Everything posted by பிழம்பு
-
யாழ். இரும்பு தொழிலதிபரை கட்டுநாயக்கவில் ஏமாற்றியவர் சிக்கினார்
டி.கே.ஜி. கபில கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு சொந்தமான இரும்புத் தொகுதியை வழங்குவதாக உறுதியளித்த ஒருவர், யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இரும்பு வாங்கும் தொழிலதிபரை விமான நிலைய வருகை முனையத்திற்கு வரவழைத்து,ரூ.1 மில்லியன் பணத்தைப் பெற்றுக் கொண்டு தப்பிச் சென்றார். யாழ்ப்பாணம் பகுதியில் வசிக்கும் அவர் இரும்பு வாங்கும் தொழிலதிபரை தொலைபேசி மூலம் தொடர்பு கொண்ட ராகம, எண்டேரமுல்ல பகுதியில் வசிக்கும் ஒருவர், கட்டுநாயக்க விமான நிலையத்தில் அதிக அளவு இரும்பு தொகுதி இருப்பதாகவும், அதை வாங்குவதற்கான விலைமனு கோரலை சமர்ப்பிக்க ரூ.1 மில்லியனுடன் விமான நிலையத்திற்கு வருமாறும் கூறியுள்ளார். அதன்படி, யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த தொழிலதிபர், ஒக்டோபர் 25 ஆம் திகதியன்று தனது மனைவியுடன் கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வந்தார். அவர்கள் விமான நிலைய வருகை முனையத்தில் அமர்ந்திருந்தனர், அவர்களிடம் ஒரு மில்லியன் ரூபாய் பணத்தை பெற்றுக்கொண்ட ராகமவைச் சேர்ந்த நபர் ஒரு மில்லியன் ரூபாயுடன் தப்பி ஓடிவிட்டார். பின்னர், யாழ்ப்பாண தொழிலதிபர் கட்டுநாயக்க விமான நிலைய பொலிஸாரை அணுகி இது தொடர்பாக புகார் அளித்தார். பொலிஸார், தொழிலதிபருடன் விமான நிலையத்திற்கு சென்று பாதுகாப்பு கேமரா அமைப்பை கண்காணித்தனர். பணத்துடன் தப்பிச் சென்ற நபரை தொழிலதிபர் அடையாளம் கண்டு, அதை காவல்துறை அதிகாரிகளிடம் சுட்டிக்காட்டினார். கட்டுநாயக்க விமான நிலைய பாதுகாப்பு கேமரா அமைப்பின் பொறுப்பாளர் கபில சதருவன் பலிஹக்கார, வெள்ளிக்கிழமை (21) அன்று காலை, ஏதோ ஒரு காரணத்திற்காக கம்பஹா மாவட்ட செயலகத்திற்கு சென்றிருந்தபோது, அந்த அலுவலகத்தில் தரகராக பணியாற்றி, விமான நிலையத்தில் மோசடியாக பணம் பெற்ற நபரை அடையாளம் கண்டு, உடனடியாக கட்டுநாயக்க விமான நிலைய காவல் துறைக்கு தகவல் கொடுத்தார். அதன்படி, உடனடியாகச் செயல்பட்ட காவல்துறையினர், கம்பஹா மாவட்ட செயலகத்திற்கு சென்று, ராகம, எண்டேரமுல்லவைச் சேர்ந்த 46 வயதுடைய ரங்கநாத் சிவகுமாரை கைது செய்து, நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. Tamilmirror Online || யாழ். இரும்பு தொழிலதிபரை கட்டுநாயக்கவில் ஏமாற்றியவர் சிக்கினார்
-
யாழில் பிறந்த இரட்டை குழந்தைகளும் உயிரிழந்த சோகம்!
யாழில் பிறந்த இரட்டை குழந்தைகளும் உயிரிழந்த சோகம்! யாழில் பிறந்த இரட்டைக் குழந்தைகளில் ஒருவரான பெண் குழந்தை ஏற்கனவே உயிரிழந்த நிலையில், மற்றைய ஆண் குழந்தையும் இன்று உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இளவாலை பகுதியைச் சேர்ந்த தர்ஷன் அஸ்வின் என்ற 9 மாத ஆண் குழந்தையே இவ்வாறு உயிரிழந்தது. கடந்த 9 மாதங்களுக்கு முன்னர் பிறந்த இந்த இரட்டைக் குழந்தைகளில், பெண் குழந்தை கடந்த ஏப்ரல் மாதம் உயிரிழந்தது. இந்நிலையில், ஆண் குழந்தைக்கு இன்று அதிகாலை திடீரென வாந்தி ஏற்பட்டதை அடுத்து குழந்தை மயக்கமடைந்துள்ளது. உடனடியாக குழந்தை சங்கானை மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட போதிலும், குழந்தை ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். குழந்தையின் சடலம் மீதான இறப்பு விசாரணைகளை திடீர் இறப்பு விசாரணை அதிகாரி ஆ. ஜெயபாலசிங்கம் மேற்கொண்டார். இறப்பிற்கான காரணம் கண்டறியப்படாத நிலையில், உடற்கூற்று மாதிரிகள் மேலதிக பரிசோதனைக்காக கொழும்பிற்கு அனுப்பி வைக்கப்படவுள்ளன. யாழில் பிறந்த இரட்டை குழந்தைகளும் உயிரிழந்த சோகம்!
-
முஸ்லிம் பெண் தாதியர் தமது கலாசாரத்தைப் பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் - எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லா
20 Nov, 2025 | 02:01 PM (எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்) முஸ்லிம் பெண் தாதியர்கள் அவர்களுடைய சீருடைக்கு மேலதிகமாக காற்சட்டை அணிவதை உறுதிப்படுத்தி சுகாதார அமைச்சினூடாக சுற்று நிருபமொன்றை சம்பந்தப்பட்ட நிறுவனங்கள், திணைக்களங்களுக்கு அவசரமாக அனுப்பி முஸ்லிம் பெண் தாதியர்கள் தமது கலாசாரத்தைப் பாதுகாக்கும் வகையில் ஆடைகளை அணிவதை முழுமையாக நடைமுறைப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டுமென ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லா சுகாதார அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸவிடம் கோரிக்கை விடுத்தார். பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை (20) நிலையியற் கட்டளை 27 2இன் கீழ் கேள்வி எழுப்பி உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார். அவர் அங்கு தொடர்ந்து குறிப்பிடுகையில், முஸ்லிம் பெண் தாதியர்களின் ஆடை தொடர்பாக கடந்த சில நாட்களாக கருத்தாடல்கள் சமூக மட்டத்திலும், ஊடகங்களிலும் பேசுபொருளாக மாறியுள்ளதை அவதானிக்க முடிகிறது. அரச மருத்துவமனைகளிலும் தனியார் மருத்துவமனைகளிலும் பணியாற்றுகின்ற முஸ்லிம் பெண் தாதியர்கள் அவர்களுடைய சீருடைக்கு மேலதிகமாக காற்சட்டை அணிவதற்கு அனுமதி வழங்காத நிலையிலேயே 1992ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 7 ஆம் திகதி இந்தப் பாராளுமன்றத்திலே ஒரு தனிநபர் பிரேரணையை நான் கொண்டு வந்தேன். அந்தப் பிரேரணை மீது நான் பேசுகின்ற போது பின்வரும் விடயங்களை சுட்டிக்காட்டினேன். இன்று தாதிமார் தொழிலென்பது சகல மக்களுக்கும் தேவையான, சகல மக்களும் பங்குபற்றக்கூடிய, சகலரும் நம்பியிருக்க வேண்டிய ஒரு பொதுவான தொழிலாக இருக்கின்றது. அப்படியான ஒரு பொதுவான தொழிலிலை சகல சமூகங்களைச் சேர்ந்தவர்களும் தங்களுடைய கலாசாரங்களுக்கும் சமய அனுஷ்டானங்களுக்கும் ஏற்ற வகையில் சமயம் அனுமதிக்கக்கூடிய வகையில் ஈடுபடுவதற்கான வழிவகைகளை செய்யவேண்டியது அரசாங்கத்தின் கடமையாகும் . முஸ்லிம் பெண்கள் காற்சட்டையின்றி மேலாடை மாத்திரம் அணிவதை இஸ்லாம் மார்க்கம் அனுமதிக்காத காரணத்தினால் அந்தத் தொழிலில் பெருமளவில் ஈடுபட முடியாத நிலையில் இருக்கின்றார்கள், எனவே, முஸ்லிம் தாதியர்கள் தங்களின் மார்க்கம், கலாசாரம் ஏற்றுக்கொள்ளக்கூடிய வகையில் சீருடை அணிவதற்கு வழிசெய்ய வேண்டும். இவ்வாறான காரணங்களுக்காக முஸ்லிம் பெண் தாதியர்களுக்கு காற்சட்டை அணிவதற்கான அனுமதி வழங்க வேண்டுமென இந்த சபையில் தனிநபர் பிரேரணையை கொண்டு வந்திருந்தேன். குறித்த பிரேரணை தொடர்பாக அப்போதிருந்த சகல இனத்தைச்சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர்களும் கலந்தாலோசித்து ஆதரவாக செயற்பட்டதுடன் அன்றைய சபாநாயகராக இருந்த சபாநாயகர் மர்ஹும் எம்.எச் முஹம்மட்டும் முஸ்லிம் தாதியர்கள் அவர்களின் கலாசார முறைப்படி சீருடை அணிய இந்த பிரேரணை ஏற்றுக் கொள்ளப்பட வேண்டும் என்று பேசியிருந்தமை குறிப்பிடத்தக்கது. அதன் பிரகாரம் இறுதியில் அன்றைய சுகாதார அமைச்சர் ரேணுகா ஹேரத் அனுமதியுடன் குறித்த எனது பிரேரணை வாக்கெடுப்பின்றி பாராளுமன்றத்தில் ஏகமனதாக ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது என்று சபாநாயகரால் குறிப்பிடப்பட்டு அங்கீகாரத்தை வழங்கியது. இவ்வாறான பின்னணியில் அன்றிலிருந்து இன்று வரை இலங்கையில் எல்லா அரச மற்றும் தனியார் மருத்துவமனைகளிலும் முஸ்லிம் தாதியப் பெண்கள் அவர்களுடைய சீருடைக்கு மேலதிகமாக காற்சட்டை அணிவதற்கு அனுமதி வழங்கப்பட்டு அவர்கள் அணிந்து, கொண்டிருந்ததுடன் இது தொடர்பில் எந்த ஒரு பிரச்சினையும் இடம் பெறவில்லை. இதன் காரணமாக ஆயிரக்கணக்கான முஸ்லிம் பெண்களும் தாதியர்களாக இன்று வரை எல்லா மருத்துவமனைகளிலும் தங்களுடைய கடமைகளை புரிகிறார்கள். ஆனால் கடந்த சில மாதங்களாக தேசிய தாதியர் பயிற்சி பாடசாலை மற்றும் வேறு சில வைத்தியசாலைகளிலும் இவ்வாறு காற்சட்டை அணிய அனுமதி இல்லை என்ற ஒரு முறைப்பாடு எம்மிடம் வந்திருக்கின்றது. நீங்கள் சகல இன மக்களும் ஒற்றுமையுடன் வாழ்கின்ற களுத்துறை மாவட்டத்தின் மக்கள் பிரதிநிதி என்ற வகையிலும் சகல இன மக்களுடனும் மிகவும் அன்பாகவும் பண்பாகவும் பழகக்கூடிய அதேபோன்று அனைத்து இன மக்களும் மதிக்கின்ற ஒரு அமைச்சர் என்ற வகையிலும் இது தொடர்பாக தங்களது அமைச்சினூடாக சுற்று நிருபமொன்றை சம்பந்தப்பட்ட நிறுவனங்கள், திணைக்களங்களுக்கு அவசரமாக அனுப்பி தமது கலாசாரத்தைப் பாதுகாக்கும் வகையில் ஆடைகளை அணிவதை முழுமையாக நடைமுறைப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுப்பீர்களா? என்றார். முஸ்லிம் பெண் தாதியர் தமது கலாசாரத்தைப் பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் - எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லா | Virakesari.lk
-
போதைப்பொருள் கடத்திய மற்றுமொரு படகு கைப்பற்றல்!
