Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஜான் மார்டடேலின் "Life of Pi"

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

௦௦௦௦

kiritaran-title-1024x196.jpg

கனடிய எழுத்தாளரான ஜான் மார்டெல் (Yann Martel) எழுதிய புகழ்பெற்ற நாவல் ‘பை’யின் வாழ்வு (Life Of Pi). இந்த நாவல் 2002ஆம் ஆண்டுக்குரிய ‘புக்கர்’ விருதினைப் பெற்றதுடன் பிரான்சின் புக்கர் விருதினை இதன் பிரெஞ்சிய மொழிபெயர்ப்பிற்காகப் பெற்றது. அத்துடன் தென்னாபிரிக்க நாவல் விருது, இலக்கியத்திற்கான ஆசிய/பஸிபிக் அமெரிக்க விருது (2001-2003)எனப் பல விருதுகளைப் பெற்றுள்ளது. ஆனால் இந்த நாவல் ஐந்து தடவைகள் பிரித்தானிய பதிப்பகங்களால் நிராகரிக்கப்பட்டதென்பது குறிப்பிடத்தக்கது. அண்மையில் நான் வாசித்த நாவல்களில் மட்டுமல்ல, இதுவரையில் நான் வாசித்த நாவல்களில் எனக்குப் பிடித்த நாவல்களிலொன்றாக இந்நாவலும் அமைந்து விட்டதென்று கூறினால் அது மிகையான கூற்றல்ல. ஜான் மார்டெல்லின் இந்த நாவல் பல்வேறு காரணங்களுக்காக என்னைக் கவர்ந்துள்ளது. அவற்றில் முக்கியமானவையாக நான் கருதுவது: கதை கூறப்படும் முறை, கதைப்பின்னல், பாத்திரப்படைப்பு, மானுட இருப்பு பற்றிய தேடல், இயற்கை பற்றிய சித்திரிப்பு… இவைதான் முக்கியமாக இந்நாவல் என்னைக் கவர்ந்ததற்குக் காரணம். இவையெல்லாம் சேர்ந்து இந்நாவலை வாசிக்கும் அனுபவத்தையொரு இன்பகரமானதொரு அனுபவமாக்கி விட்டன. அதன் விளைவே இந்நாவல் பற்றிய எனது இந்தக் குறிப்புகளும்.

இந்நாவல் உருவான கதையினை ஆசிரியர் நூலின் ஆசிரியர் குறிப்பில் குறிப்பிடுகின்றார். தனது இரண்டாவது நாவல் போதிய வரவேற்பினைப் பெறாத நிலையில், பொருளியல்ரீதியில் பாதிப்புற்றிருந்த நிலையில் , ஆசிரியர் மும்பாய் பயணமாகின்றார். பின் அங்கிருந்து பாண்டிச்சேரிக்குச் செல்கின்றார். ஒரு ‘காபி கபே’யில் பாண்டிச்சேரி வாசியான முதியவரொருவரைச் சந்திக்கின்றார். அவர் பிரான்சிஸ் அதிருபசாமி. அவர் தனது உரையாடலில் ‘என்னிடமொரு உன்னைக் கடவுளை நம்புமொருவனாக ஆக்குமொரு கதை உள்ளது’ என்கின்றார். அவர் இவ்விதம் கூறவே ஆரம்பத்தில் ஆசிரியர் அந்த முதியவரைப் பற்றி, சமயத்தைப் பரப்பும் இன்னுமொரு பிரச்சாரகரோ என்று சந்தேகமுறுகின்றார். அதன் எதிரொலியாக அந்தக் கதை இரண்டாயிரம் வருடத்திற்கு முன்னைய ரோம் நகரின் ஒதுக்குப் புறத்தில் அல்லது ஏழாம் நூற்றாண்டு அராபியாவில் நடைபெறுகிறதா’ என்று கேள்விகளைத் தொடுக்கின்றார். அதற்கு அந்த முதியவர் ‘இல்லை, அந்தக் கதை சில வருடங்களுக்கு முன், இங்கு பாண்டிச்சேரியில்தான் ஆரம்பிக்கிறது. அத்துடன் அது நீ எந்த நாட்டிலிருந்து வந்திருக்கின்றாயோ அந்த அந்த நாட்டில்தான் முடிவடைகிறதென்பதைக் கூறுவதில் நான் மகிழ்ச்சியுறுகிறேன்’ என்று கூறுகின்றார். இவ்விதமாக நாவல், ஆசிரியரின் குறிப்புடன் ஆரம்பமாகிறது. அந்த முதியவர் கூறும் கதையின் பிரதான நாயகனே ‘பிஸ்ஸின் மொலிடொர் பட்டேல்’ (Piscine Molitor Patel).

