Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மாவோஸ்ட் தோழர்களுக்கு எதிரான போரும் இந்திய நாடாளுமன்ற ஜனநாயகமும்..

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

மாவோஸ்ட் தோழர்களுக்கு எதிரான போரும் இந்திய நாடாளுமன்ற ஜனநாயகமும்..

indian-parliament.jpg

“மாவோயிஸ்ட்டுகளின் கொள்கை நாடாளுமன்ற ஜனநாயகத்தை தூக்கி எறிவது என்பதே. அவர்கள் இயங்கும் பகுதிகளில் அரசு நிர்வாகத்தை அவர்கள் அனுமதிப்பதில்லை. அங்குள்ள பள்ளிகளையும், தொலைத் தொடர்பு கோபுரங்களையும் குண்டு வைத்து தகர்த்துள்ளனர். எனவே அங்கு அரசு நிர்வாகத்தை ஏற்படுத்தவே நக்ஸலைட்டுகளுக்கு எதிரான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது” என்று உள்துறைச் செயலர் ஜி.கே. பிள்ளை கூறினார்.

சட்டீஸ்கார், ஜார்க்கண்ட், பீகார், மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களில் மாவோயிஸ்ட்டுகளுக்கு எதிராக மத்திய, மாநில அரசுகள் இணைந்து மேற்கொண்டுவரும் நடவடிக்கைகள் குறித்தும் சமீபத்தில் மாவோயிட்டுகள் நடத்திய தாக்குதலில் 23 காவலர்கள் கொல்லப்பட்டது பற்றியும் தனியார் ஆங்கிலத் தொலைக்காட்சி ஒன்றில் நடந்த விவாதத்தில் மத்திய உள்துறைச் செயலர் கோபால கிருஷ்ண பிள்ளை, அந்த நடவடிக்கைகளை நியாயப்படுத்தி மேற்கண்டவாறு கூறினார்.

img1100220083_1_1.jpg

அந்த விவாதத்தில் கலந்துகொண்ட எவரும் மாவோயிஸ்ட்டுகளின் ஆயுதப் போராட்டத்தை தாங்கள் ஆதரிப்பவர்கள் அல்ல என்றும், மத்திய, மாநில காவல் படைகள் இணைந்து மேற்கொண்டு வரும் அந்த நடவடிக்கையில் அப்பகுதிகளில் வாழ்ந்துவரும் அப்பாவி பழங்குடியின மக்கள்தான் பாதிக்கப்படுகிறார்கள் என்றும், பழங்குடியினர் வாழ்ந்துவரும் இடங்களில் உள்ள கனிம வளங்களைக் கைப்பற்ற, அவர்களின் வாழ்வாதாரமாக உள்ள நிலங்களை மாநில அரசுகள் பறிக்க முற்பட்டதைத்தான் அவர்கள் எதிர்த்தார்கள் என்றும், அதனை ஒடுக்க மேற்கொண்ட நடவடிக்கையே பெரும் பிரச்சனையாகியுள்ளது என்றும் வாதிட்டனர்.

மேற்கு வங்க மாநிலம், மிட்னாபூர் மாவட்டத்தின் சீலத் என்ற இடத்தில் முகாமிட்டிருந்த காவல் படையினர் மீது சமீபத்தில் மாவோயிஸ்ட்டுகள் நடத்திய தாக்குதலில் 23 காவலர்கள் கொல்லப்பட்டனர். இதனை மையப்படுத்தியே நடந்த அந்த விவாதத்தில், மாவோயிஸ்ட்களின் வன்முறைக்கு முடிவு கட்டவும், அப்பகுதிகளை மாவோயிஸ்ட்டுகளின் பிடியில் இருந்து மீட்கவுமே மத்திய, மாநில அரசுகளின் காவற்படைகள் அவர்களுக்கு எதிரான நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றன என்றும் ஜி.கே. பிள்ளை நியாயப்படுத்தினார். விவாதத்தில் கலந்துகொண்ட காங்கிரஸ் கட்சியின் பேச்சாளரும் அதனை ஆமோதித்துக் கருத்து தெரிவித்தார்.

மக்களைத் தாக்குவது மாவோயிஸ்ட்டா? அரச படைகளா?

