Everything posted by ஏராளன்
-
இராணுவம் கையகப்படுத்தியுள்ள காணிகளின் விடுவிப்பு தொடர்பில் பாதுகாப்பு ஆலோசனைக் குழு கூட்டத்தில் ஜனாதிபதியிடம் கோரிக்கை
19 JUN, 2025 | 04:01 PM பாதுகாப்பு அலுவல்கள் அமைச்சுசார் ஆலோசனைக் குழு பாதுகாப்பு அமைச்சர் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் தலைமையில் கடந்த 17ஆம் திகதி பாராளுமன்றத்தில் கூடியது. சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளை நிறுத்த கடற்படையின் உதவியைப் பெறுதல், வடக்கு மற்றும் கிழக்கில் காணிகளை விடுவிப்பது தொடர்பான பிரச்சினைகள் போன்ற பாதுகாப்பு அமைச்சுடன் தொடர்புடைய பல்வேறு பிரச்சினைகளை பாராளுமன்ற உறுப்பினர்கள் குழுவின் கவனத்துக்குக் கொண்டு வந்தனர். அதன்படி, நியாயமான கோரிக்கைகளை பரிசீலித்து உரிய நடவடிக்கைகளை எடுக்குமாறு அதிகாரிகளுக்குத் தேவையான அறிவுறுத்தல்களை ஜனாதிபதி வழங்கினார். இதன்போது ஜனாதிபதி தெரிவிக்கையில், என்னால் இந்த கூட்டத்தில் முன்கொண்டுவரப்பட்ட கோரிக்கைகளாவன : கிழக்கு மாகாண காணிகளை விடுவித்தல் தொடர்பாக... மட்டக்களப்பு மாவட்டத்தின் காயன்கேணி பிரதேசத்தில் உள்ள பாடசாலைக்கு அருகில் இராணுவத்தினர் ஓய்வு விடுதி ஒன்றை நிர்மாணித்துள்ளதோடு, இது தொடர்பில் நாம் வினவியபோது, அந்த ஓய்வு விடுதியை அகற்ற முடியாது என இராணுவம் அறிவித்ததாக அறிவித்துள்ளது. மட்டக்களப்பு மாவட்டத்தின் முறக்கொட்டாஞ்சேனையில் உள்ள பாடசாலை, பாலயடிவத்தை பிரதேசத்தில் உள்ள வர்த்தக சந்தை, குருக்கள் மடம் பகுதியில் உள்ள பாடசாலை இன்றளவிலும் இராணுவத்தின் கட்டுப்பாட்டில் காணப்படுகிறது. தாண்டியடி விசேட அதிரடிப்படை முகாம் மயானம் அமையப்பெற்றுள்ள காணியிலும், களுவாஞ்சிக்குடி பொலிஸ் நிலையம் தனியாருக்கு சொந்தமான காணியிலும் அமையப்பெற்றுள்ளது. வாகரை பிரதேசத்தில் கடற்படையினரினால் கையகப்படுத்தப்பட்டுள்ள காணிகளின் அளவு எவ்வளவு என்பது தொடர்பாகவும் அதில் எவ்வளவு காணி பயன்படுத்தப்படுகிறது என்பது தொடர்பாகவும் சரியான புரிதல் இல்லை என்பதுடன், வாகரை பிரதேசத்தில் அதிகளவான காணிகள் கடற்படையினருக்கு சொந்தமாக காணப்படுவதால், அந்தக் காணிகளை விடுவிக்க வேண்டும் எனவும் கோரிக்கைகளை முன்வைத்தேன். இந்தக் காணிகள் தொடர்பான விடயங்கள் விரிவாக ஆராயப்பட வேண்டும் என்பதால் இது தொடர்பான விசேட குழுவொன்றை நியமிக்குமாறு கேட்டிருந்தேன். ஆலையடி பிரதேசத்தில் நெல் சந்தைப்படுத்தல் சபையும் இராணுவ முகாமிற்குள் அமைந்து காணப்படுவதுடன், இராணுவ முகாமிற்குள் அமைந்துள்ள சில பாடசாலைகளுக்கு பதிலாக மாற்றுப் பாடசாலைகள் நிர்மாணிக்கப்பட்டுள்ள போதிலும் அவை கிராமத்திற்கு வெளியில் அமைந்துள்ள காரணத்தினால் பல சிக்கல்களை மாணவர்கள் மற்றும் ஊர்மக்கள் சந்திக்கின்றனர். அனைத்து இராணுவ முகாம்களும் அமைந்துள்ள காணிகள் குறித்து மீளப் பரிசீலனை செய்து அறிக்கை ஒன்றினை வழங்குமாறு அறிவித்துள்ளதாகவும், அந்த அறிக்கை கிடைத்தவுடன் அதன் அடிப்படையில் மீண்டும் கலந்துரையாடல் நடாத்தப்படும் எனவும் சபையில் கௌரவ தவிசாளர் தெரிவித்தார் எனக் கூறினார். https://www.virakesari.lk/article/217922
-
மொசாட் அமைப்பின் வெற்றிகளும் தோல்விகளும் - வரலாற்றில் இடம்பெற்ற 14 முக்கிய ஆபரேஷன்கள்
பட மூலாதாரம்,GETTY IMAGES/BBC கட்டுரை தகவல் எழுதியவர், பிபிசி நியூஸ் அரபிக் பதவி, 9 மணி நேரங்களுக்கு முன்னர் சமீபத்திய தொடர்ச்சியான தாக்குதல்களின் மூலம், இஸ்ரேல் இரானிய அணுசக்தி நிலையங்கள், ராணுவ தளங்கள் மற்றும் தனியார் குடியிருப்புகளை குறிவைத்துள்ளது. இந்த தாக்குதல்கள் பெரும்பாலும் நாட்டின் மேற்குப் பகுதியிலும் தலைநகர் டெஹ்ரானைச் சுற்றியும் நடந்துள்ளன. தாக்குதல்கள் வான்வழியாக நடந்திருந்தாலும், இஸ்ரேலிய உளவு அமைப்பான மொசாட், இலக்குகளைக் கண்டறிந்து தரையிலிருந்து நடவடிக்கைகளை இயக்குவதில் முக்கிய பங்கு வகித்துள்ளதாக சந்தேகிக்கப்படுகிறது. உதாரணமாக, மொசாட் உளவாளிகள் இரானின் மீதமுள்ள வான் பாதுகாப்பு அமைப்புகளை குறிவைக்க நாட்டிற்குள் கடத்தப்பட்ட டிரோன்களைப் பயன்படுத்தியதாக நம்பப்படுகிறது. முன்னதாக தங்கள் பாதுகாப்புப் படைகளில் இஸ்ரேலிய உளவுத்துறை ஊடுருவியிருக்கலாம் என சந்தேகிப்பதாக இரானிய அதிகாரிகள் ஒப்புக்கொண்டனர். ஜூன் 13 அன்று இஸ்ரேலிய தாக்குதல்கள் தொடங்கியதிலிருந்து கணிசமான எண்ணிக்கையிலான முக்கிய இரானிய ராணுவ அதிகாரிகள் மற்றும் அணு விஞ்ஞானிகள் வெற்றிகரமாக குறிவைக்கப்பட்டுள்ளனர், இது இஸ்ரேல் அவர்களின் இருப்பிடம் குறித்து உளவுத்துறை தகவல்களைப் பெற்றிருப்பதைக் குறிக்கிறது. இந்த நிகழ்வுகளில் மொசாட்டின் பங்கை மதிப்பிடுவது எளிதல்ல. இஸ்ரேல் அந்த அமைப்பின் செயல்பாடுகள் குறித்து அரிதாகவே கருத்து தெரிவிக்கிறது மற்றும் உளவுத்துறையின் பிற பிரிவுகளும் உள்ளன. ஆனால் மொசாட் அமைப்பின் குறிப்பிடத்தக்க கடந்தகால செயல்பாடுகள் பற்றி நாம் அறிந்தவற்றை இந்தக் கட்டுரையில் பார்க்கலாம். மொசாட்டின் வெற்றிகள் பட மூலாதாரம்,ANADOLU VIA GETTY படக்குறிப்பு, ஹமாஸ் தலைவர் இஸ்மாயில் ஹனியே (இடது) டெஹ்ரானுக்கு விஜயம் செய்தபோது, இரானிய புரட்சிகர காவல்படையின் தளபதி ஹொசைன் சலாமி (வலது) அவரை வரவேற்கிறார். இருவரும் இஸ்ரேலிய தாக்குதல்களில் கொல்லப்பட்டனர். ஹமாஸ் தலைவர் இஸ்மாயில் ஹனியேவின் படுகொலை ஹமாஸ் அரசியல் தலைவர் இஸ்மாயில் ஹனியே ஜூலை 31, 2024 அன்று டெஹ்ரானில் உள்ள ஒரு விருந்தினர் மாளிகையில் தங்கியிருந்தபோது கொல்லப்பட்டார். இந்தப் படுகொலைக்கு இஸ்ரேல் ஆரம்பத்தில் பொறுப்பேற்கவில்லை, ஆனால் பல மாதங்களுக்குப் பிறகு அதன் பாதுகாப்பு அமைச்சர் இஸ்ரேல் காட்ஸ், இந்தக் கொலைக்குப் பின்னால் இஸ்ரேல் இருந்ததை ஒப்புக்கொண்டார். ஹனியேவின் மரணத்தைச் சுற்றியுள்ள கேள்விகளுக்கான பதில் இன்னும் தெளிவாகத் தெரியவில்லை. ஹனியேவை, ஒரு ஏவுகணை 'நேரடியாக' தாக்கியதாக ஹமாஸின் மூத்த அதிகாரி கலீல் அல்-ஹய்யா ஒரு செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தார். ஹனியேவுடன் இருந்த சாட்சிகளை மேற்கோள் காட்டி அவர் இதைக் கூறினார். ஆனால் நியூயார்க் டைம்ஸ் வெளியிட்டுள்ள ஒரு செய்தியில், ஏழு அதிகாரிகள் கூறியதை மேற்கோள் காட்டி, ஹனியே தங்கியிருந்த கட்டடத்திற்குள், இரண்டு மாதங்களுக்கு முன்பாகவே மறைத்து கொண்டுசெல்லப்பட்ட ஒரு வெடிகுண்டு மூலம் அவர் கொல்லப்பட்டதாகக் தெரிவிக்கப்பட்டுள்ளது. பிபிசியால் இந்தக் கூற்றுகளில் எதையும் சரிபார்க்க முடியவில்லை. 2023 அக்டோபர் 7 அன்று தெற்கு இஸ்ரேல் மீது ஹமாஸ் குழு நடத்திய தாக்குதலுக்குப் பிறகு இஸ்ரேலால் கொல்லப்பட்ட பல ஹமாஸ் தலைவர்களில் ஹனியேவும் ஒருவர். இதில் காஸாவின் ஹமாஸ் தலைவர் யஹ்யா சின்வார், அவரது சகோதரர் முகமது, ஹமாஸின் ராணுவப் பிரிவின் தலைவர் முகமது டெய்ஃப் மற்றும் அவருக்கு அடுத்த இடத்தில இருந்த தலைவர் மர்வான் இசா ஆகியோர் அடங்குவர். ஹெஸ்பொலா அமைப்பின் சாதனங்கள் வெடித்த நிகழ்வு பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, வெடித்துச் சிதறிய தகவல் தொடர்பு சாதனத்தால் கொல்லப்பட்ட ஹெஸ்பொலா உறுப்பினரின் இறுதிச் சடங்கு நடைபெறுகிறது. செப்டம்பர் 17, 2024 அன்று, லெபனான் முழுவதும் முக்கியமாக வலுவான ஹெஸ்பொலா இருப்பு உள்ள பகுதிகளில் ஆயிரக்கணக்கான பேஜர்கள் ஒரே நேரத்தில் வெடித்தன. இந்த வெடிப்புகள் பயனர்களையும் அருகிலுள்ள சிலரையும் காயப்படுத்தின அல்லது கொன்றன. மறுநாள் வாக்கி-டாக்கிகள் அதே பாணியில் வெடித்தன. நூற்றுக்கணக்கானவர்கள் உயிரிழந்தனர், காயமடைந்தனர். தாக்குதல் நடந்த நேரத்தில், இஸ்ரேலும் ஹெஸ்பொலாவும் ஒரு மோதலில் ஈடுபட்டிருந்தன. இது அக்டோபர் 7 ஹமாஸ் தாக்குதல்களுக்கு ஒரு நாள் கழித்து, இஸ்ரேலிய நிலைகள் மீது ஹெஸ்பொலா தாக்குதல் நடத்தியதின் தொடர்ச்சியாக ஏற்பட்ட மோதலின் ஒரு பகுதியாகும். இரண்டு மாதங்களுக்குப் பிறகு இஸ்ரேல்தான் இதற்குப் பொறுப்பு என்று இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு ஒப்புக்கொண்டதாக அப்போது இஸ்ரேலிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டன. பிபிசியின் அமெரிக்க கூட்டு செய்தி முகமையான சிபிஎஸ்ஸுக்கு இரண்டு முன்னாள் மொசாட் ஏஜென்ட்கள் அளித்த பேட்டியில், இந்த நடவடிக்கையின் விவரங்களை வெளியிட்டனர். மொசாட் வாக்கி-டாக்கிகளை இயக்கும் பேட்டரிகளுக்குள் ஒரு வெடிக்கும் சாதனத்தை மறைத்து வைத்திருந்ததாகவும், பொதுவாக இந்த வாக்கி-டாக்கிகள் ஒருவரின் இதயத்திற்கு அருகில் இருக்குமாறு உடையில் பொருத்தப்படும் என்றும் கூறினர். 10 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு போலி நிறுவனத்திடமிருந்து 'நல்ல விலைக்கு' 16,000க்கும் மேற்பட்ட வாக்கி-டாக்கிகளை ஹெஸ்பொலா அறியாமல் வாங்கியதாகவும், பின்னர் 5,000 பேஜர்களையும் வாங்கியதாகவும் ஏஜென்ட்கள் தெரிவித்தனர் என சிபிஎஸ் நியூஸ் செய்தி வெளியிட்டுள்ளது. இந்த வெடிப்புகள் லெபனான் முழுவதும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தின, பல்பொருள் அங்காடிகள் உட்பட எல்லா இடங்களிலும் பேஜர்கள் கொண்டு செல்லப்பட்டபோது வெடிப்புகள் நிகழ்ந்தன. மருத்துவமனைகள் மனித உடல்கள் மற்றும் காயமடைந்தவர்களால் நிரம்பி வழிந்தன, அவர்களில் பலர் உடல் உறுப்புகளை இழந்திருந்தனர். ஐ.நா. மனித உரிமைகள் தலைவர் வோல்கர் டர்க் இந்தத் தாக்குதலை ஒரு போர்க்குற்றம் என்று அழைத்தார். மொஹ்சென் ஃபக்ரிஸாதே படுகொலை பட மூலாதாரம்,EPA படக்குறிப்பு, இரானின் உயர்மட்ட அணு விஞ்ஞானி மொஹ்சென் ஃபக்ரிஸாதேவின் கொலைக்குப் பின்னால் மொசாட் இருப்பதாக சந்தேகிக்கப்படுகிறது. நவம்பர் 2020இல், இரானின் மிக முக்கியமான அணு விஞ்ஞானி மொஹ்சென் ஃபக்ரிஸாதேவை ஏற்றிச் சென்ற ஒரு வாகனத் தொடரணி, தலைநகர் டெஹ்ரானுக்கு கிழக்கே உள்ள அப்சார்ட் நகரில் துப்பாக்கிச் சூட்டுக்கு உள்ளானது. செயற்கை நுண்ணறிவு உதவியுடன் கூடிய ரிமோட் கன்ட்ரோல் இயந்திர துப்பாக்கியால் ஃபக்ரிஸாதே கொல்லப்பட்டார். "பொதுமக்கள் யாரும் உயிரிழக்காமல், ஒரு நகரும் இலக்கை நோக்கி இதுபோன்ற 'சர்ஜிக்கல்' முறையில் படுகொலை செய்வதற்கு, களத்திலிருந்து நிகழ்நேர உளவுத் தகவல்கள் தேவைப்படும்" என்று பிபிசி பாரசீக செய்தியாளரான ஜியார் கோல் அப்போது குறிப்பிட்டிருந்தார். ஏப்ரல் 2018இல், இரானின் அணுசக்தி திட்டம் தொடர்பானதாகக் கூறப்படும் பல ஆவணங்களைக் இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு காட்சிப்படுத்தினார். இது பல மாதங்களுக்கு முன்பு, ஒரு இரானிய 'சேமிப்பு கட்டடத்தில்' மொசாட் அமைப்பு நடத்திய துணிச்சலான நடவடிக்கையில் திருடப்பட்டதாக அவர் கூறினார். இந்த கட்டிடம் டெஹ்ரானில் இருந்து 30 கி.மீ தொலைவில் அமைந்திருந்தது. (இது பின்னர் இரானிய அதிபர் ஹசன் ரூஹானியால் உறுதிப்படுத்தப்பட்டது). ஒரு சிறப்பு செய்தியாளர் சந்திப்பில் ஆவணங்களை வழங்கிய இஸ்ரேலிய பிரதமர், அறிவிக்கப்படாத ஒரு அணு ஆயுதத் திட்டத்திற்காக மொஹ்சென் ஃபக்ரிஸாதே பணியாற்றுகிறார் எனக் கூறினார். "மொஹ்சென் ஃபக்ரிஸாதே... அந்தப் பெயரை நினைவில் கொள்ளுங்கள்," என்று அவர் மீண்டும் வலியுறுத்தினார். 2010 மற்றும் 2012க்கு இடையில், நான்கு இரானிய அணு விஞ்ஞானிகளை இஸ்ரேல் கொன்றதாக இரான் முன்பு குற்றம் சாட்டியிருந்தது. கழுத்து நெரித்து கொல்லப்பட்ட மஹ்மூத் அல்-மபூஹ் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, மஹ்மூத் அல்- மபூஹ் மீது முதலில் மின்சாரம் பாய்ச்சப்பட்டது. பின்னர் அவர் கழுத்தை நெரித்து கொல்லப்பட்டார் 2010 ஆம் ஆண்டு, ஹமாஸின் மூத்த ராணுவத் தலைவரான மஹ்மூத் அல்-மபூஹ் துபை நாட்டின் ஹோட்டல் ஒன்றில் படுகொலை செய்யப்பட்டார். ஆரம்பத்தில், இது ஒரு இயற்கை மரணம் போல் தோன்றியது. ஆனால் துபை காவல்துறையினர் கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்த பின்னர், இறுதியில் கொலையாளிகளை அடையாளம் காண முடிந்தது. அல்-மபூ முதலில் மின்சாரத்தால் தாக்கப்பட்டு பிறகு கழுத்தை நெரித்து கொல்லப்பட்டார் என்பதை காவல்துறை பின்னர் கண்டறிந்தது. இந்த நடவடிக்கை மொசாட்டால் திட்டமிடப்பட்டதாக சந்தேகிக்கப்பட்டது. இது ஐக்கிய அரபு எமிரேட்ஸின் தூதாண்மை ரீதியிலான சீற்றத்தைத் தூண்டியது. இருப்பினும், இஸ்ரேலிய தூதர்கள், மொசாட்டை தாக்குதலுடன் தொடர்புபடுத்த எந்த ஆதாரமும் இல்லை என்று கூறினர். மொபைல் போன் வெடிப்பில் கொல்லப்பட்ட யஹ்யா அய்யாஷ் பட மூலாதாரம்,EPA படக்குறிப்பு, யஹ்யா அய்யாஷின் படம் 1996 ஆம் ஆண்டு, ஹமாஸின் முக்கிய வெடிகுண்டு தயாரிப்பாளரான யஹ்யா அய்யாஷ், 50 கிராம் வெடிபொருட்கள் நிரப்பப்பட்ட மோட்டோரோலா ஆல்ஃபா மொபைல் போன் மூலம் படுகொலை செய்யப்பட்டார். ஹமாஸின் ராணுவப் பிரிவில் ஒரு முக்கிய தலைவரான அய்யாஷ், குண்டுகளை உருவாக்குவதிலும், இஸ்ரேலிய இலக்குகளுக்கு எதிராக சிக்கலான தாக்குதல்களை திட்டமிடுவதிலும் நிபுணத்துவம் பெற்றவர். 2019 இன் பிற்பகுதியில் இந்தக் கொலையின் சில விவரங்களை வெளியிடுவதற்கான தடைகளை இஸ்ரேல் நீக்கியது. மேலும் இஸ்ரேலின் 'சேனல் 13' தொலைக்காட்சி அய்யாஷ் மற்றும் அவரது தந்தை இடையேயான இறுதி தொலைபேசி அழைப்பின் பதிவை ஒளிபரப்பியது. ஆபரேஷன் பிரதர்ஸ் பட மூலாதாரம்,RAFFI BERG படக்குறிப்பு, எத்தியோப்பிய யூதர்கள் பயணித்த வாகனத்திற்கு அருகில் நிற்கும் ஒரு மொசாட் ஏஜென்ட். 