Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கே.பி: எதிர்ப்புரட்சியின் நடுநாயகம் - சேரமான்

Featured Replies

திகதி: 26.06.2010 // தமிழீழம்

வன்னிப் போரின் இறுதிக்கட்டத்தின் பொழுது தமிழீழ விடுதலைப் புலிகளின் வெளியுறவுத் தொடர்பாளராக நியமிக்கப்பட்ட கே.பி என்றழைக்கப்படும் செல்வராசா பத்மநாதன், சிங்கள அரசுடன் இணைந்து இயங்கி வருவது தொடர்பான தகவல்கள் கடந்த சில மாதங்களாக அரசல்புரசலாக வெளிவந்திருந்த நிலையில், இவற்றை அதிகாரபூர்வமாக உறுதிசெய்யும் வகையில் கடந்த 20ஆம் நாளன்று சண்டே ஒப்சேவர் வார இதழில் வெளியாகிய முகப்புச் செய்து அமைந்துள்ளது.

சண்டே ஒப்சேவர் வார இதழ் என்பது சிங்கள அரசின் ஊடக அமைப்பான லேக் ஹவுஸ் நிறுவனத்தால் வெளியிடப்படும் ஓர் அதிகாரபூர்வ இதழாகும். இந்த வகையில் கே.பி தொடர்பாக சண்டே ஒப்சேவர் வார இதழ் வெளியிட்ட செய்தியை சிங்கள அரசின் அதிகாரபூர்வ அறிவிப்பாகவே நாம் கொள்ள முடியும். இதேநேரத்தில் இது தொடர்பாக கடந்த 22ஆம் நாளன்று அறிக்கை ஒன்றை விடுத்திருக்கும் ஜே.வி.பியின் நாடாளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத், கடந்த வாரம் யாழ் பலாலி, கிளிநொச்சி ஆகிய இடங்களுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட கே.பியிற்கு, கிளிநொச்சியில் உள்ள படைத்தளம் ஒன்றில் சிறீலங்கா படையினரால் விருந்துபசாரம் அளிக்கப்பட்டதாகக் குறிப்பிட்டுள்ளார்.

இவற்றின் தொடர்ச்சியாக இது குறித்து 24ஆம் நாளன்று செய்தியாளர்களிடம் கருத்துரைத்திருக்கும் சிறீலங்கா ஊடகத்துறை அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல, தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான தமது அரசாங்கத்தின் சாட்சியாகவே தற்பொழுது கே.பி திகழ்வதாகவும், இந்த வகையில் கே.பி அவர்களை குற்றவாளியாகப் பார்க்கத் தேவையில்லை என்றும் தெரிவித்துள்ளார்.

கடந்த ஆண்டு ஓகஸ்ட் மாதத்தில் மலேசியாவில் வைத்து சிறீலங்கா புலனாய்வுப் பிரிவினரால் கே.பி கடத்தப்பட்டதாக அவரது குழுவினரால் செய்தி வெளியிடப்பட்ட பொழுது, அது புலம்பெயர்வாழ் தமிழீழ மக்களிடையே இருதுருவ ரீதியிலான கருத்துக்களைத் தோற்றுவித்திருந்தது. ‘கே.பி கடத்தப்படவில்லை, அவராகவே சிங்கள அரசிடம் சரணடைந்தார்' என்று ஒருதரப்பினரும், ‘மிகவும் நுட்பமான முறையில் கே.பியை இலக்கு வைத்து சிறீலங்கா புலனாய்வுப் பிரிவினர் கடத்திச் சென்றுள்ளனர்' என்று மறுதரப்பினரும் நேர்முரணான கருத்துக்களை வெளியிட்டிருந்தனர். இது தொடர்பாக அப்போதைய காலப்பகுதியில் கே.பியுடன் நெருங்கிய தொடர்புகளைப் பேணி வந்த கனடிய தமிழ் எழுத்தாளர் டி.பி.எஸ்.ஜெயராஜ் குறிப்பிடுகையில், அமெரிக்காவின் வெளியகப் புலனாய்வு அமைப்பான சி.ஐ.ஏ அமைப்பினரால் அல்கைடா இயக்கத் தலைவர்கள் கடத்திச் செல்லப்பட்டமைக்கு நிகரான பாணியிலேயே கே.பியையும் சிறீலங்கா புலனாய்வுப் பிரிவினர் கடத்திச் சென்றிருப்பதாகக் குறிப்பிட்டிருந்தார்.