மேற்கு வங்க மாநிலம் லால்கர், மிட்னாபூர் ஆகிய மாவட்டங்களிலும், சட்டீஸ்காரின் பஸ்தார் பகுதி என்றழைக்கப்படும் அம்மாநிலத்தின் தென் பகுதியிலுள்ள 5 மாவட்டங்களிலும், ஜார்க்கண்ட், பீகார் மாநிலங்களில் பழங்குடியினர் வாழும் மாவட்டங்களிலும் உள்ள கனிம வளத்தை கைப்பற்றுவதற்காகவே அங்கு பன்னெடுங்காலமாக வாழ்ந்துவரும் பழங்குடியினரை வெளியேற்ற மேற்கொண்ட திட்டமிட்ட தொடர் முயற்சியே தொடர்ந்துவரும் ஆயுத மோதலிற்குக் காரணம். அவர்களை வெளியேற்றியே தீருவது என்பதில் முனைப்பாக இருந்த மாநில அரசுகளும், அப்பகுதியின் கனிம வளங்களைத் தோண்டி எடுக்க வந்த தனியார் நிறுவனங்களும் ஒரு அடியாட்கள் படையை உருவாக்கின.

img1100220083_1_2.jpg

சல்வா ஜூடும் என்ற அந்தப் படை (தொலைக்காட்சி விவாதத்திலும் இது சுட்டிக்காட்டப்பட்டது) பழங்குடியினரை வேட்டையாடத் துவங்க, அப்பகுதியில் இயங்கிவந்த மாவோயிஸ்ட்டுகள் அதனை தங்களுக்குச் சாதகமாக பயன்படுத்திக் கொண்டு, பாதிப்பிற்குள்ளான பழங்குடியினருக்கு ஆதரவாக தாக்குதலில் ஈடுப்பட்டனர். இந்த விவரங்கள் யாவும் சட்டீஸ்கர் மாநிலம், தாண்டிவாடா மாவட்டத்தில் பழங்குடியினரிடையே தங்கி 17 ஆண்டுகளுக்கு மேல் தொண்டாற்றிவரும் காந்தியவாதியான ஹிமான்சு குமார் சென்னையிலும், மும்பையிலும், மற்ற நகரங்களுக்கும் சென்று வெளிப்படுத்தினார்.

தாண்டிவாடா மாவட்டத்தில் மட்டும் 644 கிராமங்களில் வாழ்ந்த 4.5 இலட்சம் பழங்குடியினர் அடித்து, அடர்ந்த காடுகளுக்குள் துரத்தப்பட்டுள்ளனர் என்ற உண்மையை கூறிய ஹிமான்சு குமார், அங்கு உண்மையில் நடப்பது என்ன என்பது குறித்து உள்துறை அமைச்சருக்கு தெரிவிக்கத் தயார் என்றும் கூறினார்.

இந்தச் செய்திகள் எல்லாம் பெருவாரியான ஊடகங்களால் இருட்டடிப்பு செய்யப்பட்டன என்றாலும், உண்மையை வெளிக்கொணர்வதில் அக்கறை கொண்ட பத்திரிக்கைகளிலும், இணையங்களிலும் வெளிவந்தது.

எனவே, இந்தியாவின் கனிம வளங்கள் நிறைந்த தண்டகாரண்யம் என்றழைக்கப்படும் அந்த மத்திய இந்தியப் பகுதி மாவட்டங்களில் உண்மையிலேயே மக்களுக்கு எதிராகச் செயல்பட்டு வருவது யார் என்ற உண்மை வெளியுலகத்திற்கு தெரிந்துவிடாமல் மறைப்பதற்காகவே அங்கு மனித உரிமை ஆர்வலர்களையோ அல்லது ஊடகவியலாளர்களையோ மத்திய, மாநில அரசுகளும், மாவட்ட நிர்வாகங்களும் அனுமதிப்பதில்லை.

img1100220083_2_1.jpg

இது ‘மாவோயிஸ்ட்டுகளுக்கு எதிரான நடவடிக்கை’ என்று கூறப்பட்டாலும், அது அங்கு வாழும் பழங்குடியினரை விரட்டவும், அவர்கள் வாழ்ந்துவரும் கனிம வளமிக்க நிலங்களைக் கைப்பற்றவும்தான் என்பது விவரம் அறிந்த அனைவரும் அறிந்ததுதான்.