1980களின் முற்பகுதியில், பிரதமர் மெனகெம் பிகின் அறிவுறுத்தலின் பேரில் மொசாட் அமைப்பு 7,000 க்கும் மேற்பட்ட எத்தியோப்பியா நாட்டை சேர்ந்த யூதர்களை சூடான் வழியாக இஸ்ரேலுக்கு அழைத்து சென்றது. இதற்காக ஒரு போலி டைவிங் ரிசார்ட்டை மொசாட் பயன்படுத்தியது. அரபு நாடுகள் கூட்டமைப்பில் உள்ள சூடான், இஸ்ரேலுக்கு எதிரி நாடு. எனவே ரகசியமாக செயல்பட்ட மொசாட் ஏஜென்ட்களின் குழு சூடானின் செங்கடல் கடற்கரையில் ஒரு ரிசார்ட்டை அமைத்து அதை தங்கள் தளமாக பயன்படுத்தினர். அந்த ஏஜென்ட்கள் பகலில் ஹோட்டல் ஊழியர்களாக பணிபுரிந்தனர். அண்டை நாடான எத்தியோப்பியாவிலிருந்து வந்த யூதர்களை இரவு நேரத்தில் அவர்கள் ரகசியமாக தங்கள் இடத்திற்கு கொண்டு சென்றனர். இந்த ஆபரேஷன் குறைந்தது ஐந்து ஆண்டுகள் நீடித்தது. அது கண்டுபிடிக்கப்படுவதற்குள் மொசாட் ஏஜென்ட்கள் தப்பி ஓடிவிட்டனர். ம்யூனிக் ஒலிம்பிக் தாக்குதலுக்கு பதிலடி பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, பாலத்தீன ஆயுதக்குழுவால் கொல்லப்பட்டவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக மியூனிக் ஒலிம்பிக் மைதானத்தில் இஸ்ரேல் விளையாட்டு வீரர்கள் அணிவகுத்துச் சென்றனர். 1972-ஆம் ஆண்டு ஒரு பாலத்தீன ஆயுதக்குழு ம்யூனிக் ஒலிம்பிக்கின் போது இஸ்ரேல் ஒலிம்பிக் குழுவின் இரு உறுப்பினர்களை கொன்றது. ஒன்பது பேரை பணயக்கைதிகளாக பிடித்து சென்றது. பின்னர் மேற்கு ஜெர்மன் படையினரின் மீட்பு முயற்சி தோல்வியடைந்ததால், இஸ்ரேல் விளையாட்டு வீரர்கள் கொல்லப்பட்டனர். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, 1972-ஆம் ஆண்டு இஸ்ரேலிய ஒலிம்பிக் குழுவைச் சேர்ந்த 11 பேர் கொல்லப்பட்டனர். அடுத்து வந்த ஆண்டுகளில், மியூனிக் தாக்குதலில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்பட்ட மெஹ்மூத் ஹம்ஷாரி உள்ளிட்டோருக்கு மொசாட் குறிவைத்தது மெஹ்மூத் ஹம்ஷாரி, பாரிஸில் இருந்த அவரது வீட்டில் தொலைபேசியில், வெடிக்கும் சாதனம் வைக்கப்பட்டு கொல்லப்பட்டார். இந்த குண்டுவெடிப்பில் ஹம்ஷாரி ஒரு காலை இழந்து இறுதியில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். ஆபரேஷன் என்டெபி பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, என்டெபி பணயக்கைதிகள் ஒரு வாரத்திற்கு பிறகு விடுவிக்கப்பட்டனர். 1976-ஆம் ஆண்டில் உகாண்டாவில் நடத்தப்பட்ட ஆபரேஷன் என்டெபி என்பது இஸ்ரேலின் வெற்றிகரமான ராணுவ நடவடிக்கைகளில் ஒன்றாக கருதப்படுகிறது. இஸ்ரேலிய ராணுவம் மேற்கொண்ட இந்த நடவடிக்கைக்கு 'மொசாட்' அமைப்பு உளவுத் தகவல்களை வழங்கியது. பாரிஸுக்கு சென்றுகொண்டிருந்த விமானத்தை பாலத்தீன விடுதலைக்கான பாப்புலர் ஃப்ரண்ட் அமைப்பின் இரண்டு உறுப்பினர்களும் அவர்களது இரண்டு ஜெர்மன் கூட்டாளிகளும் கடத்தினர். அவர்கள் விமானத்தை உகாண்டாவிற்கு திருப்பினார். என்டெபி விமான நிலையத்தில் கடத்தல்காரர்கள் பயணிகளையும், விமானக்குழுவையும் பணயக்கைதிகளாக வைத்திருந்தனர். இஸ்ரேலிய கமாண்டோக்கள் விமான நிலையத்துக்குள் புகுந்து, 100 இஸ்ரேலிய மற்றும் யூத பணயக்கைதிகளை மீட்டனர். இந்த அதிரடி நடவடிக்கையின்போது மூன்று பணயக்கைதிகள், கடத்தல்காரர்கள், பல உகாண்டா ராணுவ வீரர்கள் மற்றும் இஸ்ரேலின் தற்போதைய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் சகோதரர், மூத்த கமாண்டோ யோனாதன் நெதன்யாகு ஆகியோர் கொல்லப்பட்டனர். நாஜி அதிகாரி அடால்ஃப் ஐக்மேன்னை தேடி கண்டுபிடித்தது பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, இஸ்ரேலில் நடந்த விசாரணையின் போது அடால்ஃப் ஐக்மேன் 1960-ஆம் ஆண்டு அர்ஜென்டினாவில் இருந்து நாஜி அதிகாரி அடால்ஃப் ஐக்மேன்னை கடத்தியது மொசாட்டின் மிகவும் பிரபலமான உளவு நடவடிக்கைகளில் ஒன்றாகும். இரண்டாம் உலகப்போரின் போது நாஜிக்களால் 60 லட்சம் யூதர்கள் இனப் படுகொலை செய்யப்பட்டதில் ஐக்மேன் முக்கிய சூத்திரதாரியாக கருதப்படுகிறார். தான் பிடிபடுவதை தவிர்ப்பதற்காக பல நாடுகளுக்கு தப்பி சென்று கொண்டே இருந்த ஐக்மேன் இறுதியில் அர்ஜென்டினாவில் குடியேறினார். 14 மொசாட் ஏஜென்ட்கள் கொண்ட குழு அவரைக் கண்டுபிடித்து கடத்தி இஸ்ரேலுக்குக் கொண்டு வந்தது. அங்கு விசாரணை நடத்தப்பட்டு இறுதியில் அவர் தூக்கிலிடப்பட்டார். குறிப்பிடத்தக்க தோல்விகள் பல வெற்றிகரமான நடவடிக்கைகளை நடத்தியுள்ள போதிலும் மொசாட் பல தோல்விகளையும் சந்தித்துள்ளது. 7 அக்டோபர் 2023- ஹமாஸ் நடத்திய தாக்குதல் பட மூலாதாரம்,AFP படக்குறிப்பு, தெற்கு இஸ்ரேலில் அக்டோபர் 7 ஆம் தேதி ஹமாஸ் நடத்திய தாக்குதல்களில் சுமார் 1,200 பேர் கொல்லப்பட்டனர். 2023 அக்டோபர் 7 அன்று காஸா எல்லைக்கு அருகிலுள்ள இஸ்ரேலிய நகரங்கள் மீது ஹமாஸ் நடத்திய தாக்குதல், மொத்த நாட்டையே ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. தாக்குதலை முன்னறிவிப்பதில் மொசாட்டின் தோல்வி பெரும் பின்னடைவாக கருதப்படுகிறது. ஹமாஸ் மீதான இஸ்ரேலின் தடுப்புக் கொள்கையில் உள்ள பலவீனத்தை இது பிரதிபலிக்கிறது என்று ஆய்வாளர்கள் கருதுகின்றனர். அக்டோபர் 7 தாக்குதலில் சுமார் 1,200 பேர் கொல்லப்பட்டதாகவும், அவர்களில் பெரும்பாலானோர் பொதுமக்கள் என்றும் இஸ்ரேல் கூறுகிறது. சுமார் 251 பேர் பணயக் கைதிகளாக பிடிக்கப்பட்டு காஸாவுக்கு கொண்டு செல்லப்பட்டனர். ஹமாஸ் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக இஸ்ரேல், காஸா பகுதியில் ஒரு போரைத் தொடங்கியது. இதில், 40,000க்கும் மேற்பட்டவர்கள் இறந்ததாகவும், அவர்களில் பெரும்பாலானவர்கள் பொதுமக்கள் என்றும் ஹமாஸ் கட்டுப்பாட்டில் உள்ள காஸா சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. யோம் கிப்பூர் போர் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, 1973 அரபு இஸ்ரேலியப் போரின் போது சூயஸ் கால்வாயைக் கடக்கும் இஸ்ரேலியப் படைகள். கிட்டத்தட்ட சரியாக 50 ஆண்டுகளுக்கு முன்பு, இஸ்ரேல் இதேபோன்ற ஒரு எதிர்பாராத தாக்குதலை சந்தித்தது. அக்டோபர் 6, 1973 அன்று, சினாய் தீபகற்பம் மற்றும் கோலன் குன்றுகளை மீட்பதற்காக எகிப்தும் சிரியாவும் இஸ்ரேல் மீது திடீர் தாக்குதலை நடத்தின. யோம் கிப்பூர் எனப்படும் யூதர்களின் பாவநிவிர்த்தி தினத்தன்று நடத்தப்பட்ட இந்தத் தாக்குதல் இஸ்ரேலை ஆச்சரியப்படுத்தியது. எகிப்தியப் படைகள் சூயஸ் கால்வாயைக் கடந்தன. அதே நேரத்தில் சிரியா படைகள் இஸ்ரேலிய நிலைகளைத் தாக்கி கோலன் குன்றுப்பகுதியில் நுழைந்தன. அந்த நேரத்தில் சோவியத் யூனியன் சிரியா மற்றும் எகிப்துக்கு பொருட்களை வழங்கியது. இஸ்ரேலுக்கு அமெரிக்கா அவசரகால உதவிகளை வழங்கியது. பின்னர் இஸ்ரேல் படைகள் எதிர்ப்பை முறியடிப்பதில் வெற்றி பெற்றன. சண்டையை முடிவுக்கு கொண்டு வருவதற்கான ஐ.நா தீர்மானத்திற்கு நான்கு நாட்களுக்குப் பிறகு அக்டோபர் 25-ஆம் தேதி சண்டை முடிவுக்கு வந்தது. ஹமாஸ் தலைவர் மஹ்மூத் அல்-ஜஹரின் படுகொலை முயற்சி தோல்வி பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, மொசாட் அமைப்பால் தீவிரமாக தேடப்படும் ஹமாஸ் தலைவர்களில் ஒருவர் மஹ்மூத் அல்-ஜஹர். 2003-ஆம் ஆண்டு காஸா நகரில் உள்ள ஹமாஸ் தலைவர் மஹ்மூத் அல்-ஜஹரின் வீட்டை இலக்கு வைத்து இஸ்ரேல் வான்வழித் தாக்குதலை நடத்தியது. அல்-ஜஹர் தாக்குதலில் இருந்து தப்பிய போதிலும் அவரது மனைவி, மகன் காலித் மற்றும் பலர் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதல் அவரது வீட்டை முற்றிலுமாக அழித்தது. மக்கள் அதிகம் வாழும் பகுதிகளில் நடத்தப்படும் ராணுவ நடவடிக்கைகளின் கடுமையான விளைவுகளை அது எடுத்துக்காட்டியது. ஹமாஸ் அரசியல் தலைவர் காலித் மெஷால் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,காலித் மெஷால் 1996 மற்றும் 2017 க்கு இடையில் ஹமாஸின் அரசியல் தலைவராக பணியாற்றினார். 1997-ஆம் ஆண்டு ஜோர்டானில், ஹமாஸின் அரசியல் பணியகத்தின் தலைவரான காலித் மெஷாலை விஷம் கொடுத்து இஸ்ரேல் கொலை செய்ய முயற்சித்தது. இஸ்ரேல் - ஜோர்டான் இடையே மிகப் பெரிய தூதாண்மை நெருக்கடியைத் தூண்டிய நடவடிக்கைகளுள் இது ஒன்றாகும். இஸ்ரேலிய ஏஜென்டுகள் பிடிபட்ட போது இந்த ஆபரேஷன் தோல்வியடைந்தது. மெஷாலின் உயிரைக் காப்பாற்ற அவருக்கு விஷமுறிவு மருந்தை வழங்க வேண்டிய சூழ்நிலைக்கு இஸ்ரேல் தள்ளப்பட்டது. மொசாட்டின் அப்போதைய தலைவர் டேனி யாடோம், மெஷாலுக்கு சிகிச்சை அளிக்க ஜோர்டன் சென்றார். இந்த கொலை முயற்சி ஜோர்டனுக்கும் இஸ்ரேலுக்கும் இடையிலான உறவை மோசமாக்கியது. லவோன் விவகாரம் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, சூயஸ் கால்வாயை தேசியமயமாக்குவதாக அறிவிக்கும் எகிப்து அதிபர் கமல் அப்தெல் நாசர். 1954 இல் எகிப்திய அதிகாரிகள் 'ஆபரேஷன் சுசன்னா' என அழைக்கப்படும் இஸ்ரேலிய உளவு நடவடிக்கையை முறியடித்தனர். சூயஸ் கால்வாயில் தனது படைகளை நிறுத்த பிரிட்டனுக்கு அழுத்தம் கொடுப்பதற்காக எகிப்தில் உள்ள அமெரிக்க மற்றும் பிரிட்டன் நிலைகளில் குண்டுகள் வைப்பதே இந்த நடவடிக்கையின் முக்கிய நோக்கம். இந்த சம்பவம் இஸ்ரேலின் அப்போதைய பாதுகாப்பு அமைச்சராக இருந்த பின்ஹாஸ் லாவோனின் பெயரால் 'லாவோன் விவகாரம்' என்று அறியப்பட்டது. இந்த நடவடிக்கையை திட்டமிடுவதில் அவர் ஈடுபட்டதாக நம்பப்படுகிறது. - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/clyzlxrzgy2o
-
விடுதலைப் புலிகளின் தலைவரின் படத்தை பயன்படுத்துவதற்கு சீமானிற்கு தடை விதிக்ககோரிய மனு மீளப்பெறப்பட்டது
19 JUN, 2025 | 03:33 PM விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரன் படத்தை பயன்படுத்த நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு தடை விதிக்க கோரிய மனு திரும்பப் பெறப்பட்டதை அடுத்து வழக்கை தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. சென்னை உயர் நீதிமன்றத்தில், வழக்கறிஞர் எல்.கே.சார்லஸ் அலெக்ஸாண்டர் என்பவர் தாக்கல் செய்திருந்த மனுவில், “நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளராக உள்ள சீமான், கடந்த 2009-ம் ஆண்டு விடுதலைப் புலிகள் மற்றும் இலங்கை அரசுக்கு இடையிலான சண்டையின் போது விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவரான பிரபாகரனை, போர் முனையில் சந்தித்து பேசியதாகவும், அதன் பிறகு ஏகே 47 ரக துப்பாக்கியால் போர் பயிற்சி எடுத்ததாகவும் தமிழகத்தில் பரப்புரை மேற்கொண்டு வருகிறார். முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி தமிழகத்தில் படுகொலை செய்யப்பட்ட பிறகு, விடுதலைப் புலிகள் இயக்கம் இந்தியாவில் தடை செய்யப்பட்ட இயக்கமாக அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், தமிழகத்தில் இலங்கை போர் தொடர்பான மார்பிங் செய்யப்பட்ட புகைப்படங்களைக் கொண்டு சீமான் வன்முறையைத் தூண்டும் வகையில் செயல்பட்டு வருகிறார். குறிப்பாக தடை செய்யப்பட்ட இயக்கத்தின் தலைவரான பிரபாகரனின் படத்தை தனது அரசியல் ஆதாயங்களுக்காக தேர்தல் பிரச்சாரங்களில் பயன்படுத்தி வருகிறார். எனவே, தடை செய்யப்பட்ட விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரன் படத்தை பயன்படுத்த சீமானுக்கு தடை விதிக்க வேண்டும்” என மனுவில் கூறியிருந்தார். இந்த வழக்கு தலைமை நீதிபதி ஸ்ரீராம் மற்றும் சுந்தர் மோகன் அமர்வு முன்பு இன்று (ஜூன் 19) விசாரணைக்கு வந்தது. அப்போது , இந்த விவகாரம் தொடர்பாக அரசுக்கு மனு அளித்த 15 நாட்களுக்குள் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அரசுத் தரப்பில் பதிலளிக்க கால அவகாசம் தர வேண்டாமா என தலைமை நீதிபதி அமர்வு கேள்வி எழுப்பியது. இதையடுத்து, வழக்கை திரும்பப் பெறுவதாக மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதனை ஏற்று, வழக்கை தள்ளுபடி செய்து நீதிபதிகள் உத்தரவிட்டனர். https://www.virakesari.lk/article/217916
-
இலங்கைக்கு விஜயம் மேற்கொள்கின்றார் ஐநாவின் மனித உரிமை ஆணையாளர் - அரசாங்கம் அனுமதி
