ஆறாம் திருத்தச் சட்டத்தினைப் பாவித்து தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியினரை பாராளுமன்றத்தில் இருந்து ஓரங்கட்ட முயன்ற ஜெயார்
இந்த விவாதத்தின்போது அமிர்தலிங்கமோ அல்லது ஏனைய த.ஐ.வி.மு தலைவர்களோ பாராளுமன்றத்தில் இருக்கவில்லை. அவர்கள் அவ்வேளை வவுனியாவில் இருந்தார்கள். அவர்களது கட்சியின் வருடாந்த மாநாடு ஆடி 21 முதல் 23 வரை மன்னாரில் நடக்க ஏற்பாடாகியிருந்து. பின்னர் ஜூலை 25 ஆம் திகதி வவுனியாவில் நடத்துவதென்று முடிவாகியிருந்தது. நாட்டில் தமிழர் மீதான தாக்குதல்கள் தொடர்ச்சியாக நடத்தப்பட்டு வந்ததையடுத்து அவர்கள் ஆவணி 10 ஆம் திகதிவரை வவுனியாவிலேயே தங்கியிருந்தனர். அமிர்தலிங்கத்திற்கோ அல்லது சிவசிதம்பரத்திற்கோ கொழும்பிற்குத் திரும்பிச் செல்வதற்கு வீடுகள் இருக்கவில்லை. அமிர்தலிங்கத்தின் உத்தியோகபூர்வ இல்லம் ஜூலை 25 ஆம் திகதியும், சிவசிதம்பரத்தின் இல்லம் ஜூலை 24 ஆம் திகதி இரவும் எரியூட்டப்பட்டிருந்தன. சிவசிதம்பரத்தின் மனைவியும் பிள்ளைகளும் தமது வீட்டு மதிலினால் ஏறி அயலவர்களின் வீட்டில் தஞ்சம் புகுந்து பின்னர் அகதிகள் முகாமிற்குச் சென்றிருந்தனர்.
10 ஆம் திகதி தனது நெருக்காமன நண்பர் ஒருவரின் மோட்டார் சைக்கிளின் பின்னால் அமர்ந்து கொழும்பு திரும்பிய அமிர்தலிங்கம் மறுநாளே சென்னைக்குக் கிளம்பிச் சென்றார். சென்னைக்குக் கிளம்பும் முன்னர் ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகத்திற்கு எழுதிய கடிதத்தில் இலங்கையில் தாக்கப்பட்டுவரும் தமிழரைக் காக்க ஐக்கிய நாடுகள் சபையின் அமைதிகாக்கும் படையினை அனுப்பிவைக்க வேண்டும் என்று கோரிவிட்டே விமானம் ஏறினார்.
ஜெயார் கொண்டுவந்த ஆறாவது திருத்தத்திற்கு எதிராகப் பேசிய ஒரே அமைச்சர் தொண்டைமான் மட்டுமே. அமிர்தலிங்கத்தையும் த.ஐ.வி.மு கட்சியையும் அவர் ஆதரித்துப் பேசினார். இனப்பிரச்சினைக்குத் தீர்வொன்றினை எட்டுவதற்கு அமிர்தலிங்கம் மேற்கொண்ட பல முயற்சிகளை அவர் எடுத்துரைத்தார். அவரின் முயற்சிகளைச் சாதகமான முறையில் பரிசீலிக்கத் தவறியமைக்காக சிங்களத் தலைமையினை அவர் கண்டித்தார். ஆறாவது திருத்தத்தினை அமுலாக்குவதன் மூலம் த.ஐ.வி. மு கட்சியினர் அரசுக்கெதிரான தமது நிலைப்பாட்டினை மேலும் தீவிரமாக்குவார்கள் என்றும் தொண்டைமான் அரசாங்கத்தை எச்சரித்தார். தமிழர்களின் பிரச்சினையினைத் தீர்ப்பதற்கு அரசாங்கம் உண்மையாகவே விரும்பினால் தமிழ் மிதவாதிகளுடன், குறிப்பாக த.ஐ.வி.மு யினருடன் பேச்சுவார்த்தைகளில் ஈடுபடவேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.
