Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இலங்கையில் தமிழர்களுக்குப் பிரச்சினை ஏதும் இல்லை, அதனால் அரசியல் தீர்வும் தேவை இல்லை: பாலித கோகன்ன

Featured Replies

இலங்கையில் தமிழர்களுக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை. அதனால் அரசியல் தீர்வு ஒன்றை முன்வைப்பதற்கான அவசியம் இல்லை என்று சிறிலங்காவின் வெளிவிவகாரச் செயலரும் ஐக்கிய நாடுகள் சபைக்கான நிரந்தரப் பிரதிநிதியாக நியமிக்கப்பட்டு இருப்பவருமான பாலித கோகன்ன தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இருந்து வெளியாகும் 'டெய்லி மிரர்' ஆங்கில நாளேட்டுக்கு வழங்கிய நேர்காணில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

போரில் வெற்றிபெற்ற எவருக்கு எதிராகவும் போர்க் குற்ற விசாரணைகள் நடத்தப்பட்டதாக வரலாறு இல்லை என்று குறிப்பிட்ட அவர், அத்தகைய கவலைகளை ஒதுக்கித் தள்ளிவிட்டுச் செயற்படவேண்டும் என்றும் கருத்துக் கூறியுள்ளார்.

அவரது நேர்காணலில் உள்ள முக்கிய விபரங்கள் வருமாறு:

கேபியின் கைது உண்மையிலேயே அரசுக்கு பெரிய ஊக்க மருந்து. விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனுக்குப் பின்னர் அந்த அமைப்பின் தலைவராக இருந்தவரும் புலிகளின் குற்றச் செயல்கள் தொடர்பான வலைப்பின்னலை நடத்திவந்தவருமான நபர் தற்போது எமது கட்டுப்பாட்டில் இருக்கிறார். புலிகள் மிகப்பெரிய சட்டவிரோத வர்த்தக சாம்ராஜ்யத்தையே நடத்தி வந்தார்கள். ஆயுதக் கடத்தல் உள்ளிட்ட இந்த இரண்டினதும் நடுநாயகமாக கேபி இருந்தார். அவர் விடுதலைப் புலிகளுக்காக மட்டும் ஆயுதங்களைக் கொள்வனவு செய்யவில்லை. உலகில் உள்ள வேறு சட்டவிரோத அமைப்புகளுக்கும் தீவிரவாதிகளுக்காகவும் கூட அவர் ஆயுதங்கள் கொள்வனவு செய்தார் என்பதற்கு இப்போது ஆதரங்கள் உள்ளன. எனவே கேபியின் கைது புலிகளின் வெளிநாட்டு வலையமைப்புக்கு பின்னடைவுதான். ஆனால், அதன் அர்த்தம் புலிகளின் வெளிநாட்டு கட்டமைப்புக்கள் அனைத்தும் குலைந்துவிட்டன என்பது அல்ல.

விடுதலைப் புலிகளுக்காக பணியாற்றும் இன்னும் பல கூறுகள் வெளிநாடுகளில் குறிப்பாக மேற்குலக நாடுகளில் சுற்றிக்கொண்டுதான் இருக்கின்றன. அவர்களைப் பற்றிய விபரங்கள் எம்மிடம் இருக்கின்றன. அவர்களைச் சட்டத்தின் முன் கொண்டுவருவதற்கு நட்பு நாடுகளுடன் சேர்ந்து பணியாற்ற முடியும் என்று நான் நினைக்கிறேன்.

