Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ரஞ்சித்

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by ரஞ்சித்

  1. இதைக்கூறுவதற்கு தமிழரசுக் கட்சி மீதான மிகுந்த வக்கிரமும், காழ்ப்புணர்ச்சியும் இருக்கும் ஒருவரால்த்தான் முடியும். அல்லாவிட்டால், அக்கட்சியின் அனைத்துச் செயறபாடுகளும் உசுப்பேற்றும், தீண்டிவிடும், உணர்வூட்டிவிடும் வெறும் இனவாத நடவடிக்கைகள் தான் என்று நீங்களும், நீங்கள் மேற்கோள் காட்டும் உங்களது முகாமின் உறுப்பினர்களும் எழுதப்போவதில்லை. அப்படிக் கூறிவிட்டு, உங்களின் முகம் வெளிப்படையாகத் தெரியத் தொடங்கியவுடன் இப்படி எழுதுகிறீர்கள். உண்மையைக் கூறி எழுதுங்கள். ஏன் இவ்வளவு சிரமம்? நான் தமிழ்த் தேசியத்திற்கு எதிரானவன். இலங்கையின் ஒற்றையாட்சியை நேசிப்பவன். சிங்கள இடதுசாரிகள் எனும் போர்வையில் உலாவரும் பேரினவாதிகளை ஆதரிப்பவன். அதற்காக தமிழ்த் தேசியத்தை ஆதரித்தவர்களை, தமிழ்த்தேசிய அரசியலை முன்னெடுத்தவர்களை, தமிழரின் பிரதேச நலன்கள் குறித்து செயற்படுபவர்களை என்னால் முடிந்தவரையில் விமர்சித்துச் சிறுமைப்படுத்துவேன் என்று வெளிப்படையாகவே கூறுங்கள். உங்களைப்போல இன்னுமொருவர் முன்னர் இங்கு உலாவந்தார். துல்பேன் எனும் பெயரில் விமர்சனம் எழுதிய அவரும் உங்களின் கருத்துக்களையே முன்வைத்து வந்தார். அவரும் உங்களின் முகாமிலிருந்து வருபவராக இருக்கலாம்.
  2. இணைப்பிற்கு நன்றி. இதுகுறித்து நன்கு அலசப்பட்டே இருக்கிறது. ஒவ்வொருவரும் எந்த மூலையிலிருந்து இதனை எழுதுகிறார்கள் என்பதைப்பொறுத்தே விமர்சனம் அமைகிறது. என்னைப்பொறுத்தவரை இவை தமிழரசுக்கட்சியை விமர்சிக்கவும், தமிழ்த் தேசியத்தை இழிவுபடுத்தவும் எழுதப்பட்டவை என்றே நினைக்கிறேன். இந்த விமர்சனங்களில் ஒரு சிறிய பகுதியேனும் ஆளும் சிங்கள இடதுசாரி இனவாதத்தின் மேல் வைக்கப்படவில்லை என்பது வியப்புத்தான். அதுமட்டுமல்லாமல் சிங்கள இனவாதத்தின் பிதாமகர்களை நல்லவர்களாகக் காட்டும் கைங்கரியமும் இங்கு எனக்குத் தெரிகிறது. பரவாயில்லை, செய்யுங்கள். தமிழரசுக் கட்சியின் நம்பகத்தனமையினையும், தமிழ்த்தேசியத்தை வளர்த்துவிட்ட அதன் செயல்களையும் தொடர்ச்சியாக விமர்சியுங்கள். ஈற்றில் சிங்களப் பேரினவாதம் என்று ஒன்றில்லை, எல்லாம் இலங்கை நாட்டு மக்களே என்று நிறுவுங்கள். சுபம் !
  3. போராளிகளின் கோரிக்கையினை மீண்டுமொருமுறை நிராகரித்த இந்தியாவும், அமிர்தலிங்கத்தை எச்சரித்த போராளிகளும் போரும் சமாதானமும் எனும் புத்தகத்தில் எழுதும் பாலசிங்கம், ஈழத்தேசிய விடுதலை முன்னணியினரின் அறிக்கையினையடுத்து இந்தியா மிகுந்த கோபம்கொண்டு காணப்பட்டதாகக் கூறுகிறார். இணைந்த அறிவிப்பில் போராளிகளால் கோரப்பட்ட பெரும்பான்மையான கோரிக்கைகளை இந்தியா நிராகரித்தது. ஆனால், பாலசிங்கத்துடன் பேசிய சந்திரசேகரன், இலங்கை இராணுவத்தால் மேற்கொள்ளப்பட்டதாகக் கூறப்படும் யுத்த நிறுத்த மீறல்கள் குறித்து இந்தியா கவனமெடுக்கும் என்று கூறினார். மேலும், போராளிகளின் தலைவர்களுடன் திம்பு பேச்சுவார்த்தை குறித்துப் பேசுவதற்காக தில்லிக்கு வரவழைக்கப்படுவார்கள் என்றும் அவர் கூறினார். போராளிகளின் தலைவர்களை தில்லிக்கு அழைக்கப்போகிறார்கள் என்கிற செய்தி வந்தவுடன் உடனடியாக சந்திப்பொன்றினை அவர்கள் நடத்தினார்கள். முக்கியமான இரு விடயங்கள் அங்கே ஆராயப்பட்டன. முதலாவது, பேசப்பட வேண்டிய அடிப்படைக் கொள்கைகள். இதுகுறித்து தலைவர்களிடையே கருத்தொற்றுமை நிலவியது. தமிழ் மக்களின் அடிப்படைத் தேவைகள் என்னவென்பதை ஏற்கனவே பலமுறை முன்வைக்கப்பட்டு வந்திருப்பதுடன், திருகோணமலையில் 1956 ஆம் ஆண்டு தந்தை செல்வா நடத்திய சமஷ்ட்டிக் கட்சியின் மாநாட்டிலும் தெளிவாக பிரகடணப்படுத்தப்பட்டு இருந்தது. அவையாவன, 1. இலங்கைத் தமிழர்களை ஒரு தனி தேசமாக அங்கீகரிக்க வேண்டும். 2. இலங்கையில் தமிழர்களுக்கென்று பூர்வீக தாயகம் இருக்கிறதென்பதை அங்கீகரிக்க வேண்டும். 3. தமிழ்த் தேசத்தின் சுயநிர்ணய உரிமையினை அங்கீகரிக்க வேண்டும். 4. இலங்கையைத் தமது நாடாகக் கொண்டு வாழும் அனைத்துத் தமிழருக்கும் பிரஜாவுரிமை வழங்கப்படுவதோடு, அடிப்படை உரிமைகளும் வழங்கப்பட வேண்டும். இவற்றின் அடிப்படையிலேயே தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கான தீர்வு அமையப்பெறுதல் வேண்டும் என்று ஈழத்தேசிய விடுதலை முன்னணியின் தலைவர்கள் தீர்மானித்தனர். அடுத்ததாக அவர்கள் ஆராய்ந்த விடயம், தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியினரை தமது முடிவுகளுக்கு இணங்கப் பண்ணுவது. ஆகவே, தாம் முன்வைக்கும் அடிப்படைகளை தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியினர் எதிர்க்கக் கூடாது என்று அவர்களை எச்சரிப்பதென்று போராளிகளின் தலைவர்கள் முடிவெடுத்தனர். அமிர்தலிங்கம் ஏற்கனவே தில்லிக்குப் பயணமாகியிருந்தமையினால், சென்னையில் தங்கியிருந்த யோகேஸ்வரனிடம் இதுகுறித்து பேசுவதென்று அவர்கள் முடிவெடுத்தனர். அங்கு பேசிய சிறீ சபாரட்ணம், யோகேஸ்வரனை உடனேயே அங்கு அழைத்து, அவரிடம் நேரடியாக தமது எச்சரிக்கையினை வழங்கலாம் என்று கூறினார். ஏனையோரும் அதனை ஆமோதிக்கவே, பாலக்குமார் யோகேஸ்வரனுடன் தொலைபேசி அழைப்பினை ஏற்படுத்தினார். வி. யோகேஸ்வரன், பாராளுமன்ற உறுப்பினர், யாழ்ப்பாணம் யோகேஸ்வரனுடன் பேசிய பாலக்குமார், "அண்ணை, என்னுடன் பிரபா, சிறீ மற்றும் நாபா ஆகியோர் இருக்கிறார்கள். உங்களைச் சந்தித்து அவசரமாக ஒரு விடயத்தைப் பேச அவர்கள் விரும்புகிறார்கள்" என்று கூறினார். யோகேஸ்வரனும் அவர்களைச் சந்திக்க சம்மதம் தெரிவித்ததுடன், "தங்கத்துரையும் என்னுடன் இருக்கிறார், அவரையும் அழைத்து வரவா?" என்று கேட்க, பாலக்குமாரும் அதற்குச் சம்மதித்தார். அங்கிருந்த ஏனையவர்களுடன் பேசிய பிரபாகரன், "உங்கள் எல்லோரையும் தம்பிகள் என்று வெகு இனிமையாக அழைத்து யோகேஸ்வரன் பேசுவார், அந்த நடிப்புகளுக்கெல்லாம் மயங்கிவிட வேண்டாம்" என்று கூறினார். "பாலா அண்ணை பேசட்டும், நாங்கள் கடுமையாக முகத்தை வைத்துக்கொண்டு அமைதியாக இருக்கலாம்" என்று அவர் மேலும் கூறினார். அ. தங்கத்துரை, பாராளுமன்ற உறுப்பினர், திருகோணமலை. சுமார் 30 நிமிடங்களுக்குப் பின்னர் யோகேஸ்வரனும், தங்கத்துரையும் ஈழத்தேசிய விடுதலை முன்னணியினரின் அலுவலகத்திற்கு வந்து சேர்ந்தனர். "நாங்கள் பிந்திவிட்டோமா? இந்த இடத்தைக் கண்டுபிடிக்கச் சிரமமாகிவிட்டது" என்று யோகேஸ்வரன் கூறினார். போராளிகளின் தலைவர்கள் எவருமே பதில் கூறாது மெளனம் காத்தனர். பாலசிங்கம், யோகேஸ்வரனையும், தங்கத்துரையினையும் ஆசனங்களில் அமரச் சொன்னார். அவர்கள் இருவரும் சிறீ சபாரடட்ணத்திற்கும் பிரபாகரனுக்கும் இடையே அமர்ந்து கொண்டனர். மேசையின் எதிர்ப்புறத்தே அமர்ந்திருந்த பாலசிங்கம், "உங்களை சொற்ப நேரத்திற்குள் வரவழைத்தமைக்காக வருந்துகிறோம். முதலாவது, நாங்கள் ஆயுத அமைப்புக்கள் அல்லவென்பதை உங்களுக்குக் கூறிக்கொள்ள விரும்புகிறோம். நாம் அரசியல் ‍- ஆயுத