பிரான்சிஸ் அதிருபசாமி கூறிய கதையின் நாயகன் அப்பொழுது பதின்ம வயதினன். அவனது வாழ்க்கை பற்றிய விபரங்களை கனடாவில் வசிக்கும் அவனிடமே கேட்கும்படி பிரான்ஸிஸ் அதிருபசாமி கூறுகின்றார். அதன் பின்னர் கனடா திரும்பும் கதாசிரியர் கனடாவில் வசிக்கும் பிஸ்ஸின் மொலிடொர் பட்டேலைத் தேடிக் கண்டு பிடிக்கின்றார். அவனோ தொரான்டோ பல்கலைக் கழகத்தின் புகழ்பெற்ற புனித மைக்கல் கல்லூரியில் சமயம், விலங்கியல் ஆகியவற்றில் பட்டங்களைப் பெற்ற பட்டதாரி. அவன் கூறிய கதையினை அவனே கூறுவதுபோல் கதாசிரியர் நாவலை அமைத்திருக்கின்றார். ஆயினும் அவ்வப்போது தன் தலையினையும் காட்டவும் அவர் தவறவில்லை.

பட்டேலுக்கு ‘பிஸ்ஸின் மொலிடொர் பட்டேல்’ (Piscine Molitor Patel) என்னும் பெயர் வந்ததற்குக் காரணமே அவனது தந்தையின் வர்த்தக நண்பரான, மாமாஜி என அழைக்கப்பட்ட பிரான்ஸிஸ் அதிருபசாமிதான். நீச்சலில் நன்கு பயிற்சி பெற்றவரான அதிருபசாமி பாரிஸிலுள்ள நீச்சல் குளமொன்றான பிஸ்ஸின் மொலிடொர்” (Piscine Molitor) மீது மிகவும் மதிப்பு வைத்திருப்பவர். ‘கடவுளே நீந்துவதற்கு மகிழ்ச்சியடையும் நீச்சல் குளம் அது’ என்பதவர் கருத்து. இதன் காரணமாகவே ,பட்டேல் பிறந்தபொழுது அவனுக்கு அந்தப் பெயரிடப்பட்டது. ஆனால் இந்தப் பெயர் பட்டேலின் இளம்பிராயத்தில் அவனுக்குப் பல சிக்கல்களை yann_martel_life_of_Pi-1.jpg

ஏற்படுத்துகின்றது. அவனது பெயர் சக மாணவர்களின், ஆசிரியர்களின் பாதுகாவலர்களின் வார்த்தைகளில் கேலிக்குரியதாக வெளிப்படுகின்றது. Piscine Patel , Pissing Patel என ஆகிவிடுகின்றான். இதிலிருந்து தப்புவதற்குப் பட்டேல் கண்டுபிடித்த தந்திரோபாயம்தான் ‘பை’ பட்டேல். ‘பை’ என்பது கணிதத்தில் ஒரு மாறிலி. 3.14 என்னும் பெறுமானத்தைக் குறிப்பது. ஒரு முறை வகுப்பறையில் ஆசிரியரொருவர் மாணவர்களின் வரவினை எடுப்பதன் பொருட்டு ஒவ்வொரு மாணவராகப் பெயர் சொல்லி அழைத்து வருகின்றார். தன் முறை வரும்பொழுது பட்டேல் எழுந்து, ஆசிரியருக்கு முன்பாகவே கரும்பலகையில் ‘My Name is Piscine Molitor Patel. Known to all as Pi Patel’ என்று எழுதுகின்றான். அத்துடன் ‘பை’யின் கிரேக்க எழுத்தையும் எழுதி அதற்குச் சமனாக 3.14 என்றும் எழுதி விடுகின்றான். இந்தத் தந்திரத்தையே அவன் தொடர்ந்தும் கையாளத் தொடங்கி விடுகின்றான். இதன் விளைவாகக் காலப்போக்கில் ‘பை’ ,பட்டேல் ஆகிவிடுகின்றான். மற்றவர்கள் வாய்களிலிருந்து ‘பிஸ்ஸிங் பட்டேல்’ என்று வருவதைத் தடுப்பதற்காகப் ,பட்டேல் கையாண்ட தந்திரத்தின் விளைவது.