ஐநா மனித உரிமை ஆணையாளர் மனித புதைகுழிகளை பார்வையிடவேண்டும்; நில அபகரிப்பு குறித்து கரிசனையை வெளியிடவேண்டும் - மாற்றுக்கொள்கைகளிற்கான நிலையம் Published By: RAJEEBAN 19 JUN, 2025 | 03:27 PM இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளும் ஐக்கியநாடுகள் மனித உரிமை ஆணையாளர் வோல்க்கெர் டேர்க் மனித புதைகுழிகள் காணப்படும் பகுதிகளிற்கு விஜயம் மேற்கொள்ளவேண்டும்,தொடரும் காணி அபகரிப்புகள் குறித்து கரிசனையை வெளியிடவேண்டும் பயங்கரவாத தடைச்சட்டத்தின் பயன்பாட்டினை உடனடியாக நிறுத்துமாறு வேண்டுகோள் விடுக்கவேண்டும் என மாற்றுக்கொள்கைகளிற்கான நிலையம் வேண்டுகோள் விடுத்துள்ளது. இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொள்ளவுள்ள ஐக்கியநாடுகள் மனித உரிமை ஆணையாளருக்கு இலங்கையின் மாற்றுக்கொள்கைகளிற்கான நிலையம் 12 பரிந்துரைகளை சமர்ப்பித்துள்ளது. இது குறித்து மாற்றுக்கொள்கைகளிற்கான நிலையம் அறிக்கையொன்றில் தெரிவித்துள்ளதாவது. ஐக்கியநாடுகளின் மனித உரிமை ஆணையாளர் வோல்க்கெர் டேர்க் இம்மாதம் இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளார். 2024 தேர்தல்களின் மூலம் அனுரகுமாரதிசநாயக்க ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்ட பின்னர் தேசிய மக்கள் சக்தி ஆட்சிக்கு வந்த பின்னர் உயர் ஸ்தானிகர் ஒருவர் இலங்கைக்கு விஜயம் மேற்கொள்வது இதுவே முதல்தடவை. இலங்கையில் நடந்துவரும் ஆட்சி மாற்ற பொருளாதா நெருக்கடிகளின் விளைவுகள்கடந்தகால வன்முறைகளின் சுழற்சிமூன்று தசாப்தகால மோதல்களின் நீடித்த விளைவுகள் ஆகியவற்றுடன் நாடு போராடிக்கொண்டிருக்கும் ஒரு தருணத்தில் இந்த விஜயம் இடம்பெறுகின்றது. 2024 அரசாங்க மாற்றம் சீர்திருத்தத்தை உறுதியளித்தது புதிய கலாச்சாரம் ஏற்படுத்தப்படும் என்ற நம்பிக்கையை மீண்டும் தூண்டியது. ஆயினும்கூட ஏழு மாதங்களுக்குப் பிறகும் நம்பிக்கையை வளர்க்கும் நடவடிக்கைகள் மற்றும் முக்கிய நிர்வாகம் மற்றும் சட்ட சீர்திருத்தங்களை செயல்படுத்துவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. சமூகத்தின் ஒரு குறிப்பிடத்தக்க பகுதியினர் கடுமையான சமூக-பொருளாதார சவால்களையும் எதிர்கொள்கின்றனர். இத்தகைய சூழலுக்கு மத்தியில் மனித உரிமை மீறல்கள் தொடர்கின்றன. பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் சமீபத்திய பயன்பாடு சந்தேக நபர்களின் உரிய செயல்முறையை மீறியுள்ளது. நிலம் கையகப்படுத்துதல் போன்ற நீண்டகால பிரச்சினைகள் சமூகங்களுக்கு அவர்களின் நிலங்களை அணுகுவதற்கான உரிமை, சொந்தமாக்குதல் மற்றும் பயன்படுத்துவதற்கான உரிமை நடமாடும் சுதந்திரம் மற்றும் உயிர்வாழும் வழிமுறைகளை தொடர்ந்து மறுத்து வருகின்றன. திசாநாயக்க அரசாங்கத்தின் கீழும் சித்திரவதை மற்றும் காவல்நிலையத்தில் மரணங்கள் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன. இலங்கையில் பாதிக்கப்பட்டவர்கள் உயிர் பிழைத்தவர்கள் மற்றும் சிவில் சமூகத்தினருடன் உண்மையான மற்றும் திறந்த உரையாடலை நடத்துங்கள் இதில் வடக்கு மற்றும் கிழக்கில் போரால் பாதிக்கப்பட்ட பகுதிகளைப் பார்வையிடுவதும் அடங்கும். பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் பயன்பாட்டை உடனடியாகத் தடைசெய்து அதை உடனடியாக ரத்து செய்ய வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்துங்கள். சட்ட சீர்திருத்தங்களுக்கான எந்தவொரு எதிர்கால முயற்சிகளும் சர்வதேச தரங்களுக்கு இணங்க வேண்டும் மற்றும் பரந்த ஆலோசனைகளுக்குப் பிறகு வரைவு செய்யப்பட வேண்டும். பொறுப்புக்கூறலிற்கு தீர்வை காண்பதற்கான உறுதியான நடவடிக்கைகளிற்கான தேவைகள் குறித்து முன்னிலைப்படுத்துங்கள் பல தனிநபர்களை சமூகங்களை தங்கள் நிலங்களில் இருந்து வெளியேற்றியுள்ள நிலங்களை கையகப்படுத்தல் ஆக்கிரமிப்பு குறித்து கரிசனைகளை எழுப்புங்கள்.வடக்குகிழக்கில் நிலம் கையகப்படுத்தல் குறித்து விசேட கவனம் செலுத்தப்படவேண்டும். மனித புதைகுழிகள் காணப்படும் பகுதிகளிற்கு விஜயம் மேற்கொண்டு புதைகுழிகளை தோண்;டுவது ஆவணப்படுத்துவது அறிக்கையிடுவது அடையாளம் காண்பது போன்ற விடயங்களில் சர்வதேச தராதரம் பயன்படுத்தப்படுவதன் அவசியத்தை வலியுறுத்துங்கள். மனித உரிமைகள் பொறுப்புக்கூறல் நல்லிணக்கத்தினை தொடர்ச்சியாக கண்காணிக்கும் ஆதரிப்பதற்கான ஆணையை வழங்கும் புதிய தீர்மானத்திற்கான தேவை குறித்து பேசுங்கள் - இந்த தீர்மானம் இரண்டு வருடகாலத்திற்கானதாகயிருக்கவேண்டும். ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் அலுவலகம் இலங்கை குறித்த பொறுப்புக்கூறல் திட்டத்தினையும் இலங்கைக்கு விஜயம் மேற்கொள்வதற்கான அதன் திறனையும் புதுப்பிக்கவேண்டும் என மாற்றுக்கொள்கைகளிற்கான நிலையம் பரிந்துரைக்கின்றது. இந்த பரிந்துரைகளில் அடிக்கோடிட்டு காட்டப்பட்டுள்ள மனித உரிமைகள் பொறுப்புகூறல் நல்லிணக்க விவகாரங்கள் குறித்து அவசர கவனம் தேவை. ஐக்கியநாடுகள் மனித உரிமை ஆணையாளரும் அவரது அலுவலகமும் மேலே குறிப்பிடப்பட்ட கரிசனைகளை முன்னிலைப்படுத்துவதற்கு இலங்கை விஜயத்தினை பயன்படுத்துவதுடன் சீர்திருத்தங்களை நடைமுறைப்படுத்துவதற்கான திட்டம் உட்பட உடனடி நடவடிக்கைகளை வலியுறுத்தவேண்டும். https://www.virakesari.lk/article/217912
-
பிரித்தானிய உயர்ஸ்தானிகர் வடக்கிற்கு விஜயம்
ஓம் அண்ணை.
-
இங்கிலாந்து இந்திய டெஸ்ட் கிரிக்கெட் தொடர்
முச்சதம் அடித்தும் ஒதுக்கப்பட்ட கருண் நாயர் – இங்கிலாந்து வழியாக இந்திய அணிக்கு வந்தது எப்படி? பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, 2016இல், டெஸ்ட் போட்டியில் ஆட்டமிழக்காமல் 303 ரன்கள் எடுத்து, முச்சதம் அடித்த இரண்டாவது இந்திய கிரிக்கெட் வீரர் என்ற பெருமையைப் பெற்றார் கருண். கட்டுரை தகவல் எழுதியவர், மொஹ்சின் கமல் பதவி, பிபிசிக்காக 5 மணி நேரங்களுக்கு முன்னர் "நீங்கள் மீண்டும் இந்தியாவுக்காக விளையாடப் போவதில்லை என்று நினைத்தால், எங்கள் கிளப்பில் அனைத்து கிரிக்கெட் வடிவங்களிலும் விளையாடக்கூடிய ஒரு வெளிநாட்டு வீரராக, எங்களுடனான நீண்டகால ஒப்பந்தத்தில் கையெழுத்திட சம்மதிப்பீர்களா?" நார்தாம்ப்டன்ஷையர் கவுன்டி கிரிக்கெட் கிளப்பின் அப்போதைய தலைமை பயிற்சியாளராக இருந்த ஜான் சாட்லர், 2023இல் கருண் நாயரிடம் இந்தக் கேள்வியைக் கேட்டார். நாயரின் பதில் உறுதியாக இருந்தது, "நான் இந்தியாவுக்காக விளையாட விரும்புகிறேன், மீண்டும் டெஸ்ட் கிரிக்கெட் விளையாட என்னால் முடிந்த அனைத்தையும் செய்யப் போகிறேன். அந்தக் கனவு நனவாகும் வரை, வேறு எதையும் நான் கருத்தில் கொள்ளப்போவதில்லை." இப்போது அவருக்கு 33 வயதாகிறது. 2017இல் இந்தியாவுக்காக கடைசியாக விளையாடிய பிறகு, வெள்ளிக்கிழமை (ஜூன் 20) லீட்ஸில் தொடங்கும் இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியில் கருண் நாயர் மீண்டும் சேர்க்கப்பட்டுள்ளார். கடந்த மாத இறுதியில் இங்கிலாந்து லயன்ஸ் அணிக்கு எதிரான இரண்டு பயிற்சிப் போட்டிகளில் ஒன்றில், இரட்டை சதம் அடித்து டெஸ்ட் போட்டிகளில் விளையாட மீண்டும் வந்துவிட்டேன் என்பதை அவர் பதிவு செய்தார். 'ஒரு புத்திசாலித்தனமான கிரிக்கெட் வீரர்' பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,கருண் நாயர் 2016ஆம் ஆண்டு தனது மூன்றாவது டெஸ்ட் போட்டியில் ஆட்டமிழக்காமல் 303 ரன்கள் எடுத்து, முச்சதம் அடித்த இரண்டாவது இந்திய கிரிக்கெட் வீரர் என்ற பெருமையைப் பெற்றார் கருண். ஆனால் மேற்கொண்டு மூன்று டெஸ்ட் போட்டிகளில் விளையாடிய பிறகு, இந்திய அணியில் தனக்கான இடத்தை அவர் இழந்தார். காலப்போக்கில், சர்வதேச கிரிக்கெட் குறித்த அவரது கனவுகள் மங்கத் தொடங்கின. 2022ஆம் ஆண்டில், அவர் கர்நாடகாவின் ரஞ்சி டிராபி அணியிலிருந்து கூட நீக்கப்பட்டார். இது அவரது கிரிக்கெட் வாழ்க்கையில் மிக மோசமான தருணமாக இருக்கலாம். "உள்நாட்டு சீசன் முழுவதையும் தவறவிட்ட பிறகு, அவர் மிகவும் வருத்தப்பட்டார். அவர் என்னிடம் வந்து, 'நான் என்ன செய்வது? மீண்டும் விளையாட என்ன வேண்டுமானாலும் செய்வேன்' என்று கூறினார்" என்று கருணின் நீண்டகால பயிற்சியாளரான விஜயகுமார் மதியல்கர் நினைவு கூர்ந்தார். தொடர்ந்து பேசிய அவர், "அவர் ஒரு புத்திசாலித்தனமான கிரிக்கெட் வீரர், அதனால் அவரது மனநிலையைப் பற்றி நான் அவரிடம் தனியாக எதுவும் சொல்ல வேண்டியதில்லை. அவர் மிகவும் ஃபிட்டாகவும் இருக்கிறார், அதனால் அவரது உடல்திறன் குறித்து சொல்ல வேண்டிய அவசியமும் இல்லை. எனவே அவர் செய்ய வேண்டிய ஒரே விஷயம் அவரது திறன்களை மேம்படுத்துவதுதான்" என்றார். தனது அதிர்ஷ்டத்தை மாற்றத் தீர்மானித்தார் கருண். பெங்களூருவில் உள்ள தனது வீட்டிலிருந்து மதியல்கரின் அகாடமிக்கு இரண்டு நாட்களுக்கு ஒருமுறை, 2 மணிநேரம் பயணம் செய்து செல்வதை வழக்கமாக்கிக்கொண்டார். விஜயகுமார் மதியல்கர், 16 வயதுக்குட்பட்ட பிரிவில் கருண் ஆடிய காலத்தில் இருந்தே அவருக்கு பரிச்சயமானவர். "முழுமையாக திருப்தி அடையும் வரை, அவர் ஒருபோதும் வலைப் பயிற்சியில் இருந்து வெளியே வரமாட்டார். ஒவ்வொரு அமர்விலும் சுமார் 600 பந்துகளை எதிர்கொள்வார். அனைத்து ஷாட்களையும் பயிற்சி செய்வார். அவர் மிகவும் கடினமாக உழைத்தார். மணிக்கணக்கில் இடைவிடாமல் பேட்டிங் செய்வதே அவரது விருப்பமாக இருந்தது." என்கிறார் மதியல்கர். "அவர் தனது அணுகுமுறையில் ஒருபோதும் அலட்சியமாக இருந்ததில்லை. வலைப் பயிற்சியில் ஒரு பந்தை கூட சாதாரணமாக எதிர்கொண்டதில்லை. அவர் தனது உடற்தகுதி மற்றும் பிற திறன்களை மேம்படுத்துவதிலும் அயராது உழைத்தார்." என்று கூறுகிறார் மதியல்கர். கவுன்டி கிரிக்கெட் அனுபவம் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,கருண் நாயர் 2023 மற்றும் 2024 ஆம் ஆண்டுகளில் நார்தாம்ப்டன்ஷையருக்காக விளையாடினார். பல மாதங்களாகப் போராடிய பிறகு, கருண் மீண்டும் களத்தில் இறங்க ஆர்வமாக இருந்தார். ஆனால் இந்தியாவில் விளையாட அவருக்கான கிரிக்கெட் போட்டிகள் இல்லை. எனவே அவர் இங்கிலாந்தில் உள்ள நார்தாம்ப்டன்ஷையருக்காக, ஒரு வெளிநாட்டு வீரராக விளையாட முடிவு செய்தார். அந்த முடிவு முக்கியமானது என்பது பின்னர் உறுதியானது. "தங்கள் திறமையை நிரூபிக்க வெளிநாட்டு வீரர்கள் இங்கு வருகிறார்கள். நாங்கள் வழக்கமாக அவர்களிடமிருந்து சிறந்த ஆட்டத்தைப் பெறுகிறோம்," என்று நார்தாம்ப்டன்ஷையரில் கருணுடன் பணியாற்றிய சாட்லர் கூறுகிறார். "கருண் இந்தியாவுக்காக டெஸ்ட்டில் முச்சதம் அடித்திருந்தார், ஆனால் அதன் பின்னர் சிறிது காலமாக விளையாடவில்லை. எனவே அவர் மீண்டும் விளையாட வேண்டுமென்ற உத்வேகத்தில் இருந்தார். ஒரு தாக்கத்தை ஏற்படுத்த வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தார்." என்கிறார் சாட்லர். அமைதியான சுபாவத்திற்கு பெயர் போன கருண் நாயர், நார்தாம்ப்டன்ஷயர் தனக்கு அளித்த வாய்ப்பை உடனடியாக ஏற்றுக்கொண்டார். "அவர் எவ்வளவு அமைதியாகவும் நிதானமாகவும் இருந்தார் என்பதுதான் தனித்துவமான விஷயம்," என்று சாட்லர் நினைவு கூர்ந்தார். "எட்ஜ்பாஸ்டனில் அவரது முதல் ஆட்டத்தில், ஆடுகளம் பசுமையாக இருந்தது. பந்துவீச்சுக்கு சாதகமான ஒரு ஆடுகளமாக இருந்தது. எங்கள் பேட்ஸ்மேன்களில் சிலர் அங்கு பேட்டிங் செய்வதை கடினமாக உணர்ந்தனர், விக்கெட்டுகள் விழுந்து கொண்டிருந்தன. கருண் உள்ளே வந்தார், அவர் மிகவும் அமைதியாக விளையாடினார். தொடக்கூடாத பந்துகளை அவர் விட்டுவிட்டார். பின்னர், அதிரடியாக ஆட வேண்டிய வேண்டிய நேரம் வந்தபோது, அவர் சிறப்பாக ஆடினார். எனவே அவரது ஆட்டம் ஒரு அற்புதமான வரிசையில் காணப்பட்டது." என சாட்லர் கூறுகிறார். வலது கை பேட்ஸ்மேனான கருண் நாயர், மூன்று போட்டிகளில் 249 ரன்கள் எடுத்தார். இதில் சர்ரேக்கு எதிரான 150 ரன்கள் உள்பட, அவரது சிறப்பான ஆட்டங்கள் காரணமாக மீண்டும் அவரை நார்தாம்ப்டன்ஷையர் கவுன்டி கிரிக்கெட் கிளப் ஒப்பந்தம் செய்தது. 2024 ஆம் ஆண்டில், மீண்டும் களமிறங்கிய அவர், ஏழு போட்டிகளில் 487 ரன்கள் எடுத்தார், அதில் ஒரு இரட்டை சதமும் அடங்கும். ஆனால் அவர் எடுத்த ரன்கள் மட்டும் தனித்து நிற்கவில்லை. "அவரது அணுகுமுறை அற்புதமானது. அவர் மிகவும் கடினமாக உழைத்தார், மிகச்சிறந்த தொழில்முறை வீரராக இருந்தார். ஒவ்வொரு பயிற்சி அமர்வுக்கும் அவர் இருந்தார். களத்தில் பேட்டிங் செய்யும்போது, மிகவும் கவனமாக ஆடினார். ஒருபோதும் தனது விக்கெட்டை விட்டுக்கொடுக்கவில்லை," என்று யார்க்ஷயரில் இப்போது உதவி பயிற்சியாளராக இருக்கும் சாட்லர் கூறுகிறார். கருண் நாயர் இந்தியாவின் உள்ளூர் கிரிக்கெட்டிலும் ரன்கள் குவித்திருந்தாலும், நார்தாம்ப்டன்ஷையர் அணியுடனான அவரது அனுபவமே அவரை மீண்டும் தேசிய அளவில் உறுதியாக நிலைநிறுத்த உதவியது. "கவுன்டி கிரிக்கெட் என்பது இடைவிடாமல் விளையாடப்படுகிறது, ஆட்டத்திற்கு ஆட்டம், அதிக ஓய்வு இருக்காது. யதார்த்தத்தில் நீங்கள் மாறுபட்ட பிட்ச்களில் விளையாடுகிறீர்கள். சில நேரங்களில் பிட்ச் தட்டையாக இருக்கலாம், சில நேரங்களில் பந்து வேறுமாதிரியாக திரும்பலாம், சில நேரங்களில் அது பசுமையாக இருக்கலாம்." என்கிறார் சாட்லர். "அவர் எங்களுக்காக இரண்டு முறை விளையாடியதால், பல்வேறு சூழ்நிலைகளில் விளையாடவும், தனது திறமைகளை சோதிக்கவும் அவருக்கு வாய்ப்பு கிடைத்தது என்று நான் நம்புகிறேன். அது அவருக்கு மிகவும் பயனுள்ளதாக இருந்தது." என்று சாட்லர் கூறுகிறார். கருண் நாயர் மீண்டும் இந்திய அணிக்கு திரும்புவதில் கவுன்டி கிரிக்கெட் வகித்த பங்கை இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் கௌதம் கம்பீர் கூட ஒப்புக்கொண்டார். "கருணின் அனுபவம் இந்திய அணிக்கு நல்லது. அவர் கவுன்டி கிரிக்கெட்டில் விளையாடியவர், அவர் சிறந்த ஃபார்மில் இருக்கிறார். அவரது அனுபவம் கைகொடுக்கும்," என்று ஜூன் 5 அன்று மும்பையில் நடந்த இந்திய சுற்றுப்பயணத்திற்கு முந்தைய செய்தியாளர் சந்திப்பின் போது கம்பீர் கூறினார். இந்த மாத தொடக்கத்தில் கேன்டர்பரியில் இங்கிலாந்து லயன்ஸ் அணிக்கு எதிராக 204 ரன்கள் எடுத்ததன் மூலம், ஹெடிங்லியில் நடைபெறும் முதல் டெஸ்டில் இந்தியாவின் மிடில் ஆர்டரில் கருண் நாயர் இடம் பெறுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஒரு விஷயத்தைக் குறித்து, கருணின் பயிற்சியாளர் நம்பிக்கையுடன் இருக்கிறார். "கருண் அங்கு விளையாடுவதில் அதிக அனுபவம் வாய்ந்தவர் என்பதால் அவர் முதல் போட்டியில் நிச்சயமாக விளையாடுவார் என்று நான் நினைக்கிறேன். அவர் ஒரு சதம் அடிப்பார்." என்று மதியல்கர் கூறுகிறார். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/c056gz66mgqo
-
பிரித்தானிய உயர்ஸ்தானிகர் வடக்கிற்கு விஜயம்
அது கள்ளு இல்லை அண்ணைமார் பதநீர்! நேற்று தம்பியும் நானும் போயிருந்தோம்!!
