Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

பிழம்பு

கருத்துக்கள உறவுகள்
  • Joined

Everything posted by பிழம்பு

  1. உரிய அனுமதிப்பத்திரமில்லாமல் கிளாலி பகுதியில் இருந்து வெள்ளை மணல் கடத்தி வந்த டிப்பர் ஒன்று மடக்கி பிடிக்கப்பட்ட நிலையில் அதன் சாரதியும் இன்று கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த டிப்பர் சட்டவிரோதமாக மணலை ஏற்றி வருவதாக சாவகச்சேரி பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில், இந்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது. இதன்போது செம்பியன்பற்று பகுதியைச் சேர்ந்த சாரதியே கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட சந்தேகநபர் சாவகச்சேரி பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டு விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. விசாரணைகளின் பின்னர் அவரை சாவகச்சேரி நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது. கிளாலியில் இருந்து அனுமதிப்பத்திரம் இன்றி மணல் கடத்தி வந்த டிப்பர் மடக்கிப் பிடிப்பு!
  2. வடக்கு பிராந்திய இலங்கை கடற் படையினர் எதிர்வரும் (24) மற்றும் (27) ஆகிய இரண்டு நாட்களும் பருத்தித்துறை கடலில் கடற்படை கலங்களான P475, P481 ஆகிய கலங்களில் இருந்து சூட்டு பயிற்சி மேற்கொள்ள இருப்பதால் மீனவர்களை குறித்த பகுதிக்குள் பிரவேசிக்க வேண்டாமென அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது. இலங்கை கரையோர காவற்படையின் வடக்கு பிராந்திய பணிப்பாளர் யாழ்ப்பாணம் நீரியல்வளத் திணைக்களம் ஊடாக அனைத்து கடற்தொழில் சங்கங்களுக்கும் இந்த அறிவித்தலை விடுத்துள்ளார். வடமராட்சி கிழக்கு கடற்றொழில் சங்கங்களுக்கு கடற்படை முக்கிய அறிவித்தல்! | Virakesari.lk
  3. அர்ச்சுனா எம்பியை கைது செய்ய நீதிமன்றம் உத்தரவு! 21 Jan, 2025 | 04:49 PM யாழ்ப்பாணம் பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதனை கைது செய்யுமாறு அநுராதபுரம் நீதிமன்றம் இன்று செவ்வாய்க்கிழமை (21) உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பில் தெரியவருவதாவது, பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதன் அநுராதபுரம் ரம்பேவ பகுதியில் இன்றைய தினம் போக்குவரத்துக்கு இடையூறு விளைவிக்கும் வகையில் விளக்குகளை ஒளிரச் செய்து தனது வாகனத்தை ஓட்டிச் சென்றுள்ளார். இதன்போது,போக்குவரத்து கடமையில் ஈடுபட்டிருந்த பொலிஸ் அதிகாரிகள் சிலர் அர்ச்சுனாவின் வாகனத்தை நிறுத்தி அவரது தேசிய அடையாள அட்டை மற்றும் சாரதி அனுமதிப்பத்திரத்தை கோரியுள்ளனர். பின்னர், அர்ச்சுனா ஆவணங்களை வழங்க மறுத்து, பொலிஸ் அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். இதனையடுத்து, போக்குவரத்து சட்டங்கள் மற்றும் குற்றவியல் நடைமுறைகளின் கீழ் பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதனுக்கு எதிராக நீதிமன்றில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்நிலையில், பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனாவை கைது செய்யுமாறு அநுராதபுரம் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அர்ச்சுனா எம்பியை கைது செய்ய நீதிமன்றம் உத்தரவு! | Virakesari.lk
  4. Seeman: 'சீமான் ஈழம் சென்றது உண்மைதான்; ஆனால் அந்தப் புகைப்படம்...' - கொளத்தூர் மணி சொல்வதென்ன? இந்த சம்பவம் அரசியல் வட்டாரத்தில் ஒருவித சலசலப்பை ஏற்படுத்தி இருந்தது. இந்நிலையில் செய்தியாளர்களைச் சந்தித்த திராவிடர் விடுதலைக் கழகத் தலைவர் கொளத்தூர் மணியிடம் இது தொடர்பாக கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், "சங்ககிரி ராஜ்குமார் சொன்ன எடிட்டிங் பற்றிய தகவல் உண்மையாக இருக்கலாம். சீமான் - கேப்டன் பிரபாகரன் சீமான் ஈழம் சென்று வந்த இரண்டு ஆண்டுக்கு பிறகு, இந்தப் புகைப்படம் கிராபிக்ஸ் என்ற தகவல்கள் வெளியானது. அப்போது அதை நாங்கள் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை, பின்னர் மறந்துவிட்டோம். புகைப்படம் கிராபிக்ஸ் ஆக இருப்பதற்கு வாய்ப்புள்ளது. சீமான் ஈழம் சென்றபோது, அங்கிருந்தவர்கள் அவர் வந்து சென்ற செய்தியை மட்டும் தான் சொன்னார்கள். எனக்கு கிடைத்த தகவலின் படி அவர் சென்று வந்தது உண்மை. ஆனால் மிகக் குறைவான நேரம் மட்டும் பிரபாகரனை சந்திக்க, சீமானுக்கு வாய்ப்பு கிடைத்தது. பிரபாகரனுடன் பலரும் திறந்தவெளியில் தான் புகைப்படம் எடுத்துள்ளார்கள். கொளத்தூர் மணி தனியாக ஸ்டூடியோ போன்று இருக்கிறதா என்பது பற்றி எனக்கு தெரியவில்லை. சீமான் தன்னை முழுமையாக வெளிக்காட்டிக் கொள்வாரா? அல்லது இரண்டு முகமும் காட்டுவாரா? என்பது தெரியவில்லை" என்று பேசியிருக்கிறார். Seeman: 'சீமான் ஈழம் சென்றது உண்மைதான்; ஆனால் அந்தப் புகைப்படம்...' - கொளத்தூர் மணி சொல்வதென்ன? | kolathur mani about seeman - Vikatan
  5. சீமான் - பிரபாகரன் சந்திப்பு புகைப்படம் சர்ச்சையாவது ஏன்? பின்னணி என்ன? நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் விடுதலை புலிகள் தலைவர் பிரபாகரனுடன் இணைந்து நிற்பது போன்ற புகைப்படம் தான் எடிட் செய்தது என்று திரைப்பட இயக்குநர் சங்ககிரி ராஜ்குமார் தெரிவித்துள்ளார். இந்தநிலையில், இந்த கருத்து குறித்த விவாதம் சமூக வலைதளங்களில் எழுந்துள்ளது. சீமானுக்கு நெருக்கமான நண்பர் ஒருவர், தான் ஒரு செய்தித் தொலைக்காட்சியில் பணிபுரிந்து கொண்டிருந்த போது, தன்னிடம் புகைப்படங்களை கொடுத்து எடிட் செய்யுமாறு கேட்டுக் கொண்டதாக சங்ககிரி ராஜ்குமார் தெரிவித்துள்ளார். சீமான் பிரபாகரனை நேரில் சந்தித்தாரா இல்லையா, சந்தித்த போது புகைப்படம் எடுத்தாரா இல்லையா என்று தனக்கு தெரியாது என்று கூறும் சங்ககிரி ராஜ்குமார், இந்த புகைப்படம் பிரபாகரனுடனான சந்திப்பின் போது எடுக்கப்பட்டதாக கூறுவது பொய் என்று கூறுகிறார். சீமான் மீதும் பிரபாகரன் மீதும் கொண்ட மரியாதை காரணமாகவும், இந்த புகைப்படம் சீமானுக்கு தமிழக அரசியலில் நேர்மறையான தாக்கத்தை ஏற்படுத்த உதவட்டும் என்று நினைத்தும், தான் எடிட் செய்த விசயத்தை இதுவரை வெளியில் சொல்லவில்லை என்று சங்ககிரி ராஜ்குமார் கூறுகிறார். மேலும், பெரியார் மீதான அவதூறு பேச்சு உட்பட சமீப காலமாக சீமானின் கருத்துகள் தனக்கு உடன்பாடாக இல்லாததால், பொது சமூகத்தின் நலன் கருதி இந்த உண்மையை இப்போது கூறும் கட்டாயத்தில் இருப்பதாக அவர் கூறுகிறார். இது குறித்து ஊடகங்களுக்கு அளித்த பேட்டியில், "அந்த புகைப்படத்தை அவர் சீமானுக்கு பரிசளிக்கப் போவதாக கூறி செங்கோட்டையன் என்ற நண்பர் அந்த புகைப்படத்தை எடிட் செய்ய சொல்லி கேட்டுக் கொண்டார். பிறகு, அந்த புகைப்படமே சந்திப்புக்கான ஆதாரமாக ஊடகங்களில் பகிரப்பட்டன'' என கூறுகிறார் சங்ககிரி ராஜ்குமார், ''இன்றைய தலைமுறைக்கு பிரபாகரன் என்றால் சீமானுக்கு ஆமைக்கறி சமைத்துக் கொடுத்தவர் என்று நினைவுக் கொள்ளும்படி செய்துள்ளார் சீமான். சமீப காலமாக, தமிழர்களுக்காக குரல் கொடுத்த பெரியாரை பற்றி அவதூறாக பேசி வருகிறார். இனிமேலும் இதை சொல்லாமல் இருக்க முடியாது என்ற கட்டாயத்தினால் இதை சொல்கிறேன்" என்றார் அவர். இதை நாம் தமிழர் கட்சியினர் தொடர்ந்து மறுத்து வருகின்றனர். அக்கட்சியின் கொள்கை பரப்பு செயலாளர் சாட்டை துரைமுருகன் தனது எக்ஸ் பக்கத்தில், ''டைம் ட்ராவல் செய்து 2009-ம் ஆண்டிலேயே ஏ.ஐ தொழில்நுட்பத்தை கற்றுக் கொண்டு புகைப்படத்தை எடிட் செய்திருப்பார் போல'' என்று பதிவிட்டிருந்தார். சீமான் பிரபாகரனை சந்தித்தது உண்மையா இல்லையா என்பது குறித்து அவ்வபோது தமிழக அரசியல் களத்தில் விவாதங்கள் எழுந்துள்ளன. 2018-ஆம் ஆண்டு மதுரையில் பேசியிருந்த மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, பிரபாகரனோடு சீமான் புகைப்படம் எடுக்கவில்லையென்றும் கிராபிக்ஸில் அதுபோல புகைப்படம் உருவாக்கப்பட்டதாகவும் குற்றம்சாட்டியிருந்தார். படக்குறிப்பு,சமூக ஊடகங்களில் சர்ச்சைக்குள்ளாகும் புகைப்படங்களில் ஒன்று இது போன்ற குற்றச்சாட்டுகள் எழுந்த போது, ஏழு ஆண்டுகளுக்கு முன் செய்தி தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், "என்ன நடந்தது என்று யாருக்கு தெரியும்? சந்தித்தது நானும் அவரும். மூன்று கி.மீ.க்கு இருட்டுக்குள் ஓடுகிறது வண்டி. கூட்டிட்டு வந்த போராளிகள் இறங்கி விட்டனர், அண்ணன் நடேசன்தான் வாகனம் ஓட்டுகிறார். மூன்று கி.மீக்கு மின்சாரமே கிடையாது. அடர்ந்த காட்டுக்குள் சந்திக்கிறோம். அருகில் யாருமே கிடையாது" என்றார் சங்ககிரி ராஜ்குமார் கூறுவதை நாம் தமிழர் கட்சியின் தலைமை நிலையச் செயலாளர் கு.செந்தில் குமார் மறுக்கிறார். அவர் பிபிசி தமிழிடம் பேசுகையில், " விடுதலை புலிகள் இந்தியாவில் தடை செய்யப்பட்ட அமைப்பு. அப்படிப்பட்ட அமைப்பின் தலைவரோடு சந்தித்ததாக பொய் கூற வேண்டிய அவசியம் எங்களுக்கு இல்லை" என்றார். மேலும், "இது 17 ஆண்டுகளுக்கு முன்பு வெளியான புகைப்படம். சங்ககிரி என்பவர் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த புகைப்படத்தை எடிட் செய்திருப்பதாக கூறினால், அவர் மீது தான் வழக்கு தொடர வேண்டும்" என்றார். "சில கட்சிகள் மாவீரன் தினத்தை ஒரு சடங்காக மட்டுமே நடத்தி வந்தனர். அதனை வெகுஜன மக்களிடம் கொண்டு சேர்ந்தது நாங்கள்தான். பிரபாகரன் மீது இங்குள்ள மக்கள் சிலருக்கு ஈர்ப்பும் மரியாதையும் உண்டு. அந்த மக்களின் ஆதரவை தாங்கள் பெற வேண்டும் என்பதற்காகவே எங்கள் கட்சிக்கு எதிராக அவதூறு பரப்பி வருகிறார்கள்" என்கிறார். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு சீமான் - பிரபாகரன் சந்திப்பு புகைப்படம் சர்ச்சையாவது ஏன்? பின்னணி என்ன? - BBC News தமிழ்