நாவலின் பிரதானமான நிகழ்வுகளாக பட்டேல் பயணித்த ஜப்பானிய சரக்குக் கப்பல் பசிபிக் சமுத்திரத்தில் மூழ்கியதைத் தொடர்ந்து, 227 நாட்களாக அவனும் ரிச்சர்ட் பார்க்கர் என்று அழைக்கப்படும் 450 இறாத்தல்களையுடைய வங்காளப் புலியும் ‘வாழ்க்கைப்’ படகொன்றில் (Life Boat)) நிராதரவாகத் தப்பிப் பிழைத்த அனுபவங்களையே குறிப்பிடலாம். ‘பை’யின் வாழ்வு என்னும் மேற்படி நாவல் மூன்று பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. உண்மையில் ஆசிரியரின் குறிப்பு என்னும் நூலின் ஆரம்பக் கட்டுரையினையும் நாவலின் பகுதியாகவே கருதவேண்டும். நாவலின் முதல் பகுதி பட்டேலின் இளம்பிராயத்து நிகழ்வுகளை விபரிக்கிறது. இளம்பிராயத்திலேயே அவனது உள்ளம் கடவுள், சமயம் பற்றியெல்லாம் ஆழமாகவே சிந்திக்கத் தொடங்கி விடுகிறது. இந்துவான அவன் தனது பதினான்கு வயதிலேயே கிறிஸ்தவம், இஸ்லாம், இந்து சமயங்கள் ஆகிய மூன்று சமயங்களையும் இறைவனிடத்தில் அன்பு செலுத்த வேண்டுமென்பதற்காகப் பின்பற்றத் தொடங்கிவிடுகின்றான். அவனது பெற்றார் மிருகக்காட்சிசாலையொன்றினையும் நடாத்துவதால் இளம் பருவத்திலேயே மிருகங்கள் பற்றியும், அவற்றின் உளவியல் பற்றியும் அறிந்து கொண்டிருக்கின்றான்.