தமது உதவி இன்றி ஆசியர்களாலும் ஆபிரிக்கர்களாலும் எததையும் சரியாகச் செய்ய முடியாது என்ற எண்ணப் போக்கு மேற்குலகினரிடம் உள்ளது. அதுபற்றி நான் உறுதியாக இருக்கிறேன். ஏனெனில் 25 வருடங்களாக மேற்குலக நாடுகளில் வாழ்ந்தவன் நான். அவர்களின் சிந்தனையை என்னால் புரிந்துகொள்ள முடியும். அவர்களின் கருத்துக்களை நாம் மதிக்காதபோது அவர்கள் குறைப்பட்டுக்கொள்கிறார்கள். இரண்டாவது புலிகளும் அவர்களது அனுதாபிகளும் தொடர்ந்தும் மேற்குலகின் விடுதலை உணர்வாளர்களுக்கு தமது கருத்துக்களைத் திணித்து வருகிறார்கள்.

உலகில் உள்ள பெரும்பாலான நாடுகள் எமது நடவடிக்கைகளை ஆதரிக்கின்றன. குறிப்பாக இந்தியா, சீனா, பாகிஸ்தான், ரஷ்யா மற்றும் ஆசிய நாடுகள் எம்மை ஆதரிக்கின்றன. எமது நடவடிக்கைகளை மட்டும் இல்லை ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணைக்குழுவில் கூட அவை எம்மை ஆதரித்தன. சில இடங்களில் விருப்பம் இன்மைகள் அல்லது குறை கூறுதல்கள் இருக்கவே செய்கின்றன.

அரசியல் தீர்வு ஒன்றை நடைமுறைப்படுத்திவிட்டால் எல்லாப் பிரச்சினைகளும் தீர்ந்துவிடும் என்ற ஒரு சிந்தனை உண்டு. இதற்குப் பின்னால் உள்ள தர்க்கம் என்ன என்பதை என்னால் புரிந்துகொள்ள முடியவில்லை.

ஒவ்வொரு அரசும் அத்தகைய தீர்வு ஒன்றை ஏற்படுத்துவதற்கு முயற்சி செய்துள்ளன. ஆனால் ஒவ்வொரு முறையும் அத்தகைய முயற்சிகள் புலிகளால் நிராகரிக்கப்பட்டுள்ளன. இந்தத் தோல்விகள் ஊடாக நாம் தெரிந்து கொள்வது என்ன என்றால், எல்லாப் பிரச்சினைகளுக்கும் அரசியல் தீர்வு முடிவாக அமையாது என்பதைத்தான். எனவே நடைமுறையில் நான் இந்த அணுகுமுறையை நம்பவில்லை.

இந்த யோசனைகள் எல்லாம் தமிழ் மக்களுக்கு ஏதோ பிரச்சினைகள் இருப்பது போன்ற தோற்றத்தை ஏற்படுத்துகின்றன. மீண்டும் சொல்கிறேன் நான் அக்கருத்துடன் உடன்படவில்லை. பிரச்சினைகள் விடுதலைப் புலிகளுக்குத்தான் இருந்தனவே தவிர தமிழ் பேசும் மக்களுக்கு அல்ல.

அவர்களுக்குப் பிரச்சினைகள் இருப்பின் ஏன் 54 விழுக்காடு தமிழ் பேசும் மக்கள் தமது இடங்களைவிட்டு சிங்களம் பேசுவோர் வாழும் இடங்களுக்கு இடம்பெயர்ந்துள்ளார்கள்? அவர்களாகவேதான் இடம்பெயர்ந்தார்கள். அவர்களுக்கு ஏதாவது பிரச்சினைகள் இருந்தால் அவர்கள் ஏன் இந்தப் பகுதிகளுக்கு வரவேண்டும்?

அரசியல் சிக்கல்களால் சிறிலங்காவின் பிரச்சினைகள் கட்டமைக்கப்பட்டன என்ற கருத்துவாக்கம் உருவாக்கப்பட்டிருப்பது தவறு என்றே நான் நினைக்கிறேன்.

எல்லா மக்களுக்கும் நாம் சமமான மதிப்பையும் சமமான சந்தர்ப்பத்துடனும் நடத்துவோமானால் அரசியல் தீர்வு குறித்து நாம் சிந்திக்க வேண்டியது இல்லை.

