Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழ்ப்பாண நூல்நிலைய எரிப்பு 01-jun-1981

Featured Replies

சிங்களப் பயங்கர வாதிகளால் எம் அறிவுச் சொத்து அழிக்கப்பட்டு 31 ஆண்டுகளுக்கு முன்பு, நாகரிக உலகமே வெட்கித் தலைகுனியும் படியான கோரச் செயல் ஒன்றை அன்றைய சிங்கள அரசு தமிழ் மக்களுக்கு செய்தது.

Jaffna-Library1-300x198.jpg1981ம் ஆண்டு யூன் மாதம் முதலாம் திகதி இரவு ஒன்பது மணியளவில் தென்கிழக்காசியாவின் மிகச் சிறந்த நூல் நிலையங்களில் ஒன்றாகக் கருதப்பட்ட யாழ்ப்பாண நூல் நிலையம் தீக்கிரையாக்கப் பட்டது.

எரியும் நினைவுகள் — யாழ் நூலகம்

97, 000 க்கும் மேற்பட்ட நூல்களும் கிடைத்தற்கரிய நூல்களும், சுவடிகளும் எரிந்து சாம்பலாயின. தமிழர்கள் தம்மில் ஒரு பகுதியை தாம் இழந்ததாக உணர்ந்து, உருகி, உறைந்து போயினர். யார் பயங்கரவாதிகள் உலகமே?

தமிழீழ மக்களுக்கு மாறாத வலியையும், வடுவையும் தந்த இந்தக் கோரமான பேரழிவுக்கு அடிப்படையாக அமைந்த காரணிகளையும், வரலாற்று உண்மைகளையும் நாம் இங்கே ஆராய்ந்து பார்ப்பதோடு மட்டுமல்லாது, தேசிய இனங்களை ஒடுக்க முயன்ற பேரினவாத சர்வதேச அரசுகளின் செயல்களில் உள்ள ஒற்றுமைகளைச் சுட்டிக் காட்டித் தர்க்கிப்பதும் இந்தக் கட்டுரையின் நோக்கமாகும்.

இப்பேரழிவுச் செயல் நிகழ்த்தப்பட்ட யூன் மாதம் முதலாம் திகதிக்கு (1981) முதல் நாள் நடைபெற்ற விடயங்களையும் நாம் கருத்தில் கொள்ளவேண்டும். இவையிரண்டையும் தர்க்கித்த பின்னர் இவற்றிற்கு முன்னோடியாக - ஏன் வழிகாட்டியாக இருந்த ஹிட்லரின் நாசி (Nazi) நடைமுறைகளையும், அதன் சட்டங்களையும், செயற்பாடுகளையும் சிறிலங்காவின் அரசுகளோடு ஒப்பிட்டுத் தர்க்கிக்க நாம் விழைகின்றோம்.

எல்லாவற்றிற்கும் முன்பாக தென்கிழக்காசியாவின் மிகச் சிறந்த நூல் நிலையங்களில் ஒன்றாகக் கருதப்பட்ட யாழ்ப்பாண நூல் நிலையம் எவ்வாறு தோன்றியது, வளர்ந்தது என்பதைக் குறித்து எமக்கு கிடைத்த தகவல்களைத் தர விரும்புகின்றோம்.

1933-ம் ஆண்டு மு.ஆ செல்லப்பா என்ற அன்புள்ளம் கொண்ட தமிழன் தன்னுடைய இல்லத்தில் இலவச நூல் நிலையம் ஒன்றை ஆரம்பிப்பதன் மூலம் யாம் பெற்ற புலமைகளைப் பகிர்ந்து கொள்ள விரும்பும் நல்லெண்ணத்தைத் தெரிவித்தார். செல்லப்பாவின் சிந்தனையை ஏற்றுக் கொண்ட பல அறிவு ஜீவித் தமிழர்கள், 1934ம் ஆண்டு யூன் மாதம் 9-ம் திகதி ஒரு நூல் நிலையத்தை ஆரம்பித்தார்கள். அன்றைய நாட்களில் உயர் நீதிமன்ற நீதவானாக இருந்த திரு.ஐசாக் அவர்கள் தலைவராகவும, திரு செல்லப்பா அவர்கள் செயலாளராகவும் இந்த நூல் நிலையக் குழுவினராகத் தெரிவு செய்யப்பட்டார்கள்.

