Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Kavi arunasalam

கருத்துக்கள உறவுகள்
  • Joined

Everything posted by Kavi arunasalam

  1. 5 டானியல்(32), சேர்பிய நாட்டைச் சேர்ந்தவன். வேலை வாய்ப்புத் தேடி தனது மனைவி நத்தலி, பத்து, பன்னிரண்டு வயதான இரண்டு பிள்ளைகளுடன், 2022 செப்ரெம்பரில் யேர்மனிக்கு வந்தவன். தெரிந்தவர்கள் மூலமாக ஸ்வேபிஸ்ஹால் நகரத்துக்கு வந்து சேர்ந்தான். அவர்களுடன் சேர்ந்தே கட்டிட வேலைகள், தோட்ட வேலைகள் என்று கிடைத்த வேலைகளைச் செய்து கொண்டிருந்தான். வேலை வாய்ப்புகளுக்காக கிழக்கு ஐரோப்பிய நாடுகளில் இருந்து பலர் வந்து போய்க் கொண்டிருக்கிறார்கள். இதில் அநேகமானவர்கள் கட்டிடத் தொழிலிலேயே கவனம் செலுத்துகிறார்கள். சிலர் அஸ்பாரகஸ் பிடுங்கி எடுப்பது ஸ்ரோபரி பழங்கள் பறிப்பது போன்ற வேலைகளை தோட்டங்களிலும் செய்வதுண்டு. கறுப்பு வேலை செய்து துரிதமாக பணம் சம்பாதித்துக் கொண்டு தங்கள் நாட்டுக்குப் போய் விடுபவர்களும் இருக்கிறார்கள். ஆனால் டானியல் குடும்பமாக யேர்மனிக்கு வந்தது, நிரந்தரமாகத் தங்குவதற்கான எண்ணமாக இருந்திருக்கலாம். டானியலின் மனைவி நத்தலி, அவுஸ்திரியாவில் சில காலம் வசித்ததால் அவளுக்கு யேர்மனிய மொழி தெரிந்திருந்தது. வேலைகள் ஓரளவுக்குக் கிடைக்க, வாழ்வதற்கு ஓரளவு பணம் அவர்களுக்கு வர ஆரம்பித்தது. தெரிந்தவர்களுடன் தங்கியிருந்தாலும் தங்கள் குடும்பத்துக்கு என்று தனி வீடு தேவை என்பதை உணர்ந்து, அவர்கள் வீடு தேட ஆரம்பித்தார்கள். அப்பொழுதுதான் டானியல் குடும்பத்துக்கு ரன்ஜா (34) அறிமுகமானார். ரன்ஜாவும் அவளது கணவரும் ஸ்வேபிஸ் ஹாலுக்கு அடுத்த நகரத்தில் புதிதாக ஒரு வீட்டை வாங்கியிருந்தார்கள். அங்கு சென்று வாழ்வதற்காக, தற்போது அவர்கள் வாழும் வீட்டை வாடகைக்கு, அதுவும் தற்காலி கமாக யாருக்காவது கொடுக்கலாம் என்று விளம்பரம் செய்ய, முதலாவதாக அவர்கள் முன் வந்து நின்றது டானியலும், அவனது மனைவி, பிள்ளைகளுமே. 1300 யூரோக்கள் மாத வாடகைக்கு அந்த வீடு டானியலுக்குக் கிடைத்தது. நத்தலிக்கு மொழி தெரிந்ததால் டானியலுக்கு எந்தச் சிக்கலும் இல்லை. வேலைக்குப் போவது. மாலையில் நண்பர்களுடன் பொழுதைக் கழிப்பது என்று அவன் எப்பொழுதும் வெளியிலேதான் இருந்தான். நத்தலி மட்டும் வீட்டில் இருந்தாள். ஹைடமேரியின் கொலையாளியைக் கண்டு பிடிக்க முடியாமல் பொலிஸார் திண்டாடிக் கொண்டிருந்தார்கள். சில தடயங்களை அவர்கள் சேகரித்து வைத்திருந்தாலும், அடுத்து என்ன செய்வது என்று தெரியாமல் விழித்துக் கொண்டிருந்தார்கள். நாட்கள் ஒவ்வொன்றாகக் கடக்க, 2020இல் நடந்த கொலையையே துப்புத் துலக்கி கண்டு பிடிக்காதவர்கள், இதைக் கண்டு பிடித்து விடுவார்களா? என்ற ஏளனப் பேச்சு வரத் தொடங்கியது. அதாவது பொலிஸ் துறையின் கையாலகத் தன்மையைக் குறித்து விமர்சனம் பெரிதாக வர ஆரம்பித்தது. மீண்டும் ஒரு புதன்கிழமை. 25.01.2023 ஸ்வேபிஸ் ஹாலில் இருந்து பத்து கிலோ மீற்றர் தூரத்தில் உள்ள மிஹேல் பாக் என்ற கிராமம் அல்லோலகலப்பட்டது.” ஹேரயுற்றே (83) என்ற மூதாட்டி கொல்லப்பட்டார் " என்ற செய்தி வந்தது. இருந்த தலையிடி காணாதென்று பொலிஸாருக்கு மேலும் தலையிடி கூடியது? ஹேரயுற்றே சாவியால், தனது வீட்டுக் கதவைத் திறந்து உள் நுளையும் போது, பல தடவைகள் மறந்து போய் சாவியை கதவிலே விட்டு விடுவதுண்டு. அதே குடியிருப்பில் வசிக்கும் ஒரு மூதாட்டி இதை அவதானித்து ஹேரயுற்றேயிடம் பல தடவைகள் எச்சரித்தும் இருக்கிறார். “இங்கை யார் வரப்போயினம்?” என்று ஹேரயுற்றே அவருக்குப் பதில் சொல்லியிருக்கிறார். ஆனால் கொலையாளி வந்திருந்தான். கதிரையில் சாய்ந்தபடி