முன்னணியினர் ஆகும். நாம் போரிடுவதில் மட்டுமல்ல, அரசியல் பேரம்பேசலிலும் வல்லவர்கள். ஆகவே, எங்கள் சார்பாக வேறு எவரும் பேசத்தேவையில்லை" என்று தீர்க்கமான தொனியில் கூறினார். பாலசிங்கத்தின் முதலாவது பிரகடணமே யோகேஸ்வரனையும், தங்கத்துரையையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. பின்னர், தமது தீர்மானங்கள் குறித்த நீளமான விளக்கத்தை பாலசிங்கம் வழ‌ங்கினார். ஒரே சுரத்தில் பேசிய பாலசிங்கம் பின்வருமாறு தனது பேச்சினை நிறைவு செய்தார், " நாம் முன்வைக்கும் தீர்மானங்களுக்கு மாற்றாக வேறு எந்தத் தீர்மானத்தையும் முன்வைக்கக் கூடாது என்று அமிர்தருக்குச் சொல்ல விரும்புகிறோம். நாம் தமிழ் மக்களின் பிரச்சினைக்கான தீர்வு நான்கு அடிப்படை அம்சங்களைக் கொண்டே அமையவேண்டும் என்று ஒருமனதாகத் தீர்மானித்திருக்கிறோம். ஆகவே, இதனை ஆதரிக்க வேண்டும் என்று அமிருக்குச் சொல்லுங்கள். இதைவிட வேறு எதனையும் அவர் பேசக்கூடாது" என்று கூறி முடித்தார். பதிலளித்த யோகேஸ்வரன், ஈழத்தேசிய விடுதலை முன்னணியின் தலைவர்களின் தீர்மானத்தை தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணி ஆதரிக்கும் என்று உறுதியளித்தார். "அமிர் அண்ணை உங்களின் தீர்மானங்களுக்கு எதிராக ஒருபோதும் செல்ல மாட்டார். உங்களது தீர்மானமே எங்களது தீர்மானமும். எனது சத்தியத்தை நூற்றுக்கு நூறுவீதம் நீங்கள் நம்பலாம்" என்று அவர்களைப் பார்த்து அவர் கூறினார். பதிலளித்த பாலசிங்கம், "உங்களின் சத்தியத்தை நம்புவதும், நம்பாததும் தில்லியில் அமிர்தலிங்கம் எப்படி நடந்துகொள்ளப்போகிறார் என்பதித்தான் தங்கியிருக்கிறது. ஆகவே, அவரை உடனேயே தொடர்புகொண்டு நாங்கள் உங்களிடம் கூறிய விடயங்களை அவருக்குத் தெரிவியுங்கள்" என்று கூறினார். அப்போது, எதேச்சையாகப் பேசிய சிறீ சபாரட்ணம், "அண்ணை, அமிர் எங்களின் கோரிக்கையினை ஏற்றுக்கொள்ள மறுத்தால், அவரைத் திம்புவிலேயே இருக்கச் சொல்லுங்கள்" என்று யோகேஸ்வரனைப் பார்த்து எச்சரிக்கும் தொனியில் கூறினார்.
  4. ஒரு இனக் குழுமத்திற்கு அரசியக் கட்சியினதோ அல்லது அரசியல்த் தலைமையினதோ தேவையென்ன? அரசியத் தலைமையின்றி அம்மக்களின் அரசியல் அபிலாஷைகளை முன்னெடுக்க முடியாதா? இதை ஏன் கேட்கிறேன் என்றால், தமிழரசுக்கட்சி இராமனாதனின் கல்லூரியைப் பாதுகாக்கவே யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தை சிறிமா கட்டுவதை எதிர்த்தார்கள் என்று பொய்யான தகவலை இங்கு பரப்புவதால். சுதந்திரத்தின் உடனடிப் பின்னரான காலத்திலிருந்தே தமிழர்கள் அடக்குமுறைக்கு உள்ளாக்கப்பட்டுத்தான் வருகிறார்கள். யாழ்ப் பல்கலைக்கழகம் 1974 இல் கட்டப்பட்ட ஆரம்பித்தபோது சுமார் 26 வருடகால இனரீதியிலான அடக்குமுறையினைத் தமிழர்கள் எதிர்கொண்டிருந்தார்கள். ஆகவே, தமது நலன்களுக்கெதிராக சிங்கள இனவாத அரசு செய்யும் ஒரு திட்டமிட்ட சூழ்ச்சியை தமிழர்கள் எதிர்ப்பதற்கு தமிழரசுக் கட்சியின் தூண்டுதல் தேவையானதா? தமிழரசுக் கட்சி தமிழர்களைத் தூண்டியிருக்காவிட்டால் தமிழர்களுக்கு யாழ்ப் பல்கலைக்கழகத்தின் பின்னால் இருக்கும் சூழ்ச்சி தெரிந்திருக்காது என்கிறீர்களா? தமிழர் ஐக்கிய முன்னணியினர் ஆளும் சிறிமாவின் சுதந்திரக் கட்சியினை கைவிட்டு விட்டு எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சியினருடன் பேச்சுவார்த்தைகளை ஆரம்பித்துவிடுவார்கள், இது தமிழர்களின் வாக்குகள் தனது கட்சிக்குக் கிடைக்காது போய்விடும் என்பதனாலேயே சிறிமா தமிழர்கள் கேட்ட பல்கலைக்கழகம் ஒன்றை கட்டித்தருகிறேன் என்று கூறினார். ஆனால், தமிழர்கள் கேட்டுக்கொண்ட திருகோணமலை பல்கலைக்கழகத்திற்குப் பதிலாக, யாழ்ப்பாணத்தில்த்தான் கட்டுவேன் என்று அவர் அடம்பிடித்தார். இதற்குப் பின்னால் ஒரு அரசியல் சூழ்ச்சி இருந்தது. வடக்குத் தமிழரையும் கிழக்குத்தமிழரையும் பிரித்தாளுவதற்காகவே, திருகோணமலையில் கட்டுவதற்குப் பதிலாக யாழ்ப்பாணத்தில் கட்டுவதற்கு அவர் திட்டமிட்டார். அத்துடன், திருகோணமலையினைச் சிங்களவர்கள் முற்றாக ஆக்கிரமிக்கும் திட்டமும் நடைபெற்றுவந்ததனால், அங்கு தமிழர் பல்கலைக்கழகம் ஒன்றினை அமைப்பதை சிறிமா விரும்பவில்லை. இராமநாதனின் கல்லூரியின் மாண்பு குறைந்துவிடும் என்பதற்காகவே தந்தை செல்வா தலைமையிலான தமிழரசுக் கட்சியினரே மக்களைத் தூண்டிவிட்டு இதனைத் தடுத்தார்கள் என்று கூறுபவர் அதற்கான ஆதாரத்தை இங்கே முன்வைக்கவேண்டும். வெறுமனே சுதந்திரக் கட்சி ஆதரவாளர்கள் யாழ்ப்பாணத்தில் சிறிமாவை வரவேற்ற பழைய ஒளிப்படங்களை வைத்துப் படங்காட்டுவது செல்லாது. ஏனென்றால், இனவழிப்புச் செய்த மகிந்தவுக்கே திலகமிட்டு, ஆரத்தி எடுத்து வரவேற்ற யாழ்ப்பாணத் தமிழர்களையும் பார்த்திருக்கிறோம். தமிழரசுக் கட்சியினர் மீது வெறுப்பா, செல்வா மீது வெறுப்பா, அல்லது அவர்கள் தமிழர்களுக்கு வழங்கிய அரசியல்த் தலைமை மீது வெறுப்பா என்று தெரியவில்லை. இப்போது யாழ்ப்பல்கலைக் கழகம் தமிழரசுக் கட்சியின் சுயநலத்தால் எதிர்க்கப்பட்டது என்று கூற ஆரம்பித்திருக்கிறார். இனி, செல்வா தலைமையில் தமிழரசுக் கட்சி நடத்திய பேச்சுவார்த்தைகள், வட்டுக்கோட்டைத் தீர்மானம் என்பன குறித்தும் விமர்சனங்கள் வரும். அவையும் தேவையற்றவை, தந்தை செல்வாவின் சுயநலத்தாலும், தமிழரசுக் கட்சியினரின் அரசியலுக்காகவும் செய்யப்பட்டவை என்று கூறினாலும் ஆச்சரியப்படுதற்கில்லை. இதன் முடிவு இப்படித்தான் அமையும். தமிழர்களுக்கென்று போராடுவதற்கான தேவை இருக்கவில்லை. தமிழரசுக் கட்சியோ, அல்லது வேறு அமைப்புக்களோ தமது நலன்களுக்காகவே தமிழர்களை உசுப்பேற்றிவிட்டு போராட அனுப்பினார்கள். ஏனென்றால், தமிழர்களுக்கென்று, அவர்கள் தாமாகவே உணரத்தக்க பிரச்சினைகள் என்று எதுவுமே சிங்களவர்களால் அவர்கள் மீது திணிக்கப்படவில்லை. சிறிமாவின் சுதந்திரக் கட்சியாகட்டும், ஜெயாரின் ஐக்கிய தேசியக் கட்சியாகட்டும் தமிழர்களுக்கென்று பல நல்ல திட்டங்களை அவ்வபோது கொடுத்துக்கொண்டே வந்திருக்கின்றனர். தமிழர்களுக்கு அதனை கேட்டு வாங்கத் தேவையில்லை. இவ்வளவு காலமும் காலத்தை வீணடித்திருக்கிறார்கள். இனிமேலாவது சிங்களவர்களுடன் இணைந்து, எம்மை முன்னேற்றி, இலங்கையர்களாக எம்மை இன‌ங்கண்டு, தனிமனிதர்களாக தக்கவைத்துக்கொள்வோம். இப்படி அறிவுரை கூறும் பரமாத்மாவிற்கு, ஒரு சீடரும் கிடைத்திருக்கிறார். நடக்கட்டும். இறுதியாக, இராமநாதன் கல்லூரிக்குப் போட்டியாக யாழ் பல்கலைக்கழகம் கட்டப்படுவதை எதிர்த்தே தமிழரசுக் கட்சியும், செல்வநாயகமும் தமிழரைத் தூண்டிவிட்டார்கள் என்பதற்கான ஆதாரத்தினை மறக்காமல் இணைத்துவிடவும். புதிதாக நீங்கள் கூறும் வரலாற்றையும் பார்த்துவிடலாம். வரலாற்றைத் தவறாகத் திரிபுபடுத்தும் ஒருவரின் பின்னால் ஓடுகிறீர்கள். இவரது சூட்சுமம் உங்களுக்குத் தெரியவில்லையா அல்லது அவர் கூறுவதுதான் உங்களது கருத்துமா? என்னவோ செய்துவிட்டுப் போங்கள். எல்லாரையும் திருத்த முடியும் என்றும் நான் நினைக்கவில்லை.