இந்த நூல்நிலைய நிர்வாகக் குழுவினரின் அயராத உழைப்பின் காரணமாக 1934-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் முதலாம் திகதியன்று, யாழ்ப்பாணம் ஆஸ்பத்திரி வீதியில் உள்ள ஓர் வாடகை அறையில் 844 புத்தகங்களுடனும் 30 செய்திப் பத்திரிகைகள், மற்றும் சஞ்சிகைகளுடனும் ஒரு நூல் நிலையம் உருவானது. மிகவும் வயது குறைந்த இளைஞர்களினதும், வயது முதிர்ந்த முதியவர்களினதும் ஆர்வம் காரணமாகவும், ஆதரவு காரணமாகவும் இந்த நூல் நிலையத்தின் நூல்களின் எண்ணிக்கை பல்கிப் பெருகியது. 1935-ம் ஆண்டு ஜனவரி மாதம் யாழ்ப்பாணப் பிரதான வீதியில் உள்ள ஒரு வாடகை கட்டிடத்திற்கு இந்த நூல் நிலையம் இடம்பெயர்ந்தது. 1936-ம் ஆண்டு யாழ் மகாநகராட்சி மண்டபம் நிர்மாணிக்கப்பட்டது. இந்த நூல் நிலையம் இதற்கு அருகாமையில் உள்ள கட்டிடத்திற்கு மீண்டும் இடம்பெயர்ந்தது.

அந்தக் காலத்திலேயே, இந்த நூல் நிலையத்துக்குரிய சந்தா மூன்று ரூபாய்கள் ஆகும். ஆனால் அறிவுத் தாகம் கொண்ட தமிழர்களின் ஆர்வத்துக்கு ஈடு செய்யமுடியாத அளவில் இந்த நூல்நிலையம் திணற வேண்டியநிலை ஏற்பட்டது. இந்த நூல்நிலையம் விரிவாக்கப்பட வேண்டிய அவசியத்துடன் ஒரு நிரந்தரமான பாரிய கட்டிடம் ஒன்று அமைக்கப்பட வேண்டியதன் அவசியத்தையும் அன்றைய தமிழ் மக்கள் உணர்ந்தார்கள்.

அப்போது யாழ் மாநகரசபை முதல்வராக இருந்த திரு.சாம் சபாபதி அவர்களின் தலைமையில் பல நிதி சேகரிப்பு நிகழ்ச்சிகள் நடாத்தத் திட்டமிடப்பட்டன. குதூகல விழா, இந்திய கலைஞர்களின் கலை நிகழ்ச்சி விழாக்கள், நல்வாய்ப்புச் சீட்டுக்கள் போன்றவற்றின் மூலமாக நிதி சேகரிப்பு நிகழ்ச்சிகள் நடாத்தப்பட்டன. எதிர்பார்த்ததையும் விட ஏராளமான தொகை திரட்டப்பட்டது. என்ற விடயத்தை நாம் இங்கே குறிப்பிட்டாக வேண்டும்.

1953ம் ஆண்டு, நூல் நிலையத்திற்கான நிர்வாகக்குழு ஒன்று தெரிவு செய்யப்பட்டது. வணக்கத்துக்குரிய பிதா லோங் அவர்கள் இந்த நிர்வாகக் குழுவினால் தெரிவு செய்யப்பட்டிருந்தார். அன்னாரின் சிலை ஒன்று யாழ்ப்பாண பொதுசன நூல் நிலையத்தில் நிர்மாணிக்கப்பட்டது. 1981-ம் ஆண்டு யூன் முதலாம் திகதி சிங்கள காடையர்களால் தீக்கிரையாக்கப்பட்ட போது வணக்கத்துக்குரிய பிதா லோங் அவர்களுடைய சிலையும் அக்காடையர்களால் சிரச்சேதம் செய்யப்பட்டது.

