Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஏராளன்

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by ஏராளன்

  1. பட மூலாதாரம்,BBC/UGC கட்டுரை தகவல் எழுதியவர், பிபிசி குஜராத்தி குழு பதவி, நியூ டெல்லி 17 மார்ச் 2024 "எங்கள் படிப்பை எப்படி முடிப்போம் என்று நினைத்து நாங்கள் மிகவும் பயப்படுகிறோம்." குஜராத் பல்கலைக் கழக விடுதியில் சனிக்கிழமை இரவு தொழுகை நடத்தியதாகக் கூறப்படும் வெளிநாட்டு மாணவர்கள் தாக்கப்பட்டது குறித்து, பிபிசி குஜராத்தி செய்தியாளர் ராக்ஸி கக்டேகர் சராவுடன் உரையாடியபோது, ஒரு மாணவர் தனது கவலையை இவ்வாறு வெளிப்படுத்தினார். பல்கலைக்கழக விடுதியின் ’ஏ’ பிளாக்கில் ஆப்கானிஸ்தான், உஸ்பெகிஸ்தான் மற்றும் ஆப்பிரிக்காவைச் சேர்ந்த மாணவர்கள் மீது 25 பேர் கொண்ட கும்பல் நடத்திய இந்த தாக்குதலில், இரண்டு மாணவர்கள் காயமடைந்தனர். அவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். பிபிசி குஜராத்தி குழுவினர் அந்த இடத்தை அடைந்தபோது, விடுதி முழுவதும் அனைத்து இடங்களிலும் காவல்துறையினரும் பல்கலைக்கழக அதிகாரிகளும் காணப்பட்டனர். இதுதவிர, கல்வீச்சு தாக்குதலை உணர்த்தும் வகையில் ஆங்காங்கே கற்களும் உடைந்த வாகனங்களும் காணப்பட்டன. மேலும் மாணவர்களும் பயந்து, மன உளைச்சலுக்கு ஆளாகினர். இதில், ஆப்கானிஸ்தானை சேர்ந்த மாணவர்களில் ஒருவரான நௌமன் பிபிசியிடம் பேசுகையில், “வெளியூரில் இருந்து வரும் மாணவர்கள் இங்கு தங்குவது தற்போது பெரும் சவாலாக உள்ளது. சர்வதேச மாணவர்கள் தங்கும் விடுதி இது. இவர்கள் இங்கு எப்படி கூட்டம் கூட்டமாக வந்தனர் என்பது விசாரணைக்கு உரியது. அவர்கள் இங்கு அடிக்கடி வந்து, ’ஜெய் ஸ்ரீராம் என்று சொல்லுங்கள், இல்லையென்றால் கத்தியால் குத்தி கொன்று விடுவோம்’ என்று கூறிய சம்பவங்கள் இதற்கு முன்னரும் நடந்துள்ளன. மற்ற நாடுகளைச் சேர்ந்த மாணவர்களுக்கு இங்கு பெரும் ஆபத்து உள்ளது” என கூறினார். இதுதொடர்பாக, ஆமதாபாத் போலீசார் எஃப்.ஐ.ஆர் பதிவு செய்தனர். எனினும், இதுவரை குற்றவாளிகள் யாரும் கைது செய்யப்படவில்லை. இந்த வழக்கில் குற்றவாளிகள் விரைவில் கைது செய்யப்படுவர் என போலீசார் தெரிவித்தனர். இச்சம்பவத்தில் தொடர்புடைய ஒருவர் இதுவரை அடையாளம் காணப்பட்டுள்ளார். இந்த சம்பவத்தின் சில வீடியோக்கள் சனிக்கிழமை இரவு முதல் சமூக ஊடகங்களில் வெளியாகின. அதில், தாக்குதல் கும்பல் மாணவர்களின் வாகனங்களை சேதப்படுத்தியதையும் கற்களை வீசியதையும் காண முடிந்தது. மேலும், தாக்குதல் நடத்தியவர்கள் மதவாத முழக்கங்களை எழுப்பியதையும் கேட்க முடிந்தது. குஜராத் காங்கிரஸ் தலைவர் கியாசுதீன் ஷேக் மற்றும் எம்எல்ஏ இம்ரான் கெடவாலா ஆகியோர் இந்த சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்ததோடு, குஜராத் காவல்துறை மற்றும் அரசின் செயல்பாடு குறித்து கேள்வி எழுப்பினர். மேலும், இந்த சம்பவத்தை 'வெகுஜன தீவிரவாதம்' என தெரிவித்துள்ள ஏஐஎம்ஐஎம் எம்.பி. அசாதுதீன் ஒவைசி, இதுகுறித்து பிரதமர் மோதி மற்றும் உள்துறை அமைச்சர் அமித்ஷாவிடம் கேள்வி எழுப்பினார். இருப்பினும், குஜராத் பல்கலைக் கழகத்தின் துணைவேந்தர் நீரஜா குப்தா, இந்த முழு விஷயத்தையும் 'இரு குழுக்களிடையே ஏற்கனவே இருக்கும் கருத்து வேறுபாடுகள்' என்று குறிப்பிட்டார். அவர் கூறுகையில், “இரு குழுக்களிடையே ஏற்கனவே கருத்து வேறுபாடுகள் இருந்து வந்த நிலையில், இந்த சம்பவம் தற்போது நடந்துள்ளது. இது ஏன் நடந்தது என்பது இன்னும் விசாரணைக்கு உட்பட்டது. வெளிநாட்டு மாணவர்கள் வெளியில் தொழுகை நடத்திய போது மற்றொரு கூட்டத்தினருடன் கைகலப்பு ஏற்பட்டதும் தெரிய வந்துள்ளது. இந்த முழு விஷயத்தையும் பல்கலைக் கழகம் தீவிரமாகக் கவனித்து வருகிறது. போலீசார் எஃப்.ஐ.ஆர் பதிவு செய்துள்ளனர்" என்றார். இந்த விவகாரம் தொடர்பாக காவல்துறை உயர் அதிகாரிகளுடன் மாநில அரசின் உள்துறையும் ஆலோசனை நடத்தியதாக உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இருப்பினும், இதை சுயாதீனமாக உறுதிப்படுத்த முடியவில்லை. காங்கிரஸ் எம்எல்ஏ இம்ரான் கெடவாலா மற்றும் முன்னாள் எம்எல்ஏ கியாசுதீன் ஷேக் ஆகியோர் சம்பவ இடத்திற்கு வந்தனர். மேலும், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மாணவர்களையும் சந்தித்தனர். தொழுகை செய்ததால் தாக்குதலா? ஞாயிற்றுக்கிழமை முழு விஷயமும் வெளிச்சத்திற்கு வந்ததை அடுத்து, ஆமதாபாத் நகர காவல்துறை ஆணையர் ஜி. எஸ். மாலிக்கும் சம்பவ இடத்திற்கு வந்தார். இச்சம்பவம் குறித்த முழு விவரங்களையும் அவர் ஊடகங்களிடம் தெரிவித்தார். அவர் கூறியதாவது: “இந்த விடுதியில் சுமார் 75 மாணவர்கள் தங்கியுள்ளனர். இரவில், சில மாணவர்கள் வராண்டாவுக்கு வெளியே தொழுகை செய்து கொண்டிருந்தனர். அப்போது சிலர் வந்து மாணவர்களிடம் ஏன் இங்கு பிரார்த்தனை செய்கிறீர்கள் என்று கேட்டனர்” என்கிறார் அவர். பின்னர், இரு தரப்பினருக்கும் இடையே வாய்த்தகராறு ஏற்பட்டு கைகலப்பும், தள்ளுமுள்ளும் ஏற்பட்டது என காவல்துறை ஆணையர் தெரிவித்தார். பட மூலாதாரம்,ANI படக்குறிப்பு, ஆமதாபாத் காவல்துறை ஆணையர் ஜி.எஸ். மாலிக் இதுகுறித்து போலீசார் அளித்த விவரத்தின்படி, இரவு 10 மணிக்கு சம்பவம் நடந்த சுமார் 50 நிமிடங்களில் இந்த விவகாரம் குறித்து போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் வந்தது. இதையடுத்து போலீசார் உடனடியாக அங்கு வந்தனர். இச்சம்பவம் குறித்து கல்லூரியின் பாதுகாவலர் புகார் செய்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர். மொத்தம் 25 பேர் கற்களை வீசியதாக காவல்துறை கூறுகிறது. "இந்த விவகாரத்தில் நாங்கள் உடனடியாக 20-25 பேர் மீது எஃப்.ஐ.ஆர் பதிவு செய்துள்ளோம், மேலும் எங்களின் ஒன்பது குழுக்கள் விசாரணையில் ஈடுபட்டுள்ளன" என்று காவல்துறை ஆணையர் கூறினார். “இச்சம்பவத்தில் தொடர்புடையவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். அவர்கள் கைது செய்யப்படுவர். இந்த நடவடிக்கை முழுவதையும் இணை ஆணையர் (குற்றப்பிரிவு) கண்காணிப்பார்” என்றார். இச்சம்பவத்தில், இலங்கை மற்றும் தஜிகிஸ்தானை சேர்ந்த தலா ஒரு மாணவர் என இரு மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக மாலிக் கூறினார். உண்மை சரிபார்ப்பு தளமான ஆல்ட் நியூஸ்-இன் (Alt News) இணை நிறுவனர், இச்சம்பவம் தொடர்பாக வைரலான வீடியோக்களை சமூக ஊடக தளமான எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இதைத்தொடர்ந்து, ஏ.ஐ.எம்.ஐ.எம் எம்.பி அசாதுதீன் ஒவைசியும் இதுதொடர்பாக விமர்சித்து ட்வீட் செய்தார். காங்கிரஸ் முன்னாள் எம்எல்ஏ கியாசுதீன் ஷேக் இந்த சம்பவம் குறித்து எக்ஸ் தளத்தில், “மகத்தான ஜனநாயக மதச்சார்பற்ற இந்தியாவில் குஜராத் பல்கலைக் கழகத்தில் வெளிநாட்டு முஸ்லிம் மாணவர்கள் தாக்கப்பட்ட வழக்கில் நானும், எம்எல்ஏ இம்ரான் கெடவாலாவும் நீதி கேட்கிறோம்" என பதிவிட்டுள்ளார். அசாதுதீன் ஓவைசி கூறியது என்ன? பட மூலாதாரம்,ANI படக்குறிப்பு, அசாதுதீன் ஒவைசி முழு சம்பவத்தையும் விமர்சித்து ஏ.ஐ.எம்.ஐ.எம் தலைவர் அசாதுதீன் ஒவைசி சமூக ஊடக தளமான எக்ஸ்-ல், "என்ன ஒரு அவமானம். ஒரு முஸ்லிம் அமைதியாக தனது மதத்தை கடைப்பிடிக்கும் போதுதான் உங்கள் பக்தியும், மத முழக்கங்களும் வெளிப்படுகின்றன. முஸ்லிம்களைப் பார்த்தாலே கோபம் வரும். இது வெகுஜன தீவிரவாதம் இல்லையா? இது நரேந்திர மோதி மற்றும் அமித்ஷாவின் சொந்த மாநிலம். ஒரு வலுவான செய்தியை வழங்க அவர்கள் இந்த விவகாரத்தில் தலையிடுவார்களா?" என கேள்வி எழுப்பினார். ஒவைசி வெளியுறவு அமைச்சர் எஸ். ஜெய்சங்கரை ’டேக்’ செய்து, இந்தியாவில் முஸ்லிம்களுக்கு எதிரான உணர்வு நாட்டின் நற்பெயரைக் கெடுக்கிறது என்று அப்பதிவில் தெரிவித்துள்ளார். https://www.bbc.com/tamil/articles/cerw2m2xwy1o
  2. Published By: RAJEEBAN 18 MAR, 2024 | 12:07 PM காசாவின் அல்ஸிபா மருத்துவமனை மீது இஸ்ரேல் நள்ளிரவில் தாக்குதலொன்றை மேற்கொண்டது என பிபிசி தெரிவித்துள்ளது. மருத்துவமனைக்குள் டாங்கி மற்றும் துப்பாக்கி பிரயோக சத்தங்கள் கேட்கின்றன எனவும் தெரிவித்துள்ள பிபிசி தாங்கள் மிகவும் துல்லியமான உயர் இலக்கை மையப்படுத்திய தாக்குதலை மேற்கொண்டுள்ளதாக இஸ்ரேலிய படையினர் தெரிவித்துள்ளனர் எனவும் செய்தி வெளியிட்டுள்ளது. மருத்துவமனைக்குள் ஹமாஸ் அமைப்பினர் மீண்டும் ஒன்றுசேர்ந்து தாக்குதலில் ஈடுபடுகின்றனர் என இஸ்ரேல் தெரிவித்துள்ளது. காசாநகரில் உள்ள மருத்துவமனையில் பதற்றநிலை காணப்படுகின்றது என பொதுமக்கள் தெரிவித்துள்ளனர். டாங்கிகள் எங்களை சூழ்ந்துள்ளன நாங்கள் கூடாரங்களுக்குள் மறைந்திருக்கின்றோம் டாங்கிகளின் சத்தங்களை எங்களால் கேட்க முடிகின்றது என ஒருவர் தெரிவிக்கும் குரல்பதிவு கிடைத்துள்ளதாக பிபிசி தெரிவித்துள்ளது. சமூக ஊடகங்களில் வெளியாகும் உறுதிப்படுத்தப்படாத வீடியோக்களில் மருத்துவமனையை சுற்றியுள்ள பகுதிகளில் துப்பாக்கி சத்தங்களை கேட்க முடிகின்றது. மருத்துவமனைக்குள் இராணுவத்தினர் காணப்படுகின்றனர். பலர் கொல்லப்பட்டுள்ளனர், காயமடைந்துள்ளனர், சிலர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். பேரழிவு நிலை காணப்படுகின்றது என ஊடகவியலாளர் ஒருவர் மருத்துவமனைக்குள் இருந்து தெரிவித்துள்ளார். இஸ்ரேலிய படையினர் மிகவும் உறுதியான புலனாய்வு தகவல்களின் அடிப்படையில் செயற்படுகின்றனர் என இஸ்ரேலிய அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/179008
  3. பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், யூ.எல். மப்றூக் பதவி, பிபிசி தமிழுக்காக 29 நிமிடங்களுக்கு முன்னர் இலங்கையில் மட்டக்களப்பு பகுதியில் ஒரு வழக்கில் சிறைதண்டனை விதிக்கப்பட்ட இந்து நபர், அதிலிருந்து தப்பிப்பதற்காக இஸ்லாம் மதத்துக்கு மாறி, கடந்து எட்டு ஆண்டுகளாக மறைந்து வாழ்ந்து வந்திருக்கிறார். சமீபத்தில், அவரது உறவினர் ஒருவரின் காதல் விவகாரம் தொடர்பாக காவல்துறையினர் அவரை விசாரித்தபோது உண்மை வெளிவந்து, அவர் மீண்டும் கைது செய்யப்பட்டிருக்கிறார். திரைப்படங்களில் வருவதுபோன்ற திருப்பங்கள் நிறைந்த இச்சம்பவத்தில் என்ன நடந்தது? இலங்கையில் ஒரு நீதிமன்றத்தால் சிறைத் தண்டனை விதிக்கப்பட்ட நிலையில், தலைமறைவாகி – தனது மதத்தையும் பெயரையும் மாற்றிக் கொண்டு, எட்டு ஆண்டுகள் வேறொரு பகுதியில் தன்னுடைய குடும்பத்துடன் வாழ்ந்து வந்த ஒரு நபரை கைது செய்துள்ளதாக மட்டக்களப்பு தலைமை காவல் நிலையத்தினர் தெரிவிக்கின்றனர். இவ்வாறு கைது செய்யப்பட்டவர் நீதிமன்ற உத்தரவுக்கிணங்க, எதிர்வரும் ஏப்ரல் மாதம் 4-ஆம் தேதி வரை விளக்க மறியலில் வைக்கப்பட்டுள்ளார். மட்டக்களப்பு மாவட்டத்தைச் சேர்ந்த கிருஷ்ணபிள்ளை நடராஜசிவம் என்பவர் (வயது 48) இந்து மதத்திலிருந்து இஸ்லாத்துக்கு மாறி, முஹம்மட் ஹுசைன் எனும் பெயரில் பொலன்னறுவை மாவட்டத்திலுள்ள வெலிக்கந்தை எனும் பகுதியில் தலைமறைவாக வாழ்ந்து வந்தார் என காவல்துறை அதிகாரிகள் கூறுகின்றனர். கடந்த 2016-ஆம் ஆண்டு மட்டக்களப்பு மேல் நீதிமன்றம் இவருக்கு ஐந்து வருட சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்ட நிலையில், கடந்த எட்டு வருடங்களாக தலைமறைவாக இவர் வாழ்ந்து வந்ததாக காவல்துறையினர் தெரிவித்தனர். பட மூலாதாரம்,GETTY IMAGES என்ன நடந்தது? மட்டக்களப்பு – திருப்பெருந்துறை பிரதேசத்தைச் சேர்ந்த கிருஷ்ணப்பிள்ளை நடராஜசிவம் என்பவர் கடந்த 2007-ஆம் ஆண்டு நாவற்கேணி பகுதியைச் சேர்ந்த தங்கராசா தர்ஷினி என்பவரை இரண்டாவது திருமணம் செய்து கொண்டார். தர்ஷினியும் ஏற்கனவே திருமணமானவர். அவருக்கு முதல் திருமணத்தில் இரண்டு ஆண், ஒரு பெண் என மூன்று பிள்ளைகள் உள்ளனர். இந்த நிலையில் நடராஜசிவம் தனது இரண்டாவது மனைவியின் குழந்தைகள் இருவரை அடித்து துன்புறுத்தியதாக 2009-ஆம் ஆண்டு காவல்துறையினர் அவரை கைது செய்தனர். அவருக்கு எதிராக மட்டக்களப்பு மேல் நீதிமன்றில், இந்தக் குற்றச்சாட்டு தொடர்பில் வழக்கு ஒன்றும் தாக்கல் செய்யப்பட்டது. பின்னர் நடராஜசிவம் பிணையில் விடுவிக்கப்பட்டார். ஆனால், அவருக்கு எதிரான நீதிமன்ற வழக்கு விசாரணைகளில் அவர் ஆஜராகவில்லை என காவல்துறையினர் கூறுகின்றனர். இறுதியில் கடந்த 2016-ஆம் ஆண்டு நடராஜசிவம் நீதிமன்றுக்கு சமூகமளிக்காத நிலையிலேயே அவருக்கு எதிரான வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்டது. அதன்படி நடராஜசிவம் குற்றவாளி என அறிவித்த நீதிமன்றம், அவருக்கு ஐந்து வருட சிறைதண்டனை வழங்கி தீர்ப்பளித்தது. மேலும், பாதிக்கப்பட்ட பிள்ளைகளுக்கு தலா ஒரு லட்சம் ரூபாய் வீதம் இரண்டு லட்சம் ரூபாவை நஷ்ட ஈடாகச் செலுத்த வேண்டும் என்றும், தவறும் பட்சத்தில் இரண்டு வருடங்கள் சிறைதண்டனை அனுபவிக்க வேண்டுமெனவும் நீதிபதி தீர்ப்பளித்தார். அதேவேளை அந்த வழக்கில் அவருக்கு 20,000 ரூபா அபராதமும் விதிக்கப்பட்டது. அதனைச் செலுத்த தவறினால் மூன்று மாதங்கள் சிறைதண்டனை அனுபவிக்க வேண்டுமெனவும் உத்தரவிடப்பட்டது. படக்குறிப்பு, அவருக்கு எதிரான நீதிமன்ற வழக்கு விசாரணைகளில் நடராஜசிவம் ஆஜராகவில்லை காணாமல் போன நடராஜசிவம் ஆனால், தீர்ப்பு வழங்கப்பட்டபோது நீதிமன்றில் நடராஜசிவம் ஆஜராகாமையினால், அவருக்கு எதிரான பிடியாணையை நீதிபதி பிறப்பித்தார். இதனையடுத்து நடராஜசிவம் வசித்து வந்த முகவரியில் அவரை காவல்துறையினர் தேடிச்சென்றனர். ஆனால் அவர் அங்கு இருக்கவில்லை என்றும், குடும்பத்துடன் நடராஜசிவம் தலைமறைவாகியிருந்தார் எனவும் காவல்துறையினர் கூறுகின்றனர். இந்தப் பின்னணியில், தற்போது ‘யுத்திய’ எனும் பெயரில், இலங்கை காவல்துறையினர் மேற்கொண்டு வரும் சிறப்பு நடவடிக்கையின்கீழ், நடராஜசிவம் கைது செய்யப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு தலைமை காவல் நிலையத்தினர் பிபிசி தமிழிடம் தெரிவித்தனர். போதைப்பொருள் தொடர்பான சந்தேக நபர்கள் மற்றும் நீதிமன்ற பிடியாணை பிறப்பிக்கப்பட்டவர்களை தேடிக் கைது செய்வதே ‘யுத்திய’ நடவடிக்கையின் இலக்காகும். அவ்வகையில், காவல்துறையினருக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில் இந்த மாதம் 11-ஆம் தேதி நடராஜசிவம் கைது செய்யப்பட்டார். தற்போது நீதிமன்ற உத்தரவுக்கு இணங்க, அவர் ஏப்ரல் மாதம் 4-ஆம் தேதி வரை விளக்க மறியலில் வைக்கப்பட்டிருக்கிறார். நடராஜசிவத்தின் மனைவி சொல்வது என்ன? இது தொடர்பாக நடராஜசிவத்தின் மனைவியிடம் பிபிசி தமிழ் பேசியது. 