Everything posted by பிழம்பு
-
பாதுகாப்புத் தரப்பினர் சிலர் பாதாள குழுக்களுடன் தொடர்பு ; கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன - ஆளும் தரப்பு
19 Feb, 2025 | 05:46 PM (எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்) பாதாள குழுக்களில் ஈடுபடும் அல்லது ஒழுங்கமைக்கும் தரப்பில் பலர் இலங்கையில் இல்லை. பாதுகாப்பு தரப்பின் ஒருசில அதிகாரிகள் பாதாள குழுக்களுடன் தொடர்பு கொண்டுள்ளார்கள். கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன என்று ஆளும் தரப்பின் பிரதம கொறடாவான நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார். பாராளுமன்றத்தில் புதன்கிழமை (19) நடைபெற்ற அமர்வின்போது கொழும்பு புதுக்கடை நீதிமன்றத்துக்குள் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவம் தொடர்பில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச மற்றும் எதிரணியின் உறுப்பினர் தயாசிறி ஜயசேகர ஆகியோர் முன்வைத்த கேள்விகளுக்கு பதிலளிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் மேலும் தெரிவித்ததாவது, பாதாளக் குழுக்களின் செயற்பாடுகள் குறித்து அரசாங்கம் விசேட அவதானம் செலுத்தியுள்ளது.பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. பாதாள குழுக்கள் பணம் தூயதாக்கல், போதைப்பொருள் வியாபாரம், பல சட்டவிரோத செயற்பாடுகளுடன் தொடர்புடையது. பாதாள குழுக்களில் ஈடுபடும் அல்லது ஒழுங்கமைக்கும் தரப்பில் பலர் இலங்கையில் இல்லை. விசாரணைகளை முன்னெடுத்துச் செல்கையில் பாதுகாப்பு தரப்பின் ஒருசில அதிகாரிகள் பாதாள குழுக்களுடன் தொடர்பு கொண்டுள்ளமை வெளிப்பட்டுள்ளது. விசேட அதிரடிப்படை, பொலிஸ் மற்றும் புலனாய்வு பிரிவினை கொண்டு விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.ஆகவே பாதாள குழுக்கள் குறித்து அரசாங்கம் விசேட அவதானம் செலுத்தியுள்ளது.அனுமதிப்பத்திரமளிக்கப்பட்ட துப்பாக்கிகளை மீண்டும் பாதுகாப்பு அமைச்சுக்கு ஒப்படைக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்தியா, துபாய் ஆகிய நாடுகளில் தலைமறைவாகியுள்ள பாதாள குழுவினரை நாட்டுக்கு அழைத்து வருவதற்கு உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. விசாரணை அனைத்தையும் பாராளுமன்றத்தில் குறிப்பிட முடியாது. பாதாள குழுவுக்கு எதிராக கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றார். பாதுகாப்புத் தரப்பினர் சிலர் பாதாள குழுக்களுடன் தொடர்பு ; கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன - ஆளும் தரப்பு | Virakesari.lk
-
யாழில் மூவர் மீது கல், கம்பிகளால் தாக்குதல் - வாளால் வெட்டவும் முயற்சி!
19 Feb, 2025 | 08:32 PM யாழ்.வடமராட்சி கிழக்கு வத்திராயன் பகுதியில் 19ஆம் திகதி புதன்கிழமை மாலை மூவர் மீது மோசமான தாக்குதல் நடாத்தப்பட்டுள்ளது. குடும்ப தகராறின் காரணமாக வெளிநாட்டில் இருந்து வருகை தந்த நபர் ஒருவர் தனது தந்தை மீதும், சகோதரன் மீதும், சகோதரனின் மகன் மீதும் வவுனியா பகுதியில் இருந்து (NP CAH - 0636) என்ற இலக்கமுடைய வாகனத்தில் ஆட்களை அழைத்து வந்து வீட்டிற்குள் புகுந்து கம்பி, கற்களால் தாக்குதல் நடாத்தியதாக தெரியவருகின்றது. வாகனத்தில் வருகை தந்த தாக்குதல் கும்பல் வானத்திற்குள் வாள்களை மறைத்து வைத்திருந்ததாகவும் கூறப்படுகிறது. அடி காயங்களுக்குள்ளான மூவரும் மருதங்கேணி பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக இருவர் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர். சம்பவம் தொடர்பாக மருதங்கேணி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். யாழில் மூவர் மீது கல், கம்பிகளால் தாக்குதல் - வாளால் வெட்டவும் முயற்சி! | Virakesari.lk
-
கோவையில் 17 வயது சிறுமிக்கு கூட்டு பாலியல் வன்கொடுமை - கல்லூரி மாணவர்கள் 7 பேர் கைது
கோவை: கோவையில் 17 வயது சிறுமி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பான வழக்கில், கல்லூரி மாணவர்கள் 7 பேரை போலீஸார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிந்து கைது செய்தனர். கோவை மாநகர போலீஸ் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் வசிக்கும் தம்பதிக்கு 17 வயதில் மகள் உள்ளார். பிளஸ் 2 படித்து வந்த இவர், குடும்பச் சூழல் காரணமாக படிப்பை நிறுத்திவிட்டார். தனது தாத்தா உயிரிழந்ததால் பாட்டிக்கு துணையாக அவரது வீட்டில் இச்சிறுமி தங்கி வசித்து வந்தார். இந்நிலையில், கடந்த 16-ம் தேதி இரவு சிறுமி மாயமானார். இதையடுத்து சிறுமியின் பாட்டி, பெற்றோர் பல இடங்களில் தேடியும் அவர் கிடைக்கவில்லை. தொடர்ந்து சிறுமி மாயம் குறித்து அவரது பாட்டி, உக்கடம் போலீஸாரிடம் புகார் அளித்தார். போலீஸார் வழக்குப் பதிந்து தேடி வந்தனர். சிறுமியின் செல்போனும் சுவிட்ச் ஆஃப் செய்யப்பட்டிருந்தது. இந்நிலையில், மறுநாள் அதிகாலை சிறுமி வீட்டுக்கு வந்தார். அவரிடம் பெற்றோர் மற்றும் பாட்டி விசாரித்த போது, நண்பர் வீட்டுக்குச் சென்றிருந்ததாக கூறினார். தொடர்ந்து உக்கடம் போலீஸார், சிறுமியிடம் விசாரித்தனர். அப்போது, சமூக வலைதளம் மூலம் பழக்கமான கல்லூரி மாணவர்கள் தங்கியிருந்த அறைக்கு சென்றிருந்தாகவும், அங்கு கல்லூரி மாணவர்கள் 7 பேர் தன்னை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்ததாகவும் தெரிவித்துள்ளார். இதனால், அதிர்ச்சியடைந்த போலீஸார் விசாரணையை தீவிரப்படுத்தினர். இதுகுறித்து விசாரணையில் கிடைத்த தகவல்கள் குறித்து போலீஸார் கூறும்போது, “மாயமானது தொடர்பாக சிறுமியிடம் விசாரிக்கப்பட்டது. சிறுமிக்கு ஸ்னாப்சாட் எனப்படும் சமூக வலைதள செயலி பயன்படுத்தும் பழக்கம் உள்ளது. அதன் மூலம் கோவையில் உள்ள கோவைப்புதூரைச் சேர்ந்த கல்லூரி மாணவர்கள் ஜெபின் (20), ரக்ஷித் (19) ஆகியோர் அறிமுகமாகியுள்ளனர். தொடர்ந்து சில நாட்கள் பேசிய பின்னர், அந்த சிறுமியை தாங்கள் தங்கியிருக்கும் அறைக்கு வருமாறு சிறுமியை அழைத்துள்ளனர். அதன்படி, கடந்த 16-ம் தேதி சிறுமி, மேற்கண்ட இருவருடன் சேர்ந்து அவர்கள் தங்கியுள்ள அறைக்குச் சென்றுள்ளார். அந்த அறையில் அபினேஷ்வரன்(19), தீபக் (20), யாதவ்ராஜ் (19), முத்து நாகராஜ் (19), நித்தீஷ் (19) ஆகிய மேலும் 5 மாணவர்கள் இருந்துள்ளனர். தொடர்ந்து மேற்கண்ட 7 பேரும் சேர்ந்து சிறுமியை கூட்டாகவும், தனித்தனியாகவும் பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். இதையடுத்து சிறுமி மாயம் என்ற பிரிவின் கீழ் பதிவு செய்யப்பட்டிருந்த வழக்கை போக்சோ பிரிவுக்கு மாற்றி, கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த ஜெபின், ரக்ஷித், அபினேஷ்வரன், தீபக், யாதவ்ராஜ், முத்து நாகராஜ், நித்தீஷ் ஆகியோர் இன்று (பிப்.18) கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்டவர்கள் திருநெல்வேலி, தேனி மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் ஆவார். இவர்கள் 7 பேரும் கோவைப்புதூர், குனியமுத்தூர் ஆகிய இடங்களில் உள்ள 3 தனியார் கல்லூரிகளில் இரண்டாம் ஆண்டு, 3-ம் ஆண்டு படித்து வருபவர்கள் ஆவர். கைது செய்யப்பட்டவர்கள் விசாரணைக்கு பின்னர், கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.சிறுமியை அழைத்துச் செல்ல பயன்படுத்தப்பட்ட இருசக்கர வாகனம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இச்சம்பவம் தொடர்பாக தொடர்ந்து விசாரிக்கப்பட்டு வருகிறது,” என்றனர். கோவையில் 17 வயது சிறுமிக்கு கூட்டு பாலியல் வன்கொடுமை - கல்லூரி மாணவர்கள் 7 பேர் கைது | 7 college students arrested for gang-raping 17-year-old girl in Coimbatore - hindutamil.in
-
ஜனாதிபதியின் வரவு செலவு திட்டத்தையிட்டு மகிழ்ச்சியடைகிறேன்; வைத்தியர்களுக்கு எந்த நிவாரணமும் இல்லை - அர்சுனா இராமநாதன்
ஜனாதிபதி வாக்குறுதியளித்தவாறு வடக்குக்கு பெருமளவு நிதி ஒதுக்கீடு! ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க வாக்குறுதியளித்தவாறு வடக்கு மாகாணத்துக்கு பல்வேறு திட்டங்களுக்கு பெருமளவு நிதி ஒதுக்கியுள்ளார் என்றும் அவருக்கு எமது வடக்கு மக்கள் சார்பாக நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கின்றேன் என வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தெரிவித்துள்ளார். வடக்கு மாகாண உள்ளூராட்சி அமைச்சின் திட்டமீளாய்வு கலந்துரையாடல் ஆளுநர் செயலகத்தில் இன்றைய தினம் இடம்பெற்ற போதே ஆளுநர் இதனை தெரிவித்தார். இந்த ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டம் ஜனாதிபதியினால், நேற்று நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்பட்டிருந்தது. அதன்படி, வடக்கு மாகாணத்துக்கு பல்வேறு வகையிலும் நிதி ஒதுக்கப்பட்டுள்ளதுடன் அதிகளவான நிதியும் வடக்கு மாகாண சபைக்கே ஒதுக்கப்பட்டுள்ளது. மேலும் ஜனாதிபதி தனது உரையில், வடக்கு அதிகாரிகள் கோரிய நிதியையே வழங்கியுள்ளதாகவும் தெரிவித்தார். எமக்கு ஒதுக்கப்பட்ட நிதியை நாம் முழுமையாகச் செலவு செய்யவேண்டும் என்றும் எவ்வளவு விரைவாக அந்த நிதியை செலவு செய்து முடித்து மேலதிக நிதியை நாம் கோரவேண்டும். இது எமக்கு சவாலானதுதான். நாம் நிதியை திருப்பி அனுப்பாமலே நிதியை திருப்பி அனுப்பியதான குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டு வருகின்றது. இந்த நிலையில், பெருமளவு நிதி எமக்கு கிடைக்கப்பெறும் நிலையில் அதை உரிய முறையில் செலவு செய்யவேண்டும். எமது செயற்பாடுகளை ஊடகங்கள் உட்பட பல தரப்புக்களும் உன்னிப்பாக கவனித்துக் கொண்டிருக்கின்றன. எனவே வெளிப்படைத்தன்மையாக நிதியை விரைவாக செலவு செய்யவேண்டும். அத்துடன் ஜனாதிபதி வீதி அபிவிருத்திக்காக விசேட நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. அந்த நிதியை வடக்கின் அனைத்து மாவட்டங்களுக்கு சமமாகப் பகிரத் தேவையில்லை. தேவைப்பாடுகள் எங்கு அதிகமோ அங்கு அதிகளவு நிதியை ஒதுக்குங்கள். மேலும், இந்தத் திட்டத்துக்கு யாழ்ப்பாணத்திலிருந்து கொண்டு தெரிவுகளை முன்னெடுக்காமல் வன்னிப் பிராந்தியத்தின் ஒவ்வொரு இடத்துக்கும் சென்று நேரடியாகப் பார்த்து தெரிவு செய்யுங்கள். அப்போதுதான் அந்த மக்கள் அனுபவிக்கின்ற வலி உங்களுக்குத் தெரியும் என்றார். ஜனாதிபதி வாக்குறுதியளித்தவாறு வடக்குக்கு பெருமளவு நிதி ஒதுக்கீடு!
