இறுதிக் காலத்திலும் திருக்குறளை பழித்தும் பேசிய பெரியார்
இறுதிக் காலத்திலும் திருக்குறளை பழித்துப் பேசிய பெரியார்
வாலசா வல்லவனுக்கு மறுப்பு!
( வாலாசா வல்லவன் )
திராவிட சொம்பு வாலாசா வல்லவன் அவர்கள் திருக்குறளை பெரியார் மலத்தோடு ஒப்பிட்டதாக சீமான் பேசியுள்ளார். அதற்கு சான்று காட்ட முடியுமா? என்று கேள்வி எழுப்பினார்.
நானும் சான்றோடு ஐயா ஆனைமுத்து தொகுத்த “ஈ.வெரா. சிந்தனை தொகுப்புகள்” நூலிலிருந்து வெளியிட்டேன். அதை மறுக்க முடியாத திராவிட சொம்பு வாலாசா வல்லவன் பெரியார் எழுதியவை முழுமையாக இல்லை என்றார்.
நான் முழுமையின் சுருக்கத்தை தெளிவாகவே எழுதியுள்ளேன். பின்வருமாறு:
பெரியார் திருக்குறளை மலத்தோடு
ஒப்பிட்டார். ஆதாரம் இதோ….
பெரியாரியவாதிகள் பலரும் பெரியார் மலத்தோடு ஒப்பிட்டு கூறியதை மறுத்து வருகின்றனர்.
பெரியார் பேசினார் என்பதற்கு ஐயா ஆனைமுத்து தொகுத்த ஈ.வெ.ரா. சிந்தனைகள் , ( தொகுதி 2, பக்கம் 1259 ) புத்தகம் சான்றாக உள்ளது. ஐயா ஆனை முத்து அமைப்பில் இருக்கக்கூடிய தோழர் வாலசா வல்வவன் அவர்களே இதனை மறுப்பதுதான் பெரிய வேடிக்கையாக உள்ளது.
“வள்ளுவர் குறளையும் அந்தப்படியே அப்போது பகுத்தறிவுக்கு ஏற்றதல்ல என்று கண்டித்து வந்தேன். எல்லாவற்றையும் குறை சொல்லும் போது பலர் என்னிடம் எல்லாம் போய் விட்டால் நமக்கு எது தான் நூல் என்று கேட்டார்கள். நான் இங்கே இருக்கிற மலத்தினால் கெட்ட நாற்றம் வீசுகிறது. அதை எடுத்து விடு என்று கூறினால் அந்த இடத்தில் என்ன வைப்பது என்றா கேட்பது ? என்று பதில் கூறினேன்.”
பெரியாரின் இந்த பேச்சு என்பது திருக்குறளை பெரியார் ஏற்றுக் கொண்ட பின்னர் அவரே கூறிய ஒரு செய்தியாகும். எனவே இதனை கடந்த காலத்தில் அவர் பேசியதாக எடுத்துக் கொள்ள வேண்டும் என்றும் பெரியாரியவாதிகள் வாதிடுகின்றனர்.
கடந்த காலத்தில் அவர் பேசியிருந்தாலும் அவரின் உள்ளக்கிடக்கை தானே அதில் வெளிப்படுகிறது. திருக்குறளை ஏற்றுக் கொண்ட பின்னர் அதனை சொல்ல வேண்டிய அவசியமில்லையே? இப்படி பேசியதற்காக துளியுண்டு வருத்தம் கூட அந்த உரையில் தெரிவிக்காதது ஏன்?
பரிமேலழகர் உரையை படித்ததால் திருக்குறளை மறுத்து வந்ததாகக் கூறும் பெரியார் பலரின் உரையை படித்த பிறகு தன் நிலையை மாற்றிக் கொண்டதாக தெரிவிக்கிறார். உண்மை அதுவெனில், திருக்குறளை ஆதரிக்கும் நிலைக்கு வந்த பிறகு திரும்பவும் கடுமையாக மறுக்கும் நிலைக்குச் சென்றதேன்?
திருக்குறளை மலத்திற்குச் சமமாக நினைக்கும் புத்திதான் திரும்ப திரும்ப அவரின் வாழ்வின் இறுதி காலத்திலும் ஆட்டிப் படைத்திருக்கிறது.
இல்லையென்றால் அண்ணா ஆட்சி காலத்தில் கடவுள் படத்தோடு சேர்த்து வள்ளுவர் படத்தை அகற்றச் சொல்லியிருப்பாரா?
“நான் ஒருவன் தான் திருக்குறளை எதிர்த்தேன் ” (27.12.1972 கலைமகள் இதழ் பேட்டி)
-என்று வாழ்வின் இறுதிக் காலத்தில் கூறுகிறார். பெரியார் இப்படி சவால் விட்டுச் சொல்வதை திறனாய்வு என்று எப்படிச் சொல்ல முடியும்? இது திருக்குறளின் மீதான வன்மத்தை தானே வெளிக் காட்டுகிறது.”
