Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Everything posted by ரஞ்சித்

  1. இலங்கையரசாங்கம் முன்வைத்த தீர்வுத்திட்டத்தினை முற்றாக நிராகரித்து, நான்கு அம்சக் கோரிக்கையின் அடிப்படையிலான தீர்வினை கோரிய தமிழ்த் தரப்பு நான்காம் நாள் பேச்சுக்கள் பெரும் குழப்பத்திற்குள் நுழைந்தன. ஜெயவர்த்தன இன்னொரு சதியைத் திட்டமிட்டு அரங்கேற்றினார். பொலீஸாரைக் கொண்டு அரங்கேற்றப்பட்ட இச்சதியில் கொழும்பில் குண்டுத்தாக்குதலில் ஈடுபட வந்திருந்த ஈரோஸ் அமைப்பின் உறுப்பினர்களைத் தாம் கைதுசெய்திருப்பதாக ஜெயார் தெரிவித்தார். ஜனாதிபதி மாளிகைக்கு அண்மையாக சுற்றித்திருந்த இரு இளைஞர்களைக் கைதுசெய்து விசாரித்தவேளை அவர்கள் ஜனாதிபதியைக் கொல்வதற்காக ஈரோஸ் தலைமைப் பீடத்தால் அனுப்பிவைக்கப்பட்டிருப்பதை ஒத்துக்கொண்டதாக பொலீஸார் அறிவித்தனர். ஜெயாரின் திட்டத்தின்படி, கொழும்பு ஊடகங்களும் இச்செய்தியை பெரும் எடுப்பில் வெளியிட்டிருந்தன. இதனைச் செய்தியாக்கும்போது டெயிலி நியுஸ் காரியாலயத்தில் இருந்த உற்சாககத்தினை நேரடியாக நாண் கண்டேன். மறுநாள் ஆசிரியர்த் தலையங்கம் "முறியடிக்கப்பட்ட ஜனாதிபதி மீதான படுகொலை முயற்சி" என்று வெளியாகியிருந்தது. தன்மீதான இந்தப் பழியை சோடிக்கப்பட்ட புரளி என்று ஈரோஸ் தலைமைப்பீடம் அறிவித்தது. பொதுத் தபாலகத்திற்குச் சென்றுகொண்டிருந்த இரு அப்பாவிகளைக் கைதுசெய்து, கடுமையான சித்திரவதைகளின் பின்னர் பொய்யான வாக்குமூலம் ஒன்றினை கொடுக்க வைத்தே பொலீஸார் இந்த நாடகத்தினை ஆடுகிறார்கள் என்று ஈரோஸ் அமைப்பு விளக்கியிருந்தது. நான்காம் நாள் பேச்சுக்கள் ஆரம்பமாகிய வேளை, அரசாங்கத்தின் பொய்யான வதந்திகுறித்து ஈரோஸ் அமைப்பினரும் ஏனைய தமிழ்ப் பிரதிநிதிகளும் தமது ஆட்சேபணையைத் தெரிவித்தார்கள். "இது ஜெயாரின் புரளி" என்றும் அதனை அழைத்தார்கள். அன்றைய நாளின் பெரும்பகுதி யுத்தநிறுத்த மீறல்கள் குறித்து ஒருவரையொருவர் சாடுவதிலேயே கழிந்தது. யுத்தநிறுத்த மீறல்கள் குறித்த வாக்குவாதங்கள் முடிவடைந்த பின்னர் பேசிய ஹெக்டர் ஜெயவர்த்தன தான் முன்வைத்துள்ள யோசனைகளை அதிகாரப் பரவலாக்கத்திற்கான அடிப்படையாக வைத்து செயற்பட முடியும் என்று கூறினார். அதற்குப் பதிலளித்த தமிழ்த் தரப்பு, அதிகாரங்கள், அதிகாரப் பரவலாக்கத்திற்கான அலகு, அரசாங்கத்தின் கட்டமைப்பு என்பன குறித்த சிக்கல்கள் தீர்க்கப்பட வேண்டும் என்றும், தமிழர்கள் எதிர்பார்க்கும் அதிகாரங்களுக்கும், அரசால் முன்வைக்கப்படும் அதிகாரங்களுக்கும் இடையே பாரியளவு இடைவெளி காணப்படுவதாகவும் விமர்சித்தனர். பேச்சுக்கள் முறிவடைவதைத் தவிர்ப்பதற்காக இந்திய அரசாங்கம் தனது வெளிநாட்டமைச்சர் ரொமேஷ் பண்டாரியை திம்புவிற்கு அனுப்பியது. இரு தரப்பினருடனும் ரொமேஷ் பண்டாரி ஒன்றன் பின் ஒன்றாக பல சந்திப்புக்களை நடத்தினார்.தமிழர் தரப்புடன் பேசிய பண்டாரி, அரசாங்கம் முன்வைத்திருக்கும் தீர்வு ஆலோசனையினை நிராகரிப்பதாகவும், ஒன்றுபட்ட இலங்கைக்குள் தமிழர்களின் அபிலாஷைகளை தீர்க்கக்கூடிய புதியதொரு தீர்வுத்திட்டத்துடன் அரசு வரவேண்டும் என்கிற கோரிக்கையினையும் முன்வைத்து அறிக்கையொன்றினை வெளியிடுமாறு கேட்டுக்கொண்டார். இதன்மூலம் அன்று முறிவடைய‌ இருந்த பேச்சுக்களை அவரால் நீட்டிக்க முடிந்தது. பேச்சுவார்த்தையின் ஐந்தாம் நாளான ஆடி 12 ஆம் திகதி தமிழ்ப் பிரதிநிதிகள் ஒன்றிணைந்து அரசு முன்வைத்திருக்கும் தீர்வுக்கான ஆலோசனைகளை நிராகரிப்பதாக அறிக்கையொன்றினை வெளியிட்டனர். அறிக்கை வெளியிடப்பட முன்னர் தமிழ் மக்களைஅவமானப்படுத்தும் விதமாக இலங்கைஅயரசாங்கம் தனது தீர்வு யோசனையினை முன்வைத்திருப்பதாகவும் அவர்கள் குற்றஞ்சாட்டினர். அமிர்தலிங்கம் ஒருபடி மேலே சென்று, அரசு முன்வைத்திருக்கும் யோசனைகளை ஏற்றுக்கொள்ளமுடியாது என்று கூறினார். தமிழ்ப் பிரதிநிதிகள் சார்பாக டெலோ அமைப்பின் சார்ள்ஸ் அறிக்கையினை சமர்ப்பித்தார். தொடர்ச்சியாக ஆட்சிக்கு வந்த சிங்கள அரசாங்கங்களுக்கு தமிழரின் அபிலாஷைகள் குறித்த எமது கோரிக்கைகளை ஜனநாயக வழியில் புரியப்படுத்த முடியாமையினாலேயே நாம் ஆயுதம் தூக்கவேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டோம். மேலும், எமது தேசியம் மீதான சிங்கள அரசுகளின் ஒடுக்குமுறையும், எம் மக்கள் மீது கட்டவிழ்த்துவிடப்பட்டிருக்கும் அரச பயங்கரவாதமும், எம் மக்கள் மீதான இனவழிப்பும் அடக்குமுறைக்குள்ளாக்கப்பட்டிருக்கும் எம் மக்களுக்கான தர்க்கரீதியான ஒரே தீர்வு தனிநாடுதான் என்கிற நிலைமைக்கு எம்மைக் கொண்டுவந்து விட்டிருக்கிறது. இதன் தர்க்கரீதியான வெளிப்பாடே ஆயுதப்போராட்டம் என்றால் அது மிகையில்லை. ஆனாலும், இலங்கையரசாங்கம் நியாயமான, ஏற்றுக்கொள்ளக்கூடிய தீர்வொன்றினை முன்வைக்கும் பட்சத்தில் அமைதியான அத்தீர்வினை பரிசீலிக்க தமிழ் மக்கள் தயாராகவே இருக்கிறார்கள். ஏனென்றால், தமிழ் மக்கள் அமைதியினை விரும்பும் ஒரு மக்கள் கூட்டமாகும். சிறிலங்கா அரசாங்கத்தினால் முன்வைக்கப்பட்டிருக்கும் தீர்வு ஆலோசனைகள் எந்தவிதத்திலும் நேர்மையானதாகவோ, அமைதியை ஏற்படுத்தும் முகாந்திரங்களையோ கொண்டிருக்கவில்லை என்பதை எம்மால் உணர்ந்துகொள்ளமுடிகிறது. முதலாவதாக, சிறிலங்கா அரச பிரதிநிதிகள் குழுவின் தலைவர் தனது உரையில், இந்தத் தீர்வு ஆலோசனைகள் கடந்த வருடம் நடைபெற்ற சர்வகட்சி மாநாட்டில் இலங்கையரசாங்கத்தால் தீர்மானிக்கப்பட்ட ஆலோசனைகள் என்று திட்டவட்டமாகக் கூறிவிட்டார். ஆனால், பின்வரும் காரணங்களுக்காக சர்வகட்சி மாநாட்டினை நாம் முற்றாக நிராகரித்திருக்கிறோம், முதலாவதாக, சர்வகட்சி மாநாட்டில் பங்குகொண்ட தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணி, சர்வகட்சி மாநாடு குழப்பகரமான நிலையில் முடிவிற்குக் கொண்டுவரப்பட்டவுடன் வெளியிட்ட அறிக்கையில் அதிகாரம் மிக்க பிராந்தியம் எனும் அடிப்படையில் தமிழ் மக்கள் ஏற்றுக்கொள்ளக்கூடிய தீர்விற்கு அருகில்க் கூட சர்வக‌ட்சி மாநாட்டில் அரசால் முன்வைக்கப்பட்ட தீர்வு வரவில்லை என்பதைத் தெளிவாகக் கூறியிருந்தது. இரண்டாவதாக, ஒரு விடுதலைப் போராட்ட அமைப்பு என்கிற வகையில், நவ பாஸிஸ இலங்கையரசு, தமிழ் மக்களின் அபிலாஷைகளுக்கு இராணுவ ரீதியில் தீர்வினை வழங்கவே சர்வகட்சி மாநாட்டினை போர்வையாகப் பாவித்தது என்பதனை ஐயம் திரிபுற நம்புகிறோம். மேலும், ஈழத்திற்கான தேசியப் பிரச்சினையினை இலங்கையரசாங்கம் இதுவரையில் புரிந்துகொள்ளவில்லை என்பதையே அது இங்கு முன்வைத்திருக்கும் தீர்வு சுட்டிக் காட்டுகிறது. அதற்கான காரணங்களை நாம் முன்வைக்கிறோம், 1. அரசாங்கம் முன்வைத்திருக்கும் தீர்வில் தமிழ் மக்கள் ஒரு தேசமாக அங்கீகரிக்கப்படவில்லை. ஆனால், தமிழ் மக்களால் எவ்விதத்திலும் ஏற்றுக்கொள்ளப்பட முடியாத மாவட்ட ரீதியிலான அதிகாரப் பரவலாக்க அலகினை அரசு முன்வைத்திருக்கிறது. 