போதைப்பொருட்களை ஏற்றிச் சென்ற மீன்பிடிக் கப்பலுடன் ஆறு பேர் கைது! 21 Nov, 2025 | 04:29 PM இலங்கை கடற்படையால், இலங்கையின் தெற்கே ஆழ்கடலில் நடத்தப்பட்ட சிறப்பு தேடுதல் நடவடிக்கையின் போது, போதைப்பொருட்களை கொண்டு சென்றதாக சந்தேகிக்கப்படும் உள்ளூர் பல நாள் மீன்பிடிக் படகுடன் 06 சந்தேக நபர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர். பல நாள் மீன்பிடிக் கப்பலும் சந்தேக நபர்களும் கடந்த 20 ஆம் திகதி தங்காலை மீன்வளத் துறைமுகத்திற்கு கொண்டு வரப்பட்டனர். பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பணியகம் நடத்திய நிபுணர் பரிசோதனையின் போது, போதைப்பொருள் என சந்தேகிக்கப்படும் 18 பொதிகளில் 261 கிலோகிராமை விட அதிகமான ஐஸ் மற்றும் 115 கிலோகிராமை விட அதிகமான ஹெராயின் இருப்பது உறுதி செய்யப்பட்டது. மேலும், போதைப்பொருள் கையிருப்புடன், ரிவால்வர் வகை மற்றும் பிஸ்டல் வகை 02 துப்பாக்கிகள் மற்றும் 02 மெகசின்களுடன் ஒரு செயற்கைக்கோள் தொலைபேசியும் அங்கு கண்டுபிடிக்கப்பட்டதுடன், பாதுகாப்பு பிரதி அமைச்சர் மேஜர் ஜெனரல் அருண ஜயசேகர மற்றும் கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் கான்சன பானகொட ஆகியோர் போதைப்பொருட்கள் மற்றும் சட்டவிரோத ஆயுதங்களை கண்காணிப்பதில் பங்கேற்றனர். இந்த போதைப்பொருள் கையிருப்பை கண்காணிப்பதில் பங்கேற்ற பாதுகாப்பு பிரதி அமைச்சர் தனது கருத்துக்களைத் தெரிவித்ததோடு, “போதையற்ற நாடு - ஆரோக்கியமான பிரஜைகள் வாழ்கை” என்ற அரசாங்கத்தின் தொலைநோக்குப் பார்வையுடன் இணைந்து மேற்கொள்ளப்படும் 'முழு நாடுமே ஒன்றாக' என்ற தேசிய செயற்திட்டத்தின் கீழ் முழு நாட்டையும் உள்ளடக்கிய போதைப்பொருள் சோதனை நடவடிக்கைகள் தீவிரமாகவும் ஒழுங்கமைக்கப்பட்ட முறையிலும் மேற்கொள்ளப்பட்டு வருவதால், நாட்டிற்குள் போதைப்பொருட்களைக் கொண்டு வரும் கடத்தல்காரர்கள் இதுபோன்ற நடவடிக்கைகளில் ஈடுபடுவதைத் தவிர்க்குமாறு வலியுறுத்தினார். மேலும், தேசிய பாதுகாப்பை முன்னுரிமைப்படுத்தி, பாதுகாப்பான நாட்டையும் மக்களின் வாழ்க்கையையும் உறுதி செய்வதற்காக அரசாங்கம் பல மூலோபாய திட்டங்களை செயல்படுத்தியுள்ளது என்றும் அவர் கூறினார். போதைப்பொருள் அச்சுறுத்தலை முற்றிலுமாக ஒழிப்பதற்காக குறிப்பாக செயல்படுத்தப்பட்ட 'முழு நாடுமே ஒன்றாக' தேசிய செயற்திட்டத்தின் கீழ், போதைப்பொருள் சோதனைகள் தினமும் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கைகளை சுயாதீனமாக நடத்துவதற்கு சட்ட அமலாக்க நிறுவனங்களுக்கு எப்போதும் வாய்ப்பளிப்பதன் மூலம், ஒரு நாடாக நாம் வெற்றிகரமான முடிவுகளைக் காண முடிகிறது என்றும் அவர் கூறினார். கௌரவ ஜனாதிபதியின் அறிவுறுத்தலின் பேரில், பாதுகாப்பு அமைச்சின் மேற்பார்வையின் கீழ், அரச புலனாய்வு சேவை உட்பட அனைத்து உள்ளூர் மற்றும் வெளிநாட்டு புலனாய்வு சேவைகளுடனும், பிற சட்ட அமலாக்க நிறுவனங்கள் மற்றும் ஆயுதப்படைகளுடன் ஒருங்கிணைந்து போதைப்பொருள் மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்களை எதிர்த்துப் போராடுவதற்கான மூலோபாயத் திட்டங்கள் தீவிரமாக செயல்படுத்தப்பட்டுள்ளதாக பாதுகாப்பு பிரதி அமைச்சர் தெரிவித்தார். கடல் வழியாக மேற்கொள்ளப்படும் சட்டவிரோத நடவடிக்கைகளைக் கையாள்வதில், இலங்கை கடற்படை மற்றும் கடலோர காவல்படை, பிற படைகளுடன் இணைந்து, இலங்கை பொலிஸ், பொலிஸ் அதிரடிப் படை, பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பணியகம் மற்றும் உள்ளூர் சட்ட அமலாக்க நிறுவனங்கள் மற்றும் சர்வதேச நிறுவனங்கள் நெருங்கிய ஒருங்கிணைப்பு மற்றும் பரஸ்பர ஒத்துழைப்புடன் செயல்பட்டு, கடந்த சில மாதங்களில் மிகவும் வெற்றிகரமான பல நடவடிக்கைகளை மேற்கொண்டு ஏராளமான கைதுகளைச் செய்து வருவதாக கௌரவ பாதுகாப்பு பிரதி அமைச்சர் தெரிவித்தார். கண்ணியமான வாழ்க்கை அசைக்க முடியாத நாடு என்ற அரசாங்கத்தின் கொள்கைக்கு இணங்க, நாட்டின் குழந்தைகளை போதைப்பொருள் அச்சுறுத்தலில் இருந்து பாதுகாப்பதற்கும், தாய்நாட்டை இந்த சமூகப் பேரழிவிலிருந்து விடுவிப்பதற்கும், தேசிய பாதுகாப்பை உறுதி செய்வதற்கும் இலங்கை கடற்படையின் விசேட அர்ப்பணிப்பைப் பாராட்டிய அவர், இந்த போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டுள்ள நபர்கள் பற்றிய தகவல்களை சட்ட அமலாக்க நிறுவனங்களுக்கு வழங்குமாறு மீனவ சமூகத்தினரிடையே கேட்டுக்கொண்டார். போதைப்பொருள் அச்சுறுத்தல் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக பொறுப்பான ஊடக அறிக்கையிடலில் ஈடுபடும் ஊடக நிறுவனங்கள் மற்றும் ஊடகவியலாளர்களின் பங்கையும் பாதுகாப்பு பிரதி அமைச்சர் பாராட்டினார். மேலும், இந்த நடவடிக்கையின் மூலம் கடற்படையினரால் கைப்பற்றப்பட்ட பல நாள் மீன்பிடிப் படகு, 261 கிலோகிராமை விட அதிகமான ஐஸ், 115 கிலோகிராமை விட அதிகமான ஹெராயின், 02 துப்பாக்கிகள், 02 மெகசின்களுடன் ஒரு செயற்கைக்கோள் தொலைபேசி மற்றும் ஆறு (06) சந்தேக நபர்களும் மேலதிக விசாரணை மற்றும் சட்ட நடவடிக்கைகளுக்காக பொலிஸ் போதைப்பொருள் பணியகத்திடம் ஒப்படைக்கப்பட்டனர். போதைப்பொருட்களை ஏற்றிச் சென்ற மீன்பிடிக் கப்பலுடன் ஆறு பேர் கைது! | Virakesari.lk
-
தீர்வு கிடைக்கும் வரை போராட்டம் ஓயாது ; முத்து நகரில் தொடர் சத்தியாக்கிரக போராட்டம் நடத்தும் விவசாயிகள் எச்சரிக்கை
21 Nov, 2025 | 06:19 PM திருகோணமலை முத்து நகர் விவசாயிகளின் போராட்டம் ஓயப்போவதில்லை. தொடர்ந்தும் தீர்வு கிடைக்கும் வரை போராடுவோம் என முத்து நகர் விவசாயிகள் தெரிவிக்கின்றனர். திருகோணமலை மாவட்ட செயலகத்துக்கு முன்பாக மழையையும் பாராமல் தொடர் சத்தியாக்கிரக போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர். தங்களது 351 விவசாய குடும்பங்களின் வாழ்வாதாரத்தை சீரழித்து தனியார் கம்பனிகளுக்கு சூரிய மின்சக்தி உற்பத்திக்காக காணிகளை அபகரித்ததையிட்டே இப்போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தற்போது அங்குள்ள விவசாய குளங்களையும் மூடி, குறித்த திட்டத்தை இலங்கை துறைமுக அதிகார சபைக்கு சொந்தமான காணி என கூறி அடாத்தாக விவசாயிகளை வெளியேற்றி இதனை செய்து வருகின்றனர். 800 ஏக்கர் அளவில் காணி சுவீகரிப்பு செய்யப்பட்ட நிலையில் குறித்த விவசாயிகள் வாழ்வாதாரத்தை இழந்து வீதிப் போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர். அபகரிக்கப்பட்ட காணியை மீளத் தருமாறும் அல்லது மாற்றீடாக காணிகளை விவசாய செய்கைக்காக வழங்குமாறும் கோரி பல போராட்டங்களை ஜனாதிபதி செயலகம் தொடக்கம் பிரதமர் செயலகம் வரை முன்னெடுத்த போதிலும் தீர்வு வழங்கப்படாமை குறத்து மன வேதனை அடைவதாகவும் தெரிவிக்கின்றனர். 1972ஆம் ஆண்டு முதல் தங்களது ஜீவனோபாயமாக விவசாய செய்கையை முன்னெடுத்து வந்த முத்து நகர் விவசாயிகள், வீதியில் வெயில் மழையிலும் போராடி வருவது, மக்களை கஷ்டத்துக்குள் தள்ளும் ஆட்சியாக இது விளங்குகிறது என்பதை உணர்த்துகிறது. தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் திருகோணமலை ஆளுங்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களும் சிறுபான்மை மக்களுக்கான தீர்வில் பின்தங்கிய நிலையில் உள்ளனர். எனவே முத்து நகர் விவசாயிகளின் கோரிக்கை நிறைவேற்றப்படும் வரை சத்தியாக்கிரகப் போராட்டம் தொடரும் என விவசாயிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். தீர்வு கிடைக்கும் வரை போராட்டம் ஓயாது ; முத்து நகரில் தொடர் சத்தியாக்கிரக போராட்டம் நடத்தும் விவசாயிகள் எச்சரிக்கை | Virakesari.lk
-
பௌத்த மயமாக்கல் வெல்லாவெளியில் வெடித்த போராட்டம் : துரத்தியடிக்கப்பட்ட தொல்பொருள்திணைக்களத்தினர் - களத்திற்கு விரைந்த தவிசாளர்கள்
21 Nov, 2025 | 06:12 PM தொல்பொருள் திணைக்களத்தினால் மட்டக்களப்பு மாவட்டம் வெல்லாவெளி பிரதேச சபைக்குட்பட்ட 35 ஆம் கிராமம் கண்ணபுரம், கிராமத்தில் உள்ள வீதியில் தொல்லியல் இடமாக அங்கிகரித்து பெயர் பலகை நடுவதற்கு வெள்ளிக்கிழமை (21) வருகை தந்த தொல்லியல் திணைக்களத்தினரை போரதீவுப் பற்றுப் பிரதேசசபையின் தவிசாளர் உள்ளிட்ட குழுவின் அவ்விடத்திற்கு விரைந்து வருகை தந்த தொல்பொருள் திணைக்களத்தினரை துரத்தியடித்தியுள்ளர். இச்சம்பவத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து அப்பகுதி மக்கள் ஆர்ப்பட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் பிரதேச வெல்லாவெளியில் அமைந்துள் பிரதேச செயலகத்திற்குச் சென்ற மக்கள் பிரதே சபைத் தவிசாளர்கள் பொதுமக்கள் உள்ளிட்ட குழுவினர் அற்கு நடைபெற்ற கலந்துரையாடலின் பின்னர் கலைந்து சென்றனர். இதன்போது கருத்தத் தெரிவித்த போரதீவுப் பற்றுப் பிரதெ சபையின் தவிசாளர் வி.