எப்படி இருப்பினும் இந்த அரசியல் தீர்வை நாம் எங்கு கொண்டுபோய் நடைமுறைப்படுத்துவது? கொழும்பிலும் அதனைச் சுற்றிலும் வாழும் 54 விழுக்காடு தமிழர்களுக்கு நடைமுறைப்படுத்துவதா அல்லது வடக்கு-கிழக்கில் உள்ளவர்களுக்கு நடைமுறைப்படுத்துவதா?

வடக்கில் வாழ்பவர்களின் மொத்த எண்ணிக்கை 7 லட்சத்து 50 ஆயிரம் மட்டுமே. அவர்களில் 3 லட்சம் பேர் வன்னியில் வசிக்கிறார்கள். அவர்களும்கூட இப்போது முகாம்களில் வைக்கப்பட்டிருக்கிறார்கள். வன்னிப் பகுதிக்கு வெளியே யாரும் இல்லை. யாழ். குடாநாட்டில் உள்ளவர்களின் எண்ணிக்கை நாட்டின் ஏனைய பகுதியில் வசிப்பவர்களுடன் ஒப்பிடும்போது மிக மிகக் குறைவு.

அரசியல் தீர்வை நடைமுறைப்படுத்துங்கள் என்று ஆலோசனை வழங்குவது சுலபம் என்று நினைக்கிறேன். அது எப்போது? அப்படியே எமக்கு பிரச்சினை என்று ஒன்று இருந்தாலும்கூட அவர்கள் (தமிழர்கள்) ஒரு அரசியல் நெறிமுறைக்குள் (Political form) இல்லை.

வேலை பெற்றுக்கொள்வதிலும் குழந்தைகளைப் பாடசாலையில் சேர்ப்பதிலும் எல்லா நாடுகளையும் போன்று இங்கும் பிரச்சினைகள் உண்டு. அவற்றைத் தீர்க்கத்தான் வேண்டும். அதற்கு இனத்துவ அணுகுமுறை ஊடாக அவற்றை அணுகக்கூடாது. ஒவ்வொருவருக்கும் சமமான சந்தர்ப்பங்களை வழங்குவதன் மூலமே அதனைத் தீர்க்க வேண்டும்.

இந்தியா எமது பிரச்சினைகளில் மிகவும் ஆதரவாகவே இருக்கிறது. அதனது ஆதரவில் நாம் நம்பிக்கை வைத்துள்ளோம். அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் என்பதே அவர்களின் (இந்தியா) பரிந்துரையாக இருக்கிறது. அரச தலைவர் மகிந்த ராஜபக்ச அதனை செயற்படுத்துவதற்கு உறுதியளித்துள்ளார். கலந்துரையாடல்களின்போது அதற்கு மேல் (13 ஆவது திருத்தம்) இந்தியா சென்றதாக எனக்குத் தெரியவில்லை.

போர்க் குற்றங்கள் தொடர்பான வரலாற்றை நீங்கள் திரும்பிப் பார்த்தீர்கள் என்றால், போரில் வெற்றிபெற்ற எவரும் நீதிமன்றத்தின் முன் நிறுத்தப்பட்டதாக வரலாறு கிடையாது. தோல்வி அடைந்தவர்களுக்காவே அவை எல்லாம் உருவாக்கப்பட்டன. வெற்றி பெற்றவர்களை நீதிமன்றம் முன் நிறுத்துவதாக இருந்தால், அதனை நீங்கள் எங்கு இருந்தோ தொடங்க வேண்டி இருக்கும். போரின்போது சிறிலங்கா அணுகுண்டுகளை வீசவில்லை அல்லது எந்தவொரு நகரையாவது முழுமையாக அழிக்கவும் இல்லை. எம்மை விசாரணைக்கு உட்படுத்துவது என்பது போன்ற கருத்துக்கள் எம்மைத் தவறாக வழிநடத்துபவை. இவற்றை எல்லாம் ஒருபுறம் ஒதுக்கி வைத்துவிட்டு நாம் எமது நாட்டைக் கட்டி எழுப்புவதற்கான, கருத்து இணக்கத்தை ஏற்படுத்துவதற்கான, வாழ்க்கை தொடங்குவதற்கான பணிகளுக்குத் திரும்பிச்செல்ல வேண்டும் என்றார்.