  6. காதலனை கொன்ற கேரள பெண்ணுக்கு மரண தண்டனை: நீதிமன்றம் தீர்ப்பு திருவனந்தபுரம்: காதலனை விஷம் கொடுத்து கொன்ற கேரள பெண்ணுக்கு மரண தண்டனை விதித்து கேரளாவின் நெய்யான்றின்கரை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த வழக்கில் கரீஸ்மா கொலை குற்றவாளி என கடந்த வாரம் அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் அவருக்கான தண்டனை விவரம் இன்று (ஜன.20) அறிவிக்கப்படுள்ளது. கன்னியாகுமரியில் வசித்த இளம் பெண் கரீஸ்மா. இவர் கடந்த 2021-ம் ஆண்டு முதுநிலை பட்டப்படிப்பு படித்தபோது, இளநிலை 3-ம் ஆண்டு படித்த ஷரோன் ராஜ் என்ற மாணவருடன் நட்பு ஏற்பட்டது. இவர் திருவனந்தபுரம் பாரசாலா பகுதியைச் சேர்ந்தவர். இருவரும் காதலர்களாக இருந்தனர். இந்நிலையில் கரீஸ்மாவுக்கு, ராணுவ அதிகாரி மாப்பிள்ளையை கரீஸ்மாவின் பெற்றோர் நிச்சயம் செய்தனர். இதற்கு கரீஸ்மாவும் சம்மதித்தார். இரண்டு முயற்சிகள்.. காதலன் ஷரோன் ராஜ் உடனான தொடர்பை துண்டிக்க, பல வழிகளை கரீஸ்மா யோசித்தார். ஷரோன் ராஜை ரகசியமாக கொலை செய்ய முடிவு செய்தார். சக்தி வாய்ந்த வலி நிவாரண மாத்திரைகளை கொடுத்து கொல்வதற்காக, அதன் விவரங்களை இணையதளத்தில் தேடினார். ஒரு முறை பல மாத்திரைகளை குளிர்பானத்தில் கலந்து கொடுத்தார். ஆனால் பலன் அளிக்கவில்லை. கடந்த 2022-ம் ஆண்டு அக்டோபர் 14-ம் தேதி ஷரொன் ராஜை வீட்டுக்கு அழைத்தார் கரீஸ்மா. மூலிகை விஷங்களை கலந்து ஆயூர்வேத பானம் என ஷரோன் ராஜ்க்கு கரீஸ்மா கொடுத்தார். ஆயுர்வேத பானம் கசப்பாகத்தான் இருக்கும் என நினைத்து அதை ஷரோன் ராஜ் குடித்தார். தனது வீட்டுக்கு சென்றதும் இரவில் பலமுறை வாந்தி எடுத்தார். திருவனந்தபுரம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஷரோன் ராஜ் , உடல் பாகங்கள் செயல் இழந்து சில நாட்களில் இறந்தார். இதையடுத்து அவரது குடும்பம் கரீஸ்மா மீது புகார் அளித்தது. விசாரணையில் கரீஷ்மா விஷம் கொடுத்தது உறுதியானது. இந்நிலையில் அவர் குற்றவாளி என நீதிமன்றம் தீர்ப்பளித்ததைத் தொடர்ந்து தற்போது அவருக்கு மரண தண்டனையும் வழங்கப்பட்டுள்ளது, முன்னதாக க்ரீஷ்மாவின் வயதைக் கருத்தில் கொண்டும், அவர் திருந்தி வாழ தயாராக இருப்பதை சுட்டிக் காட்டியும் அவருக்கு மரண தண்டனை விதிக்க வேண்டாம் என அவரது வழக்கறிஞர் சார்பில் கோரப்பட்டிருந்தது. காதலனை கொன்ற கேரள பெண்ணுக்கு மரண தண்டனை: நீதிமன்றம் தீர்ப்பு | Sharon Murder case: Prime accused Greeshma gets capital punishment - hindutamil.in
  7. ”மஹிந்தவை வெளியேற்ற அரசாங்கம் சதி செய்கிறது” முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவை அவரது இல்லத்தில் இருந்து வெளியேற்ற அரசாங்கம் சதி செய்து வருவதாக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பிரேமநாத் சி.தொலவத்த இன்று தெரிவித்துள்ளார். முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவரது குடியிருப்புக்கு 4.6 மில்லியன் ரூபாய் வாடகை செலுத்த வேண்டும் அல்லது அதை விட்டு வெளியேற வேண்டும் என ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்த கருத்துக்கு பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். முன்னாள் ஜனாதிபதியை அவரது இல்லத்தில் இருந்து வெளியேற்றுவதற்கு மக்கள் அரசாங்கத்திற்கு ஆணை வழங்கவில்லை என டொலவத்த தெரிவித்துள்ளார். "ஜனாதிபதிகள் பொதுவாக முன்னாள் ஜனாதிபதிகளை தனிப்பட்ட முறையில் பழிவாங்க மாட்டார்கள். முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை அவரது இல்லத்தில் இருந்து வெளியேற்ற அரசாங்கம் சதி செய்யும் அதேவேளையில், NPP பாராளுமன்ற உறுப்பினர்களுக்காக வாகனங்களை இறக்குமதி செய்ய அரசாங்கம் திட்டமிட்டுள்ளது," என்று அவர் கூறினார். Tamilmirror Online || ”மஹிந்தவை வெளியேற்ற அரசாங்கம் சதி செய்கிறது”
  8. யாழில் கொள்ளையிட்டோர் பொலிஸ் பிடியில் சிக்கினர்; இருவர் இராணுவ புலனாய்வாளர்கள்! யாழ்ப்பாணம் நகரப் பகுதியில் உள்ள நகைக்கடை ஒன்றில் ரி.ஐ.டி. என்று அடையாளப்படுத்தி நூதனமான முறையில் இடம்பெற்ற கொள்ளைச் சம்பவத்தின் சூத்திரதாரி உட்பட ஆறு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடம் இருந்து ஒரு தொகைப் பணம் கைப்பற்றப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்டவர்களில் இருவர் இராணுவப் புலனாய்வாளர்கள் என்று தெரியவருகின்றது. நூதனமாகக் கொள்ளை சில நாள்களுக்கு முன்னர் யாழ்ப்பாணம் நகரப் பகுதியில், கஸ்தூரியார் வீதியில் உள்ள நகைக்கடை ஒன்றிலேயே இந்த நூதனக்கொள்ளை நடந்திருந்தது. நகைக்கடையொன்றுக்குச் சென்ற குழு ஒன்று தங்களை ரி.ஐ.டியினர் என்று அடையாளப்படுத்திக்கொண்டதுடன், விசாரணை என்ற போர்வையில் கடையில் இருந்த 30 லட்சம் ரூபா பணத்தைக் கொள்ளையிட்டு அந்தக் குழு தப்பிச் சென்றது. இந்தச் சம்பவம் தொடர்பாக செய்யப்பட்ட முறைப்பாட்டுக்கமைய யாழ்ப்பாணம் மாவட்டப் பிரதிப் பொலிஸ்மா அதிபர் காளிங்க ஜெயசிங்கவின் வழிகாட்டலுக்கு அமைய, யாழ்ப்பாணக் குற்றவிசாரணைப் பொலிஸ் பிரிவுப் பொறுப்பதிகாரி கலும் பண்டார தலைமையிலான பொலிஸ் குழு விசாரணைகளை முன்னெடுத்திருந்தது. சந்தேகநபர்கள் கைது கண்காணிப்புக் கமராப் பதிவுகள் மற்றும் விசாரணைகளின் அடிப்படையில் சந்தேகநபர்கள் இனங்காணப்பட்ட நிலையில் பிரதான சூத்திரதாரி பொலிஸாரால் கைது செய்யப்பட்டார். அவரிடம் இருந்து ஒருதொகைப் பணம் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது. பிரதான சந்தேகநபரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில் கொள்ளைக்கு உடந்தையாக இருந்த குற்றச்சாட்டில் வாகனச்சாரதி உட்பட மூவர் கண்டியில் வைத்தும், இருவர் கொழும்பில் வைத்தும் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களில் இருவர் இராணுவப் புலனாய்வாளர்கள் என்றும், மற்றுமொருவர் தெற்கு அரசியல் கட்சியொன்றில் பிரமுகர் என்றும் தெரிவிக்கப்படுகின்றது. கண்டியில் கைது செய்யப்பட்டவர்களை யாழ்ப்பாணம் கொண்டுவந்து விசாரணைகளின் பின்னர் நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. யாழில் கொள்ளையிட்டோர் பொலிஸ் பிடியில் சிக்கினர்; இருவர் இராணுவ புலனாய்வாளர்கள்!
  9. மட்டக்களப்பு மாவட்டத்தின் பிரதான குளங்களின் ஒன்றான நவகிரி குளத்தின் வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளதன் காரணமாக போரதீவுப்பற்று பிரதேச செயலாளர் பிரிவுகளின் போக்குவரத்துகள் பாதிக்கப்பட்டுள்ளன. மண்டூர் - வெல்லாவெளி பிரதான போக்குவரத்துப்பாதையின் ஊடாக வெள்ளம் பாய்வதன் காரணமாக போக்குவரத்து முற்றாக தடைப்பட்டுள்ளன. போரதீவுப்பற்று பிரதேச செயலகப்பிரிவில் உள்ள அலுவலகங்களுக்கு கடமைக்கு செல்லும் அரச ஊழியர்கள் மற்றும் பொதுமக்கள் போக்குவரத்துச்செய்வது பாதிக்கப்பட்ட நிலையில் போரதீவுப்பற்று பிரதேசசபையின் ஊடாக உழவு இயந்திரங்கள் மூலம் போக்குவரத்துச்சேவை முன்னெடுக்கப்பட்டது. போரதீவுப்பற்று பிரதேசசபையின் செயலாளர் எஸ்.பகீரதனின் தலைமையில் இந்த போக்குவரத்துச்சேவை முன்னெடுக்கப்பட்டதுடன் குறித்த பகுதியில் இராணுவத்தினரும் பொலிஸாரும் பாதுகாப்பு கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இதேபோன்று பாலையடிவட்டை- வெல்லாவெளி பிரதான வீதி, மண்டூர் - ராணமடு வீதி, வெல்லாவெளி - உகன வீதி போன்றன வெள்ளம் காரணமாக போக்குவரத்துகள் பாதிக்கப்பட்டுள்ளன. உன்னிச்சையின் வான்கதவுகள் திறக்கப்பட்டுள்ளதன் காரணாக வவுணதீவுப்பகுதிக்கான பல்வேறு போக்குவரத்துப்பாதைகள் பாதிக்கப்பட்டுள்ளன. மட்டக்களப்பில் பிரதான குளங்களின் வான் கதவுகள் திறப்பு ; போக்குவரத்து பாதிப்பு | Virakesari.lk
