Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இயக்குனர் பாரதிராஜா

Featured Replies

இயக்குனர் பாரதிராஜா!

- சின்னராசு

செட்டும் தேவையில்லை. முகவெட்டும் அவசியமில்லை என தமிழ்த் திரைப்படங்களில் பெரிய பெரிய அரங்குகள் போட்டு படம் எடுக்கிற வழக்கத்தையும் அதுபோல படங்களில் நடிப்பவருக்கு கவர்ச்சிகரமான முக அமைப்பும் தேவை என்றிருந்த பழக்கத்தையும் அடியோடு மாற்றியமைத்து புரட்சி செய்தவர் இயக்குனர் பாரதிராஜா.

அவர் தனது இயக்கத்தில் வெளியான முதல் படமான 16 வயதினிலே திரைப்படத்திலேயே அந்தக் கதை நிகழ்கிற கிராமமாக தேர்ந்தெடுக்கப்பட்ட அந்த மிக எளிய கிராம புறத்திலேயே முழுப்படத்தையும் எடுத்து அதனை பெரிய வெற்றிப் படமாகவும் தந்ததற்கு பின்னாலேயே வெளிப் புறங்களில் படம் எடுத்தால் அதில் தனி உயிரோட்டம் இருக்கிறது என்ற எண்ணங்களுக்கு நம்மவர்கள் வந்தார்கள்.

01bharathi1.jpg

அதுவரை சென்னையில் எப்போதும் சுறுசுறுப்பாக இருந்து கொண்டிருந்த சினிமா ஸ்டூடியோக்கள் அனைத்தும் வேலை இல்லாமல் தூங்க ஆரம்பித்தன. இதன் காரணமாகவே ஒவ்வொரு ஸ்டூடியோக்களிலும் இருந்த படப்பிடிப்பு தளங்களை சரக்குகளை பாதுகாக்கும் கிட்டங்கிகளாக மாற்றி வாடகைக்குவிட ஆரம்பித்தார்கள்.

இந்தியாவை பொறுத்தவரை ஹாலிவுட் என்று பெருமையோடு சொல்லும் விதம் சென்னை கோடம்பாக்கத்தில் பிரமாண்டமான ஸ்டூடியோக்கள் தோன்றிக் கொண்டே இருந்த சூழ்நிலையில் படப்பிடிப்புகளுக்கு ஸ்டூடியோக்கள் அவசியமில்லை என்ற மாற்ற நிகழ்ந்து தமிழகத்திலே உள்ள பல கிராமங்கள் படப்பிடிப்பு நடத்த ஏற்றவையாக புகழ்பெற ஆரம்பித்தன.

அதேபோல தனது படங்களில் முழுக்க புது முகங்களை அறிமுகப்படுத்தும் புதுமையையும் பாரதிராஜா துணிந்து செய்தார்.

அதற்கு முன்பெல்லாம் இயக்குனர் ஸ்ரீதர் முக்கிய வேடங்களில் புதுமுகங்களை அறிமுகப்படுத்தும் பாணியை கையாண்டு வந்தார்.

இருப்பினும் இயக்குனர் ஸ்ரீதர், தான் அறிமுகப்படுத்திய புதுமுகங்கள் திரைப்படங்களுக்குத் தான் புதுமுகங்களாக இருந்தார்களே தவிர நாடகம் போன்றவற்றில் நடித்து ஓரளவு பயிற்சி பெற்றவர்களாகவே இருந்தார்கள்.

ஆனால் பாரதிராஜா அறிமுகப்படுத்திய புதுமுகங்களோ நடிப்புத் துறைக்கு சம்பந்தமே இல்லாமல் வேறு பணிகளில் ஈடுபட்டிருந்தவர்களாய் இருந்தார்கள்.

அதிலும் கிராம புறங்களை அவர் காட்டும்போது அதில் துணை நடிகர்களாக அந்தந்த கிராமத்து மனிதர்களையே நடிக்க வைத்தார். குறிப்பாக கிராமபுற முதியவர்கள் அவர் படங்களில் நடிகர்களாக தோன்றினார்கள். அதனால் அந்த காட்சிகள் எல்லாம் இயற்கையாக அமைந்தன.

திரைப்படங்களின் துவக்கத்தில் படத்தின் டைட்டிலை பல இயக்குனர்கள் பல புதுமைகளை புகுத்தி காட்டியதுண்டு. பாரதிராஜா அதிலும் தன் பாணியில் ஒரு புதுமையை செய்தார். டைட்டில் போடும்போது, இயக்குனர் பெயரை விட்டுவிட்டு படத்தின் முக்கியமான காட்சி ஒன்றில் இயக்குனர் பெயரை போடுகிற புதுமையை அவர் கையாண்டார்.

அவருடைய முதல் படமான 16 வயதினிலே படத்தில் டைட்டில் ஓடி முடிந்த பின்னர் படத்தின் நாயகியான ஸ்ரீதேவி ஓடி வந்தபடி தன் கையில் உள்ள காகிதங்களை உயர விசிறியடித்தப்படி, நான் பாசாயிட்டேன் என்று கத்துவது போல ஒலியை வெளிப்படுத்தி ஸ்ரீதேவி தோற்றத்தை அசையாமல் சில வினாடிகள் நிறுத்தி, இயக்குனர் பாரதிராஜா என தனது பெயரை காட்டுவார்.

இதைப் பின்பற்றியே அதற்குப் பின்னால் நிறைய இயக்குனர்கள் இந்த பாணியை கையாண்டார்கள்.

01bharathi2.jpg

ஈரநிலம் படப்பிடிப்பில்...

தமிழ் திரையுலகில் முதலில் புதுமையாக சிந்தித்து படங்களை தயாரிப்பதில் ஆர்வம் காட்டி முதல் வெற்றியும் கண்டவர் இயக்குனர் ஸ்ரீதர்.

பாரதிராஜா எடுக்கும் படங்களில் சின்னசின்ன யுக்திகளிலும் நம்மை வியக்க வைப்பார். அவருடைய காலத்திற்கு முன்பு படங்களில் ஒரு கதாபாத்திரம் தன் மனதுக்குள் நினைப்பதை ரசிகர்களுக்கு புரிய வைப்பதற்காக அவர் மெல்ல ஓசை இல்லாமல் முணங்குவதுபோல பேச வைப்பார்கள்.

பாரதிராஜாதான் ஒரு கதாபாத்திரம் மனதுக்குள் நினைப்பதை ரசிகர்களுக்கு புரிய வைக்க அந்தக் கதாபாத்திரத்தின் முகத்தை குளோசப்பில் காட்டி அசைவு இல்லாமல் சற்று நிறுத்தி அந்த கதாபாத்திரத்தின் குரல் பின்னணியில் ஒலிக்கச் செய்து காட்டி அதன்மூலம் அந்த கதாபாத்திரம் என்ன நினைக்கிறது என்பதை வெளிப்படுத்துகிற பாணியை கொண்டு வந்தார்.