  5. ஒரு பொய்யை மறைக்க இன்னொரு புரட்டு. ஆக இப்போது யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் திறப்பதற்கான எதிர்ப்பு மேல்த்தட்டு வர்க்க யாழ்ப்பாணிகளினால் இல்லை என்று ஏற்றுக்கொள்ளப்பட்டு, தமிழரசுக்கட்சியின் உந்துதலினால் மக்களால் நடத்தப்பட்ட எதிர்ப்பு என்று வந்துவிட்டது. கூறப்பட்டது புரட்டு என்றாலும், அதில் அன்றிருந்த தமிழரசுக் கட்சி மீதான காழ்ப்புணர்வு கொட்டிக் கிடக்கிறது. ஆக, தமிழர் கண்ட ஜனநாயகவழி அரசியல்வாதிகளில் மிகவும் சிறந்தவரான தந்தை செல்வா அன்று ஆரம்பித்த கட்சியும், அதன் செயற்பாடுகளும் உணர்ச்சியால் தூண்டப்பட்டவை என்ற முடிவிற்கு வந்தாயிற்று. அன்றிருந்த தமிழர்களுக்க்கு ஒரே நம்பிக்கையாக இருந்தவர் செல்வா. அவரது அரசியலே தவறு என்றால், இக்கருத்தாளர் அன்று எந்தப் பக்கம் நின்றிருக்கிறார் என்பது தெளிவாகிறது.
  6. The government, facing the surge in popularity of the J. R. Jayewardene-led UNP opposition, was anxious to keep the TUF on its side. Sirimavo Bandaranaike announced her government’s decision to open a university campus in Jaffna, to appease the Tamils who wanted a Tamil university to be set up in Trincomalee. She announced that she would personally open the campus. It was a tactical political announcement. The youths saw through it. They said the government’s real objective was to kill the Tamil demand for a university in Trincomalee and to drive a wedge between northern and eastern Tamils. The University authorities acted in a hurry. They appointed Prof. K. Kailasapathy as the president of the Jaffna Campus and selected Parameswara College founded by Sir Ponnampalam Ramanathan as its premises. Srimavo Bandaranaike went on an official visit to Jaffna on 6 October 1974, to declare Jaffna University Campus open. Militant youths called upon the public to boycott the opening ceremony and all other functions organized by government supporters to welcome the prime minister. They organized a black flag demonstration. TUF members and its parliamentarians obeyed the decision taken by the militant youths. The decision making power of the Tamil people thus passed into the hands of the Tamil militants. Pirapaharan: Vol.1, Chap. 8 First Military Operation – Ilankai Tamil Sangam இந்தப் பொய்யிலேயே ஒருவரின் முகத்திரை கிழிந்துவிட்டது. தமிழர்கள் தமக்கென்று தமிழ்பேசும் ஒரு பல்கலைக்கழகத்தைக் கேட்டது திருகோணமலையில். ஆனால், வடக்குத் தமிழர்களையும் கிழக்குத் த்கமிழர்களையும் பிரித்தாள நினைத்த சிறிமா யாழ்ப்பாணத்திலேயே கட்டுவேன், நானே திறந்துவைப்பேன் என்று பிடிவாதமாக அதனைக் கட்டினார். யாழ்ப்பாணத்தில் பல்கலைக்கழகம் ஒன்றினைக் கட்டும் சிறிமாவின் முடிவினை எதிர்த்து, அவர் யாழ்ப்பாணம் வரும்போது பொதுமக்களும், இளைஞர்களும் ஆர்ப்பாட்டத்திக்ல் ஈடுபட்டனர். இதுதான் நடந்தது. இணக்க அரசியலால் உந்தப்பட்டு, தமிழர்களின் நலன்களைக் காவுகொள்ள பொய்களையும் புரட்டுக்களையும் பரப்பும் இதுபோன்ற கருத்துக்களை நிர்வாகம் கவனத்தில் எடுக்கவேண்டும்.
  7. இறால்ப் பண்ணைகளினால் சூழல் மாசடைகிறது அண்ணை. அதிலிருந்து வெளியேற்றப்படும் கழிவு நீர் மற்றும் அந்த இடத்தில் பாவிக்கப்படும் இரசாயணங்கள், ஊக்கிகள் என்பவற்றால் அந்த நிலம் வேறு தேவைகளுக்காகப் பிற்காலத்தில் பாவிக்கப்படுவதற்கு உகந்ததற்றதாக மாறிவிடுகிறது. இலங்கை போன்ற நாடுகளில் கழிவு அகற்றம், மீளுருவாக்கம், கழிவகற்றப்படுமுன் சுத்திகரித்தல் போன்ற விடயங்களில் நாம் கவனமெடுப்பதில்லை. எந்தவித சூழல் பாதக மதிப்பீடுகளும் இன்றியே அனுமதிகள் வழங்கப்பட்டு வருகின்றன. முன்னர் புத்தளம், சிலாபம் ஆகிய பகுதிகளில் முஸ்லீம் வர்த்தகர்களால் முன்னெடுக்கப்பட்ட பல இறால்ப் பண்ணைகள் நாளடைவில் கைவிடப்பட்டபோது அந்த நிலங்கள் எவற்றிற்கும் உதவாத தரிசு நில‌ங்களாக மாறியிருக்கின்றன. Destruction of the mangrove resources, declining water quality of waterbodies in the shrimp farming zones, salinization of soil and water, indiscriminate disposal of solid waste, excessive extraction of groundwater and self pollution have contributed to environmental degradation and a decline in natural productivity of the area. அப்பகுதிகளில் வாழும் சதுப்புநில தாவரங்களின் அழிப்பு, அப்பகுதியில் காணப்படும் நிலத்தடி நன்னீரில் இரசயாணக் கலப்பு அல்லது உவர் நீராக மாற்றம் பெறுதல், திண்மக் கழிவுகள் நீர்நிலைகளுக்குள் கழிவாக விடப்படுதல் ஆகியவற்றால் சுற்றுச்சூழல் மாசடைவதுடன், அப்பகுதி நிலங்கள் வேறு பொருளாதார உற்பத்திகளுக்கு ஏற்ற நலன்களை முற்றாக இழந்து விடுகின்றன.
  8. 1987 முதல் 1990 வரையான இந்திய ஆக்கிரமிப்புப்படை தமிழர் தாயகத்தில் செய்த அட்டூழியங்களை வெற்றியாக ஒருவரால் பார்க்கமுடிகிறதென்றால், அந்த அட்டூழியங்களில் பங்குகொண்ட ஒருவராலேயே அது முடியும் என்பது வெளிச்சமாகிறது. புலிநீக்கம் செய்துவிட்டு இந்திய கூலிகளின் மீளுருவாக்கம் செய்யலாம் என்கிறீர்களா? எதை மறைத்தாலும், மண்டையில் உள்ள கொண்டையை மறைக்க முடியாது போய்விட்டதே??!!
  9. பத்மநாபாவின் கூலிப்படையான ஈ.பி.ஆர்.எல்.எப் அமைப்பே வடக்குக் கிழக்கில் இந்திய ஆக்கிரமிப்புப் படையுடன் இணைந்து தமிழர்களுக்கெதிரான அட்டூழியங்களில் ஈடுபட்டு வந்தது. தனது பொம்மையான வரதராஜப் பெருமாளையும், சுரேஷ் பிரேமச்சந்திரனையும் கொண்டு அவர் தமிழர் தாயகத்தில் செய்தது அக்கிரமங்களேயன்றி வேறில்லை. இந்திய ரோவின் பூரணப் பாதுகாப்பில் இருந்துகொண்டு, தான் எந்த மக்களுக்காகப் போராடக் கிளம்பினாரோ அதே மக்களை அடிமைகளாக, அந்நியப் படையொன்றின் உதவியுடன் ஆண்டபோது , தமிழ் மக்களின் விடுதலை வீரன் எனும் தகமையினை இழந்து பலநாளாயிற்று. கொல்லப்பட்டபோது அவர் அந்நிய ஆக்கிரமிப்பு அரசொன்றின் கைக்கூலிதான். ரஜீவினல் தமிழர் அடைந்த நலன் என்று எதுவும் இல்லை. அவர் செய்த ஒப்பந்தம் இந்தியாவின் நலன்களுக்கானது மட்டுமே. அவரைக் கொன்றதால் புலிகள் அடைந்ததும் ஒன்றுமில்லை. கொல்லப்பட்டிருக்கத் தேவையில்லை. புலிநீக்க அரசியல் தேவையா இல்லையா என்பதை மக்கள் தீர்மானிக்கட்டும், அந்நிய சக்திகளின் கைக்கூலிகள் அதுகுறித்துப் பேசத் தேவையில்லை. இதனைச் சொல்வதன் மூலம் ஈ.பி.ஆர்.எல்.எப் அமைப்பின் அராஜக ஆட்சியை நியாயப்படுத்துவதோடு, இந்திய நலன்காக்க உருவாக்கப்பட்ட ஒப்பந்தத்தையும் இவர் நியாயப்படுத்துகிறார். ஆக, இவர் வருவதும் பதம்நாபா, வரதர் முகாமிலிருந்துதான் என்பதை உறுதிப்படுத்துகிறது.