அவர் உடல் இருந்தது. அவரைச் சுற்றி இரத்தங்கள் தெறித்திருந்தன. தலை சிதைக்கப்பட்டிருந்தது. கை,தோள்பட்டை, தலை ஆகிய பகுதிகளில் குறைந்தது 26 தடவைகள், தாக்கப்பட்டு அவர் கொலை செய்யப்பபட்டிருப்பதாக அறிக்கை வந்தது. ஹேரயுற்றே வீட்டுக்கு வெளியே வெறும் 100 மீற்றர் தூரத்தில் ஒரு புதருக்குள் இரண்டு கையுறைகளையும், ஒரு சுத்தியலையைம் பொலிஸார் கண்டெடுத்தார்கள். ஹைடமேரியின் கொலைக்கான ஆயுதம் கிடைக்காது திணறிக் கொண்டிருந்த பொலிஸார் , ஹேரயுற்றேயின் கொலைக்கான ஆயுதம் கிடைத்த போது மிகுந்த உசாரானார்கள். அதைத் துப்புத்துலக்குதலுக்கான பெரும் உந்துதலாக அவர்கள் எடுத்துக் கொண்டார்கள். புதிதாக வாங்கிய சுத்தியல்.அதன்மேல் ஒட்டப்பட்டிருந்த விலை கூட இன்னமும் அகற்றப்படவில்லை. பழுப்பு நிறமான கைப்பிடியின் பிற்பகுதி சிவப்பு நிறத்தில் இருந்தது. அந்த சுத்தியலைத் தயாரித்த நிறுவனம் கோனெக்ஸ் என்றிருந்தது. அதை ஸ்வேபிஸ்ஹாலில் விற்பனை செய்பவர்கள் ‘ஹேசெலே’ கட்டிட பொருட்கள் விற்பனை நிலையம் என்பதும் தெரிந்தது. இரண்டு பொலிஸார் ஹேசெலே கட்டிட பொருட்கள் விற்பனை நிலையத்துக்குச் சென்றார்கள். “சமீபத்தில் இந்தவகையான சுத்தியலை யாராவது வாங்கியிருக்கிறார்களா? என்று பார்த்துச் சொல்லுங்கள்” என உரியவர்களிடம் கேட்டார்கள். கணினியில் நன்றாக அலசிப் பார்த்த அவர்கள் சொன்னார்கள், “யாரும் சமீபத்தில் இந்தச் சுத்தியலை வாங்கவில்லை” என்று “வேறு எங்கே வாங்கலாம்” பொலிசார் கேட்டார்கள். “ஒன் லைனில் கிடைக்கிறது” என்றார்கள்.
  2. 4 ஸ்வேபிஸ் ஹால் நகரசபைக்கு உட்பட்டதுதான் இல்ஸ்கொபன் கிராமம். இது ஸ்வேபிஸ் ஹால் நகரில் இருந்து 10 கிலோ மீற்றர் தூரத்தில் இருக்கும் இன்னுமொரு அமைதியான கிராமம். 87 சதவீதமான விவசாய நிலப்பரப்பைக் கொண்டது, இங்கு 6000க்கு சற்று அதிகமான மக்களே வசிக்கிறார்கள். பெரிய தொடர்மாடிக் குடியிருப்புகள் அதிகம் இல்லாத இந்தக் கிராமத்தில் தனித்தனி வீடுகளிலேயே பெரும்பாலானோர் வசிக்கிறார்கள். ஜனவரி 16, திங்கட்கிழமை அன்று, வீட்டின் அழைப்புமணிச் சத்தம் கேட்டு, முதியவர் (86) வந்து கதவைத் திறந்து பார்த்தால் அங்கே, கறுப்புக் கண்ணாடி அணிந்த ஒருவர் தனது கையில் லீடில் (Lidl super market) சுப்பர் மார்க்கெற்றின் வாராந்த பிரசுரங்களுடன் நின்றார். பனி விழும் குளிர்காலம். சூரியன் ஓய்வெடுக்கும் தருணம். கறுப்புக் கண்ணாடியுடன், சிரித்துக் கொண்டே, தன் வீட்டுக்கு முன்னால் நின்ற அந்நபரைக் கண்டதும், முதியவருக்கு ஆச்சரியமாக இருந்தது. “என்ன வேண்டும்?” என்று கேட்டார் அவன் கையில் இருந்த லீடில் சுப்பர் மார்க்கெற்றின் வாரந்த பிரசுரங்களைத் தூக்கிக் காண்பித்தான். “இதெற்கெல்லாம் பெல் அடிக்கத் தேவையில்லை. இந்தத் தபால் பெட்டிக்குள் போட்டு விட்டுப் போ” என்றார். அவன் அவரை நெருங்கி வந்தான். ஏதும் பேசவில்லை அவர் கையில் லீடில் சுப்பர் மார்க்கெற்றின் வாரந்தப் பிரசுரத்தைத் திணித்துவிட்டுப் போனான். “யாராயிருக்கும்? நான் சொன்னது இவனுக்கு விளங்கவில்லையா? வின்ரரிலும் கூலிங்கிளாஸ் போட்டிருக்கிறான். தலையில் ஏதாவது பிரச்சனையாக இருக்குமோ?” மனதில் எழுந்த கேள்விகளுடன் முதியவர் வாசல் கதவைச் சாத்திக் கொண்டு உள்ளே போனார். அடுத்தநாள் மதிய நேரம். முதியவர், உணவை முடித்து விட்டு வரவேற்பறையில் இருந்தார். ஒரு குட்டித் தூக்கத்துக்காக அவரது மனைவி ஷோபாவில் படுத்திருந்தார். வீட்டின் அழைப்பு மணி ஒலித்தது. வழமையாக இந்த நேரங்களில் யாரும் அழைப்பு மணியை அழுத்துவதில்லையே என்ற கேள்வி எழுந்தாலும், எழுந்து வந்து கதவைத் திறந்தார். அதே கறுப்புக் கண்ணாடி அணிந்த மனிதன். அதே