Everything posted by பிழம்பு
-
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இந்தியா செல்கிறார்
26 Feb, 2025 | 05:34 PM (எம்.மனோசித்ரா) 'உலகலாவிய விசேட முன்னேற்றங்கள்' குறித்த மாநாட்டில் கலந்து கொள்வதற்காக முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க வியாழக்கிழமை (27) இந்தியா செல்லவுள்ளார். உலகலாவிய முக்கிய இராஜதந்திரிகளின் பங்கேற்புடன் நாளை வெள்ளிக்கிழமை புதுடில்லியில் இந்த கலந்துரையாடல் ஆரம்பமாகவுள்ளது. இந்திய பிரதமர் நரேந்திர மோடி பிரதம விருந்தினராக பங்கேற்கவுள்ள இந்த கலந்துரையாடலில் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடன், கனடாவின் முன்னாள் பிரதமர் ஸ்டீவன் ஹாபர், அவுஸ்திரேலியாவின் முன்னாள் பிரதமர் டோனி எபொட் ஆகியோரும் கலந்து கொள்ளவுள்ளனர். இதன் போது தென்னாசியா தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க சிறப்புரையாற்றவுள்ளார். அத்தோடு இவ்விஜயத்தின் போது இந்திய பிரதமர் நரேந்திர மோடியுடன், முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க விசேட சந்திப்பிலும் கலந்து கொள்ளவுள்ளார். அத்தோடு இந்தியாவிலுள்ள முக்கிய தொழிலதிபர்களுடனான சந்திப்பிலும் முன்னாள் ஜனாதிபதி பங்கேற்கவுள்ளார். ரணில் விக்கிரமசிங்க குறுகிய காலத்துக்குள் இந்தியாவுக்கு மேற்கொள்ளும் இரண்டாவது முக்கிய விஜயம் இதுவாகும். எதிர்வரும் 2ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை அவர் நாடு திரும்பவுள்ளமை குறிப்பிடத்தக்கது. முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இந்தியா செல்கிறார் | Virakesari.lk
-
ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியில் சங்கு சின்னத்தில் போட்டியிடுவது தொடர்பில் கலந்துரையாடல்
26 Feb, 2025 | 05:36 PM எதிர்வரும் உள்ளூராட்சி சபைத் தேர்தலில் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியில் சங்கு சின்னத்தில் போட்டியிடுவது தொடர்பில் இணக்கத்தை ஏற்படுத்துவது தொடர்பான கலந்துரையாடல் நடைபெற்றது. யாழ்ப்பாணம் திருநெல்வேலியில் உள்ள தனியார் மண்டபத்தில் இன்று புதன்கிழமை (26) குறித்த கலந்துரையாடல் நடைபெற்றது. குறித்த கலந்துரையாடலில் புளொட் தலைவர் த.சித்தார்த்தன், ஈ.பி.ஆர்.எல்.எப். தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன், ரெலோ ஊடகப் பேச்சாளர் சுரேன் குருசாமி, தமிழ் தேசிய கட்சியின் தலைவர் நா.சிறீகாந்தா, ஜனநாயக போராளிகள் கட்சியின் சார்பில் வேந்தன், தமிழ் மக்கள் கூட்டணி சார்பில் வி.மணிவண்ணன், சமத்துவக் கட்சியின் தலைவர் மு.சந்திரகுமார், ஜனநாயக தமிழ் அரசுக் கூட்டமைப்பின் சார்பில் நாவலன், பா.கஜதீபன், உள்ளிட்ட சிலர் இதில் கலந்து கொண்டனர். குறித்த கலந்துரையாடலில் தமிழ் தேசிய பசுமை இயக்கம் சார்பில் பிரதிநிதிகள் எவரும் பங்கேற்கவில்லை. குறித்த கூட்டணியில் தமிழ் மக்கள் கூட்டணி இணைவதா இல்லையா என்பது தொடர்பிலான முடிவு கட்சியின் செயலாளர் நாயகத்துடன் பேசி விரைவில் அறிவிக்கப்படும் என்று அக்கட்சியின் சார்பில் குறித்த கலந்துரையாடலில் பங்கேற்ற சட்டத்தரணி விஸ்வலிங்கம் மணிவண்ணன் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்தார். ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியில் சங்கு சின்னத்தில் போட்டியிடுவது தொடர்பில் கலந்துரையாடல் | Virakesari.lk
-
சீமானுக்கு சிக்கலா..?
விஜயலட்சுமி பாலியல் குற்றச்சாட்டு வழக்கு: 27-ம் தேதி சீமான் நேரில் ஆஜராக போலீஸார் சம்மன் சென்னை: நீதிமன்ற உத்தரவையடுத்து, நடிகை விஜயலட்சுமி அளித்த பாலியல் குற்றச்சாட்டு தொடர்பான வழக்கில் நாளை மறுநாள் (பிப்.27) நேரில் ஆஜராகும்படி சீமானுக்கு போலீஸார் சம்மன் அனுப்பி உள்ளனர். தன்னை திருமணம் செய்து கொள்வதாகக் கூறி உடல் ரீதியாகவும், மனரீதியாகவும் ஏமாற்றிவிட்டதாக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு எதிராக நடிகை விஜயலட்சுமி சென்னையில் உள்ள வளசரவாக்கம் காவல் நிலையத்தில் 2011-ல் புகார் அளி்த்திருந்தார். அதையடுத்து போலீஸார் சீமானுக்கு எதிராக பாலியல் துன்புறுத்தல் உள்ளிட்ட பிரிவுகளின்கீழ் வழக்குப்பதிந்தனர். இந்நிலையில் இந்த வழக்கை ரத்து செய்யக்கோரி சீமான் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். இந்த மனு மீதான விசாரணை நீதிபதி ஜி.கே.இளந்திரையன் முன்பாக அண்மையில் நடந்தது. அப்போது ‘‘இந்த வழக்கை சாதாரணமாக எடுத்துக்கொள்ள முடியாது. விஜயலட்சுமி புகாரை திரும்பப் பெற்றாலும்கூட பாலியல் துன்புறுத்தல் தடுப்புச் சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு இருப்பதால், இந்த வழக்கை ரத்து செய்ய முடியாது. இந்த வழக்கில் போலீஸார் 12 வாரத்துக்குள் இறுதி அறிக்கைதாக்கல் செய்ய வேண்டும்’’ என உத்தரவிட்டு சீமான் மனுவை தள்ளுபடி செய்தார். இதையடுத்து, போலீஸார் மீண்டும் விசாரணையில் இறங்கிஉள்ளனர். முதல்கட்டமாக வரும் 27-ம் தேதி நேரில் ஆஜராகும்படி வளசரவாக்கம் போலீஸார் சீமானுக்கு நேற்று சம்மன் அனுப்பி உள்ளனர். விஜயலட்சுமி பாலியல் குற்றச்சாட்டு வழக்கு: 27-ம் தேதி சீமான் நேரில் ஆஜராக போலீஸார் சம்மன் | Police summon Seeman in vijayalakshmi - hindutamil.in
-
இராமேஸ்வரம் சென்ற இலங்கை அகதிகள்
ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 2 சிறுவர்கள் உட்பட 4 பேர் தலைமன்னாரில் இருந்து அகதிகளாக புறப்பட்டு இன்று அதிகாலை 2 மணிக்கு இராமேஸ்வரம் அரிச்சல்முனை கடலோரப் பகுதியை சென்றடைந்துள்ளனர். தீடையில் தத்தளித்தவர்களை கடலோரக் காவல்படையினர் மீட்டு கடலோர காவல் குழும பொலிஸாடம் ஒப்படைக்கப்பட்டு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். (a) Tamilmirror Online || இராமேஸ்வரம் சென்ற இலங்கை அகதிகள்
-
யாழில் பொறியியலாளரின் தன்னிச்சையான செயற்பாட்டால் விபத்துக்குள்ளான இளைஞன் !