2. அரசு முனைத்திருக்கும் தீர்வு, தமிழ் மக்களினதோ அல்லது சிங்கள மக்களினதோ சுயநிர்ணய உரிமையினை புறக்கணித்திருப்பதுடன், சர்வஜன வாக்கெடுப்பு ஒன்றின்மூலமாகவோ அல்லது அதையொத்த இன்னொரு வாக்கெடுப்பு ஒன்றின்மூலமாகவோ தீர்வினை மக்கள் முன் கொண்டுசெல்லும் வழிவகையினைக் கொண்டிருக்கவில்லை. மக்களின் விருப்பினை நிராகரித்திருக்கும் அரசாங்கம், பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையினைக் கொண்டு அரசியல் சட்டத்தில் திருத்தத்தினைச் செய்யலாம் என்று கூறுகிறது.இப்படிச் செய்வதனூடாக மக்கள் மீது அரசியல் யாப்பின் அடைப்படையில் உருவாக்கப்படவிருக்கும் சர்வாதிகாரத்தைத் திணிக்க முயல்கிறது. ஆகவே, இந்த நிலையில் மேற்கொண்டு பேச்சுக்களில் ஈடுபடுவதில் பயனில்லை என்கிற நிலைப்பாட்டிற்கு நாம் வந்திருப்பதுடன், நாடு இன்றிருக்கும் இக்கட்டான நிலைக்குக் காரணமாகியிருக்கும் அரசாங்கமே தமிழ் மக்களால் ஏற்றுக்கொள்ளப்படக்கூடிய நேர்மையானதும், அவர்களின் அபிலாஷைகளைப் பூர்த்தி செய்யக்கூடியதுமான தீர்வினை முன்வைக்க வேண்டும் என்றும் கோருகிறோம். நிரந்தர சமாதானத்தினைக் கருத்தில்க் கொண்டு, தமிழ் மக்களால் பரிசீலித்துப் பார்க்கக் கூடிய தீர்வொன்றுடன் மீண்டும் இலங்கையரச பிரதிநிதிகள் குழு பேச்சுவார்த்தைகளுக்குத் திரும்பவேண்டும் என்கிற தீர்க்கமான கோரிக்கையினை நாம் முன்வைக்கிறோம். ஜனாதிபதி ஜெயாரைப் படுகொலை செய்ய எத்தனித்ததாக தம்மீது முன்வைக்கப்பட்ட அரசின் குற்றச்சட்டிற்கெதிரான தனது அதிருப்தியினை ஈரோஸ் அமைப்பு எழுத்துமூல அறிக்கையொன்றின் ஊடாக வெளியிட்டது. இந்தியாவின் ரொமேஷ் பண்டாரி பேச்சுவார்த்தைக்குழுக்களுக்கான விருந்துபசராம் ஒன்றினை வழங்கினார். பேச்சுவார்த்தையின் இறுதிநாளான ஆடி 13 ஆம் திகதி அரச தரப்புப் பிரதிநிதிகளுடன் பேசிய தமிழ்த் தரப்பு தமிழ் மக்களால் ஏற்றுக்கொள்ளக்கூடிய புதிய‌ தீர்வொன்றுடன் அடுத்த கட்டப் பேச்சுவார்த்தைக்கு வருமாறு அழைப்பு விடுத்ததுடன் தமிழ் மக்களால் ஏற்றுக்கொள்ளப்படக்கூடிய தீர்வு அமையவேண்டிய அடிப்படைகள் குறித்து தனது நிலைப்பாட்டினையும் முன்வைத்தது. பேச்சுவார்த்தைக் குழுக்கள் இணைந்து வெளியிட்ட சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த திம்புப் பிரகடணம் இவ்வாறு அமைந்திருந்தது, தமிழ்த் தரப்பு முன்வைத்த பிரகடணம், தமிழ்த் தேசிய பிரச்சினைக்கான அரத்தபுஷ்ட்டியான தீர்வு பின்வரும் நான்கு அடிப்படை விடயங்களை உள்ளடக்கியதாக இருக்கவேண்டும் என்று நாம் கருதுகிறோம், 1. இலங்கைத் தமிழர்களைத் தனியான தேசமாக அங்கீகரிப்பது 2. இலங்கையில் தமிழருக்கென்று தனியான தாயகம் இருப்பதை அடையாளம் காண்பதும் அதனை அங்கீகரிப்பதும் 3. தமிழ்த் தேசத்தின் சுயநிர்ணய உரிமையினை அங்கீகரிப்பது 4. இலங்கையில் வாழும் அனைத்துத் தமிழர்களினதும் குடியுரிமை மற்றும் அடிப்படை உரிமைகளை அங்கீகரிப்பது பல்வேறு நாடுகள் தமக்கு உகந்த செயற்திட்டங்கள் ஊடாக இந்த அடிப்படைகள் ஏற்றுக்கொள்ளப்படுவதனை உறுதிப்படுத்தியிருக்கின்றன. தமிழ் மக்களுக்கான அடிப்படை உரிமைகள் நிராகரிக்கப்பட்டமையினாலேயே அதற்குத் தீர்வாக தனிநாட்டினை முன்வைத்துப் போராடி வருகிறோம். தமிழ் மக்களின் தேசியப் பிரச்சினைக்கான தீர்வாக இலங்கையரசாங்கம் முன்வைத்திருக்கும் தீர்வினை எம்மால் எக்காரணம் கொண்டும் ஏற்றுக்கொள்ள முடியாது என்பதை திட்டவட்டமாகக் கூறிக்கொள்கிறோம். ஆகவே, 1985 ஆம் ஆண்டு ஆடி மாதம் 12 ஆம் திகதி நாம் வெளியிட்ட அறிக்கையின்படி இலங்கையரசாங்கம் இங்கு முன்வைத்திருக்கும் தீர்வு யோசனைகளை நாம் முற்றாக நிராகரிக்கிறோம். ஆனாலும், அமைதிக்கான வழிகளைத் தேடும் மக்கள் கூட்டம் எனும் அடிப்படையில், நாம் மேலே குறிப்பிட்ட நான்கு அடிப்படை அம்சங்களை உள்ளடக்கிய புதிய தீர்வு யோசனைகளை இலங்கையரசாங்கம் முன்வைக்கும் பட்சத்தில் அவற்றைப் பரிசீலிர்த்துப் பார்க்கத் தயாராக இருப்பதையும் இங்கு கூறிக்கொள்கிறோம்.
  2. நீங்கள் முதலில் சிங்கள அரசுகளின் தயவிலேயே தமிழ் மக்கள் வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள் என்று கருதுவதை நிறுத்த வேண்டும். ஏனென்றால், தமிழர்களைச் சிங்கள அரசுகள் கைவிட்டு கிட்டத்தட்ட 76 வருடங்கள் ஆகிவிட்டது. சிங்கள அரசுகளுக்கு தமிழர்களின் நலன்களைக் காப்பததைத்தவிர வேறு தலையாய கடமையே இல்லை எனும் ரேஞ்சில் எழுதுகிறீர்கள். தமிழர்களின் வாழ்வாதாரமும், வளமான தாயகமும், மேய்ச்சல் நிலங்களும் நீங்கள் கூறும் அதே சிங்கள அரசுகளாலேயே காவுகொள்ளப்பட்டன. ஆயுதப் போராட்டம் ஆரம்பித்த காலத்திலிருந்தே வடக்கும், வன்னியும், கிழக்கின் புலிகளின் கட்டுப்பாட்டின் கீழான பகுதிகளும் இலங்கை அரசினதும், இராணுவத்தினதும் பூரண பொருளாதாரத் தடைக்குள்ளேயே இருந்துவந்தன. அதற்காக, அங்கிருந்த தமிழர்கள் பட்டிணியால் இறந்துவிடவில்லை. தமது கைகளில் இருந்த வளங்களைக் கொண்டு தமது வாழ்வாதாரத்தைப் பார்த்துக்கொண்டார்கள். வன்னியில் ஓரளவிற்கு தன்னிறைவை அவர்கள் ஒருகட்டத்தில் அடைந்திருந்தார்கள். 2005 முதல் 2009 வரையான காலப்பகுதியில் வன்னிமீது மகிந்த இறுக்காத த‌டையினையா இனிவரும் சிங்களத் தலைவர் இறுக்கப்போகிறார்? சரி, அதை விடுங்கள், 2020 ‍- 2022 வரையான கொரோணாப் பகுதியில் மொத்த நாடுமே வீதிக்கு வந்தபோது வடக்கும் கிழக்கும் தம்மைத் தாமே பார்த்துக்கொண்டன. நிரந்தரமாகவே சிங்கள அரசுகளின் பொருளாதாரத் தடையினை முகம்கொடுத்துவரும் தமிழ்ச் சமூகம் தன்னை மீண்டும் சுய பொருளாதாரத்திற்கு மாற்றிக்கொள்ள அவர்களின் முன்னைய அனுபவம் கைகொடுத்தது. 80 களின் ஆரம்பத்திலிருந்தே புலம்பெயர் தமிழ்ச் சமூகம் தாயகத்தில் இருக்கும் உறவுகளுக்கு உதவியே வருகின்றன. கிட்டத்தட்ட 40 வருடங்களாக இது தொடர்கிறது. எப்போது நிற்கும் என்று கேட்டால் என்னிடம் பதில் இல்லை. வடக்கிற்கும் கிழக்கிற்கும் இடையே கிடைக்கும் புலம்பெயர் உதவிகளின் அள்வில் ஏற்றத்தாள்வு இருக்கிறது என்பதை நான் மறுக்கவில்லை. மலையகத் தமிழர்கள் நிச்சயமாக தமிழ் வேட்பாளருக்கு வாக்களிக்கப்போவதில்லை. அவர்களது தலைமை நிச்சயம் அவர்களை தான் முடிவெடுக்கும் சிங்கள வேட்பாளருக்கே வாக்களிக்கும்படி பணிக்கும். இலங்கைத் தமிழர்களுக்கும் மலையகத் தமிழர்களுக்குமான அரசியல் தொண்டைமானின் பிரிவிலிருந்தே வேறு பாதையில் பயணிக்கத் தொடங்கிவிட்டன. ஆகவே, புதிதாக வரும் சிங்கள ஜனாதிபதி அவர்களை இக்காரணத்திற்காக வஞ்சிப்பார் என்று நினைக்கவில்லை. உங்களுக்கு ஓவியம் வரையும் திறமை இருப்பது நாம் எல்லோரும் அறிந்ததே. அதற்காக மற்றையவர்களின் கருத்துக்களுக்கு ஓவியம் வரைந்து பதிலளிக்கவேண்டும் என்று கட்டாயம் இல்லை. முடிந்தால் எழுதுங்கள்.