உடுப்பு. நேற்றையைப் போல் இன்றும் அவன் கையில் லீடில் சுப்பர் மார்க்கெற்றின் பிசுரங்கள். வீட்டின் வாசலில் நின்றபடியே,“நேற்றுத்தானே தந்துவிட்டுப் போனாய். பிறகு எதுக்கு இப்ப? அதுவும் மத்தியான நேரம்” என்று எரிச்சல் கலந்த குரலில் முதியவர் கேட்டார் முதியவரின் கேள்விக்கு அவன் பதில் சொல்லவில்லை. முதல்நாள் போலவே இன்றும் அவரை நெருங்கி வந்தான். தனது வலது கரத்தால் அவன் விட்ட குத்து, அவர் கண்ணாடிக்குக் கீழ், மூக்கின் மேல் வேகமாக வந்து விழுந்தது. வாசல் படியில் நின்ற முதியவர், நிலைதடுமாறி, வீட்டினுள்ளே விழுந்தார். வீழ்ந்தவர் அதிர்ச்சியில் இருந்து மீள முன்னரே அவரது நெற்றியில் அவனது துப்பாக்கி முனை இருந்தது. வெளியில் கேட்ட சத்தங்கள், முதியவரின் மனைவியின் சிறு தூக்கத்தைக் கலைத்து விட்டிருந்தது. ஷோபாவில் இருந்து எழுந்தவரை, கணவனின் “உதவி, உதவி செய்யுங்கள்” என்ற கூப்பாடு விரைவு படுத்தியது. விழுந்திருந்த முதியவரை அவன் காலால் உதைக்க எத்தனித்தபோது, வாசலோடு ஒட்டியிருந்த அறையின் ஒளி புகாத கண்ணாடிக் கதவினூடாக ஒருவர்( முதியவரின்மனைவி ) ஓடி வருவதை அவதானித்தான். யாரோ வருகிறார்கள் என்ற பதட்டத்தில் அவன் கால் ஒரு அடி பின் வைக்க, அந்தச் சந்தர்ப்பத்தை பயன் படுத்தி, தரையில் விழுந்திருந்த முதியவர் தன் காலால் பலம் கொண்ட மட்டும் கதவைத் தள்ள வாசல் கதவு மூடிக் கொண்டது. அவன் வெளியே. அவர்கள் உள்ளே. தகவல் கிடைத்து பொலிஸார் வந்திருந்தனர். கறுப்புக் கண்ணாடி அணிந்திருந்தான் என்பதை முதியவர் மறக்காமல் சொன்னார். அவன் என் நெற்றியில் துப்பாக்கியை அழுத்திப் பிடித்த போது “நீ பணம்” என்று சொன்னான், என்பதையும் சொன்னார். பொலிஸாருக்குப் புரிந்து விட்டது. வந்தவன் வெளிநாட்டுக்காரன் மட்டுமல்ல, சமிபத்தில்தான் யேர்மனிக்கு வந்திருக்கிறான் என்பதுவும். இல்ஸ்கொபன் கிராமத்தின் வீதிகள், பூங்காவனம், விளையாட்டு மைதானம் என்று எல்லா இடங்களிலும் பொலிஸார் தேடினார்கள். அவன் அகப்படவில்லை. “கையில் லீடில் சுப்பர் மார்க்கெற்றின் வாரந்த பிரசுரங்களுடன் கறுப்புக் கண்ணாடியுடன் யாராவது நடமாடியதைப் பார்த்தீர்களா? “ என விசாரித்துப் பார்த்தார்கள். ஒரு பெண் சொன்னாள். “இன்று ஹோம் ஒபீஸ். மதிய இடைவேளைக்கு கொஞ்சம் காற்றாட வெளியே வந்த போது கையில் லீடில் சுப்பர் மார்க்கெற்றின் வாரந்த பிரசுரங்களுடன் ஒருவனைக் கண்டேன். கனிவான முகத்துடன்… “ஹலோ” சொல்லிச் சிரித்தான். நானும் ‘ஹலோ’ சொல்லிவிட்டுப் போனேன்” என்று. ஹேபாப் கடை வைத்திருந்தவர் சொன்னார், “ இங்கு உணவருந்த வருபவர்களை, அவர்கள் வெளியூரா, உள்ளூரா என என்னால் இனம் கண்டு கொள்ள முடியும். அவன் வெளிநாட்டவன்” என்று. ‘வந்தவன் கிராமத்தில் இருப்பதற்கு வாய்ப்பில்லை. அவன் நிச்சயமாக இல்ஸ்கொபனை விட்டு வெளியே போயிருப்பான்’ என்று பொலிஸருக்குப் புலப்பட்டது. “புதிதாக, சந்தேகப்படும்படியான, வெளியாருடைய வாகனங்களை யாராவது கண்டீர்களா?” என்று கேட்டுப் பார்த்தார்கள். கொஞ்சம் பலன் கிடைத்தது. ஒரு கார். அதன் இலக்கத் தகட்டில் பொதிகளை ஒட்டும் நாடாவால் ( duct tape)ஒட்டிய தடயங்கள் இருந்தன. அந்தக் கார் VW station wagon, Silver நிறம் என அடையாளங்களைத் திரட்டிக் கொண்டார்கள். தேடுதலின் போது, சம்பவம் நடந்த இடத்தில் இருந்து 250 மீற்றர் தூரத்தில் உள்ள விளையாட்டு மைதானத்தை அண்டிய பகுதியின் புதர்களுக்குள் இருந்து ஒரு சோடி கையுறைகளையும் ஒரு விளையாட்டுத் துப்பாக்கியையும், லீடில் சுப்பர் மார்க்கெற்றின் வாரந்த பிரசுரங்களையும் பொலிஸார் கண்டெடுத்தார்கள். அவனுடைய அங்க அடையாளங்களை முதியவரிடம் பெற்று, ஒரு கற்பனை முகத்தை (Fandom image) வரைய ஏற்பாடு செய்தார்கள்.