44 வயதாகும் அவர், இஸ்லாம் மதத்தை ஏற்றுக்கொண்டு, தர்ஷினி எனும் தனது பெயரை தற்போது ராஷிதா என மாற்றிக் கொண்டுள்ளதாக தெரிவித்தார். மேலும், தனது கணவருக்கு எதிரான வழக்கு, முடிவுக்கு வந்து விட்டதாக தாம் விளங்கிக் கொண்டமையினால்தான், வேறு ஊருக்கு குடும்பத்துடன் தாங்கள் இடம்பெயர்ந்ததாகவும் கூறினார். தனது இரண்டாவது கணவர் துன்புறுத்தியதாகக் கூறப்படும் தன்னுடைய இரண்டு குழந்தைகள் நீதிமன்ற உத்தரவின்படி பராமரிப்பு இல்லத்தில் வைக்கப்பட்டிருந்ததாகவும், ஒரு கட்டத்தில் தன்னிடம் குழந்தைகளை நீதிமன்றம் ஒப்படைத்தமையினால், வழக்கு முடிவுக்கு வந்து விட்டதாக தாங்கள் நினைத்துக் கொண்டதாகவும் அவர் குறிப்பிட்டார். ”நடராஜசிவம் என்பவரை 2007-ஆம் ஆண்டு திருமணம் செய்தேன். அவர் எனது முதல் திருமணத்தில் பிறந்த மூன்று பிள்ளைகளையும் என்னுடன் வைத்து நன்றாகவே பராமரித்து வந்தார். இடையில் எனது முதல் கணவர், அவருக்கும் எனக்கும் பிறந்த பிள்ளைகளைத் தொடர்பு கொள்ள முயற்சித்ததில் சில பிரச்சினைகள் ஏற்பட்டன. அதனால்தான் எனது முதல் திருமணத்தில் பிறந்த பிள்ளைகள் இருவரை, எனது இரண்டாவது கணவர் துன்புறுத்தியதாக வழக்கு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது,” என்கிறார். கடந்த 2009-ஆம் ஆண்டு தனது இரண்டாவது கணவருக்கு எதிராக வழக்குத் தொடரப்பட்டமையினை அடுத்து, அவர் துன்புறுத்தியதாகக் கூறப்படும் தன்னுடைய இரண்டு பிள்ளைகளும் சிறுவர் பராமரிப்பு இல்லத்தில் வைக்கப்பட்டிருந்ததாகவும், கடந்த 2012-ஆம் ஆண்டு அந்தப் பிள்ளைகள் இருவரையும் நீதிமன்றம் தன்னிடம் ஒப்படைத்ததாகவும் நடராஜசிவமுடைய மனைவி கூறுகின்றார். ”குழந்தைகளை நீதிமன்றம் என்னிடம் ஒப்படைத்தமையினால் எனது கணவருக்கு எதிரான வழக்கு முடிவுக்கு வந்து விட்டதாக நாங்கள் நினைத்துக் கொண்டோம். அதனையடுத்து எனது முதற்கணவர் இருக்கும் பிரதேசத்தில் வசிப்பதற்கு விருப்பம் இல்லாமையினால் நாங்கள் வேறு இடத்துக்குச் சென்றோம்,” என அவர் குறிப்பிட்டார். பட மூலாதாரம்,GETTY IMAGES இஸ்லாம் மதத்துக்கு மாறியது ஏன்? இதன்போது, ‘இஸ்லாம் மதத்துக்கு ஏன் திடீரென மாறினீர்கள்?’ என நடராஜசிவத்தின் மனைவியிடம் கேட்டோம். “அப்போது எனக்கு வாழ்வதற்குச் சொந்தமாக வீடு இல்லை. ஒரு காணித்துண்டு நிலம் கூட இருக்கவில்லை. எனது சொந்தங்கள் எனக்கு உதவவில்லை. அப்போது எனது முதல் கணவரும் நான் வசித்த பகுதியில்தான் இருந்தார். அந்த நிலை எனக்கு பெரும் சங்கடத்தை ஏற்படுத்தியது. அதனால் குடும்பத்துடன் ஏறாவூர் பிரதேசத்துக்கு சென்றோம். அங்கு நாங்கள் இஸ்லாம் மதத்துக்கு மாறவுள்ளதாகச் சொன்னோம். எங்களின் கஷ்ட நிலையைக் கண்ட முஸ்லிம் காவல் உத்தியோகத்தர் ஒருவர் எங்களுக்கு அவரின் வீட்டில் மூன்று மாதங்கள் இருப்பதற்கு இடம் தந்தார். இஸ்லாத்துக்கு நாங்கள் மாறுவதற்கான சம்மதக் கடிதத்தை வழங்கினோம். காவல்துறை அறிக்கையினையும் பெற்றுக் கொடுத்தோம். அதன் பின்னர் ஏறாவூர் பள்ளிவாசலில் கடந்த 2012-ஆம் ஆண்டு நாங்கள் இஸ்லாத்தை குடும்பத்துடன் ஏற்றுக் கொண்டோம்,” என்றார். தானும் தனது கணவரும், தன்னுடைய முதல் திருமணத்தில் பிறந்த இரண்டு பிள்ளைகள் மற்றும் இரண்டாவது திருமணத்தில் அப்போது பிறந்திருந்த இரண்டு பிள்ளைகளுடனும் இஸ்லாத்தில் இணைந்து கொண்டதாக ராஷிதா கூறினார். தனது முதல் திருமணத்தில் பிறந்த ஆண் பிள்ளையொன்று அப்போது தனது அம்மாவிடம் இருந்ததாகவும் அவர் குறிப்பிட்டார். ராஷிதாவுக்கு இரண்டாவது திருமணத்தில் ஒரு பெண், இரண்டு ஆண் என, மூன்று பிள்ளைகள் உள்ளனர். தற்போது, தனது இரண்டாவது திருமணத்தில் பிறந்த பிள்ளைகள்தான் தங்களுடன் இருப்பதாகவும் அவர் தெரிவித்தார். முதல் திருமணத்தில் பிறந்த பிள்ளைகளில் பெண் பிள்ளை மீண்டும் இந்து மதத்துக்கு திரும்பி விட்டதாகவும், ஆண் பிள்ளைகள் இருவரில் ஒருவர் இஸ்லாமியப் பெயருடன் இருப்பதாகவும் அவர் கூறினார். “பின்னர் ஏறாவூரிலிருந்து பொலன்னறுவை மாவட்டத்திலுள்ள வெலிகந்தை சேனபுர எனும் பகுதிக்கு சென்றோம். எனது வற்புறுத்தலின் பேரில்தான் அங்கு நாங்கள் இடம்பெயர்ந்தோம்,” என்றார். “அங்கே ஒருவர் அன்பளிப்பாக ஒரு துண்டு நிலத்தை வழங்கினார். அதில் வீடு ஒன்றை நிர்மாணிக்கத் தொடங்கினோம். ஆனால் எனது கணவரின கூலித் தொழிலில் கிடைக்கும் வருமானத்தைக் கொண்டு, வீட்டைக் கட்டி பூரணப்படுத்த எங்களால் முடியவில்லை. அதனால் அங்குள்ள மசூதி நிர்வாகம் எங்கள் வீட்டுக்கு கூரை அமைத்துக் கொடுத்தார்கள். அந்த ஊரில் வாக்காளர் பட்டியலில் எங்கள் பெயர்களைப் பதிவு செய்துள்ளோம். அரச நிவாரணங்கள் பெறுவதற்காக எங்கள் பெயர்களையும் அங்கு பதிந்துள்ளோம். எனது கணவர் பல மாவட்டங்கள் தாண்டி வேலைக்குச் சென்றுவருவார். நாங்கள் தலைமறைவாகியிருந்தால், இவ்வாறு எங்கள் அடையாளங்களை வெளிப்படுத்தி இருக்க மாட்டோம்,” என ராஷிதா குறிப்பிட்டார். படக்குறிப்பு, நடராஜசிவம் தனது இரண்டாவது மனைவியின் குழந்தைகள் இருவரை அடித்து துன்புறுத்தியதாக 2009-ஆம் ஆண்டு காவல்துறையினர் அவரை கைது செய்தனர் காதலால் வெளிவந்த குற்றம் இந்தப் பின்னணியில் தனது அக்காவின் மகன் ஒருவர், அவரின் காதலியை குடும்பத்தினருக்குத் தெரியாமல் திருமணம் செய்யும் பொருட்டு அழைத்துக் கொண்டு, வெலிக்கந்தையிலுள்ள தங்கள் வீட்டுக்கு அண்மையில் வந்ததாக ராஷிதா கூறினார். ”எனது அக்காவின் மகன், யுவதியொருவரை அழைத்து வந்து, எங்கள் வீட்டில் தங்கியிருந்தமை எனது கணவருக்குப் பிடிக்கவில்லை. அதனால் அக்காவின் மகனையும் அவருடன் வந்திருந்த அவரின் காதலியையும் ஊருக்கு திருப்பி அனுப்பி விட்டேன்,” என்றார். ”அவர்கள் வீட்டை விட்டு வெளியேறியமை தொடர்பாக, காவல் நிலையத்தில் அவர்கள் குடும்பத்தினர் முறையிட்டிருந்ததால், எனது அக்கா மகனை காவல்துறையினர் விசாரித்துள்ளனர். அதன்போது எங்கள் வீட்டில் அவர் தங்கியிருந்தமை தெரியவந்துள்ளது. அதனையடுத்து காவலர்கள் எங்களை விசாரித்தனர். அப்போதுதான் எனது கணவருக்கு கடந்த 2016-ஆம் ஆண்டு மட்டக்களப்பு மேல் நீதிமன்றத்தினால் சிறைத்தண்டனை வழங்கப்பட்டமை பற்றி காவலர்கள் கூறினார்கள். எனது கணவருக்கு சிறைததண்டனை விதிக்கப்பட்டதை அப்படித்தான் அறிந்து கொண்டோம்,” என, ராஷிதா விவரித்தார். இதனையடுத்து தனது கணவரை இம்மாதம் 11-ஆம் தேதி காவல்துறையினர் கைது செய்ததாகவும், அவர் எதிர்வரும் ஏப்ரல் மாதம் 4-ஆம் தேதி வரை விளக்க மறியலில் வைக்கப்பட்டுள்ளதாகவும் ராஷிதா கூறினார். இந்த நிலையில் தனது கணவரின் வழக்கு நடவடிக்கைக்காக நீதிமன்றில் ஆஜராகுவதற்கு சட்டத்தரணியொருவரை அணுகியுள்ளதாக ராஷிதா கூறினார். https://www.virakesari.lk/article/178997
  4. Published By: DIGITAL DESK 3 18 MAR, 2024 | 10:37 AM மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் புற்றுநோய் சிகிச்சை பிரிவில் நோயாளர்களுக்கு வழங்கப்படும் மேலதிக சேவைகள் இன்று திங்கட்கிழமை (18) முதல் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக அரச கதிரியல் தொழிநுட்பவியலாளர் சங்கம் தெரிவித்துள்ளது. மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் புற்றுநோய் சிகிச்சை பிரிவில் கடமை புரியும் கதிர் வீச்சு சிகிச்சையாளர்களுக்கு வழங்க வேண்டிய மேலதிக சேவைக்கால கொடுப்பனவை வைத்தியசாலை நிருவாகம் தமக்கு வழங்குவதில்லை எனத் தெரிவித்து மேலதிக சேவைகளை இடைநிறுத்தியுள்ளனர். இதே பதவி நிலையில் உள்ள உத்தியோகத்தர்களுக்கு ஏனைய வைத்தியசாலையில் இக்கொடுப்பனவு வழங்கப்பட்டு வரும் நிலையில் தமக்கு மாத்திரம் வழங்கப்படுவதில்லை என கதிர் வீச்சு சிகிச்சையாளர்கள் தெரிவித்தனர். இதனால் மட்டக்களப்பு, திருகோணமலை, அம்பாறை மற்றும் ஏனைய சில மாவட்டங்களிலிருந்து சிகிச்சை பெற வரும் நோயாளர்கள் பாதிக்கப்படலாம் எனவும் தெரிவித்துள்ளனர். இந்த கொடுப்பவை வழங்காமை தொடர்பாக சுகாதார அமைச்சின் செயலாளர், சுகாதார அமைச்சின் பணிப்பாளர் நாயகம் ஆகியோருக்கு தாம் அறிவித்ததற்கமைவாக, இந்த கொடுப்பனவை வழங்குமாறு அறிவுறுத்தப்பட்ட போதிலும் அக்கொடுப்பனவு கதிர் வீச்சு சிகிச்சையாளர்களுக்கு கடந்த இரண்டு மாதங்களாக வழங்கப்படவில்லை என கதிரியல் தொழிநுட்பவியலாளர் சங்கத்தின் தலைவர் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/178985
  5. கண்ணோட்டம் என்னும் கழிபெருங் காரிகை சோம. அழகு பிற உயிரின் துயருக்கு நெக்குருகும் கண்ணோட்டம் வாய்க்கப் பெற்ற மனங்களெல்லாம் ஆசீர்வதிக்கப் பெற்றவையா? அல்லது கொடுஞ்சாபத்திற்கு உள்ளானவையா? மிகச் சாதாரண காட்சிகளே போதுமானவையாக இருக்கின்றன, நம்மை மொத்தமாக உருக்குலையச் செய்ய. பரவலான பொருளில் பயன்படுத்தியிருக்கிறேன் எனினும் ‘சாதாரணம்’ என்பதற்கு இங்கு அளவுகோல் என்ன? உங்கள் சாதாரணங்கள் எனக்குப் பெரும்பாலும் ‘ரணங்கள்’. உதாரணமாக, நம் தாத்தா பிறப்பதற்கு முன்பிருந்தே நிற்கும் மரம் ஒன்று ‘சாலை விரிவாக்கம்’, ‘மின்கம்பிக்கு இடைஞ்சல்’… போன்ற அற்பக் காரணங்களுக்காக வெட்டப்படுவதை யாரேனும் நேரில் நின்று பார்த்திருக்கிறீர்களா? சுருங்கிய மனங்களுடன் விசாலமான உலகைக் காண முயலும் விந்தை, ‘மண்ணோ டியைந்த மரத்தனையர்’க்கு மட்டுமே கைவந்த கொலை! யாருக்கும் எத்தீங்கும் இழைக்காத மரத்தோடான மாந்தர்களின் ஒப்பீடே இங்கு தவறு! இது survival of the fittest கோட்பாட்டினுள் வராது; வேண்டுமானால் Survival of the foolest என்று கொள்ளலாம். கண்களுள் சிறையிட முடியாத அளவு பெரிதாக கம்பீரமாக நின்ற மரம் பரிதாபமாகச் சாய்ந்து விழும் போது தரையுடன் சேர்ந்து நம் மனதும் ஒரு கணம் அதிர்ந்து அடங்கும். நிலத்தில் லேசாகக் கிளம்பும் புழுதியில் அம்மரத்திற்காகப் பூமியில் இருந்து எழும் விசும்பல்களைக் கேட்டிருக்கிறீர்களா? காய்ந்து கிடக்கும் நம் மனங்களுக்கும் சேர்த்துத் தன் வேர்களில் சேமித்து வைத்திருக்கும் ஈரத்தைக் காட்சிப்படுத்தி ஒரு அலட்சியப் பார்வையில் கடைசியாக ஒரு முறை நம்மை எள்ளி நகையாடும். எத்தனை மனிதர்களுக்கு நிழல் தந்திருக்கும்! எத்தனை சிறுவர்களின் விளையாட்டுத் தோழனாய் இருந்திருக்கும்! கால சுழற்சியில் மாறிப் போன மனிதர்களுக்கும் அருகிப் போன கருணைக்கும் நின்ற சாட்சி அல்லவோ இப்போது வீழ்த்தப்பட்டுக் கிடக்கிறது! இரை தேடச் சென்று மாலை வீடடையும் பறவைகள் இன்று ஸ்தம்பித்துப் போகாதா? மனசாட்சியே இல்லாமல் ஒறுத்தாற்றுபவர்களிடம் எல்லாம் எப்படி பொறுத்தாற்றும் பண்புடன் நடந்து கொள்வது? இப்படியே நீண்டு கொண்டிருக்கும் சிந்தனையிலிருந்து எங்ஙனம் மீள்வது? ‘நம்ம பொழப்ப பாப்போம்’ போன்ற வழமையான வறட்டுத்தனத்தின் பின் ஒளிந்து கொண்டா? இது போலவே இன்னும் நிறைய… கிழிந்த சட்டையும் கலைந்த தலையும் காய்ந்த வயிறுமாகக் குப்பைத்தொட்டியை நிறைத்திருக்கும் மனிதத்திற்கு இடையே போனகம் தேடி ஆர்வத்தோடு துழாவும் ஒரு சக உயிர்; யாரிடமேனும் இரந்து நிற்கும் வாழ்ந்து கெட்டவர்கள்; உயிருக்கு உயிரான ஒருவரைப் போதிய பண வசதி இல்லாததால் ஒரு கொடூர நோய்க்குக் கண் முன்னரே கொஞ்சம் கொஞ்சமாக இழப்பது கண்டு செய்வதறியாது நிர்க்கதியாகிப் போனவர்கள்; குடும்பத்தினரின் வயிறு காயாமல் இருக்கவென, அவர்களுள் சிலரே தன் மகளை/சகோதரியை/மனைவியை நெறிபிறழ்ந்த வாழ்வுமுறைக்கு வற்புறுத்தும் கொடுமை அரங்கேற, அதை கனத்துக் காய்ந்து வற்றிப் போன உணர்வுகளுடன் ஏற்கத் துணியும் பெண்; விண்ணில் போர் விமானங்களின் விகாரமான சத்தத்தையும் அதனை விஞ்சும் வகையில் மண்ணில் இருந்து கிளம்பும் ஓலத்தையும் மொத்தமாகத் தன்னுள் அடக்கியபடி அமைதியாக நடு சாலையில் கிடக்கும் குருதி தோய்ந்த குழந்தையின் ஷூ (எவ்வளவு கோரமான புகைப்படம்!); பட்டாம்பூச்சியின் வண்ணத்திற்குப் பதில் பணியின் பொருட்டு கரி அப்பிய பிஞ்சு விரல்கள் – இவை போன்ற இன்னும் எத்தனையோ அவலங்களையெல்லாம் கேட்க/காண நேர்ந்த அந்நொடிக்குப் பிறகு கண்கள் காணும் எதுவும் மூளைக்குச் செல்வதில்லை. “ஏன் இவர்களுக்கு இப்படி நிகழ்கிறது? எனக்கு மட்டும் என்ன பெரிய தகுதி இருக்கிறது பாதுகாப்பான சூழலும் ஓரளவு நல்ல பொருளாதார நிலையும் வாய்க்கப் பெற? மனிதனின் அடிப்படைத் தேவைகளுக்குக் கூட உலகில் நிலவும் பாரபட்சம் எதன் அடிப்படையில்? இதற்கெல்லாம் சட்டையைப் பிடித்து உலுக்கி வளமான வசவுகளைப் பொழியவாவது அந்தக் கடவுள் என்ற ஒன்று இருந்து தொலைத்திருக்கலாம்……” ஒரு குமிழ் போல என்னுள் பெரிதாகிக் கொண்டே செல்லும் எண்ணவோட்டங்களை உடைக்கும் பொருட்டு ஒவ்வொரு முறையும் சிறிய கல் ஒன்று எறியப்படும் – “என்ன யோசிச்சுட்டு இருக்க?” என்னும் கேள்வியாக. சட்டென நிகழ் உலகத்திற்குத் தரதரவென இழுத்து வரும் இக்கேள்விக்குரியவரிடம் உண்மை பதிலைத் தர நான் என்ன பித்தியா? கொஞ்சம் பித்திதான் என்றாலும் கூட உலகத்தவரின் அளவீட்டில் இன்னும் பிரகடனப்படுத்தும் அளவிற்குச் செல்லவில்லை. உண்மையில் நான் யோசித்தவற்றை அப்படியே சொன்னால் என்னவாகும்? ஏற இறங்க ஒரு பார்வை கிட்டும். மிதமிஞ்சிப் போனால் ஒரு “சரி விடு… அதுக்கு நீ என்ன செய்ய முடியும்? இப்படி எத்தனையோ பேர் இருக்காங்க”. “என்னால் ஒன்றும் செய்ய இயலவில்லை என்பதே இங்கு வெட்கக்கேடுதானே? இந்தக் குற்றவுணர்வை எப்படி அநாயசமாகத் தூக்கிப் போடுகிறீர்கள்?” என்றெல்லாம் பதிலுக்குக் கேட்டு வைக்க முடியாது. பின்னர் அக்மார்க் முத்திரையே குத்திவிடுவார்கள். எனவே ஆழ்மனதில் ஒரு நொடி மௌன அஞ்சலி செலுத்தி இந்நுண்ணுணர்வுகளில் இருந்து விடுபட இயலாத தருணங்களில் எல்லாம் Weltschmerz என்னும் வார்த்தைக்கு என்னை ஒப்புக்கொடுக்க முயல்கிறேன். முயற்சி மட்டும்தானே செய்ய முடியும்? இதற்கெல்லாம் ஆறுதல் என்று ஒன்று இருக்கவா செய்கிறது? உச்சகட்டமாக மனம் அழுந்தி பச்சாதாபத்தில் மேலெழும் கோபம் அவர்களை அந்நிலைக்குத் தள்ளிய சூழல்கள், அதற்குக் காரணமாய் அமைந்தவர்கள் ஆகியவற்றின் பக்கம் திரும்பி ஏதோ நெறிப்படுத்தப்பட்டுவிட்டதைப் போல் போலி ஆறுதலடைய முயலும். இல்லையெனில் ‘வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம்…’ல் இருந்து ‘நமக்கு இருக்குற பிரச்சனையில இதையெல்லாம்….’க்கு மனம் மடைமாறி கழிவிரக்கத்தில் முற்று பெறும். ‘இப்படியே ஒவ்வொண்ணா பாத்துட்டு இருந்தா நம்ம வாழ்க்கைய வாழவே முடியாது’ – நடைமுறைக்கு ஒவ்வாதவை என வகுக்கப்பட்டுக் கழித்துக் கட்டப்பட்ட ‘ஒவ்வொன்று’களில்தான் நானும் ஒரு ஓரத்தில் ஒண்டிக் கிடக்கிறேன் போலும். உலகம் இப்படித்தான் இயங்கும் என்ற எதார்த்தம் எனக்கும் தெரியாமல் இல்லை. ஆனாலும் ‘கண்ணோட்டம்’ என்னும் இவ்வுணர்வு சில நேரங்களில் மனதளவில் முடக்கித்தான் போடுகிறது. கண்ணில் படுபவர்களுக்கும் ஓரளவுதான் உதவ முடிகிறது. அப்படி அவர்கள் ‘ஒவ்வொருவருக்கும்’ உதவி செய்வதென்பது ஒரு தனியாளாக சாத்தியமில்லை ஆகையால் நான் முழுமையாகச் சூடிக் கொள்ள இயலாத அக்கழிபெருங் காரிகை, நான் ‘உண்மை(உள்ளமை) நிலக்குப் பொறை’ என மீண்டும் மீண்டும் நினைவுபடுத்துகிறது. மனிதத்திற்கான அச்சாரமே பச்சாதாபம் தானே? உலகின் குரூரங்களை எல்லாம் காணுற்ற பிறகும் அவற்றை மனதின் ஏதோ ஒரு இடுக்கில் அமுக்கி ஆழப் புதைத்த பின் நிகழும் இயல்பான நகர்தலில் மனித மனங்கள்(என்னுடையதும்தான்!) ரொம்பவே பயங்கரமானதாகத் தெரிகின்றன. சோம. அழகு https://puthu.thinnai.com/2024/03/17/கண்ணோட்டம்-என்னும்-கழிபெ/
