Everything posted by பிழம்பு
-
முன்னாள் ஜனாதிபதிகள், பிரதி அமைச்சர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள பங்களாக்கள், ஜனாதிபதி மாளிகைகளை பொருளாதார ரீதியாகப் பயன்படுத்த அமைச்சரவை அங்கீகாரம்
முன்னாள் ஜனாதிபதிகள், பிரதி அமைச்சர்கள் மற்றும் பல்வேறு அரச நிறுவனங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள பங்களாக்கள், விசும்பாய மற்றும் பல்வேறு பிரதேசங்களில் உள்ள ஜனாதிபதி மாளிகைகள் என்பவற்றை பொருளாதார ரீதியாகப் பயனுள்ளதாகப் பயன்படுத்துவதற்கு பொருத்தமான வழிமுறையை முன்மொழிவதற்கு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க மற்றும் பொதுநிர்வாக மாகாண சபைகள் உள்ளுராட்சி அமைச்சர் ஆகியோர் முன்வைத்த ஒருங்கிணைந்த அமைச்சரவைப் பத்திரத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. அதன்படி அரச நிர்வாக,மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்றங்கள் அமைச்சின் கீழ் கொழும்பு 07 மற்றும் 05 பகுதிகளில் காணப்படும் 50 அரச பங்களாக்கல் மற்றும் ஜனாதிபதி அலுவலகத்தினால் நிர்வாகிக்கப்படும் கொழும்பு,கண்டி, நுவரெலியா, மஹியங்கனை, அநுராதபுரம்,கதிர்காமம்,யாழ்ப்பாணம்,எம்பிலிபிட்டிய, மற்றும் பெந்தோட்ட ஆகிய பகுதிகளில் ஜனாதிபதி மாளிகைகளும் அமைந்துள்ளன. அவற்றில் அடிக்கடி பயன்படுத்தப்படும் கண்டி, கொழும்பு ஜனாதிபதி மாளிகைகள் தவிர்ந்த ஏனைய மாளிகைகளும், தற்போது நகர அபிவிருத்தி அதிகார சபையின் கீழ் காணப்படும் பல நாட்டின் தலைவர்கள் பலரும் உத்தியோகபூர்வ இல்லமாக பயன்படுத்திய கொழும்பு 02 இல் உள்ள விசும்பாய, பிரதமர் அலுவலகத்தின் கீழ் காணப்படும் நுவரெலியாவிலுள்ள பிரதமருக்கான உத்தியோகபூர்வ இல்லம் மற்றும் மேற்குறிப்பிடப்பட்ட அரச பங்களாக்கல் என்பன இவ்வாறு பொருளாதார ரீதியில் பயனுள்ளவையாக மாற்றப்படவுள்ளன. இந்த அரசு சொத்துக்களைப் பராமரிப்பதற்காக பெருமளவு நிதி செலவழிக்கப்பட்டுள்ள போதும் அவற்றினால் குறைவான பலனே ஈட்டப்படுகின்றன. முன்னாள் ஜனாதிபதிகள், பிரதி அமைச்சர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள பங்களாக்கள், ஜனாதிபதி மாளிகைகளை பொருளாதார ரீதியாகப் பயன்படுத்த அமைச்சரவை அங்கீகாரம் | Virakesari.lk
-
இலங்கையில் புத்தகத்துறைக்கு விதிக்கப்படும் 18 சதவீத பெறுமதி சேர் வரியை நீக்குமாறு வலியுறுத்தல் !
(எம்.எம்.சில்வெஸ்டர்) இலங்கையில் புத்தகத்துறைக்கு விதிக்கப்படும் 18 சதவீத பெறுமதி சேர் வரியை (வற் வரி) உடனடியாக நீக்குமாறும், அடுத்தாண்டு தயாரிக்கப்படவுள்ள வரவு செலவு திட்டத்தின்போது இது குறித்து அரசாங்கம் தனது அவதானத்தை செலுத்த வேண்டும் என இலங்கை நூல் வெளியீட்டாளர்கள் சங்கம், இலங்கை நூல் இறக்குமதி மற்றும் ஏற்றுமதி சங்கம், அகில இலங்கை நூல் விற்பனையாளர்கள் சங்கம், இலங்கை எழுத்தாளர்கள் சங்கம் ஆகிய நான்கு சங்கங்களும் அரசாங்கத்தை கூட்டாக வலியுறுத்துகிறது. இவ்விடயம் குறித்து தாம் தற்போது புதிதாக ஆட்சியமைத்துள்ள அரசாங்கத்திற்கு பிரேரணையொன்றை முன்மொழிந்துள்ளதாகவும் குறிப்பிட்ட இந்த சங்கங்கள், சார்க் வலய நாடுகளில் இலங்கையில் மாத்திரமே புத்தகத் துறைக்கு 18 வற் வரி அறவிடப்படுவதாகவும், ஏனைய சார்க் நாடுகளில் பூச்சய வீத வற் வரியே அறவிடப்படுவதாகவும் சுட்டிக்காட்டியிருந்தது. மேலும்,அறிவு மற்றும் கற்றல் தொடர்பான மூலதாரங்களுக்கு வரி விதிதப்பதால் ஏற்படுகின்ற நிதியியல் மற்றும் சமூக மாற்றங்கள் தொடர்பில் அரசாங்கம் கருத்திற்கொள்வது அவசியம் என்பதை வலியுறுத்தப்பட்டிருந்தது. இவ்விடயம் தொடர்பில் கொழும்பிலுள்ள ஸ்ரீ சம்புத்வ ஜயந்தி மையத்தின் கேட்போர் கூடத்தில் நடைபெற்ற ஊடகச் சந்திப்பின்போதே மேற்கண்டவாறு குறிப்பிடப்பட்டது. இதன்போது கருத்து தெரிவித்த இலங்கை நூல் வெளியீட்டாளர்கள் சங்கத்தின் தலைவர் சமன்த இந்தீவர, "பாராளுமன்றத்தின் எதிர்க்கட்சி ஆசனங்களில் அமர்ந்திருந்த போது புத்தகத் துறைக்கு 18 வீத வற் வரி விதிக்கப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவத்தவர்கள், தற்போது ஆட்சி அதிகாரத்தில் உள்ளனர். அன்று இவ்விடயத்தை எதிர்த்தவர்கள், புத்தகத்துறைக்கு விதிக்கப்படும் VAT வரியை நீக்கிக்கொள்வதற்கு நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். புத்தகங்கள் மீது வற் வரி விதிக்கப்படுவதால் நேரடியாகவும், மறைமுகமாகவும் பாதிக்கப்படுகின்ற விடயங்கள் தொடர்பில் அரசாங்கத்தின் கவனத்திற்கு கொண்டு சென்றுள்ளோம். இதற்காக அடுத்து வரும் வரவு செலவு திட்டத்தின்போது எமது பிரச்சினைகள் தீர்க்கப்படும் என நம்பிக்கையுடன் காத்திருக்கிறோம் " என்றார். இதன்போது கருத்து தெரிவித்த இலங்கை புத்தக வெளியீட்டாளர்கள் சங்கத்தின் செயலாளர் தினேஷ் குலதுங்க கூறுகையில், "பெரும்பாலான பதிப்பக நிறுவனங்கள் வற் வரியை செலுத்தவதற்கான தகுதியை கொண்டதானவை அல்ல. ஏனெனில், அவர்கள் பாரிய ரீதியில் வர்த்தகத்தில் ஈடுபடுவதில்லை. இதனால், 18 வீத வற் அறவீட்டை கழித்துக்கொள்ளவும் முடியாத துர்பாக்கிய நிலையும் ஏற்படுகின்றது. உள்நாட்டு தொழிலாளர்களைத் தவிர, பதிப்பகத் துறைக்கான அனைத்து உள்ளீடுகளும் இறக்குமதி செய்யப்படுவதால், இலங்கையின் புத்தகத் துறைக்கு ஏற்கனவே 33.04 சதவீத வரி அறவிடப்பட்டு வருகிறது. இந்நிலையில், இதற்கு