இந்தியாவின் அரசியல் நிலை பற்றிய விமர்சனங்களையும் பட்டேல் வாயிலாக ஆசிரியர் அவ்வப்போது விபரிக்கின்றார். அவனது உயிரியல் ஆசிரியரான சதீஷ் குமார் ஒரு மார்க்சியர்; கம்யூனிஸ்ட். ‘தமிழகம் நடிகர்களை அரசியலில் தேர்வு செய்வதை நிறுத்திக் கேரளாவின் வழியில் செல்லும்’ என்பதில் எப்பொழுதும் நம்பிக்கை கொண்டவர். இந்தக் கதை நடைபெறும் காலகட்டம் 1977 என்பது குறிப்பிடத்தக்கது. அவர் பட்டேலின் குடும்பத்தவர்கள் நடாத்தும் மிருகக்காட்சிச்சாலைக்கு அடிக்கடி வருபவர். அங்கு காண்டாமிருகங்கள் இரண்டும், ஆடுகள் சிலவும் ஒன்றாக , ஒருவருக்கொருவர் துணையாக வாழுவதைப் பார்த்து அவர் கூறுவார்:” இங்கு நான் அடிக்கடி வருபவன். இது எனது ஆலயமென்று ஒருவர் கூறலாம். இங்குள்ள காண்டாமிருகங்களையும், ஆடுகளையும் போல் நமது அரசியல்வாதிகள் இருந்தால் நாட்டில் குறைந்தளவு பிரச்சினைகளேயிருக்கும். துரதிருஷ்ட்டவசமாக நமது பிரதமர் காண்டாமிருகங்களின் நல்ல குணங்களில்லாத, அவற்றின் தடித்த தோற் கவசங்களை மட்டுமே கொண்டவராகவிருக்கின்றார்”. அப்பொழுது இந்தியாவின் பிரதமராக இருந்தவர் இந்திரா காந்தி. இது பற்றிக் குறிப்பிடும் ,பட்டேல் வீட்டில் தாயும் தந்தையும் அடிக்கடி காந்தி பற்றிக் குற்றஞ்சாட்டிக் கொள்வதாகவும், இது தன்னைப் பொறுத்தவரையில் சிறிய விடயமென்றும் ஏனெனில் காந்தி வடக்கே மிகவும் தொலைவில் இருக்கிறாரென்றும் குறிப்பிடுவார். அத்துடன் ஆசிரியர் சதீஷுக்கு ‘சமயம் எங்களைக் காப்பாற்றும்’ என்கின்றார். அதற்குச் சிரித்தபடியே ஆசிரியர் சதீஷ் ‘நான் சமயத்தை நம்பவில்லை. சமயமென்பது இருள்’ என்கின்றார். சமயமென்றால் ஒளியென்றும் நம்பும், சமயங்களினூடு இறைவனைக் காணவிழையும் பட்டேலுக்கு அது திகைப்பினையூட்டுகிறது. ஆசிரியர் சதீஷோ ‘உண்மையினை விபரிக்கும் விஞ்ஞானரீதியிலான விளக்கங்களுக்கெதிராகச் செல்வதற்கே இடமில்லை. எங்களது உணர்வுகளை மீறி எதனையும் நம்புதற்குக் காத்திரமான காரணங்களில்லை’ என்று குறிப்பிடுவார். இவ்விதமாக நாவலின் முதற்பகுதி பட்டேலின் இளம்பிராயத்தை விபரிக்கும் அதே சமயம், அரசியல், சமயம், சமூகம் பற்றியேல்லாம் கேள்விகளை எழுப்புகிறது. முதற்பகுதி பட்டேலின் குடும்பத்தவர்கள் தாம் நடாத்தும் மிருகக்காட்சிச்சாலையினை விற்றுவிட்டு, மிருகங்கள் சிலவற்றுடன் , ஜப்பானியச் சரக்குக் கப்பலொன்றில் கனடா நோக்கிச் செல்வதுடன் முடிவடைகின்றது.

