Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பறந்து போன இருமரங்களும் பச்சையம் இழந்த காடுகளும்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

பறந்து போன இருமரங்களும் பச்சையம் இழந்த காடுகளும்

டிசே த‌மிழ‌ன்

ப‌குதி-01

1.

பொலித்தீன் பையைத் த‌ன்னுட‌ல் முழுதும் சுற்றிக்கொண்டு எரிந்துகொண்டிருக்கும் ந‌ண்ப‌னைப் ப‌ற்றிய‌ க‌ன‌வு அவ‌னைத் திடுக்குற‌ச்செய்து விழிப்ப‌டைய‌ச் செய்த‌து. நேர‌ம் என்ன‌வாயிருக்குமென‌ சிவ‌ப்பு ஒளியில் மிளிர்ந்துகொண்டிருந்த‌ அலார‌மைப் பார்த்த‌போது 3.25 A.M என்றிருந்த‌து. இனி விடியும் வ‌ரைக்கும் நித்திரை வ‌ராது என்ற‌ நினைப்பு அவ‌னுக்கு இன்னும் எரிச்ச‌லைக் கொண‌ர்ந்த‌து . இப்போதுதான் முத‌ற்த‌ட‌வையாக‌ ந‌ண்ப‌ன் எரிந்துகொண்டிருக்கும் க‌ன‌வு வ‌ருகின்ற‌து என்ப‌த‌ல்ல‌; முன்ன‌ரும் ப‌ல‌முறை வ‌ந்திருக்கின்ற‌துதான். ஒவ்வொருமுறையும் அல‌றிக்கொண்டு அத‌ல‌பாதாள‌த்திற்கு விழும் க‌ண‌த்தோடு ஓர் உறைநிலை க‌ன‌வில் வ‌ந்துவிடுகிற‌து. பிற‌கு ம‌ருள‌ ம‌ருள‌ உருளும் விழிக‌ளுட‌ன் நீள்விழிப்பு. சிறுவ‌ய‌தில் இப்ப‌டியான‌ கொடுங்க‌ன‌வுக‌ள் வ‌ரும்போது அருகில் ப‌டுத்திருக்கும் அம்மா அவ‌னுக்கு விபூதியைப் பூசிய‌வுட‌ன் ஏதோ ஒரு பாதுகாப்புண‌ர்வு வ‌ந்துவிடுவ‌துண்டு. புல‌ம்பெய‌ர்ந்து வ‌ந்த‌த‌ன்பின் எவ்வாறுதான் விபூதியைப் பூசினாலும் ந‌ண்ப‌ன் ப‌ற்றியெரியும் க‌ன‌வு வ‌ராம‌ல் நின்றுவிடுவ‌தில்லை; சிக்க‌லாக‌வும் வேத‌னையாக‌வும் ஆகிவிட்ட‌ புல‌ம்பெய‌ர் வாழ்வில் கோமாதாவின் கோமிய‌த்திலும் ஏதோ புதிரின் முடிச்சு விழுந்திருக்க‌வேண்டும். அத‌னால்தான் இங்கு திருநீறு பூசினாலும் துர்க்க‌ன‌வு நுங்கு போல‌ வ‌ழுக்கித் தூர‌ ந‌க‌ர்வ‌தில்லை, முருங்கைம‌ர‌த்துப் பிசின்போல‌த் தொட‌ர்ந்து ஒட்டிய‌ப‌டி வ‌ந்த‌ப‌டி இருக்கிற‌து.

மிடில் ஃபீல்ட் ரோட்டில் இருக்கும் ஐய‌ப்ப‌ன் கோயிலுக்கு ஒருக்காய்ப் போனால் இந்த‌த் துர்க்க‌ன‌வின் கொடுமை க‌லைந்துபோகுமோ தெரியாது. ஆனால் இவ‌ன் ஐய‌ப்ப‌ன் கோவிலுக்கு, அங்கே குளிர்த்திச் சோறு நிறைய‌க் காய்க‌றிக‌ளோடு கொடுக்கும் நேர‌த்திற்கு ம‌ட்டுமே ச‌ரியாக‌ப் போகின்ற‌வ‌ன். த‌ன்னை வழிபடுவ‌த‌ற்காய் அன்றி, கோயிற்சோறு சாப்பிடத்தான் இவ‌ன் இவ்வ‌ளவு சிர‌த்தையாக‌ வ‌ருகின்றான் என்று தெரிந்தால் ஐய‌ப்ப‌னுக்குக் கோப‌ம் வ‌ராதா என்ன‌? அத‌னால் தான் அவ‌ர் இவ‌னுக்கான‌ வ‌ர‌த்தை அருள் பாலிப்ப‌தில்லையோ தெரியவில்லை. அத்தோடு ஐய‌ப்ப‌ன் கோயிலுக்குப் போகும் ஒவ்வொருத‌ட‌வையும், முன்னால் பிஞ்ச் ச‌ந்தியிலிருக்கும் ச‌மோசா க‌டையில் நாலைந்து ச‌மோசாவையை -குளிர்த்திச் சோற்றுக்கு முன்- ஒரு starterயாய் சாப்பிட‌ ம‌ற‌ப்ப‌துமில்லை.

ச‌மோசா சாப்பிட்டுவிட்டுக் கோயிலுக்குப் போவ‌தில் ஒரு பிழையுமில்லை. ஆனால் அன்றைக்கொரு நாள் சமோசா சாப்பிட்டுவிட்டு குளிர்த்திச் சோற்றுக்காய் காத்திருக்குக்கும்போது ப‌ல்லுக்குள் ஏதோ இழுப‌டுதே என்று நாக்கால் துழாவிப் பார்த்துக்கொண்டிருந்தான். ம‌ர‌க்க‌றி ச‌மோசாவிற்குள், முத‌ல்நாள் வைத்த‌ ப‌ழைய‌ உருளைக்கிழ‌ங்கையோ அல்ல‌து ம‌ரவ‌ள்ளிக்கிழ‌ங்கையோ போட்டிருக்கின்றார்க‌ளோ என்று விர‌லால் இழுத்துப் பார்த்த‌போது, அது இறைச்சித் துணுக்காயிருந்த‌து க‌ண்டு இவ‌னுக்குச் ச‌ற்று அதிர்ச்சியாய்த்தானிருந்த‌து. ச‌மோசா த‌ந்த‌ க‌டைச்ச‌ன‌ம் அவ‌ச‌ர‌த்தில் அசைவ‌ ச‌மோசாவை எடுத்துத் த‌ந்துவிட்டார்க‌ள் போலும். ம‌ச்ச‌த்தைச் சாப்பிட்டுவிட்டு எப்ப‌டி இங்கே கோயிலில் நிற்ப‌தென‌, வ‌ரிசையிலிருந்து வெளியே போக‌ ம‌ன‌ம் அந்த‌ர‌ப்ப‌ட்டாலும், இறைச்சி ப‌டைத்த‌ க‌ண்ண‌ப்ப‌ன் நாய‌னாருக்கே அருள்பாலித்த‌ க‌ட‌வுள் த‌ன்னையொன்றும் செய்ய‌மாட்டாரென்று ஒரு சாட்டை ம‌ன‌துக்குள் நினைத்துக்கொண்டு வ‌ரிசையில் சோற்றுக்காய்க் காத்திருக்க‌த் தொட‌ங்கினான்.

(i)

அவ‌னை அவ‌ர்க‌ள‌து வ‌ளாக‌த்து நிக‌ழ்வில்தான் முத‌ன்முத‌லில் ச‌ந்தித்திருந்தேன். அப்போது அவ‌ன் இர‌ண்டாம் ஆண்டு ப‌டித்துக்கொண்டிருந்தான். முதலாமாண‌டு மாண‌வ‌ர்க‌ளை வ‌ர‌வேற்கும் நிக‌ழ்வு ஒன்றில் அவ‌ன் நிக‌ழ்ச்சிக‌ளை ஒருங்கிணைப்ப‌வ‌னாக‌ இருந்தான். நான் வேறொரு வ‌ளாக‌த்தில் ப‌டித்துக்கொண்டிருந்தாலும், எங்க‌ளுக்கும் அழைப்பு வ‌ந்த‌தால் நானும் என்னுடைய‌ தோழிக‌ள் சில‌ருமாய் Frosh Week நிக‌ழ்வுக்குப் போயிருந்தோம். ச‌ற்று ந‌கைச்சுவை க‌ல‌ந்து, அவ‌ன் நிக‌ழ்வுக‌ளை தொகுத்து வ‌ழ‌ங்கிய‌து வ‌ந்திருந்த‌வ‌ர்க‌ளையும் கொஞ்ச‌ம் க‌ல‌க‌ல‌க்க‌ச் செய்திருந்த‌து. பிற‌கு இர‌வு விருந்திற்கான‌ உண‌வை எடுப்ப‌த‌ற்காய் நாங்க‌ள் அருக‌ருகில் வ‌ரிசையில் நிற்க‌வேண்டி வ‌ந்த‌போது, 'ந‌ல்லாய் MC செய்தீர்க‌ள்' என‌ ஆங்கில‌த்தில் சொன்னேன். 'நான் கோப‌ம் வ‌ரும்போது ஆங்கில‌த்தில் கெட்ட‌ வார்த்தைக‌ளைப் பேசுவேன‌, ம‌ற்ற‌ப‌டி த‌மிழ்தான் உரையாட‌லுக்கான மொழி' என்று என்னைக் கொஞ்ச‌ம் வெட்டிப் பேசிய‌போது முத‌லில் என‌க்கு அவ‌னை அவ்வ‌ளவாய்ப் பிடிக்க‌வில்லை.