  3. நிச்சயமாக தமிழருக்கும் பாதிப்பு இருக்கும். ஆனால், அதைச் சரிசெய்ய புலம்பெயர் தமிழரின் உதவியிருக்கிறது, பெரும்பாலான தமிழர்களுக்கு, ஓரளவு காலத்திற்காவது. 2004 - 2005 இல் நடந்தது உண்மை, மறுப்பதற்கு எதுவுமில்லை. ரணிலையோ அல்லது சஜித்தையோ ஆதரிக்காமல் விடுவதாலோ அல்லது தமிழ் வேட்பாளரை ஆதரித்து அநுர ஆட்சிக்கு வந்தாலோ, தமிழர் அடையப்போகும் அதியுச்ச பாதிப்பு என்ன? பொருளாதார நிலை சரியும் என்பதைத் தவிர, ஏனைய சிங்களத் தலைவர்களைக் காட்டிலும் அநுர புதிதாக தமிழருக்கு எவ்வகையான அழிவினை ஏற்படுத்திவிடப்போகிறார்? சிங்கள அரசியல்வாதிகளில் நல்லவர் கெட்டவர் என்று வேறுபாடு இருக்கின்றதா? என்னைப்பொறுத்தவரை ரணிலோ, சஜித்தோ, அநுரவோ, எல்லோருமே ஒரே வகையானவர்கள்தான். இவர்களில் எவர் ஆட்சிக்கு வந்தாலும் எமது வாழ்வு மீளப்போவதில்லை. ஆனால், இவர்களில் எவரையுமே நாம் ஆதரிக்கவில்ல என்கிற செய்தியாவது மிச்சமிருக்கும். உண்மை
  4. மேற்குலகின் நண்பனான ரணில் 2005 இல் புலிகளால் தோற்கடிக்கப்பட்ட பின்னர் பதவிக்கு வந்த மகிந்தவுடன் சேர்ந்து அதே மேற்குலகு எம்மை அழிக்கவில்லையா? அதேபோல, ரணில் இம்முறை தோற்கடிக்கப்பட்டாலும் அநுரவுடனோ அல்லது சஜித்துடனோ சேர்ந்து மேற்குலகு வேலை செய்யும்.
  5. 2019 தேர்தல் இத்தேர்தலில் பிரபல சிங்கள பெளத்த இனக்கொலையாளியான கோட்டாபய ராஜபக்ஷவுக்கெதிராகவும், இன்னொரு பெயர்பெற்ற‌ சிங்கள இனவாதியான பிரேமதாசவின் மகனும், பிரேமதாசவை ஒத்த இனவாதியுமான சஜித் பிரேமதாசவுக்குத் தமிழர்கள் வாக்களித்த விதம் கோட்டாபய ராஜபக்ஷ‌ மட்டக்களப்பு : 12.6% யாழ்ப்பாணம் : 6.2% வன்னி : 12.2% திருகோணமலை : 23.3% சராசரி : 13.5% சஜித் பிரேமதாச‌ மட்டக்களப்பு : 78.7% யாழ்ப்பாணம் : 83.36% வன்னி : 82.1% திருகோணமலை : 72% சராசரி : 79.04% அன்று தமிழர்கள் வாக்களித்த அதே சஜித் இன்று தமிழர்களுக்கு எதனையும் கொடுக்கமாட்டேன், பிரிவினையை அனுமதிக்கமாட்டேன், எவராவது மீளவும் ஆயுதப்போராட்டம் குறித்துப் பேசினால் அதனை முளையிலேயே கிள்ளி எறிவேன் என்று இனவாதம் பேசி வருகிறான். இவர்களுள் தமிழர்கள் ஆதவளிக்கக் கூடிய வகையில் இருப்பது யார்? எவர் சிறந்தவர்? தெரியாத பேயை விடவும், தெரிந்த பிசாசு பரவாயில்லை என்று வாக்களிக்கப்போகிறோமா அல்லது, பேயும் வேண்டாம் பிசாசும் வேண்டாம், எமக்கென்று ஒரு பொது வேட்பாளரை நிறுத்தி வாக்களிக்கப்போகிறோமா என்பதை தமிழ் மக்கள் தீர்மானிக்க வேண்டும் !
  6. 2015 தேர்தல் இனக்கொலையாளியான மகிந்த ராஜபக்ஷவுக்கெதிராகவும், அதே இனக்கொலை யுத்தத்தில் அவனது பிரதமராகவும், இறுதிப்போரின் இறுதிநாட்களின்போது மகிந்த வெளிநாடு சென்றிருந்தவேளை நாட்டின் ஜனாதிபதிப் பொறுப்பினைக் கவனித்துக்கொண்ட‌வனுமான மைத்திரிபால சிறிசேனவுக்கு ஆதரவாகவும் தமிழ் மக்கள் வாக்களித்த விதம் மகிந்த ராஜபக்ஷவுக்கான வாக்குகள் யாழ்ப்பாணம் : 21.8% மட்டக்களப்பு : 16.2% திருகோணமலை : 26.6% வன்னி : 19% சராசரி :20.9% மைத்திரிபால சிறிசேனவுக்கான வாக்குகள் யாழ்ப்பாணம் : 74.4% மட்டக்களப்பு : 81.6% திருகோணமலை : 71.8% வன்னி : 78.5% சராசரி : 76.6% 2015 முதல் 2019 வரையான காலப்பகுதியில் தமிழர்கள் தெரிவுசெய்த ஜனாதிபதியான மைத்திரியும், தமிழர்கள் தெரிவுசெய்த பிரதமரான ரணிலும் தமிழர்களுக்கு என்ன செய்தார்கள் என்பது அவர்களுக்கே வெளிச்சம்.
  7. 2010 தேர்தல் ஒரே இனவழிப்பில் தோளுக்குத் தோள் நின்று தமிழர்களைக் கொன்றொழித்த இரு இனக்கொலையாளிகளில் ஒருவனான மகிந்தவுக்கு எதிராகவும், அவனது இராணுவத் தளபதியான சரத் பொன்சேக்காவுக்கு ஆதரவாகவும் தமிழர்கள் வாக்களித்த விதம் கீழே, மகிந்தவுக்கான தமிழரின் வாக்குகள் யாழ்ப்பாணம் : 24.7% வன்னி : 27.3% மட்டக்களப்பு : 26.2% திருகோணமலை : 43% சராசரி : 30.3% சரத் பொன்சேகாவுக்கான வாக்குகள் யாழ்ப்பாணம் : 63.8% வன்னி : 66.8% மட்டக்களப்பு : 68.93% திருகோணமலை : 54% சராசரி : 63.4% இத்தேர்தலில் இனக்கொலையாலியான சரத் பொன்சேக்காவிற்கு வக்களித்ததன் மூலம் தமிழர்கள் சொல்லிய செய்தி : சரத் பொன்சேக்காவின் கூற்றுப்படி 1. இனக்கொலையென்றும், போர்க்குற்றங்கள் என்றும் எதுவுமே நடைபெறவில்லை என்பதை எனக்கு வாக்களித்ததன் மூலம் தமிழர்கள் ஏற்றுக்கொண்டுள்ளார்கள். 2. புலிகளை அழிக்க நான் தலைமையேற்று நடத்திய யுத்தத்தினை தமிழ் மக்கள் வரவேற்றிருக்கிறார்கள்.
  8. 2005 தேர்தல் ஜனாதிபதி : மகிந்த ராஜபக்ஷ‌ (தமிழர்கள் வன்னியில் வாக்களிக்காது விட்டமையினால் தெரிவுசெய்யப்பட்டவர்) யாழ்ப்பாணம் : 25% வன்னி : 20% மட்டக்களப்பு : 18.8% அம்பாறை : 43% திருகோணமலை : 37% சராசரி : 28.76% இதே தேதலில் தமிழர்களால் ஆதரவளிக்கப்பட்ட வேட்பாளர் ரணிக்குக் கிடைத்த வாக்குகள் யாழ்ப்பாணம் : 70% வன்னி : 77% மட்டக்களப்பு : 79.5% அம்பாறை : 55% திருகோணமலை : 61 % சராசரி : 68.5% ஒரு சிங்கள வேட்பாளருக்கு வாக்களிக்காது, இன்னொருவர் ஆட்சிக்கு வர உதவியமையினால் தமிழர்கள் சரித்திரத்தில் கண்டிராத அழிவையும், அவலங்களையும், ஆக்கிரமிப்பையும் இவ்வாட்சிக் காலத்தில் கண்டார்கள்.