நாவலின் இரண்டாவது பகுதியே நாவலின் பிரதானமான பகுதி. இப்பகுதி பசிபிக் கடலில் ,பட்டேல் குடும்பத்தவர்கள் பயணிக்கும் ஜப்பானிய சரக்குக் கப்பல் மூழ்குவதையும், அதிலிருந்து பட்டேலும், வரிக்குதிரையொன்றும், ‘ஹையீனா’வொன்றும், ‘உராங் குடான்’ என்னுமொரு மனிதவகைக் குரங்கொன்றும், 450 இறாத்தல்களைக் கொன்ட, ரிச்சர்ட் பார்க்கர் என்று அழைக்கப்படும் ‘பெங்கால்’ புலியொன்றும் மட்டும் உயிர்தப்புவதற்காகப் பாவிக்கப்படும் ‘வாழ்க்கைப் படகொன்’றில் தப்புவதற்காக நடாத்தும் போராட்டங்களை விபரிக்கிறது. ஆரம்பத்தில் மூழுகும் கப்பலிலிருந்து படகினுள் பாயும்பொழுது ஒரு கால் முறிவுற்ற நிலையிலிருக்கும் வரிக்குதிரையினைக் ஹையினா வரிக்குதிரை உயிருனுடனிருக்கும்போதே சிறுகச் சிறுகத் தின்று தீர்க்கிறது. பின்னர் அது ‘உராங் குடான’யும் தின்று பசியாறுகிறது. ‘ஹையினா’வை ரிச்சர்ட் பார்க்கர் கொன்று தனக்கு உணவாக்கிக் கொள்கிறது. இதன் பின்னர் ரிச்சர்ட் பார்க்கரும், பட்டேலும் மட்டுமே படகினில் தனித்து விடப்படுகின்றனர். ஆரம்பத்தில் ரிச்சர்ட் பார்க்கரையெண்ணிப் பயப்படும் ,பட்டேல் அதனத் தன் வழிக்குக் கொண்டுவருவதற்காக, கப்பலிலிருந்த ஆமைகள், மீன்களைப் பிடித்து அதற்கு உணவாக்குகின்றான். [மிகவும் ஆன்மிகவாதியான, மச்ச உணவு வகைகளையே அதுவரையில் உண்டிராத ,பட்டேல் முதல் முறையாக மீனொன்றைக் கொன்றதும் அதற்காக மிகவும் வருந்துகின்றான்]. கடல் நீரிலிருந்து குடி நீர் தயாரிக்கும் உபகரணத்தின் மூலம் நன்னீர் தயாரித்து அதனுடனும் பகிர்ந்து கொள்கின்றான். ரிச்சர்ட் பார்க்கரைப் பழக்கப்படுத்தித் தன் வழிக்குக் கொண்டு வருகின்றான். அதன் கழிவுகளைச் சுத்திகரிக்கின்றான். ரிச்சர்ட் பார்க்கருக்கும், பட்டேலுக்குமிடையிலான நாளாந்த அனுபவங்களைப் பட்டேல் விபரிக்கும் பகுதிகள் நாவலின் அற்புதமான , சுவையான பகுதிகள். குறிப்பாக ரிச்சர்ட் பார்க்கருடனான பட்டேலின் நீண்ட உரையாடல். இந்த உரையாடல் உண்மையானதா அல்லது கடற்பயணத்தின் விளைவாக பட்டேலுக்கு ஏற்பட்ட மனப்பிரமையா என்பதை வாசகர்கள் தாமாகவே ஊகித்துக் கொள்ள வேண்டும். உண்மையில் ரிச்சர்ட் பார்க்கரும், பட்டேலும் ஒருவருக்கொருவர் ஏகாந்தம் விரவிக் கிடந்த சூழலில், துணையாக இருக்கின்றார்கள். இது போன்ற கடற்பயணங்களில் தப்பிப் பிழைப்பதற்கான வழிமுறைகள், மிருகங்களின் உளவியல், அவற்றை வழிக்குக் கொண்டுவருவதற்கான வழிமுறைகளென ஏராளமான தகவல்களையும் நாவல் அவ்வப்போது வழங்குகின்றது.

இவ்விதமான அவர்களது தப்பிப்பிழைத்தலிற்கான பயணத்தில் கீரியினத்தைச் சேர்ந்த ‘மீர்கட்’ (Meerkat) என்ற பாலூட்டிகள் அதிகமாக வாழும் புதிரான தீவொன்றும் எதிர்ப்படுகின்றது. அங்குள்ள மரங்கள், குளங்களெல்லாமே மாமிசபட்சணிகளாக விளங்குகின்றன. அத்தீவின் குளங்களில் அகப்பட்டுக்கொள்ளும் உப்பு நீரில் மட்டுமே வாழும் கடல் மீன்களைக் குளங்கள் நன்னீராக்கிச் சாகடித்து உணவாக்கிக் கொள்கின்றன. அங்குள்ள மரங்கள் கூட மாமிச பட்சணிகளாகவிருக்கின்றன. அதனை உணர்ந்தபின் அங்கிருந்து தப்பி மீண்டும் படகினில் பட்டேலும் , ரிச்சர்ட் பார்க்கரும் தப்பிப் பிழைத்தலுக்காகப் பயணிக்கின்றனர்.