இந்த‌த் திமிர் பிடித்த‌வ‌னைவிட‌, இர‌சிப்ப‌த‌ற்கு நிறைய‌ப் பெடிய‌ங்க‌ள் அங்கு இருந்த‌தால் அவ‌ன் குறித்து நான் பிற‌கு பெரிதாக‌ அக்க‌றைப்ப‌டவில்லை. ஆனால் அன்று நான் அணிந்து போயிருந்த‌ சேலைதான் என‌க்குச் ச‌ரியாக‌க் க‌ஷ்ட‌த்தைத் த‌ந்துகொண்டிருந்த‌து. You see...த‌ந்தூரி சிக்க‌னும் பிரியாணியும் த‌ந்த‌ ருசியில் அள‌வு க‌ண‌க்கில்லாது சாப்பிட்டுவிட்டேன் போலும். சேலையை விட‌ கொஞ்ச‌ம் த‌ள‌ர்வான‌ ஆடை ஏதேனும் அணிந்து வ‌ந்திருந்தால் இவ்வ‌ள‌வு க‌ஷ்ட‌ப்ப‌ட‌வேண்டியிருந்திருக்காது. அழைப்பித‌ழில் Dress Code முக்கிய‌மென‌.... பெண்க‌ள் 'சேலையும்' ஆண்க‌ள் 'கோர்ட் சூட்டும்' அணிந்து வ‌ர‌வேண்டுமென‌ எழுதிப் போந்த‌ முட்டாளை ம‌ன‌துக்குள் திட்டிக்கொண்டிருந்தேன். ரெட் வைனையும் இர‌வுச் சாப்பாடோடு சேர்த்து அருந்திய‌தால் ஒருவித‌ ம‌ந்த‌நிலை என‌க்குள் வ‌ந்திருந்த‌து. விருந்து முடிந்து, ந‌ட‌ன‌ம் ஆடுவ‌த‌ற்கான‌ த‌ள‌த்தில் இசையும் பேரிரைச்ச‌லோடு எழ‌த்தொட‌ங்கிவிட்ட‌து. ஆடு ஆடு என்கின்ற‌ன‌ கால்க‌ளும் குடித்த‌ வைனும், ஆனால் ஆடினால் சிக்க‌லாகிவிடும் என்று வ‌யிற்றுக்குள் போன‌ ம‌ட்ட‌ன் பிரியாணி முணுமுணுப்ப‌து போல‌த் தோன்றிய‌து. கூட‌வே வ‌ந்திருந்த‌ தோழிக‌ளும் ஆட‌த்தொட‌ங்கிவிட்ட‌ன‌ர், வ‌ந்து த‌ங்க‌ளோடு ஆடென்று ஒவ்வொரு பாட‌லும் முடிகிற‌ ம‌ற்றும் தொட‌ங்குகின்ற‌ நேர‌ங்க‌ளில் வ‌ந்து, க‌திரையில் இருந்த‌ என் கைக‌ளை இழுத்து அர‌ங்க‌த்துக் கூட்டிச் செல்ல‌ மிக‌வும் பிர‌யாசைப்ப‌ட்டுக் கொண்டிருந்த‌ன‌ர்.

இனித்தான் க‌வ‌ன‌மாயிருக்க‌வேண்டும். ஒளி ம‌ங்க‌லாக‌ மாற‌த் தொட‌ங்க‌த் தொட‌ங்க‌, ந‌ல்லாய்த் 'த‌ண்ணி'யை மோண்டு குடித்துவிட்டு நிற்கின்ற‌ எந்த‌ப் பெடிய‌னும் நாயைப் போல‌ ஆகிவிடும் ஆப‌த்துண்டு. ஓர் அற்புத‌மான‌ கொண்டாட்ட‌ ம‌னோநிலையை எப்ப‌டிக் க‌ண‌நேர‌த்தில் குழ‌ப்பிவிடுவ‌து என்ற‌ வித்தையை எங்க‌ள் த‌மிழ்ப் பெடிய‌ங்க‌ளிட‌ம் தான் கேட்க‌வேண்டும். இவர்க‌ள் குடிபோதையில் த‌ங்க‌ளுக்குள்ளே அடிப‌டுவார்க‌ள், இல்லாவிட்டால் த‌ங்க‌ளின் காதலிக‌ளைக் கார‌ண‌ங்காட்டி அடிப‌டுவார்க‌ள், சில‌வேளை கார‌ண‌ம் எதுவுமில்லாம‌லே அடிபடுவ‌த‌ற்காக‌வே அடிப‌டுவார்க‌ள். என‌வே எந்த‌ நேர‌த்தில் எந்த‌ எரிம‌லை வெடித்துக் கிள‌ம்பும் என்று எவ‌ருக்கும் தெரியாது. எரிம‌லை வெடித்தால் கூட‌ப்ப‌ர‌வாயில்லை. பிற‌கு அது வ‌ருட‌க்க‌ண‌க்காய் க‌ண்ணிவெடிக‌ள் மாதிரி விட்டு விட்டு ரொறொண்டோ ந‌க‌ர் முழுதும் அங்கு இங்குமாய் வெடித்துக்கிள‌ம்பி பிர‌ச்சினைப்ப‌ட்டுக் கொண்டிருப்பார்க‌ள்.

இப்ப‌டி ஆடிக்கொண்டிருக்கும்போதுதான் போதையில் ஊறிய‌ ஒருவ‌ன் என்னோடு த‌ன‌விக்கொண்டிருந்தான். ஒழுங்காய் நின்று ஆட‌வே வ‌லுவில்லாத‌வ‌ன் அவ்வ‌ப்போது 'சோளி கே பீச்சே க்யா ஹே?' என்று என்னைப் பார்த்து இளித்துக் கேட்டுக்கொண்டிருந்தான். என‌க்கு வ‌ந்த‌ எரிச்ச‌லுக்கு அவ‌னுக்குச் செவிட்டில் அறைய‌வேண்டும்போல‌த்தான் தோன்றிய‌து. ஆனால் அறைந்தால் எல்லோரின‌தும் க‌வ‌ன‌மும் எங்க‌ள் மீது குவிந்துவிடும். இந்த‌க் கொண்டாட்ட‌ ம‌னோநிலையும் பிற‌கு எல்லோரிட‌மிருந்து விடைபெற்றுப் போய் விட‌வும் கூடும். மெல்ல‌ மெல்ல‌மாய் அவ‌னோடு சேர்ந்து ஆடுகின்ற‌மாதிரி அவ‌ன் திசையில்போய் என்னுடைய‌ ஹீல்ஸால் ந‌ன்றாக‌ மிதித்துவிட்டேன். அவனுடைய‌ பார்ட்டி ஷூவையும் தாண்டி அவ‌னது கால்க‌ளுக்குள் வ‌லி போயிருக்கும். ஒற்றைக்காலில் கெந்திய‌ப‌டி கொஞ்ச‌ம் த‌டுமாறித் த‌டுமாறி ஆட்ட‌ அர‌ங்கைவிட்டு ந‌க‌ர்ந்திருந்தான்.

