Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Leaderboard

  1. ரஞ்சித்

    கருத்துக்கள உறவுகள்
    15
    Points
    8910
    Posts
  2. தமிழ் சிறி

    கருத்துக்கள உறவுகள்
    10
    Points
    87991
    Posts
  3. குமாரசாமி

    கருத்துக்கள உறுப்பினர்கள்
    7
    Points
    46798
    Posts
  4. ஏராளன்

    கருத்துக்கள உறவுகள்
    7
    Points
    32004
    Posts

Popular Content

Showing content with the highest reputation on 01/30/24 in Posts

  1. கம்பகவிற்கு நான் சென்றபோது எனது அக்காவும் கொழும்பிலிருந்து வந்திருந்தார். சித்தியின் வீட்டில் மதிய உணவை உட்கொண்டுவிட்டு பிற்பகலில் கொழும்பிற்குக் கிளம்பினோம். வத்தளையில் அக்கா இறங்கிக்கொள்ள நான் கொட்டகேனவுக்கு வந்து சேர்ந்தேன். அன்றிரவு ஜெயரட்ணம் கொழும்பில் உள்ள ஹொட்டேல் ஒன்றில் தங்க ஏற்பாடு செய்திருந்தான். மறுநாள், மார்கழி 1 ஆம் திகதி அவனுடைய பிறந்தநாள். கொழும்பில் தன்னுடைய‌ நண்பர் ஒருவரது திருமணத்திற்காக வந்திருந்த அவன் என்னையும் அன்றிரவு தன்னுடன் ஹோட்டலில் தங்குமாறு அழைத்திருந்தான். இரவு 8 மணியளவில் ஹொட்டேலுக்குச் சென்றேன். கிங்ஸ்பெரி என்று அழைக்கப்படும் ஐந்து நட்சத்திர விடுதி அது. 2019 ஈஸ்ட்டர் குண்டுத் தாக்குதலில் தாக்கப்பட்ட விடுதிகளில் ஒன்று. அறையில் சிறிதுநேரம் பேசிக்கொண்டிருந்துவிட்டு இரவுணவிற்காக‌ சிற்றுண்டிச்சாலைக்குச் சென்றோம். பல்வேறான உணவுவைகள். விரும்பியதைக் கூச்சமின்றி எடுத்துச் சாப்பிடக்கூடிய வசதி. உண்டு கொண்டிருக்கும் போது அங்கு கடமையாற்றும் பலர் நண்பனிடம் வந்து மரியாதையாகப் பேசுவதும் சுகம் விசாரிப்பதும் தெரிந்தது. அடிக்கடி இங்கு வந்துபோகிறான் என்பதும் புரிந்தது. உணவருந்திக்கொண்டே சுற்றுமுற்றும் நோட்டம் விட்டேன். சுமார் 200 அல்லது 250 விருந்தினர்கள் அங்கு உணவருந்திக்கொண்டிருந்தார்கள். பெரும்பாலானவர்கள் சிங்களவர்கள். ஒரு சில முஸ்லீம் குடும்பங்களும் அங்கிருந்தன. தமிழ்நாட்டைச் சேர்ந்த தமிழர்கள் சிலர் குழுவாக வந்திருந்தனர். இரவுச் சாப்பாடு ஒருவருக்கு 7500 இலங்கை ரூபாய்கள். இலங்கையில் சாதாரண தொழில் செய்யும் ஒருவருக்கு ஒருவேளைச் சாப்பாட்டிற்கு இவ்வளவு தொகை செலுத்துவதென்பது நினைத்துப் பார்க்கமுடியாத விடயம். ஆனாலும், பலர் அங்கே இருந்தனர். சுமார் 9:30 அல்லது 10 மணியளவில் மீண்டும் அறைக்கு வந்தோம். பல்கனியில் இருந்தபடி காலிவீதியின் போக்குவரத்தைப் பார்த்துக்கொண்டே பேசினோம். இரவு 12 மணிவரை இருந்து நண்பனுக்கு பிறந்தநாள் வாழ்த்துச் சொல்லி, அறையில் இருந்த கேக்கினை சிறிது வெட்டி உண்டுவிட்டு தூங்கிப்போனேம். முதலாம் திகதி காலை 7 மணிக்கு தூக்கம் கலைந்து எழுந்து, வழமைபோல நண்பனுக்கு முன்னர் காலைக்கடன் கழித்து, நண்பன் ஆயத்தமாகியதும் கீழே இருக்கும் உடற்பயிற்சிக் கூடத்திற்குச் சென்று முப்பது நிமிடம் உடற்பயிற்சியில் ஈடுபட்டு, குளித்துவிட்டு காலையுணவிற்கு மறுபடியும் சிற்றுண்டிச்சாலைக்குச் சென்றோம். நண்பனது பிறந்தநாள் குறித்து அங்கு பணிபுரிபவர்கள் நன்கு அறிந்தே இருந்தார்கள். ஆளாளுக்கு வந்து வாழ்த்துச் சொல்லிச் சென்றார்கள். நாம் காலையுணவை உட்கொண்டு முடித்ததும் தாமே தயாரித்து வைத்திருந்த பிறந்தநாள் கேக்கினை கொண்டுவந்து, சுற்றிநின்று சிலர் வாழ்த்துப்பாட, நண்பன் கேக்கினை வெட்டினான். அங்கும் சில புகைப்படங்களை எடுத்துக்கொண்டோம். சிறிதுநேரம் அறைக்குச் சென்று பேசிவிட்டு அவனிடமிருந்து விடைபெற்று நான் கொட்டகேனவுக்குப் போனேன். மறுநாள்ப் பயணம். கொழும்பில் சில பொருட்களை வாங்கவேண்டி இருந்தமையினால், பிற்பகலில் கொட்டகேனவை சுற்றி வலம் வந்தேன். இரவானதும் நான் தங்கியிருந்த உறவினர்கள் வீட்டில் சிலநேரம் பேசிக்கொண்டிருந்துவிட்டு 10 மணியளவில் குட்டித்தூக்கம் ஒன்றிற்காக முயன்றேன், தோல்வியில் முயற்சி முடிந்தது. அதிகாலை 3 மணிக்கு விமானம். விமான நிலையத்தில் இரண்டு மணித்தியாலங்களுக்கு முன்னராவது நிற்கவேண்டும் என்பதால் 12 மணியளவில் வீட்டிலிருந்து கிளம்பினோம். சுங்கப் பகுதியில் பிரச்சினை ஏதும் இருக்கவில்லை. கூடவந்த சித்தப்பாவிற்கு சைகை காட்டி வழியனுப்பிவைத்து விட்டு தில்லிக்குச் செல்லும் இந்தியன் எயர்லைன் விமான அலுவலகம் நோக்கி நடக்கத் தொடங்கினேன்
  2. யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பிற்கான புகையிரதப் பயணம் சுவாரசியமாக அமைந்திருந்தது. பல விடயங்கள் குறித்து அலசினோம். பாடசாலை நாட்கள், நண்பர்கள், தொழில், பிள்ளைகள் என்று பல விடயங்கள். நானும் அதே புகையிரதத்தில் ஜெயரட்ணத்துடன் கொழும்பு செல்கிறேன் என்று அவரது மனைவிக்கு தெரிந்திருந்தமையினால் எனக்கும் சேர்த்து மதிய உணவு கொடுத்துவிடப்பட்டிருந்தது. சோறு, கோழிக்கறி, முட்டை, உருளைக்கிழங்கு என்று அருமையான வீட்டுச் சாப்பாடு. பேசிக்கொண்டே சாப்பிட்டு முடித்தோம். எனது தாயாரின் தங்கைகளில் ஒருவர் கம்பகவில் வாழ்ந்து வருகிறார். 80 களில் கிழக்கின் சிங்களக் குடியேற்றக்கிராமமான வெலிக்கந்தைக்கு தொழில் நிமித்தம் சென்றவேளை அங்கு அவருடன் பணிபுரிந்த அநுராதபுரத்தைச் சேர்ந்த சிங்களவர் ஒருவரை எனது சித்தி காதலித்து திருமணம் முடித்திருந்தார். வீட்டில் கடுமையான எதிர்ப்பு இருந்தபொழுதிலும் அவர் தனது முடிவை மாற்றிக்கொள்ளவில்லை. சித்தியின் கணவர் சுதந்திரக் கட்சியின் தீவிர ஆதரவாளர். சிறிமா முதல் சந்திரிக்கா வரை அனைத்து சுதந்திரக் கட்சித் தலைவர்களையும் தீவிரமாக ஆதரித்து வந்தவர். சந்திரிக்கா ஆட்சியில் இருந்தகாலத்தில் அவர் குறித்துப் பேசும்போது மரியாதையாக "மேடம்" என்றே பேசுவார். அவ்வளவு விசுவாசம். 80 களின் பிற்பகுதியிலும் 90 களின் ஆரம்பப்பகுதியிலும் சித்தியும் கணவரும் பதவிய, மண‌லாறு (வலிஓய), அத்தாவட்டுனுவெவ, சம்பத்நுவர ஆகிய சிங்களக் குடியேற்றங்களில் மகாவலி அபிவிருத்தித் திட்டத்தின் கீழ் வேலை செய்து வந்தார்கள். அவர்களுக்கு ஒரு மகனும் பிறந்தான். சித்தியின் கணவர் தனது மகனை சிங்கள பெளத்தனாக வளர்ப்பதில் மிகுந்த கவனம் செலுத்தினார். எக்காரணம் கொண்டு அவன் தனது தாய்வீட்டாருடன் நெருங்கிப் பழகுவதை அவர் விரும்பவில்லை. மேலும், இனப்பிரச்சினை தொடர்பான சிங்களவர்களின் நிலைப்பாட்டினை அவனுக்குப் புரியவைப்பதிலும் அவர் வெற்றி கண்டிருந்தார். இதில் சித்தியின் சொல்லிற்கு எந்தப் பெறுமதியும் இருக்கவில்லை. அவர்களின் குடும்பம் தொடர்ச்சியாக சிங்களப் பகுதிகளிலேயே வாழ்ந்துவந்ததனால், சித்தியும் நாளடைவில் தன்னை ஒரு சிங்களப் பெண்ணாகவே அடையாளப்படுத்திக்கொண்டார். குடியேற்றக்கிராமங்களில் வாழ்ந்துவந்ததனால் இராணுவத்தினருடனான பழக்கமும், அப்பகுதிகள் மீதான புலிகளின் தாக்குதல்கள் தொடர்பான அனுபவமும் அவர்களுக்கு இருந்தது. நாம் 90 களின் ஆரம்பத்தில் கொழும்பிற்கு வந்ததையடுத்து சித்தியும் கொழும்பு மகாவலி அபிவிருத்திச் சபை அலுவலகத்திற்கு மாற்றலாகி வர சித்தியின் கணவரோ கஹட்டகஸ்டிகிலிய எனும் அநுராதபுரக் கிராமங்களில் ஒன்றில் கிராம சேவகராக பணியாற்றி வரலானார். சித்தியுடன் அவரது மகனும் கொழும்பில் எங்களுடன் தங்கிப் படித்துவந்தான். விடுமுறைகளுக்கு அநுராதபுரம் சென்று வரும்வேளை எனக்கும் சித்தியின் மகனுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்படும். எல்லையோரக் கிராமங்களில் நடக்கும் மோதல்களில் புலிகளைக் கொன்றுவிட்டோம், ஆயுதங்களைக் கைப்பற்றிவிட்டோம் என்று அரசதரப்புச் செய்திகளை அப்படியே உண்மையென்று நம்பி என்னுடன் வந்து வாதாடுவான். வயதில் சிறியவனான அவனிடம் நான் தேவையற்ற விதமாக அரசியல் பேசுவதாக சித்தி என்னைக் கடிந்துகொள்வதுண்டு. "நீங்கள் அவனுக்கு உண்மையைச் சொல்லி வளர்த்திருந்தால் அவன் இப்படிப் பேசமாட்டான்" என்று நான் கூறுவேன். ஆனால், அவரால் அதனைச் செய்யமுடியாது என்பது எனக்குத் தெரியும். ஆனால், காலப்போக்கில் சித்தியின் கணவரின் அதிதீவிர சிங்கள பெளத்த இனவாதம் மெளனித்துப் போனது, குறைந்தது அப்படிக் காட்டிக்கொண்டார். எனது தாயாரின் சகோதரர்கள் அவரது குடும்பத்திற்குப் பெருமளவு பண உதவிகளைச் செய்திருந்தனர். அதுமட்டுமல்லாமல் அவரது மருத்துவச் செலவுகளுக்கும் அவர்களே உதவிசெய்துவந்தனர். ஆகவே, தனது கடும்போக்கு அரசியலை எம்முடன் பேசுவதைத் தவிர்க்கத் தொடங்கினார். ஆனால் மகனோ அவரைவிடவும் மிகத்தீவிரமான சிங்களத் தேசியவாதியாக மாறிப்போனான். எனது தாயாரின் சகோதரர்கள் வெளிநாட்டிலிருந்து அவர்களைப் பார்க்கச் செல்லும் சந்தர்ப்பங்களில் மனம் புண்படும் விதமாக அரசியல் பேசியிருக்கிறான். சில முறை அவன் அப்படிப் பேசுவதை அவனது தந்தையே தடுத்து, "யாருடன் பேசுகிறாய் என்பதை மனதில் வைத்துக்கொள்" என்று கூறிய சந்தர்ப்பங்களும் இருந்திருக்கின்றன. அவர்களே இப்போது கம்பகவில் வசித்து வருகிறார்கள். சிட்னியிலிருந்து கிளம்பும்போது சித்தியின் கணவருக்குச் சுகமில்லை என்று கேள்விப்பட்டேன். சரி, இவ்வளவு தூரம் வந்துவிட்டேன், அவரையும் ஒருமுறை பார்த்துவிட்டே வரலாம் என்று எண்ணி ஜெயரட்ணத்திடம் விடைபெற்றுக்கொண்டு கம்பகவை புகையிரதம் அடைந்தபோது இறங்கிக்கொண்டேன். புகையிரத நிலையத்திலிருந்து அரைமணிநேர பஸ் பயணம், பின்னர் ஓட்டோவில் பத்துநிமிடம் என்று பயணித்து சித்தியின் வீட்டை அடைந்தேன். 2018 இல் பார்த்ததுபோல சித்தி இருந்தார். ஆனால் கணவரோ சற்றுச் சுகயீனமுற்று இருப்பது தெரிந்தது. சில வருடங்களுக்கு முன்னர் வீட்டில் ஏற்பட்ட விபத்தொன்றினால் நடக்க அவஸ்த்தைப்பட்டுக்கொண்டிருந்தார். என்னைக் கண்டதும் வரவேற்றார். ஊர்ப்புதினங்கள், தொழில், வாழ்க்கை என்று சில விடயங்கள் குறித்துப் பேசினோம். அரசியல் கடுகளவேனும் வெளியில் வரவில்லை. அதை அவரே தவிர்ப்பதுபோலத் தோன்றியது எனக்கு. மகன் திருமணம் முடித்து வேறு இடத்தில் வசித்துவருகிறான் என்று தெரிந்தது. தம்மை அடிக்கடி வந்து பார்ப்பதையே மகன் தவிர்க்கிறான் என்கிற கவலை அவர்கள் இருவரிடத்திலும் இருக்கிறது. விடைபெற்று வரும்போது என்னைக் கட்டியணைத்து வழியனுப்பினார் சித்தியின் கணவர். சிலவேளை தனது மகனை நினைத்து அவர் ஏங்கியிருக்கலாம். தனிப்பட்ட ரீதியில் அவருடன் எனக்கு மனக்கஸ்ட்டம் ஏதுமில்லை. நான் எதிர்ப்பது அவரது தீவிர சிங்கள பெளத்த மனநிலையினைத்தான். 40 வருட திருமணவாழ்வில் சிங்களவரான அவருக்கு தமிழர் தரப்பு நியாயத்தை சித்தியினால் எடுத்துக்கூறமுடியாமைக்காக அவர்மீது சற்று ஏமாற்றும் இற்றைவரை இருந்தே வருகிறது.
  3. மனித உரிமைகள்,நீதி,நியாயம்,நேர்மை,யதார்த்தம் எதுவுமே இல்லாமல் உனக்கொரு நீதி எனக்கொரு நீதி எனும் உலகில் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம். கொடுமை என்னவென்றால் இங்கும் அதே கொள்கை.