இவையெல்லாம் ஊடகங்களில் வெளிவந்த செய்திகள். ஆனால் கே.பி கடத்தப்பட்டதாக அவரது குழுவினரால் அறிவிக்கப்பட்ட பின்னர் அரசல்புரசலாகக் கசிந்த பல தகவல்கள் ஊடகங்களில் வெளிவரத் தவறியிருந்தன. முதலாவதாக சிறீலங்கா புலனாய்வுப் பிரிவினரின் வழித்துணையுடன் கொழும்பில் இருந்து அடிக்கடி சிங்கப்பூருக்கு கே.பி வந்து செல்வதாக தகவல்கள் கசிந்திருந்தன. இதன் ஓர் அங்கமாக தனக்கு நெருக்கமான சட்டத்தரணி ஒருவரையும், தொலைக்காட்சி ஒன்றின் பணிப்பாளர் ஒருவரையும் கே.பி சிங்கப்பூருக்கு அழைத்து சந்தித்திருந்ததாக தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதன் பின்னர் அவுஸ்திரேலியா, பிரித்தானியா, பிரான்ஸ், நோர்வே, சுவிற்சர்லாந்து போன்ற நாடுகளில் உள்ள தனது நெருங்கிய சகாக்கள் சிலருடன் தொலைபேசியில் கே.பி உரையாடியதாகவும் தகவல்கள் வெளிவந்திருந்தன. இதற்கிடையே இதேகாலப்பகுதியில் தென்கிழக்காசிய நாடொன்றில் தங்கியிருந்ததாகக் கூறப்படும் தனது சகா ஒருவருடன் தொலைபேசியில் உரையாடிய கே.பி, சிறீலங்கா அரசுடன் முரண்படுவது அர்த்தமற்றது என்றும், தனது நிறுவனத்தின் பெயரில் பதிவு செய்யப்பட்டிருந்த கப்பல் ஒன்றை சிறீலங்கா அரசாங்கத்திடம் கையளிக்கப் போவதாகவும் தெரிவித்திருந்ததாக தகவல்கள் கசிந்திருந்தன. இதன் தொடர்ச்சியாக தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆயுதக் கப்பல் என்று கூறி, தென்கிழக்காசிய நாடொன்றில் இருந்து சிறீலங்கா கடற்படையினரால் கப்பல் ஒன்று கொழும்புக்கு கொண்டு செல்லப்பட்டு கண்காட்சிக்கு வைக்கப்பட்டது.

இதேவேளை மலேசியா போன்ற தென்கிழக்காசிய நாடுகளில் தங்கியிருந்த தமிழீழ விடுதலைப் புலிகளின் ஒரு தொகுதி செயற்பாட்டாளர்களும், போராளிகளும் சிறீலங்கா புலனாய்வுப் பிரிவினரால் அடையாளம் காணப்பட்டு, அந்தந்த நாடுகளின் புலனாய்வுப் பிரிவினரின் அனுசரணையுடன் கொழும்புக்கு கொண்டு செல்லப்பட்ட சம்பவங்களும் சத்தம் சந்தடியின்றி அரங்கேறியிருந்தன. இவ்வாறு கொழும்புக்கு கொண்டு செல்லப்பட்ட பலர், சுற்றுலாப் பயணிகளாக கட்டுநாயக்கா பன்னாட்டு விமான நிலையத்தை வந்தடைந்த பொழுதே கைது செய்யப்பட்டதாக சிறீலங்கா அரசு செய்தி வெளியிட்டிருந்தது. இவை ஒருபுறமிருக்க, தமிழீழ விடுதலைப் புலிகளின் உறுப்பினர்கள் என்று சிங்கள அரசால் இனம்காணப்பட்ட புலம்பெயர்வாழ் ஈழத்தமிழ் மனிதநேய செயற்பாட்டாளர்களை இலக்குவைத்து இவ்வாண்டின் முற்பகுதியில் ஐரோப்பிய நாடுகளில் ‘புலிவேட்டை' தொடங்கப்பட்டிருந்தது.