-
ஜனாதிபதியின் வரவு செலவு திட்டத்தையிட்டு மகிழ்ச்சியடைகிறேன்; வைத்தியர்களுக்கு எந்த நிவாரணமும் இல்லை - அர்சுனா இராமநாதன்
18 Feb, 2025 | 03:21 AM (எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்) யாழ்ப்பாண மாவட்ட பாராளுமன்ற உறுப்பினராக ஜனாதிபதியின் வரவு செலவு திட்டத்தையிட்டு மகிழ்ச்சியடைகிறேன். என்றாலும் வைத்தியர்களுக்கு எந்த நிவாரணமும் இல்லாமல் இருப்பதையிட்டு கவலையடைகிறேன் என யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அர்சுனா இராமநாதன் தெரிவித்தார். ஜனாதிபதியின் வரவு செலவுத் திட்ட உரையை தொடர்ந்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு கூறினார். இதுதொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், வரவு செலவு திட்டத்தில் வைத்தியர்கள் தொடர்பில் எதுவும் தெரிவிக்கப்படவில்லை. கடந்த வருடம் மாத்திரம் 2ஆயிரம் டாக்டர்கள் வெளிநாடுகளுக்கு சென்றுள்ளனர். பட்டப்பின் படிப்பு பயிலுனர்களுக்காவது அரசாங்கம் ஏதாவது ஒரு விடயத்தை செய்திருக்க வேண்டும். அதேபோன்று வடக்கு கிழக்கு மீனவர் தொடர்பில் வரவு செலவு திட்டத்தில் எதுவும் இல்லை. குறிப்பாக வடக்கு கிழக்கு மீனவர்கள் இந்திய மீனவர்களின் பிரச்சினையை எதிர்கொண்டு வருகின்றனர். அதற்கு எந்த தீர்வும் இதில் இல்லை. மேலும் யாழ் மாவட்ட உறுப்பினர் என்றவகையில் வரவு செலவு திட்டத்தை வரவேற்கிறேன். ஏனெனில் யாழ்ப்பாண நூலகத்துக்கு 100 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது. அதேபோன்று வட்டுவாக்கல் பாலத்தை புனரமைக்க 1000 மில்லியன் ஒதுக்கப்பட்டிருக்கிறது. மாகாண பாதைகளை செப்பனிடுவதற்கு 500 மில்லியன் ஒதுக்கப்பட்டிருக்கிறது. ஜனாதிபதி யாழ் மாவட்ட அபிவிருத்திக்குழுவுக்கு வருகை தந்து, நாங்கள் அங்கு முன்வைத்த பல விடயங்களை ஏற்றுக்கொண்டிருந்தார். அதன் பிரகாரம் எமது கோரிக்கைக்கமைய யாழ் மாவட்ட அபிவிருத்தி திட்டங்களுக்கு போதுமான நிதி ஒதுக்கப்பட்டிருக்கிறது. அதனையிட்டு மகிழ்ச்சியடைகிறேன் என்றார். ஜனாதிபதியின் வரவு செலவு திட்டத்தையிட்டு மகிழ்ச்சியடைகிறேன்; வைத்தியர்களுக்கு எந்த நிவாரணமும் இல்லை - அர்சுனா இராமநாதன் | Virakesari.lk
-
யாழ். மாவட்ட வீதிகளின் முழு விபரங்களும் மார்ச் முதல் வாரத்தில் தயாரிக்கப்படும் - அரச அதிபர் பிரதீபன்
(எம்.நியூட்டன்) யாழ். மாவட்டத்தில் உள்ள வீதிகளின் முழுமையான விபரங்கள் மார்ச் மாதம் முதல் வாரத்தில் தயாரிக்கப்பட்டு பாராளுமன்ற உறுப்பினர்களின் பார்வைக்கு கையளிக்கப்படும் என யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதிபன் தெரிவித்தார். யாழ். மாவட்டத்துக்கு ஜனாதிபதி விஜயம் மேற்கொண்டு ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தை நடத்தியபோது யாழ். மாவட்டத்துக்கு வீதிகளை புனரமைக்க எவ்வளவு நிதி தேவை, எத்தனை கிலோ மீற்றர் தூர வீதிகள் புனரமைக்கப்படவேண்டும் என்ற கேள்விகளை கேட்டபோது அதற்கு முறையான பதில்களை அரசாங்க அதிகாரிகள் தெரியப்படுத்தவில்லை. மேலும், யாழ். மாவட்டத்துக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளமை தொடர்பான ஒருங்கிணைப்பு குழுவின் மீளாய்வு கூட்டம் நடை பெற்றபோதும் அமைச்சர் சந்திரசேகரனால் இந்த விடயம் சுட்டிக்காட்டப்பட்டது. குறிப்பாக, யாழ். மாவட்டத்தில் கிராமங்களின் தேவைப்பாடுகள், வீதிகளின் விபரங்கள், வீட்டுத்திட்டங்கள், மக்களுக்கான தேவைகள் தொடர்பில் ஒவ்வொரு பிரதேச செயலகங்கள், கிராமங்களின் விபரங்கள் பெறப்பட்டு பிரதேச செயலகங்கள் மற்றும் மாவட்ட செயலகத்திலும் ஆவணப்படுத்தப்பட்டிருக்க வேண்டும். அவ்வாறு செய்வதன் மூலம் தான் மாவட்டத்துக்கான விசேட நிதி ஒதுக்கீடுகள் கிடைக்கும்போது அல்லது விபரங்கள் யாரும் கேட்கின்றபோது அவற்றை வழங்குவதன் மூலம் மாவட்டத்தின் அபிவிருத்தியை துரிதப்படுத்த முடியும். எனவே, இந்த விடயத்தில் அதிகாரிகள் கூடிய கவனமெடுத்து அதற்கேற்ப துரித நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். இந்த விடயங்கள் தொடர்பாக யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் கூறுகையில், மாவட்டத்தின் பிரதேச செயலர்களை அழைத்து கலந்துரையாடி, வீதி அபிவிருத்தி திணைக்கள வீதிகள், வீதி அபிவிருத்தி அதிகார சபை வீதிகள், மாகாண சபை உள்ளூராட்சி சபை வீதிகள் பற்றிய முழுமையான விபரங்களை பெற்றுக்கொள்ளவுள்ளதுடன் முன்னுரிமை அளிக்கப்படவேண்டிய வீதிகளின் விபரங்கள் அடையாளப்படுத்தப்பட்டு மார்ச் மாதம் முதலாம் வாரத்தில் கையளிக்கப்படும் என்றார். யாழ். மாவட்ட வீதிகளின் முழு விபரங்களும் மார்ச் முதல் வாரத்தில் தயாரிக்கப்படும் - அரச அதிபர் பிரதீபன் | Virakesari.lk
-
கொத்து, பிரைட் ரைஸ் உள்ளிட்கொத்து, பிரைட் ரைஸ் உள்ளிட்ட உணவுப் பொருட்களின் விலைகள் அதிகரிப்பு!ட உணவுப் பொருட்களின் விலைகள் அதிகரிப்பு!
18 Feb, 2025 | 05:32 PM சிற்றுண்டிச்சாலைகளில் விற்பனை செய்யப்படும் உணவுப் பொருட்கள் சிலவற்றின் விலைகளை அதிகரிக்க தீர்மானித்துள்ளதாக அகில இலங்கை சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. அகில இலங்கை சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சங்கம் மேலும் தெரிவிக்கையில், இந்த விலை அதிகரிப்பானது இன்று செவ்வாய்க்கிழமை (18) நள்ளிரவு முதல் அமுல்படுத்தப்படவுள்ளது. 2025 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் அகில இலங்கை சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சங்கத்திற்கு எந்தவித சலுகைகளும் வழங்கப்படாததால் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. அதன்படி, பிரைட் ரைஸ், கொத்து ஆகியவற்றின் விலைகள் 30 ரூபாவினாலும், தேநீரின் விலை 05 ரூபாவினாலும், பால் தேநீரின் விலை 10 ரூபாவினாலும் அதிகரிக்கப்படும் என அச்சங்கம் மேலும் தெரிவித்துள்ளது. கொத்து, பிரைட் ரைஸ் உள்ளிட்ட உணவுப் பொருட்களின் விலைகள் அதிகரிப்பு! | Virakesari.lk
-
எமது மீனவர்களை பயன்படுத்தி இந்தியாவை சீனா அச்சுறுத்த இடமளியோம் - யாழ். மாவட்ட கடற்தொழிலாளர் கிராமிய அமைப்புக்களின் தலைவர்
அத்துமீறிய இந்திய இழுவை மடி படகுகளால் எமது மீனவர்கள் பாதிக்கப்பட்டு வரும் சூழ்நிலையை சீனா தனக்கு சாதகமாக்கிக்கொண்டு, இந்திய தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் விடுவதற்காக எம்மை பயன்படுத்த இடமளிக்க மாட்டோம் என யாழ். மாவட்ட கடற்தொழிலாளர் கிராமிய அமைப்புக்களின் தலைவர் செல்லத்துரை நற்குணம் தெரிவித்தார். யாழ்ப்பாணத்தில் உள்ள யாழ். மாவட்ட கடற்றொழிலாளர் கூட்டுறவு சமாஜத்தில் இன்று செவ்வாய்க்கிழமை (18) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், கடந்த வாரம் சீன தூதரக அதிகாரிகளை எமது கடற்றொழிலாளர் சங்கப் பிரதிநிதிகள் யாழ்ப்பாணத்தில் சந்தித்தோம். கொரோனா காலங்களிலும் இந்திய இழுவைப் படகுகளினால் எமது மீனவர்கள் பாதிக்கப்பட்டபோதும் எமது மக்களுக்கு பல்வேறு உதவிகளை சீன அரசாங்கம் செய்தது. அவர்கள் செய்த உதவிக்கு இந்த சந்திப்பின்போது நன்றி தெரிவித்தோம். அத்துடன், இந்திய இழுவை மடிப் படகுகளால் பாதிக்கப்பட்டு வரும் எமது மீனவர்களுக்கு உதவி செய்யுமாறு கோரிக்கை விடுத்தோம். இந்திய அரசிடமும் இதே கோரிக்கையை முன்வைத்திருக்கிறோம். யார் எமது மக்களுக்கு உதவிக்கரம் நீட்டினாலும் அதை நாம் பெற்றுக்கொள்ள தயாராக இருக்கிறோம். அத்துமீறிய இந்திய இழுவை மடிப் படகுகளால் தொடர்ச்சியாக நாம் பாதிக்கப்பட்டு வரும் நிலையில், சீனா எமக்கு உதவி செய்வதாக கூறி, எமது கடல் பிராந்தியத்தால் இந்திய தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் விடுவதற்காக எம்மை பயன்படுத்த எதிர்பார்த்தால், அதற்கு இடமளிக்க முடியாது. இந்தியா எமது அயல் நாடு. அது மாத்திரமல்ல, எமது தொப்புள்கொடி உறவு என்ற ரீதியில் இந்தியாவின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் விடுக்க, எமது கடற்பரப்பை பயன்படுத்த அனுமதிக்கப் போவதில்லை என்றார். எமது மீனவர்களை பயன்படுத்தி இந்தியாவை சீனா அச்சுறுத்த இடமளியோம் - யாழ். மாவட்ட கடற்தொழிலாளர் கிராமிய அமைப்புக்களின் தலைவர் | Virakesari.lk
-
கட்டுத்தொகையை இழப்பதையே தேர்தல் வியூகமாகக் கொண்ட...' - சீமானுக்கு தவெக பதில்!
பிரபாகரனிசத்தை முன்வைத்து கட்சி தொடங்கிய நீங்கள் இப்போது சீமானிசத்தில் கொண்டு போய் கட்சியை நிறுத்தியிருக்கிறீர்கள். - தவெக விஜய் தவெகவின் கொள்கைப் பரப்பு இணைச்செயலாளரான சம்பத் குமார் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், '*அறிக்கை* ஊடகவியலாளர்கள் ஒலிவாங்கியை நீட்டிவிட்டால் அண்ணன் சீமான் எதையாவது உளறுவதையே வழக்கமாகக் கொண்டுள்ளார். சமகால சமூகச் சூழலில் அரசியல் கட்சிகள் தேர்தல் வியூக வடிவமைப்பாளர்களை நியமிப்பதன் அவசியத்தை புரிந்துகொள்ளாமல் பணக் கொழுப்பு என்று பகிரங்கமாக அறிவித்துள்ள அண்ணன் சீமானுக்கு நடைமுறை அரசியல் யதார்த்தம் புரியவில்லை என்று தான் அர்த்தமாகிறது. ஒவ்வொரு தேர்தலிலும் கட்டுத்தொகையை இழப்பதையே தேர்தல் வியூகமாகக் கொண்ட அண்ணன் சீமான் இன்னும் எத்தனை ஆண்டுகள் "வென்றால் மகிழ்ச்சி,.தோற்றால் பயிற்சி" என்று நாம் தமிழர் உறவுகளை உசுப்பேத்திக் கொண்டே இருக்கப் போகிறாரோ தெரியவில்லை? திரள் நிதி வாங்குவதை வழக்கமாகக் கொண்டுள்ள அண்ணன் சீமானுக்கு திறமையாளர்களின் ஆலோசனைகளை பெறுவது தவறாக தெரிவது ஆச்சரியமன்று. அண்ணே, நாங்கள் சட்டமன்றத்தில் பேசுவதற்காக அரசியல் செய்கிறோம், நீங்கள் பட்டிமன்றத்தில் பேசுவது தான் அரசியல் என்று எண்ணிக் கொண்டிருக்கிறீர்கள். விஜய் நாங்கள் தமிழக வெற்றிக் கழகம் வெற்றி பெறுவது எப்படி என்று சிந்திக்கிறோம் நீங்கள் தமிழ்தேசிய அரசியலை எப்படி வெற்றி பெறாமல் வைத்திருப்பது என்று சிந்திக்கிறீர்கள். பிரபாகரனிசத்தை முன்வைத்து கட்சி தொடங்கிய நீங்கள் இப்போது சீமானிசத்தில் கொண்டு போய் கட்சியை நிறுத்தியிருக்கிறீர்கள். ஒன்று சொல்லட்டுமா அண்ணே, எங்கள் தலைவர் தளபதி விஜய் தன் ரசிகர்களை அரசியல் கட்சியின் தொண்டர்களாக உருமாற்றம், செய்து வருகிறார். நீங்கள் உங்கள் கட்சியின் தொண்டர்களை உங்கள் ரசிகர்களாக உருமாற்றம் செய்து வருகிறீர்கள். உங்களோடு என்றும் எங்களுக்கு ஒத்து போகாது அண்ணே....' எனக் குறிப்பிடப்பட்டிருக்கிறது. TVK : 'கட்டுத்தொகையை இழப்பதே தேர்தல் வியூகமாகக் கொண்ட...' - சீமானுக்கு தவெக பதில்! | TVK Condemns Seeman - Vikatan
-
பந்தய ஓட்டம்; இ.போ.ச. - தனியார் பேருந்துகள் விபத்து!