'ஏன்டா நொண்டுகின்றாய்?' என்று யார் கேட்டாலும் 'ஒரு பெட்டை ஹீல்ஸால் மிதித்துவிட்டாள்' என்று சொல்ல‌ அவ‌ன‌து ஆம்பிளைத்த‌ன‌ம் விடாது என்ப‌து என்னைப் போன்ற‌வ‌ர்க‌ளுக்கு ந‌ன்கு தெரியும் இனி சோளிக்குள் என்ன‌ இருக்கிற‌து என்று கேட்க‌ நினைக்கும்போதெல்லாம் காலில் ஹீல்ஸ் இருந்த‌து ம‌ட்டும் தெளிந்த‌ உண்மை என்ப‌து அவ‌னுக்கு நினைவுக்கு வ‌ருமென‌ நினைக்கின்றேன்.

இப்ப‌டியாக‌ இந்த‌ Frosh Week Partyயில் ந‌ல்ல‌தொரு நினைவுப்ப‌ரிசை வ‌ம்புக்கார‌னுக்கு கொடுத்துவிட்ட‌ ச‌ந்தோச‌த்தில் திளைத்துக்கொண்டிருந்த‌போது, என்னெதிரே இவ‌ன் ஆடிக்கொண்டிருந்தை முத‌லில் க‌வ‌னிக்காம‌ல் விட்டுவிட்டேன். பெடிய‌ன் ப‌ரவாயில்லை, கொஞ்ச‌ம் ந‌ல்ல‌ ஸ்ரெப்ஸோடு ஆடுகின்றாந்தான், ஆனால் தானொரு Usher என்ற‌ நினைப்பில் கை காலை அர‌ங்கில் விரித்து ஆடிய‌துதான் ச‌ற்று விநோத‌மாய் இருந்த‌து.

நான் இந்த‌ திமிர்க்கார‌னின் ஆட்ட‌ ந‌க‌ர்வுக‌ளை ம‌றுத‌லித்து என‌க்கான‌ வெளியில் ஆடிக்கொண்டிருக்கும்போது, 'என்ன‌ பாட்டுப் பாடி ஆடினால்தான் என்னோடு சேர்ந்து ஆடுவீர்க‌ளா?' என்று சிரித்தப‌டி கேட்டான். ஆ....! இவ்வ‌ள‌வு நேர‌மும் இங்கு ந‌ட‌ந்த‌தை ஒருவ‌ரும் அவ‌தானிக்கவில்லை என்று நான் நினைத்துக்கொண்டிருந்தேனே, இவ‌ன் பார்த்திருக்கின்றான் போலிருக்கிற‌தே என்று என‌க்குள் சிறு ப‌த‌ற்ற‌ம் ப‌ர‌வ‌த்தொட‌ங்கிய‌து. ஆனால் அதை வெளியில் காட்டிக்கொள்ளாம‌ல், 'அப்ப‌டியொன்றுமில்லை உங்க‌டை யூனிப்பெடிய‌ங்க‌ளுகளுக்கு சும்மா காற்றில் கை காலை ம‌ட்டும் அசைக்க‌த்தான் தெரியும் என்று ந‌ண்ப‌ர்க‌ள் சொல்லியிருக்கின்றார்க‌ள்; இப்போது அதை நேரிலேயே பார்க்கிறேன்' என்று ச‌ற்று ஏள‌ன‌மாக‌ச் சொன்னேன்.

அநேகமான‌ ஆண்க‌ளைப் போல‌, இவ‌ன் என்னிட‌ம் என் கைத்தொலைபேசியின் எண்க‌ளைக் கேட்டான். நானும் அநேக‌மான‌ பெண்க‌ளைப் போல‌ 'அந்நிய‌ர்க‌ளிட‌ம் என‌து எண்க‌ளைப் ப‌ரிமாறிக்கொள்வ‌தில்லை ' என‌த் தெளிவாக‌ப் ப‌தில் கூறினேன். அப்ப‌டியா, ச‌ரி என்று அதிக‌ம் அல‌ட்டிக்கொள்ளாம‌ல் அவ‌ன் தொட‌ர்ந்து ஆடிக்கொண்டிருந்தான். அதிக‌ம் பேச‌முடியாத‌ப‌டிக்கு இசை மிகுந்த‌ அதிர்வாயிருந்த‌து. முக்கியமாய் என‌து சேலை நுனியை ஒருமுறையாவ‌து இழுத்துப் பார்க்க‌வேண்டும் என்ப‌த‌ற்கான‌ எந்த‌ ந‌க‌ர்வையும் அவ‌ன் எடுக்காத‌து என‌க்குச் ச‌ற்றுப் பிடித்திருந்த‌து. நேர‌ம் ந‌ள்ளிர‌வைத் தாண்டி வீடு திரும்பும்வேளையில், 'வேண்டும் என்றால் உன‌து தொலைபேசி எண்ணைத்தா, எப்போதாவ‌து என‌க்கு உன்னை அழைக்க‌வேண்டும் போலிருந்தால் அழைத்துக் க‌தைக்கின்றேன்' என‌ அவ‌ன‌து எண்க‌ளை வாங்கிக்கொண்டேன். அத‌ன் பின் வ‌ந்த‌ ந‌த்தார் விடுமுறையில் வ‌குப்புக்க‌ள் இல்லாது வ‌ந்த‌ த‌னிமையில் யாராவ‌து ந‌ண்ப‌ர்க‌ளை அழைத்துப் பேசுவோம் என்று கைத்தொலைபேசியை scroll செய்து கொண்டுபோன‌போது MCயென இவ‌ன‌து பெய‌ர் சேக‌ர‌ம் செய்து வைத்திருந்த‌து தெரிந்த‌து.

முத‌ன்முத‌லாக‌ அவ‌னை அழைத்த‌போது என்னை மீண்டும் அவ‌னுக்கு நினைவுப‌டுத்த‌வேண்டியிருந்த‌து. சில‌வேளைக‌ளில் என‌க்குத் த‌ந்த‌துபோல‌ இப்ப‌டி நிறைய‌ப் பெண்க‌ளிட‌ம் த‌ன் தொலைபேசி எண்ணைக் கொடுத்திருப்பானோ என்ற‌ ச‌ந்தேக‌ம் வ‌ர‌த்தான் செய்த‌து. அன்றைய‌ பொழுது அவ்வ‌ள‌வாய் அவ‌னோடு க‌தைக்க‌முடிய‌வில்லை. க‌ல்க‌ரியில் ப‌டித்துக்கொண்டிருக்கும் அக்கா விடுமுறைக்காய் த‌ங்க‌ளோடு வ‌ந்து நிற்கின்றார் என்றான். த‌ம‌து அக்கா, அண்ணா, அப்பா, அம்மாமார்க‌ளுக்கு முன்னால் ஏன் தான் எங்க‌டை பெடிய‌ள் இவ்வ‌ள‌வு ப‌ம்மிப் பவ்விய‌மாய் ந‌டிக்க‌ மிக‌க் க‌ஷ்ட‌ப்ப‌டுகின்றார்க‌ளோ தெரிய‌வில்லை. இப்ப‌டிப் ப‌துங்குகின்ற‌ பூனைக‌ள் பிற‌கு பொதுவெளியில் பெண்க‌ளைக் க‌ண்டால் எப்படிப் பிறாண்டுப‌டுவார்க‌ள் என்ப‌தை நாம‌றியாத‌வ‌ர்க‌ளா என்ன‌?

இப்ப‌டித் தொட‌ங்கிய‌து கிட்ட‌த்த‌ட்ட‌ ஒருவ‌ருட‌த்திற்கும் மேலாய் டேட்டிங் போவ‌துவ‌ரை நீண்டிருந்த‌து. எப்போதுமே புதிதாய்த் தொட‌ங்கும் எதுவுமே புத்துண‌ர்ச்சியாக‌வும் வேக‌மாக‌வும் இருப்ப‌து போல‌ எங்க‌ள் உற‌வும் ந‌ன்றாக‌த்தான் போய்க்கொண்டிருந்த‌து. இப்போது யோசித்துப் பார்த்தால், கிட்ட‌த்த‌ட்ட‌ சித்திய‌டைய‌மாட்டேன் என்று நினைத்து, ப‌ரீட்சை எழுத‌ப் ப‌ய‌ந்துகொண்டிருந்த‌ ஒரு பாட‌த்தின் ப‌ரீட்சைக்கு, என்னோடு கூட‌வே வ‌ந்து நான் ப‌ரீட்சை எழுதி முடியும் வ‌ரை என்னோடு அவ‌ன் கூட‌ இருந்த‌தை நினைத்தால் இத‌மாக‌ இருக்கிற‌து. 'நீ ப‌ரீட்சையில் பாஸ் ப‌ண்ணுவாய்' என்று ப‌ரீட்சை ஹோலுக்குப் போக‌முன்ன‌ர் என‌து நெற்றியில் அவ‌னிட்ட‌ விபூதி இப்போதும் ம‌ண‌ப்ப‌துபோல‌த்தான் தோன்றுகின்ற‌து. அது இர‌வு ந‌ட‌ந்த‌ ப‌ரீட்சை என்ற‌ப‌டியால் ப‌த்து ம‌ணியாகிவிட்ட‌து. வெளியே ச‌ரியான‌ குளிரும். வீட்டை திரும்பி வ‌ரும்போது அவ‌ன் க‌த‌க‌த‌ப்புக்காய் குடித்துக்கொண்டிருந்த‌ சிக‌ரெட்டை வாங்கி நான் முத‌ன்முத‌லாய் உள்ளிழுத்துப் புகையும் விட்டுமிருக்கின்றேன்.

http://djthamilan.blogspot.com/2011/05/blog-post_10.html

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

-பகுதி 02 -

2.