  10. அமிர்தலிங்கமும் அவரது ஆதரவாளர்களும் சர்வகட்சி மாநாட்டிற்கு முன்னரே தமிழ் மக்களால் நிராகரிக்கப்பட்டு விட்டனர். 1985 திம்புப் பேச்சுக்களில் அவர்கள் தம்மை மீளவும் அரங்கிற்குக் கொண்டுவரப்பார்த்தனர். ஆனால், அன்றுகூட இலங்கையினதும், இந்தியாவினதும் கைப்பிள்ளைகளாக மாறி, இலங்கையரசு கொடுக்க விரும்பிய மாவட்ட சபைகளை மனமுவந்து ஏற்றுக்கொண்டு தமிழரின் நிலையினைப் பலவீனப்படுத்தினர். 1987 இல் இந்தியாவில் இருந்துகொண்டே இந்திய ஆக்கிரமிப்புப் படையின் செயல்களை நியாயப்படுத்தினர். அவரது கொலையினை ஆதரிக்கவில்லை. ஆனால், தனது கொலை நடைபெறுவதைத் தடுக்கும் எந்தக் காரியத்திலும் அவரும் ஈடுபட்டிருக்கவில்லை.
  11. தானே செய்த ஒப்பந்தத்தில் குறிப்பிட்ட விடயங்களை செய்ய வினைத்திறன் இன்றி, புலிகளின் ஆயுதங்களை களைவதை தனது பிரதான பணியாகக் கொண்டு, இதர இயக்கங்களை வளர்த்து, தமிழர்கள் மீதான படுகொலைகளை ஆரம்பித்து, கூலிகளை புலிகளுக்கெதிராகத் தூண்டிவிட்டபோது, அவர்கள் மீது போர்தொடுப்பது தவறில்லை. அப்போது நடந்தது இந்தியாவின் கைக்கூலியான ஈ.பி.ஆர்.எல்.எப் எனும் கொலைக்குழுவின் காட்டாட்சி. முற்றான இராணுவ, கூலிக்குழுக்களின் அடக்குமுறையின் கீழேயே வடக்குக் கிழக்கு மாகாணங்கள் அடிமைப்பட்டுக் கிடந்தன. அந்தக் காட்டாட்சியினை குலைத்து, நிறுத்தியது சரிதான். தமிழருக்கென்று வடக்கையும் கிழக்கையும் இணைத்த இந்தியா இன்று அதுகுறித்துப் பேசுவதில்லையே, அது ஏன்? இப்போதாவது புரிகிறதா ஒப்பந்தத்தின் உண்மையான பயனாளிகள் யாரென்று?
  12. 1987 ஆம் ஆண்டு இந்தியாவுக்கும், இலங்கைக்கும் இடையே செய்யப்பட்ட இந்த ஒப்பந்தம் பற்றி பலர் கிலாகித்து எழுதுகின்றனர். தமிழர்களின் உரிமைகளைக் காத்துக்கொள்ள இந்தியா முன்னின்று செய்த அளப்பரிய சேவை என்றும் இதனைக் கருதுகின்றனர். ஆனால், உண்மை அதுவல்ல. இவ்வொப்பந்தம் செய்யப்பட்டதே இலங்கையின் ஒருமைப்பாட்டினைப் பாதுகாத்துக்கொள்வதற்காகவும், இந்தியாவின் பிராந்தியப் பாதுகாப்பினை உறுதிப்படுத்திக் கொள்வதற்காகவும் தான். இதைத்தவிர இந்த ஒப்பந்தத்தில் ஈழத்தமிழருக்குச் சார்பாகவென்று எவையுமே இருக்கவில்லை. 1. எந்த தமிழினத்தின் சார்பாக இவ்வொப்பந்தத்தினைச் செய்வதாக இந்தியா கூறிக்கொண்டு வந்ததோ, அந்தத் தமிழினத்தின் உரிமைகளை பெற்றுக்கொடுக்கத் தேவையான குறைந்தபட்ச முயற்சியினைக் கூட அது எடுக்கவில்லை. 2. ஏற்கனவே பலவீனப்பட்டுப் போயிருந்த தமிழரின் அரசியல் உரிமைகளை மேலும் பலவீனப்படுத்தும் சிங்களத்தின் முயற்சிகளைத் தடுக்கும் எந்த ஏற்பாடும் ஒப்பந்தத்தில் இருக்கவில்லை. 3. ஆனால், தமிழர்களின் நிலையினை மேலும் பலவீனப்படுத்தும் நடவடிக்கைகளே ஒப்பந்தம் முழுதும் பரவிக்கிடந்தன, உதாரணத்திற்கு வடக்கும் கிழக்கும் இணைந்திருக்க வேண்டுமா இல்லையா என்பதைத் தீர்மானிக்க தமிழர் தாயகத்தில் சில பகுதிகளில் மட்டுமே நடத்தும் சர்வஜன வாக்கெடுப்பு சமாதான ஒப்பந்தம் என்கிற பெயரில் கைச்சாத்திடப்பட்டு, சிங்கள அரசின் அகம்பாவத்தைக் கட்டுப்படுத்தும் வழிகளின்றி, தமிழர் மீதான அடக்குமுறையினை வேடிக்கை பார்த்துக்கொண்டு நின்ற இந்தியாவினால் சமாதானத்தைக் கொண்டுவரமுடியாது போனமையே ஒப்பந்தம் தோற்கடிக்கப்பட்டதன் காரணம். எந்தத் தமிழரின் நலன்காக்க ஒப்பந்தம் செய்வதாகக் கூறிக்கொண்டு இந்தியா வந்ததோ, அதே தமிழரின் நலன்களை விற்று தனது நலனை மட்டுமே அது காத்துக்கொள்ளப்போகிறது என்கிற உண்மை தெரியவந்தபோது ஒப்பந்தம் தோல்வியடைவதை எவராலும் தடுக்க முடியாது போய்விட்டது. இதற்குப் புலிகள் பொறுப்பல்ல, முழுப்பொறுப்பும் இந்தியாவையே சாரும். இந்தியாவினதும், இலங்கையினதும் கூலிகளாகச் செயற்பட்ட ஏனைய இயக்கங்கள் புலிகளை அழிக்கத் துணைபோனபோது, புலிகளளும் அவர்களை அழித்தது சரிதான். புலிகளுடந்தான் உங்களின் முரண்பாடென்றால், அரசியலையும், போராட்டத்தையும் விட்டு விட்டு ஒதுங்கியிருக்கலாம். எதிரியுடன் போய்ச் சேரவேண்டிய தேவை என்ன? எந்த மக்களுக்காகப் போராடுகிறோம் என்று கிளம்பினீர்களோ, அதே மக்களை இந்தியாவோடும், இலங்கையோடு சேந்து அழித்தபோது, உங்களை அழிப்பதைத் தவிர வேறு என்ன தெரிவினை புலிகளுக்கு விட்டுவைத்தீர்கள்? இலங்கையில் இந்திய அமைதிப்படை செய்த அட்டூழியங்களுக்குப் பின்னர், இலங்கக்யில் இந்தியா இருப்பதே தனது சொந்த நலன்களைப் பாதுகாத்துக்கொள்வதற்காகத்தான் என்று வெளிச்சமாகிய பின்னர், தமிழர்களின் போராட்டத்தை அழித்தேனும் தனது நலனைப் பாதுகாத்துக்கொள்ள இந்தியா உறுதிபூண்டிருப்பது தெரிந்த பின்னர், அவர்களை வெளியேற்ற எவருடன் சேர்ந்தால்த்தான் என்ன?
  13. கவலை வேண்டாம், படித்தாயிற்று. இப்படித் தலையங்கம் போட்டுவிட்டு,படிப்பார்களோ தெரியாது என்றால் எப்படி? சிவப்பு உங்களுக்கானதல்ல, புரிந்தால்ச் சரி! அதுசரி, ஏன் உந்த வேலை உங்களுக்கு @!
  14. ஆனால், வேதனை என்னவென்றால், இதே இளையோரை அரசுடன் இணைந்து பொருளாதாரத்தில், தொழிநுட்பத்தில், கல்வியில், தொழில் வாய்ப்பில் தம்மைப் பலப்படுத்திக்கொள்ள வேண்டும் என்கிற கோஷம் முன்வைக்கப்படுகிறது. அன்றைய கனகசுந்தரத்தையும், தேவநாயகத்தையும், ராஜதுரையையும் போல, இன்றைய டக்கிளஸையும், வியாழேந்திரனையும் இன்னும் சில இந்தியாதிகளையும் போல இனிவரும் இளையதலைமுறை அரசுடன் இணங்கிச் சென்று தமது எதிர்காலத்தை ஸ்த்திரப்படுத்திக்கொள்ள வேண்டும் என்கிற கோரிக்கை முன்வைக்கப்படுகிறது. அரசை எதிர்த்தும் எதுவும் கிடைக்கவில்லை, அரசுடன் சேர்ந்து உங்களின் வழியைப் பார்த்துக்கொள்ளுங்கள் என்கிற கூப்பாடு.