இதற்கு மேல் திராவிட சொம்பு வாலாசா வல்லவனுக்கு என்ன பதில் வேண்டும்?
பெரியார் (1950க்கு ) முன்பு திருக்குறளை பகுத்தறிவுக்கு ஒவ்வாத நூலாக கருதியதையும் மலத்திற்கு எடுத்துக் காட்டாகக் கூறியதையும் திராவிட சொம்பு வாலாசா வல்லவன் எப்படி கருதுகிறார்?
கடந்த காலத்தில் பேசியது தவறு என்று சொல்ல அவரின் முரட்டு பெரியார் பக்தியானது இடம் தரவில்லையோ?
அதே கட்டுரையில் , பரிமேலழகர் உரையை தவறு என்று அறிவாளிகள் கூறியதால் திருக்குறளை ஆதரிக்க முன் வந்தேன் என்று கூறும் பெரியார் திருக்குறளின் மேன்மை குறித்து விரிவாகத் தெரிவிக்கிறார்.
இதைப் படித்து விட்டு திராவிட சொம்பு வாலாசா வல்லவன் அவர்கள் பெரியார் திருக்குறளை ஆதரித்துப் பேசியதை நான் வெட்டி விட்டதாக ஆதங்கப்படுகிறார்.
ஆனால் உண்மை என்னவெனில், திருக்குறள் எதிர்ப்பு – ஆதரவு- எதிர்ப்பு என்று மாறி மாறி நிலைப்பாடு எடுக்கும் பெரியார் குறித்து விமர்சிக்காமல், தனக்குத் தேவையானதை மட்டும் வெட்டி எடுத்துப் பேசுவதுதான் திராவிட சொம்பு வாலசா வல்லவனுடைய வேலையாகும்.
கால வரிசைப்படிப் திருக்குறள் குறித்து பெரியார் என்ன பேசினார் என்பதை திராவிட சொம்பு வாலாசா வல்லவன் எழுதத் தயாரா?
முரண்பாடுகளின் மொத்த உருவம் தான் பெரியார் என்பதுதான் எனது நிலைப்பாடு. இதைச் சொன்னால் வாலாசா வல்லவன் போன்ற பெரியாரின் முரட்டுப் பக்தர்களுக்கு கோபம் வருகிறது.
திருக்குறள் மீது எப்போதும் காழ்ப்புணர்ச்சியோடு கருத்து மாறுபாடு கொண்டவர் பெரியார். சில குறள்களில் தனக்கு உடன்பாடு இருப்பதைப் போல காட்டிக் கொள்வார்.
ஒரு கால கட்டத்தில் அதன் அடிப்படை கருத்து ‘ஆரிய எதிர்ப்பு’ என்பார். மற்றுமொரு கால கட்டத்தில் அதன் அடிப்படை கருத்து ‘ஆரிய ஆதரவு’ என்பார்.
தமிழை எந்தளவுக்குப் பழித்தாரோ அந்த அளவுக்கு திருக்குறளை பழிக்கவும் தயங்கியதில்லை.
இவர் 1949இல் சென்னையில் திருக்குறள் மாநாடு நடத்தியதை பெருமை பொங்க பேசுபவர்கள் கடந்த காலத்தில் திருக்குறளை மலத்தோடு ஒப்பிட்டுக் கூறியதைக் கண்டு சினம் கொள்ள மாட்டார்கள்.
திருக்குறள் குறித்து பெரியாரின் ஆதரவு நிலைப்பாட்டை முதலில் காண்போம்.
14.3.1948 மயிலாப்பூர் திருவள்ளுவர் கழகம் சார்பில் நடைபெற்ற திருவள்ளுவர் மாநாட்டில், “திருக்குறளில் எத்தகைய பகுத்தறிவுக்கு புறம்பான ஆபாசக் கருத்துகளுக்கும் அதில் இடமில்லை என்று கூறியதோடு, திருக்குறள் ஆரிய தர்மத்தை மனு தர்மத்தை அடியோடு கண்டிப்பதற்காகவே ஏற்பட்ட நூல் என்பதை நீங்கள் உணர வேண்டும்”
ஈரோட்டில் 23,24.10.1948இல் நடைபெற்ற திராவிடர் கழக 19வது மாநாட்டில், “குறள் ஹிந்து மதக் கண்டன புத்தகம் என்பதையும், அது சர்வ மதத்திலுள்ள சத்துக்களை எல்லாம் சேர்த்து எழுதப்பட்டுள்ள மனித தர்ம நூல் என்பதையும் எல்லோரும் உணர வேண்டும்” என்றும் கூறுகிறார்.