  4. மாயையை கிழித்திருக்கிறது சர்வதேச நீதிமன்றம்; மக்கள் புரிந்துகொள்ள வேண்டும் - அமைச்சர் டக்ளஸ் 28 JAN, 2024 | 09:58 PM தமிழ் அரசியல் தரப்புக்களினால் தமிழ் மக்கள் மத்தியில் ஏற்படுத்தப்படும் சர்வதேச நீதிமன்றம் தொடர்பான எதிர்பார்ப்புக்கள் அர்த்தமற்றவை என்பது வெளிப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, மக்கள் அர்த்தமற்ற மாயைகளை தொடர்ந்தும் நம்பிக்கொண்டிருக்காமல் தீர்வுகளை அடைவதற்கான நடைமுறைச் சாத்தியமான முயற்சிகளை வலுப்படுத்த வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டுள்ளார். காஸா மீது இஸ்ரேல் முன்னெடுத்து வருகின்ற தாக்குதல் தொடர்பாக தென்னாபிரிக்காவினால் சர்வதேச குற்றவியல் நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கிற்கு தீர்ப்பு தொடர்பாக கருத்து தெரிவித்த போதே ஈ.பி.டி.பி. கட்சியின் செயலாளர் நாயகம் அமைச்சர் டக்ளஸ் மேற்கண்டாவாறு தெரிவித்தார். இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், கடந்த 14 வருடங்களுக்கு மேலாக சர்வதேச நீதிமன்றத்தின் ஊடகா தமிழ் மக்களுக்கு நீதி பெற்றுத் தரப்படும் என்ற கோஷங்களை சில தமிழ் தரப்புக்கள்; மக்கள் மத்தியில் விதைத்து வருகின்றன. குறிப்பாக இறுதி யுத்தத்தின்போது இடம்பெற்ற உயிரிப்புக்களுக்கான நீதி மற்றும் காணாமல் போனோருக்கான பரிகாரம் போன்றவற்றை சர்வதேச நீதிமன்றத்தின் மூலமே பெற்றக்கொள்ள முடியும் எனவும் உள்நாட்டு பொறிமுறையில் நம்பிக்கை கொள்ள முடியாது எனவும் சொல்லுகின்ற தமிழ் அரசியல் தரப்புக்கள், தமிழ் மக்கள் மத்தியில் சர்வதேச நீதிமன்றம் தொடர்பான மாயையை ஏற்படுத்தி இருக்கின்றனர். தற்போது, இஸ்ரேல் விவகாரத்தில் தென்னாபிரிக்காவினால் சர்வதேச நீதிமன்றில் தொடரப்பட்ட வழக்கிற்கு வழங்கப்பட்டுள்ள தீர்ப்பானது, சர்வதேச நீதிமன்றின் சிந்தனை மற்றும் பார்வை எத்தகையது என்பதை வெளிப்படுத்தியிருக்கின்றது. ஆயிரக்கணக்கான மக்களை தினமும் அழித்துக் கொண்டிருக்கிற தாக்குதல்களை நிறுத்துமாறு உலகின் அதியுச்ச நீதிமன்றக் கட்டமைப்பான சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் உத்தரவிடவில்லை. இனப்படுகொலை மற்றும் யுத்த குற்றம் தொடர்பான சர்வதேச நியமங்களை மதித்து நடக்குமாறு சொல்லியிருக்கிறது. காஸாவில் குறுகிய பிரதேசத்தில் பல லட்சம் அப்பாவி மக்கள் செறிந்து வாழ்கிறார்கள் என்பதோ, தாக்குதல் தொடர்ந்தால் அப்பாவி மக்களின் அழிவுகள் தவிர்க்க முடியாதவை என்பதோ சர்வதேச நீதிமன்றிற்கு தெரியாத சமாச்சாரங்கள் இல்லை. அப்படியிருந்தும் தாக்குதலை நிறுத்துமாறு தீர்ப்பில் சொல்லப்படவில்லை. இவ்வாறான சம்பங்கள் ஊடாக, சர்வதேச கட்டமைப்புக்களின் மனோநிலையையும் அவற்றின் நிகழ்ச்சி நிரல்கள் எத்தகையவை என்பதையும் எமது மக்கள் புரிந்துகொள்ள வேண்டும் என்று தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/175018
  5. பிரி(யா)விடை 9 ஜூலை 1995 காலமை ஆசுபத்திரீ; காலமை கணேசரட்ணம் சேர் ward round இல படிப்பிக்கேக்க patient ஐ விபரங்கள் சரியாக் கேட்டு வைக்கேல்லை எண்டு senior group இல எல்லாரையும் wardக்கு வெளீல கலைச்சு விட்டிட்டார். ஆர்டை நோயாளி எண்டு சேர் கேக்கேக்க ஒற்றுமையா காட்டிக் குடுக்காம விட்டிட்டு பிறகு “எல்லாம் அரவிந்தனால” எண்டு பெட்டைகள் விரலை நீட்ட, நான் canteen இல சாப்பிட்டிட்டு வாறன் எண்டு அரோ போனான். படிப்பை மட்டுமே மூச்சாயும் மூலதனமாயும் நினைச்சு வந்திருந்த எல்லாப் பொம்பிளைப் பிள்ளைகளும் சில பெடியளும் “சேர் இனிமே இப்பிடி நடக்காது” எண்டு சொல்லிக் காலில விழ, “சரி , இண்டைக்கு இரவும் நிண்டு எல்லாரும் full history யும் கேட்டு வையுங்கோ” எண்டு கணேசர் சொல்ல, “ஓம் சேர்” எண்டு சொன்னது நல்லூர் முருகனுக்கே கேட்டிச்சுது. பின்னேரம் போல “அடேய் இண்டைக்கு கணேசர் medicos nite க்கு chief guest ஆப் போறாராம் நாங்கள் பின்னேரம் வரத்தேவேல்லை” எண்டு சிலர் வெளிக்கிட “சேர் சொன்னாக் கட்டாயம் வருவார்” எண்டு பெட்டைகள் வெருட்ட வெளிக்கிட்ட பெடியள் திருப்பி நிண்டிச்சினம். ஆர்வக்கோளாறுக்காரர் எல்லாம் அண்டைக்கு வயித்துநோ , கட்டி வெண்டு வந்த ஆளை வைச்சு கட்டி கரைஞ்சு போற அளவுக்கு அமத்திப் பாக்க சிலர் மட்டும் Nursing பழக வந்த பிள்ளைகளோட “சள்” அடிச்சுக்கொண்டு இருந்திச்சனம். புத்தகத்தைப் படிச்சு ஏறாத அறிவை தலைக்கு கீழ படுக்க வைச்சு ஏத்திக் கொண்டு சிலர் இருந்திச்சினம். பாவம் இந்த குறூப் அண்ணாமாரும் அக்காமாரும் மட்டும் இரவிரவா ஆஸ்பத்திரீல நிக்க மருத்துவபீடம் களைகட்டி இருந்திச்சுது. பின்னேரம் medical faculty; Ragging நேரத்தில பாத்தோண்ணயே பிடிச்சதும் சரிவராம , “பழகப் பழகப் பிடிச்சிடும் எண்டு ஒண்டாப் படிச்சதும் சரிவராம கடைசி நாள் வரை முயற்சியைக் கைவிடாம தன்டை காதல் அம்புகளை இசை ரொக்கற்றில விட்டுக் கொண்டிருந்தார் ஒரு அண்ணா. மருத்துவ பீட farewell நிகழ்வில இது எப்பவுமே நடக்கிறது. இவர் விட்ட இசைத்தூதுக்கு இணை அனுசரணை வழங்கின பிரதாபன் organன்டை எந்தப்பக்கமும் எட்டா( வது ) சுரக்கட்டையை தேடித்தேடி வாசிக்க, எங்கடை பீலிங்குக்கு ஏத்த மாதிரி மழை மட்டும் பெய்யத் தொடங்கிச்சுது. முதலாவது வருசத்தில கம்பஸில நடக்கிற ஒவ்வொரு நிகழ்வுக்கும் புதுசா வாறாக்கள் தான் எடுபிடி , ஆனாலும் எங்களுக்கும் எல்லாத்திலேம் பங்கு கிடைக்கும் கட்டி முடிக்காத இப்பத்தைய Hoover Auditorium சுவருக்கு பாயைக் கட்டி வைச்சதால பேர் வந்த “பாய்க்கடை” . இந்தப் பாய்க்கடைப் பக்கம் காத்து வாங்கிறதுக்காக போன கூட்டம் நல்ல “கணகணப்போட” திருப்பி வந்திச்சுது. வந்த குறூப் சும்மா நிக்காமல் சுதியோட வந்து சோகப்பாட்டுக்கும் லயத்தோட ஆடத் தொடங்கிச்சுது. இந்த ஜோதீல பலர் சேர நல்ல பிள்ளைக்கு நடிச்சுக் கொண்டிருந்த சிலர் மட்டும் “வாங்கோ சேந்து குறூப்பா படம் எடுப்பம்” எண்டு சொல்லீட்டு இரகசியமா ரெண்டு பேரா போச்சினம் . படம் எடுக்கிறதை எட்டிப் பாப்பம் எண்டு போய்ப் பாத்தா இந்த ஊர்க்காரர் இந்தப் பள்ளிக்கூட காரர் எண்டு தேடிக் கூப்பிட்டும் தங்கடை சோடிகளோட இணைஞ்சும் படம் எடுத்துக்கொண்டு இருந்திச்சினம் கொஞ்சப் பேர். சோடிகளோட இணையாத பல பேர் இசையோட இணைஞ்சு இருத்திச்சினம். பெய்த மழையில கேட்ட பெரிய இடி உள்ளயா வெளியையா எண்டு தெரியாத அளவு உச்சம் தொட்டிருந்தது பிரியாவிடைப் party. மேடைக்குப் பக்கத்தில கொஞ்சப்பேர் “ குரங்குகள் போலே மரங்களின் மேலே“ எண்டு பாட்டை கும்பலா பாடமாக்கிக் கொண்டு இருந்திச்சினம், கடைசியாப் பாடிறதுக்கு. பிரியிற சோகம் பெரிசாக ஆடிற இடத்தை தாண்டி ஆக்கள் இருக்கிற இடத்தையும் ஆக்கிரமிக்கத் தொடங்கிச்சினம் . நாசூக்கா , நாகரீகமா “ நாங்கள் வெளிக்கிடிறம்“ எண்டு கொஞ்சக் காஞ்சிபுரம் கட்டினவையும், டை கட்டினவையும் வெளிக்கிடத் தொடங்கிச்சினம். உடுக்கேறியும் கலை வராத ஆக்களுக்கு கலவைப் பானம் குடுத்து ஆட வைக்க முயற்சிகள் தீவிரமா நடந்து கொண்டிருந்திச்சுது. இரவு ஆசுபத்திரி: வெளீல பெய்த மழையையும் இடிச்ச இடியையும் தாண்டி அங்க எங்களை விட்டிட்டு party போடிறவங்களைத் திட்டிக்கொண்டிருந்த studentsக்கு ஆசுபத்திரீல இருந்து “கணேசரட்ணம் சேருக்கு“ அம்புலன்ஸ் போகத் தான் ஆசுபத்திரி எல்லாம் தெரிய வந்திச்சுது ஒருக்கா மட்டும் கேட்ட இடி இறங்கினது நவாலி church க்க எண்டு. பள்ளிக்கூடக் காலத்தில ஆனந்தராஜா சேரை சுட்டிட்டாங்களாம் எண்டு கேட்ட உடன எப்பிடி கிரவுண்ட் வெறிச்சோடி ஆசுபத்திரி நிரம்பிச்சுதோ அப்பிடித்தான் இண்டைக்கும் நடந்திச்சுது மருத்துவபீடம் வெறிச்சோடி ஆஸ்பத்திரி நிரம்பிச்சுது. ஆசுபத்திரில இருக்கிற ஓரு அம்புலன்ஸை அனுப்பி என்ன செய்யிறது , எத்தினை வாகனம் தேவை எண்டு நிர்வாகம் யோசிக்க ஓட்டோ, மோட்டசைக்கிள் , land master எண்டு நிண்ட எல்லா வாகனத்திலேம் காயக்காரர் வந்திறங்கிச்சனம். வந்தவனுக்குப் பதிவு ஒண்டும் போடாமல் நேர வாட்டில விட்டிட்டு, பெரிய காயக்காரரை theatre க்கு கொண்டு போகத் தொடங்கிச்சினம். ஒப்பிரேசன் தியட்டருக்க போய்ப் பாத்தா ஒரு trolley இல ரெண்டு மூண்டு பேராக் கிடத்தி இருச்சினம். Theatre வாசலிலியே ஒப்பிரேசனுக்கு எடுக்க முதலே ஒவ்வொரு உயிராப் பிரியத் தொடங்கிச்சுது. வீம்பா அறிக்கை விட்டு நான் டொக்டரா வாறது தான் நோக்கம் எண்டு பாலர் வகுப்பிலயே சொல்லிப் படிச்சு வந்த வெள்ளைக் கோட்டுக் கார senior அக்கா மார் இறந்ததுக்கெல்லாம் உயிர் கொடுக்க முயற்சிச்சு சரிவராதெண்டு அறிஞ்சு விக்கி விக்கி அழுது கொண்டு நிண்டிச்சினம். கடைசியா OPD யில வந்திறங்கின tractor ஆல இறங்கக்கூடிய ஆக்கள் இறங்கி வர, இறங்க ஏலாததுகளை தூக்குவம் எண்டு போய் கையைப்பிடிச்சுத் தூக்கினவனுக்கு கைமட்டும் , காலைப் பிடிச்சவனுக்கு கால் மட்டும் கிடைச்சுது . முழுசா ஒண்டு கூட இருக்கேல்லை . எல்லாத் துண்டையும் இறக்கீட்டு அண்டிரவு முழுக்க கையெது காலெது எண்டு பாத்த jig saw puzzle மாதிரி பொருத்தீட்டு அடையாளம் கண்டு பிடிச்சாக்களை அப்பிடியே கட்டிக் குடுத்து விட்டிச்சினம் death certificate கூட இல்லாமல். அடுத்தநாள் விடியாத பொழுதில் செத்தவை ஆரார் எண்டு பேப்பர்காரான் தான் கண்டுபிடிச்சுப் போட்டிருந்தான். பொறுக்காத பொருந்தாத துண்டுகளின் கணக்கு எத்தினை எண்டு இப்பவரை தெரியாது. இந்த சோகத்தை ஊர் அழுது முடியமுதல் அடுத்தடுத்த ஊரிலேம் இடம் பெயர்வு வர எட்டுச் செலவு எட்டாமலும் , அந்திரட்டி அந்தரிச்சும் போனது . இடம்பெயர்வு 30/101995 “ பல்கலைக் கழகம் அகதி முகாமானது” எண்ட தலைப்போட ஒரு நாள் உதயன் வர அதோட சனம் ஒதுங்கின இடம் எல்லாம் அகதி முகாமாக மாற, அண்டின சனத்துக்கு அண்டைக்கு சமைச்சதை பிரிச்சுக் குடுத்துச் சாப்பிட்டிட்டு அடுத்த வேளை கூட சமைக்கலாமா இல்லையா எண்டு சனம் யோசிச்சுக் கொண்டு இருந்திச்சுது. ஸ்பீக்கர் வைச்சு ரோடு ரோடாப் போய் வெளிக்கிடச் சொன்னதை கேக்காம ரெண்டு நாள் பொறுத்துப் பாப்பம் எண்ட சனம் , துவக்குச்சூட்டுக்கும் அசையாத சனம், குண்டு விழுந்தாலும் வரமாட்டேன் எண்ட சனம் எல்லாம் கடைசீல வீம்பைக் கைவிட, உலக வரலாற்றில் முதன் முதலாக ஒரு இனமே மரதன் ஓடியது. உயிரற்றதை எல்லாம் அப்பிடியே விட்டிட்டு, மனமில்லாமல் அடை வைச்ச முட்டையைக் கூட அரை உயிரோட கொண்டு போச்சுது. படிப்புமில்லை இனி ஓடிப் பயனுமில்லை எண்ட சிலர் மட்டும் திருப்பி அடிப்பம் எண்டு அண்ணை வழி போக வழமை போல மற்றவர் எல்லாம் மந்தைகளாய் பிரிந்தனர். நான் தான் முன்னுக்கு ஓடிறன் எண்டு வந்தவனெல்லாம் நிண்ட இடத்திலேயே ஓடிக் கொண்டிருந்தான் . யாழ்ப்பாணத்தில இருந்த நாவக்குளிப் பாலத்துக்கால சனம் எல்லாம் தென்மராட்சிக்கு, பிரசவிச்சு வெளீல வரக் கஸ்டப்படிற பிள்ளை மாதிரி முக்கி ,மூச்சு முட்டி, இஞ்சி இஞ்சியாய் அசைஞ்சு கொஞ்சம் கொஞ்சமாய் வந்துது. “அறுந்து போவாங்கள் இப்பிடி செய்யிறதுக்கு ஒரேடியா குண்டைப் போட்டு எல்லாரையும் சாக்காட்டி விடலாம்” எண்டு ஒரு கிழவி சொன்னது ஆருக்கு கேட்டிச்சோ தெரியேல்லை அவனடிச்ச செல் நீர்வேலி தரவை வரைக்கும் வந்து விழ குடும்பமா, குறூப் குறூப்பா ஓடத் தொடங்கினவை எல்லாம் , கூட்டத்தில தாங்கள் எங்க நிக்கிறம் எண்டும் தெரியாம தங்களைச் சுத்தி ஆர் நிக்கினம் எண்டும் தெரியாம தேடிறதையும் கை விட்டிட்டு தனித்துப் போக , வாழக்கைச் சங்கிலிகள் கனக்க அறுந்து போய் தனி வளையங்களாகியது. விடை பெறாமலே பிரிஞ்ச கம்பஸ் பிரியாவிடையும் , சொல்ல முடியாமலே போன இடம் பெயர்வுகளும் கன பேரை பிறகு சேர்க்கவே முடியாத பிரிவிடையாப் போனது தான் சோகம். ஒண்டு மட்டும் உண்மை இடம் பெயர முதல் இருந்த யாழப்பாணம் இப்ப வரை இல்லை, இனிமேலும்…… Dr. T. கோபிசங்கர் யாழ்ப்பாணம்
