்பாட்டுப் பகுதிக்குள்ளேயே போய்விடும்படி இயக்கம் சொன்னதாம். அம்மா அங்கே, பிள்ளை இங்கே, புருசன் இங்கே, பெண்சாதி அங்கேயென்ற கதைகளே எங்கும் நிறைந்திருந்தன. வீதிநெடுகவும் மனிதர்களாயிருந்தார்கள். அவர்களில் சயந்தனும் ஒருவனாயிருந்திருக்கவேண்டும

  • 3 years later...

அருமையான கதைக்கு மிக்க நன்றி சயந்தன் .

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.