வன்னிப் போரில் சிறீலங்கா படைகளின் நடவடிக்கைத் தளபதியாக விளங்கியவரும், தற்பொழுது யேர்மனியில் சிங்கள அரசின் இராசதந்திரியாக செயற்படுபவருமான மேஜர் ஜெனரல் ஜெகத் டயஸ் அவர்களின் அனுசரணையுடனேயே இந்தப் ‘புலிவேட்டை' முன்னெடுக்கப்பட்டிருந்தது. இதேபோன்று, தமிழகத்தில் தங்கியிருப்பதாகக் கூறப்படும் தமிழீழ விடுதலைப் புலிகளின் உறுப்பினர்களைக் குறிவைத்து, தமிழக காவல்துறையின் ‘கியூ' புலனாய்வுப் பிரிவினரால் ‘கைதுப்' படலங்களும் அரங்கேற்றப்பட்டு வருகின்றன. இவ்வாறாக ஒருபுறம் தமிழீழ விடுதலைப் போராட்டம் உயிரூட்டம் பெறுவதைத் தடுத்து நிறுத்துவதற்கான தனது எதிர்ப்புரட்சி நடவடிக்கைகளை முழுவீச்சுடன் சிங்கள அரசு முன்னெடுத்துக் கொண்டிருக்க, மறுபுறம் ‘கே.பி சித்திரவதைகளுக்கு உட்படுத்தப்படுகின்றார்', ‘தமிழீழ விடுதலைப் புலிகளால் கே.பி காட்டிக் கொடுக்கப்பட்டார்' போன்ற உண்மைக்குப் புறம்பான செய்திகளைப் பரப்பி சிங்கள அரசின் நடவடிக்கைகள் மீதான புலம்பெயர்வாழ் தமிழீழ மக்களின் கவனத்தைத் திசைதிருப்பும் நடவடிக்கையில் வெளிநாடுகளில் இயங்கும் கே.பி குழுவினரும், அவர்களின் ஊடகங்கள் ஈடுபட்டிருந்தன.

கடந்த ஓராண்டு காலப்பகுதியில் பல்வேறு தேர்தல் திருவிழாக்களுக்குள் புலம்பெயர்வாழ் தமிழீழ மக்கள் திசைதிருப்பி விடப்பட்டிருந்த நிலையில், இவையெல்லாவற்றையும் தமக்கு சாதகமாகக் கையாண்ட சிங்கள அரசின் வயிற்றில் புளியைக் கரைக்கும் வகையில், தமிழீழத் தனியரசுக்கு ஆணை வழங்கும் வட்டுக்கோட்டைத் தீர்மானம் மீதான வாக்கெடுப்புக்கள் அமைந்திருந்தன. இது தொடர்பாக தனது அதிருப்தியை சிங்கள அரசு பகிரங்கமாக வெளியிட்டிருந்த அதேவேளை, ‘வட்டுக்கோட்டைத் தீர்மானம் கொட்டைப்பாக்குக்கு வழிகாட்டும்' என்ற குரூரமான தொனியில் கே.பி குழுவினரால் இயக்கப்படும் ஊடகங்களில் செய்திகள் வெளியிடப்பட்டதோடு, வட்டுக்கோட்டைத் தீர்மானம் மீதான வாக்கெடுப்புக்களின் முடிவுகளை சிறுமைப்படுத்தியும், இருட்டடிப்பு செய்யும் குழப்பகரமான செய்திகளையும் கே.பி குழுவினர் வெளியிட்டு வந்தனர்.