  6. மன்னிப்புக் கேட்பவர்கள்-மிலன் குந்தேரா (Milan kundera) ஜூன் மாத காலையில், கிழக்கில் கிளம்பிய சூரியனைப் போல, மெதுவாக பாரீஸ் வீதியில் சென்று கொண்டிருந்தான் அலயன். எதிர்ப்பட்ட அனைத்து இளம் பெண்களும் குட்டையாக அணியப்பட்ட மேல் சட்டைக்கும், இறக்கமாக அணியப்பட்ட கால் சட்டைக்கும் இடையில் மையமாக, விகாசமாகத் தொப்புள் தெரியுமாறு உடுத்தி இருந்ததைக் கவனித்தவாறே நடந்தான். அவனைப் பொறுத்த வரை, பெண்கள் மீதான கவர்ச்சியின் மையல் தொடை, மார்பு, பின்புறங்களிலிருந்து ஏகமாக விலகி, இந்த வட்ட வடிவ மையப் புள்ளியில் தேங்கி விட்டதைப் போல, அந்த காட்சிகளால் ஈர்க்கப்பட்டு, வசீகரிக்கப்பட்டு, சலனத்திற்கு உள்ளாகி இருந்தான். தொப்புளின் மீதான இந்த திடீர் மையல், பெண்மையின் கவர்ச்சி சார்ந்து புதிய கேள்விகளையும் சிந்தனைகளையும் அவனுக்குத் தூண்டியது. விளைவாக, தொடையைக் கவர்ச்சியின் பிரதான மையமாகக் கருதுபவனின் (கருதும் தலைமுறையின்), காமம் சார்ந்த ரசனையையும், தனித்த பார்வையையும் எவ்வாறு புரிந்து கொள்வது என்ற கேள்வி எழுகிறது. களிப்பையும் நிறைவையும் நோக்கிய பயணத்தில், நீளும் ஒவ்வொரு கணத்திலும் இன்பத்தைப் பொதித்து வைத்திருக்கும் நீண்ட சாலையுடன் நீளும் கால்களை ஒப்பீடு செய்கிறான். அதன் முடிவாக, கூடலின் போது, அனுபவித்து உணர்ந்திடாத மாய ஜாலங்களை நிகழ்த்தக் கூடிய ஆற்றலைப் பெண்களுக்கு அளிக்கக் கூடியது அத்தகைய கால்கள் என்று கற்பிதம் செய்து கொள்கிறான். இதைத் தொடர்ந்து அதே கேள்வி பெண்களின் பின்புறங்களில் மையல் கொண்டவர்களை நோக்கி எழுகிறது. அதை இரட்டை இலக்குகளை ஒன்று சேர அடையக்கூடிய விரைவான பாதையுடன் ஒப்பீடு செய்கிறான். அதன் தொடர்ச்சியாக, அதை அதீத உற்சாகமும், முரட்டுத்தனத்தையும் வெளிப்படுத்தும் ரசனைத் தேர்வு என்ற புரிதலுக்கு வருகிறான். அடுத்ததாக மார்பகங்களின் மீதான ஈர்ப்பை நோக்கி அந்த கேள்வி இடம் பெயர்கிறது. அந்த ரசனை வெளிப்பாட்டை, மேரியிடம் பால் குடிக்கும் குழந்தை இயேசுவுடன் ஒப்பிட்டு, பெண் படைப்பின் புனித நோக்கங்களின் முன் ஆண்கள் மண்டியிட்டு ஆராதிப்பதாக முடிவுக்கு வருகிறான். ஆயினும், உடலின் மையப் புள்ளியான, குழிவான தொப்புளின் கவர்ச்சியில் மையல் கொள்ளும் ரசனையை எவ்வாறு வரையறுப்பது? மெதுவாக வீதிகளில் உலவியபடி தொப்புளைப் பற்றிச் சிந்திப்பது அவன் வழக்கமாக இருந்தது. மீண்டும் மீண்டும் அதைப் பற்றிச் சிந்திப்பது எந்த விதத்திலும் அவனுக்குச் சலிப்பைத் தரவில்லை. அந்த சிந்தனை அவனது தாயுடனான கடைசி சந்திப்பைப் பற்றிய நினைவுகளை அடிமனதிலிருந்து மீட்பதாலேயே, பிடிவாதமாகத் தொப்புளைப் பற்றிச் சிந்தித்தான். அவனுக்குப் பத்து வயது இருக்கும். அலயன் விடுமுறையைக் கழிக்க நீச்சல்குளமும் தோட்டமும் கொண்ட வாடகை சொகுசு விடுதியில், தந்தையுடன் தங்கி இருந்தான். பல ஆண்டுகளுக்குப் பிறகு, அவள் இப்பொழுது தான் முதன்முறையாக அவர்களைச் சந்திக்க வருகிறாள். பூட்டிய அந்த சொகுசு விடுதி கதவுகளுக்குப் பின்னால் அவளும் அவள் முன்னாள் கணவரும் மட்டும். பல மைல் தொலைவிலும் அந்த சூழலின் உஷ்ணம் உணரப்பட்டது போல் இருந்தது. எவ்வளவு நேரம் அங்கு இருந்தாள்? அதிகபட்சம் ஒன்றிரண்டு மணி நேரம் இருக்கலாம். அந்த சமயத்தில் அலயன் நீச்சலில் பொழுதுபோக்கிக் கொண்டிருந்தான். அங்கிருந்து கிளம்பத் தயாரான அவள், அவன் நீச்சல்குளத்திலிருந்து மேலேறி வந்ததைக் கவனித்து விட்டு, அவனிடம் விடை பெறுவதற்காக நின்றாள். தனியாக இருந்த அவளிடம் அலயன் என்ன பேசினான்? அவள் என்ன பேசினாள்? எதுவும் அவனுக்கு நினைவில் இல்லை. அவனுக்கு நினைவில் இருப்பது அந்த தோட்டத்து இருக்கையில் அவள் அமர்ந்திருந்ததும், நீர் வடியும் நீச்சலுடையில் அவளைப் பார்த்தவாறு அவன் நின்றிருந்ததும் மட்டுமே. அவளுடனான சம்பாஷனைகள் அவன் நினைவுகளைத் தப்பி இருந்தாலும், ஒரு கணம் மட்டும் காலத்திற்குமாக அவன் நினைவுகளில் உறைந்து விட்டிருந்தது. அது அந்த இருக்கையிலிருந்தவாறு அவன் தொப்புளை ஊடுருவிப் பார்த்த அவள் பார்வை. இன்னமும் அந்த பார்வையின் வீச்சை அவனால் உணர முடிகிறது. அவனைப் பொறுத்தவரை அது அன்பும் அவமதிப்பும் கலந்த விவரிக்க முடியாத ஒரு பார்வை. அதே உணர்வு அவள் புன்னகையின் உதட்டு சுழிப்பிலும் பிரதிபலித்தது. அந்த இருக்கையிலிருந்தவாறே, முன் சாய்ந்து, தன் ஆள்காட்டி விரலால் அவன் தொப்புளைத் தொட்டாள். உடனடியாக எழுந்து, அவனை முத்தமிட்டு விட்டு, அந்த முத்தத்தை அவன் சந்தேகத்துக்கிடமின்றி முத்தம் என உணரும் முன், அந்த இடத்தை விட்டுச் சென்று விட்டாள். அதன் பிறகு அவளை அவன் சந்திக்கவே இல்லை. ஒரு பெண் காரிலிருந்து இறங்குகிறாள் ஆற்றை ஒட்டிய சாலையில் ஒரு கார் பயணிக்கிறது. புறநகருக்கும் கிராமப்புறத்திற்கும் இடைப்பட்ட, குடியிருப்புகளும் ஜன சந்தடியும் குறைவாக இருந்த, அந்த நிலப்பரப்பின் மந்தமான சூழலை, மேலும் பரிதாபத்திற்குரியதாக உணரச் செய்தது அந்த காலையின் குளிர்காற்று. அப்பொழுது அந்த கார் சாலை ஓரத்தில் நிற்கிறது. அழகிய இளம்பெண் ஒருத்தி அந்த காரில் இருந்து இறங்குகிறாள். பூட்டப்பட்டு விடாதவாறு அந்த கார் கதவை, அவள் அலட்சியமாகச் சாத்தியது வினோதமாக இருக்கிறது. அந்த அலட்சியத்தின் பொருள் என்ன? இந்நாட்களில் திருட்டு பயம் குறைந்துவிட்டதா? அந்த பெண்ணின் கவனச்சிதறலா? கவனச்சிதறலாக இருக்க முடியாது என்பதை அந்த பெண்ணின் முகத்தில் பரவி இருந்த தீர்க்க ரேகைகள் உணர்த்தியது. தனக்கு என்ன தேவை என்பதில் தீர்க்கமாக இருந்தாள். பரிபூரணமான நெஞ்சுரம் மிக்கவள் இவள். சாலையை ஒட்டி சில நூறு அடிகள் நடந்து, பிறகு ஆற்றுப் பாலத்தை நோக்கி நடந்தாள். அந்த பாலம் சற்றே உயரமாகவும், குறுகலாகவும், வாகனப் போக்குவரத்தில் இருந்து விலக்கப்பட்டதாகவும் இருந்தது. அவள் அந்த பாலத்தில் ஏறி மறுகரையை நோக்கி சுற்றிலும் நோட்டம் விட்டவாறு நடக்கிறாள். அந்த பார்வை யாரையும் எதிர்பார்ப்பதாக இல்லாமல், யாரும் தன்னை எதிர்பார்த்து விடக் கூடாது என்பதை உறுதிப்படுத்திக் கொள்வதாக இருந்தது. நடுப் பாலத்தை எட்டியவுடன் நிற்கிறாள். முதலில் தயக்கத்தால் நின்றதைப் போலத் தோன்றினாலும், தயக்கத்தின் காரணமாகவோ, திடீரென எடுத்த முடிவின் காரணமாகவோ அவள் நிற்கவில்லை; மாறாகக் கவனத்தைக் கூர்மையாக்குவதற்காகவும், தன் நெஞ்சுரத்தைத் திடப்படுத்துவதற்காகவும் நின்றாள். நெஞ்சுரம் எனில்? சரியாகச் சொல்வதென்றால் விரக்தி. தயக்கத்தைப் போல் தோன்றிய அந்த இடைவெளி, அவளது உணர்வுகளுடனான முறையிடல்- தன் விரக்தி தன்னை கைவிட்டு விடாமல், தன் முடிவிற்குத் துணையாகவும் ஆதரவாகவும் இருப்பதற்காக அவள் வேண்டுகிறாள். பாலத்தின் கைப்படியில் கால் வைத்து, காற்று வெளிக்குள் பாய்கிறாள். பாய்ச்சலின் முடிவில், உறைந்த ஆற்றின் மேற்பரப்பில் மோதி, குளிரால் செயலிழந்து போகிறாள். சில வினாடிக்குப் பிறகு, அவள் நீருக்கு மேல் தலை காட்டுகிறாள். அவளது உள்ளார்ந்த நீச்சல் திறன்கள், சாக விரும்பும் அவள் முடிவிற்கு விரோதமாக, அனிச்சையாக வெளிப்பட்டு விட்டது. தன்னை மூர்ச்சையடையச் செய்ய, மீண்டும் நீருக்குள் மூழ்கி, காற்றுடன் நீரையும் வலிந்து நுரையீரலுக்குள் திணிக்க முயலுகிறாள். எதிர்பாராத விதமாக மறுகரையிலிருந்து ஒரு அபயக்குரல். யாரோ ஒருவர் பார்த்து விட்டார். திடீரென மரணம் தன்னை விட்டு விலகுவதை உணர்கிறாள். தன் கட்டுப்பாட்டை மீறிய நீச்சல் திறன்களை விட, தன் கவனத்திலிருந்து தப்பிய ஒருவனே மிகப் பெரும் இடையூறாக இருப்பான் என்பது புரிகிறது. தன் சாவை மீட்டெடுக்க அவள் கடுமையாகப் போராட வேண்டி இருக்கும். அவள் கொல்கிறாள் அவள் குரல் வந்த திசையைப் பார்க்கிறாள். யாரோ ஒருவர் ஆற்றினுள் பாய்ந்தார். யாருடைய முயற்சி வெற்றி பெறக்கூடும் என ஆலோசிக்கிறாள்- தண்ணீரை உள்ளிழுத்து, மூழ்கிச் சாகும் தன் முயற்சியா? தன்னை காப்பாற்ற விரைந்து வருபவரின் முயற்சியா? நுரையீரலில் நீர் புகுந்து, பலகீனமான நிலையில் மூழ்கிக் கொண்டிருக்கும் போது, அவளைக் காப்பாற்ற முனைபவரின் நோக்கத்திற்கு அவள் எளிதான இலக்காகி விடக்கூடுமல்லவா? அவன் அவளைக் கரைக்கு இழுத்துச் சென்று, படுக்க வைத்து, கையால் அழுத்தியும், வாயால் உறிஞ்சியும் நீரை வெளியில் எடுத்து, மீட்புக்குழுவையும், காவலர்களையும் அழைத்து, அவளைக் காப்பாற்றக்கூடும். இதனால் வாழ்க்கை முழுதும் கூடுதலாக அவள் அவமானப்பட நேரிடும். “நில்! நில்!” அவன் கத்துகிறான். அனைத்தும் மாறிவிட்டது. அவள் நீருள் மூழ்குவதற்குப் பதிலாக, நீருக்கு மேல் எழும்பி, ஆழமாக மூச்சை இழுத்து தன் பலத்தைத் திரட்டிக் கொள்கிறாள். இதற்கிடையில் அவன் அவளை நெருங்கி விட்டான். இந்த முயற்சியின் மூலம் நாளிதழ்களில் இடம்பிடித்து, புகழ்பெற விரும்பும் பதின்ம வயது இளைஞன் அவன். “நில்! நில்!” எனத் தொடர்ந்து கூறியவாறு, அவளை நோக்கி தன் கைகளை நீட்டுகிறான். அவன் பிடியிலிருந்து விலகுவதற்குப் பதிலாக, அவள் அந்த கைகளை இறுகப் பிடித்து, ஆற்றின் ஆழமான பகுதியை நோக்கி அவனை இழுக்கிறாள். வேறெந்த வார்த்தையையும் பேசி அறிந்திடாதவனைப் போல, “நில்!” என மீண்டும் இரைகிறான். அதுவே அவன் பேசிய கடைசி சொல். அவன் கைகளைப் பிடித்துக் கொண்டு, அவன் தலை நீருக்குள் மூழ்கும் விதமாக தன் உடலை அவன் உடலோடு பின்புறமாகப் பொருத்திக் கொண்டு, அவனை ஆற்றின் அடிப்பகுதியை நோக்கி இழுக்கிறாள். தண்ணீரை உள்ளிழுத்து விட்ட அவன், கைகளை வீசுகிறான், விளாசுகிறான்; அந்த பெண்ணை வீழ்த்த போராடுகிறான். ஆனால் அவன் நீருக்கு வெளியில் தலையைத் தூக்கி மூச்சை இழுத்து விட முடியாதபடி அவள் அவன் மீது அழுத்தமாகப் பரவி இருக்கிறாள். சில நீண்ட, மிக மிக நீண்ட விநாடிகளுக்குப் பிறகு, அவன் அசைவுகளை இழந்து விட்டான். சோர்ந்து, நடுங்கி, ஓய்வெடுப்பதைப் போல, அந்த நிலையிலேயே அவன் மீது சிறிது நேரம் இருந்தாள். தன் பிடியில் இருக்கும் உடலில் எந்த அசைவுகளும் மீதம் இல்லை எனச் சமாதானம் அடைந்த பிறகே அந்த உடலை விட்டு விலகினாள். நடந்து முடிந்த நிகழ்வுகளின் நிழல் கூட தன்னுடன் வராதவாறு, அங்கிருந்து திரும்பித் தான் வந்த கரையை நோக்கி நகர்ந்தாள். என்ன நடக்கிறது இங்கே? தன் முடிவை மறந்துவிட்டாளா அவள்? அவள் ஏன் தன்னை நீரில் மூழ்கடிக்கவில்லை? அவள் சாவை அவளிடமிருந்து பறிக்க வந்தவன் உயிருடன் இல்லை என்பதாலா? தன்னை தடுக்க யாருமில்லாத போது, அவள் ஏன் சாவை தேடிப் போகவில்லை? எதிர்பாராத விதமாக மீட்கப்பட்ட வாழ்க்கை, அவளது தீர்மானங்களை நொறுக்கி விட்டது. தற்கொலை முயற்சியில் கவனம் செலுத்துவதற்கான மனபலத்தை அவள் இழந்து விட்டாள். திடீரென தன்னிடமிருந்த நெஞ்சுரத்தையும், பலத்தையும் இழந்து விட்டதால், அவள் நடுங்குகிறாள். அனிச்சையாக அவள் காரை விட்டு வந்த இடத்தை நோக்கி நீந்துகிறாள். அவள் வீடு திரும்புகிறாள் கொஞ்சம் கொஞ்சமாக தனக்குக் கீழிருக்கும் ஆற்றின் ஆழம் குறைந்ததை உணர்ந்தவள், தரையைத் தொட்டு நிற்கிறாள். அப்பொழுது சேற்றில் புதைந்து தவறிய காலணிகளைத் தேடக் கூட தெம்பின்றி, கரையேறி, சாலையை நோக்கி நடக்கிறாள். இப்பொழுது இந்த உலகம் வரவேற்க்கத்தக்கதாக தோன்றவில்லை. மாறாக ஒரு பதற்றம் தொற்றிக் கொண்டது: கார் சாவி கையில் இல்லை. சாவி எங்கே? அவளது பாவாடையில் பைகளும் இல்லை. மரணத்தை மனதில் வரித்துக் கொண்டு செல்கையில், வழியில் எதைப் புறக்கணித்து விட்டுச் செல்கிறோம் என்பதைப் பற்றிக் கவலைப்படுவதில்லை. அவள் காரை விட்டுச் செல்லும் பொழுது, எதிர்காலம் என்ற ஒன்று இல்லை. அவள் மறைக்க எதுவும் இல்லை. ஆனால் இப்பொழுது அவள் அனைத்தையும் ஆதாரமில்லாமல் மறைக்க வேண்டும். அவள் பதற்றம் அதிகரித்துக் கொண்டே இருந்தது: சாவி எங்கே? வீட்டை எப்படி அடைவது? அவள் காரை அடைந்து கதவைத் திறக்க முயலுகையில், ஆச்சரியமூட்டும் விதமாகக் கதவு திறந்து கொண்டது. ஓட்டுநர் இருக்கை முன் அவளால் புறக்கணிக்கப்பட்ட சாவி அவளுக்காகக் காத்துக் கிடந்தது. இருக்கையில் அமர்ந்து, தன் வெறுங்கால்களை பெடலில் வைத்தாள். பதற்றத்தோடு குளிரும் சேர்ந்து அவள் நடுங்கிக் கொண்டிருந்த நிலையில், முற்றிலுமாக நனைந்துவிட்ட ஆடைகளிலிருந்து, அனைத்துப் புறமும் அழுக்கான ஆற்று நீர் காருக்குள் வடிந்தது. இந்நிலையில் அங்கிருந்து காரை கிளப்பினாள். ஒரு புறம் அவளுக்கு வாழ்வை மீட்டுத்தர முயன்றவன் நீரில் மூழ்கி இறந்து விட்ட நிலையில், மறுபுறம் அவள் கொல்ல