  6. தமிழ் மக்களின் பாரம்பரிய நிலத்தினை சிதைத்து அவற்றை சிங்கள பௌத்த அடையாளங்களால் உருமாற்றம் செய்து தமிழர் தாயகம் உரிமை கோரிக்கையை சிதைக்க முயற்சி - வெடுக்குநாறி சம்பவங்கள் குறித்து பிரித்தானிய தமிழர் பேரவை Published By: RAJEEBAN 18 MAR, 2024 | 10:43 AM வெடுக்குநாறிமலை ஆலய சிவராத்திரி வழிபாட்டு நிகழ்வில் பொலிஸாரால் ஏற்படுத்தப்பட்ட தடங்கல்கள் தொடர்பில் பிரித்தானிய தமிழர் பேரவை கண்டனம்வெளியிட்டுள்ளது இது தொடர்பில் பிரித்தானிய தமிழர் பேரவை மேலும் தெரிவித்துள்ளதாவது சிறிலங்கா அரசும் அதன் இராணுவஇ போலீஸ் நிர்வாகங்களும் தொடர்ச்சியாக தமிழர்களுக்கு எதிராக மேற்கொண்டு வரும் கைதுகள் நில அபகரிப்பு மற்றும் பொது மக்களின் அன்றாட செயற்பாடுகளில் ஏற்படுத்தப்படும் அச்சுறுத்தல்கள் இடையூறுகள் தொடர்பில் பிரித்தானிய தமிழர் பேரவை கண்டனத்தை தெரிவித்து கொள்கிறது. கடந்த வெடுக்குநாறிமலை ஆலய சிவராத்திரி வழிபாட்டு நிகழ்வில் கலந்து கொண்ட ஆலய பூசகரின் கைதும் பக்தர்களின் கைதும் கண்டனத்துக்கு உரியதுடன் இவர்கள் அனைவரும் உடனடியாக விடுதலை செய்யப்பட வேண்டும். மேலும் நீதிமன்ற தீர்ப்பின் பிரகாரம் விக்கிரகங்கள் மீள கையளிக்கப்பட்டு அவற்றினை அபகரித்த குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு உரிய சட்ட நடவடிக்கைகள் மேற்கொண்டிருக்க வேண்டிய அரச நிர்வாகம் அதற்கு மாறாக பல்லாண்டு காலமாக வழிபட்டு வரும் தமிழ் மக்களின் மீது அரச படைகளை ஏவி விட்டு அச்சுறுத்த முனைகின்றது. அடக்குமுறைகள்தான் எம் மக்களை போராட நிர்ப்பந்தித்தது என்ற யதார்த்தத்தை சிங்கள தேசம் புறக்கணித்தபடியால்தான் இன்று அது கையறு நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. இவ்வாறன கைதுகளும் தமிழர்களின் வழிபாட்டு உரிமைகளை தடுத்து வழிபாட்டு தளங்களை அபகரிப்பதும் தொல்லியல் திணைக்களம் போன்ற அரச இயந்திரத்தின் அங்கங்களை ஏவி விடுவதும் தமிழ் மக்களின் பாரம்பரிய நிலத்தினை சிதைத்து துண்டம் துண்டமாக்கி அவற்றை சிங்கள பௌத்த அடையாளங்களால் உருமாற்றம் செய்து தொடர்ச்சியான நிலப் பரப்பினை கொண்ட தமிழர் தாயகம் என்ற எம் உரிமை கோரிக்கையை சிதைப்பது சிறிலங்கா அரசின் தமிழர்களுக்கு எதிரான இன அழிப்பின் திட்டமிட்ட மூலோபாயம் ஆகும். நல்லிணக்கம் பற்றிக் கூறி கொள்ளும் ரணில் அரசு இவ்வாறான செயற்பாடுகள் மூலம் இனங்களுக்கு இடையிலான முரண்பாடுகளை ஊக்குவிக்கும் நடவடிக்கைகளை தொடர்ந்து மேற்கொள்வது இலங்கை தீவில் நிலையான அமைதி ஸ்திரத் தன்மைஇ வளர்ச்சி ஒரு போதும் சாத்தியப்படாது என்பதனை தமிழ் மக்களின் பிரதிநிதிகள் சர்வதேச தளத்தில் பன்முனைப்பட்ட முடிவெடுக்கும் சக்திகளிடம் எடுத்துரைக்க வேண்டும் என்பதனை தோழமையுடன் வேண்டிக் கொள்கின்றோம். பிரித்தானிய தமிழர் பேரவை கடந்த பல வருடங்களாக தமிழர்களுக்கு எதிராக நடத்தப்படும் இவ்வாறான இலங்கை அரசின் நிகழ்ச்சி நிரல் தொடர்பில் சர்வதேச சமூகத்திடமும் ஐக்கிய நாடுகள் மனித உரிமை சபையிலும் எடுத்துரைத்து வருவது போன்று இப்பொழுது இடம்பெறும் ஐ.நா.மனித உரிமைக்கழக மார்ச் மாதக் கூட்டத் தொடரிலும் தகமை வாய்ந்த முடிவெடுக்கும் மையங்களுக்கு ஆதாரபூர்வமான தகவல்கள் பதிவு செய்யப்படும். இவ்வாறான தொடரும் நில ஆக்கிரமிப்பு சமூக பொருளாதார அடிப்படைகளில் தமிழர் தேசத்தினை சிதைத்து பலவீனப்படுத்தல்இ தங்குநிலையில் வைத்திருத்தல் தாயகத்தில் தமிழ் மக்கள் வாழ முடியாத சூழ்நிலைகளை உருவாக்கி அவர்களை மண்ணிலிருந்து வெளியேற்றுவது தமிழர் அரசியல் பிரதிநிதித்துவத்தை சிதைப்பதும் செயலிழக்கச் செய்வதுமான செயல்பாடுகளை இடைநிறுத்தி தம்மை தாமே நிர்வகிக்கக் கூடிய இடைக்கால நிர்வாகப் பொறிமுறை ஒன்றினை உடனடியாக உருவாக்குமாறு இந்தியா உட்பட சர்வதேச தளப் பரப்பில் முக்கிய உறுப்பு நாடுகளிடம் எமது இக் கோரிக்கையை முன்வைக்கின்றோம். https://www.virakesari.lk/article/178984
  7. 18 MAR, 2024 | 10:50 AM புத்தளம் மாவட்டத்தில் 'தலக்கூரா' என மக்களால் அழைக்கப்படும் சுமார் 5 அடிக்கு அதிக நீளமுடைய கொம்பன் யானை நேற்று (17) மாலை மற்றுமொரு யானையுடன் உணவு உட்கொண்ட காட்சி கமராவில் பதிவாகியது. புத்தளம் வண்ணாத்திவில்லு பிரதேச செயலகத்துக்குட்பட்ட மயிலாங்குளம் மாந்தோட்டம் பகுதியில் நேற்று மாலை கொம்பன் யானை மற்றுமொரு யானையுடன் மேய்ந்துகொண்டிருந்தது. இந்த கொம்பன் யானை கடந்த காலங்களில் கருவலகஸ்வெவ பிரதேச செயலகத்துக்குட்பட்ட தேவனுவர காட்டுப் பகுதியில் நடமாடிய நிலையில், தற்போது உணவுக்காக பல கிலோமீற்றர் சென்று மயிலாங்குளம் பகுதியில் சுற்றித் திரிந்து உணவுகளை உட்கொண்டு வருகிறது. இதன் தந்தம் தரையில் உரசுமளவு சுமார் 5 அடிக்கும் அதிக நீளத்தை கொண்டிருப்பதே இக்கொம்பன் யானையின் விசேட அம்சமாகும். இதனாலேயே இந்த யானைக்கு 'தலக்கூரா' என பெயரை அப்பகுதி மக்கள் சூட்டியுள்ளனர். குறித்த அப்பாவி கொம்பன் யானை இதுவரை எவரையும் தாக்கி, எந்தவொரு தொல்லையும் கொடுக்காத 'தலக்கூரா' பட்டாசு கொழுத்தினால் பயத்தில் காட்டினுள் விரண்டு ஓடிவிடும் என்றும் அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். கடந்த காலங்களில் மயிலாங்குளம் மற்றும் தேவனுவர பகுதிகளில் சஞ்சரித்து வந்த 'வலகம்பா' மற்றும் 'வாசல' என மக்களால் பெயர் சூட்டப்பட்ட தந்தம் கொண்ட யானைகள் மின்சார வேலியில் சிக்குண்டு உயிரிழந்தன. நாட்டிலுள்ள இதுபோன்ற தந்தம் கொண்ட யானைகளை பாதுகாப்பது மிகப் பெரும் கடமை என்றும் பல்வேறு தரப்பினர் தெரிவிக்கின்றனர். https://www.virakesari.lk/article/178982
  8. கோலியால் முடியாததை ஸ்மிரிதி மந்தனா சாதிக்க உதவிய 8-ஆவது ஓவரில் என்ன நடந்தது? பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, எட்டாவது ஓவரில் ஆட்டத்தின் போக்கு தலைகீழாக மாறிப் போனது 18 மார்ச் 2024, 03:02 GMT புதுப்பிக்கப்பட்டது 2 மணி நேரங்களுக்கு முன்னர் ஐ.பி.எல். தொடரில் 16 ஆண்டுகளாக ஆர்.சி.பி. ஆடவர் அணி கோப்பை வெல்ல முடியாமல் தவிக்கும் நிலையில், மகளிர் போட்டிகள் தொடங்கிய இரண்டாவது சீசனிலேயே அந்த அணி பட்டம் வென்று அசத்தியுள்ளது. அதுவும், நடப்புத் தொடரில் மிகவும் வலுவான அணிகளாக வலம் வந்த டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியை இறுதிப்போட்டியில் வீழ்த்தி ஆர்.சி.பி. மகளிர் அணி மகுடம் சூடியுள்ளது. மகளிர் பிரீமியர் லீக் தொடரில் அச்சுறுத்தும் தொடக்க ஜோடியாக வலம் வரும் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் மெக் லேன்னிங் - ஷாஃபாலி வர்மா இணையின் அதிரடி சரவெடியுடன் ஆட்டத்தை தொடங்கினாலும் எட்டாவது ஓவரில் ஆட்டத்தின் போக்கு தலைகீழாக மாறிப் போனது. அந்த ஓவரில் என்ன நிகழ்ந்தது? அதிக எதிர்பார்ப்புடன் தொடங்கிய ஆர்.சி.பி. - டெல்லி கேப்பிட்டல்ஸ் இறுதிப் போட்டி மகளிர் பிரீமியர் லீக் இரண்டாவது சீசனின் இறுதிப்போட்டி டெல்லியில் உள்ள அருண் ஜேட்லி ஸ்டேடியத்தில் நடைபெற்றது. இதில், லீக் போட்டிகளில் முதலிடம் பிடித்து வலுவான அணியாக கம்பீரமாக வலம் வந்த டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியை ஆர்.சி.பி. அணி எதிர்கொண்டது. இறுதிப்போட்டியில் பங்கேற்ற இரு அணிகளுமே முதலில் பேட்டிங் செய்வதையே விரும்பின என்பது அந்த அணி கேப்டன்களின் பேட்டியில் வெளிப்பட்டது. நடப்புத் தொடரில் 7 முறை முதலில் பேட் செய்தே வெற்றி பெற்ற டெல்லி அணி டாஸில் வென்றதும் தயக்கமே இல்லாமல் அந்த பாணியை தொடர தீர்மானித்தது. டெல்லி கேப்டன் மெக் லேன்னிங் தனது அணி முதலில் பேட்டிங் செய்யும் என்று அறிவித்தார். ஆர்.சி.பி. கேப்டன் ஸ்மிரிதி மந்தனாவும் தனது அணி முதலில் பேட்டிங் செய்வதையே விரும்பியதாக கூறினார். எனினும், சரியான லைன் மற்றும் லென்த்தில் பந்துவீசி டெல்லி அணிக்கு நெருக்கடி கொடுப்போம் என்று அவர் கூறினார். பட மூலாதாரம்,GETTY IMAGES மெக் லேன்னிங் - ஷாஃபாலி வர்மா அதிரடி டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்கு வழக்கம் போல் மென் லேன்னிங் - ஷாஃபாலி வர்மா ஜோடி அதிரடி தொடக்கம் தந்தது. குறிப்பாக, ஷாஃபாலி வர்மாவின் ஆட்டம் ரசிகர்களுக்கு விருந்து படைப்பதாக அமைந்தது. இதனால் டெல்லி அணியின் ஸ்கோர் மளமளவென எகிறியது. இருவரையும் கட்டுப்படுத்த முடியாமல் ஆர்.சி.பி. பவுலர்கள் திணறித்தான் போனார்கள். ஏழே ஓவர்களில் டெல்லி அணி 64 ரன்களைக் குவித்து ஆர்.சி.பி. மகளிர் அணியை திகைக்க வைத்தது. திருப்புமுனையாக அமைந்த எட்டாவது ஓவர் மெக் லேன்னிங் - ஷாஃபாலி இணையின் அதிரடியால் விழி பிதுங்கிப் போயிருந்த ஆர்.சி.பி. அணிக்கு சோஃபி மெலினெக்ஸ் வீசிய ஆட்டத்தின் எட்டாவது ஓவர் பெரிய திருப்புமுனையாக அமைந்தது. அந்த ஓவரின் முதல் பந்திலேயே அதிரடி வீராங்கனை ஷாஃபாலி வர்மாவை வீழ்த்தி ஆர்.சி.பி. அணிக்கு நிம்மதி தந்தார் சோஃபி. ஷாஃபாலி 27 பந்துகளை மட்டுமே எதிர்கொண்டு 2 பவுண்டரிகள், 3 சிக்சர்களுடன் 44 ரன்களை குவித்திருந்தார். அடுத்து வந்த ஜெமிமா ரோட்ரிக்ஸ், அலைஸ் கேப்சே ஆகிய இருவரும் ரன் ஏதும் எடுக்காமல் அவுட்டாகி டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்கு அதிர்ச்சி தந்தார். இருவரையும் கிளீன் போல்டாக்கி அசத்தினார் சோஃபி. இந்த ஓவரில் ஒரு ரன் மட்டுமே விட்டுக் கொடுத்து அதிரடி வீராங்கனை ஷாபாஃலி உள்ளிட்ட 3 பேரை அவுட்டாக்கி ஆர்.சி.பி. அணிக்கு திருப்புமுனையை ஏற்படுத்திக் கொடுத்தார் சோஃபி. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, மெக் லேன்னிங் - ஷாஃபாலி இணையின் அதிரடியால் விழி பிதுங்கிப் போயிருந்த ஆர்.சி.பி. அணிக்கு சோஃபி மெலினெக்ஸ் வீசிய ஆட்டத்தின் எட்டாவது ஓவர் பெரிய திருப்புமுனையாக அமைந்தது. ஆர்.சி.பி. சுழற்பந்துவீச்சில் அடங்கிப் போன டெல்லி ஒரே ஓவரில் 3 விக்கெட்டுகளை இழந்த டெல்லி அணியை தூக்கி நிறுத்த கேப்டன் மெக் லேன்னிங் கடுமையாக போராடினார். ஆனால், அவரை 23 ரன்களில் எல்.பி.டபிள்யூ முறையில் ஸ்ரேயங்கா பாட்டில் அவுட்டாக்கினார். அதன் பின்னர் டெல்லி அணியை தலைநிமிர ஆர்.சி.பி. சுழற்பந்துவீச்சாளர்கள் விடவே இல்லை. டெல்லி அணி வீராங்கனைகள் களமிறங்குவதும் அவுட்டாகி வெளியேறுவதுமாக இருந்தனர். முடிவில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி 18.3 ஓவர்களிலேயே 113 ரன்களுக்கு அடங்கிப் போனது. ஆர்.சி.பி. அணி சார்பில் அதிகபட்சமாக ஸ்ரேயங்கா பாட்டில் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். ஒரே ஓவரில் 3 விக்கெட்டுகளை வீழ்த்திய சோபி மெலினெக்ஸ் மொத்தம் 20 ரன்களை விட்டுக் கொடுத்திருந்தார். சுழற்பந்துவீச்சாளர் ஆஷா சோபனா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார். பட மூலாதாரம்,GETTY IMAGES ஆர்.சி.பி. சிறப்பான தொடக்கம் நடப்புச் சாம்பியனாக திகழ்ந்த வலுவான மும்பை இந்தியன்சை எலிமினேட்டர் சுற்றில் வீழ்த்திய ஆர்.சி.பி. அணி, டெல்லி கேப்பிட்டல்சை குறைந்த ரன்களில் சுருட்டிவிட்டதால் நம்பிக்கையுடன் இலக்கைத் துரத்த களமிறங்கியது. கேப்டன் ஸ்மிரிதி மந்தனாவும், சோஃபி டிவைனும் ஆட்டத்தை தொடங்கினர். இருவருமே அவசரப்படாமல், அதேநேரத்தில் ஏதுவான பந்துகளை அடித்தாடி வெற்றிக்குத் தேவையான ரன்களை சேகரித்த வண்ணம் இருந்தனர். இதனால், ஆர்.சி.பி. அணியின் ஸ்கோர் சீரான வேகத்தில் உயர்ந்தது. இருவருமே இறுதிப்போட்டி தந்த அழுத்தத்தையும், டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் பந்துவீச்சையும் திறம்பட சமாளித்தனர். முதல் விக்கெட்டிற்கு 49 ரன் சேர்த்த நிலையில் இந்த ஜோடி பிரிந்தது. சோஃபி டிவைன் 27 பந்துகளில் 5 பவுண்டரி, ஒரு சிக்சருடன் 32 ரன்கள் சேர்த்த நிலையில் அவுட்டானார். அவரைத் தொடர்ந்து களம் கண்ட எலிஸி பெர்ரியும் கேப்டன் ஸ்மிரிதி மந்தனாவுடன் ஜோடி சேர்ந்து சிறப்பாக ஆடினார். பட மூலாதாரம்,GETTY IMAGES மந்தனா அவுட்டானதும் சற்று நெருக்கடி கேப்டன் ஸ்மிரிதி மந்தனா கடைசி வரை நின்று வெற்றியை உறுதி செய்திட போராடினார். ஆனால், அது நடக்கவில்லை. ஆர்.சி.பி. அணியின் ஸ்கோர் 82 ஆக இருந்த போது மந்தனா 31 ரன் எடுத்த நிலையில் பெவிலியன் திரும்பினார். அப்போது, ஆர்.சி.பி. அணி வெற்றி பெற 36 பந்துகளில் 32 ரன்கள் தேவைப்பட்டன. மந்தனா அவுட்டானதும் சற்றே நம்பிக்கை பெற்ற டெல்லி மகளிர் அணியினர் தாக்குதலை தீவிரப்படுத்தினர். அவர்களது துல்லியமான பந்துவீச்சால் ஆர்.சி.பி. அணியின் ரன் வேகம் மந்தமானது. ஆர்.சி.பி. எளிதான வெற்றி டெல்லி அணியின் சிறப்பான பந்துவீச்சால் ஆட்டம் பரபரப்பான கட்டத்தை எட்டி, கடைசி ஓவர் வரை நீடித்தது. எனினும், 8 விக்கெட்டுகள் கைவசம் இருந்ததால் ஆர்.சி.பி. அணியினர் முகத்தில் பெரிய அளவில் நெருக்கடி தென்படவில்லை. கடைசி ஓவரின் முதலிரு பந்துகளிலும் தலா ஒரு ரன் வர, மூன்றாவது பந்தில் ரிச்சா கோஷ் பவுண்டரி அடித்து ஆர்.சி.பி. அணியை எளிதாக வெற்றிபெறச் செய்தார். இந்த வெற்றியின் மூலம், மகளிர் பிரீமியர் லீக் தொடங்கிய இரண்டாவது சீசனிலேயே ஆர்.சி.பி. அணி சாம்பியன் பட்டத்தை வென்று அசத்தியுள்ளது. ஒரே ஓவரில் 3 விக்கெட்டுகளை வீழ்த்தி ஆட்டத்தின் போக்கையே மாற்றிய ஆர்.