1953-ம் ஆண்டு மார்ச் மாதம் 29ம் திகதியன்று இந்த நூல் நிலையத்திற்கு அத்திவாரம் இடப்பட்டது. திராவிடக் கட்டடக் கலை நிபுணரான திரு.நரசிம்மன் அவர்களைச் சென்னையிலிருந்தும், பேராசிரியர் இரங்கநாதன் அவர்களை டெல்லியிலிருந்தும், நூல் நிலைய நிர்வாகக்குழு அழைத்து ஆலோசனைகளையும், அறிவுரைகளையும் பெற்றது. முதல் கட்டப் பணிகள் 1959-ம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 11-ம் திகதி நிறைவு பெற்றன. சிறுவர்களுக்கான பகுதி ஒன்று 1967-ம் ஆண்டு நவம்பர் மாதம் 3-ம் திகதி ஆரம்பிக்கப்பட்டது. 1971-ம் ஆண்டில், நூல் நிலையத்தின் முதல் மாடியில் கூட்டங்கள் நடாத்துவதற்காக மண்டபம் ஒன்றும் நிர்மாணிக்கப்பட்டது.

இப்படிப்பட்ட கட்டிடமும் 97,000 ற்கும் மேற்பட்ட அரிய நூல்களும், பழைய முக்கியமான சஞ்சிகைகளும் 1981-ம் ஆண்டு யூன் மாதம் முதலாம் திகதியன்று சிங்களப் பேரினவாதிகளால் தீக்கிரையாக்கப்பட்டன.

மே மாதம் 31-ம் திகதி நாச்சிமார் கோவிலடியில் நடைபெற்ற, தமிழர் விடுதலைக் கூட்டணித் தேர்தல் கூட்டத்தின் போது நடாத்தப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தின் போது ஒரு சிங்களப் பொலிஸ் கொல்லப்பட்டார். இதனை அடுத்து துரையப்பா ஸ்டேடியத்தில் நிலை கொண்டிருந்த சிங்களப் பொலிசார் யு சுப்பையா ரூ சன்ஸ் கடை உட்படப் பல கடைகளை உடைத்தும் எரித்தும், கொள்ளையிட்டும் அடாவடித்தனங்களில் இறங்கினர். நாச்சிமார் கோவில் தேருக்கு தீ மூட்டும் முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டன. பல பொதுமக்களின் வீடுகள் உடைத்து நொறுக்கப்பட்டன. தமிழர் கூட்டணியின் கட்சிச் செயலகம் தீயிடப்பட்டது. யாழ்ப்பாணப் பாராளுமன்ற உறுப்பினர் யோகேஸ்வரனின் வீடும் வாகனமும் தீக்கிரையாக்கப்பட்டன.

இதற்கு அடுத்த நாள் இரவு யூன் 1-ம் திகதி யாழ் நூல்நிலையத்தின் மூன்றாவது மாடி தீப்பிடித்து எரிய ஆரம்பித்தது. இந்த மூன்றாவது மாடியில் தான் கிடைத்தற்கு அரிய சுவடிகளும், மிக அரிய நூல்களும் இருந்தன. மிகவிரைவில் நூல்நிலையத்தின் சகல பகுதிகளுக்கும் தீ பரவியது.

யாழ் நூல்நிலையக் கட்டடத்தை மிக நன்றாகப் புரிந்து கொண்டு அதனை முழுமையாக நாசமாக்கும் விதத்தில் நன்கு திட்டமிடப்பட்டே இப் பேரழிவு நடாத்தப்பட்டது. அன்றைய தினம் நடாத்தப்பட்ட கோர தாண்டவத்தில் ஈழநாடு பத்திரிகைக் கட்டிடம் உட்பட முக்கியமான புத்தகக் கடைகளும் எரிக்கப்பட்டமை இங்கு குறிப்பிடத் தக்கது. யாழ்ப்பாணம் பெரிய கடை வீதியில் அமைந்திருந்த தமிழ்ப் புலவர்களின் சிலைகளும் சேதமாக்கப்பட்டன.