  10. 20 Jan, 2025 | 11:15 AM முல்லைத்தீவு - வட்டுவாகல் கிராமத்தைச்சேர்ந்த உறவுகளின் ஏற்பாட்டில் முல்லைத்தீவு கடற்கரையில் நேற்று ஞாயிற்றுக்கிழமை (19) பட்டத் திருவிழா மிகச் சிறப்பாக நடைபெற்றது. இந்தப் பட்டத்திருவிழாவில் பிரதம விருந்தினராக வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் பங்கேற்றிருந்தார். அதனையடுத்து விருந்தினர்களால் சிறார்களிடம் பட்டங்கள் கையளிக்கப்பட்டு குறித்த பட்டத்திருவிழா வைபவரீதியாக ஆரம்பித்துவைக்கப்பட்டது. மேலும் இந்நிகழ்வில் விருந்தினர்களாக வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன், முல்லைத்தீவுமாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் சி.குணபாலன், கரைதுறைப்பற்று பிரதேசசபைச் செயலாளர் இராஜயோகினி ஜெயக்குமார், வட்டுவாகல் அறநெறிப்பாடசாலையின் முதல்வர் அப்புத்துரை செல்வரட்ணம் ஆகியோர் பங்கேற்றிருந்ததுடன், பெருந்திரளான மக்களும் இந்த பட்டத்திருவிழாவில் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது. முல்லைத்தீவு கடற்கரையில் சிறப்புற நடைபெற்ற பட்டத்திருவிழா | Virakesari.lk
  11. வாகன சாரதிக்கு மயக்க மருந்து கொடுத்து, சாரதியின் 05 பவுண் நகைகளை இருவர் கொள்ளையடித்துச் சென்ற சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது. யாழ். நகர் பகுதியில் வாடகை முறையில் இயங்கும் கன்ரர் ரக வாகனத்தின் சாரதி ஒருவரது நகைகளே நேற்றைய தினம் (19) கொள்ளையடிக்கப்பட்டது. இச்சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது: வாகன வாடகை தரிப்பிடத்துக்கு சென்ற இருவர், கிளிநொச்சி பகுதியிலிருந்து பொருட்களை ஏற்றிவர வேண்டுமெனக் கூறி, வாகனத்தை வாடகைக்கு அமர்த்தி, அவ்வாகனத்தில் இருவரும் கிளிநொச்சி நோக்கி பயணித்துள்ளனர். பரந்தன் பகுதியில் சென்றுகொண்டிருந்தபோது வீதியோரமாக வாகனத்தை நிறுத்துமாறு இருவரும் சாரதியிடம் கூறியுள்ளனர். வாகனம் நிறுத்தப்பட்ட பின்னர் அப்பகுதியில் உள்ள கடையொன்றில் இருவரும் குளிர்பானம் வாங்கி, சாரதிக்கு குடிப்பதற்கு வழங்கியுள்ளனர். குளிர்பானத்தை குடித்த சாரதி சிறிது நேரத்தில் மயக்கமடைந்துள்ளார். வீதியோரத்தில் நீண்ட நேரமாக நிறுத்தி வைக்கப்பட்ட வாகனத்தில் சாரதி அசைவின்றி மயக்க நிலையில் இருந்ததை அவதானித்த சிலர், சாரதியை உடனடியாக கிளிநொச்சி வைத்தியசாலைக்கு கொண்டுசென்றுள்ளனர். கிளிநொச்சி வைத்தியசாலையில் சிகிச்சை அளிக்கப்பட்ட சாரதி சுயநினைவுக்கு வந்த பின்னரே, தனது நகைகள் கொள்ளையடிக்கப்பட்டதை அறிந்து பொலிஸ் நிலையத்தில் முறையிட்டுள்ளார். சாரதிக்கு மயக்கமருந்து கலந்த குளிர்பானத்தை கொடுத்து, தங்க நகைகள் கொள்ளை - யாழில் சம்பவம் | Virakesari.lk
  12. கலாசார மையத்தின் பெயர் மாற்றம் குறித்து மக்களுக்கு தெளிவுபடுத்தப்பட வேண்டும் ; டக்ளஸ் தேவானந்தா 20 Jan, 2025 | 03:01 PM யாழ்ப்பாணத்தில் அமைக்கப்பட்டுள்ள கலாசார மையத்தின் பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளமை அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கின்றது என ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகமும் முன்னாள் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில், ஈழத் தமிழர்களின் கலாசார பாரம்பரியங்களை பேணிப் பாதுகாத்து வளர்ப்பதனை நோக்கமாக கொண்டு இந்திய அரசினால் வழங்கப்பட்ட இந்தக் கலாசார மையம் தமிழ் மக்களின் அடையாளமாக தற்போது காணப்படுகின்றது. கடந்த 2010 ஆம் ஆண்டு அப்போதைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் இந்தியாவிற்கான உத்தியோகபூர்வ விஜயத்தினை மேற்கொண்ட வேளையில், அப்போதைய பாரதப் பிரதமர் மன்மோகன் சிங், தலைமையிலான அரசாங்கத்திடம் என்னால் முன்வைக்கப்பட்ட கோரிக்கைக்கு அமையவே குறித்த கலாசார மையத்தினை இந்தியா எமக்கு அளித்திருக்கின்றது. யாழ். மாநகர சபைக்கு சொந்தமான காணியில் அதனை நிர்மாணிப்பதற்கான ஆரம்ப கட்டப் பணிகள் அனைத்தும் எம்மாலேயே முன்னெடுக்கப்பட்டிருந்ததன. இவ்வாறான பின்னணியிலேயே குறித்த பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது உலகப் பொதுமறையான திருக்குறளை எமக்களித்த திருவள்ளுவர் எமது மதிப்பிற்குரியவர். அவரையும் அவருடைய ஆளுமையையும் போற்றிப் புகழ்வதில் தமிழர்கள் யாருமே பின்நிற்கப் போவதில்லை. கடந்த காலங்களில் இந்திய அரசினால் வழங்கப்பட்ட திருவள்ளுவர் சிலைகளை எமது மக்கள் ஆர்வத்துடனும் பெருமிதத்துடன் பிதிஷ்டை செய்து பராமரித்து வருகின்றனர். எனினும் இலங்கையின் வடக்கு கிழக்கு பகுதிகளில் வாழ்ந்து வருகின்ற தமிழ் மக்களின் அடையாளங்களுள் ஒன்றான 'யாழ்ப்பாணம்' என்ற பெயர் நீக்கப்பட்டிருப்பதானது, தமிழ் மக்களின் அடையாளங்களை அழிக்க முனைகின்ற தீய சக்திகளின் மறைகரம் இந்தப் பெயர் மாற்றத்தின் பின்னணியில் இருக்குமோ என்ற நியாயமான சந்தேகத்தினை எமது மக்களுக்கு ஏற்படுத்தி இருப்பதனை அவதானிக்க கூடியதாக இருக்கின்றது. இவ்வாறான சந்தேகங்கள், இந்த நாட்டிலே புரையோடிப் போய் இருக்கின்ற தேசிய இனப்பிரச்சினையை தீர்ப்பதற்கு அவசியமான தேசிய நல்லிணக்க முயற்சிகளிலும் பாதிப்பை ஏற்படுத்தும் என்ற வகையில், இதனுடன் நேரடியாக தொடர்புபட்டிருந்த இந்திய தூதரக அதிகாரிகள், இலங்கையின் தற்போதைய புத்தசாசன சமய கலாசார அலுவல்கள் அமைச்சர் மற்றும் கடற்றொழில் அமைச்சர், வடக்கு மாகாண ஆளுநர் போன்றோர் பெயர் மாற்றப்பட்டமைக்கான காரணம் தொடர்பாக மக்களுக்கு தெளிவுபடுத்த வேண்டும் என்று கேட்டுக் கொள்கின்றேன் என்று தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. கலாசார மையத்தின் பெயர் மாற்றம் குறித்து மக்களுக்கு தெளிவுபடுத்தப்பட வேண்டும் ; டக்ளஸ் தேவானந்தா | Virakesari.lk
  13. 20 Jan, 2025 | 03:23 PM யாழில் திருவள்ளுவர் கலாசார மத்திய நிலையத்தின் பெயர்ப் பலகையில் தமிழ்மொழிக்கு மூன்றாவது இடம் கொடுக்கப்பட்டிருந்ததை பார்த்து தான் அதிர்ச்சியுற்றதாக கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரன் தெரிவித்துள்ளார். இன்று திங்கட்கிழமை (20) யாழ்ப்பாணம் - பலாலி வீதி, கந்தர் மடம் பகுதியில் தேசிய மக்கள் சக்தியின் மக்கள் தொடர்பாடல் காரியாலயத்தை திறந்துவைத்து உரையாற்றியபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் கூறுகையில், இந்திய அரசின் நிதி பங்களிப்புடன் திறந்து வைக்கப்பட்ட யாழ்ப்பாணம் கலாசார மையமானது திருவள்ளுவர் கலாசாரம் மையம் என பெயர் மாற்றம் செய்யப்பட்டது. குறித்த நிகழ்வில் நானும் அதிதியாக கலந்துகொண்டவன் என்ற வகையில் பெயர் மாற்றம் தொடர்பில் திரை நீக்கத்தின்போது தான் அவதானித்தேன். திருவள்ளுவர் கலாசார மையம் எனப் பெயர் மாற்றியது குற்றமல்ல. யாழ்ப்பாணத்துக்கே உரித்தான பெயர்களான யாழ். கலாசார மையம் அல்லது யாழ். பண்பாட்டு மையம் என்ற பெயர் சூட்டியிருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும் என்பது எனது தனிப்பட்ட கருத்து. பெயர் சூட்டும் நிகழ்வில் திருவள்ளுவர் கலாசார மையம் என காட்சிப்படுத்தப்பட்ட இலத்திரனியல் திரையில் தமிழுக்கு மூன்றாவது இடம் வழங்கப்பட்டமை கவலை தரும் விடயமாக இருந்தது. அதனைப் பார்த்து நான் அதிர்ச்சியடைந்தேன். தமிழ் மக்கள் வாழும் பகுதியில் தமிழுக்கு முன்னுரிமை வழங்கப்பட வேண்டும். சிலவேளை தெரியாமல் சில தவறுகள் இடம்பெற்றிருக்கக்கூடும். குறித்த விடயம் தொடர்பில் சம்பந்தப்பட்டவர்களுடன் நான் இன்னும் கலந்துரையாடவில்லை. நிச்சயமாக அது தொடர்பில் கலந்துரையாடி இனிவரும் காலங்களில் தவறுகள் இடம்பெறா வண்ணம் செயற்பாடுகளை முன்னெடுக்க முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என அவர் மேலும் தெரிவித்தார். யாழில் தமிழ்மொழி மூன்றாவது இடத்தில் உள்ளதை பார்த்து அதிர்ச்சியுற்றேன் - அமைச்சர் சந்திரசேகரன் | Virakesari.lk
  14. 20 Jan, 2025 | 03:44 PM போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் பிமல் ரத்நாயக்க இன்று திங்கட்கிழமை (20) காலை மொரட்டுவையில் இருந்து கொழும்பு கோட்டை நோக்கி அலுவலக ரயிலில் மக்களோடு மக்களாக பயணித்துள்ளார். இந்த பயணத்தின்போது, பயணிகள் எதிர்நோக்கும் பல பிரச்சனைகள் குறித்து பிமல் ரத்நாயக்க பயணிகளுடன் உரையாடும் புகைப்படங்கள் சமூக ஊடகங்களில் வெளியாகியுள்ளன. இவர் ஊடகங்களுக்கு அறிவிக்காது, ரயில் பயணத்தின்போது மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை கண்காணிக்க நேரடி கள ஆய்வை முன்னெடுத்துள்ளார். இதன்போது, அடிக்கடி இடம்பெறும் ரயில் தாமதங்கள், மின் விசிறிகள் பழுது, ரயில்களில் ஏறுவதில் மாற்றுத் திறனாளிகள் எதிர்கொள்ளும் சவால்கள், தண்டவாளங்கள் மற்றும் ரயில் நிலையங்களில் சுகாதாரக்கேடு, பாதுகாப்பற்ற பாழடைந்த ரயிலை தொடர்ந்து பயன்படுத்தல் போன்ற பிரச்சினைகளை பொதுமக்களிடம் இருந்து கேட்டறிந்துள்ளார். ரயில் பயணத்தை கண்காணிக்க மக்களோடு மக்களாக பயணித்த அமைச்சர் பிமல் ரத்நாயக்க | Virakesari.lk