யாழ்ப்பாணம் 23 மணி நேரம் முன் தமது இஷ்டப்படி வேலைத்திட்டத்தை செய்யும் அதிகாரிகள் - மீனவர்கள் குற்றச்சாட்டு! மீனவர்களின் கருத்துக்களை உள்வாங்காது கெங்காதேவி துறைமுகத்தை, அதிகாரிகள் தன்னிச்சையாக அபிவிருத்தி செய்து வருவதால் எந்தவிதமான பிரயோசனமும் இல்லை என சுழிபுரம் கெங்காதேவி கடற்றொழிலாளர் சங்க மீனவர்கள் குற்றம்சாட்டுகின்றனர். அவர்கள் மேலும் தெரிவிக்கையில், கடற்றொழில் அமைச்சின் மூலம் எமது கடற்றொழில் சங்கத்துக்கு 10 இலட்சம் மற்றும் 8 இலட்சம் ரூபா ஒதுக்கப்பட்டது. இரண்டு நிதியையும் பயன்படுத்தி எமது துறைமுகத்தை புனரமைப்பதற்கு திட்டமிட்டிருந்தோம். ஆனால் இரண்டு நிதியும் ஒரு திட்டத்திற்கு வழங்க முடியாது என்று கூறி 10 இலட்சம் ரூபாவினை எமக்கு வழங்காது திருப்பி அனுப்பிவிட்டனர். எட்டு இலட்சம் மட்டுமே எமக்கு வழங்கப்பட்டது. எட்டு இலட்சம் ரூபாவிற்கான வேலைத்திட்டத்திற்கான வரைபை நாங்கள் அதிகாரிகளிடம் சமர்ப்பித்தோம். இருப்பினும் அவர்கள் எமது திட்டத்தை புறந்தள்ளிவிட்டு தமது எண்ணத்திற்கு ஏற்றாற்போல் அபிவிருத்தி பணிகளில் ஈடுபடுகின்றனர். அவர்கள் செய்கின்ற அபிவிருத்தியால் எமக்கு எந்தவிதமான பிரயோசனமும் இல்லை. கிடைத்த 8 இலட்சம் ரூபா நிதியினை அநியாயம் செய்கின்றனர். படகுகளை நிறுத்தி வைக்கும் பகுதிக்குள் அதிக மண் உள்ளதால் அந்த பகுதி உயரமாக காணப்படுன்றது. இதனால் அந்த பகுதிக்குள் தண்ணி இல்லாத காரணத்தால் படகுகளை துறைமுகத்தின் உள்ளே கொண்டுவந்து நிறுத்தி வைக்க முடியாத சூழ்நிலை காணப்படுகிறது. ஆகையால் நாங்கள், இரண்டு புறமும் உள்ள தடுப்புகளை நீக்குமாறு எமது வேலைத்திட்டத்தை முன்வைத்தோம். இரண்டு பகுதிகளிலும் உள்ள தடுப்புகளை நீக்கினால் மண் வெளியே செல்லும். இதன்போது படகுகளை துறைமுகத்துக்குள் கொண்டுவரக்கூடிய நிலை ஏற்படும். ஆனால் அவர்கள் அதனை செய்யாமல் வெறுமனே ஆழப்படுத்தலில் ஈடுபடுகின்றார்கள். நாங்கள் பல தடவைகள் கூறியும் எமது கருத்துக்களுக்கு செவி சாய்க்கவில்லை. 121 மணித்தியாலங்கள் ஜேசிபி இயந்திரத்தை பயன்படுத்தி ஆழப்படுத்துவதே அவர்களது வேலைத்திட்டம் என்று கூறுகின்றனர். அவர்கள் இவ்வாறு ஆழப்படுத்தினாலும் மீண்டும் அந்த இடம் மூடுப்படும். இது குறித்து யாழ். மாவட்ட கரையோர பாதுகாப்பு திணைக்களத்தின் பொறியியலாளர் கெங்காதரன் தர்சனுக்கு தெரியப்படுத்தினோம். ஆனால் அவர் எமது கருத்துக்களை செவிமடுக்கவில்லை. நாங்கள் தொடர்ந்து அழுத்தம் கொடுத்த காரணத்தால் அதற்கு பழிவாங்கும் முகமாக ஆழப்படுத்தும் பகுதியில் 5 மீற்றர் எல்லையை குறைத்து ஆழப்படுத்துமாறு, வேலைத்திட்டத்தை செய்பவர்களிடம் கூறியுள்ளார். அத்துடன் எமது கடற்பகுதியில் சுற்றுலா மையம் அமைப்பதற்கு அனுமதி கேட்டனர். சுற்றுலா மையம் அமைத்தால் எமது கடற்றொழில் நடவடிக்கைகள் பாதிக்கப்படும். சம்பந்தப்பட்ட அதிகாரிகள் எமக்கு பல தடவைகள் அழைப்பு மேற்கொண்டு அனுமதி வழங்குமாறு கோரினர். நாங்கள் அதற்கு மறுப்பு தெரிவித்த நிலையில் அதற்கும் சேர்த்து பழிவாங்குவது போல் உள்ளது. எனவே உரிய அதிகாரிகள் விரைவில் இதனை கருத்தில் எடுத்து எமக்கு உகந்த வேலைத்திட்டத்தை, எமது வரைபடத்தின்படி செய்துதர வேண்டும் என்றனர். (ப) #Eelam #srilanka #jaffna #uthayandigital #news
-
செவ்வந்தியின் புதிய படங்களை பாருங்கள்...
’வேலை முடிந்தது‘ ’வேலை சரி’ குறுஞ்செய்தியால் சிக்கல் 'வேலை முடிந்தது.' 'வேலை சரி’ .ஒரு ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பல் தலைவர் என்று கூறப்படும் கணேமுல்ல சஞ்சீவாவைக் கொன்ற பிறகு, சந்தேக நபரான வழக்கறிஞர் வேடமணிந்த பெண், அவரது சகோதரருக்கு ’வேலை முடிந்தது’ 'வேலை சரி’ என்று குறுஞ்செய்திகளை அனுப்பியதாக தகவல் வெளியாகியுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். கணேமுல்ல சஞ்சீவாவை சுட்டுக் கொன்ற பிறகு தப்பி ஓடிய வழக்கறிஞர் வேடமணிந்த சந்தேக நபரான இஷாரா செவ்வந்தி, தனது தம்பியுடன் குறுஞ்செய்தி மூலம் தொடர்பு கொண்டு வந்ததாகவும் பொலிஸார் அறிந்துள்ளனர். இந்த சர்ச்சைக்குரிய கொலைக்குப் பின்னணியில் மூளையாகச் செயல்பட்டவர் துப்பாக்கிச் சூடு நடத்தியவர் அல்ல, மாறாக வழக்கறிஞர் வேடமணிந்த சந்தேக நபரான பெண்தான் என்ற தகவலை பொலிஸார் வெளியிட்டுள்ளது. Tamilmirror Online || ’வேலை முடிந்தது‘ ’வேலை சரி’ குறுஞ்செய்தியால் சிக்கல்
-
யாழில் தேங்காய் விலை ரூ. 250 தொட்டது!
தேங்காய் விலை ரூ. 250 தொட்டது! யாழ்ப்பாணத்தில் தற்போது தேங்காய் ஒன்றின் விலை 250 ரூபாவாக அதிகரித்துள்ளது என்று சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. வெள்ளை ஈயின் தாக்கம் காரணமாகவும், காலநிலை மாறுதல்கள் காரணமாகவும் தேங்காயின் உற்பத்தி கடுமையாக வீழ்ச்சியடைந்துள்ளது. இதையடுத்தே தற்போது ஒரு தேங்காயின் விலை 250 ரூபாவைத் தொட்டுள்ளதாகச் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. தேங்காய் விலை ரூ. 250 தொட்டது!
-
பல்வேறு மோசடிகள் தொடர்பில் குற்றவாளிகளைக் கண்டுபிடித்த குணரோஜன் திடீர் இடமாற்றம்!
காணி மோசடிகள் உட்பட பல்வேறு மோசடி வழக்குகளை துரிதமாக விசாரித்து, நீதிமன்ற நடவடிக்கைகள் ஊடாக பாதிக்கப்பட்டவர்களுக்குத் துரிதமாக நீதியைப் பெற்றுக்கொடுத்தவர் என்று அறியப்படும் யாழ்ப்பாணம் சிறப்பு குற்ற விசாரணைப் பிரிவின் பொறுப்பதிகாரி, பொலிஸ் பரிசோதகர் குணரோஜனுக்கு திடீர் இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் பிராந்திய மூத்த பொலிஸ் அத்தியட்சகரின் கீழான இணைப்பு பிரிவுக்கு பொறுப்பதிரியாக அவர் தற்போது நியமிக்கப்பட்டுள்ளார். சுன்னாகத்தைச் சேர்ந்த பொலிஸ் பரிசோதகர் குணரோஜன் காணி மோசடிகள், பண மோசடிகள் உள்ளிட்ட வழக்குகளை துரிதமாகவும் நிரூபிக்க கூடிய வகையிலும் முன்னேடுத்து நீதிமன்றின் ஊடாக பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதியைப் பெற்றுக்கொடுத்தார் என்று பலராலும் பாராட்டுப்பெற்றவர். தென்னிலங்கை அரசியல்வாதிகளின் செல்வாக்குமிக்க மோசடிக் கும்பல்கள், யாழ்ப்பாணத்தில் காணி மோசடிக்கு உடைந்தையாக இருந்த சட்டத்தரணிகள் போன்ற பலம்பெற்ற தரப்புகளுக்கு எதிராக துணிச்சலாக விசாரணைகளை அவர் முன்னெடுத்திருந்தார். அவருடைய நடவடிக்கைகள் காரணமாக அச்சமடைந்த பல தரப்பினரும், குணரோஜனை இடமாற்றம் வேண்டும் என்று மேலிடத்துக்கு அழுத்தம் கொடுத்ததுடன், கடந்த காலங்களில் கடிதங்களையும் அனுப்பிவைத்தமை குறிப்பிடத்தக்கது. பல்வேறு மோசடிகள் தொடர்பில் குற்றவாளிகளைக் கண்டுபிடித்த குணரோஜன் திடீர் இடமாற்றம்!