மேலதிகமாக, 18 சதவீதவற் வரி அறவிடப்பட்டு வருகிறது. இதன் காரணமாக, புத்தகங்களின் விலையும் அதிகரிக்கப்பட வேண்டிய சூழ்நிலைக்குத் தள்ளப்படுவதுடன், புத்தகத்தை கொள்வனவும் செய்யும் நுகர்வின் அளவும் 30 சதவீதத்தால் குறைந்துள்ளது. இதுபோன்ற காரணிகள், இலங்கையின் புத்தகத்துறை பெரும் வீழ்ச்சியை சந்தித்து வருகிறது. அத்துடன், சிறியளவான வர்த்தகர்கள் இத்துறையை விட்டு செல்கின்றனர். இதனால் உள்நாட்டு தொழிலாளர்களும் தமது தொழிற்துறைகளை இழந்துள்ளதுடன், எதிர்காலத்திலும் இழக்க நேரிடும். நாட்டில் புத்தி கூர்மையான மக்களை உருவாக்குவதில் புத்தகத்துறை பெரும் பங்கு வகிக்கிறது என்பதை தற்போது ஆட்சி பீடம் ஏறியுள்ள அரசாங்கம் நம்புகிறது. இலங்கையில் புத்தகத்துறைக்கு விதிக்கப்படும் 18 சதவீத பெறுமதி வற் வரியை உடனடியாக நீக்குமாறும், அடுத்தாண்டு தயாரிக்கப்படவுள்ள வரவு செலவு திட்டத்தின்போது இது குறித்து அரசாங்கம் தனது அவதானத்தை செலுத்த வேண்டும் என லியுறுத்தி நிற்கிறோம் " என்றார். இலங்கையில் புத்தகத்துறைக்கு விதிக்கப்படும் 18 சதவீத பெறுமதி சேர் வரியை நீக்குமாறு வலியுறுத்தல் ! | Virakesari.lk
-
அமெரிக்க பிரதிநிதிகள் - ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க இடையே சந்திப்பு
தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்கள், ஐக்கிய அமெரிக்காவின் சர்வதேச முகவர் அமைப்பு (USAID) மற்றும் அமெரிக்காவின் திறைசேரி துறை ஆகியவற்றின் அமெரிக்க பிரதிநிதிகள் இன்று சனிக்கிழமை (07) ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவை சந்தித்ததாக இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சங் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். இந்த சந்திப்பின்போது அமெரிக்க பிரதிநிதிகள் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் புதிய நிர்வாகம் குறித்து வாழ்த்து தெரிவித்ததாக அப்பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், இச்சந்திப்பில் இலங்கையின் நிர்வாகம், விவசாயம், பொருளாதார வளர்ச்சி மற்றும் கடல்சார் பாதுகாப்பு ஆகியவற்றில் ஒத்துழைப்பை வலுப்படுத்துவது குறித்து விவாதிக்கப்பட்டது. அத்துடன், ஜனாதிபதி அநுர குமாரவுடனான சந்திப்பில் இலங்கையின் சீர்திருத்த நிகழ்ச்சி நிரலுக்கான அமெரிக்க ஆதரவை அமெரிக்க பிரதிநிதிகள் மீண்டும் உறுதிப்படுத்தினர் என்றும் இதன் மூலம் சிவில் சமூகம் மற்றும் தனியார் துறையை ஈடுபடுத்துவதன் முக்கியத்துவத்தை எடுத்துக்காட்டியதாகவும் ஜூலி சங் எக்ஸ் பதிவில் குறிப்பிட்டுள்ளார். அமெரிக்க பிரதிநிதிகள் - ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க இடையே சந்திப்பு | Virakesari.lk
-
இனவாதத்தை மீண்டும் அனுமதிக்கப் போவதில்லை ; ஜனாதிபதி
இனவாதத்தை மீண்டும் ஒருபோதும் அனுமதிக்கப் போவதில்லை என்றும், ஊடக சுதந்திரத்தை எந்த வகையிலும் தடுக்கவோ, மட்டுப்படுத்தவோ தாம் தயாரில்லை என ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க இன்று (05) தெரிவித்தார். இலத்திரனியல் ஊடக நிறுவனங்களின் பிரதானிகளுடன் ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்ற சந்திப்பின் போதே ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டார். சிறந்த அரசியல் கலாசாரத்தை மக்கள் எதிர்பார்ப்பதாகவும், அதற்காகவே தற்போதைய அரசாங்கத்தை மக்கள் தெரிவு செய்துள்ளதாகவும், மக்கள் எதிர்பார்க்கும் புதிய அரசியல், சமூக மற்றும் பொருளாதார மாற்றத்தை ஏற்படுத்துவதற்கு இணையுமாறு அனைத்து ஊடக நிறுவனங்களுக்கும் அழைப்பு விடுத்ததாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டார். அரசியல் மற்றும் பொருளாதார விடயங்கள் தொடர்பில் எந்த நேரத்திலும் அரசாங்கத்தை கேள்விக்குட்படுத்தவோ விமர்சிக்கவோ ஊடகங்களுக்கு எந்த தடையும் இல்லையென்றாலும் தேசிய ஒருமைப்பாட்டிற்கு பாதகமான பொய்யான தகவல்களை வெளியிட வேண்டாம் என ஊடக நிறுவன பிரதானிகளிடம் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க கோரிக்கை விடுத்தார். பல தசாப்த காலங்கள் நாடு யுத்தத்திற்கு முகம் கொடுத்ததை நினைவு கூர்ந்த ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, இனவாதத்தை மீண்டும் ஒருபோதும் அனுமதிக்கப் போவதில்லை என்றும், ஊடக சுதந்திரத்தை எந்த வகையிலும் தடுக்கவோ, மட்டுப்படுத்தவோ தாம் தயாரில்லை எனவும் தெரிவித்தார். நாட்டில் தற்போது பரவலாகப் பேசப்படும் பல தலைப்புகள் தொடர்பில் அரசாங்கத்தின் நிலைப்பாட்டை விளக்கிய ஜனாதிபதி, தற்போது பாரிய பிரச்சினையாக உள்ள வறுமையை ஒழிப்பதற்கான அரசாங்கத்தின் வேலைத்திட்டம் மற்றும் கிளீன் ஶ்ரீலங்கா வேலைத்திட்டம் குறித்தும் ஊடகப் பிரதானிகளுக்கு விளக்கமளித்தார். இலங்கை ஒலிபரப்பாளர் மன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் உறுப்பினர்கள் மற்றும் இலத்திரனியல் ஊடக நிறுவனங்களின் பிரதானிகள், பணிப்பாளர்கள், பிரதம நிறைவேற்று அதிகாரிகள், பொது முகாமையாளர்கள் உட்பட உயர்மட்ட அதிகாரிகள் இந்த சந்திப்பில் கலந்துகொண்டனர். R Tamilmirror Online || இனவாதத்தை மீண்டும் அனுமதிக்கப் போவதில்லை ; ஜனாதிபதி
-
சுழிபுரம் சந்திக்கு அருகாமையில் மோட்டார் சைக்கிள் விபத்தில் 18 வயது மாணவன் சாவு!