  15. ஆப்கானிஸ்த்தானிலிருந்து அமெரிக்கப்படைகள் வெளியேறியபோது நடந்த படுகொலைகளில் அரைவாசிக்கும் அதிகமானவை அமெரிக்க வீரர்களால் நடத்தப்பட்டவை 2021 ஆம் ஆண்டு ஆவணியில் அமெரிக்கப்படை அவசர அவசரமாக ஆப்கானிஸ்த்தானின் காபூல் விமான நிலையத்திலிருந்து வெளியேறிக்கொண்டிருந்த பொழுது, அவர்களுடன் பணியாற்றிய ஆப்கானியர்கள் உட்பட பல்லாயிரக்கணக்கானோர் அமெரிக்கப் படைகளுடன் விமானம் ஏறித் தப்பித்துக்கொள்ள காபூல் விமான நிலையத்தைச் சுற்றி முற்றுகையிட்டு நின்றனர். இந்தச் சனக்கூட்டத்தை அவதானித்த ஐஸிஸ் பயங்கரவாதிகள், மக்கள் கூட்டத்திற்கு நடுவே தற்கொலைத் தாக்குதல் ஒன்றினை நடத்த பலர் கொல்லப்பட்டார்கள். இவர்களுள் 13 அமெரிக்கத் துருப்பினரும், 170 ஆப்கானியர்களும் அடங்கும். இத்தாக்குதல் குறித்த ஆரம்பகட்ட விசாரணைகளை நடத்திய இரு இராணுவ வல்லுனர்கள் கொல்லப்பட்ட அனைவரும் குண்டுத்தாக்குதலில் நேரடியாகவும், குண்டுச்சிதரல்களால் பின்னரும் கொல்லப்பட்டனர் என்றும், அமெரிக்கத் துருப்பினரின் துப்பாக்கித் தாக்குதலிலோ அல்லது இங்கிலாந்துத் துருப்பினரின் தாக்குதலிலோ கொல்லப்படவில்லை என்றும் விசாரணைகளை நிறைவுசெய்திருந்தனர். ஆனால், கொல்லப்பட்ட மற்றும் காயமடைந்த ஆப்கானியர்களைப் பரிசோதித்த மருத்துவர்கள், பலரின் உடல்களில் துப்பாக்கிச் சன்னங்களைத் தாம் பார்த்ததாகக் கூறியிருந்தனர். இதனையும் மறுத்த அமெரிக்க அரசாங்கம், துருப்பினர் வான் நோக்கி எச்சரிக்கை வேட்டுக்களை மட்டுமே சுட்டதாகவும் மக்களை நோக்கியல்ல என்றும் கூறியிருந்தது. ஆனால், தற்போது கிடைத்திருக்கும் சாட்சியங்களின்படி, கொல்லப்பட்டவர்களில் அரைவாசிப் பேருக்கும் மேலானவர்கள் அமெரிக்கத் துருப்பினரின் நேரடித் துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்டிருப்பது தெரியவருகிறது. தாக்குதல் நடந்தவேளை தனது GO PRO கமெராவில் குறைந்தது 5 நிமிடங்களுக்கு மேலாக அங்கு நடந்தவற்றை ஒரு அமெரிக்க வீரர் படமாக்கியிருக்கிறார். அத்துடன் இன்னும் இரு வீரர்கள் அமெரிக்கத் துருப்புக்கள் மக்கள் மீது சுட்டதைத் தாம் கண்டதாகக் கூறுகிறார்கள். இவர்களை விடவும் காயமடைந்தவர்களையும் கொல்லப்பட்டவர்களையும் பரிசோதித்த மருத்துவர்கள் மீண்டும் ஒருமுறை இதனை உறுதிப்படுத்தியிருக்கிறார்கள். இதுகுறித்த மேலதிக விபரங்களும், அந்த ஐந்து நிமிட நேர ஒளிப்படமும் சி என் என் இணையத்தளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டிருக்கிறது. https://edition.cnn.com/2024/04/24/world/new-evidence-challenges-pentagon-account-kabul-airport-attack-intl/index.html
  16. முதலில் பெறத் தெரியவில்லை, பெறத் தெரியவில்லை என்று கூறுவதன் மூலம், சிங்களவர்கள் நல்லவர்கள், கேட்கிற மாதிரிக் கேட்டால்த் தருவார்கள், எமக்குத்தான் கேட்கத் தெரியவில்லை, எம்மில்த்தான் பிழை என்று கூறுவதை நிறுத்துங்கள். ஏனென்றால், நீங்கள் எப்படிக் கேட்டாலும் அவர்கள் தரப்போவதில்லை. இணக்க அரசியலால் உந்தப்பட்டு கருத்தெழுதும் உங்களிடமிருந்து இதனைத்தவிர‌ வேறு எதனைத்தான் எதிர்பார்க்க முடியும்? இதை எப்படிச் செய்வதாக உத்தேசம்? அரசுடன் இணைந்தா? இதுவரை அரசுடன் இணைந்த தமிழ் அரசியல்வாதிகளைக் காட்டிலும் பெரிதாக வேறு எதனைச் சாதித்து விடப்போகிறீர்கள்? இதற்கும் தமிழ் மக்கள் தமது இருப்பை பாதுகாத்துக்கொள்வதற்கும் இடையே இருக்கும் தொடர்பென்ன? கல்வி, வேலைவாய்ப்பு, தொழிநுட்பம், பொருளாதாரத்தில் தமிழ் மக்கள் சோபிக்கவில்லை என்று நினைக்கிறீர்கள் போல. எப்போதும்போலத் தமிழர்கள் இந்த விடயங்களில் நன்றாகவே செயற்படுகிறார்கள். காலத்திற்குக் காலம் கல்வியில், தொழிவாய்ப்பில் ஏற்ற இறக்கங்கள் வரலாம், ஆனால் நிரந்தரமாக வீழ்ந்ததில்லை. ஆனால், தமிழரின் பொருளாதாரமும், கல்வியும், வேலைவாய்ப்பும், தொழிநுட்பமும் அவர்களின் இருப்பைத் தக்கவைக்கப் போவதில்லை. ஏனென்றால், இவற்றிற்கும், அவர்களின் இருப்பிற்கும் தொடர்பில்லை. 1983 இலேயே தமிழர்களின் வாழ்க்கைத்தரம் கொழும்பிலும் பிற இடங்களிலும் எப்படி இருந்ததென்பதும், அவற்றினால்க்கூட‌ அவர்களை கறுப்பு யூலையில் இருந்து காப்பாற்ற முடியாமற்போனதென்பதையும் நீங்கள் மறக்கமாட்டீர்கள். யுத்த காலத்திலும் வடமாகாணமும், பிற்காலத்தில் கிழக்கு மாகாணமும் எப்படியிருந்தன‌ என்பது நாம் தெரியாதது அல்ல. இன்று புலம்பெயர் தமிழரிடையே இருக்கும் செல்வமும், அறிவும், தொழிநுட்பமும் தமிழரின் இருப்பை இலங்கையில் தக்கவைக்கப் போதுமானவையாகத் தெரியவில்லை. கோடீஸ்வரனனான சுபாஷ்கரன் கூட பிக்குகளின் காலில் வீழ்ந்தே வியாபாரம் செய்யவேண்டியிருக்கிறது. அவரால்க் கூட இருப்பைத் தக்கவைக்க முடியாது. தமிழர் மீதான கலவரங்களில் சிங்களம் முதலில் இலக்குவைப்பது அவர்களது பொறுளாதாரத்தை. பின்னர் கல்வி, வேலைவாய்ப்பு என்று தொடரும். இவை தமிழரின் இருப்பைத் தக்கவைக்கப் போதுமானவை அல்ல. வேண்டுமானால் தனி மனிதர்களாக, அடையாளத் துறப்பின் ஊடாக தமிழர்கள் சொந்த நலன்களைக் காத்துக்கொள்ளலாம். கதிர்காமரைப் போல, நீலனைப் போல. ஆனால், ஒரு இனமாக அவர்களால் முடியாது. தமது தொகுதிகளில் சில விடயங்களைச் செய்யலாம் என்பதற்காகவே அப்படி கூறினேன். ஆனால், எனது தெரிவு பாராளுமன்றப் பகிஷ்கரிப்புத்தான். இதன்மூலமே தமிழ் இனம் இலங்கையின் அரசியலமைப்பின் கீழ் தனக்கான உரிமைகளைப் பெறவோ, நலன்களைப் பாதுகாத்துக்கொள்ளவோ முடியாது என்கிற பிரச்சாரத்தை மேற்கொள்ள முடியும். இலங்கையின் ஒற்றையாட்சியியையும் பாராளுமன்றத்தையும் முற்றாகப் பகிஷ்கரிப்பதனூடாக தமிழர்கள் இன்று நடக்கும் அரசிடமிருந்து தம்மை அந்நியப்படுத்தியவர்களாக காண்பிக்க வேண்டும். தொடர்ச்சியான மக்களின் நடவடிக்கைகளே ஈற்றில் சர்வதேசத்தின் கண்களை ஈர்க்கும். ஆனால், இன்றிருக்கும் இணக்க அரசியல் செய்யும் நபர்களும், சலுகைகளின் பின்னால் திரியும் அவர்களின் ஆதரவாளர்களும், உணர்விழந்த மக்களும் இதனைச் செய்வார்களா என்பது கேள்விக்குறிதான். இறுதியாக, உணர்ச்சியற்றவை என்று எதுவும் இல்லை. நாம் இனமாக காக்கப்பட வேண்டும் என்பதும், இருப்பிற்காகப் போராடவேண்டும் என்பதும் கூட ஒரு உணர்வுதான். உணர்வற்றவர்கள் ஜடங்கள் என்று அழைக்க‌ப்படுவர், நீங்கள் எப்பிடி?