இவ்வாறாக சிங்கள அரசின் எதிர்ப்புரட்சி மூலோபாயத்தின் (counter-insurgency strategy) நடுநாயகமாக மாற்றம் பெற்றிருந்த கே.பியின் நிகழ்ச்சித் திட்டத்தை மிகவும் கனக்கச்சிதமான முறையில் அவரது குழுவினர் அரங்கேற்றி வந்தனர். தற்பொழுது கே.பி அவர்களின் உண்மை முகம் வெளிவந்திருக்கும் நிலையில், இப்பொழுதும் அவரையும், அவரது செய்கைகளையும் நியாயப்படுத்தும் வகையில் கே.பி குழுவினர் ஈடுபட்டிருப்பது மிகவும் நகைப்புக்கிடமானது. அதாவது, ‘சிங்கள அரசின் சித்திரவதைக்கு ஆளாகிய கே.பி, சிங்கள அரசின் தாளத்திற்கு ஆடுவதை நாம் விமர்சிக்க முடியாது' என்றும், ‘கே.பி சந்தர்ப்பக் கைதியாக விளங்குகின்றார்' என்றும் அவரது குழுவினர் வியாக்கியானமளிக்க முற்படுவது புலம்பெயர்வாழ் தமிழீழ மக்களிடையே பல்வேறு கேள்விகளை எழுப்புகின்றது.

சரி. ஒரு பேச்சுக்கு கே.பியை சந்தர்ப்பக் கைதியாகவே எடுத்துக் கொள்வோம். கே.பி மிகவும் நல்லவர் என்றும் வைத்துக் கொள்வோம். கே.பி எந்தத் தவறும் இழைக்கவில்லை, தமிழீழ விடுதலைப் போராட்டத்திற்கு அவர் எந்தத் துரோகமும் இழைக்கவில்லை என்றும்கூட எடுத்துக் கொள்வோம். அப்படியென்றால் கே.பியால் இனி தமிழீழ விடுதலைப் போராட்டத்திற்கு எவ்விதமான பாதிப்பும் ஏற்படாது என்று நாம் எடுத்துக் கொள்ள முடியுமா? இதற்கு விடைகாண்பதற்கு மீண்டும் சிங்கள அரசின் எதிர்ப்புரட்சி மூலோபாயத்தை நாம் புரட்டிப் பார்ப்பது மிகவும் பொருத்தமாக இருக்கும்.

முற்றுமுழுதாக மரபுரீதியாக இடம்பெற்று முள்ளிவாய்க்காலுடன் முற்றுப்பெற்ற வன்னிப் போரில் சிங்களப் படைகள் வெற்றியீட்டியதை நாம் மறுக்கமுடியாது. 1996ஆம் ஆண்டு வரை ஒரு அரைமரபுப் படையாக விளங்கிய தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பு, முல்லைத்தீவை மீட்டெடுத்த ஓயாத அலைகள் - 1 நிலமீட்பு நடவடிக்கையின் பின்னர் துரித கதியில் மரபுப் படையணியாகத் தோற்றம் பெற்று, ஜெயசிக்குறு படை நடவடிக்கையின் பொழுது சிங்களப் படையணிகளை திணறடித்தது. இதன் பின்னர் மரபுரீதியிலான வளர்ச்சியின் உச்சகட்டமாக வன்னிப் பெருநிலப்பரப்பை மீட்டெடுத்து, யாழ்ப்பாணத்தின் தொண்டையில் சிக்கிய முள்ளாக விளங்கிய ஆனையிறவைக் கைப்பற்றி, சிங்களப் படைகளுக்கு பெரும் சவாலாக மாற்றம்பெற்றிருந்தனர்.