சி.பி. வீராங்கனை சோஃபி மெலினெக்ஸ் ஆட்டநாயகியாக தேர்வு செய்யப்பட்டார். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, கேப்டன் ஸ்மிரிதி மந்தனா கடைசி வரை நின்று வெற்றியை உறுதி செய்திட போராடினார். ஆனால், அது நடக்கவில்லை. ஆர்.சி.பி. அணிக்கு வெற்றி தேடித்தந்த வியூகம் இறுதிப்போட்டியில் டெல்லி அணியின் ஆடும் லெவனில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிராக விளையாடிய கடைசிப் போட்டியில் ஆடிய அதே வீராங்கனைகளே இறுதிப்போட்டியிலும் இடம் பெற்றனர். டெல்லியின் சொந்த மைதானமான இந்த மைதானத்தில் ஆடிய இரு போட்டிகளிலுமே அந்த அணி வெற்றி பெற்றிருந்தது. அத்துடன், மகளிர் பிரீமியர் லீக் தொடரில் ஆர்.சி.பி. அணிக்கு எதிராக அதுவரை ஆடியிருந்த 4 போட்டிகளிலுமே டெல்லி அணியே வெற்றி பெற்றிருந்தது. இறுதிப்போட்டியில் டாசும் சாதகமாக அமைய, நடப்புத் தொடரில் மிகவும் வலுவான அணியாக வலம் வந்த டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியே கோப்பையை வெல்லும் என்று நிபுணர்கள், ரசிகர்கள் எதிர்பார்த்தனர். ஆட்டத்தில் தொடக்கத்தில் டெல்லி அணியின் கேப்டன் மெக் லேன்னிங்கும் ஷாஃபாலி வர்மாவும் ஆடிய அதிரடி ஆட்டம் அதனை நிரூபிப்பது போன்றே அமைந்தது. ஆனால், சோஃபி மெக்னேக்ஸ் ஒரே ஓவரில் 3 விக்கெட்டுகளை வீழ்த்தி திருப்புமுனையை ஏற்படுத்த, அதன் பிறகு ஆட்டத்தை ஆர்.சி.பி. அணியின் சுழற்பந்துவீச்சாளர்கள் தங்களது கட்டுப்பாட்டில் எடுத்துக் கொண்டனர். இதனால், 64/0 என்றிருந்த டெல்லி அணியின் ஸ்கோர் 113 ரன்களுக்கு ஆல்அவுட் என்றாகிப் போனது. சுழற்பந்துவீச்சாளர் ஸ்ரேயங்கா பாட்டில் வைத்த பொறியில் சிக்கி டெல்லி கேப்பிட்டல்ஸ் கேப்டன் மெக் லேன்னிங் எல்.பி.டபிள்யூ முறையில் ஆட்டமிழந்தார். அவர் டெல்லி அணியின் பின்வரிசை விக்கெட்டுகளை மளமளவென வீழ்த்தினார். மற்றொரு சுழற்பந்துவீச்சாளர் ஷோபனா சிக்கனமாக பந்துவீசி 2 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். டெல்லி அணி குறைந்த ரன்களில் சுருண்டதில் ஆர்.சி.பி. சுழற்பந்துவீச்சாளர்களே பெரும் பங்கு வகித்தனர். 3 சுழற்பந்துவீச்சாளர்களுடன் களமிறங்கிய ஆர்.சி.பி. அதற்கான பலனையும் பெற்றது. அதேநேரத்தில், 3 வேகப்பந்துவீச்சாளர்களுடன் களம் கண்ட டெல்லி அணிக்கு எதிர்பார்த்த முடிவு கிடைக்கவில்லை. வெற்றி இலக்கும் எளிதானது என்பதால் ஆர்.சி.பி. அணிக்கு டெல்லி கேப்பிட்டல்ஸ் பந்துவீச்சாளர்களால் பெரிய அளவில் நெருக்கடி கொடுக்க முடியவில்லை. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, ஆர்.சி.பி. அணியின் கோப்பை தாகம் மகளிர் போட்டிகள் தொடங்கிய இரண்டாவது சீசனிலேயே தணிந்துள்ளது. சமூக வலைதளங்களில் வைரலாகும் ஆர்.சி.பி. மகளிர் பிரீமியர் லீக் தொடரில் ஆர்.சி.பி. மகளிர் அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறியதுமே பேஸ்புக், ட்விட்டர் போன்ற சமூக வலைதளங்களில் ரசிகர்கள் பெரிய அளவில் விவாதிக்கத் தொடங்கிவிட்டனர். காரணம், ஐ.பி.எல். தொடரில் 16 ஆண்டுகளாக கோலி, டிவில்லியர்ஸ், கெயில் போன்ற முன்னணி வீரர்களுடன் வலுவான அணியாக ஆர்.சி.பி. திகழ்ந்தாலும் அந்த அணியால் இன்றுவரை கோப்பையை வெல்ல முடியவில்லை. ஆர்.சி.பி. அணியின் கோப்பை தாகம் மகளிர் போட்டிகள் தொடங்கிய இரண்டாவது சீசனிலேயே தணிந்துள்ளது. அந்த அணியின் வீராங்கனைகள் கோப்பையை வென்று அதன் ரசிகர்களை மகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்தியுள்ளனர். ஆர்.சி.பி. மகளிர் அணி சாம்பியன் பட்டம் வென்றிருப்பதை குறிப்பிட்டு, கோலி புகைப்படத்துடன் அந்த அணி ரசிகர்கள் பலரும் எதிர்வரும் ஐ.பி.எல்.லில் கோப்பை வெல்ல வேண்டி தங்களது எதிர்பார்ப்புகளை பகிர்ந்து வருகின்றனர். https://www.bbc.com/tamil/articles/cn3m2xxz14eo
  9. Published By: VISHNU 17 MAR, 2024 | 08:25 PM பாதாள உலக குழுவைச் சேர்ந்தவர்களுக்கு போலியான கடவுச்சீட்டு தயாரித்தார்கள் என்ற சந்தேகத்தில் குடிவரவு- குடியகல்வு திணைக்கள பிரதிக் கட்டுப்பாட்டாளரும் முன்னாள் கட்டுப்பாட்டாளரும் ஞாயிற்றுக்கிழமை (17) மாலை குற்றப் புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். போதைப்பொருள் மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பலைச் சேர்ந்த இருவருக்கு போலிக் கடவுச்சீட்டு தயாரித்ததாக கூறப்படும் சம்பவம் தொடர்பில் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இது தொடர்பில் குற்றப் புலனாய்வுத் திணைக்கள பிரதிப் பொலிஸ் மா அதிபர் ரோஹன பிரேமரத்ன தலைமையில் மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன. https://www.virakesari.lk/article/178960
  10. விபத்தால் விசேடதேவையுடையவராகிய கணவர் மனைவிக்கு நண்பனை திருமணம் செய்து வைத்த கதை.
  11. சுவையாக இருந்தாலும் புற்றுநோயை உண்டாக்கும் நிறமிகள் அதிகளவில் பயன்படுத்தப்படுவதாகக் கூறி கர்நாடகாவில் கோபி மஞ்சூரியனுக்கு அம்மாநில அரசு தடை விதித்திருக்கிறது. விதிகளை மீறினால் 7 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்படும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது. கோபி மஞ்சூரியனில் என்ன பிரச்னை? தமிழ்நாட்டிலும் இதற்கு தடை விதிக்கப்பட்டுமா? இந்த காணொளியில் விரிவாக பார்க்கலாம்...
  12. திருப்பூர்: மன முதிர்ச்சியற்ற சிறுமி கூட்டுப் பாலியல் வன்கொடுமை - அதிமுக நிர்வாகி உள்பட 8 பேர் கைது பட மூலாதாரம்,SPECIAL ARRANGEMENT கட்டுரை தகவல் எழுதியவர், கலைவாணி பன்னீர்செல்வம் பதவி, பிபிசி தமிழுக்காக 5 மணி நேரங்களுக்கு முன்னர் திருப்பூர் மாவட்டம் வெள்ளகோவிலில் மனமுதிர்ச்சியற்ற 17 வயது சிறுமியை 6 பேர் சேர்ந்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம், குழந்தைகளின் உடல்நலனைப் போல் மனநலனிலும் அக்கறை செலுத்த வேண்டியதன் அவசியத்தை உணர்த்தியுள்ளது. காவல்துறை கூறுவது என்ன? மன முதிர்ச்சியற்ற சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டது தொடர்பாக, பிபிசி தமிழிடம் காவல்துறை அதிகாரி ஒருவர் தகவல்களை பகிர்ந்து கொண்டார். அதன்படி, வெள்ளகோவிலில் கோவில் ஒன்றில் கடந்த 9-ம் தேதி இரவு கச்சேரி மற்றும் கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டுள்ளன. ஆயிரக்கணக்கானோர் கலந்துகொண்ட கூட்டத்தில் கச்சேரியைக் காண அந்த 17 வயது சிறுமியை அவரின் தாய் அழைத்து வந்துள்ளார். அச்சிறுமிக்கு மனமுதிர்ச்சி சற்று குறைவு என்று கூறப்படுகிறது. இந்த நிகழ்ச்சியில் சிறுமியும் நடனமாடிக் கொண்டிருக்க, ’வீட்டுக்குச் செல்லலாம் வா’ என தாய் அழைத்தபோது அவர் உடன் செல்ல மறுத்துள்ளார். நடனத்தின் மீதான ஈடுபாட்டில் பக்கத்து வீட்டுத் தோழிகளுடன் தான் பத்திரமாக வீட்டுக்கு வந்துவிடுவதாகக் கூறியதால் தாயும் அவரை அங்கேயே விட்டுவிட்டு வீடு திரும்பியுள்ளார். கச்சேரியின்போது மேடைக்குக் கீழ் நடனமாடிக் கொண்டிருந்த இளைஞர்கள் சிலர் அச்சிறுமியை நோட்டமிட்டு, வீடியோவும் எடுத்துள்ளனர். கலைநிகழ்ச்சிகள் முடிந்து வெகுநேரமாகியும் எல்லோரும் வீடு திரும்பிய பின்பும் தனது மகளைக் காணவில்லை என்பதால், காவல்துறையிலும் இதுகுறித்து முறையிட்டார். முழு மனமுதிர்ச்சி இல்லாத பெண் என்பதால், உடனடியாகக் கண்டுபிடித்துத் தரும்படி போலீசாரிடம் கோரினார். இதையடுத்து போலீசாரும் ஒருபுறம் சிறுமியைத் தேடினர். அதிகாலை 3 மணியளவில் யாரோ ஒருவர் அழைத்து வந்தததாக வீடு திரும்பிய சிறுமி மிகவும் களைத்துப் போய் சோர்வுடன் காணப்பட்டிருக்கிறார். தனக்கு நேரிட்ட கொடுமையை சொல்லக் கூட தெரியாத சிறுமி பட மூலாதாரம்,SPECIAL ARRANGEMENT சிறுமியின் நிலை கண்டு சந்தேகித்த தாயும், என்ன ஆனது என சிறுமியிடம் கேட்க 6 பேர் தன்னிடம் நடந்துகொண்ட விதத்தைப் பற்றி கூறி இருக்கிறார். தான் பாலியல் வன்புணர்வுக்கு ஆளாகியிருக்கிறோம் என்று கூட சொல்லத் தெரியாத அந்தச் சிறுமியின் பேச்சைக்கேட்டு தாயும் அதிர்ந்து போனார். இதுதொடர்பாக, அச்சிறுமியின் தாய் வெள்ளகோவில் காவல்நிலையத்தில் புகார் அளித்தார். பின்னர் போலீசார், சிசிடிவி காட்சி உதவியுடன் சிறுமியை இறக்கிவிட்டுச் சென்றவர்களை அடையாளம் கண்டு இருவரைப் பிடித்தனர். இது போக்சோ வழக்கு என்பதால், வெள்ளகோவில் காவலர்களின் வழிகாட்டுதலின்படி, காங்கேயம் அனைத்து மகளிர் காவல்நிலையத்திற்கு சென்று புகாரளித்தார் சிறுமியின் தாய். இதையடுத்து போலீசார் பிடிபட்டவர்களிடம் தீவிர விசாரணையைத் தொடங்கினர். நடனத்தை யூடியூப்பில் போடுவதாகக் கூறி அழைப்பு விசாரணையில் பின்வரும் விவரங்கள் தெரியவந்தததாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்படுகிறது. தேர்த் திருவிழா கலைநிகழ்ச்சியில் சிறுமியின் நடனத்தைப் பார்த்த இளைஞர்களில் பிரபாகர், மணிகண்டன் ஆகிய இருவர் சிறுமியை அருகே வருமாறு அழைத்து, “நீ, நன்றாக நடனமாடுகிறாய். உன்னை மட்டும் தனியே நடனம் ஆட வைத்து, அதை யூடியூப்பில் பதிவேற்றினால், நீ விரைவில் பிரபலமாகிவிடுவாய்” எனக் கூறியிருக்கின்றனர். பேசிய இரு இளைஞர்களில் ஒருவர் சிறுமிக்கு ஏற்கனவே பரிச்சயமான டீ மாஸ்டர் என்பதால், சிறுமியும் அவர்களுடன் பைக்கில் சென்றுள்ளார். கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்த 6 பேர் காட்டுக்குள் சிறுமியை அழைத்துச் சென்று சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். பின்னர், சிறுமியை வீட்டில் விட அழைத்துச் சென்றபோது, அவ்வழியே வந்த அதிமுக நிர்வாகியான கதிர்வேல்சாமியின் மகனும் அதிமுக தொழில்நுட்ப அணி நிர்வாகியுமான தினேஷ் அவர்களைத் தடுத்து நிறுத்தினாராம். நடந்ததை அறிந்த தினேஷும், சிறுமியைத் தங்களிடம் விட்டுவிட்டு செல்லுமாறு கூறி சிறுமியை அழைத்துக் கொண்டனர். பின், தினேஷ் சிறுமியைத் தனது காரில் வைத்து கொடூரமாக பாலியல் வன்புணர்வு செய்ததாகவும், அவரது நண்பர்களும் சிறுமிக்கு பாலியல் வன்புணர்வு செய்ததாகவும் காவல்துறை தரப்பில் கூறப்படுகிறது. இதையடுத்து அவ்வழியே காரில் வந்த மேலும் 2 இளைஞர்கள் சிறுமியை பாலியல் வன்புணர்வு செய்ததோடு, அவரை வீட்டின் அருகே இறக்கிவிட்டுச் சென்ற நிலையில்தான் சிசிடிவி காட்சிகள் அடிப்படையில் சிக்கியது தெரியவந்தது. தனக்கு ஏதோ தவறாக நடக்கிறது என்றுகூட அறிந்துகொள்ளும் பக்குவம் அந்த சிறுமிக்கு இருந்திருக்காது என்றும், சிறுமியின் மனமுதிர்ச்சி ஒரு 9 வயது சிறுமியை ஒத்ததாகத்தான் இருக்கும் என்றும் காவல்துறை தரப்பில் கூறப்படுகிறது. அதிமுக நிர்வாகி உள்பட 8 பேர் கைது பட மூலாதாரம்,SPECIAL ARRANGEMENT இந்த விசாரணைக்குப் பின், 27 முதல் 32 வயதுக்குள் உள்ள பிரபாகர், மணிகண்டன், தமிழ்செல்வன், தினேஷ், பாலசுப்ரமணி, நவீன்குமார், நந்தகுமார், மோகன்குமார் உள்ளிட்ட 8 பேரை கைது செய்தனர். அவர்களின் மீது ஐபிசி பிரிவு 366, பிரிவு 506 (1), போக்சோ சட்டம் பிரிவு 6-ன் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இவர்களில் பெரும்பாலானவர்கள் ஏற்கெனவே திருமணமானவர்கள் ஆவர். அதில் தினேஷ் ஆட்டோ ஃபினான்ஸ் செய்துவருவதும், பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்ட காரில் ’ஜெ’ என அதிமுக வண்ணத்தில் நம்பர் பிளேட்டில் எழுதப்பட்டிருந்தது. எளிதில் இலக்கான மனமுதிர்ச்சியற்ற சிறுமி சிறுமியின் தந்தை சில ஆண்டுகளுக்கு முன் மூலனூரில் கொலையாகி ஓராண்டுக்குப் பின்பே அவரது சடலம் மீட்கப்பட்டது. சிறுமி ஒற்றைத் தாயின் அரவணைப்பில் வளரும் மனமுதிர்ச்சியற்ற சிறுமி என்பதும், வயதுக்கு ஏற்ற பக்குவம் இல்லாததையும், சிறுமிக்கு நடனம் என்றால் மிகவும் பிடிக்கும் என்பதையும் நன்கு அறிந்திருந்தார் அந்த டீ மாஸ்டர். சிறுமியின் வாழ்க்கைச் சூழலை சாதகமாக்கிக் கொண்டதாக தெரிகிறது. டிப்ளமோ படிக்கும் சிறுமிக்கு எப்படி மனநலப் பிரச்னை? படக்குறிப்பு, உளவியல் நிபுணர் சித்ரா அரவிந்த் இந்தச் சிறுமி பாலிடெக்னிக்கில் டிப்ளமோ படித்து வந்தாலும், அவர் வயதுக்கு ஏற்ற முதிர்ச்சி இல்லாதது ஏன் என்ற கேள்வி எழுந்ததும் உளவியல் நிபுணர் சித்ரா அரவிந்தை அணுகியது பிபிசி தமிழ். இந்தச் சிறுமிக்கு இருப்பது அன்டக்னைஸ்ட் இன்டலெக்சுவல் டிசெபிலிடி (Undiagnosed intellectual disability) என்ற கண்டறியப்படாத அறிவுசார் திறன் குறைபாடு என்றார். இப்படிப்பட்டவர்களில் பலர் பட்டப்படிப்பே படித்திருந்தாலும் வயதுக்கு உரிய அறிவும் பக்குவமும் இருக்காது என்றார். பெரும்பாலும் இதுமாதிரியான சிறுமிகள் தான் பாலியல் கொடூரங்களுக்கு எளிதில் இலக்காகிறார்கள் எனக் கூறினார் உளவியல் நிபுணர் சித்ரா அரவிந்த். இந்தச் சிறுமிக்கு சமூகத்தில் எப்படிப் பழக வேண்டும் என்பது தெரியாது என்றார். ’சோசியல் ஸ்கில்ஸ் அடாப்டபிலிடி’ (Social skills adaptability) அதாவது, சமூகத்தில் பழகுவதற்கான திறமைகளை கிரகிப்பதில் அவருக்கு ‘மைல்ட் டூ மாடரேட்’ அதாவது லேசானது முதல் மிதமானது வரைதான் அறிவு இருக்கும் என்றார். `வளர்ந்தால் சரியாகிவிடும்` என்ற அலட்சியம் வீட்டில் விளையாட்டுத்தனமாக இருக்கும் பிள்ளைகள் பெரும்பாலும் வளர்ந்தால் சரியாகிவிடும், திருமணமானால் சரியாகிவிடும், சிறுபிள்ளைத்தனம், விளையாட்டுப் பிள்ளை, வெகுளி, வெள்ளந்தி, அனைவரிடமும் சிரிக்கச் சிரிக்க பேசுவார்கள் என்று கூறிக்கொண்டு பெற்றோர் குறிப்பாக கிராமத்தில் வசிக்கும் பெற்றோர் ஏதும் செய்யாமல் விட்டுவிடுவார்கள். அவர்களுக்கு சமூக பக்குவம் இல்லாமல் போகும்போது, அது ஒரு மனநல பிரச்னை என்பதை அறியாமல் விட்டுவிடுவதும்தான் இதுபோன்ற சிக்கல்களில் அவர்கள் எளிதில் மாட்டிக்கொள்ளக் காரணம் என்றார். தொடர்ந்து பேசிய அவர், “சூசகமான வார்த்தைகளைச் சொல்லி தவறான செயல்களுக்கு அழைக்கும்போது அதனை புரிந்துகொள்வது 17 வயது மனமுதிர்ச்சியற்ற சிறுமிக்கு அது சிரமம்தான்“ எனக் குறிப்பிட்டார். "உடல் எல்லை, பாலியல் கல்வி மிகமிக அவசியம்" பட மூலாதாரம்,GETTY IMAGES இத்தகைய குழந்தைகள் பொதுவெளிக்குச் செல்வதற்கு முன்பே அவர்களுக்குக் கட்டாயம் பாலியல் கல்வியை பெற்றோர் கற்றுத்தர வேண்டும் என்கிறார் அவர். “இது உன் உடல், யாரும் அதைத் தொட அனுமதிக்கக் கூடாது, இதனால் நினைத்துக்கூட பார்க்க முடியாத பின்விளைவுகள் ஏற்படக்கூடும்” என்பதை அனைத்து குழந்தைகளுக்கும் சொல்லித்தர வேண்டும் என