  9. 1994 ஆம் ஆண்டு மற்றும் 1999 ஆம் ஆண்டு ஜனாதிபதி : சந்திரிக்கா பண்டாரநாயக்கா குமாரதுங்க‌ யாழ்ப்பாணம் : 96.35% (1994) & 46.65 % (1999) வன்னி : 85.30% (1994) & 25.8% (1999) மட்டக்களப்பு : 87.3% (1994) & 34.7% (1999) திருகோணமலை : 71.6% (1994) & 45% (1999) சராசரி : 85.13% (1994) & 38% (1999) சந்திரிக்காவினால் தமிழர்களுக்கு வழங்கப்பட்ட சலுகைகளின் பட்டியலில் ஒரு சில, 1. முன்னேறிப்பாய்தல் படுகொலைகள் 2. நவாலி சென் பீட்டர்ஸ் தேவாலயப் படுகொலை 3. யாழ்ப்பாண நகரைக் கைப்பற்றியபோது அந்நிய நாடொன்றினைக் கைப்பற்றிய நிகழ்வினை ஒத்த விதத்தில் அனுருத்தை தனது மருமகளும் இராணியுமான சந்திரிக்காவிடம் யாழ்ப்பாணத்திற்கான திறவுகோலினைக் கையளித்தார். 4. செம்மணிப் புதைகுழிகள் 5. கிளிநொச்சி மீதான ஆக்கிரமிப்புப் போர் 6. ஜயசிக்குரு ஆக்கிரமிப்புப் போர் 7. புதுக்குடியிருப்புப் பாடசாலைச் சிறுவர்கள் படுகொலை 8. படுகொலை செய்யப்பட்ட 20,000 தமிழர்கள்
  10. 1956 ஆம் ஆண்டிலிருந்து 2009 ஆம் ஆண்டு வரையான 53 ஆண்டுகளில் கொல்லப்பட்ட தமிழ் மக்களின் எண்ணிக்கை 154,022 இலிருந்து 253,818 ஆக இருக்கலாம் என்று கணிக்கப்பட்டிருக்கிறது. இவற்றுள், 1956 ஆம் ஆண்டிலிருந்து 2001 ஆம் ஆண்டு வரையான 45 ஆண்டுகளில் கொல்லப்பட்ட தமிழர்களின் எண்ணிக்கை 79,155 பேர் ஆகும். இவர்களுள் 54,044 தமிழர்களின் கொலைகள் உறுதிப்படுத்தப்பட்டிருப்பதோடு, மீதி 25,266 பேர் காணாமலாக்கப்பட்டிருக்கிறார்கள். 2002 ஆம் ஆண்டிலிருந்து 2008 ஆம் ஆண்டுவரையான ஆறுவருட காலப்பகுதியில் கொல்லப்பட்ட தமிழர்களின் எண்ணிக்கை 4,867 பேர். இவர்களுள் 3,545 பேரின் கொலைகள் உறுதிப்படுத்தப்பட்டிருப்பதுடன் மீதி 1,322 பேர் காணாமலாக்கப்பட்டிருக்கிறார்கள். 2009 ஆம் ஆண்டின் தை மாதம் முதல் வைகாசி வரையான ஐந்து மாத காலப்பகுதியில் மட்டும் கொல்லப்பட்ட தமிழர்களின் எண்ணிக்கை 169,796 என்று நீதிக்கும், சமாதானத்திற்குமான சர்வதேச மையம் கூறுகிறது. இக்காலத்தில் கொல்லப்பட்ட மற்றும் காணாமலாக்கப்பட்ட தமிழர்களின் எண்ணிக்கை 70,000 இலிருந்து 146,000 ஆக இருக்கலாம் என்று ஐக்கிய நாடுகள் சபையினாலும் மற்றும் முன்னாள் மன்னார் ஆயர் இராயப்பு ஜோசப் ஆண்டகையினாலும் ம‌திப்பிட்டிருக்கிறது. 1956 ஆம் ஆண்டிலிருந்து 2004 ஆம் ஆண்டு வரையான 48 வருட காலத்தில் காயப்படுத்தப்பட்ட தமிழர்களின் எண்ணிக்கை குறைந்தது 61,132 ஆக இருக்கும் என்று மதிப்பிடப்பட்டிருக்கிறது. இதே காலப்பகுதியில் இலங்கை இராணுவத்தாலும், சிங்களப் பொதுமக்களாலும் பாலியல் வன்புணர்வுள்ளாக்கப்பட்ட தமிழ்ப் பெண்களின் எண்ணிக்கை 12,437 பேர் என்று பதிவுசெய்யப்பட்டிருக்கிறது. ஆனால், 2005 இலிருந்து 2009 வரையான காலப்பகுதியிலேயே அதிகளவான உயிரிழப்புக்களும், காணாமற்போதல்களும், பாலியல் வன்புணர்வுகளும், இடப்பெயர்வுகளும் நடைபெற்றிருக்கின்றன. மேலும் 112,246 தமிழர்கள் கடுமையான சித்திரவதைகளுக்கு உள்ளாக்கப்பட்டிருப்பதாக முறைப்பாடு செய்யப்பட்டிருப்பதுடன், 24 இலட்சம் தமிழர்கள் இடம்பெயர்வுக்கு உள்ளாக்கப்பட்டிருக்கின்றனர். தமிழ் மக்கள் மீதான திட்டமிட்ட இனக்கொலையில் இலங்கையை ஆட்சிசெய்த அனைத்து சிங்களத் தலைவர்களும் தமது பங்கினை நல்கியிருக்கிறார்கள். இவர்களுள் எவருமே விதிவிலக்கில்லை. டட்லி சேனநாயக்கா, பண்டாரநாயக்கா, சிறிமா, ஜெயார், பிரேமதாசா, டிங்கிரிபண்டா விஜேதுங்க, சந்திரிக்கா, மகிந்த, மைத்திரிபால சிறிசேன, கோட்டாபய, ரணில் என்று அனைவருமே எம்மீதான இனக்கொலையினை நேரடியாக நடத்தியவர்கள். இவர்களைத் தவிரவும் சிங்கள் இட‌துசாரி இனவாதக் கட்சியான மக்கள் விடுதலை முன்னணி தொடர்ச்சியாகவே தமிழ் மக்கள் மீதான வன்மத்தைக் கக்கி வருவதுடன், தமிழ மக்களின் தாயக் கோட்பாட்டையும் நிர்முலமாக்க முயன்று வருகிறது. நாட்டில் இருப்பது பொருளாதாரப் பிரச்சினையே அன்றி, இனப்பிரச்சினை இல்லையென்றும், தமிழர்களுக்கென்று தனியான பிரச்சினைகள் என்று நாட்டில் எதுவுமே இல்லையென்றும் அது வாதிடுகிறது. ஆகவே, இப்படியான, தமிழ் மக்களின் இனவழிப்பை தமது தாரக மந்திரமாக ஏற்று செயற்பட்டு வரும் எந்தச் சிங்களத் தலைவரையும் தமிழர்கள் எதற்காக இன்னுமொருமுறை தெரிவுசெய்வதில் வாக்களிக்க வேண்டும் என்பதே எனது கேள்வி.
  11. சிங்கள ஜனாதிபதியொருவரே மீளவும் வரப்போகிறார் எனும்போது, அவர்களில் எவரையும் தெரிவிசெய்வதில் தமிழர்கள் அடையப்போகும் நண்மையென்ன? ஒரு சிங்கள ஜனாதிபதியிடமிருந்து, இன்னொரு சிங்கள ஜனாதிபதி தமிழரைப் பொறுத்தவரையில் எந்தவகையில் வேறுபடப்போகிறார்? தமிழர்களின் அரசியல் விடுதலைப் போராட்டச் சரித்திரத்தில் "நல்ல" சிங்கள ஜனாதிபதியாக இதுவரை இருந்தவர்களும் இல்லை, இனிமேலும் இருக்கப்போவதில்லை. அவர்கள் ஆட்சிக்கு வருவதே சிங்கள பெளத்தத்தைப் பாதுகாக்கவும், அதற்குத் தொண்டாற்றவும்தான். சிவாஜிலிங்கத்தை சிவாஜிலிங்கமாகவும், குமார் பொன்னம்பலத்தைக் குமார் பொன்னம்பலமாகவும் தமிழர்கள் பார்த்ததால்த்தான் அவர்களுக்கான ஆதரவு அன்று கிடைக்கவில்லை. தம்மை பொதுவான தமிழ் வேட்பாளராக அடையாளப்படுத்தப் போதுமானவற்றை அவர்களும் செய்யவில்லை, தமிழ் மக்கள் முன்னால் இதற்கான தர்க்கரீதியிலான கருத்துருவாக்கத்தையோ அல்லது இன்று ஏற்பட்டிருப்பதுபோன்ற மக்களின் ஈடுபாட்டையோ அன்று அவர்களால் செய்ய முடியவில்லை. ஆகவே தான் சிவாஜிலிங்கத்தின் முயற்சி ஏளனமாகப் பார்க்கப்பட்டதுடன், குமார் பொன்னம்பலத்தின் முயற்சி கொழும்புத் தமிழர்களுடன் மட்டுமே சுருங்கிவிட்டது என்று நினைக்கிறேன்.
  12. மிகச்சரி. இரண்டுமே ஒரு செய்தியைத்தான் சொல்கின்றன. அதாவது, சிங்கள ஜனாதிபதியொருவரில் தமிழர்களுக்கு நம்பிக்கையில்லை என்பது. ஆனால், இவை இரண்டுமே சிங்கள ஆளும்தரப்பிற்கும் சிங்கள் மக்களுக்கும் ஓரளவிற்கு அதிர்ச்சியையோ , எரிச்சலையோ கொடுக்கவல்லன. தேர்தல்ப் பகிஷ்கரிப்பு என்பது முன்னர், 2005 இல் பரீட்சிக்கப்பட்டதுதான். அதனால் ஏற்பட்ட பின்விளைவுகள் குறித்து பேசவேண்டிய தேவையில்லை. ஆனால், ஒருங்கிணைந்த தமிழ் வேட்பாளர் என்பது புதியது. சிவாஜிலிங்கமோ, குமார் பொன்னம்பலமோ தமிழர்களுடன் இதுகுறித்துச் சரியான வகையில் கருத்துருவாக்கம் ஒன்றினைச் செய்தார்களா என்பது சந்தேகமே. தமிழர் வேட்பாளர் என்றபோதும் கூட, தம்மை முன்னிறுத்தி அவர்கள் வாக்குக் கேட்டது தமிழர்களின் கவனத்தை பெரிதாகப் பெறவில்லையென்றே எண்ணத் தோன்றுகிறது. இருக்கலாம். ஆனால், தமிழர்களுக்கு இன்னமும் பிரச்சினை இருக்கிறது, அவை இன்றுவரை தீர்க்கப்படவில்லை, ஆகவேதான் சிங்களத் தேசிய அரசியலில் இருந்து அவர்கள் விலகி நிற்கிறார்கள் என்கிற செய்தியை நாம் சொல்லமுடியும். ஏனென்றால், 2009 இற்குப் பின்னரான 15 வருடத்தில் எமது அவலங்கள் குறித்துச் சர்வதேசம் பேசுவதை முற்றாக நிறுத்தியிருப்பதாகவே தெரிகிறது.