  15. 20 Jan, 2025 | 07:04 PM (எம்.மனோசித்ரா) இலங்கை வரலாற்றில் கடந்த காலங்களில் முன்னாள் நிறைவேற்றதிகார ஜனாதிபதிகள் கொல்லப்பட்டுள்ளனர் என்பதை இந்த அரசாங்கத்துக்கு நினைவுபடுத்துகின்றோம். பாதுகாப்பு மற்றும் அதன் நிமித்தம் வழங்கப்படும் உத்தியோகபூர்வ இல்லம் என்பன வரப்பிரசாதங்கள் அல்ல. அவை உரிமைகளாகும். எவ்வாறிருப்பினும் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் அந்த இல்லத்திலிருந்து வெளியேறுவதற்கு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தயாராகவே இருப்பதாக பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார். திங்கட்கிழமை (20) ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போது இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில், எம்மை வெளியேறுமாறு கூறினால் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் வெளியேற நாம் தயாராகவே உள்ளோம். காரணம் இது எமது சொந்த குடியிருப்பு அல்ல. முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவும் இதே நிலைப்பாட்டிலேயே இருக்கின்றார். உத்தியோகபூர்வ இல்லம் என்பது முன்னாள் ஜனாதிபதிகளுக்கு பாதுகாப்பினை அடிப்படையாகக் கொண்டு அரசியலமைப்பின் ஊடாக வழங்கப்பட்டுள்ளவையாகும். எவ்வாறிருப்பினும் அந்த இல்லத்தை தற்போதைய ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவுக்கு யாருக்காவது விற்க வேண்டிய தேவை இருந்தால், அதற்காக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை அங்கிருந்து வெளியேற்ற நினைத்தால் அதனை நாம் எதிர்க்கப் போவதில்லை. ஆனால் அதனை உத்தியோகபூர்வமாக எழுத்து மூலம் அறிவிக்க வேண்டும். காரணம் அந்த உத்தியோகபூர்வ இல்லம் பலவந்தமாக பெற்றுக் கொண்டதல்ல. அரசியலமைப்பு ரீதியாக கிடைக்கப் பெற்றதாகும். இது இலங்கைக்கு மாத்திரம் வரையறுக்கப்பட்ட நியதியுமல்ல. உலகில் எந்தவொரு நாட்டிலும் இந்த நடைமுறையே காணப்படுகிறது. முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு மாத்திரமின்றி, சகல முன்னாள் அரச உத்தியோகத்தர்களுக்கும் இது பொறுந்தும். முன்னாள் அரச தலைவர்கள் தற்போதைய அரசாங்கத்தில் பழிவாங்கப்படுகின்றனரா இல்லையா என்பது ஜனாதிபதி அநுரவின் உரைகளிலும், செயற்பாடுகளிலும் மிகத் தெளிவாகத் தெரிகிறது. முன்னாள் ஜனாதிபதிகளுக்கான பாதுகாப்பு என்பது சிறப்புரிமை அல்ல. அது உரிமையாகும். இலங்கை வரலாற்றில் இதற்கு முன்னர் பல நிறைவேற்றதிகார ஜனாதிபதிகள் கொல்லப்பட்டுள்ளனர் என்பதை இந்த அரசாங்கத்துக்கு நினைவுபடுத்துகின்றோம். எனவே முன்னாள் ஜனாதிபதிகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டியது அரசாங்கத்தின் பொறுப்பாகும். எது எவ்வாறிருப்பினும் முன்னாள் ஜனாதிபதியிடம் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்படும் பட்சத்தில் அந்த இல்லத்திலிருந்து வெளியேறுவதற்கு அவர் தயாராகவே இருக்கின்றார் என்றார். எந்தவொரு சந்தர்ப்பத்திலும் உத்தியோகபூர்வ இல்லத்திலிருந்து வெளியேற முன்னாள் ஜனாதிபதி தயார் - நாமல் ராஜபக்ஷ | Virakesari.lk
  16. மன்னார் துப்பாக்கிச்சூடு - அதிர வைக்கும் பின்னணி Freelancer / 2025 ஜனவரி 16 , பி.ப. 08:25 - 0 - 101 மன்னார் நீதவான் நீதிமன்றத்துக்கு முன்பாக இன்றைய தினம் இருவர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் மேலதிக தகவல்கள் வெளியாகி உள்ளன. இதன்படி, நீண்ட காலமாக மன்னாரில் இடம்பெற்று வரும் கொலை சம்பவங்களின் தொடர்ச்சியே இந்த துப்பாக்கிச்சூட்டுக்கு காரணம் என பொலிஸார் தெரிவித்துள்ளனர். மாட்டுவண்டி போட்டி தொடர்பில் மன்னாரில் உள்ள இரண்டு கிராமங்களுக்கு இடையே நிலவும் முறுகல் காரணமாக இதுவரையில் 7 பேர் உயிரிழந்தனர். இதற்கமைய, மன்னார் நீதிமன்றுக்கு அருகில் மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டில் 42 மற்றும் 61 வயதுடைய நொச்சிக்குளம் பகுதியைச் சேர்ந்த இருவர் இன்று உயிரிழந்தனர். இதன்போது நால்வர் காயமடைந்ததுடன் அவர்களில் இருவர் உயிரிழந்தனர். காயமடைந்தவர்களில் ஒருவர் மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையிலும் மற்றுமொருவர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையிலும் அனுமதிக்கப்பட்டுள்ளனர். சம்பவத்தில் உயிரிழந்த இருவரும் 2022ஆம் ஆண்டு மன்னார் உயிலங்குளம் பகுதியில் இடம்பெற்ற இரட்டை கொலை சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் என்பது தெரியவந்துள்ளது. 2022ஆம் ஆண்டு ஜுலை எட்டாம் திகதி உயிலங்குளத்தில் நடைபெற்ற மாட்டுவண்டி சவாரி போட்டி தொடர்பான முறுகல் ஒன்றை அடுத்து ஏற்பட்ட மோதலில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இரண்டு சகோதரர்கள் படுகொலை செய்யப்பட்டனர். அதற்கு பழிவாங்கும் நடவடிக்கையாக 2023 ஆம் ஆண்டும் ஓகஸ்ட் மாதம் 23ஆம் திகதி மன்னார் அடம்பன் பகுதியில் இரண்டு பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். அதன் தொடர்ச்சியாகவே இன்றைய தாக்குதல் சம்பவமும் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். உயிலங்குளம் பகுதியைச் சேர்ந்த ஜேசுதாசன் என்ற போதைப் பொருள் வர்த்தகர் என்றும், அவரது தரப்பினரே இந்த கொலையுடன் தொடர்புப்பட்டுள்ளதாகவும், அவர் தற்போது வெளிநாட்டில் உள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிடுகின்றனர். குறித்த நபரை கைது செய்வதற்கான சர்வதேச பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. R Tamilmirror Online || மன்னார் துப்பாக்கிச்சூடு - அதிர வைக்கும் பின்னணி
  17. யாழ். நாகர் கோவில் கடற்கரையில் ஒதுங்கிய மிதவையில் 18 புத்தர் சிலைகள்! 16 Jan, 2025 | 04:02 PM யாழ்ப்பாணத்தில் கரை ஒதுங்கிய மிதவையில் காணப்பட்ட 18 புத்தர் சிலைகளையும் மருதங்கேணி பொலிஸார் மீட்டு பொலிஸ் நிலையத்துக்கு கொண்டுசென்றுள்ளனர். வடமராட்சி கிழக்கு நாகர் கோவில் கடற்கரையில் நேற்றைய தினம் புதன்கிழமை (15) அதிகாலை மிதவை ஒன்று கரை ஒதுங்கியிருந்தது. இந்த மிதவையில் புத்தர் சிலைகள், தேங்காய்கள் முதலான பொருட்கள் காணப்பட்டன. பர்மாவில் இறந்த பிக்குகளை (தேரர்களை) நினைவுகூரும் முகமாக ஆரம்பகாலம் முதல் சடங்கு முறையொன்று மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மிதக்கும் வீடுகளை தயார் செய்து அதற்குள் நினைவுகூரும் தேரர்களின் சிற்பங்களை / படங்களை வைத்து அவர்களுக்கு படையலிட்டு கடலில் விடும் வழக்கம் இருக்கிறது. அந்த மிதக்கும் வீடு எந்த கரையை அடைகின்றதோ அங்கே அவர்களது ஆன்மா சென்றடைவதாக ஒரு ஐதீகம் பர்மிய பௌத்தர்களிடையே காணப்படுகிறது. அந்த வகையில், நாகர் கோவில் பகுதியில் கரை ஒதுங்கிய மிதக்கும் வீடானது பிக்கு ஒருவரை நினைவுகூரும் முகமாக அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அந்த பிக்குவை நினைவுகூரும் சடங்குகளை செய்து மிதக்கும் வீட்டினை அமைத்து கடலில் விட்டவர்களின் விபரங்களும் பர்மிய மொழியில் அந்த மிதவையில் உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. யாழ். நாகர் கோவில் கடற்கரையில் ஒதுங்கிய மிதவையில் 18 புத்தர் சிலைகள்! | Virakesari.lk
  18. Published By: Digital Desk 3 16 Jan, 2025 | 05:01 PM முடிந்தால் கிளிநொச்சியில் உள்ள தமிழ் பாராளுமன்ற உறுப்பினர் அவர்கள், தமிழக முதலமைச்சருடன் கதைப்பதற்கு நேரத்தினைப் பெற்று, அவருடன் கலந்துரையாடி எமது மீனவர்களின் பிரச்சினையை தீர்த்து வைக்கட்டும், அதன் பின்னர் நாங்கள் அவரது செயற்பாடுகளை வரவேற்கின்றோம் என யாழ்ப்பாண மாவட்ட மீனவர் கூட்டுறவு சங்கங்களின் சமாசங்களின் சம்மேளனத்தின் உபதலைவர் பிரான்சிஸ் ரட்ணகுமார் சவால் விடுத்துள்ளார். இன்றையதினம் சம்மேளனத்தின் யாழ்ப்பாண அலுவலகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு சவால் விடுத்துள்ளார். அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில், தற்போது எமது கடற்தொழில் அமைச்சராக உள்ள சந்திரசேகரன் அவர்களுக்கும் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் முதலமைச்சர் ஸ்டாலினுடன் கதைப்பதற்கு நல்ல ஒரு சந்தர்ப்பம் கிடைத்தும் அவர்கள் அதனை சரியாக பயன்படுத்தவில்லை. அண்மையில் தமிழ்நாட்டில் நடைபெற்ற மாநாடு ஒன்றில் முதலமைச்சர் ஸ்டாலினுக்கு பக்கத்தில் அமர்ந்திருந்த கிளிநொச்சி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் அங்கு இருந்த போதே இலங்கை மீனவர்களின் பிரச்சினைகளை முதலமைச்சரிடம் எடுத்துக் கூறாமல் இங்கு வந்தபின்னர், முதலமைச்சருடன் பேசுவதற்கு நேரம் ஒதுக்கி தருமாறு தான் கேட்டுள்ளதாகவும், மீனவர்களின் பிரச்சினைகளை கதைக்கப்போவதாகவும் கூறுகின்றார். இதெல்லாம் பகட்டுக்கும், எதிர்காலத்தில் மீனவர்களின் வாக்குகளை பெற்றுக்கொள்வதற்காகவும் கூறுகின்றார். இந்தியாவில் தேர்தல் நெருங்குகின்றது. தேர்தல் காலத்தில் உங்களுக்கு நேரம் ஒதுக்கி தர மாட்டார்கள். இயலும் என்றால் நீங்கள் நேரத்தினை பெற்று நமது மீனவர்களின் பிரச்சினை குறித்து பேசித் தீருங்கள், அதற்கு பின்னர் நாங்கள் உங்களை வரவேற்கின்றோம். தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுடன் கதைப்பதற்கு, கடந்த காலத்தில் கடற்தொழில் அமைச்சராக இருந்த டக்ளஸ் தேவானந்தாவிடமும் கோரிக்கை முன்வைத்தோம் இதன்போது அவர் மு.க.ஸ்டாலின் மற்றும் கனிமொழி ஆகியோரிடம் இது குறித்து தெரிவித்தார். இருப்பினும் எமக்கான நேரம் வழங்கப்படவில்லை. அப்படி எமக்கு நேரம் வழங்கப்பட்டிருந்தால் நாங்கள் எமது பிரச்சினைகளை நேரடியாகவே எடுத்துக்கூறி இருப்போம் என்றார். சிறீதரன் எம்.பி முடிந்தால் ஸ்டாலினுடன் பேசி மீனவர் பிரச்சினையை தீர்த்து வைக்கட்டும் - யாழ். மீனவர் அமைப்பு சவால்! | Virakesari.lk