பாரதிராஜாவின் 16 வயதினிலே படத்தை தொடர்ந்து கிழக்கே போகும் ரயில், மூன்றாவதாக சிவப்பு ரோஜாக்கள், அதன்பின் புதிய வார்ப்புகள் என தொடர்ந்து புதிய புதிய கலை நுணுக்கத்துடன் படங்களை வெளிக்கொணர்ந்தார்.

அவற்றுள் புதிய வார்ப்புகள் படத்தில் கிராமத்திற்கு ஆசிரியர் பணிக்காக வந்திருக்கும் பாக்யராஜ் தன் வீட்டருகே உள்ள நாயன வித்துவானின் பெண்ணான ரதியை காதலிப்பார். ரதி படிப்பதற்காக ஆசிரியர் பாக்யராஜிடம் புத்தகம் வாங்கி வா என தம்பியை அனுப்பி வைக்கும் போது, அந்த தம்பி ஆசிரியரை போய் பார்த்துவிட்டு திரும்பி வந்து அக்காவிடம் அவர் சொன்ன தகவலை சொல்லுவான்.

அக்கா நீ உன் இதயத்தை தந்தால் வாத்தியார் அவர் குங்குமத்தை தருகிறேன் என்று சொல்றார் என்பான். அதாவது இதயம், குங்குமம் என்ற பெயரில் உள்ள பத்திரிகைகளை வைத்து எழுதப்பட்ட வசனம் அது.

இந்தக் காட்சியில் இந்த பொடியன் தன் அக்காவிடம் அந்த தகவலை கூற ஆரம்பிக்கும் பொழுது அவன் முகத்தை குளோசப்பில் காட்டி அவன் பேசுவதுபோல ஆசிரியர் பாக்யராஜின் குரல் பின்னணியில் ஒலிக்கச் செய்து படமாக்கியிருந்தார் பாரதிராஜா.

புதிய வார்ப்புகள் பட வெற்றி விழாவில் கலந்து கொண்ட பிரபலமான ஓர் இயக்குனர் இந்த காட்சியை பெரிதும் பாராட்டி தன் உரையில் குறிப்பிட்டார்.

உன் இதயத்தை தந்தால் வாத்தியார் தன் குங்குமத்தை தருவாராம் என்று பேசுகிற காட்சியில் வசனத்தில் வார்த்தை விளையாட்டு விளையாடி இருப்பது நானும் சில படங்களில் சில காட்சிகளை அமைத்ததுண்டு. ஆனால் அந்தக் காட்சியில் அந்த சிறுவன் பேசப்போவது போல அவன் முகத்தை காட்டி பின்னணியில் வாத்தியாரின் குரலை ஒலிக்க செய்த அந்த யுக்திதான் என்னை அயர வைத்தது என்று அந்த இயக்குனர் மனம் விட்டு பாரதிராஜாவை பாராட்டினார்.

அந்த படவிழாவில் கலந்து கொண்ட நடிகை லட்சுமி பேசும்பொழுது, நான் ஒரு படத்தில் நடித்து கொண்டிருந்தபோது அந்த படத்தில் பாரதிராஜா உதவி இயக்குனராக பணியாற்றிக் கொண்டிருந்தார்.

அன்று ஒரு காட்சி எடுக்க வேண்டிய சந்தர்ப்பத்தில் உதவி இயக்குனரான பாரதிராஜா மற்றும் அவரை போன்ற உதவியாளர்களும் ஒரு சிறு தவறை செய்துவிட்டார்கள்.

அதன் காரணமாக நான் பாரதிராஜாவைப் பார்த்து, இந்த சின்ன விசயத்தில் கவனம் இல்லாமல் நடந்து கொண்டிருக்கிறீர்களே. நீங்கள் எல்லாம் பின்னால் பெரிதாக என்ன காரியம் சாதிக்கப் போகிறீர்கள் என கேட்டுவிட்டேன்.

ஆனால் இன்று பாரதிராஜா சாதித்து இருக்கும் பிரமாண்டமான காரியங்களைப் பார்த்து நான் அன்று பேசியதற்காக இன்று அவரிடம் வருத்தம் தெரிவித்துக் கொள்கிறேன் என்று கூறினார்.

பாரதிராஜா தன் மனத்திற்குள் 16 வயதினிலே கதையை உருவாக்கி அதை தயாரிக்க ஒரு சரியான தயாரிப்பாளரை தேடிக் கொண்டிர்ந்த காலக்கட்டத்தில்தான் எஸ்.ஏ.ராஜ்கண்ணுவுக்கு அறிமுகமானார்.

பாரதிராஜா கூறிய கதை ராஜ்கண்ணுவுக்கு மிகவும் பிடித்திருந்தது. இந்தப் படத்தில் சப்பாணியாக வரும் கதாநாயகன் வேடத்தில் யாரை நடிக்க வைக்கலாம் என ராஜ்கண்ணு கேட்டார்.

பாரதிராஜாவுக்கு அந்த சமயம் அந்த பாத்திரத்திற்கு இரு நடிகர்கள் பொருத்தமானவர்கள் என்ற எண்ணம் இருந்தது. எனவே கமல்ஹாசன் பெயரையும், நாகேஷ் பெயரையும் பாரதிராஜா குறிப்பிட்டார். ஆனால் தயாரிப்பாளர் ராஜ்கண்ணுக்கோ கமலஹாசனுக்கே இந்த வேடம் மிக பொருத்தமாக இருக்கும் என்று தோன்றியதால் கமலஹாசன் கால்ஷீட் கிடைப்பதற்காக படம் தயாரிப்பதை சிறிதுகாலம் ஒத்திப் போட்டார்கள்.

பின்னர் நடிகர்கள் டெக்னிஷீன்கள் எல்லாம் முடிவாகி அந்த குழுவினர் படத்தை தயாரிப்பதற்காக வெளியூர் பயணத்திற்குத் தயாராகிக் கொண்டிருந்தார்கள். அந்த சமயம் ஏதாவது படக்கம்பெனிகளில் நமக்கு சின்ன வேலைகள் ஏதும் கிடைக்காதா என்று எதிர்பார்த்துக் கொண்டிருந்த கே.பாக்யராஜ்க்கு இந்தத் தகவல் கிடைத்தது. அந்த 16 வயதினிலே படப்பிடிப்பு குழுவினருடன் தானும் ஒரு உறுப்பினராக பணியில் சேர்ந்து கொள்ளலாம் என அவர் விரும்பியபோது, அதுவரை அவருக்கு உதவிகள் செய்பவராகவும், வழிகாட்டியாகவும் இருந்து வந்த கதை வசனகர்த்தா தூயவனை போய் பாக்யராஜ் சந்தித்தார்.

01bharathi3.jpg

புதிய வார்ப்புகள் படப்பிடிப்பில் பாக்யராஜுடன்...

