`தமிழர் நாகரிகம் 2,500 ஆண்டுகளுக்கு முற்பட்டது!' - கீழடியில் அமர்நாத் ராமகிருஷ்ணா .!
கீழடியில் 6ம் கட்ட அகழாய்வுப் பணியை மத்திய, மாநில அரசுகள் இணைந்து நடத்தவேண்டும் என அமர்நாத் ராமகிருஷ்ணா தெரிவித்துள்ளார்.
மதுரை அருகே, சிவகங்கை மாவட்டத்துக்கு உட்பட்ட கீழடியில் தமிழகத் தொல்லியல் துறையின் சார்பாக 5-ம் கட்ட அகழாய்வுப் பணி நடைபெற்றது.
கடந்த ஜூன் 13ம் தேதி தொடங்கிய 5ம் கட்ட அகழாய்வுப் பணிகள் நேற்றுடன் (அக்டோபர் 13ம் தேதி) நிறைவுபெற்றது. மேலும், கீழடி, கொந்தகை, பள்ளிச்சந்தை, மணலூர் என்று கீழடியில் சுற்றியுள்ள பகுதிகளில் 6ம் கட்ட அகழாய்வுப் பணி, வரும் ஜனவரி 2, 3வது வாரங்களில் தொடங்கப்பட இருப்பதாகத் தெரிகிறது.
தற்போது கீழடி 5-ம் கட்ட அகழ்வாராய்ச்சிப் பணி நடைபெற்ற பகுதியில் கிடைக்கபெற்ற பொருள்களை வீடியோ மற்றும் புகைப்படங்கள் மூலமாக ஆவணப்படுத்தும் பணிகள் தொடங்கியுள்ளன.
இந்நிலையில் கீழடியின் 5ஆம் கட்ட அகழ்வாராய்ச்சி நடைபெற்ற 52 குழிகளை மத்திய தொல்லியல்துறை கண்காணிப்பாளர் அமர்நாத் ராமகிருஷ்ணா நேரில் பார்வையிட்டார். மேலும், தொல்லியல்துறை அதிகாரிகளுக்கு ஆலோசனைகளை அவர் வழங்கினார்.
அதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமர்நாத் ராமகிருஷ்ணா, ``தமிழகத் தொல்லியல் துறை மேற்கொண்ட 4 மற்றும் 5ம் கட்ட ஆகழாய்வை மிகச்சரியாகச் செய்துள்ளனர். இது மகிழ்ச்சி அளிக்கிறது. இதில் பணியாற்றிய அனைவருக்கும் வாழ்த்துகளைச் சொல்லிக் கொள்கிறேன்.
தற்போதைய ஆய்வு தமிழர் நாகரிகம் 2,500 ஆண்டுகளுக்கு முந்தியது என்பதை அறிவியல் பூர்வமாக நிரூபித்துள்ளது. அடுத்த கட்ட அகழ்வாராய்ச்சிப் பணியை மத்திய, மாநில அரசுகள் இணைந்து செயல்பட்டால் விரைவாகப் பணிகள் நடத்த முடியும்'' என்றார்.
இந்தநிலையில், கீழடியில் நடைபெற்ற 5ம் கட்ட அகழாய்வை ஆவணப்படுத்தும் பணிகளை உயர் நீதிமன்ற நீதிபதி எஸ்.வைத்தியநாதன் நேரில் பார்வையிட்டார். அவர், தொல்லியல்துறை அதிகாரிகளிடம் கீழடியில் கிடைக்கப்பெற்ற ஓடுகள், பவளம், பண்டையகால தமிழி எழுத்து உருவங்கள் அடங்கிய பானைகள் உள்ளிட்டவை குறித்து கேட்டறிந்தார்.
https://www.vikatan.com/news/tamilnadu/archaeology-official-amarnath-ramakrishna-visits-keezhadi-excavation-site