  17. பேச்சுவார்த்தைகளில் பங்கேற்கப்போவதில்லை என்று இந்தியாவிற்குக் கூட்டாக அறிவித்த போராளி அமைப்புக்கள் ஈழத்தேசிய விடுதலை முன்னணி கூட்டாக வெளியிட்ட அறிக்கை - 29 ஆனி 1985 இலங்கையுடன் சமாதானப் பேச்சுக்களில் பங்கேற்பதில்லை என்கிற தீர்மானத்தை அறிவித்தல் நான்கு முன்னணி விடுதலைப் போராட்ட அமைப்புகளான, ஈழத்தேசிய விடுதலை முன்னணியினராகிய‌ நாம், இலங்கையரச‌ படைகளால் மேற்கொள்ளப்பட்டுவரும் பாரதூரமான யுத்தநிறுத்த மீறல்களால் பூட்டானில் நடக்கவிருக்கும் பேச்சுவார்த்தைகளில் பங்கேற்பதில்லை என்கிற தீர்மானத்திற்கு வந்திருக்கிறோம். எமது தாயகத்தில் சுமூகமான நிலைமையினை ஏற்படுத்த நாம் விதித்த நிபந்தனைகளை ஏற்றுகொள்ள மறுத்துள்ள நிலையில், இலங்கை இராணுவம் வடக்குக் கிழக்கு மாகாணங்களில் தமிழ் மக்கள் மீது தொடர்ச்சியாக அட்டூழியங்களைப் புரிந்து வருகிறது. எமது மக்கள் தொடர்ந்து இராணுவ வன்முறைகளுக்கு முகம்கொடுத்து, அரச பயங்கரவாதமும், அச்சமும், பாதுகாப்பின்மையும் எமது பூர்வீகத் தாயகத்தில் நிலவும் சூழ்நிலையில் இலங்கையரசுடன் பேச்சுவார்த்தைகளில் ஈடுபடுவதில்லை என்ற நிலைப்பாட்டிற்கு வந்துள்ளோம். எமது மக்களுக்கெதிரான இராணுவ அட்டூழியங்களை கட்டவிழ்த்து விட்டிருப்பதன் மூலம், இலங்கையரசு இந்தியாவிற்குக் கொடுத்த வாக்குறுதியான பேச்சுவார்த்தைகள் இடம்பெறுவதற்கு ஏற்ப யுத்தநிறுத்தத்தினை சரியான முறையில் கடைப்பிடிப்போம் என்பதனை அப்பட்டமாக மீறியிருக்கிறது என்பதையும் சுட்டிக் காட்ட விரும்புகிறோம். பேச்சுவார்த்தைகளுக்கு மத்தியஸ்த்தம் வகிக்கவும், பேச்சுக்களின்போது உதவியினை நல்கவும், பேச்சுவார்த்தைகள் வெற்றிகரமாக நடைபெறும் எனும் உத்தரவாதத்தையும் தந்திருக்கும் இந்தியாவை நன்றியுணர்வுடன் பாராட்டும் அதேவேளை, குறிப்பிட்ட காலத்திற்கு அனைத்துவிதமான ஆயுதச் செயற்பாடுகளையும் முடிவிற்குக் கொண்டுவந்து, இலங்கையரசாங்கம் தமிழருக்கு நிரந்தரமான அரசியல்த் தீர்வை பேச்சுவார்த்தை மேசையில் முன்வைப்பதற்கான சூழ்நிலையினை ஏற்படுத்திக் கொடுக்க நாம் விரும்புகிறோம். சுமூகமான சூழ்நிலையினை ஏற்படுத்தும் முகமாக நாம் சில நிபந்தனைகளையும் இத்தால் முன்வைக்கிறோம். பின்வரும் விடயங்களை இலங்கையரசாங்கம் நிறைவேற்றவேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம், 1. இராணுவத்தை முகாம்களுக்குள் அழைத்துக்கொள்ளுதல் 2. வாகன நடமட்டாத்திற்கெதிரான தடையினை விலக்கிக் கொள்ளுதல். 3. அவசரகாலச் சட்டத்தினையும், ஊரடங்கு உத்தரவினையும் விலக்கிக் கொள்ளுதல். 4. கடற்கண்காணிப்பையும், தடைசெய்யப்பட்ட வலயங்களையும் விலக்கிக்கொள்ளுதல். 5. வடக்குக் கிழக்கில் ஆயுதமயமாக்கப்பட்ட சிங்களக் குடியேற்றங்களை நிறுத்துதல். 6. அனைத்து அரசியற் கைதிகளையும் விடுதலை செய்தல். யுத்த நிறுத்தம் அறிவிக்கப்பட்ட நாளிலிருந்து 10 - 12 வாரங்கள் வரையான காலப்பகுதிக்குள் இலங்கையரசாங்கம் இனப்பிரச்சினையினைத் தீர்க்க நிரந்தரமான தீர்வொன்றினை முன்வைக்க வேண்டும் என்று கேட்டிருந்தோம். தீர்க்கமான தீர்வொன்றினை அடிப்படையாக வைத்தே பேச்சுக்களில் நாம் பங்குபற்ற முடியும் என்பதையும் தெளிவாகச் சொல்லியிருந்தோம். தமிழரின் பிரச்சினைக்கான கெளரவமான தீர்வொன்றைத் தருவதாக கூறிக் காலங்காலமாக தமிழரை தொடர்ச்சியாக ஆட்சிக்கு வந்த சிங்கள அரசுகள் ஏமாற்றிய வரலாற்றின் பின்னணியிலேயே நாம் அந்த நிலைப்பாட்டிற்கு வந்திருந்தோம். தம்மால் ஏற்றுக்கொள்ளப்பட்ட பல ஒப்பந்தங்களை தாமே கிழித்தெறிந்த சிங்கள அரசுகள் ஒப்பந்தங்களை நிறைவேற்றாது ஏமாற்றிய வரலாறே எம்முன்னால் இன்று இருக்கிறது. இந்தியாவின் மத்தியஸ்த்தத்தினூடாக எமது கோரிக்கைகளுக்கு ஆரம்பத்தில் இணங்கிய இலங்கையரசாங்கம், தற்போது எமது இணக்கப்பாடு இன்றியே ஒரு தலைப்பட்சமாக ஆவனி 18 ஆம் திகதியிலிருந்து யுத்தநிறுத்தத்தைக் கடைப்பிடிக்கப்போவதாக அறிவித்திருக்கிறது. அப்படியிருந்தபோதிலும், நாம் அந்த யுத்தநிறுத்தத்தினை ஏற்றுக்கொண்டு, இலங்கையரசாங்கம் பேச்சுக்களுக்கான சாதகமான சூழ்நிலையினை ஏறப்டுத்தும் என்கிற நம்பிக்கையில், நாமும் வன்முறைத் தவிர்ப்பினைக் கடைப்பிடித்து வருகிறோம். யுத்த நிறுத்த திட்டத்திற்கேற்ப, நாம் அதனை நேர்த்தியாகக் கடைப்பிடித்து வருகையில், இலங்கையரசாங்கம் இடைவிடாது தனது இராணுவ அட்டூழியங்களை அப்பாவித் தமிழ் மக்கள் மீது கட்டவிழ்த்துவிட்டு படுகொலைகளிலும், துன்புறுத்தல்களிலும் ஈடுபட்டு வருகிறது. இராணுவத்தினர் யுத்த நிறுத்த ஒப்பந்தத்தில் கூறப்பட்டதற்கு முரணாக, தமது முகாம்களை விட்டு வெளியே வந்து சோதனைகளிலும், தேடியழிக்கும் நடவடிக்கைகளிலும் இப்போதும் ஈடுபட்டு வருகின்றனர். குறிப்பாக கிழக்கு மாகாணத்தில் இராணுவத்தினரின் கெடுபிடிகள் அதிகரித்திருக்கின்றன. திருகோணமலை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களின் பல பகுதிகளிலும் இரவுவேளைகளில் தேடியழிக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுவரும் இராணுவத்தினரும், கடற்படையினரும், பொலீஸாரும் தமிழ் மக்களின் வீடுகள் மீது தாக்குதல்களில் ஈடுபட்டு வருவதுடன், அப்பாவித் தமிழர்கள் மீது கண்மூடித்தனமான தாக்குதல்களிலும், தமிழ்ப் பெண்கள் மீது பாலியல் வன்புணர்வுகளிலும் ஈடுபட்டு வருகின்றனர். மன்னார் மாவட்டத்தில் பல அப்பாவித் தமிழ் இளைஞர்கள் இராணுவத்தினரால் படுகொலை செய்யப்பட்டு வருகின்றனர். மன்னார், முருங்கன் மற்றும் மூதூர் ஆகிய பகுதிகளில் கைதுசெய்யப்பட்டுப் படுகொலைசெய்யப்பட்ட தமிழ் இளைஞர்களின் உடல்கள் அடையாளம் காணமுடியாதவாறு இராணுவத்தினரால் எரியூட்டப்பட்டு வருகின்றன. திருகோணமலை மாவட்டத்திலிருந்து விரட்டியடிக்கப்பட்ட தமிழ் அகதிகள் யுத்த நிறுத்ததையடுத்து எரித்துச் சாம்பலாக்கப்பட்ட தமது வீடுகளுக்குத் திரும்பியவேளை அவர்கள் மீது துப்பாக்கித் தாக்குதல் நடத்தி மீண்டும் விரட்டியடித்திருக்கிறது இராணுவம். தமது காணிகளில் இருந்து அறுவடைகளை எடுத்துக்கொள்ளச் சென்ற விவசாயிகள் கூட இராணுவத்தால் கடுமையாகத் தாக்கப்பட்டு விரட்டியடிக்கப்பட்டிருக்கிறார்கள். அரசாங்கம் தான் கடற்கண்காணிப்பையும், கடற் தடையினையும் விலக்கிக்கொள்வதாக உத்தியோகபூர்வமாக அறிவித்த பின்னரும் எமது மீனவர்கள் கடற்படையினரால் தொடர்ச்சியாகத் தாக்கப்பட்டு வருகிறார்கள். இதனால் தொழிலுக்குச் செல்லவே அவர்கள் அஞ்சுகிறார்கள். அவசரகாலச் சட்ட விதிகளையும், மக்களின் சுதந்திரமான நடமாட்டத்திற்கெதிரான‌ தடையினையும் விலக்கிக்கொள்வதாக அரசாங்கம் அறிவித்துள்ளபொழுதிலும், இராணுவத்தினர் வீதித் தடைகளை ஏற்படுத்தி எமது மக்களின் சுதந்திரமான நடமாட்டத்திற்கு தடைபோட்டு வருகிறார்கள். மேலும், ஊரடங்குச் சட்டம் தற்போதும் இராணுவத்தினரால் அமுல்ப்படுத்தப்பட்டே வருகிறது. அத்துடன், இலங்கையின் பல்வேறு சிறைகளிலும், இராணுவ முகாம்களிலும் தடுத்துவைக்கப்பட்டிருக்கும் 2,000 இற்கும் அதிகமான தமிழ் அரசியல்க் கைதிகளை அரசாங்கம் இதுவரை விடுதலை செய்யவில்லை. மேலும், இலங்கையின் தேசிய பாதுகாப்பு அமைச்சரினால் விடுக்கப்பட்டிருக்கும் மூர்க்கத்தனமானதும், போர்க்குணம் மிக்கதுமான அறிக்கையில், சுமூகமான சூழ்நிலையினை உருவாக்கும் பொருட்டு ஈழத்தேசிய விடுதலை முன்னணியினரால் முன்வைக்கப்பட்ட நிபந்தனைகள் எதனையும் ஏற்றுக்கொள்ள முடியாது என்று வெளிப்படையாக பிரகடணம் செய்திருக்கிறார். இதனூடாக, சுமூகமான சூழ்நிலையினை ஏற்படுத்துவதற்கான யுத்த நிறுத்தத்தில் இதயசுத்தியுடன் ஈடுபட விரும்பவில்லை என்பதை இலங்கை அரசாங்கம் நிரூபித்திருக்கிறது. எமது வேண்டுகோளான தமிழரின் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வைத் தரும் ஆலோசனைகளை பேச்சுவார்த்தைக்கு முன்னோடியாக முன்வைய்யுங்கள் என்பதனை இலங்கையரசாங்கம் முற்றாக நிராகரித்திருக்கிறது. அதற்குப் பதிலாக, பயனற்ற கருத்துப் பரிமாற்றத்திற்குள்ளும், பிரச்சினைகளை