  13. சிங்கள ஜனாதிபதி : ரணசிங்க பிரேமதாச‌ ஆட்சிக்காலம் : 1988 ‍‍- 1993 தமிழர்கள் அளித்த வாக்குகள் மாவட்ட ரீதியாக மட்டக்களப்பு : 51 % யாழ்ப்பாணம் : 28.034% திருகோணமலை : 45.64% வன்னி : 55.82 % சராசரி : 45.11 % 1988 இலிருந்து 1993 வரையான காலப்பகுதியில் ரணசிங்க பிரேமதாசவினால் கொல்லப்பட்ட தமிழர்களின் எண்ணிக்கை 5100 + https://en.wikipedia.org/wiki/List_of_massacres_in_Sri_Lanka
  14. 1985 ஆம் ஆண்டு தமிழர் தாயகத்தில் ஜெயாரினால் கொல்லப்பட்ட தமிழர்களின் எண்ணிக்கை : 1690 + https://en.wikipedia.org/wiki/List_of_massacres_in_Sri_Lanka 1986 ஆம் ஆண்டு தமிழர் தாயகத்தில் ஜெயாரினால் கொல்லப்பட்ட தமிழர்களின் எண்ணிக்கை : 720 + https://en.wikipedia.org/wiki/List_of_massacres_in_Sri_Lanka 1987 ஆம் ஆண்டு தமிழர் தாயகத்தில் ஜெயாரினால் கொல்லப்பட்ட தமிழர்களின் எண்ணிக்கை : 270 + https://en.wikipedia.org/wiki/List_of_massacres_in_Sri_Lanka
  15. சிங்கள ஜனாதிபதி : ஜே ஆர் ஜெயவர்த்தன‌ ஆட்சிக்காலம் : 1978 ‍- 1988 தமிழர்கள் அளித்த வாக்குகள் மாவட்ட ரீதியாக மட்டக்களப்பு : 40.05 % யாழ்ப்பாணம் : 20.54% திருகோணமலை : 48.64% வன்னி : 46.42 % சராசரி : 38.9125 % ஜெயவர்த்தன நிகழ்த்திய முக்கியமான படுகொலைகளில் சில‌ 1977 தமிழர் மீதான அரச வன்முறை அல்லது கலவரம் : 300+ தமிழர்கள் 1981 இல் நாடுதழுவிய ரீதியில் மேற்கொள்ளப்பட்ட தமிழர் மீதான படுகொலைகள் : 25+ தமிழர்கள் 1983 தின்னைவேலிப் படுகொலை : 60+ தமிழர்கள் 1983 வெலிக்கடைச் சிறைச்சாலைப் படுகொலைகள் : 53 தமிழ் அரசியல்க் கைதிகள் 1983 கறுப்பு ஜூலை இனக்கொலை : 3000+ தமிழர்கள் கொல்லப்பட்டு 125,000 தமிழர்கள் அகதிகளாக்கப்பட்டு, தமிழர்களின் வர்த்தகங்களும், வீடுகளும் சூறையாடப்பட்டு எரிக்கப்பட்டன‌ 1984 வவுனியா சாம்பல்த்தோட்டம் படுகொலைகள் : 70+ தமிழர்கள் 1984 சுன்னாகம் சந்தை மற்றும் பொலீஸ் நிலையப் படுகொலைகள் : 100+ தமிழர்கள் 1984 ஆவணி மன்னார் படுகொலைகள் : 140+ தமிழர்கள் 1984 யாழ்ப்பாணம் கோடைகாலப் படுகொலைகள் : 250+ தமிழர்கள் 1984 வடமராட்சி படுகொலைகள் : 35 + தமிழர்கள் 1984 கார்த்திகை உரும்பிராய்ப் படுகொலைகள் : 60+ தமிழர்கள் 1984 கொழும்பு நோக்கிச் சென்ற பேரூந்து மற்றும் புகையிரதங்கள் மீதான படுகொலைகள் : 100+ தமிழர்கள் 1984 மணலாறு, தென்னைமரவாடி, கொக்கிளாய், கொக்குத்தொடுவாய்ப் படுகொலைகள் : 500 + தமிழர்கள் 1984 மார்கழிப் படுகொலைகள் , வடக்குக் கிழக்கில் : 1200+ தமிழர்கள் 1984 ஒதியாமலை, செட்டிகுளம், சேமமடு படுகொலைகள் : 340+ தமிழர்கள் 1984 வவுனியா இராணுவ முகாம் படுகொலைகள் : 100 + தமிழர்கள் 1984 அமரவயல், மணலாறு, தென்னைமரவாடி படுகொலைகள் : 180 + தமிழர்கள் 1984 மன்னார் மார்கழி படுகொலைகள் : 150 + தமிழர்கள் 1984 மார்கழி வவுனியா படுகொலைகள் : 100 + தமிழர்கள் 1984 மார்கழி மதவாச்சிப் படுகொலைகள் : 60+ தமிழர்கள் 1984 மார்கழி முல்லைத்தீவு படுகொலைகள் : 210 + தமிழர்கள்
  16. ஜனாதிபதித் தேர்தலில் சிங்கள வேட்பாளர் ஒருவருக்கு தமிழர்கள் வாக்களித்துக் கண்ட பலன்கள் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் வேட்பாளர் ஒருவரை முன்னிறுத்துவது குறித்து வடமாகாணத்தில் இயங்கும் 31 சமூக நல அமைப்புக்கள் தீவிரமாக ஆராய்ந்து வருகின்றன. இதன் ஒரு கட்டமாக ஒவ்வொரு தமிழ் மற்றும் சிங்கள அரசியட் கட்சிகளுடனும், சமூக அமைப்புக்களுடனும் இவை பேச்சுக்களில் ஈடுபட்டு வருகின்றன. இவர்களின் முயற்சிக்கு ஆதரவு வழங்குவோர் மீது சிங்கள ஜனாதிபதியொருவருக்கே தமிழர்கள் வாக்களிக்க வேண்டும் என்று கோருபவர்களால் கடுமையான விமர்சனம் வைக்கப்பட்டு வருகிறது. தமிழ் மக்களின் வாக்குகளை இந்த முயற்சி வீணாக்கிவிடும் என்றும், சிங்கள மக்களை கோபப்படுத்தி விடும் என்றும் நியாயம் கற்பிக்கப்படுகிறது. தமிழர்களுக்கென்று தமிழ் ஜனாதிபதி வேட்பாளர் ஒருவர் முன்னிறுத்தப்படுவதை நான் ஆதரிக்கிறேன். அவர் ஜனாதிபதியாக வருவதற்கு சாத்தியமில்லாவிட்டலும் கூட, தமிழர்களின் வாக்குகள் அவருக்குக் கிடைக்கவேண்டும், அதன்மூலம் சிங்களவர்களுக்குச் செய்தியொன்று சொல்லப்படவேண்டும் என்பதற்காகவே ஆதரிக்கிறேன். எம்மை அழித்த இரு சிங்களப் பேரினவாதக் கட்சிகளுக்கும் வாக்களித்து வாக்களித்து அழிவுகளை மட்டுமே இதுவரையில் கண்டிருக்கிறோம் என்பதற்காகவே தமிழர் வேட்பாளர் அவசியம் என்று கருதுகிறேன். தமிழ் வேட்பாளர் தோற்கடிக்கப்பட்டு, மீண்டும் ஒரு சிங்கள பேரினவாதியே ஆட்சிக்கு வரப்போகிறான் என்று தெரிந்தும், அவன் எமது வாக்குகளால் வரக்கூடாது என்பதற்காகவே தமிழ் வேட்பாளரை ஆதரிக்கிறேன். இலங்கையில் முதன்முதலாக ஜனாதிபதித் தேர்தல்கள் 1982 இல் நடக்கத் தொடங்கிய காலத்திலிருந்து அத்தேர்தல்களில் வக்களித்த தமிழர்களின் எண்ணிக்கையினையும், அவர்கள் ஜனாதிபதியாக்கிப் பார்த்த இனக்கொலையாளிகளையும், அந்த இனக்கொலையாளிகளின் ஆட்சிக்காலத்தில் தமிழர்கள் மீது மேற்கொள்ளப்பட்ட முக்கிய படுகொலைகளையும் இங்கு சாராம்சமாகத் தருகிறேன். தமிழ் வேட்பாளர் ஒருவர் அவசியமா இல்லையா என்னும் கேள்வியை உங்களிடம் விட்டு விடுகிறேன்.
  17. மகிந்த எனும் இனக்கொலையாளிக்குப் பாடம் கற்பிக்க எண்ணி பொன்சேக்கா எனும் இன்னொரு இனக்கொலையாளிக்கு வாக்குச் செலுத்தி, அவன் செய்த அக்கிரமங்களை நாம் நியாயப்படுத்தியதை விடவும் தமிழருக்கென்று பொதுவான வேட்பாளரை நிறுத்தி அவரை ஆதரிப்பது எவ்வளவோ மேல்.