-
ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல்
வல்லரசையே கதிகலங்க வைக்கும் போர் யுக்தி! உலகின் முதலாவது நாடாக ஈரான் படைத்துள்ள சாதனை மேற்கு ஈரானின் தப்ரிஸ் அருகே நான்காவது F-35 ஜெட் சுட்டு வீழ்த்தப்பட்டு, விமானி கைது செய்யப்பட்டதாகவும் ஐந்தாம் தலைமுறை போர் விமானத்தை சுட்டு வீழ்த்திய உலகின் முதலாவது நாடு ஈரான் என்றும் ஈரானின் அரசு செய்தி நிறுவனமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. இஸ்ரேலிய பாதுகாப்புப் படைகள் இந்த கூற்றை மறுத்தாலும், வரலாற்றில் மிகவும் விலையுயர்ந்த ஆயுதத் திட்டமான F-35 இலிருந்து அமெரிக்கா பின்வாங்கும் முடிவை எடுத்துள்ளது. சாதனை இஸ்ரேலின் நான்காவது F-35 போர் விமானத்தை ஈரான் சுட்டு வீழ்த்தியதாக அறிவித்ததைத் தொடர்ந்து, அமெரிக்கா புதிய F-35 போர் விமானங்களுக்கான உத்தரவை பாதியாகக் குறைத்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. போர் விமான உற்பத்தி நிறுவனமான லாக்ஹீட் மார்ட்டினுக்கு 48 ஜெட் விமானங்களுக்கான உத்தரவை 24 ஆகக் குறைத்து திருத்தப்பட்ட உத்தரவை பென்டகன் பிறப்பித்துள்ளது. இதனை தொடர்ந்து, ஈரான்-இஸ்ரேல் போர், அமெரிக்க விமானப்படையின் ஐந்தாம் தலைமுறை போர் விமானமான F-35 இன் பலவீனங்களை வெளிப்படுத்தியதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன. விமர்சனம் இதன்படி, F-35 விமானத்தின் பயணத் திறன் 2025 ஆம் ஆண்டளவில் 51.5 சதவீதமாகக் குறைந்துள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது. பாகங்களைப் பெறுவதில் உள்ள சிரமம், சிக்கலான பராமரிப்பு மற்றும் அதிக விலை ஆகியவை இந்த விமானத்தின் முக்கிய குறைபாடுகளாக கூறப்படுகின்றன. ட்ரோன் போர் அதிகரித்துள்ள காலகட்டத்தில் F-35 காலாவதியானது என்று எலான் மஸ்க் உட்பட பலர் விமர்சித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. https://tamilwin.com/article/iran-is-shoot-down-5th-generation-fighter-jet-f-35-1750213555 செய்தியின் உண்மைத்தன்மை பற்றி யான் அறிந்திலேன்.
-
பிரித்தானிய உயர்ஸ்தானிகர் வடக்கிற்கு விஜயம்
யாழில் பனை சார்ந்த உற்பத்திகள் தொடர்பில் அறிந்து கொண்டார் பிரித்தானிய உயர்ஸ்தானிகர் Published By: DIGITAL DESK 3 19 JUN, 2025 | 11:17 AM இலங்கைக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகர் அன்றூ பற்றிக் வடக்கிற்கான விஜயத்தை மேற்கொண்டுள்ளார். இந்த விஜயத்தின் போது, யாழ்ப்பாணத்தில் உள்ள பனை சார்ந்த உற்பத்திகள் தொடர்பில் அறிந்து கொள்ள விநியோகஸ்தர்களை நேரில் சென்று பிரித்தானிய உயர்ஸ்தானிகர் அன்றூ பற்றிக் பார்வையிட்டுள்ளார். அங்கு பாரம்பரிய வளங்கள், தொழில் முயற்சியாண்மை மற்றும் புதிய கண்டுப்பிடிப்புகளுடன் நிலைபேண்தகு வாழ்வாதாரத்தை கொண்டு செல்ல எவ்வாறு உள்ளூர் உற்பத்திகளை பாதுகாக்கவும் முடியும் என்பதை இந்த விஜயத்தின் போது அறிந்து கொண்டார். https://www.virakesari.lk/article/217876
-
ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல்
'400 நொடிகளில் டெல் அவிவ்' - இஸ்ரேல் மீது ஹைப்பர்சோனிக் ஏவுகணைகளை ஏவியதா இரான்? பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,கோப்புப்படம் ஒரு மணி நேரத்துக்கு முன்னர் ஜூன் 18 புதன்கிழமை அன்று இஸ்ரேல் மீது தாக்குதலை நடத்திய இரான் அதிக பாதிப்புகளை ஏற்படுத்தும் ஹைப்பர்சோனிக் ஃபடா ஏவுகணைகளை பயன்படுத்தியதாகக் கூறியுள்ளது. இரானின் இஸ்லாமிய புரட்சிகர காவல்படை (ஐ.ஆர்.ஜி.சி.) இந்த ஏவுகணைகளை இஸ்ரேலின் தலைநகரான டெல் அவிவை நோக்கி ஏவியதாக குறிப்பிட்டுள்ளது. இரானின் அரசு ஊடக முகமையான மெஹர் மற்றும் அரசு தொலைக்காட்சியான பிரஸ் டிவி, ஃபடா 1 ஏவுகணைகள் இஸ்ரேலை நோக்கி ஏவப்பட்டதாக ஐ.ஆர்.ஜி.சி. கூறியதாக தங்களின் செய்திகளில் குறிப்பிட்டுள்ளது. பிரஸ் டிவியின் செய்தியில், "தாக்குதலின் சமீபத்திய கட்டமானது முக்கிய திருப்புமுனையாக அமைந்துள்ளது என்று ஐ.ஆர்.ஜி.சி. கூறியுள்ளது. தாக்குதலில் பயன்படுத்தப்பட்டுள்ள முதல் தலைமுறை ஃபடா ஏவுகணைகள், இஸ்ரேலின் ஏவுகணை தடுப்பு அமைப்புகளின் முடிவுக்கு தொடக்கமாக அமைந்துள்ளது," என்று குறிப்பிடப்பட்டுள்ளது. மத்திய கிழக்கில் இரான் மற்றும் இஸ்ரேலுக்கு இடையே கடந்த வெள்ளிக்கிழமை முதல் பதற்றமான சூழல் நிலவி வருகிறது. இஸ்ரேல், இரானில் தாக்குதல்கள் நடத்துகிறது. மற்றொருபுறம், இரான் டெல் அவிவ் மற்றும் ஹைஃபா துறைமுகம் போன்ற இஸ்ரேலின் முக்கியமான பகுதிகளில் மீது ஏவுகணைகளை ஏவி வருகிறது. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, இஸ்ரேலில் இரானின் ஹைப்பர்சோனிக் ஏவுகணை இதற்கும் முன்னதாக ஃபடா-1 ரக ஏவுகணைகளை இரான் பயன்படுத்தியுள்ளது. கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 1-ஆம் தேதி அன்று இஸ்ரேல் மீது ஒரு டஜன் ஃபடா-1 ரக ஏவுகணைகளை ஏவியது. ஆனால் தற்போது நடைபெற்று வரும் மோதலின் போது, இந்த ஏவுகணைகள் பயன்படுத்தப்படுவது இதுவே முதல்முறை. 2023-ஆம் ஆண்டு இந்த ஃபடா ஏவுகணைகள் குறித்த தகவல்கள் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டன. இந்த ரக ஏவுகணைகளுக்கு இரானின் அதி உயர் தலைவர் அலி காமனெயியின் பெயர் சூட்டப்பட்டுள்ளது. ஐ.ஆர்.ஜி.சி. அமைப்பினர் இந்த ஏவுகணைகளை 'இஸ்ரேல் ஸ்ட்ரைக்கர்' என்று அழைக்கின்றனர். இந்த ஏவுகணைகள் அறிமுகம் செய்து வைக்கப்பட்ட போது பெரிய அளவிலான பேனர்கள் ஆங்காங்கே வைக்கப்பட்டன. ஹீப்ரூ மொழியில் அச்சிடப்பட்ட அந்த பேனர்களில், "400 நொடிகளில் டெல் - அவிவ்," என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது. ஐ.ஆர்.ஜி.சி. படையினர் இந்த ஏவுகணைகளை ஹைப்பர்சோனிக் ஏவுகணைகள் என்று அழைக்கின்றனர். ஆனால் பாதுகாப்புத்துறை நிபுணர்கள், உண்மையாகவே இந்த ஏவுகணைகளுக்கு ஹைப்பர்சோனிக் தொழில்நுட்ப செயல்திறன் இருக்கிறதா என்று சந்தேகிக்கின்றனர். பட மூலாதாரம்,NEWS ONLINE படக்குறிப்பு, ஹீப்ரு மொழியில் அச்சிடப்பட்ட பேனர்கள் ஃபடா ஏவுகணைகளின் சிறப்பம்சங்கள் ஒலியின் வேகத்தைக் காட்டிலும் 5 முதல் 25 மடங்கு அதிக வேகத்தில் செல்லக் கூடியவை ஹைப்பர்சோனிக் ஆயுதங்கள் என்று அழைக்கப்படுகின்றன. இரான் ஃபடா ஏவுகணைகளை ஹைப்பர்சோனிக் ஏவுகணைகள் என்று பாலிஸ்டிக் மற்றும் க்ரூஸ் பிரிவுகளில் இணைத்தது. அல்-ஃபடா ஹைப்பர்சோனிக் ஏவுகணைகள் 1,400 கி.மீ. வரை சென்று தாக்குதல் நடத்தும் தன்மை கொண்டவை என்று கூறப்படுகிறது. ஏவுகணை பாதுகாப்பு அமைப்புகளின் கண்காணிப்பில் சிக்காமல், அவற்றையே அழிக்கும் தன்மை கொண்டது என்று ஐ.ஆர்.ஜி.சி. கூறுகிறது. அல்-ஃபடா ஏவுகணைகள் இலக்குகளை தாக்கி அழிப்பதற்கு முன்பு 13 முதல் 15 'மெக்' வேகத்தில் செல்லும். மெக் 15 என்பது ஒரு நொடிக்கு 5 கி.மீ என்ற வேகத்தில் செல்வதை குறிப்பதாகும். "இந்த ஏவுகணைகள் மிகவும் வேகமாக செல்லக் கூடியது. வளிமண்டலத்திற்கு உள்ளும் வெளியும் பயணிக்கக் கூடியது. வேறெந்த ஏவுகணைகளாலும் ஃபடாவை அழிக்க இயலாது," என்று இந்த ஏவுகணைகளின் அறிமுக நிகழ்வன்று, புரட்சிகர காவல்படையின் விண்வெளி அமைப்புத் தளபதி அமீர் அலி ஹஜிஸேதா தெரிவித்தார். இஸ்ரேலின் முன்னாள் பாதுகாப்புத் துறை அமைச்சர் யோவ் கேலண்ட், இந்த ஏவுகணைகள் குறித்து, "நம்முடைய எதிரிகள் அவர்கள் உருவாக்கிய ஆயுதங்கள் குறித்து பெருமை பேசி வருகின்றனர். நீர், நிலம் மற்றும் ஆகாயம் என எந்த இடத்திலும் எத்தகைய தொழில்நுட்பத்துக்கும் (மூலமாக தாக்குதல் நடத்தப்பட்டாலும்) சரியான பதில் நம்மிடம் உள்ளது," என்று தெரிவித்தார். அல்-ஃபடா 1 பாலிஸ்டிக் ஏவுகணைகள் அறிமுகம் செய்யப்பட்ட நான்கு மாதங்கள் கழித்து புரட்சிகர காவல்படையினர் அல்-ஃபடா 2 என்ற புதிய தலைமுறை க்ரூஸ் ஏவுகணைகளை அறிமுகம் செய்தனர். அது 1500 கி.மீ வரை பயணித்து இலக்குகளை தாக்கி அழிக்கும். இரானிய ஊடகங்கள் வெளியிட்டுள்ள செய்திகளின் அடிப்படையில், அல்-ஃபடா 2 குறைவான உயரத்தில் பறக்கும் தன்மை கொண்டது. மேலும் ஒன்றுக்கும் மேற்பட்ட முறை தன்னுடைய பாதையை மாற்றி அமைத்துக் கொள்ளும் செயல்திறனும் அதனிடம் உள்ளது. ஐ.ஆர்.ஜி.சி.யின் கீழ் செயல்படும் அஷூரா விண்வெளி அறிவியல் மற்றும் தொழில்நுட்பப் பல்கலைக்கழகதிற்கு இரானின் அதி உயர் தலைவர் அலி காமனெயி வருகை தந்த போது அல்-ஃபடா க்ரூஸ் ஏவுகணைகள் அறிமுகம் செய்யப்பட்டன. அப்போது அது பயணிக்கும் தூரத்தின் திறன் குறித்து எந்த தகவலும் வெளியிப்படவில்லை. இஸ்ரேலின் தாக்குதல்களுக்கு பதில் தாக்குதல் நடத்தும் வகையில் இரான் ஃபடா ஏவுகணைகளை அறிமுகம் செய்திருந்தாலும், இந்த ஆண்டு ஏப்ரல் 13 தாக்குதலின் போதும், கடந்த ஆண்டு அக்டோபர் 1 தாக்குதலின் போதும் அல்-ஃபடா 2 ரக ஏவுகணைகள் பயன்படுத்தப்படவில்லை. பட மூலாதாரம்,I.M.A. இரானின் கைவசம் உள்ள ஏவுகணை வகைகள் கடந்த அக்டோபர் 7 அன்று இரானின் ஏவுகணைகள் திட்டம் குறித்து ஒரு செய்தியை வெளியிட்டிருந்தது பிபிசி. அதன்படி, ராக்கெட் க்ரூஸ் ஏவுகணைகள் பாலிஸ்டிக் ஏவுகணைகள் ஹைப்பர்சோனிக் ஏவுகணைகள் இந்த நான்கு வகை ஏவுகணைகளே இரானால் உருவாக்கப்பட்டவை. இவற்றில் நிலத்தில் இருந்து நிலத்தில் மற்றும் நிலத்தில் இருந்து கடலில் உள்ள இலக்குகளை தாக்கி அழிக்கும் திறன் கொண்ட ஏவுகணைகளும் உள்ளன. இதுமட்டுமின்றி இரானின் ஆயுதக்கிடங்கில், பாதுகாப்பு அமைப்பில் செயல்படுத்தப்படும் ஏவுகணைகளும் உள்ளன. சில ரஷ்யா மற்றும் சீனாவால் உருவாக்கப்பட்டவை. சில இரானின் பாதுகாப்புப் படையினரால் உருவாக்கப்பட்டவை. அது இங்கே பட்டியலிடப்படவில்லை. ஏப்ரல் 2024 தாக்குதலின் போது 'இமாத் 3' பாலிஸ்டிக் ஏவுகணைகள், 'பாவேஹ்' க்ரூஸ் ஏவுகணைகள் மற்றும் 'ஷாஹித் 136' வகை டிரோன்களையும் இரான் பயன்படுத்தியது. ஆனால் 'கைபர் ஷிகான்' என்ற பாலிஸ்டிக் ஏவுகணைகளையும் இரான் பயன்படுத்தியதாக அரசு செய்தி முகமை தெரிவித்தது. 'இமாத்' பாலிஸ்டிக் ஏவுகணை ஒரு மிட்-ரேஞ்ச் (medium-range) ஆயுதமாகும். ஆனால் 1700 கி.மீ வரை பயணித்து இலக்குகளை அழிக்கும் என்று கூறப்படுகிறது. இதன் நீளம் 15 மீட்டர்கள். அதன் வெடிபொருள் நிரப்பப்பட்டிருக்கும் பகுதியான வெடிப்பு முனையின் (warhead) எடையானது 750 கிலோ கிராம். இது 2015-ஆம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது. இமாத் ஏவுகணைகள், அல் கதார் (Al Qadr) பாலிஸ்டிக் ஏவுகணைகளின் மேம்படுத்தப்பட்ட வடிவமாகும். 'பாவேஹ்' என்பது மீடியம்-ரேஞ்ச் க்ரூஸ் ஏவுகணைகள். இது 1650 கி.மீக்கு அப்பால் உள்ள இலக்குகளை தாக்கக் கூடிய செயல்திறன் கொண்டவை. இலக்கை அடைவதற்கு பல்வேறு பாதைகளை தேர்வு செய்யக் கூடிய ஏவுகணைகளின் முதல் தலைமுறை ஏவுகணைகள் என்று 'பாவேஹ்' அழைக்கப்பட்டது. 'பாவேஹ்' ரக ஏவுகணைகள் குழுவாக சென்று தாக்கக் கூடிய திறன் கொண்டவை. ஒன்றுக்கொன்று தொடர்பில் இருந்து இணைந்து செயல்படும் தன்மை கொண்டவை. இதனால் கூட இந்த ஏவுகணைகள் இஸ்ரேல் மீதான தாக்குதலுக்காக தேர்வு செய்யப்பட்டிருக்கலாம். 'பாவேஹ்' 2023 பிப்ரவரியில் அறிமுகம் செய்யப்பட்டது. இது இஸ்ரேல் வரை சென்று தாக்குதலை நடத்தக் கூடும் என்று இரான் தெரிவித்தது. அது ஏப்ரல் 13 தாக்குதலின் போது நிரூபிக்கப்பட்டது. இரானின் சமீபத்திய ஏவுகணைகள் அதிகபட்சமாக 2000 - 2500 கி.மீக்கு அப்பால் உள்ள இலக்குகளை தாக்கி அழிக்கும் திறனுடையவை. ஆனால் ஐரோப்பிய நாடுகளை தாக்கி அழிக்கும் அளவுக்கான திறன் கொண்ட ஏவுகணைகள் அதனிடம் இல்லை. இரானின் அதி உயர் தலைவர் அலி காமனெயி, தற்போதைக்கு 2 ஆயிரம் கி.மீ வரை இலக்குகளை தாக்கி அழிக்கும் ஏவுகணைகளை மட்டும் உருவாக்கினால் போதும் என்ற கட்டளையைப் பிறப்பித்ததாக இரானின் ராணுவப்படையினர் தெரிவிக்கின்றனர். அதனால்தான் நீண்ட தூரத்தை இலக்காகக் கொண்டு தாக்குதலை நடத்தும் லாங்க்-ரேஞ்ச் ஏவுகணைகளை உருவாக்கும் பணிகள் கைவிடப்பட்டன. காமனெயி, இந்த உத்தரவுக்குப் பின்னால் ஒரு காரணம் இருக்கிறது என்று கூறினார். ஆனால் அது என்ன காரணம் என்று தெரிவிக்கவில்லை. இந்த ஏவுகணைகள் மட்டுமின்றி, 'ஜுல்ஃபிகர்' என்ற குறைந்த தூர இலக்கை தாக்கி அழிக்கும் ஷார்ட் - ரேஞ்ச் (700) பாலிஸ்டிக் ஏவுகணைகள் இரானிடம் உள்ளன. 2017 மற்றும் 2018 காலகட்டங்களில் ஐ.எஸ்.ஐ.எஸின் டாயிஷ் இலக்குகளை தாக்கி அழிக்க பயன்படுத்தப்பட்டன இவை. இதன் மொத்த நீளம் 10 மீட்டர். 'மொபைல் லாஞ்ச்' தளம் உள்ளது. ரேடார் கண்காணிப்பில் இருந்து தப்பிச் செல்லும் செயல்திறன் கொண்டதாக கூறப்படுகிறது. 'ஃபடா 110' ஏவுகணைகளின் மேம்படுத்தப்பட்ட வடிவமே 'ஜுல்ஃபிகர்'. இதன் வெடிப்புமுனையின் எடை 450 கிலோ. - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/c5yg3j596q4o
-
13ஆவது ஐசிசி மகளிர் உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டிகள்
அண்ணை, அந்த கட்டெறும்பு இல்லாட்டி அடுத்த கட்டெறும்பை பிடியுங்கோ! கந்தப்பு அண்ணாவே நடத்தட்டும்.