  3. 3 ஏறக்குறைய 30 சென்டிமீட்டர் நீளத்துக்குக் காய்ந்து போயிருந்த நிலையில் அந்தக் கறை இருந்திருக்கிறது. வீட்டின் வாசலில் இருந்து சமையல் அறைக்குப் போகும் பாதையில் இருந்த இரத்தக்கறை, பார்வைக்கு இலகுவாகத் தெரிந்து விடும் விதமாகவே இருந்திருக்கிறது. ஆனாலும் பொலிஸாரின் கண்களுக்கு ஏனோ அது தெரியாமற் போய் விட்டது. சில வாரங்கள் போய் விட்டதால் அந்தக் கறை இப்பொழுது காய்ந்து கறுப்பு நிறத்துக்கு வந்து விட்டிருந்தது. உலர்ந்த அந்த இரத்தம் எடித் லாங்கின்(86) உடையது என்பதுவும் இப்பொழுது தெளிவாகிவிட்டது. அந்தக்கறையைப் பார்க்கும் போதே, இங்கே ஒரு குற்றம் நடந்திருக்க வேண்டும் என்பது வெள்ளிடை மலை. ஏனோ அது பொலிஸாருக்குத் தெரியாமற் போய் விட்டது. 14.12.2022 அன்று எடித் லாங் தனது சமையலறையில் இறந்திருந்தார். மாலையில் எடித் லாங்கின் மகள் ஹைக்கே(64), தனது தாயார் சமையலறையில் இறந்திருப்பதைக் கண்டு பொலிஸாருக்குத் தகவல் தந்திருக்கிறார். அவரது உடல் சமையல் அறையின் தரையில் இருந்தது. இடது கை பின் நோக்கி நீண்டிருந்தது. யாரோ அவரை அங்கே இழுத்து வந்து விட்டது போலவே அந்தக் காட்சி இருந்தது. அவசர உதவி மருத்துவரும், மருத்துவ உதவியாளர்களும் இதே கருத்தைத்தான் முன் வைத்தார்கள். ஆனால் குற்றப் பிரிவுப் பொலிஸார் அன்று மாலையே விசாரணைகளை நடத்தி, ”இந்த மரணத்துக்கும் வெளியாட்கள் எவருக்கும் தொடர்பு இருக்க வாய்ப்பில்லை. தரையில் விழுந்ததால், தலையில் காயம் ஏற்பட்டு மரணம் நிகழ்ந்திருக்கிறது. இது ஒரு விபத்து மரணம்” என்று அறிவித்தார்கள். ‘எடித் லாங் தடுமாறி விழுந்திருக்கிறார், உச்சந் தலையில் காயம் ஏற்பட்டிருக்கிறது. எடித்லாங்கின் கைப்பை திறந்திருந்தது. அந்தக் கைப்பை, பணம் இல்லாமல் வெறுமையாக இருந்தது’ எடித் லாங்கின் மரணச் சான்றிதழில் இப்படித்தான் பதிவு செய்யப்பட்டுள்ளது. அடுத்த வாரம் 19.12.2022, திங்கட்கிழமை எடித்லாங்கின் உடல் தகனம் செய்யப்பட்டது. பொலிஸார் சிரத்தை எடுத்து எடித்லாங்கின் மரணத்தில் சரியான முறையில் விசாரணையை மட்டும் மேற்கொண்டிருந்திருந்தால், அடுத்து நடந்த கொலையை ஒருவேளை தடுத்திருக்கலாம். எடித்லாங்கின் இறப்பு விபத்தால் ஏற்பட்ட மரணம் என அறிவிக்கப் பட்டதால், கொலையாளி தன்னைத் தானே தட்டிக் கொடுத்து , அதே பாணியில் இன்னுமொரு கொலையையும் செய்வதற்கு ஏதுவாக எடித் லாங்கின் மரண விசாரணையின் தீர்ப்பு அமைந்து விட்டிருந்தது. எடித் லாங்கின் உடல் தகனம் செய்யப்பட்டதன் பின்னர் ஹைக்கே தனது தாயாரின் வீட்டை த் துப்பரவு செய்து ஒழுங்கு படுத்துவதற்குச் சென்று பார்த்த போது, தனது தாயார் விபத்தில் இறக்கவில்லை மாறாக கொலை செய்யப்பட்டுள்ளார் என்பதற்கான சில தடயங்களைக் கண்டறிந்தார். பாதுகாப்புக்கு என்று போடப்பட்டிருந்த கதவுச் சங்கிலி உடைக்கப் பட்டிருந்தது. தொலைபேசி வயர் துண்டிக்கப் பட்டிருந்தது. கட்டிலின் கீழ் இருந்த மரப் பெட்டி உடைக்கப்பட்டு இருந்தது. அந்த மரப் பெட்டியின் மீது இரத்தக் கறை இருந்தது. இந்தத் தகவல்களை உடனடியாகப் பொலிஸாருக்கு அறிவித்து தன் தாயின் மரணத்தில் இருந்த சந்தேகத்தையும் ஹைக்கே பதிவு செய்தார். மீண்டும், எடித்லாங்கின் வீட்டை பரிசோதித்த பொலிஸார் மேலதிக விசாரணைகளுக்காக வீட்டைப் பூட்டி ‘சீல்’ வைத்து விட்டுப் போனார்கள். “கொலை நடந்திருப்பதற்கான சாத்தியம் இருப்பதை நாங்களும் ஏற்றுக் கொள்கின்றோம். மேலதிகத் தடயங்கள் கிடைக்கவில்லை. எடித் லாங்கின் உடலும் எரிக்கப்பட்டு விட்டது. ஆகவே மேற்கொண்டு எதுவும் செய்வதற்கு இல்லை. நீங்கள் அந்த வீட்டை இனி துப்பரவு செய்து கொள்ளலாம்” என பொலிஸ் தரப்பில் இருந்து, ஹைக்கேக்கு பதில் வந்தது. தாயின் இழப்பில் ஏற்பட்ட சோகம், பொலிஸாரின் கையாலாகத் தனம் எல்லாம் சேர்ந்து ஹைக்கேயால் நிம்மதியாக உறங்க முடியாதிருந்தது. அப்பொழுதுதான் ஸ்வேபிஸ் ஹால் நகரப் பத்திரிகையில் இந்த