நினைத்த சிசு இன்னும் அவள் வயிற்றில் உயிருடன் இருந்தது. தற்கொலை எண்ணத்தை மறு சிந்தனைக்கு இடமின்றி சாஸ்வதமாகக் கைவிட்டு விட்டாள். நடந்து முடிந்தவற்றை மறைக்க எதுவும் செய்யத் தயாராக இருந்தாள். அவள் நடுங்கிக் கொண்டிருந்த போதும், அவளது மனோதிடம் மீண்டும் உயிர் பெற்று விட்டது. இப்பொழுது அவள் சிந்தனை முழுவதும் அடுத்தகட்ட செயல்பாடுகள் பற்றியதாக இருந்தது: எவர் கண்ணிலும் படாமல் காரில் இருந்து செல்வது எப்படி? ஈரம் சொட்டும் ஆடையுடன் வரவேற்பாளர் கவனத்திலிருந்து தப்பி அறைக்குச் செல்வது எப்படி? அலையன் தோளின் மீது வலிமையான தாக்குதலை உணர்ந்தான். “முட்டாள், கவனமாக போ” என்றொரு குரல் கேட்டது. வேகமாகவும் ஆவேசமாகவும் தன்னைக் கடந்து செல்லும் இளம்பெண்ணை அலையன் திரும்பிப் பார்த்தான். மன்னிக்கவும்” என்ற அவனது பலவீனமான குரல் அவளை பின் தொடர்ந்தது. அவள் திரும்பாமலே பலமான குரலில் வசைச் சொற்களை உமிழ்ந்துவிட்டுக் கடந்து விட்டாள். மன்னிப்பு கோருபவர்கள் இரண்டு நாட்களுக்கு பிறகும் கூட தன் தனிப்பட்ட குடியிருப்பில் இருக்கும் சமயம் அலையன் தன் தோள்பட்டையில் அந்த வலியை உணர்ந்தான். அந்த பெண் தன்னை வேண்டுமென்றே இடித்திருக்க வேண்டும் என்ற முடிவுக்கு வருகிறான். அவள் தன்னை கடுமையான குரலில் “முட்டாள்” எனத் திட்டியது நினைவுக்கு வந்தது. அதைத் தொடர்ந்து “மன்னிக்கவும்” என்ற இவன் குரலும், அவளது வசைச் சொற்களும் கூட நினைவிற்கு வந்தது. மீண்டும் ஒருமுறை தவறேதும் செய்யாமல் மன்னிப்பு கேட்டிருந்தான். எதற்கெடுத்தாலும் அனிச்சையாகவே மன்னிப்பு கேட்டுவிடுகிற தன் முட்டாள்தனத்தை எண்ணிப் பார்த்தான். அந்த எண்ணங்கள் அவனை இம்சிக்கவே, யாருடனாவது பேச வேண்டும் எனத் தோன்றியது. தன் காதலி மெடலைன்னை அழைத்தான். அவள் பாரீஸில் இல்லை. அவள் கைப்பேசியும் தற்சமயம் அணைத்து வைக்கப்பட்டிருந்தது. அவன் சார்லஸ்ஸை அழைத்தான். மறுமுனையில் சார்லஸ்ஸின் குரலைக் கேட்டதும் மன்னிப்புக் கேட்டான். “என் மீது கோபப்படாமல் கேள். நான் மோசமான மனநிலையில் இருக்கிறேன். உன்னிடம் கொஞ்சம் பேச வேண்டும்”. “சரியான சமயத்தில் தான் அழைத்திருக்கிறாய். நானும் அதே மனநிலையில் தான் இருக்கிறேன். நீ எதனால் அப்படி இருக்கிறாய்?”. “அனைத்து சந்தர்ப்பங்களிலும் குற்றவுணர்வுடனே இருப்பது குறித்து நான் என் மீதே கோபமாக இருக்கிறேன்”. “ அதுவொன்றும் மோசமான விசயமில்லை”. “குற்றவுணர்வுடன் இருப்பதா, இல்லாமல் இருப்பதா என்பது தான் பிரச்சினை. அனைவருக்கும் அனைத்திற்கும் எதிரான போராட்டம் தான் வாழ்க்கையின் பொதுவான அம்சம். ஆனால் அந்த போராட்டம் ஒரு நாகரிகமான சமூகத்தில் எவ்வாறு நிகழ்கிறது? ஒருவர் மற்றொருவரை நேரடியாகத் தாக்குவதற்குப் பதிலாக, ஒரு குற்றம் செய்த அவமான உணர்வை மற்றவருக்கு ஏற்படுத்த முனைகிறார்கள். அந்த முயற்சியில், பிறருக்கு அந்த குற்றவுணர்வை ஏற்படுத்த இயலுகிறவர்கள் வெல்கிறார்கள். குற்றத்தை ஏற்றுக் கொள்பவர்கள் தோற்கிறார்கள். நீ ஒரு சாலையோரம் சிந்தனைவயப்பட்டு நடந்து செல்கிறாய். அப்பொழுது, தனக்கே அந்த சாலை சொந்தம் என்பது போலச் சுற்றும் முற்றும் கவனிக்காது நேரெதிரே வரும் பெண்ணுடன் மோத நேரிடுகிறது. அது தான் மனித இயல்பின் யதார்த்தம் வெளிப்படும் துல்லியமான தருணம்- யார் தன் அதட்டலால் மற்றொருவரை வீழ்த்தி சரணடைய வைக்கிறார் என்பது தான் அது. இது ஒரு வழமையான, யதார்த்தமான நிகழ்வு. அந்த விபத்தில் இருவருக்கும் சமபங்கு இருந்த போதிலும், சில சந்தர்ப்பங்களில் ஒருவர் முன்வந்து குற்றத்தை ஏற்று மன்னிப்பு கேட்கும் பொழுது, மற்றொருவர் தன்னை பாதிக்கப்பட்டவர் போல் பாவித்து குற்றம் சுமத்தத் துவங்கிவிடுகிறார். இந்த சந்தர்ப்பத்தில் நீ என்ன செய்வாய்- குற்றம் சுமத்துவாயா மன்னிப்புக் கேட்பாயா?” “நான் நிச்சயம் மன்னிப்புக் கேட்பேன்”. “அப்படியென்றால் நீயும் மன்னிப்புக் கேட்பவர்கள் குழுவைச் சேர்ந்தவன் தான். நீ உன் மன்னிப்பின் மூலம் அடுத்தவரைச் சமாதானம் செய்ய முயல்கிறாய்” “ஆமாம்” “அது தவறு. முதலில் முன்வந்து மன்னிப்புக் கேட்பதன் மூலம் நாம் நம் குற்றத்தை ஒப்புக் கொள்கிறோம். இதன் விளைவாக மற்றவர் நம் மீது பொதுவெளியில் குற்றம் சுமத்தவும் அவமானப்படுத்தவும் சந்தர்ப்பத்தையும் உரிமையையும் தருகிறோம்.” “அதுவும் சரிதான். ஒருவர் மன்னிப்புக் கேட்டாக வேண்டியதில்லை. ஆனால் எந்த நிபந்தனையுமின்றி, உள்நோக்கமின்றி, விதிவிலக்கின்றி தேவைப்படாத சூழ்நிலைகளிலும் கூட, மனிதர்கள் மன்னிப்புக் கேட்பவர்களாக இந்த உலகில் இருக்க வேண்டுமென நான் விரும்புகிறேன்.” அலையன் தன் கைப்பேசியை எடுத்து மீண்டும் மெடலைன்னை அழைத்தான். மறுமுனையில் பதில் இல்லை. இது போன்ற சமயங்களில் அவன் சுவரில் மாட்டி இருக்கும் அந்த புகைப்படத்தின் மீது தன் கவனத்தைச் செலுத்துவது வழக்கம். தன் தாயின் அந்த இளமைக்கால புகைப்படத்தைத் தவிர அவன் ஸ்டூடியோவில் வேறு புகைப்படம் கிடையாது. அலையன் பிறந்த சில மாதங்களில் அவள் தன் கணவனைப் பிரிந்து சென்று விட்டாள். அவன் தந்தை ஒரு மென்மையான, கண்ணியமான மனிதர். அவருக்கே உரிய இயல்பின் காரணமாக அவளைப் பற்றி தவறாக எதுவும் பேசியதில்லை. இது போன்ற ஒரு மனிதரை ஒரு பெண் எப்படிப் பிரிந்து சென்றாள் என்பதை அவனால் புரிந்து கொள்ள முடியவில்லை. முக்கியமாகச் சிறுவயது முதலே மென்மையாகவும் கண்ணியமாகவும் நடந்து கொள்ளக் கூடிய தன் மகனை எப்படிப் பிரிய முடிந்தது என்பது அதை விடப் புதிராக இருந்தது. “அம்மா எங்கே வசிக்கிறாள்?” தந்தையிடம் கேட்டான். “அமெரிக்காவில் வசிக்க கூடும்”. “வசிக்க கூடும் என்றால்?” “எனக்கு அவள் முகவரி தெரியாது”. “ஆனால் அதை உங்களுக்குத் தெரிவிப்பது அம்மாவின் கடமை”. “அவள் எந்த வகையிலும் எனக்குக் கடமைப்பட்டவள் இல்லை” “எனக்கும் இல்லையா? என்னைப் பற்றி அவள் தெரிந்து கொள்ள வேண்டியதில்லையா? நான் எப்படி இருக்கிறேன் என்று? நான் அவளைப் பற்றிச் சிந்திப்பது பற்றித் தெரிய வேண்டியதில்லையா?” ஒருமுறை தந்தை பொறுமையிழந்து கூறினார்: “நீ தொடர்ந்து நிர்ப்பந்தித்துக் கேட்பதால் இதைத் தெரிவிக்கிறேன். அவளுக்கு உன்னைப் பெற்றெடுக்க விருப்பமில்லை. நீ சௌகரியமாகத் தூங்கும் அந்த சாய்வு நாற்காலியில் தூங்க வைக்க விருப்பமில்லை. உன்னைப் பற்றிய எதுவும் அவசியமில்லை. இப்பொழுது புரிகிறதா? தந்தை உணர்ச்சிவசப்படக்கூடியவர் அல்ல. என் பிறப்புரிமையை மறுத்த என் தாயுடன் அவருக்குக் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. அவர் இயல்பான அமைதியை மீறி, அதன் அதிருப்தி வெளிப்பட்ட போது அதை மறைக்க முயலவில்லை. அலையனுடைய தாயுடனான அவனது கடைசி சந்திப்பைப் பற்றி முன்பே கூறியிருந்தேன். அது அவனது பத்தாவது வயதில் ஒரு சொகுசு விடுதியின் நீச்சல் குளத்தின் அருகில் நிகழ்ந்தது. அவனுக்கு பதினாறு வயது இருக்கும் போது அவன் தந்தை இறந்து விட்டார். அவரது இறுதிச் சடங்கு முடிந்த சில நாட்கள் கழித்து, அவர்களது குடும்ப படத்திலிருந்து தாயின் படத்தைத் தனியே கிழித்து சட்டம் போட்டு தன் அறையில் மாட்டினான். அவனது தந்தையின் புகைப்படம் எதுவும் அவன் அறையில் இல்லை. அதற்கான காரணம் எதுவானாலும் அது நியாயமில்லாதது; புரிந்து கொள்ள முடியாதது. ஆனால் அது தான் உண்மை. அவன் அறையிலிருந்த ஒரே புகைப்படமான தன் தாயின் படத்துடன் அவ்வப்போது உரையாடுவான். ஒரு மன்னிப்புக் கேட்பவனைப் பெற்றெடுப்பது எப்படி “நீங்கள் ஏன் கருக்கலைப்பு செய்து கொள்ளவில்லை? அப்பா தடுத்துவிட்டாரா?” அந்த புகைப்படத்திலிருந்து ஒரு குரல் கேட்டது: “அதை உன்னால் எப்பொழுதும் தெரிந்து கொள்ள முடியாது. என்னைப் பற்றி உன்னிடம் இருப்பது அனைத்தும் மாயாவாதக் கற்பனையே. ஆனால் அவை எனக்கும் கூட பிடித்தே இருக்கிறது. ஆற்றில் ஒரு இளைஞனை மூழ்கடித்த கொலைகாரியாக என்னை நீ கற்பனை செய்தது உட்பட அனைத்தும். அது போன்று மீண்டும் ஒரு கற்பனைக்காகக் காத்திருக்கிறேன். சொல்லு அலையன்”. அலையன் மீண்டும் கற்பனை வயப்பட்டான். அவன் தந்தையைத் தாய் மீது கற்பனை செய்தான். தான் கருத்தடை மாத்திரை எடுத்துக்கொள்ளவில்லை என்று அவள் எச்சரித்தாள். மீண்டும் ஒரு முறை அவன் உறுதியளிக்கவும், பரஸ்பர நம்பிக்கையுடன் சல்லாபித்தனர். அவன் முகத்தில் ஏற்பட்ட மாற்றங்களிலிருந்து அவன் உச்சநிலையை அடைவதைப் புரிந்து கொண்டவள், “கவனம். என்னால் முடியாது; வேண்டாம்” எனக் கதறினாள். ஆனால் அவன் முகம் மேலும் சிவக்க, வெறுப்புணர்வு ததும்பத் தொடர்ந்தான். அவள் தன்னை ஆக்கிரமித்திருந்த தேகத்திடம் இருந்து விடுபடப் போராடினாள்; அவன் பிடி மேலும் இறுகியது. இது கண்மூடித்தனமான களிப்பால் நிகழவில்லை; தன் மீது திட்டமிட்டு மனவுறுதியுடன் வெளிப்படுத்தப்படும் வன்மம் என்று அவளுக்குப் புரிந்து விட்டது. தன் போராட்டம் தோல்வியடைந்ததன் காரணமாக, அவளுக்குள் அதுவரை இருந்த உணர்வுகள் அனைத்தும் திரண்டு கட்டுக்கடங்கா வெறுப்பாக மாறியது. அவர்களது கூடலை அலையன் கற்பனை செய்வது இது முதல் முறையல்ல. அந்த கற்பனையால் அவன் மதிமயங்கி இருந்ததன் விளைவாக, ஒவ்வொரு மனிதனும் அவன் கருவில் உருவாகிய தருணத்தின் பிரதிபலிப்பு என்று கருதினான். கண்ணியமான, வலிமையான தன் தந்தையின் வெறுப்பும், மனதளவில் தைரியமும் உடலளவில் பலவீனமும் சேர்ந்த தன் தாயின் வெறுப்பும் என இரண்டு விதமான வெறுப்பின் கலவையான வெளிப்பாடே தான் என்று அவன் பிறப்பைக் கருதினான். கண்ணாடி முன் நின்று அந்த வெறுப்பின் ரேகைகளை தன் முகத்தில் தேடினான். அத்தகைய வெறுப்புகளின் சங்கமத்தால் பிறப்பவன் மன்னிப்புக் கேட்பவனாகத்தான் இருக்க முடியும் என எண்ணினான். தன் தந்தையைப் போலக் கண்ணியமாகவும் புத்திசாலியாகவும் தன்னை குறித்து எண்ணும் அதே வேளையில் தன் தாயின் பார்வையில் தன்னை ஒரு அத்துமீறுபவனாகவும் கருதினான். அத்துமீறுபவனாகவும் கண்ணியமானவனாகவும் இருக்கும் ஒருவன் தன் வாழ்நாள் முழுவதும் கண்டனத்துக்குரியவனாகவும் மன்னிப்பு கோருபவனாகவும் தான் இருக்க முடியும் என்பது மறுக்கமுடியாத யதார்த்தம். மீண்டும் சுவரில் இருக்கும் தன் தாயின் புகைப்படத்தைப் பார்க்கிறான். இப்பொழுது அவள் தன் முயற்சியில் தோல்வியடைந்து, ஈரம் சொட்டும் ஆடைகளுடன் காரில் ஏறி, எவர் கண்ணிலும் படாமல் அறையை அடைந்து, தன்னுள் அத்துமீறி உருவாகி வளரும் சுமையை அங்கேயே இறக்கி விட்டு, சில மாதங்களில் நிரந்தரமாக மீண்டும் ஒரு முறை வெளியேறுகிறாள். ஏவாளின் மரம் அலையன் தன் ஸ்டுடியோவில் சுவரில் சாய்ந்தவாறு தலைகுனிந்து அமர்ந்திருந்தான். ஒருவேளை உறங்கி இருக்கலாம். ஒரு பெண்ணின் குரல் அவனை எழுப்பியது. என்னிடம் நீ கூறிய அனைத்தும் நன்றாக இருக்கிறது. உன் கற்பனையின் கண்டுபிடிப்புகள் அனைத்தும் பிடித்திருக்கிறது என்பதைத் தாண்டி, உன்னிடம் சொல்ல வேறெதுவும் இல்லை. ஆனால் தொப்புள் குறித்த உன் கற்பனையிலிருந்து மாறுபடுகிறேன். உன் பார்வையில் தொப்புள் இல்லாத பெண் தேவதை போல் தெரிகிறாள். ஆனால் என் வரையில் உலகின் முதல் பெண்ணான ஏவாள் தான் தொப்புள் இல்லாதள். காரணம் அவள் கருவிலிருந்து பிறப்பதற்கு மாறாக இறைவனால் படைக்கப்பட்டவள். அவளது கருப்பையிலிருந்து தான் முதல் தொப்புள் கொடி தோன்றியிருக்க வேண்டும். பைபிளின் படி, அனைத்து தொப்புள் கொடிகளும் அதில் துவங்கியே தோன்றியிருக்க வேண்டும். ஒவ்வொரு கொடியின் முடிவிலும் ஒரு ஆணோ பெண்ணோ பிணைந்திருப்பார்கள். ஆண்களின் உடலுடன் அந்த சங்கிலி தொடர்ச்சியின்றி முடிந்துவிட்டாலும், ஒவ்வொரு பெண்ணின் கருப்பையிலிருந்தும் மேலும் தொப்புள் கொடி சங்கிலி தொடர்ந்து, ஒரு ஆணுடனோ பெண்ணுடனோ பிணைந்திருந்தது. இவ்வாறாக, லட்சோபலட்சம் முறை இது தொடர்ந்து, நீண்டு, எண்ணற்ற மனித உடல்களால் ஆன ஒரு வானளாவிய மரமாக வளர்ந்து நின்றது. அந்த மரத்தின் ஆணிவேர் தொப்புளற்ற ஏவாளின் கருப்பையிலிருந்தே நீண்டிருந்தது. நான் கருவுற்ற சமயம், என்னை நான் அந்த மரத்தின் ஒரு பகுதியாக, ஒரு கொடியில் இணைந்திருப்பதாக உணர்ந்தேன். என்னிலிருந்து வெளிப்படும் ஒரு கொடியின் முனையில் நீ ஊசலாடிக் கொண்டிருப்பதாகக் கற்பனை செய்து கொண்டேன். அந்த சமயம் முதல், ஒரு கொலைகாரன் கத்தியோடு அந்த மரத்தின் அடியாழத்தில் ஏவாளின் கழுத்தை வெட்டுவதாகக் கற்பனை செய்தேன். மரணத்தின் பிடியில் அவள் துடிதுடிக்க, அவளுள் இருந்து கிளைத்தெழுந்த அந்த பிரம்மாண்ட மரம், வேரின்றி பிடிப்பிழந்து, வீழ்வதைக் காட்சி செய்து கொண்டேன். அதன் எண்ணிலடங்கா கிளைகள் ஒரு பெருமழையைப் போல விழுவதாகக் கண்டேன். இதை மனித இனத்தின் அழிவாகவோ, எதிர்காலத்தை நிர்மூலமாக்குவதாகவோ புரிந்து கொள்ள வேண்டாம். மாறாக, இதன் மூலம் ஆதி முதல் அந்தம் வரை, நீரோ முதல் நெப்போலியன் வரை, இயேசு முதல் புத்தன் வரை, மனிதக் குலத்தின் இருப்பையே எந்த சுவடுகளும் நினைவுகளும் இன்றி, கடந்தகாலம், எதிர்காலம் என எதுவும் இன்றி மறையச் செய்ய வேண்டும் என்பதே நோக்கம். தனக்கு எந்த நன்மையையும் விளைவிக்கவியலாத, ஒரு துயரகமான கூடலால் வரும் பின்விளைவுகளை அறியாமல், அதற்காகக் காலந்தோறும் மனிதர்கள் எத்தகைய விலையை தங்கள் வாழ்நாள் முழுவதும் கொடுக்க வேண்டி இருக்கும் என எந்த புரிதலும் இல்லாத, ஒரு தொப்புள் இல்லாத பெண்ணின் கருவிலிருந்து உருவாகி கிளைத்தெழுந்த மரத்தை முற்றிலுமாக அழித்தொழிக்க வேண்டும் என்பதும் ஆகும்”. அந்த குரல் மீண்டும் அமைதியானது. அலையன் சுவரில் சாய்ந்து மீண்டும் உறங்கிப் போனான். மோட்டர்பைக்கில் நிகழ்ந்த உரையாடல் மறுநாள் காலை பதினொரு மணியளவில், லக்சம்பர்க் தோட்டத்தின் அருகில் உள்ள அருங்காட்சியகம் முன்பு தன் நண்பர்கள் ரேமொன் மற்றும் கலிபான் இருவரையும் அலையன் காண வேண்டி இருந்தது. தன் குடியிருப்பிலிருந்து கிளம்பும் முன், தன் தாயின் புகைப்படத்திடம் திரும்பி விடைபெற்றுக் கொண்டு, கீழிறங்கி வீதிக்கு வந்து, சற்று தள்ளி நிறுத்தியிருந்த தன் மோட்டர்பைக்கை நோக்கி நடந்தான். அவன் பைக்கில் ஏறியவுடன், ஒருவர் அவனை நெருங்கி அவன் மீது சாய்வது போல் உணர்ந்தான். அவன் காதலி மெடலைன் அவனுடன் பைக்கில் இருப்பது போல் உணர்ந்தான். இந்த கற்பனை தடுமாறச் செய்தது; அவள் மீதான அவன் காதலை உணர்த்தியது. அவன் வண்டியைச் செலுத்தினான். தன் பின்னால் ஒரு குரல் கேட்டது. “நான் உன்னிடம் கொஞ்சம் பேச வேண்டும்”. அந்த உணர்வை அடையாளம் கண்டு கொண்டான். அது அவன் தாயின் குரல். சாலையில் போக்குவரத்து குறைவாக இருந்தது. அவன் தாய் தொடர்ந்து கூறினாள்: “நம்மிடையே பரஸ்பர புரிதல் இருப்பதாக, நாம் தவறாகக் கருதிவிடக் கூடாது என்பதைத் தெளிவுபடுத்த விரும்புகிறேன்”. ஒரு பாதசாரி இரு கார்களுக்கிடையில் புகுந்து சாலையைக் கடக்க முயன்றதால், அலையன் சட்டென வண்டியை நிறுத்தினான். அவன் அலையனை நோக்கி மிரட்டும் தொணியில் கையசைத்து விட்டு போனான். “நான் வெளிப்படையாகக் கூறுகிறேன். ஒரு உயிரை அவர்களது அனுமதியின்றி இந்த உலகில் திணிப்பதை மோசமான செயலாக உணர்கிறேன்”. அலையன் ஆமோதித்தான். “உன்னைச் சுற்றிப் பார். இங்கிருக்கும் ஒருவர் கூட தன் விருப்பத்தின் பேரில் வந்தவர் இல்லை. இப்பொழுது நான் சொன்னது இதுவரை நாம் கண்டறிந்ததிலேயே மிகச் சாதாரணமான உண்மை. அது மிகச் சாதாரணமாகவும் அடிப்படையானதாகவும் இருப்பதாலேயே நாம் அதைப் பார்ப்பதும் கேட்பதும் இல்லை”. சில நிமிடங்களுக்கு தன் இருபுறமும் சென்ற காருக்கும் லாரிக்கும் இடைப்பட்ட சாலையில் சீராகச் சென்றான். “அனைவரும் மனித உரிமையைப் பற்றிப் பிதற்றுகிறார்கள். என்ன ஒரு வேடிக்கை. நம் இருப்பே நம் விருப்பத்தின் பேரில் நிகழவில்லை. அதோடு இந்த மனித உரிமை பாதுகாவலர்கள் நாம் விரும்பிய வண்ணம் மரணத்தைத் தேடிக் கொள்ளக் கூட அனுமதிக்க மாட்டார்கள்”. சாலையின் சந்திப்பிலிருந்த விளக்கு சிவப்பிற்கு மாறியது. அவன் வண்டியை நிறுத்தினான். சாலையின் இருபுறமிருந்தும் மனிதர்கள் எதிர்புறத்தை நோக்கி விரைந்தனர். அவன் தாய் தொடர்ந்தாள்: “அவர்களைப் பார். பாதிக்கும் மேற்பட்டவர்கள் மோசமாகக் காட்சியளிப்பவர்களாக இருக்கிறார்கள். அசிங்கமாக இருப்பது கூட மனித உரிமையா? வாழ்க்கை முழுவதும் அசிங்கமான உருவத்தைச் சுமந்து திரியும் உணர்வு எத்தகையது என்று உனக்குத் தெரியுமா? ஒரு நிமிடம் கூட ஆசுவாசம் இருக்குமா? உன் பாலினம்? நீ ஒரு போதும் அதைத் தேர்வு செய்ய முடியாது. உன் விழியின் நிறம்? நீ பூமியில் வாழும் காலகட்டம்? உன் நாடு? உன் தாய்? இது எதுவும் முக்கியமில்லை. நம் உரிமைகள் என்பது முக்கியமில்லாத விசயங்களுடனே சம்மந்தப்பட்டிருக்கிறது. அதனால் உரிமைகளின் பொருட்டு நாம் சண்டையிடவோ பெரிதாக பிரகடனங்கள் செய்வதோ தேவையில்லாதது”. அவன் மீண்டும் வண்டியைச் செலுத்தினான். அவனது தாயின் குரலும் சற்று உயர்ந்து, “நான் பலவீனமாக இருந்ததால் நீ இவ்வாறு இருக்கிறாய். அது என் தவறு. மன்னித்து விடு” என்றாள். சற்று நேரம் அமைதியாக இருந்துவிட்டு, அலையன் மெதுவாகப் பேசினான். “எதற்காக நீங்கள் மன்னிப்பு கேட்கிறீர்கள்? என் பிறப்பைத் தடுக்க பலம் இல்லதாதற்காகவா? என் வாழ்க்கையில் மீண்டும் இணைந்து கொள்ளாததற்காகவா? இப்பொழுதிருக்கும் நிலையில் அதுவொன்றும் அவ்வளவு மோசமாக இல்லையே?” என்றான். சிறிய இடைவெளி விட்டு, “நீ சொல்வது கூட சரிதான். அப்படியானால் என் குற்றவுணர்வு இரட்டிப்பாகிறது”. “நான் தான் உங்களிடம் மன்னிப்புக் கேட்க வேண்டும். ஒரு குப்பையைப் போல் உங்கள் வாழ்விற்கிடையே விழுந்தேன். அமெரிக்காவிற்கு விரட்டியடித்தேன்” என்றான் அலையன். “மன்னிப்புக் கேட்பதை நிறுத்து. என் முட்டாள் மகனே, உனக்கு என் வாழ்வைப் பற்றி எதுவும் தெரியாது. உன்னை நான் முட்டாள் என அழைக்கலாமா? கோபித்துக் கொள்ள வேண்டாம். என் பார்வையில் நீ ஒரு முட்டாள் தான். ஆனால் உன் முட்டாள்தனத்தின் பிறப்பிடம் எது தெரியுமா? உன் நல்ல இயல்பு தான். உன் உன்மத்தமான நல்லதனத்தில் இருந்து தான் உன் முட்டாள்தனம் உருவாகிறது”. அவன் லக்சம்பர்க் தோட்டத்தை அடைந்து, வண்டியை நிறுத்தினான். “எதிர்ப்பு தெரிவிக்காமல் என்னை மன்னிப்பு கேட்க விடுங்கள்” என்றான் அலையன். “நான் ஒரு மன்னிப்பு கேட்பவன். அப்படித்தான் நீங்கள் இருவரும் என்னை உருவாக்கினீர்கள். இப்படி இருப்பது எனக்கு மகிழ்ச்சியே. நாம் பரஸ்பரம் மன்னிப்புக் கேட்டுக் கொள்ளும் உணர்வு நன்றாக இருந்தது. அதில் ஒரு அன்பு இருந்தது இல்லையா?” அவர்கள் அருங்காட்சியகத்தை நோக்கி நடந்தனர். தமிழில்~ கோடீஸ்வரன் கந்தசாமி https://kanali.in/மன்னிப்புக்-கேட்பவர்கள்/
  7. இலங்கையின் நீதித்துறையின் சீரழிவே சர்வதேச நீதிமன்றத்தினை நாட மக்கள் விரும்புகிறார்கள், மக்கள் அனைத்தினையும் சகித்து வாழவேண்டும் என கூறுவதன்மூலம் கொஞ்ச நஞ்சமுள்ள சாதாரண மனிதர்களின் உரிமைகளை குழிதோண்டி புதைத்துவிட்டு காட்டு இராஜ்ஜியம் செய்ய அமைச்சர் விரும்புகிறார். இதனை எப்படி பகிரங்கமாக கூறுகிறார்கள்? எதிர்காலத்தில் மக்கள் சிந்திப்பதனை நிறுத்திவிடவேண்டும் என விரும்புகிறார்கள். ஆரம்ப பாடசாலை தமிழ் புத்தகத்தில் பக்தூர் எனும் கதை உள்ளது ரவீந்திரனாத் தாகூர் காதாசிரியர் என கருதுகிறேன்) ஒர் ஒநாய் ஒரு செல்வந்தர் வீட்டில் வசிக்கும் நாயின் செல்வசெழிப்பை பார்த்து தானும் அங்கு வாழ விரும்பும், அந்த நாயும் தன்னை எவ்வாறு அந்த வீட்டினர் கவனித்து கொள்கிறார் என கூறிகொண்டு வீடுவரை வந்துவிடும், ஓநாய் நாயின் கழுத்தில் ஒரு பட்டி காணப்பட அது என்ன என வினவ தன்னை கட்டிப்போட பயன்படுத்தும் பட்டி என நாய் கூற ஓநாயிற்கு புரிந்தது நாயின் நிலை. தொடர்ந்து நியாத்திற்காக போராடமல் விட்டால் இலங்கையிலுள்ள அனைத்து இன மக்களுக்கும் ஆபத்தாக முடிந்துவிடும். நீதியினை இலங்கையில் கோருவது மாயை என இலங்கை அமைச்சர் தன் வாயாலேயே கூறுகிறார்.
  8. இந்த மாயைகளை நம்ப வேண்டாம் ...இன்னும் நூறு வருடங்களின் பின்பும் இதே அறிக்கை வெளி வரலாம் ....மலம் துடைத்து எறியும் கடுதாசி போல இதையும் தூக்கி ஏறிந்து கடந்து செல்ல வேண்டும் ..
  9. அதே போல சிறிலங்கா அரசுடன் பேசுவதும் அர்த்தமற்றது என்பது தமிழ் மக்களின் அனுபவரீதியான வெளிப்பாடு....
  10. ஜ‌பிஎல் விதிமுறை ஒவ்வொரு அணியிலும் 4வெளி நாட்டு வீர‌ர்க‌ள் விளையாட‌னும்...........இவ‌ர்க‌ளுட‌ன் சேர்த்து 7இந்திய‌ வீர‌ர்க‌ள்................ஜ‌பிஎல் ஆர‌ம்பிக்க‌ ப‌ட்ட‌ கால‌ம் தொட்டு இப்ப‌ வ‌ரை இதில் ஜ‌பிஎல் நிர்வாக‌ம் மாற்ற‌ம் செய்ய‌ வில்லை...........சென்னையில் 11 தமிழ‌க‌ வீர‌ர்க‌ள் ஒரு போதும் விளையாட‌ முடியாது................. இந்த‌ விடைய‌த்தில் அண்ண‌ன் சீமான் தேவை இல்லாம‌ மூக்கை நுழைத்து விட்டார்..............
  11. கடந்த வார இறுதியில் நானும் இப் படத்தைப் பார்த்தேன். நன்றாக இருந்தது. நேர் கொண்ட பார்வை படத்தின் சாயல் இடையிடையே தெரிந்தாலும், படத்தில் பாதிக்கப்பட்டவர் விழிப்புலன் இல்லாதவர் என்பது வித்தியாசமாக இருந்தது. ஒரு பெரிய கதாநாயகன் வழக்கை ஏற்று வாதாட முன்வரும் போது அதன் முடிவில் அவர் வெல்வார் என்பதை ஊகித்துக் கொள்ள முடியும். ஆனால், எப்படி அதனை வெல்கிறார் என்பதில் தான் அப் படத்தின் / அக் கதையின் வெற்றி தங்கியுள்ளது. இப் படத்தில் வழக்கை கொண்டு செல்லும் விதம் நல்ல விறுவிறுப்பாக இருக்கின்றது. மோகன்லாலின் அலட்டிக் கொள்ளாத நடிப்பு வழக்கம் போல சிறப்பானதாக உள்ளது. படத்தின் கிளைமாக்ஸ் சின் பின் (Post climax scene), அப் பெண் தன் முகத்தை மறைத்து கொள்ளும் துணியை விலக்கி விட்டு நடந்து வரும் அந்த காட்சி, அருமை! பாலியல் வல்லுறவுக்கு எதிராக, அதனால் பாதிக்கப்படும் பெண்களுக்கு ஆதரவாக உலகம் முழுதும் ஒலிக்கும் குரல்களில் ஒன்றாக இந்த கேரளத்து குரலும் கேட்கின்றது,
  12. மீனாச்சிபாட்டி(சிறுகதை) பாட்டிக்கு ராத்திரிபூராம் தூக்கம் வரல பொறண்டு பொறண்டுபடுக்குது குளிருவேற வீட்டுல எட்டாவது மகனோடபொண்டாட்டியும் ரெண்டுபேரப்புள்ளைகளும் நாளைக்கி ஆர் ஆரெல்லாம் வருவாக அப்பத்தான்னுகேட்டு தேஜா வருவாளா கோபிவருவானான்னு கேட்டுகளைச்சுப்போயி இப்பத்தான் அசந்து தூங்க ஆரம்பிச்சுதுக மருமக அவ பேத்திதான் அம்மாயி உங்கமகன் அதான் என் வீடுக்காரரு நாளைக்கி வரலயாம் நு சொல்லிட்டு படுக்கப்போனா. ஏம்மா மாவெல்லாம் ஆட்டிவைச்சிட்டயா சட்ணிக்கி சாமானெல்லாம் வாங்கிவைச்சிட்டயான்னு கேட்டுக்கிட்டே இருந்துச்சு மீனாட்சிபாட்டி அதுக்கு உன் பிள்ளக பேரம்பேத்தி அம்புட்டுப்பேரும் வாராகன்னவன்ன ஒன்னபுடிக்கமுடியல வீட்டுல இருக்குற பேரம்பேத்திக எல்லாம் பெருசாத்தெரியலன்னு கிண்டல் பண்ணா மருமககாரி... வெள்ளனா எல்லாரும் வந்துருவாக எந்திரிச்சி காப்பிகீப்பி போட்டுக்குடுக்கனும் சரிசரி போயிப்படுனு சொல்லிச்சி பாட்டி நாளைக்கி ஆராரு என்ன என்ன பண்ணுவாகன்னுன்னு யோசிக்க ஆரம்பிச்சது போனவாரம் பாட்டியோட மூத்தமகன் முத்தையா போன் பண்ணான் அவனோட மூத்தமகன் குலதெய்வத்துக்கு பூசைபோட வரப்போறதா .ரெட்டக்கெடா வெட்டி பூசைபோடவேண்டுதலாம் அவன் ஒலகம்பூராம் கப்பல்ல சுத்துறவன் போனவருசம்தான் கலியாணமாச்சு இன்னும் அவன்பொண்டாட்டி வயத்துல புழுப்பூச்சி தங்கல.பூசைபோட்டாவது சரியாகும்ன்னு நெனச்சான் அப்ப ஆராருக்குசொல்லனும்னு கேட்டான் மகன்.பாட்டி நம்ம சொந்தங்கதான் அதுலயேஅம்பதுபேரு வருது அப்புறம் கோயிலுக்குவாரவுகபோறவுக எல்லாம் சாப்புடுவாக எப்புடியும் நூறநெருங்கும் னுசொல்லிச்சி பாட்டி பாட்டிக்கு ஏழுமகன்க ரெண்டு மகளுக உள்ளூருல மூணுபேரு மெட்ராசில ரெண்டு பக்கத்து ஊருல ஒண்னு கோயம்புத்தூருல ஒருமக பரமக்குடில ஒருமக ன்னு துண்டுதுண்டாக்கெடந்தாக அவுக எல்லாத்தையும் இந்தபூசை ஒண்ணுசேக்கும்ன்னு நெனச்சா பாட்டி எல்லாத்துக்கும் சொல்லிட்டயான்னு கேட்டுச்சு மகன சொன்னேன் பரமக்குடி மக வரலயாம் கோயம்புத்தூரு மகளுக்கு ஒடம்புசரியில்லையாம்னு சொன்னான் சரிவா பாத்துக்கலாம்னுமுத்தையா. சொல்லிச்சி பாட்டி நம்பிக்கையோட எப்பதூங்குனோம்னு தெரியல பாட்டிக்கு ஆரோ காலத்தொட்டமாதிரி இருந்துச்சு முழிச்சிப்பாத்தாமுத்தையாகாலத்தொட்டுகும்புட்டுகிட்டுஇருந்தான் கூட அவன் சம்சாரமும் ரெண்டாவது பேரனும்... .