அவர் கூறுகிறார். “இதுபோன்ற மன முதிர்ச்சியற்றவர்களுக்கு கண்டிப்பாக சொல்லித்தர வேண்டும். ஏனெனில் இவர்கள் வெளியுலகில் யாருடைய ஆதரவும் இல்லாமல் இயங்க முடியாது எனும்போது அவர்களைப் பெற்றோர் தனித்து விடாது நிழல் போல் காக்க வேண்டும். அல்லது உடல் தொடுதல் எல்லைகளையும், `குட் டச் பேட் டச்`சையும் சொல்லித்தர வேண்டும்” என அதன் அவசியத்தை தெளிவுபடுத்தினார் சித்ரா அரவிந்த். பெற்றோர்கள் கவனத்திற்கு குழந்தைகளுக்கு அறிவுசார் குறைபாடு வருகிறது என்பதை எப்படி அறிந்துகொள்ளலாம் எனவும் அவர் படிநிலைகளை விளக்கினார். குழந்தைகள் அவர்களின் வயதுக்கு ஏற்ற மைல்ஸ்டோன்களை அடையாதது நடப்பது, பேசுவது ஆகியவற்றைத் தாமதமாக செய்வது அதிக கோபமும், சமூகத்தில் பழகும் முறைகளைத் தெரியாதிருப்பது பொருட்களைக் கையாள்வதில் சிரமம் (ஃபைன் மோட்டார் ஸ்கில்ஸ்) கல்வியில் பின்தங்கியிருப்பது போதிய மனநல விழிப்புணர்ச்சி இல்லாததால், பெற்றோர் இதனை கண்டுகொள்ளாது விட்டுவிடுகிறார்கள். `ரிஸ்கி பாபுலேசன்` (எளிதில் ஆபத்துக்கு இலக்காகுபவர்கள்) என இவர்களை அடையாளப்படுத்துவதால் பாலியல் கல்வி அளிப்பது கட்டாயம் என மீண்டும் அறிவுறுத்தினார் சித்ரா அரவிந்த். ”நிழல் போல் இருந்து பெற்றோர் காக்க வேண்டும்” மனப் பக்குவம், சமூகத்தில் செயல்படும் விதங்கள், பாலியல் ரீதியிலான நடத்தைகளைக் கற்றுக் கொடுத்தும் அவர்களால் கற்றுக் கொள்ள முடியவில்லை என்றால், பெற்றோர் நிழல் போல் உடன் இருந்து பாதுகாக்க வேண்டும் என்றார். யாரையும் நம்பி விடக்கூடாது என்றும் இதுபற்றி முதலில் பெற்றோர் விழிப்படைய வேண்டும் என்றும் குறிப்பிட்டார். “குழந்தைக்கு தொடர்ந்து காய்ச்சல் இருந்தால் மருத்துவமனைக்கு தூக்கிச் செல்லும் பெற்றோர், அதுவே மனம் சார்ந்த பிரச்னைகளுக்கு மனநல மருத்துவரை அணுகுவதில்லை. அதை நிராகரித்துவிடுவது மோசமான பின்விளைவுகளை ஏற்படுத்தக் கூடும். எனவே தயங்காமல், சமூகம் என்ன சொல்லும் என நினைக்காமல் தைரியமாக மனநல நிபுணர்களை அணுகவேண்டியது அவசியம்” எனக் கூறினார். IQ பரிசோதனையின் அவசியம் பட மூலாதாரம்,GETTY IMAGES பிறந்ததும் குழந்தையைப் பரிசோதிக்கும் மருத்துவர்கள் குழந்தைக்கு ஏதும் பிரச்னை இருந்தால் கண்டறிந்துவிடுவார்கள். 3 அல்லது 5 வயதுக்கு மேல் அல்லது எந்த வயதிலும் கூட இத்தகைய குழந்தைகளுக்கு IQ பரிசோதனைகளை மேற்கொண்டு அவர்களின் மனநலம் பற்றி அறிந்துகொள்ளலாம். இது தலைமை அரசு மருத்துவமனைகளில் இலவசமாக பெற்று பயனடையலாம். இன்டலெக்சுவல் அதாவது அறிவாற்றல் எனப்படுவது காரணம் அறிதல், பிரச்னைகளை தீர்த்தல், கல்வி கற்றல், திட்டமிடுதல், யோசித்தல், நீதி காணுதல், அனுபவத்தில் இருந்து கற்றுக் கொள்ளுதல் என்ற படிநிலைகளின் கீழ் அறியப்படும். இவற்றை சரியாக பின்பற்றாத குழந்தைகள் அறிவுத்திறன் குறைபாடு உள்ள குழந்தைகளாக அறியப்படுபவர்கள். சில குழந்தைகள் வளர்ந்த பின்பும் கூட குளிப்பது, உடை அணிந்து கொள்வது, சாப்பிடுவது, வழக்கமான பணிகளை செய்வது, அடிப்படையாக சமைப்பது, துவைப்பது, போக்குவரத்தைப் பயன்படுத்துவது ஆகியவற்றில் குறைகள் இருக்கலாம். சில குழந்தைகளுக்கு புதிதாக கற்றுக்கொள்ளுதல் திறன்களை வளர்த்தல் பெரியளவு வழிகாட்டுதல் இன்றி தானாகவே செயல் திறன்களை மேற்கொள்வது ஆகியவற்றில் சிரமம் இருக்கலாம். 10 வயது குழந்தை 5 வயது குழந்தையை போல் பேசுவது இதற்கு உதாரணம். லேசான அறிவுத்திறன் குறைபாடு (IQ மதிப்பு 52-55 முதல் 70) 5 முதல் 6 வகுப்புக்கு மேல் படிப்பில் சிரமம் பேசுவது தாமதம் ஆகலாம். ஆனால் கற்றுக்கொண்ட பின் பிறருடன் தொடர்புகொண்டு பேசுவது மேம்படலாம். தன்னை தானே பார்த்துக் கொள்வது பராமரித்துக்கொள்வதில் முழுமையான சுதந்திரம் இருக்கும். படித்தல் மற்றும் எழுதலில் சிரமம் இருக்கும். சமூகத்தில் பக்குவமின்மை இருக்கும். திருமணம், குழந்தை வளர்ப்பு, பெற்றோராக கடமை ஆற்றும் பொறுப்புகளில் இயலாமை இருக்கும். மிதமான அறிவு திறன் குறைபாடு (IQ மதிப்பு 35 - 42 முதல் 52 – 55) 2-ம் வகுப்புக்கு மேல் கல்வி கற்பதில் சிரமம் மொழியை புரிந்துகொள்வதில் மெதுவாக செயல்படுவார்கள். பேசுவதிலும் பழகுவதிலும் குறைந்த திறன் இருக்கும். சாதாரணமாக படித்தல், எழுதுதல், எண்ணுதல் சாத்தியமாக இருக்கும். தனித்து சுதந்திரமாக வாழ்வது, இயங்குவதில் சிரமம். ஏற்கனவே தெரிந்த இடங்களுக்கு மட்டும்தான் சிரமம் இன்றி பயணிக்க முடியும். தீவிர அறிவுத்திறன் குறைபாடு (IQ மதிப்பு 22-25 முதல் 35 – 40) பேசுவதிலும் ’மோட்டார் டெவலப்மென்ட்’ என்ற பொருட்களை கையாளுவதில் சிரமம் இருக்கும் பாதுகாப்பான சூழலில் மருத்துவ உதவியோடு தான் வாழ முடியும். வெகு சில வார்த்தைகள் மட்டுமே புரியும். ஆழமான அறிவுத்திறன் குறைபாடு (IQ மதிப்பு 22-25 க்கு கீழ்) பிறர் என்ன சொல்கிறார்கள் என்று புரியாது. நரம்பு குறைபாட்டால் அசாதாரணமாக இருப்பார்கள். சுதந்திரமாக செயல்படுவது சாத்தியமில்லை. எப்போதும் கண்காணிப்பின் கீழ் இருக்க வேண்டியது அவசியம். அறிவுசார் குறைபாடு வரக் காரணம் என்ன? மரபணு, கர்ப்பத்தில் ஏற்பட்ட பிரச்னைகள், அம்மை, மூளைக்காய்ச்சல், ஊட்டச்சத்து குறைபாடு போன்ற உடல்நல குறைபாடுகள் இதற்கு காரணமாக அமையலாம். குறிப்பாக, பெண்கள் கருவுற்றிருக்கும் போது அவர்களுக்கு மன உளைச்சல்களைக் கொடுக்கும் போதும், அவர்களின் மன நலன் பாதிக்கப்பட்டால் கருவில் இருக்கும் குழந்தையின் மனநலனும் பாதிக்கப்படக்கூடும். 104 என்ற எண்ணில் இலசவ மனநல ஆலோசனை குழந்தைகளை மனநல மருத்துவர்களுக்கு அழைத்துச் செல்வதில் ஏதும் தடைகள் இருந்தால், 24 மணிநேரமும் செயல்படும் 104 என்ற அரசின் மருத்துவ மற்றும் மனநல ஆலோசனை மைய எண்ணை அழைத்து, தங்களின் பிரச்னைகளைக் கூறவேண்டும். எவ்வளவு நேரமாயினும் மிகவும் பொறுமையாகக் கேட்டுக் கொண்டு உங்களுக்கான வழிகாட்டு முறைகளை அனுபவம் வாய்ந்த மருத்துவர்கள் பகிர்வார்கள். மருத்துவர்கள் அறிவுறுத்தல்களை எழுதி வைத்துக்கொண்டு பின்பற்றி, அவர்கள் சொல்லும் காலகட்டத்துக்குப் பின் மீண்டும் 104 என்ற எண்ணை அழைத்து அதே மருத்துவரின் பெயரைச் சொல்லி பேச வேண்டும் எனக் கூறினால் அவர்கள் இணைப்பை வழங்குவார்கள். எத்தகைய சந்தேகங்கள் மற்றும் பிரச்னைகள், மன சங்கடங்களையும் தயக்கமின்றி பகிர்ந்து பிரச்னைகளுக்குத் தீர்வு காணலாம். https://www.bbc.com/tamil/articles/cqqwe1gld15o
  13. பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், நந்தினி வெள்ளைச்சாமி பதவி, பிபிசி தமிழ் 17 மார்ச் 2024, 03:00 GMT புதுப்பிக்கப்பட்டது 4 மணி நேரங்களுக்கு முன்னர் பிஎம் ஸ்ரீ பள்ளிகளை 2024-2025 கல்வியாண்டுக்குள் தொடங்குவது தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட தமிழ்நாடு அரசு விருப்பம் தெரிவித்து மத்திய கல்வி அமைச்சகத்திற்கு கடிதம் எழுதியுள்ளது. மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கையை எதிர்க்கும் திமுக தலைமையிலான அரசு, அதன் அடிப்படையில் செயல்படும் பி.எம்.ஸ்ரீ மாதிரிப் பள்ளிகள் திட்டத்தில் இணைய விரும்புவது ஏன் என கல்வியாளர்கள் கேள்வி எழுப்புகின்றனர். தமிழ்நாடு அரசின் முடிவிற்கு மத்திய கல்வி அமைச்சகம் வரவேற்பு தெரிவித்துள்ளது. பிஎம் ஸ்ரீ பள்ளிகள் புதிய கல்விக்கொள்கை 2020ஐ அடிப்படையாகக் கொண்டு செயல்படும் என மத்திய அரசு கூறுகிறது. இதுதொடர்பாக, மத்திய கல்வித்துறை அமைச்சகம் சனிக்கிழமை (மார்ச் 16) தன் ட்விட்டர் பக்கத்தில், “பிஎம் ஸ்ரீ பள்ளிகள் திட்டத்தைச் செயல்படுத்துவது குறித்து மத்திய கல்வித்துறை அமைச்சகத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவதாக முக்கிய முடிவை தமிழ்நாடு அரசு எடுத்துள்ளது. பிஎம் ஸ்ரீ பள்ளிகள் என்பது புதிய கல்விக் கொள்கை-2020இன் படி அமைந்த முன்மாதிரி பள்ளிகள்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் 2024-25 கல்வியாண்டுக்குள் தமிழ்நாடு அரசு கையெழுத்திடும் என்றும் தமிழ்நாடு அரசுக்கும் மத்திய கல்வித்துறை அமைச்சகத்திற்கும் இடையேயான இந்த ஒப்பந்தம், வலுவான மத்திய-மாநில உறவுகளைக் குறிப்பதாகவும் அந்தப் பதிவில் கூறப்பட்டுள்ளது. தமிழ்நாடு மாணவர்களின் முழுமையான வளர்ச்சிக்கான அர்ப்பணிப்புக்காக இதைத் தாங்கள் மனமார வரவேற்பதாக மத்திய கல்வி அமைச்சகம் தெரிவித்துள்ளது. பட மூலாதாரம்,GETTY IMAGES மத்திய கல்வித்துறை அமைச்சகத்திற்கு தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலாளர் ஷிவ்தாஸ் மீனா மார்ச் 15 அன்று எழுதிய கடிதமும் அப்பதிவில் இணைக்கப்பட்டுள்ளது. அக்கடிதத்தில், “தமிழகத்தில் பிஎம் ஸ்ரீ பள்ளிகளைத் தொடங்குவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட தமிழ்நாடு அரசு மிகுந்த ஆர்வமாக உள்ளது. அதன்படி, பள்ளிக் கல்வித்துறை செயலாளர் தலைமையில், மாநில அளவிலான குழு அமைக்கப்படும். அக்குழுவின் பரிந்துரைகளின் அடிப்படையிலேயே அடுத்த கல்வியாண்டுக்குள் இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திடப்படும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், மூன்று மற்றும் நான்காம் நிதி தவணைகளை வழங்குமாறும் மத்திய அரசிடம் அதில் கோரப்பட்டுள்ளது. இதுதொடர்பாக கருத்து தெரிவித்துள்ள தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை, "தேசிய கல்விக் கொள்கையில் உள்ள காலை உணவுத் திட்டம், தன்னார்வலர்கள் மூலம் சமுதாயத்தை உள்ளடக்கிய பயிற்றுவித்தல் போன்றவற்றை வேறு வேறு பெயர்களில் செயல்படுத்திய தமிழக அரசு, தற்போது, பி.எம்.ஸ்ரீ பள்ளிகளைத் தமிழகத்தில் தொடங்க முடிவெடுத்துள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது," என்றார். பட மூலாதாரம்,GETTY IMAGES திமுக எதிர்ப்பு மத்திய அரசின் தேசிய கல்விக் கொள்கை 2020ஆம் ஆண்டில் வெளியிடப்பட்டது. அப்போது, புதிய கல்விக் கொள்கைக்கு திமுக உட்பட தமிழ்நாட்டின் பிரதான அரசியல் கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தன. அப்போது எதிர்க்கட்சியாக இருந்த திமுக தலைவர் ஸ்டாலின், புதிய கல்விக் கொள்கை வேத கலாசாரத்தை திணிப்பதாகவும் சமூக நீதி புறக்கணிக்கப்பட்டுள்ளதாகவும் விமர்சித்தார். மும்மொழிக் கொள்கை திணிக்கப்படுகிறது, தொழிற்கல்வி என்ற பெயரில் குலக்கல்வியை அறிமுகப்படுத்தப் பார்க்கிறார்கள் என்றும் ஸ்டாலின் தெரிவித்திருந்தார். இந்நிலையில், புதிய கல்விக் கொள்கையின் அடிப்படையில் செயல்படும் பிஎம் ஸ்ரீ பள்ளிகளைச் செயல்படுத்த தமிழ்நாடு அரசு ஆர்வம் காட்டுவது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. பட மூலாதாரம்,GETTY IMAGES இந்த விமர்சனம் தொடர்பாக, பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி செய்தியாளர்களிடம் பேசுகையில், “மாநில கல்விக் கொள்கையை தமிழ்நாடு அரசு தயாரித்து வருகிறது. அதை ஓரிடத்தில் அமர்ந்துகொண்டு உருவாக்கவில்லை. தமிழ்நாடு முழுவதும் கல்வியாளர்களைச் சந்தித்திருக்கிறோம். ஆசிரியர்கள், மாணவர்களின் கருத்துகளை அறிந்துதான் மாநில கல்விக் கொள்கையைத் தயாரித்திருக்கிறோம். அதைச் சார்ந்துதான் எல்லா திட்டங்களும் செயல்படுத்தப்படும்" என்றார். அதோடு, மத்திய கல்வி அமைச்சகம் தமிழ்நாடு அரசுக்கு மூன்றாவது மற்றும் நான்காவது தவணையான ரூ. 1,200 கோடியை விடுவிக்க வேண்டும் என வலியுறுத்திஇருப்பதாகவும், அப்போது பி.எம்.ஸ்ரீ திட்டத்தில் இணைய வேண்டும் என மத்திய அரசு கூறியதாகவும் தெரிவித்த அன்பில் மகேஷ், "முதலமைச்சரிடம் இதுகுறித்து ஆலோசனை நடத்தினோம்" எனக் கூறினார். அவரது கூற்றின்படி, புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதில் எவற்றையெல்லாம் ஏற்கலாம், ஏற்க வேண்டாம் என்பது குறித்து ஆலோசிக்க குழு அமைக்கப்படும். "அந்த பரிந்துரைகளின் அடிப்படையில் நமக்கு ஏற்காத விஷயங்களை எடுத்து சொல்வோம்," என்றார். மேலும், குழந்தைகளுக்கு பொதுத் தேர்வு கொண்டு வந்து அவர்களுக்கு மன உளைச்சலைத் தரும் புதிய கல்விக் கொள்கையை திமுக எப்போதும் எதிர்க்கும் என்றும் அவர் தெரிவித்தார். பிஎம் ஸ்ரீ பள்ளிகள் என்பது என்ன? பட மூலாதாரம்,ANBIL MAHESH POYYAMOZHI படக்குறிப்பு, அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பி.எம். ஸ்கூல்ஸ் ஆஃப் ரைசிங் இந்தியா என்பதன் சுருக்கமே பி.எம்.ஸ்ரீ பள்ளிகள். இந்தியா முழுவதிலும் 14,500 பள்ளிகளை முன்மாதிரி பள்ளிகளாக தரம் உயர்த்துவதே இத்திட்டத்தின் நோக்கம். குறிப்பிட்ட காலகட்டத்திற்குள் இப்பள்ளிகளை முன்மாதிரி பள்ளிகளாக மாற்றி, அப்பள்ளிகள் அவற்றுக்கு அருகிலுள்ள பள்ளிகளை வழிநடத்தும் வகையில் இத்திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது. 