  19. அமெரிக்காவில் ஜனவரி மாதத்தை தமிழ் மொழி மற்றும் பாரம்பரிய மாதமாக அறிவிக்க அமெரிக்க காங்கிரசில் தீர்மானம் கொண்டு வரப்பட்டுள்ளது. அமெரிக்காவில் பல்வேறு வௌிநாடுகளை சேர்ந்த வெவ்வேறு மொழிகள் பேசும் கலாச்சாரங்களை உள்ளடக்கிய ஏராளமானோர் வசிக்கின்றனர். இந்நிலையில் அமெரிக்காவில் ஜனவரி மாதத்தை தமிழ் மொழி மற்றும் பாரம்பரிய மாதமாக அறிவிக்க அமெரிக்க காங்கிரஸ் தீர்மானம் கொண்டு வந்துள்ளது. இந்திய – அமெரிக்க காங்கிரஸ் உறுப்பினர் ராஜா கிருஷ்ணமூர்த்தி தலைமையிலான 15 நாடாளுமன்ற உறுப்பினர்கள் அடங்கிய பிரதிநிதிகள் சபை கூட்டம் பொங்கல் பண்டிகை தினமான நேற்று முன்தினம் கூடியது. அப்போது “அமெரிக்காவில் ஜனவரி மாதத்தை தமிழ் மொழி மற்றும் பாரம்பரிய மாதமாக அறிவிக்க முடிவு செய்து” தீர்மானம் கொண்டு வரப்பட்டது. இதுதொடர்பாக ராஜா கிருஷ்ணமூர்த்தி கூறியதாவது: ஒரு அமெரிக்கவாழ் தமிழன் என்ற முறையில் அமெரிக்காவிலும் உலகெங்கிலும் தமிழ் மொழி பாரம்பரியம் மற்றும் கலாச்சாரத்தை போற்றும் விதமாக இந்த தீர்மானத்தை கொண்டு வருவதில் பெருமிதம் அடைகிறேன். அமெரிக்கா என்பது பல்வேறு மொழிகள் கலாச்சாரங்கள் கருத்துகள் மற்றும் மரபுகளின் ஒரு அங்கம். மேலும் இந்த தீர்மானம் மூன்று லட்சத்துக்கும் மேற்பட்ட அமெரிக்கவாழ் தமிழர்களின் வளமான மற்றும் தனித்துவமான கலாச்சாரம் நம்ப முடியாத சாதனைகள் மீது ஔி வீசும் என மனதார நம்புகிறேன்” என்று தெரிவித்தார். இந்த தீர்மானத்துக்கு பல்வேறு தமிழ் அமைப்புகளும் வரவேற்பும் பாராட்டும் தெரிவித்துள்ளன. ஜனவரி மாதத்தை தமிழ் மொழி, பாரம்பரிய மாதமாக அறிவிக்க முடிவு: அமெரிக்க காங்கிரசில்தீர்மானம் | Virakesari.lk
  20. சென்னை - இறந்த ஆமைகள் Join Our Channel Share சென்னையின் கடற்கரைப் பகுதிகளான காசிமேடு, திருவொற்றியூர் தொடங்கி நெம்மிலி குப்பம், ஈச்சம்பாக்கம் எனத் தொடர்ந்து ஆமைகள் இறந்து கரை ஒதுங்கியிருக்கின்றன. கடந்த 15 நாள்களில் மட்டும் சுமார் 350-க்கும் மேற்பட்ட ஆமைகள் இறந்த நிலையில் மீட்கப்பட்டிருக்கிறது. இது தொடர்பாக TREE அறக்கட்டளையின் நிறுவனர் சுப்ரஜா தாரணியைத் தொடர்புகொண்டு பேசினோம். ``ஆமைகள் கடலுக்கு மிக முக்கியமான உற்பத்திக்காரணி. கடலில் இருக்கும் பாசைகளை உண்டு, அது அந்த இடத்தை சுத்தம் செய்துவிடும். அதனால், மீன்களின் இனப்பெருக்கம் அதிகரிக்கும். மீன் குஞ்சுகளை உண்ணும் ஜெல்லி மீன்களை ஆமைகள் உண்ணும். அதனால் மீன் வளர்ச்சியும், உற்பத்தி அதிகரிக்கும். மண்ணில் இருக்கும் ஆக்ஸிஜனை வெளிப்படுத்தும். 10/10 1/10 6/10 7/10 8/10 9/10 10/10 1/10 1000 ஆமைகளில்... ஆனால், ஒவ்வொரு வருடமும் நூற்றுக்கணக்கான ஆமைகள் இறப்பது தொடர்கதையாகதான் இருக்கிறது. இந்த வருடம் எண்ணிக்கை சற்றுக் கூடுதலாக இருக்கிறது. அழிந்துவரும் உயிரினங்களின் பட்டியலின் முதல் அட்டவணையில், கடல் ஆமைகள் பாதுகாக்கப்பட வேண்டிய உயிரினங்கள் பட்டியலில் இருக்கிறது. வாழ்நாள் முழுவதும் ஆமைகள் கடலில் வாழ்ந்தாலும், கடலில் எத்தனையாயிரம் தொலைவுக்கு நீந்தித் திரிந்தாலும், எந்த இடத்தில் பிறந்து தவழ்ந்ததோ, முட்டையிடும்போது அந்த இடத்துக்கு வந்துவிடும். டிசம்பர் முதல் ஜூன் வரை சென்னை, ஆந்திரா, ஒடிசா கடற்கரைகளில் பல ஆயிரம் ஆமைகள் வந்து முட்டையிட்டுச் செல்லும். ஆயிரம் குஞ்சுகள் பிறந்தால் அதில் முட்டையிடும் பருவத்துக்கு ஒரே ஒரு ஆமைதான் வரும். மீதமுள்ள 999 ஆமைகள், வலைகளில் சிக்கியோ, சுறாவுக்கு இரையாகியோ இறந்துவிடும். முட்டையிடும் பருவம் முட்டையிடும் பருவம் வந்ததும் அது முட்டையிடும் கடற்கரைப் பகுதியிலிருந்து 3 கிலோ மீட்டர் தூரத்தில் வந்து தங்கிவிடும். இரவு நேரத்தில் கரைக்கு வந்து, 65 முதல் 160 முட்டைகள் வரை இடும். 15 நாள் இடைவெளியில ரெண்டுமுறை வந்து இந்த முட்டைகளை இட்டு கடலுக்குள் சென்றுவிடும். ஆமைகள் 40 - 45 மணி நேரத்துக்கு ஒருமுறை தண்ணீருக்கு மேல்பகுதிக்கு வந்து சுவாசிக்கும். அந்த நேரங்களில் மீன்பிடி விசைப்படகுகள் மோதியோ, வலையில் சிக்கியோ ஆமைகள் இறந்துபோகின்றன. அதன்காரணமாகவே, ஆமைகள் மேலே வந்து சுவாசிக்க முடியாமலும் இறக்கின்றன. சுப்ரஜா தாரணி ஆமைகளுக்கு மிக முக்கியமான வழித்தடம் தமிழ்நாடு கடல் மீன்பிடி ஒழுங்குமுறை சட்டத்தின்படி 8 கடல் மைல்களுக்குப் பிறகுதான் விசைப்படகுகள் கில்நெட்களைப் பயன்படுத்தி மீன் பிடிக்க வேண்டும். ஆனால், மழைக்காலம் முடிந்தவுடன் கடலின் சில மைல்களிலேயே இறால் போன்றவைகள் அதிகம் கிடைக்கும் என கில்நெட்களைப் பயன்படுத்துகிறார்கள். அதனால் ஆமைகள் இதில் சிக்கி இறக்க நிறைய வாய்ப்புகள் இருக்கிறது. உலகிலேயே மூன்று இடங்களில்தான் லட்சக்கணக்கான ஆமைகள் வந்து முட்டையிட்டுச் செல்லும். அதில் ஒடிஷாவில் இருக்கும் ரிஷிகுல்யா, கஹிர்மதா எனும் இரண்டு கடற்கரைகள் மிக முக்கியமானவை. இந்த இடங்களில் பிப்ரவரி - மார்ச் மாதங்களில் முட்டியிடும் ஆமைகள், உணவுத்தேடி நம்முடைய மன்னார்வளைகுடா பகுதிக்கு வரும். இங்கிருந்து அக்டோபர் - நவம்பர் மாதங்களில் வட தமிழகம் வழியாக ஒடிசாவுக்கு நீந்திச் செல்லும். இதுதான் அந்த ஆமைகளுக்கு மிக முக்கியமான வழித்தடம். இந்த சமயங்களில்தான் அதிகமான ஆமைகள் படகுகளிலும், வலைகளிலும் சிக்கி இறக்கின்றன. காசிமேடு தொடங்கி, மெரினா, பெசன்ட் நகர், கொட்டிவாக்கம், ஈஞ்சம்பாக்க எனக் கோவளம் வரை இறந்து கரை ஒதுங்குகின்றன. தற்போது எங்களுக்குக் கிடைத்த தகவலின்படி நீலாங்கரைக் முதல் கோவளம் வரை 168 ஆமைகள் இறந்திருக்கின்றன. செம்மஞ்சேரி முதல் ஆலம்பரை வரை இருக்கும் பகுதிகளில் 123 ஆமைகள் இறந்தநிலையில் மீட்கப்பட்டிருக்கிறது. இதைத் தடுக்கும் விதமாக கடந்த 8-ம் தேதியே அரசுத் துறைகளுக்கு கடிதம் எழுதியிருக்கிறோம். மீனவர்கள், கடலோரக் காவல்படை, வனக்காவலர்கள், கடலோரக் காவல் குழுமம் ஆகியோரை அழைத்து, சீசன் தொடங்குகிறது என்பதைக் குறிப்பிட்டு விழிப்புணர்வு நிகழ்ச்சி கூட நடத்தினோம். ஆனாலும், ஆமைகளின் இறப்பு நடந்துக்கொண்டுதான் இருக்கிறது. அரசு இதில் தலையிட்டாலே தவிர, தீர்வு கிடைக்காது. ஒடிசாவில் இந்த சீசனில் கில்நெட் பயன்படுத்துவது தடை செய்யப்பட்டிருக்கிறது குறிப்பிடதக்கது." எனத் தெரிவித்திருக்கிறார்.. Chennai : தமிழ்நாட்டில் நூற்றுக்கணக்கில் இறந்து கரை ஒதுங்கும் ஆமைகள்... காரணம் என்ன? | Hundreds of turtles are washing up dead on the coast of Tamil Nadu - Vikatan
  21. “உனக்கு காம இச்சை வந்தால் உன் தாயிடமோ, சகோதரிிடமோ, மகளிடமோ தீர்த்துக்கொள் என்று சொன்ன பெரியார், பெண் விடுதலையைப் பேசியவரா?’’, ’’தமிழைக் காட்டுமிராண்டி மொழி என்று சொன்னவர் பெரியார்.’’ - இப்படியெல்லாம் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், பெரியாரை கடுமையாக விமர்சித்து பேசி இருப்பது, தமிழ்நாட்டு அரசியல் சூழலில் பெரும் அதிர்வலைகளை உண்டாக்கியிருக்கிறது. மாநிலம் முழுக்க போராட்டங்கள், காவல்நிலையங்களில் புகார்கள், உயர் நீதிமன்றத்தில் வழக்கு என பரபரப்புக் கிளம்பியுள்ளது. `பெரியார் சொல்லியதாக சீமான் சொல்வது வெறு அவதூறு மட்டுமே' என்று, திராவிடர் கழகம் மற்றும் பெரியாரிய கட்சியினர் கடுமையான எதிர்ப்பை தெரிவிக்கின்றனர். ``பெரியார் அப்படிச் சொல்லியிருந்தால், அதற்கான ஆதாரத்தை சீமான் கொடுக்க வேண்டும்’’ என்று அவர்கள் கேட்க, ``வெளியிட்ட புத்தகத்தையெல்லாம் முடக்கி வைத்துக்கொண்டு, என்னிடம் ஆதாரம் கேட்டால் எப்படி? பெரியாரின் எழுத்துகளை அரசுடைமையாக்கிவிட்டு, சான்று கேளுங்கள் தருகிறேன்” என்று பதில் கொடுத்துள்ளார் சீமான். பரப்பப்படும் செய்தி... உண்மையா, பொய்யா? பொதுவாகவே பெரியார் `அதைச் சொன்னார்... இதைச் சொன்னார்' என்று பல்லாண்டுகளாகவே பற்பல விஷயங்களும் சுழன்று கொண்டுதான் இருக்கின்றன. ஆனால், உண்மையிலேயே அவையெல்லாம் பெரியார் சொன்னவை அல்ல என்கிற மறுப்புகளும் சுழலத்தான் செய்கின்றன. அப்படி, காமம் குறித்து சொன்னதாகப் பரப்பப்படும் மேலே குறிப்பிட்டுள்ள செய்தி, 2017-ம் ஆண்டிலிருந்தே சில குழுக்களால் சமூக வலைதளங்களில் பரப்பப்பட்டு வருகிறது. அதைக் குறிப்பிடும் ஒரு செய்தித் தாள் துண்டுச்சீட்டு, `விடுதலை ஏடு:11.5.1953’ என்று தேதியிட்டுள்ளது. இப்போது சீமானும் அதை மேற்கோள் காட்டி பேசியிருக்கும் நிலையில், குறிப்பிட்ட தேதியிட்ட விடுதலை நாளேட்டை நாம் ஆராய்ந்தோம். அன்றைய தினம் வெளியான, நான்கு பக்கங்களைக் கொண்ட