மோட்டார் சைக்கிள் விபத்தில் 18 வயது மாணவன் சாவு! வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சுழிபுரம் சந்திக்கு அருகாமையில் இன்று காலை இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் 18 வயதுடைய மாணவன் ஒருவர் உயிரிழந்துள்ளார். மூளாயைச் சேர்ந்த சிறிபானுசன் என்ற மாணவனே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், இரண்டு மாணவர்கள் இன்று காலை வகுப்பிற்காக மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த போது மறந்துபோய் வீட்டில் விட்டுச் சென்ற பணத்தினை எடுப்பதற்காக திரும்பி வந்துகொண்டிருந்தவேளை அவர்களது மோட்டார் சைக்கிள் மதலுடன் விபத்து இடம்பெற்றுள்ளது. இதன்போது படுகாயமடைந்த இரண்டு மாணவர்களும் யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டவேளை ஒரு மாணவன் உயிரிழந்துள்ளதுடன் மற்றைய மாணவன் படுகாயமடைந்த நிலையில் யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். (ப) மோட்டார் சைக்கிள் விபத்தில் 18 வயது மாணவன் சாவு!
-
புகையிலைக் கொள்வனவால் 5 கோடிக்கு மேல் ஊர்காவற்றுதுறையில் மோசடி- பிரதான சந்தேகநபர் கைது!
ஊர்காவற்றுறையைச் சேர்ந்த புகையிலையைச் செய்கையாளர்களிடம் புகையிலையைக் கடன் அடிப்படையில் கொள்வனவு செய்து, 5 கோடி ரூபாவுக்கும் மேல் நிலுவை வைத்துவிட்டுத் தலைமறைவான பிரதான சந்தேகநபர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். யாழ்ப்பாணம் மாவட்ட விசேட குற்றவிசாரணைப் பிரிவுப் பொறுப்பதிகாரி குணரோஜன் தலைமையிலான குழுவினரிடம் வழங்கப்பட்ட முறைப்பாட்டுக்கு அமைய மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கையின் போதே அந்நபர் தலைமறைவாக இருந்த போது வவுனியாவில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். அவருக்கு எதிராக 14 முறைப்பாடுகள் தனித்தனியாகப் பதிவுசெய்யப்பட்டுள்ளன எனவும் அவர் ஊர்காவற்றுறை நீதிமன்றத்தில் நேற்று முற்படுத்தப்பட்டார் எனவும் தெரிவிக்கப்படுகின்றது. இதற்கமைய வழக்கை விசாரித்த நீதிமன்றம் சந்தேகநபரை 14 நாள்கள் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டுள்ளது. (ப) புகையிலைக் கொள்வனவால் 5 கோடிக்கு மேல் மோசடி- பிரதான சந்தேகநபர் கைது!
-
தென்மராட்சி விவசாயிகள் வயலில் இறங்கி போராட்டம்!
தென்மராட்சி விவசாயிகள் வயலில் இறங்கி போராட்டம்! தொண்டமனாறு தடுப்பணையைத் திறந்து விட்டு தமது நெற் பயிர்களை அழிவில் இருந்து காப்பாற்றக் கோரி தென்மராட்சிப் பிரதேச செயலர் பிரிவுக்குட்பட்ட வரணி நாவற்காடு கிராம விவசாயிகள் இன்று காலை வயலில் இறங்கிப் போராட்டம் செய்துள்ளனர். தொண்டமனாறு தடுப்பணையை மூடி வைத்திருப்பதால் தென்மராட்சி வரணிப் பிரதேச வயல்களில் தேங்கி நிற்கும் மேலதிக நீர் வடிந்து செல்ல முடியாமல் வயல் நிலங்களில் தேங்கி பயிரை அழிவடையச் செய்வதால் விரக்தியடைந்த விவசாயிகள் மேற்படி போராட்டத்தை முன்னெடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது. (ப) தென்மராட்சி விவசாயிகள் வயலில் இறங்கி போராட்டம்!
-
சிக்கினார் ஆவாகுழு பிரசன்னா
This alleged Sri Lankan gangster lay low in Canada for a year after claiming refugee status. Now he faces extradition The extradition of Prasanna Nallalingam is being sought in connection with the alleged gang killing of Abiraman Balakirishnan and attempted murder of Prashant Kulesekaram in September 2022 in France. Updated Nov. 27, 2024 at 5:47 p.m. Nov. 27, 2024 2 min read Save Prasanna Nallalingam, also known as Ajanthan Subramaniyam, in a photo included in a French warrant for his arrest. (Court filings) By Abby O’BrienStaff Reporter A man believed to be the head of a Sri Lankan motorcycle gang is facing extradition to France to face murder charges after being arrested in Toronto this spring, the Star has learned. The extradition of Prasanna Nallalingam is being sought in connection with the alleged gang killing of Abiraman Balakirishnan and attempted murder of Prashant Kulesekaram in September 2022 in France, Canada’s Department of Justice confirmed Wednesday. According to an affidavit obtained by the Star, Nallalingam, 32, who also goes by the name Ajanthan Subramaniyam, is believed to be the leader of a group known as AAVA, an outlaw motorcycle club active in the northern province of Sri Lanka. The filings state the attack targeted a group known to be rivals of AAVA, the LC Boys. According to French media reports, the two groups were engaged in a multi-year conflict over control of La Courneuve, a commune located in the northern suburbs of Paris. Alleged Sri Lankan gangster faces extradition to France
-
இலங்கையின் பொருளாதார மறுசீரமைப்பு அமெரிக்கா எத்தகைய உதவிகளை வழங்கலாம்? - இருநாட்டு உயர்மட்டப்பிரதிநிதிகளுக்கு இடையிலான சந்திப்பில் ஆராய்வு