எந்திரிக்க நெனச்சா முடியல எம்பது வயசாச்சே வாப்பான்னு சொன்னா மருமக கும்புட்டா பேரனும்வணக்கம் சொன்னான் எப்ப வந்தீகன்னுகேட்டா பாட்டி காலையில வந்துட்டோம்அங்கயேகுளிச்சிட்டோம்னான்.மகன் பேத்திய எழுப்பிவிட்டுச்சுபாட்டி சீக்கிரம் காப்பிய கீப்பியபோடு முத்து வந்துட்டான் இனி எல்லாரும் வர ஆரம்பிச்சிருவாகன்னா அவ காப்பிபோடபோனா பேரன் எனக்கு வேணாம்னுன்னான் மருமக சக்கரை கம்மியாகுடுன்னா பரமக்குடிதங்கச்சி என்னாசொல்லிச்சின்னு கேட்டுச்சுபாட்டி. அப்புடியே போன போட்டுக்குடுன்னுசொல்லிச்சி போனுல நீ கட்டாயம் வரனும் ஒன்னப்பாக்கனும்போல இருக்கு ஆத்தான்னுசொல்லிச்சி அந்தப்பக்கம் ஏதோசொன்னவன்ன அதெல்லாம் விடு நான் சொல்றேன் வந்தே ஆகனும்னு சொல்லிடுச்சு பாட்டி அடுத்து கோயம்புத்துருக்குப் போனப்பொடுன்னு சொல்லிச்சி போட்டுகுடுத்தவன்ன ஏம்மா பேரம்பேத்திய பாக்கனும் கூட்டிட்டு வரயான்னு கேட்டுச்சு மறுபேச்சில்ல வாரென்னு சொல்லிடுச்சு அதுக்குள்ள ரெண்டாவதுமகனோட மகன் வந்து அப்பத்தா எல்லாரும் வந்துட்டாகளான்னு கேட்டான் முத்தப்பாத்துட்டு வாங்க பெரியப்பான்னான் அவனோட அப்பா இப்ப இல்ல அவனுக்கு மூணு அக்காமாருக அவுகளயும் வரசொல்லியாச்சு வாரென்னாக மூணாவது மகனும் இப்ப இல்ல அவனோட மக மெட்ராசுல வேலபாக்குது அந்தப்பேத்தியும் வாரென்னுசொல்லிருச்சு மீதிபேரனும் பேத்தியும் உள்ளூர்தான் நாளாவதுமகனும் மெட்ராசுதான் அவன் வரலன்னுசொல்லிட்டான் வெளியூர்போறானாம் எப்புடிப்பாத்தாலும் முக்காவாசிப்பேரு வந்துருவாகன்னு சொல்லிச்சி பாட்டி முத்து பூசைக்கிசாமாஞ்சட்டு வாங்க டவுனுக்குப்போயிட்டு சாயந்தரமா வந்தான் அன்னிக்கி அமாவாசை மூணாவது மகன் இல்லாததால அங்க வெரதம் விட்டாகஅன்னிக்கி எல்லாரும் அங்கதான் சாப்பாடு. இதுக்குநடுவுல கெடாப்புடிக்கபோனவன் போன்பண்ணான் கருப்புக்கெடா எங்கயும் கெடைக்கலன்னு மணி சாயங்காலம் ஆறு என்னா பண்ணுறதுன்னு தெரியல கையப்பெசஞ்சான்முத்துபாட்டிசொல்லிச்சி ஒன் மச்சானக்கேட்டுப்பாரு அவனுக்கு இதெல்லாம் பழக்கம்னு. போனபோட்டு வெவரம் சொன்னான் கொஞ்சநேரத்துல அவன் போன் பண்ணான் திருமங்கலத்துக்குப்பக்கத்துல செங்கப்படை கிராமத்துல ரெண்டு கருப்புக்கெடா இருக்குறதா. ஒடனே ஒரு ஆட்டோவப்புடிச்சிக்கிட்டு கெளம்புனான் முத்து அவன்கூட ரெண்டு பேரன்களும் போனாக வழில மச்சான் ஏறிக்கிட்டான் ஒருவழியா செங்கப்படையில கெடாகெடச்சது அப்புடியே கோயில்ல கொண்டுபோயி கட்டிட்டு வந்தாக காலையிலே கெடா வெட்டியாச்சு ஒவ்வொருத்தரா வர ஆரம்பிச்சாக மொதல்லவந்துது கோயம்புத்துரு பேத்திதான் இப்பவும் மாசமா இருந்தா அவளோடபுருசனோட மகனும் வந்திருந்தான் அப்புறமா பரமக்குடி மக வந்துச்சு இதுக்கு நடுவுல ப்பூசபோடுற பேரன் பொண்டாட்டி மச்சானோட வந்தான் அப்புறம் நண்டுஞ்சிண்டுமா பேரன் பேத்திக மகன்க மருமகளுக அக்கா தங்கச்சின்னு கோயிலு நெறைஞ்சிடுச்சு புள்ளைகளுக்கு ஒரே கொண்டாட்டாம் குறுக்க நெடுக்கயுமா ஒடுச்சுக பாத்து புள்ளைகளா கீழ விழுந்துடாதீகன்னு பாட்டிசொல்லிச்சி ஒருபக்கம் கிடா பிரியாணி சக்கரபொங்கல் புளியோதர வெந்துக்கிட்டு இருந்துச்சு இன்னோருபக்கம் நாட்டுக்கோழிஅடச தனியா ஆம்பளைக தயார்பண்ணிக்கிட்டு இருந்தாக அது பொம்பளைக கைப்படக்குடாதுன்னு பழக்கம் மறுபக்கம் மட்டன் குழம்பு சுக்கான்னு தயாராகிட்டு இருக்கு வாசம் மூக்கத்தொளைக்கிது வந்தவுக எல்லாம் கதை பொறணி எல்லாம் பேசிக்கிட்டுஇருந்தாக கோயிலே கலகலப்பா இருந்துச்சு. மறுபக்கம் சாமிகளுக்கு அபிசேகம் அலங்காரம்ன்னு களகட்டிடுச்சு நெருக்கி எல்லாரும் வந்துட்டாக ஆனா கெடாப்புடிச்சிக்குத்த மச்சான் வரல அவுக ஊருல ஒரு கேதமாம் வரலேட்டாகும்ன்னாக மணி 12 ஆயிப்போச்சு இனிமே லேட்டுப்பண்ண முடியாதுன்னு பூஜையபோட்டாக சைவச்சாமிக்கி சைவ பூஜை அசைவச்சாமிகளுக்கு அசைவபூஜைன்னு கோயிலே சாம்பிராணி பத்தி வாசனையோட மட்டன் சிக்கனும் பிரியாணியும் மணத்துச்சுபூசை முடிஞ்சிச்சி.இப்போ எல்லாரும் பாட்டிய சுத்திநின்னாக பாட்டி ஒவ்வொருத்தரா கூப்புட்டு துண்ணூரு குடுத்துச்சு. மூத்தமகனும் மருமகளும் கால்ல விழுந்து வாங்கிக்கிட்டாக அப்புறம் பூசைபோட்ட பேரனும் அவனோட சம்சாரமும் கால்ல விழுந்தாக கொள்ளுப்பெரனோ பேத்தியோ சீக்கிரம் வரனும்ன்னு பாட்டி சொல்லும்போது கண்ணு கசிஞ்சிச்சு ரெண்டாவது மகனோட மகனோட மகன் வந்துகால்லவுழுந்தப்ப செத்துப்பொன மகன் நெனப்புவந்து அழுக ஆரம்பிச்சிடுச்சு. முத்தையா இவனுக்கு நல்ல ஆயுள குடுன்னுஅழுதுகிட்டே சொல்லிச்சி மூணாவதுமகனோட மகன் மகளுக மருமக எல்லாரும் மொத்தமா கால்ல வுழுந்தப மருகளை கட்டிப்புடிச்சி கண்ணீர் விட்டுச்சு அவளும் கண்ணீர்விட்டா போன புருசன நெனச்சு. பக்கத்துல நின்ன எல்லாருக்கும் கண்ணீர் முட்டுச்சு. முந்தானையில தொடச்சிக்கிட்டாக அப்புறம் நாலாவதுவராததை நெனச்சு ஏங்குச்சு அஞ்சாவது ஆறாவது ஏழாவதுன்னு பேரன் பேத்திகளுக்கு துண்ணூரு பூசிவிட்டுச்சு அப்புறமா மூத்தமக பரமகுடிக்காரியும் அவளோட மக மருமகன் வந்திருந்தாக அவுகளுக்கும் பிள்ளயில்ல அதநெனச்சி கண்ணீர்விட்டுச்சு ஒருவழியா எல்லாம் முடிஞ்சி சாப்புடப்போனாக சாப்பாடு திருப்திகரமா இருந்துச்சு. சக்கரபொங்கலும் புளியோதரையும் கிடாபிரியாணியும் சுக்காவும் கொஞ்சூண்டு கருவாட்டுக் கொழம்பும் கலக்கிடுச்சு. கோயிலுக்கு வந்துருந்த எல்லாரும் சாப்புட்டாக வெளில இருந்த பிச்சகாரவுக சாமியாருக எல்லாரும் சாப்புட்டாக அப்ப மச்சான் வந்தான் அவனும் சாப்புட்டுட்டு பேசிகிட்டு இருந்தான் எல்லாரும் கெளம்புறதுக்கு முன்னாடி பாட்டி சொல்லிச்சி எப்பயும் இதுபோல வருசத்துக்கு ஒருதடவையாவது வாங்க மக்கான்னு சொல்லும்பொது பாட்டி அழுதிருச்சு எல்லாரும் கண்ணுகலங்க தொடச்சிக்கிட்டே கெளம்புனாக அந்தகாலத்துல ஒம்போது புள்ளபெத்தமகராசி கண்ணுகலங்க வழியனுப்பிக்கிட்டு இருந்தா இனிமே எல்லாம் வார வாரிசுகளுக்கு இந்தக்குடுப்பின கெடையாது சித்தப்பா சின்னம்மா மாமா மச்சான் பெரியப்பா பெரியம்மா ஒண்ணுவிட்ட சகோதரன் சகோதரின்னு கெடையாது அடுத்த தலமொறல எல்லாரும் தனிதான் கூட்டமே இல்ல ஆரும் ஆலமரமா இருக்க முடியாதுஎல்லாம்ஒத்தப்பனமரம்போலத்தான் ந்னு நெனைக்கும்போதுஅவவிட்ட கண்ணீருல கருப்பசாமியே கண்ணீர் விட்டமாதிரி இருந்துச்சு இந்தக்கூட்டமான பழக்கம் இனிமே இருக்குமான்னு தெரியல நம்ம சொந்தங்கஎல்லாம் இப்புடி ஒண்ணுசேருமா இனிமேன்னு தெரியல இப்புடி எல்லாரும் ஒண்ணா சேந்து நம்மள வழியனுப்பனும் முத்தையான்னு கையெடுத்துக்கும்புடும்போது கண்ணீரால பாட்டியோட சேல நனைஞ்சது. கவிச்சிகரம் அ.முத்துவிஜயன்
  13. இந்திய, இந்திய அரசாங்கங்களை அணுகுவதற் மூலமே இந்த பிரச்சனைக்கு தீர்வு காணமுடியும். இந்திய குடிவரவு சட்டத்தின் கீழ் தான் இவர்கள் தடுத்து வைக்கப்பட்டிருக்கிறார்கள். இந்திய குடிவரவு சட்டத்தின்படி முறைப்படியான ஆவணங்கள் அற்றவர்கள் இவ்வாறான சிறப்பு முகாம்களில் தங்க வைக்கப்படுவார்கள். இதுவும் ஒருவகையில் சிறை தான். ஶ்ரீதரன் செய்ய வேண்டியது இலங்கை அரசுக்கு அழுத்தம் கொடுத்து இவர்களுக்கான பயண ஆவணங்களை இந்தியாவில் உள்ள இலங்கை தூதரகம் மூலம் இவர்களுக்கு வழங்க ஏற்பாடு செய்வதே. பயண ஆவணங்களை இலங்கை அரசு வழங்குமானால் இந்திய அரசினால் இவர்களை தடுத்தது வைத்திருக்க முடியாது. இந்த விடயத்தில் எந்த அதிகாரமும் அற்ற தமிழ்நாடு முதலமைச்சருக்கு கடிதம் எழுதுவது வெறும் பயன்ற்ற அரசிலாகத் தான் இருக்க முடியும். ஏதோ தான் முயற்சி எடுத்ததாக பத்திரிகைகளில் செய்தி வந்தால் சரி என்று நினைக்கிறார் போல உள்ளது.
  14. உங்கள் கருத்துக்களை பார்க்கும்போது பக்கத்தில் சிங்களம் படைத்து வைத்து காத்திருக்க தமிழர்கள் அதை தட்டி விட்டு உலகத்திடம் சென்று தேவையற்ற பயனற்ற விடயங்களை பேசுவதாக இருக்கிறது. உண்மையில் சிங்களத்திற்கான ஒரு சிறிய அழுத்தமாகத்தான் தமிழினம் இதை செய்கிறதே தவிர இறுதியில் சிங்களத்திடம் தான் தீர்வு என்பது ஈழத்தில் இன்று பிறக்கும் குழந்தைக்கும் தெரிந்த விஷயம் தான். உங்கள் போன்ற மேதாவிகள் பிழை அல்லது செய்பவர்களை பைத்தியம் என்பீர்களே தவிர உங்களால் எதையும் பிரேரிக்க முன்னுதாரணமாக செயற்பட முடியாது தெரியாது. அதற்கான எந்த முயற்சியோ செயற்பாடோ செயல்முறைகளோ உங்களிடம் இல்லை. உங்களிடம் இருந்து வரவும் போவதில்லை.
  15. மேற்குலகில் தான் அதிகம் சாத்தியம். உக்ரேன் போருக்காக ஏன் உலக விளையாட்டுக்களில் ரஷ்யாவை தள்ளி வைத்தார்கள்?
  16. டக்ளஸ் கொலை செய்தவர்களிடமே நீதி கேட் குமாறு கோருகிறாரா? உள்ளக பொறிமுறை என்பது அது தானே?
  17. த‌லை கீழாக‌ நின்றாலும் இது ந‌ட‌க்காது...........ஜ‌பிஎல் எத‌ற்காக‌ கொண்டு வ‌ர‌ ப‌ட்ட‌து என்றால் 2007 உல‌க‌ கோப்பையில் இந்தியா ப‌டு தோல்வி அடைந்து வெளி ஏறின‌து..........அதே ஆண்டு 20ஓவ‌ர் உல‌க‌ கோப்பையையும் அறிமுக‌ம் செய்து வைச்சின‌ம்..............ஜ‌பிஎல்ல‌ ஆர‌ம்பிக்க‌ க‌டின‌மாய் உழைத்த‌வ‌ர் Lalit Modi 2008க‌ளில் இருந்து 2010வ‌ரை இவ‌ர் தான் ஜ‌பிஎல் நிர்வாகி இவ‌ர் சொல்வ‌தின் ப‌டி தான் எல்லாம் ந‌ட‌க்கும்............ல‌லித் மோடி அவ‌ரின் ந‌ண்பருட‌ன் விவாதிச்சார் 3வெளி நாட்டு வீர‌ர்க‌ளை ஒவ்வொரு அணியிலும் விளையாட‌ விட‌லாம் என்று அப்ப‌ ல‌லித் மோடியின் ந‌ண்ப‌ர் சொன்னார் 4 வெளி நாட்டு வீர‌ர்க‌ளை ஒவ்வொரு அணியிலும் விளையாட‌ விட்டால் தான் ஜ‌பிஎல் உல‌க‌ ம‌க்க‌ளிட‌ம் ந‌ல்ல‌ வ‌ர‌வேற்பை பெறும் என்று...........அத‌ற்கு ல‌லித் மோடியும் ஒரு ம‌ன‌தாய் ஓம் என்று சொல்ல‌ ஒவ்வொரு விளையாட்டிலும் 4வெளி நாட்டு வீர‌ர்க‌ள் விளையாட‌லாம் என்று அறிவித்தார்க‌ள்..........4வெளி நாட்டு வீர‌ர்க‌ளுட‌ன் 7இந்திய‌ர்க‌ளும் இப்ப‌டி தான் அன்று தொட்டு இந்த‌ வ‌ருட‌ம் ந‌ட‌க்க‌ இருக்கும் ஜ‌பிஎல்ல‌ விதிமுறை மாற்ற‌ம் செய்யாம‌ ந‌டைமுறையில் இருக்கு.............. ஒவ்வொரு அணியும் ஏல‌த்தில் 7வெளி நாட்டு வீர‌ர்க‌ளை வேண்ட‌லாம்.........அதில் 4பேரை விளையாட்டு மைதான‌த்தில் விளையாட‌ விட‌லாம்.........மொத்த‌மாய் ஒரு அணியில் 17 வீர‌ர்க‌ளை வைத்து இருக்க‌லாம்............. 11த‌மிழ‌க‌ வீர‌ர்க‌ளை ஒரு நேர‌த்தில் மைதான‌த்தில் விளையாட‌ விட‌ முடியாது...............த‌மிழ‌க‌ அர‌சிய‌ல் வாதிக‌ள் ஜ‌பிஎல்ல‌ த‌லையிட‌ முடியாது ஜ‌பிஎல் பெரிய‌ பெரிய‌ கோடிஸ்வ‌ர‌ர்க‌ள் ஒவ்வொரு அணிய‌ வேண்டி ந‌ட‌த்தும் விளையாட்டு தான் ஜ‌பிஎல்............ அப்ப‌டி 11 த‌மிழ‌க‌ வீர‌ர்க‌ளை விளையாட‌ விட‌னும் என்றால் ர‌ஞ்சி ரொபிக்கில் தான் விளையாட‌ முடியும் அது ஒவ்வொரு மானில‌த்துக்குமான‌ போட்டி..........ஜ‌பிஎல் அப்ப‌டி இல்லை.............. ப‌ஞ்சாப் அணி........ஹிந்தி ந‌டிகை பிரித்தி சிந்தான்ட‌ கொல்க‌ட்டா ஹிந்தி ந‌டிக‌ர் ஷாருக்க‌னின் ச‌ன்ரைடெஸ் க‌ருணாநிதி குடும்ப‌த்தின் மும்பை இன்டிய‌ன் அம்பானி குடும்ப‌த்தின் வ‌ங்க‌ளூர் அந்த‌ கால‌த்தில் ம‌ல்லையாவின் இப்ப‌டி ஒவ்வொரு அணிய‌ ஒவ்வொருத‌ர் கொடி விலை கொடுத்து வேண்டின‌வை........... Lalit Modi 2010க‌ளில் ப‌ய‌ங்க‌ர ஊழ‌ல் செய்த‌தால் அவ‌ரை நீக்கி விட்டு இன்னொருத‌ர‌ ஜ‌பிஎல் நிர்வாக‌ பொறுப்புல் நிஜ‌மித்தார்க‌ள்.......... க‌ருணாநிதி குடும்ப‌மும் ஒரு ஜ‌பிஎல் அணி வைச்சு இருக்கின‌ம் அதில் இர‌ண்டு த‌மிழ‌ர்க‌ள் விளையாடுகின‌ம்............அண்ண‌ன் சீமான் சொல்வ‌தை பார்த்தால் இவ‌ர் சென்னை அணிய‌ இவ‌ரின் க‌ட்சி கார‌ர் பெய‌ரில் வேண்டினால் கூட‌ ஆர‌ம்ப‌ கால‌ ஜ‌பிஎல்ல‌ போல் குறைந்த‌து 5 த‌மிழ‌ர்க‌ளை விளையாட‌ விட‌லாம்................ப‌ய‌ணிக்க‌ நீண்ட‌ தூர‌ம் இருக்கு............... பின்குறிப்பு சென்னையில் 4வெளி நாட்டு வீர‌ர்க‌ளுட‌ன் 7 த‌மிழ‌ர்க‌ள் விளையாடினால் விள‌ம்ப‌ர‌ சிக்க‌லில் இருந்து ப‌ல‌ விம‌ர்ச‌ன‌த்துக்கு முக‌ம் கொடுக்க‌ வேண்டி வ‌ரும்.............சென்னை அணியில் குறைந்த‌து 4த‌மிழ‌க‌ வீர‌ர்க‌ள் விளையாடினாலே போதும் ம‌ற்ற‌ ஜ‌பிஎல் அணிக‌ளில் 8 த‌மிழ‌க‌ வீர‌க‌ள் விளையாடுகின‌ம் தினேஸ் கார்த்திக் வ‌ருன் ச‌க்க‌ர‌வ‌த்தி வ‌ஸ்சின்ட‌ன் சுந்த‌ர் ந‌ட‌ராஜ‌ன் சேய் சுத‌ர்ச‌ன் ஷாருக்கான் முருக‌ன் அஸ்வின் ர‌விச்ச‌ந்திர‌ன் அஸ்வின் ....................