இவ்விதமாகப் பயணிக்கும் அவர்களது படகு மெக்ஸிக்கோ நாட்டின் கரையினை அடைகின்றது. அதுவரையில் தப்பிப் பிழைத்தலுக்கான பயணத்தில் பட்டேலுக்குத் துணையாக விளங்கிய ரிச்சர்ட் பார்க்கர், அவனுக்குப் பிரியாவிடை கூடக் கூறாமல், அருகிலிருந்து காட்டினுள் சென்றுவிடுவதுடன், அவனுடைய வாழ்விலிருந்தே நிரந்தரமாகப் பிரிந்து விடுகின்றது. அது மிகவும் ஆறாத மனத்துயரினைப் பட்டேலுக்கு அளித்துவிடுகின்றது. இத்துடன் நாவலின், பிரதானமான இரண்டாவது பகுதி முடிவுறுகிறது.

அதன் பின் நாவலின் மூன்றாவது பகுதி தொடங்குகின்றது. இது மிகவும் சுவையான பகுதி. மூழ்கியிருப்பது ஜப்பானிய நாட்டினைச் சேர்ந்த சரக்குக் கப்பலானதால், அது பற்றிய விபரங்களைச் சேகரிப்பதற்காக, அதன் மூழ்கியதன் காரணத்தை அறிவதற்காக, ஜப்பானிய போக்குவரத்து அமைச்சின் கடற்துறைப் பிரிவைச் சேர்ந்த ‘டொமகிரொ ஓகமொடொ’, ‘டொமகிரோ’வின் உதவியாளானான ‘அட்சுரொ சிபா’ என்னும் அதிகாரிகளிருவர் வழிதடுமாறி கலிபோர்னியா சென்று ஒருவழியாகச் சரியான இருப்பிடமறிந்து மெக்சிக்கோ வருகின்றார்கள். நாவலின் மூன்றாவது பகுதி முழுவதும் அவர்களிருவரினதும் பட்டேலினுடனான நேர்காணலில், விசாரணையில் நடைபெற்ற உரையாடல்களாகவேயிருக்கின்றன. மிகவும் சுவையான விசாரணை. அந்த அதிகாரிகள் தமக்குள் அவ்வப்போது ஜப்பானிய மொழியில் பேசிக்கொள்வார்கள். அதனை நாவலாசிரியர் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துத் தடித்த எழுத்தில் வெளிப்படுத்தியிருப்பார். அவர்கள் பட்டேலினுடைய அனுபவத்தைக் கேட்டதும் அதை நம்பவில்லை. மிருகங்கள் எதனையும் காணாத நிலையில், ரிச்சர்ட் பார்க்கரும் கானகத்தினுள் சென்று விட்ட நிலையில், மிருகங்களுடனான அவனது கதை அவர்களுக்கு நம்பத் தகுந்ததாகவிருக்கவில்லை. எனவே அவர்கள் நம்புவதற்காக ,பட்டேல்இன்னுமொரு கதையினைத் தனது அனுபவமாகக் கூறுவான். ஆரம்பத்தில் அவன் மிருகங்களை உள்ளடக்கிய அனுபவங்களுக்கெதிராக, மிருகங்களேயில்லாத கதையொன்றை அவன் அவர்களுக்குக் கூறுவான். அந்தக் கதையில் வரும் கப்பலின் சமையல்காரன், காலொடிந்து கிடக்கும் கப்பலின் மாலுமியொருவனையும், பட்டேலின் தாயாரையும் கொன்று விடுகின்றான். தாயைக் கொன்று அவளது தலையை மட்டும் வெட்டி எடுத்து , பட்டேலின் மேல் எறிகின்றான். இறுதியில் பட்டேல் அந்தச் சமையல்காரனைக் கொன்றுவிடுகின்றான். அவனுடன் உரையாடும் ஜப்பானிய அதிகாரிகள் அவன் கூறிய இரு கதைகளுக்குமிடையில் சில ஒற்றுமையான அம்சங்களைக் கண்டுகொள்கின்றார்கள். கப்பலின் சமையல்காரனைக் ஹையினாவாகவும், காலில் காயம்பட்ட மாலுமியை காலொடிந்து ஹையினாவுக்குணவாகிய வரிக்குதிரையாகவும், ‘உராங் குடானை’ பட்டேலின் தாயாராகவும், ரிச்சர்ட் பார்க்கரைப் பட்டேலாகவும் அவர்கள் ஒருவித ஒற்றுமையினை அவதானிக்கின்றார்கள்.