பாக்யராஜ் சொன்னதை கேட்ட தூயவன், நீ சொல்கிற இந்த படக் கம்பெனி புதிய மனிதரால் ஆரம்பிக்கப்பட்டதாக தெரிகிறது. அந்தப் படத்தில் சம்பந்தப்பட்ட இயக்குனர் மற்றும் முக்கிய ஆட்கள் எல்லாம் புதியவர்களாகவே தெரிகிறார்கள். இவர்கள் தொடர்ந்து இந்த படத்தை முடித்து வெளிவருமா என்பதெல்லாம் சந்தேகம்தான். இருந்தாலும் உனக்கு சில மாதங்கள் ஏதோ வேலையும், சம்பளமும் கிடைத்து பொழுதும் கழியும் என்பதால் அந்தப் படப்பிடிப்பு குழுவினருடன் நீ போய் வா என விடை கொடுத்தார்.

16 வயதினிலே படத்திற்கு வசன கர்த்தாவாக கலைமணி பணியாற்றினார். வசன உதவி இயக்குனர் உதவி போன்ற பணிகளை பாக்யராஜ் மேற்கொண்டார்.

அந்தப் படப்பிடிப்பு சமயத்தில் நிகழ்ந்த ஒரு சம்பவத்தை பாக்யராஜ் ஏற்கனவே குறிப்பிடிருக்கிறார்.

ஒருநாள் படப்பிடிப்பில் எலக்ட்ரிக் சம்பந்தப்பட்ட ஏதோ ஒரு வேலை தாமதமாகி படப்பிடிப்பு அதனால் பாதித்ததால் பாரதிராஜா பாக்யராஜிடம் கடுமையாக கோபத்தை வெளிப்படுத்தி இருக்கிறார்.

இந்த தவறுக்கு நாம் காரணமில்லையே! ஆனால் இயக்குனர் நம்மை திட்டுகிறாரே என மனம் உடைந்து போனார் பாக்யராஜ். எனவே அன்றைய படப்பிடிப்புடன் அந்த குழுவில் இருந்து விலகி சென்னை திரும்பிவிட திட்டமிட்டிருந்தாராம்.

ஆனால் அன்றைய படப்பிடிப்பு முடிந்த பிறகு பாக்யராஜை அழைத்து பேசிய பாரதிராஜா, இன்று காலையில் உன்னை நான் திட்டிப் பேசியதை நீ சங்கடமாக எடுத்துக் கொள்ளாதே! நான் திட்டியது உன்னையல்ல. படப்பிடிப்புக்கு தாமதம் நேரச் செய்தவரையே நான் திட்டினேன். ஆனால் நான் இப்போதுதான் புதிதாக இயக்குனர் பொறுப்பை ஏற்றிருக்கிறேன். இந்த நிலையில் படத்தயாரிப்பு வேலைகளில் ஏற்கனவே அனுபவப் பட்டவர்களை நான் கடிந்து கொண்டால் பிறகு அவர்கள் நமக்கு ஒத்துழைப்புடன் வேலையில் ஈடுபடமாட்டார்கள். அதனால் தான் எனக்கு உதவியாளனாகிய உன்னை திட்டுவதுபோல என் கோபத்தை வெளிப்படுத்தினேன் என பாரதிராஜா கூறினாராம்.

16 வயதினிலே படப்பிடிப்பு நடந்து கொண்டிருந்த காலக்கட்டத்தில் அப்படத்திலே பரட்டையனாக நடித்த ரஜினிகாந்த் பிரபலமாகவில்லை. எனவே அந்தப் படப்பிடிப்பு சமயங்களில் ரஜினிகாந்த் சாதாரணமாக லுங்கி உடுத்திக்கொண்டு அந்த கிராம மக்களோடு சாதாரணமாக காணப்படுவார் என்று அந்த பழைய அனுபவங்களை எல்லாம் சிலர் கூறியிருக்கிறார்கள்.

16 வயதினிலே படம் தமிழ் திரைப் பட உலகின் மாமூலான பல உத்திகளை தவிடு பொடியாக்கி புதியதோரு கண்ணோட்டத்திற்கு வழிகோலியது என்றால் அது மிகையல்ல!

நன்றி: விகடன்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அருமையான கட்டுரையை மீளப்பதிந்ததுக்கு நன்றி.

நீங்கள் போட்டிருக்கும் முதலாவது படம், ஈரநிலமா? கடற்பூக்களா?

கடற்பூக்கள் என்று நினைக்கிறேன். படத்திலிருப்பது நடிகை திவ்யா உன்னி அல்லவா?

  • தொடங்கியவர்

அருமையான கட்டுரையை மீளப்பதிந்ததுக்கு நன்றி.

நீங்கள் போட்டிருக்கும் முதலாவது படம், ஈரநிலமா? கடற்பூக்களா?

கடற்பூக்கள் என்று நினைக்கிறேன். படத்திலிருப்பது நடிகை திவ்யா உன்னி அல்லவா?

ஈரநிலமா? கடற்பூக்களா?

என்று சரியாக எனக்குத் தெரியாது.

இது கட்டுரையில் இருந்த படம் என்பதால் நான் எதுவித மாற்றமும் செய்யவில்லை.

நான் இரு படங்களையும் பார்க்கவில்லை.

நிச்சயமாகத் தெரிந்த யாராவது இருந்தால் சொல்லலாம்?

நன்றி நல்லவன்.

நல்லவன்

அஜிவன் தந்த இணைப்பிலுள்ள படம் ஈரநிலம் என்பது சரியே. அத்துடன் அதிலுள்ள நடிகை பிரயுக்தா என்பவர். இவர் நடிக்க வந்து சில காலங்களிலேயே தனது காதலருடன் சேர்ந்து தற்கொலை செய்துவிட்டார். இவர் நீங்கள் குறிப்பிட்டது போல் கடல்புூக்கள் திரைப்படத்திலும் நடித்துள்ளார். இரண்டு திரைப்படங்களையும் இயக்குனர் பாரதிராஜாவே இயக்கியுள்ளார்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பாரதிராஜா பூனா திரைபட கல்லூரியில் படித்ததாக கூறுவார்கள்..இந்தியாவில் குறிப்பிட சொல்லகூடிய டைரக்டர்களில் ஒருவரான பாபு நந்தன் கோட் அவர்களிடம் உதவி டைரக்டராக இருந்தவர் என்று கூறப்படுகிறது...பாபு நந்தன்கோட் அவர்கள் தமிழில் தாகம் என்ற கலைபடத்தையும் இயக்கியுள்ளார் இதில் முத்துராமன் கதாநாயகனாக நடித்துள்ளார்........

ஸ்ராலின்:

பாரதிராஜா பூனா திரைபட கல்லூரியில் படித்ததாக கூறுவது தவறான தகவல். அவர் எந்த திரைப்படக் கல்லூரியிலும் படிக்கவில்லை.