-
யாழில் கூல்பார் உரிமையாளரிற்கு எதிராக 30,000 தண்டம்!
நல்லூர் சுகாதார மருத்துவ அதிகாரி பணிமனையின் மேற்பார்வை பொது சுகாதார பரிசோதகர் நிர்மலானந்தனின் ஆலோசனையிலும் வழிகாட்டலிலும், கூல்பார், உணவகங்கள், தேநீர்சாலை என்பன தொடர்ச்சியாக பரிசோதிக்கப்பட்டு வருகின்றன. அதன்படி, திருநெல்வேலி பொது சுகாதார பரிசோதகர் பா. சஞ்சீவன் தலைமையிலான குழுவினரால் கடந்த 10ஆம் திகதி திருநெல்வேலி பகுதியில் உள்ள கூல்பார்களில் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. இதன்போது கூல்பார் ஒன்றில் திகதி காலாவதியான சோடாக்கள் மற்றும் குளிர்பானங்கள் விற்பனைக்காக வைத்திருந்தமை கண்டறியப்பட்டு, அவை பொது சுகாதார பரிசோதகரால் கைப்பற்றப்பட்டது. இதனையடுத்து கூல்பார் உரிமையாளரிற்கு எதிராக பொதுசுகாதார பரிசோதகர் பா. சஞ்சீவனால் மேலதிக நீதிவான் நீதிமன்றில் கடந்த ஜனவரி மாதம் 20ஆம் திகதி தாக்கல் செய்யப்பட்ட வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துகொள்ளப்பட்டது. உரிமையாளரிற்கு எதிரான குற்றச்சாட்டுக்களுக்கு, உரிமையாளரை குற்றவாளி என இனங்கண்ட நீதிவான் எஸ். லெனின்குமார், ரூபா 30ஆயிரம் தண்டம் விதித்து தீர்ப்பளித்தார். கூல்பார் உரிமையாளரிற்கு எதிராக 30,000 தண்டம்!
-
யாழில் பொறியியலாளரின் தன்னிச்சையான செயற்பாட்டால் விபத்துக்குள்ளான இளைஞன் !
மீனவர்களின் கருத்துக்களை உள்வாங்காது கெங்காதேவி துறைமுகத்தை, அதிகாரிகள் தன்னிச்சையாக அபிவிருத்தி செய்து வருவதால் அந்த கடற்பகுதியில் மீனவரின் படகு ஒன்று விபத்துக்குள்ளாகியதில் நபரொருவர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக இன்று செவ்வாய்க்கிழமை (25) அனுமதிக்கப்பட்டுள்ளார். இச்சம்பவம் குறித்து மீனவர்கள் கருத்து தெரிவிக்கையில், கடற்றொழில் அமைச்சின் மூலம் எமது கடற்றொழில் சங்கத்துக்கு 8 இலட்சம் ரூபா ஒதுக்கப்பட்டது. எட்டு இலட்சம் ரூபா வேலைத்திட்டத்திற்கான வரைபை நாங்கள் அதிகாரிகளிடம் சமர்ப்பித்தோம். இருப்பினும் அவர்கள் எமது திட்டத்தை புறந்தள்ளிவிட்டு தமது எண்ணத்திற்கு ஏற்றாற்போல் அபிவிருத்தி பணிகளில் ஈடுபட்டனர். இதனால் ஆபத்து என்றும் நாங்கள் கூறினோம். ஆனால், கரையோர பாதுகாப்பு திணைக்கள பொறியியலாளர், எமது திட்டவரைபை புறந்தள்ளிவிட்டு பழிவாங்கும் நோக்குடன் தனது விருப்பப்படி அபிவிருத்தியில் ஈடுபட்டார். நாங்கள் கேள்வி கேட்டதன் காரணத்தால் அபிவிருத்தி பணிகளை 5 மீற்றர்கள் தூரம் குறைத்து செய்யுமாறும் வேலையை செய்பவர்களுக்கு கூறினார். இந்நிலையில் இன்று காலை இருவர் படகு ஒன்றில் தொழிலுக்கு சென்றுவிட்டு திரும்பினர். இதன்போது அந்த அபிவிருத்தி செய்த இடத்தில் படகு மோதியதில் படகில் பயணித்த இருவரும் தூக்கி வீசப்பட்டனர். அதில் 20 வயது இளைஞன் படுகாயமடைந்த நிலையில் அவசர நோயாளர் காவு வண்டி மூலம் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இதற்கு பிறகும் உரிய அதிகாரிகள் எமது கருத்து கேட்காவிட்டால் விளைவுகள் பாரதூரமாக இருக்கும். எனவே உரிய அதிகாரிகள் விரைவில் இதனை கருத்தில் எடுத்து எமக்கு உகந்த வேலைத்திட்டத்தை, எமது வரைபடத்தின்படி செய்துதர வேண்டும் என்றனர். யாழில் பொறியியலாளரின் தன்னிச்சையான செயற்பாட்டால் விபத்துக்குள்ளான இளைஞன் ! | Virakesari.lk
-
பாலியாறு நீர் திட்டத்திற்கு வரவு செலவுத் திட்டத்தில் நிதி ஒதுக்கீடு செய்யுங்கள் - வடக்கு மாகாண அவைத் தலைவர் ஜனாதிபதிபதியிடம் கோரிக்கை
பாலியாறு நீர்வழங்கல் திட்டத்திற்கு வரவு செலவு திட்டத்தில் நிதி ஒதுக்கீடு செய்யப்படவில்லை எனினும் தற்போது பரீசினைக்குட்படுத்தி இந்த திட்டத்திற்கு நிதி ஒதுக்கிடு செய்யுமாறு வடக்கு மாகாண அவைத்தலைவர் சீ.வீ.கே சிவஞானம் ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்துள்ளார். இது தொடர்பில் ஜனாதிபதிக்கு அனுப்பிய கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, யாழ்ப்பாண மாவட்ட மக்கள் முகம்கொடுத்துவரும் நீர்விநியோகப் பிரச்சனை தொடர்பாக தாங்கள் முழுமையாக அறிந்திருக்கிறீர்கள் என நான் திடமாக நம்புகிறேன். கடந்த ஏழு தசாப்தங்களாக யாழ்ப்பாண மாநகர பிரதேச, தீவக மற்றும் தென்மராட்சி மக்கள் குறிப்பாக நியாயமான சுகாதாரமான நீர் விநியோகத்திற்கு ஏங்கியிருக்கிறார்கள். வட மாகாணசபை, யாழ்ப்பாண மாவட்ட மக்களுக்கான நீர்விநியோகத்துக்கென வருடம் முழுவதும் கடலைச் சென்றடையும் நீரை திசைதிருப்பும் திட்டமாக பாலியாறு நீர்விநியோகத் திட்டத்தை முன்மொழிந்திருந்தது. அந்தத் திட்டத்தை செலவுச் சிக்கனமான, சாத்தியமான அவசரமான ஒன்றாக பரிசீலித்து ஏற்றுக்கொண்டு முன்னுரிமை அடிப்படையில் யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு சிபாரிசு செய்தது. 2024 ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டத்தில் பாலியாறு நீர்வழங்கல் திட்டத்திற்கென ரூபா 250 மில்லியன் ஒதுக்கப்பட்டு, திட்டப்பணிமனையும் உத்தியோக பூர்வமாக வெள்ளாங்குளத்தில் 2024 மே மாதம் பதினைந்தாம் திகதி அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டது. இந்தத் திட்டத்தின் தொடர் நிறைவேற்றலுக்கான நிதி ஒதுக்கீடு எதுவும் 2025ஆம் ஆண்டின் வரவு செலவுத் திட்டத்தில் உள்ளடக்கப்படாமையை ஈட்டு மிகவும் கவலையும் ஏமாற்றமும் அடைகிறோம். இந்தத் திட்டம் கைவிடப்பட்ட மாதிரியான தோற்றப்பாடு காணப்படுகின்றது. எனவே இந்தத் திட்டத்தின் நிறைவேற்றலுக்கான போதிய நிதியை தற்போது பரிசீலிக்கப்படும் வரவு செலவுத்திட்டத்தில் ஒதுக்கீடு செய்து அதன் துரித நிறைவேற்றத்திற்கான பணிப்புரையை வழங்க வேண்டுமென அன்புடன் கேட்டுக் கொள்கிறோம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது பாலியாறு நீர் திட்டத்திற்கு வரவு செலவுத் திட்டத்தில் நிதி ஒதுக்கீடு செய்யுங்கள் - வடக்கு மாகாண அவைத் தலைவர் ஜனாதிபதிபதியிடம் கோரிக்கை | Virakesari.lk