விடயத்தைப் பற்றி அலசி ஆராய்ந்து கொண்டிருந்த நிருபரின் தொடர்பு அவருக்குக் கிடைத்தது. பத்திரிகை நிருபர், லுமினோல் எண்ணெய்யை ( Luminol oil)இணையத்தளத்தில் இருந்து வாங்கிக் கொண்டார். சந்தேகப்படும் இடங்களில் லுமினோலை பூசினால், அங்கே இரத்தம் இருந்தாலும், அவை சரியாகத் துடைக்கப்படாமல் இருந்தாலும் அந்தப் பகுதி ஒளிர ஆரம்பிக்கும். கொலைகள் நடக்கும் இடங்களில், விசாரணைகளில் தடயங்களைக் கண்டறிவதற்காக லுமினோலை புலானாய்வாளர்கள் பயன்படுத்துவார்கள். இப்பொழுது பத்திரிகை நிருபர் லுமினோலைப் பயன் படுத்தி ஒளிரும் இடங்களைப் படம் பிடித்துக் கொண்டார். “விசாரணையில் அசட்டையீனம். ஒரு கொலை, விபத்தாக காட்டப் பட்டிருக்கிறது” என்று அடுத்தநாள் பத்திரிகைச் செய்தியின் தலைப்பு இருந்தது. கூடவே, தரைக் கம்பளத்தின் கீழே இரத்தம் உறைந்திருந்தது. கொலையாளி அந்த இரத்தக் கறையை மறைப்பதற்காக, அவசரத்தில் பக்கத்தில் இருந்த கம்பளத்தை எடுத்து இரத்தம் இருந்த இடத்தில் போட்டு மூடி விட்டிருக்கிறார். கதவு வாசலில் இருந்து சமையலறை வரை தரையில் இரத்த அடையாளங்கள் இருக்கின்றன. அது எடித் லாங்கை, வாசலில் வைத்து தாக்கிக் கொலை செய்து விட்டு, கொலையாளி அவரை இழுத்து வந்து சமையலறையில் போட்டதைக் காட்டுகிறது. தரையில் இருந்த இறத்தக் கறையை சமையலறையில் இருந்த துணியினால் துடைத்து, பின் அதை சமையல் அறைத் தண்ணீர் தொட்டியில் கழுவியதற்கான அடையாளங்கள் இருக்கின்றன…” என படங்களுடன் செய்தி வெளியானது. உள்ளூரில் வெளியிடப்பட்ட இந்தச் செய்தியை யேர்மனியின் பல பாகங்களிலும் வெளியாகும் பல பத்திரிகைகள் வாங்கி தங்கள் தங்கள் பத்திரிகைகளிலும் பிரசுரித்தார்கள். இந்தச் செய்தியால், பொலிசார் மீது விமர்சனங்கள் எழுந்தன. பொலிசாரது செயற்பாடுகள் சரியாக அமையவில்லை என்பதால், மக்கள் பொலிசார் மீதான தமது அதிருப்தியை வெளிப்படையாகவே கதைத்தார்கள். பொலிஸாரின் மேலதிகாரி ஊடகவியலாளர்களை அழைத்து, தங்களது பக்க நியாயங்களைச் சொன்னார். “எடித் லாங், மருந்துகளை உட் கொள்பவர். மயக்கம் அவருக்கு அடிக்கடி வருவதுண்டு என்று அவரது குடும்ப வைத்தியர் குறிப்பிட்டிருக்கிறார். முதுமை, தள்ளாட்டம் என்பன காரணமாக அவர் விழுந்ததனால்தான் சம்பவம் நடந்திருக்கிறது என்ற நோக்கிலேயே நாங்கள் விசாரணைகளை மேற்கொண்டோம். எதுவானாலும் தவறு நடந்து விட்டது என்பதை நாங்கள் ஒத்துக் கொள்கிறோம். அதற்காக வருந்துகிறோம். எடித் லாங்கின் வீட்டில் இருந்து மேற்கொண்டு தடயங்களை எங்களால் பெற முடியவில்ல. ஹைடமேரியின் கொலையில் இருந்து தடயங்களைச் சேகரித்து வைத்திருக்கிறோம். கொலையாளியைக் கண்டுபிடிக்கும் எங்களது வேலை தொடர்கிறது” பொலிஸாரிடம் இருந்து வந்த இந்தக் கருத்தைப் பற்றி எடித் லாங்கின் மகள் ஹைக்கே இப்படிச் சொல்லி இருந்தார், “ எனது தாயார் தலையில் தாக்கப் பட்டு கொல்லப் பட்டிருக்கிறார். பொலிஸார் அதை விபத்து என்றார்கள். நாங்கள் அதை கொலை என்று நிரூபித்திருக்கிறோம். தவறி விழுந்த ஒருவருக்கு உச்சந் தலையில் காயம் எப்படி ஏற்படும் என்றாவது குறைந்த பட்சம் அவர்கள் ஏன் விளங்கிக் கொள்ளவில்லை. ‘தவறு, வருந்துகிறோம்’ போன்ற சொற்களுடன் இந்த விடயத்தை பொலிஸ் தரப்பு கடந்து போயிருக்கிறது. எனக்கு அவர்கள் மேல் இருந்த நம்பிக்கையும் மரியாதையும் வெகுவாகக் குறைந்து விட்டன. மக்கள் மேல் தங்களுக்கு நம்பிக்கை குறைந்து விட்டது என்பது பொலிஸாருக்கும், மரண விசாரணை மேற்கொண்ட அரச சட்டத்தரணிக்கும் தெளிவாகத் தெரிந்து விட்டது. ஆகவே நடந்த இரண்டு கொலைகளை யார் செய்தது என்பதை கண்டுபிடிப்பது மட்டுமல்லாமல் அதை விரைவாக முடிக்க வேண்டிய கட்டாயமும் அவர்களுக்கு வந்தது.. கொலையாளியை க் கண்டு பிடிக்கும் வேலையை அவர்கள் செய்யட்டும். அந்த இடைவெளியில் நாங்கள் இல்ஸ்கொபன் கிராமத்துக்குப் போய் வருவோம்.
  4. 2 எந்த விசாரணைகளூடும் பொலிசாரால் முன்னேற முடியாமல் இருந்தது.. ஆனால் பத்திரிகைகள் விடவில்லை. அதுவும் உள்ளூர் பத்திரிகை ஓடியோடிச் செய்திகளைச் சேகரித்து, முதன்மைச் செய்தியாக வெளியிட்டுக் கொண்டிருந்த து . அதிலும் ஒரு நிருபர், ஆழமாக உள்ளிறங்கி, எடித் லாங்கியின் உறவுகளுடன் தொடர்புகளை ஏற்படுத்தி, அவரது மரணத்தைப் பற்றிய விபரங்களைச் சேகரித்து பத்திரிகையில் வெளியிட ஆரம்பித்தார். எடித் லாங்கைப் போலவே ஹைடமேரி(77)யும் தனியாக வாழ்ந்து வந்த விதவைதான். வோக்கர் (Walker) இல்லாமல் அவரால் நடமாட முடியாது. அவரின் நண்பராக இருந்தவர் ஹூர்ட் (89). அவரும் தனிமையில் இருந்ததால் இருவரும் அடிக்கடி சந்தித்துக் கதைத்துக் கொள்வார்கள். ஹைடமேரி இருந்த குடியிருப்பின் வாசல் கதவின் பூட்டு இரண்டு வாரங்களாகப் பழுதாகி இருந்தது. அதைத் திருத்துவதற்கு, அடுத்தநாளான வியாழக்கிழமையே வேலையாள் வருவதற்கு குடியிருப்பின் மேற்பார்வையாளர் ஏற்பாடு செய்திருந்தார். வாசல் கதவு எப்பொழுதும் சாத்தப்பட்டிருப்பதால் வெளியாட்கள் யாருக்கும் கதவின் பூட்டு உடைந்திருப்பது தெரிய வாய்ப்பில்லை. அப்படி யாரேனும் உள்ளே வந்தால் கூட, அவரவர்கள் தங்கள் தங்கள் வீடுகளைப் பூட்டிக் கொண்டே உள்ளே இருந்தால் ஆபத்துக்கள் இல்லை. ஹைடமேரியின் மூப்பு மற்றும் தனிமை காரணமாக அவரது வைத்தியரிடம் இருந்து, ஒரு சாதனம் அவருக்கு கிடைத்திருந்தது. அவருக்கு உதவிகள் தேவைப்படும் பட்சத்தில் அதில் உள்ள பட்டனை அழுத்தினால், உடனடியாக அவசர மருத்துவர் தொடர்பு கொள்வார். அவரது மகள்மாரும் ஒவ்வொரு நாளும் வந்து அவரைப் பார்த்து அவருக்குத் தேவையானவற்றை எல்லாம் செய்து கொடுத்து விட்டுப் போவார்கள். அன்று புதன் கிழமை, ஹைடமேரியை அன்றைய மாலையில் சந்திப்பதாக ஹூர்ட் சொல்லி இருந்தார். நண்பர் வருவார், அவருடன் மாலையில் கோப்பி அருந்தலாம், நிறையப் பேசலாம் என்று கணக்குப் போட்ட ஹைடமேரி, அவரது வீட்டில் இருந்து 300 மீற்றர் தூரத்தில் உள்ள Nah&Gut கடைக்கு மதியம் சென்று, இரண்டு துண்டு கேக்குகளும்,ஒரு பத்திரிகையும், கிறிஸ்மஸ் தாத்தா வடிவில் உள்ள சொக்கிலேற் ஒன்றையும் வாங்கிக் கொண்டு வந்தார். ஆனால், ஹைடமேரி வாங்கிய இரண்டு கேக் துண்டுகளை அன்று யாருமே சாப்பிடவில்லை. சமையலறை மேஜையில் கேக்குகள் மட்டுமல்ல, கோப்பி போடுவதற்குத் தயாராக கோப்பி பாட் (Coffee pad) போடப்பட்டிருந்த மெசினும் இருந்தது. அவரது நண்பரான ஹூர்ட் உடன் சந்திப்பு அன்று மட்டுமல்ல என்றும் அவருக்கு இல்லாமல் போய்விட்டது. ஹூர்ட் மாலையில் வீட்டுக்கு வரும் பொழுது, ஹைடமேரியின் வீட்டில் விளக்குகள் எரிவதைப் பார்த்திருக்கிறார். அதுவும் ஹைடமேரியின் குளியலறையில் விளக்கு எரிந்து கொண்டிருந்ததாலும், கிறிஸ்மஸ் காலம் என்பதாலும் யாரேனும் விருந்தினர்கள் வந்திருக்கலாம் என்ற நினைத்து, அவர் தன் வீட்டுக்குப் போய்விட்டார். ஹூர்ட், தனது வயது மூப்புக் காரணமாக அதிகளவு வெளியே போவதில்லை. ஹைடமேரியுடன்தான் அவர் பழக்கங்களை வைத்திருந்தார். வியாழக்கிழமையும் ஹைடமேரியிடம் இருந்து அவருக்கு அழைப்பு வரவில்லை. கிறிஸ்மஸ் கொண்டாட்டம் நெருங்குவதால் எல்லோரிடமும் ஒரு பரபரப்பு இருக்கும். அதனால் இந்தக் காலகட்டத்தில் யாரும் யாரையும் தொந்தரவு செய்வதில்லை. ஹூர்ட்டும் அந்த நினைப்பில் பேசாமல் இருந்து விட்டார். வெள்ளிக்கிழமை காலையில் அன்றைய தினசரியைப் பார்த்த ஹூர்ட்டுக்கு அதிர்ச்சியாக இருந்தது. அவரை அதிர்ச்சியாக்கிய செய்தி, புதன்கிழமை மாலை ஹைடமேரி கொலை செய்யப்பட்ட செய்திதான். ‘பேஸ்போல் துடுப்பு அல்லது அதுபோன்ற ஒரு பொருளால் 20 தடவைகள் வரை தலையில் தாக்கப்பட்டு ஹைடமேரி கொலை செய்யப்பட்டிருக்கிறார். அவர் வீட்டில் இருந்து 1500 யூரோக்கள்வரை களவாடப்பட்டிருக்கின்றது’