இவ்விதமாக இருவித கதைகளைத் தனது அனுபவங்களாகக் கூறிய பட்டேல் அந்த அதிகாரிகளிடம் அவர்கள் எந்தக் கதையினைத் தேர்வு செய்ய விரும்புகின்றார்களென்று வினாவுகின்றான். அதற்கு அவர்கள் அவனது மிருகங்களுடனான அனுபவங்களை விபரிக்கும் கதையினையே தேர்வு செய்ய விரும்புவதாகக் கூறுகின்றார்கள். அவனுடனான விசாரனையின் மூலம் அந்த அதிகாரிகளால கப்பல் மூழ்கியதற்கான காரணத்தைக் கண்டுபிடிக்க முடியவில்லை. அவர்கள் பட்டேலுடனான தமது உரையாடல் பற்றிய கருத்துகளை நாவலாசிரியருக்குக் கடிதமொன்றின் மூலம் தெரியப்படுத்தியிருப்பதுடன் நாவல் முடிவடைகிறது. அதில் அவர் ஒல்லியான, கடுமையான, மிகுந்த அறிவுள்ளவன் பட்டேல். இவ்விதமான இதுவரை கால அனுபவங்களில் வெகு சிலரே பட்டேலைப் போல் நீண்ட நாட்கள் தத்தளித்துத் தப்பியிருக்கின்றார்கள். ஆனால் ஒருவராவது இவ்விதம் இளம் ‘பெங்கால் புலி’யொன்றின் துணையுடன் தப்பியதாகச் சரித்திரமேயில்லை என்று கூறியிருப்பார்கள்.