மதிமேனன். போரதீவுப் பற்றுப் பிரதேச சபைக்கு உட்பட்ட வேத்துச்சேனை, கண்ணபுரம், மற்றும் விவேகானந்தபுரம், ஆகிய கிராமங்களுக்கு தொல்லியல் திணைக்களம் என்ற பெயரிலே மூன்று உத்தியோகத்தர்கள் தொல்லியல் பொருட்கள் இருப்பதாக தெரிவித்து அடையாளப்படுத்தி பல பதாகைகளை இடுவதற்காக எமது பிரதேசத்திற்கு வந்திருந்தனர். இந்த நிலையில் எமது பிரதேச சபை உறுப்பினர்கள் இப்பிரதேச பொது அமைப்புக்கள் பொதுமக்கள் அயல் பிரதேசமான மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபையின் தவிசாளர் உள்ளிட்ட அனைவரும் ஒன்றிணைந்து இவ்வாறு தொல்லியல் இடம் என அடையாளப்படுத்தும் இடுப்பதற்காக வருகை தந்திருந்த அதிகாரிகளை எதிர்த்து இவை தொல்லியல் இடம் இல்லை என்பதை நாங்கள் தெரிவித்து இருந்தோம். தொல்லியல் திணைக்களத்தினால் 24 இடம் இருப்பதாக தெரிவித்திருந்தார்கள் தற்போது கூறுகின்றார்கள் 34 இடம் இருப்பதாக கூறுகின்றார்கள். அவற்றுக்குரிய பதாகைகளை நடுவதற்காக வந்திருப்பதாக தெரிவித்தார்கள் அந்த வகையில் அதற்கு எமது மக்களுடன் சேர்ந்து நாங்கள் பாரிய எதிர்ப்பினை நாங்கள் தெரிவித்தோம். வடகிழக்கிலே தமிழர்களுக்கு பாரி அச்சுறுத்தலாக வன பாதுகாப்புத் திணைக்களமும் தொல்லியல் திணைக்களமும் காணப்படுகின்றன. அதுபோன்றுதான் அண்மையில் திருவோணமலையிலும், புத்தர் சிலை ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. வடகிழக்கிலே பௌத்தமயமாக்கல் நடவடிக்கை தேசிய மக்கள் சக்தி என்ற பெயரிலே வந்த அரசாங்கம் முன்னர் ஜேவிபியினுடைய கொள்கையை பின்பற்றி வந்துள்ள அரசாங்கம் பலாத்காரமாக தமிழர்கள் வாழும் பகுதியிலே தொல்லியல் இடங்கள் இருக்கின்றது என்பதை தெரிவித்து இனங்களுக்கிடையிலான இன முரண்பாட்டை தோற்றுவித்து எமக்குள்ளே ஓர் குழப்பத்தை ஏற்படுத்த பார்க்கிறார்கள். அந்த வகையில் இந்த தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்துக்கு நாங்கள் கூறிக் கொள்வது யாதெனில் எங்கள் வடகிழக்கிலே இருக்கின்ற தமிழ் மக்களை நீங்கள் குழப்ப முடியாது. எப்போதும் நாங்கள் எமது சமய புராண பூர்வீக நிலத்தை நாங்கள்தான் ஆள வேண்டும் நீங்கள் உங்களுடைய பௌத்த மயமாக்கல் என்பதை தொல்பொருள் திணைக்களத்தை வைத்து எமது நிலங்களை அபகரிக்க கனவிதும் நினைக்க கூடாது என்பதை நாம் தெரிவித்துக் கொள்கின்றோம். கடந்த காலத்தில் சில தமிழ் மக்கள் விட்ட தவறினால் மட்டக்களப்பு மாவட்டத்திலும் ஒரு தமிழ் பாராளுமன்ற உறுப்பினர் தேசிய மக்கள் சக்தியின் ஊடாக உருவாக்கி இருக்கின்றார். பிரதேச சபைகளுக்கு உறுப்பினர்கள் உருவாகி இருக்கின்றார்கள் எதிர்வரும் காலங்களில் தேசிய மக்கள் சக்தி ஜேவிபி போன்ற கட்சிகளுக்கு தமிழ் மக்கள் மீண்டும் வாக்களித்து அவர்களை பாராளுமன்றத்துக்கோ மாகாண சபைக்கோ உள்ளுராட்சி சபைகளுக்கோ இனியாவது அனுப்பாமல் விட்டு எமது தமிழ் மக்களின் நிலங்களை பாதுகாப்பதற்கு எமது தமிழரசுக் கட்சிதான் என்றும் கடைசி வரைக்கும் நிற்கும் என்பதை நான் கூறிக் கொள்கின்றேன். இன்றைய தினம் இந்த செயற்பாட்டுக்காக நாம் பாரிய ஆர்ப்பாட்டம் ஒன்றை மேற்கொண்டு பிரதேச செயலாளருடன் உரையாடி உள்ளோம். எங்களுடைய தமிழ் மக்களுடைய பூர்வீக காணிகளில் பொது அமைப்புகளின் எதுவி சம்பந்தங்களும் இல்லாமல் எந்தவித கலந்துரையாடலும் இல்லாமல், தாங்கள் நினைத்தபடி பலாத்காரமாக அணுகி எதையும்சாதித்துவிட முடியாது. மக்களின் பலத்தினால் நாம் அவர்களின் அணுக்கலை நாம் இன்று முறியடித்து இருக்கின்றோம். எனவே தொல்லியல் திணைக்களத்தினர் முதன் முதலில் பொதுமக்களுடன் கலந்துரையாட வேண்டும் பிரதேச சபையினுடைய வீதியிலே பதாகைலையோ எதுவிலோ வேலை திட்டங்களோ மேற்கொள்ளும் போது பிரதேச சபையின் அனுமதியைப் பெற வேண்டும். எமது பிரதேசத்தில் அடையாளப்படுத்தி அவர்கள் அடையாளப்படுத்தி இருக்கும் 34 பிரதேச இடங்களுக்கும் சென்று அங்கிருக்கின்ற பொது அமைப்புகளுடன் கலந்துரையாட வேண்டும் அதன் பின்னர் தான் தொல்லியல் இடம் என்ன அடையாளப்படுத்தி பதாகைகளை இடவேண்டும் போன்ற தகவல்களை நாம் முன் வைத்திருக்கின்றோம் என இதன்போது போரதீவுப் பற்றுப் பிரதேச சபையின் தவிசானர் வி.மதிமேனன் தெரிவித்தார். பௌத்த மயமாக்கல் வெல்லாவெளியில் வெடித்த போராட்டம் : துரத்தியடிக்கப்பட்ட தொல்பொருள்திணைக்களத்தினர் - களத்திற்கு விரைந்த தவிசாளர்கள் | Virakesari.lk
-
'விஜய் விமர்சனம் இனி வேண்டாம்' - திடீரென முடிவெடுத்த சீமான்? பின்னணி என்ன?
தமிழக வெற்றிக்கழகத்தின் மாநில மாநாட்டுக்குப் பிறகு விஜய்யை மிகக் கடுமையாக விமர்சித்துவந்த சீமான், இனி விஜய் மீதான விமர்சனங்களை குறைத்துக் கொள்ள முடிவெடுத்திருப்பதாக கூறுகிறார்கள் உட்கட்சி விவரம் அறிந்த சிலர். இந்த முடிவின் பின்னணி என்ன? 2024 பிப்ரவரியில் த.வெ.க-வை தொடங்கினார் விஜய். அப்போது ஆரத்தழுவி வரவேற்ற நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், விஜய்யுடன் கூட்டணி வைக்க விருப்பம் தெரிவித்து விஜய்யின் நடவடிக்கைகளை வரவேற்று பேசிவந்தார். 2024 அக்டோபரில் நடந்த த.வெ.க-வின் முதல் மாநாட்டில் `நா.த.க-வை நட்பு சக்தியாக விஜய் முன்நிறுத்துவார்’ என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், சீமானை மறைமுகமாக விமர்சித்து அதிர்ச்சி கொடுத்தார் விஜய். சீமான், விஜய் 2024 நவம்பர் மாதத்தில் தமிழ்நாடு நாள் பொதுக்கூட்டத்தில் இதற்கு எதிர்வினையாற்றிய சீமான், "திராவிடம் வேறு, தமிழ்த் தேசியம் வேறு. தமிழர்களுக்குத் திராவிடம் அயலமை. இரண்டும் ஒன்று எனக் கூறுவது அடிப்படை தவறு. இது கொள்கை அல்ல… கூமுட்டை. அழுகிய கூமுட்டை. இது நடுநிலை அல்ல… கொடுநிலை. கொடும் சிறையிலிருந்து ரத்தம் சிந்தி வந்தவன் நான். சத்தமா பேசுகிறேனா? ஆமாம், சரக்கு இருக்கு, கருத்து இருக்கு. அதனால்தான் சத்தமா பேசுறேன்” என விளாசினார். இதிலிருந்து தொடங்கிய நா.த.க – த.வெ.க வார்த்தை போர், கரூர் சம்பவத்தின்போது உச்சத்தைத் தொட்டது. நம்மிடம் பேசிய நா.த.க கொள்கை பரப்புச் செயலாளர்கள் “நா.த.க-வின் இளைஞர் வாக்குகளையும், அ.தி.மு.க-வின் தி.மு.க எதிர்ப்பு வாக்குகளையும் குறிவைத்தே வியூகம் அமைத்தார் ஜான் ஆரோக்கியசாமி. ஆகையால் விஜய்யை இளைஞர்கள் மத்தியில் அம்பலப்படுத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டதால் கடுமையாக விமர்சித்தோம். அதில் நாங்கள் வெற்றிப் பெற்றதாகவும் நினைக்கிறேன். களச் செயல்பாடுகள் இன்றி கரூர் விவகாரத்துக்கு பின் தவெக பின்னடைவை சந்தித்து வருகிறது. தற்போது தேர்தல் நெருங்கும் நிலையில் தி.மு.க, பா.ஜ.க கூட்டணிகள்மீது கவனத்தை திருப்பி அவர்களை டார்கெட் செய்வதே நம் வேலை என சீமான் முடிவு செய்துள்ளார்.” என்றனர். சீமான் இந்த முடிவை எடுக்க சில சம்பவங்களும் இருக்கின்றன எனப் பேசத் தொடங்கினார்கள் தலைமைக்கு நெருக்கமானவர்கள் சிலர், "சென்னையில் முத்துராமலிங்க தேவர் நினைவு பொதுக்கூட்டமும், திருவாரூரில் நடந்த தண்ணீர் மாநாட்டு பொதுக்கூட்டத்திலும் சீமான் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக பேசினார். அதே நேரத்தில் விஜய்மீதும் லேசான விமர்சனங்களை வைத்தார். ஆனால் கூட்டத்தின் நோக்கத்தை விட ‘விஜயை சாடிய சீமான்’ எனும் பகுதி மட்டும் வைரலாக்கப்பட்டது, அதனை அண்ணன் சீமான் விரும்பவில்லை. களச் செயல்பாடுகளற்ற கட்சியை தொடர்ந்து பேசிக் கொண்டே அவர்களை உயிர்ப்புடன் வைத்திருக்க வேண்டாம்; தி.மு.க பாணியில் ‘கில்லிங் இன் சைலன்ஸ்’ வியூகத்திலேயே எதிர்க்கலாம் என முடிவு செய்திருக்கிறோம்.” என்றனர். இதன்பின்னே சில அரசியல் கணக்குகள் இருப்பதாக சொல்கிறார்கள் அரசியல் விமர்சகர்கள் ஒருசிலர் "விஜயின் அரசியலை அம்பலப்படுத்தினால் அவரது அபிமானிகள் நா.த.க-வுக்கு திரும்புவார்கள் என்பது நா.த.க-வின் கணக்கு. ஆனால் கடுமையான விமர்சனங்களும் இரண்டாம் கட்ட நிர்வாகிகளின் மோசமான குற்றச்சாட்டுகளும் விஜய் ரசிகர்களைத் கொதிப்படைய செய்துவிட்டன. ஒருவேளை விஜய் அரசியலை விட்டே போனாலும், ‘சீமானுக்கு வாக்களிக்கக் கூடாது’ என்ற மனநிலைக்கு விஜய் ரசிகர்கள் வந்துவிட்டனர் என்பதை நா.த.கவினர் தற்போது உணர்ந்திருக்கிறார்கள். இதை சரிகட்டவே விஜய் விமர்சனத்தை குறைக்க சீமான் முடிவு செய்துள்ளதாக தெரிகிறது. ரஜினி அரசியலுக்கு வருவதாக அறிவித்தபோது கடுமையாக விமர்சித்த சீமான், ரஜினி ‘கட்சி தொடங்கவில்லை’ என அறிவித்தபின், ‘அரசியல் ரீதியாக வைத்த விமர்சனங்கள் ரஜினியையோ அவரது ரசிகர்களையோ காயப்படுத்தியிருந்தால் வருந்துகிறேன்’ என்று கூறினார். அதேபாணியில் விஜய் ரசிகர்களை கையாளும் வியூகமாகக்கூட இருக்கலாம்.” என்றனர் 'விஜய் விமர்சனம் இனி வேண்டாம்' – திடீரென முடிவெடுத்த சீமான்… பின்னணி என்ன? | Seeman Calls Off Attacks on TVK Vijay - Vikatan
-
ராமேசுவரம் - மண்டபம் முகாமில் இலங்கை தமிழர் கொலை!
ராமேசுவரம்: ராமேசுவரம் அருகே மண்டபம் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் மது அருந்தியபோது ஏற்பட்ட தகராறில் இளைஞர் கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக ஒருவரை போலீஸார் கைது செய்தனர். ராமேசுவரம் அருகே மண்டபத்தில் உள்ள இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாமில் வசித்து வந்தவர் கவிராஜ் (27). முகாமுக்கு வெளியே வசிக்கும் இலங்கை தமிழர்கள் மலைச்செல்வம் (30), மணிகண்டன் (31). நண்பர்களான மூவரும் மண்டபம் முகாம் பகுதிக்குள் நேற்று இரவு மது அருந்தியபோது, அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. கவிராஜின் தலையில் சுத்தியலால் மலைச்செல்வன் தாக்கினார். படுகாயமடைந்த கவிராஜ், ராமநாதபுரம் அரசு தலைமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று காலை கவிராஜ் உயிரிழந்தார். இது தொடா்பாக மண்டபம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து மணிகண்டனை கைது செய்தனர். தலைமறைவாக உள்ள மலைச்செல்வனை போலீஸார் தேடி வருகின்றனர். இதனிடையே, மண்டபம் முகாமுக்குள் வெளிநபர்கள் பலர் அடிக்கடி வந்து செல்வதால் சட்டம், ஒழுங்கு பிரச்சினை ஏற்படுவதாகவும், அதை தடுக்க வேண்டும் என வலியுறுத்தி முகாமில் வசிக்கும் 50-க்கும் மேற்பட்ட இலங்கை தமிழர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களிடம் போலீஸார் பேச்சுவார்த்தை நடத்தி சமாதானப்படுத்தினர். ராமேசுவரம் - மண்டபம் முகாமில் இலங்கை தமிழர் கொலை!
-
கடற்றொழில் அமைச்சருக்கு தீர்வுகாண திராணியில்லை; வடமராட்சி மீனவர்கள் விசனம்!