அவ‌ளோடான‌ ஒன்ற‌ரை வ‌ருட‌த்திற்கு மேலான‌ நேச‌த்தில் ம‌ன‌மொடிந்துபோகிற‌ மாதிரி பெரிதாய் எதுவும் எங்க‌ளுக்கிடையில் நிக‌ழாத‌போதும், ஏதோ ஒரு இடைவெளி எங்க‌ளுக்குள் வந்த‌ மாதிரித் தோன்றிய‌து. இந்த‌க் கால‌க‌ட்ட‌த்தில்தான் துஷாவின‌து ந‌ட்புக் கிடைத்த‌து. நான் ச‌ப்வேயில்தான் வ‌ளாக‌த்துக்குப் போய்க்கொண்டிருந்தேன். துஷாவைச் ச‌ந்தித்த‌து சென்.கிளேய‌ர் ஸ்ரேச‌னில்தான். இருவ‌ரும் வ‌குப்புக்க‌ளுக்குப் போகும் நேர‌ம் ஒன்றாக‌ இருந்த‌த‌னால் அடிக்க‌டி காலைவேளைக‌ளில் அவ‌ளை நான் காண்ப‌து உண்டு. ஆர‌ம‌ப‌த்தில் புன்ன‌கையில் தொட‌ங்கிய‌ ச‌ந்திப்பு பிற‌கு ரெயினுக்குள் க‌தைத்துக்கொண்டு போகும்வ‌ரை நீண்ட‌து. இருவ‌ரும் ஒரே வ‌ளாக‌த்தில் ப‌டித்துக்கொண்டிருந்த‌தால் பேசுவ‌த‌ற்கு நிறைய‌ விட‌ய‌ங்க‌ள் இருந்த‌ன‌.

அப்போதுதான் எங்க‌ள் வ‌ளாக‌த்திலும் த‌மிழ‌ர் சிங்க‌ள‌வ‌ர் என்ற‌ பிண‌க்குப்பாடு வ‌ந்து த‌மிழ‌ருக்கென‌ ஒரு மாண‌வ‌ர் அமைப்பும், இல‌ங்கைய‌ருக்கென‌ இன்னொரு மாண‌வ‌ர் அமைப்பும் உருவாகி -இங்கேயும் ஈழ‌த்தைப் போல‌- அர‌சிய‌ல் சூடு பிடிக்க‌த்தொட‌ங்கியிருந்தது. நான் த‌மிழ் மாண‌வ‌ர் அமைப்பில் அங்க‌த்துவ‌னாய் இருந்தாலும் அவ்வ‌ப்போது சிங்க‌ள‌வ‌ர்க‌ளால் ந‌ட‌த்த‌ப்பெற்ற‌ இல‌ங்கைய‌ர் அமைப்புக் கூட்ட‌ங்க‌ளுக்கும் போவ‌துண்டு. ஒன்றுப‌ட்ட 'தேசிய‌' இல‌ங்கையில் என‌க்கு பெரு விருப்புப் போல‌ என்று நீங்க‌ள் த‌வ‌றாக‌ நினைக்க‌க்கூடும். அப்ப‌டியேதுமில்லை, ந‌ல்ல வ‌டிவான‌ சிங்க‌ளப் பெட்டைய‌ள் அங்கே அடிக்க‌டி வ‌ந்து போய்க்கொண்டிருந்த‌துதான் முக்கிய‌ கார‌ண‌ம்.

எங்க‌டை த‌மிழ்ப்பெட்டைய‌ள் கால‌நிலைக்கேற்ப‌வோ, த‌ங்க‌ள் விருப்புக்கேற்ப‌வோ ஆடைக‌ள் அணிவதை 'புராத‌ன‌ த‌மிழ் மூளை' கொண்ட‌ ப‌ல‌ரால் அனும‌திக்க‌ப்ப‌டுவ‌தில்லை. க‌ச்சானையை வாய்க்குள் போட்டுச் ச‌ப்பிக்கொண்டிருப்ப‌து மாதிரி எப்போதும் புற‌ணி சொல்லிக் கொண்டேயிருப்பார்க‌ள். சில‌வேளைக‌ளில் இதையும் மீறி பெண்க‌ள் ந‌ட‌ந்துகொண்டால், அந்த‌ப் பெண் குறித்து இல்லாத‌தும் பொல்லாத‌துமாய் மின்ன‌ஞ்ச‌ல்க‌ளை அனுப்பி குறிப்பிட்ட‌ பெண்க‌ளுக்கு ம‌ன‌வுளைச்ச‌ல்க‌ளைக் கொடுக்கவும் தயங்கமாட்டார்கள். இவ்வாறான‌ பிர‌ச்சினைக‌ள் எதுவும் இல‌ங்கைய‌ரின் அமைப்பில் பெரிதாக‌ ந‌டைபெறுவ‌தில்லை. அதுவும் அவ‌ர்க‌ள் கிறிஸ்ம‌ஸ் நேர‌ங்க‌ளில் செய்யும் பார்டிக‌ளும் பிற‌கு ந‌டைபெறும் க‌ளியாட்ட‌ங்க‌ளும்...இதெல்லாம் த‌மிழ் மாண‌வ‌ர் அமைப்பில் க‌ன‌வில் கூட‌ நினைத்துப் பார்க்க‌ முடியாது.

த‌மிழ் நிக‌ழ்வுக‌ளுக்கு வ‌ருகின்ற‌ முக்கால்வாசி ச‌ன‌ம், தாங்க‌ளும் அக்கொண்டாட்ட‌த்தின் ஒரு ப‌குதியாக‌ மாறி க‌ளிப்ப‌டைவ‌தை விட்டு விட்டு 'எந்த‌ப் பெட்டை எந்த‌ப் பெடிய‌னோடு க‌தைத்தாள், எந்த‌ப் பெடிய‌னோடு நெருக்க‌மாக‌ ஆடினாள்' என்று க‌ண்காணிப்ப‌திலேயே பெரும் நேர‌த்தைச் செல‌வ‌ளிப்பார்க‌ள். இது பெடிய‌ங்க‌ளுக்கு ம‌ட்டுமான‌ ம‌னோநிலைய‌ல்ல‌, சாதார‌ண‌மாய் வ‌ருகின்ற‌ பெண்க‌ளையும் த‌ங்க‌ளைப் போல‌வே விடுப்பு பார்க்கும் ம‌னோநிலைக்கு மாற்றிய‌ பெருமை இவ்வாறான‌ ஆண்க‌ளுக்கே உண்டு.

துஷாவிற்கு த‌மிழ் அமைப்பில் சேர‌ அவ்வ‌ள‌வாய் விருப்ப‌மிருக்க‌வில்லை. த‌மிழ் மாண‌வ‌ர் அமைப்பில் தீவிர‌மாய் விவாதிக்க‌ப்ப‌டும் ஈழ‌ அர‌சிய‌ல் அவ‌ளுக்குப் பிடிப்ப‌தில்லை. அவ‌ள‌து த‌க‌ப்பனிற்கும் மாமாவிற்கும் ஈழ‌த்திலிருந்த‌ ஏதோவொரு இய‌க்க‌ம் பெரிதாய்க் க‌ஷ்ட‌ம் கொடுத்து ம‌யிரிழையில் த‌ப்பிவிட்ட‌தாய் ஒருமுறை சொல்லியிருந்தாள். என‌க்கும் இடிய‌ப்ப‌ச் சிக்க‌லுள்ள‌ ஈழ‌ப்பிர‌ச்சினை அவ்வ‌ள‌வாய் விள‌ங்கிய‌தில்லை. என‌வே நானும் அர‌சிய‌ல் பேசுவ‌திலிருந்து வில‌கியிருந்தேன். மேலும் துஷா போன்ற‌வ‌ர்க‌ளுட‌ன் ப‌ழ‌குவ‌த‌ற்கு அர‌சிய‌ல் தெரியாத‌துபோல‌ இருப்ப‌துதான் சால‌வும் சிற‌ந்த‌து. ஆனால் ஈழ‌ அர‌சிய‌ல் பேசுவ‌தை அடியோடு ம‌றுத்த‌ துஷா, ச‌ங்கீத‌ வ‌குப்புக்கும் வீணை வ‌குப்புக்கும் போன‌துதான் என‌க்கு விய‌ப்பாயிருந்த‌து. சில‌வேளை ஈழ‌த்திலிருந்து துர‌த்திய‌டிக்க‌ப்ப‌ட்ட‌ மாமாவும் அப்பாவும் த‌மிழ்த்துவ‌த்தில் மீது பிடிப்பிருந்து அவ‌ளுக்கும் இது க‌ட‌த்த‌ப்ப‌ட்டிருக்க‌லாமோ தெரியாது.