பருத்தித்துறையில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணிகளை ஏற்றிக்கொண்டு பயணித்த இ.போ.ச. பேருந்தும், தனியார் பேருந்தும் நேற்று மாலை விபத்துக்குள்ளாகியுள்ளன. பயணிகளை ஏற்றிக்கொண்டு ஏட்டிக்குப் போட்டியாக 'பந்தய ஓட்டத்தில்' ஈடுபட்டபோதே அந்தப் பேருந்துகள் இரண்டும் விபத்தில் சிக்கியுள்ளன. பொலிஸாருக்குத் தகவல் வழங்கப்பட்டதைத் தொடர்ந்து, சம்பவ இடத்துக்கு விரைந்த பொலிஸார் இரண்டு பேருந்துகளையும் பொலிஸ் நிலையத்துக்குக் கொண்டு சென்றனர். இதையடுத்து, மாற்றுப் பேருந்துகள் வரவழைக்கப்பட்டு பயணிகள் தமது பயணத்தைத் தொடர்ந்தனர். வடமாகாணத்தில், தொடர்ச்சியாகவே இ.போ.ச. பேருந்துகளும், தனியார் பேருந்துகளும் பயணிகளை ஏற்றியபடி 'பந்தய ஓட்டத்தில்' ஈடுபடுகின்றன என்ற குற்றச்சாட்டு முன்வைக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது. பந்தய ஓட்டம்; இ.போ.ச. - தனியார் பேருந்துகள் விபத்து!
-
அமைச்சர் சந்திரசேகரின் திடீர் கள விஜயம்!
அமைச்சர் சந்திரசேகரின் திடீர் கள விஜயம்! கடற்றொழில் மற்றும் நீரியல் கடல் வளங்கள் அமைச்சரும், யாழ்.மாவட்ட ஒருங்கிணைப்புக்குழுத் தலைவருமான இராமலிங்கம் சந்திரசேகர், கடற்றொழில், நீரியல்வளத்துறை திணைக்களத்தின் யாழ்.மாவட்ட அலுவலகத்துக்கு நேற்று (11.02.2025) திடீர் கண்காணிப்பு பயணம் மேற்கொண்டார். மேற்படி திணைக்களத்தின் உதவிப் பணிப்பாளர் சுதாகரனுடன் கலந்துரையாடலில் ஈடுபட்ட அமைச்சர், முக்கிய பல விடயங்கள் தொடர்பில் ஆராய்ந்தார். மேற்படி திணைக்களம் ஊடாக மீனவர்களுக்கு வழங்கப்பட வேண்டிய சேவைகள் முறையாக இடம்பெறுகின்றனவா, சேவைகளை வழங்குவதில் உள்ள குறைப்பாடுகளை நிவர்த்தி செய்வதற்கு எவ்வாறான வளங்கள் தேவை, மீனவர்களின் தரவுகள் என்பன பற்றி அமைச்சர் கேட்டறிந்தார். அத்துடன், இந்திய மீனவர்கள் கைது செய்யப்படும்போது கைப்பற்றப்பட்ட படகுகளின் நிலை பற்றியும் அமைச்சர் இதன்போது அவதானம் செலுத்தினார். அரசாங்கம் மூலம் மீனவர்களுக்கென வழங்கப்படும் நிவாரணங்களை எவ்வித தடையுமின்றி உரியவகையில் பெற்றுக்கொள்வதற்குரிய சூழ்நிலை உள்ளதா என்பது பற்றியும் அமைச்சர், அதிகாரிகளிடம் வினவினார்.
-
இலங்கையில் ஆண் - பால் பாலினம் தொடர்பில் ஊடகங்களுக்கு தெளிவுபடுத்துவதற்கு யு.எஸ்.எய்ட் நிறுவனம் 7.9 மில்லியன் டொலர்களை செலவு செய்துள்ளது என்பது பிரச்சினைக்குரியதொரு விடயம் - நாமல்
11 Feb, 2025 | 10:32 PM (இராஜதுரை ஹஷான்) இலங்கையில் ஆண் -பால் பாலினம் தொடர்பில் ஊடகங்களுக்கு தெளிவுப்படுத்துவதற்கு யு.எஸ்.எய்ட் நிறுவனம் 7.9 மில்லியன் டொலர்களை செலவு செய்துள்ளது என்பது பிரச்சினைக்குரியதொரு விடயமாகும்.இது நாட்டின் தேசிய பாதுகாப்புடன் தொடர்புடையது. ஆகவே இவ்விடயம் குறித்து ஆராய பாராளுமன்ற தெரிவுக்குழுவை அமைக்குமாறு ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ஷ சபாநாயகர் ஜகத் விக்கிரமரத்னவிடம் எழுத்து மூலமாக வலியுறுத்தியுள்ளார். பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ சபாநாயகருக்கு அனுப்பி வைத்துள்ள கடிதத்தில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, கடந்த காலங்களில் யு.எஸ்.எய்ட் என்ற அரச சார்பற்ற நிறுவனம் 7.9 மில்லியன் டொலரை செலவழித்து ஊடகவியலாளர்களுக்கு பல்வேறு பயிற்சி வழங்கியுள்ளதாகவும், ஆண் மற்றும் பெண் பாலினத்தை பயன்படுத்தி அழைக்க வேண்டாம் என்று ஊடகவியலாளர்களுக்கு குறிப்பிடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அமெரிக்க அரசாங்கம் உள்ளக மட்டத்தில் நியமிக்கப்பட்ட குழுவின் அறிக்கையில் வெளிப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் அமெரிக்க ஜனாதிபதி தனது உத்தியோகபூர்வ எக்ஸ் வலைத்தளத்தில் 'இலங்கை,பங்களாதேஸ்,உக்ரைன், பாகிஸ்தான், இந்தியா உள்ளிட்ட 09 நாடுகளின் அரசாங்கத்தை மாற்றியமைப்பதற்காக யு.எஸ்.எய்ட் என்ற அரச சார்பற்ற நிறுவனம் 260 மில்லியன் டொலரை செலவு செய்துள்ளதாக' பதிவேற்றம் செய்துள்ளார். இதற்கு முன்னரும் இலங்கையில் சட்டத்தின் பிரகாரம் ஆட்சிக்கு வந்த அரசாங்கங்களை நெருக்கடிக்குள்ளாக்குவதற்கு அரச சார்பற்ற நிறுவனங்கள் நாட்டின் இன நல்லிணக்கம்,தேசியத்தை வீழ்த்தும் வகையில் செயற்பட்டதாக பல குற்றச்சாட்டுக்கள் காணப்படுகின்றன. இவ்வாறான பின்னணியில் இலங்கையில் ஆண் -பால் பாலினம் தொடர்பில் ஊடகங்களுக்கு தெளிவுப்படுத்துவதற்கு இந்த நிறுவனம் 7.9 மில்லியன் டொலர்களை செலவு செய்துள்ளது என்பது பிரச்சினைக்குரியதொரு விடயமாகும். இலங்கையில் போராட்ட காலத்தில் இந்த நிதி பயன்படுத்தப்பட்டதா என்பது குறித்து ஆராய வேண்டும்.அத்துடன் இந்த நிதியை பெற்றுக் கொண்ட நபர் அல்லது நிறுவனங்கள் தொடர்பிலும், அந்த நிதி எதற்காக பயன்படுத்தப்பட்டது என்பதை ஆராய்வது நாட்டின் தேசிய பாதுகாப்புக்கு இன்றியமையாததாக அமையும். ஆகவே இவ்விடயம் குறித்து ஆராய்ந்து பாராளுமன்றத்துக்கு அறிக்கை சமர்ப்பிப்பதற்கு பாராளுமன்ற தெரிவுக்குழு ஒன்றை அமைக்குமாறு வலியுறுத்துகிறேன். இலங்கையில் ஆண் - பால் பாலினம் தொடர்பில் ஊடகங்களுக்கு தெளிவுபடுத்துவதற்கு யு.எஸ்.எய்ட் நிறுவனம் 7.9 மில்லியன் டொலர்களை செலவு செய்துள்ளது என்பது பிரச்சினைக்குரியதொரு விடயம் - நாமல் | Virakesari.lk
-
யாழ்ப்பாணத்தில் மருத்துவ எரியூட்டியால் தமக்கு பாதிப்பு ஏற்படுவதாக தெரிவித்து மக்கள் எதிர்ப்பு போராட்டம்
12 Feb, 2025 | 01:10 PM யாழ்ப்பாணம் கோம்பயன் மணல் இந்து மயானத்தில் அமைக்கப்பட்டுள்ள மருத்துவ எரியூட்டியால் தமக்கு பாதிப்பு ஏற்படுவதாக தெரிவித்து அப்பகுதி மக்கள் நேற்று செவ்வாய்க்கிழமை (11) எதிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். மருத்துவ எரியூட்டியில் மருத்துவக் கழிவுகள் எரிக்கப்படுவதால் அதில் இருந்து கிளம்பும் புகை காரணமாக சுவாசப் பிரச்சினை, தூர் நாற்றம் என்பன ஏற்படுவதால் அயலில் வசிக்கும் தாம் பாதிக்கப்படுவதாக அப்பகுதி மக்கள் விசனம் தெரிவித்தனர். இந்நிலையில் போராட்டக்காரர்களை சந்தித்த தேசிய மக்கள் சக்தியின் யாழ்ப்பாண மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் றஜீவன் ஜெயச்சந்திரமூர்த்தி குறித்த விடயம் தொடர்பில் உரிய தரப்புக்களுடன் ஆராய்ந்து நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார். யாழ் போதனா வைத்தியசாலை மருத்துவ கழிவுகளை எரியூட்டுவதில் கடந்த காலங்களில் பல்வேறு சர்ச்சைகள் எழுந்த நிலையில் எரியூட்டியை அமைப்பதற்கான இடத்தை தேர்வு செய்வதில் இழுபறி காணப்பட்டநிலையில் ஐக்கிய நாடுகள் அபிவிருத்தித் திட்டத்தின் கீழ் 40 மில்லியன் ரூபாய் நிதி பங்களிப்பில் குறித்த பகுதியில் எரியூட்டி கடந்த வருடம் உருவாக்கப்பட்டு திறந்து வைக்கப்பட்டது. யாழ்ப்பாணத்தில் மருத்துவ எரியூட்டியால் தமக்கு பாதிப்பு ஏற்படுவதாக தெரிவித்து மக்கள் எதிர்ப்பு போராட்டம் | Virakesari.lk
-
குரங்குகளுக்கு கருத்தடை செய்யும் திட்டம் தோல்வி
நாட்டின் பல பகுதிகளில் செயல்படுத்தப்பட்ட டோக் குரங்குகளுக்கான கருத்தடை திட்டம் தோல்வியடைந்துள்ளது. குரங்குகளால் ஏற்படும் அச்சுறுத்தலுக்கு தீர்வு காணும் நோக்கில் இந்த திட்டம் முன்னெடுக்கப்பட்டது. மாத்தளை மாவட்டத்தின் ஹரஸ்கமவில் முன்னோடித் திட்டமாக ஆரம்பிக்கப்பட்ட குரங்குகளுக்கு கருத்தடை செய்யும் திட்டம் பல சவால்கள் காரணமாக தற்போது முடங்கியுள்ளதாக மாவட்ட விவசாயப் பணிப்பாளர் அஜித மணிக்கும தெரிவித்துள்ளார். நேற்று செவ்வாய்க்கிழமை நடைபெற்ற மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்திலேயே இதனை தெரிவித்துள்ளார். கருத்தடை செய்வதற்கு கால்நடை மருத்துவர்களின் பற்றாக்குறையும், கிரித்தலை கால்நடை மருத்துவப் பிரிவுக்கு குரங்குகளை ஏற்றிச் செல்வதற்கு அதிக செலவினங்கள் ஏற்படுவதும் முதன்மையான தடையாக இருப்பதாக விவசாயப் பணிப்பாளர் சுட்டிக்காட்டியுள்ளார். இந்த விடயங்கள் தொடர்பில் புத்தசாசன மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சரும் ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவருமான கமகெதர திஸாநாயக்க மற்றும் விவசாய அபிவிருத்தி பிரதியமைச்சர் ஆகியோருக்கு அறிவித்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். திட்டத்திற்கு தேவையான உபகரணங்களுக்கு 12 மில்லியன் ரூபா செலவாகும் என அதிகாரி தெரிவித்துள்ளார். குரங்குகளுக்கு கருத்தடை செய்யும் திட்டம் தோல்வி | Virakesari.lk
-
தமிழக மீனவர்கள் நாசகார செயலில் ஈடுபட்டுவிட்டு தொப்புள்கொடி உறவுகள் எனக்கூறுவதில் பயனில்லை – அமைச்சர் சந்திரசேகர்
இலங்கையின் கடல் வளத்தை அழிதொழிக்கும் நடவடிக்கையில் தமிழக மீனவர்கள் ஈடுபட்டுள்ளனர் எனவும், இவ்வாறு நாசகார செயலில் ஈடுபட்டுவிட்டு செல்லும் வழியில் தொப்புள் கொடி உறவுகள் எனக் கூறுவதில் பயன் இல்லை எனவும் கடற்றொழில் மற்றும் நீரியல் கடல் வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்தார். தமிழக மீனவர்கள் அத்துமீறும் செயற்பாடு தொடர்பில் இன்று (12) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போது அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் கூறுகையில், தமிழக மீனவர்களின் அத்துமீறல் அதிகரித்துள்ளது. கடந்த காலங்களில் மூன்று நாட்கள் வந்தார்கள், தற்போது ஏழு நாட்களுக்கும் வருவதற்கு முற்படுகின்றார்கள். எமது நாட்டு மீன்களை பிடிப்பது மட்டுமல்ல கடல் வளத்தையே நாசம் செய்கின்றனர். இதனால் நாளைய தலைமுறையினருக்குரிய கடல் வளம் இல்லாமல் போகின்றது. எனவே, இலங்கை எல்லைக்குள் வந்து மீன்பிடிக்க வேண்டாம் என தமிழக மீனவர்களிடம் கேட்டுக்கொள்கின்றோம். அதற்கான உரிமை அவர்களுக்கு கிடையாது. எமது நாட்டு கடல் எல்லைக்குள் வந்து மீன்களை பிடித்துக்கொண்டு செல்லும் வழியில் எங்களை தொப்புள்கொடி உறவுகள் எனக்கூறுவதில் பயன் இல்லை. தமிழக மீனவர்கள் மீதோ, தமிழக தலைவர்கள் மீதோ எமக்கு எவ்வித கோபமும் இல்லை. ஒரு சில மீனவர்கள் தான் டோலர் படகுகளைப் பயன்படுத்தி, தடைசெய்யப்பட்ட வலைகளையும் பயன்படுத்தி எமது கடல் வளத்தை நாசமாக்குகின்றனர். அதனையே நாம் எதிர்க்கின்றோம். எமது நாட்டு எல்லைக்குள் அத்துமீறாவிட்டால் எவரையும் கைது செய்யவேண்டியது தேவைப்பாடு எழாது. எனவே, எங்களது கடல் எல்லைக்குள் புகுந்து, கடல் வளங்களை நாசமாக்க வேண்டாம் என போராடும் தமிழக மீனவர்களிடம் கேட்டுக்கொள்கின்றேன். அவர்கள் எல்லைத்தாண்டாவிட்டால் எவ்வித பிரச்சினையும் எழாது என்றார். தமிழக மீனவர்கள் நாசகார செயலில் ஈடுபட்டுவிட்டு தொப்புள்கொடி உறவுகள் எனக்கூறுவதில் பயனில்லை – அமைச்சர் சந்திரசேகர் | Virakesari.lk