(நா.தனுஜா) நாட்டின் பொருளாதார மறுசீரமைப்பு மற்றும் வளர்ச்சி இலக்குகளை அடைந்துகொள்வதற்கு அமெரிக்காவினால் எத்தகைய உதவிகளை வழங்கமுடியும் என்பது குறித்து இருநாடுகளுக்கும் இடையிலான உயர்மட்ட பிரதிநிதிகளின் சந்திப்பில் ஆராயப்பட்டுள்ளது. தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்குப் பொறுப்பான அமெரிக்க இராஜாங்க உதவிச்செயலர் டொனால்ட் லூ தலைமையில் சர்வதேச அபிவிருத்திக்கான அமெரிக்க முகவரகத்தின் பிரதி உதவிப்பணிப்பாளர் அஞ்சலி கௌர் மற்றும் திறைசேரியின் பிரதி உதவிச்செயலர் ரொபர்ட் கப்ரொத் ஆகியோர் அடங்கிய அமெரிக்க உயர்மட்டப்பிரதிநிதிகள் குழுவினர் வியாழக்கிழமை (5) காலை கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச விமானநிலையத்தின் ஊடாக நாட்டை வந்தடைந்தனர். அதன்படி அமெரிக்க திறைசேரியின் பிரதி உதவிச்செயலர் ரொபர்ட் கப்ரொத் மற்றும் திறைசேரியின் செயலாளர் மஹிந்த சிறிவர்தன ஆகியோருக்கு இடையிலான சந்திப்பு நேற்றைய தினம் நிதியமைச்சில் நடைபெற்றது. இச்சந்திப்பில் இலங்கைக்கான அமெரிக்கத்தூதுவர் ஜுலி சங்கும் கலந்துகொண்டிருந்தார். இதன்போது இலங்கையின் பொருளாதார மறுசீரமைப்பு மற்றும் வளர்ச்சி இலக்குகளை அடைந்துகொள்வதற்கு அமெரிக்காவினால் எத்தகைய உதவிகளை வழங்கமுடியும் என்பது குறித்தும், நிதியியல் மீளெழுச்சித்தன்மையை வலுப்படுத்தக்கூடியவாறான இருநாடுகளுக்கும் இடையிலான கூட்டிணைந்த வாய்ப்புக்கள் குறித்தும் கலந்துரையாடப்பட்டது. இலங்கையின் பொருளாதார மறுசீரமைப்பு அமெரிக்கா எத்தகைய உதவிகளை வழங்கலாம்? - இருநாட்டு உயர்மட்டப்பிரதிநிதிகளுக்கு இடையிலான சந்திப்பில் ஆராய்வு | Virakesari.lk
-
”வரி செலுத்த மக்கள் வரிசையில் நிற்கின்றனர்”
உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தின் ஒன்லைன் செயலியில் அதிகளவானோர் உள்நுழைய முயன்றதால் நெரிசல் ஏற்பட்டதையடுத்து, செப்டம்பர் 31ஆம் திகதி மக்கள், தொழிலதிபர்கள் மற்றும் தொழில்முனைவோர் என திணைக்களத்தின் முன்பாக வரி செலுத்துவதற்காக நீண்ட வரிசையில் நின்றதாக அமைச்சர் சுனில் ஹந்துன்நெத்தி இன்று தெரிவித்தார். அரசாங்கத்தின் திட்டத்திற்கு வரி செலுத்துவோர் விருப்பத்துடன் வரி செலுத்த முன்வந்துள்ளதாகவும் அது மிகப்பெரும் பலம் எனவும் அவர் பாராளுமன்றத்தில் தெரிவித்தார். செப்டம்பர் 15 முதல் 30 வரையான காலப்பகுதிக்குள் குறித்த செயலியின் நெரிசல் காரணமாக வரி செலுத்த வங்கிகளில் பிரத்யேக கருமபீடங்களைத் திறக்க நடவடிக்கை எடுக்குமாறு தொழில் அதிபர் சிலர் தன்னிடம் கோரிக்கை விடுத்ததாக அமைச்சர் கூறினார். தொழிலதிபர்கள் வரி செலுத்தத் தயங்கவில்லை, ஆனால் அவர்களின் வரிப்பணத்திற்கு என்ன நடக்கும் என்பதில் அவர்களுக்கு நம்பிக்கை இல்லை என்பதே பிரச்சினை என்று அமைச்சர் கூறினார். Tamilmirror Online || ”வரி செலுத்த மக்கள் வரிசையில் நிற்கின்றனர்”
-
பார் அனுமதி பெற்றவர்கள் யார்?; இன்று மாலை தெரிந்துவிடும்
அரசியல் இலஞ்சமாக வழங்கப்பட்ட மதுபானசாலை அனுமதிப்பத்திரங்கள் இரத்துச் செய்யப்படுமா ? - சாணக்கியன் கேள்வி 05 Dec, 2024 | 06:18 PM (எம்.ஆர்.எம். வசீம், இராஜதுரை ஹஷான்) கடந்த அரசாங்கத்தில் அரசியல் இலஞ்சமாக வழங்கப்பட்ட 361 மதுபானசாலை அனுமதிகளின் உரிமையாளர்கள், சிபார்சு செய்தவர்கள் தொடர்பில் விசாரணைகள் நடத்தப்படுமா, வழங்கப்பட்ட அனுமதி பத்திரங்கள் இரத்துச் செய்யப்படுமா என இலங்கைத் தமிழரசுக்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியன் அரசாங்கத்திடம் கேள்வியெழுப்பினார். பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை (05) நடைபெற்ற அமர்வின் போது ஒழுங்குப்பிரச்சினை முன்வைத்து மேற்கண்டவாறு கேள்வியெழுப்பினார். அவர் மேலும் உரையாற்றியதாவது, கடந்த அரசாங்கத்தால் அரசியல் இலஞ்சமாக மதுபானசாலைகளுக்கான அனுமதிகளை பெற்றவர்களின் விபரங்களை அரசாங்கம் சபையில் சமர்ப்பித்தமை பாராட்டுக்குரியது. அதேவேளை இந்த மதுபானசாலைகளின் உரிமையாளர்கள், இவற்றுக்கான அனுமதிகளுக்கு சிபார்சு செய்தவர்கள் தொடர்பில் அரசு விசாரணை நடத்துமா? அத்துடன் அரசியல் இலஞ்சமாக வழங்கப்பட்ட இந்த மதுபான சாலைகளுக்கான அனுமதிகளை அரசாங்கம் இரத்துச் செய்யுமா , இந்த 361 மதுபானசாலைகளுக்கான அனுமதிகள் தொடர்பில் அரசாங்கம் ஏனெனில் பொதுமக்கள் எம்மிடம் இவ்விடயம் குறித்து வினவுகிறார்கள் ஆகவே அரசாங்கம் அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்து விளக்கமளிக்க வேண்டும் என சபைமுதல்வரும் அமைச்சருமான பிமல் ரத்னாயக்கவிடம் கோரினார். எனினும் அரச தரப்பில் இருந்து எவரும் பதிலளிக்கவில்லை. அரசியல் இலஞ்சமாக வழங்கப்பட்ட மதுபானசாலை அனுமதிப்பத்திரங்கள் இரத்துச் செய்யப்படுமா ? - சாணக்கியன் கேள்வி | Virakesari.lk
-
கல்முனை பிரதேச செயலகம் தொடர்பான பிரச்சினையை கலந்துரையாடல் மூலம் தீர்த்துக்கொள்வோம் - ரவூப் ஹக்கீம்
(எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்) கல்முனை பிரதேச செயலகம் தொடர்பில் அந்த பிரதேசத்தில் வாழும் முஸ்லிம் மக்களுக்கும் பிரச்சினை இருக்கிறது. அதனால் இது தொடர்பில் நாங்கள் கலந்துரையாடி இந்த பிரச்சினையை எவ்வாறு தீர்த்துக்கொள்வது என்பது தொடர்பில் தீர்மானிக்க முடியும் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் தெரிவித்தார். பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை (05) அரசாங்கத்தினால் சமர்ப்பிக்கப்பட்ட இடைக்கால வாக்குப்பதி கணக்கறிக்கை மீதான விவாதத்தில் கலந்துக்கொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார். அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில், தமிழ் அரசுக் கட்சி உறுப்பினர்கள் சிலர் ஜனாதிபதியை சந்தித்து கலந்துரையாடி இருக்கின்றனர். கலந்துரையாடலுக்கு பின்னரும் பாராளுமன்றத்திலும் அது தொடர்பான விடயங்கள் தெரிவிக்கப்பட்டன. குறிப்பாக கல்முனை பிரதேச செயலக தொகுதி தொடர்பான பிரச்சினை தீர்ப்பதற்கு ஜனாதிபதி தலையிடுவதாக வாக்குறுதி வழங்கியதாக இந்த சபையில் தெரிவிக்கப்பட்டது. என்றாலும் கல்முனை பிரதேச செயலகம் தொடர்பில் அந்த பிரதேசத்தில் வாழும் முஸ்லிம் மக்களுக்கும் பிரச்சினை இருக்கிறது. அதனால் இது தொடர்பில் நாங்கள் கலந்துரையாடுவோம். கலந்துரையாடல் ஊடாக இந்த பிரச்சினையை எவ்வாறு தீர்த்துக்கொள்வது என்பது தொடர்பில் தீர்மானிக்க முடியும். இந்த விடயம் தொடர்பில் சாணக்கியன் எம்.பி. மற்றும் சத்தியலிங்கம் எம்.பியுடன் கலந்துரையாடி இருக்கிறேன். எமது பிரச்சினை தொடர்பாகவும் அவர்களுடன் கலந்துரையாடி இருக்கிறேன். அதனால் இவ்வாறான பிரச்சினைகள் முரண்பாடுகள் தொடர்பில் கலந்துரையாடல் மூலம் தீர்த்துக்கொள்வோம் என தெரிவித்துக்கொள்கிறேன். அத்துடன் இந்த விடயம் தொடர்பில் தற்போது வழக்கொன்றும் தாக்கல் செய்யப்பட்டிரு்ககிறது. அதற்கு மேலதிகமாக எல்லை நிர்ணயம் தொடர்பாக பல குழுக்களும் இருக்கின்றன. இந்த விடயங்கள் தொடர்பான அனைத்தையும் கருத்திற்கொண்டு ஒரு தீர்மானத்துக்கு வருவோம் என நான் யோசனை முன்வைக்கிறேன் என்றார். கல்முனை பிரதேச செயலகம் தொடர்பான பிரச்சினையை கலந்துரையாடல் மூலம் தீர்த்துக்கொள்வோம் - ரவூப் ஹக்கீம் | Virakesari.lk
-
தலைமன்னார் கடற்பரப்பில் 14 ராமேஸ்வரம் மீனவர்கள் கைது
05 Dec, 2024 | 12:44 PM இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்து மீன்பிடியில் ஈடுபட்ட 14 இராமேஸ்வரத்தைச் சேர்ந்த மீனவர்கள் இன்று வியாழக்கிழமை (5) அதிகாலை இலங்கை கடற்பரப்பில் வைத்து கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். ராமேஸ்வரம் மீன்பிடித் துறைமுகத்திலிருந்து புதன்கிழமை (4) காலை மீன் பிடிக்க வந்த மீனவர்கள் இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்து மீன் பிடித்துக்கொண்டிருந்தபோதே தலைமன்னார் கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்ட 14 மீனவர்களும் இரண்டு இந்திய இழுவைப் படகுகளில் மீன் பிடித்துக்கொண்டிருந்ததாக பொலிஸார் தெரிவித்தனர். கைது செய்யப்பட்ட மீனவர்களும் இழுவைப் படகுகளும் தலைமன்னார் கடற்படை முகாமில் ஒப்படைக்கப்பட்டதையடுத்து, அந்த மீனவர்களிடம் தலைமன்னார் கடற்படையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். இவ்விசாரணைகளின் பின்னர், மீனவர்கள் மன்னார் மாவட்ட கடற்றொழில் திணைக்கள அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்படவுள்ளனர். இதுவரை நாட்டின் கடற்பரப்புக்குள் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகள் தொடர்பில் 68 இந்திய மீன்பிடி படகுகள் கைப்பற்றப்பட்டுள்ளதோடு, 529 இந்திய மீனவர்கள் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக கடற்படை ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. தலைமன்னார் கடற்பரப்பில் 14 ராமேஸ்வரம் மீனவர்கள் கைது | Virakesari.lk
-
மாவீரர் நாள் குறித்து பொய் தகவல்களை பரப்பிய மொட்டு கட்சியின் முக்கியஸ்தர் கைது
பொதுஜன பெரமுனவின் நிர்வாக செயலாளருக்குப் பிணை மாவீரர் தின நினைவேந்தல் தொடர்பான குற்றச்சாட்டில் இன்று (5) கைது செய்யப்பட்ட ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நிர்வாக செயலாளர் ரேணுக பெரேரா பிணையில் செல்ல கொழும்பு நீதவான் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. இவர் மாவீரர் தின நினைவேந்தல் குறித்து சமூக ஊடகங்களில் போலியான தகவல்களை பதிவிட்ட குற்றத்துக்காக இன்று காலை குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகளால் கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது. பொதுஜன பெரமுனவின் நிர்வாக செயலாளருக்குப் பிணை | Virakesari.lk
-
இலங்கை தமிழரசுக் கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களுடன் ஜனாதிபதி சந்திப்பு
பயங்கரவாத தடைச்சட்டம் குறித்து ஜனாதிபதி கூறியது என்ன? Freelancer / 2024 டிசெம்பர் 04 , பி.ப. 11:06 - 0 - 18 எதிர்காலத்தில் பயங்கரவாத தடைச்சட்டத்தை நடைமுறைப்படுத்த விரும்பவில்லை என ஜனாதிபதி அனுர குமார திசாநயக்க தம்மிடம் கூறியதாக இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் தெரிவித்துள்ளார். சில இனவாத கருத்துக்களால் அதனைப் பயன்படுத்த வேண்டிய தேவை ஏற்பட்டதாக ஜனாதிபதி தெரிவித்தாக அவர் குறிப்பிட்டுள்ளார். ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க மற்றும் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு இடையே இன்று நடைபெற்ற சந்திப்பின் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். அதேநேரம், வடக்கு கிழக்கு இணைந்த சமஸ்டி அடிப்படையிலான தீர்வு, அரசியல் கைதிகளின் விடுதலை, பயங்கரவாத எதிர்ப்பு சட்டம், காணி அபகரிப்பு, காணாமல் ஆக்கப்பட்டோருக்கான நீதி உள்ளிட்ட பல விடயங்கள் குறித்து ஜனாதிபதியுடன் கலந்துரையாடியதாக சாணக்கியன் தெரிவித்துள்ளார். R Tamilmirror Online || பயங்கரவாத தடைச்சட்டம் குறித்து ஜனாதிபதி கூறியது என்ன?