வெளிநாடுகளில் வாழும் தமிழர்களுடனும் சிறிலங்கா அரசு பேச்சு நடத்த வேண்டும் என்று அமெரிக்க துணை அமைச்சர் றொபேர்ட் ஓ பிளேக் அண்மையில் தெரிவித்திருந்தது பற்றி கருத்துத் தெரிவித்த பாலித கோகன்ன,

இது தொடர்பில் நான் தனிப்பட்ட கருத்துக்களைக் கொண்டிருக்கின்றேன். நாட்டைவிட்டு வெளியேறிச் சென்ற தமிழர்களுடன் மிகச் சிறந்த முறையில் அரசு உறவுகளைக் கொண்டிருக்கிறது என்றே நினைக்கிறேன். வெளிநாடுகளில் வாழும் தமிழர்களின் பிரதிநிதிகளை கடந்த பெப்ரவரியில் அழைத்து அவர்களுடன் இரண்டு நாட்கள் பேச்சுக்களை நடத்தியது. அத்தகைய சந்திப்புக்களை நாம் தொடர்ச்சியாக நடத்திக்கொண்டுதான் இருக்கிறோம். வெளிவிவகார அமைச்சரோ நானோ வெளிநாடுகளுக்குச் செல்லும்போது அதுவும் அதிகளவிலான தமிழர்கள் வாழும் நாடுகளுக்குச் செல்லும் போது எல்லாம் அந்நாடுகளில் உள்ள தமிழர் பிரதிநிதிகளுடன் சந்திப்புக்களை நடத்திக்கொண்டுதான் இருக்கிறோம். தொடர்ந்தும் நாம் அதனைச் செய்வோம். எமது மக்களை நாம் திரும்ப வெல்வோம் என்றே எதிர்பார்க்கிறேன். எமது அணுகுமுறை வெற்றிகரமாகவே செல்கிறது. இன்று பல தமிழர்கள் தாம் இழந்துபோன சொத்துகளை மீட்கும் நோக்குடன் இங்கு முதலீடுகளை மேற்கொள்வதற்கான தேடல்களில் ஈடுபட்டுள்ளனர்.

அதேசமயத்தில் சில கூறுகள் சிறிலங்காவுக்கு எதிரான வெறுப்புணர்வுடன் நங்கூரமிட்டுள்ளன என்பதும் எனக்குத் தெரியும். அவர்கள் ஆயுததாரிகள், புலிகளுக்கு நிதி சேகரித்து அனுப்பியதன் மூலம் தமது சொந்த மக்களையே தீவிரவாதத்துக்குள் கொண்டுசென்றவர்கள். இன்று அவர்களின் தேவை ஏதும் இல்லை. அதனால் அவர்கள் தேவையற்ற அழுத்தங்களை கொடுக்கப் பார்க்கிறார்கள்.

அதனால், பிளேக்குக்கு எனது பதில் என்ன என்றால், நாம் வெளிநாடு வாழ் தமிழர்களுடன் தொடர்ந்தும் பேசிக்கொண்டுதான் இருக்கிறோம். அவர்கள் நாட்டுக்குத் திரும்பி வருவார்கள் என்றே நாம் எதிர்பார்க்கிறோம். சில சமயம் அனைவரும் வராமல் குறிப்பிட்ட அளவினர் மட்டும் வரக்கூடும் என்று அவர் மேலும் தெரிவித்தார்.

புதினம்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.