15.1.1949 சென்னையில் திராவிடர் கழகம் சார்பில் திருக்குறள் மாநாடு நடத்தப்பட்டது. அதில், “குறள் ஆரியத்தை ஒழிக்க ஒப்பற்ற நல்லாயுதம்” என்றும் பேசினார்.
விவேகானந்தன், இனியன் சம்பத், கல்பனா தாசன் ஆகிய மூன்று பேர் இணைந்து எழுதிய நூலான “ஈ.வெ.கி.சம்பத்தும் திராவிட இயக்கமும்” நூலில் பின்வருமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
“1949 பொங்கல் திருநாளையொட்டி சென்னையில் திருக்குறள் மாநாட்டைப் பெரியார் நடத்தினார். இதற்கு முன்பெல்லாம் அவர் மொத்தத்தில் புலவர்களே மோசம், தமிழ் இலக்கியமே குப்பை, தமிழே காட்டுமிராண்டி மொழி என்றெல்லாம் கருத்துக் கூறியதால் தமிழ்ப்புலவர்கள் மத்தியில் கடும் கோபமும் எதிர்ப்பும் ஏற்பட்டன.
அண்ணா, சம்பத், நெடுஞ்செழியன் போன்றவர்கள் பெரியாரிடம் “புராணங்களை எதிர்க்கிற வேகத்தில் திருக்குறள், சிலப்பதிகாரம் போன்றவற்றையும் சேர்த்துத் தாக்கிடுவது முறையல்ல. தமிழுக்கும் தமிழ் இலக்கியங்களுக்கும் நாமே பாதுகாப்பு. குறள் உலகப் பொதுமறை என்பதை நாம் உணர்த்த வேண்டும்” என்றெல்லாம் சில ஆண்டுகளுக்கு முன்பே ஒதிய பிறகு தாமதித்தேனும் பலன் ஏற்பட்டது. இப்போது பெரியார் தமிழ் இலக்கியங்களையும், புலவர்களையும் தாக்குவதை நிறுத்திக் கொண்டார்.”
(பக். 169)
மேற்கண்ட செய்தியின் படி திருக்குறள் மாநாடு அண்ணா, ஈ.வெ.கி.சம்பத், நெடுஞ்செழியன் ஆகியோரின் நிர்பந்தத்தின்படி நடத்தப்பட்டுள்ளது. திருக்குறளுக்கு எதிரான பெரியாரிடமே சில ஆண்டுகளாக அதுபற்றி நல்லவிதமாக ஓதி வந்தபடியால் வேறு வழியின்றி திருக்குறள் மாநாடு நடத்த பெரியாரும் ஒப்புக் கொண்டார் என்பதும் விளங்கும்.
பரிமேலழகர் உரையை மறுத்து அறிவாளிகள் கூறியதை ஏற்கும் நிலைக்கு தாம் வந்ததாக அவர் வெளியில் சொல்லிக் கொண்டு வந்த நிலையில் மீண்டும் வேதாளம் போல முருங்கை மரம் ஏறி திருக்குறளை தாக்கத் தொடங்கினார்.
தமது 90வது பிறந்த நாள் கட்டுரையில் எழுதுகிறார்:
தமிழர்களின் பகுத்தறிவுக்கும், சமுதாயக் கேடு நீக்கலுக்கும் தமிழர்களால், தமிழ்ப்புலவர்களால் போற்றப்படுகிறவர்களில் அய்ந்து பேர்கள் எதிரிகளாவார்கள். அவர்கள் யார் என்றால், 1.வள்ளுவன், 2. தொல்காப்பியன், 3. கம்பன், 4. இளங்கோவன், 5. சேக்கிழார்.
இந்த அய்ந்து பேர்களுக்கும் பகுத்தறிவில்லை என்பதோடு இவர்கள் இனஉணர்ச்சி அற்ற இனவிரோதிகளாக ஆகி விட்டார்கள். வள்ளுவன் அறிவைக் கொண்டு ஒரு நூல் (குறள்) எழுதினான் என்பதல்லாமல் அதில் பகுத்தறிவைப் பயன் படுத்தினான் என்று சொல்வதற்கில்லை.
அதில் மூடநம்பிக்கை, பெண்ணடிமை, ஆரியம் ஆகியவை நல்லவண்ணம் புகுத்தப் பட்டிருக்கின்றன. குறளுக்கு மதிப்புரை கொடுத்தவர்களில் சிலர் “குறள் வேத, சாஸ்திரங்களின் சாரம்” என்று கூறியிருக்கிறார்கள். குறளை ஊன்றிப் பார்த்தால் அது உண்மை என்று புலப்படும்.