  18. அதிகாரங்களற்ற வெற்று மாவட்ட சபைகளை தீர்வாக முன்வைத்த அரசாங்கமும் அதிருப்தியடைந்த தமிழர் தரப்பும் பேச்சுவார்த்தையின் இரண்டாம் நாளின் முதற்பாதி இரு அடிப்படை விடயங்கள் தொடர்பாக விவாதிப்பதில் செலவிடப்பட்டது. தமிழர் தரப்பு முன்வைத்த கேள்வியான பேச்சுக்களில் அரசு கொண்டிருக்கும் ஆர்வம், அரச தரப்பு முன்வைத்த தமிழர் தரப்புப் பிரதிநிதிகளின் சட்டபூர்வ அங்கீகாரம் தொடர்பான கேள்வி, இருதரப்பும் ஒருவர் மீது மற்றையவர் முன்வைத்த யுத்த நிறுத்த மீறல்கள் தொடர்பான குற்றச்சாட்டுக்கள் ஆகியவை விவாதிக்கப்பட்டன. அன்று பிற்பகலில் அரசியல் தீர்வு தொடர்பான கேள்விகள் முன்வைக்கப்பட்டன. அரசாங்கத்தின் தீர்வை "புதிய தீர்வு" எனும் பெயரில் ஹெக்டர் ஜெயவர்த்தன முன்வைத்தார். அரசின் தீர்வினை முன்வைத்துப் பேசிய ஹெக்டர், இறுதித் தீர்வு 1978 ஆம் ஆண்டின் ஒற்றையாட்சிக் கோட்பாட்டினையும், சர்வ அதிகாரம் பொருந்திய ஜனாதிபதி முறைமையினையும் முற்றாக ஏற்றுக்கொண்டதாக அமைதல் அவசியம் என்று கூறினார். மேலும், தான் முன்வைக்கும் தீர்வு 1984 ஆம் ஆண்டு நடைபெற்ற சர்வகட்சி மாநாட்டில் விவாதிக்கப்பட்டு பலராலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட "அதிகாரப் பகிர்வின் அடிப்படையில்" அமைந்திருக்கும் என்றும் கூறினார்.சர்வகட்சி மாநாட்டில் கலந்துரையாடப்பட்ட விடயங்களின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட இரு ஆவணங்களை சபையில் சமர்ப்பித்த ஹெக்டர், தமிழ்த் தரப்பினர் அவற்றைக் கவனமாக படித்து, அரசாங்கத்துடன் சேர்ந்து அத்தீர்வினை அமுல்ப்படுத்த உதவ வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார். ஆனால், அரசு தரப்பு "புதிய தீர்வு" எனும் பெயரில் முன்வைத்த தீர்வு உண்மையிலேயே 1984 ஆம் ஆண்டு மார்கழி 4 ஆம் திகதி ஜெயவர்த்தன முன்வைத்த தீர்வேயன்றி வேறில்லை என்று அமிர்தலிங்கம் குறிப்பிட்டார். ஜெயாரினால் முன்வைக்கப்பட்ட அத்தீர்வு மாவட்ட / பிராந்திய சபைகளுக்கான அதிகாரங்களை எப்படிப் பரவலாக்குவது என்பது குறித்து அரசியலமைப்பில் செய்யப்படக்கூடிய பத்தாவது திருத்தம் குறித்தே பேசியிருந்தது. ஆகவே, இத்தீர்வினை ஜெயார் முன்வைத்தபோதே தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணி அதனை நிராகரித்திருந்ததுடன் தமிழர்களின் அபிலாஷைகளை தீர்க்க அவை எவ்விதத்திலும் போதுமானவை அல்லவென்றும் விமர்சித்திருந்தது என்றும் அமிர்தலிங்கம் கூறினார். திம்பு பேச்சுவார்த்தை மேசை, தமிழர் தரப்பு இடதுபுறத்தில். வலது புறத்தில் சிங்களத் தரப்பு இலங்கை முன்வைத்த தீர்வு நகல் குறித்து மூன்றாம் நாளான ஆடி 10 ஆம் திகதி ஆராய்வது என்று முடிவெடுக்கப்பட்டது. அன்றைய நாள் முடிவடையும்போது பேச்சுக்களில் ஈடுபட்ட இரு தரப்பும் இணைந்து அறிக்கையொன்றினை வெளியிடுவதென்று முடிவானது. அதன்படி 8 பேர் அடங்கிய கூட்டு பேச்சுவார்த்தைக்குழுவில் ஐந்து அரச தரப்புப் பிரதிநிதிகளும், மூன்று தமிழர் தரப்புப் பிரதிநிதிகளும் இடம்பெற்றிருந்தனர். மேலும், பூட்டான் அரசாங்கத்தினூடாகவே இந்தக் கூட்டறிக்கையினை வெளியிடலாம் என்று இக்கூட்டுக் குழு முடிவெடுத்தது. இப்பேச்சுவார்த்தைகளுக்கு கொழும்பு ஊடகங்கள் கொடுத்த முக்கியத்துவம் மூன்றாம் நாள் பேச்சுவார்த்தைகளின்போது சர்ச்சைக்குரிய பேசுபொருளாக மாறியது. கொழும்பிலிருந்து வெளிவரும் ஊடகங்களில் அரச தரப்பினை ஆதரித்தும், நியாயப்படுத்தியுமே செய்திகள் வெளிவந்தமையினால், தமிழர் தரப்பு இதுகுறித்து தனது ஆட்சேபணையினை தெரிவித்தது. குறிப்பாக, தமிழ்ப்பிரதிநிதிகள் தொடர்பாக விளித்தபோது அவர்களைப் பயங்கரவாதிகள் என்றே இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் தொடர்ச்சியாக அழைத்து வந்தது. இதனையடுத்து, இதுகுறித்து தாம் நடவடிக்கை எடுப்பதாக அரசு தரப்பு தெரிவித்தது. மூன்றாம் நாளின் பெரும்பாலான பகுதி அரசுதரப்பு முன்வைத்த தீர்வு தமிழர்களின் அபிலாஷைகளைத் தீர்க்கப் போதுமானவை அல்லவென்று தமிழர் தரப்பு அதன் மீது தனது விமர்சனங்களையும், ஆட்சேபணைகளையும் முன்வைப்பதிலேயே கழிந்தது. அரசு முன்வைத்த தீர்வு மாவட்ட சபைகள் மற்றும் பிராந்திய சபைகளையே அதியுச்ச அதிகாரப் பரவலாக்க அலகுகள் என்று குறிப்பிட்டிருந்ததுடன், கிராம மட்டத்திலான கிராமாதோய சபைகள் தொடங்கி ஐந்து அடுக்கு சபைகள் குறித்தும், இரண்டாம் சபை குறித்தும் அது பேசியது. அரசாங்கத்தின் மிகக் கீழ்மட்ட நிர்வாக அலகுகளாக கிராம சபைகளே இருக்கும். நாடு முழுவதுமாக 4500 கிராம சபைகள் உருவாக்கப்படும். ஒவ்வொரு கிராமத்திலும் இருக்கும் தன்னார்வத் தொண்டு நிறுவனங்களின் உறுப்பினர்கள் கிராம சபைகளில் உறுப்பினராக இணைந்துகொள்ளலாம். அரசியலிலிருந்து விலகி நிர்வகிக்கப்படும் இச்சபைகள் அந்தந்தக் கிராமங்களின் அபிவிருத்தி நடவடிக்கைகளில் மட்டுமே கவனம் செலுத்தும். பிரதேச சபைகள் இரண்டாம் நிலைச் சபைகளாக இருக்கும். உள்ளூர் அரசாங்கத்தின் செயற்பாடுகளை இச்சபைகள் மேற்கொள்ளும். தேர்தல் மூலம் தேர்வுசெய்யப்படும் இச்சபைகள் நாடுமுழுவதும் உள்ள 250 பிரதேசச் சபைச் செயலகத் தொகுதிகளிலும் இருக்கும். மாவட்ட சபைகள் அரசாங்கத்தின் மூன்றாம் நிலை நிர்வாக அலகுகளாக இருக்கும். நாட்டிலிருக்கும் 25 மாவட்டங்களுக்கு தலா ஒவ்வொரு மாவட்ட சபை காணப்படும். மாவட்டத்தில் நடத்தப்படும் தேர்தல்கள் மூலம் இச்சபைகளுக்கான நிர்வாகிகள் தெரிவுசெய்யப்படுவார்கள். இச்சபைகளின் தலைவரும், பிரதித் தலைவரும் வாக்களர்களால் நேரடியாகவே தெரிவுசெய்யப்படலாம். தலைவரின் கீழ் அவருக்கு உதவவென அமைச்சர்கள் குழுவொன்று உருவாக்கப்படும். ஆனால், இந்த அமைச்சர்களை ஜனாதிபதியே நியமிப்பார். மிகவும் மட்டுப்படுத்தப்பட்ட அதிகாரங்களைக் கொண்டிருக்கும் இச்சபைகளின் அமைச்சர்களுக்கான அதிகாரம் கொழும்பிலிருக்கும் தேசிய அமைச்சர்களிடமிருந்து வழங்கப்பட்டதாக இருக்கும். அரசாங்கத்தின் நான்காம் மட்ட அதிகாரப் பரவலாக்கல் அலகுகளாக மாகாணசபைகள் முன்வைக்கப்பட்டன. ஒன்றிற்கு மேற்பட்ட மாவட்ட சபைகளைக் கொண்டு மாகாண சபை அமைக்கப்படும். ஓரிரு மாவட்டங்களில் வசிக்கும் மக்களின் விருப்பு தேர்தல் மூலமாகவோ அல்லது சர்வஜன வாக்கெடுப்பு மூலமாகவோ அறியப்பட்டு மாவட்டசபைகள் இணைக்கப்படலாம். இந்த மாவட்ட சபைகளில் முன்னர் பணியாற்றிய ஊழியர்கள் இணைக்கப்பட்ட மாகாணசபைகளில் பணியாற்றலாம். மாவட்ட சபைகளுக்கு இருக்கும் அதே அதிகாரங்களே மாகாண சபைகளுக்கும் இருக்கும். தேசிய சபைகளே நாட்டின் அதியுயர் அதிகாரப் பரவலாக்கல் சபையாகக் காணப்படும். பாராளுமன்றத்திற்கு அடுத்தநிலையில் இச்சபை காணப்படும் ஆதலால் இது இரண்டாவது சபை என்று அழைக்கப்படும். 75 உறுப்பினர்கள் கொண்ட இந்தச் சபையில் மாவட்ட சபையின் தலைவர்களும் உபதலைவர்களும் 50 இடங்களை நிரப்ப, மீதி 25 இடங்கள் ஜனாதிபதியால் தெரிவுசெய்யப்பட்டவர்களுக்கு வழங்கப்படும். 