Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அஞ்சலி : அனுராதா ரமணன் என்றொரு மனுஷி

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

அஞ்சலி : அனுராதா ரமணன் என்றொரு மனுஷி

அம்பை

பிரபல எழுத்தாளர் அனுராதா ரமணன் மே 16 அன்று காலமானார் என்னும் செய்தி பலரையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது. தொடர்ச்சியாக இல்லாவிட்டாலும் அவ்வப்போது நான் அவருடன் தொடர்பில் இருந்தேன். ஏகப்பட்ட உபாதைகளால் அவஸ்தைப்பட்ட அவர் மருத்துவமனைக்குப் போவதும் வருவதும் சகஜமாக நடைபெறும் ஒன்று. ஒவ்வொரு முறையும் திரும்பி வந்து அதைக் கிண்டலும் கேலியும் கலந்த ஓர் அனுபவமாக எழுதுவார். ஸ்பாரோ சார்பில் அவரைப் பேட்டி கண்டபோது அவர் சுவாரசியமான நபராகத் தெரிந்தார்.

அக்கால நடிகர் ஆர். பாலசுப்பிரமணியத்தின் பேத்தியான அனுராதாவுக்குக் கலைகளில் நல்ல ஈடுபாடு இருந்தது. கலைக் கல்லூரியில் சேர்ந்து படிப்பை முடிக்கும் முன்னரே திருமணம் ஆயிற்று. அவருடைய திருமணம் ஒரு கசப்பான அனுபவமாகவே இருந்தது என்பதை அவரே எழுதியிருக்கிறார். இருபத்திரண்டு இருபத்துமூன்று வயதிலேயே இரு பெண் குழந்தைகளுடன் பிறந்தகம் வந்தார். விட்ட படிப்பைத் தொடர்ந்தார். தனி மனுஷியாகத் தன் பெண்களை வளர்க்க முற்பட்டார்.

ஆரம்பத்தில் ஓவியராகவும் வடிவமைப்பவராகவும்தான் அவர் பத்திரிகை உலகில் நுழைந்தார். Indian Housewife, Grahani aur Grahasti மற்றும் மங்கையர் மலருக்கு வடிவமைப்பவராக இருந்தார். ஒருமுறை மங்கை பத்திரிகைக்குத் தன் ஓவியங்களுடன் போனபோது தன் டயரியை அங்கேயே விட்டுவிட்டு வந்துவிட்டார். அதில் அவர் எழுதியிருந்த குறிப்புகளைக் கண்ட ஆசிரியர் அவரைக் கதை எழுதுமாறு கூறவே மிகுந்த தயக்கத்துடன் எழுதிய கதைதான் கனவு மலர்கள் கருகும்போது. அதைத் தன் பெயரில் எழுதத் தயங்கி சாம்பவி என்னும் பெயரில் எழுதினார். அதன் பிறகு தினமணி கதிரில் நான்கு சுவர்களுக்கு நடுவில் எழுதினார். ஓவியரான அவர் 1977இல் எழுத்தாளராக உருவெடுத்தார்.

முப்பது முப்பத்திரண்டு ஆண்டுகளில் அவர் எழுதிக் குவித்தார் எனலாம். கிட்டத்தட்ட 800 நாவல்களும் 1230 சிறுகதைகளும் எழுதியிருக்கிறார் என்று அனுமானிக்கப்படுகிறது. ஆனந்த விகடனில் பரிசு பெற்ற இவரது சிறை என்னும் கதை திரைப்படமாக்கப்பட்டது. கூட்டுப் புழுக்கள், ஒரு வீடு இரு வாசல், மலரின் பயணம் போன்ற இவர் கதைகள் தமிழ், தெலுங்கு, கன்னடம் என்று மூன்று மொழிகளில் படமாக்கப்பட்டன. இவருடைய பல கதைகள் தொலைக்காட்சித் தொடர்களாக வெற்றிபெற்றிருக்கின்றன. சுபமங்களா, வளையோசை போன்ற பத்திரிகை களுக்கு ஆசிரியராக இருந்த அனுபவமும் இவருக்கு உண்டு. எழுத்துக்கான பல விருதுகளும் இவரைத் தேடிவந்தன. கடந்த எட்டு ஒன்பது ஆண்டுகளாகத் தினமலரில் அன்புடன் அந்தரங்கம் என்னும் பத்தியின் மூலம் பலருக்குப் பிரச்சினைகளை எதிர்கொள்ள ஆலோசனை தந்தார்.