-
வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவுகளின் போராட்டத்தினால் பொறுப்புக்கூறல் கோரிக்கை சர்வதேச அவதானம் பெற்றுள்ளது - ஐ.நா மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் அலுவலகம் சுட்டிக்காட்டு
25 Feb, 2025 | 06:22 PM (நா.தனுஜா) இலங்கையில் குறிப்பாக வலிந்து காணாமலாக்கப்பட்டோரின குடும்பத்தினரால் முன்னெடுக்கப்பட்டுவரும் போராட்டங்கள் மற்றும் மனித உரிமைகள் பேரவை உள்ளிட்ட சர்வதேச தளங்களில் பங்கேற்று அவர்கள் வெளிப்படுத்தும் கருத்துக்கள் என்பவற்றின் ஊடாக பொறுப்புக்கூறலை உறுதிப்படுத்துவதை இலக்காகக்கொண்ட அவர்களது கோரிக்கை சர்வதேச அவதானம் பெற்றிருப்பதாக ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் அலுவலகம் தெரிவித்துள்ளது. ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 58 ஆவது கூட்டத்தொடர் திங்கட்கிழமை (24) ஜெனிவாவில் ஆரம்பமானது. இக்கூட்டத்தொடர் எதிர்வரும் ஏப்ரல் மாதம் 7 ஆம் திகதி வரை நடைபெறவிருக்கும் நிலையில், திங்கட்கிழமை (24) தொடக்க அமர்வில் உரையாற்றிய ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் வோல்கர் டேர்க், இலங்கை தொடர்பில் எதனையும் பிரஸ்தாபிக்கவில்லை. இந்நிலையில் உலகளாவிய ரீதியில் மனித உரிமைகள் மற்றும் நிலைமாறுகால நீதி நிலைவரம் தொடர்பில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் அலுவலகத்தினால் பேரவையில் சமர்ப்பிக்கப்பட்டிருக்கும் அறிக்கையில் இலங்கை தொடர்பிலும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இலங்கையில் குறிப்பாக வலிந்து காணாமலாக்கப்பட்டோரின குடும்பத்தினரால் முன்னெடுக்கப்பட்டுவரும் போராட்டங்கள் மற்றும் மனித உரிமைகள் பேரவை உள்ளிட்ட சர்வதேச தளங்களில் பங்கேற்று அவர்கள் வெளிப்படுத்தும் கருத்துக்கள் என்பவற்றின் ஊடாக பொறுப்புக்கூறலை உறுதிப்படுத்துவதை இலக்காகக்கொண்ட அவர்களது கோரிக்கை சர்வதேச அவதானம் பெற்றிருப்பதாக அவ்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. அத்தோடு இம்முயற்சிகள் சிவில் சமூக அமைப்புக்கள் ஊடாக மேலும் வலுப்படுத்தப்பட்டிருப்பதாகவும், குறிப்பாக பாதிக்கப்பட்ட தரப்பினருடனான பரந்துபட்ட கலந்துரையாடல்களின் அடிப்படையில் கடந்த 2016 ஆம் ஆண்டு நல்லிணக்கப்பொறிமுறை தொடர்பான ஆலோசனை செயலணியின் அறிக்கையில் உள்ளடக்கப்பட்டுள்ள விடயங்கள் மீது கவனம் பாய்ச்சுவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இத்தகைய இருவழி அணுகுமுறையானது கடந்தகால ஆயுதமோதல் மற்றும் வன்முறைகளின் தாக்கங்களை உரியவாறு கையாள்வதற்கு ஏற்றவாறு எதிர்கால வாய்ப்புக்களைப் பயன்படுத்துவதற்கான அடித்தளத்தை இட்டிருப்பதாகவும் ஐ.நா மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் அலுவலக அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவுகளின் போராட்டத்தினால் பொறுப்புக்கூறல் கோரிக்கை சர்வதேச அவதானம் பெற்றுள்ளது - ஐ.நா மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் அலுவலகம் சுட்டிக்காட்டு | Virakesari.lk
-
2 பாதுகாப்பு உத்தியோகத்தர்களை வழங்குங்கள் : அர்ச்சுனா வேண்டுகோள் !
25 Feb, 2025 | 07:23 PM (எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்) நீதிமன்றத்தில் சந்தேக நபர் சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ளதுடன், கடந்த வாரங்களில் பல்வேறு கொலை சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன. இவை எனது பாதுகாப்பு தொடர்பான கரிசனையை ஏற்படுத்துகின்றது.ஆகவே இரண்டு பாதுகாப்பு உத்தியோஸ்த்தர்களை வழங்குமாறு பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா சபாநாயகரிடம் வலியுறுத்தினார். பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற அமர்வின் போது சிறப்புரிமை பிரச்சினையை எழுப்பி உரையாற்றும் போது மேற்கண்டவாறு வலியுறுத்தினார். அவர் மேலும் தெரிவித்ததாவது, அண்மையில் நான் எதிர்கொண்ட சம்பவமொன்று எனது பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக காணப்படுகிறது.இம்மாதம்( பெப்ரவரி) 12ஆம் திகதி இரவு யாழ். வலம்புரி ஹோட்டலில் என் மீதும் மற்றும் எனது செயலாளர் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டது. இச்சம்பவம் தொடர்பில் நான் பொலிஸில் முறைப்பாடளித்துள்ளேன் .சந்தேக நபரையும் கைது செய்தனர். எனினும் திடீரென எனக்கு எதிராக வழக்கொன்று பதிவு செய்யப்பட்டுள்ளது. இவை பாராளுமன்ற உறுப்பினராக நான் செயற்படுவதற்கு பாதுகாப்பு அச்சுறுத்தலை உருவாக்குகின்றது. கணேமுல்லை சஞ்சீவ நீதிமன்றத்தில் கொலை செய்யப்பட்டுள்ளார். அதேபோன்று கடந்த வாரங்களில் பல்வேறு கொலை சம்பவங்களும் இடம்பெற்றுள்ளன. இவை எனது பாதுகாப்பு தொடர்பான கரிசனையையும் ஏற்படுத்துகின்றது. இந்நிலையில் எனக்கு ஏற்பட்டுள்ள அச்சுறுத்தல் தொடர்பில் சிறப்புரிமையை முன்வைக்க எதிர்பார்க்கின்றேன். ஆகவே எனக்கு இரண்டு பாதுகாப்பு உத்தியோகத்தர்களை ஒதுக்குமாறு கோருகின்றேன். இந்த வேண்டுகோளை பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சருக்கு அனுப்புமாறும் கேட்டுக்கொள்வதுடன், இந்த அவசர நிலைமையை கருத்தில்கொண்டு உங்களின் சாதகமான பதிலையும் உடனடியாக எதிர்பார்க்கின்றேன் என்றார். இதன்போது பதிலளித்த சபாநாயகர், சிறப்புரிமைகள் தொடர்பான பிரச்சினைகள் காணப்படுமாயின் உரிய நடவடிக்கைகளை எடுப்பதாக அறிவித்தார். 2 பாதுகாப்பு உத்தியோகத்தர்களை வழங்குங்கள் : அர்ச்சுனா வேண்டுகோள் ! | Virakesari.lk
-
காளியம்மாள் .... கழகத்துக்கு?