தமிழரின் பண்பாட்டு அடையாளங்கள் என்று கருதப்பட்ட விடயங்கள் மீதே சிங்களப் பேரினவாதிகள் தமது அழிவுத் தாக்குதல்களை நடாத்தினார்கள் என்பதில் ஐயமில்லை.

“தமிழர்களுக்கு ஒரு பாடம் படிப்பிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் தமிழர்கள் படிக்கின்ற நூல்கள் அன்று தீக்கிரையாக்கப்பட்டன.”

அன்றைய சிங்கள அரசினால் திட்டமிட்டுச் செயல்படுத்தப்பட்ட இந்த நாசகாரச் செயலை முன்னெடுக்கவும், கண்டு களிக்கவும் இரண்டு சிங்கள அமைச்சர்கள் யாழ்ப்பாணத்திற்கு வந்தமையாகச் சொல்லப்பட்டது. ஒருவர் சிறில் மத்தியூ. மற்றவர் காமினி திசநாயக்கா.

குடித்து வெறித்திருந்த சில பொலிஸ்காரர்கள் தாமாகவே திருட்டுச் செயல்களைப் புரிந்தார்கள் என்று அரசு தரப்பில் வியாக்கியானம் வேறு கொடுக்கப்பட்டது. திருடுகின்றவர்கள் தமக்கு ஆதாயம் தரக்கூடிய பொருட்களைத் திருடுவார்கள். நூல்களையா எரிப்பார்கள்.?

இந்த பண்பாட்டு அழிப்பினைத் தொடர்ந்து நடந்த அல்லது நடக்காத விடயங்கள் சில படிப்பினைகளைத் தந்தன. நூல் நிலைய அழிப்பு குறித்து உத்தியோக பூர்வ விசாரணைகள் எதையும் சிங்கள அரசு நடாத்தவில்லை. அன்றைய தினம் யாழ்ப்பாணத்தில் தங்கியிருந்த அந்த இரண்டு அமைச்சர்களுக்கும் எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானம் ஒன்றை பின்னர் பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவரான அமிர்தலிங்கம் கொண்டுவர முயன்றபோது சிங்கள அரசு அவருக்கு எதிராகவே நம்பிக்கை இல்லாத் தீர்மானத்தை கொண்டுவந்தது.

சிங்களப் பாரளுமன்றத்தின் ஊடாக தமிழர்களுக்கு எந்தவிதமான நீதியோ நியாயமோ கிடைக்கப் போவதில்லை என்ற உண்மை மீண்டும் ஒருமுறை நிரூபணமாகியது.

இதன் பின்னனியில்தான் சிங்கள பேரினவாத அரசியல் சட்டங்களுக்கும் ஹிட்லரின் நாசிச் சட்டங்களுக்கும் இடையே உள்ள ஒற்றுமைகளைத் தர்க்கிக்க விழைகின்றோம். சட்டங்கள் மட்டுமல்ல, அவையினூடாக மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளும் கருத்தில் கொள்ளப்பட வேண்டியவையாகும்.

1935ம் ஆண்டு செப்டெம்பர் மாதம் 10ம் திகதி நியூரம்பெக், ஜேர்மனியில் நடைபெற்ற நாசி மகாநாட்டில் சட்டமாக்கப்பட்ட சில விடயங்கள் பின்னாளில் அதாவது 1948, 1949களில் சிறிலங்கா அரசால் சட்டமாக்கப்பட்டன. உதாரணம் குடியுரிமை சட்டம் – இலங்கை