-
ஜனாதிபதி மற்றும் உலக வங்கியின் நிறைவேற்று பணிப்பாளருக்கு இடையில் சந்திப்பு
அரசாங்கத்தின் Clean Sri Lanka வேலைத்திட்டத்திற்கு உலக வங்கியின் உதவிகள் வழங்கப்படுமென உலக வங்கியின் நிறைவேற்றுப் பணிப்பாளர் பரமேஷ்வரன் ஐயர் (Parameswaran Iyer) தெரிவித்தார். உலக வங்கியின் நிறைவேற்று பணிப்பாளர் புதன்கிழமை (04) ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவை சந்தித்து கலந்துரையாடியபோதே இதனைத் தெரிவித்தார். ஜனாதிபதி தலைமையிலான புதிய அரசாங்கத்துக்கு வாழ்த்து தெரிவித்த உலக வங்கியின் நிறைவேற்றுப் பணிப்பாளர், உலக வங்கியின் ஒத்துழைப்புடன் முன்னெடுக்கப்படும் அனைத்துத் திட்டங்களும் எதிர்காலத்திலும் அவ்வண்ணமே முன்னெடுக்கப்படும் என்றும் உறுதியளித்தார். அதேபோல் புதிய அரசாங்கத்தின் அபிவிருத்தி திட்டம், கிராமிய வறுமையை ஒழித்தலுக்கான திட்டங்கள், பொருளாதார டிஜிட்டல் மயமாக்கல் வேலைத்திட்டத்துக்கு இணையான டிஜிட்டல் அடையாள அட்டை வழங்குவதற்கான வேலைத்திட்டம் என்பன குறித்தும் ஜனாதிபதி நீண்ட கலந்துரையாடலில் ஈடுபட்டார். தோட்ட மக்களின் காணி மற்றும் வீட்டுப் பிரச்சினைகள் மற்றும் வடக்கு கிழக்கு மக்கள் நீண்டகாலமாக முகம்கொடுத்திருக்கும் பிரச்சினைகளுக்கு தீர்வு தேடுவது குறித்தும் இதன்போது பேசப்பட்டது. இந்நாட்டில் விவசாயம், மீன்பிடித்துறை, சுற்றுலா, கல்வி மற்றும் சுகாதார துறைகளை அபிவிருத்தி செய்வது தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது என்றும் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க இதன்போது சுட்டிக்காட்டினார். அரசாங்கத்தின் அடுத்தகட்ட அபிவிருத்தி திட்டங்களை செயற்படுத்த ஒத்துழைப்பு வழங்கும் வகையில் முதற்கட்டமாக, இந்நாட்டு ஆலோசனைக் குழுவொன்றுடன் பேச்சுவார்த்தை நடத்த தயாராக இருப்பதாகவும் உலக வங்கியின் நிறைவேற்றுப் பணிப்பாளர் அரசாங்கத்தின் Clean Sri Lanka வேலைத்திட்டத்துக்கும் பாராட்டு தெரிவித்தார். தொழில் அமைச்சர் மற்றும் பொருளாதார அபிவிருத்தி பிரதி அமைச்சர் பேராசிரியர் அனில் ஜயந்த,நிதி மற்றும் திட்டமிடல் பிரதி அமைச்சர் கலாநிதி ஹர்ஷன சூரியப்பெரும, ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க ஆகியோர் இதன்போது கலந்துகொண்டனர். ஜனாதிபதி மற்றும் உலக வங்கியின் நிறைவேற்று பணிப்பாளருக்கு இடையில் சந்திப்பு | Virakesari.lk
-
இந்த ஐயா யாரென தெரியுதா?
தேசிய மக்கள் சக்தியின் சமூக வலைத்தளங்களில், இந்த ஐயா யாரென தெரியுதா? என தலைப்பிட்டு, வீடியோ ஒன்று உலாவிக்கொண்டிருக்கிறது. அதில், பேசிய நபர், “பார்த்திங்கதானே அனுரட கேம, அடிச்ச அடியில பாருங்க பேமென்ட்ல (pavement) வந்து அப்பிள் வாங்குறாங்கக, இதுக்குத்தான் சொல்றது. இதுக்குத்தான் சொல்றது எப்படி போட்ட கேம். எப்படி அனுரட கேம்” என்று அவ்வப்போது சிரித்துக்கொண்டே சொல்கின்றார். அந்த வீடியோவில், முன்னாள் அமைச்சர் எஸ்.பி.திஸாநாயக்க, இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. வீடியோவில் எந்த பேமெண்டு என்று சரியாக தெரியவில்லை. அதேபோல, குரல்கொடுத்த நபரும், எந்த பேமெண்டு என்று கூறவே இல்லை. Tamilmirror Online || இந்த ஐயா யாரென தெரியுதா?
-
தமிழ் மக்கள் விடுதலைப்புலிகளை நினைவுகூருவதும் ஜேவிபியின் நினைவுகூரல்களும் ஒரே மாதிரியானவை - கஜேந்திரகுமார் பொன்னம்பலம்
யுத்தத்தின்போது உயிரிழந்த தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்க உறுப்பினர்களையும் தங்கள் உயிர்களை இழந்த தமிழர்களையும் நினைவுகூருவதும் ஜேவிபியின் நினைவுகூரல்களும் ஒரேமாதிரியானவை. வித்தியாசங்கள் இருக்க முடியாது என தமிழ்தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது. யுத்தத்தின்போது உயிரிழந்த தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்க உறுப்பினர்களையும் தங்கள் உயிர்களை இழந்த தமிழர்களையும் நினைவுகூருவதும் ஜேவிபியின் நினைவுகூரல்களும் ஒரேமாதிரியானவை. வித்தியாசங்கள் இருக்க முடியாது. இரண்டு ஆயுதப்போராட்டங்களும் அரசாங்கத்தினால் மௌனமாக்கப்பட்டன.இரண்டு ஆயுதப்போராட்டங்களும் நியாயபூர்வமானவை. மக்கள் ஏன் ஆயுதமேந்தவேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டார்கள் என்பதற்கான நியாயபூர்வமான காரணங்கள் உள்ளன. அங்கிருந்தே நாங்கள் வருகின்றோம், ஆனால் இந்தநியாயபூர்வமான பிரச்சினைகளிற்கு தீர்வை காணாமல் ஒரு தரப்பை தடைகள் இன்றி செயற்படவும் நினைவுகூரல்களில் ஈடுபடவும் அனுமதிப்பதும்,ஏனைய தரப்பின் மீது சில கட்டுப்பாடுகளை விதிப்பதும் நியாயமான விடயம் என நான் கருதவில்லை. நினைவேந்தல் தொடர்பான இந்த கட்டுப்பாடுகள் 2011ம் ஆண்டு சுற்றறிக்கையை அடிப்படையாக கொண்டவை. உங்கள் அரசாங்கம் இனவாத அரசாங்கம் என குறிப்பிடும் அரசாங்கத்தின் காலத்திலேயே இந்த சுற்றிக்கை வெளியானது. அந்த அரசாங்கத்தின் காலத்தில் வெளியிடப்பட்ட நீங்கள் எப்படி நினைவுகூரல்களை முன்னெடுக்க முடியும் என தெரிவிக்கும் சுற்றுநிரூபத்தை நீங்கள் நடைமுறைப்படுத்தும்போது அது முற்றாக நியாயமற்ற விடயம். இந்த தவறை திருத்திக்கொள்ளவேண்டும் என நான் இந்த அரசாங்கத்தை கேட்டுக்கொள்கின்றேன். பயங்கரவாத தடைச்சட்டத்தை வடக்கில் மாத்திரமல்ல தெற்கிலும் பயன்படுத்தக்கூடாது என நான் வேண்டுகோள் விடுக்கின்றேன். பொலிஸார் பயங்கரவாத தடைச்சட்டத்தை ஆயுதமாக பயன்படுத்துகின்றனர். தமிழ் மக்கள் விடுதலைப்புலிகளை நினைவுகூருவதும் ஜேவிபியின் நினைவுகூரல்களும் ஒரே மாதிரியானவை - இரு தரப்பினரும் நியாயபூர்வமாக கோரிக்கைக்காக போராடினார்கள் - கஜேந்திரகுமார் பொன்னம்பலம் | Virakesari.lk
-
கைது செய்யப்பட்ட இந்திய மீனவர்கள் 23பேரும் நிபந்தனையுடன் விடுதலை!