யாழ்ப்பாணம் 20 மணி நேரம் முன் கடற்றொழில் அமைச்சருக்கு தீர்வுகாண திராணியில்லை; வடமராட்சி மீனவர்கள் விசனம்! வடக்கு மாகாண மீனவர்களின் பிரச்சினைக்குக் கடற்றொழில் அமைச்சரால் தீர்வு கிடைக்கும் என்று எதிர்பார்த்தோம் ஆனால் முன்னரை விட இப்போதே வடக்கு மீனவர்கள் எதிர்கொள்ளும் நெருக்கடிகள் நாளுக்கு நாள் அதிகரித்துள்ளன என்று வடமராட்சி மீனவர்கள் விசனம் தெரிவித்துள்ளனர். அவர்கள் மேலும் தெரிவிக்கையில்; இதுவரை காலமும் இல்லாத வகையில் மீனவ சமூகம் பெரும் இன்னல்களுக்கு முகம் கொடுத்து வருகிறது. எங்களது பிரச்சினைகள் தொடர்பில் ஒரு தடவையேனும் கடற்றொழில் அமைச்சர் சந்தித்துக் கலந்துரையாடவில்லை. தேர்தலில் வாக்குப் பெறுவதற்காக மீனவர் பிரச்சினைகளுக்குத் தீர்வுகாண நடவடிக்கை எடுப்போம் என்று கூறியவர்கள் அதன் பின்னர் இன்று வரை திரும்பியும் பார்க்கவில்லை. வடக்குக் கடலில் இந்திய மீனவர்கள் எல்லைதாண்டல் அதிகரித்துள்ளது. நாளாந்தம் நூற்றுக்கணக்கான இந்திய இழுவைப்படகுகள் படையெடுத்து வருகின்றன. இதற்குப் பொறுப்பான கடற்றொழில் அமைச்சரே பாரா முகமாக உள்ளபோது கடற்படையினரையோ, அரசாங்கத்தையோ குறைசொல்ல முடியாது. எனவே அவரை மாற்றி மீனவர் பிரச்சினை தொடர்பில் தெரிந்த ஒருவரை அமைச்சராக நியமிக்க ஜனாதிபதி நடவடிக்கை எடுக்க வேண்டும்- என்றனர். கடற்றொழில் அமைச்சருக்கு தீர்வுகாண திராணியில்லை; வடமராட்சி மீனவர்கள் விசனம்!
-
போதைப்பொருள் கடத்திய மற்றுமொரு படகு கைப்பற்றல்!
20 Nov, 2025 | 11:12 AM தெற்கு கடற்பரப்பில் போதைப்பொருள் கடத்திய மற்றுமொரு படகு கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது. இந்த படகில் இருந்த 6 இலங்கையர்கள் கடற்படையினரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர். போதைப்பொருள் என சந்தேகிக்கப்படும் 15 பொதிகள் படகிலிருந்து கைப்பற்றப்பட்டுள்ளதாக கடற்படையினர் தெரிவித்தனர். கைதுசெய்யப்பட்ட சந்தேக நபர்கள் இன்று வியாழக்கிழமை (20) காலை தங்காலை துறைமுகத்திற்கு கொண்டுசெல்லப்பட்டுள்ளனர். போதைப்பொருள் கடத்திய மற்றுமொரு படகு கைப்பற்றல்! | Virakesari.lk
-
வடக்கு கடற்றொழிலாளர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பில் ஜனாதிபதிக்கு ரவிகரன் எடுத்துரைப்பு - விரைவில் முல்லைத்தீவுக்கு அனுர விஜயம்!
வடக்கு மாகாண கடற்றொழிலாளர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பில் ஜனாதிபதியிடம் முறையிட்ட வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன், கடற்றொழிலாளர்களைச் நேரில் சந்தித்து கலந்துரையாடுமாறும் கோரிக்கை முன்வைத்துள்ளார். இந்நிலையில் ரவிகரனின் கோரிக்கையினை ஏற்றுக்கொண்ட ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க, விரைவில் முல்லைத்தீவிற்கு வருகைதந்து கடற்றொழிலாளர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பில் நேரடியாகக் கேட்டறியவுள்ளதாகப் பதிலளித்துள்ளார். இலங்கை தமிழ் அரசுக் கட்சிக்கும், ஜனாதிபதிக்கும் இடையில் நேற்று (19) ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்ற சந்திப்பிலேயே இவ்விடயம் தொடர்பில் பேசப்பட்டுள்ளது. இது தொடர்பில் துரைராசா ரவிகரன் மேலும் கருத்துத் தெரிவிக்கையில், இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் தலைவர் மற்றும் பொதுச்செயலாளர், கட்சியின் எட்டு பாராளுமன்ற உறுப்பினர்கள் உள்ளடங்கலான குழுவினருக்கும் ஜனாதிபதிக்கும் இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றது. அதற்கமைய தமிழ் மக்களின் அரசியல் தீர்வு, மாகாண சபைத் தேர்தல், வடகிழக்கில் உள்ள காணிப் பிரச்சினைகள், துயிலும் இல்லங்களை விடுவிப்புச் செய்தல், வட, கிழக்கில் அதிகரித்துள்ள படையினரின் பிரசன்னம், பௌத்தமயமாக்கல் செயற்பாடுகள் அண்மையில் திருகோணமலையில் இடம்பெற்ற சர்ச்சைக்குரிய புத்தர் சிலை விவகாரம், வடக்கு, கிழக்கில் உள்ள கடற்றொழிலாளர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பிலும் பேசியிருந்தோம். அதிலும் குறிப்பாக வடக்கு, கிழக்கில் இடம்பெறும் அதிகரித்த சட்டவிரோத கடற்றொழில் செயற்பாடுகளால் மிக மோசமாக கடற்றொழிலாளர்கள் பாதிக்கப்படுகின்றார்கள் என்பதை இதன்போது சுட்டிக்காட்டியிருந்தேன். அதேவேளை வட மாகாணத்தைப் பொறுத்தவரையில் முல்லைத்தீவு, மன்னார், கிளிநொச்சி, யாழ்ப்பாணம் ஆகிய நான்கு மாவட்டங்கள் கடற்றொழிலுடன் தொடர்புடைய மாவட்டங்களாகக் காணப்படுகின்றன. இந்நிலையில் அங்கு அதிகளவில் சட்டவிரோத கடற்றொழில் செயற்பாடுகள் இடம்பெறுவதையும் அதனால் மீனவர்கள் எதிர்நோக்குகின்ற பிரச்சினைகளையும் ஜனாதிபதியின் கவனத்திற்குக் கொண்டுவந்திருந்தேன். அதேவேளை வட மாகாண கடற்றொழிலாளர் இணையம் பாராளுமன்றிற்கு வருகைதந்து பாராளுமன்ற உறுப்பினர்களைச் சந்தித்து இந்த சட்டவிரோத கடற்றொழிலால் ஏற்படுகின்ற பிரச்சினைகள் தொடர்பில் ஜனாதிபதியைச் சந்திப்பது தொடர்பாக கோரிக்கை விடுத்த விடயத்தினையும் இதன்போது ஜனதிபதியிடம் தெரியப்படுத்தினேன். அத்தோடு சட்டவிரோத கடற்றொழில் செயற்பாடுகள் தொடர்பாக ஜனாதிபதியைச் சந்திப்பதற்கு முல்லைத்தீவு மாவட்ட கடற்றொழிலாளர் சமாசம், சம்மேளனம், கடற்றொழிலாளர்கள் சங்கங்கள் உள்ளிட்ட தரப்பினரால் கடிதங்கள் மூலம் என்னிடம் கோரிக்கை விடுத்ததையும், அந்தக் கோரிக்கைக் கடிதங்களுடன் ஏற்கனவே என்னால் ஜனாதிபதிக்கு அனுப்பப்பட்ட கடிதம் தொடர்பிலும் நினைவுபடுத்தினேன். இவ்வாறாக வடக்கு மாகாண கடற்றொழிலாளர்கள் ஜனாதிபதியைச் சந்திக்க விரும்புகின்றனர் என்ற தகவலையும் தெரியப்படுத்தினேன். எனவே சட்டவிரோத கடற்றொழில் செயற்பாடுகளால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ள வட பகுதி மீனவர்களின் கோரிக்கைகளுக்கு அமைய, அவர்களை சந்தித்து அவர்களின் குறைகளை கேட்டறிந்து அக்குறைகளைத் தீர்ப்பதற்கான நடவடிக்கைகளையும் மேற்கொள்ளவேண்டும் எனவும் வலியுறுத்தியிருந்தேன். எமது கட்சியினரும் இதுதொடர்பில் பேசியிருந்தார்கள். இந்நிலையில் கூடிய விரைவில் தாம் முல்லைத்தீவிற்கு வருகைதந்து அந்த மீனவர்களுடன் நேரடியாக பேசுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளவுள்ளதாக ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க கூறியிருந்தார். இதுதவிர வன இலாகா, வனஜீவராசிகள் ஆகிய திணைக்களங்கள் கடந்த 2009ஆம் ஆண்டிற்குப் பிறகு ஆக்கிரமித்த இடங்களைப் பற்றியும், முல்லைத்தீவு மாவட்டத்தில் மாத்திரம் நூற்றுக்கும் மேற்பட்ட படையினரது முகாம்கள் அமைக்கப்பட்டுள்ள விடயங்கள் தொடர்பிலும் இதன்போது ஜனாதிபதியின் கவனத்திற்கு கொண்டுவந்திருந்தேன் என்றார். வடக்கு கடற்றொழிலாளர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பில் ஜனாதிபதிக்கு ரவிகரன் எடுத்துரைப்பு - விரைவில் முல்லைத்தீவுக்கு அனுர விஜயம்! | Virakesari.lk
-
வட மாகாணத்தில் அதிகளவான சைபர் குற்றங்கள் தொடர்பான முறைப்பாடுகள் பதிவு - பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர்
20 Nov, 2025 | 02:41 PM (எம்.ஆர்.எம்.வசீம்,இராஜதுரை ஹஷான்) நாளொன்றுக்கு சுமார் 25 சைபர் குற்றங்கள் தொடர்பான முறைப்பாடுகள் பதிவாகின்றன. வடக்கு மாகாணத்திலேயே அதிகளவான முறைப்பாடுகள் பதிவாகின்றன என்று பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற விவகார அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்தார். பாராளுமன்றத்தில் நேற்று வியாழக்கிழமை நடைபெற்ற அமர்வின் போது வாய்மூல விடைக்கான வினாக்கள் வேளையின் போது தேசிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ரஜீவன் ஜெயச்சந்திரமூர்த்தி முன்வைத்த கேள்விகளுக்கு பதிலளிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அங்கு அவர் மேலும் உரையாற்றியதாவது, நிதி கணினிக் குற்றங்கள் குறித்து விசேட கவனம் செலுத்தப்பட்டுள்ளது. 2020 ஆம் ஆண்டு 24 குற்றங்கள் 2021 ஆம் ஆண்டு 577 குற்றங்கள், 2022 ஆம் ஆண்டு 654 குற்றங்கள், 2023 ஆம் ஆண்டு 472 குற்றங்கள், 2024ஆம் ஆண்டு 1,539 குற்றங்கள் பதிவாகியுள்ளன. 2025 ஒக்டோபர் 31 ஆம் திகதி வரையான காலப்பகுதியில் சைபர் குற்றங்கள் தொடர்பாக 2,368 முறைப்பாடுகள் பதிவாகியுள்ளன. வடக்கு மாகாணத்தில் அதிகளவான குற்றங்கள் பதிவாகியுள்ளன. அதேபோல், நாட்டின் பல மாவட்டங்களில் உள்ள பொலிஸ் தலைமையகத்தில் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் கீழ் கணினி குற்ற விசாரணை உப பிரிவுகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன என்றார். வட மாகாணத்தில் அதிகளவான சைபர் குற்றங்கள் தொடர்பான முறைப்பாடுகள் பதிவு - பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் | Virakesari.lk
-
வேலணை - சாட்டி கடற்கரையின் சவுக்கு மரங்களைப் பாதுகாக்க கோரிக்கை!