தி.மு.க - த.வெ.க இரண்டில் எதில் இணைகிறார் காளியம்மாள்? -அறிவிப்புக்கு பிறகு செல்போன் சுவிட்ச் ஆப்! நாம் தமிழர் கட்சியிலிருந்து விலகிய காளியம்மாள்... எளிமையான முகம், நகைச்சுவை கலந்த பேச்சு போன்றவையால் அரசியல் மட்டத்தில் நன்கு அறியப்பட்ட காளியம்மாள், நாம் தமிழர் கட்சியிலிருந்து விலக்கப்போவதாக சில வாரங்களாக பரவலாக பேசப்பட்டு வந்தன. இதோ, அதோ என அவரது விலகல் விவகாரம் நீண்ட இழுபறியாக இருந்து வந்த நிலையில், நாம் தமிழர் கட்சியிலிருந்து விலகுவதாக அறிவித்திருப்பதன் மூலம் விவாதத்திற்கு முற்றுப்புள்ளி வைத்திருக்கிறார் காளியம்மாள். காளியம்மாள் - சீமான் அவரது அறிவிப்பு அரசியல் வட்டத்தில் பேசு பொருளாகியிருக்கிறது. பலரும் அவரை தொடர்பு கொள்ள முயற்சித்து வருகின்றனர். ஆனால் காளியம்மாள் மற்றும் அவரது கணவர் செல்போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டுள்ளது. இதனால் அடுத்து காளியம்மாள் என்ன செய்யப்போகிறார் என்கிற எதிர்பார்ப்பும் ஏற்பட்டுள்ளது. தி.மு.க., த.வெ.க இதில் எந்த கட்சியில் சேரப்போகிறார் என்பது போன்ற பேச்சுக்கள் கிளம்ப, ஆளாளக்கு ஒன்றை பேசி வருகின்றனர். இந்த நிலையில் காளியம்மாள் செயல்பாடுகள் குறித்து உள்விபரங்கள் அறிந்த சிலரிடம் பேசினோம், "நாகப்பட்டினத்தில் காளியம்மாள் வசித்து வருகிறார். கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் மயிலாடுதுறை தொகுதியில் போட்டியிட்ட போது தனி திறன் பிரச்சாரத்தால் எல்லோர் மத்தியிலும் கவனம் பெற்றார். பின்னர் சீமானுடன் ஏற்பட்ட கருத்து முரணால் அமைதியானார். இப்படியான சூழலில் காளியம்மாள் த.வெ.க-வில் இணையப்போவதாக சொல்லப்பட்டன. ஆனால் எதையும் வெளிப்படையாக அவர் வாய் திறக்கவில்லை. அமைச்சர் அன்பில் மகேஸ் நாகை மாவட்ட பொறுப்பு அமைச்சர் ஆன பிறகு அதிருப்தியில் இருக்கும் காளியம்மாளை தி.மு.க-விற்கு இழுக்க தூண்டில் வீசப்பட்டது. இது தொடர்பாக ராஜீவ்காந்தி மூலம் காளியம்மாளிடம் பேசப்பட்டது. இந்த நிலையில் இரண்டு வாரங்களுக்கு முன்பு நாகையில் அமைச்சர் அன்பில் மகேஸ், ராஜீவ்காந்தி, காளியம்மாள் உள்ளிட்டோர் சந்தித்து பேசி கொண்டதாக தகவல்கள் பரவின. இதை காளியம்மாள் மறுக்கவும் இல்லை.பனையூர் பயணம்.. கிட்டத்தட்ட அவர் தி.மு.க-வில் இணையப்போவதாக தி.மு.கவினரே பேச ஆரம்பித்தனர். இதற்கிடையே த.வெ.க-வில் இருந்து அழைப்பு வர பனையூர் சென்ற காளியம்மாள் ஆனந்திடம் பேசியதாக சொல்லப்படுகிறது. இப்படியான சூழலில் தி.மு.க தரப்பிடம் எந்த ஒரு முடிவையும் சொல்லாமல் காளியம்மாள் இழுத்தடித்து வந்தார். பேச்சு வார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டு இருந்தால் இந்நேரம் காளியம்மாள் தி.மு.க-வில் இணைந்திருப்பார். நாம் தமிழரில் இருந்த போது தி.மு.கவை கடுமையாக விமர்சனம் செய்திருக்கிறார். அதையும் அவர் யோசித்தாக தெரிகிறது. இந்த நிலையில் அவருடைய விலகல் எப்படி பேசு பொருளாக இருக்கிறதோ அதே மாதிரி மாற்றுக் கட்சியில் சேர்வதும் பேசு பொருளாக இருக்கும் அதுவரை பொறுத்திருக்க வேண்டும்" என்றனர். மேலும் சிலரோ, "தி.மு.க-வில் பேச்சு வார்த்தை நடத்தப்பட்டது உண்மைதான். ஆனால் அதன் பிறகு தன் முடிவை அவர் தெளிவாக சொல்லவில்லை. தி.மு.க-விடம் சில டிமாண்ட்கள் காளியம்மாள் வைக்க அதற்கு அவர்கள் கிட்டதட்ட ஓகே சொல்லி விட்டனர். அதே சமயத்தில் த.வெ.க-வுடனும் பேச்சு வார்த்தை நடத்தியதாக அவரது தரப்பை சேர்ந்தவர்களே பேசி வந்தனர். இப்படி இரு பக்கமும் வலையை வீசியதை தி.முக தரப்பு ரசிக்கவில்லை. காளியம்மாள் ஓவர் பில்டப் கொடுக்கிறார் அவரா ஒரு முடிவுக்கு வரட்டும் அதுவரை கண்டுகாதீங்கனு மாவட்ட முக்கிய பிரமுகர் ஒருவரிடம் அன்பில் மகேஸ் சொல்லியதாகவும் தகவல்கள் வெளியாகின. காளியம்மாள் இந்த நிலையில் எந்த கட்சியில் இணைந்தால் தனக்கான அரசியல் எதிர்காலம் இருக்கிறது என்பதை காளியம்மாள் உணர்ந்திருக்கிறார். அதற்கேற்ற முடிவை அவர் எடுத்து விட்டார் என்கிறார்கள். ஒரு வேளை தி.மு.க-வில் அவர் இணைந்தால் நாகை சட்டமன்ற தொகுதி வேட்பாளர் காளியம்மாள் தான் என்கிறார்கள். இதனால் வேட்பாளர் கனவில் இருக்கும் மாவட்ட முக்கிய பிரமுகர் சற்றே கலக்கத்தில் உள்ளார். காளியம்மாள் விலகல் குறித்து ஏற்கனவே எழுப்பிய கேள்விக்கு இது களையுதிர் காலம் என்றார் சீமான். ஆனால், கச்சிதமாக காய்களை நகர்த்தி அரசியலில் தனக்கான இடத்தை தக்க வைத்து கொண்டுள்ளார் காளியம்மாள். அவர் தி.மு.க-வில் சேர்வார் என்றே பலராலும் எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கான பேச்சு வார்த்தை முடிந்து விட்டது. விரைவில் முறைப்படியான அறிவிப்பு வரும்" என்றனர். தி.மு.க - த.வெ.க இரண்டில் எதில் இணைகிறார் காளியம்மாள்? -அறிவிப்புக்கு பிறகு செல்போன் சுவிட்ச் ஆப்! | Nagapattinam: DMK or TVK, which party is Kaliammal joining? - Vikatan
-
செவ்வந்தியின் புதிய படங்களை பாருங்கள்...
புதுக்கடை நீதிமன்ற வளாகத்தில் 'கணேமுல்ல சஞ்சீவ' கொலை தொடர்பாக தேடப்படும் பெண் சந்தேக நபரான பின்புர தேவகே இஷாரா செவ்வந்தியின் சமீபத்திய புகைப்படங்களை பொலிஸார் திங்கட்கிழமை (24) வெளியிட்டுள்ளதுடன் அவரை கைது செய்ய பொதுமக்களின் உதவியை பொலிஸார் நாடியுள்ளனர். சந்தேக நபர், 243/01, ஜெயா மாவத்தை, நீர்கொழும்பு வீதி, கட்டுவெல்லகம என்ற முகவரியில் வசிக்கும் 25 வயதான பின்புர தேவகே இஷாரா செவ்வந்தி என அடையாளம் காணப்பட்டுள்ளார். அவரது தேசிய அடையாள அட்டை எண் 995892480V. ஆகும். வழக்கறிஞர் போல் நடித்த செவ்வந்தி, நீதிமன்ற வளாகத்திற்குள் ஒரு ரிவால்வரை கடத்தி வந்து கொலையில் ஈடுபட்ட துப்பாக்கிதாரியிடம் ஒப்படைத்ததாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது. சந்தேக நபரின் இருப்பிடம் குறித்து தகவல் தெரிந்தவர்கள், கொழும்பு குற்றப் பிரிவின் பணிப்பாளரை 071-8591727 என்ற எண்ணில் அல்லது சிசிடியின் பொறுப்பதிகாரியை 071-8591735 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளுமாறு பொலிஸார் கேட்டுக்கொள்கிறார்கள். சந்தேக நபரைக் கைது செய்வதற்கு வழிவகுக்கும் துல்லியமான தகவல்களை வழங்குபவர்களுக்கு ரொக்கப் பரிசு வழங்கவும் பதில் பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரிய முடிவு செய்துள்ளதாக பொலிஸ் பிரிவு தெரிவித்துள்ளது. அத்தகைய தகவல்களை வழங்குபவர்களின் அடையாளம் கண்டிப்பாக ரகசியமாக வைக்கப்படும் என்றும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
-
எம்.கே.சிவாஜிலிங்கம் மருத்துவமனையில் அனுமதி!
எம்.கே.சிவாஜிலிங்கம் மருத்துவமனையில் அனுமதி! தமிழ்த் தேசியக் கட்சியின் பொதுச்செயலாளரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.கே.சிவாஜிலிங்கம் மீண்டும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். திடீர் சுகவீனம் காரணமாக அவர் பருத்தித்துறை ஆதார மருத்துவமனையின் அவசர சிகிச்சைப் பிரிவில் நேற்றைய தினம் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கடந்த டிசம்பர் மாதம் சுகயீனம் காரணமாக அவர் கொழும்பில் உள்ள தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை மேற்கொண்டார். கொழும்புக்கு பயணித்த வேளையில், சுயநினைவற்று மயங்கி விழுந்த நிலையில், அவர் கொள்ளுப்பிட்டி பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனை அனுமதிக்கப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது. எம்.கே.சிவாஜிலிங்கம் மருத்துவமனையில் அனுமதி!