இந்த உண்மையை மறைப்பதற்கும், பசுமை வேட்டை (ஆபரேஷன் கிரீன் ஹண்ட்) என்ற பெயரில் மேற்கொள்ளப்பட்டுவரும் நடவடிக்கைக்கு எதிரான மனித உரிமையாளர்கள் மற்றும் புத்தி ஜீவிகளிடையே உருவாகிவரும் எதிர்ப்பை மழுங்கடிக்கவும் மத்திய அரசு செய்துவரும் பிரச்சாரம்தான் இந்த தொலைக்காட்சி நிகழ்ச்சியில் உள்துறைச் செயலர் கூறிய காரணங்களாகும்.

நாடாளுமன்ற ஜனநாயகம் எங்கே காப்பாற்றப்படுகிறது?

நாடாளுமன்ற ஜனநாயகத்தில் நம்பிக்கையற்றவர்கள், அவர்கள் இந்த அமைப்பை ஆயுதப் புரட்சியின் மூலம் தூக்கி எரிந்துவிட்டு பொதுவுடைமை அரசை ஏற்படுத்தும் கொள்கை கொண்டவர்கள் என்றும், அதற்காகவே அவர்கள் ஆயுதமெடுத்துள்ளார்கள் என்று உள்துறைச் செயலர் மட்டுமல்ல, உள்துறை அமைச்சர் ப. சிதம்பரமும் கூறியுள்ளார்.

அப்படியானால், இந்த அமைப்பின் மீதே நம்பிக்கையற்றவர்களாய், அதனை தூக்கியெறியும் கொள்கை கொண்டவர்களான மாவோயிஸ்ட்டுகளை, அவர்கள் ஆயுதங்களை கீழே வைத்துவிட்டு வந்தால் பேசத் தயார் என்று உள்துறை அமைச்சர் விடுத்த அழைப்பின் பொருள் என்ன? அவர்களை அழைத்து ‘உங்களின் கொள்கை மிகவும் தப்பானது, இந்தியாவின் நாடாளுமன்ற ஜனநாயகத்தில் மக்கள் நலன் காப்பாற்றப்படும்’ என்று பாடம் நடத்தவா?

ஒரு அமைப்பு எப்படிப்பட்ட கொள்கை கொண்டது என்பதல்ல பிரச்சனை, மாறாக, அதன் நடவடிக்கைக்கு அது கூறும் காரணத்திற்கு பதில் அல்லது தீர்வு என்ன என்பதுதான் முக்கியம்.

மாவோயிஸ்ட்டுகள் மட்டும்தான் நாடாளுமன்ற ஜனநாயகத்தில் நம்பிக்கையற்றவர்களா? மேற்கு வங்கத்திலும், கேரளத்திலும் ஆட்சியில் இருக்கும் மார்க்சிய கம்யூனிஸ்ட் கட்சியினரின் கொள்கையும் அதுதானே? ‘பாராளுமன்றம் பன்றிகளின் தொழுவம்’ என்றும் கூறிக்கொண்டு, அப்படிப்பட்ட ஜனநாயகத்தில் பங்கேற்பதன் மூலம் மக்கள் நலனை பேணக்கூடிய ஒரு நல்லாட்சி நாடாளுமன்ற ஜனநாயகத்தின் மூலம் சாத்தியமல்ல என்பதை நிரூபிக்கத் தேர்தல் ஜனநாயகத்தில் பங்கேற்றுள்ளவர்கள்தான் மார்க்சிஸ்ட்டுகள். அவர்களின் ஆதரவோடு கம்யூனிஸ்ட் கொள்கையை எதிர்க்கும் பிரதமர் மன்மோகன் சிங் தலைமையில் சற்றேறக்குறைய நான்கரை ஆண்டுகளாக கூட்டணி ஆட்சி நடத்தவில்லையா?

எனவே, ஒரு இயக்கத்தின் அல்லது கட்சியின் கொள்கை என்ன என்பதல்ல அங்கு பிரச்சனை. கிரீன் ஹண்ட் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் பகுதியில் ஏராளமாகக் கிடைக்கும் கனிம வளங்களை கைப்பற்ற முயற்சி நடக்கிறதா இல்லையா? அதனை அப்பகுதியில் தொன்று தொட்டு வாழ்ந்துவரும் மக்கள் எதிர்த்தனரா இல்லையா? அரசிடம் காவல் துறை உள்ளது, மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள கூடுதல் காவற்படை எந்த மாநிலத்தின் சட்டப்பூர்வமான தேவைக்கும் வரத்தயாராக உள்ளது. அவ்வாறிருக்க, சல்வா ஜூடும் என்ற அடியாட்கள் படை எந்த சட்டத்தின்படி ஏற்படுத்தப்பட்டது? இதன் பின்னணியில், மாநில அரசுகளுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்களைப் போட்டுக் கொண்டு கனிம வளங்களைக் கைப்பற்ற முன்வந்த தனியார் நிறுவனங்கள் உள்ளனவா இல்லையா? போன்ற கேள்விகளுக்கே மத்திய அரசு பதிலளிக்க வேண்டும்.