கடந்த மாதம் 10 ஆம் திகதி நெடுந்தீவு கடற்பரப்பிற்கு அண்மையில் அத்துமீறி மீன்பிடியில ஈடுபட்ட குற்றச்சாட்டில் கடற்படையினரால் கைது செய்யப்பட்ட இந்திய மீனவர்கள் 23 பேரும் நிபந்தனையுடன் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். 23 பேரும் இன்று ஊர்காவற்றுறை நீதிவான் நீதிமன்றில் சிறைச்சாலை அதிகாரிகளினால் நீதிவான் நளினி சுபாஸ்கரன் முன்னிலையில் முற்படுத்தப்படுத்தப்பட்டனர். வழக்கினை விசாரணைக்கு எடுத்த நீதிவான் இந்திய மீனவர்கள் 23 பேருக்கும் 6 வருடங்களுக்கு ஒத்திவைக்கப்பட்ட 2 வருடங்கள் சிறைத்தண்டனை வழங்கி தீர்ப்பளித்ததுடன் குறித்த 23 பேரில் 3 பேர் படகோட்டிகள் என்றமையால் அவர்களுக்கு தலா 40லட்சம் ரூபா அபராத தொகையினை செலுத்தும் அதேவேளை 6 மாத சிறைத்தண்டனையும் மேலதிகமாக வழங்கி உத்தரவிட்டார். இதேவேளை, அபராத தொகை செலுத்த தவறின் 6 மாதங்கள் சிறைத்தண்டனைக்கு மேலதிகமாக 3 மாத சிறைத்தண்டனை அனுபவிக்கவேண்டும் என உத்தரவிட்டுள்ளார். கைது செய்யப்பட்ட இந்திய மீனவர்கள் 23பேரும் நிபந்தனையுடன் விடுதலை!
-
டியாகோகார்சியாவில் சிக்குண்டிருந்த இலங்கை தமிழ் புகலிடக்கோரிக்கையாளர்கள் பிரிட்டன் அழைத்து செல்லப்பட்டனர் - ஆறு மாதங்கள் தங்கியிருக்க அனுமதி- பிபிசி
டியாகோகார்சியாவில் சிக்குண்டிருந்த இலங்கையை சேர்ந்ததமிழ் புகலிடக்கோரிக்கையாளர்களை அதிகாரிகள் பிரிட்டனிற்கு அழைத்து சென்றுள்ளனர். பிரிட்டனின் வெளிவிவகார அமைச்சின் நிதி உதவியுடன் அவர்கள் ஆறு மாதங்களிற்கு பிரிட்டனில் தங்கியிருப்பதற்கு அனுமதிக்கப்படுவார்கள் என தான் பார்வையிட்ட ஆவணங்கள் மூலம் தெரியவந்துள்ளதாக பிபிசி தெரிவித்துள்ளது. பிரிட்டனிற்கான அவர்களின் பயணத்துடன் அவர்களது தலைவிதியை தீர்மானிப்பதற்காக கடல்கடந்து இடம்பெற்ற சட்டபோராட்டங்கள் முடிவிற்கு வந்துள்ளன என தெரிவித்துள்ள பிபிசி எனினும் அவர்களின் எதிர்காலம் குறித்து நிச்சயமற்ற தன்மை நிலவுவதாக குறிப்பிட்டுள்ளது. இலங்கையை சேர்ந்த 60 புகலிடக்கோரிக்கையாளர்கள் கடந்த மூன்று வருடகாலமாக இங்கிலாந்து அமெரிக்காவின் மூலோபாய ரீதியில் முக்கியத்துவம் வாய்ந்த இராணுவம் தளம் அமைந்துள்ள டியாகோ கார்சியா தீவில் சிக்குண்டிருந்தனர், தற்காலிக முகாமில் வசித்துவந்தனர். டியாகோ கார்சியாவிலிருந்து புகலிடக்கோரிக்கையை சமர்ப்பித்த முதல் புகலிடக்கோரிக்கையாளர்கள் இவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. புகலிடக்கோரிக்கையாளர்களை பிரிட்டனிற்கு அழைத்து சென்றுள்ளமை குறித்து கருத்து தெரிவித்துள்ள பிரிட்டன் அரசாங்கத்தின் பேச்சாளர் இந்த விவகாரத்தில் விதிவிலக்கான தன்மை காரணமாக இந்த முடிவை எடுத்ததாக தெரிவித்துள்ளார். இந்த அரசாங்கம் ஒரு ஆழமான சிக்கலான முன்னைய அரசதாங்கத்தின் கீழ் தீர்வுகாணப்படாமலிருந்த சூழ்நிலையை சுவீகரித்துக்கொண்டுள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார். டியாகோர் கார்சியா தீவில் காணப்பட்ட மனிதாபிமான நெருக்கடிக்கு தீர்வை காண்பதற்கு இது ஒரு அர்த்தபூர்வமான தீர்வு என புகலிடக்கோரிக்கையாளர்கள் சிலரை பிரதிநிதித்துவம் செய்த லெய்டே என்ற பிரிட்டனின் சட்டநிறுவனத்தின் டெசா கிரெகரி தெரிவித்துள்ளார். 16 சிறுவர்களை உள்ளடக்கிய இந்த பாதிக்கப்படக்கூடிய நிலையில் உள்ள குழுவினர் 38 மாதங்களாக மிக மோசமான நிலையில் சிக்குண்டிருந்தனர்,என தெரிவித்துள்ள அவர் எங்கள் கட்சிக்காரர்கள் தற்போது பாதுகாப்பான புகலிடக்கோரிக்கையை முன்வைக்க முடியும்,தங்கள் வாழ்க்கைய மீள கட்டியெழுப்ப முடியும் என எதிர்பார்க்கின்றோம் என தெரிவித்துள்ளார். டியாகோகார்சியாவில் சிக்குண்டிருந்த இலங்கை தமிழ் புகலிடக்கோரிக்கையாளர்கள் பிரிட்டன் அழைத்து செல்லப்பட்டனர் - ஆறு மாதங்கள் தங்கியிருக்க அனுமதி- பிபிசி | Virakesari.lk
-
மன்னாரில் 7,500 ஹெக்டேயர் விவசாய நில பயர்ச்செய்கை அழிவு ; வங்கிக் கடன்களை இரத்து செய்யுமாறு விவசாயிகள் கோரிக்கை!