முன்கொண்டுவருவோம் என்கிற போர்வையில் முடிவில்லாத‌ வட்ட மேசை கூட்டங்களுக்குள்ளும் எம்மை இழுத்துவிட இலங்கையரசு முயன்று வருகிறது. அடுத்ததாக‌, உத்தேசப் பேச்சுவார்த்தைகளில், "ஆயுததாரிகளுக்கான" வழிகாட்டியாகவும், தமிழ் மக்களின் அரசியல்த் தலைமையாகவும் தம்மை தாமே வரிந்துகொண்டிருக்கும் தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியின் நிலைப்பாட்டிற்கெதிரான எமது கருத்தினையும் இத்தால் பதிவுசெய்கிறோம். ஒரு அரசியல் அமைப்பாக, தமிழ் மக்களின் நம்பகத்தன்மையினையும், ஆதரவையும் இழந்திருக்கும் தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியினர், பேச்சுவார்த்தைகளில் தமிழர்களின் ஏக பிரதிநிதிகளாகக் கலந்துகொள்வதை நாம் முற்றாக எதிர்க்கிறோம். யுத்த நிறுத்தத்தினை அமுல்ப்படுத்துகிறோம் என்று கூறிய பின்னரும் எம்மக்கள் மீது சிங்கள இராணுவத்தால் மேற்கொள்ளப்பட்டு வரும் தொடர்ச்சியான அட்டூழியங்கள் குறித்து வாய்மூடி மெளனமாக இருக்கும் தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியினர், ஈழத் தமிழர்களுக்கான ஏக பிரதிநிதிகளாக ஒருபோதும் இருக்க முடியாது என்பதை நிரூபித்திருக்கிறார்கள். இவர்களின் தற்போதைய செயற்பாடுகள், பேச்சுவார்த்தைகளின் போது இவர்கள் எடுக்கப்போகும் முடிவுகள் குறித்துக் கடுமையான சந்தேகங்களை தமிழ் மக்கள் மத்தியில் ஏற்படுத்தி விட்டிருக்கின்றன. தமிழ் மக்களுக்கான கெளரவமானதும், கண்ணியமானதுமான நிரந்தர அரசியல்த் தீர்வு ஒன்றைப் பெற்றுக்கொடுப்பதில் இந்தியாவிற்கு இருக்கும் அக்கறையில் நாம் நம்பிக்கை வைத்திருக்கிறோம் என்று எமது முன்னைய அறிக்கையிலும் குறிப்பிட்டிருந்தோம், அதனையே இப்போதும் நாம் கூறுகிறோம். இந்தியா, இலங்கையரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுப்பதன் மூலம், பேச்சுவார்த்தைகளுக்கான சுமூகமான சூழ்நிலையினை உருவாக்கும் பொருட்டு யுத்த நிறுத்ததை முழுமையாகக் கடைப்பிடிக்கும்படி கோரவேண்டும் என்றும் கேட்டுக்கொள்கிறோம். இப்படிக்கு அரசியல்க் குழு ‍- தமிழீழ விடுதலைப் புலிகள் ஈழ‌ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி தமிழீழ விடுதலை இயக்கம் புரட்சிகர நிர்வாகக் குழு - ஈழப் புரட்சிகர முன்னணி
  18. ஈழத்தேசிய விடுதலை முன்னணியின் தலைவர்களில் சிறீ சபாரட்ணமே தன்னைக் கொல்ல முயற்சிக்கக் கூடும் என்று கருதிய பிரபாகரன் திம்புப் பேச்சுக்களில் தாம் பங்கேற்பதற்கு ஈழத்தேசிய விடுதலை முன்னணியின் தலைவர்கள் தயக்கம் காட்டிவந்தவேளை, இந்தியாவுடனும், இலங்கையரசாங்கத்துடனும் தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியினர் காட்டிய நெருக்கமும், ஒத்துழைப்பும் அவர்களைச் சீற்றங்கொள்ள வைத்தது. இந்தியாவைப் பகைத்துக்கொள்ளாமல், ஜெயார் விரித்திருக்கும் சமாதானப் பொறிக்குள் இருந்து எப்படியாவது வெளியே வந்துவிட வேண்டுமென்று அவர்கள் எதிர்பார்த்துக்கொண்டிருந்தனர். ஆனால், தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியினரோ பேச்சுவார்த்தைகள் குறித்து மிகுந்த எதிர்பார்ப்புடனும், நம்பிக்கையுடனும் செயற்பட்டுக்கொண்டிருந்தனர். ஆகவே, அதிகாரங்களற்ற மாவட்ட சபைகளை அடிப்படையாகக் கொண்ட அரசியலமைப்பு ஒன்றினூடாக தீர்வொன்றினைக் காண்பதில் தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியினர் காட்டிய ஈடுபாடும், அக்கறையும் போராளிகளின் தலைவர்கள் மத்தியில் தம்மை தட்டிக்கழிக்கும் முன்னணியினரின் கைங்கரியம் எனும் தோற்றப்பாட்டினை ஏற்படுத்தியிருந்தது. சந்திரிக்கா, விஜய குமாரதுங்க, ஒஸி அபயகுணசேகர, பத்மநாபா, கேதீஸ்வரன் - சூளைமேடு, சென்னை 1986 ஆனி 28 ஆம் திகதி ஈழத்தேசிய விடுதலை முன்னணியினர் நடத்திய நீண்ட கலந்துரையாடல்களின்போது திம்புப் பேச்சுக்கள் தொடர்பான தமது நிலைப்பாடு, தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணி வகிக்கப்போகும் பாகம் மற்றும் யுத்த நிறுத்தம் குறித்துப் பேசினர். ஈழத்தேசிய விடுதலை முன்னணியின் அலுவலகத்தில் இச்சந்திப்பு இடம்பெற்றது. பாதியில் மின்சாரம் அற்றுப்போகவே, ஈ.பி.ஆர்.எல்.எப் அமைப்பின் கேதீஸ்வரன் விளக்கொன்றைப் பற்றவைத்துக்கொண்டார். "அண்ணை, அதனை அணைத்துவிடுங்கள்" என்று பிரபாகரன் அவரைப் பார்த்துக் கூறினார். தான் எங்கே நின்றிருக்கிறார் என்பதை எவரும் அறைந்துவிடக் கூடாதென்பதில் அவர் உறுத்கியாகவிருந்தார். மின்சாரம் தடைப்பட்டவுடன், தனது இருக்கையிலிருந்து குத்தித்தெழுந்த பிரபாகரன், அருகிலிருந்து சுவரோரம் சென்று நின்றுகொண்டு, தனது கைத்துப்பாக்கியினைக் கையில் எடுத்துக்கொண்டார். இந்தச் சம்பவம் குறித்துப் பிந்நாட்களில் என்னிடம் பேசிய ரமேஷ், பிரபாகரன், சபாரட்ணத்தின் பின்னாலேயே நின்று கொண்டதாகவும், அன்று கூட்டத்தில் இருந்தவர்களில் சபாரட்ணம் மட்டுமே தன்னைக் கொல்ல எத்தனிக்கக் கூடும் என்று பிரபாகரன் கருதியிருந்ததாகவும் குறிப்பிட்டார். ஆனால், சில நிமிடங்களிலேயே மின்சாரம் மீண்டும் கிடைத்தது. "இது சாதாரண மிந்துண்டிப்புப் போல இருக்கிறது" என்று கூறிக்கொண்டே பிரபாகரன் தனது இருக்கையில் மீண்டும் சென்று அமர்ந்துகொண்டார். புலிகளின் அலுவலகத்தில் ஈழத்தேசிய விடுதலை முன்னணியினர் கூடியபோது இடம்பெற்ற இன்னொரு மின்சாரத் துண்டிப்புக் குறித்தும் ரமேஷ் என்னிடம் விபரித்திருந்தார். மின்சாரம் துண்டிக்கப்பட்டவுடன், அங்கிருந்த‌ மின்பிறப்பாக்கி உடனடியாகவே இயங்கத் தொடங்கியது. "பிரபாகரன் தனது பாதுகாப்புக் குறித்து மட்டுமே அக்கறை கொண்டவரல்ல, எந்தச் சூழ்நிலைக்கும் தன்னைத் தயாராக வைத்திருப்பதிலும் கவனம் கொண்டவர்" என்று ரமேஷ் மேலும் கூறினார். சிறீ சபாரட்ணம் ஆனி 28 ஆம் திகதி நடைபெற்ற ஈழத் தேசிய விடுதலை முன்னணியின் கூட்டத்தில், பிரபாகரனின் கருத்தின்படி, பேச்சுவார்த்தைகளில் இருந்து முடிந்தவரையில் விரைவாக வெளியேறிவிட வேண்டும் என்று அனைவரும் ஒத்துக்கொண்டனர். மேலும், ஜெயவர்த்தனவின் அரசாங்கம் மீது குற்றம் ஒன்றினைத் தம்மால் நிரூபிக்க முடியும் தறுவாயில், பேச்சுக்களில் இருந்து வெளிநடப்புச் செய்வதாகவும் அவர்கள் முடிவெடுத்தனர். தனது இராணுவத்தைப் பலப்படுத்துவதற்கான கால அவகாசத்தினைப் பெற்றுக்கொள்ளவே ஜெயவர்த்தன பேச்சுக்களை நடத்த ஒப்புக்கொண்டிருக்கிறார் என்பதைப் பிரபாகரன் தொடர்ச்சியாகவே கூறிவந்தார். ஆகவே, ஜெயவர்த்தனவின் தந்திரத்தை அவரது தந்திரத்தினாலேயே தாம் வீழ்த்தவேண்டும் என்றும் பிரபாகரன் ஏனைய தலைவர்களிடம் கூறினார். ஆகவே, பேச்சுக்களில் தாம் பங்கேற்கவியலாது என்பதை இந்தியாவிடம் தெரிவிப்பதற்கான திட்டம் ஒன்றினை அவர்கள் உருவாக்கினார்கள். இந்தியாவிற்கு தாம் வழங்கவிருக்கும் ஒன்றிணைந்த அறிக்கையில், இலங்கை இராணுவத்தினரின் தொடர்ச்சியான யுத்த நிறுத்த மீறல்களைக் காரணமாக அவர்கள் காட்டியிருந்தனர். ஆகவே, பேச்சுவார்த்தை மேசையில், பங்களிப்பில்லாத ஒரு தரப்பாக மட்டுமே செயற்படப் போவதாகவும், பேச்சுக்களுக்கான அத்தியாவசிய அடிப்படையான ஒரு தரப்பு என்கிற காரணத்திற்காகவும், சிங்களவர்கள் ஒருபோதும் தமிழருக்கு நீதியான‌ தீர்வொன்றினைத் தரப்போவதில்லையென்பதை உலகிற்குக் காட்டவுமே தாம் பேச்சுக்களில் பங்கெடுக்கப்போவதாகவும் இந்த அறிக்கையில் அவர்கள் குறிப்பிட்டனர். போராளிகளால் முன்வைக்கப்பட்ட நிபந்தனைகளை ஏற்றுக்கொள்ள இலங்கையரசு மறுத்தமையே தமிழீழத்திற்கான அடிக்கல் என்று பிரபாகரன் ஏனையவர்களிடம் தெரிவித்தார். அன்றைய கூட்டத்தில், தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியின் தலைவர்கள் திம்புப் பேச்சுக்களில் பங்குபற்றக் கூடாது என்றும் போராளிகள் முடிவெடுத்தனர். போராளிகளின் இணைந்த அறிக்கை பாலசிங்கத்தால் தயாரிக்கப்பட்டு சந்திரசேகரனூடாக இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகத்திற்கு அனுப்பிவைக்கப்பட்டது.
