Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இந்திய வனத்துறை அதிகாரிகளினாலும், காவல்துறையினாலும் பாலியல் வன்முறைக்கு ஆளாக்கப்பட்ட ‘வாச்சாத்தி’ தீர்ப்பு தாமதமாக கருணாநிதியே காரணம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

01.jpg 09.10.11 ஹாட் டாபிக்

திகாரம் கையில் இருந்தால், எளியவர்களை என்ன வேண்டுமானாலும் செய்து விடலாம் என்கிற அரசுத்துறை அதிகாரிகளின் நினைப்பிற்கு சவுக்கடி வழங்கியுள்ளது ‘வாச்சாத்தி’ தீர்ப்பு. காலங்கடந்து கிடைத்தாலும், வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட அனைவருக்கும் தண்டனை என்கிற வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பை வழங்கியிருக்கிறது நீதிமன்றம்.

தர்மபுரி மாவட்டம் அரூர் அருகே இருக்கிறது சித்தேரி வனப்பகுதி. இங்குதான் வாச்சாத்தி கிராமம் அமைந்துள்ளது. 1992 ஜூன் மாதம் 20-ம் தேதி காலை எழும்போது இவ்வளவு பெரிய பிரச்னைகளை சந்திக்கப் போகிறோம் என வாச்சாத்தி மக்கள் அறிந்திருக்கவில்லை. அடர்ந்த வனப்பகுதியில் இயற்கையோடு இணைந்து, காட்டை நேசித்து வாழ்ந்த அந்த மக்கள் மீது, சந்தனமரம் கடத்தியதாக குற்றம் சாட்டினர் வனத்துறையினர்.

சொற்ப கூலிக்காக, வனத்துறையின் கட்டளைப்படி சந்தனமரம் வெட்டிக் கொடுத்து வந்த மக்கள் சட்ட விரோதமான வேலையில் ஈடுபடுகிறோம் என்று தெரிந்த நாளில், வனத்துறைக்கு ஒத்துழைக்க மறுத்தனர். கோபமடைந்த வனத்துறையினர் சந்தனமரம் வெட்டியதாக குற்றம் சாட்டி வாச்சாத்தி கிராமத்துக்குள் ஜூன் 20-ம் தேதி நுழைந் தனர். அவர்களுக்கு உதவி செய்ய காவல்துறையினரும் அங்கே ஏற்கெனவே குவிந்திருந்தார்கள்.

கிராமத்திற்குள் நுழைந்த வேகத்தில் அங்கிருந்த வீடுகளையும், மனிதர்களையும் வனத்துறையினர் தாக்கத் தொடங்கினர். தாக்குதலுக்கு பெண்களும், குழந்தைகளும் கூட தப்பவில்லை. கண்ணாடித் துகள்களை உணவு தானியங்களில் கலந்தது, குடிக்கும் தண்ணீரில் ஆயிலைக் கொட்டியது என வாழும் சூழ்நிலையைக் கூட மாசுபடுத்தி அந்த மக்களைத் தண்டித்தது வனத்துறை.

தொடர்ந்து மூன்று நாட்கள் வாச்சாத்தியில் தங்கியிருந்து அந்த மக்கள் மீது கொடுமைகளைக் கட்டவிழ்த்து விட்டனர் வனத்துறையினரும், காவல்துறையினரும். கொடு மையின் உச்சகட்டமாக பதினெட்டுப் பெண்கள் வனத்துறையினரால் பாலியல் வன்கொடுமைக்01a.jpgகு ஆளாக்கப்பட்டனர். ஏரிக்கரையிலும், வனத்துறை அலுவலகத்திலும் என ஒரே பெண்ணை மூன்று, நான்கு பேர் என கூட்டமாக வன்புணர்ச்சி செய்தனர். சந்தன மரம் கடத்தியதாக 200-க்கும் அதிகமானோரைக் கைது செய்தது வனத்துறை. இதில் 28 பேர் பத்து வயதுக்கும் குறைந்த குழந்தைகள் என்பதில் இருந்து வனத்துறையினரின் நோக்கத்தைப் புரிந்துகொள்ள முடியும்.

