Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சுதந்திர தமிழீழம் குறித்து வாக்கெடுப்பு நடத்த வேண்டும்

Featured Replies

சுதந்திர தமிழீழம்  குறித்து வாக்கெடுப்பு நடத்த வேண்டும் - மதிமுக பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றம்!

 

தமிழகத்தை வறட்சி மாநிலமாக அறிவிக்க வேண்டும், சுதந்திர தமிழீழம்  குறித்து வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்பது உள்ளிட்ட  17 தீர்மானங்கள் இன்று  நடைபெற்ற மதிமுக பொதுக்குழு கூட்டத்தில்  நிறைவேற்றப்பட்டன.

மதிமுக பொதுக்குழு கூட்டம்,சென்னை அண்ணாநகர் விஜயஸ்ரீ மஹாலில்  அக்கட்சியின்  பொதுச் செயலாளர் வைகோ முன்னிலையில் இன்று காலை 10 மணிக்கு    தொடங்கியது.

அவைத்தலைவர் திருப்பூர் துரைசாமி தலைமை தாங்கினார்.துணை பொதுச்செயலாளர்கள்  மல்லை சத்யா, நாசேதுரை, பொருளாளர் மாசிலாமணி மற்றும் மாநில நிர்வாகிகள்,    அப்துல்லா பெரியார்தாசன், வழக்கறிஞர் தேவதாஸ், மலர்மன்னன், உயர்நிலைக்குழு    உறுப்பினர்கள், ஆட்சிமன்ற குழு உறுப்பினர்கள், பொதுக்குழு உறுப்பினர்கள், மாவட்ட    நகர, ஒன்றிய நிர்வாகிகள் உள்பட சுமார் 1500 பேர் கலந்து கொண்டனர்.

இக்கூட்டத்தில் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடுவது குறித்த வியூகம், காவிரி  டெல்டா பகுதி விவசாயிகள் பிரச்னை, கால்நடைகளுக்கு கூட  தண்ணீர் கிடைக்காமல்  விவசாயிகள் படும் வேதனை, முல்லை பெரியாறு அணை பிரச்னை, கூடங்குளம்  அணுமின்நிலைய பிரச்னை, விலைவாசி உயர்வு, இலங்கை


அதிபர்  ராஜபக்சே இந்தியா  வருகையின்போது எதிர்ப்பது உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகள் பற்றி விரிவாக  விவாதிக்கப்பட்டது.

 

 

கூட்ட முடிவில்,"  ‘முன்னேறிச் செல்; அதிகாரத்தைக் கைப்பற்று’ என்று, கரூர் மாநாட்டில்  செய்யப்பட்ட பிரகடன இலக்கை அடையும் குறிக்கோளுடன் மக்களைச் சந்திக்கின்ற  வகையில், ‘முன்னேறிச் செல்’ எனும் பிரச்சாரப் பயணத்தை, வைகோ தலைமையில்  நடத்துவது. இலங்கையில் உள்ள ஈழத் தமிழர்களும், உலகெங்கிலும் உள்ள புலம் பெயர்  ஈழத் தமிழர்களும் வாக்கு அளிக்கும் விதத்தில், சுதந்திரத் தமிழர் ஈழத்துக்கான பொது  வாக்கெடுப்பு நடத்துவதற்கு உரிய ஆதரவை, இந்தியத் துணைக் கண்டத்தில் வாழுகின்ற  பல்வேறு தேசிய இன மக்களிடமும், உலக நாடுகளிலும் உருவாக்கும் பணியை  முன்னெடுத்துச் செல்வது.


தமிழ் நாட்டை வறட்சி பாதித்த மாநிலமாக மத்திய அரசு அறிவிப்பதற்கு உரிய  நடவடிக்கைகளை, தமிழக அரசு மேற்கொள்ள வேண்டும். தமிழ்நாட்டுக்குச் சிறப்பு  ஒதுக்கீடாக, வறட்சி நிவாரண நிதி அளிக்க மத்திய அரசு, முன்வர வேண்டும்.

 

அனைத்து விவசாயிகளுக்கும், ஏக்கருக்கு ரூ.25 ஆயிரம் இழப்பு ஈட்டுத் தொகை வழங்க  வேண்டும். காவிரி நதிநீர்ப் பங்கீட்டில் தமிழ்நாட்டின் உரிமையை நிலைநாட்ட, மத்திய  அரசு உடனடியாக காவிரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பை அரசு இதழில் வெளியிட  வேண்டும். தமிழ்நாட்டில் மின்சாரப் பற்றாக்குறையைப் போக்கிட தீவிர நடவடிக்கை  மேற்கொள்ள வேண்டும்.


டீசல் விலை உயர்வு, சமையல் எரிவாயு விலை நிர்ணயம் கட்டுப்பாட்டுக்குக் கண்டனம்  தெரிவிப்பதோடு டீசல் விலை நிர்ணயம் செய்யும் பொறுப்பை, எண்ணெய்  நிறுவனங்களிடம் அளிக்கும் முடிவை உடனடியாகக் கைவிட வேண்டும் என்று  கேட்டுக்கொள்கிறது.