….தமிழனுக்கு வேண்டியது மானம், அறிவு, இனஉணர்ச்சி ஆகியவைகளேயாகும். இவற்றிற்கு மேற்சொன்ன திருவள்ளுவன், தொல்காப்பியன், கம்பன், இளங்கோவன், சேக்கிழார் ஆகிய அய்வரும் இவர்களது நூல்களான குறள், தொல்காப்பியம், கம்பராமாயணம், சிலப்பதிகாரம், பெரியபுராணம் ஆகிய அய்ம்பெரும் இலக்கியங்களும் எந்த அளவுக்குப் பயன்படும் என்று சவால் விட்டுக் கேட்கிறேன் அல்லது எந்த இவற்றிற்கு உயிர், செலாவணி, இருக்கும்வரை தமிழனுக்கு மானம், அறிவு, இன உணர்ச்சி ஏற்படமுடியுமா? ஏற்படுத்த முடியுமா? என்று கேட்கிறேன்.
(பெரியார், விடுதலை 90 வது பிறந்தநாள் மலர், 17.09.1968)
அண்ணாவின் ஆட்சியில் உலகத்தமிழ் மாநாடு நடக்கவிருந்த நேரத்தில் (1968) தமிழ் காட்டுமிராண்டி மொழி ஏன்? எனும் நூல் பெரியாரால் வெளியிடப்பட்டது. (தற்போது தலைப்பு “தமிழும் தமிழரும்” என்று மாற்றப் பட்டுள்ளது)
அதில் திருவள்ளுவர், தொல்காப்பியர், கம்பர் ஆகிய மூவரும் கடுஞ்சொற்ளால் ஏசப்பட்டனர். இம் மூவர்களும் சாதியையும், சாதித் தொழிலையும் ஏற்றுக் கொண்டவர்களே ஆவார்கள் என்றார்.
பெரியார் கூறுகிறார்: திருவள்ளுவன் அக்காலத்திற்கு ஏற்ற வகையில் ஆரிய கருத்துக்கு ஆதரவு கொடுக்கும் அளவில் பகுத்தறிவைப் பற்றி கவலைப்படாமல் நீதி கூறும் முறையில் தனது மத உணர்ச்சியோடு கூறிச் சென்றார்.”
பெரியாருக்கு சாவதற்கு ஒரு வருடத்திற்கு முன்பு வரையிலும் திருக்குறளின் மேல் நல்லெண்ணம் பிறக்க வில்லை.
27.12.1972இல் ‘கலைமகள்’ இதழுக்கு அளித்த பேட்டியில் கூறுகிறார்:
“குறளை எடுத்துக்குங்க. நான் மட்டும் தான் குறளை கண்டிக்கிறேன்…. நான் குறள் மாநாடு நடத்தியதாலே சிலபேர் என்னைக் கண்டிச்சாங்க. கலைஞர் கூட அதை ஒண்ணையாவது விட்டுவிடக் கூடாதான்னு கேட்டாரு. குன்றக்குடி அடிகளாரும் கேட்டுக்கிட்டாரு. இரண்டாயிரம் வருடத்துக்கு முந்தியது குறள். அதை அப்படியே இப்பவும் நாம் ஏத்துக்கணும்னா?”
திருக்குறள் மீது பெரியாரின் பார்வை என்பது எப்போதும் முன்னுக்குப் பின் முரண்பாடு கொண்டவை என்பதற்கு மேற்கண்ட அவரது முந்தைய பதிவுகளே அவரைத் தோலுரிக்கும்.
திருவள்ளுவருக்கு காவி உடை கட்டி சனாதனவாதியாக சித்தரிக்கும் சங்கிகளின் செயலுக்கும் , ஆரிய ஆதரவு நூல் என்று சொல்லும் பெரியாருக்கும் பெரிய வேறுபாடு இல்லை. திருவள்ளுவரை சங்கிகளின் பக்கம் தள்ளி விடும் வேலையைத் தான் பெரியார் இறுதிக் காலத்தில் செய்துள்ளார் என்பது வெள்ளிடை மலை.
‘பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்’ என்று சாதிய ஏற்றத்தாழ்வுகளுக்கு எதிராக இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு என்று கலகக்குரல் எழுப்பியவர் திருவள்ளுவர்.
அவர் எழுதிய திருக்குறள் சாதிய ஒடுக்குமுறைக்கு எதிரான போர்க்களத்தில் இன்றும் தேவைப்படுகிறது என்பதை பெரியாருக்கும், பெரியாருக்கு முட்டுக் கொடுக்கும் திராவிட சொம்பு வாலசா வல்லவன் போன்ற முரட்டுப் பக்தர்களுக்கும் ஓங்கி உரைத்திடுவோம்!
– கதிர் நிலவன்