விடுதலை நாளேட்டில், தென் சென்னை திராவிட கழக மாவட்ட மாநாடு பற்றிய செய்திதான் முதல் பக்க தலைப்புச் செய்தி. அதை தொடர்ந்து இன்னும் பல செய்திகள் இடம்பெற்றிருக்கும் அந்த நாளேட்டில், சுற்றலில் இருக்கும் செய்தி எதுவும் இடம்பெறவில்லை. ஆக, இந்தப் படம் உண்மை அல்ல. அது பெரியார் கருத்தல்ல... சனாதன கருத்து! இதுகுறித்து தந்தைப் பெரியார் திராவிடர் விடுதலைக் கழகத்தின் தலைவர் கொளத்தூர் மணியிடம் கேட்டபோது, ``பெரியார் கூறியதாகப் பரப்பப்படும் செய்தி, ஒரு புராணக்கதை. பிரம்மா, தன் மகள் சரஸ்வதி யையே மணந்தவர். இந்த விஷயத்தைப் பற்றிய புராணக் கதையில்தான் `தாயென்ன, மகளென்ன...' எனப் பேசப்பட்டிருக்கிறது. இதைத்தான் பெரியார் மேற்கோள் காட்டி னாரே தவிர, இது அவருடைய கருத்தல்ல. 11.5.53 தேதியிட்ட `விடுதலை' நாளிதழில் பெரியார் இப்படி கூறியுள்ளதாக, இந்துத்துவ அமைப்பைச் சேர்ந்தவர்கள் பல காலமாகக் கூறி வருகின்றனர். இதற்கு பதில் கொடுக்கும் விதமாக அந்தக் குறிப்பிட்ட தேதியில் வெளியான விடுதலை நாளிதழை வெளி யிட்டு, அத்தனையும் பொய் என்று நிரூபித்துவிட்டோம். இப்போது, தங்கள் சீடன் சீமானை வைத்து அதே வேலையை செய்கிறது இந்துத்துவா’’ என்றார் கொளத்தூர் மணி காட்டமாக. `தமிழ், காட்டுமிராண்டி மொழி...' - இதனால்தான் சொன்னார் பெரியார்! `தமிழ்மொழியைக் காட்டுமிராண்டி மொழி என்று குறிப்பிட்ட பெரியார் எப்படித் தமிழ் இனத்தின் தலைவராக முடியும்?’ என்று சீமான் கேட்டுள்ளது குறித்து, திராவிடர் விடுதலை கழகத்தின் பொதுச்செயலாளர், `விடுதலை’ ராஜேந்திரனிடம் கேட்டபோது, ``பெரியார் தமிழ் மொழியை அறிவியல் மொழியாக்க விரும்பினார். அதன் பொருட்டுதான் ‘தமிழ் ஒரு காட்டுமிராண்டி மொழி’ என்கிற கட்டுரையை எழுதினார். அக்கட்டுரையின் முடிவில் பின் குறிப்பு ஒன்றையும் எழுதியுள்ளார். `நான் இப்படியொரு கட்டுரை எழுதுவதற்கு தமிழறிஞர்கள் என் மீது கோபப்படுவார்கள். அதற்காகத்தான் இந்தக் கட்டுரையை எழுதுகிறேன். கோபப்படுகிறவர்கள் பகுத்தறிவு மற்றும் சமூக சிந்தனை கொண்ட இலக்கியங்களை எழுதுவார்கள் என்றால், அதை நானே அச்சுக்கோத்து பதிப்பிக்கத் தயாராக இருக்கிறேன்’ என்று கூறியுள்ளார். பகுத்தறிவு சிந்தனை கொண்ட எழுத்துகள் நம் மொழியில் பிறக்க வேண்டும் என்கிற நோக்கோடுதான் பெரியார் அப்படி எழுதினாரே தவிர, தமிழை சிறுமைப்படுத்தும் நோக்கோடு அவர் எழுதவில்லை. உலகப்பொதுமறையான திருக்குறளுக்கு மாநாடு நடத்தியவர் பெரியார்தான். திருக்குறளை அனைவரும் சட்டைப்பைக்குள் வைத்துக் கொள்ளும்படியாக சிறிய பதிப்பை வெளியிட்டவரும் பெரியார்தான். அவர் தமிழ் எழுத்துத் சீர்திருத்தத்தைக் கொண்டு வந்தார். சம்ஸ்கிருதத்தை நிராகரித்து தமிழ் மொழியில் உறுதியேற்றுக் கொண்டு நிகழ்த்தப்படும் சுயமரியாதைத் திருமணத்தை நடைமுறைப்படுத்தினார். அப்படிப்பட்டவரை தமிழுக்கு எதிரானவர் எனச் சொல்வது ஏற்புடையதல்ல'' என்று சொன்ன ராஜேந்திரன், ``பெரியாரின் நூல்களை யார் வேண்டு மானாலும் பதிப்பிக்கலாம் என்று நீதிமன்றத்தின் மூலமாக உத்தரவு பெற்றுள்ளோம். அதைத் தொடர்ந்து பலரும் பதிப்பித்து வருகின்றனர். இணையதளங்களிலும் அவருடைய நூல்கள் இருக்கின்றன. அப்படியிருக்கும்போது, நாட்டுடமை ஆக்குங்கள்... ஆதாரம் தருகிறேன் என் சொல்வது வேடிக்கையாக இருக்கிறது” என்றும் விளக்கினார். பெரியார் முரண்களின் மூட்டை! `சீமான் சொன்னது தவறான செய்தி என்பது விடுதலை நாளிதழ் ஆவணங்களை பரிசீலித்தபோது தெரிகிறதே... பெரியாரின் நூல்களை யார் வேண்டுமானாலும் பதிப்பிக்கலாம் என்கிறபோது, நாட்டுடமை என்கிற கேள்விக்கே இடமில்லையே...' என்பது உள்ளிட்ட கேள்விகளை, சீமானின் நாம் தமிழர் கட்சியின் இளைஞர் பாசறை மாநில ஒருங்கிணைப்பாளர் இடும்பாவனம் கார்த்திக்கிடம் கேட்டபோது, ``பெரியார் காமம் குறித்து அப்படித்தான் கூறினார் என்பதை ஆணித்தரமாகக் கூறுகிறோம். எங்கள் முன்னோர்கள் அதைப் படித்து விட்டு செவி வழியில் சொன்னதைக் கொண்டுதான் பேசுகிறோம். ஆதாரம் வேண்டுமென்றால் விடுதலை நாளிதழை அரசு உடைமையாக்கி பெரியார் வாழ்ந்த காலம் வரை வெளியான அனைத்து இதழ்களையும் வெளியிட வேண்டும். அப்படி செய்தால் எல்லா இதழ்களையும் அலசி ஆராயலாம். அப்படி ஆராய்ந்த பிறகு இல்லையென்றால், அதைப் பற்றிப் பேசலாம். தமிழ்ச் சமூகத்துக்குப் பங்காற்றியவர்களில் பெரியாரும் ஒருவர் என்பதில் எங்களுக்கும் மாற்றுக் கருத்தில்லை. ஆனால், `பெரியார் மட்டுமே எல்லாவற்றையும் செய்தார். இது பெரியார் மண்’ என்று சொல்லி மற்றவர்களது பங்களிப்பையும், போராட்டத்தையும், உழைப்பையும் மூடி மறைத்துவிட்டு பெரியாரை முழு முதல் முகமாக நிறுத்திய பிம்ப அரசியலைத்தான் எதிர்க்கிறோம். பெரியார் முரண்களின் மூட்டை. தனிப்பட்ட விருப்பு வெறுப்பு சார்ந்தே இயங்கியவர். சந்தர்ப்பத்துக்குத் தகுந்தாற் போல தனது கருத்தை மாற்றிக் கொண்டவர். அவரது இரட்டை நிலைப்பாடுகளுக்கு எடுத்துக்காட்டாக பல உதாரணங்களைச் சொல்ல முடியும். உலகப்பொதுமறை தந்த தமிழ் மொழிக்கு இரண்டாயிரம் ஆண்டு களுக்கு மேற்பட்ட வரலாறு இருக்கிறது. பெரியாரை தமிழின் தந்தையாக்கி அதைச் சுருக்குவதை நாங்கள் ஏற்க மாட்டோம்'' என்கிறார் இடும்பாவனம் கார்த்திக். விஜய் வருகையால் மாறும் சீமானின் அரசியல் கணக்குகள்! இந்த விஷயங்கள் குறித்துபேசும் தமிழக அரசியல் நோக்கர்கள் சிலர், ``பெரியார் மீதான எதிர்ப்பை பொதுவாக இந்துத்துவா அமைப்பினர்தான் முன்வைப்பார்கள். இப்போது, சாதிய இந்துக்களில் பலரும் அம்பேத்கரியர்களில் ஒரு சிலரும்கூட பெரியாரை மறுக்கின்றனர். இப்போது, தமிழ்நாட்டில் கருத்தியல் ரீதியிலான முரண்பாடுகள் பல வகைகளில் பெருகியிருக்கின்றன. பிறப்பின் அடிப்படையில் பெரியார் ஒரு தமிழரல்ல என்பதாலேயே அவர் முன்னிறுத்துகிற திராவிடம் என்கிற கருத்தின் மீது ஏற்பில்லாதவர்கள், தமிழ்த் தேசியத்தை முன்னிறுத்தி அவரை எதிர்க்கின்றனர். தமிழக ஓட்டு அரசியல் சூழலில் இந்துத்துவ எதிர்ப்பு, சாதிய எதிர்ப்பு என எல்லாவற்றையும் திராவிடக் கட்சிகள் பேசி வருகின்றன. இதற்கு எதிர்க்கோட்டில் பா.ஜ.க போன்ற இந்துத்துவக் கட்சிகள், மத அரசியலை தீவிரமாக முன்னெடுக்கின்றன. இப்படியான அரசியல் சூழலில் தனக்கான தனியொரு பாதையை கட்டமைக்க வேண்டுமென்றால், தமிழ்த் தேசியம் மட்டும்தான் தேவை என்பதை சீமான் அரசியலுக்கு வரும்போதே உணர்ந்து விட்டார். திராவிடக் கட்சிகளுக்கு மாற்றாக சீமான் தன்னை முன்னிறுத்திக் கொண்டிருந்த வேளையில் நடிகர் விஜய்யின் அரசியல் வருகை, சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கெனவே இளம்தலைமுறையினரை ஈர்த்துக் கொண்டிருந்த நிலையில், விஜய்யின் வருகை சீமான் தரப்பை சேதத்துக்குள்ளாக்குமோ என்கிற பேச்சுகள் எழுந்துள்ளன. இச்சூழலில்தான், பெரியார் எதிர்ப்பை சீமான் இன்னும் அழுத்தமாக முன் வைக்க வேண்டிய தேவை உண்டாகியுள்ளது. விஜய் கட்சியும், கொள்கை வழிகாட்டியாக பெரியாரை அறிவித்திருக்க, பெரியார் எதிர்ப்பை அக்கட்சியின் மீதும் திருப்புவது சீமானின் நோக்கமாக உள்ளது'' என்கின்றனர். ``பெரியார், விமர்சனங்களுக்கு அப்பாற்பட்டவரா?'' என்று கேட்டால், ``நிச்சயமாக இல்லை. அது கருத்தியல் ரீதியிலான முரணாக இல்லாமல், பெரிதளவு தனிப்பட்ட சீண்டலாகவே இருப்பதுதான் பிரச்னை. நியாயமான விமர்சனம் வையுங்கள், அதுகுறித்து உரையாடலாம். ஆனால், கீழ்த்தரமான அவதூறுகளைப் பரப்பக் கூடாது’' என்கின்றனர் திராவிட கழகத்தினர். இறந்து 50 ஆண்டுகளுக்குப் பிறகும் தன்னைப் பற்றி பேச வைத்துக் கொண்டிருக்கிறார் பெரியார். தத்துவங்களுக்கு ஏது மரணம்?! Vikatan Plus - 19 January 2025 - ``பெண்களுக்கும் தமிழுக்கும் எதிரி பெரியார்!'' - சீமான் பரப்புவது பொய்ச் செய்தியா... - Vikatan