  19. இலங்கை இராணுவம் யுத்தநிறுத்த மீறல்களில் ஈடுபட்டிருக்க, அரசாங்கத்திற்கு கொழும்பில் நற்சான்று வழங்கிய தர்மலிங்கமும் ஆளாளசுந்தரமும் பிரபாகரன் தனது கரங்களைப் பலப்படுத்த தமிழ் மக்கள் தனக்கு உதவ வேண்டும் என்று கேட்டிருந்த நிலையில், மக்களின் ஆதரவினை இழந்துவிட்டிருந்த தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியோ தனது முன்னைய அரைசியல்த் தலைமை எனும் பதவியினை மீளப்பெற்றுக்கொள்ளும் நடவடிக்கைகளில் இறங்கியது. சென்னையிலிருந்து அது வெளியிட்ட அறிக்கையில் தமிழ் மக்கள் சார்பாகவே தாம் பேச்சுக்களில் பங்கெடுக்கப்போவதான பாவனையுடன் கூறியிருந்தது. அறிக்கையின் ஒரு பகுதியில், "தமிழ் மக்களின் அரசியல் தலைமைத்துவத்தை வழங்கும் அதேவேளை பேச்சுவார்த்தை மேசையில் "ஆயுததாரிகளுக்கான" வழிகாட்டியாகவும் தாம் செயற்படப்போவதாக" வும் அது கூறியிருந்தது. 1984 ஆம் ஆண்டு மார்கழியில் ஏற்பட்ட சர்வகட்சி மாநாட்டின் தோல்வியினையடுத்து தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியினரை இலங்கையரசாங்கமும், இந்தியாவும் முன்னிலைப்படுத்துவதைத் தவிர்த்தே வந்திருந்தமையினால், திம்புப் பேச்சுவார்த்தையினூடாக தமக்கும் ஒரு வகிபாகம் கிடைத்திருப்பதாக முன்னணி எண்ணியது. பெரும்பாலான முன்னணியின் தலைவர்கள் சென்னைக்குத் தப்பிச் சென்றிருந்தவேளை, யாழ்ப்பாணத்தில் அப்போதுவரை தங்கியிருந்த முன்னாள் உடுவில்த் தொகுதி பாராளுமன்ற உறுப்பினரான தர்மலிங்கத்துடனும், கோப்பாய்த் தொகுதியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எஸ். ஆளாளசுந்தரத்துடனும் தொலைபேசியில் தொடர்புகொண்ட அமிர்தலிங்கம் கட்சியினை உயிர்ப்பிக்கும் நடவடிக்கைகளில் உடனடியாக இறங்குமாறு கேட்டுக்கொண்டார். மேலும், அவர்களை உடனடியாகக் கொழும்பிற்குச் சென்று, அரசினதும் எதிர்க்கட்சியினதும் உயர்மட்டத் தலைவர்களுடன் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டு, அரசியல்த் தீர்வினை அடைவதற்கான அரசியலமைப்பு மாற்றங்கள் குறித்து கலந்தாலோசிக்குமாறும் பணித்தார். வி தர்மலிங்கம் ஆளாளசுந்தரமும், தர்மலிங்கமும் கொழும்பிற்குச் சென்றிருந்தவேளை புதிய இந்தியத் தூதுவர் டிக் ஷிட்டையும், யுத்த நிறுத்தம் குறித்தும், பேச்சுவார்த்தை குறித்தும் இலங்கையரசாங்கத்துடன் பேசுவதற்காக அப்போது கொழும்பிற்கு வந்திருந்த இந்திய வெளியுறவுத்துறைச் செயலாளர் பண்டாரியையும் சந்தித்துப் பேசினார்கள். ஆளாளசுந்தரம் பேச்சுவார்த்தையினை நடத்துவதற்கான இடமாக இந்தியா பரிந்துரை செய்திருந்த மலைகளைக் கொண்ட நாடான பூட்டானை ஜெயவர்த்தன ஏற்றுக்கொண்டார். மேலும், இந்தியா பரிந்துரை செய்த ஈழத்தேசிய விடுதலை முன்னணியின் நான்கு போராளி அமைப்புக்கள், புளொட் அமைப்பு மற்றும் தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியினர் ஆகியோர் பேச்சுக்களில் தமிழர் தரப்பாகக் கலந்துகொள்வதையும் ஜெயார் ஏற்றுக்கொண்டார். ஜெயாருடன் பேசிய பண்டாரி, ஒவ்வொரு போராளி அமைப்பும் இரு பிரதிநிதிகளை பேச்சுவார்த்தை மேசைக்கு அனுப்பி வைக்கும் என்றும் கூறினார். அடுத்ததாக, பேச்சுவார்த்தையின் முதலாம் கட்டத்தின் ஆரம்ப நாளாக இந்தியா முன்வைத்த ஆடி 8 ஆம் திகதியினையும் ஜெயார் ஏற்றுக்கொண்டார். கொழும்பிலிருந்து தில்லி திரும்பும் வழியில் சென்னையில் தரித்துச் சென்ற பண்டாரி, அங்கு எம் ஜி ஆரையும் தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியின் தலைவர்களையும் சந்தித்துவிட்டுச் சென்றார். தாம் கொழும்பில் நின்றிருந்தவேளை அறிக்கையொன்றினை வெளியிட்ட ஆளாளசுந்தரமும், தர்மலிங்கமும், அரசாங்கத்தின் தலைவர்கள் இனப்பிரச்சினைக்கான தீர்வினைக் காண்பதில் உறுதியாக இருப்பதாக தம்மிடம் கூறியிருப்பதாகத் தெரிவித்தனர். மேலும், யுத்தநிறுத்தத்தினை நேர்மையாகவும், நீதியுடனும் கடைப்பிடிக்கப்போவதாக அரசாங்கம் தம்மிடம் உறுதியளித்திருப்பதாகவும் தெரிவித்தனர். அவர்களின் அறிக்கை வெளிவந்துகொண்டிருந்தபோதே இராணுவத்தினரும், பொலீஸாரும் தேடியழிக்கும் நடவடிக்கைகளைத் தொடர்ந்துகொண்டிருந்தனர். கிழக்கு மாகாணத்தில் பயங்கரவாதத் தடைச் சட்டத்தினைப் பாவித்து ஆயிரக்கணக்கான தமிழ் இளைஞர்கள் கைதுசெய்யப்பட்டு அடைத்துவைக்கப்பட்டனர். யுத்தநிறுத்தம் அமுலுக்கு வந்ததையடுத்து தமது சொந்தக் கிராமங்களுக்குத் திரும்பிய திருகோணமலை மாவட்டத் தமிழர்கள் இராணுவத்தினரால் மீண்டும் அடித்து விரட்டப்பட்டனர். மேலும், மீனவர்களின் மீதான கடற்படையின் அடாவடித்தனங்களும் என்றும்போல தொடர்ச்சியாகவே நடைபெற்று வந்தன. ஆனால், இந்த யுத்த நிறுத்த மீறல்கள் குறித்த எந்த கண்டிப்புகளும் இன்றி, யுத்தநிறுத்தம் தொடர்பாக இலங்கையரசாங்கம் நேர்மையுடன் செயற்படப்போவதாக தம்மிடம் உறுதியளித்திருக்கிறது என்று ஆளாளசுந்தரமும், தர்மலிங்கமும் கொழும்பிலிருந்து வெளியிட்ட அறிக்கை கூறியது. அமிர்தலிங்கம், சம்பந்தன், சிவசிதம்பரம் ஆகியோர் சென்னைக்கும் தில்லிக்கும் இடையே அடிக்கடி பறந்து இந்திய அதிகாரிகளுக்கும், இலங்கையதிகாரிகளுக்கும் இறுதித் தீர்விற்காக அரசியலமைப்பு ரீதியாகச் செய்யப்பட வேண்டிய மற்றங்கள் குறித்து உதவி வழங்கிக்கொண்டு வந்தனர். இந்தியாவின் பிரதம வழக்குரைஞர் கே. பரஸ்வரத்துடன் ஆனி மாதத்தில் ஜெயாரின் சகோதரன் H.W. ஜெயவர்த்தன நடத்திய பேச்சுக்களையடுத்து, ஒற்றையாட்சி யாப்பினைப் பாதிக்காத வகையில் மாவட்ட சபைகளை பலப்படுத்துவது குறித்த வேலைத்திட்டங்களில் தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியின் தலைவர்கள் தீவிரமாக ஈடுபட்டு வந்தனர். இதுதொடர்பாக பரஸ்வரம் அமிர்தலிங்கத்துடன் தொடர்புகொண்டபோது, இலங்கைக்கும், இந்தியாவிற்கும் உகந்தவகையில் அரசியலமைப்பினை உருவாக்குவதற்கான செயற்பாடுகளில் அமிர்தலிங்கமும் ஏனைய முன்னணியின் தலைவர்களும் அவருக்கு உத‌வினர்.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.