-
மாகாண சபை முறைமை என்பது தாம் வென்றெடுத்த உரிமையென தமிழர்கள் கருதுவதால் அந்த உரிமையில் தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் கைவைக்காது – அமைச்சர் சந்திரசேகர்
மாகாண சபை முறைமை என்பது தாம் வென்றெடுத்த உரிமை என தமிழர்கள் கருதுவதால் அந்த உரிமையில் தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் கைவைக்காது. இவ்வருட இறுதியில் அல்லது அடுத்த வருடத்தின் முற்பகுதியில் மாகாண சபைத் தேர்தல் நிச்சயம் நடத்தப்படும் என்று யாழ். மாவட்ட ஒருங்கிணைப்பு குழுத் தலைவரும் கடற்றொழில் மற்றும் நீரியல் கடல் வளங்கள் அமைச்சருமான இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்தார். மக்களுக்கான எமது நேர்வழி அரசியல் பயணத்தின்போது எதற்கும் அஞ்சி, அடிபணியப்போவதில்லை. போற்றுவோர் போற்றட்டும், தூற்றுவோர் தூற்றட்டும். ஏனெனில் மக்கள் சக்தி எமது பக்கம் எனவும் அவர் கூறினார். சீனா - இலங்கை நட்புறவின் பயனாக "சீனாவின் சகோதர பாசம்" எனும் வாசகத்துடன் யாழ். மாவட்டத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு சீனாவின் உதவியில் உலருணவுப் பொதிகள் வழங்கப்படும் நிகழ்வு இன்றைய தினம் (10) யாழ். மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் மாவட்ட செயலாளர் பிரதீபன் தலைமையில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் பிரதம அதிதியாக கடற்றொழில் மற்றும் நீரியல் கடல் வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் கலந்துகொண்டதோடு, இதில் இலங்கைக்கான சீன தூதரகத்தின் பிரதி பொறுப்பதிகாரி ஜு யான்வேய் (Zhu Yanwei), வட மாகாண ஆளுநர் நாகலிங்கம் வேதநாயகன் ஆகியோரும் இணைந்துகொண்டு யாழ். மாவட்டத்தில் தெரிவுசெய்யப்பட்ட 1070 குடும்பங்களுக்கு உலருணவுப் பொதிகளை வழங்கிவைத்தனர். இந்நிகழ்வில் மாவட்ட செயலக நிர்வாக உத்தியோகத்தர்கள், மாவட்ட அனர்த்த முகாமைத்துவப் பிரிவின் அதிகாரிகள், ஏனைய உத்தியோகத்தர்கள், சீனத் தூதரகத்தின் ஏனைய அதிகாரிகள், பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்டனர். இந்நிகழ்வின் பின்னர் அமைச்சர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில், சீனாவின் சகோதரப்பாசம் தொடர வேண்டும். தேசிய மக்கள் சக்தி ஆட்சிபீடம் வந்து 80 நாட்களுக்கு மேல் ஆகிறது. இக்காலப்பகுதிக்குள் நாட்டை கட்டியெழுப்பும் பயணத்துக்கான அடித்தளம் இடப்பட்டு வருகிறது. இதற்குரிய ஆணையை வழங்கிய மக்களுக்கு எமது நன்றிகள். யாழ். மக்களும் தேசிய மக்கள் சக்தியை முதன்மைக் கட்சியாக தெரிவுசெய்துள்ளனர். அதற்காக மீண்டும் நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கின்றேன். வறுமை ஒழித்தல், டிஜிட்டல் மயமாக்கல் உட்பட ஒட்டுமொத்த நாட்டையும் மேம்படுத்தவதற்கான திட்டமே தூய்மை ஸ்ரீலங்கா திட்டமாகும். அரசமைப்பின் 13ஆவது திருத்தச்சட்டத்தின் கீழ்வரும் மாகாண சபை முறைமை நீண்டு நிலைக்கக்கூடிய நிரந்தர தீர்வு என நாம் நம்பவில்லை. எனினும், மாகாண சபை முறைமையை தமக்கு கிடைத்த உரிமையாக தமிழ் மக்கள் நம்புகின்றனர். எனவேதான் மாகாண சபை முறைமை மீது கைவைக்காதிருக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. மாகாண சபை முறைமையை அர்த்தமுள்ள முறைமையாக மாற்றியமைப்போம். இவ்வருடத்துக்குள் அல்லது அடுத்த வருடம் முற்பகுதியில் அதற்கான தேர்தல் நடத்தப்படும். சிறுபான்மையின மக்கள் உட்பட நாட்டு மக்களின் உரிமைகளை நிலைநாட்டுகின்ற புதிய அரசமைப்பு கொண்டுவரப்படும். அதேவேளை, மக்களுடன் கலந்துரையாடி, நாட்டில் மீண்டும் இனவாதம், மதவாதம் ஏற்படாத வகையில் தையிட்டி விகாரைப் பிரச்சினைக்கு தீர்வு காணப்படும் என்றார். மாகாண சபை முறைமை என்பது தாம் வென்றெடுத்த உரிமையென தமிழர்கள் கருதுவதால் அந்த உரிமையில் தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் கைவைக்காது – அமைச்சர் சந்திரசேகர் | Virakesari.lk
-
தமிழ்த்தேசியக்கட்சிகள் பொதுக்குறிக்கோளின் அடிப்படையில்; புதிய கூட்டமைப்பை உருவாக்கவேண்டும் - சி.வி.விக்கினேஸ்வரன்
10 Feb, 2025 | 07:19 PM தமிழ்த்தேசியக்கட்சிகள் இணைந்து பேசி தமது பொதுவான குறிக்கோள் எதுவென்று தீர்மானிக்கவேண்டும். அதனடிப்படையில் சகல தமிழ்த்தேசியக்கட்சிகளையும் உள்ளடக்கி புதியதொரு கூட்டமைப்பை உருவாக்கவேண்டும். அக்கூட்டமைப்பில் உள்ளடங்கும் பிரதிநிதிகள் தமிழர்களுக்கான ஏற்றுக்கொள்ளத்தக்க அரசியல் தீர்வு குறித்து அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்தவேண்டும் என தமிழ் மக்கள் கூட்டணியின் தலைவரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான சி.வி.விக்கினேஸ்வரன் வலியுறுத்தியுள்ளார். கேள்வி - பதில் பகுதியில் தமிழ்த்தேசியக் கட்சிகளின் தற்போதைய நிலை மிகப்பரிதாபகரமாக இருக்கிறது எனவும், தமிழ்த்தேசியம் மீண்டும் வலுப்பெற என்ன செய்யவேண்டும் எனவும் எழுப்பட்டிருக்கும் கேள்விக்கு அளித்திருக்கும் பதிலிலேயே சி.வி.விக்கினேஸ்வரன் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் மேலும் கூறியிருப்பதாவது: தமிழ்த்தேசியம் எனும் பதத்துக்கு பலவிதமான அரசியல் வியாக்கியானங்கள் வழங்கப்பட்டிருக்கின்றன. உருத்திரகுமாரனின் நாடு கடந்த தமிழீழ அரசு ஜனநாயக, மதச்சார்பற்ற தமிழீழ அரசாங்கமொன்றை ஏற்படுத்தவேண்டும் என்ற முனைப்புடன் அதற்காகப் பாடுபட்டுக்கொண்டிருக்கிறது. அவர்களது தமிழ்த்தேசியம் பிரிவினை சார்ந்தது. அவர்கள் இனிமேல் சிங்கள மக்களுடன் சேர்ந்து வாழமுடியாது என்ற முடிவுக்கு வந்துவிட்டார்கள். உள்நாட்டிலும், சர்வதேச நாடுகளிலும் இயங்கிவரும் வேறுபல தமிழர் அமைப்புக்களும் அந்த நிலைப்பாட்டிலேயே இருக்கிறார்கள். வட்டுக்கோட்டைத் தீர்மானமும் தமிழீழத்தையே வலியுறுத்தியதுடன், அதனையடுத்தே 6 ஆவது திருத்தம் கொண்டுவரப்பட்டது. பிரிவினை கோருவது சட்டப்படி குற்றமாக்கப்பட்டது. ஆகவே உள்நாட்டில் இயங்கிவரும் சகல தமிழ்த்தேசியக் கட்சிகளும் இப்போது தமது குறிக்கோள் சமஷ்டியே என்று கூறிவருகின்றன. அவர்கள் அனைவரும் எமது நாட்டுக்கு சமஷ்டி அரசியலமைப்பு அவசியம் எனும் ஒத்த முடிவை எடுத்திருக்கிறார்கள். எனது கட்சி மாத்திரம் கூட்டு சமஷ்டியை வலியுறுத்தியுள்ளது. வட, கிழக்கு மக்கள் வெளியகத்தரப்பினரின் தலையீடின்றி ஒரே நாட்டினுள் தம்மைத் தாமே ஆளும் உரித்தைப் பெறவேண்டும் என்பதே சகல தமிழ்த்தேசியக் கட்சிகளினதும் குறிக்கோளாகும். இலங்கையில் தமிழ்மொழி சுமார் மூவாயிரம் ஆண்டுகளாகப் பேசப்பட்டுவந்திருக்கிறது. ஆனால் அப்போது சிங்களவர் என்ற மக்கள் கூட்டம் இருக்கவில்லை. மாறாக தமிழ்மொழி பேசிய மக்கள் தான் 6 ஆம், 7 ஆம் நூற்றாண்டுகளில் சிங்களமொழி பேச முற்பட்டனர். பௌத்த மொழியான பாளி மொழி தமிழ்மொழியுடன் கலந்தமையினாலேயே சிங்களமொழி உருவானது. தமிழ்த்தேசியம் என்பது வட, கிழக்கு மாகாணங்கள் பாரம்பரியமாகத் தமிழ்பேசும் இடங்கள், அங்கிருப்பவர்கள் தமிழ்மொழியினால் பரிபாலிக்கப்படவேண்டியவர்கள், அவர்களுக்கு அந்தப் பாரம்பரிய நிலங்களின் தன்னாட்சி வழங்கப்படவேண்டும் என்பதை அடிப்படைக்கொள்கையாகக் கொண்டதாகும். தன்னாட்சி எனும்போது, அது நாட்டைப் பிரிப்பதாக அமையும் என்ற அச்சம் சிங்கள மக்களுக்கு உண்டு. ஆனால் உண்மையில் வட, கிழக்கில் பெரும்பான்மையினர் தமிழ்மொழி பேசுவோர் என்றதால், இந்தப் பிரிவினை ஏற்கனவே உண்டு என்பது புலப்படும். இதனை சிங்களத் தலைவர்களுக்குப் புரியவைத்து, தமிழ்பேசும் இடங்களும், அங்கு வாழும் மக்களும் சமூக மற்றும் பொருளாதார ரீதியில் மேம்படுவதற்கு அரசியல் ரீதியான மாற்றங்கள் மேற்கொள்ளப்படவேண்டும் என்பதை உணர்த்துவதற்கு எமது அரசியல் பலம் மேம்படவேண்டும். எமக்குள் வேற்றுமைகள் இருந்தால் எமது பலம் குன்றிவிடும். ஆனால் உண்மையில் எமக்குள் குறிக்கோளில் வேற்றுமை இல்லை. மாறாக சுயநல சிந்தனைகளில் தான் வேற்றுமை உள்ளது. இன்றளவிலே தமிழ்த்தேசியக் கட்சிகளின் தலைவர்கள் தமது தனித்துவக்கட்சியின் முன்னுரிமையையே வலியுறுத்தி வருகிறார்கள். வட, கிழக்கு மக்கள் மற்றைய கட்சிகளைப் புறக்கணித்துத் தமது கட்சிக்கே வாக்களிக்கவேண்டும் என்று அவர்கள் எண்ணுகிறார்கள். ஆனால் நடைபெற்றுமுடிந்த தேர்தலில் அந்த எதிர்பார்ப்புக்கு எதிராக மக்கள் தற்போதைய ஆளுங்கட்சிக்கு வாக்களித்தார்கள். தமிழ் மக்களின் அரசியல் எதிர்பார்ப்புக்கு முரணாக ஒற்றையாட்சியை வலியுறுத்திய அக்கட்சிக்கு தமிழர்கள் வாக்களித்தனர். எது எவ்வாறெனினுமு; கடந்த பாராளுமன்றத்தேர்தல் முடிவுகள் தமிழ் வாக்காளர்களின் விரக்தி மனப்பான்மையையே அடிக்கோடிட்டுக் காண்பிக்கின்றன. இந்நிலையில் தமிழ்த்தேசியக்கட்சிகள் இணைந்து பேசி தமது அரசியல் குறிக்கோள்கள் எவையென்பதை அறியவேண்டும். அதன்போது தனிப்பட்ட நலன்களைப் புறந்தள்ளி தமிழ் பேசும் மக்களின் நலன்கருதி தீர்மானம் மேற்கொள்ளவேண்டும். யதார்த்தமாக சிந்தித்து, வட, கிழக்கானது இலங்கையின் ஓரங்கமாகத் தொடர்ந்து இருப்பதே அதன் பாதுகாப்புக்கும், வருங்கால வாழ்க்கைக்கும் உசிதமானது என்ற எண்ணம் வேரூன்றிவிட்டால் தமிழ்த்தேசியக்கட்சிகள் பொதுவானதொரு அரசியல் குறிக்கோளை முன்வைப்பதில் சிக்கல் எதுவும் ஏற்படாது. அதனடிப்படையில் சகல தமிழ்த்தேசியக்கட்சிகளையும் உள்ளடக்கி புதியதொரு கூட்டமைப்பை உருவாக்குவது கடினமானதன்று. அதற்கமைய தமிழ்த்தேசியக்கட்சிகள் அனுபவமுள்ள படித்த, பண்புள்ள, சுயநலமற்ற பிரதிநிதிகளை புதிய கூட்டமைப்பில் உள்வாங்குவதற்கு வழியேற்படுத்தவேண்டும். உணர்ச்சிகளுக்கும், சுயலாபத்துக்கும் இடம்கொடுக்காது தமிழ் மக்களின் வருங்காலம் கருதி பேச்சுவார்த்தைகள் அறிவுபூர்வமாக அமையவேண்டும். ஒவ்வொரு கட்சியும் மூன்றுக்கு மேற்படாமல் தமது பிரதிநிதிகளை உடனடியாக சிபாரிசு செய்யவேண்டும். அவர்கள் இணைந்து தமக்குள் இருந்து ஒரு தவிசாளரை நியமிக்கவேண்டும். இக்குழு கட்சிகளின் சார்பில் அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தைகளில் ஈடுபடவேண்டும். பிரதிநிதிகள் அரசியல்வாதிகள் அல்லாததால், அரசாங்கமும் விடயம் அறிந்த உறுப்பினர்களை அல்லது அலுவலர்களை நியமிப்பார்கள். அவர்கள் இணைந்து முன்வைக்கும் முன்மொழிவு அனைத்துக் கட்சிகளாலும் பரிசீலிக்கப்படும். அதனைத்தொடர்ந்து தமிழ்மக்களுக்கு எவ்வாறான அதிகாரப்பகிர்வு வழங்கப்படவேண்டும் என அரசாங்கம் சகல கட்சிகளுடனும் பேச்சுவார்த்தை நடத்தித் தீர்மானிக்கலாம். இதற்குரிய ஆரம்பகட்ட வேலைகளை எமது பல்கலைக்கழகப் புத்திஜீவிகள் ஆரம்பிக்கவேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார். தமிழ்த்தேசியக்கட்சிகள் பொதுக்குறிக்கோளின் அடிப்படையில்; புதிய கூட்டமைப்பை உருவாக்கவேண்டும் - சி.வி.விக்கினேஸ்வரன் | Virakesari.lk