வாச்சாத்தி கிராமத்தில் இவ்வளவு பெரிய கொடுமைகள் நடந்து கொண்டிருக்க, இது தெரியாமல் வழக்கம் போல் வெளியே இயங்கிக் கொண்டிருந்தது ஓர் உலகம். தங்களுக்கு நேர்ந்த கொடுமையைச் சொல்லி அழக்கூட ஆளில்லாமல் தவித்தனர் அந்த மலைவாழ் மக்கள். சம்பவங்கள் நடந்து ஒருமாதம் கழித்தே மார்க்சிஸ்ட் கட்சி மூலம் வாச்சாத்தி என்கிற ஒரு கிராமம் இருப்பதே வெளியுலகிற்குத் தெரிய வந்தது.

1992-ல் நடந்த இந்தக் கொடுமைக்கு இருபது ஆண்டுகள் கழித்து இப்போது தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 269 பேருக்கும் தண்டனை வழங்கியுள்ளது நீதிமன்றம். முக்கிய அரசியல் கட்சிகள் அனைத்தும் இம்மக்களைக் கைவிட்ட நிலையில், தமிழ்நாடு மலைவாழ் சங்கமும், மார்க்சிஸ்ட் கட்சியும்தான் இந்தப் பிரச்னையைக் கையில் எடுத்துப் போராடியது. தமிழ்நாடு மலைவாழ் சங்கத்தின் பொதுச்செயலாளர் (தற்போது தலைவர்) சண்முகம் தங்களுடைய நீண்ட நெடிய இந்தப் போராட்டம் குறித்துப் பேசினார்.

‘‘1992 ஜூன் 20-ல் நடந்த சம்பவங்கள் ஜூலை 14-ம் தேதி தான் எங்கள் கவனத்துக்கு வந்தது. இந்தப் பெரிய அடக்குமுறையை ஊடகங்களோ, அரசோ கண்டுகொள் ளவே இல்லை. 14-ம் தேதி நாங்கள் ஏழு பேர் வாச்சாத்தி கிராமத்திற்குச் சென்றபோது ஊரே மயான அமைதியில் இருந்தது. 200-க்கும் மேற்பட்டோர் சிறையில் அடைக்கப்பட்டிருக்க, மீதமுள்ளோர் வனத்துறைக்கும், காவல்துறைக்கும் பயந்து தலைமறைவாகி இருந்தனர்.

வனத்துறையினரால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட பெண்களை நாங்கள் சிறையில் போய் சந்தித்தபோது, ஏரிக்கரையிலும், வனத்துறை அலுவலகத்திலும் வைத்து பலபேர் அந்தப் பெண்களை வன்புணர்வு செய்தது தெரிய வந்தது. வலி தாங்க முடியாமல்.... ‘எங்களை ஆஸ்பத்திரிக்குக் கூட்டிட்டுப் போகச் சொல்லுங்கய்யா’ என அந்தப் பெண்கள் கதறி அழுதது சொல்ல முடியாத சோகம். அந்தப் பெண்களுக்கு நடந்த கொடுமையை சேலம் ஜெயிலரும் எங்களிடம் உறுதிப்படுத்தினார். நீதிமன்றத்திலும் இவர் சாட்சியம் அளித்தது குறிப்பிடத்தக்கது.

ஜூலை 18-ம் தேதி இந்தப் பிரச்னை தொடர்பாக, முதல்வர் ஜெயலலிதாவைச் சந்தித்து மனு கொடுத்தோம். இதையடுத்து, நாங்கள் சி.பி.ஐ. விசாரணை கேட்டு சென்னை உயர்நீதிமன்றத்தை நாடினோம். ‘பொறுப்பு வாய்ந்த அதிகாரிகள் இதுபோன்ற காரியங்களில் ஈடுபடுவார்கள் என்பது நம்பத்தகுந்ததாக இல்லை’ என்று கூறி நீதிபதி பத்மினி ஜேசுதுரை வழக்கைத் தள்ளுபடி செய்தார்.