  5. அழகானது மட்டுமல்ல அமைதியையும் பழமையையும் பேணிக் காக்கும் ஒரு நகரம்தான், யேர்மனியில் இருக்கும் ஸ்வேபிஸ் ஹால் நகரம். இரண்டாம் உலகப் போரில் குண்டுகளுக்குத் தப்பியது மட்டுமல்லாமல் போர் நடந்து கொண்டிருந்த போது யேர்மனியின் பல நகரங்களுக்கு உணவுகளை வழங்கிய பெருமையையும் இந்த நகரம் தனக்குச் சேர்த்துக் கொண்டுள்ளது.. கோடை என்றில்லை குளிர் காலங்களிலும் பல சுற்றுலாப் பயணிகள் இந்த நகரத்துக்கு வந்து போவார்கள். இரவு நேரத்தில் தேவாலயப் படிக்கட்டுகளில் நடக்கும் நாடகங்களைப் பார்ப்பதற்கு என்றே வெளி நகரங்களில் இருந்து பலர் வருவார்கள். எனக்கு, ஸ்வேபிஸ்ஹால் நகரம் பிடித்துப் போனதால்தான், ஏறக்குறைய நாற்பது ஆண்டுகளாக நான் இந்த நகரத்திலேயே வாழ்கிறேன். இது எனது தாயகத்தில் நான் வாழ்ந்ததை விட அதிகமான வருடங்கள். சரி விடயத்துக்கு வருகிறேன். சனிக்கிழமைகளில் வரும் பத்திரிகையில்தான் அதிகமான விளம்பரங்கள் வருகின்றன. வீடு விற்பனைகள், வேலை வாய்ப்புகள், வர்த்தக விளம்பரங்கள், மரண அறிவித்தல்கள் என்று ஏகப்பட்டவை அடங்கி சனிக்கிழமைப் பத்திரிகை ஊதிப் பெருத்துப் போய் இருக்கும். 17.12.2022 அன்று வந்த பத்திரிகையிலும், வழமைபோலவே எல்லா விடயங்களும் இருந்தன. அதில், மரண அறிவித்தல்கள் பகுதியில் எடித் லாங் (86), 14.12.2022, புதன்கிழமை காலமாகிவிட்டதாகவும் அவரது உடல் 19.12.2022 அன்று தகனம் செய்ய இருப்பதாகவும் தகவல் இருந்தது. என்னைப் போலவே, எடித் லாங்கினைத் தெரியாதவர்கள் அந்த அறிவித்தலைக் கடந்து போயிருப்பார்கள். ஆனால் எடித் லாங்கின் மரணம் ஒரு கிழமை கழித்து செய்தி ஒன்றைச் சொல்லக் காத்திருந்தது. எடித் லாங்கின் வீட்டில் இருந்து 315 மீற்றர் தூரத்தில் வசித்த இன்னும் ஒரு மூதாட்டி, எடித் லாங்கின் இறப்புக்குப் பின் ஒரு கிழமை கழித்து 21.12.2022,புதன் கிழமை அன்று இறந்து போனார். ஒரு கிழமை இடைவெளியில் அதுவும் சொல்லி வைத்தது போல் புதன்கிழமையில் அருகருகே வசித்த இரு மூதாட்டிகளுக்கு மரணம் சம்பவித்திருந்தது பலருக்கு ஆச்சரியமாக இருந்தது. விசாரணைகளின் பின்னர், எடித் லாங்கின் மரணம், அவர் தரையில் தவறி விழுந்ததால் ஏற்பட்டது என அறிவிக்கப் பட்டிருந்தது. ஆனால் மற்றைய மரணம் ஒரு கொலை என்று அறிவிக்கப்பட்டது. நகரில் சந்தைக்கு வந்தவர்கள், வீதிகளில் சந்தித்துக் கொண்டவர்கள் என எல்லோர் வாய்களும் இந்த மரணங்களைப் பற்றிப் பேசிக் கொண்டன. “ஒருவேளை எடித் லாங்கின் மரணமும் கொலையாக இருக்குமோ?” என்ற சந்தேகம் மெதுவாக எழுந்தது. அதில் உண்மையும் இருந்தது. அமைதியாயிருந்த ஸ்வேபிஸ் ஹால் நகரம் மெது மெதுவாக அதை இழந்து கொண்டிருந்தது. அடுத்தடுத்து இரண்டு மரணங்கள். அதில் ஒன்று விபத்து, மற்றது கொலை, அதுவும் இரண்டும் சிறிய இடைவெளிகளில் உள்ள வீடுகளில் நடந்ததுள்ளன. இதையிட்டு ஸ்வேபிஸ் ஹால் நகரம் வெலவெலத்துப் போயிருந்த நேரத்தில், 25.01.2023 அன்று, அட அதுவும் கூட ஒரு புதன் கிழமைதான், நகரத்தில் இருந்து ஐந்து கிலோ மீற்றர் தூரத்தில் இருந்த மிஹேல்பாக் என்ற கிராமத்தில் 89 வயதான இன்னுமொரு மூதாட்டி, இறந்து போனார். 