21ஆம் நூற்றாண்டின் தேவைகளை எதிர்கொள்ளும் வகையில் இந்தப் பள்ளிகள் இருக்கும் என புதிய கல்விக் கொள்கை-2020இல் தெரிவிக்கப்பட்டுள்ளது. நவோதயா பள்ளிகள், கேந்திரிய வித்யாலயா பள்ளிகள் உட்பட மத்திய/மாநில/யூனியன் அரசுகள், உள்ளாட்சி அமைப்புகளால் நிர்வகிக்கப்படும் பள்ளிகள் இத்திட்டத்தில் இணைத்துக்கொள்ளப்படும். உயர்தர கல்வி, பாதுகாப்பான சூழல், பரவலான கற்றல் அனுபவங்கள் வழங்கப்படும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. இந்தப் பள்ளிகள் சுற்றுச்சூழலுக்கு உகந்த பசுமைப் பள்ளிகளாக உருவாக்கப்படும் என மத்திய அரசு கூறுகிறது. இந்தத் திட்டத்தின் மூலம் சுமார் 20 லட்சம் மாணவர்கள் பயணடைவார்கள் என, 2022ஆம் ஆண்டு மத்திய அரசு தெரிவித்தது. இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் இதுவரை ஒடிசா, மேற்கு வங்கம், கேரளா ஆகிய மாநிலங்கள் கையெழுத்திடவில்லை என, பிடிஐ செய்தி முகமையின் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பிஎம் ஸ்ரீ பள்ளிகளில் என்ன பிரச்னை? படக்குறிப்பு, பிரின்ஸ் கஜேந்திரபாபு இப்பள்ளிகள் தொடர்பாக பிபிசி தமிழிடம் பேசிய பொதுப் பள்ளிகளுக்கான மாநில மேடை அமைப்பின் பொதுச் செயலாளர் பிரின்ஸ் கஜேந்திரபாபு பேசினார். பிஎம் ஸ்ரீ பள்ளிகளில் என்ன பிரச்னை என்ற கேள்விக்கு, "எல்லோருக்கும் சமமான கற்றல் வாய்ப்பைத்தான் கொடுக்க வேண்டும். இந்திய அரசமைப்புச் சட்டம் சமத்துவக் கோட்பாட்டைத்தான் பேசுகிறது," என்று பதிலளித்தார். "பிஎம் ஸ்ரீ பள்ளிகள் மட்டும்தான் சிறந்த பள்ளிகளாக இருக்க வேண்டுமா? சிறந்த ஆசிரியர்கள், மாணவர்கள் அங்கு மட்டும்தான் இருப்பார்களா? இந்தக் குறிப்பிட்ட பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள்தான் அங்கிருக்கும் அனைத்து வசதிகளையும் அனுபவிப்பார்கள் என்று சொன்னால், மற்ற பள்ளிகளில் இத்தகைய வசதிகள் வேண்டாமா?" "ஒரு சிலருக்கு மட்டும் சிறந்த கல்வி வாய்ப்பைக் கொடுப்பேன் என்று சொன்னால், அது இந்திய அரசமைப்புச் சட்டத்திற்கு ஏற்புடையதா?" என பிரின்ஸ் கஜேந்திர பாபு கேள்வியெழுப்புகிறார். ஏற்கெனவே செயல்பாட்டில் உள்ளதா? பிஎம் ஸ்ரீ பள்ளிகளுக்கான இணையதளத்தில், அப்பள்ளிகளுக்கென நிர்வாக அமைப்பை மாநில அரசு ஏற்படுத்த வேண்டும் எனக் கூறப்பட்டுள்ளது. எந்தெந்த பள்ளிகளை இத்திட்டத்தின் கீழ் கொண்டு வர முடியும் என்பதை மாநில அரசு அடையாளம் கண்டு கூற வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில் சில படிநிலைகளும் கொடுக்கப்பட்டுள்ளன. "ஏற்கெனவே தமிழ்நாடு அரசு பள்ளிகளை அடையாளம் கண்டுள்ளது. இந்த மாதிரிப் பள்ளிகள் 2 ஆண்டுகளாகச் செயல்பட்டு வருகின்றன," என்றார் பிரின்ஸ். பட மூலாதாரம்,GETTY IMAGES அதற்கான அமைப்பில் ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி சுதன் உறுப்பினர் செயலாளராக உள்ளதாகவும் பிரின்ஸ் கஜேந்திரபாபு தெரிவித்தார். இந்நிலையில், இப்போது கடைசியாக புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் தமிழ்நாடு அரசு கையெழுத்திட உள்ளதாக அவர் விமர்சிக்கிறார். "அடுத்த கல்வியாண்டுக்குள் அந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவோம் என அரசின் தலைமைச் செயலாளர் கூறுவதை எப்படி எளிதாக எடுத்துக் கொள்ள முடியும்?" என அவர் கேள்வி எழுப்புகிறார். முதலமைச்சர் தலைமையிலான அமைச்சரவைக்கு தான் இத்தகைய கொள்கை முடிவுகளை எடுக்கும் அதிகாரம் இருக்கிறது. அப்படியிருக்கையில், "அமைச்சரவை முடிவு எடுக்காத ஒரு விஷயம் குறித்து தலைமைச் செயலாளர் எப்படி முடிவு எடுத்தார்? இதுகுறித்து முதலமைச்சர் விளக்கம் கூற வேண்டும்" என வலியுறுத்துகிறார். நிதியுதவி அளிக்காமல் நெருக்கடி கொடுக்கின்றனர் என்பது நியாயமான அணுகுமுறை அல்ல என்றும் அவர் கூறுகிறார். "கருணாநிதி சமச்சீர் கல்வியைக் கொண்டு வந்தார். இப்போது திமுக அரசு கொண்டு வரும் பிஎம் ஸ்ரீ பள்ளிகள் அரசமைப்பு சட்டத்திற்கு மட்டுமல்ல, கருணாநிதியின் சமச்சீர் கோட்பாட்டுக்கும் எதிரானது," என்கிறார் பிரின்ஸ் கஜேந்திரபாபு. தமிழ்நாட்டுக்கென மாநில கல்விக் கொள்கையை உருவாக்க டெல்லி உயர் நீதிமன்றத்தின் முன்னாள் தலைமை நீதிபதி த.முருகேசன் தலைமையில் குழு ஒன்றை 2022ஆம் ஆண்டு தமிழ்நாடு அரசு அமைத்தது. இதிலும் தமிழ்நாடு அரசு மீது சர்ச்சை எழுந்தது. தேசிய கல்விக் கொள்கையைப் பின்பற்றி மாநிலக் கல்விக் கொள்கையை வடிவமைக்கும் திசையில் குழு முன்னோக்கிச் சென்று கொண்டிருக்கிறது என அக்குழுவின் ஒருங்கிணைப்பாளராக இருந்த சவீதா பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணை வேந்தர் பேராசிரியர் எல். ஜவஹர்நேசன் மே, 2023இல் குற்றச்சாட்டு முன்வைத்தார். முதலமைச்சரின் செயலாளரான மூத்த ஐஏஎஸ் அதிகாரி உதயச்சந்திரன் மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை அவர் முன்வைத்தார். எனினும் அக்குற்றச்சாட்டுகளை அந்த நேரத்தில் உதயச்சந்திரன் மறுத்திருந்தார். 'எப்போதும் எதிர்ப்போம்' பட மூலாதாரம்,GETTY IMAGES இதுதொடர்பாக, பிபிசி தமிழிடம் பேசிய திமுக செய்தித் தொடர்பாளர் கவிஞர் சல்மா கூறுகையில், ”ஆய்வு செய்து எது தேவையோ அதை மட்டும் செயல்படுத்துவோம் என அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்திருக்கிறார். குலக்கல்வியை ஊக்குவிப்பதாக புதிய கல்விக் கொள்கையை முதலமைச்சர் தொடர்ந்து எதிர்த்து வருகிறார். அனைவரும் சமம், எல்லோரும் படிக்க வேண்டும் என்பதுதான் சமூக நீதி. அதற்காகத்தான் திமுக குரல் கொடுத்து வருகிறது. அதனால் இதில் சந்தேகங்களுக்கு இடமில்லை,” எனத் தெரிவித்தார். மத்திய அரசு தமிழ்நாடு அரசுக்கு எல்லா வகையிலும் நெருக்கடி அளிப்பதாகவும் நிதியில்தான் முதலில் கை வைப்பதாகவும் அவர் கூறினார். 'திமுக அரசியல் செய்கிறது' திமுக எல்லா விவகாரங்களிலும் இரட்டை நிலைப்பாடு எடுப்பதாக பாஜக விமர்சித்துள்ளது. பாஜகவின் மாநில துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி பிபிசி தமிழிடம் பேசுகையில், "தலைமைச் செயலாளரின் கடிதத்தில், இத்திட்டத்தில் இணைய தமிழ்நாடு அரசு மிகுந்த ஆர்வத்துடன் இருப்பதாகக் குறிப்பிட்டுள்ளார். அமைச்சர் இப்படிச் சொல்கிறார். அப்படியென்றால் திமுக அரசு இதை வைத்து அரசியல் செய்கிறது. இப்படித்தான் நீட் தேர்வு உள்ளிட்ட எல்லா விவகாரங்களிலும் திமுக இரட்டை நிலைப்பாட்டை எடுத்திருக்கிறது. எல்லாவற்றுக்கும் தொடக்கம் வேண்டும் என்பதால்தான் சில பள்ளிகளைத் தேர்ந்தெடுத்து இந்தத் திட்டத்தைச் செயல்படுத்த உள்ளனர்" என்றார். https://www.bbc.com/tamil/articles/c720lexrg49o
  14. இந்து சமுத்திரத்தின் ஊடாக பயணம் செய்யும் இஸ்ரேலிய அமெரிக்க கப்பல்களை தாக்கியுள்ளோம் - ஹெளத்தி கிளர்ச்சியாளர்கள் தகவல் Published By: RAJEEBAN 17 MAR, 2024 | 12:40 PM இந்து சமுத்திரத்தின் ஊடாக பயணம் செய்யும் இஸ்ரேலிய அமெரிக்க கப்பல்களை இலக்குவைத்துள்ளதாக ஹெளத்தி கிளர்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். இந்து சமுத்திரத்தின் ஊடாக பயணம் செய்யும் இஸ்ரேலிய அமெரிக்க கப்பல்களை இலக்குவைத்து ஏவுகணை தாக்குதல்களை மேற்கொண்டுள்ளதாக ஹெளத்தி கிளர்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். இது சர்வதேச வர்த்தகத்தின் மீது கடும் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய விடயமாக மாறாலாம். செங்கடலில் மேற்கொண்டுவரும் தாக்குதலிற்கு அப்பால் இந்து சமுத்திரத்திலும் ஹெளத்தி கிளர்ச்சியாளர்கள் தங்கள் தாக்குதலை தீவிரப்படுத்தியுள்ளனர் என வீடியோ செய்தியொன்றில்தெரிவித்துள்ள அதன் பேச்சாளர் மூன்று இஸ்ரேலிய அமெரிக்க கப்பல்களை இலக்குவைத்து ஏவுகணை மற்றும் ஆளில்லா விமானதாக்குதல்களை மேற்கொண்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார். இந்து சமுத்திர தாக்குதல் குறித்து அமெரிக்க அதிகாரிகள் இதுவரை எந்த தகவலையும் வெளியிடவில்லை இந்த தகவல் உண்மையானதாக காணப்படும் பட்சத்தில் சர்வதேச வர்த்தகம் இதன் காரணமாக மோசமான பாதிப்புகளை எதிர்கொள்ளக்கூடும். செங்கடலில் ஹெளத்தி கிளர்ச்சியாளர்களின் தாக்குதல்களை தொடர்ந்து கப்பல்கட்டணங்கள் அதிகரித்துள்ளன,சில கப்பல் நிறுவனங்கள் தங்கள் பாதைகளை மாற்றியுள்ளன.இதன் காரணமாக கடற்பயண நேரம் அதிகரித்துள்ளது. ஹெளத்திகளின் தாக்குதல்கள் காரணமாக உலகின் மிகவும் மும்முரமான கடற்பாதை மிகமோசமாக பாதிக்கப்படலாம் என்ற கரிசனைகள் எழுந்துள்ளன. எனினும் செங்கடல் பகுதியில் பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதை தொடர்ந்து சந்தைகளில் அச்சநிலை குறைவடைந்துள்ளதுடன் தாமதங்கள் குறித்த அச்சங்களும் நீங்கியுள்ளன. எனினும் ஹெளத்தி கிளர்ச்சியாளர்கள் இந்து சமுத்திர பகுதியில் தாக்குதல்களை மேற்கொண்டமை உண்மை என்றால் விலைகள் மீண்டும் அதிகரிக்கலாம், கப்பல்களை பாதுகாப்பதற்காக அந்த பகுதிகடற்படையினருக்கு உதவிகளை வழங்குமாறு வேண்டுகோள்கள் வெளியாகலாம். https://www.virakesari.lk/article/178932
  15. உலகின் கவனத்தை ஈர்த்துள்ள ஒருபாலின திருமணம் - தனது நீண்டகால தோழியை மணமுடித்தார் அவுஸ்திரேலிய வெளிவிவகார அமைச்சர் Published By: RAJEEBAN 17 MAR, 2024 | 01:02 PM அவுஸ்திரேலியாவின் வெளிவிவகார அமைச்ச பெனிவொங் தனது நீண்டகாலதோழி சோபி அல்லோச்சசுடன் திருமணபந்தத்தில் இணைந்துகொண்டுள்ளார். அவுஸ்திரேலியாவின் இந்த ஒருபால் இனத்தவர்கள் திருமணம் உலகின் கவனத்தை ஈர்த்துள்ளது. அடிலெய்ட் ஹில்ஸ் பகுதியில் சனிக்கிழமை இடம்பெற்ற இந்த திருமண நிகழ்வில் பிரதமர் அன்டனி அல்பெனிஸ் உட்பட தொழில்கட்சியின் பல முக்கிய பிரமுகர்கள் கலந்துகொண்டுள்ளனர். சமூக ஊடகங்களில் இது குறித்த தகவல்களை பதிவிட்டுள்ள பெனிவொங் இந்த விசேடமான நாளை எங்களின் பல நண்பர்கள் குடும்பத்தவர்கள் எங்களுடன் பகிர்ந்துகொள்ள முடிந்தமை குறித்து மகிழ்ச்சியடைவதாக தெரிவித்துள்ளார். தனது வாழ்க்கை துணையுடன் சேர்ந்து எடுத்துக்கொண்ட படத்தையும் பெனிவொங் வெளியிட்டுள்ளார். வெளிவிவகார அமைச்சர் 2007 இல் தனது வாழ்க்கை துணையை சந்தித்தார். இவர்களிற்கு இரு பெண்பிள்ளைகள் உள்ளனர். எனினும் இருவரும் தங்கள் தனிப்பட்ட வாழ்க்கை குறித்த விடயங்களை மிகவும் இரகசியமாக பேணிவருகின்றனர். https://www.virakesari.lk/article/178934
  16. 17 MAR, 2024 | 04:14 PM யாழ்ப்பாணம் வல்வெட்டித்துறை பகுதியில் சுகாதார சீர்கேட்டுடன் இயங்கிய வெதுப்பகம் ஒன்றுக்கு நீதிமன்ற உத்தரவில் சீல் வைக்கப்பட்டுள்ளது. சுகாதாரமற்ற முறையில் உற்பத்திகளை களஞ்சியப்படுத்தியமை, விற்பனை செய்தமை உள்ளிட்ட குற்றச்சாட்டுகளின் கீழ் பருத்தித்துறை நீதவான் நீதிமன்றில் வழக்கு தொடர்ந்த பொது சுகாதார பரிசோதகர், வெதுப்பகத்திற்கு சீல் வைக்க கட்டளையிடக் கோரி விண்ணப்பம் செய்துள்ளார் . விண்ணப்பத்தை ஆராய்ந்த நீதிமன்றம் வெதுப்பகத்தில் திருத்த வேலைகளை முடித்து , சுகாதார பரிசோதகர் அதனை உறுதிப்படுத்தும் வரையில் வெதுப்பகத்துக்கு சீல் வைக்க உத்தரவிட்டுள்ளது. https://www.virakesari.lk/article/178955
  17. 17 MAR, 2024 | 03:58 PM காட்டு யானையின் தாக்குதலுக்கு இலக்காகி குடும்பஸ்த்தர் ஒருவர் இன்று ஞாயிற்றுக்கிழமை (17) உயிரிழந்துள்ளார். கிரான் பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள குளத்துவெட்டை திகிலிவெட்டையில் பகுதியில் வசிக்கும் 32 வயதுடைய ஒரு பிள்ளையின் தந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளார். வழக்கம் போல் மீன் பிடி தொழிலுக்கு சென்றவர் குளத்தில் மீன் பிடிப்பதற்காக கட்டு வலையினை கட்டிவிட்டு அங்கிருந்த கட்டிலில் உறங்கி கொண்டிருந்த வேளை காட்டு யானை அவரை தாக்கியுள்ளது. இதனால் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாக உறிவினர்கள் தெரிவித்துள்ளதுடன் சடலம் வாழைச்சேனை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. https://www.virakesari.lk/article/178954
  18. தேர்தல் பத்திரம்: லாட்டரி உரிமையாளர் மார்ட்டினிடம் ரூ.509 கோடி பெற்ற திமுக - என்ன சொல்கிறது? 19 நிமிடங்களுக்கு முன்னர் தேர்தல் பத்திரம் தொடர்பான மேலும் அதிக விவரங்கள் வெளியாகியுள்ளன. இதில், பாஜக, காங்கிரஸ், திமுக, அதிமுக உள்ளிட்ட கட்சிகள் எவ்வளவு நிதி பெற்றுள்ளன, எந்தெந்த நிறுவனங்களிடமிருந்து நிதி பெற்றன என்ற தகவல்கள் தெரியவந்துள்ளன. பாஜக சமர்ப்பித்துள்ள ஆவணங்களின்படி, அந்தக் கட்சி தேர்தல் பத்திரம் மூலம் ரூ.6,987 கோடி ரூபாய் நிதி பெற்றுள்ளது தெரியவந்துள்ளது. மற்ற கட்சிகள் பெற்ற நிதி எவ்வளவு? தேர்தல் பத்திரம் தொடர்பான விவரங்களை இந்தியத் தேர்தல் ஆணையம் கடந்த மார்ச் 14ஆம் தேதி வெளியிட்டிருந்த நிலையில், இன்று மேலும் கூடுதல் தகவல்கள் வெளியாகியுள்ளன. இது தொடர்பாக தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஏப்ரல் 12, 2019-ல் உச்சநீதிமன்ற இடைக்கால உத்தரவை அடுத்து, அரசியல் கட்சிகள் தேர்தல் பத்திரம் மூலம் பெறப்பட்ட நிதி தொடர்பான விவரங்களை சீலிட்ட உறையில் வழங்கின. அவை உறை திறக்கப்படாமலே உச்ச நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டன. மார்ச் 15ஆம் தேதி தேர்தல் பத்திரம் தொடர்பான வழக்கில் உச்ச நீதிமன்றம் அளித்த உத்தரவை அடுத்து, நீதிமன்ற பதிவுத்துறை அந்த ஆவணங்கள் மற்றும் அதன் டிஜிட்டல் பதிவுகளை எங்களிடம் வழங்கியது. அந்த ஆவணங்கள் தற்போது வெளியிடப்பட்டுள்ளன’’ எனக் கூறப்பட்டுள்ளது. இந்தப் புதிய தரவுகளில் ஒரு கட்சிக்கு எந்த ஸ்டேட் வங்கி கிளையில் இருந்து எந்தத் தேதியில் தேர்தல் பத்திரம் நன்கொடையாக வழங்கப்பட்டது என்பது உள்ளிட்ட விவரங்கள் அடங்கியுள்ளன. பட மூலாதாரம்,GETTY IMAGES பாஜக பெற்ற தொகை எவ்வளவு? பாஜக சமர்ப்பித்துள்ள ஆவணங்களின்படி, அந்தக் கட்சி தேர்தல் பத்திரம் மூலம் ரூ.6,987 கோடி ரூபாய் நிதி பெற்றுள்ளது தெரியவந்துள்ளது. இது மார்ச் 3, 2017 முதல் ஜூலை 10, 2023 வரை பெறப்பட்ட தொகையாகும். 2017 - 18 நிதியாண்டில் ரூ.210 கோடி நிதி பெற்றுள்ள பாஜக, 2023-24 நிதியாண்டில் ரூ. 421 கோடிக்கும் அதிகமாக பெற்றுள்ளது. இது நான்கே மாதங்களில் பெறப்பட்ட தொகை என்பது கவனிக்கத்தக்கது. அதிகபட்சமாக 2019-2020 நிதியாண்டில் ரூ.2 ஆயிரம் கோடிக்கு அதிகமான தொகையை பாஜக பெற்றுள்ளது. எனினும், யாரிடம் இருந்து எவ்வளவு நிதி பெற்றோம் என்ற விவரத்தை தேர்தல் ஆணையத்தில் அளித்த ஆவணத்தில் பாஜக நேரடியாக குறிப்பிடவில்லை. காங்கிரஸ் பெற்ற தொகை எவ்வளவு? பட மூலாதாரம்,GETTY IMAGES காங்கிரஸ் கட்சி தேர்தல் பத்திரம் மூலமாக ரூ. 1,334 கோடி நிதி பெற்றுள்ளது. இது மார்ச் 13, 2018 முதல் செப்டம்பர் 30,2023 வரை பெறப்பட்ட தொகை. அதிகபட்சமாக 2018 - 2019 நிதியாண்டில் ரூ.383 கோடி காங்கிரஸ் நிதி பெற்றுள்ளது. அதன் பிறகு தேர்தல் பத்திரம் மூலமாக காங்கிரஸுக்கு வந்த நன்கொடை கணிசமாக சரிந்துள்ளது. யாரிடம் எவ்வளவு நிதி பெற்றோம் என்ற விவரம் காங்கிரஸ் அளித்துள்ள ஆவணத்தில் நேரடியாக குறிப்பிடப்படவில்லை. திமுக எவ்வளவு நிதி பெற்றது? பட மூலாதாரம்,GETTY IMAGES தமிழ்நாட்டின் ஆளுங்கட்சியான திமுக தேர்தல் பத்திரம் மூலமாக ரூ. 656.5 கோடி பெற்றுள்ளது. இதில் பெருந்தொகையை லாட்டரி அதிபர் மார்ட்டினுக்குச் சொந்தமான ஃப்யூச்சர் கேமிங் நிறுவனமே வழங்கியுள்ளது. 2019 முதல் நவம்பர் 14, 2023 வரை பல்வேறு கட்டங்களாக இந்த நிறுவனம் ரூ.509 கோடியை திமுகவிற்கு வழங்கி உள்ளது. உச்சபட்சமாக 2021 - 2022 நிதியாண்டில் ரூ. 