இன்று ஆடிப்பிறப்பு. ஆடி மாதம் முதலாம் திகதி தமிழர்கள் ஆடிக்கூழ் குடிப்பது வழக்கம்.
ஆடிப்பிறப்புக்கு நாளை விடுதலை
ஆனந்த மானந்தம் தோழர்களே!
கூடிப்பனங்கட்டி கூழுங் குடிக்கலாம்
கொழுக்கட்டை தின்னலாம் தோழர்களே!
பாசிப்பயறு வறுத்துக்குத்திச் செந்நெல்
பச்சை அரிசி இடித்துத் தெள்ளி,
வாசப்பருப்பை அவித்துக்கொண்டு நல்ல
மாவைப் பதமாய் வறுத்தெடுத்து,
வேண்டிய தேங்காய் உடைத்துத் துருவியே
வேலூரில் சக்கரையுங்கலந்து,
தோண்டியில் நீர்விட்டு மாவை அதிற்கொட்டி
சுற்றிக் குழைத்துத் திரட்டிக்கொண்டு.
வில்லை வில்லையாக மாவைக் கிள்ளித்தட்டி
வெல்லக் கலவையை உள்ளே இட்டு
பல்லுக் கொழுக்கட்டை அம்மா அவிப்பளே
பார்க்கப் பார்க்கப் பசி தீர்ந்திடுமே!
பூவைத் துருவிப் பிழிந்து பனங்கட்டி
போட்டு மாவுண்டை பயறுமிட்டு
மாவைக் கரைத்தம்மா வார்த்துத் துழாவுவள்
மணக்க மணக வாயூறிடுமே
குங்குமப் பொட்டிட்டு பூமாஇலை சூடியே
குத்து விளக்குக் கொளுத்தி வைத்து
அங்கிளநீர் பழம் பாக்குடன் வெற்றிலை
ஆடிப் பாடிப்பும் படைப்போமே
வன்னப் பலாவிலை ஓடிப்பொறுக்கியே
வந்து மடித்ததைக் கோலிக்கொண்டு
அன்னை அகப்பையால் அள்ளி அள்ளி வார்க்க
ஆடிப் புதுக்கூழ் குடிப்போமே
வாழைப் பழத்தை உரித்துத் தின்போம் நல்ல
மாவின் மாவின் பழத்தை அறுத்துத் தின்போம்
கூழைச் சுடச் சுட ஊதிக்குடித்துக்
கொழுக்கட்டை தன்னைக் கடிப்போமே
ஆடிப்பிறப்புக்கு நாளை விடுதலை
ஆனந்த மானந்தந் தோழர்களே
கூடிப் பனங்கட்டிக் கூழுங் குடிக்கலாம்
கொழுக்கட்டை தின்னலாம் தோழர்களே!
-நவாலி சோமசுந்திரப்புலவர்
எங்கள் வீட்டில் ஆடிக்கூழ் கட்டாயமிருக்கும். எனக்கு ஒரு சின்ன வருத்தம். ஈழத் தமிழர்கள் பாரம்பரியமாக ஆடிமாதத்தில் முதலாம் திகதி ஆடிக்கூழ் காட்சி உண்ணுவது வழக்கம். ஆனால் புலத்தில் இப்பொழுது மிகவும் குறைவானவர்களே ஆடிக்கூழ் காட்சுவது வழக்கம். தமிழர்களின் பாரம்பரிய உணவு முறைகள்/விழாக்கள் புலத்தில் குறைந்து வெள்ளைக்காரர்களினைப் பார்த்து காதலர் தினம், அன்னையர் தினம், தந்தையர் தினம் (ஈழத்தமிழர்களுக்கு ஒவ்வொரு நாளும் அன்னையர் தினம், தாயார் தினம் கொண்டாடப்பட வேண்டும்),இன்னும் பல தினங்கள்(21 வயது வந்தவுடன் நடக்கும் களியாட்டங்கள்) தமிழர்கள் கொண்டாடுகிறார்கள். தமிழர்களின் பாரம்பரக்கலையான பறைமேளம், நாதஸ்வரம், மேளம் போன்றவற்றினை சாதி என்ற பெயரில் ஒதுக்கிவிட்டு, மிருதங்கம் கற்பதற்கும், பிள்ளைகளுக்கு தமிழ் கற்பிக்காமல் , தெழுங்கு கீர்த்தனை, நாட்டியங்களுக்கு அதிக அளவில் முக்கியத்துவம் கொடுக்கிறார்கள். தமிழ்ப் பெயர்களினை பிள்ளைகளுக்கு சூட்டாமல், வெள்ளைக்காரர்கள் கூப்பிடுவதற்கு இலகுவாக தமிழ் அல்லாத பெயர்களினை பிள்ளைகளுக்கு சூட்டுகிறார்கள்.