-
சீன வெளிவிவகார அமைச்சரை சந்தித்தார் டில்வின் சில்வா
18 JUN, 2025 | 11:53 AM சீன கம்யூனிஸ்ட் கட்சியின் அழைப்பின் பேரில், சீனாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச் செயலாளர் டில்வின் சில்வா தலைமையிலான குழுவினர் சீன கம்யூனிஸ்ட் கட்சியின் வெளிவிவகார திணைக்களத்தின் தலைமையகத்தில் சீனாவின் வெளிவிவகார அமைச்சர் லியூ ஜின்தாவோ உள்ளிட்ட உயர் மட்டத் தலைவர்களுடன் கலந்துரையாடினர். மக்கள் விடுதலை முன்னணிக்கும் சீன கம்யூனிஸ்ட் கட்சிக்கும் இடையில் நிலவுகின்ற நீண்டகால நட்புறவை எவராலும் சிதைக்க முடியாதென்றும் அந்த நட்புறவை சிதைப்பதற்கு எவருக்கும் இடமளிக்கப் போவதில்லை என்றும் சீனாவின் வெளிவிவகார அமைச்சர் இதன்போது வலியுறுத்திக் கூறினார். நாட்டை அபிவிருத்தி செய்யும் திட்டத்துக்கு எந்தவொரு வேளையிலும் தேவையான ஒத்துழைப்பை வழங்குவதற்கு சீனா தயாராக இருப்பதாகவும் எந்தவொரு நாட்டின் தன்னாதிக்கத்துக்கும் குந்தகம் ஏற்படும் வகையில் சீனா செயற்படாது என்றும் வெளிவிவகார அமைச்சர் லியூ ஜின்தாவோ இதன்போது தெரிவித்துள்ளார். இந்த சந்திப்பு வேளையின்போது, டில்வின் சில்வா குறிப்பிடுகையில், சீனாவுக்கும் இலங்கைக்கும் இடையிலும் மக்கள் விடுதலை முன்னணிக்கும் சீன கம்யூனிஸ்ட் கட்சிக்கும் இடையிலும் நிலவுகின்ற நட்புறவு இந்த ஆண்டின் தொடக்கத்தில் இருந்து மக்கள் விடுதலை முன்னணியின் தலைவரும் ஜனாதிபதியுமான அநுர குமார திசாநாயக்கவின் விஜயத்தின்போது மேலும் ஒருபடி உறுதிபெற்றுள்ளதாகவும், அதைப்போலவே, நான் உட்பட எமது தோழர்கள் மேற்கொண்ட இந்தச் சுற்றுப்பயணத்தில் தமது நட்புறவு இன்னொருபடி உறுதியானதாகவும் தெரிவித்தார். அத்துடன், சீனாவுக்கும் இலங்கைக்கும் இடையில் ஏற்பட்டுள்ள புரிந்துணர்வின் அடிப்படையில் தாம் நடவடிக்கைகளை மேற்கொள்வதாகவும் சீனா இலங்கைக்கு வழங்குகின்ற ஒத்துழைப்பிற்கு நன்றி தெரிவிப்பதாகவும் எதிர்காலத்திலும் அந்த ஒத்துழைப்பினை தாம் எதிர்பார்ப்பதாகவும் தெரிவித்தார். சீனாவில் மேற்கொண்ட இந்த சுற்றுப்பயணத்தில் சீனாவை கட்டியெழுப்புவதற்கு முன்னாள் தலைவர் மாவோ சே துங் தொடக்கம் நிகழ்கால தலைவர் ஷீ ஜின் பிங் வரை சீனாவில் செயற்பட்டு வரும் விதம் பற்றி தாம் மகிழ்ச்சியடைவதாகவும் சீனா தமக்கே உரித்தான பாணியில் மார்க்சிஸத்தை முன்னோக்கி கொண்டுசெல்வது சீன கம்யூனிஸ்ட் கட்சிக்கு கிடைத்த வெற்றி என்றும் குறிப்பிட்டார். மேலும், பாடசாலைகள் மற்றும் ஊர்களை கட்டியெழுப்புவதற்காக கட்சியானது செயற்பட்டுள்ள விதம் பற்றியும் கல்வியில் பெற்றுக்கொண்ட அனுபவம் இலங்கையின் எதிர்கால அபிவிருத்திக்கு சிறப்பாக பங்களிப்புச் செய்யும் என்பதையும் டில்வின் சில்வா குறிப்பிட்டார். இந்தச் சந்திப்பில் சீனாவின் பிரதி வெளிவிவகார அமைச்சர் சன் ஹையான் உட்பட சீன கம்யூனிஸ்ட் கட்சியின் வெளிவிவகார திணைக்களத்தின் உத்தியோகத்தர்கள் கலந்துகொண்டிருந்ததுடன், மக்கள் விடுதலை முன்னணியை பிரதிநிதித்துவப்படுத்தி இளைஞர் விவகார பிரதி அமைச்சர் எரங்க குணசேகர, தேசிய ஒருமைப்பாட்டு பிரதி அமைச்சர் முனீர் முளப்பர், வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஏ.எம்.ஜெகதீஸ்வரன், மாத்தளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் தீப்தி வாசலகே, கம்பஹா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் தர்மபிரிய விஜேசிங்க முதலானோர் கலந்துகொண்டனர். https://www.virakesari.lk/article/217796
-
13ஆவது ஐசிசி மகளிர் உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டிகள்
@வீரப் பையன்26 , @தமிழ் சிறி அண்ணை, @ஈழப்பிரியன் அண்ணை @suvy அண்ணை மற்றும் முன்னாள் ஐபிஎல் சாம்பியன் @நந்தன் அண்ணை இந்நாள் ஐசிசி டெஸ்ட் சாம்பியன் @கிருபன் அண்ணை ஆகியோரையும் களமிறங்குமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறேன்.
-
கொடிய டைரனோசர்களுக்கு முன்னோடியாக திகழ்ந்த புதிய வகை விலங்கு கண்டுபிடிப்பு
பட மூலாதாரம்,JULIUS CSOTONYI கட்டுரை தகவல் எழுதியவர், விக்டோரியா கில் பதவி, அறிவியல் செய்தியாளர், பிபிசி நியூஸ் 18 ஜூன் 2025, 03:12 GMT மங்கோலிய அருங்காட்சியகத்தின் சேகரிப்பில், ஒரு புதிய வகை டைனோசர்களை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். அவை டைரனோசர்களின் (Tyrannosaurs) பரிணாம வரலாற்றை 'மாற்றி எழுதக்கூடியவை' என்று அவர்கள் கூறுகிறார்கள். ஆராய்ச்சியாளர்கள், 86 மில்லியன் ஆண்டுகள் பழமையான இரண்டு எலும்புக்கூடுகளை பகுப்பாய்வு செய்தனர். அவை, டைரனோசர்களின் நெருங்கிய மூதாதையராகக் கருதப்படும் ஒரு உயிரினத்திலிருந்து வந்தவை என்ற தீர்மானத்துக்கு அவர்கள் வந்தனர். இது டி ரெக்ஸ் (T rex) எனும் பிரபல விலங்கையும் உள்ளடக்கிய ஒரு குழுவாகும். ஆராய்ச்சியாளர்கள் இந்த இனத்துக்கு கான்கூலூ மங்கோலியென்சிஸ் என்று பெயரிட்டனர், அதாவது மங்கோலியாவின் டிராகன் இளவரசன். நேச்சர் இதழில் வெளியிடப்பட்ட இந்த கண்டுபிடிப்பு, டைனோசர்களின் அழிவு காலம் வரை, வட அமெரிக்கா மற்றும் ஆசியாவை அச்சுறுத்திய சக்தி வாய்ந்த வேட்டை விலங்குகளாக டைரனோசர்கள் எவ்வாறு பரிணமித்தன என்பது பற்றிய நுண்ணறிவை வழங்குகிறது. பட மூலாதாரம்,DARLA ZELENITSKY படக்குறிப்பு, புகைப்படத்தில் உள்ளது போன்ற டி-ரெக்ஸின் அழகான, முழுமையான படிமங்கள் நம்மிடம் உள்ளன. ஆனால், இதன் மூதாதையர்கள் மர்மம் நிறைந்தவர்களாகவே உள்ளனர். "'பிரின்ஸ்' என்பது இது ஒரு ஆரம்பகால, சிறிய டைரனோசராய்டு என்பதைக் குறிக்கிறது," என்று கனடாவின் கால்கரி பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த தொல்லுயிரியல் ஆராய்ச்சியாளர் பேராசிரியர் டார்லா ஜெலெனிட்ஸ்கி விளக்கினார். டைரனோசராய்டுகள் என்பது இரண்டு கால்களில் நடந்த மாமிச உண்ணி டைனோசர்களின் 'சூப்பர் ஃபேமிலி' வகையாகும். முதலில் தோன்றிய டைரனோசராய்டுகள் சிறியவையாக இருந்தன. பேராசிரியர் ஜெலெனிட்ஸ்கியுடன் இந்த ஆராய்ச்சியை வழிநடத்திய பிஹெச்டி மாணவர் ஜாரெட் வோரிஸ் பின்வருமாறு விளக்கினார். "இவை சிறிய, ஆனால் வேகமாக வேட்டையாடும் விலங்குகள். உணவுச் சங்கிலியின் முதன்மை வேட்டை விலங்குகளாக இருந்த பெரும் டைனோசர்களின் நிழலில் இவை வாழ்ந்தன." பட மூலாதாரம்,MASATO HATTORI படக்குறிப்பு, புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட டைரனோசரஸ் மூதாதையரான கான்கூலூ மங்கோலியென்சிஸை ஒரு கலைஞர் வரைந்துள்ளார். ஜுராசிக் காலத்தில் சுற்றித் திரிந்த சிறிய வேட்டை விலங்குகள் என்பதிலிருந்து, டி ரெக்ஸ் உள்ளிட்ட வலிமைமிக்க ராட்சத விலங்குகள் என மாறியது வரை 'கான்கூலூ' - ஒரு பரிணாம மாற்றத்தைக் குறிக்கிறது. "இது சுமார் 750 கிலோ எடையுள்ளதாக இருந்திருக்கும், அதே நேரத்தில் ஒரு பெரிய டி ரெக்ஸ் அதை விட எட்டு மடங்கு எடையுள்ளதாக இருந்திருக்கலாம். எனவே, இது முந்தைய மூதாதையர்களுக்கும் வலிமைமிக்க டைரனோசர்களுக்கும் இடையிலான ஒரு இடைநிலை புதைபடிவம்" என்று பேராசிரியர் ஜெலெனிட்ஸ்கி கூறுகிறார். "இது டைரனோசர்களின் பேரின வரிசையைத் (Family Tree) திருத்தவும் டைரனோசர்களின் பரிணாம வளர்ச்சியைப் பற்றி நமக்கு இதுவரை தெரிந்ததை மாற்றி எழுதவும் உதவியது," என்று அவர் கூறினார். பட மூலாதாரம்,RILEY BRANDT/UNIVERSITY OF CALGARY படக்குறிப்பு, முனைவர் பட்ட மாணவர்களான ஜாரெட் வொரிஸ் மற்றும் டார்லா ஜெலெனிட்ஸ்கி டைரனோசர்களின் படிமத்தை ஆய்வு செய்கின்றனர். இந்தப் புதிய இனம், டைரனோசர்களின் கொடுங்கோன்மைக்கு முக்கியமான பண்புகளாக இருந்தவற்றின் ஆரம்பகால பரிணாமக் கட்டங்களையும் எடுத்துரைக்கிறது. உதாரணத்துக்கு, வலுவான தாடையைக் கொண்ட மண்டை ஓடு கட்டமைப்பு. "அதன் மூக்கு எலும்பில் சில விஷயங்களை கவனிக்க முடிகிறது. அவை பிற்காலத்தில் டைரனோசர்களுக்கு அவற்றின் இரையைக் கடிக்கக் கூடிய அதீத சக்தியைக் கொடுத்தன" என்று ஜாரெட் வோரிஸ் கூறுகிறார். இத்தகைய சக்தி வாய்ந்த தாடைகளின் பரிணாம வளர்ச்சி தான், பெரிய இரைகளின் மீது பாய்ந்து, அதன் எலும்பைக் கூட கடிக்கும் சக்தியை டி ரெக்ஸ் விலங்குகளுக்கு அளித்தது. இந்த ஆராய்ச்சியில், குழு ஆய்வு செய்த இரண்டு (பகுதியளவிலான) எலும்புக்கூடுகள் முதன்முதலில் 1970களின் முற்பகுதியில் மங்கோலியாவில் கண்டுபிடிக்கப்பட்டன. அவை ஆரம்பத்தில் 'அலெக்ட்ரோசொரஸ்' என்று அழைக்கப்படும் ஒரு இனத்தைச் சேர்ந்தவை எனக் கருதப்பட்டன. ஆனால், வோரிஸ் அவற்றை ஆய்வு செய்தபோது, அதன் தனித்துவமான டைரனோசொரஸ் தொடர்பான அம்சங்களை அவர் அடையாளம் கண்டார். "அவரிடமிருந்து ஒரு குறுஞ்செய்தி வந்தது எனக்கு நினைவிருக்கிறது. 'அதில் இதுவொரு புதிய இனம் என நினைக்கிறேன்' என வோரிஸ் கூறியிருந்தார்" என்று பேராசிரியர் ஜெலெனிட்ஸ்கி நினைவு கூர்ந்தார். அந்த காலத்தில் சைபீரியா மற்றும் அலாஸ்காவை இணைத்திருந்த தரைப்பகுதி வழியாக வட அமெரிக்காவுக்கும் ஆசியாவுக்கும் இடையே இந்த டைனோசர்களால் இடம்பெயர முடிந்தது. அது புதிய வாழ்விடங்களைக் கண்டுபிடித்து, ஆக்கிரமிப்பதில் அவற்றுக்கு உதவியது. "கண்டங்களுக்கு இடையேயான இத்தகைய பயணங்கள், லட்சக்கணக்கான ஆண்டுகளில் பல்வேறு டைரனோசர் குழுக்களின் பரிணாம வளர்ச்சியில் முக்கிய பங்கு வகித்தது." என வோரிஸ் விளக்கினார். "கொடும் ஆட்சி புரிந்த அரசர்களாக மாறுவதற்கு முன்பு, 'டைரனோசர்கள்' இளவரசர்களாக இருந்தனர் என்பதை இந்தக் கண்டுபிடிப்பு நமக்குக் காட்டுகிறது" என்று பேராசிரியர் ஜெலெனிட்ஸ்கி கூறினார். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cly8wzwqxl4o
-
கேரளா, ஆந்திரா போல தமிழ்நாட்டிலும் கள்ளுக்கடை திறப்பதில் என்ன பிரச்னை? மது விலக்கின் வரலாறு
Kerala, Andhra-ல் கள் விற்கும்போது தமிழ்நாட்டில் அனுமதி வழங்க அரசு மறுப்பது ஏன்? Tamilnadu Toddy Ban: தமிழ்நாட்டில் ஒரு பக்கம் மதுவிலக்குக் கோரிக்கையை சிலர் முன்வைத்துவரும் நிலையில், கள் இறக்க அனுமதிக்க கோரும் போராட்டங்களும் அவ்வப்போது நடந்துவருகின்றன. கள் இறக்கி விற்பனை செய்வது விவசாயிகளுக்கு உதவும் என்ற கோரிக்கையும் முன்வைக்கப்படுகிறது. இந்தப் போராட்டத்தின் பின்னணி என்ன? கேரளா, ஆந்திராவைப் போல தமிழ்நாட்டிலும் கள்ளுக்கடைகளை திறப்பதில் என்ன பிரச்னை? அரசு கூறும் சிக்கல் என்ன? #Tamilnadu #Toddy #Liquor இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு
-
யாழில் கடும் காற்று : 12 பேர் பாதிப்பு
18 JUN, 2025 | 09:49 AM யாழில் கடுமையான காற்று காரணமாக 12 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக யாழ். மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவின் பிரதிப் பணிப்பாளர் ரி.என்.சூரியராஜா தெரிவித்துள்ளார். அந்தவகையில் சண்டிலிப்பாய் பிரதேச செயலர் பிரிவில் ஒரு குடும்பத்தைச் சேர்ந்த இருவர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் வீடு ஒன்று பகுதியளவில் சேதமடைந்துள்ளது. தெல்லிப்பழை பிரதேச செயலர் பிரிவில் ஒரு குடும்பத்தை சேர்ந்த ஒருவர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் வீடு ஒன்றும் சேதமடைந்துள்ளது. வேலணை பிரதேச செயலர் பிரிவில் ஒரே குடும்பத்தை சேர்ந்த நால்வர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் வீடு ஒன்று பகுதியளவில் சேதமடைந்துள்ளது. மேலும் உடுவில் பிரதேச செயலர் பிரிவில் ஒரே குடும்பத்தை சேர்ந்த ஐவர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் வீடு ஒன்றும் பகுதியளவில் சேதமடைந்துள்ளதாக அவர் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/217775
-
குழந்தைகளிடையே நீரிழிவு, உடல் பருமன் அதிகரிப்பது ஏன்? 3 காரணங்களும் தீர்வுகளும்
பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, சித்தரிப்புப் படம் கட்டுரை தகவல் எழுதியவர், அன்பு வாகினி பதவி, உணவுத் தொழில்நுட்ப வல்லுநர் 18 ஜூன் 2025, 08:31 GMT புதுப்பிக்கப்பட்டது 7 மணி நேரங்களுக்கு முன்னர் உலகளவில், குறிப்பாக இந்தியாவில், உடல் பருமன், இரண்டாம் வகை நீரிழிவு நோய் (Type 2 Diabetes) ஆகியவை வேகமாக அதிகரித்து வருகின்றன. உலக சுகாதார அமைப்பின் (WHO) சமீபத்திய ஆய்வுகளின்படி, 2030க்குள் உலகில் உடல் பருமனாக இருக்கும் பத்து குழந்தைகளில் ஒன்று இந்தியாவில் இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. குழந்தைகளில் இரண்டாம் வகை நீரிழிவு நோய் கடந்த 10 ஆண்டுகளில் கணிசமாக அதிகரித்துள்ளது என்று தேசிய குழந்தை உரிமைப் பாதுகாப்பு ஆணையம் (NCPCR) தெரிவித்துள்ளது. இது பெரும்பாலும் வயதானோருக்கு மட்டுமே வரும் நோயாக இருந்தாலும், இப்போது குழந்தைகளிடமும் அதிகரித்து வருகிறது. இது நாட்டின் பொது சுகாதாரத்துக்கும் எதிர்கால வளர்ச்சிக்கும் மிகப்பெரிய அச்சுறுத்தலாக மாறியுள்ளது. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, சித்தரிப்புப் படம் மூன்று காரணங்கள் என்ன? இதற்கு பல காரணங்கள் இருந்தாலும் மூன்று காரணங்கள் முக்கியமாகின்றன. அதிக சர்க்கரை, உப்பு, கொழுப்பு (HFSS) கொண்ட பதப்படுத்தப்பட்ட உணவு வகைகள் குழந்தைகளின் உடல் பருமன், நீரிழிவுக்கு முதன்மைக் காரணம். குளிர்பானங்கள், பேக்கரி உணவு வகைகள், பாக்கெட் உணவுகள், பதப்படுத்தப்பட்ட உணவு வகைகளில் மறைமுக சர்க்கரை அதிக அளவில் உள்ளது. இது ரத்த சர்க்கரை அளவை உயர்த்தி, இன்சுலின் செயல்படும் தன்மையைக் குறைக்கிறது. இரண்டாவதாக, சக்கை உணவு (ஜங்க் ஃபுட்), பதப்படுத்தப்பட்ட உணவு வகைகள் எளிதாகவும், விலை மலிவாகவும் கிடைப்பதால் குழந்தைகளின் உணவுப் பழக்கம் மாறிவருகிறது. மூன்றாவதாக, உடல் ரீதியான செயல்பாடுகள் குறைந்துவிட்டிருப்பது இந்தப் பிரச்னையை மேலும் தீவிரப்படுத்துகிறது. குழந்தைகள் வெளியே விளையாடுவதற்குப் பதிலாக கைப்பேசி, டேப்லெட், வீடியோ கேம்களில் அதிக நேரத்தை செலவிடுகின்றனர். பல பள்ளிகளில் விளையாட்டு மைதானங்கள், உடற்கல்வி வகுப்புகளுக்கு போதுமான முக்கியத்துவம் கொடுக்கப்படுவதில்லை. இந்த மூன்று காரணிகளும் சேர்ந்து குழந்தைகளின் உடல்நலத்தை பெரிதும் பாதிக்கின்றன. விளம்பரங்களின் தாக்கம் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,சித்தரிப்புப் படம் கார்ட்டூன் கதாபாத்திரங்கள், பிரபலங்கள் தோன்றும் விளம்பரங்கள் குழந்தைகளின் உணவுத் தேர்வில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. 'ஜங்க் ஃபுட்' தயாரிக்கும் நிறுவனங்கள் குழந்தைகளுக்குப் பிடித்தமான கார்ட்டூன் கதாபாத்திரங்களைப் பயன்படுத்தி தங்கள் தயாரிப்புகளை விளம்பரப்படுத்துகின்றன. நடிகர்கள், கிரிக்கெட் வீரர்கள், சமூக ஊடகப் பிரபலங்கள் ஜங்க் ஃபுட் உணவு வகைகளை விளம்பரப்படுத்துவதால், குழந்தைகள் அவற்றை 'ட்ரெண்டி' என்று கருதுகின்றனர். ஜங்க் ஃபுட்டின் சுவை, அவை தரும் அனுபவத்தை மட்டுமே விளம்பரங்கள் முன்னிலைப்படுத்துகின்றன. உடல் பருமன், நீரிழிவு, பல் சிதைவு போன்ற நீண்டகால பாதிப்புகள் பற்றி அதில் எதுவும் காட்டப்படுவதில்லை. பள்ளிகளில் 'சர்க்கரைப் பலகை' அமைக்கும் முயற்சி பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,சித்தரிப்புப் படம் இந்த பிரச்னையை சமாளிக்க தேசிய குழந்தை உரிமைப் பாதுகாப்பு ஆணையம் (NCPCR) ஒரு முக்கிய முயற்சியை முன்னெடுத்துள்ளது. சிபிஎஸ்இ (CBSE), மாநிலப் பாடத்திட்டப் பள்ளிகளில் 'சர்க்கரைப் பலகை' (Sugar Boards) என்கிற திட்டத்தை அமல்படுத்த வேண்டும் எனக் கோரிக்கை விடுத்துள்ளது. இந்த பரிந்துரையின் அடிப்படையில் சிபிஎஸ்இ 24,000க்கும் மேற்பட்ட பள்ளிகளுக்கு 'சர்க்கரைப் பலகை' அமைக்கும்படி உத்தரவிட்டுள்ளது. சர்க்கரைப் பலகை (Sugar Board) என்பது அதிக சர்க்கரை உட்கொள்வதால் ஏற்படும் விளைவுகள் பற்றிய விழிப்புணர்வை மாணவர்கள், மக்களுக்கு ஏற்படுத்தும் ஒரு தகவல் பலகையாகும். இந்தப் பலகைகளில் மாணவர்களின் ஆரோக்கியமான வாழ்வுக்கு தேவையான முக்கியத் தகவல்கள் இடம்பெறும். முதலில், மாணவர்கள் தினமும் எவ்வளவு சர்க்கரை உட்கொள்ள வேண்டும் என்பது குறித்த வழிகாட்டுதல் வழங்கப்படும். அதேபோல், அவர்கள் அன்றாடம் உண்ணும் சிற்றுண்டிகள், பானங்களில் எவ்வளவு சர்க்கரை அடங்கியுள்ளது என்பதை விளக்கும் தகவல்கள் தரப்படும். அதிகப்படியான சர்க்கரை உட்கொண்டால் ஏற்படும் ஆரோக்கிய அபாயங்கள், பல் சொத்தை, உடல் பருமன், நீரிழிவு நோய் போன்றவை பற்றிய விழிப்புணர்வும் ஏற்படுத்தப்படும். இதனுடன், ஆரோக்கியமான மாற்று உணவு வகைகள் பரிந்துரைக்கப்படும். இந்த முயற்சி மாணவர்களின் உணவுப் பழக்கங்களை மேம்படுத்தவும், அதிக - சர்க்கரை, உப்பு, கொழுப்பு நிறைந்த உணவுகளின் நுகர்வைக் குறைக்கவும் உதவும். இதன்மூலம், பள்ளி கேன்டீன்களில் இத்தகைய ஆரோக்கியமற்ற உணவு வகைகளின் விற்பனையைக் கட்டுப்படுத்தவும் இயலும். இந்திய உணவு பாதுகாப்பு, தரக் கட்டுப்பாட்டு ஆணையம் (FSSAI) இந்த முயற்சியை அனைத்து மாநிலங்களும் பின்பற்ற வேண்டும் என்றும், குழந்தைகளின் ஆரோக்கியமான உணவுப் பழக்கவழக்கங்களை ஏற்படுத்துவதில் இது முக்கியமான நடவடிக்கை என்றும் அறிவுறுத்தியுள்ளது. அதேவேளை, பள்ளி கேன்டீன்களில் ஆரோக்கியமான, சத்தான உணவு வகைகள் வழங்கப்படுவதை உத்தரவாதப்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளது. முழுமையான தீர்வுக்கான வழிகள் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,சித்தரிப்புப் படம் ஆரோக்கியமற்ற உணவுப் பொருட்களால் மக்களின் ஆரோக்கியம், குறிப்பாக குழந்தைகளின் எதிர்கால வளர்ச்சி கேள்விக்குறியாகி வருகிறது. இந்த சூழ்நிலையை சரிசெய்ய அரசாங்கம், சுகாதாரத் துறை நிபுணர்கள், ஊட்டச்சத்து வல்லுநர்கள், கல்வியாளர்கள், சமூக ஆர்வலர்கள் இணைந்து ஒரு ஒருங்கிணைந்த 'உணவுக் கொள்கை' மாதிரியை உருவாக்க வேண்டும். இந்தக் கொள்கையின் மூலம், ஆரோக்கியமான உணவு வகைகள் மக்களுக்கு எளிதாகவும் மலிவாகவும் கிடைக்கும் வகையில் நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும். பள்ளிகளுக்கு அருகே ஜங்க் ஃபுட் விற்பனையை முழுமையாகத் தடை செய்யும் தேசியத் திட்டத்தை உருவாக்க வேண்டும். குறிப்பாக, பள்ளி வளாகங்களிலிருந்து 50 மீட்டர் தூரத்துக்குள் இந்த உணவு வகைகள் கிடைக்காதவாறு கடுமையான விதிமுறைகளை அமல்படுத்த வேண்டும். 'சர்க்கரைப் பலகை' போன்ற முயற்சிகள் நல்ல தொடக்கமாக இருந்தாலும், நீண்ட கால மாற்றத்துக்கு உணவு பழக்கவழக்கங்கள், விளம்பரத் தடைகள், உணவுப் பொருட்களின் விற்பனையில் கட்டமைப்பு சார்ந்த மாற்றங்கள் தேவை. இதற்கு ஒரு முன்மாதிரியாக, மெக்சிகோ, சிலி போன்ற நாடுகள் உணவு-பானங்களில் அதிக சர்க்கரை, கொழுப்பு அல்லது சோடியம் (உப்பு) இருப்பதை எளிதில் அடையாளம் காண உதவும் 'முன்பக்க எச்சரிக்கை லேபிள்களை' (Front-of-Pack Warning Labels) அறிமுகப்படுத்தியுள்ளன. இந்த லேபிள்கள் ஆரோக்கியமற்ற பொருட்களை நுகர்வோருக்கு தவிர்க்க உதவுகின்றன. இதேபோல், இந்தியாவிலும் உணவுப் பாதுகாப்பு, தர நிர்ணய ஆணையம் (FSSAI) உடனடியாக எச்சரிக்கை லேபிளிங் கொள்கையை அமல்படுத்த வேண்டும் என்று நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர். இத்தகைய நடவடிக்கைகள், குழந்தைகள் உட்பட அனைவரின் ஆரோக்கியத்தையும் மேம்படுத்தும். அதேநேரத்தில், புதிய வர்த்தக ஒப்பந்தங்கள் காரணமாக கொழுப்பு, சர்க்கரை, உப்பு அதிகம் உள்ள ஜங்க் ஃபுட் பொருட்கள் வரியின்றி இறக்குமதி செய்யப்படுவதால், அவை மலிவாகவும் எளிதாகவும் கிடைக்கின்றன. இந்த நிலைமை பொது சுகாதாரத்துக்கு கடுமையான அச்சுறுத்தலாக உள்ளது. இதைத் தடுக்க, அரசாங்கம் உடனடியாக திட்டவட்டமான நடவடிக்கைகளை எடுத்தாக வேண்டும். ஒருங்கிணைந்த திட்டம் தேவை தற்போதைய 'சர்க்கரைப் பலகை' முயற்சி குழந்தைகளின் ஆரோக்கிய உணவுப் பழக்கங்களை மேம்படுத்த ஒரு நல்ல தொடக்கமாக இருந்தாலும், நிலையான மாற்றத்துக்கு ஒருங்கிணைந்த தேசிய பல்துறை செயல்திட்டம் தேவை. இதை அவசர கால அடிப்படையில் உருவாக்கி குழந்தைகளின் எதிர்கால ஆரோக்கியம், சுகாதாரம் சார்ந்த சவால்களை எதிர்கொள்வதற்கும் தீர்வுகள் காண்பதற்கும் அரசாங்கம், கல்வியாளர்கள், பெற்றோர்கள், சமூக அமைப்புகளும் இந்த முயற்சியில் ஒருங்கிணைந்து உறுதிப்பட செயல்பட வேண்டும். (இந்த கட்டுரையில் இடம் பெற்றுள்ள அனைத்தும் கட்டுரையாளரின் சொந்த கருத்து ஆகும்) - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cy4e31l3rx4o
-
கல்வித்துறையில் கத்தரிக்காய் வியாபாரிகள்
கத்தரிக்காய் வியாபாரிகள் முன்னாள் பேராசிரியர் ஜான் ஜோசப் கென்னடி இக்கட்டுரையில் பேசியிருப்பது அப்பட்டமான உண்மை - தனியார்மயமாக்கலில் வெகுவாக குழம்பிப் போயிருப்பது கல்வித்துறைதான். மாணவர்களை நுகர்வோராகப் பாவிப்பதால் அவர்களை முதிர்ச்சியும் பயிற்சியும் அற்றவர்களாகப் பார்க்க உயர்கல்வித்துறை தயாரில்லை. பதிலுக்கு மாணவர்களை அனைத்தும் கற்றறிந்த மேதைகளாகவும், அவர்களை வேலைக்குத் தயாரித்து அனுப்பும் பொறுப்பு மட்டுமே ஆசிரியர்களுடையது எனும் நம்பிக்கை பரவலாகத் தோன்றியுள்ளது. யு.ஜி.ஸியே அதைத்தான் பரிந்துரைக்கிறது - அவர்கள் மாணவர்கள் வேலை செய்து கற்பதை ஊக்கப்படுவது கல்வி போதனை குறித்து அவநம்பிக்கையினாலே. கல்லூரியில் கற்பிக்கப்படும் எதுவும் இளைஞர்களுக்கு வேலை செய்யப் பயன்படுவதில்லை என்று அதிகமாக தொழிற்துறையைச் சார்ந்தவர்களும் முதலீட்டாளர்களும் நம்புகிறார்கள். மெல்லமெல்ல உயர்கல்வியே தேவையில்லை, பள்ளிப்படிப்புக்குப் பின்பு நேரடியாக வேலைக்கு எடுக்கலாம் என்பதே திட்டம். மிகமிக அடிப்படையான திறன்களை மட்டுமே கொண்ட எந்திரத்தனமான கூட்டம் இன்றைய தொழிற்துறைக்கு, தனியார் நிறுவனங்களுக்குப் போதும். செயற்கை நுண்ணறிவு பொறியியலில் கைவைத்துவிட்ட பின்னர் இன்று பலரும் வேலை இழந்து வருகிறார்கள். வருங்காலத்தில் மருத்துவர்களும் வேலை இழப்பார்கள் என ஒரு அமெரிக்க மருத்துவர் பேசுவதைக் கேட்டேன். அதுவும் நிச்சயமாகச் சாத்தியமே. பத்திற்கு ஒரு மருத்துவரே இருப்பார்கள். செவிலியரும் செயற்கை நுண்ணறிவுமாக இணைந்து மருத்துவரின் இடத்தை எடுத்துக்கொள்வார்கள். நாட்டில் மிக அதிகமாக சம்பாதிக்கிற, கௌரவமான வேலைகளையே செயற்கை நுண்ணறிவு கபளிகரம் பண்ணும்போது மற்ற வேலைகளில் உள்ளவர்கள்? இது முதலில் பாதிக்கப் போவது உயர்கல்வித்துறையைத்தான்: மாணவர்களுக்கு கல்வி போதனையோ பயிற்சியோ அவசியம் இல்லை என நிர்வாகிகள் நம்பத் தொடங்கியுள்ளதால் நூற்றில் இருந்து பலநூறு மாணவர்களுக்குப் பாடமெடுக்க வகுப்புக்கு ஒரே ஒரு ஆசிரியரையே நியமிக்கிறார்கள். சர்வதேச அளவில் தரம் நிர்ணயிக்கும் நிறுவனங்களிடம் உயர்வான மதிப்பீடு பெறுவதற்கு பேராசிரியர்கள் ஆய்விதழ்களில் பிரசுரித்தால் போதும் என நினைக்கும் நிர்வாகங்கள் இன்று அவர்களுடைய கற்பிக்கும் திறனைப் பொருட்படுத்துவதில்லை. சில நிறுவனங்களில் ஆசிரியர் ஒரே சமயம் கன்னாபின்னாவெனப் பிரசுரிக்கவும் வேண்டும், நன்றாகப் போதிக்கவும் வேண்டும் என நிர்பந்திக்கிறார்கள். ஆனால் ஆளைத் தேர்வு பண்ணும்போது போதிக்கும் திறனைச் சோதிப்பதில்லை. ஆய்வேட்டில் பிரசுரம் உள்ளதா என்று மட்டுமே பார்க்கிறார்கள். மாப்பிள்ளைக்கு வெளிநாட்டில் வேலை, கார், சொத்து உள்ளதா, அவர் ஆணாக இல்லாவிட்டாலும் பரவாயில்லை என பெண் வீட்டார் எதிர்பார்ப்பதைப் போல நிலைமை மாறிவிட்டது. தனியார் கல்வி நிறுவனங்கள் அதனாலே இன்று மாணவர்களை ஈர்க்க மாணவர்களுக்கான ஈவெண்ட் மெனேஜ்மெண்ட் கம்பனியாக மாறிவருகிறது. ஒரே ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம், தொடர்ச்சியாக கவனத்தைச் சிதறடிக்கும் போட்டிகள் என வகுப்பறைக்கு வெளியே மாணவர்களை வைத்திருக்க முயல்கிறார்கள். இது முதலில் அமெரிக்காவிலேயே ஆரம்பித்தது. அதுவும் ஹார்வெர்டில். அங்கு தத்துவத் துறையில் ஆசிரியராகப் பணியாற்றிய ஜேரெட் ஹேண்டர்ஸன் ஒவ்வொரு மாணவருக்கும் ஐந்து நிர்வாகிகள் அங்கு பணியாற்றுகிறார்கள், ஆனால் ஆசிரியர்களின் எண்ணிக்கை குறைவு என்கிறார். மாணவர்கள் இன்று எதையும் சிரமப்பட்டு வாசிக்க விரும்புவதில்லை எனில் அதை ஒரு குறையாகவோ பிரச்சினையாகவோ ஹார்வெர்ட் நிர்வாகம் பார்ப்பதில்லை, அவர்களுக்கு ஏற்றபடி மேலோட்டமாக ஜாலியாகப் பேசிவிட்டு வந்தால்போதும் என அது ஆசிரியர்களைக் கேட்பதாகச் சொல்லும் அவர் கற்பித்தலில் தனக்கு மகிழ்ச்சியே இல்லாமல் போக வேலையை விட்டுவிட்டு யுடியூபராகிவிட்டதாக சொல்கிறார். இனிமேல் தான் கல்வித் துறைக்கே போகப் போவதில்லை என்கிறார் (இவரது தத்துவச் சேனல் பிரசித்தமானது: https://www.youtube.com/@_jared). இந்தப் போக்கு இந்தியாவுக்கும் உலகின் பல பகுதிகளுக்கும் பரவிவிட்டது. குறைவாக முதலீடு செய்து கட்டாயத்தின் பெயரில் கல்லூரிக்கு வரும் மாணவர்களைச் சுரண்டி நூறு மடங்கு சம்பாதிப்பதே தனியார் உயர்கல்வித்துறையின் உத்தேசம் ஆன பின்னர் எந்த அடிப்படையான படிப்புக்கும் மதிப்பற்றுவிட்டது - கணிதத்தை செயற்கை நுண்ணறிவு பார்த்துக்கொள்ளுமா அதைக் கற்பிக்கவே தேவையில்லை, நேரடியாக வேலையில் தேவைப்படும் ஒன்றை மட்டுமே கற்பித்துக்கொடு என்று நிர்வாகங்களும் கம்பெனி சி.இ.