249 கோடியை இந்த நிறுவனம் வழங்கி உள்ளது. அதிமுக எவ்வளவு நிதி பெற்றது? தமிழ்நாட்டின் எதிர்க்கட்சியான அதிமுக தேர்தல் பத்திரம் மூலம் ரூ.6.05 கோடி நிதி பெற்றுள்ளது. இது ஏப்ரல் 2, 2019 முதல் நவம்பர் 10, 2023 வரை பெறப்பட்ட தொகை. இதில் ரூ.5 கோடியை சென்னை சூப்பர் கிங்ஸ் கிரிக்கெட் அணி நிர்வாகமே வழங்கியுள்ளது. திமுக மீது எடப்பாடி பழனிசாமி விமர்சனம் பட மூலாதாரம்,GETTY IMAGES லாட்டரி அதிபர் மார்ட்டினுக்குச் சொந்தமான ப்யூச்சர் கேமிங் நிறுவனத்திடம் இருந்து ரூ.509 கோடி ரூபாய் நன்கொடை பெற்றதற்காக, திமுக கடும் விமர்சனங்களை எதிர்கொண்டுள்ளது. அந்த வகையில், அதிமுக பொதுச் செயலாளரும் சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிக்கையில், “நிர்வாகத் திறனற்ற திமுக ஆட்சியில் ஆன்லைன் ரம்மி தடைச் சட்டம் குறித்து பெயரளவில் மட்டும் நடவடிக்கைகள் எடுப்பதுபோல காட்டிவிட்டு, வலுவில்லாத சட்டத்தை இயற்றி, மறுபுறம் மக்களின் உயிரையே பணயம் வைக்கும் சூதாட்ட நிறுவனத்திடம் பணம் பெற்றிருப்பது வெட்கக்கேடானது” என தெரிவித்துள்ளார். ஃப்யூச்சர் கேமிங் நிறுவனத்திடம் நிதி பெற்றது தொடர்பாக எழுந்துள்ள விமர்சனம் குறித்து, திமுக செய்தித் தொடர்பாளர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் பிபிசி தமிழிடம் பேசுகையில், “ஆன்லைன் ரம்மியை தடை செய்ய வேண்டும் என போராடியது திமுக. அதற்கென வலுவான சட்டத்திற்காக சட்டப் போராட்டை முன்னெடுத்ததும் திமுக. ஆன்லைன் ரம்மி விளையாட்டை நடத்துபவர்கள் ஆளுநரை சென்று பார்த்தனர். அதற்கு அதிமுக சிறிய கண்டனத்தைக் கூட தெரிவிக்கவில்லை. திமுக மீது அதிமுக வீண் குற்றச்சாட்டு சுமத்துகிறது” என்றார். மேலும், அந்நிறுவனத்திடமிருந்து நிதி வாங்கியதை திமுக மறுக்கவில்லை என்றும் எனினும் அந்நிறுவனம் ஆதாயம் பெறும் வகையிலான செயலில் திமுக ஈடுபடவில்லை என்றும் அவர் கூறினார். தேர்தல் பத்திரம் தொடர்பாக பாஜக மீது சுமத்தப்படும் குற்றச்சாட்டுகள், திமுக மீதான விமர்சனத்தால் நீர்த்துப் போகிறதா என்ற கேள்விக்கு பதிலளித்த அவர், “தேர்தல் பத்திரங்கள் திட்டமிடப்பட்ட கொள்ளை. ரிசர்வ் வங்கி சட்டம் உட்பட பல்வேறு சட்டங்களை மாற்றியமைத்துதான் இதனை பாஜக கொண்டு வந்தது. இது அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிரானது என உச்ச நீதிமன்றம் கூறியிருக்கிறது. வருமான வரித்துறையோ அல்லது அமலாக்கத்துறையோ சோதனை நடத்திய பிறகு குறிப்பிட்ட நிறுவனங்கள் பாஜகவுக்கு நிதி அளித்திருக்கின்றன. ஆனால், இந்த விவகாரத்தில் குறிப்பிட்ட நிறுவனம் ஆதாயம் பெறும் வகையில் தமிழக அரசு எதுவும் செய்யவில்லை” என்றார். தேர்தலில் தாக்கத்தை ஏற்படுத்துமா? தேர்தல் பத்திர விவகாரம் தேர்தலில் எதிரொலிக்குமா, பாஜக, 'இந்தியா' கூட்டணி இதை எப்படி கையாள்கின்றன என்பது குறித்து பிபிசி தமிழிடம் பேசினார், மூத்த பத்திரிகையாளர் ஏ.எஸ். பன்னீர்செல்வன். “தேர்தல் நிதி ரகசியமாக இருக்க வேண்டும் என்ற விஷயத்திற்குள் பாஜக சென்றது ஏன்? அமலாக்கத்துறை, வருமான வரித்துறை சோதனைகளுக்கும் நிறுவனங்கள் தங்களுக்கு நிதி வழங்கியதையும் பொருத்திப் பார்க்கக் கூடாது என, மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறலாம். ஆனால், இந்த விவகாரத்தில் தேர்தல் பத்திரத்தைக் கொண்டு வந்த பாஜகவுக்கு பெரும் பொறுப்பு இருக்கிறது” என்றார். மேலும், “மற்ற கட்சிகள் பணம் வாங்கவில்லையா என கேட்கலாம். எல்லா கட்சிகளுக்கும் பணம் வேண்டும். தேர்தல் பத்திரம் தான் ஒரே வழி எனும்போது மற்ற கட்சிகள் எந்த வழியில் நிதியை பெறும்? ஒவ்வொரு தன்னாட்சி பெற்ற நிறுவனங்களும் இந்த ஆட்சியில் நீர்த்துப் போய்விட்டன. அப்படி இந்த விஷயத்தில் பாரத ஸ்டேட் பேங்க் நீர்த்துப் போய்விட்டது. தேர்தலில் இது எப்படி எதிரொலிக்கும் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்" என்கிறார். https://www.bbc.com/tamil/articles/c3glj9zg17ro
  19. நாளை மேலும் அதிகரிக்கும் வெப்பநிலை! Published By: VISHNU 17 MAR, 2024 | 09:12 PM நாட்டின் பல பகுதிகளில் வெப்பநிலை திங்கட்கிழமை (18) கவனத்துக்குரிய மட்டத்துக்கு மேலும் அதிகரிக்கும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதன்படி, வடமேற்கு, வடமத்திய, கிழக்கு, மேல் மாகாணங்களிலும் மொனராகலை, மன்னார், இரத்தினபுரி மற்றும் வவுனியா மாவட்டங்களின் சில இடங்களில் மனித உடலால் உணரப்படும் வெப்பம் கவனத்துக்குரிய அளவில் இருக்கும் என திணைக்களம் தெரிவித்துள்ளது. இதன்படி, போதியளவு தண்ணீர் அருந்துதல், நிழலான பகுதிகளில் இயன்றவரை ஓய்வெடுத்தல், கடுமையான வெளிச் செயற்பாடுகளை கட்டுப்படுத்துதல் போன்ற சுகாதார ஆலோசனைகளை மக்கள் பின்பற்ற வேண்டும் என திணைக்களம் தெரிவித்துள்ளது. https://www.virakesari.lk/article/178961
  20. மகளிர் பிறீமியர் லீக் கிரிக்கெட்டில் புதிய சம்பியன் யார்? டெல்ஹி - பெங்களூர் இறுதிப் போட்டி இன்று 17 MAR, 2024 | 01:29 PM (நெவில் அன்தனி) இந்தியாவில் நடைபெற்றுவரும் இரண்டாவது மகளிர் பிறீமியர் லீக் கிரிக்கெட் போட்டியில் புதிய சம்பியனைத் தீர்மானிக்கவுள்ள டெல்ஹி கெப்பிட்டல்ஸ் அணிக்கும் றோயல் செலஞ்சர்ஸ் அணிக்கும் இடையிலான இறுதிப் போட்டி டெல்ஹி, அருண் ஜய்ட்லி கிரிக்கெட் விளையாட்டரங்கில் ஞாயிற்றுக்கிழமை (17) இரவு மின்னொளியில் நடைபெறவுள்ளது. ஐந்து அணிகள் பங்குபற்றிய மகளிர் பிறீமியர் லீக் இரண்டாவது அத்தியாயத்தில் 8 போட்டிகளில் 6 வெற்றிகள், 2 தோல்விகளுடன் 12 புள்ளிகளைப் பெற்று முதலிடத்தை அடைந்ததன் மூலம் டெல்ஹி கெப்பிட்டல்ஸ் நேரடியாக இறுதிப் போட்டியில் விளையாட தகுதிபெற்றது. இரண்டாம் இடத்தைப் பெற்ற நடப்பு சம்பியன் மும்பை இண்டியன்ஸுக்கும் மூன்றாம் இடத்தைப் பெற்ற றோயல் செலஞ்சர்ஸ் பெங்களூருக்கும் இடையில் நடைபெற்ற நீக்கல் போட்டியில் றோயல் செலஞ்சர்ஸ் பெங்களூர் 5 ஓட்டங்களால் வெற்றிபெற்று இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. டெல்ஹி கெப்பிட்டல்ஸ், றோயல் செலஞ்சர்ஸ் பெங்களூர் ஆகிய இரண்டு அணிகளும் சமபலம் கொண்டவை என்பதால் இன்றைய இறுதிப் போட்டி ஆரம்பம் முதல் கடைசிவரை பரபரப்பையும் விறுவிறுப்பையும் தோற்றுவிக்கும் என எதிர்பார்க்கப்டுகிறது. மேலும் இந்தப் போட்டியைக் கண்டுகளிக்க பெருந்திரளான இரசிகர்கள் அரங்கில் நிரம்பி வழிவர் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. மும்பை இண்டியன்ஸிடம் கடந்த வருடம் தோல்வி அடைந்து சம்பியன் பட்டத்தைத் தவறவிட்ட டெல்ஹி கெப்பிட்டல்ஸ் இரண்டாவது நேரடித் தடவையாக இறுதிப் போட்டியில் விளையாடுகிறது. மறுபக்கத்தில் ஆரம்ப போட்டிகள் இரண்டில் வெற்றிபெற்ற றோயல் செலஞ்சர்ஸ் பெங்களூர் அதன் பின்னர் இடையில் தோல்விகளைத் தழுவி தடுமாற்றம் அடைந்தது. எனினும் நடப்பு சம்பியன் மும்பை இண்டியன்ஸை இரண்டு தடவைகள் வெற்றிகொண்டதன் மூலம் இறுதிப் போட்டி வாய்ப்பை உறுதி செய்துகொண்டது. மகளிர் பிறீமியர் லீக் கிரிக்கெட் கடந்த வருடம் அங்குரார்ப்பணம் செய்யப்படுவதற்கு முன்னர் 2008இலிருந்து 3 அணிகளுக்கு இடையிலான விமென்ஸ் ரி20 செலஞ் கிரிக்கெட் போட்டி நடைபெற்றுவந்தது. ஆனால், மகளிர் பிறீமியர் லீக் கிரிக்கெட் போட்டி பெண்களுக்கான முதன்மையான தொழில்சார் கிரிக்கெட் போட்டியாக நடத்தப்பட்டு வருகிறது. இரண்டு அணிகளினதும் உரிமையாளர்கள் அதிசிறந்த வீராங்கனைகளை உள்வாங்குவதற்காக பெருந்தொகை நிதியை முதலீடு செய்துள்ளதுடன் இம்முறை என்ன விலை கொடுத்தேனும் வெற்றிபெறுவதற்கு முயற்சிக்கவுள்ளனர். டெல்ஹி அணியில் தலைவி மெக் லெனிங் (4 அரைச் சதங்களுடன் 308 ஓட்டங்கள்), ஷபாலி வர்மா (3 அரைச் சதங்களுடன் 265), ஜெமிமா ரொட்றிக்ஸ் (2 அரைச் சதங்களுடன் 235), அலிஸ் கெப்சி (ஒரு அரைச் சதத்துடன் 230) ஆகியோர் துடுப்பாட்டத்தில் வெகுவாக பிரகாசித்துள்ளனர். இந்த நால்வரும் தம்மிடையே 124 பவுண்டறிகளையும் 35 சிக்ஸ்களையும் விளாசியுள்ளதன் மூலம் தங்களது அதிரடி ஆட்டத்திறனை வெளிப்படுத்தியுள்ளனர். பந்துவீச்சில் மாரிஸ்ஆன் கெப் (11 விக்கெட்கள்), ஜெசிக்கா ஜோனாசன் (11), ராதா யாதவ் (10), அருந்ததி ரெட்டி (8), ஷிக்கா சுபாஸ் பாண்டி (8) ஆகியோர் சிறப்பாக செயற்பட்டனர். றோயல் செலஞ்சர்ஸ் பெங்களூர் அணியிலும் சிறந்த பல வீராங்கனைகள் இடம்பெறுகின்றனர். எலிஸ் பெரி (2 அரைச் சதங்களுடன் 312 ஓட்டங்கள்), அணித் தலைவி ஸ்ம்ரித்தி மந்தனா (2 அரைச் சதங்களுடன் 269), ரிச்சா கோஷ் (2 அரைச் சதங்களுடன் 240), சப்பினெனி மேகனா (ஒரு அரைச் சதத்துடன் 168) ஆகியோர் துடுப்பாட்டத்தில் திறமையை வெளிப்படுத்தியுள்ளனர். ஆஷா ஷோபனா (10 விக்கெட்கள்), ஸ்ரீயன்கா ராஜேஷ் பட்டில் (9), சொஃபி மொலிநொக்ஸ் (9), எலிஸ் பெரி (7), ஜோர்ஜியா வெயாஹம் (7) ஆகியோர் சிறப்பாக பந்துவீச்சில் ஈடுபட்டுள்ளனர். அணிகள் டெல்ஹி கெப்பிட்டல்ஸ்: மெக் லெனிங் (தலைவி), ஷஃபாலி வர்மா, அலிஸ் கெப்சி, ஜெமிமா ரொட்றிக்ஸ், ஜெஸ் ஜொனாசன், மாரிஸ்ஆன் கெப், மின்னு மானி, தானியா பாட்டியா, ராதா யாதவ், அருந்ததி ரெட்டி, ஷிக்கா பாண்டி. றோயல் செலஞ்சர்ஸ் பெங்களூர்: ஸ்ம்ரித்தி மந்தனா (தலைவி), சொஃபி டிவைன், எலிஸ் பெரி, சப்பினெனி மேகனா அல்லது டிஷா கசாத், ரிச்சா கோஷ், சொஃபி மொலினொக்ஸ், ஜோர்ஜியா வெயாஹம், ஸ்ரீயன்கா பட்டில், ரேனுகா சிங், ஆஷா சோபனா, ஷ்ரத்தா பொக்கர்கார் அல்லது எக்டா பிஷ்ட். https://www.virakesari.lk/article/178940
  21. ஜனாதிபதி புலமைப் பரிசில் திட்டத்துக்கான விண்ணப்பங்களை ஏற்றுக் கொள்ளும் கால எல்லை நீடிப்பு! 17 MAR, 2024 | 03:14 PM பொருளாதார நெருக்கடியில் உள்ள பிள்ளைகளுக்கு உதவும் வகையில் ஆரம்பிக்கப்பட்ட “ஜனாதிபதி புலமைப்பரிசில் திட்டம் 2024/25”க்கான விண்ணப்பங்களை ஏற்றுக் கொள்ளும் கால எல்லை ஏப்ரல் 1ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி அலுவலகம் தெரிவித்துள்ளது. தரம் 1 முதல் தரம் 11 வரை பாடசாலைகளில் கல்வி கற்கும் மாணவர்களை ஊக்குவிக்கும் நோக்கில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் கருத்தின் அடிப்படையில் இந்த புலமைப்பரிசில் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. www.facebook.com/president.fund என்ற இணையத்தளத்தின் ஊடாக ஜனாதிபதி நிதியத்தின் உத்தியோகபூர்வ முகநூல் பக்கத்திலிருந்து மேலதிக தகவல்களைப் பெற்றுக்கொள்ள முடியும் எனவும் ஜனாதிபதி அலுவலகம் மேலும் தெரிவித்துள்ளது. https://www.virakesari.lk/article/178950
  22. 17 MAR, 2024 | 03:18 PM தலைக்கவசம் அணியாது மோட்டார் சைக்கிளில் சென்று விபத்தில் இளைஞன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். பளைப் பகுதியை 21 வயதுடைய இளைஞனே விபத்தில் உயிரிழந்துள்ளார். கடந்த 11 ஆம் திகதி மோட்டார் சைக்கிள் விபத்தில் தலையில் படுகாயமடைந்த நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். தலைக்கவசம் அணியாத நிலையில் மோட்டார் சைக்கிளை செலுத்தி விபத்துக்குள்ளானதால் தான் தலையில் படுகாயம் ஏற்பட்டது என மரண விசாரணையின் போது தெரிய வந்துள்ளது. https://www.virakesari.lk/article/178949
  23. 17 MAR, 2024 | 02:57 PM சட்டவிரோதமான முறையில் மாட்டை இறைச்சியாக்கிய குற்றச்சாட்டில் முன்னாள் பொலிஸ் உத்தியோகஸ்தரை கைது செய்ய பொலிஸார் நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளனர். வடமராட்சி புலோலி பகுதியில் வீடொன்றில் வைத்து சட்டவிரோதமான முறையில் மாடொன்று இறைச்சியாக்கபடுவதாக பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில், குறித்த வீட்டுக்கு பொலிஸார் விரைந்திருந்தனர். பொலிஸாரை கண்டதும் மாட்டை இறைச்சியாக்கி கொண்டிருந்த நபர் வீட்டிலிருந்து தப்பிச் சென்றுள்ளார். அதனை அடுத்து இறைச்சியை மீட்ட பொலிஸார் , வீட்டின் உரிமையாளரான தப்பியோடியவரின் தாயாரை கைது செய்தனர். கைது செய்யப்பட்டவரை விசாரணைகளின் பின்னர் பருத்தித்துறை நீதிவான் நீதிமன்றில் ஆஜபடுத்தியபோது , அவரை செவ்வாய்க்கிழமை வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு மன்று உத்தரவிட்டுள்ளது. இதேவேளை தப்பியோடிய நபர் , முன்னாள் பொலிஸ் உத்தியோகஸ்தர் எனவும் , பொலிஸ் உத்தியோகஸ்தராக கடமையாற்றிய கால பகுதியில் சிறுமி ஒருவரை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாகிய குற்றச்சாட்டில் பணியிடை நீக்கம் செய்யப்பட்டவர்வும் என பொலிஸார் தெரிவித்தனர். https://www.virakesari.lk/article/178946
  24. 17 MAR, 2024 | 02:04 PM (லியோ நிரோஷ தர்ஷன்) உத்தேச தேசிய தேர்தல்களை மையப்படுத்தி ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஸ்தாபகர் பஷில் ராஜபக்ஷவுக்கும் இடையிலான பேச்சுவார்த்தைகள் சுமூகமானதாக அமையவில்லை. இவ்வாறானதொரு நிலையில் ஜனாதிபதி தேர்தல் முதலில் இடம்பெறுமேயானால் ரணில் விக்கிரமசிங்கவுக்கான ஆதரவை வாபஸ் பெற்று, தனித்து வேட்பாளர் ஒருவரை களமிறக்க தீர்மானித்துள்ளது. இந்த தீர்மானம் ஜனாதிபதிக்கும் தெரியப்படுத்தப்பட்டுள்ளது. இதேவேளை, அவ்வாறு ஜனாதிபதி வேட்பாளர் ஒருவரை தனித்து பொதுஜன பெரமுன களமிறக்கும் பட்சித்தில் அவர், ராஜபக்ஷ ஒருவராக இருக்க மாட்டார் என்ற ஒருமித்த இணக்கப்பாடும் எட்டப்பட்டுள்ளது. ஜனாதிபதி ரணிலுக்கும், பஷில் ராஜபக்ஷவுக்கும் இடையில் இடம்பெற்ற அண்மைய சந்திப்பு இருதரப்பு உறவில் கடும் விரிசலை ஏற்படுத்தியுள்ளது. மஹிந்த ராஜபக்ஷ மாத்திரமன்றி அன்றைய சந்திப்பில் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவின் இளைய சகோதரரான யோஷித ராஜபக்ஷவும் கலந்துகொண்டிருந்ததாக விசேட தகவல் மூலம் குறிப்பிட்டது. இந்த இருதரப்பு கலந்துரையாடல் முழு அளவில் உத்தேச தேர்தல்களை மையப்படுத்தியதாகவே அமைந்தது. பாராளுமன்ற தேர்தலை முதலில் நடத்த வேண்டும் என்ற அழுத்தத்தை பஷில் ராஜபக்ஷ கடுமையாக முன்வைத்திருந்தார். ஆனால், ஜனாதிபதி சில விடயங்களை குறிப்பிட்டு, அரசியலமைப்பின் பிரகாரம் தேர்தல்கள் இடம்பெற வேண்டும் என்றும், முதலில் ஜனாதிபதி தேர்தல் ஊடாக தாம் விரும்பும் தலைவரை தெரிவு செய்யும் உரிமையை மக்களுக்கு வழங்கப்பட வேண்டும். இதுவே இன்றைய சூழலில் சிறந்தது என்ற விடயத்தையும் தெளிவுப்படுத்தியிருந்தார். ஆனால், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன இதனை மறுதளித்து பாராளுமன்ற தேர்தலை வலியுறுத்தியது. மறுபுறம் பொதுஜன பெரமுனவுக்குள் ஏற்பட்டுள்ள கடும் பிளவுகளுக்கு ஜனாதிபதி ரணிலின் அணுகல்கள் பிரதான காரணம் என்ற விடயமும் கட்சியின் உள்ளக கலந்துரையாடல்களில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இவ்வாறானதொரு நிலையிலேயே ஜனாதிபதி தேர்தல் முதலில் நடப்படுமாயின், பொதுஜன பெரமுன ஜனாதிபதி ரணிலுக்கான ஆதரவை வாபஸ் பெற்று தனித்து வேட்பாளரை களமிறக்க தீர்மானித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/178944