-
தையிட்டி விகாரையை அகற்ற முடியாது!; மாற்றுக் காணியே ஒரே தீர்வு!; அநுர அரசு திட்டவட்டம்
தையிட்டி விகாரை விவகாரம்: மக்களின் விருப்பமே எமது தீர்மானம்; இன,மத வாதத்துக்கு இடமில்லை - அமைச்சர் சந்திரசேகரர் 10 Feb, 2025 | 05:33 PM தையிட்டி விகாரை விடயத்தில் மக்களின் விருப்பத்துக்கு அமைவாக எமது தீர்மானம் இருக்கும் என்று தெரிவித்துள்ள அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரர் மீண்டும் இனவாதம், மதவாதம் தலைதூக்குவதற்கு இடமளிக்கப்போவதில்லை என்றும் குறிப்பிட்டார். யாழ்.மாவட்ட செயலகத்தில் திங்கட்கிழமை (9) சீன அரசாங்கத்தின் உதவிப்பொருட்களை கையளிக்கும் நிகழ்வில் பங்கெடுத்திருந்த அவர் அதன்பின்னர் தையிட்டி விகாரை சம்பந்தமாக ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும்போதே மேற்கண்டவாறு தெரிவித்தார் அவர் மேலும் தெரிவிக்கையில், முதலில் யாழ்ப்பாணத்தில் உள்ள மக்களின் கருத்து என்னவென்பதை நாம் பார்க்க வேண்டும். தையிட்டியில் விகாரை கட்டப்படும்போது அதுதொடர்பில் நடவடிக்கைகளை முன்னெடுக்காதவர்கள் தற்போது அந்தப்பிரச்சினையை பூதகரமாக தூக்கிப்பிடிக்கின்றார்கள். தையிட்டி விகாரை விடயத்தினை தூக்கிப்பிடிப்பவர்கள் உண்மையிலேயே அந்த விடயத்தினை முன்னெடுக்கின்றார்களா? இல்லை விரைவில் உள்ளுராட்சிமன்றங்களுக்கான தேர்தல் வரவிருப்பதால் அதற்கான துருப்புச்சீட்டாக இதனைப் பயன்படுத்தப் பார்க்கின்றார்களா? தையிட்டி விகாரை விடயம் இனவாதத்தினை, மதவாத்தினை தூண்டக்கூடியது. இனவாதத்தினையும், மதவாத்தினையும் மக்கள் தோற்கடித்திருக்கின்றார்கள். அதுமட்டுமன்றி, நாட்டின் அபிவிருத்தி வேகமாக முன்னெடுக்கப்படுகின்றது. ஆகவே அதுபற்றிக் கதைப்பதற்கு ஒன்றுமில்லை. அந்த வகையில் மதவாத்தினை இலகுவாகத் தூண்டி அதன் மூலமாக அரசியல் இலாபத்தைப் பெற்றுக்கொள்ளவே பார்க்கின்றார்கள். எவ்வாறாக இருந்தாலும் எமது அரசாங்கத்தின் கீழேயே இந்தப்பிரச்சினைக்கும் தீர்வினை எட்டுவதற்கு நடவடிக்கைகளை முன்னெடுக்கவுள்ளோம். மக்களுடன் கலந்துரையாடி, மக்கள் பரிந்துரைக்கும் தீர்மானத்துக்கு செல்வதற்கு நாம் தயாராகவே உள்ளோம். விகாரை அமைக்கப்பட்டமை சட்டவிரேதமானதா இல்லையா என்பது தொடர்பில் நாம் ஒவ்வொருவரும் தனிப்பட்ட கருத்துக்களை முன்வைக்க முடியும். ஆனால், விகாரை அமைக்கப்பட்டுள்ள நிலமானது மக்களுடையது என்பதில் மாற்றுக்கருத்துக்கு இடமில்லை. அதனால் அந்தக் நிலத்துக்குச் சொந்தக்காரர்களுக்கு மாற்றுக் காணிகளை அல்லது நட்டஈட்டை வழங்க வேண்டிய தேவையுள்ளது. விகாரையை உடைத்து நொருக்குவதால் பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்குமா என்பது பற்றியும் சிந்திக்க வேண்டியுள்ளது. ஆகவே சுமூகமான தீர்வொன்றிணை மேற்கொள்ள வேண்டும். இனவாதம்,மதவாதம் தலைதூக்குவதற்கு இடமளிக்கக் கூடாது. அதில் நாம் உறுதியாக இருக்கின்றோம் என்றார். தையிட்டி விகாரை விவகாரம்: மக்களின் விருப்பமே எமது தீர்மானம்; இன,மத வாதத்துக்கு இடமில்லை - அமைச்சர் சந்திரசேகரர் | Virakesari.lk
-
அமெரிக்கா: சட்டவிரோத குடியேறிகளை இந்தியா கொண்டு வரும் ராணுவ விமானம் - நிலவரம் என்ன?
'வழியில் சடலங்களைப் பார்த்தோம்' - காடு, மலை, கடலைத் தாண்டி உயிரைப் பணயம் வைத்து அமெரிக்கா சென்ற இந்தியர்கள் ஹரியானாவின் குருக்ஷேத்ரா மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்த குஷ்ப்ரீத் சிங், ஆறு மாதங்களுக்கு முன்பு 45 லட்சம் ரூபாய் செலவழித்து அமெரிக்கா சென்றிருந்தார். குஷ்ப்ரீத் சிங்கின் தந்தை, தனது நிலம், வீடு மற்றும் கால்நடைகள் மீது கடன் வாங்கி குஷ்ப்ரீத்தை அமெரிக்காவுக்கு அனுப்பினார். ஆனால், தற்போது அமெரிக்காவில் இருந்து திருப்பி அனுப்பப்பட்டுள்ள இந்தியர்களில் குஷ்ப்ரீத் சிங்கும் ஒருவர். ஜனவரி 22-ம் தேதி, தான் எல்லை தாண்டியதாகவும், பிப்ரவரி 2-ம் தேதி திருப்பி அனுப்பப்பட்டதாகவும் குஷ்ப்ரீத் கூறுகிறார். "தண்ணீர் குடித்துவிட்டு காட்டைக் கடக்கச் சொன்னார்கள். யாராவது பின்னால் விழுந்தால், திரும்பிப் பார்க்க வேண்டிய அவசியமில்லை, உங்கள் பாதையில் முன்னோக்கிச் செல்லுங்கள், வழிகாட்டி செல்பவரைப் பின்பற்றுபவர்களால் மட்டுமே பாதையைக் கடக்க முடியும், பின்னால் விழுபவர்கள் எப்போதும் அங்கேயே தான் இருப்பார்கள்." என்று அவர்கள் கூறியதை விவரிக்கிறார் குஷ்ப்ரீத். பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும். பட மூலாதாரம்,Kamal Saini/BBC படக்குறிப்பு,குஷ்ப்ரீத் தனது பாஸ்போர்ட்டைக் காட்டி, அதில் அமெரிக்காவுக்குள் நுழைவதற்கு நிரந்தரத் தடை விதிக்கப்பட்டுள்ளதாகக் கூறினார் அமெரிக்காவில் பிடிபட்ட குஷ்ப்ரீத் 12 நாட்கள் ஒரு முகாமில் தங்க வைக்கப்பட்டார். இதுகுறித்து பேசிய அவர், "முதல் நாளில் எங்களை இந்தியாவுக்கு திருப்பி அனுப்புவார்கள் என்று சொன்னார்கள், ஆனால் அவர்கள் எங்களை கேலி செய்கிறார்கள் என்று நாங்கள் நினைத்தோம். ஆனால், அதில் அவர்கள் தீவிரமாக இருந்தார்கள், நாங்கள் தான் அதை நகைச்சுவையாக எடுத்துக்கொண்டோம்." என்கிறார். ராணுவ விமானத்தில் அவர் எப்படி ஏற்றப்பட்டார், அப்போது எப்படி நடத்தப்பட்டார் என்பது குறித்து குஷ்பிரீத் விவரித்தார். "அவர்கள் எங்களுக்கு கைவிலங்கிட்டபோது, சூழலின் தீவிரத்தை உணர்ந்தோம். முதலில் அவர்கள் எங்களை வரவேற்பு மையத்துக்கு அழைத்துச் செல்வதாகச் சொன்னார்கள். நாங்கள் அங்கேயே விடப்படுவோம் என்று நினைத்தோம், ஆனால் நாங்கள் தரையிறங்கியபோது, எங்கள் முன் ஒரு ராணுவ விமானம் நிற்பதைக் கண்டோம்" என்று விவரிக்கிறார். குஷ்பிரீத் கடந்த சில நாட்களில் தான் எதிர்கொள்ள நேர்ந்ததை நினைத்து மிகவும் கவலையடைந்தவராகக் காணப்பட்டார். அமெரிக்காவை அடைய நிறைய பணம் செலவானது, மேலும் "எங்கள் பணத்தை நாங்கள் திரும்பப் பெற்றால், நாங்கள் இங்கே ஏதாவது வேலை செய்வோம்" என்று நம்பிக்கை தெரிவித்த அவர், ஆனால் இப்போது நாங்கள் வெளியே வேலை தேட மாட்டோம்" என்றும் கூறினார். குஷ்பிரீத் சிங்கின் தந்தை உணர்ச்சிவயப்பட்டு காணப்பட்டார். அழுதுகொண்டே, "எங்கள் பணத்தை எங்களுக்குத் திருப்பிக் கொடுங்கள், முழுத் தொகையையும் கொடுக்கவில்லை என்றாலும், குறைந்தபட்சம் பாதியையாவது கொடுங்கள்" என்றார். 'வழியில் இறந்த உடல்களையும் பார்த்தேன்' பட மூலாதாரம்,Pradeep Sharma/BBC படக்குறிப்பு,சுக்பால் சிங் நான்கு மாதங்களுக்கு முன்புதான் வீட்டை விட்டு வெளியேறினார் பஞ்சாபின் ஹோஷியார்பூர் மாவட்டத்தின் உர்மர் தாண்டாவைச் சேர்ந்த சுக்பால் சிங், காடுகள் மற்றும் கடல் வழியாக அமெரிக்காவை அடைந்ததாகக் கூறினார். சுக்பால் சிங், பிபிசி நிருபர் பிரதீப் சர்மாவிடம், வீட்டை விட்டு வெளியேறி நான்கு மாதங்கள் ஆகிவிட்டதாகக் கூறினார். வழியில் உள்ள சிரமங்களைப் பற்றி அவர் கூறுகையில், "யாரும் தவறான பாதையில் செல்ல வேண்டாம், முடிந்தால் அங்கு செல்லவே வேண்டாம் என்று எல்லோரிடமும் கைகூப்பி கேட்டுக்கொள்கிறேன். இங்கே உணவு கிடைத்தால் அதை மட்டும் சாப்பிடுங்கள். அங்கு உணவு இல்லை. மேலும், அவர்கள் உங்கள் பணத்தை பறித்துச் செல்கிறார்கள், பாதுகாப்பும் இல்லை" என்றார். தொடர்ந்து பேசிய அவர், "அவர்கள் எங்களை முதலில் இத்தாலிக்கு அழைத்துச் சென்றனர், பின்னர் எங்களை லத்தீன் அமெரிக்காவுக்கு அழைத்துச் சென்றனர். நாங்கள் சுமார் 15 மணிநேரம் ஒரு படகில் பயணம் செய்தோம். மலைகளில் 45 கிலோமீட்டர் தூரம் நடந்தோம், அங்கே யார் விழுந்தாலும், அவர்களை அங்கேயே விட்டுவிடுவார்கள். வழியில் பல சடலங்களைப் பார்த்தோம்" என்று பகிர்ந்தார். பட மூலாதாரம்,Pradeep Sharma/BBC படக்குறிப்பு,அமெரிக்கா செல்ல ஹர்விந்தர் சிங் ரூ.42 லட்சம் செலவளித்துள்ளார் ஹோஷியார்பூர் மாவட்டத்தின் தாசுவா நகரைச் சேர்ந்த ஹர்விந்தர் சிங்கின் கதையும் இதே போன்றதுதான். முதலில் டெல்லிக்கும், பின்னர் கத்தாருக்கும், அங்கிருந்து பிரேசிலுக்கும் அழைத்துச் செல்லப்பட்டதாக அவர் கூறுகிறார். "நான் பிரேசிலில் ஒரு ஹோட்டலில் இரண்டு நாட்கள் தங்கியிருந்தேன், பின்னர் அவர்கள் என்னிடம் பெருவிலிருந்து உங்களுக்கு விமானம் இருப்பதாக சொன்னார்கள், நாங்கள் பேருந்தில் பெரு சென்றோம், ஆனால் அங்கு விமானம் இல்லை, அங்கிருந்து நாங்கள் டாக்ஸியில் சென்றோம்." என்றார். இதற்கு 42 லட்சம் ரூபாய் செலவிட்டதாக ஹர்விந்தர் சிங் கூறுகிறார். "நாங்கள் பனாமாவை அடைந்தபோது சிக்கிக்கொண்டோம். அங்கு ஒன்றிரண்டு பேர் இறந்தனர், ஒருவர் கடலில் மூழ்கி இறந்தார், இன்னொருவர் காட்டில் இறந்தார்," எனக் குறிப்பிடுகிறார் ஹர்விந்தர் சிங். செல்லுபடியாகும் விசா இருந்தபோதிலும் திருப்பி அனுப்பப்பட்டது ஏன்? பட மூலாதாரம்,Gurminder Grewal/BBC படக்குறிப்பு,முஸ்கானுக்கு செல்லுபடியாகும் இங்கிலாந்து விசா இருந்தது, ஆனாலும் அவர் திருப்பி அனுப்பப்பட்டார் பஞ்சாப் மாநிலம் லூதியானா மாவட்டத்தில் உள்ள