img1100220083_2_2.jpg

மாவோயிஸ்ட்டுகள் யார்? அவர்கள் எங்கிருந்து தோன்றினார்கள்? 60 ஆண்டுக்கால சுதந்திர இந்தியாவில் நிறைவேற்றப்ட்ட திட்டங்கள் எதுவும் பழங்குடியினரை தொடவில்லை என்று கடந்த ஆண்டு நவம்பரில் டெல்லியில் மத்திய பழங்குடியினர் நல அமைச்சகம் நடத்திய மாநாட்டில் பிரதமர் மன்மோகன் சிங் ஒப்புக்கொண்டாரே? அவர்களின் பங்களிப்பு அங்கீகரிக்கப்படவில்லை என்று கூறினாரே? அப்படியானால் இது அரசின் அல்லது நாம் கடைபிடித்துவரும் ஜனநாயக அமைப்பின் தோல்வியல்லவா? அதனால்தானே அதற்கு எதிரான கொள்கைக்கு இளைஞர்கள் ஈர்க்கப்படுகிறார்கள்? அவர்களைக் கொன்றொழிப்பதன் மூலம் எப்படி அமைதி திரும்பும்? அமைதி திரும்பும் என்பதற்கு என்ன உத்தரவாதம்?

அங்கு கொன்றொழிக்கப்படுபவர்கள் எல்லாம் மாவோயிஸ்ட்டுகள் என்பதற்குத்தான் என்ன ஆதாரம்? பழங்குடியின இளைஞர்களே வேட்டையாடப்படுகின்றனர் என்கின்றன ஆதாரங்கள். பழங்குடியின இளம் பெண்கள் பாலியல் வல்லுறவுக்குள்ளாக்கப்பட்டது - அவர்களின் பேட்டியுடன் - வெளிவந்துள்ளது. அரசின் நடவடிக்கையை எதிர்க்கும் இளைஞர்களிடம் அச்சத்தை ஏற்படுத்த வேண்டும் என்பதற்குத்தானே, பழங்குடியினக் குழந்தை ஒன்றின் விரல்கள் வெட்டப்பட்டுள்ளது. இது யாருடைய நடவடிக்கை? அரசப் படைகளின் நடவடிக்கை! சொந்த நாட்டு மக்களை ஈவிரக்கமின்றி வேட்டையாடும் அரசு, ஜனநாயக அரசா? அல்லது பயங்கரவாத அரசா?

அங்கு ஊடகவியலாளர்களை அனுமதிக்க மறுப்பது ஏன்? ஏனென்றால், எது வன்னியில் நிகழ்த்தப்பட்டதோ அதுவே கிரீன் ஹண்ட் என்ற பெயரில் சட்டீஸ்கரில் நடத்தப்படுகிறது. இதனை அம்மாநில காவல்துறை தலைமை வழக்கறிஞர் விஸ்வரஞ்சன் ஒரு பேட்டியிலேயே இவ்வாறு கூறியுள்ளார்: “இலங்கை இராணுவத்தின் இறுதிப்போர்தான் எங்களுக்கு வழிகாட்டி”. இதனை இன்றுவரை உள்துறை அமைச்சரோ அல்லது உள்துறைச் செயலரோ அல்லது சம்மந்தப்பட்ட எந்த ஒரு மாநில அரசோ மறுக்கவில்லை எனபது குறிப்பிடத்தக்கது.