9 மாவகாணங்களைச் சேர்ந்த சேர்ந்த தலா இருவரும், இன்னும் 7 பேரும் ஜனாதிபதியினால் தெரிவுசெய்ப்படுவர். இச்சபைகள் பாராளுமன்றத்தில் ஆலோசனைகளைப் பரிந்துரை செய்ய மட்டுமே அனுமதி வழங்கப்படும். புதிதாக சட்டங்களை நிறைவேற்றவோ அல்லது பாராளுமன்றத்தினால் நிறைவேற்றப்படும் சட்டங்களைத் தடுக்கும் அதிகாரமோ இவற்றிற்குக் கிடையாது. மாவட்ட சபைகளுக்கான அதிகாரங்கள் வெகு சொற்பமானவை. பாராளுமன்றத்தில் அமைச்சர்களினால் பகிரப்படும் பலமிழக்கப்பட்ட அதிகாரங்களை இவர்கள் பயன்படுத்தலாமேயன்றி, இவர்களால் பாராளுமன்றத்தை மீறிச் செயற்பட முடியாது. சொந்தமாக சட்டமியற்றும் அதிகாரமற்ற இச்சபைகள் பாராளுமன்றத்திடம் தமது தேவைகளைப் பரிந்துரை செய்யலாம். ஆனால், அவை நிராகரிக்கப்படுவதும், அங்கீகரிக்கப்படுவதும் பாராளுமன்றத்தின் கைகளிலேயே இருக்கும். ஹெக்டர் முன்வைத்த ஆவணங்களைத் தான் மேலோட்டமாகப் பார்த்ததாகக் கூறிய சித்தார்த்தன், மாவட்ட சபைகளுக்கென்று அரசாங்கம் வழங்கவிருந்த அதிகாரங்கள் எந்தவித முக்கியத்துவமும் அற்றவையாக இருந்ததாகக் குறிப்பிட்டார். மேலும், அந்த அதிகாரங்களைக் கூட தேவையான போது விலக்கிக்கொள்ளும் அதிகாரம் பாராளுமன்றத்திற்கும், ஜனாதிபதிக்கும் கொடுக்கப்பட்டிருந்தது என்றும் கூறுகிறார். "நாம் அவர்கள் முன்வைத்த பட்டியலைப் பார்வையிட்டோம். எமக்கு அழுவதா சிரிப்பதா என்று தெரியவில்லை. மிகையாகப் புகழப்பட்ட, சோடிக்கப்பட்ட நகர சபைகளையே அரசாங்கம் மாவட்ட சபை அடிப்படையிலான தீர்வு என்று முன்வைத்திருந்தது. நீங்களும் வேண்டுமானால் அதனைப் படித்துப் பார்த்து உங்களின் கருத்தைச் சொல்லுங்கள்" என்று என்னிடம் அந்த நகலைக் கொடுத்தார். ஹெக்டர் முன்வைத்த அரச பரிந்துரைக்கு மிகுந்த அதிருப்தியுடன் பதிலளித்த அமிர்தலிங்கம், "தமிழர்களை இனிமேலும் ஏமாற்ற முயலவேண்டாம்" என்று கூறினார். "மொழிப்பிரச்சினை, கல்வி, வேலைவாய்ப்பு ஆகியவை தொடர்பாக மிக விரிவாக சர்வகட்சி மாநாட்டிலேயே நாம் விவாதித்திருக்கிறோம். நாம் இப்போது செய்யவேண்டிய அதிகாரத்தைப் பரவலாக்குவது குறித்து முடிவெடுப்பதுதான். சர்வகட்சி மாநாட்டில் அரசு முன்வைத்த பரிந்துரைகள் தமிழரின் அபிலாஷைகளை நிறைவேற்ற சிறிதளவிலும் போதுமானவை அல்லவென்பதை நாம் உறுதியாகக் கூறியிருந்தோம். ஆகவே, உங்கள் தீர்வை நீங்கள் மேம்படுத்டுவது அவசியம். ஏற்றுக்கொள்ளக்கூடிய தீர்வொன்று முன்வைக்கப்படும் பட்சத்தில் தமிழர்கள் அதனை பரிசீலித்துப் பார்க்கத் தயாராக இருக்கிறார்கள்" என்றும் கூறினார். அமிர்தலிங்கமும் சிவசிதம்பரமும் அமிர்தலிங்கத்தின் பதிலினையடுத்து, "அப்படியானால், உங்களின் தீர்வினை முன்வைய்யுங்கள் பார்க்கலாம்?" என்று ஹெக்டர் அமிர்தலிங்கத்தைப் பார்த்துக் கூறினார். இக்கோரிக்கையினை தமிழ்த் தரப்பு ஒருமித்து நிராகரித்தது. "தமிழரின் கோரிக்கையான தனிநாட்டிற்கு நிகரான தீர்வினை முன்வைப்பது அரசாங்கத்தின் கடமை. தமிழ் மக்கள் 1977 ஆம் ஆண்டு எமக்கு வழங்கிய ஆணையான தனிநாட்டில் நாம் இன்னமும் உறுதியாகவே நிற்கிறோம். ஆனால், தமிழ் மக்கள் கெளரவத்துடனும், சுதந்திரத்துடனும் ஒன்றுபட்ட இலங்கைக்குள் வாழக்கூடிய வகையில் தீர்வு ஒன்று முன்வைக்கப்படும் பட்சத்தில் அதனைப் பரிசீலிக்கத் தயாராகவே இருக்கிறோம்" என்று அவர்கள் கூறினார்கள். இலங்கையரச பிரதிநிதிகள் முன்வைத்த தீர்விற்கான பரிந்துரைகளையடுத்து விரக்தியடைந்த தமிழ்த் தரப்பு சந்திரசேகரனிடம் தாம் பேச்சுவார்த்தைகளிலிருந்து வெளிநடப்புச் செய்யப்போவதாகக் கூறியது. அரசாங்கம் தரமான தீர்வொன்றினை முன்வைக்கும் என்கிற நம்பிக்கையிலேயே திம்புப் பேச்சுவார்த்தைக்கு நாம் வந்தோம். ஆனால், தற்போது முன்வைக்கப்பட்டிருக்கும் தீர்வினால் தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணி முற்றாக ஏமாற்றமடைந்திருக்கிறது என்று சந்திரசேகரனைப் பார்த்து அமிர்தலிங்கம் கூறினார். தில்லியுடன் இதுகுறித்துக் கலந்துரையாடிய சந்திரசேகரன், இந்தியாவும் இலங்கை முன்வைத்திருக்கும் தீர்வு குறித்து திருப்தியடையவில்லையென்று கூறியதுடன், பேச்சுக்களிலிருந்து வெளிநடப்புச் செய்யவேண்டாம் என்றும் தமிழ்த் தரப்பைக் கேட்டுக்கொண்டார்.
  19. தமிழ்ப் பிரதிநிதிகள் கூட்டாக முன்வைத்த அரச யுத்தநிறுத்த மீறல்கள் தொடர்பான அறிக்கை பேச்சுவார்த்தையில் பங்கெடுத்த தமிழர் தரப்பினரின் ஆறு பிரதிநிதிகளும் இணைந்து கூட்டாக அறிக்கையொன்றினை வெளியிட்டிருந்தார்கள். அது வருமாறு, தமிழ் விடுதலை அமைப்புக்களின் இணைந்த முன்னணியினர் விடுக்கும் அறிக்கை, 09/07/1985 இலங்கை அரசாங்கத்தால் மேற்கொள்ளப்பட்டுவரும் யுத்த நிறுத்த மீறல்கள் குறித்த எமது முறைப்பாடுகள் தமிழரின் பிரச்சினைக்கான தீர்வினைக் காண்பதற்கு முயன்றுவரும் இந்தியப் பிரதமர் ரஜீவ் காந்தியையும், பேச்சுவார்த்தைக்கான உதவிகளை நல்கிவரும் இந்தியாவின் நற்பண்பினையும் பாராட்டும் அதேவேளை, தமிழ் மக்களின் பிரச்சினைகளைத் தீர்த்துவைக்கக் கூடிய சமரசப் பேச்சுவார்த்தைகளுக்கு அமைவாக தமிழர் தாயகத்தில் அமைதியான சூழ்நிலையினை ஏற்படுத்த எமது தரப்பிலிருந்து அனைத்துவிதமான ஆயுத நடவடிக்கைகளையும் நாம் முற்றாக நிறுத்தி வைத்திருக்கிறோம் என்பதையும் நாம் கூறிக்கொள்கிறோம். ஆனால், யுத்தநிறுத்தம் தொடர்பாக தனது கடமைகளைச் செவ்வண செய்வேன் என்று வாக்குறுதியளித்த இலங்கையரசாங்கம் இன்றுவரை அதனைச் செய்யாது, தொடர்ச்சியாக யுத்தநிறுத்தத்தினை மீறிச் செயற்பட்டு வருகிறது என்பதை இங்கே சுட்டிக் காட்ட விரும்புகிறோம். இலங்கையரசாங்கத்தின் படைகள் தமிழர்களுக்கெதிரான வன்முறைகளிலும், அச்சுருத்தும் செயற்பாடுகளிலும் இன்றுவரை ஈடுபட்டே வருகின்றனர். இலங்கையரச இராணுவத்தினரால் செய்யப்பட்டுவரும் போர்நிறுத்த மீறல்கள் குறித்த சில விடயங்களை இங்கே பட்டியலிட்டிருக்கிறோம். 1. தமிழ் மீனவர்கள் மீதான வன்முறைகள் : இலங்கையரசாங்கம் கடல்வலயத் தடையினை பகுதியளவில் மீளப்பெற்றுக்கொள்வதாக பகிரங்கமாக அறிவித்திருக்கும்போதிலும், அவர்களின் கடற்படையினர் தொடர்ந்தும் எமது மீனவர்கள் மீது அச்சுருத்தல், கைதுசெய்தல், தாக்குதல் நடத்துதல், சொத்துக்களுக்குச் சேதம் விளைவித்தல் ஆகிய செயற்பாடுகளில் ஈடுபட்டே வருகின்றனர். வல்வெட்டித்துறை, தொண்டைமானாறு, பருத்தித்துறை, தாளையடி மற்றும் முல்லைத்தீவு ஆகிய பகுதிகளில் வசிக்கும் மீனவர்கள் தொழிலுக்குச் சென்றவேளை அவர்களை முட்கம்பிகளாலும், இன்னும் பிற ஆயுதங்களாலும் கடுமையாகத் தாக்கியும், அவர்களின் படகுகள் மீது துப்பாக்கிப் பிரயோகம் செய்தும், அவர்களின் வாழ்வாதாரத்தைத் திருடியும் கடற்படையினர் அட்டகாசம் புரிந்து வருகின்றனர். 