ஜாக்ரோன் பகுதியைச் சேர்ந்த முஸ்கான் என்பவர் மூன்றாண்டு படிப்பு விசாவில் பிரிட்டன் சென்றிருந்தார். அவருக்கு இன்னும் இரண்டு வருடங்களுக்கான விசா மீதமுள்ளது, ஆனால் அவர் அமெரிக்கா சென்றவுடன், இந்தியாவுக்குத் திருப்பி அனுப்பப்பட்டார். பிபிசிக்கு செய்திகள் வழங்கும் நிருபர் குர்மிந்தர் கிரேவாலின் கருத்துப்படி, அவர் ஜனவரி 5, 2024 அன்று பிரிட்டனுக்குச் சென்றார். முஸ்கான் கூறுகையில், "நாங்கள் அமெரிக்காவில் கலிஃபோர்னியாவில் உள்ள துஹாவானாவில் நடைபயிற்சி மேற்கொண்டிருந்தோம். காவல்துறையினர் எங்களை தடுத்து நிறுத்தி, அவர்கள் வந்து எங்களை அழைத்துச் செல்வதாகக் கூறினர். அவர்கள் எங்களை 10 நாட்கள் தங்களுடனேயே வைத்திருந்து, எங்களை மிகவும் நன்றாக உபசரித்தனர்" என்கிறார். தொடர்ந்து பேசிய அவர், "கலிஃபோர்னியா காவல்துறையினர் எங்களை அழைத்துச் செல்ல வந்தார்கள். பிறகு எங்களை இந்தியாவுக்கு அனுப்பினர். இங்கு வந்த பிறகுதான் நாங்கள் இந்தியாவுக்கு வந்திருப்பதையே உணர்ந்தோம். அங்கும் இங்கும் அலைக்கழிக்கப்பட்டோம். நாங்கள் முறையான விசாவில் தான் சென்றோம். எந்த எல்லையையும் தாண்டவோ அல்லது எந்த சுவற்றிலும் ஏறியோ செல்லவில்லை" என்கிறார் முஸ்கான். அது மட்டுமின்றி, "செல்லுபடியாகும் பிரிட்டிஷ் விசா என்னிடம் உள்ளது, ஆனால் நாங்கள் ஐந்து ஆண்டுகளுக்கு எங்கும் செல்ல முடியாது என எங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது," என்றும் குறிப்பிட்டார். "குழந்தையின் எதிர்காலத்தை உருவாக்குவதற்காக நாங்கள் அவரை அனுப்பியிருந்தோம், ஆனால் அவர் துன்புறுத்தப்பட்டுள்ளார். அரசாங்கம் இப்போது இதில் கவனம் செலுத்த வேண்டும். கடன் வாங்கி குழந்தையை அனுப்பியுள்ளோம்" என்று கவலை தெரிவித்தார் முஸ்கானின் தந்தை ஜெகதீஷ் குமார். முஸ்கானின் வீட்டுக்குச் சென்ற ஆம் ஆத்மி எம்எல்ஏ சரப்ஜித் கவுர் மனுகே, "இன்னும் இரண்டு வருடம் செல்லுபடியாகும் பிரிட்டிஷ் விசா அந்தப் பெண்ணிடம் இருந்தாலும் அவர் திருப்பி அனுப்பப்பட்டது எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது" என்றார். முஸ்கானின் குடும்பத்துடன் தங்களுக்கு நல்ல உறவு இருப்பதாக மனுகே கூறுகிறார். "எங்கள் மகள் துஹாவானாவைப் பார்க்கச் சென்றார், அவர்களே அவரை அங்கு அழைத்துச் சென்றார்கள், அதன் பிறகு எல்லாம் நடந்துள்ளது. அமெரிக்கா போன்ற ஒரு நாட்டிலிருந்து இதுபோன்ற விஷயங்களை எதிர்பார்க்கவில்லை" என வருத்தம் தெரிவித்தார். 11 நாட்களுக்கு முன்பு அமெரிக்கா சென்றவர் பட மூலாதாரம்,BBC/Gurpreet Chawla படக்குறிப்பு,ஜஸ்பால் சிங் அமெரிக்காவை அடைந்து 11 நாட்கள் தான் ஆகியிருந்தது பஞ்சாபின் குர்தாஸ்பூர் மாவட்டத்தில் உள்ள ஃபதேகர் சூரியன் பகுதியைச் சேர்ந்த ஜஸ்பால் சிங் பிடிபட்டு திருப்பி அனுப்பப்பட்டபோது அமெரிக்காவில் 11 நாட்கள் மட்டுமே இருந்துள்ளார். பிபிசி செய்தியாளர் குர்பிரீத் சாவ்லாவிடம் பேசிய அவர், "அமெரிக்கா செல்லும் கனவு கலைந்து விட்டது" என்று கனத்த இதயத்துடன் கூறினார். அவரது அமெரிக்க பயணம் சுமார் இரண்டரை ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கியது. அதைத் தொடர்ந்து, இந்தக் கனவுக்காக அவர் 40 லட்ச ருபாய் இழந்துள்ளார். புதன்கிழமையன்று, அமெரிக்க ராணுவ விமானம் மூலம் 104 இந்தியர்கள் இந்தியாவுக்கு திருப்பி அனுப்பப்பட்டனர். அந்த 104 இந்தியர்களில் ஜஸ்ப்ரீத்தும் ஒருவர். 2022 ஆம் ஆண்டு பார்வையாளர் விசாவில் இங்கிலாந்து சென்றதாகவும், அங்கு ஸ்பெயினில் இருந்து பஞ்சாபி ஏஜென்ட் ஒருவரை தொடர்புகொண்டதாகவும் ஜஸ்பால் சிங் கூறுகிறார். பின்னர் 2024ம் ஆண்டு ஜூலை மாதத்தில் ஐரோப்பாவை அடைந்தார் ஜஸ்பால் சிங். இதற்குப் பிறகு, வெவ்வேறு நாடுகளில் சுமார் 6 மாதங்கள் கழித்த பிறகு, பனாமா காடுகளின் வழியாக அமெரிக்காவுக்குச் செல்லும் வழியைக் கண்டுபிடித்துள்ளார். ஜஸ்பால் சிங் கூறுகையில், "கழுதையில் பயணம் செய்த அனுபவம் மிகவும் ஆபத்தானது. அங்கு சிறுவர்கள் மட்டுமின்றி பெண் குழந்தைகளின் உடல்கள் உருண்டு கிடப்பதையும் கண்டேன், எலும்புக்கூடுகளையும் பார்த்தேன். பயணத்தின்போது எங்களுக்கு சிறிது ரொட்டியும், ஒன்றிரண்டு பிஸ்கட்டுகளும் மட்டுமே கிடைத்தன" என தனது பயணத்தை விவரித்தார். அமெரிக்க எல்லையைத் தாண்டியதும், அமெரிக்க ராணுவம் தன்னைக் கைது செய்ததாக ஜஸ்பால் கூறுகிறார். மேலும் " பல வழிகளில் நாங்கள் சித்திரவதை செய்யப்பட்டோம். விமானத்தில் ஏறிய பிறகு, கைகளும் கால்களும் கட்டப்பட்டன. விமானம் பல இடங்களில் நின்றது, ஆனால் அமிர்தசரஸை அடைந்த பிறகுதான் என் கைகளும் கால்களும் விடுவிக்கப்பட்டன" என தெரிவித்தார் . "நிலத்தை விற்ற பிறகும், என் மகனால் எங்கும் செல்ல முடியவில்லை" பட மூலாதாரம்,Kamal Saini/BBC படக்குறிப்பு,தனது கைகள் மற்றும் கால்கள் சங்கிலியால் பிணைக்கப்பட்டு திருப்பி அனுப்பப்பட்டதாக ராபின் ஹண்டா கூறினார் ஹரியாணா மாநிலம் குருக்ஷேத்ராவில் வசிக்கும் ராபின் ஹண்டாவும் தனது கனவை நிறைவேற்றுவதற்காக 7 மாதங்களுக்கு முன்பு அமெரிக்கா சென்றார். இந்நிலையில், அவரும் திருப்பி அனுப்பப்பட்டார். ஹண்டா கணினி பொறியியல் படித்துவிட்டு சிறந்த எதிர்காலத்தைத் தேடி அமெரிக்கா சென்றார். தொடர்ந்து பேசிய அவர், "நான் அமெரிக்கா செல்வதற்காக 7 மாதங்களுக்கு முன்பு வீட்டை விட்டு வெளியேறினேன். ஒரு மாதமாக வழியில் பல இடங்களில் தடுத்து நிறுத்தப்பட்டேன். வழியில் பல சிரமங்களை சந்தித்தேன். சில சமயங்களில் எனக்கு உணவு கிடைத்தது, சில சமயங்களில் கிடைக்கவில்லை. கடலிலும், சில நேரங்களில் படகுகளிலும் இருந்தேன். சில இடங்களில் பலர் என் பணத்தைப் பறித்துச் சென்றனர், இதுபோல பல வகையான பிரச்னைகளை எதிர்கொண்டேன்" என ஹரியாணாவைச் சேர்ந்த பிபிசி செய்தியாளர் கமல் சைனியிடம் ராபின் ஹண்டா தெரிவித்தார். "ஜனவரி 22-ம் தேதி நான் எல்லையைத் தாண்டிவிட்டேன். பின்னர் நாங்கள் சட்டப்பூர்வ நடவடிக்கைகளை முடித்து ராணுவத்திடம் சரணடைந்தோம். அவர்கள் எங்களை ஒரு முகாமுக்கு அழைத்துச் சென்றனர். அங்கு நாங்கள் குற்றவாளிகளைப் போல நடத்தப்பட்டோம்" என்றும் குறிப்பிட்டார் ராபின் ஹண்டா . அதன் பிறகு, "முகாமிலிருந்து எங்களை எங்கு அழைத்துச் செல்வார்கள் என்று கூட எங்களுக்குத் தெரிவிக்கப்படவில்லை, எங்கள் கைகளும் கால்களும் சங்கிலிகளால் கட்டப்பட்டிருந்தன. எங்கள் முன் ராணுவ விமானம் நிற்பதைப் பார்த்தபோது, நாங்கள் அதிர்ச்சியடைந்தோம்" என்பதையும் அவர் பகிர்ந்தார். மேலும், "நான் யாரையும் இந்த வழியில் வெளியே செல்ல அறிவுறுத்த மாட்டேன். இது மிகவும் கடினமான பாதை." என ஹண்டா இப்போது கூறுகிறார். தனது மகனை அனுப்புவதற்காக ரூ.45 லட்சம் செலவு செய்ததாக ராபின் ஹண்டாவின் தந்தை தெரிவித்துள்ளார். ராபின் ஹண்டாவின் தந்தை கூறுகையில், "ஏஜென்சி எங்களை ஏமாற்றி விட்டது. மகன் ஒரு மாதத்தில் வந்து விடுவான் என்று சொன்னார்கள், ஆனால் நாங்கள் 6-7 மாதங்கள் வீடு வீடாக அலைய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. அவர்கள் எங்களை சித்திரவதை செய்தனர், மின்சார அதிர்ச்சி கூட கொடுத்தனர்." என்கிறார். "எங்கள் குழந்தையை அடிக்கும் வீடியோக்களும் எங்களிடம் உள்ளன. நல்ல வேலை வாங்கித் தருவதாக வாக்குறுதி அளித்து, எங்கள் நிலத்தை விற்றோம், ஆனால் அது நடக்கவில்லை" என்று வருத்தத்துடன் தெரிவித்தார். நடந்தவற்றை அவர் விவரிக்கும்போது, ராபின் ஹண்டாவின் பாட்டி பியார் கவுர் மிகவும் உணர்ச்சிவசப்பட்டு காணப்பட்டார். "பசியாலும் தாகத்தாலும் என் மகன் அவதிப்பட்டார்" என்றும் கூறினார். மேலும், "அவர் நிலத்தை விற்று ராபின் ஹண்டாவை அனுப்பினார். நிலத்தை விற்றதால் ஹண்டாவின் தாத்தாவும் நோய்வாய்ப்பட்டார். இது அவரது மனதில் தாக்கத்தை ஏற்படுத்தியது. ஆனால், இப்போது அவருக்கு எதுவும் தெரியாது" என்று தெரிவித்தார். 'அமெரிக்கா செல்ல 50 லட்ச ரூபாய் செலவழித்தேன்' படக்குறிப்பு,ஜஸ்விந்தர் சிங் கைது செய்யப்பட்டபோது 22 நாட்களுக்கு முன்புதான் அமெரிக்காவை அடைந்திருந்தார் பஞ்சாபின் ஃபதேஹ்கர் சாஹிப் மாவட்டத்தில் உள்ள கஹான்புரா கிராமத்தைச் சேர்ந்த ஜஸ்விந்தர் சிங், அக்டோபர் 2024 இல் அமெரிக்கா சென்றார். "இரவு நேரத்தில் காவல்துறை அதிகாரிகளால், ஜஸ்விந்தர் வீட்டில் இறக்கிவிடப்பட்டார்," என ஜஸ்விந்தர் சிங்கின் மாமா கர்னைல் சிங் பிபிசியிடம் கூறினார். 'நாங்கள் அமெரிக்காவிலிருந்து கைவிலங்குகள் போடப்பட்டு விமானத்தில் அழைத்து வரப்பட்டோம்' என அவர் தனது குடும்பத்தினரிடம் தெரிவித்துள்ளார். ஜஸ்விந்தர் சிங் கைது செய்யப்பட்ட 22 நாட்களுக்கு முன்புதான் அமெரிக்கா சென்றிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. "ஜஸ்விந்தர் வீட்டுக்கு வந்ததிலிருந்து அவரது உடல்நிலை மோசமாக உள்ளது, ஒருவேளை அவர் மன அழுத்தத்தில் இருக்கலாம்" என்று கர்னைல் சிங் கூறுகிறார். இந்நிலையில், ஜஸ்விந்தர் சிங்குக்கு காலையில் திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டதையடுத்து லூதியானா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். "முகாமில் சாப்பிட எதுவும் கொடுக்கப்படவில்லை என்றும், பாதி ஆப்பிள் அல்லது ஜூஸ் மட்டுமே கொடுக்கப்பட்டதாகவும், அதுவும் எப்போதாவது மட்டுமே கொடுக்கப்பட்டதாகவும் ஜஸ்விந்தர் குடும்பத்தினரிடம் கூறினார்," என்பதையும் அவர் குறிப்பிட்டார். ஜஸ்விந்தர் சிங்குக்கு ஒரு மூத்த சகோதரர் உள்ளார், இரு சகோதரர்களுக்கும் சொந்தமாக நிலம் உள்ளது. அங்கே அவர் விவசாயம் செய்து வந்தார். அதனையடுத்து, கடந்த ஆண்டு ஒரு ஏஜென்ட் மூலம் அமெரிக்கா செல்ல முடிவு செய்தார். அமெரிக்கா செல்ல அவரது குடும்பம் சுமார் 50 லட்சம் ரூபாய் செலவிட்டதாக அவர் குறிப்பிட்டார். "இந்தப் பணத்துக்காக, நாங்கள் எங்கள் தங்க நகைகளை அடமானம் வைத்து உறவினர்களிடமிருந்து நிறைய பணம் கடன் வாங்கியிருந்தோம்" என வருத்தத்துடன் தெரிவித்தார். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/c863dvqeq87o
-
சீமானின் மொழியாடல் சாமானியர்களின் ‘கவனம்’ ஈர்ப்பது ஏன்?