  22. கேம் சேஞ்சர் Review: ஷங்கரின் ‘தெலுங்கு மசாலா’ அஸ்திரம் எடுபட்டதா? 30 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு முத்திரை பதித்த ஷங்கர், முதல் முறையாக நேரடியாக தெலுங்கில் இயக்கியுள்ள படம் ‘கேம் சேஞ்சர்’. ‘இந்தியன் 2’ கொடுத்த மிகப் பெரிய தோல்வியால் வெற்றியின் கட்டாயத்தில் ஷங்கரும், ‘ஆர்ஆர்ஆர்’ பெற்ற உலகளாவிய கவனத்துக்குப் பிறகு ‘சோலோ’வாக ஒரு ஹிட் கொடுக்க வேண்டிய கட்டாயத்தில் ராம் சரணும் இணைந்து ரசிகர்களின் எதிர்பார்ப்புக்கு தீனி போட்டார்களா என்பதை பார்ப்போம். எதிலும் நேர்மை, எங்கும் துணிச்சல் என்று செயல்படும் ஓர் அரசு அதிகாரியும், எங்கும் எதிலும் ஊழல் என்று செயல்படும் ஓர் அரசியல்வாதியும் மோதிக் கொண்டால் என்ன ஆகும் என்பதே ‘கேம் சேஞ்சர்’ படத்தின் ஒருவரிக் கதை. ஐபிஎஸ் ஆக இருந்து ஐஏஎஸ் அதிகாரியாகி இருக்கும் ராம் நந்தன் (ராம்சரண்) விசாகப்பட்டினத்துக்கு மாவட்ட ஆட்சியராக வருகிறார். வந்த உடனே தனது அதிரடியான சீர்திருத்த நடவடிக்கைகளை மேற்கொள்கிறார். இதனால் முதலமைச்சரின் மகனும், அமைச்சருமான மோப்பிதேவி (எஸ்.ஜே.சூர்யா) உடன் ஆட்சியர் ராம் நந்தனுக்கு மோதலை ஏற்படுத்துகிறது. தனது தந்தை ஒப்பிலி சத்யமூர்த்தி (ஸ்ரீகாந்த்) இறந்த பிறகு முதல்வர் ஆகவேண்டும் என்ற கனவுடன் இருக்கும் மோப்பிதேவிக்கு ஹீரோவால் பல சிக்கல்கள் எழுகின்றன. இருவருக்கும் இடையிலான இந்த எலி - பூனை விளையாட்டில் ஆட்டத்தை மாற்றியது யார் என்பதற்கு படத்தின் திரைக்கதை பதில் சொல்கிறது. தமிழ் சினிமா மட்டும் மட்டுமின்றி இந்திய சினிமாவையே தனது ‘முதல்வன்’ என்கிற அரசியல் படத்தால் திரும்பி பார்க்க வைத்த ஷங்கரிடமிருந்து மீண்டும் ஓர் அரசியல் படம் என்ற அறிவிப்பு பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. தனது வழக்கமான டிரேக்மார்க் அம்சங்களுடன் ‘தெலுங்கு மசாலா’ என்ற புதிய அஸ்திரத்தை கையில் எடுத்துள்ளார். ஆனால், அது அங்கொன்றும் இங்கொன்றுமாகவே கைகொடுத்திருக்கிறது என்றே சொல்லவேண்டும். பொதுவாகவே ஷங்கர் தனது படங்களில் பல்வேறு புதுமையான விஷயங்களை புகுத்தியிருப்பார். கதைக்கு தேவையே இல்லாத பிரம்மாண்ட செட் பாடல்களை தாண்டி, படத்தின் திரைக்கதை ஆடியன்ஸ் யூகிக்க முடியாத அளவுக்கு தனித்து நிற்கும். ஆனால் ‘கேம் சேஞ்சர்’ அப்படியான எந்த புதுமைகளும் இல்லாமல் எளிதில் யூகிக்க கூடிய தட்டையான திரைக்கதையுடன் நகர்கிறது. பாடல்களில் மட்டுமே ஷங்கரின் ‘சிக்னேச்சர்’ பாணியை பார்க்க முடிகிறது. எனினும், படம் எந்த இடத்திலும் சலிப்பை ஏற்படுத்தவில்லை என்பது ஆறுதல். அதே வழக்கமான ஹீரோ இன்ட்ரோ, அதே அறிமுகப் பாடல், அதே குடும்ப காட்சிகள் என்று தொடங்கும் முதல் பாதியில் ’பிளாஸ்டிக்’ தனமான காதல் காட்சிகளை தவிர எஸ்.ஜே.சூர்யா, ராம்சரண் தொடர்பான காட்சிகள் அடுத்தடுத்து நகரும்படியே எழுதப்பட்டிருக்கின்றன. குறிப்பாக, இடைவேளைக்கு முந்தைய காட்சி அப்பட்டமான லாஜிக் மீறல் என்றாலும், அதை படமாக்கிய விதம் சிறப்பு. ஷங்கர் படங்களில் வரும் ‘ஷார்ப்’ வசனங்கள் இதில் மிஸ்ஸிங். நினைவில் வைத்துக் கொள்ளும்படி அவை எந்த இடத்திலும் ஈர்க்கவில்லை. படத்தின் மிகப் பெரிய ப்ளஸ் என்றால் இரண்டாம் பாதியில் வரும் ஃப்ளாஷ்பேக்கும், அதில் இடம்பெற்ற சுப்பண்ணா கதாபாத்திரம் எழுதப்பட்ட விதமும்தான். அதில் ஹீரோயிசத்தை குறைத்து தனது தேர்ந்த நடிப்பால் ராம்சரண் வெகுவாக கவர்கிறார். கிட்டத்தட்ட 25 நிமிடம் ஓடும் அந்த ஃப்ளாஷ்பேக் காட்சியே இரண்டாம் பாதியை பெரிதும் தூக்கி நிறுத்துகிறது. எனினும் அந்த ஃப்ளாஷ்பேக்குக்குப் பிறகு படம் மீண்டும் பக்கா தெலுங்கு மசாலா பாணிக்கு திரும்பி ஒருவழியாக முடிகிறது. ஓர் அரசு அதிகாரியின் ஆற்றல் என்ன என்பது குறித்து பலருக்கும் தெரியாத பல தகவல்கள் படத்தில் ஆங்காங்கே இடம்பெற்றுள்ளன என்றாலும், ஐஏஎஸ் அதிகாரி ஒரே இரவில் மிகப் பெரிய பொறுப்புகளுக்குப் பாய்வது நிஜத்துக்கு அருகில் கூட வராத அப்பட்டமான லாஜிக் மீறல்கள் படம் முழுக்க ஆக்கிரமித்துள்ளன. இது ஷங்கர் படம் தானா என்ற ஐயம் படம் முழுக்க எழுவதை தவிர்க்க முடியவில்லை. இந்த இடத்தில்தான் ஷங்கர் பெரிதும் சறுக்கியுள்ளதாக தோன்றுகிறது. படத்தின் பின்னணி இசையில் தமன் கவனம் ஈர்க்கிறார். பாடல்கள் ஓகே ரகம். இந்த இடத்தில் ஷங்கரின் ஆஸ்தான ஏ.ஆர்.ரஹ்மான் மற்றும் ஹாரிஸ் ஜெயராஜை மிஸ் செய்யாமல் இருக்கமுடியவில்லை. திருவின் கேமரா ஷங்கர் பட பிரம்மாண்டத்தை காட்ட தவறவில்லை. ஒவ்வொரு பிரேமிலும் படக்குழுவினரின் உழைப்பும், செலவும் தெரிகிறது. ஷங்கரின் முந்தைய படம் தந்த மிகப் பெரிய ஏமாற்றத்துடன் ஒப்பிடும்போது இப்படம் பரவாயில்லை என்று வேண்டுமானால் சொல்லலாம். ஆனால் ‘ஷங்கர் படம்’ என்று இதுநாள் வரை அமைக்கப்பட்டிருந்த ஒரு இமேஜ் உடன் ஒப்பிட்டால் ‘கேம் சேஞ்சர்’ ஒரு சராசரி தெலுங்கு மசாலா படம் மட்டுமே! ஹீரோவாக ராம்சரண் கதாபாத்திரத்துக்கு நல்ல தேர்வு. இரண்டு விதமான கெட்-அப்களிலும் வித்தியாசம் காட்டி கவர்கிறார். குறிப்பாக, இரண்டாம் பாதியில் வரும் சுப்பண்ணா கதாபாத்திரம் அவருக்கு பாராட்டுகளை பெற்றுத் தரும். பெரும்பாலான ஷங்கர் பட நாயகிகளைப் போலவே இதிலும் கியாராவுக்கு பாடல் காட்சிகளைத் தவிர பெரிய வேலை எதுவும் இல்லை. எந்தவித மெனக்கெடலும் இல்லாமல் முழு மேக்கப் உடன் வந்து செல்கிறார். அஞ்சலி தனது வேலை குறையின்றி செய்திருக்கிறார். வில்லன் கேரக்டர் என்றாலே அல்வா சாப்பிடுவது போல அமர்க்களப்படுத்தும் எஸ்.ஜே.சூர்யா இதிலும் ஸ்கோர் செய்கிறார். சுனில், வெண்ணெலா கிஷோர் இருவரும் காமெடி என்ற பெயரில் ஏதோ முயற்சி செய்துள்ளனர். படத்தின் மிகப் பெரிய ப்ளஸ் என்றால் இரண்டாம் பாதியில் வரும் ஃப்ளாஷ்பேக்கும், அதில் இடம்பெற்ற சுப்பண்ணா கதாபாத்திரம் எழுதப்பட்ட விதமும்தான். அதில் ஹீரோயிசத்தை குறைத்து தனது தேர்ந்த நடிப்பால் ராம்சரண் வெகுவாக கவர்கிறார். கிட்டத்தட்ட 25 நிமிடம் ஓடும் அந்த ஃப்ளாஷ்பேக் காட்சியே இரண்டாம் பாதியை பெரிதும் தூக்கி நிறுத்துகிறது. எனினும் அந்த ஃப்ளாஷ்பேக்குக்குப் பிறகு படம் மீண்டும் பக்கா தெலுங்கு மசாலா பாணிக்கு திரும்பி ஒருவழியாக முடிகிறது. ஓர் அரசு அதிகாரியின் ஆற்றல் என்ன என்பது குறித்து பலருக்கும் தெரியாத பல தகவல்கள் படத்தில் ஆங்காங்கே இடம்பெற்றுள்ளன என்றாலும், ஐஏஎஸ் அதிகாரி ஒரே இரவில் மிகப் பெரிய பொறுப்புகளுக்குப் பாய்வது நிஜத்துக்கு அருகில் கூட வராத அப்பட்டமான லாஜிக் மீறல்கள் படம் முழுக்க ஆக்கிரமித்துள்ளன. இது ஷங்கர் படம் தானா என்ற ஐயம் படம் முழுக்க எழுவதை தவிர்க்க முடியவில்லை. இந்த இடத்தில்தான் ஷங்கர் பெரிதும் சறுக்கியுள்ளதாக தோன்றுகிறது. படத்தின் பின்னணி இசையில் தமன் கவனம் ஈர்க்கிறார். பாடல்கள் ஓகே ரகம். இந்த இடத்தில் ஷங்கரின் ஆஸ்தான ஏ.ஆர்.ரஹ்மான் மற்றும் ஹாரிஸ் ஜெயராஜை மிஸ் செய்யாமல் இருக்கமுடியவில்லை. திருவின் கேமரா ஷங்கர் பட பிரம்மாண்டத்தை காட்ட தவறவில்லை. ஒவ்வொரு பிரேமிலும் படக்குழுவினரின் உழைப்பும், செலவும் தெரிகிறது. ஷங்கரின் முந்தைய படம் தந்த மிகப் பெரிய ஏமாற்றத்துடன் ஒப்பிடும்போது இப்படம் பரவாயில்லை என்று வேண்டுமானால் சொல்லலாம். ஆனால் ‘ஷங்கர் படம்’ என்று இதுநாள் வரை அமைக்கப்பட்டிருந்த ஒரு இமேஜ் உடன் ஒப்பிட்டால் ‘கேம் சேஞ்சர்’ ஒரு சராசரி தெலுங்கு மசாலா படம் மட்டுமே! கேம் சேஞ்சர் Review: ஷங்கரின் ‘தெலுங்கு மசாலா’ அஸ்திரம் எடுபட்டதா? | Game Changer Movie Review - hindutamil.in
  23. Published By: Vishnu 10 Jan, 2025 | 07:01 PM மியன்மாரிலிருந்து நாட்டுக்கு வருகைதந்திருக்கும் ரோஹிங்கிய அகதிகளைத் திருப்பியனுப்பவேண்டாம் எனக்கோரி வெள்ளிக்கிழமை (10) கொழும்பிலுள்ள ஜனாதிபதி செயலகத்துக்கு முன்பாக முன்னெடுக்கப்பட்ட கவனயீர்ப்புப்போராட்டத்தின்போது பிடிக்கப்பட்ட படங்கள். ரோஹிங்கிய அகதிகளைத் திருப்பியனுப்பவேண்டாம் எனக்கோரி கொழும்பில் கவனயீர்ப்புப்போராட்டம் | Virakesari.lk
  24. மகத்தான திரையிசை பாடகர் பி.ஜெயச்சந்திரன் காலமானார்! திரையிசை பின்னணி பாடகர் பி.ஜெயச்சந்திரன் | கோப்புப் படம் திருச்சூர்: தமிழ், மலையாளம் உள்ளிட்ட பல மொழிகளில் 16,000-க்கும் மேற்பட்ட பாடல்களை பாடிய மகத்தான திரையிசை பின்னணி பாடகர் பி.ஜெயச்சந்திரன் காலமானார். அவருக்கு வயது 80. கேரள மாநிலம் திருச்சூரில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற நிலையில், அவரது உயிர் பிரிந்தது. கடந்த 1944, மார்ச் 3-ம் தேதி எர்ணாகுளத்தில் அவர் பிறந்தார். அவரது தந்தையை பின்பற்றி இசை பயின்று, அதில் தேர்ச்சி பெற்றார். விலங்கியலில் இளங்கலை பட்டம் பெற்ற அவர், சென்னையில் நடைபெற்ற இசை நிகழ்ச்சியில் பாடியதன் மூலம் திரைப்படத்துக்கு பாடும் வாய்ப்பை பெற்றார். ADVERTISEMENT தமிழில் கடந்த 1973 முதல் திரைப்படங்களுக்கு பாடல் பாடி உள்ளார். எம்.எஸ்.விஸ்வநாதன், இளையராஜா, எஸ்.ஏ.ராஜ்குமார், தேவா, ஏ.ஆர்.ரஹ்மான், வித்யாசாகர், பரணி, ஸ்ரீகாந்த் தேவா, ஜி.வி.பிரகாஷ்குமார் உள்ளிட்ட இசை அமைப்பாளர்களுடன் தமிழில் பணியாற்றி உள்ளார். ‘மூன்று முடிச்சு’ படத்தில் ‘வசந்த கால நதிகளிலே’, ஆறிலிருந்து அறுபது வரை படத்தில் ‘வாழ்க்கையே வேஷம்’, அந்த 7 நாட்களில் ‘கவிதை அரங்கேறும் நேரம்’, நானே ராஜா நானே மந்திரி படத்தில் ‘மயங்கினேன் சொல்ல தயங்கினேன்’, வைதேகி காத்திருந்தாள் படத்தில் ‘ராசாத்தி உன்ன’, கிழக்கு சீமையிலே படத்தில் ‘கத்தாழங் காட்டு வழி’, மே மாதம் படத்தில் ‘என் மேல் விழுந்த’, பூவே உனக்காக படத்தில் ‘சொல்லாமலே யார் பார்த்தது’, கிரீடம் படத்தில் ‘கனவெல்லாம்’ உள்ளிட்ட பாடல்களை அவர் தமிழில் பாடி உள்ளார். சுமார் 60 ஆண்டுகள் இசை உலகை ஆட்சி செய்த அவர் தற்போது விடைபெற்றுள்ளார். மண்ணுலகை விட்டு அவர் விடைபெற்றாலும் அவரது குரல் என்றும் காற்றில் ஒலித்துக் கொண்டே இருக்கும். பி.ஜெயச்சந்திரனின் திரைப் பயணம்: (2020-ல் பி.ஜி.எஸ்.