ஓக்களும் சொல்கிறார்கள். இதையே இன்றைய இளைஞர்களுக்கு வேலைத் தகுதியின்மை எனச் சொல்லி வலியுறுத்துகிறார்கள். ஒவ்வொரு ஐந்தாண்டுகளும் மாறப் போகிற வேலைச் சந்தைக்குப் பொருத்தமான கல்வி எந்த கல்வி நிறுவனமும் அளிக்க முடியாது. பொறியியலின் அடிப்படையே தேவையில்லை, செயற்கை நுண்ணறிவை நிர்வகிக்கும் திறன் மட்டும் போதும், யாரும் பேசவோ எழுதவோ மொழியைக் கற்கத் தேவையில்லை, செயற்கை நுண்ணறிவே அதைச் செய்யும் என ஒரு கம்பெனி சி.இ.ஓ சொன்னால் அதைப் பின்பற்றி அரைகுறையாகக் கற்கும் ஒரு மாணவர் நாளை வேலையின் தேவை முழுக்க மாறும்போது நிர்கதியாக நிற்பார். அவரால் சொந்தமாகச் சிந்தித்து புதிய தொழில்நுட்பத்தைக் கண்டுபிடிக்க, புதிய கட்டமைப்புகளை உருவாக்க இயலாதவராக இருப்பார். நான் இன்று அப்படியானவர்களை அதிகமாகப் பார்க்கிறேன் - அண்மையில் என்னிடம் ஒரு பேராசிரியர் சொன்னார்: அவர் ஒரு மாணவர் தேர்வு நேர்முகத்தில் இருந்தார். வணிகப் பயன்பாட்டுத் தரவுகளைப் பரிசோதித்து அவர்களைக் கட்டுப்படுத்தும் நிரல்களை எழுதக் கற்றுக்கொடுக்கும் படிப்பு அது. வந்த மாணவர்களில் 98% பேர்களுக்கு நிரலாக்க, வணிகவியல் படிப்போ அறிவோ இல்லை. ஆனாலும் அப்படிப்பை முடித்து வேலைக்குப் போக வேண்டும் என வருகிறார்கள். இவர்களுக்கு உயர்கல்விக்குப் பிறகு எந்த தகுதியும் ஆர்வமும் இல்லாமல் ஆச்சரியமில்லை. அது போதும் என்றே யு.ஜி.ஸியும் தனியார் கல்வி நிறுவனங்களும் ஒருசேர நினைக்கிறார்கள். உ.தா., நீங்கள் இளங்கலைப் படிப்பில் பொறியியல் படித்துவிட்டு நேரடியாக - எந்த அடிப்படையும் தெரியாமல் - மொழியில் முனைவர் பட்ட ஆய்வு பண்ணலாம். இதை கல்விச் சுதந்திரம் என்று யுஜிஸி நினைக்கிறது. ஆனால் இது படுமுட்டாள்தனம் என யுஜிஸி மண்டைகளுக்கு விளங்கவில்லை. தனியார் கல்வி நிறுவனங்கள் அதிகமாகச் சம்பாதிப்பதற்கு எந்தப் படிப்பிலும் எவரையும் சேர்க்கலாம் என விதிமுறையை யுஜிஸி கொண்டு வந்தது. இப்போது ஆன்லைனில் பட்டப்படிப்பை யுஜிஸி அனுமதிக்கிறது. இது மேலும் பல பெருங்குழப்பங்களைக் கொண்டு வரும். வேலையளிக்கும் நிறுவனங்கள் இந்த ஆன்லைன் படிப்பை நிராகரிக்கும் நிலை வரும். ஏனென்றால் நமது மாணவர்களுக்குத் தாமாகப் படிக்கிற பொறுப்பும் சுயக்கட்டுப்பாடும் இல்லை. கிடைக்கும் வாய்ப்பில் எல்லாம் மோசடி செய்து பட்டம் வாங்கி விடுவார்கள். நான் அண்மையில் ஒரு முதுகலைப் பட்ட நேர்முகத்தில் ஒரு மாணவரைப் பார்த்தேன். அவர் பெங்களூரின் பிரசித்தமான தனியார் பல்கலையில் இளங்கலை ஆங்கிலப் படிப்பில் 83% மதிப்பெண்கள் பெற்றிருக்கிறார். நான் மாணவராக இருந்தபோது 60-70% மதிப்பெண் வாங்க மிகச்சிறந்த மாணவராக இருக்க வேண்டும். அவர்களுக்கே தங்கப்பதக்கம் கிடைக்கும் (நான் என் இளங்கலையிலும் முதுகலையிலும் தங்கப்பதக்கம் பெற்றேன்.). சரி பெரிய புத்திசாலி போல என நினைத்து நான் அம்மாணவரிடம் அவர் ஒரு மாதத்திற்கு முன்பு அவர் தேர்வு எழுதிய பாடத்தில் இருந்து ஒரு கேள்வி கேட்டேன். ரொம்ப சாதாரணமான கேள்விதான். அவருக்குத் தெரியவில்லை. "மறந்துவிட்டது சார்" என்றார். சரி பரவாயில்லை. உங்கள் பாடத்திட்டத்தில் என்னவெல்லாம் இருந்தன என்று கேட்டால் அதுவும் தெரியவில்லை. அதெப்படி மறந்துபோகும்? எனக்கு நான் 25 ஆண்டுகளுக்கு முன் படித்ததெல்லாம் நினைவிருக்கிறதே. அவர் நூற்றுக்கு 82 மதிப்பெண்கள் வேறு அப்பாடத்தில் பெற்றிருந்தார். இன்னொரு மாணவர் கேரளாவைச் சேர்ந்தவர். அவர் 85%. ஆனால் ஒரு வாக்கியம் பேசினால் 10 தவறுகள் செய்கிறார். இவர்களுக்கு எப்படி இவ்வளவு மதிப்பெண்கள் கொடுக்கப்படுகின்றன என்றால் அதை 'வாடிக்கையாளர் திருப்தி' எனும் பெயரில் நிர்வாகங்கள் நியாயப்படுத்துகின்றன. மதிப்பெண்ணை நியாயமாக அளித்தால் மாணவர் சேர்க்கை குறையும் என அஞ்சுகிறார்கள். அரசுப் பள்ளிகளில் அனைவரையும் தேர்வு செய்யும் முடிவை நாம் விமர்சிக்கையில் தனியாரில் நடக்கும் மோசடிகளைக் கண்டுகொள்வதில்லை. இன்னும் சொல்லப்போனால் நீங்கள் மாணவர்களையே குற்றம் சொல்ல முடியாது - பல்கலைக்கழகத்தில் இன்று ஒருவர் துணைவேந்தர் ஆவதற்கு எந்த கல்வித்தகுதியும் தேவையில்லை, தொழிற்துறையில் உயர்பொறுப்பில் இருந்த அனுபவம் போதும் என யுஜிஸி கூறுகிறது. நமது பிரதமர் ஒரு சிறந்த நடிகர்தான், ஆனால் அவர் தொழில்முறை நடிகர் அல்லர். அதற்காக அவருக்கு பால்கே விருது கொடுக்க முடியாதில்லையா. இரண்டுக்கும் வித்தியாசமுள்ளது. யுஜிஸியோ கல்வித் தகுதியை விட பணம்தான் முக்கியம் எனும் கொள்கையை வைத்திருக்கிறது. மாணவர்களின் எதிர்காலத்தைவிட தனியாரின் லாபத்தையே அது பிரதானப்படுத்துகிறது. அதற்குத் தோதாக மட்டுமே விதிமுறைகளை இயற்றுகிறது. இப்படி எல்லா விதங்களிலும் அது உயர்கல்வியை அழிக்கும் பணியை ஆற்றுகிறது. இதுவும் அமெரிக்கப் பண்பாடுதான் - அங்கு தேர்தலிலே நிற்காத டெஸ்லா முதலாளி சற்று காலத்திற்கு முன்வரை அரசைக் கட்டுப்படுத்தவில்லையா! கத்தரிக்காய் வியாபாரிகளும் தக்காளி வியாபாரிகளுமாக உயர்கல்வித் துறையை நாசம் பண்ணிக்கொண்டிருக்கிறார்கள். Posted 23 hours ago by ஆர். அபிலாஷ் https://thiruttusavi.blogspot.com/2025/06/blog-post_66.html
-
ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல்
ஈரானியர்கள் ஒருபோதும் சரணடைபவர்கள் இல்லை - ஆயத்தொல்லா கமேனி 18 JUN, 2025 | 04:27 PM ஈரானிற்கு எதிராக இஸ்ரேலுடன் இணைந்து அமெரிக்க தாக்குதலை மேற்கொண்டால் அது மீண்டும் சீர்செய்ய முடியாத சேதத்தை சந்திக்கும் என எச்சரித்துள்ள ஈரானின் ஆன்மீக தலைவர் ஆயத்தொல்லா கமேனி ஈரானியர்கள் சரணடைபவர்கள் அல்ல எனவும் குறிப்பிட்டுள்ளார். ஈரானின் ஆன்மீக தலைவரின் உரை அந்த நாட்டின் தொலைக்காட்சியில் வாசிக்கப்படுகின்றது அதில் கமேனி ஈரானையும் அதன் மக்களையும் வரலாற்றையும் நன்கு அறிந்த புத்திசாலிகள் ஒருபோதும் ஈரானை அச்சுறுத்தும் தொனியில் பேசமாட்டார்கள்,ஏனென்றால் ஈரானியர்கள் சரணடைபவர்கள் இல்லை என குறிப்பிட்டுள்ளார். https://www.virakesari.lk/article/217844
-
13ஆவது ஐசிசி மகளிர் உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டிகள்
அப்ப நீங்கள் போட்டியில் பங்குபற்றலாம் தானே அண்ணை? கந்தப்பு அண்ணை போட்டியை நடத்த முன்வந்தால் பங்குபற்றுவீர்களா அண்ணை? @செம்பாட்டான் அண்ணை நடத்த முன்வந்தாலும் மகிழ்ச்சியே. முதலாவது போட்டியாளர் தயார், போட்டியை நடத்தப்போவது யார் யார்?! பத்துப்பேர் கையை தூக்கினால் 31 - 35 (31போட்டிகள் தானே) கேள்விகளுடன் சுருக்கமாக போட்டியை நடத்தலாமே அண்ணை.
-
ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல்
இஸ்ரேலிற்கு எதிராக ஹைப்பர்சோனிக் ஏவுகணைகள் - ஈரான் 18 JUN, 2025 | 12:20 PM அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் ஈரானை நிபந்தனையற்ற விதத்தில் சரணடையுமாறும் பொறுமை குறைகின்றது எனவும் எச்சரித்த நிலையில் புதன்கிழமை இஸ்ரேலிற்கு எதிராக ஹைப்பர்சோனிக் ஏவுகணைகளை ஏவியதாக ஈரான் தெரிவித்துள்ளது. டெல்அவி மக்கள் தாக்குதலிற்கு தயாராகவேண்டும் என ஈரான் எச்சரிக்கை விடுத்த அதேவேளை இஸ்லாமிய புரட்சிகர காவல்படை தனது ஹைபர்சோனிக் பட்டா ஏவுகணைகள் பாதுகாப்பான பதுங்குமிடங்களை உலுக்கிவருகின்றன என தெரிவித்துள்ளது. நேர்மையான வாக்குறுதி நடவடிக்கையின் 11வது சுற்றுதாக்குதல்களை பட்டா ஏவுகணைகளை பயன்படுத்தி மேற்கொண்டதாக ஈரானின் புரட்சிகர காவல்படை தெரிவித்துள்ளது. ஹைப்பர்சோனிக் ஏவுகணைகள் ஒலியின் வேகத்தை விட ஐந்துமடங்கு அதிகமான வேகத்தில் பயணிக்ககூடியவை. நடுவானில் தங்கள் பயணத்தை மாற்றக்கூடியவை இதனால் அவற்றின் பயணத்தை கண்டுபிடிப்பது மிகவும் கடினம். https://www.virakesari.lk/article/217800
-
பிரித்தானிய உயர்ஸ்தானிகர் வடக்கிற்கு விஜயம்
தையிட்டி விகாரை விவகாரம், செம்மணி புதைகுழி, காணி விடுவிப்பு குறித்து வடக்கு ஆளுநரிடம் கேட்டறிந்தார் பிரித்தானிய உயர்ஸ்தானிகர் Published By: DIGITAL DESK 3 18 JUN, 2025 | 02:43 PM யாழ்ப்பாணத்தின் வலி. வடக்கு பிரதேசத்தில் எதிர்காலத்திலும் படிப்படியாக காணிகள் விடுவிக்கப்படும் என எதிர்பார்ப்பதாக வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன், இலங்கைக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகர் அன்ரூ பட்ரிக்கிற்கு தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்துக்கு விஜயம் மேற்கொண்டுள்ள இலங்கைக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகர், ஆளுநர் செயலகத்தில் இன்று புதன்கிழமை (18) வடக்கு மாகாண ஆளுநரைச் சந்தித்துக் கலந்துரையாடினார். இங்குள்ள முதலீட்டாளர்களைச் சந்தித்துக் கலந்துரையாடியதாக பிரிட்டன் தூதுவர் இந்தச் சந்திப்பின்போது ஆளுநரிடம் குறிப்பிட்டதுடன், முதலீட்டுக்கான சந்தர்ப்பங்கள் தொடர்பிலும் வினவினார். வடக்கில் அமையப்பெறவுள்ள மூன்று முதலீட்டு வலயங்களினதும் உட்கட்டுமான அபிவிருத்திற்குரிய ஏற்பாடுகள் நடைபெற்று வருவதாக ஆளுநர் தெரிவித்தார். வேலை வாய்ப்புக்கான தேவையைப் பூர்த்தி செய்வதற்கு அவை அவசியம் எனச் சுட்டிக்காட்டிய ஆளுநர், ஆட்சிமாற்றத்தின் பின்னர் முதலீட்டாளர்கள் இங்கு அதிகளவில் வருகின்றனர் எனவும் குறிப்பிட்டார். இளையோரிடத்தில் புலம்பெயர்வுக்கான சிந்தனை மேலோங்கியிருக்கின்றது என்பதையும் ஏற்றுக்கொண்ட ஆளுநர், அவர்களுக்கான வேலைவாய்ப்புக்கள் இங்கே உருவாக்கப்பட வேண்டும் என்ற நோக்கத்திலேயே முதலீட்டு வலயங்களை அமைக்கும் நடவடிக்கைகளும் அரசாங்கத்தால் எடுக்கப்பட்டு வருகின்றது எனக் குறிப்பிட்டார். சுற்றுலாப் பயணிகளின் வருகை தொடர்பிலும், விமான சேவை மற்றும் கப்பல் சேவைகள் தொடர்பாகவும் பிரித்தானிய உயர்ஸ்தானிகர் கேட்டறிந்துகொண்டார். யாழ்ப்பாணத்துக்கும் கொழும்புக்கும் இடையிலான உள்ளூர் விமான சேவை ஆரம்பிக்கப்பட்டிருந்தாலும் கட்டுநாயக்காவுக்கும் பலாலிக்கும் இடையிலான விமானசேவை ஆரம்பிப்பது பெருமளவு சுற்றுலாப் பயணிகளுக்கு உதவக்கூடியதாக இருக்கும் எனக் குறிப்பிட்ட ஆளுநர் இதற்குரிய கோரிக்கை அரசாங்கத்திடம் முன்வைக்கப்பட்டுள்ளது எனவும் தெரிவித்தார். காணி உரித்து நிர்ணயத் திணைக்களத்தால் வெளியிடப்பட்ட வர்த்தமானி, தையிட்டி திஸ்ஸ விகாரை விவகாரம் மற்றும் செம்மணி புதைகுழி அகழ்வு என்பன தொடர்பாகவும் பிரித்தானிய உயர்ஸ்தானிகர் களநிலைமைகளைக் கேட்டறிந்து கொண்டார். கடந்த காலங்களில் பிரிட்டன் அரசாங்கம் ஐ.நா.வின் முகவர் அமைப்புக்கள் ஊடாக பல்வேறு நிதி உதவிகளை வழங்கியதை நினைவுகூர்ந்த ஆளுநர், தற்போதும் இந்தியாவிலிருந்து நாடு திரும்ப எதிர்பார்த்துள்ள அகதிகளுக்கான வாழ்வாதாரத்துக்கு உதவிகள் தேவை என்ற கோரிக்கையையும் ஆளுநர் முன்வைத்தார். மேலும், பிரதான வீதிகள் புனரமைக்கப்பட்டிருந்தாலும் கிராமிய வீதிகள், கிராமிய உட்கட்டுமானங்களுக்கான தேவைகள் மற்றும் பின்தங்கிய மக்களின் வாழ்வாதார மேம்பாட்டுக்கான தேவைப்பாடுகள் இன்னமும் உள்ளன எனவும் ஆளுநர் பிரித்தானிய உயர்ஸ்தானிகருக்கு தெரியப்படுத்தினார். இந்தச் சந்திப்பில் ஆளுநரின் செயலாளர் மற்றும் ஆளுநரின் இணைப்புச் செயலாளர்கள் பங்கேற்றனர். https://www.virakesari.lk/article/217828
-
11 வயதில் மதகுரு, மன்னருக்கு எதிராக கலகம் - இரானின் உச்ச தலைவர் காமனெயி குறித்து அறியப்படாத தகவல்கள்