03 Dec, 2024 | 12:45 PM மன்னார் மாவட்டத்தில் கடந்த ஒரு வார காலமாக நிலவி வந்த சீரற்ற வானிலை காரணமாக 7,603 ஹெக்டேயர் விவசாய நிலங்களில் பயர்ச்செய்கை அழிவடைந்துள்ளதாக மன்னார் மாவட்ட கமநல சேவைகள் நிலையம் தெரிவித்துள்ளது. குறிப்பாக மன்னார் மாவட்டத்தில் இலுப்பை கடவை கமநல சேவை நிலையத்துக்கு உட்பட்ட 1100 ஹெக்டேயர் விவசாய நிலங்களும் மாந்தை பகுதியில் 1168 விவசாய நிலங்களும், நானாட்டானில் 768 ஹெக்டேயர் விவசாய நிலங்களுமாக மொத்தம் 7603 ஹெக்டேயர் விவசாய நிலப்பரப்புகளில் செய்கையிடப்பட்ட பயிர்கள் வெள்ளத்தால் அழிவடைந்துள்ளன. இம்முறை மன்னார் மாவட்டத்தில் காலபோக செய்கைக்கென 11,776 ஹெக்டேயர் விவசாய நிலப்பரப்பில் பயிர்ச்செய்கை மேற்கொள்ளப்பட்ட நிலையில் 4173 ஹெக்டேயர் விவசாய நிலப் பயிர்கள் மாத்திரம் தற்போது பகுதியளவில் காப்பாற்றப்பட்டுள்ளன. இந்நிலையில் இம்முறை விவசாய செய்கைக்காக பல விவசாயிகள் அரச மற்றும் தனியார் வங்கிகளிலும், கிராம மட்ட அமைப்புகளிடமும் கடன்களை பெற்றுள்ள நிலையில், அவற்றை மனிதாபிமான அடிப்படையில் அரசாங்கம் தள்ளுபடி செய்து தருமாறு விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். மன்னாரில் 7,500 ஹெக்டேயர் விவசாய நில பயர்ச்செய்கை அழிவு ; வங்கிக் கடன்களை இரத்து செய்யுமாறு விவசாயிகள் கோரிக்கை! | Virakesari.lk
-
குரங்கு பறித்த தேங்காய் தலையில் விழுந்து ஒருவர் பலி
(வத்துகாமம் நிருபர்) கேகாலை, புலத்கொஹுபிட்டிய பிரதேசத்தில் தேங்காய் தலையில் விழுந்து ஒருவர் உயிரிழந்துள்ளார். இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, உயிரிழந்தவர் சம்பவத்தன்று தனது வீட்டிற்கு அருகில் உள்ள தென்னை மரத்திலிருந்து தேங்காய்கள் விழுந்திருப்பதை அவதானித்துள்ள நிலையில் அதனைச் சேகரித்துக் கொண்டிருந்துள்ளார். இதன்போது தென்னை மரத்திலிருந்த குரங்கு ஒன்று தேங்காய் பறித்துக்கொண்டிருந்துள்ள நிலையில் குரங்கு பறித்த தேங்காய் உயிரிழந்தவரின் தலையில் விழுந்துள்ளது. இதனையடுத்து காயமடைந்தவர் கேகாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். ஏ.ஜி.ஜயசேன என்ற ஒரு பிள்ளையின் தந்தையே உயிரிழந்துள்ளார். புலத்கொஹுபிட்டிய பொலிஸார் இது தொடர்பாக மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். குரங்கு பறித்த தேங்காய் தலையில் விழுந்து ஒருவர் பலி | Virakesari.lk
-
யாழ். சர்வதேச விமான நிலையத்தின் ஊடாக பயணிப்பவர்களுக்கு வட ஆளுநரின் அறிவித்தல்
03 Dec, 2024 | 06:14 PM பலாலியில் அமைந்துள்ள யாழ். சர்வதேச விமான நிலையத்தின் ஊடாக பயணிப்பவர்கள், அங்குள்ள அதிகாரிகளால் ஏதாவது அசௌகரியங்களை எதிர்கொண்டால் விமான நிலையத்தின் செயற்பாட்டு முகாமையாளர் அமரதுங்க அல்லது வட மாகாண ஆளுநர் அலுவலகம் என்பவற்றை தொடர்புகொள்ள முடியும் என வட மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் பயணிகளிடம் கேட்டுக்கொண்டுள்ளார். இதற்காக 0774653915 என்ற விமான நிலையத்தின் செயற்பாட்டு முகாமையாளரின் இலக்கமும் வடக்கு மாகாண ஆளுநர் அலுவலகத்தின் 021 221 9373 என்ற இலக்கமும் வழங்கப்பட்டுள்ளது. யாழ். சர்வதேச விமான நிலையத்தின் ஊடாக பயணிப்பவர்களுக்கு வட ஆளுநரின் அறிவித்தல் | Virakesari.lk
-
மாகாண சபை முறை நீக்கப்படாது: மூன்று வருடங்களின் பின்னரே புதிய அரசியலமைப்பு
மாகாண சபை முறை ரத்தா? - சபையில் சாணக்கியன் கேள்வி மாகாண சபை முறையை இல்லாதொழிக்கப் போவதாக ஜே.வி.பியின் பிரதான செயலாளர் ரில்வின் சில்வா வெளியிட்டிருந்த கருத்து தொடர்பில் இலங்கை தமிழரசு கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியன் நாடாளுமன்றத்தில் இன்று (3) கேள்வி எழுப்பினார். ஜே.வி.பியின் பிரதான செயலாளர் ரில்வின் சில்வா, மாகாண சபை முறைமையை இல்லாதொழிக்க போவதாகப் பத்திரிகைகளுக்கு குறிப்பிட்டிருந்த விடயத்தைத் தேசிய முக்கியத்துவம் வாய்ந்த பிரச்சினையாகக் கருத வேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார். இந்த விடயத்தில் அரசாங்கம் தனது நிலைப்பாட்டை அறிவிக்க வேண்டும் என சாணக்கியன் கோரிக்கை விடுத்துள்ளார். இதன்போது குறுக்கிட்ட சபை முதல்வர் அமைச்சர் பிமல் ரத்னநாயக்க, இராசமாணிக்கம் சாணக்கியன் மீது மிகுந்த மரியாதை கொண்டிருப்பதாகவும் ஏனையோர் சொல்வதைக் கேட்டு முறையற்ற சந்தேகங்களை எழுப்ப வேண்டாம் எனவும் கோரினார். அதேநேரம் இலங்கை தமிழரசு கட்சியின் நாடாளுமன்றக் குழுத் தலைவர் சிவஞானம் ஸ்ரீதரன் அரசியலமைப்பின் 13வது திருத்தம் தொடர்பில் ஜனாதிபதியிடம் கலந்துரையாடல் ஒன்றுக்கு அழைப்பு விடுத்திருப்பதாகத் தெரிவித்த பிமல் ரத்னாயக்க, ஜே.வியின் பிரதான செயலாளர் ரில்வின் சில்வா அன்றி ஜனாதிபதியுடன் சந்திப்புக்கு ஒழுங்குபடுத்துவதாகவும் இந்த விடயம் குறித்து பேச்சுவார்த்தை நடத்தலாம் என்றும் குறிப்பிட்டார். மாகாண சபை முறை ரத்தா? - சபையில் சாணக்கியன் கேள்வி | Virakesari.lk
-
நவம்பர் மாதத்தில் 22,685 இலங்கையர்கள் வேலை வாய்ப்புக்காக வெளிநாடுகளுக்கு சென்றுள்ளனர்
இவ்வருடத்தின் நவம்பர் மாதத்தில் 22,685 இலங்கையர்கள் வேலை வாய்ப்புக்காக வெளிநாடுகளுக்கு சென்றுள்ளதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது. அதன்படி, இவ்வருடத்தின் ஜனவரி மாதத்திலிருந்து நவம்பர் மாதம் வரையான காலப்பகுதிக்குள் 291‚267 இலங்கையர்கள் வேலை வாய்ப்புக்காக வெளிநாடுகளுக்குச் சென்றுள்ளனர். அவர்களில் 172‚746 ஆண்களும் 118‚521 பெண்களும் அடங்குகின்றனர். அதிகளவானோர் குவைத் நாட்டுக்கு வேலை வாய்ப்புக்காக சென்றுள்ள நிலையில் அவர்களின் மொத்த எண்ணிக்கை 71,210 ஆகும். இந்நிலையில், ஐக்கிய அரபு இராச்சியத்திற்கு 48 083 பேரும், சவுதி அரேபியாவிற்கு 45,008 பேரும், கத்தாருக்கு 43,104 பேரும், இஸ்ரேலுக்கு 9,146 பேரும், ஜப்பானுக்கு 7,983 தென் கொரியாவுக்கு 6,925 பேரும், வேலை வாய்ப்புக்காகச் சென்றுள்ளனர். கடந்த 2023 ஆம் ஆண்டில் ஜனவரி மாதத்திலிருந்து நவம்பர் மாதம் வரையான காலப்பகுதிக்குள் 274‚265 இலங்கையர்கள் வேலை வாய்ப்புக்காக வெளிநாடுகளுக்கு சென்றுள்ளனர். நவம்பர் மாதத்தில் 22,685 இலங்கையர்கள் வேலை வாய்ப்புக்காக வெளிநாடுகளுக்கு சென்றுள்ளனர் | Virakesari.lk