இதையடுத்து, நாங்கள் உச்ச நீதிமன்றத்தை அணுகினோம். வாச்சாத்தி வழக்கை விசாரிக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றத்திற்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து, பாமதி ஐ.ஏ.எஸ். தலைமையில் ஒருநபர் விசாரணை கமிஷனை சென்னை உயர்நீதிமன்றம் அமைத்தது. அவர் வாச்சாத்தியில் நடந்த அத்துமீறல்களை உறுதிப்படுத்தினார். பதினெட்டுப் பெண்கள் வன்கொடுமைக்கு ஆளானதை தன்னால் உறுதிப்படுத்த முடியவில்லை என நீதிமன்றத்தில் தெரிவித்தார்.

தொடர்ந்து நடந்த விசாரணைகளின் அடிப்படையில், குற்றம் சாட்டப்பட்டவர்களை சிறையில் அடைக்க சென்னை உயர்நீதிமன்றம் 1996-ல் உத்தரவிட்டது. அதன்படி அனைவரும் கோவை சிறையில் அடைக்கப்பட்டனர். இதை எதிர்த்து, பாதிக்கப்பட்டோரின் மனைவிகள் போராட்டம் நடத்தினார்கள். பாதிக்கப்பட்ட பெண்கள் மீது கருணை வராத முதல்வர் கருணாநிதிக்கு, குற்றவாளிகளின் மனைவிகள் போராட்டம் நடத்தியதும் தாங்க முடியவில்லை. சிறையில் இருந்த அனைவரையும் விடுவிப்பதாக தன் னிச்சையாக அறிவித்தார். கைது செய்யப்பட்ட மூன்றாவது நாளில் குற்றவாளிகள் அனைவரும் விடுதலை செய்யப்பட்டனர்.

வாச்சாத்தி வழக்கில் அந்த மக்களுக்கு மிகப்பெரிய கொடுமையைச் செய்தவர் கருணாநிதிதான். சிறையில் இருந்த குற்றவாளிகளை தன்னிச்சையாக விடுவித்தது மட்டுமல் லாமல், எஸ்.சி., எஸ்.டி. பிரிவின் கீழ் இந்த வழக்கிற்கு சிறப்பு நீதிமன்றம் அமைக்க வேண்டும் என்கிற எங்களின் கோரிக்கையை அவர் ஆட்சியில் இருந்த அந்த ஐந்து வருடங்களும் கண்டுகொள்ளவே இல்லை. சிறப்பு நீதிமன்றம் அமைக்க முன்வந்திருந்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இன்னமும் விரைவாக தீர்ப்பு கிடைத்திருக்கும்.

2002-ல் கிருஷ்ணகிரி மாவட்ட நீதிமன்றமே, இந்த வழக்கில் சிறப்பு நீதிமன்றமாகச் செயல்படும் என சென்னை உயர்நீதிமன்றம் அறிவித்தது. அதன்பிறகு பல நீதிபதிகள் மாற்றம், வழக்கு இழுத்தடிப்பு என பெரும் போராட்டங்களுக்குப் பிறகு இப்போது தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. குற்றம் சாட்டப்பட்ட 269 பேரில் 54 பேர் இறந்து போனதால், மீதமுள்ள 215 பேருக்கும் தண்டனை வழங்கி உத்தரவிட்டுள்ளார் தர்மபுரி மாவட்ட அமர்வு நீதிபதி குமரகுரு. இது அந்த மக்களின் நெடிய போராட்டத்திற்குக் கிடைத்த வெற்றி’’ என்று பெருமிதப்பட்டார் சண்முகம்.

தாமதமாக நீதி கி01b.jpgடைத்திருந்தாலும், இந்த இருபது வருடங்களில் பாதிக்கப்பட்ட மக்கள் பட்டபாடு வார்த்தைகளில் சொல்ல முடியாதது. அதிக நீதிபதிகளைச் சந்தித்த இந்த வழக்கில் ஒவ்வொரு நீதிபதி முன்பும் பாதிக்கப்பட்ட மக்கள் தங்கள் கதையைச் சொல்ல வேண்டியிருந்தது. பாலியல் வன்புணர்வுக்கு ஆளாக்கப்பட்ட பதினெட்டுப் பெண் களில் மூன்று பெண்களுக்கு மட்டுமே அப்போது திருமணம் ஆகியிருந்தது. மீதமுள்ள பதினைந்து பெண்களும் 13 முதல் பதினெட்டு வயதுக்கு உட்பட்டவர்கள். இதில் பலர் வயதுக்குக் கூட வராத சிறுமிகள்.