20 Nov, 2025 | 03:19 PM வேலணை பிரதேச சபைக்குட்பட்ட சாட்டி கடற்கரையின் அழகு மிக்க "சவுக்கு" மரங்கள் பாதுகாக்கப்பட்டு அவை உரியமுறையில் பராமரிகப்பட வேண்டும் என சபையின் உறுப்பினர் அனுசியா ஜெயகாந்த் கோரிக்கை விடுத்துள்ளார். அதேநேரம், கடற்கரையோரத்தில் குவிந்திருக்கு கழிவுகளை அகற்றி சுற்றுலா தளத்; அழகுபடுத்த வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார். வேலணை பிரதேச சபையின் மாதாந்த அமர்வு இன்று (20) காலை 10 மணிக்கு தவிசாளர் தலைமையில் நடைபெற்றது. இதன்போது, இந்த விடயம் கலந்துரையாடப்பட்டுள்ளது. இது குறித்து அவர் மேலும் கருத்து வெளியிடுகையில், வடபகுதியில் குறிப்பாக யாழ் மாவட்டத்தின் சுற்றுலா மையங்களில் முக்கிய இடமாக இந்த சாட்டிக் கடற்கரை இருக்கின்றது. இக்கடற்கரையின் அழகு இந்த "சவுக்கு" மரங்கள்தான். ஆனால் அவற்றுள் சில மரங்கள் பாதுகாப்பற்று முறியும் நிலையிலும், மின்சார வடங்கள் செல்லும் மார்க்கத்துக்கு இடையூறு விளைவிக்கும் வகையிலும் இருக்கின்றன. இவற்றை உரிய முறையில் பராமரித்து சுற்றுலா தளத்தின் பாதுகாப்பை உறுதி செய்வது சபையின் பொறுப்பாகும். அதேபோன்று, இந்தப் பகுதியில் காணப்படும் கடற் சாதாளைகளும் அகற்றப்படுவது அவசியமாகும். அந்த வகையில் கரைசேர்ந்து கிடக்கும் சாதாளைகளை பசளைக்காக பெற்றுக்கொள்ள விரும்பும் நபர்களுக்கு விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் சபையில் முன்மொழிவாக வலியுறுத்தினார். குறித்த கோரிக்கை உறுப்பினர்களால் ஏற்றுக்கொள்ளப்பட்ட நிலையில், குறித்த சீரமைப்பை அடுத்த மாதம் மேற்கொள்வதற்கு ஏற்பாடு செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என தவிசாளர் அறிவித்துள்ளார். அதேபோன்று சாதாளைகளையும் தேவையானோருக்கு விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது. வேலணை - சாட்டி கடற்கரையின் சவுக்கு மரங்களைப் பாதுகாக்க கோரிக்கை! | Virakesari.lk
-
கஜேந்திரகுமார் பொன்னம்பலம் முன்வைத்த சமஷ்டி தீர்வு பற்றிய கோரிக்கை தமிழ்நாடு முதலமைச்சரிடம் முன்வைப்பு: தொல் திருமாவளவன்
20 Nov, 2025 | 04:05 PM கஜேந்திரகுமார் பொன்னம்பலம் முன்வைத்த சமஷ்டி தீர்வு பற்றிய கோரிக்கை தமிழ்நாடு முதலமைச்சரிடம் முன் வைக்கப்பட்டதாக விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவரும் இந்திய பாராளுமன்ற உறுப்பினருமான தொல் திருமாவளவன் தெரிவித்தார். அவர் இன்று வியாழக்கிழமை (20) தமிழ்நாடு முதலமைச்சரை சந்தித்த பின் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையில் அவரது கட்சியை சேர்ந்தவர்கள் என்னை சந்தித்தார்கள். இதன்போது அவர்கள் முன்வைத்த கோரிக்கை தொடர்பில் ஒரு மனுவை முதல்வர் அவர்களிடம் முன் வைத்துள்ளோம் இலங்கையின் அதிபர் அனுரகுமார திஸாநாயக்க அவர்கள் புதிய அரசியலமைப்பு சட்டத்தை இலங்கை தேசத்திற்காக உருவாக்க உள்ளார். அந்த புதிய அரசியலமைப்பு சட்டத்தில் ஈழத்தமிழர்களுக்கு தன்னாட்சி அதிகாரத்தை வழங்கும் வகையில் ஒரு கூட்டாட்சி நிர்வாக முறையை அரசமைப்பின் வழியாக கொண்டு வர வேண்டும் என்றும் அவ்வாறு கூட்டாட்சி சட்டத்தை அரசியலமைப்பில் இணைப்பதற்கு இந்திய அரசின் தலையீடு இன்றியமைபாததாகவுள்ளது. இந்திய அரசை தலையிட வைக்க தமிழ்நாடு அரசு அழுத்தம் கொடுக்க வேண்டும் என்பது தான் அவர்கள் முன்வைத்த கோரிக்கை. அதனடிப்படையில் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களை சந்தித்து தமிழ்நாடு அரசு இந்திய அரசுக்கு ஈழத்தமிழர் நலன்களுக்காக புதிய அரசியலமைப்பில் தமிழர்களின் இறையாண்மையை நிலைநாட்டும் வகையில் தன்னாட்சி அதிகாரத்தை வழங்க ஆவண செய்ய வேண்டும். இதனை இந்திய அரசு வலியுறுத்த வேண்டும் என்கிற கோரிக்கை மனுவை முதல்வர் இடத்தில் வழங்கினோம். அத்துடன் அது தொடர்பாக கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அவர்கள் முதல்வருக்கு எழுதிய கடிதத்தையும் அவரிடம் வழங்கினோம். இது முக்கியமான கால கட்டத்தில் நாம் விடும் கோரிக்கை. ஏற்கனவே இந்திய அரசு ராஜீவ்காந்தி காலத்தில் ஒரு ஓப்பந்தத்தை செய்துள்ளது. அந்த ஒப்பந்தத்தில் தமிழர்களுக்கு தன்னாட்சி அதிகாரத்தை வழங்க வேண்டும் என்று கோரப்பட்டுள்ளது. அதன்படி அவர்கள் அரசியலமைப்பு சட்டத்தை திருத்தம் செய்யவில்லை. 13 வது திருத்தம் மாகாண சபைகளுக்கு எந்த அதிகாரமும் இல்லாத திருத்தம். எனவே 13 வது திருத்தம் எங்களுக்கு உடன்பாடில்லை என ஈழத்தமிழர்கள் வலியுறுத்தி வருகிறார்கள். சமஷ்டி ஆட்சிமுறையை கொண்டு வர வேண்டும் என்பது தான் அவர்களது கோரிக்கை. இதனை விளக்கி பேசி முதலமைச்சரிடம் மனு கொடுத்து இந்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் என கோரியுள்ளோம் எனத் தெரிவித்தார். கஜேந்திரகுமார் பொன்னம்பலம் முன்வைத்த சமஷ்டி தீர்வு பற்றிய கோரிக்கை தமிழ்நாடு முதலமைச்சரிடம் முன்வைப்பு: தொல் திருமாவளவன் | Virakesari.lk
-
நல்லூர் நினைவாலயம் நாளை அங்குரார்ப்பணம்
20 Nov, 2025 | 05:16 PM தாய்மண்ணின் விடியலுக்காக வித்தாகிப்போனவர்களின் நல்லூர் நினைவாலயம் நாளை வெள்ளிக்கிழமை (21) மாலை 6 மணிக்கு அங்குரார்ப்பணம் செய்துவைக்கப்படும் என ஏற்பாட்டுக் குழு அறிவித்துள்ளது. தாய்மண்ணுக்காக தம் உயிர்களை அர்ப்பணித்தவர்களுடன் மாமனிதர்களையும் நாட்டுப்பற்றாளர்களையும் மற்றும் பல ஆவணப்படுத்தல்களையும் கொண்டு இந்த நல்லூர் நினைவாலயம் அமைக்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. “தலைமுறைகள் கடந்து வாழும் மாவீரச் செல்வங்களின் நினைவாலயத்திற்கு உங்கள் இளைய தலைமுறையினரையும் அழைத்து வந்து வரலாற்றினைக் கடத்துங்கள். உங்கள் மனப்பதிவுகளைப் பதிந்துவிட்டுச் செல்லுங்கள்” என ஏற்பாட்டுக் குழு பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளது. நல்லூர் நினைவாலயம் நாளை அங்குரார்ப்பணம் | Virakesari.lk
-
யார் ஆட்சிக்கு வந்தாலும் பௌத்த சிங்களமயமாக்கல் தொடரும்! - யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம்
யார் ஆட்சிக்கு வந்தாலும் பௌத்த சிங்களமயமாக்கல் தொடரும் என யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் இன்றைய தினம் (20) தெரிவித்துள்ளது. அந்த அமைப்பு மேலும் தெரிவிக்கையில், திருகோணமலையில் தமிழர் தாயகத்தில் கடற்கரைப் பிரதேசத்தில் சட்டத்திற்கு முரணாக புத்த பிக்குகளினால் புத்தர் சிலையொன்று நிறுவப்பட்டிருக்கின்றது. அங்குள்ள தமிழ் மக்களின் கடும் எதிர்ப்பின் பின் சட்ட அனுமதியற்ற கட்டுமானம் என்று சொல்லி ஸ்ரீலங்கா பொலிஸாரினால் அப்புறப்படுத்தப்படுகின்றது. இதன் பிறகு பாராளுமன்றத்தில் அரசாங்கத்தால் புத்தர் சிலையின் பாதுகாப்பு காரணமாகத்தான் அப்புறப்படுத்தப்பட்டது மீண்டும் நிறுவப்படும் என்ற பின் மீண்டும் அதே இடத்தில் அரசாங்கத்தால் புத்தபிக்குகள் மற்றும் பொலிஸாருடன் இணைந்து அதே புத்தர் சிலை நிறுவப்படுகின்றது. மாற்றம் என்று சொல்லி இனவாதமற்ற புதிய அரசியல் கலாசாரம் ஒன்று உருவாகும் என்று நம்பி வாக்கு செலுத்திய தமிழ் மக்கள் இன்று முழுவதுமாக அரசினால் ஏமாற்றப்பட்டிருக்கின்றனர். இது இன்று நேற்றில்லை 76 வருடகாலமாக இந்த நாட்டில் இது தான் நடந்தேறியிருக்கின்றது. சட்டமுரணாக தமிழர் தாயகத்தில் வைக்கப்பட்டிருந்த புத்தர் சிலை அகற்றப்பட்ட பின் பாராளுமன்றத்தில் மீண்டும் நிறுவுவோம் என்று குறிப்பிட்டு மீள சிலையை மக்களின் எதிர்ப்புக்களை மீறி நிறுவியிருக்கும் செயல் எந்த அரசு அதிகாரத்திற்கு வந்தாலும் சிங்கள பேரினவாதப்போக்கு மாறாது என்பதையே உணர்த்துகின்றது. புத்தர் சிலையின் பாதுகாப்பு கருதி அகற்றப்பட்டிருக்கின்றது என்று சொல்லுவது தொடர்ச்சியாக சிங்கள மக்களிடத்தில் தமிழர்களை தீயவர்களாக சித்தரிப்பதைத் தான் எடுத்துக்காட்டுகிறது.புத்தர் சிலையை வைத்தது யார்? அமைதியாக தங்கள் அன்றாட வாழ்க்கையை வாழும் தமிழ் மக்களை குழப்பியது யார்? புத்தர் சிலையை அகற்ற வந்த பொலிஸாரின் கன்னத்தில் அறைந்தது யார்? இவர்களுக்கு எதிராக எல்லாம் இந்த நாட்டில் சட்டம் செயற்படாதா? நாட்டின் ஆட்சியாளர்கள் மக்களுக்கான சேவையை ஆற்றுவதைக் காட்டிலும் புத்த பிக்குகளின் பேச்சை வேதவாக்காக கேட்டு நடப்பதையே இனப்பிரச்சினை தொடங்கிய காலகட்டத்திலிருந்து அவதானிக்கக்கூடியதாக இருக்கின்றது. ஏன் இனப்பிரச்சினையின் முக்கிய காரணமே சிங்கள பௌத்தமயமாக்கல் தான். யுத்தத்தின் ஆணிவேரும் இதுதான். தொடர்ச்சியாக தமிழர் நிலங்கள் புத்த வழிபாடு என்ற பெயரிலே பௌத்த சிங்களமயமாக்கப்பட்டுக்கொண்டே இருந்துவந்துள்ளது. சிங்கள குடியேற்றங்களால் தமிழர் குடியேற்றப் பரம்பல் மாற்றியமைக்கப்பட்டுக்கொண்டே இருந்து வந்துள்ளது. வரலாற்றில் மகாவலி ஓயா மற்றும் கல் ஓயா குடியேற்றம் என்று தமிழர் நிலங்கள் முற்றுமுழுதாக பெயர் மாற்றம் பெற்று முழுவதுமாக மாறியிருக்கிறது. தொடர்ச்சியாக இன்று வரை தமிழர்களின் தொல்லியல் நிலங்களான குருந்தூர் மலை, வெடுக்குநாறிமலை, உகந்தை மலை என்று பல்வேறு இடங்களில் பௌத்த ஆக்கிரமிப்பு நடைபெறுகின்றது. தையிட்டி, திரியாய் என்று தமிழர் நிலங்களும் இதில் இலக்கு வைக்கப்பட்டிருக்கின்றது. இதில் இருந்து தமிழ் மக்கள் விளங்கிக்கொள்ள வேண்டிய விடயம் என்னவென்றால், யார் ஆட்சிக்கு வந்தாலும் ஒரு விடயம் தவறாமல் நடக்கும். அது சிங்கள பௌத்தமயமாக்கல். ஏன் என்றால் அது திட்டமிடப்பட்ட ஒரு நிகழ்ச்சி நிரல். தமிழ் மக்களின் இனப்பரம்பலை மாற்றுவதென்பது மாறி மாறிவரும் சிங்கள ஆட்சியாளர்களால் காலத்திற்கு காலம் நிகழ்ந்தேறிக்கொண்டே இருந்து வந்துள்ளது. சிங்கள மக்கள் விளங்கிக்கொள்ளவேண்டிய விடயம் என்னவென்றால், தமிழ் மக்கள் சிங்கள மக்களின் வழிபாட்டிற்கு என்றுமே எதிரானவர்கள் இல்லை. நாங்கள் அனைத்து மதத்தையுமே சமமாக மதிப்பவர்கள். அனைத்து சமய வழிபாடுகளையும் மதித்து நடப்பவர்கள் அவமதிப்பது கிடையாது. ஆனால் வழிபாடு என்ற பெயரிலே திட்டமிட்ட நில ஆக்கிரமிப்புக்களால் தமிழருடைய நிலங்கள் பறிபோவதென்பதை நிச்சயமாக ஏற்றுக்கொள்ள மாட்டோம். தமிழர் நிலங்கள் ஆக்கிரமிக்கப்பட்டு அவற்றிற்கு பல்வேறு கட்டுக்கதைகள் கட்டப்பட்டு பௌத்த நிலமாக மாறுவதற்கு எதிரானவர்கள். தமிழருடைய பூர்விகம் கேள்விக் குறியாக்கப்படுவதற்கு எதிரானவர்கள். தமிழருடைய தொல்லியல் ரீதியான நிலம் ஆக்கிரமிக்கப்படுவதற்கு எதிரானவர்கள். தமிழர் குடியேற்றப்பரம்பல் மாற்றியமைக்கப்படுவதற்கு எதிரானவர்கள். தமிழர்களுடைய இனவிகிதத்தை திட்டமிட்டு மாற்றுவதற்கு எதிரானவர்கள். நாங்கள் ஏன் ஒற்றையாட்சி அரசியலைமைப்பை மறுக்கின்றோம் தெரியுமா? இதனால்தான். சிங்கள பௌத்த பேரினவாத்ததிற்கு அடிபணிந்து கிடப்பதனால்தான். இங்கே முதலில் சுற்றுலாத்தளமான கடற்கரையில் புத்தர் சிலையை அமைப்பதற்கான அனுமதி வழங்கியது யார்? பிரதேச சபையிடமிருந்தோ இல்லாவிட்டால் நகர சபையிடமிருந்தோ அனுமதிபெறப்பட்டதா? இல்லை. முற்றமுழுதாக புத்தபிக்குகளே இலங்கையின் நிரந்தர நிறைவேற்று ஐனாதிபதிகளாக இருந்து வந்துள்ளனர்.