ஸ்ராலின்:

பாரதிராஜா பூனா திரைபட கல்லூரியில் படித்ததாக கூறுவது தவறான தகவல். அவர் எந்த திரைப்படக் கல்லூரியிலும் படிக்கவில்லை.

http://www.intamm.com/movies/history/history4.htm வசம்பு ...நீங்கள் சொல்வதுதான் சரி.... பாலுமகேந்திரா தான் பூனா திரைபடக்கல்லூரியில் படித்தவர்......
  • தொடங்கியவர்

தகவலை உர்ஜிதம் செய்தமைக்கு நன்றி வசம்பு.

மேலும் காட்சிகளை அமைப்பதில் மட்டுமல்ல ஒளிப்பதிவிலும் முக்கிய பங்கு வகித்த நிவாஸ் ஒரு கொடையாக அன்று பாரதிராஜாவுக்கு கிடைத்தார்.

அது ஒரு மாபெரும் உந்து சத்தியாக பாரதிராஜாவுக்கு கை கொடுத்தது எனலாம்.

மேலும் தகவல்கள்:-

பாரதிராஜாவின் திரைப்படங்கள் குறித்த ஒரு அலசல் கட்டுரை, சொ.சங்கரபாண்டி அவர்களால் எனக்குக் கிடைக்கப் பெற்றது. 1991-92 வாக்கில் வெளியான இக்கட்டுரையை எழுதியவர் சக்கரவர்த்தி. தற்போது சிற்றிதழ்களில் திரைப்படக் கட்டுரைகளை எழுதி வரும் வெங்கடேஷ் சக்கரவர்த்தியும் இவரும் ஒருவரே என்று நினைக்கிறேன். சரியாகத் தெரியவில்லை. சுமார் பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பு எழுதப்பட்ட இக்கட்டுரை, இன்றைய காலகட்டத்துக்குப் பொருத்தமாக இருக்கின்றதா என்று ஆராய்ந்து பார்க்கும் போது புலப்படும் சங்கதிகள் சுவாரசியமானவை.

பாரதிராஜா ஒரு முக்கிய திரைக்கலைஞராக அடையாளம் காட்டப்படுவதற்கு என இருக்கும் பல காரணங்களில், அவரது யதார்த்தமான கிராமத்துச் சித்திரிப்பும் ஒரு முக்கியமான காரணம். சக்கரவர்த்தியின் கட்டுரையும் இதைச் சுட்டிக் காட்டத் தவறவில்லை.

ஆயிரத்து தொள்ளாயிரத்து எழுபதுகளின் பிற்பகுதியிலே திரையுலகுக்குள் நுழைந்த பாரதிராஜா, அச்சு அசலான கிராமத்தை என்று இல்லாவிட்டாலும், நிஜத்துக்கு சற்றேனும் நெருக்கமாக இருக்கிற கிராமத்தை படம் பிடித்துக் காட்டி, ரசிகர்களை , விமர்சகர்களை ஆச்சர்யப்படுத்தினார். அவருடைய திரைப்படங்கள் வருவதற்கு முன்பு வரை, தமிழ்த் திரை கிராமங்கள் அரங்குகளில் நிர்மாணிக்கப்பட்டன. சில சமயங்களில் வெளியூர்களில் படமாக்கப்பட்டாலும், அவை எப்போதும் பச்சை பசுமையுடன் காட்சி அளித்தன. கிராம மக்களின் உணவுப் பழக்கங்கள், மக்களின் பெயர்கள், உறவு முறைகள், கிராமத்து மக்கலின் வேலைகள், கூலி விவரங்கள், மத நம்பிக்கைகள், அவர்களுடைய இசைக் கருவிகள், திருவிழாக்கள் போன்றவை, பாரதிராஜா திரைப்படங்களுக்கு வருவதற்கு முன்பாக இடம் பெற்றதே இல்லை என்று சொல்லலாம். கிராமங்கள் இப்படித்தான் இருக்கும் என்ற ஊகத்தின் அடிப்படையிலே, செயற்கையாக எழுதப்பட்ட காட்சிகள், ஆழமான வசனத்தாலும், நல்ல நடிப்பினாலும் வெற்றி பெற்று, கிராமங்கள் இப்படித்தான் இருக்கும் என்ற செயற்கையான பிம்பத்தை ஏற்படுத்தின.

இதை முதன் முதலாக உடைத்தெறிந்து, நிஜ கிராமத்தைப் படம் பிடித்தவர் பாரதிராஜா.

கிராமப் பின்புலத்தை யதார்த்தமாக காட்டியதால் மட்டுமே பாரதிராஜா வெற்றிகரமான இயக்குனராக மிளிர்ந்தார் என்று சொல்லமுடியாது. பாரதிராஜாவின் திரைப்படங்களை விடவும் வெகுயதார்த்தமான கிராமப் பின்புலத்தைக் கொண்ட , கல்லுக்குள் ஈரம் (1980) திரைப்படம், வெற்றி பெறவில்லை என்பதுடன், நிவாஸ் அதன் பின் வெகுகாலத்துக்கு திரைப்பட முயற்சிகளில் ஈடுபடவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

பாரதிராஜாவின் திரையுலகச் சாதனைகளை நாலைந்து காலகட்டமாகப் பிரித்துக் கொள்ளலாம்.

பாரதிராஜாவின் ஆரம்ப காலட்டம், ஐந்து வெற்றிப்படங்களை உள்ளடக்கியது. 16 வயதினிலே ( 1977) , கிழக்கே போகும் ரயில் ( 1978) , புதிய வார்ப்புக்கள் (1979) , போன்ற கிராமத்துப் பின்னணியைக் கொண்ட திரைப்படங்களும், நிறம் மாறாத பூக்கள் (1979) , சிவப்பு ரோஜாக்கள் (1978) போன்ற நகரத்துப் பின்னணியைக் கொண்ட திரைப்படங்களும், அதனளவிலேயே, கதை, திரைக்கதை, நடிப்பு, இசை, ஒளிப்பதிவு என்ற எல்லா முக்கிய அம்சங்களிலும் சிறப்பாக அமைந்து, வெற்றிப் படங்களாக அமைந்தன. பாரதிராஜாவின் ஆரம்பகால வெற்றிக்கு முக்கிய காரணம், சிறந்த கதையைத் தேர்ந்தெடுப்பதும், அதை அழகாகக் காட்சிப்படுத்துதலும் தான். [16 வயதினிலே, சிகப்பு ரோஜாக்கள் தவிர்த்து, அவரது அனைத்துத் திரைப்படன்ங்களுமே, பிறரது கதையை , திரைக்கதையாக்கி, இயக்கப்பட்டவை தான்]

இந்த தொடர் வெற்றிக்குப் பிறகு, கிராமத்தில் இருந்து வந்து வெற்றி பெற்ற இயக்குனர், திரைப்படங்களில் புதிய புரட்சி ஏற்படுத்தியவ்ர் என்ற அடைமொழிகள் பாரதிராஜாவை வந்து அடைந்தன. பாரதிராஜா, கிராமத்து அடையாளங்களை விட்டு விலகத் துவங்கி, எல்லா விதமான திரைப்படங்களையும் உருவாக்க வல்ல இயக்குனராக தன்னை காட்டிக்கொள்ள துவங்கிய காலகட்டம் இது. நகரத்து இளைஞர்களின் மனோபாவத்தைப் படம் பிடிக்க முயன்ற நிழல்கள் (1980) , மலிவான பாலியல் நகைச்சுவையை மையமாக வைத்து வாலிபமே வா வா(1982) , ஆங்கில திரைப்பட பாணியில் டிக் டிக் டிக்* ( 1982) , கிராமப் பெண்களின் குணாதிசயங்களை மையப்படுத்தி எடுத்த திரைப்படங்களைச் சமன் செய்யும் விதமாக உருவாக்கிய நகரப் பின்னணியிலான 'புதுமைப் பெண்' (1983) , இசையை அடிப்படையாகக் கொண்ட காதல் ஓவியம் (1982) ஆகிய திரைப்படங்கள் இந்த காலகட்டத்தில் தான் வந்தன.