அவ‌ள் ஒருமுறை வீணையைத் தாங்கிய‌ப‌டி நீல‌க்க‌ல‌ர் சாறியோடு இருந்து எடுத்த‌ புகைப்ப‌ட‌த்தைக் காட்டிய‌து நினைவிருக்கிற‌து. இடுப்பை மூடியிருந்த‌ சேலையைத்தாண்டி அவ‌ள் தொப்புளில் வ‌ளைய‌மொன்றை அணிந்திருந்த‌தை முத‌ன்முத‌லில் நான் க‌ண்ட‌றிந்த‌தும் அப்போதுதான். பிற‌கு ந‌த்தார் விடுமுறைக்காய் 'இல‌ங்கைய‌ர்க‌ள் அமைப்பு' ஒழுங்குசெய்த‌ கொண்டாட்ட‌ இர‌வின்போது நான் கொஞ்ச‌ம் எஸ்க‌ஸி எடுத்திருந்தேன். அன்றைய‌ இர‌வில்தான் சிங்க‌ள‌த்தோழ‌னின் Condo அறையில்தான் நான் அவ‌ளின் தொப்புளின் வ‌ளைய‌த்தை ஆடையெதுவுமின்றிக் க‌ண்ட‌து. Condom அணிய‌த்த‌யார‌கிய‌போது அது அவ‌சிய‌மில்லை தான் pillsல் இருக்கின்றேன் என்றாள்.

II

அவ‌ன் என்னோடு இப்போது அவ்வ‌ள‌வாய்க் க‌தைப்ப‌தில்லை, நேரில் ச‌ந்திக்க‌ ஆர்வ‌ம் கூட‌க் காட்டுவ‌தில்லை என்ப‌தைப் பார்க்கும்போது அவ‌ன‌து ப‌க்க‌த்தில் வேறு ஏதோ மும்முர‌மாய் ந‌ட‌ந்துகொண்டிருக்கின்ற‌து என்ப‌தை என்னால் உய்த்துண‌ர‌ முடிந்த‌து. 'ஏன் நீ என்னை இப்போது முன்போல் ச‌ந்திப்ப‌தில்லை, போனில் பேசுவ‌தில்லை?' என்று ஒருமுறை கேட்ட‌போது த‌ன‌து அக்காவின் திரும‌ண‌ம் விரைவில் ந‌டைபெற‌ப்போவ‌தாக‌வும், அத‌ற்கான் ஆய‌த்த‌ங்க‌ளில் இருப்ப‌தாக‌வும் கூறினான். ஒரு அக்காவின் திரும‌ண‌த்திற்காய் நாலைந்து மாத‌ங்க‌ளுக்கு மேலாய் இப்ப‌டி பிஸியாக இருப்ப‌வ‌னை இப்போதுதான் என் வாழ்வில் ச‌ந்திக்கின்றேன். ந‌ல்ல‌வேளை அவ‌னுக்கு நாலைந்து அக்காமாரோ த‌ங்க‌ச்சிமாரோ இல்லையென‌ நினைத்துக்கொண்டேன். இல்லாவிட்டால் நான் ச‌மாதிக்குள் போகும்வ‌ரை அவ‌னைச் ச‌ந்திக்க‌முடியாத‌ப‌டி 'திரும‌ண‌' விட‌ய‌ங்க‌ளில் ஓடிக்கொண்டிருந்திருப்பான்.

தொட‌க்க‌ கால‌த்தில் இப்ப‌டி அவ‌ன் ஆகிய‌து என‌க்கு மிக‌க் க‌ஷ்ட‌மாய்த்தானிருந்த‌து. சின்ன‌ சின்ன‌ செய்கைக‌ளில் த‌ன்னையொரு ந‌ல்ல துணையென அவ‌ன் காட்டிய‌தால் அவ‌னை விட்டு வில‌குவ‌து என‌க்கு ம‌ன‌ உளைச்ச‌லைத் த‌ருவ‌தாய் இருந்த‌து. அப்போது தோழியொருத்திதான் என்னை ஆற்றினாள். அவ‌ளில்லாதிருப்பின் இவ்வ‌ள‌வு விரைவில் இந்த‌ உளைச்ச‌லிருந்து வெளியில் வ‌ந்து, என‌து ப‌ட்ட‌ப்ப‌டிப்பை முடித்திருக்க‌வே முடியாது. அவ‌னை என‌து வாழ்விலிருந்து கொஞ்ச‌ம் கொஞ்ச‌மாக‌ ம‌ற‌க்க‌த் தொட‌ங்கியிருந்தேன்.

பெப்ர‌வ‌ரியில் வ‌ந்த‌ ஒருவார‌ விடுமுறையில் நானும் தோழியும் மெக்ஸிக்கோவிற்குப் போயிருந்தோம். த‌ங்கும் ஹொட்ட‌ல்,சாப்பாடு எல்லாம் சேர்ந்த‌ ப‌க்கேட்ஜ்தான் எடுத்திருந்தோம். நாங்க‌ள் போயிருந்த‌ கால‌ம் அங்கு ம‌ழைக்கால‌ம். அவ்வ‌ப்போது தூறுகின்ற‌ ம‌ழையும், ச‌ட்டென்று வெயில் எறிப்ப‌துமாய் இருந்த‌ கால‌நிலை எங்க‌ளுக்குப் பிடித்த‌மாயிருந்த‌து. அத்தோடு நாங்க‌ள் த‌ங்கியிருந்த‌ ஹ‌ன்கூனில் வேலை செய்துகொண்டிருந்த‌ பெண்க‌ளும் ஆண்க‌ளும் ந‌ன்கு அன்பாய் எங்க‌ளுட‌ன் ப‌ழ‌கியிருந்தார்க‌ள். உல்லாச‌ப்ப‌ய‌ணிக‌ளாய் வ‌ந்திருந்த‌ அனேக‌ர் ஹொட்ட‌லின் சுற்றாட‌லுக்குள் முட‌ங்கியிருக்க‌, நாங்க‌ளோ வெளியிட‌ங்க‌ளுக்குப் ப‌ய‌மின்றித்திரிந்தோம். அவ்வாறு போகும்போது நாங்க‌ள் ம‌ண்ணிற‌க்காரிக‌ள் என்ப‌தால் புற‌ந‌க‌ர்ப்ப‌குதியில் இருந்த‌ ச‌ன‌ங்க‌ளும் எங்க‌ளை வித்தியாச‌மாய்ப் பார்க்க‌வில்லை. தோழி ஏற்க‌ன‌வே உய‌ர்க‌ல்லூரியில் இர‌ண்டு மூன்று ஸ்பானிஸ் வ‌குப்புக்க‌ள் எடுத்திருந்த‌தால், தெரிந்து வைத்திருந்த‌ அடிப்ப‌டை ஸ்பானிஸ்... பாதை தொலைந்துவிடாதிருக்க‌..., உண‌வக‌ங்க‌ளுக்குச் சென்று சாப்பிட‌..., அங்காடிக‌ளில் பொருட்க‌ளை வாங்க‌... என‌ ந‌ன்கு பிர‌யோச‌ன‌ப‌ட்ட‌து.