நாடாளுமன்ற ஜனநாயகத்தை நமது நாட்டின் அரசுகளும், கட்சிகளும் எந்த அளவிற்கு மதித்து காப்பாற்றி வருகின்றன என்பதற்கு, நாடாளுமன்றத்தில் நடைபெறும் விவாதங்களும், அது நடக்கும் சில நாட்களில் நடைபெறும் வெளிநடப்புகளும், தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களில் கால்பங்கிற்கு மேலானவர்கள் குற்றப் பின்னணி கொண்டவர்கள் என்பதலிருந்தும், நமது நாட்டில் தேர்தல் ‘எப்படி’ நடத்தப்படுகிறது என்பதிலிருந்தெல்லாம் நாம் நன்றாக கண்டு வருகிறோம்.

இந்த நாட்டின் இறையாண்மை தொடர்பான ஒரு முக்கிய பிரச்சனை இந்திய - அமெரிக்க அணு சக்தி ஒத்துழைப்பு ஒபந்தத்தால் ஏற்பட்டது. அதுகுறித்த விவாதத்தில் எழுப்பபட்ட பல கேள்விகளுக்கு எந்தப் பதிலும் தெரிவிக்காமல் தவிர்த்தது மட்டுமின்றி, நாடாளுமன்றத்தின் ஒப்புதலுடன்தான் ஒப்பந்தத்தில் கையெழுத்திடப்படும் என்று கூறிவிட்டு, பிறகு நாடாளுமன்றத்தில் எந்த விவாதமும் செய்யாமல் கையெழுத்திட்ட பிரதமரைக் கொண்ட நாடாளுமன்ற ஜனநாயகம்தான் இந்தியாவின் நாம் காப்பாற்றி நடைமுறைப்படுத்திவருகிறோம்.

இந்தியாவின் நாடாளுமன்றத்தில் விவாதிக்காமலேயே, அண்டை நாடு நடத்திய தமிழினப் படுகொலைக்கு ஆதரவு அளிக்கவில்லையா? இவையாவும் நமது நாட்டின் ஜனநாயக முத்திரைகள்.

யாருக்காக அங்கு பள்ளிகள்?

மாவோயிஸ்ட்டுகளின் வன்முறைக்கு ஆதாரமாக, “அவர்கள் பல பள்ளிகளை குண்டு வைத்து தகர்த்துள்ளார்கள், 48க்கும் மேற்பட்ட தகவல் தொடர்பு கோபுரங்கள் குண்டு வைத்து தகர்க்கப்பட்டுள்ளது” என்றெல்லாம் ஜி.கே.பிள்ளை குற்றச்சாற்றுகளை அடுக்கினார்.

img1100220083_3_1.jpg

இவர்கள் ஆபரேஷன் கிரீன் ஹண்ட் நடத்தும் பகுதியில் - உதாரணத்திற்கு தாண்டிவாடா மாவட்டத்திலுள்ள 644 கிராமங்களில் இருந்து நான்கரை இலட்சம் பழங்குடியினர் விரட்டியடிக்கப்பட்டுள்ளப் பகுதியில் - மக்களே இல்லாத இடத்தில் பள்ளிகளைப் பற்றிப் பேசுகிறார் பிள்ளை!

பாடம் நடத்தப்படாத, பிள்ளைகள் வராத பள்ளிக்கூடங்களை கைப்பற்றி அங்கு கிரீன் ஹண்ட் நடவடிக்கை மேற்கொள்ளும் படையினர் முகாம் அமைத்துவிடக்கூடாது என்பதற்காகவே அப்பள்ளிகளை ள் குண்டுகள் வைத்து தகர்க்கப்பதாக மாவோயிஸ்ட்டுகள் கூறுகின்றனர்.

அரசு மேற்கொள்ளும் நடவடிக்கையின் நோக்கம் மக்களைக் காப்பதற்கா அல்லது ஆதிவாசிகளின் வசம் உள்ள கனிம வளம் கொண்ட இடங்களை அவர்களிடமிருந்து பறிப்பதற்கா என்பதை அறிய அங்கு ஊடகவியலாளர்களை அனுமதிக்கட்டுமே? எதற்காக இரகசிய நடவடிக்கை?

அமைப்பு மக்களுக்காகவா அல்லவா என்ற மாவோயிஸ்ட்டுகள், நக்ஸலைட்டுகள் ஆகியோரின் கேள்வி இருக்கட்டும். இன்றைய அரசு மக்களுக்காகவா? என்ற கேள்விக்கு சந்தேகத்திற்கு அப்பாற்பட்டு அரசு பதில் சொல்லட்டும்....

நன்றி :தமிழ்வெப்துனியா

Edited by புரட்சிகர தமிழ்தேசியன்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.