நூல்களை எரிக்கின்ற திருவிளையாடல்களையும், நாசிக்கள் எப்போதுமே புரிந்து வந்திருக்கிறார்கள். 1930 களில் யூத மக்களின் நூல்களை வீதியோரங்களில் பகிரங்கமாக நாசிக்கள் எரித்து வந்தனர். 1933-ம் ஆண்டு மே மாதம் 10-ம் திகதியன்று ஹிட்லரின் பிரச்சார அமைச்சரான கோயபல்சின் உத்தரவின் பிரகாரம் பேர்லின் நூல் நிலையத்திற்குச் சென்ற நாசிக்கள் அங்கிருந்த சகல நூல்களையும் எரித்தார்கள். ஒரே ஒரு வித்தியாசம்தான்! சிங்களக் காடையர்கள் செய்தது போல, அவர்கள் (நாசிக்கள்) பேர்லின் நூல் நிலையத்தை எரிக்கவில்லை.

யூத மக்கள் மீது ஜேர்மன் இராணுவத்தினரால் நடாத்தப்பட்ட தாக்குதல்களையும், கொலைகளையும் கோயபல்ஸ் இவ்வாறுதான் நியாயப்படுத்தி வந்தார். ஏதொவொரு திடீர் உணர்ச்சி வேகத்தில் சிந்திக்காமல், திட்டமிடாமல், இவ்வாறான செயல்களைப் போர்வீரர்கள் புரிந்து விட்டார்கள். நாசிக்களின் இதே காரணத்தைத்தான் சகல சிங்கள அரசுகளும் இதுவரை சொல்லி வருகின்றன.

ஆப்கானிஸ்தானின் அன்றைய தாலிபான் அரசு மிகப்பழைமை வாய்ந்த புத்த சிலைகளை அழிக்க முனைந்தபோது, பண்பாட்டு மேன்மை குறித்து புத்த பிக்குகள் கொழும்பில் ஆர்ப்பாட்டங்களை நடாத்தினார்கள். பிரதமர் ரட்னசிறி விக்கிரமநாயக்கா பாகிஸ்தானுக்குப் பறந்தோடிச் சென்று புத்த சிலை அழிப்பை தவிர்ப்பதற்கு பாகிஸ்தானின் உதவியை நாடினார். கொழும்பு ஊடகங்கள் இதனை முன்னிலைப்படுத்தின.

ஆனால் விலை மதிப்பற்ற யாழ் நூல்நிலையம் எரிக்கப்பட்ட போது மௌனம் தான் மொழியாகிற்று!

சுதந்திரம் பெற்ற நாடுகள் தமக்கு, தமது நாட்டுக்கு, தமது பண்பாட்டுக்கு ஏற்பட்ட அழிவுகளை வரலாற்று ரீதியாக நினைவு கூருவதற்காக மிக முக்கியமான அழிவுகளை ஞாபகப்படுத்தும் சின்னங்களைப் பாதுகாத்து வருவதை நாம் உலகளாவிய ரீதியில் காணக் கூடியதாக உள்ளது. அப்படிப்பட்ட நினைவுச் சின்னமும் இப்போது எமக்கு இல்லை.

ஆயினும் வரலாறு மீண்டும் மீண்டும் ஒரு விடயத்தை, ஒரே ஒரு விடயத்தை சுட்டிக்காட்டியே வந்திருக்கின்றது. சிங்கள பௌத்தப் பேரினவாத அரசுகளிடமிருந்து தமிழ் மக்களுக்கு நீதியான, நேர்மையான, நிரந்தரமான, நியாயமான, கௌரவமான சமாதானத் தீர்வு ஒரு போதும் கிடைக்கப் போவதில்லை.

நன்றி - ஏரிமலை

இன்று திருத்தப்பட்டு இயங்கும் யாழ் நுாலகம்

Jaffna_library2-300x225.jpg

http://www.ilankathir.com/?p=6994

யாழ் நூல் நிலையம் - காணொளி மற்றும் ஆவணம்

யாழ்ப்பாண நூல் நிலையமும் சிங்கள நாசிக்களும் (NAZI)

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.