அந்த‌ விடுமுறையில் நான் நிறைய‌ விட‌ய‌ங்க‌ளை அறிந்துகொண்டேன். அவ‌ற்றில் ப‌ல‌ என‌க்குப்புதிய‌தாக‌வும் பிடித்த‌மான‌தாக‌வும் இருந்த‌ன‌. வகுப்புக்க‌ளில் ப‌க்க‌ங்க‌ளாய்ப் ப‌டித்த‌ ப‌ல‌வ‌ற்றை அனுப‌வ‌ரீதியாக‌ உண‌ர்ந்துகொண்டேன். ஒரு பெண்ணாய் என‌க்கான‌ த‌னித்துவ‌மான‌ முடிவுக‌ளை இனி எதிர்கால‌த்தில் எடுக்க‌முடியும் என்ற‌ துணிச்ச‌லை இந்த‌ நாட்க‌ள் என‌க்கு ஏதோவொரு புள்ளியில் உணர்த்திவிட்டுச் சென்றிருக்கென‌ ந‌ம்புகின்றேன். எவ்வ‌ள‌வு குதூக‌ல‌த்தோடு நான் ஹ‌ன்கூனிலிருந்தேனோ அத‌ற்கு எதிர்ம‌றையான‌ ம‌னோநிலையோடு ரொறொண்டோ பிய‌ர்ச‌ன் விமான‌ நிலைய‌த்தில் வ‌ந்திற‌ங்கினேன். எனினும் இந்த‌ப் ப‌ய‌ண‌ம் இந்த‌ உல‌கை வேறுவித‌மாய்ப் பார்க்க‌, நான் யார் என்ப‌தை ஆழ‌மாய் அறிந்து கொள்ள‌ உத‌வியதிலென‌... ப‌ல்வேறுவித‌த்தில் என்றென்னும் நினைவில் கொள்ள‌க்கூடிய‌தாய் அமைந்துவிட்டிருந்த‌து.

3.

துஷா அன்று என‌து வீட்டுக்கு வ‌ந்த‌போது வான‌ம் க‌ருஞ் சாம்ப‌லாயிருந்த‌து. ப‌னி கொட்ட‌ இன்னும் ஆர‌ம்பிக்க‌வில்லையெனினும் காற்றின் நிமித்த‌ம் குளிர் மிக‌ மோச‌மாய் இருந்த‌து. இனி எல்லா மர‌ங்க‌ளும் இலைக‌ளும் உதிர்ந்து நிர்வாண‌மாய் நிற்க‌ப்போகின்ற‌ன‌. இந்த‌க் கொடுங்குளிரில் நிர்வாண‌மாய் நிற்ப‌து ம‌ர‌ங்க‌ளுக்கு ம‌ட்டுமே சாத்திய‌ம். வ‌ழ‌மையாக‌ வ‌ரும் துஷாவைப் போல‌ அவ‌ள் இன்றிருக்க‌வில்லை; எதையோ ப‌றிகொடுத்தாற்போல‌ அவ‌ள‌து முக‌ம் இருந்த‌து. சில‌வேளை இதுவ‌ரை இணைந்துகொள்ளாத‌ த‌மிழ் மாண‌வ‌ர் அமைப்பில் சேர்ந்துவிட்டாளோ என்ற‌ ச‌ந்தேக‌ம் வ‌ந்துவிட்ட‌து. எனெனில் அங்கு போக‌த் தொட‌ங்கிவிட்டால் உங்க‌ளைய‌றியாம‌லே ஒர் இருட்திரை உங்க‌ள் முக‌ங்க‌ளுக்கு முன் தொங்க‌த்தொட‌ங்கிவிடும். சாச்சா...துஷா இப்ப‌டியொரு விஷ‌க்குள‌த்தில் இற‌ங்கியிருக்க‌மாட்டாளென்று என் ம‌ன‌ம் கூறிய‌து. நான் கேற்றிலில் நீரைச் சூடாக்கிக்கொண்டு பாலை அடுப்பில் வைத்து சூடாக்க‌த் தொட‌ங்கினேன். குளிருக்குள் வ‌ந்த‌வ‌ளுக்கு அள‌வான சூட்டுட‌ன் கொடுக்கும் தேநீர் பிடிக்கும் என்ப‌து என‌க்கு ந‌ன்கு தெரியும்.

'இப்ப‌ ரீ தேவையில்லை, உன்னோடு க‌தைக்க‌வேண்டியிருக்கிற‌து.'

'அப்ப‌டியா..! ச‌ரி என்ன‌வென்று சொல்.'

'இல்லை, இனி நாங்க‌ள் இப்ப‌டிச் ச‌ந்திக்கிற‌து எல்லாம் ச‌ரிவ‌ராது போல‌த்தெரிகிற‌து.'

பிறகு, எங்க‌ளின் உரையாட‌ல் கொதித்துக்கொண்டிருந்த‌ பாலை விட‌ அதிக‌ம் சூடாகி, நான் அவ‌ள் முன்பொருமுறை நேச‌முட‌ன் வாங்கித்த‌ந்த‌ புத்த‌ர் சிலையை நில‌த்தில் எறிந்து என‌து கோப‌த்தைக் காட்டும்வ‌ரை போய்முடிந்த‌து. உடைந்து நொறுங்கிய‌ புத்த‌ரின் க‌ண்க‌ள் உற்றுப் பார்த்துக்கொண்டிருக்க‌, துஷா என்னைவிட்டு என்றென்றைக்குமாய்ப் பிரிந்துபோனாள்.

துஷா என்னைவிட்டுப் போன‌தன்பிற‌கு புதிதாய் எவ‌ரையும் டேட்டிங் செய்யும் எண்ண‌ம் வ‌ர‌வில்லை. க‌ட்ட‌ற்றுத் துள்ளிக்கொண்டிருந்த‌ இள‌மை வ‌டிந்துபோயிற்றுப் போலும். ஏற்க‌ன‌வே மூன்று பாட‌ங்க‌ளில் பெயிலாக‌ இருந்த‌ நான் இம்முறையும் அந்த‌ப் பாட‌ங்க‌ளில் பாஸாக‌விட்டால், ஒரு வ‌ருட‌த்திற்கு வ‌ளாக‌த்தில் probation த‌ந்துவிடுவார்க‌ள். பிற‌கு ப‌டிப்ப‌த‌ற்கான‌ க‌ட‌னுத‌வியையும் த‌ர‌மாட்டார்க‌ள். ப‌டித்துப் ப‌ட்ட‌தாரியான‌வ‌ர்க‌ளே ஒழுங்காய் ஒரு வேலை எடுக்க‌முடியாது சும்மா வீட்டிலிருக்கையில், அரைகுறையில் ப‌டிப்பு நிற்கும் நான் எவ‌ரிட‌மும் வேலை கேட்டும் போக‌முடியாது. என‌வே இம்முறை கொஞ்ச‌ம் க‌வ‌ன‌மெடுத்த்துப் ப‌டித்து, நான்காம் ஆண்டை முடித்தால் ஒரு ப‌ட்ட‌த்தை எடுத்துவிட‌லாம் என்று வ‌குப்புக்க‌ளுக்கு ஒழுங்காய்ப் போக‌த்தொட‌ங்கினேன். என‌து ப‌ட்ட‌ம‌ளிப்பு முடிந்த‌போது இவ‌ள் நான்காண்டாம் ஆண்டில் ப‌டித்துக்கொண்டிருந்தாள். துஷாவோடு சுற்றித்திரிந்த‌தில் இவ‌ளை ம‌ற‌ந்து இடையில் கிட்ட‌த்த‌ட்ட‌ இர‌ண்டு வ‌ருட‌ இடைவெளி வ‌ந்துவிட்ட‌து.

ஒருநாள் ப‌ழைய‌ ஞாப‌க‌ங்க‌ள் கிள‌ற‌, என‌து முன்னாள் 'கிளி' கூண்டைவிட்டுப் போயிற்றா அல்ல‌து ஒரு துணைக்காய் மோன‌த்த‌வ‌த்தில் இன்னும் காத்திருக்கிற‌தா என்ப‌த‌தை அறிய‌ ஒரு மெயிலைத் தூதுவிட்டேன். வ‌ந்த‌ நீண்ட‌ ப‌திலில், ஏதோ நிர்ப்ப‌ந்த‌த்தால் அவ‌ள் வீட்டை விட்டு வெளியே வாழ‌த் தீர்மானித்திருந்த‌து போல‌த் தோன்றிய‌து. ஆயிர‌மாண்டுக்குப் பின் வ‌ராது வ‌ந்த‌ மாம‌ணியென‌ அவ‌ளோடு நான் மீண்டும் ச‌ம‌ர‌ச‌மாகிவிட்டேன்.

http://djthamilan.blogspot.com/2011/05/02.html

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

-ப‌குதி 03

டிசே த‌மிழ‌ன் - க‌லீஸ்தினோ

III.