எத்தனை பேருக்கு இதை இணைத்தது பிழம்பா என்று சந்தேகம் வந்தது?😀😀
-
அமெரிக்கா: சட்டவிரோத குடியேறிகளை இந்தியா கொண்டு வரும் ராணுவ விமானம் - நிலவரம் என்ன?
‘கைவிலங்கு’ விவகாரம்: அமெரிக்காவிடம் கவலை தெரிவித்த இந்தியா! புதுடெல்லி: அமெரிக்காவில் இருந்து நாடு கடத்தப்பட்ட இந்தியர்கள், மோசமாக நடத்தப்பட்டது குறித்து இந்தியா தனது கவலையை அமெரிக்காவுக்கு தெரிவித்துள்ளது என்று வெளியுறவுச் செயலாளர் விக்ரம் மிஸ்ரி கூறியுள்ளார். டெல்லியில் செய்தியாளர்களிடம் அவர் கூறும்போது, “அமெரிக்க அதிபரின் அழைப்பின் பேரில் பிப்ரவரி 12-ம் தேதி பிரதமர் நரேந்திர மோடி அமெரிக்கா செல்கிறார். அமெரிக்க அதிபராக ட்ரம்ப் இரண்டாவது முறையாக பதவியேற்ற பிறகு பிரதமர் மோடி அங்கு மேற்கொள்ளும் முதல் பயணம் இது. ட்ரம்பின் இரண்டாவது பதவிக் காலம் சில வாரங்களுக்கு முன்பு தொடங்கிய நிலையில், அமெரிக்காவுக்குச் செல்லும் முதல் சில உலகத் தலைவர்களில் பிரதமர் நரேந்திர மோடியும் ஒருவர். புதிய நிர்வாகம் பதவியேற்ற மூன்று வாரங்களுக்குள் பிரதமர், அமெரிக்காவுக்கு வருகை தர அழைக்கப்பட்டிருப்பது, இந்திய - அமெரிக்க உறவின் முக்கியத்துவத்தைக் காட்டுகிறது. புதிய நிர்வாகத்துடன் பரஸ்பர ஆர்வமுள்ள அனைத்துத் துறைகளிலும் ஈடுபடுவதற்கு இந்தப் பயணம் ஒரு மதிப்புமிக்க வாய்ப்பாக இருக்கும். இந்தப் பயணத்தின்போது அமெரிக்க நிர்வாகத்தின் மூத்த பிரமுகர்களும் பிரதமர் மோடியைச் சந்திப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதேநேரத்தில் வணிகத் தலைவர்கள் மற்றும் இந்திய சமூகத்தினருடன் கலந்துரையாடும் வாய்ப்பையும் அவர் பெறுவார். அதிபர் ட்ரம்பின் முதல் பதவிக்காலத்தில் 2017 மற்றும் 2019 ஆகிய ஆண்டுகளில் இரண்டு முறை பிரதமர் மோடி அமெரிக்காவுக்குப் பயணம் செய்தார். இந்த முறை, அவரது தேர்தல் வெற்றிக்குப் பிறகு, பிரதமர் மோடி அவரை அழைத்து வாழ்த்து தெரிவித்த முதல் உலகத் தலைவர்களில் ஒருவர். பதவியேற்புக்குப் பிறகு பிரதமர் மீண்டும் அவரை அழைத்தார். அந்த சந்தர்ப்பத்தில்தான் அவர்கள் மிக விரைவில் சந்திக்க ஒப்புக்கொண்டனர்" என்று தெரிவித்தார். அப்போது, அமெரிக்காவால் நாடு கடத்தப்பட்ட இந்தியர்கள் மோசமாக நடத்தப்பட்டது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதில் அளித்த விக்ரம் மிஸ்ரி, "நாடு கடத்தல் பிரச்சினையில் இந்தியா தனது கவலைகளை அமெரிக்காவிடம் பதிவு செய்துள்ளது. இதில், உண்மையான பிரச்சினை என்பது சட்டவிரோதக் குடியேற்றத்தை மேற்கொள்ள அப்பாவிகளைத் தவறாக வழிநடத்துவதுதான். இதைச் செய்பவர்கள் மீது வழக்குத் தொடரப்பட வேண்டும். நாடு கடத்தப்படுபவர்களை அழைத்துக் கொண்டு மேலும் பல அமெரிக்க விமானங்கள் வரக்கூடும். 487 இந்திய குடிமக்கள் இப்போது நாடு கடத்தப்படுவதற்காக காத்திருக்கிறார்கள் என்று தகவல் கிடைத்துள்ளது" என்று தெரிவித்தார். பின்னணி என்ன? - அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறிய 104 இந்தியர்கள் இந்தியாவுக்கு திருப்பி அனுப்பப்பட்டு உள்ளனர். இதில் 19 பெண்கள், 13 சிறார் மற்றும் 4 வயது குழந்தையும் அடங்கும். ராணுவ விமானத்தில் வந்த அவர்கள் நேற்று முன்தினம் பஞ்சாபின் அமிர்தசரஸ் விமான நிலையத்தில் தரையிறங்கினர். இது தொடர்பான வீடியோவை அமெரிக்க எல்லை பாதுகாப்பு ரோந்து படையின் தலைவர் மைக்கேல் பாங்க் சமூக வலைதளத்தில் வெளியிட்டார். அந்த வீடியோவில் இந்தியர்களின் கை, கால்களில் விலங்கிடப்பட்டிருப்பது தெளிவாக தெரிகிறது. அதோடு மைக்கேல் பாங்க் வெளியிட்ட பதிவில், “சட்டவிரோத ஏலியன்களை இந்தியாவுக்கு வெற்றிகரமாக திருப்பி அனுப்பி உள்ளோம். இது மிக நீண்ட தொலைவு பயணம். சட்டவிரோத குடியேறிகளை வெளியேற்றுவதில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம். நீங்கள் சட்டவிரோதமாக அமெரிக்காவுக்குள் நுழைந்தால், நிச்சயமாக விரட்டியடிப்போம்” என்று தெரிவித்துள்ளார். இதனிடையே, இந்தியா திரும்பிய பஞ்சாபை சேர்ந்த ஜஸ்பால் சிங் கூறும்போது, “வேலைவாய்ப்புக்காக ஒரு ஏஜெண்டிடம் ரூ.42 லட்சம் அளித்து அமெரிக்கா சென்றேன். கத்தார், பிரேசில், பெரு, கொலம்பியா, பனாமா, மெக்சிகோ வழியாக அமெரிக்காவுக்குள் நுழைந்தேன். தற்போது கை, கால்களில் விலங்கிடப்பட்டு கைதி போல இந்தியாவுக்கு திரும்பி உள்ளேன்” என்று தெரிவித்தார். பெயர் வெளியிட விரும்பாத நாடு திரும்பிய இந்தியர்கள் கூறும்போது, “சுமார் 40 மணி நேர விமான பயணத்தில் போதிய உணவு வழங்கப்படவில்லை. கழிப்பறையை பயன்படுத்த முடியவில்லை. அமெரிக்க அதிகாரிகள் மனிதாபிமானத்துடன் செயல்படவில்லை” என்று குற்றம் சாட்டினர். இந்த விவகாரம் நாடாளுமன்றத்தில் நேற்று எதிரொலித்தது. மக்களவை, மாநிலங்களவையில் எதிர்க்கட்சிகள் எம்பிக்கள் மத்திய அரசுக்கு எதிராக கோஷமிட்டு அமளியில் ஈடுபட்டனர். இதன் காரணமாக இரு அவைகளும் பலமுறை ஒத்திவைக்கப்பட்டன. அமெரிக்காவில் இருந்து வெளியேற்றப்பட்ட இந்தியர்களின் கை, கால்களில் விலங்கிடப்பட்டது ஏன்? இந்தியர்களை தீவிரவாதிகளை போன்று நடத்தியது ஏன் என்று எதிர்க்கட்சி எம்பிக்கள் கேள்வி எழுப்பினர். இது தொடர்பாக மாநிலங்களவையில் விரிவான விளக்கம் அளித்த வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர், “வெளிநாடுகளில் சட்டவிரோதமாக குடியேறியவர்களை திரும்ப அழைத்துக் கொள்வது அந்தந்த நாடுகளின் கடமை. சட்டவிரோதமாக குடியேறியவர்கள் திருப்பி அனுப்பப்படுவது புதிது கிடையாது. இது ஆண்டாண்டு காலமாக நடைபெற்று வருகிறது. அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறியவர்களின் கை, கால்களில் விலங்கிடுவது அந்த நாட்டின் சட்டம். எனினும் இந்தியர்களை திருப்பி அனுப்பும்போது அவர்களை கண்ணியமாக நடத்துவது தொடர்பாக அமெரிக்க அரசுடன் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம். திருப்பி அனுப்பப்பட்ட இந்தியர்களில் ஆண்களுக்கு மட்டுமே கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு இருந்தன. பெண்கள், குழந்தைகளுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்படவில்லை” என்றார். அதேவேளையில், இந்த விவகாரம் தொடர்பாக வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் டெல்லியில் நேற்று பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்துப் பேசினார். அப்போது இந்தியர்களின் கை, கால்களில் விலங்கிடப்பட்ட விவகாரம் தொடர்பாக இருவரும் விரிவான ஆலோசனை நடத்தியதாக தகவல்கள் வெளியாகின இதுதொடர்பாக அமெரிக்க அரசுடன் தூதரக ரீதியில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது. ‘கைவிலங்கு’ விவகாரம்: அமெரிக்காவிடம் கவலை தெரிவித்த இந்தியா! | MEA flags mistreatment of Indian illegal migrants deported from US says Vikram Misri - hindutamil.in
-
சீமானின் மொழியாடல் சாமானியர்களின் ‘கவனம்’ ஈர்ப்பது ஏன்?