‘‘அன்னிக்கு சனிக்கிழமை ஸ்கூல் லீவு. ஸ்கூல் மட்டும் இருந்திருந்தா நான் ஸ்கூலுக்குப் போயிருப்பேன். எனக்கு இப்படி வலிக்கிற அளவுக்கு எதுவும் நடந்திருக்காது.’’ சம்பவத்தின் போது எட்டாம் வகுப்பு படித்து வந்த பதின்மூன்று வயதான செல்வி, நீதிமன்றத்தில் தன்னுடைய வாக்குமூலத்தை இப்படித்தான் தொடங்கினாள். நாகரிகத்தில் குறைந்தவர்கள் என நாம் கருதும் அந்த மலைவாழ் சமுதாயத்தில் அந்த பதினைந்து பெண்களையும் அந்த சமுதாய இளைஞர்கள் தயக்கமின்றி திருமணம் செய்து கொண்டதும் குறிப்பிடத்தக்கது.

‘‘குற்றம் சாட்டப்பட்ட வனத்துறையினர் சார்பில் வழக்கு இழுத்தடிக்கப்பட்டதும், கருணாநிதி அரசு தனி நீதிமன்றம் அமைக்க முன்வராததும்தான் தீர்ப்பு இவ்வளவு தாமதமாக வழங்கப்பட்டதற்குக் காரணம்’’ என குற்றம் சாட்டுகிறார்கள் பாதிக்கப்பட்ட மக்கள். வழக்கு ஒவ்வொரு அடி முன்னேறுவதற்கும் அந்த மக்கள் நீதிமன்றத்தை நாட வேண்டியிருந்தது.

‘‘வாச்சாத்தி வழக்கில் தீர்ப்பு வந்ததும், ‘பாதிக்கப்பட்ட மக்களுக்கு 34 லட்ச ரூபாய் இழப்பீடு வழங்கியது நான்தான்’ என பெருமைப்பட்டுக் கொண்டார் கருணாநிதி. நீதிம ன்றத்தின் மூலம் ஒரு கோடியே 24 லட்ச ரூபாய் நஷ்ட ஈட்டை கருணாநிதி அரசிடம் இருந்து நாங்கள் வாங்கினோம். இதுகூட தெரியாமல் பேசியிருக்கிறார் கருணாநிதி’’ என்று சொல்லிச் சிரிக்கிறார் சண்முகம்.

வாச்சாத்தி வழக்கின் தீர்ப்பை மனித உரிமை ஆர்வலர்கள் அனைவரும் கொண்டாடுகிறார்கள். ஏனெனில், வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட அனைவருக்கும் தண்டனை வழங்குவது மிகவும் அரிதாக நடக்கும் சம்பவம். அதிலும் குற்றம் சாட்டப்பட்டவர்கள் அனைவரும் அரசு ஊழியர்களாக இருந்தும் தண்டனை வழங்கப்பட்டிருப்பது கு றிப்பிடத்தக்கது.

வாச்சாத்தி மக்களுக்கு வழங்கப்பட்ட தீர்ப்பு இந்தியா முழுவதும் வனத்துறையினரால் பாதிக்கப்படும் மக்களுக்கு ஒரு நம்பிக்கையை அளித்திருக்கிறது. மீண்டும் மேல் முறையீடு, நீதிபதிகள் முன்பு சாட்சியம் என அந்த மக்களைத் துன்புறுத்தாமல் நிம்மதியாக வாழ விடுவதே அந்த மக்களுக்குச் செய்யும் உதவியாக இருக்க முடியும்.

படங்கள்: ஆகாஷ், ஞானமணி

வை. கதிரவன், ப்ரியாதம்பி

-குமுதம் ரிப்போட்டர்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.