இவ்வளவு காலமும் என்னைப் புறக்கணித்துவிட்டு இரண்டு வருடத்திற்குப் பிறகு ஒரு மெயிலை இவன் அனுப்பியிருந்தான். எல்லாவற்றையும் மறந்து அல்லது கடந்தகாலத்தை நினைவூட்டாது இருவரும் மீண்டும் டேட்டிங் செய்யத் தொடங்கியிருந்தோம். ஒரு நாள் இர‌வு நாங்கள் 'கெல்சி'யிற்கு சாப்பிடப் போயிருந்தோம். இவன் கழிவறைக்குப் போயிருந்த‌ நேர‌ம் இவனது கைத்தொலைபேசியை சும்மா தோண்டியபோது துஷா@.... என்ற பெயரில் தொலைபேசி எண் ஒன்று பதிவு செய்திருந்ததைப் பார்த்தேன். அட இது எனது தோழிக்கு பழக்கமான துஷாவல்லவா என்று இழையொன்றின் நுனியைப் பிடித்து, பிறகு துஷாவிற்கும் இவ‌னிற்கும் க‌ட‌ந்த‌கால‌த்தில் இருந்த‌ உற‌வின் முழுப் பரிமாணத்தையும் அறிந்துகொண்டேன்.

நான் மிகுந்த சிக்கலுக்குள் -இவன் திரும்பி வந்த காலகட்டத்தில்- இருந்தேன். அந்தக் காலகட்டத்தைப் போல நான் மனவுளைச்சலுக்கு உள்ளான ஒருபொழுது என்றுமே இருந்த‌தில்லை. எனது நிலைப்பாட்டை... எனது சுயத்தை.... எனது பெற்றோருக்காவது விளங்கப்படுத்த முடியுமென அவர்களோடு போராடிக்கொண்டிருந்தேன். அவர்கள் என் மீதான எல்லா கயிறுகளையும் இறுக்கத்தொடங்கியிருந்த‌ன‌ர். தற்கொலை செய்யலாமோ என்று கூட பலமுறை அந்த நேரங்களில் நினைத்துக்கொண்டதுண்டு. இவ்வளவு காலமும் என் வாழ்வின் ஒரு பகுதியாயிருந்த பெற்றோரைச் சட்டென வெட்டிவிட்டும் போக முடியவில்லை. என்னிடம் எதுவும் கேட்காமலே எனக்கான திருமண விடயத்தை அவ‌ர்க‌ள் தீவிரமாகத்தொடங்கினர்.

இந்த விடயத்திலிருந்து உடனடியாகத் தப்பவேண்டும், இல்லாவிட்டால் காலமுழுக்க கண்ணீரோடு கழிக்கவேண்டியிருக்கும் என்ற யோசனையிலிருந்தபோதே இவன் மீளவும் எமது உறவை தூசி தட்டி புதுப்பிக்க விருப்பி எனக்கொரு மெயிலை அனுப்பியிருந்தான். இப்போதைக்கு தெரியாத பேயிற்குக் கழுத்தை நீட்டுவதை விட தெரிந்த பிசாசுக்கு சம்மதம் தெரிவிப்பது நல்லதென நினைத்து. இவனைத் திருமணம் செய்வதற்குச் தெரிவித்து இருந்தேன்.

4

இவளுடைய நச்சரிப்பதுத் தாங்க முடியாமல் தான், இப்போது ஐயப்பன் கோயிலில் எண்ணெய் சாத்துவதற்காய் கால்கடுக்க நிற்கவேண்டியிருக்கிறது. குளிர்த்திச் சோற்றுக்காய் நிற்கும் மற்ற கியூவில் போய் நிற்க எனக்கு விருப்பமிருந்தாலும், 'கோயிலுக்குப் போவது கும்பிடத்தான்' என்பதில் உறுதியாய் நிற்பவளின் விழிகள், நான் மற்றக் கியூவில் போய் நின்றால் சிவந்துவிடும் ஆபத்துமிருக்கிறது. ஐயப்பன் ஒரு பிரமச்சாரி என்றும் பெண்கள் எல்லாம் ஐயப்பன் கோயிலுக்குள் போகக்கூடாது என்றும் அல்லவா கேள்விப்பட்டிருக்கின்றேன். இப்படி நீங்கள் பெண்களை விடுகிறது நியாயமா என்று இந்த அறங்காவல் சபையிடம் யாராவது கேள்வி கேட்டு பெண்கள் கோயிலுக்கு வருவதைத் தடை செய்தால், நான் நிம்மதியாய் எனக்குப் பிடித்த குளிர்த்திச் சோற்றைச் சாப்பிட்டுவிட்டு என்பாட்டில் போய்விடலாம். சா...என்ன உலகமிது. புலம்பெயரப் பெயர த‌மிழ்ப்பெண்க‌ள் ம‌ட்டுமில்லை, சாத்திர சம்பிரதாயங்களும் மாறிவிடுகின்றன.

ம்...இப்போது நினைத்தாலும் கொஞ்சம் வியப்பாய்தானிருக்கிறது; இடையில் நான் பல திருகுதாளங்களைச் செய்தபின்னும் எந்தக் கேள்வியும் கேட்காது என்னை அதேமாதிரி இவள் ஏற்றுக்கொண்டிருக்கின்றாள். எவ்வளவுதான் நாங்கள் விளையாட்டுப் பிள்ளையாக இருந்தாலும் இறுதியில் எல்லாவற்றையும் சகித்துக்கொள்வதில் சிலையாக நிற்கும் சாமிகளைவிட உறுதியாகத்தான் இவளைப் போன்ற பெண்கள் நிற்கின்றனர் என்பதை ஏற்றுக்கொண்டாக வேண்டும். இவ‌ளைப் போன்ற‌ பெண்களை நடமாடுந் தெய்வங்கள் என்று அழைப்பதில் எவ்விதத் தப்பும் இல்லைத்தான். இப்போது சுடிதாரில் வந்திருக்கிற இவளுக்கு, நான் அணிந்து வரக்கட்டாயப்படுத்திய தாலி இன்னும் அழகைக் கொடுக்கிறது. ஆனால் வளாக காலத்தில் எங்கள் இருவருக்குமிடையில் இருந்த அந்நியோன்னியம், எல்லாவற்றையும் பகிரும் ஆவல் எல்லாம் எங்கையோ இந்தத் திருமணத்தின்பின் வடிந்துபோனதுபோலத்தான் தோன்றுகின்றது. ஏன் இரவுகளில் கூட அவ்வளவு உற்சாகமில்லை; ஒவ்வொருமுறையும் ஏதோவொரு சாட்டுச்சொல்லி கவனத்தைத் திசை திருப்பிக்கொண்டிருப்பது ஏனென்றும் விளங்கவில்லை.

IV.

இவனோடான திருமணத்தின்பின் நான் யாரென்பது மிகத் தெளிவாக எனக்கு விளங்கியது. என்னைச் சிலவேளைகளில் இவன் ஒரு விளையாட்டுப் பொருளாய்ப் பாவித்தது குறித்த கோபமிருந்தாலும் என் மீது இவன் இப்போது வைத்திருக்கும் அன்பில் எவ்விதச் சந்தேகமுமில்லை. எனது நிலையை எப்படி இவனுக்கு எடுத்துச் சொல்வது என்பதும் எனக்கு விளங்கவில்லை. ஆனால் இப்படியே இருக்கமுடியாது. எனக்குரியதற்ற இந்தவெளியில் நான் எல்லாவற்றையும் மூர்க்கமாய் நிராகரித்துக்கொண்டும் கோபித்துக்கொண்டும் இருப்பது எனக்குப் விளங்கத்தான் செய்கின்றது. எனக்கான முடிவை விரைவில் எடுக்கவேண்டிய கட்டாயத்தில் தள்ளப்பட்டுக்கொண்டிருக்கின்றேன்.

V

(ஏழு மாதங்களுக்குப் பின்...)

கலீஸ்தினோ, தயவு செய்து இதற்கு மேல் என்னை எதுவும் வற்புறுத்தாதே. நான் சொல்லும் உண்மையை ஏற்றுக்கொள்ள இந்தச் சமூகமோ அல்லது இதை வாசிக்கப்போகின்றவர்களோ இன்னும் தயாரில்லை. ஆனால் உண்மை எப்போதும் எல்லோரையும் திருப்திப்படுத்துவதாகவும் இருப்பதில்லை. அது ஒரு அழியாச்சுடர் போலத் தன்விருப்பில் ஒளிர்ந்துகொண்டிருக்கின்றது. சிலவேளை இன்றைய சூரிய நாட்களில் சுடரின் ஒளி மறைக்கப்பட்டாலும், மின்மினிகள் உலகிறகு அவசியமான நாட்களில் சுடரின் மகிமையை இந்த உலகம் விளங்கிக்கொள்ள முயலுமென நினைக்கின்றேன். அதுவரை காலம் காத்திருக்கலாம்; ஆனால் எனது வாழ்நாட்களுக்கு அவ்வாறான பொறுமை இருக்கப்போவதில்லை.