இதன் பின்னர் கட்டுநாயக்கா வான்படைத் தளம் மீதான கரும்புலி நடவடிக்கையின் ஊடாக சிங்கள அரசின் பொருண்மிய - படை வலிமையை சிதறடித்து, படைவலுச் சமநிலையின் ஊடாக அரசியல் ரீதியில் இனப்பிரச்சினைக்கு தீர்வுகாண்பதற்கு தமிழீழ விடுதலைப் புலிகள் முற்பட்டமை வரலாறு. இதில் குறிப்பிடத்தக்க விடயம் என்னவென்றால், 2002ஆம் ஆண்டு போர்நிறுத்த உடன்படிக்கை ஈட்டப்படும் வரை தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும், சிங்கள அரசுக்கும் இடம்பெற்ற மரபுவழி யுத்தம் என்பது முற்றுமுழுதாக நவீனயுக (modern) போர் யுக்திகளை அடிப்படையாகக் கொண்டே முன்னெடுக்கப்பட்டிருந்தது.

இதேபோன்று ஏனைய நாடுகளில் எதிர்ப்புரட்சி நடவடிக்கைகளில் ஈடுபட்ட பல்வேறு அரசுகளும் நவீனயுக போர் யுக்திகளையே கையாண்டிருந்தன. எனினும் 2001 செப்ரம்பர் 11இற்குப் பின்னரான அமெரிக்காவின் எதிர்ப்புரட்சி நடவடிக்கைகள் பின்நவீனயுக (post-modern) போர் யுக்திகளை அடிப்படையாகக் கொண்டே முன்னெடுக்கப்பட்டிருந்தன. 2006ஆம் ஆண்டு யூலை மாதம் மாவிலாற்றில் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரை சிங்கள அரசு தொடங்கிய பொழுது, இவ்வாறான பின்நவீனயுக போர் யுக்திகளையே சிங்களப் படைகள் களமிறக்கியிருந்தன. இந்தப் பின்நவீனயுக போர் யுக்திகளின் முன்னோடி நடவடிக்கையாகவே 2004ஆம் ஆண்டு முதல் 2006ஆம் ஆண்டு நடுப்பகுதி வரையான காலப்பகுதியில் துணைப்படைக் குழுக்கள் ஊடாக தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான நிழல் யுத்தத்தை (proxy war) சிங்கள அரசு முன்னெடுத்திருந்தது.

இவ்வாறாக சிங்கள அரசின் பின்நவீனயுக போர் யுக்திகள் வெறுமனவே களமுனையோடு மட்டும் மட்டுப்படுத்தபடவில்லை. மாறாக இந்தோனேசியாவில் இருந்து மாலைதீவு வரை தாக்குதல்களை நிகழ்த்தக்கூடிய கடல் வலிமையின் ஊடாகவே தனது யுத்த வெற்றியை சிங்கள அரசு உறுதிசெய்திருந்தது. தற்பொழுது சிங்கள அரசின் எதிர்ப்புரட்சி மூலோபாயம் என்பது முற்றுமுழுதாக புலனாய்வு நடவடிக்கைகளையும், உளவியல் நடவடிக்கைகளையும் (phsyc-ops) அடிப்படையாகக் கொண்டே அமைந்துள்ளன. தேசிய விடுதலைப் போராட்டங்களும், மார்க்சிய கிளர்ச்சிகளும் முறியடிக்கப்பட்ட மத்திய அமெரிக்க நாடுகளில் கடந்த இரண்டு தசாப்தங்களாக கையாளப்படும் எதிர்ப்புரட்சி நடவடிக்கைகளின் மூலோபாயங்களுக்கும், யுக்திகளுக்கும் ஒப்பான எதிர்ப்புரட்சி மூலோபாயத்தையே தற்பொழுது சிங்கள அரசு கையாண்டு வருகின்றது.