-
'அழகான கடற்கரை ஓர் கவர்ச்சிகரமான சுற்றுலாத் தளம்' சுத்தப்படுத்தல் நிகழ்ச்சித்திட்டம்!..
'க்ளீன் ஸ்ரீலங்கா' நிகழ்ச்சி திட்டத்தின் கீழ் கடற்கரையினை சுத்தப்படுத்தல் நிகழ்வானது இன்றைய தினம் (23.02.2025) காலை 7.30 மணி முதல் நண்பகல் 11.30 மணிவரை அந்தந்த பிரதேச செயலக ரீதியாக நடைபெற்றது. அந்தவகையில் மாவட்ட நிகழ்வானது பருத்தித்துறை பிரதேதச செயலக பிரிவில் உள்ள சக்கோட்டை கடற்கரைப்பகுதியின் 2 கி.மீ பகுதியை சுத்தம் செய்யும் நிகழ்வு அரசாங்க அதிபர் திரு.மருதலிங்கம் பிரதீபன் அவர்களின் தலைமையில் நடைபெற்றது. இந் நிகழ்வில் பிரதம விருந்தினரகளாக யாழ்ப்பாண மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கெளரவ கருணநாதன் இளங்குமரன் அவர்கள் கலந்து கொண்டார்கள். மேலும், சிறப்பு விருந்தினர்களாக யாழ்ப்பாண மாவட்ட பாதுகாப்பு படைகளின் கட்டளைத் தளபதி, பிரதிப் பொலிஸ்மா அதிபர், வடமாகாணப் கடற்படைகளின் பிரதித் தளபதி, பருத்தித்துறை பிரதேச செயலாளர் ஆகியோரும் கெளரவ விருந்தினராக Save a life நிறைவேற்றுப் பணிப்பாளர் அவர்களும் கலந்துகொண்டார்கள். மேலும் இந் மாவட்ட நிகழ்வில் மேலதிக அரசாங்க அதிபர் (காணி), பிரதம கணக்காளர், உதவி மாவட்டச் செயலாளர் உள்ளிட்ட பதவிநிலை உத்தியோகத்தர்கள், மாவட்டச் செயலக பருத்தித்துறை உத்தியோகத்தர்கள், பாதுகாப்பு படையினர், பொலிஸ் உத்தியோகத்தர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டு கடற்கரையினைத் துப்பரவு செய்தார்கள். மேலும் இந் நிகழ்வின் சமநேரத்தில் 15 பிரதேச செயலாளர் பிரிவுகளிலும் மொத்தமாக 50 கி.மீ கடற்கரையானது அந்தந்த பிரதேச செயலாளர்கள் தலைமையில் சுத்தம் செய்யப்படுள்ளது. (ப) 'அழகான கடற்கரை ஓர் கவர்ச்சிகரமான சுற்றுலாத் தளம்' சுத்தப்படுத்தல் நிகழ்ச்சித்திட்டம்!..
-
சங்குச்சின்னத்தில் உள்ளூராட்சி தேர்தலுக்காக 9 தமிழ்க்கட்சிகள் கூட்டணி!
ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணிக்கும், சில தமிழ்க் கட்சிகளுக்கும் இடையில் நேற்றுக் கலந்துரையாடல் நடைபெற்ற நிலையில், எதிர்வரும் உள்ளூராட்சித் தேர்தலை இணைந்து எதிர்கொள்வது என்று அவை தீர்மானித்துள்ளன. இந்தக் கூட்டணியில் 9 கட்சிகள் இணைந்து தேர்தலை எதிர்கொள்ளவுள்ளன. ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணியின் பிரதிநிதிகளுக்கும் சக தமிழ்க் கட்சிகளின் பிரதிநிதிகளுக்கும் இடையில் உள்ளுராட்சித் தேர்தலை எதிர்கொள்வது தொடர்பான கலந்துரையாடல் யாழ்ப்பாணத்தில் நேற்று நடைபெற்றது. ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணியில் ஏற்கனவே உள்ள, ஈ.பி.ஆர்.எல்.எப்., ரெலோ, புளொட், ஜனநாயகப் போராளிகள் கட்சி, தமிழ்த் தேசியக் கட்சி ஆகிய கட்சிகளுடன் தற்போது தமிழ் மக்கள் கூட்டணி, தமிழ்த் தேசியப் பசுமை இயக்கம், சமத்துவக் கட்சி, ஜனநாயகத் தமிழரசுக் கூட்டமைப்பு என்ற 4 தரப்புகள் புதிதாக இணைந்துள்ளன. இந்தக் கட்சிகளின் பிரதிநிதிகள் நேற்றைய கூட்டத்தில் கலந்து கொண்டனர். எதிர்வரும் உள்ளூராட்சித் தேர்தலை இணைந்து எதிர்கொள்வது என்று அவை தீர்மானித்துள்ளன. ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணி என்னும் கட்சியின் பெயரில் இணைந்து போட்டியிடுவதுடன், ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணியின் சங்குச்சின்னத்தை பொதுவான சின்னமாக அனைவரும் ஏற்றுக்கொண்டு அந்தச் சின்னத்தில் போட்டியிடுவது என்றும், மாவட்ட ரீதியாக யாழ்ப்பாணத்திலும், கிளிநொச்சி மாவட்டத்திலும் மாவட்டத் தேர்வுக்குழுவை உருவாக்குவது என்றும் இந்தக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது. சங்குச்சின்னத்தில் உள்ளூராட்சி தேர்தலுக்காக 9 தமிழ்க்கட்சிகள் கூட்டணி!
-
சட்டவிரோத மீன்பிடி; தமிழக மீனவர்கள் 32 பேர் கைது!
தலைமன்னார் கடலில் கைதான 32 இந்திய மீனவர்களுக்கும் விளக்கமறியல் ! தலைமன்னார் கடற்பரப்பிற்குள் அத்துமீறி நுழைந்து தடை செய்யப்பட்ட மீன்பிடி உபகரணங்களை பயன்படுத்தி சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட 32 இந்திய மீனவர்களையும் எதிர்வரும் 7 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க மன்னார் நீதவானால் நேற்று ஞாயிற்றுக்கிழமை (23) உத்தரவிடப்பட்டுள்ளது. தமிழ்நாடு மாநிலம் ராமேஸ்வரம் பகுதியை சேர்ந்த 32 மீனவர்கள் அவர்களின் அதி நவீன தொலைத்தொடர்பு சாதனங்கள் மற்றும் 5 படகுடன் இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்து மீன் பிடியில் ஈடுபட்ட நிலையில் தலைமன்னார் கடற்பரப்பில் வைத்து நேற்று அதிகாலை கடற்படையினரால் குறித்த மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். மன்னார் கடல் பகுதிக்குள் அத்துமீறி நுழைந்து மீன் பிடித்த குற்றச்சாட்டில் வடமத்திய மாகாண கடற் படையினரின் கூட்டு நடவடிக்கையின் போதே கைது செய்யப்பட்டுள்ளனர் . கைது செய்யப்பட்ட குறித்த 32 இந்திய மீனவர்களும் கடற்படையின் விசாரணைகளின் பின்னர் நேற்று மாலை மன்னார் மாவட்ட கடற்தொழில் திணைக்கள அதிகாரிகளிடம் ஒப்படைக்கபட்ட நிலையில் மேலதிக விசாரணைகளின் பின்னர் 32 மீனவர்களும் மன்னார் நீதவான் நீதிமன்ற நீதிபதியின் வாசஸ்தலத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். இதன் போது விசாரணைகளை மேற்கொண்ட மன்னார் நீதவான் குறித்த 32 மீனவர்களையும் எதிர்வரும் 7 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டுள்ளார். தலைமன்னார் கடலில் கைதான 32 இந்திய மீனவர்களுக்கும் விளக்கமறியல் ! | Virakesari.lk
-
நெல்லியடி பொலிஸார் சித்திரவதை புரிந்ததாக இளைஞன் குற்றச்சாட்டு
நெல்லியடி பொலிஸார் தன்னை கைது செய்து சித்திரவதைக்கு உட்படுத்தி கையையும் முறித்துள்ளதாக நெல்லியடி பகுதியை சேர்ந்த இளைஞன் குற்றம் சாட்டியுள்ளார். யாழ். ஊடக அமையத்தில் இன்று திங்கட்கிழமை (24) நடைபெற்ற ஊடக சந்திப்பின் போதே இவ்வாறு தெரிவித்தார். இளைஞன் மேலும் தெரிவிக்கையில், கடந்த 18ஆம் திகதி எனது அம்மா வீட்டிற்கு அருகில் உள்ள ஆலயம் ஒன்றின் முன்னால் நின்ற போது, முச்சக்கர வண்டியில் வந்த பொலிஸார், என் மீது தாக்குதல் மேற்கொண்டு, கைவிலங்கு இட்டு, முச்சக்கர வண்டியின் உள்ளே கீழே போட்டு, தமது கால்களுக்குள் என்னை அழுத்தி பிடித்து பொலிஸ் நிலையம் கொண்டு சென்றனர். அங்கு எதற்காக என்னை தாக்கி, கைது செய்தீர்கள் என கேட்ட போது, கேபிள் வயர்கள் வெட்டிய சம்பவம் தொடர்பில் என கூறினார்கள். எனக்கு அப்படியொரு சம்பவம் தெரியவில்லை. பின்னர் எனக்கு கைவலி ஏற்பட்டு, நான் வலியினால் துடித்து என்னை வைத்தியசாலைக்கு அழைத்து செல்லுமாறு கூறிய போது மந்திகை வைத்தியசாலையில் என்னை அனுமதித்தனர். அங்கிருந்து மேலதிக சிகிச்சைக்காகக