சுருக்கமாக சொல்லுவதென்றால் நாட்டின் அரச இயந்திரம் புத்த பிக்குகளுக்கு அடிபணிந்து இருக்கின்றது. முழு சட்டங்களையும் தங்கள் பக்கம் வளைக்கும் வலது சாரிகளின் பக்கம் அரசு முழுவதுமாக திரும்பி நிற்கின்றது.தாங்கள் இடது சாரிகள், கம்யூனிச சிந்தாந்தத்தை உள்வாங்கி கொண்டு செயற்படுவதாக தங்களை தாங்களே கூறிக்கொள்ளும் அரசு நாட்டில் பாதிக்கப்பட்டிருக்கும் சிறுபான்மையினரான தமிழ்மக்கள் பக்கம் ஏன் நிற்கவில்லை என்று ஒரு கேள்வி எழுகிறது. இன்னும் எவ்வளவு காலத்திற்கு நாங்கள் அடக்குமுறைகளையும் ஆக்கிரமிப்புக்களையும் தாங்கிக்கொள்ள முடியுமென்று தெரியவில்லை. இந்தப்பிரச்சினையில் ஊடகவியலாளர்களும் தாக்கப்பட்டிருக்கின்றார்கள் என்பது இலங்கையின் ஜனநாயகத்தை கேள்விக்குறியாக்கும் செயல். இது ஏன் இவ்வளவு காலமும் பயங்கரவாத தடைச்சட்டமும் எடுக்கப்படவில்லை? அரசியல் கைதிகளும் முழுவதுமாக விடுதலை செய்யப்படவில்லை. இதில் அரசாங்கம் சார்பில் வடக்கு கிழக்கில் தெரிவு செய்யப்பட்டிருக்கும் பாராளுமன்ற உறுப்பினர்கள் என்ன செய்து கொண்டு இருக்கின்றார்கள்? தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்காக அரசியல் தீர்வுக்காக இது வரை வாய் திறந்திருக்கின்றார்களா? ஒவ்வொரு பிரச்சினைகளுக்கும் பின்னால் ஒரு அரசியல் அரங்கேற்றம் நிகழுவதாகவே நாங்கள் கணிக்கின்றோம். 1. புத்தர் சிலையை வைத்துப்பார்த்து தமிழ் மக்கள் இன்னும் தமிழ் உணர்வுடன் தான் இருக்கின்றார்களா என்று பார்ப்பது.அவர்கள் எதிர்க்கிறார்கள் என்றவுடன் அகற்றுவது சிங்கள மக்களிடத்தில் செல்வாக்கு சரியுமென்ற பின் மீண்டும் நிறுவுவது. 2. அரசாங்கத்தை பலவீனப்படுத்துகின்ற எதிர்கட்சியின் திட்டமிடலாக இருக்கலாம்.ஒன்று தமிழ் மக்களிடத்தே பலவீனப்படுத்துவது அல்லது சிங்கள மக்களிடத்தே பலவீனப்படுத்துவது 3. இறுதியில் புற்றுக்குள்ளே இருந்து வெளியே வந்திருக்கும் பாம்புகளை ப்போல் சிலர் வெளியே வந்திருக்கின்றனர்.யாரென்று பார்த்தால் கடந்த ஐனாதிபதித்தேர்தலில் தற்போதைய எதிர்கட்சித்தலைவருக்கு ஆதரவளித்தவர்கள்,மாவீரர் தினத்தை யார் எடுத்து நடாத்துவது என்று தங்களுக்குள் சண்டையிட்டவர்கள்.நீங்கள் உங்களுக்குள் முழுவதுமாக ஒற்றுமை அடையாவிட்டால் எதையுமே சாதிக்க முடியாது. இறுதியாக எந்தவொரு சிங்கள பேரினவாத அரசும் தமிழ்மக்களின் பக்கம் நீதியின் பக்கம் நின்றதில்லை. மிகச்சிறந்த அரசியல் தெளிவு பெற்ற நேர்மையான இளைய தமிழத்தேசிய அரசியல் கலாச்சாரம் வடகிழக்கில் வரவேண்டும்.அப்போது தான் வெள்ளம் வரும் முன் அணை கட்ட முடியும். தமிழ்மக்களாக அனைவரும் உங்கள் சிந்தனைகளில் ஒன்றிணையுங்கள். நாங்கள் ஒன்றை நம்புகின்றோம்... தூய தமிழ் தேசியம் நிச்சயம் வெல்லும் என்று தெரிவித்துள்ளது. யார் ஆட்சிக்கு வந்தாலும் பௌத்த சிங்களமயமாக்கல் தொடரும்! - யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் | Virakesari.lk
-
திருகோணமலை புத்தர் சிலை பிரச்சினை முடிந்துள்ளது: ஜனாதிபதி
திருகோணமலை புத்தர் சிலை பிரச்சினை முடிந்துள்ளது. நீதிமன்றமும் உத்தரவு பிறப்பித்துள்ளது. ஏன் இன்னும் ஆடுகின்றீர்கள்.இனவாதிகள் இனவாத தீயை பற்றவைத்துக் கொண்டு திரிகிறார்கள். இனவாதத்துக்கு ஒருபோதும் இடமளிக்க போவதில்லை. மீண்டும் பழைய இனவாத நாடகத்தை ஏற்படுத்த முடியாது .அதற்கு இடமும் கிடையாது என ஜனாதிபதியும் பாதுகாப்பு அமைச்சருமான அநுரகுமார திசாநாயக்க உறுதியளித்தார். அத்துடன் திருகோணமலை புத்தர் சிலை பிரதிஷ்டை பகுதி இவ்வளவு காலம் விகாரையாக பயன்படுத்தப்படவில்லை. சிற்றூண்டி சாலையாகவே பயன்படுத்தப்பட்டுள்ளது. எனவே மத வழிபாட்டிடத்தை அமைப்பது போலவே வேறு கதையும் இதனுள் இருப்பதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டார். பாராளுமன்றத்தில் இன்று இடம் பெற்ற 2026 ஆம் ஆண்டுக்கான வரவு - செலவுத் திட்டத்தில் பாதுகாப்பு அமைச்சு மற்றும் பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற அலுவல்கள் அமைச்சுக்கான நிதிஒதுக்கீடுகள் மீதான குழு நிலை விவாதத்தில் பதிலளித்து உரையாற்றுகையிலேயே இவ்வாறு உறுதியளித்த அவர் மேலும் பேசுகையில், திருகோணமலை விவகாரம் தற்போது சர்ச்சைக்குரியதாக காணப்படுகிறது. ஆகவே இவ்விடயம் பற்றி குறிப்பிட வேண்டும் . இந்த நாட்டில் இனவாதம் பல்வேறு சந்தர்ப்பங்களில் பல்வேறு முகங்களில் வந்துள்ளது. கடந்த காலங்களில் ஆட்சிகள் கவிழும் போது, ஊழல் மோசடிகள் தொடர்பான குற்றச்சாட்டுகள், ஜனநாயக ரீதியிலான பிரச்சினைகள் மற்றும் பொருளாதார வீழ்ச்சி ஆகிய காரணங்கள் இருந்தன. ஆனால் இப்போது எங்கள் அரசாங்கத்தின் மீது இதுபோன்ற எந்த குற்றச்சாட்டுகளும் கிடையாது. இதன்படி தோல்வியடைந்த தரப்புகளுக்கு அரசாங்கத்திற்கு எதிராக போராட்டத்திற்கான நியாயப்படுத்தக்கூடிய தொனிப்பொருட்கள் எதுவும் கிடைக்கவில்லை. இதனால் அவர்களுக்கு இனவாதத்தை உருவாக்க வேண்டிய தேவை எழுகின்றது. பொலிஸார் சட்டத்தை போன்று இதுபோன்ற விடயங்களிலும் அவதானம் செலுத்த வேண்டும். சட்டத்தை செயற்படுத்தும் போது சமூகத்தில் ஏற்படக்கூடிய குழப்ப நிலைகள் தொடர்பிலும் அவதானம் செலுத்த வேண்டும். இந்நிலையில் திருகோணமலை புத்தர் சிலை சம்பவம் தொடர்பில் பொதுமக்கள் பாதுகாப்பு செயலாளரிடம் அறிக்கையொன்றை கோரியிருந்தேன். அதன்படி பாதுகாப்பு காரணங்களுக்காக அந்த புத்தர் சிலை அங்கிருந்து பொலிஸ் நிலையத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டதாக பொலிஸ் நிலையப் பதிவுகளில் உள்ளன. அடுத்ததாக இந்த மோதல் பொலிஸாருக்கும் இனவாத குழுக்களுக்கும் இடையிலேயே ஏற்படும். இதனால் மீண்டும் அந்த புத்தர்சிலை அந்த இடத்தில் பிரதிஸ்டை செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பில் 2014இல் வழங்கப்பட்ட உரித்தொன்று இருக்கின்றது. இவ்வளவு காலம் இது விகாரையாக பயன்படுத்தப்படவில்லை. சிற்றூண்டி சாலையாகவே பயன்படுத்தப்பட்டுள்ளது. அந்த சிற்றூண்டிசாலையின் சட்டவிரோத நிர்மாணம் இருப்பதாக அதனை அகற்றுவதற்கு கரையோர பாதுகாப்பு அதிகாரசபையின் பணிப்பாளரால் உத்தரவு வழங்கப்பட்டுள்ளது. இந்த உத்தரவுக்கு எதிராக மேன்முறையீடு செய்யப்பட்டுள்ளது. சுற்றாடல் அமைச்சின் செயலாளரும் அதனை அகற்ற வேண்டும் என்ற நிலைப்பாட்டை அறிவித்துள்ளார். இதனை தொடர்ந்து பொலிஸாருக்கும், கரையோர பாதுகாப்பு அதிகார சபை மற்றும் நகர அபிவிருத்தி அதிகாரசபையுடன் நடத்தி கலந்துரையாடலின் போது பிக்கு ஒருவர் இதற்காக ஒருவார கால அவகாசம் கோரியுள்ளார். இந்த அவகாசம் 14ஆம் திகதியுடன் முடிவடைந்துள்ளது. இவ்வாறான நிலைமையிலேயே புத்தர் சிலை தொடர்பான பிரச்சினை எழுந்துள்ளது. இது மத வழிபாட்டிடத்தை அமைப்பது போலவே வேறு கதையும் இதனுள் இருப்பதாக தெரிகின்றது. அதனை விகாரைக்கு சொந்தமான இடம் என்பதால் இதில் விகாரை இருந்ததாக பொதுமக்கள் நினைக்கலாம். ஆனால் விகாரையின் தேரர் ஒருவருக்கு சொந்தமான இடமொன்று இருந்தது. அங்கு வழிபாடு செய்யும் இடம் இருக்கவில்லை. குறிப்பிட்ட சம்பவத்தின் பின்னர் மாவட்ட செயலக அலுவலகத்தில் இணக்கப்பாட்டுக்கு வந்துள்ளனர். கரையோர பாதுகாப்பு அதிகார சபைக்கு சொந்தமான பகுதி மற்றும் விகாரைக்குரிய காணி ஆகியன அளக்கப்பட்டு அதனை பிரிப்பதற்கு இணக்கம் காணப்பட்டுள்ளது. அத்துடன் நீதிமன்றம் அங்கே புதிய கட்டிடங்களை அமைக்க கூடாது என்று உத்தரவிட்டுள்ளது இப்போது திருகோணமலை புத்தர் சிலை பிரச்சினை முடிந்துள்ளது. நீதிமன்றமும் உத்தரவு பிறப்பித்துள்ளது. ஏன் இன்னும் ஆடுகின்றீர்கள். இனவாதிகள் இனவாத தீயை பற்றவைத்துக் கொண்டு திரிகிறார்கள்.இனவாதத்துக்கு ஒருபோதும் இடமளிக்க போவதில்லை. நான் மட்டுமல்ல இந்த நாட்டின். பௌத்த மக்களும் இனவாதத்துக்கு இடமளிக்க போவதில்லை. தமிழ், முஸ்லிம்களும் இடமளிக்க போவதில்லை. மீண்டும் பழைய இனவாத நாடகத்தை ஏற்படுத்த முடியாது. இது வரலாற்றில் மட்டுமே இருக்கும். நிகழ்காலத்திலும் எதிர்காலத்திலும் இலங்கையில் இனவாதம் எழுதப்படாது என்பதை குறிப்பிட்டுக் கொள்கிறேன் என்றார். Tamilmirror Online || திருகோணமலை புத்தர் சிலை பிரச்சினை முடிந்துள்ளது: ஜனாதிபதி
-
இந்திய மீனவர்கள் அட்டூழியம்; வடமராட்சி மீனவர்களின் வலைகள் அறுத்தழிப்பு!