இப்போது எனக்கான தெரிவுகளை நானே எடுத்துக்கொள்ளும் வலிய ஒருவளாக மாறிவிட்டேன். எனெனில் என் தெரிவுகளில் மட்டுமே நான் நானாக இருக்கமுடியும். பிறருக்காய் எனது வாழ்வை நான் விட்டுக்கொடுக்கத் தயாரில்லை.இவ்வாறு நான் கூறுவது சிலருக்கு மிகுந்த கோபத்தை உண்டாக்கக்கூடும்; ஆனால் இதுவே நான். இங்கே எனக்கு முன் எத்தனையோ பேர் என்னைப் போல எங்கள் சமூகத்தில் வாழ விரும்பியிருக்கலாம். ஏன் சிலவேளை வாழ்ந்துமிருக்கலாம்.

பிரிய கலீஸ்தினோ நீ என் மீது வைத்திருகும் அக்கறையால்தான் இவ்வளவற்றையும் உனக்குப் பொறுமையுடன் கூறுகின்றேன். எல்லா உண்மைகளும் இச்சமூகத்திற்குத் தெரியவரும்போது என்னை மிதித்துப்போடவே இச்சமூகம் விரும்பும் என்பதை நீயறியாததல்ல. ஆனாலும் அவசரப்பட்டு, நான் கூறிய எதையும் உட‌னே பதிவு செய்துவிடாதே. நாங்கள் ஏற்கனவே திட்டமிருந்தபடி வன்கூவரின் ஒதுக்குப்புறமான நகருக்குப் போய் எங்கள் அடையாளங்களைக் களைந்து வாழத்தொடங்கும் பொழுதுகளில் வேண்டுமானால் மட்டும் பொதுவில் எழுது.

உன்னிடமிருக்கும் நம்பிக்கையைப் போல எனக்கு டீஜேவிடம் இல்லை. அவன் எங்களை விட மூன்று வயது சிறியவனாக இருக்கலாம். ஆனால் இந்த வயதிலும் பல விடயங்களின் சீரியஸ்தன்மையை விளங்காது விளையாட்டுப் பிள்ளை போலவே இருக்கின்றான். நாங்கள் படித்த மானிடவியலின் முக்கிய கூறுகள் பற்றி கொஞ்சம் அவனுக்கு விளங்கப்படுத்து. முக்கியமாய் விளிம்புநிலை மனிதர்கள் குறித்து மிகுந்த தெளிவற்றவனாகவே அவன் இருப்பது போலத்தோன்றுகின்றது.

நீ என்னிடம் இப்போது கதை கேட்டுக்கொண்டிருப்பதைப்போல எனது முன்னால் துணையான அவனிடம், டீஜே சிலவிடயங்களை கேட்டறிந்துகொள்வதை -நீ சொல்லி- நானறிவேன். எனது கதை, எனது முன்னாள் துணையின் குரலில்லாது முழுமை பெறாது என்பதை நீங்கள் இருவரும் கூறியதை நான் ஏற்றுக்கொள்கின்றேன். ஆனால் என்றோ ஒருநாள் நீங்கள் இருவரும் சேர்ந்து எழுதப்போகும் எனது கதையை 'ஆண்களுக்கான மொழியில்' மட்டும் பதிந்து எனது குரலை ஒடுக்கிவிடுவீர்களோ என்ற அச்சம் எனக்குள் இருக்கிறது.

அதுபோலவே எங்களின் உண்மையான வலிகளும், நெருக்கடிகளும், அகச்சிக்கல்களும் சித்தரிக்கப்படாது எங்களின் கதை ஒருவகையான கேலியுடன் எழுதப்படவும் வாசிக்கப்படவும் கூடும் என்றே நம்புகின்றேன். ஆனால் இவற்றையெல்லாம் விட என் கதை பகிரப்படவேண்டுமென ம‌ன‌ம் அவாவி நிற்கிறேன். எல்லா அவமதிப்புக்களுக்கும் நம்பிக்கையீனங்களுக்கும் அப்பால் நான் எனது தெரிவுகளுடன் வாழவிரும்புகின்றேன் என்பதை வெளிப்படையாகக் கூறவேண்டும். எனெனில் எங்கள் சமூகத்தில் என்னைப் போன்ற பலர் தமக்கு விருப்பமான துணைகளுடன் வாழ்வதற்கு இவ்வாறான அகச்சிக்கல்களுக்குள் தத்தளித்துக் கொண்டிருப்பார்கள் என்பதை நான் நன்கறிவேன்.

என்றேனும் ஒருநாள் நீயோ டீஜேயோ, அவனை மீண்டும் சந்தித்தால், சூழலின் கைதியினால் மட்டுமே நான் அவனைத் திருமணஞ்செய்துகொள்ளும் முடிவை எடுக்கவேண்டியதாயிற்று எனச் சொல். அதற்காக நான் உண்மையில் இன்று மிக மனம் வருந்துகின்றேன் என்பதையும் அவனுக்கான எதிர்கால வாழ்வுக்காய் என் பிரார்த்தனைகள் என்றும் இருக்கும் என்பதையும் அவனுக்கு என் சார்பில் தெரியப்படுத்துங்கள்.

குறிப்பு-1: (கலீஸ்தினோவுடையது) என் தோழியின் கதையைக் கேட்டு எழுதியபின் இதைப் பிரசுரிக்கமுன்னர் அவரைத் தொலைபேசியில் தொட‌ர்புகொள்ள‌ முய‌ன்ற‌போது, இல‌க்க‌ம் பாவ‌னையில் இல்லை என‌க்கூறிய‌து. இக்க‌தையை அவ‌ர் கூறத்தொடங்கியபோதே தான் இன்னும் சில மாதங்களில் எவரது தொடர்புமில்லாது தனது பெண் துணையுடன் வேறொரு நகரின் புறநகருக்குப் போய்விடுவேன கூறியிருந்தார். இப்போது முழுதாக எங்கள் எவரின் தொடர்பு எதுவுமின்றி இருக்கவே விரும்புகின்றார் எனது தோழியென நினைக்கின்றேன். அவர் கூறிய கதையை விரிவாகப் பதிவு செய்ய முடியாமைக்கு நமது வாசிப்புச் சூழல் குறித்த பதற்றமும், எனக்குள்ளேயிருக்கும் தன்சார்பு சார்ந்த தணிக்கையும் காரணமெனக் கூற விரும்புகின்றேன்.

குறிப்பு-2: (டிசேயினுடையது) நான் அவனின் கதையைக் கேட்டதால் அவனைப் பற்றியே கூறமுடியும். அவனுக்கு எல்லா உண்மைகளையும் அறிந்தபோது திகைப்பாக இருந்தது. இப்படி அரைகுறையான நிலையில் இருவரும் இருப்பதைவிட அவள் அப்படிப் போனது சரியான முடிவே என்றான். பிறகு இடைப்பட்ட வருடங்களில் இலங்கைக்கு போய் ஒரு பெண்ணை மணம் முடித்து வ‌ந்திருக்கின்றான். சிலவேளைகளில் நீங்க‌ள் க‌ன‌டாவில் கோயில் எங்கையும் போகும்போது சேலையும் தாலியும் கட்டிய தன் துணையை இரசிக்கின்றவர்களின் ஒருவனாய் அவனை நீங்கள் பார்க்கலாம். ஒருமுறை, நான் துஷாவின் தொலைபேசி எண்ணை எனக்குத் தந்து உதவமுடியுமா எனக் கேட்டதன் பிறகு, தன்னை இனிச் சந்திக்கவோ தொலைபேசியில் அழைக்கவோ வேண்டாமென கடுமையான கோபத்தில் கூறிவிட்டான். அந்த நாள் 2007 கார்த்திகை 09.

குறிப்புக்களாய் எழுதியது 2006, திருத்தி ஒழுங்கமைத்தது 2008 இலையுதிர்க்காலம்)

நன்றி: கூர் 2011

http://djthamilan.blogspot.com/2011/05/03.html

Edited by கிருபன்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.