மணியன் எழுதிய கட்டுரையில் இருந்து...) எழுபதுகளின் தொடக்கத்தில் தமிழ்த் திரை இசையில் சத்தமே இல்லாமல் ஒரு மாறுதல் நிகழ ஆரம்பித்தது. அறுபதுகளின் இறுதிவரை கனமான குரல் வளம் கொண்ட பாடகர்களை முன்னிலைப்படுத்தி இயங்கி வந்த திரையிசை, எழுபதுகளில் புதிய தலைமுறை நடிகர்களான கமல், ரஜினி போன்றவர்களின் வருகையால் மென்மையான குரல்வளம் நிறைந்த பாடகர்களின் வசம் வந்தது. இளைய தலைமுறையின் துள்ளல், துடிப்பு, உற்சாகத்தைப் பிரதிபலிக்க ஒரு எஸ்.பி.பி. கிடைத்தார். அமைதியான நதியோட்டமாக மனத்தை வருட ஒரு ஜேசுதாஸ் கண்டெடுக்கப்பட்டார். இந்த இருவரின் ஆளுமை திரையிசையை வசப்படுத்திக்கொண்ட நேரத்தில், மலையாளத் தேசத்திலிருந்து மற்றுமொரு மயக்கும் குரலால் தமிழ் ரசிகர்களைக் கட்டிப்போட வந்தவர்தான் பளியத்து ஜெயச்சந்திரக்குட்டன் என்ற பி. ஜெயச்சந்திரன். 1944-ம் வருடம் மார்ச் மாதம் மூன்றாம் தேதி எர்ணாகுளத்தில் உள்ள ரவிபுரம் பகுதியில் பத்ராலயம் என்ற சிற்றூரில் ரவிவர்மா கொச்சனியன் தம்புரான் - பளியத்து சுபத்ரா குஞ்சம்மாள் தம்பதிக்கு இவர் மூன்றாம் மகனாகப் பிறந்தார். குடும்பம் இரிஞ்ஞாலக்குடாவுக்குக் குடிபெயர்ந்ததால் மாணவப் பருவம் இரிஞ்ஞாலக்குடாவிலேயே கழிந்தது. 1958-இல் மாநில இளைஞர் திருவிழாவில் பதினான்கு வயது ஜெயச்சந்திரன் சிறந்த இளம் மிருதங்கக் கலைஞராகச் சிறப்பிக்கப்பட்டார். அதே மேடையில் சிறந்த இளம் கர்நாடக இசைக் கலைஞர் விருது பெற்றவர் பதினெட்டு வயது வாலிபரான கே.ஜே.ஜேசுதாஸ். முதல் பாடல்: பள்ளி, கல்லூரி நிகழ்ச்சிகளில் பாடிய ஜெயச்சந்திரனுக்குக் கிடைத்த பாராட்டுகளும் பரிசுகளும் அவருடைய இசை ஆர்வத்தை அதிகரிக்கச் செய்தன. முதல் வாய்ப்பு இருபத்து மூன்றாம் வயதில் ‘உத்யோகஸ்தா’ என்ற மலையாளப் படத்தில் எம்.எஸ்.பாபுராஜ் இசையில் ‘அநுராக கானம் போலே’ என்ற பாடல். இவருடைய திறமையை மேலும் புடம்போட்டுத் தங்கமாக ஒளிரவைத்த பெருமை இசையமைப்பாளர் தேவராஜனையே சேரும். வசீகரக் குரலால் சேட்டன்களைக் கட்டிப்போட்ட ஜெயச்சந்திரனுக்கு மெல்லிசை மன்னர் இசை அமைத்த ‘பணி தீராத வீடு’ படத்தில் பாடிய ‘சுப்ரபாதம்’ பாடல், கேரள மாநில அரசின் சிறந்த பாடகருக்கான விருதைப் பெற்றுத் தந்தது. 1973-இல் சத்யா மூவிஸின் ‘மணிப்பயல்’ படத்தில் ‘தங்கச்சிமிழ் போல் இதழே’ பாடலின் மூலம் ஜெயச்சந்திரனின் குரலைத் தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகப்படுத்தினார் எம்.எஸ். விஸ்வநாதன். “அந்த இணையற்ற கலைஞர் என் கிட்டே இருந்த திறமையை அழகா வெளியே கொண்டு வந்தார். சொல்லப்போனால் எனக்கு முதல் முதலாகக் கிடைச்ச அவார்டே ‘பணி தீராத வீடு’ படத்துலே அவர் இசையில் பாடிய ‘சுப்ரபாதம்’ பாட்டுக்குத்தான்” என்று நெகிழ்ச்சியுடன் குறிப்பிடுவார் ஜெயச்சந்திரன். 1976-ல் வெளிவந்த பாலசந்தரின் ‘மூன்று முடிச்சு’ படத்தில் ஜெயச்சந்திரன் வாணி ஜெயராமுடன் பாடிய ‘ஆடி வெள்ளி தேடி வந்த’, ‘வசந்த கால நதிகளிலே’ ஆகிய பாடல்கள் பெரிய வெற்றியைப் பெற்றன. மாஞ்சோலைக் கிளிதானோ... - புதுமை இயக்குநர் ஸ்ரீதரின் ‘அலைகள்’ படத்தில் ஜெயச்சந்திரன் மெல்லிசை மன்னரின் இசையில் பாடிய கவியரசரின் ‘பொன்னென்ன பூவென்ன கண்ணே’ பாடலில் ஜெயச்சந்திரனின் குரலில் தென்படும் வசீகரம் மனத்தை வருடி சாந்தப்படுத்தும். 1975-ல் ‘பெண்படா’ என்ற மலையாளப்படம். ஏ.ஆர்.ரஹ்மானின் தந்தை ஆர்.கே. சேகர் இசையமைப்பாளர். இந்தப் படத்தில் ‘வெள்ளித் தேன்கிண்ணம் போல்’ என்ற பாடலை ஜெயச்சந்திரன் பாடினார். இளையராஜாவின் இசையில் முதல்முதலாக ‘காற்றினிலே வரும் கீதம்’ படத்தில் பாடிய ‘சித்திரச் செவ்வானம் சிரிக்கக் கண்டேன்’ பாடலும், ‘கிழக்கே போகும் ரயி’லின் ‘மாஞ்சோலைக் கிளிதானோ’ பாடலும் பெரு வெற்றிபெற்று முன்னணிப் பாடகர் வரிசையில் ஜெயச்சந்திரனைச் சேர்த்தன. ‘ஒருதலை ராகம்’ படத்தில் ‘கடவுள் வாழும் கோவிலிலே,’ ‘இரயில் பயணங்களில்’ படத்தில் ‘வசந்த காலங்கள்’ ஆகிய பாடல்கள் டி.ராஜேந்தரின் இசையில் ஜெயச்சந்திரன் தொடுத்த வெற்றிக்கோலங்கள். கே. பாக்யராஜின் சிறந்த திரைக்கதை அமைப்புக்கான படங்களில் முதலிடத்தில் இருக்கும் ‘அந்த ஏழு நாட்கள்’ படத்தில் ‘கவிதை அரங்கேறும் நேரம்’ பாடலை எஸ். ஜானகியுடன் இணைந்து வெகு அற்புதமாகப் பாடி அசத்தி இருப்பார் ஜெயச்சந்திரன். ‘ராஜ’ கீதங்கள் - ‘கடல் மீன்கள்’ படத்தில் ‘தாலாட்டுதே வானம்’ என்று எஸ். ஜானகியுடன் சேர்ந்து இசையலைகளை மனத்தில் பாயவைத்தார் ஜெயச்சந்திரன். பாடல்களுக்காவே பெரிய வெற்றிபெற்ற ‘வைதேகி காத்திருந்தாள்’ படத்தில் கதாநாயகன் பாடுவதாக அமைந்த மூன்று பாடல்களையுமே ஜெயச்சந்திரனைத்தான் பாடவைத்தார் இளையராஜா. ‘ராசாத்தி உன்னைக் காணாத நெஞ்சு’ , ‘இன்றைக்கு ஏனிந்த ஆனந்தமே’, ‘காத்திருந்து காத்திருந்து’ மூன்றுமே வெற்றிக்கனியை ஜெயச்சந்திரனின் மடியில் போட்ட முத்தான பாடல்கள். ‘அம்மன் கோவில் கிழக்காலே’ படத்தில் ‘பூவை எடுத்து’, ‘கொடியிலே மல்லியப்பூ’ (கடலோரக் கவிதைகள்) ஆகியவை ஜெயச்சந்திரனின் குரல் தனித்தன்மையோடு வெளிப்பட்ட பாடல்கள். ரஜினிகாந்த்தின் மிகச் சிறந்த படங்களில் ஒன்றான ‘ஆறிலிருந்து அறுபதுவரை’ படத்தில் ‘வாழ்க்கையே வேஷம்’ பாடலில் சொந்தபந்தங்களால் ஒதுக்கப்பட்ட ஒரு மனிதனின் மனநிலையைத் தனது குரலால் அற்புதமாக வெளிப்படுத்தி இருப்பார் ஜெயச்சந்திரன். இதே போல் ‘ரிஷி மூலம்’ படத்தில் குற்ற உணர்வு நீங்கி பாரம் அகன்ற மனிதனின் உணர்வை ‘நெஞ்சில் உள்ள காயம் ஒன்று’ பாடலில் வெளிப்படுத்தி இருப்பார் ஜெயச்சந்திரன். எம்.ஜி.ஆரின் கடைசிப் படமான ‘மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன்’ படத்தில் மெல்லிசை மன்னரின் இசையில் வாணிஜெயராமுடன் பாடிய ‘அமுதத் தமிழில் எழுதும் கவிதை’ என்ற துவிஜாவந்தி ராகப் பாடல் இனிய தேனமுது. என்றாலும் இளையாராஜாவின் இசையில் இவர் பாடிய அனைத்தும் ‘ராஜ’கீதங்கள் எனலாம். துல்லியமான உச்சரிப்பு, பொருளுணர்ந்து பாவநயத்தோடு குரலால் மெருகூட்டுவது ஆகியவற்றில் தனித்தன்மையோடு பிரகாசித்தார் ஜெயச்சந்திரன். பி. சுசீலாவுடன் பாடிய ‘மயங்கினேன் சொல்லத் தயங்கினேன்’ (‘நானே ராஜா நானே மந்திரி’) பாடலுக்கு மயங்காதவர் யாருமே இல்லை. மனோஜ் கியான் இசையில் ‘இணைந்த கைகள்’ படத்தில் ‘அந்திநேரத் தென்றல் காற்’றை எஸ்.பி.பி.யுடன் சேர்ந்து வரவழைத்தார். விக்ரமனின் ‘பூவே உனக்காக’ படத்தில் எஸ்.ஏ. ராஜ்குமாரின் இசையில் சுஜாதாவுடன் பாடிய ‘சொல்லாமலே யார் பார்த்தது’ பாடலில் ஜெய் சேட்டனின் குரல் வசீகரம் சொல்லாமலே புரியும். ‘ஸ்ரீமன் நாராயண குரு’ மலையாளப் படத்தில் ‘சிவசங்கர சர்வ சரண்ய விபோ’ பாடலுக்காக 1975-ம் ஆண்டு சிறந்த பாடகருக்கான தேசிய விருது பெற்றார் ஜெயச்சந்திரன். ஜேசுதாஸ் சம்பந்தப்பட்ட மறக்க முடியாத நிகழ்வும் இவர் வாழ்வில் உண்டு. தனது பதினான்காவது வயதில் முதல்முதலாக எந்த ஜேசுதாஸ் சிறந்த இசைக் கலைஞராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட மேடையில் சிறந்த மிருதங்க இசைக் கலைஞராக ஜெயச்சந்திரன் கௌரவிக்கப்பட்டாரோ அதே ஜேசுதாஸின் பெயரால் ஆண்டுதோறும் இசைத்துறையில் சாதனை புரிந்த கலைஞர்களுக்கு வழங்கப்படும் ‘ஸ்வரலயா கைரளி யேசுதாஸ் விரு’தை முதல்முதலாக - இரண்டாயிரமாண்டில் - ஜேசுதாஸின் கையாலேயே பெற்றுக்கொண்டார் ஜெயச்சந்திரன். மகத்தான திரையிசை பாடகர் பி.ஜெயச்சந்திரன் காலமானார்! | legendary singer p jayachandran passed away - hindutamil.in
  25. முன்னாள் எம்.பி.யும் கொலைக் குற்றவாளியுமான துமிந்த சில்வாவின் குடும்பத்துடன் தொடர்புடைய ஒரு தொலைக்காட்சி ஊடகங்கள் அவருக்கு சார்பாக செய்திகளை வெளியிட்டாலும் அவருக்கு ஜனாதிபதி பொதுமன்னிப்பு வழங்கப்பட மாட்டாது என பிரதி நீதியமைச்சர் மஹிந்த ஜயசிங்க திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். பாராளுமன்றத்தில் பேசிய ஜெயசிங்க, “டிவி சேனல்களுக்கு நாங்கள் பயப்படவில்லை, தம்பியை விடுவிக்க மாட்டோம்” என்றார். குறித்த தொலைக்காட்சி சனலை நேரடியாகப் பெயரிட்டுக் கூறாத அதே வேளையில், அதன் சமீபத்திய அரசாங்க எதிர்ப்பு நிகழ்ச்சிகளை குறிப்பிட்ட ஜெயசிங்க, இது நிர்வாகத்தின் மீது அழுத்தத்தை பிரயோகிக்க வேண்டுமென்றே மேற்கொள்ளப்பட்ட முயற்சி என்று குறிப்பிட்டார். சட்டத்தின் ஆட்சியை நிலைநிறுத்துவதற்கு அரசாங்கம் தொடர்ந்தும் அர்ப்பணிப்புடன் இருப்பதாகவும், துமிந்த சில்வாவுக்கு தொடர்ந்தும் மருத்துவ சிகிச்சை வேண்டுமா என்பதை அறிய மருத்துவ மதிப்பீடுகள் நடைபெற்று வருவதாகவும் அவர் வலியுறுத்தினார். 2011 ஆம் ஆண்டு பாரத லக்ஷ்மன் பிரேமச்சந்திர கொலை வழக்கில் தண்டனை பெற்ற துமிந்த சில்வாவுக்கு, 2021 ஆம் ஆண்டு அப்போதைய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் வழங்கப்பட்ட சர்ச்சைக்குரிய ஜனாதிபதி மன்னிப்பு உயர் நீதிமன்றத்தால் ரத்து செய்யப்பட்டதையடுத்து அவர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். Tamilmirror Online || ”என்ன செய்தாலும் தம்பியை விடுவிக்க மாட்டோம்”

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.