உண்மையில் ‘பை’யின் வாழ்வு என்னும் இந்த நாவல் ஒரு அற்புதங்களும் , கற்பனையும் மிகுந்த சாகச நாவலா? அல்லது மானுட இருப்பினை விபரிக்குமொரு குறியீட்டு நாவலா? இந்த நாவலை வாசிக்கும் ஒருவருக்கு ஹெமிங்வேயின் கடலும் கிழவனும், ‘டானியல் டிஃபோ’வின் ரொபின்சன் குருஷோ , ஹேர்மன் மெல்விலின் ‘மோபி டிக்’போன்ற நாவல்கள் நினைவுக்கு வராமல் போகாது. இவையெல்லாம் கடலனுபவங்களை, எதிர்பாராத சூழலில் தப்பிப்பிழைத்தலுக்கான போராட்டங்களையெல்லாம் விபரிக்கும் நாவல்கள். அத்துடன் இவையெல்லாம் மானுட இருப்பினை விபரிக்கும் குறியீட்டு நாவல்களாகவும் கருதலாம். அந்த வகையில் ஜான் மார்ட்டேலின் ‘பை’யின் வாழ்வு என்னும் இந்நாவலும் ஆங்கில இலக்கியத்தின் முக்கியமானதொரு படைப்பாகத் தன்னை நிலைநிறுத்திக் கொண்டிருக்கின்றது. இந்நாவல் வெளிவந்த போது பிரேசிலிய நாவலாசிரியரான Moacyr Scliar என்பவரின் (இவர் ஒரு மருத்துவர் கூட) Max and the Cats என்னும் நாவலின் தழுவலிதெனக் கண்டனங்களெழுந்தன. அந்நாவலில் ஜேர்மனிய வர்த்தகரொருவர் நாசிகளிடமிருந்து தப்புவதற்காகத் தன் குடும்பத்தவருடன் பிரேசில் நோக்கிப் பயணிக்கின்றார். வழியில் கப்பல் மூழ்கிவிட அந்த வர்த்தகரின் மகனும், ஜாகுவார் வகைப் புலியொன்றும் தப்புகின்றார்கள். இது பற்றிய தனது குறிப்பொன்றில் ஜான் மார்ட்டேல் மேற்படி பிரேசிலிய நாவல் ஏற்படுத்திய ‘வாழ்க்கை பற்றிய பொறிக்காக’ நன்றி தெரிவித்திருக்கின்றார். ஆரம்பத்தில் ஜான் மார்ட்டெல் மீது மான நஷ்ட்ட வழக்குப் போட விரும்பிய பிரேசிலிய நாவலாசிரியர் பின்னர், ஜான் மார்ட்டலுடனான சந்திப்பின் பின்னர் அம்முடிவினை மாற்றிக் கொண்டதாகவும் தெரிய வருகின்றது. மேற்படி இரு நாவல்களுக்குமிடையில் ஒற்றுமையான அம்சங்கள் பல இருக்கின்றன. அவை விரிவாக ஆராயப்பட வேண்டியவை. அது போல் இந்நாவலில் வரும் பெங்கால் புலியின் பெயர் ரிச்சர்ட் பார்க்கரென இருப்பது பற்றியும் விரிவாக ஆராயலாம். எட்கார் அலன்போவினால் எழுதப்பட்ட முழுமையான நாவலான The Narrative of Arthur Gordon Pym of Nantucket என்னும் நாவலின் பாத்திரமொன்றின் பெயர் ரிச்சர்ட் பார்க்கர். திமிங்கல் வேட்டைக்குப் பயன்படும் கப்பலொன்றின் பயணிக்கும் ஆர்தர் கோர்டன் பைம்மின் கடற்பயண அனுபவங்களை விபரிக்கும் நாவலது. இது போன்ற பல கடற்பயண சாகச நாவல்களில் ரிச்சர்ட் பார்க்கர் என்னும் பாத்திரமொன்று வருவதும் அவதானிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாகவும் பெங்கால் புலியின் பெயராக ரிச்சர்ட் பார்க்கர் என்னும் பெயரினை நாவலாசிரியரான ஜான் மார்ட்டெல் தெரிவு செய்தாரா? ஆய்வுக்குரிய விடயமது. ஆனால் இத்தகைய சர்ச்சைகளையெல்லாம் தாண்டி இன்று ‘பை’யின் வாழ்வு என்னும் இந்த நாவல் உலக இலக்கியத்தின் முக்கியமானதொரு நாவலாக விளங்குகின்றது.

http://eathuvarai.net/?p=1999

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

வ .ந .கிரிதரன் யாழ் இந்து கல்லூரியில் என்னை விட ஒரு வகுப்பு குறைவாக படித்துவந்தவர்.பின் மொரட்டுவை பல்கலைகழகம் சென்று காந்தியத்துடன் வேலை செய்து கழகத்திற்கும் சிறிது காலம் வேலை செய்தவர் .

இவரின் இணையம் தான் "பதிவுகள் ".மிக நல்லதொரு இலக்கிய இணையம் .கனடாவில் தான் இருக்கின்றார் .

வ .ந .கிரிதரன் யாழ் இந்து கல்லூரியில் என்னை விட ஒரு வகுப்பு குறைவாக படித்துவந்தவர்.பின் மொரட்டுவை பல்கலைகழகம் சென்று காந்தியத்துடன் வேலை செய்து கழகத்திற்கும் சிறிது காலம் வேலை செய்தவர் .

இவரின் இணையம் தான் "பதிவுகள் ".மிக நல்லதொரு இலக்கிய இணையம் .கனடாவில் தான் இருக்கின்றார் .

[size=5]http://www.geotamil.com/pathivukal/aboutvng.html[/size]

[size=5]http://www.geotamil.com/pathivukalnew/[/size]

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.