'அவரது இறப்பும் கொலைதான்' என விசாரணைகளை முடித்த பொலிஸ் உயர் அதிகாரி அறிவித்தார். யேர்மனியின் ஒரு ஓரமாக அமைதியாக இருந்த ஸ்வேபிஸ் ஹால் நகரம், அரச, தனியார் வானொலிகளில்,தொலைக்காட்சிகளில். இணையத் தளங்களில், சமூக வலைத்தளங்களில்... என்று எல்லாவற்றிலும் அடிபட்டுக் கொண்டிருந்தது. கொலைச் செய்திகளை வாங்கி, வெளி நாடுகளிலும் தங்கள் தங்கள் மொழிகளில் ஊடகங்களில் வெளியிடத் தொடங்கினார்கள். பொன் கிடைத்தாலும் புதன் கிடைக்காது என்பார்கள். ஸ்வேபிஸ் ஹால் நகரத்தில் புதன் வந்தாலே நடுக்கம் வர ஆரம்பித்திருந்தது. வயோதிபம் வந்தாலே நடுக்கம் தானாக வந்து விடும். புதன் வந்தாலே ஸ்வேபிஸ் ஹாலில் முதியவர்கள் இன்னும் நடுங்க ஆரம்பித்து விட்டார்கள். இந்த நேரத்தில் இன்னொரு கொலையும் எல்லோர் கவனத்துக்கும் வந்தது. ஏற்கெனவே திகிலாகப் பேசப்பட்ட அந்தக் கொலை 2020 இல் நடந்தது. எல்பிரிடே கூகெர் என்பவர் ஸ்வேபிஸ் ஹால் நகரத்தில் தனிமையில் வசித்து வந்தவர். அவர் பியர் தயாரிக்கும் ஒரு நிறுவனத்துக்குச் சொந்தக்காரி. பெரும் செல்வந்தரான அவர் கொலை செய்யப்பட்டிருந்ததும் ஒரு புதன் கிழமைதான். ‘புதன் கிழமைகள் கொலையாளிக்குப் பிடித்த நாள் போல’ என்று பத்திரிகையும் ஒரு குண்டைத் தூக்கிப் போட எழுபதுக்கு மேலே உள்ளவர்கள், அடுத்த புதன் “ நீயா?, நானா? எதுக்கும் வியாழக்கிழமை இருந்தால் பார்ப்போம்” எனப் பேச ஆரம்பித்தார்கள். “கொரோனா வந்து கனக்க வயது வந்தவர்களை அள்ளிக் கொண்டு போயிட்டுது. இப்ப கொலையாளி ஒருத்தன் வந்திருக்கிறான். பொலிஸ் என்னதான் செய்து கொண்டிருக்கு?” என மக்களிடம் இருந்து முணு முணுப்பு வர ஆரம்பித்தது. “தனி ஒரு கொலையாளியா? அல்லது ஒரு குழுவா? கொலைக்கான காரணம் என்ன? இறந்து போன மூவர்களிடம் பெரியளவில் பணம் இருக்கவில்லை. ஒருவேளை பணம் இருக்கிறது என்று போய், எதுவும் கிடைக்காது ஏமாந்து போனதால், கொள்ளையடிக்க வந்தவன்/ வந்தவர்கள் கொலைகளைச் செய்தானா/செய்தார்களா? உறவுகளுக்குள் சொத்துப் பிரச்சினை ஏதாவது இருந்து அதனால் கொலைகள் நடந்திருக்குமா? வெவ்வேறு காரணங்களுக்காக நடத்தப்பட்ட கொலைகளை ஒன்றாக ஒரு புள்ளியில் இணைத்துப் பார்க்கிறோமா?” என்று பலவிதமான சந்தேகங்களும் ஊகங்களும் எழுந்தன. பொலிஸாரால் ஒரு முடிவுக்கு வரமுடியவில்லை. திணறினார்கள்..
  6. அக்கா, தம்பிக்கு இன்னும் ஒரு அம்மா
  7. இவரது நாடகத்தை நான் நேரடியாகப் பார்க்கவில்லை. ஆனால் ஈழத்து திரைப்படமான நிர்மலாவில் ஓரங்க நாடகமாக சேர்த்திருந்தார்கள். அதைப் பார்த்திருக்கிறேன். விழா குழுவுக்கு வாழ்த்து!
  8. போகாத இடங்களுக்கு கூட்டிப் போய் இருக்கிறீர்கள். தெரியாத முகங்களை காண வைத்திருக்கிறீர்கள். பயணம் இனிதாக இருக்கிறது ரஞ்சித்.
  9. நல்ல பார்த்தீங்களா Suvy? கால்கள் 12
  10. பாட்டியை நானும் மனசாறப் பாராட்டுகிறேன்
  11. இதே நீதி மன்ற வழக்காடல் பாணியில் பல படங்கள் வந்திருக்கின்றன. முடிவு முதலிலேயே தெரிந்து விடுகிறது. மோகன்லால் நடிப்பு நன்றாக இருந்தது.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.