"நீங்கள் த.ஐ.வி.மு கட்ட்சியினரைத் தடைசெய்து, அவர்களின் பாராளுமன்ற உறுப்பினர்களை பாராளுமன்றத்திலிருந்து விலகும்படி அழுத்தம்கொடுத்தபின்னர் யாருடன் தமிழரின் பிரச்சினை குறித்துப் பேசபோகிறீர்கள்? த.ழி.வி.மு அணியினரைத் தடைசெய்வதும் தமிழரை தடைசெய்வதும் ஒன்றுதான் என்பதை நீங்கள் உணர்ந்துகொள்ளவில்லையா?" என்றும் அரசாங்கத்தைப் பார்த்து தொண்டைமான் கேட்டார். மலையகத் தோட்டத் தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் என்கிற ரீதியில் தொண்டைமான் அறிக்கையொன்றினை வெளியிட்டிருந்தார். அவ்வறிக்கையில் தமிழர் மீதான தாக்குதல்கள் மிகவும் திட்டமிட்ட ரீதியிலேயே நடைபெற்றதாகக் குறிப்பிட்டிருந்தார். அவரது அறிக்கையின் ஒரு பகுதி பின்வருமாறு குறிப்பிட்டிருந்தது,
"எமது எண்ணத்தின்படி, நன்கு ஒழுங்கமைக்கப்பட்ட காடையர் கும்பல்கள் வன் முறைகள், தாக்குதல்கள், கொள்ளையிடல்கள், தீவைப்புக்கள் ஆகிய நாசகார செயற்பாடுகளில் ஈடுபட்டிருந்தன. தமிழர்கள் மீது நாசகாரத் தாக்குதல்களை மேற்கொண்டுவந்த இந்தக் கும்பல்கள் மிகவும் சுதந்திரமாகவும், வெளிப்படையாகவும் தமது அக்கிரமங்களை செயற்படுத்த அனுமதி அளிக்கப்பட்டிருந்ததோடு, இக்குற்றங்களுக்கான தண்டனைகளிலிருந்து முற்றான விலக்கினை கொண்டிருந்ததையும் காண் முடிந்தது".
பாராளுமன்றத்தில் உறுப்பினராகவிருந்த ஒரேயொரு கம்மியூனிஸ்ட் கட்சியின் உறுப்பினர் சரத் முத்துட்டுவேகம பேசுகையில், தமிழர் மீதான தாக்குதல்கள் அனைத்தும் அரச ஆசீர்வாதத்துடனேயே நடத்தப்பட்டதாகக் கூறினார். "அரசாங்கத்தின் அனைத்துக் கருவிகளும் இந்த வன்முறைகளில் பாவிக்கப்பட்டன. நான் கெளரவ அமைச்சர் தொண்டைமானைப் பார்த்துக் கேட்கிறேன், இந்த அக்கிரமங்களில் ஈடுபட்ட கும்பல்கள் சுதந்திரமாகவும், தடுப்பாரின்றியும் வீதிகளில் வலம்வந்ததாகக் கூறினீர்களே, அவர்கள் இடதுசாரிக் கட்சியினரின் உறுப்பினர்களா என்பதைக் கூறமுடியுமா? அப்படியில்லையென்றால், அவர்கள் வேறு யாராவதா? அவர்களை அதிகாரத்தில் உள்ளவர்கள் வழிநடத்தியிருந்தார்களா? உங்களது அறிக்கையின் உண்மையான அர்த்தத்தினை இந்தச் சபையில் நீங்கள் தெளிவுபடுத்த வேண்டும் என்று உங்களைத் தாழ்மையுடன் கேடுக்கொள்கிறேன்" என்று அவர் கூறினார்.
சுமார் 13 மணிநேர விவாதத்திற்குப் பின்னர் ஆவணி 5 ஆம் திகதி காலை 4 மணிக்கு ஆறாம் திருத்தச் சட்டம் பாராளுமன்றத்தால் ஏற்றுக்கொள்ளப்பட்டது. அன்று மாலை 4 மணிக்கு இரண்டாவது முறையாக இந்திரா காந்தி ஜெயாருடன் தொலைபேசியில் உரையாடினார்.
பாராளுமன்றத்தில் அரசாங்கத்தை எச்சரிக்கும்வகையில் வெளிவிவகார அமைச்சர் ஹமீத் அவர்கள் ஆடி 27 மற்றும் ஆவணி 3 ஆம் திகதிகளில் கூறிய விடயங்களை இந்திரா காந்தி ஜெயாருடனான தொலைபேசி அழைப்பில் குறிப்பிட்டார். இவ்விரு நாட்களிலும் பாராளுமன்றத்தில் பேசிய ஹமீத் அவர்கள் ஆறாம் திருத்தச் சட்டத்தை அமுலாக்குவதன் மூலம் த.ஐ.வி. மு அணியினரை பாராளுமன்றத்தை விட்டு வெளியே தள்ள அரசு முயல்வதாகவும், இது இந்தியாவை உள்நாட்டு விவகாரங்களில் இழுத்துவிட்டு தமிழருக்கான தீர்வினை வழங்குவதில் இந்தியாவின் அழுத்ததத்தினை அரசு எதிர்கொள்ள நேரிடும் என்றும் எச்சரித்திருந்தார். ஆனால், த.ஐ.வி.மு யினர் ஆறாம் திருத்தத்தை அடிப்படையாகக் கொண்டு பாராளுமன்றத்தில் சத்தியப் பிரமாணம் எடுக்கும் முன்பே இந்தியா தமிழர் பிரச்சினை தொடர்பாக இலங்கையில் தலையிட வேண்டியதாயிற்று. ஆறாம் திருத்தச் சட்டத்தினை ஒட்டி த.ஐ.வி.மு அணியினர் தமது தீர்மானத்தை ஆவணி 6 ஆம் திகதி எடுத்தனர்.