பிரபல எழுத்தாளராக இவர் இருந்ததால் இலக்கிய எழுத்தாளராக அறியப்பட்டிருக்கவில்லை. சிறந்த எழுத்தாளர் ஒருவர் பிரபல பத்திரிகைகளில் எழுதினால் அவர் ஏதோ மதம் மாறிவிட்டவர் போல் கருதுகிறார்கள் என்று சமீபத்திய பேட்டி ஒன்றில் அனுராதா கூறியிருக்கிறார். தி. ஜானகிராமன், ஜெயகாந்தன் போன்ற எழுத்தாளர்களைப் படித்தவர் தான் அனுராதா. ஆனால் அவர் தன் எழுத்துலகத்தை வேறுமாதிரி உருவாக்கிக்கொண்டார். அதற்குக் காரணம் தனி மனுஷியாக, தன் கொள்கைகளுக்கு ஏற்ப வாழ்ந்து, முழு நேர எழுத்தாளராக இருந்து இரு பெண்களை வளர்க்க வேண்டிய பெரும் பொறுப்பு அவருக்கு இருந்ததே.

2004இல் காஞ்சிமடத் தலைவர் ஜெயேந்திர சரஸ்வதியை முறைதவறி நடந்தவராகக் குற்றம் சாட்டியது அனுராதாவுக்குப் பல எதிரிகளையும் நண்பர்களையும் உருவாக்கியது. இவர் நடத்தையையே கேவலப்படுத்திப் பலர் பேசினர். பெண்களில் பலர் இவரைத் தங்களுக்கு உற்றவராகப் பார்த்தார்கள்; பலர் இவரைத் துரோகியாகவும் பார்க்க முற்பட்டனர். 2004இல் இவர் விடுத்த வெளிப்படையான குற்றச்சாட்டு மதவாதிகள் சிலரைப் பாதித்த விதம் இவரது இறப்புக்குப் பிறகுகூடத் தெரிந்தது. “இந்தப் பெண் நாய் நரகத்தில்தான் உழலுவாள்” என்று வலைப் பக்கங்களில் எழுதி அவர்கள் தங்கள் இயல் குணத்தையும் நிஜத்தை எதிர்கொள்ள முடியாத கோழைத் தனத்தையும் காட்டிக்கொண்டார்கள்.

எதனாலும் பாதிக்கப்படாமல் அனுராதா தொடர்ந்து கதை எழுதிக்கொண்டும் தங்களுள் ஒருத்தியாக மற்றவர் கருதும்படி நகைச்சுவையுடனும் நயத்துடனும் நட்புடனும் கட்டுரைகள் எழுதிக்கொண்டும்தான் இருந்தார் 2004இல். மேலே குறிப்பிட்ட பேட்டியில் சாகும்வரை எழுதிக்கொண்டும் வரைந்துகொண்டும் இருக்க வேண்டுமென அனுராதா கூறியிருக்கிறார். அப்படியேதான் இருந்தார். அமெரிக்காவில் வசிக்கும் அவருடைய பெண்கள் சுதாவும் சுபாவும் அவர் வெளியிட்டுள்ள வாழ்க்கைக் குறிப்புகளையும், அவர் எப்போதும் கிறுக்கும் சித்திரங்களையும் வெளியிட்டால் அது பெண்கள் வாழ்க்கையை விளக்கும் சரித்திரக் கண்ணியாக அமையும்.

வாழ்க்கையின் சிக்கல்களையும் சோதனைகளையும் நீங்கள் உங்களுக்கே உரிய நகைச்சுவையுடனும் நக்கலுடனும் கூறுவதைக் கட்டாயம் மனம் தேடும் அனு.

http://www.kalachuvadu.com/issue-127/page44.asp

  • கருத்துக்கள உறவுகள்

பதிவிற்கு நன்றி...இவருடைய பல நாவல்களை வாசித்திருக்கேன்...சில நாவல்கள் வைத்திருக்கிறேன்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.