  18. அடுத்த 3 ஐ.பி.எல். சீசன்களில் டோனி விளையாடுவார்! மகேந்திர சிங் டோனி உடனான நட்பு குறித்து இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் தீபக் சாஹர் கூறியதாவது:- அறுவை சிகிச்சைக்கு பின்னர் டோனி முழுமையாக குணமடைந்து விட்டார். என்னை பொறுத்தவரை அடுத்த 2 அல்லது 3 சீசன்களில் சி.எஸ்.கே. அணிக்காக அவர் விளையாட வர வேண்டும். இந்திய வீரர்கள் தாண்டி வெளிநாட்டு அணிகளை சேர்ந்த வீரர்கள் டோனியுடன் பேச, நேரம் செலவிட விரும்புவார்கள். டோனி மிகவும் எளிமையான பழக்க வழக்கம் உடையவர். எல்லோரையும் சமமாக நடத்தக்கூடியவர். அதேசமயத்தில் அவர் கிரிக்கெட் குறித்து தெளிவான புரிதல் வைத்திருப்பார். அவரிடம் நேரம் செலவிடுவது கிரிக்கெட் வீரர்களுக்கு மிகவும் பிடிக்கும். டோனி மீது தனிப்பட்ட முறையில் அதிக பாசம் எனக்கு இருக்கிறது. டோனியை என்னுடைய மூத்த அண்ணனாக பார்க்கிறேன். அவரும் என்னை தம்பியாக பார்ப்பார் என நம்புகிறேன். எங்களுக்கு வேடிக்கையான தருணங்கள் நிறைய இருக்கிறது. கொரோனா நேரத்தில் நாங்கள் இருவரும் பல்வேறு விளையாட்டுகளை சேர்ந்து விளையாடி உள்ளோம். களத்திற்கு வெளியே நிறைய நேரம் செலவு செய்திருக்கிறோம். அவரிடம் இருந்து நிறைய கற்றுள்ளேன். எனக்கு இந்திய அணியில் விளையாட வாய்ப்பு அவரால் தான் கிடைத்தது. 2018 ஆம் ஆண்டு ஐ.பி.எல். தொடரில் எனக்கு விளையாட 14 ஆட்டங்கள் கொடுத்தார். அதுதான் நான் இந்திய அணிக்கு தேர்வாவதற்கு முக்கிய காரணம். https://thinakkural.lk/article/289781
  19. Published By: VISHNU 30 JAN, 2024 | 12:23 PM யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை மருத்துவ கழிவுகளை எரியூட்டுவதற்கான எரியூட்டி எதிர்வரும் மார்ச் மாதம் முதல் ஆரம்பமாகும் என யாழ்.போதனா வைத்தியசாலை பணிப்பாளர் த. சத்திய மூர்த்தி தெரிவித்துள்ளார். வைத்தியசாலை மருத்துவ கழிவுகளை எரியூட்ட கோம்பயன் மணல் மயானத்தில், ஐக்கிய நாடுகள் அபிவிருத்தி செயற்திட்டத்தின் 40 மில்லியன் ரூபாய் நிதி பங்களிப்பில் எரியூட்டி நிர்மாணிக்கப்பட்டு வருகிறது. அதன் பணிகள் பூர்த்தியாகும் நிலையை அடைந்துள்ளது. எதிர்வரும் வரும் மார்ச் மாதம் முதல் எரியூட்டி தொழிற்பட தொடங்கும் என பணிப்பாளர் தெரிவித்தார். மார்ச் முதல் யாழ்.போதனா மருத்துவ கழிவு எரியூட்டி இயங்கும் - பணிப்பாளர் வைத்தியர் சத்தியமூர்த்தி | Virakesari.lk
  20. "I will always be here to play Test cricket for the West Indies," he said. "I am not afraid to say this live. There will be times when T20 might come around and Test cricket will be there … but I will always be available to play for the West Indies no matter how much money comes towards me." https://www.espncricinfo.com/story/shamar-joseph-ruled-out-of-ilt20-with-toe-injury-1418934
  21. அமாவாசைக்கும், அப்துல் காதருக்கும் உள்ள சம்பந்தம். 🤣
  22. தமிழர் தாயகத்தில் இந்தியா வெற்றி| அரசியல் களம்|அரசியல் ஆய்வாளர் நேரு குணரட்ணம்
  23. சாந்தனின் தாயாரின் கடிதத்தை மேற்கோள்காட்டி தமிழக முதல்வருக்கு சிறீதரன் கடிதம் - சாந்தன் உள்ளிட்ட நால்வரையும் இலங்கைக்கு அனுப்பிவைக்க வேண்டுகோள் Published By: RAJEEBAN 29 JAN, 2024 | 08:55 PM ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைதுசெய்யப்பட்டு விடுதலை செய்யப்பட்டுள்ள இலங்கை தமிழர்களை விடுவிக்குமாறு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு, சாந்தனின் தாயாரின் கோரிக்கைக் கடிதத்தை மேற்கோள்காட்டி நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் கடிதம் ஒன்றை அனுப்பிவைத்துள்ளார். கடிதத்தில் அவர் தெரிவித்துள்ளதாவது மறைந்த பாரதப்பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் கைதுசெய்யப்பட்டு 32 வருடங்கள் சிறைத்தண்டனையின் பின்னர் கடந்த 2022-11-11 அன்று இந்திய உச்சநீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்ட சாந்தன் அவர்களின் தாயாரால் எனக்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ள உருக்கம் நிறைந்த கோரிக்கை கடிதம் மீதான தங்களின் கரிசனையையும் கவனத்தையும் கோரிநிற்கின்றேன். 32 வருடகால சிறைத்தண்டனையின் பின்னர் நீதிமன்றத்தினால் விடுதலை செய்யப்பட்டு ஒருவருடம் கடந்துள்ள நிலையில் அவ்வழக்கிலிருந்து விடுதலையான இலங்கை பிரஜைகளான சாந்தன் முருகன் ரொபேர்ட் பயஸ் ஜெயக்குமார் ஆகிய நால்வரையும் இலங்கைக்கு வரவழைப்பதற்கு மேற்கொள்ளப்பட்ட எந்த முயற்சிகளும் பலனளிக்காததால் இன்றுவரை அவர்கள் திருச்சி சிறப்புமுகாமில் தடுத்துவைக்கப்பட்டுள்ளனர் என்பதை கரிசனையோடு தெரிவித்துக்கொள்ளவிரும்புகின்றேன். இந்நிலையில் தனது இளமைக்காலம் முழுவதையும் சிறையில் கழித்து முதுமைக்காலம் முழுவதையும் உயிருக்கே ஆபத்தை ஏற்படுத்தக்கூடிய சிறுநீரக கல்லீரல் பாதிப்பினால் மிகக்கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள சாந்தன் தற்போது மருத்துவமனையில் தீவிரசிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கடந்த 33 ஆண்டுகளாக தனது மகனை காணாது பரிதவித்திருக்கும் சாந்தனின் தாயார் தனது 77 வயதில் மகனை ஒருதடவையாவது நேரில் பார்வையிடவேண்டும் எனவும் அவரை இலங்கைக்கு வரவழைக்க ஆவண செய்யுமாறும் உருக்கமான வேண்டுகோளை விடுத்துள்ளார். தமிழக முதல்வராக பொறுப்பேற்றதிலிருந்து ஈழத்தமிழர்கள் விடயத்தில் அதிக கரிசனை கொண்டு செயற்பட்டுவரும் நீங்கள் இவ்விடயத்தை மனிதாபிமான அடிப்படையில் அணுகி நோய்வாய்பட்டிருக்கும் சாந்தனின் உடல்நிலை கருதியும் அவரது குடும்பத்தினரின் உணர்வுநிலைப்பட்ட எதிர்பார்ப்பை கருத்தில்கொண்டும் சாந்தன் உள்ளிட்ட நால்வரையும் இலங்கைக்குஅனுப்பிவைக்க ஆவண செய்யவேண்டும் என கேட்டுக்கொள்கின்றேன். https://www.virakesari.lk/article/175107
  24. இன்னொரு வகையில் சிந்தித்தால் ஐ.பி.எல் லில் விளையாடுவதன் ஊடாக அவரின் பொருளாதார நிலை உயர்வடையும்.
  25. இவரேதான். ஆனால் இப்போது இவர் திருந்தி விடடாரம். அவரதுநல்நடத்தையை கருத்திட கொண்டுதான் இந்த பரிசு. 😂
  26. இது என்ன கேள்வி கிருபன் கரணவாய். தான் நீங்களும் கரணவாய் தான் சிலநேரம். இருவரும் சொந்தமாக இருக்கலாம் 😂🤣. மிகுதியையும். எழுதுங்கள்’’
  27. நாகரீகமான சமூகம் ஒன்றில் கருத்து சுதந்திரம் எனும் பெயரில் இவ்வாறு குரூரமாகவும் அருவருப்பாகவும் கருத்து பகிர்கின்ற ஒருவர் மீது நடவடிக்கைகள் எடுக்காது விடின், அது சமூகத்துக்கே இழுக்கு.
  28. பல வருடங்களுக்கு முன்னர் ஆங்கிலத்தில் படித்திருந்தேன். இதைப் பற்றி யாழில் அல்லது முகநூலில் உரையாடிய நினைவு ஆனால் ஒரு பதிவையும் கண்டுபிடிக்கமுடியவில்லை. பிரெஞ்சில் இருந்து ஆங்கிலத்திற்கு மொழியாக்கம் செய்தது: https://www.newyorker.com/magazine/2015/05/04/the-apologizer
  29. ஆளுனர் இலங்கை அரசின் பிரதிநிதி அவரை கொன்ரோல் பண்ணுவது மத்திய அரசு ...இவர் ....சு விடுவது என்றாலும் அவர்களின் அனுமதி தேவை ...."சமத்துவம்" எனற வார்த்தை மத்திய அரசுக்கு இன்று அவசியமாக தேவைப்படுகிறது....தென் ஆபிரிக்கா அரசு மற்றும் ஏனைய நாடுகளுக்கு படம் காட்டுவதற்கு ... மக்களின் விருப்பு வெறுப்புக்கு அப்பால் இந்திய ,இலங்கை அரசுகளின் நலன் முக்கியம் ஆகவே இந்த பட்டம் நிச்சமாக அரசுகளின் செயல் மடடுமே... எங்கன்ட சனம் நல்லிணக்கம் என்று மீண்டும் ,சேர் பொண் ராமநாதன் பாணியில் தொடர..... அவர்கள் இன்றும் துட்டகெமுனுவின் துஸ்ட(பகை வெறுப்பு) அரசியலை கொண்டு செல்கின்றனர்
  30. ஜதார்தத்திற்கு புறம்பாக சுயநல அரசியலை செய்துவரும் புலம் பெயர் நாட்டு மற்றும் தாயக அரசியல்வாதிகளின் அரசியலை பற்றியே நான் பேசினேன். அதை பேசுவதற்கு உங்களுக்கு உள்ள அதே உரிமை எனக்கும் உள்ளது. செயற் திட்டங்களை செய்வது தலைமைகளே தவிர தனி மனிதர்கள் அல்ல. உங்களால் அரசியலில் எந்த செயற் திட்டத்தையும் செய்ய முடியாதது போலவே எனக்கும் செய்ய முடியாது. தற்போதைய நிலையில் நீங்கள் விசுவாசம் வைத்திருக்கும் புலம் பெயர் மற்றும் தாயக அரசியல்வாதிகளிடமேயே எந்த செயற் திட்டமும் இல்லாது காலத்தை வீண்டிக்கும் போது நீங்கள் என்னிடம் செயற் திட்டத்தை பற்றி பேசுகின்றீர்கள். தர்ககரீதியில் கருத்தாட முடியாத போது கருத்தாடும் எதிர்தரப்பு மீது அபாண்டமாக பழி போட்டு நான் சொல்லாததை சொன்னதாக பொய்யுரைத்து விவாதம் செய்வது உங்களைப் போன்றவர்களின் வழமையான பாணிதான்.
  31. மனிதாபிமானம் என்பது மருந்திற்கும் இல்லாமல் போய் விட்டது. கலிகால உலகம்.
  32. தமிழ் தேசியம் என்பதன் உண்மையான அர்ததம் என்பது, இலங்கை தீவில் தமிழ் மக்கள் சம உரிமையுடனும் கெளரவத்துடனும் வாழும் வகையிலான அரசியலைச் செய்வது. இனவாதத்தை ஒழிக்க அனைத்து இன மக்களுடனும் அவர்களது மக்கள் அமைப்புகளுடனும் தொடர் கலந்துரையாடல்களை நிகழ்த்தி சிங்கள அரசின் மற்றும் இரு பெரும் கட்சிகளினதும் இனவாத அரசியல் நிகழ்சசி நிரலை நீர்த்துப் போகச் செய்வது. இனவாதத்தை முதலீடு செய்து இலங்கையில் அரசியல் செய்ய முடியாது என்ற நிலையை ஏற்படுத்த முனைவதோடு அதற்காக சவால்களை எதிர் கொண்டு அரசியல் செய்வது, அதன் மூலம் இலங்கை என்பது பல்லின பல் கலாச்சார நாடு என்பதை தமிழர், சிங்களவர், முஸ்லீம்கள் என பெரும்பான்மையான இலங்கை மக்களை ஏற்று கொள்ள செய்வதற்கான அரசியல் என்பதாகும். ஆனால், நடைமுறைத் தமிழ் அரசியலில் அதன் அர்ததம் என்பது, நடக்க முடியாத விடயங்களை பற்றி வருடக்கணக்கில் பேசி காலத்தை வீண்டிப்பது, நடைமுறையில் வாழும் மக்களின் மகிழ்சசியை கெடுப்பது, முன்பு இருந்ததை விட தமிழ் மக்களின் அரசியல் பலத்தை பின்னோக்கி இழுத்துச் செல்வது செலுத்துவது, சிங்கள இனவாதிகளை பலப்படுத்தி தமிழரின் இருப்பை கேள்விக்குள்ளாக்குவது பின்பு அதையே முதலீடாக வைத்து தமிழ் மக்களை உசுப்பேற்றி அரசியல் செய்வது, இணையங்களில் அல்லது முக நூல்களில் வெட்டி வீரம் பேசுவது அல்லது ஒப்பாரி வைப்பது.
  33. நீதிமன்ற விசாரணைகளில் குற்றவாளிகள் இவ்வாறு அதிருப்தியும் மக்களை குழப்பி மேலும் நாசங்களை தொடர்வதை கண்டும் காணாமலும் இருக்க பழக்குவதும் வழமை தான். பாதிக்கப்பட்டவர்கள் தமக்கான நீதி கோரி தமக்கான நீதி கிடைக்கும் வரை எதையாவது செய்து கொண்டே இருப்பார்கள். அது அவர்களது வலி. அதனை அவர்கள் மட்டுமே உணர்வார்கள். அதற்கு பக்கபலமாக இருப்பவர்களை கூட இவர் போன்ற குற்றவாளிகளுக்கு பைத்தியங்களாக தான் தெரியும். எல்லாவற்றையும் இழந்து போராடும் கூட்டத்தை பிழைக்க தெரியாத பைத்தியங்களாகவும் சுயநலவாதிகளை புத்திசாலிகளாக வளைந்து நெளிந்து தம்மை வளப்படுத்திய சாதனையாளர்களாகவும் போற்றுவது தானே இன்றைய உலக நிலை.
  34. சர்வதேச விசாரணை என்பது நடக்கப்போவதில்லை என்பது உலக அரசியலை கவனிக்கும் சாதாரண மக்களுக்கு எப்பவோ தெரிந்த விடயமே. 2009 வரை தமிழ் ஈழம் என்ற வெற்றுக் கோஷத்துடன் தமிழ் அரசியல் வலம் வந்தது. இப்போது அந்த இடத்தை சர்வதேச விசாரணை, இனக்கொலை போன்ற சொல்லாடல்கள் நிரப்பி உள்ளது அவ்வளவு தான். மொத்தத்தில் தமிழ் தேசிய அரசியல் பரப்பில் உள்ள (புலம் பெயர், தாயக) உள்ள அனைவருமே சுத்து மாத்துக்கள் தான். உண்மையில் தமிழ் அரசியல் பரப்பில் இவ்வாறாக நடைமுறை சாத்தியமற்ற கோரிக்கைகளுடன் வலம் வரும் சுத்து மாத்துக்களின் குரல் பலமாக உள்ளவரை டக்லஸ் போன்ற அரசியல்வாதிகளின் காட்டில் மழை தான். உண்மையில் தமிழ் அரசியல் ஆரோக்கியமாக தன்னை மாற்றி கொள்வதை டக்லஸ் போன்ற ஆளும் அரசை அண்டிப் பிழைக்கும் அரசியல்வாதிகள் விரும்பமாட்டார்கள.