யாழ். போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டேன். வைத்திய சாலையில் சிகிச்சை பெற்று வரும் வேளையில் "வீடியோ கோல்" ஊடாக பருத்தித்துறை நீதவான் நீதிமன்ற நீதவான் என்னை பார்வையிட்டு, எனக்கு பிணை வழங்கி எனது வழக்கினை எதிர்வரும் 10ஆம் மாதத்திற்கு தள்ளிவைத்தார். என் மீதான தாக்குதல் மற்றும் சித்திரவதை குறித்த மனிதஉரிமை ஆணைக்குழுவின் யாழ். பிராந்திய காரியாலயத்தில் முறைப்பாடு செய்துள்ளேன். பெயின்டிங் வேலைக்கு சென்றே எனது குடும்பத்தினை பார்த்து வருகிறேன். தற்போது பொலிஸாரின் தாக்குதலால் எனது கை முறிந்து உள்ளதால் என்னால் வேலைக்கு செல்ல முடியவில்லை. அதனால் எனது குடும்பத்தின் வாழ்வாதாரம் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது என்றார். அதேவேளை, குறித்த நபரினால் மனிதவுரிமை ஆணைக்குழுவில் செய்யப்பட்ட முறைப்பாட்டுக்கு அமைய எதிர்வரும் 04ஆம் திகதி விசாரணைக்கு வருமாறு பொலிஸாருக்கு அழைப்பாணை வழங்கப்பட்டுள்ளதாக மனிதஉரிமை ஆணைக்குழுவின் யாழ். பிராந்திய இணைப்பாளர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. யாழ்ப்பாணத்திற்கு கடந்த மாதம் ஜனாதிபதி வருகை தந்த வேளை நடைபெற்ற ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில், நெல்லியடி பகுதியில் தொலைத்தொடர்பு நிலையத்தின் கேபிள் வயர்கள் வெட்டி களவாடப்பட்டு வருவதாகவும், பொலிஸார் அசமந்தமாக செயற்படுவதாகவும் குற்றம் சாட்டப்பட்டு இருந்தது. அந்நிலையில், வயர்கள் களவாடப்படும் சம்பவம் குறித்து உரிய விசாரணைகளை முன்னெடுத்து தொடர்புடைய நபர்களை கைது செய்யுமாறு நெல்லியடி பொலிஸாருக்கு பொலிஸ் உயர் அதிகாரிகள் கடும் அழுத்தம் கொடுத்த நிலையிலையே, வயர்களை திருடியதாக நபர் ஒருவரை பொலிஸார் கைது செய்து சித்திரவதைக்கு உள்ளாக்கியுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. நெல்லியடி பொலிஸார் சித்திரவதை புரிந்ததாக இளைஞன் குற்றச்சாட்டு | Virakesari.lk
-
சாவகச்சேரியில் காடையர்கள் அடாவடி; முன்னாள் அதிபர் அடித்துக் கொலை
காடையர்கள் அடாவடி; முன்னாள் அதிபர் அடித்துக் கொலை சாவகச்சேரி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தனங்களப்புப் பகுதியில் கடந்த சனிக்கிழமை போதையில் நின்ற காடையர்கள் குழுவொன்று தாக்குதல் நடத்தியதில் நீர்வேலி வடக்கைச் சேர்ந்த முன்னாள் அதிபரொருவர் உயிரிழந்துள்ளார். சி.விசுவாசம் (வயது 63) என்ற ஓய்வுநிலை அதிபரே உயிரிழந்தவராவார். சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது: புலம்பெயர் தேசத்தில் இருந்து வருகைதந்த ஒருவர் வைத்த மதுவிருந்தில் பங்கு பற்றியவர்கள், போதையின் உச்சத்தில் யாழ்ப்பாணம் - மன்னார் வீதியால் பௌத்த மத குருமார்கள் பயனித்த பேரூந்தின் மீது தாக்குதல் மேற்கொண்டுள்ளனர். அதனைத் தொடர்ந்து பூநகரி பிரதேசத்துக்குத் தனியார் வகுப்புக்குக் கற்பிக்கச் சென்று கொண்டிருந்த ஓய்வுபெற்ற அதிபர் மீதும் தாக்குதல் மேற்கொண்டுள்ளனர். தாக்குதலில் படுகாயமடைந்த அதிபரை பிரதேச மக்கள் மீட்டு சாவகச்சேரி ஆதார மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். அங்கு முதற்கட்ட சிகிச்சைக்குப் பின்னர், மேலதிக சிகிச்சைக்காக அவர் யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனைக்கு மாற்றப்பட்டிருந்தார். இந்த நிலையில், நேற்றுக் காலை சிகிச்சையின்போது அவர் உயிரிழந்துள்ளார். சம்பவம் தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்திருந்த சாவகச்சேரி பொலிஸார், சந்தேகநபர்களாக நால்வரைக் கைது செய்துள்ளனர். இன்னொருவர் தலைமறைவாகியுள்ள நிலையில், அவரைக் கைதுசெய்ய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. கைதானவர்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். காடையர்கள் அடாவடி; முன்னாள் அதிபர் அடித்துக் கொலை
-
யாழ். தெல்லிப்பழையிலுள்ள கல்லூரியில் இல்ல அலங்காரத்துக்கு தடை ? : பழைய மாணவன் மீதும் தாக்குதல்!
Published By: Vishnu 21 Feb, 2025 | 11:25 AM யாழ்ப்பாணம் தெல்லிப்பழையிலுள்ள கல்லூரியில் 20ஆம் திகதி வியாழக்கிழமை நடைபெற்ற வருடாந்த இல்ல மெய்வல்லுனர் போட்டியின் போது இல்ல அலங்காரங்களுக்கு தடை விதிக்கப்பட்டிருந்தது. இந்த விடயம் குறித்து மேலும் தெரியவருகையில், குறித்த கல்லூரியில் கடந்த வருடம் இல்ல மெய்வல்லுனர் போட்டி நடைபெற்ற போது இல்லங்கள் கார்த்திகைப் பூ மற்றும் பீரங்கி அமைப்பு போன்ற வடிவில் அலங்கரிக்கப்பட்டிருந்தன. இந்நிலையில் பாடசாலையின் நிர்வாகத்தினர் விசாரணைக்கு அழைக்கப்பட்டு இருந்தனர். அந்த விசாரணைகள் இதுவரை முடிவுக்கு வரவில்லை. இது இவ்வாறு இருக்கையில் இந்த ஆண்டு இல்லங்களுக்காக போடப்பட்ட பந்தலில் அலங்காரங்கள் செய்வதற்கு பாடசாலை நிர்வாகத்தால் தடை விதிக்கப்பட்டதாக பாடசாலையின் நெருங்கிய தரப்பினரால் குற்றம் சாட்டப்படுகிறது. அத்துடன் சாதாரண அலங்காரம் கூட செய்ய வேண்டாம் என தடை விதிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. அலங்காரம் செய்வதற்கு முயன்ற பழைய மாணவன் மீதும் ஆசிரியர் ஒருவர் தாக்குதல் நடாத்தியதில் அந்த மாணவன் தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதனை தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலை உறுதிப்படுத்தியது. இச்சம்பவம் குறித்து வலிகாமம் வலயக் கல்விப் பணிப்பாளர் யமுனா அவர்களை தொடர்புகொண்டு வினவிய வேளை, தாங்கள் அலங்காரங்களுக்கு இவ்வாறு தடை விதிக்கவில்லை என கூறியதுடன் தாக்குதல் சம்பவம் குறித்தும் இதுவரை தகவல் வெளியாகவில்லை என தெரிவித்தார். இது குறித்து பாடசாலை அதிபரை தொடர்புகொண்டு வினவிய வேளை, மாணவர்கள் கடந்த ஆண்டு வீட்டில் வைத்து அலங்காரங்களை செய்துவிட்டு அதனை கொண்டுவந்து இல்லங்களை அலங்கரித்ததால் பாரிய பிரச்சினை ஏற்பட்டது. அந்த விசாரணைகள் இதுவரையும் முடிவுறுத்தப்படவில்லை. இதனால் நாங்கள் மிகுந்த மனவுளைச்சலுக்கு உள்ளாகியுள்ளோம். இல்லங்கள் எல்லாம் இந்த ஆண்டு திருப்திகரமாக தான் அமைக்கப்பட்டது. இல்ல அலங்காரங்களுக்கு புள்ளிகளும் வழங்கினோம். எம்மீது குற்றம்சாட்டிய தரப்பினர் யார் என்று கூற வேண்டும். அவ்வாறு கூறாமல் செய்தி பிரசுரித்தால் அந்த செய்திக்கு எதிராக வழக்குத்தாக்கல் செய்வேன். இந்த ஆண்டு, அலங்காரங்கள் குறித்து எந்த தரப்பினராலும் எமக்கு அழுத்தங்கள் பிரயோகிக்கப்படவில்லை. அத்துமீறி உள்நுழைந்து அலங்காரம் மேற்கொண்ட பழைய மாணவரை நாங்கள் தடுத்து நிறுத்தினோம். அவர்மீது நாங்கள் தாக்குதல் நடாத்தவில்லை என்றார். யாழ். தெல்லிப்பழையிலுள்ள கல்லூரியில் இல்ல அலங்காரத்துக்கு தடை ? : பழைய மாணவன் மீதும் தாக்குதல்! | Virakesari.lk
-
வலி- வடக்கில் காணிகள் விடுவிக்கப்பட வேண்டும் - கடற்தொழில் அமைச்சர் வலியுறுத்து!
( எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்) யாழ்ப்பாணம் வலி- வடக்கில் பொலிஸார் மற்றும் முப்படையினர் வசமுள்ள காணிகள் விடுவிக்கப்பட வேண்டும் அத்துடன் விடுவிக்கப்படும் காணிகளில் மக்கள் குடியிறுப்புக்களை நிர்மாணித்துக் கொள்ள அனுமதிக்க வேண்டுமென பாதுகாப்பு அமைச்சுசார் குழுக் கூட்டத்தில் கடற்தொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் வலியுறுத்தியுள்ளார். பாராளுமன்ற கட்டிடத் தொகுதியில் வியாழக்கிழமை (20) பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் தலைமையில் பாதுகாப்பு அமைச்சுசார் குழு கூட்டம் நடைபெற்றது. பாதுகாப்பு அமைச்சுசார் குழு கூட்டத்தில் கலந்துக் கொண்ட கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர், ' யாழ் - வலி.வடக்கில் 2009 ஆண்டு பொலிஸார் மற்றும் முப்படையினர் வசம் 23 ஆயிரம் ஏக்கர் காணி காணப்பட்டது. இக்காணிகள் படிப்படியாக விடுவிக்கப்பட்டு வந்தன. இதன் பிரகாரம் 21 ஆயிரம் ஏக்கர் விடுவிக்கப்பட்ட நிலையில் தற்போது 2640 ஏக்கர் பொலிஸார் மற்றும் முப்படையினர் வசமுள்ளது. இக்காணிகள் மக்கள் பயன்படுத்தும் வகையில் விடுவிக்கப்பட வேண்டுமென கோரினார். அத்துடன் வலி.வடக்கில் அண்மைக்காலத்தில் விடுக்கப்பட்ட காணிகளில் விவசாயம் மேற்கொள்ளப்படவில்லை. இதற்கு குடியிருப்பு இல்லையென்ற காரணம் சொல்லப்படுகின்றது.எனவே விடுவிக்கப்பட்ட காணிகளில் வீடு கட்டிக் கொள்ள அனுமதிக்க முன் வர வேண்டும். அத்துடன் பலாலி - வசாவிளான் சந்தி வரையான வீதி மக்கள் பாவனைக்கு விடுவிக்கப்பட வேண்டுமெனவும் அமைச்சர் கோரிக்கை விடுத்துள்ளார். மேலும் முல்லைத்தீவு கேப்பாபிலவு காணி விடுவிக்கப்பட வேண்டுமென்ற கோரிக்கையையும் கடற்தொழில் அமைச்சர் முன்வைத்த நிலையில் கூட்டத்தில் கலந்துக் கொண்ட இராணுவ உயர் அதிகாரிகள் விடுவிக்கப்பட்ட பகுதிகளை அரசாங்கத்திடம் ஒப்படைக்கவுள்ளதாக குறிப்பிட்டனர். யாழ்ப்பாணம் வலி- வடக்கில் பொலிஸார் மற்றும் முப்படையினர் வசமுள்ள காணிகள் விடுவிக்கப்பட வேண்டும் - இராமலிங்கம் சந்திரசேகர் வலியுறுத்தல் | Virakesari.lk
-
யாழில் சுகாதார சீர்கேட்டுடன் இயங்கிவந்த உணவகத்துக்கு சீல்
21 Feb, 2025 | 01:42 PM யாழ்ப்பாணத்தில் சுகாதார சீர்கேட்டுடன் கொத்து ரொட்டி தயாரிக்கப்பட்ட உணவகத்தின் உரிமையாளருக்கு 40 ஆயிரம் ரூபாய் தண்டம் விதிக்கப்பட்டுள்ளதுடன், மற்றுமொரு கடைக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது. ஆனைக்கோட்டை பகுதியில், அப்பகுதி பொது சுகாதார பரிசோதகரான ம.ஜெயப்பிரதீப் மேற்கொண்ட சோதனை நடவடிக்கையின் போது, சுகாதர சீர்கேட்டுடன் கொத்து தயாரிக்கப்பட்ட உணவகமொன்றுக்கும், மற்றுமொரு உணவகத்தில் மலசல கூடத்தினுள் மின் மோட்டாரை இயக்கி, நீர் வழங்கி வந்த நபருக்கும் எதிராக மல்லாகம் நீதவான் நீதிமன்றில் வழக்கு தொடரப்பட்டது. குறித்த வழக்கு விசாரணைகள் வியாழக்கிழமை (20) நடைபெற்ற போது உரிமையாளர்கள் இருவரும் தம் மீதான குற்றச்சாட்டை ஏற்றுக்கொண்டனர். சுகாதாரத்திற்கு கேடான முறையில் கொத்து தயாரிக்கப்பட்ட உணவகத்தின் உரிமையாளருக்கு 40 ஆயிரம் ரூபாய் தண்டம் மன்றும் மலசல கூடத்தினுள் மின் மோட்டாரை இயக்கிய உரிமையாளருக்கு 28 ஆயிரம் ரூபாய் தண்டம் விதித்ததுடன், உணவகத்தினை சீல் வைத்து மூடுமாறு பொது சுகாதார பரிசோதகருக்கு கட்டளையிடப்பட்டது. நீதிமன்ற கட்டளையின் பிரகாரம் குறித்த உணவகம் பொது சுகாதார பரிசோதகரால் சீல் வைக்கப்பட்டுள்ளது. யாழில் சுகாதார சீர்கேட்டுடன் இயங்கிவந்த உணவகத்துக்கு சீல் | Virakesari.lk
-
வடக்கில் சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 17 பேர் கைது
Published By: Digital Desk 2 21 Feb, 2025 | 03:25 PM (எம்.மனோசித்ரா) வெடிமருந்துகளைப் பயன்படுத்தி சட்டவிரோத மீன்பிடித்தல், செல்லுபடியாகாத மீன்பிடி பத்திரத்துடன் சட்டவிரோத மீன்பிடி வலைகளைப் பயன்படுத்தி மீன்பிடித்தல் மற்றும் இரவு நேர சுழியோடி நடவடிக்கைகளில் ஈடுபட்ட 17 மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கடற்படையினரால் கடந்த 13 முதல் 19 வரை கொக்கடி, நந்திக்கடல், முல்லைத்தீவு, ஆனவாசல், சின்னபாடு மற்றும் கடைக்காடு ஆகிய கடற்பகுதிகளிலும், கடற்பரப்புகளிலும் மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கைகளின் போதே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து, 12 மீன்பிடி படகுகள், மோட்டார் சைக்கிலொன்று மற்றும் 156 சட்டவிரோத மீன்பிடி வலைகள், 184 கடலட்டைகள் மற்றும் 22 சங்குகள் என்பன பொலிஸாரால் கைப்பற்றப்பட்டது. இலங்கைக்கு சொந்தமான கடல் மற்றும் கரையோர வலயத்தில் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளை ஒடுக்கும் வகையில், சட்டப்பூர்வ மீன்பிடி நடவடிக்கைகளை ஊக்குவிக்கும் வகையில் கடற்படையினர் தொடர்ந்து கண்காணித்து நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இதன் போது கடற்படையினரால் கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் 18 முதல் 58 வயதுக்குட்பட்ட முல்லைத்தீவு, புத்தளம், கல்பிட்டி, கொட்டாந்தீவு, தோப்பூர் மற்றும் முள்ளியான் ஆகிய பகுதிகளில் வசிப்பவர்கள் ஆவர். சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 17 பேர் கைது | Virakesari.lk