வடமராட்சிக் கடற்பரப்பில் நூற்றுக்கணக்கில் அத்துமீறி நுழைந்து மீன்பிடியில் ஈடுபட்ட இந்திய இழுவைப் படகுகளால் வடமராட்சி மீனவர்களின் பல இலட்சம் ரூபாபெறுமதியான வலைகள் அறுத்து அழிக்கப்பட்டுள்ளன. இந்தவிடயம் தொடர்பில் வடமராட்சி மீனவர்கள் தெரிவித்ததாவது: வடமராட்சிக் கடற்பரப்பில் கடந்த சில நாள்களாக இந்திய மீனவர்களின் அத்துமீறல்கள் அதிகரித்து வருகின்றது. ஒவ்வொரு நாளும் வடக்கு மீனவர்களின் வலைகள் வகைதொகை இன்றி அழிக்கப்படுகின்றன. இதனால், பல லட்சம் ரூபா நிதி இழப்பு ஏற்படுவதுடன். உயிர் பயத்தில் கடற்றொழில் நடவடிக்கையையும் கைவிட வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளது. ஆனால் அரக்க வரும் இந்தியப் படகுகளைக் கட்டுப் படுத்துவதற்கு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று தற்போதைய அரசாங்கம் சொல்கின்ற போதிலும், செயலில் எந்த மாற்றத்தையும் நாங்கள் காணவில்லை. எனவே, இந்திய மீனவர்களின் அத்துமீறல் தொடர்ந்தால், அவற்றைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளை நாங்கள் கையிலெடுப்போம். அதன் பின்னர் ஏற்படும் அசம்பாவி தங்களுக்கு நாம் பொறுப்பாளியாக படைகளைப்போல் முடியாது - என்றனர். தற்போது கடற்கொந்தளிப்புக் காரணமாகவும், கடல் இரைச்சல் காரணமாவும் இந்த இழுவைப் படகுகள் மிகவும் அண்மையில் வந்த பின்னரே அவற்றை உணரக்கடியதாக உள்ளது. இராட்சத படகுகள் கடந்து செல்லும்போது ஏற்படும் கொந்தளிப்பால் எமது சிறிய படகுகள் கவிழும் ஆபத்து ஏற்படுகின்றது. மரணத்தோடு உறவடியே மீனவர்களாகிய நாம் ஒவ்வொரு நாளும் கறுக்கும் சென்று கரை திரும்புகின்றோம் ஆனால் அரக்க வரும் இந்தியப் படகுகளைக் கட்டுப்படுத்துவதற்கு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று தற்போதைய அரசாங்கம் சொல்கின்ற போதிலும், செயலில் எந்த மாற்றத்தையும் நாங்கள் காணவில்லை. எனவே, இந்திய மீனவர்களின் அத்துமீறல் தொடர்ந்தால், அவற்றைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளை நாங்கள் கையிலெடுப்போம். அதன் பின்னர் ஏற்படும் அசம்பாவி தங்களுக்கு நாம் பொறுப்பாளியாக படைகளைப்போல் முடியாது - என்றனர். இந்திய மீனவர்கள் அட்டூழியம்; வடமராட்சி மீனவர்களின் வலைகள் அறுத்தழிப்பு!
-
‘திருமணத்துக்கு முந்தைய பாலியல் உறவு சாதாரணமாகிவிட்டது’ - உயர் நீதிமன்றம் வேதனை
‘திருமணத்துக்கு முந்தைய பாலியல் உறவு சாதாரணமாகிவிட்டது’ - உயர் நீதிமன்றம் வேதனை மதுரை: திருமணத்துக்கு முந்தைய பாலியல் உறவு சர்வ சாதாரணமாகிவிட்டது என உயர் நீதிமன்றம் வேதனை தெரிவித்துள்ளது. நெல்லையை சேர்ந்தவர் தேவா விஜய். இவர் மீது இளம் பெண் ஒருவர் வள்ளியூர் காவல் நிலையத்தில் பாலியல் புகார் அளித்தார். புகாரில் இருவரும் கல்லூரியில் படிக்கும் போது காதலித்ததாகவும், திருமணம் செய்வதாக கூறி 9 ஆண்டுகளாக பாலியல் உறவு கொண்டதாகவும், பின்னர் திருமணம் செய்ய மறுத்துவிட்டதாகவும் இளம் பெண் கூறியிருந்தார். இப்புகாரின் பேரில் தேவா விஜய் மீது வள்ளியூர் போலீஸார் வழக்கு பதிவு செய்தார். இந்த வழக்கை ரத்து செய்யக்கோரி தேவா விஜய் உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் மனுத் தாக்கல் செய்தார். மனுவை விசாரித்து நீதிபதி பி.புகழேந்தி பிறப்பித்த உத்தரவு: மனுதாரரும், புகார் அளித்த இளம்பெண்ணும் ஏறக்குறைய 9 ஆண்டுகளாக பாலியல் உறவில் இருந்து வந்துள்ளனர். இந்த நீண்ட கால பாலியல் உறவின் போது புகார்தாரர் எதிர்ப்பு தெரிவிக்கமால் இருந்ததை பார்க்கும் போது இருவர் இடையே இருந்து வந்த பாலியல் உறவு இருவரின் சம்மதத்தின் அடிப்படையில் நடைபெற்ற உறவு என்பதை குறிக்கிறது. ADVERTISEMENT அப்போது தன்னை திருமணம் செய்வதாக கூறி மனுதாரர் ஏமாற்றினார் என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை. நீதிமன்றம் தற்போது சமூகத்தில் நிலவும் உண்மை நிலவரங்களை அறியாமல் இல்லை. திருமணத்திற்கு முந்தைய பாலியல் உறவு இன்றைய காலகட்டத்தில் சர்வ சாதாரணமாக ஆகிவிட்டது. இருவர் தாமாக முன்வந்து ஒரு உறவை ஏற்படுத்திக் கொண்டு நீண்ட காலம் உடல் ரீதியான நெருக்கத்தில் ஈடுபட்ட நிலையில், அந்த உறவில் முறிவு ஏற்படும் போது குற்றவியல் சட்டத்தினை பயன்படுத்துவது தவறு. சம்பந்தப்பட்ட இருவருக்கிடையே என்ன நடக்கிறது என்பது அவர்களின் தனிப்பட்ட விருப்பத்தின் எல்லைக்குள் வருகிறது. அந்த உறவு பாசத்தின் அடிப்படையில் நிறுவப்பட்டதா, திருமண எதிர்பார்ப்பா, வெறும் பரஸ்பர இன்பம் என்பதா என்பது அவர்களுக்கு மட்டுமே தெரியும். இதுபோன்ற விஷயங்களில் நீதிமன்றம் உறுதியாக தீர்மானிப்பது சாத்தியமில்லை. தனிப்பட்ட நடத்தையை ஒழுக்கப்படுத்தவோ அல்லது தனிப்பட்ட ஏமாற்றத்தை வழக்காக மாற்றவோ குற்றவியல் செயல்முறையைப் பயன்படுத்த முடியாது. ஏனெனில் நீதிமன்றங்கள் தனிமனித ஒழுக்கத்தை பார்த்து தீர்ப்பு வழங்க முடியாது, வற்புறுத்தல், ஏமாற்றுதல் அல்லது இயலாமையால் சம்மதம் என பாதிக்கப்படும் இடங்களில் மட்டுமே சட்டம் தலையிடுகிறது. தனிப்பட்ட முரண்பாடுகளை தவறான நடத்தையாக சித்தரிக்க யாருக்கும் உரிமை இல்லை. உணர்ச்சி ரீதியான விளைவுகளைத் தீர்ப்பதற்கு சட்டத்தை தவறாக பயன்படுத்த முடியாது. மனுதாரர் மீதான வழக்கு தொடர்வது சட்ட செயல்முறையை துஷ்பிரயோகம் செய்வதற்கு சமம் என்று இந்த நீதிமன்றம் கருதுகிறது. எனவே மனுதாரர் மீதான வழக்கு ரத்து செய்யப்படுகிறது இவ்வாறு நீதிபதி உத்தரவில் கூறியுள்ளார். ‘திருமணத்துக்கு முந்தைய பாலியல் உறவு சாதாரணமாகிவிட்டது’ - உயர் நீதிமன்றம் வேதனை | High Court expresses concern over premarital sex becoming normal - hindutamil.in
-
ஆதிக்கம் செலுத்தும் வகையிலான எச்.ஐ.வி தொற்று போக்கு - தேசிய பாலியல் தொற்றுகள்/எய்ட்ஸ் கட்டுப்பாட்டுத் திட்டம் தகவல்
17 Nov, 2025 | 04:58 PM (எம்.மனோசித்ரா) நாட்டில் ஆதிக்கம் செலுத்தும் வகையிலான எச்.ஐ.வி தொற்று போக்கு காணப்படுகிறது. இவ்வாண்டில் புதிதாகப் பதிவான பெரும்பாலான எச்.ஐ.வி. தொற்றாளர்களில் ஆண்கயே அதிகளவில் காணப்படுவதாக தேசிய பாலியல் தொற்றுகள்/எய்ட்ஸ் கட்டுப்பாட்டுத் திட்டம் தெரிவித்துள்ளது. தேசிய பாலியல் தொற்றுகள்/எய்ட்ஸ் கட்டுப்பாட்டுத் திட்டத்தின் தரவுகளுக்கமைய, இவ்வாண்டின் இரண்டாம் காலாண்டில் (ஏப்ரல்–ஜூன்) மாத்திரம் 200 புதிய எச்.ஐ.வி தொற்றாளர்கள் பதிவாகியுள்ளனர். முதல் காலாண்டில் இந்த எண்ணிக்கை 230ஆகப் பதிவாகியுள்ளது. இது 2009ஆம் ஆண்டிலிருந்து ஒரு காலாண்டில் பதிவான அதிகபட்ச எண்ணிக்கையாகும். ஏப்ரல் மற்றும் ஜூன் மாதங்களுக்கு இடையில் பதிவான புதிய தொற்றாளர்களில், 15–24 வயதுக்குட்பட்டவர்கள் 20 ஆண்கள் மற்றும் ஒரு பெண் ஆவர். மீதமுள்ளவர்கள் 25 வயதுக்கு மேற்பட்டவர்களாவர். மேலும், 2025ஆம் ஆண்டில் பதிவான எச்.ஐ.வி பாதிப்புகளில் ஆண்களுக்கும் பெண்களுக்கும் இடையிலான விகிதம் 7.6க்கு 1 என்ற குறிப்பிடத்தக்க அளவில் உள்ளது. இது ஆண்களே பெரும்பாலான தொற்று பாதிப்புகளுக்கு தொடர்ந்து காரணமாக உள்ளனர் என்பதைக் காட்டுகிறது. இந்த ஆண்டு இதுவரை, எச்.ஐ.வி/எய்ட்ஸ் தொடர்பான 23 மரணங்கள் பதிவாகியுள்ளன. 2024 ஆம் ஆண்டில், 47 பேர் எச்.ஐ.விஃஎய்ட்ஸ் காரணமாக உயிரிழந்துள்ளனர். அதே நேரத்தில் நாடு முழுவதும் ஒரு மில்லியனுக்கும் அதிகமான எச்.ஐ.வி சோதனைகள் நடத்தப்பட்டுள்ளன. 2009ஆம் ஆண்டு முதல், இலங்கையில் மொத்தம் 6759 எச்.ஐ.வி தொற்றாளர்கள் பதிவாகியுள்ளனர். இதில் 5366 ஆண்கள் மற்றும் 1573 பெண்கள் அடங்குவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அதிகரித்து வரும் போக்குக்கு மத்தியில், தேசிய பாலியல் தொற்றுகள்/எய்ட்ஸ் கட்டுப்பாட்டுத் திட்டம், ஆணுறை பயன்பாடு, வெளிப்பாட்டிற்கு முந்தைய தடுப்பு மற்றும் வெளிப்பாட்டிற்குப் பிந்தைய தடுப்பு உட்பட எச்.ஐ.வி/எஸ்.டி.ஐ தடுப்பு கல்வியை பள்ளி பாடத்திட்டங்களில் ஒருங்கிணைக்க முன்மொழிந்துள்ளது. இருப்பினும், இந்த முன்மொழிவு இன்னும் ஆய்வில் இருப்பதாகவும் விமர்சனங்களை எதிர்கொள்வதாகவும் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆதிக்கம் செலுத்தும் வகையிலான எச்.ஐ.வி தொற்று போக்கு - தேசிய பாலியல் தொற்றுகள்/எய்ட்ஸ் கட்டுப்பாட்டுத் திட்டம் தகவல் | Virakesari.lk
-
யாழில் அதி கூடிய மழை வீழ்ச்சி பதிவு ; எதிர்வரும் 27 வரை மழை நீடிக்கும் சாத்தியம் - யாழ். மாவட்ட அனர்த்த முகாமைத்துவ உதவி பணிப்பாளர்
18 Nov, 2025 | 12:31 PM இலங்கையில் கடந்த 24 மணித்தியாலத்திற்குள் கிடைக்கப்பெற்ற அதி கூடிய மழை வீழ்சியாக யாழ்ப்பாணம் பண்ணை பகுதியில் 101.7 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளதாக யாழ். மாவட்ட அனர்த்த முகாமைத்துவ உதவி பணிப்பாளர் என் சூரியராஜா தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், கடந்த 24 மணித்தியாலத்துக்குள் யாழ். மாவட்டத்தில் கிடைக்கப்பெற்ற அதி கூடிய மழைவீழ்ச்சி காரணமாக நான்கு குடும்பங்களைச் சேர்ந்த 14 பேர் பாதிப்புக்கு உள்ளாகி உள்ள நிலையில் 4 வீடுகள் பகுதி அளவில் சேதமடைந்துள்ளன. மேலும் செவ்வாய்க்கிழமை (18) வரை மழை நீடித்து குறைவதற்கான சாத்தியங்கள் உள்ள நிலையில் எதிர்வரும் 22 ஆம் திகதி மீண்டும் வடக்கு கிழக்கு மாகாணங்களில் மழை பெய்வதற்கான எதிர்ப்பு கூறல்கள் விடப்படுகின்று. வடக்கு கிழக்கு மாகாணங்களில் எதிர்வரும் 22 ஆம் திகதி முதல் ஆரம்பிக்கும் மழையானது எதிர்வரும் 27 ஆம் திகதி வரை நீடிப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. கடற் தொழிலாளர்களைப் பொறுத்தவரையில் சூறாவளிக்கான எச்சரிக்கைகள் விடப்படாத நிலையில் மழை பெய்யும் போது இடி மின்னல் தாக்கங்கள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உள்ள நிலையில் கடற் தொழில் நடவடிக்கைகளின் போது எச்சரிக்கையாக இருக்குமாறு வேண்டப்படுகின்றனர் என்றார். யாழில் அதி கூடிய மழை வீழ்ச்சி பதிவு ; எதிர்வரும் 27 வரை மழை நீடிக்கும் சாத்தியம் - யாழ். மாவட்ட அனர்த்த முகாமைத்துவ உதவி பணிப்பாளர் | Virakesari.lk
-
சிறந்த உணவு மற்றும் பானங்களுக்கான விமான சேவையாக ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் தெரிவு!