  35. சரி, பயணத்திற்கு வரலாம். வட்டுவாகல்ப் பாலத்தினூடாக முல்லைத்தீவு நோக்கிச் செல்லத் தொடங்கினோம். பாலத்தின் முள்ளிவாய்க்கால் கரையில் பிரபல சிங்கள பெளத்த இனக்கொலையாளியும் போர்க்குற்றவாளியுமான கோத்தாபய ராஜபக்ஷ என்பவனின் பெயரில் அமைக்கப்பட்ட கடற்படை முகாம் காணப்பட்டது. அதன் வாயிலில் ஆக்கிரமிப்பாளர்கள் அகம்பாவத்துடன் நின்றுகொண்டு அப்பாலத்தால் போய்வருவோரை நோட்டம் விட்டபடி இருந்தனர். அப்பகுதியை வாகனத்தில் இருந்தவாறே காணொளி எடுத்துக்கொண்டிருந்த என்னைக் கண்ட சாரதி, "அண்ணை, கமராவை ஒளியுங்கோ, கண்டாங்கள் எண்டால் பிரச்சினை" என்று கூறவும், சடாரென்று கீழே பதித்துக்கொண்டேன். பாலத்தின் மறுகரையில் இன்னொரு சோதனைச் சாவடி. ஆயுதங்களுடன் ஆக்கிரமிப்பாளர்கள் வாகனங்களை மறித்துக் கேள்வி கேட்டுக்கொண்டிருந்தார்கள். எம்மையும் கேட்டார்கள். முல்லைத்தீவிற்குப் போகிறோம், யாழ்ப்பாணத்திலிருந்து வருகிறோம் என்று கூறிய பின்னர் போக விட்டார்கள். அப்படியே முல்லைத்தீவு நகரைச் சுற்றி வந்தோம். ஒருகாலத்தில் தமிழர்களின் இராச்சியமாக, பலப்பிரதேசமாக இருந்த எமது தாயகத்தின் முக்கிய நகரம் ஒன்று சிங்கள பெளத்த ஆக்கிரமிப்பாளர்களின் கைகளில் அகப்பட்டு அடிமைப்படுத்தப்பட்டுக் கிடப்பதைப் பார்த்தபோது ஆற்றாமையும், கோபமும் ஒருங்கே வந்தது. வரும் வழியில் புலிகளின் முகாம் இருந்த பகுதியில் சிங்களப் பேய்கள் கட்டிவைத்திருக்கும் வெற்றிச் சின்னத்தைப் பார்க்க வாகனம் நின்றது. மைத்துனர் படங்களை எடுத்துக்கொண்டு என்னைப் பார்த்து, "அண்ணை, நீங்கள் இதைப் படம் எடுக்கேல்லையோ?" என்று கேட்டார். "ஏன் சுவி, எங்களை அழிச்சு, அடிமைப்படுத்தினதை அவன் சாதனையாகக் கட்டிவைச்சிருக்கிறான், அதை ஏன் நான் பாக்கவேண்டும்?" என்று கேட்டேன். அவர் புரிந்துகொண்டார். "இல்லையண்ணை, வந்ததுக்கு சும்மா எடுத்துவைக்கலாம் எண்டபடியால் கேட்டன்" என்று கூறிச் சமாளித்தார். அப்பக்கமே நான் திரும்பவில்லை. எதற்கு திரும்பவேண்டும், எதற்குப் பார்க்கவேண்டும், எதற்குப் படமெடுக்க வேண்டும்? கொல்லப்பட்டது எனது மக்கள், அழிக்கப்பட்டது எனது போராட்டம், ஆக்கிரமிக்கப்பட்டிருப்பது எனது தாயகம், இந்த லட்சணத்தில் எம்மை ஆக்கிரமித்து நிற்பவனின் சாதனையினை எதற்காகக் நான் கொண்டாடவேண்டும்? ஆகவேதான் அந்த மிருகங்களின் அடையாளங்களை எங்கு செல்லினும் நிராகரித்து வருகிறேன். முல்லைத்தீவைச் சுற்றிப் பார்த்துவிட்டு வந்த வழியினால் மீண்டும் யாழ்ப்பாணம் நோக்கிப் பயணிக்க ஆரம்பித்தோம். வட்டுவாகல்ப் பாலத்தைக் கடந்து முள்ளிவாய்க்காலுக்குள் ஏறி அப்படியே சென்ற வழியில் திரும்பி வந்தோம். போகும்போது இருந்த உற்சாகம் எல்லோரையும் அப்போது கைவிட்டிருந்தது. எவரும் அதிகம் பேசவில்லை. இடையிடையே கடந்துசெல்லும் ஊர்கள் குறித்து எனது கேள்விகளும் அதற்கான மைத்துனரின் பதில்களையும் தவிர அதிகமாகப் பேசவில்லை. யாழ்ப்பாண மாவட்டத்திற்குள் நுழைந்தபோது கடும் பசி. எங்காவது வாகனத்தை நிறுத்திச் சாப்பிடலாம் என்று எண்ணியவாறு வீதியின் ஓரத்தில் இருந்த கடைகளைப் பார்த்துக்கொண்டே வந்தோம். சாவகச்சேரிப் பகுதியில் பிரதான வீதியின் வலப்புறத்தில் பழமையான ஆனால் அழகிய வீடொன்றில் வீட்டில் சமைத்த உணவுகளை பரிமாரிவருவதாக முகப்புத்தகத்தில் மைத்துனரின் மகன் பார்த்திருக்கிறார். ஆகவே அங்கு செல்வதாக முடிவெடுத்தோம். அப்பகுதியை அடைந்ததும் வாகனத்தை வீட்டின் முற்றத்தில் நிறுத்திவிட்டு உள்ளே சென்றோம். மழை பெய்யத் தொடங்கியிருந்தது. கொத்து ரொட்டி, பிரைட் ரயிஸ் (Fried Rice) என்று ஆளாளுக்கு விரும்பியதை ஓடர் கொடுத்தோம். 15 - 20 நிமிடங்களில் ஆவிபறக்க உணவு கொண்டுவந்து பரிமாறப்பட்டது. சுவையானதாக இருந்தது. ஆனால், யாழ்ப்பாணத்தைக் காட்டிலும் இங்கு விலை அதிகமாக இருப்பதாக அவர் கூறினார். பரவாயில்லை, பசிக்கு வயிராற உண்ண, சுவையான உணவு. சற்று அதிகம் என்றாலும் திருப்தியாக இருந்தது. கட்டணத்தைச் செலுத்துவிட்டி மீண்டும் வாகனத்தில் ஏறிக்கொண்டோம். சாதுவான தூறளில் யாழ்ப்பாணம் நோக்கி வாகனத்தைச் செலுத்தத் தொடங்கினார் சாரதி.
  36. ராஜ் ராஜரட்னத்தின் கைது என்பது தமிழர் புனர்வாழ்வு கழகத்துடன் தொடர்பு பட்ட ஒரு சம்பவம். அவரும் குடும்பமும் நீண்ட காலமாக தமிழ் தேசியத்துடன் வாழ்ந்தவர்கள். நன்றாக திட்டமிட்டு கைது பண்ணி உள்ளே தள்ளிவிட்டார்கள்.
  37. ஒருநாள் இரவு பனிபோல் நிலவு.......! 😍
  38. அம்பலவன் பொக்கனையிலிருந்து கடற்கரைச் சாலையூடாக வலைஞர் மடம் பகுதிக்கு வந்தோம். அண்மையில் பெய்த கடும் மழையினால் அப்பகுதியெங்கம் வெள்ளம் தேங்கி நின்றிருந்தது. இப்பகுதியில் பெரும்பாலான வீடுகள் இன்னமும் இடிந்த நிலையிலேயே காணப்படுகின்றன. நிலங்கள் மக்களின் பாவனையின்றி இருப்பதால் பாரிய பற்றைக்காடுகளாக வளர்ந்திருக்கின்றன. வெகு சிலரையே இங்கு காண முடிந்தது. இனக்கொலையாளிகளான சிங்களப் பேரினவாத மிருகங்களின் படங்களைத் தாங்கி நிற்கும் போரின் சாட்சிகளான வலைஞர் மடக் கட்டிடங்கள் இப்பாதையினால் பயணித்து வலைஞர் மடம் (முள்ளிவாய்க்காலுக்கு உட்பட்ட இன்னொரு பகுதி) பகுதியை வந்தடைந்தோம். இப்பகுதியில் காணப்பட்ட இரு கட்டடங்கள் இனக்கொலையில் முக்கிய பாத்திரத்தை வகித்திருக்கின்றன. மைத்துனரின் குடும்பமும் இடப்பெயர்வின்போது இப்பாகுதியில் பனைமரங்களுக்குக் கீழ் மறைப்புக்கட்டி வாழ்ந்திருக்கின்றது. இக்கட்டடங்களில் இருந்து சுமார் 50 மீட்டர்கள் தூரத்திலேயே அவரது குடும்பம் தஞ்சம் அடைந்திருந்தது. அக்காலத்தில் இப்பகுதியெங்கும் மக்கள் வெள்ளத்தால் நிறைந்து காணப்பட்டதாக அவர் சொல்கிறார். இப்பகுதியிலும் ஆயிரக்கணக்கானோர் இராணுவத்தால் பலியிடப்பட்டனர். தற்காலிக வைத்தியசாலைகளாக மாற்றப்பட்டிருந்த இக்கட்டடங்களுக்குள் காயங்களோடு கொண்டுவந்து சேர்க்கப்பட்ட பலர் மருந்தின்றியும், கடுமையான இரத்தப்போக்கினாலும் இறந்துபோயினர். தான் அங்கிருந்த ஓரிரு நாட்களில் மட்டும் இக்கட்டடங்களுக்கு முன்னால் கிடத்திவைக்கப்பட்டிருந்த உடல்களின் எண்ணிக்கை பல நூறுகளைத் தாண்டும் என்று தனது நினைவுகளைப் பகிரும்போது கூறினார். கொல்லப்பட்டவர்களின் பிணங்களிலிருந்து வீசியவாடை அப்பகுதி முழுதையும் ஆக்கிரமித்திருந்தது. கொல்லப்பட்டவர்களைப் பற்றி எவரும் அதிகம் அக்கறை கொண்டிருக்கவில்லை. உயிருடன் மீதமாயிருப்போர் தமதுயிரைக் காத்துக்கொள்வதில் மட்டுமே அக்கறை காட்டினர். மரணம் என்பது மலிந்த பொருளாகிவிட்டிருந்தது என்று அவர் கூறினார்.
  39. முல்லைத்தீவு நோக்கிய பயணத்தில் நான் கண்ட இன்னொரு முக்கியமான இடம் புலிகளால் நடப்பட்டுப் பராமரிக்கப்பட்டு வந்த தேக்கங்காடு. காட்டுவளத்தைக் காக்கவும், எதிர்காலத்தில் மக்களின் பயன்பாட்டிற்கென்றும் புலிகளால் தாயகத்தின் சிலவிடங்களில் இவ்வாறான காட்டு வளர்ப்பு முன்னெடுக்கப்பட்டு வந்தது. இச்சாலையூடாகப் பயணிக்கும்போது இதனழகைத் தரிசிக்க முடியும். ஆனால், இன்று இத்தேக்கங்காடுகளை வெட்டி விற்பதற்கு தெற்கிலிருந்துந்து வரும் வியாபாரிகளுக்கு அரசாங்கம் அனுமதி கொடுத்திருப்பதாக சாரதி கூறினார். அதன்படி இக்காட்டின் ஒருபகுதி தற்போது வெட்டப்பட்டு வருகிறது. இதன் முழு நீளத்திற்கும் வீடியோப் பதிவொன்றினைச் செய்திருந்தேன். இக்காட்டின் மத்தியில், பரந்தன் முல்லைத்தீவு வீதியில் பாரிய இராணுவ முகாம் அமைக்கப்பட்டிருக்கிறது. அவப்போது இவ்வீதியால் பயணிப்போரை மறித்து விசாரிப்பதும் நடக்கும். எனது ஒளிநாடாவிலிருந்து எடுக்கப்பட்ட படம் கீழே. பரந்தன் முல்லைத்தீவு பாதையிலிருந்து கண்டல் வழியாகக் கடற்கரை நோக்கிச் செல்லும்போது இறுதி யுத்தத்தின் இனக்கொலை நாட்களின் அவலங்களைத் தன்னகத்தே அமிழ்த்தி வைத்திருக்கும் சிலவிடங்கள் வருகின்றன. அவற்றுள் முக்கியமானது புதுமாத்தளன் பகுதி. துரதிஸ்ட்டவசமாக அப்பகுதியில் இடம் பார்க்கும் அவதியில் படமெடுக்கமுடியாது போய்விட்டது. ஆனால் அம்பலவன் பொக்கனைப் பகுதியில் நின்று, நிதானித்து சில படங்களையும், ஒளிப்படங்களையும் பதிவுசெய்துகொண்டோம். அவற்றுள் சில கீழே. அம்பலவன் பொக்கனைப் பகுதியில் கடற்கரையினை அண்மித்ததாக சிறிய பற்றைகள் காணப்படுகின்றன. இப்பகுதியில் அகோர பல்குழல்த் தாக்குதலிலும், விமானக் குண்டுவீச்சிலும் கொல்லப்பட்ட பலரை இவ்வாறான பற்றைக்காடுகளுக்குள் மக்கள் கைகளால் மணலைத் தோண்டிப் புதைத்திருக்கிறார்கள். காயப்பட்டவர்களுக்கு இப்பகுதியில் வைத்தே அறுவைச் சிகிச்சை மயக்கமருந்தின்றி நடைபெற்றிருக்கிறது. இப்பகுதியில்த் தோண்டிப் பார்த்தால் கொல்லப்பட்ட மக்களின் எச்சங்கள் இன்னும் இருக்கும் என்று மைத்துனர் கூறினார்.
  40. வாசித்த தாங்கள் கருத்தெழுதலாம். அதற்குத் தடை இல்லை யே,.😉
  41. காலையுணவு அருந்தியபின் கிளிநொச்சியிலிருந்து மீண்டும் பரந்தன் நோக்கிப் பயணித்தோம். பரந்தனிலிருந்து வலதுபுறம் திரும்பி, பரந்தன் முல்லைத்தீவு வீதியில் முரசுமோட்டை நோக்கி வண்டி பயணித்தது. எனது மைத்துனர் புலிகளின் கட்டுமாணப் பிரிவில் வீதி வேலைகளில் சம்பளத்திற்கு பணிபுரிந்ததனால் புலிகள் பின்வாங்கிச் சென்ற பகுதிகளுடு மக்களோடு மக்களாக அவரும் தனது குடும்பத்தை இழுத்துக் கொண்டு சென்றார். ஆகவே, இந்த வீதியில் அமைந்திருக்கும் மக்கள் அவலங்களால் நிறைந்த ஊர்கள் ஒவ்வொன்றிலும் அவர் சிலகாலமாவது வாழ்ந்திருக்கிறார். அவலங்களை அனுபவித்திருக்கிறார். அதனால், தாம் ஆங்காங்கு தங்கியிருந்த ஊர்கள் வந்தபோது வாகனத்தை நிறுத்தி அவ்விடங்களைப் பார்வையிடத் தொடங்கினார். நானும் அவருடன் அவ்விடங்களை தரிசித்தேன். போரின் வடுக்கள் சிறிது சிறிதாக மறைந்துப்போய், வாழ்வு மீளவும் சாம்பலில் இருந்து பூக்க ஆரம்பித்திருந்தது. சிலவிடங்கள் அடையாளமே மாறிப்போயிருந்தது அவருக்கு. வீதியின் ஓரத்தில் 15 வருடங்களுக்கு முன்னர் இருந்த சில கட்டடங்களை, அடையாளங்களை அவர் தேடினார், எவையுமே அங்கு இருக்கவில்லை. முரசுமோட்டை, புளியம்பொக்கனை, குமாரசாமிபுரம், உடையார்கட்டு, வல்லிபுனம், புதுக்குடியிருப்பு, ஆனந்தபுரம், கரைய முள்ளிவாய்க்கால் என்று பல இடங்களில் அவரும் அவரது குடும்பமும் இடம்பெயர்ந்து வாழ்ந்திருக்கிறார்கள். சிலவிடங்களில் ஓரிரு நாட்கள் மட்டுமே தங்கியிருந்து மறுபடியும் இடம்பெயர்ந்திருக்கிறார்கள். எங்கெங்கு வெளிகள் காணப்பட்டனவோ அங்கெல்லாம் மக்கள் வெள்ளம் இருந்ததாக அவர் கூறினார். கையில் கிடைத்த தகரம், ஓலை, சீலைகள், பிளாத்திக்குப் பைகள் என்று ஏதோவொன்றை எடுத்து மறைவு வைத்து, கூட்டத்தோடு கூட்டமாக குடும்பங்கள் வாழ்ந்திருக்கின்றன. இவ்வாறு மக்கள் செறிவாக வாழ்ந்த பகுதிகள் மீது கடுமையான எறிகணை மற்றும் விமானக் குண்டுவீச்சு, துப்பாக்கிச் சன்னங்கள் என்று தாக்குதல் நடத்தப்பட்டபோது பலர் உயிரிழந்தும், இன்னும் பலர் காயப்பட்டும் இருந்திருக்கின்றனர். கொல்லப்பட்டவர்கள் அவ்விடத்திலேயே கைகளால் மண் தோண்டி புதைக்கப்பட, காயப்பட்டவர்களில் வயதானவர்கள் அவர்களின் சொந்தங்களாலேயே கைவிடப்பட்டு சென்றதை மைத்துனர் கண்ணுற்றிருக்கிறார். வண்டி ஆனந்தபுரத்தைத் தாண்டியதும், பரந்தன் முல்லைத்தீவு வீதியிலிருந்து கடற்கரை நோக்கிச் செல்லும் வழியில் இடதுபுறமாக பயணிக்க ஆரம்பித்தது. ஏனென்றால், கண்டல்த் தாவரங்களும், வெளிகளும் இருக்கும் இப்பிரதேசத்திலேயே பெருமளவு மக்கள் உயிரைக் காக்க அடைக்கலம் புகுந்திருந்தனர். முக்கியமாக இப்பகுதியில் பனக்கூடல்களுக்கு மத்தியில் புதுமாத்தளன் இந்து ஆலயம் அமைந்திருக்கிறது. இப்பகுதியில் பெருமளவு மக்கள் தஞ்சம் அடைந்திருந்தனர். இவ்வாறு தஞ்சம் அடைந்தவர்களில் மைத்துனரின் குடும்பமும் அடங்கும். மக்கள் இப்பகுதியில் அடைக்கலமாகி இருப்பது தெரிந்ததும் இப்பகுதி நோக்கிக் கடுமையான விமானக் குண்டு வீச்சும், எறிகணைத்தாக்குதலும் நடத்தப்பட்டபோது பலர் கொல்லப்பட்டிருக்கின்றனர். கொல்லப்பட்டவர்களையும், காயமடைந்தவர்களையும் மீட்டெடுக்கும் பணியில் மைத்துனரும் ஈடுபட்டிருக்கிறார். கடற்கரை நோக்கிப் பயணித்த நாம், கரையில் வாகனத்தை நிறுத்திவிட்டு இறங்கி மணலில் நடந்தோம். தூரத்தே சாலை தெரிந்தது. கடற்புலிகளின் பாரிய முகாம் சாலைப்பகுதியிலேயே இருந்திருக்கிறது. இந்த முகாமைக் கைப்பற்ற இராணுவம் கடுமையாகச் சண்டையிட்டபோதும் பலத்த இழப்புக்களைச் சந்தித்ததாக அவர் கூறினார். ஈற்றில் கடற்புலிகள் இம்முகாமைக் கைவிட்டுப் போக, இராணுவம் ஆக்கிரமித்துக்கொண்டது. இப்பகுதியில் சில புகைப்படங்களை எடுத்துக்கொண்டதோடு, இங்கு அவரின் அனுபவங்களையும் அவர் என்னோடு பகிர்ந்துகொண்டார். பின்னர் அங்கிருந்து அம்பலவன் பொக்கனை, வலைஞர் மடம், இரட்டை வாய்க்கால் ஆகிய பகுதிகளை கடற்கரைச் சாலையூடாகவே வலம் வந்தோம். அம்பலவன் பொக்கனை பகுதியில் வெற்றுக் கடற்கரை வெளியில் மக்கள் கூடாரங்களை அமைத்து தஞ்சம் அடைந்திருக்கிறார்கள். ஒருபுறம் கடலில் இருந்து ஏவப்படும் எறிகணைகள், மறுபுறம் வானிலிருந்து பொழியப்படும் குண்டுகள், இன்னொருபுறம் முல்லைத்தீவுப் பகுதியில் இருந்து கனரக இயந்திரத் துப்பாக்கிகள் உமிழும் ரவைகள் என்பவற்றிற்கு மத்தியில் ஏந்த நம்பிக்கையும் அற்றும் உயிரை மட்டுமே கையில் ஏந்திக்கொண்டு மக்கள் வாழ்ந்திருக்கிறார்கள். இப்பகுதியிலும் ஆயிரக்கணக்கானோர் கொல்லப்பட்டிருப்பதாக அவர் கூறினார். கொல்லப்பட்டவர்களை அருகில் இருந்த பற்றைகளுக்குள் இழுத்துச் சென்று போட்டுவிட்டு, ஒற்றை அழுகையுடன் கடமை முடித்தோரும் அங்கு இருந்திருக்கிறார்கள். காயப்பட்டவர்களுக்கு மயக்க மருந்தின்றி கடற்கரையிலேயே அறுவைச் சிகிச்சை நடத்தப்பட்டிருக்கிறது. இரத்தப்போக்கினால் கொல்லப்பட்டவர்களும் அதிகம் இருந்திருக்கிறார்கள்.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.