அல்லிநகரத்துப் பால்பாண்டியன், கிராமத்தான் என்ற அடையாளத்தை விட்டு விலகத் துவங்கி, நகரத்துக் கலாசாரத்துடன் ஒன்ற முயற்சி செய்து , அண்ணா சாலை அடுக்கு மாடிக் குடியிருப்பு, நவநாகரீகமான உடைகள், பேச்சிலே அவ்வப்போது குறுக்கிடும் ஆங்கிலம் என்று முழுமையான கோடம்பாக்கத்து முதல் தரமான இயக்குனராகவும் மிளிர்ந்த காலகட்டமும் இதுதான்.

நகர ஆசாமிகள், கிராமங்களைச் செயற்கையாகக் காட்டினார்கள் என்றால், பாரதிராஜாவின் நகரங்களும் செயற்கையாகத்தான் இருந்தன. போதைப் பழக்கத்துடன், கனவுலகில் மிதக்கும் நிழல்கள் நாயகன், டிக் டிக் டிக் படத்தின் பின்புலம், புதுமைப் பெண்ணின் கதைக் களம் போன்றவை செயற்கையாகவே இருந்தன. நகரத்துக்கு என்று ஒரு தனியான மனோபாவம் உண்டு. அதைச் பாரதிராஜா சரியாகப் புரிந்து கொண்டாரா என்றால் இல்லை என்று தான் சொல்ல வேண்டும்.

http://icarus1972us.blogspot.com/2005/09/i.html

  • தொடங்கியவர்

பாரதிராஜா

Bharathiraja2.jpg

பாரதிராஜா ( Bharathiraja ), தமிழ் திரைப்பட இயக்குனர்.அரங்கத்திற்குள் எடுக்கப்பட்டு வந்த தமிழ் திரைப்படங்களை இயல்பான படப்பிடிப்பு பகுதிகளுக்கு கொண்டு சென்றவர் என்ற பெருமைக்கு உரியவர்.பெரும்பாலும் கிராமத்துக் கதைகளை உணர்வுப் பூர்வமாக படம் பிடிப்பவர். இசையமைப்பாளர் இளையராஜாவுடன் இணைந்து மறக்க இயலாத இனிய பாடல்களைத் தந்தவர். ராதிகா, ரேவதி, ரேகா, ரஞ்சிதா, ராதா போன்ற "ர" வரிசை கதா நாயகிகளை அறிமுகம் செய்தவர்.சில படங்களில் நடிக்கவும் செய்துள்ளார்.

இயக்கிய படங்கள்

பதினாறு வயதினிலே

அலைகள் ஓய்வதில்லை

கிழக்கே போகும் ரயில்

மெட்டி

நிறம் மாறாத பூக்கள்

நிழல்கள்

கொடி பறக்குது

வேதம் புதிது

கடலோரக் கவிதைகள்

டிக் டிக் டிக்

முதல் மரியாதை

மண்வாசனை

புதுமைப் பெண்

என்னுயிர்த் தோழன்

நாடோடிப் பாட்டு

கேப்டன் மகள்

கிழக்குச் சீமையிலே

கருத்தம்மா

தமிழ்ச்செல்வன்

தாஜ் மகால்

ஈர நிலம்

கண்களால் கைது செய்

புதிய வார்ப்புகள்

ஒரு கைதியின் டைரி,

கல்லுக்குள் ஈரம்

அந்தி மந்தாரை

புது நெல்லு புது நாத்து

பசும்பொன்

காதல் ஓவியம்...

சுவையான தகவல்கள்

திரைப்படத் துறைக்கு வரும் முன்னர், மலேரியா ஒழிப்பு அதிகாரியாக பணியாற்றி வந்தார்.

நன்றி: கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து............

http://ta.wikipedia.org/

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அஜிவன் தந்த இணைப்பிலுள்ள படம் ஈரநிலம் என்பது சரியே. அத்துடன் அதிலுள்ள நடிகை பிரயுக்தா என்பவர

ஈரநிலத்தில் பியுக்தா நடித்தீருந்தாரா?? பாத்த நினைவில்லையே..?? :roll:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எனக்கும் ஈரநிலத்தில் பிரதியுக்தா(கடற்பூக்களில் நடித்த- பின் தற்கொலை செய்துகொண்ட நடிகை) நடித்ததாகத் தெரியவில்லை. அப்படம் தொடங்கப்படுவதற்கு முன்பேயே அவர் தற்கொலை செய்துகொண்டதாகவே நினைக்கிறேன்.

ஈரநிலத்தில் ஒரு கதாநாயகிதானே?

மேலும் இப்படியொரு கடற்கரை சம்பந்தப்பட்ட காட்சி ஈரநிலத்தில் வந்ததாக ஞாபகமில்லை. அத்தோடு இந்தப்படத்திலிருப்பது கடற்பூக்களில் நடித்த நடிகைதான் என்பது என் அபிப்பிராயம். ஈரநிலத்தில் நடித்தது "நந்திதா" என்ற நடிகை. இந்தப்படத்திலிருப்பது அவரல்ல.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நடிகையின் பெயர் பிரதியுஷா என்று வரவேண்டும்.

மேலும் பாரதிராஜா தனது ஒரு பேட்டியில் தான் பட்டாளத்தில் இருந்ததாகச் சொல்லிய ஞாபகம். நானும் இதுவரை அப்படித்தான் நினைத்துக்கொண்டுள்ளேன். ஆனாலும் சந்தேகமுண்டு. இளவயதிலேயே இளையராசாவுடனும் எஸ்.பி. பாலசுப்பிரமணியத்துடனும் கங்கை அமரனுடனும் ஊரூராகச் சுற்றித் திரிந்து இசைக்கச்சேரிகள் வைத்த பாரதிராசா எப்படி பட்டாளத்தில் இருந்திருக்க முடியுமென்று சந்தேகம் உண்டு. ஆனாலும் பாரதிராசா அப்படிச் சொன்ன ஞாபகமும் நன்றாகவே உண்டு. யாராவது சரியான விவரம் தெரிந்தவர்கள் தெளிவுபடுத்துங்கள்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தமிழ்ச்சினிமாவில் இருக்கும் அவலம் என்னவென்றால், யாரும் தொடர்ச்சியாக நல்லதைச் செய்வதில்லை. பலர் தொடங்கும்போது பெரிய எதிர்பார்பைத் தந்துவிட்டு பிறகு கோமாளித்தனமா காரியங்களைச் செய்வர். பாரதிராசா தொடக்கம் தங்கர் பச்சான் வரை இது பொருந்தும். பாலுமகேந்திரா கொஞ்சம் அதிகம் தாக்குப்பிடித்தார் என்று சொல்லலாம்.