இதன் ஓர் அங்கமாக, ஈழப்போரின் விளைவாக ஊதிப்பெருத்திருக்கும் காலாட் படைகளின் (infantry) எண்ணிக்கையைக் குறைத்து, எதிர்ப்புரட்சி நடவடிக்கைகளில் தேர்ச்சிபெற்ற காட்டுப்புற - நகர்ப்புற தேடியழிப்பு சிறப்புப் படையணிகளை(jungle-urban commando forces) கட்டியெழுப்பும் நடவடிக்கைகளில் சிங்கள அரசு ஈடுபட்டு வருகின்றது. மறுபுறம் தமிழீழ மக்களிடையே ஆயுதக் கிளர்ச்சி ஏற்படுவதைத் தடுக்கும் வகையில் தமிழீழ தாயகப் பகுதிகளில் சிங்களக் குடியேற்றங்களை நிறுவி, தமது காலாட்படை வீரர்களை உள்ளக பாதுகாப்புப் படையினராக (civil defence force) மாற்றியும், தமிழீழ மக்களிடையே சமூக சீர்கேடுகளை தூண்டிவிட்டு, தமிழ் துணைப்படைக் குழுக்களின் (paramilitary groups) ஆதிக்கத்தை மேலோங்க வைக்கும் நடவடிக்கைகளிலும் சிங்கள அரசு ஈடுபடுகின்றது.

அதேநேரத்தில் எதிர்காலத்தில் நிகழக்கூடிய தமிழீழ விடுதலைப் புலிகளின் கடல்வழி வழங்கல்களை தடுத்து நிறுத்தக்கூடிய கடல்-வான்படைக் கட்டமைப்புக்களை அதிநவீன மயப்படுத்தும் நடவடிக்கைகளையும் சிங்கள அரசு முன்னெடுத்து வருகின்றது. இந்த வகையில், தமிழீழ விடுதலைப் போராட்டம் தோற்றம் பெற்ற 1970களில், விடுதலைப் போராட்டத்தின் முன்னோடிகளோடு வாழ்ந்து, 1987ஆம் ஆண்டு முதல் 2003ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியில் தமிழீழ விடுதலைப் புலிகளின் அனைத்துலக வழங்கல் நடவடிக்கைகளுக்கு பொறுப்பாக விளங்கிய கே.பி, சிங்கள அரசைப் பொறுத்தவரை மிகவும் பெறுமதியான சொத்தாகவே கருதப்படுகின்றார்.

இதனையே கோத்தபாய ராஜபக்ச, கெஹெலிய ரம்புக்வெல, ரோஹான் குணரட்ண போன்றோரால் அண்மைக் காலங்களில் வெளியிடப்பட்ட கருத்துக்கள் உறுதிசெய்கின்றன. உண்மையில், கருணா, டக்ளஸ் தேவானந்தா போன்றோரை விட தற்பொழுது சிங்கள அரசுக்கு மிகவும் பெறுமதி வாய்ந்த ஒருவராகவே கே.பி திகழ்கின்றார். தமிழீழ விடுதலைப் புலிகளின் எதிர்கால கெரில்லாத் தாக்குதல்களை தடுத்தல், மீண்டும் மரப்படையாக தமிழீழ விடுதலைப் புலிகள் வளர்ச்சியடைவதற்கான சூழலை இல்லாதொழித்தல், புலம்பெயர்வாழ் தமிழீழ மக்களிடையே நிலவக்கூடிய போர்க்குணத்தை மட்டுப்படுத்துதல் போன்ற நடவடிக்கைகளுக்கான நடுநாயகமாகவே கே.பியை சிங்கள அரசு பொக்கிசப்படுத்திப் பயன்படுத்தி வருகின்றது.