பட மூலாதாரம்,IRANIAN LEADER PRESS OFFICE / HANDOUT/ANADOLU VIA GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், பிபிசி பெர்சியன் சேவை பதவி, 2 மணி நேரங்களுக்கு முன்னர் இரானின் அதி உயர் தலைவர் ஆயதுல்லா அலி காமனெயியை தற்போதைய மோதலில் கொல்வதற்கான இஸ்ரேலின் திட்டத்தை அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், "அதுவொரு சிறந்த யோசனை இல்லை" எனகூறி நிராகரித்ததாக, அமெரிக்க ஊடகங்களில் தகவல்கள் வெளியாகியுள்ளன. இரான் மீதான சமீபத்திய தாக்குதல்கள் மூலம் இரானின் அணுசக்தி திறன்களால் ஏற்பட்டுள்ள "இருப்பியல் அச்சுறுத்தலை" அழிப்பதை தங்களுடைய இலக்கு என இஸ்ரேல் கூறியுள்ளது. ஆனால், அதை தாண்டியும், இரானில் ஆட்சி மாற்றம் ஏற்படுவது, இஸ்ரேலிய ராணுவ தாக்குதல்களின் விளைவாக இருக்கலாம் என, அந்நாட்டு பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்தார். இரானின் அதி உயர் தலைவர் குறித்தும் நாட்டில் அவருடைய அதிகாரங்கள் மற்றும் அவருடைய குடும்பத்தினருக்கு அரசியலில் உள்ள பங்கு குறித்தும் இங்கே ஆராயப்பட்டுள்ளது. 1979ம் ஆண்டில் நடந்த இஸ்லாமிய புரட்சிக்குப் பிறகு நாட்டின் அதி உயர் தலைவராக ஆன இரண்டாவது நபர் ஆயதுல்லா அலி காமனெயி. மேலும் 1989ம் ஆண்டிலிருந்து அவர் இப்பதவியில் உள்ளார். அவர் பதவியில் இல்லாத வாழ்நாளை இரானிய இளைஞர்கள் ஒருபோதும் கண்டதே இல்லை. அதிகார மையங்களுக்கு இடையே நடக்கும் போட்டி வலையின் மையத்தில் இருக்கிறார் காமனெயி. எந்தவொரு பொது கொள்கை சார்ந்த விவகாரங்களிலும் தன் அதிகாரத்தை அவர் பயன்படுத்த முடியும், பொது அலுவலகங்களுக்கான பதவிகளுக்கு அவரால் ஒருவரை தேர்ந்தெடுக்கவும் முடியும். ஒரு நாட்டின் தலைவராகவும் இரானின் புரட்சிகர காவல் படை உட்பட ராணுவத்தின் தலைமைத் தளபதியாகவும் அவர் ஒட்டுமொத்த அதிகாரம் கொண்டவராக உள்ளார். பட மூலாதாரம்,ANADOLU/GETTY IMAGES படக்குறிப்பு, ஆயதுல்லா அலி காமனெயி, இரானின் அதிகார கட்டமைப்பின் மையமாக இருக்கிறார். இரானின் இரண்டாவது பெரிய நகரமான மஷாட்டில் 1939ம் ஆண்டில் அவர் பிறந்தார். மத நம்பிக்கைகள் கொண்ட ஒரு குடும்பத்தின் எட்டு குழந்தைகளுள் இரண்டாவது குழந்தையாக பிறந்தவர் இவர். இரானில் ஆதிக்கம் செலுத்தும் ஷியா பிரிவு முஸ்லிம்களுக்கு மத குருவாக காமனெயியின் தந்தை இருந்தார். காமனெயிக்கு கல்வியையும் தாண்டி குரான் குறித்து படிப்பதிலேயே ஆர்வம் இருந்தது. தன் 11 வயதிலேயே அவர் மத குருவாக தகுதி பெற்றார். ஆனால், அந்த சமயத்தில் இருந்த மத தலைவர்களை போலவே அவருடைய பணிகள் ஆன்மிகத்தை விட அரசியலை சார்ந்தே அதிகம் இருந்தது. சிறந்த பேச்சாளரான காமனெயி, இரான் மன்னர் ஷா-வை விமர்சிக்கும் நபராக ஆனார், அதைத் தொடர்ந்து இஸ்லாமிய புரட்சியால் அந்த மன்னர் ஆட்சியிலிருந்து தூக்கியெறியப்பட்டார். பல ஆண்டுகளாக அவர் பதுங்குகுழியிலேயே இருந்தார் அல்லது சிறையிலேயே அடைக்கப்பட்டார். ஷாவின் ரகசிய காவல் துறையால் காமனெயி ஆறு முறை கைது செய்யப்பட்டிருந்தார், சித்ரவதை மற்றும் உள்நாட்டுக்குள்ளேயே நாடு கடத்தப்படுதல் போன்றவற்றுக்கு ஆளானார். 1979 இஸ்லாமிய புரட்சிக்கு அடுத்த ஆண்டே ஆயதுல்லா ருஹொல்லா கோமினி (Ayatollah Ruhollah Khomeini), அவரை தலைநகர் டெஹ்ரானில் வெள்ளிக்கிழமை பிரார்த்தனைக்கான தலைவராக்கினார். அதன்பின், 1981ம் ஆண்டில் காமெனெயி அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டார். பின்னர், 1989ம் ஆண்டு ஆயதுல்லா ருஹொல்லா கோமினிக்கு அடுத்த தலைராக, மதத் தலைவர்களால் தேர்ந்தெடுக்கப்பட்டார். ருஹொல்லா கோமினி தன்னுடைய 86வது வயதில் காலமானார். மகன் மோஜ்தாபாவுக்கு உள்ள அதிகாரம் என்ன? அலி காமனெயி அரிதாகவே வெளிநாடுகளுக்கு பயணிப்பார். அவர், மத்திய டெஹ்ரானில் உள்ள வளாகத்தில் தன் மனைவியுடன் வசித்து வருவதாக தகவல் உள்ளது. தோட்டக்கலை மற்றும் கவிதைகள் மீது அவருக்கு ஆர்வம் இருப்பதாக கூறப்படுகிறது; தன்னுடைய இளம் வயதில் அவருக்கு புகைப்பழக்கம் இருந்ததற்காக அவர் அறியப்பட்டார், இரானில் மதத்தலைவர் ஒருவர் புகைப்பிடிப்பது வழக்கத்துக்கு மாறானது. 1980களில் நடந்த ஒரு கொலை முயற்சியில் அவருடைய வலது கை செயலிழந்தது. அவருக்கும் அவருடைய மனைவிக்கும் மன்சோரே கோஜஸ்டே பேகெர்ஸாடேவுக்கும் (Mansoureh Khojasteh Baqerzadeh) ஆறு குழந்தைகள் உள்ளனர், அவர்களுள் 4 மகன்கள் மற்றும் இரண்டு மகள்கள் ஆவர். காமனெயி குடும்பத்தினர் பொதுவெளியிலோ அல்லது ஊடகத்திலோ அரிதாகவே தோன்றியுள்ளனர். மேலும், அவருடைய குழந்தைகளின் தனிப்பட்ட வாழ்க்கை குறித்த அதிகாரபூர்வ அல்லது சரியான தகவல்கள் மிகவும் குறைவாகவே உள்ளன. அவருடைய நான்கு மகன்களுள் இரண்டாவது மகனான மோஜ்தாபா, அவருடைய செல்வாக்கு காரணமாக, நன்கு அறியப்பட்ட நபராக உள்ளார், அவருடைய தந்தையின் நெருக்கமான வட்டாரத்தில் அவர் குறிப்பிடத்தக்க பங்கு வகிக்கிறார். பட மூலாதாரம்,NURPHOTO/GETTY IMAGES படக்குறிப்பு, உச்ச தலைவரின் மகனான மோஜ்தாபா, இஸ்லாமிய குடியரசின் மிகவும் அதிகாரமிக்க நபராக கருதப்படுகிறார் டெஹ்ரானில் உள்ள அலாவி உயர்நிலை பள்ளியில் மோஜ்தாபா படித்தார், பாரம்பரியமாக இஸ்லாமிய குடியரசின் மூத்த அதிகாரிகளின் குழந்தைகள் படிக்கும் பள்ளியாக இது அறியப்படுகிறது. பிரபலமான பழமைவாத தலைவரான கோலம்-அலி ஹதாத்-அடெலின் மகளை அவர் திருமணம் செய்தார், மதகுருவாக அவர் ஆகாத காலகட்டத்தில் இந்த திருமணம் நடைபெற்றது. அச்சமயத்தில் கோம் (Qom) நகரில் இறையியல் படிப்பை தொடங்க அவர் திட்டமிட்டிருந்தார். அவர் தன்னுடைய 30வது வயதில் இரானின் மிகவும் பிரபலமான, கோமில் உள்ள ஷியா இறையியல் பள்ளியில் தன் படிப்பை தொடங்கினார். 2000ம் ஆண்டுகளுக்கு மத்தியில் அரசியல் வட்டாரத்தில் மோஜ்தாபாவின் செல்வாக்கு குறித்து ஊடகத்தில் அரிதாகவே பேசப்பட்டாலும் பொதுவெளியில் அது அதிகமாக தெரிந்தது. 2004ம் ஆண்டு அதிபர் தேர்தலில் ஏற்பட்ட சர்ச்சையின் போது மோஜ்தாபா மிகுந்த கவனம் பெற்றார். அப்போது பிரபலமான வேட்பாளரான மெஹ்தி கரௌபி (Mehdi Karroubi) ஆயதுல்லா காமனெயிக்கு வெளிப்படையாக கடிதம் எழுதினார். மஹ்மௌத் அஹ்மதினெஜத்-க்கு (Mahmoud Ahmadinejad) ஆதரவாக மோஜ்தாபா பின்னணியில் செயல்பட்டதாக அவர் குற்றம்சாட்டியிருந்தார். 2010ம் ஆண்டிலிருந்து இஸ்லாமிய குடியரசில் மிகுந்த அதிகாரமிக்க நபர்களுள் ஒருவராக பரவலாக அறியப்பட்டார். தன்னுடைய பதவிக்கு மோஜ்தாபாவையே காமனெயி விருப்ப வேட்பாளராக கொண்டிருப்பதாக, சில உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் கூறுகின்றன. எனினும், இந்த தகவலை அதிகாரபூர்வ வட்டாரங்கள் மறுத்துள்ளன. மேலும், அலி காமனெயி ஓர் அரசர் அல்ல, அவரால் எளிதாக ஆட்சியை அவருடைய மகனுக்கு வழங்க இயலாது. தன் தந்தையின் பழமைவாத வட்டாரத்துக்குள்ளும் குறிப்பிடத்தக்க அதிகாரத்தைக் கொண்டவராக மோஜ்தாபா உள்ளார். அரசியலமைப்பை விட அதிகாரம் மிக்கதாக உள்ள உச்ச தலைவரின் அலுவலகத்திலும் மோஜ்தாபா அதிகாரம் கொண்டவராக உள்ளார். முஸ்தஃபா, காமனெயி குடும்பத்தின் மூத்த மகனாவார். இவர், தீவிர பழமைவாத மதகுருவான அஸிஸொல்லா கோஷ்வக்டின் (Azizollah Khoshvaght) மகளை திருமணம் செய்துள்ளார். 1980களில் நடந்த இரான் - இராக் போரில் முஸ்தஃபா மற்றும் மோஜ்தாபா இருவரும் முன்னணியில் செயல்பட்டுள்ளனர். பட மூலாதாரம்,AFP/GETTY IMAGES படக்குறிப்பு,காமனெயி மகன்களுள் இளையவர் மேசம் (Meysam) அலி காமனெயியின் மூன்றாவது மகன் மசௌத், 1972ம் ஆண்டு பிறந்தார். கோம் செமினரி பழமைவாத ஆசிரியர்கள் சங்கத்துடன் இணைந்த, மிகவும் அறியப்பட்ட மத குருவான மோஹ்சென் கராஸியின் (Mohsen Kharazi) மகளான சூசன் கராஸியை இவர் திருமணம் செய்துள்ளார். சூசன் கராஸி, சீர்திருத்தவாத முன்னாள் ராஜதந்திரியான முகமது சதெக் கராஸியின் சகோதரி ஆவார். மசௌத் காமனெயி அரசியல் வட்டாரத்திலிருந்து விலகியே உள்ளார், அவர் குறித்து பொதுவெளியில் அதிக தகவல்கள் இல்லை. தன் தந்தையின் பணிகள் மற்றும் நடவடிக்கைகளை, கண்காணித்து காமனெயியின் பரப்புரை அமைப்பாக செயல்படும் அலுவலகத்துக்கு மசௌத் தலைமை தாங்கினார்; தன் தந்தையின் வாழ்க்கை வரலாறு மற்றும் நினைவுக்குறிப்புகளை தொகுக்கும் பொறுப்பும் அவரிடம் உள்ளது. காமனெயியின் இளைய மகனான மேசம், 1977ம் ஆண்டில் பிறந்தார். அவருடைய மூன்று அண்ணன்களை போலவே, இவரும் ஒரு மதகுருவாக உள்ளார். 1979ம் ஆண்டு நிகழ்ந்த புரட்சிக்கு முன்னதாக, புரட்சிகர மதகுருக்களுக்கு நிதி ரீதியாக ஆதரவளித்ததற்காக அறியப்படும் பணக்கார, செல்வாக்குமிக்க வணிகரான மஹ்மௌத் லோலாசியனின் (Mahmoud Lolachian) மகளை இவர் திருமணம் செய்துள்ளார். மேசம் மனைவியின் பெயர் ஊடகங்களில் குறிப்பிடப்படவில்லை. தன் தந்தை மேற்கொள்ளும் பணிகளை பாதுகாத்து அவற்றை வெளியிடுவதற்கான அலுவலகத்தில் மசௌத்துடன் இணைந்து மேசம் பணியாற்றுகிறார். இரானை தாக்க அமெரிக்கா தயாராகிறதா? போர்க்கப்பல், போர் விமானங்கள் நகர்வு இஸ்ரேல் - இரான் மோதல் முற்றுவதால் ரஷ்யா கவலை ஏன்? காமனெயி, அணுசக்தி திட்டம்: இரானில் இஸ்ரேலின் உண்மையான இலக்கு எது? இரானை ஆதரிக்கும் பாகிஸ்தான் இஸ்ரேலுக்கு எதிராக அணு ஆயுதங்களை பயன்படுத்துமா? இரு மகள்கள் காமனெயியின் மகள்கள் குறித்து பொதுவெளியில் அதிகம் அறியப்படவில்லை. குடும்பத்தில் மிகவும் இளையவர்களாக புஷ்ரா மற்றும் ஹோடா உள்ளனர், 1979 புரட்சிக்குப் பிறகே அவர்கள் பிறந்தனர். 1980ம் ஆண்டு பிறந்த புஷ்ரா, காமனெயி அலுவலகத்தில் தலைமை அலுவலராக உள்ள கோகம்ஹோசெயின் (முகமது) மொஹம்மதி கோல்பயெகனியின் (Gholamhossein (Mohammad) Mohammadi Golpayegani) மகனான மொஹம்மது-ஜாவத் மொஹம்மதி கோல்பயெகனியை திருமணம் செய்துள்ளார். காமனெயியின் இளைய மகளான ஹோசா, 1981ம் ஆண்டு பிறந்தார். இமாம் சாதிக் பல்கலைக்கழகத்தில் மார்க்கெட்டிங் படித்து அங்கேயே கற்பித்த, மெஸ்பா அல்-ஹோடா மகேரி கனியை அவர் திருமணம் செய்துள்ளார். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/c4g8egxy9g1o
-
வடக்கு மாகாணத்தின் சுற்றுலாத்துறையை மேம்படுத்த ஒருங்கிணைந்த விமான சேவைகள், தீவுகளுக்கான போக்குவரத்து வசதிகளை மேம்படுத்துங்கள் ; ரஜீவன் கோரிக்கை
18 JUN, 2025 | 02:54 PM (எம்.நியூட்டன்) வடக்கு மாகாணத்திற்கு ஒருங்கிணைந்த விமான சேவைகள், தீவுகளுக்கான போக்குவரத்து வசதிகளை மேம்படுத்துங்கள் என பாராளுமன்ற உறுப்பினர் ரஜீவன் ஜெயச்சந்திரமூர்த்தி சுற்றுலாத்துறை ஆலோசனை கூட்டத்தில் கோரிக்கை முன்வைத்தார். வடமாகாணத்தின் உல்லாசப் பயணத்துறையை அபிவிருத்தி செய்யும் நோக்குடன், யாழ் – கிளிநொச்சி மாவட்டங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் பாராளுமன்ற உறுப்பினர் மற்றும் வெளிநாட்டு மற்றும் சுற்றுலாத் துறை அமைச்சு ஆலோசனைக் குழுவின் உறுப்பினரான ரஜீவன் ஜெயச்சந்திரமூர்த்தி, புதன்கிழமை (18) நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் இந்த பரிந்துரைகளை முன்வைத்தார். கொழும்பில் உள்ள பாராளுமன்ற வளாகத்தில், வெளிநாட்டு மற்றும் சுற்றுலாத் துறை அமைச்சர் விஜித ஹேரத்தின் தலைமையில் நடைபெற்றது. இதில் பங்கேற்ற ரஜீவன் ஜெயச்சந்திரமூர்த்தி கருத்து தெரிவிக்கையில், வடமாகாணமே, இலங்கையின் அடுத்தபட்ட சுற்றுலா மையமாக வளரக்கூடிய வளமான பகுதி. யாழ்ப்பாணம் –கிளிநொச்சி பகுதிகள் பண்பாட்டு பாரம்பரியம், இயற்கை அழகு மற்றும் ஆன்மீக ஆழம் கொண்டவை. திறமையான திட்டமிடலும், சரியான விளம்பர முயற்சிகளும், முதலீடுகளும் இடம்பெற்றால், இது இலங்கையின் வடக்கு சுற்றுலா மையமாக மாறும். தற்போது வடக்கு மாகாணம், இலங்கையில் வருகை தரும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளில் சுமார் 3-5% மட்டுமே ஈர்க்கிறது. இது கொழும்பு, கண்டி, காலி, நுவரெலியா, தம்புள்ளை போன்ற பிரதேசங்களுடன் ஒப்பிடுகையில் மிகவும் குறைவாகும். இவ்வாறு ஒப்பீட்டளவில் பின்னடைவில் இருக்கும் வடமாகாணத்தின் சுற்றுலா துறையை முன்னேற்ற, பல தளங்களில் மேம்பாட்டு நடவடிக்கைகள் அவசியம். குறிப்பாக ஒருங்கிணைந்த விமான சேவைகள், தீவுகளுக்கான போக்குவரத்து வசதிகள், தனியார் முதலீடுகளுடன் ஹோட்டல் மற்றும் விடுதி வசதிகள், நவீன விளம்பரங்கள், சமூக ஊடக விளம்பரங்கள், சிறப்பான இளைஞர் பயிற்சிகள், கிராமப்புற அனுபவத்துடன் வீட்டு விடுதிகள், யாழ் உணவுப் பாதைகள், நல்லூர் திருவிழா போன்ற திருவிழாக்களை சர்வதேச நாட்காட்டியில் இணைத்தல் போன்றவற்ரை நடைமுறைப்படுத்தவேண்டும் இவை யாவும் இணைந்து மேற்கொள்ளப்பட்டால், 2030ஆம் ஆண்டுக்குள் யாழ் மற்றும் வடமாகாணத்தில் மொத்த சுற்றுலா பங்கு 15-18% வரை உயரலாம். மேலும் வடமாகாணத்தில் தற்போதைய அமைச்சர்கள், பிரதி அமைச்சர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள் இணைந்து ஒரு விசேட உபக்குழுவை அமைத்து வடக்கு அபிவிருத்திக்காக திட்டமிட வேண்டும் என்றார். குறித்த விடயங்களை கேட்டறிந்த அமைச்சர் இவை தொடர்பில் வெளிவிவகார அமைச்சின் உயர் அதிகாரிகளை அழைத்து கலந்துரையாடி, தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என உறுதியளித்தார். https://www.virakesari.lk/article/217826
-
பிரித்தானிய உயர்ஸ்தானிகர் வடக்கிற்கு விஜயம்
யாழ். மேயர் உள்ளிட்ட பல தரப்பினரை சந்திக்க பிரித்தானிய உயர்ஸ்தானிகர் வடக்கிற்கு விஜயம் Published By: DIGITAL DESK 3 18 JUN, 2025 | 02:30 PM இலங்கைக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகர் அன்றூ பற்றிக் வடக்கிற்கான வியத்தை மேற்கொண்டுள்ளார். இவ்வாரம் யாழில் தங்கியிருக்கும் பிரித்தானியத் தூதுவர் அன்றூ பற்றிக், புதிதாக தெரிவுசெய்யப்பட்டுள்ள யாழ். மாநகர சபை மேயர், உள்ளூராட்சி சபைகளின் தலைவர்கள், கல்வியாளர்கள், தொழில் முனைவோர், சிவில் சமூகப் பிரதிநிதிகள் உள்ளிட்ட பல தரப்பினரை சந்திக்கவுள்ளார். இந்த சந்திப்புகளின் போது நல்லிணக்கம், கல்வி, மேம்பாடு மற்றும் வாழ்வாதாரங்கள் குறித்து கலந்துரையாடப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/217825