கொடி பறக்குது, கேப்டன் மகள், தாஜ்மகால் போன்ற படங்களை, தன் பணப்பையை நிரப்புவதற்காக மட்டுமே பாரதிராசா எடுத்தார் என்பது தெளிவு.

கமல் நடிகராக மட்டும் சம்பந்தப்பட்ட படங்களில் பதினாறு வயதினிலேயும் மூன்றாம் பிறையும் முக்கியமான படங்கள்.

இயக்குநர்களாக நிரந்தர நம்பிக்கையைத் தருபவர்கள் என்றால் சேரனும் கமலும் தான்.

  • தொடங்கியவர்

பாரதிராஜாவின் மேலே விடப்பட்ட மற்றும் சில படங்கள்

ஒரு கைதியின் டைரி,

கல்லுக்குள் ஈரம்

அந்தி மந்தாரை

புது நெல்லு புது நாத்து

பசும்பொன்

காதல் ஓவியம்...

தகவல் தந்த முத்துக்குமரனுக்கு நன்றி.

  • 3 weeks later...
  • தொடங்கியவர்

பாரதிராஜாவின் அலைகள் ஓய்வதில்லை

- சின்னராசு

19alaigal3.jpg

பாரதிராஜாவின் கல்லுக்குள் ஈரமும், அதனை அடுத்து வந்த நிழல்களும் வெற்றிப் படங்களாக அமையாததால், அப்படி ஒரு சந்தர்ப்பத்திற்காகவே காத்திருந்தவர்கள் போல, பலர் பாரதிராஜாவை தன் மனம் போன போக்கில் விமர்சனம் செய்தார்கள். குறிப்பாக அதில் சில பத்திரிகைகாரர்கள் இருந்தார்கள்.

இயக்குனர் பாக்யராஜ் தனது குரு பாரதிராஜாவிடம் இருந்து, விலகி சென்ற பின், சுவரில்லாத சித்திரங்கள், ஒரு கை ஓசை, இன்று போய் நாளை வா, மௌன கீதங்கள் ஆகிய வெற்றிப்படங்களைத் தந்த நிலையில் பாரதிராஜா தந்த வெற்றிப் படங்கள் எல்லாம் பாக்யராஜின் துணையினால்தான் சாதிக்க முடிந்ததாக ஒரு கருத்தை பரப்ப ஆரம்பித்தார்கள்.

அந்த சமயம் ஒரு பத்திரிகையில் வாசகர் ஒருவர் இது சம்பந்தமாக கேள்வி ஒன்றை கேட்டார்.

பாக்யராஜ் எழுதாவிட்டால் பாரதிராஜா வெற்றி பெறமாட்டார் போலிருக்கிறதே? என்பதே அவர் கேள்வி.

அதற்கு பதிலளித்த பத்திரிகை ஆசிரியர், பாக்கியை ஏன் விட்டு விட்டீர்கள் என கேட்டிருந்தார்.

அதாவது பாக்யராஜின் கதை வசனம் மட்டுமல்ல. அவருடைய சிறந்த ட்ரிட்மெண்டுகள் ஆங்காங்கே காட்சிகளில் கையாளுகிற பாக்யராஜின் இந்த யுக்திகள் எல்லாமே சேர்ந்த உழைப்புதான் பாரதிராஜாவுக்கு புகழைத் தந்திருக்கிறது என்ற பொருள்பட அந்தப் பத்திரிகை ஆசிரியர் தன் பதிலை தந்திருந்தார்.

அதற்கு முன் பாரதிராஜா வரிசையாக வெற்றிகளை பெற்றுவந்த நேரம் இவரைப் போல இன்னொருவர் உண்டா என்று எழுதிய பத்திரிகைகளே இப்போழுது அவர் இன்னொருவர் சரக்கை வைத்துத்தான் சாதனையாளர் போல காட்டி வந்திருக்கிறார் என ஏளனப்படுத்தின.

பாரதிராஜா உண்மையிலேயே திறமை வாய்ந்த கலைஞர் என்பதால் இம்மாதிரியான ஏளனங்களுக்கு வாயினால் பதில் சொல்லிக்கொண்டு தனக்குதானே வக்காலத்து வாங்க அவர் முன்வரவில்லை. அடுத்து பிரமிக்க வைக்கிற மாதிரி ஒரு படத்தை தராமல் இவர்களுக்குப் பதிலுக்குப் பதில் என்று பேசிக் கொண்டிருப்பது வீண் என்று எண்ணினார்.

எனவே நிழல்களை அடுத்து ஒரு பொழுது போக்கு படமாக கமல், மாதவி, வி.கே.ராமசாமி போன்ற முன்னணி நடிகர்களை வைத்து டிக் டிக் டிக் படத்தை தரப்போவதாக விளம்பரம் செய்திருந்த அவர், டிக் டிக் டிக் படத்தின் வேலைகளை சற்றுத் தள்ளிப்போட்டு விட்டு கடற்கரையோர கிராமியக் கதை ஒன்றை அடுத்து படமாக்குவதற்கு தீவிரமாக சிந்தித்தார்.

இந்தப் புதிய படத்திலும் முழுக்க முழுக்க புதுமுகங்களையே பங்கேற்க வைக்க விரும்பினார். ஒரு நாள் சென்னையில் ஒரு சாலை வழியே அவர் காரில் வந்து கொண்டிருக்கும் பொழுது நடிகர் முத்துராமன் வீட்டை கடந்து செல்லப் போகும் சமயம் அங்கே வீட்டு காம்ப்பவுண்ட்டுக்குள் ஒரு இளைஞன் பந்து விளையாடிக் கொண்டிருப்பதை கவனித்தார். முரளி என்ற பெயருடைய அந்த இளைஞன் நடிகர் முத்துராமனின் புதல்வர் தான்.

அடுத்து முத்துராமனை சந்தித்து, அவர் மகனை தனது படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்கவைக்க விரும்புவதாக கூறியபோது, முத்துராமனுக்கே தனது பையனால் இவர் எதிர்ப்பார்க்கிற மாதிரி நடிப்பை தர முடியுமா என்ற சந்தேகம் எல்லாம் ஏற்பட்டது.