“சீமானின் மொழியாடல் சாமானியர்களின் ‘கவனம்’ ஈர்ப்பது ஏன்?” எனும் கேள்வி, தமிழக அரசியல் களத்தில் முன்னெப்போதையும் விடத் தற்போது அதிகமாகவே கேட்கப்படுகிறது. இதுவரை அரசியல் தலைவர்கள் யாரும் கையாளாத, சாமானியர்களுக்கு நெருக்கமான பேச்சு மொழியைச் சீமான் கைக்கொண்டதே காரணம் என்பதை, அவரது மேடைப் பேச்சுகளைத் தொடர்ந்து அவதானிக்கும் எவரும் உணரமுடியும். வெகுமக்களுக்கான நல அரசியலிலிருந்து புறக்கணிக்கப்பட்ட, ஒதுக்கப்பட்ட, ஒடுக்கப்பட்ட, விளிம்பு நிலைச் சாமானியர்கள் அரசியல் பேசுவதையே தவிர்த்து, அது அறிஞர்களுக்கானது, பேரறிஞர்களுக்கானது என்று, கிட்டத்தட்ட வாக்கு செலுத்துவதைத் தவிர அரசியல் விருப்பற்று ஒதுக்கிய வாழப் பழகினர். தங்களையொத்த குரலற்றவர்கள், உரிமை மறுக்கப்பட்டவர்கள் துன்புறுவது குறித்துப் பேசவும் அவர்களுக்காகக் குரல்கொடுக்கத் துணிவற்றும் வாழும் நிலையே அவர்களிடம் இருந்து வந்துள்ளது. இப்படிப்பட்ட தருணத்தில்தான் கடந்த 2009-இல், தமிழ்நாட்டின் தொப்புள் கொடி மனிதர்களான சாமானிய ஈழத் தமிழர்கள் 70 ஆயிரம் பேர் இலங்கையில் நடந்த இறுதி யுத்தத்தில் கொல்லப்பட்டனர். ‘முள்ளிவாய்க்கால் படுகொலை’ என்று ஒட்டுமொத்த உலகமும் ஓர் இனப்படுகொலைக்குப் பெயர் சூட்டிவிட்டு, நீதிகேட்டு ஈனக்குரல் எழுப்பிய எஞ்சியிருந்த இலங்கைத் தமிழர்களுக்கு மவுனத்தை மட்டும் பதிலாக அளித்தது. அந்த ‘மாஸ் கில்லிங்’ இனப் படுகொலையில் இதயம் நொறுங்கி ரத்தம் கொதித்த ஒருவனின் நீதி கேட்கும் குரல், கோபம் கொந்தளிக்கும் எளியவர்களுக்கான மொழியாடலாக வெடித்துச் சிதறத் தொடங்கியது. அந்த மொழியும் குரலும்தான் சீமானுடையது... சாமானிய வியாபாரிகள், தினக்கூலிகள், சீரியல் பார்க்கும் பெண்கள், சினிமாவில் அடிமைப்பட்டுக் கிடந்த இளைஞர்கள், பள்ளி, கல்லூரி மாணவ மாணவிகள் என்று ஒரு கூட்டம் சீமானின் அந்த மொழியாடலால் ஈர்க்கப்பட்டு, மொழிவழி தேசியமும் அதன் வழியான அரசியல் இறையான்மையும் தமிழர்களுக்கும் உரியதே; அதை ஏன் இழந்தோம் என அறிந்து தெளிந்து அரசியல் கற்றுக்கொண்டு, சீமான் பேசுவதைக் கூர்ந்து கேட்கத் தொடங்கியது. சீமான் தொடங்கிய நாம் தமிழர் கட்சியில் இணையாவிட்டாலும் அந்த ஜனநாயக அரசியல் அமைப்பின் பெரும் ஆதரவு சக்தியாக அவர்களை உருமாற்றியிருக்கிறது. அந்த வகையில், சீமானைத் தங்களுடைய அரசியல் எதிரியாகக் கருதும் யாரும், ‘சீமானின் குரல் என்பது சீமான் என்கிற தனி மனிதனின் குரல் அல்ல; அது உரிமையிருந்த, வாய்ப்பிழந்த, வேலையும் அதிகாரமும் மறுக்கப்பட்ட பெரும்பான்மையான தமிழர்களின் குரல்’ என்பதை அறிந்தே உள்ளனர். திராவிடக் கட்சிகளின் திராவிட மாடல் அரசியல், விஜய் முன்னெடுத்துள்ள திராவிட - தமிழ் தேசிய அரசியல், தமிழ்நாட்டில் பாரதிய ஜனதாவின் வளர்ச்சி ஆகியவற்றுக்கு நடுவேதான் தமிழ்த் தேசியமும் வீறுகொண்டு வளர்ந்து வருகிறது. அந்த வளர்ச்சியின் ஆணிவேராக இருக்கிறது சீமான் முன்வைக்கும் ‘உரிமை இழந்தவர்களுக்கான அரசியல்’. அதில் ஒவ்வொரு காலகட்டத்திலும் ஒரு புதிய புரிதலோடு நாம் தமிழர் கட்சியையும் அதன் முக்கிய இலக்கான தமிழரின் அரசியல் இறையாண்மையை மீட்டெடுத்தல் என்பதையும் நோக்கி தனது மொழியாடலைக் கூர் திட்டி வருகிறார். அந்தக் கூர்தீட்டலில் இப்போது பெரியார் ஈ.வே.ராவை மறுதளித்திருக்கிறது நாம் தமிழர் கட்சி. பெரியார் மறுப்பையே ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் முதன்மைப் பிரச்சாரமாகவும் மேற்கொண்டது. பெரியார் மறுப்பைச் சாமானியர்களுக்கான மொழியில் சீமான் முன்வைத்த காரணத்தாலேயே இன்று வெகுமக்களிடம் அது பேசுபொருளாகியிருக்கிறது. பெரியாரைக் கடந்த காலத்தில் எத்தனையோ பேர் விமர்சித்திருக்கிறார்கள். அப்போதெல்லாம் சட்டை செய்யப்படாத எதிர்ப்பு, இப்போது எழக் காரணம், சீமானின் எளியவர்களுக்கான மொழியாடலே. அந்த மொழியாடலே அவரது அரசியல் எதிரிகளுக்கு கோபத்தையும் பதற்றத்தையும் உருவாக்கிவிட்டது. - சந்திரன் ராஜா - ஒரு தமிழ் தேசியர், அரசியல் விமர்சகர். | தொடர்புக்கு: Krishjai2006@gmail.com சீமானின் மொழியாடல் சாமானியர்களின் ‘கவனம்’ ஈர்ப்பது ஏன்? | about seeman way of speeching was explained - hindutamil.in
-
ரஸ்ய உக்ரைன் போர்முனையில் 56 இலங்கையர்கள் இதுவரை பலி
Freelancer / 2025 பெப்ரவரி 07 , பி.ப. 02:04 - 0 - 44 கடந்த ஜனவரி 20ஆம் திகதி வரையில் ரஷ்ய இராணுவத்தில் இணைந்துள்ள 59 இலங்கையர்கள் உயிரிழந்துள்ளதாக வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் பாராளுமன்றத்தில் குறிப்பிட்டார். ரஷ்ய இராணுவத்தில் இதுவரை 554 இலங்கையர்கள் இணைந்துள்ளதாகவும், அவர்களில் யாரும் வலுக்கட்டாயமாக ஆட்சேர்ப்பு செய்யப்படவில்லை என தெரியவந்துள்ளதாகவும் விஜித ஹேரத் தெரிவித்தார். எனினும் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதின், ரஷ்ய இராணுவத்தில் இணைந்துள்ளவர்கள் கட்டாயப்படுத்தி சேர்க்கப்பட்டுள்ளதாக அவர்களது குடும்பத்தினர் தெரிவிப்பதாக சுட்டிக்காட்டினார். இதேவேளை ரஷ்ய இராணுவத்தில் இணைந்துள்ள வடக்கைச் சேர்ந்தவர்கள் தற்போது உயிருடன் உள்ளார்களா அல்லது பாதுகாப்பாக உள்ளார்களா என்பதைத் தெளிவுபடுத்துமாறும் தற்போது உயிரிழந்தவர்களின் பெயர் விபரங்களை வெளிப்படுத்துமாறும் சிறிதரன் கேட்டுக்கொண்டார். R Tamilmirror Online || ரஷ்ய இராணுவத்தில் இணைந்த 59 இலங்கையர்கள் மரணம்
-
ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் ஏஐ சாட்போட் மூலம் வாடிக்கையாளர் சேவையை வழங்குகிறது
07 Feb, 2025 | 12:37 PM ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் செயற்கை நுண்ணறிவால் (Artificial intelligence) இயங்கும் ‘யான’ (Yaana) என்ற சாட்போட் ஊடாக வாடிக்கையாளர் சேவையை வழங்குகிறது. செயற்கை நுண்ணறிவு மற்றும் இயற்கை மொழி செயலாக்க தொழில்நுட்பங்களை ஒருங்கிணைத்து பயணிகளின் கேள்விகளுக்கு 'யானா' சாட்போட் பதிலளிக்கிறது. ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸின் சர்வதேச விற்பனை மற்றும் விநியோகத் தலைவர் திமுத்து தென்னகோன் தெரிவிக்கையில், ‘யான’ ஏஐ சாட்போட் சுமார் 12,000 பயணிகளின் கேள்விகளுக்கு 88 சதவீதம் சுயாதீனமாக பதிலளித்து எதிர்பார்ப்பை பூர்த்தி செய்துள்ளது. குறித்த வாடிக்கையாளர் சேவை சாட்போட் கோட்ஜென் இன்டர்நேஷல் மென்பொருள் நிறுவனத்துடன் இணைந்து உருவாக்கப்பட்டது. இதனை தற்போது ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவன இணையதளத்தில் பயன்படுத்தலாம். புதிய சாட்போட் ஆங்கிலம், பிரஞ்சு மற்றும் ஸ்பானிஷ் உள்ளிட்ட மொழிகளில் செயல்படும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் ஏஐ சாட்போட் மூலம் வாடிக்கையாளர் சேவையை வழங்குகிறது | Virakesari.lk
-
இந்திய மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை கோரி நாடாளுமன்ற வளாகத்தில் தமிழக எம்.பி.க்கள் ஆர்ப்பாட்டம்
07 Feb, 2025 | 12:40 PM புதுடெல்லி: இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ள இந்திய மீனவர்களை மீண்டும் தாயகம் அழைத்து வரக் கோரி தமிழக எம்.பி.க்கள் நாடாளுமன்ற வளாகத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இலங்கைக் கடற்படையினரால் இந்திய மீனவர்கள் கைது செய்யப்படுவதைத் தடுக்கவும், இலங்கை வசம் உள்ள அனைத்து மீனவர்களையும் அவர்களது மீன்பிடிப் படகுகளையும் விடுவிக்க உடனடி தூதரக நடவடிக்கைகளை மேற்கொள்ள வலியுறுத்தியும் தமிழக எம்.பி.க்கள் நாடாளுமன்ற வளாகத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய திமுக எம்பி கனிமொழி, "இலங்கை கடற்படையினர் தமிழக மீனவர்களை கைது செய்து துன்புறுத்தி வருகின்றனர். தற்போது கிட்டத்தட்ட 97 தமிழக மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். முதல்வர் மு.க. ஸ்டாலின் அமைச்சருக்கும் பிரதமருக்கும் கடிதம் எழுதியுள்ளார். அவர் இங்கு வரும் ஒவ்வொரு முறையும், இந்தப் பிரச்சினைக்கு தீர்வு காண பிரதமரிடம் வலியுறுத்துகிறார். இலங்கை கடற்படையினர் நமது மீனவர்களின் கிட்டத்தட்ட 210 படகுகளை எடுத்துச் சென்றுள்ளனர். அவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு வருகிறது. மீனவர்கள் தங்கள் படகுகள் இல்லாமல் என்ன செய்ய முடியும்? இது தமிழ்நாட்டில், குறிப்பாக மீனவர்களுக்கு ஒரு பெரிய பிரச்சினையாக மாறி வருகிறது. அவர்களின் முழு வாழ்வாதாரம், குடும்பம் மற்றும் அனைத்தும் பாதிக்கப்பட்டுள்ளன. மீனவர் குழுக்களிடையே பேச்சுவார்த்தை நடத்தி இந்தப் பிரச்சினையை நிரந்தரமாகத் தீர்க்க குழுக்களை அமைப்பதாக உறுதியளித்த மத்திய அரசு, இதுவரை இது குறித்து எதுவும் செய்யவில்லை. கைது செய்யப்பட்ட மீனவர்களை விடுவிக்க வேண்டும் என்பதே எங்கள் கோரிக்கை. அவர்களை விடுவிக்க அவர்கள் அழுத்தம் கொடுக்க வேண்டும். நீதி நிலைநாட்டப்பட வேண்டும். சிறைபிடிக்கப்பட்ட படகுகளை விடுவிக்க வேண்டும். மத்திய அரசு இலங்கை அரசுடன் பேசி இந்தப் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு காண வேண்டும்." என்று தெரிவித்தார். ராமநாதபுரம் மாவட்டம், மண்டபம் மீன்பிடித் துறைமுகத்திலிருந்து மீன்பிடிக்கச் சென்ற 10 மீனவர்களை இலங்கைக் கடற்படையினர் கடந்த 3ம் தேதி கைது செய்தனர். முன்னதாக, ராமேஸ்வரத்தில் இருந்து கடந்த ஜனவரி 26-ம் தேதி மீன்பிடிக்கச் சென்ற தமிழக மீனவர்கள் 34 பேரை இலங்கை கடற்படை கைது செய்தது. கடந்த ஒரு மாத காலத்தில் 5 வெவ்வேறு சம்பவங்களில் தமிழகத்தைச் சேர்ந்த 63 மீனவர்கள் மற்றும் 5 மீன்பிடிப் படகுகள் இலங்கைக் கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்டுள்ளனர். கடந்த 2024-ம் ஆண்டில் 36 வெவ்வேறு சம்பவங்களில் 530 மீனவர்கள் மற்றும் 71 மீன்பிடிப் படகுகள் சிறைபிடிக்கப்பட்டுள்ளது. தற்போது இலங்கை சிறைகளில் 97 மீனவர்கள் உள்ளனர். அதோடு, அவர்களின் 216 மீன்பிடிப் படகுகளும் மீட்கப்பட வேண்டிய நிலையில் உள்ளன. இலங்கைக் கடற்படையினரால் மீனவர்கள் கைது செய்யப்படும் சம்பவங்கள் தொடர்ந்து நடப்பதால், மீனவர்கள் அச்சத்துடனேயே மீன்பிடிக்கச் செல்ல வேண்டிய நிலை உள்ளது. மீனவர்கள் மீது தாக்குதல் நடத்துவது, அவர்களின் வலைகளை சேதப்படுத்துவது, அவர்கள் பிடித்த மீன்களை பறிமுதல் செய்வது போன்ற அராஜகங்களை செய்து வந்த இலங்கை கடற்படை, கடந்த மாதம் இந்திய மீனவர்கள் மீது துப்பாக்கிச் சூடும் நடத்தியது. இந்திய மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை கோரி நாடாளுமன்ற வளாகத்தில் தமிழக எம்.பி.க்கள் ஆர்ப்பாட்டம் | Virakesari.lk