(இணையத்தள செய்திப்பிரிவு) APEX 2026 விருது வழங்கும் விழாவில் மத்திய/தெற்கு ஆசியப் பிராந்தியத்துக்கான சிறந்த உணவு மற்றும் பானங்களுக்கான விமான சேவையாக ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனம் தெரிவு செய்யப்பட்டுள்ளது. ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானத்தில் வழங்கப்படும் சுவையான உணவு மற்றும் பானங்களுக்காக இந்த விருது வழங்கப்பட்டுள்ளது. உலகின் முன்னணி பயண ஏற்பாட்டுச் செயலியான ‘ட்ரிப்இட் பை கான்கர்’ (TripIt by Concur) மூலம் சரிபார்க்கப்பட்ட ஒரு மில்லியனுக்கும் அதிகமான பயணிகளின் வாக்குகளின் அடிப்படையில் இந்த விருது வழங்கப்பட்டுள்ளது. உலகலாவிய ரீதியில் உள்ள 600க்கும் மேற்பட்ட விமான நிறுவனங்கள் இந்த விருதுக்காக மதிப்பீடு செய்யப்பட்டுள்ளன. இலங்கையின் பாரம்பரிய உணவுகள் மற்றும் பானங்கள் பயணிகளின் மனதில் சிறந்த இடத்தை பிடித்துள்ளது. விமானத்தில் உள்ள உணவுகளை உண்ணும் அனுபவம் என்பது ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸின் புகழ்பெற்ற சேவையின் நீடிப்பு ஆகும். சிறந்த உணவு மற்றும் பானங்களுக்கான விமான சேவையாக ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் தெரிவு! | Virakesari.lk
-
திருகோணமலை புத்தர் சிலை விவகாரம் : சம்பவ இடத்திற்கு சென்ற கலகொட அத்தே ஞானசார தேரர் தெரிவித்துள்ளது என்ன ?
18 Nov, 2025 | 04:05 PM திருகோணமலை சம்பவம் பௌத்த மதத்தின் உரிமையை கேள்விக்குறியாக்கியுள்ளது என கலகொட அத்தே ஞானசார தேரர் தெரிவித்துள்ளார். கலகொட அத்தே ஞானசார தேரர் செவ்வாய்க்கிழமை (18) திருகோணமலைக்கு விஜயம் மேற்கொண்ட போதே இதனை தெரிவித்துள்ளார். அங்கு கலகொட அத்தே ஞானசார தேரர் மேலும் கூறுகையில், திருகோணமலை கடற்கரையை அண்டிய பகுதியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை (16) இரவு வைக்கப்பட்ட புத்தர் சிலைக்கு பல்வேறு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர். இதனால் ஏற்பட்ட அமைதியின்மை காரணமாக புத்தர் சிலை அங்கிருந்து அகற்றப்பட்டு பின்னர் திங்கட்கிழமை (17) பிற்பகல் பௌத்த சம்பிரதாய அடிப்படையில் மீண்டும் அதே இடத்தில் வைக்கப்பட்டது. இந்த சம்பவம் சமூக ஊடகங்களில் தீவிரமாக பரப்பப்பட்ட நிலையில் பொதுமக்கள் மத்தியில் பாரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. இது நாட்டு மக்கள் மத்தியில் அதிகளவு பேசப்பட்டது. இது மிகவும் கவலைக்கிடமான, கசப்பான, பாரதூரமான ஒரு விடயமாகும். கலவரத்தின் போது அதிகாரத்துடன் செயற்பட்ட பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கும் அவர்களை அனுப்பிய அரசாங்கத்துக்கும் நாங்கள் எதிர்ப்பு தெரிவிக்கிறோம். இலங்கையில் வாழும் பௌத்த மக்களின் உரிமையில் தான் நீங்கள் கை வைத்துள்ளீர்கள். இது பௌத்த மதத்தின் உரிமையை கேள்விக்குறியாக்குகிறது. பௌத்த மதம் என்பது பல ஆண்டுகளாக இலங்கையில் உள்ள ஒரு மதமாகும். புத்தருக்கு சொந்தமான இலங்கை பூமியில் தான் தமிழ், சிங்கள மற்றும் முஸ்லீம் மக்கள் வாழுகின்றனர். புத்தர் சிலையை அகற்றுமாறு கலவரம் செய்தவர்களால் தாக்கப்பட்ட பல தேரர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தேரர்களை தாக்கும் காணொளிகள் சமூக ஊடகங்களில் பரவி வருகிறது. இது மிகவும் தவறாகும். பௌத்த வணக்கஸ்தலத்தை கட்ட அனுமதி வழங்கப்பட்டுள்ள ஒரு இடத்தில் வைக்கப்பட்டுள்ள புத்தர் சிலையை அகற்றுவதற்கு யாருக்கு உரிமை உள்ளது. மக்களை தூண்டுவது அரசாங்கம் தான். கால காலமாக அரசாங்கம் மாறினாலும் பௌத்த மக்களின் உரிமை மாறாது. 5 வருடங்களுக்கு தான் அரசாங்கத்துக்கு பலம் கிடைக்கும். ஆனால் பௌத்த மதத்தின் உரிமை 2 ஆயிரம் ஆண்டுகளாக இலங்கையில் உள்ளது. அது எப்போதும் மாறாது. இதுவே கடைசி. இது போன்ற செயல்கள் இனி இடம்பெறக் கூடாது. இவ்வாறான பாவ செயல்களில் ஈடுபட வேண்டாம். இது விகாரைக்கு சொந்தமான இடம். அங்கு என்ன செய்ய வேண்டும் என்பது விகாராதிபதியின் உரிமை. பௌத்த மதத்தின் உரிமைக்காக நாங்கள் போராடுவோம் என்றார். திருகோணமலை புத்தர் சிலை விவகாரம் : சம்பவ இடத்திற்கு சென்ற கலகொட அத்தே ஞானசார தேரர் தெரிவித்துள்ளது என்ன ? | Virakesari.lk
-
வடக்கு மாகாணம்: தேசிய பாதுகாப்பு காணிகளை விடுவிக்க கூடாது – நளின் பண்டார
18 Nov, 2025 | 05:18 PM (எம்.ஆர்.எம்.வசீம்,இராஜதுரை ஹஷான்) வடக்கு மாகாணத்தில் தேசிய பாதுகாப்புடன் தொடர்புடைய காணிகளை ஒருபோதும் விடுவிக்க கூடாது.நாட்டில் மீண்டும் யுத்தம் ஒன்று தோற்றம் பெறாத வகையில் தேசிய பாதுகாப்புடன் தொடர்புடைய காணிகள் முறையாக அடையாளப்படுத்தப்பட வேண்டும்.தனிப்பட்ட பாதுகாப்பினை காட்டிலும் தேசிய பாதுகாப்பினை கருத்திற் கொண்டு காணி விடுவிப்பு குறித்து தீர்மானம் எடுக்க வேண்டும் என ஐக்கிய மக்கள் சக்தியின் குருநாகல் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார வலியுறுத்தினார். பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (18) நடைபெற்ற 2026 ஆம் ஆண்டுக்கான வரவு - செலவுத் திட்டத்தில் பாதுகாப்பு அமைச்சு மற்றும் பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற அலுவல்கள் அமைச்சுக்கான குழு நிலை விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அங்கு அவர் மேலும் உரையாற்றியதாவது, தேசிய பாதுகாப்பு தொடர்பில் அரசாங்கம் பொறுப்பற்ற வகையில் செயற்படுகிறது. தேர்தல் காலத்தில் வழங்கிய வாக்குறுதிகளால் தேசிய பாதுகாப்பு புறக்கணிக்கப்பட்டுள்ளது. 30 ஆண்டுகால யுத்தத்தால் அனைத்து இன மக்களும் பாதிக்கப்பட்டார்கள். யுத்தம் முடிவடைந்து விட்டது என்று குறிப்பிட முடியாது. எதிர்காலத்தில் யுத்தம் ஒன்று தோற்றம் பெறலாம். ஆகவே அவதானத்துடன் செயற்பட வேண்டும். வடக்கு மாகாணம் தேசிய பாதுகாப்பின் பிரதான கேந்திரமையாக காணப்படுகிறது. வடக்கில் காணி பிரச்சினை காணப்படுகிறது. தனிப்பட்ட பாதுகாப்பினை காட்டிலும் தேசிய பாதுகாப்பினை கருத்திற் கொண்டு காணி விடுவிப்பு குறித்து தீர்மானம் எடுக்க வேண்டும். பாதுகாப்பு காரணிகளுடன் தொடர்புடைய காணிகளை விடுவிப்பதற்கு பதிலாக காணி உரிமையாளர்களுக்கு மாற்றுக் காணிகளை வழங்க அரசாங்கம் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். அல்லது காணிகளுக்கு பதிலாக நட்டஈடு வழங்க வேண்டும்.தேசிய பாதுகாப்புடன் தொடர்புடைய காணிகளை இராணுவத்தினர் வசம் வைத்துக் கொள்ள வேண்டும். வடக்கு மாகாணத்தில் மீண்டும் யுத்தம் ஒன்று தோற்றம் பெறாத வகையில் தேசிய பாதுகாப்புடன் தொடர்புடைய காணிகள் முறையாக அடையாளப்படுத்தப்பட வேண்டும். தேசிய பாதுகாப்புடன் தொடர்புடைய காணிகளை விடுவிக்க கூடாது. வடக்கு மக்களுக்கு அநீதி இழைக்க வேண்டும் என்று நாங்கள் குறிப்படவில்லை.காணிக்கு போதுமான அளவு நட்டஈடு வழங்க வேண்டும் என்று குறிப்பிட்டுக் கொள்கிறேன். வடக்கு வாக்குகளை பெறுவதற்கு வழங்கிய வாக்குறுதிகளுக்கு மாத்திரம் முன்னுரிமை வழங்காமல் தேசிய பாதுகாப்புக்கு முன்னுரிமை வழங்கி அரசாங்கம் செயற்பட வேண்டும். அரசியலுக்கு அப்பாற்பட்ட வகையில் தேசிய பாதுகாப்பு குறித்து தீர்மானங்களை எடுக்க வேண்டும் என்றார். வடக்கு மாகாணம்: தேசிய பாதுகாப்பு காணிகளை விடுவிக்க கூடாது – நளின் பண்டார | Virakesari.lk
-
பருத்தித்துறை நகரசபைக்கு எதிராக கொட்டடி மக்கள் போராட்டம்!
17 Nov, 2025 | 04:18 PM யாழ்ப்பாணம் - வடமராட்சி பருத்தித்துறை நகரசபைக்கு எதிராக பருத்தித்துறை கொட்டடி மக்கள் போராட்டம் ஒன்றினை இன்று திங்கட்கிழமை (17) காலை முன்னெடுத்துள்ளனர். கொட்டடி மீனவர்களின் படகு தரிப்பிடத்திற்காக தூர்வார்ப்பட்ட மண்ணை இதுவரை அகற்றவில்லை என தெரிவித்தே குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டிருந்தது. இதில் குறித்த மண்ணை அகற்றுமாறு கோரி தவிசாளரிடம் மகஜர் ஒன்றும் கையளிக்கப்பட்டது. இதற்கு பதிலளித்த தவிசாளர் உடனடியாக மணல் அகற்றுவதற்கு நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார். பருத்தித்துறை நகரசபைக்கு எதிராக கொட்டடி மக்கள் போராட்டம்! | Virakesari.lk