2. தமிழ் மக்கள் மீதான படுகொலைகளும், வன்முறைகளும் : யுத்தநிறுத்தத்தினைத் தான் கடைப்பிடிக்கத் தொடங்கியிருப்பதாக இலங்கையரசாங்கம் அறிவித்த வாரத்த்திற்கு அடுத்த வாரத்தில் மட்டுமே பல இளைஞர்களை இலங்கையரசாங்கம் படுகொலை செய்திருக்கிறது. இவ்வாறு படுகொலைசெய்யப்பட்ட இளைஞர்களில் ஆயுதங்கள் இன்றி நடமாடிய‌ தமிழ் விடுதலை அமைப்புக்களைச் சேர்ந்த இளைஞர்களும் அடங்கும். இப்படுகொலைகளை எந்தத் தூண்டுதலும் இன்றியே இலங்கையரசாங்கம் செய்துவருகிறது. ஆனி 18 ஆம் திகதியிலிருந்து ஆடி 8 வரையான காலப்பகுதியில் இலங்கையரசாங்கத்தினால் மேற்கொள்ளப்பட்டிருக்கும் படுகொலைகளின் விபரங்கள் வருமாறு, a) மன்னார் கொக்குடையார் பகுதியில் நான்கு தமிழ் இளைஞர்களைச் சுட்டுப் படுகொலை செய்த இராணுவத்தினர், அவர்களின் உடல்களை எரித்து அடையாளம் காணமுடியாதவாறு செய்திருக்கிறார்கள். b) முன்னாகத்தில் உந்துருளியில் பயணம் செய்த இரு இளைஞர்கள் மீது கண்மூடித்தனமாக துப்பாக்கிப் பிரயோக செய்த இராணுவத்தினர், ஒருவரைக் கொன்று, மற்றையவரைக் காயப்படுத்தியிருக்கிறார்கள். காயப்பட்டவர் தப்பிச் சென்றுவிட, கொல்லப்பட்டவரது உடலைஅடையாளம் காணமுடியாத வகையில் இராணுவத்தினர் எரியூட்டியிருக்கிறார்கள். c) மூதூரில் இராணுவத்தால் இழுத்துசெல்லப்பட்ட இரு இளைஞர்கள் கொல்லப்பட்டு, முகாமினுள்ளேயே எரியூட்டப்பட்டிருக்கிறார்கள். d) மண்டூரில் நான்கு இளைஞர்களை இலங்கை இராணுவத்தினர் கைதுசெய்து சென்றிருக்கிறார்கள். e) மட்டக்களப்பு தாந்தாமலைப் பகுதியில் உழவு இயந்திரம் ஒன்றில் பயணம் செய்துகொண்டிருந்த விவசாயிகள் மீது உப - பொலீஸ் பரிசோதகர் பியசேனவும் அவரது பொலீஸ் அணியினரும் நடத்திய தாக்குதலில் பல விவசாயிகள் படுகாயமடைந்திருப்பதோடு, அவர்கள் பயணம் செய்த உழவு இயந்திரமும் பொலீசாரினால் முற்றாக எரித்து நாசமாக்கப்பட்டிருக்கிறது. f) மட்டக்களப்பு மாவட்டத்தின் கரடியனாறு பகுதியில் தமிழர்களுக்குச் சொந்தமான 50 வீடுகள் சிங்களவர்களால் எரித்து அழிக்கப்பட்டிருக்கின்றன. யுத்த நிறுத்தத்தினை இலங்கையரசாங்கம் கடைப்பிடிப்பதாக அறிவித்ததிலிருந்து இவ்வாறு அழிக்கப்பட்டிருக்கும் நான்காவது கிராமம் இதுவென்பது குறிப்பிடத் தக்கது. g) மட்டக்களப்பு மாவட்டத்தின் கிரான் பகுதியில் இரு இளைஞர்களைத் துரத்திச் சென்று, அவர்களைக் கைதுசெய்ய முடியாது போன கோபத்தில், அப்பகுதியால்ச் சென்ற பல தமிழர்களை இராணுவத்தினர் கண்மூடித்தனமாகத் தாக்கியிருக்கிறார்கள். h) ஆனையிறவு முகாமிலிருந்து கிளிநொச்சி நோக்கிச் செல்லும் வழியில் காணப்பட்ட தமிழ் மக்கள் மீது பொலீஸ் விசேட அதிரடிப்படையினர் கண்மூடித்தனமாகத் துப்பாக்கிப் பிரயோகம் செய்து தமிழ் மக்களை அச்சுருத்தும் விதமாக நடந்திருக்கிறார்கள். i) மட்டக்களப்பு மாவட்டத்தின் கும்புறுமூலைப் பகுதியில் அரச அச்சகத்திற்குச் சொந்தமான கட்டிடம் ஒன்று திடீரென்று இராணுவச் சோதனைச் சாவடியாக மாற்றப்பட்டிருப்பதோடு இதனை அமைப்பதற்கு தமிழ் மக்களை 16 பாரவூர்திகளில் இழுத்துவந்த இராணுவத்தினர் கொடுமைப்படுத்தியிருக்கின்றனர். தமிழ் மக்கள் மீதும், ஆயுதம் தரிக்காத போராளிகள் மீது இலங்கை இராணுவத்தினரால் மேற்கொள்ளப்பட்டுவரும் படுகொலைகளும், தாக்குதல்களும் தற்போதும் நடந்துகொண்டே வருகின்றன. 3. வடக்குக் கிழக்கு மாகாணங்களில் நிலவிவரும் பதற்றமான சூழ்நிலை : யாழ்ப்பாணத்தில் இராணுவத்தினரின் அடக்குமுறைகள் சற்றுத் தளர்த்தப்பட்டுள்ளபோதிலும், வடக்குக் கிழக்கின் ஏனைய பகுதிகளில் இராணுவத்தினரின் அடக்குமுறையும், கெடுபிடிகளும், கண்காணிப்பு நடவடிக்கைகள் என்கிற பெயரில் நெருக்குவாரங்களும் தற்போது அதிகரித்தே காணப்படுகின்றன. குறிப்பாகக் கிழக்கு மாகாணத்தில் தமிழர்களை அச்சுருத்தி, பயங்கரமான சூழ்நிலையில் வைத்திருப்பதற்காக வேண்டுமென்றே குடிமனைகள் ஊடான ரோந்துக்கள், வீதிதடைகள், தேடியழிக்கும் நடவடிக்கைகள், கைதுகள், தாக்குதல்கள் என்பன இராணுவத்தினரால் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மக்கள் நடமாட்டத்திற்கு தடைசெய்யப்பட்ட பகுதிகளை மீளப்பெற்றுக்கொள்கிறோம் என்று அறிவிக்கப்பட்ட பின்னரும் இவை தொடர்ச்சியாக நடைபெற்று வருகின்றன என்பது குறிப்பிடத் தக்கது. 4. பெருந்தோட்டப் பகுதிகளில் இலங்கை அரசாங்கத்தினால் வேண்டுமென்றே ஏற்படுத்தப்பட்டிருக்கும் பதற்றமான சூழ்நிலை: பெருந்தோட்டப் பகுதிகளில் வாழும் தமிழர்களின் சுதந்திரமான நடமாட்டம் அரசாங்கத்தால் மட்டுப்படுத்தப்பட்டிருப்பதோடு, இப்பகுதிகளிலிருந்து வெளியே செல்வோரும், உள்ளே நுழைவோரும் தொடர்ச்சியாகக் கண்காணிக்கப்பட்டு, அச்சுருத்தப்பட்டு வருகிறார்கள். ஏறக்குறைய ஒரு முற்றுகை நிலையிலேயே பெருந்தோட்டத் தமிழ்ப்பகுதிகள் வைக்கப்பட்டிருக்கின்றன. இப்பகுதிகளுக்கும் வெளியிடங்களுக்குமான தொடர்பு துண்டிக்கப்பட்டிருப்பதோடு, பல தமிழர்களை காரணமின்றிக் கைதுசெய்து தடுத்து வைத்திருக்கிறது இலங்கையரசாங்கம். "மேற்கூறப்பட்ட இலங்கையரசின் அப்பட்டமான யுத்தநிறுத்த மீறல்களுக்கு மேலதிகமாக, தான் ஏற்றுக்கொண்ட இரு விடயங்களான தமிழ் அரசியல்க் கைதிகளை விடுதலை செய்வது, தமிழ்ப் பிரதேசங்கள் மீதான ஊரடங்கு உத்தரவினை நீக்கிக்கொள்வது ஆகியவற்றையும் செயற்படுத்த இலங்கையரசாங்கம் பிடிவாதமாக மறுத்தே வருகிறது". "இலங்கையரசாங்கத்திற்கும், தமிழ் விடுதலை அமைப்புக்களுக்கும் இடையே செய்யப்பட்டிருக்கும் பரஸ்பர யுத்தநிறுத்தத்திற்கு அமைவாக, இலங்கையரசாங்கம் உடனடியாக யுத்தநிறுத்த ஒப்பந்தத்தில் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ள தனது கடப்பாடுகளை நிறைவேற்ற வேண்டும் என்று நாம் கேட்டுக்கொள்கிறோம்". "யுத்தநிறுத்தம் கடைப்பிடிக்கப்படவேண்டிய காலப்பகுதியில் மேலதிகமாக ஆட்களையோ ஆயுதங்களையோ தருவித்தல் ஆகாது என்கிற நிபந்தனையினையும் மீறி, இலங்கையரசாங்கம் தொடர்ச்சியாக இராணுவத்தினரையும், ஆயுத தளபாடங்களையும் குவித்துவருகிறது என்பதையும் நாம் அறியத் தருகிறோம். அண்மையில்க் கூட பாக்கிஸ்த்தானிடமிருந்து நான்கு தாக்குதல் உலங்குவானூர்திகளையும், சீனாவிடமிருந்து 18 பீரங்கிப் படகுகளையும் இலங்கையரசாங்கம் தருவித்திருக்கிறது". தமிழ்ப் பிரதிநிதிகளின் கூட்டறிக்கைக்குப் பதிலளித்த இலங்கையரசாங்கத்தின் பேச்சுவார்த்தைக் குழுவின் தலைவர் ஹெக்டர் ஜயவர்த்தன, ஊரடங்கு உத்தரவு மற்றும் அரசியற் கைதிகளின் விடுதலை தொடர்பாக ஆராய்ந்து பிற்பகலுக்குள் பதில் ஒன்றினைத் தருவதாகக் கூறினார். மதியவேளை தனது சகோதரரும், ஜனாதிபதியுமான ஜெயாருடன் நேரடித் தொலைபேசியூடாகப் பேசிய ஹெக்டர், அரசாங்கம் வடக்குக் கிழக்கு மாகாணங்களில் அமுலில் இருக்கும் ஊரடங்குச் சட்டத்தை அடுத்தநாள் நீக்கிக்கொள்ளவும், அரசியற்கைதிகளாகத் தடுத்துவைக்கப்பட்டிருக்கும் 1,197 தமிழர்களில் 643 பேரை இருநாட்களின் பின்னர் விடுதலை செய்யவும் ஒத்துக்கொண்டிருப்பதாக பேச்சுவார்த்தை மேசையில் அறிவித்தார்.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.