இதேநேரத்தில் புகலிட தேசங்களில் தமிழீழ மக்களால் முன்னெடுக்கப்படும் அரசியல் நடவடிக்கைகளை முறியடிக்கும் கருவியாகவும் கே.பியை சிங்கள அரசு கனக்கச்சிதமாகக் கையாண்டு வருகின்றது. இறுதிப் போரில் தமிழீழ விடுதலைப் புலிகளின் உயர்பீடத்துடன் தொடர்புகளைப் பேணிவந்த ஒருவர் என்ற வகையில், இறுதிக் கட்டத்தில் சிங்கள அரசு அரங்கேற்றிய கொடூர போர்க்குற்றங்கள், தமிழின அழித்தொழிப்பு நடவடிக்கைகள் போன்றவற்றை நன்கு அறிந்துகொண்ட ஒருவராகவே கே.பி திகழ்கின்றார். தமிழீழ அரசியல்துறைப் பொறுப்பாளர் பா.நடேசன் அவர்களின் படுகொலை, தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல் போராளிகளும், பொறுப்பாளர்களும் சிங்களப் படைகளால் சிறைப்பிடிக்கப்பட்டமை, முள்ளிவாய்க்கால் பூமியில் பல்லாயிரக்கணக்கான வன்னி மக்களுக்கு சிங்களப் படைகளால் சமாதி கட்டப்பட்டமை போன்ற பல்வேறு திடுக்கிடும் உண்மைகளை அறிந்த ஒருவராக அல்லது இவற்றுக்கு உடந்தையாக இருந்த ஒருவராகவே கே.பி திகழ்கின்றார்.

சிங்கள அரசை பன்னாட்டு அரங்கில் போர்க்குற்றவாளியாக நிறுத்தித் தண்டிப்பதற்கும், தமிழீழ மக்கள் இனவழித்தொழிப்பிற்கு ஆளாகியமையை நிரூபிப்பதற்கும் இவரது சாட்சியம் மிகவும் முக்கியமானது. குறிப்பாக முள்ளிவாய்க்கால் போரில் ரொபேட் ஓ பிளேக், விஜய் நம்பியார், எரிக் சுல்கைம், பா.சிதம்பரம் போன்றோருடன் தொடர்புகளைப் பேணிய ஒருவராகவே கே.பி திகழ்கின்றார். இதன் மறுபக்கத்தை நாம் புரட்டிப்பார்த்தால், சிங்கள அரசின் போர்க்குற்றங்களையும், தமிழின அழித்தொழிப்பு நடவடிக்கைகளையும் மூடிமறைப்பதற்கு கே.பி ஒருவரே போதும்! அதாவது வன்னிப் போரில் போர்க்குற்றங்கள் எவற்றையும் சிங்கள அரசு இழைக்கவில்லை என்று கே.பி கூறுவதே போர்க்குற்றங்களின் நம்பகத்தன்மையைக் கேள்விக் குறியாக்கிவிடும்.

இறுதிப் போரில் ஒரு பொதுமகனைக்கூடத் தமது படையினர் கொல்லவில்லை, ஒரு பெண்ணைக்கூட பாலியல் ரீதியாக துன்புறுத்தவில்லை, ஒரு கிராமத்தைக்கூட அழிக்கவில்லை என்று ராஜபக்ச சகோதரர்கள் தற்பொழுது வெளியிடும் கூற்றுக்களுக்கு சான்று பகர்வர்தற்கு கே.பி ஒருவரின் சாட்சியமே சிங்கள அரசுக்குப் போதும். இந்த வகையில், இதுவரை காலமும் கே.பியால் தமிழீழ விடுதலைப் போராட்டத்திற்கு ஏற்பட்ட பாதிப்புக்களை விட, இனிவரும் காலத்தில் ஏற்படப் போகும் பாதிப்புக்களே மிகவும் ஆபத்தானவையாக அமையும் என்பதை மட்டும் உறுதியாகக் கூறமுடியும். இதைப்புரிந்துகொண்டு இனியாவது கே.பியின் பின்னால் நிற்கும் அவரது குழுவினர் நடந்து கொள்ள வேண்டும் என்பதே புலம்பெயர்வாழ் தமிழீழ மக்களின் எதிர்பார்ப்பாகும். உறங்கிக் கொண்டிருப்பவர்களை தட்டியெழுப்பலாம்: உறங்கிக் கொண்டிருப்பது போன்று நடிப்பவர்களை???

- சேரமான்

நன்றி: ஈழமுரசு

http://www.sankathi.com/

இந்த தலைப்பு நானும் இங்கு இணைத்து காணாமல் போய் இருக்கு....! யாழுக்கை பேய் பிசாசுகள் நடமாடுது போல கிடக்கு...

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.