  25. நாடாளுமன்ற தேர்தல்: ஏப்ரல் 19 முதல் 7 கட்டங்களாக வாக்குப்பதிவு - தமிழ்நாட்டில் எப்போது? பட மூலாதாரம்,ANI 16 மார்ச் 2024 இந்தியாவின் 18வது மக்களவைத் தேர்தலுக்கான அட்டவணையையும், நான்கு மாநில சட்டசபை தேர்தலுக்கான அட்டவணையையும் தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. அதன்படி, 2024ஆம் ஆண்டுக்கான மக்களவைத் தேர்தல் ஏப்ரல் 19ஆம் தேதி தொடங்குகிறது. வாக்கு எண்ணிக்கை ஜூன் 4ஆம் தேதி நடைபெறும். ஏப்ரல் 19ஆம் தேதி தொடங்கி ஜூன் 1 வரை மொத்தம் ஏழு கட்டங்களாக தேர்தல் நடைபெறும். தமிழ்நாடு முழுக்க ஒரே கட்டமாக ஏப்ரல் 19-ம் தேதி வாக்குப்பதிவு நடைபெறும். தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதுமே நாடு முழுவதும் தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துவிட்டன. பட மூலாதாரம்,GETTY IMAGES ஏழு கட்டங்களாக வாக்குப்பதிவு ஏப்ரல் 19 நடைபெறும் முதல் கட்ட வாக்குப் பதிவில் தமிழ்நாடு, கேரளா, தெலுங்கானா, ஆந்திர பிரதேசம், புதுச்சேரி, பஞ்சாப், குஜராத் உள்பட 22 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு தேர்தல் நடத்தப்படும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. மீதமுள்ள இடங்களுக்கு ஆறு கட்டங்களாக தேர்தல் நடைபெறும். இரண்டாம் கட்டம் ஏப்ரல் 26 அன்றும், மூன்றாம் கட்டம் மே 7 அன்றும், நான்காம் கட்டம் மே 13, ஐந்தாம் கட்ட வாக்குப் பதிவு மே 20 அன்றும், ஆறாம் கட்டம் மே 25 அன்றும், இறுதியாக ஏழாம் கட்ட வாக்குப் பதிவு ஜூன் 1 அன்றும் நடைபெறும். வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 அன்று நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. தேர்தல் அட்டவணைப்படி, தமிழ்நாட்டில் ஏப்ரல் 19-ம் தேதி வாக்களிக்கும் மக்கள், தேர்தல் முடிவை தெரிந்து கொள்ள 45 நாட்கள் காத்திருக்க வேண்டும். ஜூன் 4-ம் தேதியன்றே வாக்கு எண்ணிக்கை நடைபெற்று, தேர்தல் முடிவுகள் வெளியாகும். பட மூலாதாரம்,GETTY IMAGES இதில் குறிப்பாக கர்நாடகா மற்றும் மணிப்பூர் மாநிலங்களுக்கு இரண்டாம் கட்டத்திலும், ஜம்மு காஷ்மீர் மாநிலத்திற்கு ஐந்தாம் கட்டத்திலும், நாட்டின் அதிக தொகுதிகளைக் கொண்ட மாநிலமான உத்தர பிரதேசத்திற்கு ஏழாம் கட்டத்திலும் வாக்குப் பதிவுகள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 97 கோடி வாக்காளர்கள் “2024 மக்களவைத் தேர்தலில் 10.5 லட்சம் வாக்குச்சாவடிகள் அமைக்கப்படும், அதில் 55 லட்சம் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தப்பட உள்ளன. அதிகாரிகள், ஊழியர்கள், காவலர்கள் என 1.5 கோடி பேர் தேர்தல் பணியில் ஈடுபடுத்தப்படுவார்கள்” எனக் கூறினார் தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார். தொடர்ந்து பேசிய அவர், “இந்த தேர்தலில் 97 கோடி மக்கள் வாக்களிக்கப் போகிறார்கள். இதில் பெண் வாக்காளர்களின் எண்ணிக்கை 47.15 கோடி. மேலும் 1.82 கோடி வாக்காளர்கள் முதல்முறையாக வாக்களிக்க உள்ளனர். 21 முதல் 30 வயதுக்குட்பட்ட வாக்காளர்கள் 19.7 கோடி பேர். மேலும் 82 லட்சம் வாக்காளர்கள் 85 வயதுக்கு மேற்பட்டவர்கள். 85 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கும் 40 சதவீத குறைபாடுகள் கொண்ட மாற்றுத்திறனாளிகளுக்கும் வீட்டிலிருந்தே வாக்களிக்க வசதிகள் செய்து தரப்படும்” என தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் செய்தியாளர்களிடம் கூறினார். ஒவ்வொரு ஐந்து ஆண்டுகளுக்கும் ஒருமுறை இந்தியாவின் 543 தொகுதிகளுக்கும் தேர்தல் ஆணையத்தால் நடத்தப்படும் மக்களவைத் தேர்தல் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவாகப் பார்க்கப்படுகிறது. தேர்தல் தேதி இன்று அறிவிக்கப்பட்டதால், இந்திய அரசியல் களத்தில் கட்சிகளின் அனல் பறக்கும் பிரசாரங்கள் விரைவில் தொடங்கிவிடும். தொகுதிகளின் அடிப்படையில், உத்தர பிரதேசத்தில் அதிகபட்சமாக 80 தொகுதிகளும், மகாராஷ்டிராவில் 48, மேற்கு வங்கத்தில் 42, பிகாரில் 40 மற்றும் தமிழ்நாட்டில் 39 தொகுதிகளும் உள்ளன. இந்தத் தேர்தலில் பாரதிய ஜனதா, காங்கிரஸ், சிபிஎம், பகுஜன் சமாஜ், தேசிய மக்கள் கட்சி (வடகிழக்கில் பி.ஏ.சங்மாவால் தொடங்கப்பட்டது, வடகிழக்கில் தேசியக் கட்சி என்ற அந்தஸ்தை பெற்ற முதல் கட்சி) ஆம் ஆத்மி என ஆறு தேசியக் கட்சிகள் தேர்தல் களத்தில் உள்ளனர். என்டிஏ கூட்டணி Vs இந்தியா கூட்டணி பட மூலாதாரம்,GETTY IMAGES இந்தத் தேர்தல், நரேந்திர மோதி தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கும் (NDA) இந்தியா கூட்டணிக்கும் இடையிலான போட்டியாகத் தான் பார்க்கப்படுகிறது. தேசிய ஜனநாயகக் கூட்டணி மூன்றாவது முறையாக நரேந்திர மோதியின் தலைமையில் தேர்தலில் போட்டியிடுகிறது. அதே நேரத்தில் இந்தியா கூட்டணியில் அத்தகைய ஒற்றைத் தலைமை இல்லை. தேசியக் கட்சிகளில், பகுஜன் சமாஜ் கட்சியைத் தவிர, அனைத்துக் கட்சிகளும் ஏதோ ஒரு கூட்டணியில் அங்கம் வகிக்கின்றன. பாரதிய ஜனதா கட்சி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் பிஏ சங்கமாவின் தேசிய மக்கள் கட்சி, நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளம், சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம், ஏக்நாத் ஷிண்டேவின் சிவசேனா, அஜித் பவாரின் என்சிபி, ஜெயந்த் சவுத்ரியின் ராஷ்ட்ரிய லோக் தளம் மற்றும் எச்டி தேவகவுடாவின் ஜனதா தளம் ஆகியவை அடங்கும். இந்தியா கூட்டணியில், காங்கிரஸ் தவிர, இடதுசாரிக் கட்சிகள், லாலு பிரசாத் யாதவின் ராஷ்ட்ரிய ஜனதா தளம், அகிலேஷ் யாதவின் சமாஜ்வாதி, திமுக, ஹேமந்த் சோரனின் ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா, உத்தவ் தாக்கரே குழுவின் சிவசேனா, சரத் பவாரின் என்சிபி, ஆம் ஆத்மி கட்சி உட்பட சுமார் இரண்டு டஜன் பேர் சேர்க்கப்பட்டுள்ளனர். இருப்பினும், மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ், மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சி, நவீன் பட்நாயக்கின் பிஜு ஜனதா தளம் ஆகிய கட்சிகள் கூட்டணி குறித்த தெளிவான அறிவிப்புகளை இதுவரை வெளியிடவில்லை. 17வது மக்களவையின் முக்கிய நிகழ்வுகள் பட மூலாதாரம்,GETTY IMAGES கடந்த 2019ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் சுமார் 90 கோடி மக்கள் வாக்காளர் பட்டியலில் இடம் பெற்றிருந்தனர். 2014 பொதுத் தேர்தலுடன் ஒப்பிடுகையில், 8 கோடியே 43 லட்சம் புதிய வாக்காளர்களுக்கு தங்கள் வாக்குரிமையைப் பயன்படுத்த வாய்ப்பு கிடைத்தது. இருப்பினும், சுமார் 69.40 கோடி வாக்காளர்கள் மட்டுமே தேர்தலில் வாக்களித்தனர். இதில் 45 சதவீத வாக்குகளை என்டிஏ கூட்டணியும், சுமார் 26 சதவீத வாக்குகளை காங்கிரஸ் தலைமையிலான யுபிஏ கூட்டணியும் பெற்றது. இதில் 17வது மக்களவையின் மிகவும் சிறப்பு வாய்ந்த விஷயம் என்னவென்றால், 78 பெண்கள் மக்களவைக்கு தேர்வு செய்யப்பட்டனர். சுதந்திரத்திற்குப் பிறகு அமைக்கப்பட்ட மக்களவைகளில் அதிக எண்ணிக்கையிலான பெண் உறுப்பினர்கள் கொண்ட அவை இதுதான். இது தவிர, 2019ஆம் ஆண்டில், 267 உறுப்பினர்கள் முதல் முறையாக மக்களவைக்கு தேர்வு செய்யப்பட்டனர். அதேநேரம் 475 எம்.பி.க்கள் ரூபாய் 1 கோடிக்கு மேல் சொத்து வைத்திருந்தனர். 17வது மக்களவையின் எம்.பி.க்களின் சராசரி சொத்து மதிப்பு ரூபாய் 20 கோடிக்கும் அதிகமாக இருக்கும் என மதிப்பிடப்பட்டது. 17வது மக்களவையின்போது, 16 சதவீத மசோதாக்கள் மட்டுமே, நாடாளுமன்ற குழுக்களுக்கு அனுப்பப்பட்டன. பாதிக்கு மேற்பட்ட மசோதாக்கள், இரண்டு மணிநேர விவாதத்தில் நிறைவேற்றப்பட்டன. கடந்த ஐந்து ஆண்டுகளில், ஒவ்வோர் ஆண்டும் சராசரியாக 55 நாட்கள் மட்டுமே நாடாளுமன்றம் செயல்பட்டுள்ளது. மணிப்பூரில் நடந்த வன்முறை விவகாரம் தொடர்பாகப் பலமுறை மக்களவை ஒத்தி வைக்கப்பட்டது. நாடாளுமன்றத்தின் பாதுகாப்பில் ஏற்பட்ட குறைபாடு காரணமாக டிசம்பர் 12, 2023 அன்று பார்வையாளர்களின் கேலரிமாடத்தில் இருந்து இரண்டு பேர் குதித்த சம்பவமும் நடந்தது. 2019இல் எத்தனை கட்டங்களாக தேர்தல் நடத்தப்பட்டது? முன்னதாக, 17வது மக்களவை அமைப்பதற்கான வாக்குப்பதிவு இந்தியாவில் ஏப்ரல் 11, 2019 முதல் மே 19, 2019 வரை ஏழு கட்டங்களாக நடைபெற்றது. அந்தத் தேர்தலில், உத்தர பிரதேசம், மேற்கு வங்கம், பிகார் ஆகிய மூன்று பெரிய மாநிலங்களிலும் ஏழு கட்டங்களாக வாக்குப்பதிவு நடத்தப்பட்டது. 2019 தேர்தல் முடிவுகள் மே 23 அன்று அறிவிக்கப்பட்டன, இதில் நரேந்திர மோதி தலைமையிலான என்டிஏ கூட்டணி மொத்தம் 353 இடங்களில் வெற்றி பெற்றது. பாரதிய ஜனதா கட்சி மட்டும் 303 இடங்களில் வெற்றி பெற்றது. காங்கிரஸ் கட்சிக்கு 52 இடங்கள் கிடைத்தன. காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி 92 இடங்களை கைப்பற்றியது. பட மூலாதாரம்,GETTY IMAGES எத்தனை மக்களவை தொகுதிகளுக்கு தேர்தல் நடத்தப்படுகிறது? இந்திய அரசமைப்புச் சட்டத்தின் 83வது பிரிவின்படி, மக்களவை தேர்தல் ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்பட வேண்டும். அரசமைப்புச் சட்டத்தின்படி, அதிகபட்ச மக்களவைத் தொகுதிகளின் எண்ணிக்கை 552 ஆக இருக்கலாம். தற்போது மக்களவைத் தொகுதிகளின் எண்ணிக்கை 545. இதில் அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 543 இடங்களுக்கு பொதுத் தேர்தல்கள் நடத்தப்படுகின்றன. இதைத் தவிர்த்து, மக்களவையில் ஆங்கிலோ-இந்திய சமுதாய மக்களின் பிரதிநிதித்துவம் போதுமானதாக இல்லை என்று குடியரசுத் தலைவர் கருதினால், அவர் இரண்டு பேரை பரிந்துரைக்கலாம். மொத்த தொகுதிகளில் 131 மக்களவைத் தொகுதிகள் தனியாக ஒதுக்கப்பட்டுள்ளன. இந்த 131 இடங்களில் 84 இடங்கள் பட்டியல் சாதியினருக்கும், 47 இடங்கள் பழங்குடியினருக்கும் ஒதுக்கப்பட்டுள்ளன. அதாவது, பட்டியல் சாதி மற்றும் பழங்குடியினர் மட்டுமே இந்தத் தொகுதிகளில் தேர்தலில் போட்டியிட முடியும். பட மூலாதாரம்,GETTY IMAGES எந்த கட்சி ஆட்சி அமைக்க முடியும்? பெரும்பான்மைக்கு எந்த கட்சிக்கும் குறைந்தது 272 இடங்கள் தேவை. பெரும்பான்மைக்கு சில இடங்கள் குறைந்தாலும் மற்ற கட்சிகளுடன் கூட்டணி அமைத்து ஆட்சி அமைக்கலாம். அரசியல் கட்சிகளின் கூட்டணி தேர்தலுக்கு முன்பும், முடிவுகளுக்குப் பிறகும்கூட நடக்கலாம். மக்களவையில் எதிர்க்கட்சி என்ற அந்தஸ்த்தைப் பெற, எதிர்க்கட்சி மொத்த இடங்களின் எண்ணிக்கையில் 10 சதவீதம் அதாவது 55 இடங்களைக் கொண்டிருக்க வேண்டும். 2014 பொதுத் தேர்தலில் பிரதான எதிர்க்கட்சியான காங்கிரஸ் 44 இடங்களை மட்டுமே பெற முடிந்தது. 2019இல் கூட காங்கிரசால் 55 இடங்களை பெற முடியவில்லை. பட மூலாதாரம்,GETTY IMAGES வேட்பாளர்களை அறிவித்த தேசிய கட்சிகள் இந்த மாதத்தின் தொடக்கத்தில் இருந்தே தேசியக் கட்சிகள் தங்களது வேட்பாளர்களை அறிவித்து வருகின்றன. ஆளும் கட்சியான பாஜக, 195 வேட்பாளர்கள் அடங்கிய முதல்கட்ட பட்டியலை மார்ச் 2ஆம் தேதி வெளியிட்டது. அதில் பிரதமர் மோதி மீண்டும் வாரணாசி தொகுதியில் போட்டியிட உள்ளதாக அறிவிக்கப்பட்டது. அவர் மூன்றாவது முறையாக வாரணாசி தொகுதியில் போட்டியிடுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா குஜராத்தின் காந்தி நகர் தொகுதியில் போட்டியிடுவார் என்றும் அறிவிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து மார்ச் 13ஆம் தேதி பாஜக சார்பில் 72 தொகுதிகளுக்கான 2ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டது. அதில் மத்திய அமைச்சர்களான நிதின் கட்கரி மற்றும் பியூஷ் கோயல் ஆகியோர் மகாராஷ்டிராவின் நாக்பூரிலும், மும்பையின் வடக்கு தொகுதியிலும் போட்டியிடுவார்கள் என்று அறிவிக்கப்பட்டது. இந்திய தேசிய காங்கிரசின் முதல் கட்ட வேட்பாளர் பட்டியல் மார்ச் 8ஆம் தேதி வெளியிடப்பட்டது. தெலங்கானா, கர்நாடகா, கேரளா, சத்தீஸ்கர், மேகாலயா, நாகலாந்து, சிக்கிம் ஆகிய மாநிலங்களின் 39 தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்களின் பட்டியல் வெளியிடப்பட்டது. வயநாட்டில் மீண்டும் போட்டியிடும் ராகுல் காந்தி பட மூலாதாரம்,GETTY IMAGES அதில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கேரளாவின் வயநாடு தொகுதியில் இருந்து மீண்டும் போட்டியிடுவார் எனத் தெரிவிக்கப்பட்டது. கடந்த 2019ஆம் ஆண்டு நடைபெற்ற மக்களவை தேர்தலிலும் வயநாடு தொகுதியில்தான் போட்டியிட்டு வெற்றி பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது. முன்னாள் மத்திய அமைச்சர் சசிதரூர் கேராளாவின் திருவனந்தபுரத்திலும், அகில இந்திய காங்கிரஸ் பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபால் ஆலப்புழா தொகுதியிலும் போட்டியிடுவார்கள் என்று அறிவிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து 43 மக்களவைத் தொகுதிகளுக்கான 2வது வேட்பாளர் பட்டியலை மார்ச் 15 வெளியிட்டது காங்கிரஸ். கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் உள்ளிட்டோர் பட்டியலை வெளியிட்டனர். தமிழ்நாட்டில் நிலவரம் என்ன? தமிழ்நாட்டில் திமுக, அதிமுக, பாஜக ஆகிய கட்சிகள் பிற கட்சிகளுடன் கூட்டணி அமைத்து தேர்தலைச் சந்திக்கின்றன. நாம் தமிழர் கட்சி இந்த மக்களவைத் தேர்தலில் தனித்து போட்டியிடுகிறது. அதிமுக மற்றும் பாஜகவில் கூட்டணி பேச்சுவார்த்தைகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு தமிழ்நாட்டில் 9 தொகுதிகளும், புதுச்சேரியில் ஒரு தொகுதியும் ஒதுக்கப்பட்டுள்ளது. விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கு சிதம்பரம், விழுப்புரம் ஆகிய இரண்டு தொகுதிகளும், மார்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு தலா 2 தொகுதிகள், இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சிக்கு ராமநாதபுரம் தொகுதி, கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சிக்கு ஒரு தொகுதி, மதிமுகவுக்கு ஒரு தொகுதி என ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. https://www.bbc.com/tamil/articles/cp30z2x1rg2o

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.