19alaigal2.jpg

நடிகர் முத்துராமனின் புதல்வர் முரளி என்ற பெயரை பாரதிராஜா தனது படத்திற்காக கார்த்திக் என்று மாற்றி அலைகள் ஓய்வதில்லை என்ற பிரமிக்கத்தக்க வெற்றிப் படத்தை தந்த பிறகு, படத்தைப் பார்த்த முத்துராமன் வியப்பில் ஆழ்ந்தவராய் தன் கருத்துக்களை வெளியிட்டார்.

எனது மகனிடம் இப்படி ஒரு நடிப்பாற்றல் இருந்ததை நான் அறிந்திருக்கவே இல்லை. இயக்குனர் பாரதிராஜாதான் அவனிடம் உள்ள திறமையை கண்டுணர்ந்து அதனை வெளிக் கொணர்ந்தார் என கூறினார்.

அலைகள் ஓய்வதில்லை படத்தில், கார்த்திக், ராதா, முக்கிய வேடங்களில் நடித்தார்கள். மற்றும் சில இளைஞர்களை புதுமுகங்களாக கார்த்திக்கின் நண்பர்களாக நடிக்க வைத்தார். அதுவரை திரைப் பட உலகில் ஒரு வினியோகஸ்தரராக அறிமுகமாகி இருந்த தியாகராஜனை (பிரசாந்தின் தந்தை) வித்தியாசமான வில்லன் வேடத்தில் நடிக்க வைத்தார். அவருக்கு மனைவியாக அதுவரை எல்லா படங்களிலும் நடனக்காட்சிகளில் மட்டும் தோன்றிவந்த சில்க் ஸ்மிதாவை வித்தியாசமான பாத்திரத்தில் நடிக்க வைத்தார். ஸ்ரீரஞ்சனி, பண்டரிபாய் மாதிரி உருக்கமான தாய் வேடத்தில் விசுவாக வரும் கார்த்திக்கின் அம்மாவாக கமலா காமேஷை நடிக்க வைத்தார்.

அலைகள் ஓய்வதில்லை படத்தின் கதை வசனம் எழுதுபவர்களை தனது தனித்துவமான யுக்திகளுக்கேற்ப கதையையும், வசனத்தையும் அமைக்கச் செய்து காட்சிக்குக் காட்சி பாரதிராஜாவின் ட்ரிட்மெண்டே படத்தில் முதலிடம் வகிப்பதாக தயாரித்து அனைவரையும் அசத்தி காட்டினார்.

முன்பு கேள்வி & பதில் மூலம் பாரதிராஜாவை ஏளனம் செய்ய முயன்ற பத்திரிகை ஆசிரியரும் அடேயப்பா பாரதிராஜா என்று மூக்கின்மேல் விரல் வைத்தது போல விமர்சனம் செய்தார். அலைகள் ஓய்வதில்லை படத்தின் ஒரு காட்சியை தனியாக குறிப்பிட்டு இன்னொரு பத்திரிகையாளர் பாரதிராஜா எவ்வளவு பெரிய கலைஞர் என வியப்பை வெளிப்படுத்தினார். அந்த காட்சி இதுதான்.

கதாநாயகி மேரியாக வரும் ராதாவும், அவளுடைய தோழிகளும் கடற்கரை ஈர மணலில் கண்ணாம்பூச்சி ஆட்டம் விளையாடிக் கொண்டிருப்பார்கள். மற்ற பெண்களெல்லாம் ஒளிந்து கொள்ள அதுவரை கண்கள் மூடப்பட்டு நிற்கும் பெண் மறைந்து கொண்ட தோழிகளை தேடுவதற்கு புறப்படும்போது, ஈரமணல் வழியே கால்தடம் எங்கே எல்லாம் போய் இருக்கிறதோ அங்கெல்லாம் ஓடி தோழிகளை கண்டுபிடிப்பாள். இதை மறைந்து இருந்து கவனிக்கிறார் கார்த்திக்! அடுத்து ராதாவின் கண்களை மூடச் செய்துவிட்டு தோழிகள் மறைந்து கொண்ட சமயம், ராதா கண்களை திறந்து அவர்களை தேடி புறப்படுகிறார். இந்த சந்தர்ப்பத்தை கார்த்திக் பயன்படுத்தி ராதா தோழிகளை தேடப் புறப்படும் முன் ஈர மணலில் தனது கால் தடங்களை பதித்து அங்குள்ள மறைவான பகுதியில் போய் கால் தடம் முடிவது மாதிரி செய்து ஒளிந்துகொள்வார்.

அந்த புதிய கால் தடம் ராதாவுக்கு ஒளிந்து இருக்கும் தனது தோழிகளை காட்டித் தரும் என்ற நம்பிக்கையில் வேகமாக அதை தொடர்ந்து கார்த்திக் மறைந்து இருக்கும் இடத்திற்கு வந்து சேர்ந்து விடுகிறார். அப்படி ஒரு இருட்டுப் பகுதியில் கார்த்திக் எதிரே சற்றும் எதிர்பாராமல் ராதா தனியே மாட்டிக் கொண்டு திகைக்கிற அந்த இடம் ரசிகர்களை பரவசத்தில் ஆழ்த்தி அரங்கமே கைத் தட்டலில் அதிரும்.

19alaigal1.jpg

இந்தக் காட்சியில் கதாசிரியருக்கோ, வசனகத்தாவுக்கோ என்ன வேலை? இது முழுக்க முழுக்க இயக்குனரின் வேலை அல்லவா!

இந்தக் காட்சியை பார்த்துத்தான் அந்த குறிப்பிட்ட பத்திரிக்கை வியந்து பாராட்டியது.

பாரதிராஜா தனது படங்களில் கிராமப் புறங்களில் பெரியவர்கள், சிறியவர்கள் பழக்க வழக்கங்களை எல்லாம் அறிந்து அதை காட்சிகளாக படங்களில் புகுத்துவதுண்டு.

அலைகள் ஓய்வதில்லை படத்திலும் அப்படி ஒரு நுணுக்கமான காட்சி உண்டு. வீட்டிலே சிறைப்பட்ட ராதா அடுத்த நாள் பட்டணத்துப் பள்ளிக்கு செல்லப் போகிறாள் என்பதை அறிந்த கார்த்திக் தனது நண்பர்கள் துணையோடு காதலியை அவள் வீட்டு மாடியிலே தனியே வந்து சந்திப்பார்.

அப்போழுது ராதாவிடம் அவள் நாளை படிப்புக்காக வெளியில் புறப்படுவதை தடுக்க ஒரு யோசனை சொல்வார். அதாவது வெங்காயத்தை கக்கத்துக்குள் வைத்துக் கொண்டால் அதன் சூட்டில் தானாகவே காய்ச்சல் வந்துவிடும் என்ற யோசனைதான் அது. இதுவெல்லாம் கிராமப்புற இளைஞர்களுக்கு தெரிந்த விஷயம். பள்ளிக்கு மட்டம்தட்ட கிராமங்களில் இதை கையாள்வது உண்டு. படத்தின் காட்சிக்கேற்ப பாரதிராஜா இந்த விஷயத்தை அருமையாகப் பயன்படுத்தியிருந்தார்.

முதலில் ராதாவின் கக்கங்களில் வெங்காயத்தை வைக்கின்ற கார்த்திக் அடுத்து தனது கக்கங்களிலும் வெங்காயத்தை வைத்துக் கொள்வார்.

அதைக் கண்டு வியந்த ராதா, உனக்கெதுக்கு காய்ச்சல்? என்று கேட்பாள்.

அப்போது கார்த்திக், நீ வேறு நான் வேறா? உனக்குள்ள துன்பம் எனக்கு வேண்டாமா? என்று பொருள்பட பதில் அளிப்பது நம்மை மெய்சிலிர்க்கச் செய்யும்.

அதேபோல அந்தப் படத்தில் ஒவ்வொரு வசனங்களையும் பாரதிராஜா தன் சிந்தனைக்கேற்ப புதுமையாக எழுத வைத்திருந்தார்.

ஒரு கட்டத்தில் ராதாவின் அண்ணன் தனது தங்கையின் காதலை தெரிந்துகொண்டு அவளை நையப் புடைத்துவிடுவார். அண்ணன் கொடுத்த அடியில் உடம்பெல்லாம் புண்ணாகிப் போய் ராதா இருப்பார். அந்த சமயம் ராதாவின் அண்ணி சில்க் சுமிதா தன் மைத்துணி பெயரில் உள்ள பரிவினால், ஏண்டி இதெல்லாம் உனக்கு வலிக்கலியா? உங்க அண்ணன் குணம் தெரிஞ்சும் ஏன் இப்படி நடந்துக்கறே? என்று கேட்பார்.

அதற்கு ராதா, அண்ணி நாங்க காதலிக்கும் போதே இப்படி எல்லாம் நடக்கும். இந்த வேதனை எல்லாம் தாங்க துணிவு இருந்தால்தான் காதலிக்கலாம் என்பதை தெரிந்துகொண்டே நாங்கள் காதலிக்க ஆரம்பித்ததால் இந்த அடியெல்லாம் வேதனையை தரவில்லை என்பார். இந்தப் படத்தின் உச்சக்கட்ட காட்சி முற்றிலும் மாறுதலான புதுமை நிறைந்த காட்சி.

வீட்டைவிட்டு வெளியேறிய இளங் காதலர்களை கண்டுபிடித்து கண்டம் துண்டமாக வெட்டியெறியப் போவதாக தியாகராஜன் சூளுரைப்பதுடன் ஊராரையும் தன் பக்கம் சேர்த்துக் கொண்டு ஊரெல்லாம் அவர்களை தேடி அலைவார்.

அதிகாலை விடியும் நேரம் கடற்கரை பாறையில் அவர்கள் இருப்பதை அறிந்து அங்கே ஊராரோடு அவர்களை நெருங்கி வருவார்.

கார்த்திக்கின் நண்பர்களான இளைஞர்கள் எல்லாம் தியாகராஜனையும் ஊராரையும் தடுக்க முயன்று அடிபட்டு அங்கங்கே விழுந்து விடுவார்கள். அதற்கு மேல் தியாகராஜன் கோபத்துடன் கார்த்திக்கையும், ராதாவையும் நெருங்கி தன் கையில் உள்ள கோடாரியால் அவர்கள் தலையை பிளக்க ஓங்கும் போது, சர்ச்சில் உள்ள பாதர் வந்து அவன் கையை பிடித்து தடுத்துவிடுவார்.

இதற்குமேல் தியாகராஜனுக்கும் & பாதருக்கும் வாக்கு வாதம் நிகழும். நான் என் மதத்தை விட்டுக்கொடுக்க முடியாது. என் மதத்தை சேர்ந்த என்னோடு உடன் பிறாந்த தங்கை இன்னொரு மதத்துக்காரனை அதிலும் வேறு ஜாதிக்காரனை மணந்து கொள்வதற்கு சம்மதிக்க முடியாது என் கூறுவார்.

அந்த நேரம் யாரும் எதிர்பாராத வண்ணம் கார்த்திக் தனது மதத்தையும், ஜாதியையும் குறிக்கும் பூணூலை அறுத்து கையிலே எடுப்பார். அதே நேரம் ராதா தான் அணிந்திருந்த சிலுவை டாலர் தொங்கும் சங்கிலியை கையில் அறுத்து அவரும் அதை ஏந்திக்கொண்டு நிற்பார்.

அப்போழுது கார்த்திக்கும் & ராதாவும் நாங்கள் இப்பொழுது எந்த மதமும் இல்லை. எந்த ஜாதியும் இல்லை. எங்களை வாழவிடுங்கள் என கேட்பார்கள்.

மிக துணிச்சலான இந்த உச்சக்கட்ட காட்சியை அந்த சமயம் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் பார்த்து வியந்து மிகவும் பாராட்டியதாக கூறுவார்கள்.

இந்த படம் வெளிவந்த பிறகு பாரதிராஜாவின் அசாதாரண திறமைகளை எல்லோருமே புரிந்து கொண்டதால் இனி இவரை ஏளனம் செய்ய நினைத்தால் அதன்மூலம் நமது அறியாமையே வெளிப்படும் என்பதை உணர ஆரம்பித்தார்கள்.

-Vikadan

  • கருத்துக்கள உறவுகள்

செங்கை ஆழியனின் பேட்டியொன்றில் படித்த ஞாபகம். செங்கை ஆழியனின் வாடைக்காற்று நாவல் பிறகு இலங்கையில் படமாக வெளியானது. இன்நாவலினை தென்னிந்தியாவிலும் திரைப்படமாக தயாரிக்க செங்கை ஆழியன் மேயர் சுந்தரராஜனை அணுகியதாகவும், அன்நாவலினைப்படித்த மேயர் சுந்தரராஜன் தான் உதவுவதாகவும் சொன்னார். சில மாதங்களுக்குப்பிறகு பாரதிராஜாவின் 'கல்லுக்குள் ஈரம்' என்ற திரைப்படம் வெளியானது. இப்படத்தின் கதையும் வாடைக்காற்றின் ஒன்றாக உள்ளதினால், பணபலம் உள்ள தமிழ் நாட்டுச்சினிமாவிற்கு முன்னால் ஒன்றும் செய்யமுடியாது என்று கவலையுடன் செங்கை ஆழியன் அப்பேட்டியில் குறிப்பிட்டிருந்தார்

நீங்கள் முதல் போட்ட படம் பிரயுக்தா பற்றி..

அது கடல் பூக்கள் படத்தில் வந்தது.

படம் பார்தவர்கள் திரும்ப நினைவு கொள்ளூங்கள்.. பிரயுக்தா அதில் ஒரு உப்புகாறி..

முரளி சங்கில வளையல் அறுத்து கொடுப்பார் அவவுக்

  • 3 months later...

ஷிறிதேவியை பார்த்தியளே...இப்பகூட இப்போதை பொடிச்சியள் அந்த மனிசியோடை கிட்ட நிக்கேலாது.... 13105pr.jpg

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.