 

சில்லரை வணிகத்தில் அந்நிய நேரடி முதலீட்டை அனுமதித்துள்ள மத்திய அரசுக்குக்  கண்டனம் தெரிவிப்பது. கலாச்சாரச் சீரழிவு, பெண்கள் மீதான பாலியல்  வன்கொடுமைகள், கொலைகள், சட்டம் ஒழுங்கு சீர்குலைவு ஆகியவற்றுக்குக் காரணமாக  இருக்கும் மதுக்கடைகளை மூடுவதற்கும், முழு மதுவிலக்கு நடைமுறைப்படுத்த மக்கள்  ஆதரவைத் திரட்டவும், வைகோ அறிவித்து உள்ளபடி பிப்ரவரி 18 முதல் 28-ஆம் தேதி  வரை காஞ்சிபுரம் மாவட்டத்தில் திருபோரூர் ஒன்றியம் கோவளத்தில் தொடங்கி  மறைமலை நகர் வரையிலும்,


ஏப்ரல் 16 முதல் 29-ம்தேதி வரை பொள்ளாச்சியில் தொடங்கி ஈரோடு வரையிலும்,  மூன்றாவது கட்டமாக ஜூன் மாத இறுதியில் திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர்  மாவட்டத்திலும் மக்களைச் சந்தித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் நடைப்பயணங்களை  வெற்றிகரமாக நடத்துவது. உங்கள் பணம் உங்கள் கையில் என்ற மோசடித் திட்டத்தைக்  கைவிட வேண்டும்.

 

கூடங்குளம் அணு உலையை அகற்றக்கோரியும், அணு சக்தி எதிர்ப்பு மக்கள்  இயக்கத்துக்கு முழுமையான ஆதரவு கொடுப்பது என்றும் பொதுக்குழு தீர்மானிக்கிறது.  ஈழத் தமிழர்களை விடுவித்து, தங்கள் குடும்பத்துடன் திறந்தவெளி முகாம்களில்  வாழ்ந்திட அனுமதிக்க வேண்டும். சிறப்பு முகாம்களை மூட வேண்டும். அணைகள்  பாதுகாப்பு மசோதாவை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும்" என்பது உள்ளிட்ட  தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

 

http://news.vikatan.com/?nid=12297#cmt241

எமது தலைவன் கண்டெடுத்த தங்கம் அண்ணன் வைகோ. எவ்வளவு இடர் வரினும் இனம் வாழ துடிக்கும் அவரது கொள்களைகள்  தமிழருக்கு எப்பவும் தேவை 

  • தொடங்கியவர்

தமிழீழ மக்களின் மட்டுமல்ல தமிழக உறவுகளின் நலன்களையும் கொண்டு பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.

 

அத்துடன் வெறும் வாக்குகளை மட்டுமே கருத்தில் கொள்ளாது நலன்களிலும் அக்கறை கொண்டுள்ள ஒரு சில கட்சிகளில் இந்த கட்சியும் ஒன்று.

மேற்குலகின் மேற்பார்வையில் இந்த வாக்கெடுப்பு நடை பெறவேண்டும்!

இது மட்டும் நடைபெற்றுவிட்டால் ..........நாம் எதிர்பார்த்துக்காத்திருக்கும் பல மாற்றங்களை எதிர்கொள்ளலாம் .அதனூடு எமது இறுதி இலக்கை நோக்கி புதிய உற்சாகத்துடன் நகரலாம் ........நடக்கவேண்டும்

481437_327887800656359_1371725475_n.jpg
‎21 - ஆவது பொதுக்குழு தீர்மானங்கள்

-----------------------------------------------------

மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகப் பொதுக்குழு இன்று (04.02.2013 திங்கள்கிழமை) காலை தொடங்கி கழக அவைத்தலைவர் திரு. திருப்பூர் சு.துரைசாமி அவர்கள் தலைமையில், சென்னை, அண்ணா நகர், 3-ஆவது அவென்யூ - நியூ ஆவடி ரோடு சந்திப்பில் உள்ள விஜய் ஸ்ரீ மஹாலில் நடைபெற்றது.

அக்கூட்டத்தில் கீழ்க்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

தீர்மானம் 1

முன்னேறிச் செல் - பிரச்சாரப் பயணம்

திராவிட இயக்கத்தின் இலட்சிய வார்ப்பாகப் பரிணமித்து உள்ள மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம், இருபதாவது பொதுக்குழுவுக்குப் பின்னர், கடந்த ஓராண்டுக் காலத்தில், அனைத்து இந்திய மக்களின் கவனத்தையும் ஈர்த்து, உலகெங்கும் வாழுகின்ற தமிழர்களின் நெஞ்சங்களில், உயர்ந்த மதிப்பைப் பெற்று உள்ளது.

ஊழல் பணபலம், ஊடக வலிமையோடு சங்கரன்கோவில் இடைத்தேர்தல் களம் கண்ட ஆளும் கட்சி, ஆண்ட கட்சியை எதிர்த்து, தொண்டர்களின் நெஞ்சுரத்தையும், தூய உழைப்பையுமே முதலாகக் கொண்டு, வாக்காளர்களிடம் பாய்ந்த பண வெள்ளத்தையும் மீறி, மதிக்கத்தக்க வாக்குகளைப் பெற்று, கழகம் கம்பீரமாகத் தலைநிமிர்ந்தது.

முல்லைப்பெரியாறு தமிழக உரிமை காக்க, ஜூன் திங்களில், பல்லாயிரக்கணக்கான மக்களைத் திரட்டி, கம்பம் நகரில் மாபெரும் போராட்டத்தை நடத்தி, கேரள அரசின் திமிர்வாதத்தை ஒடுக்கியது.

பேரறிஞர் அண்ணா அவர்களின் பிறந்தநாள் விழா மாநாட்டை, இலட்சக்கணக்கானவர்கள் பங்கு ஏற்ற முழுநாள் மாநாடாக, கரூரில் வெற்றிகரமாக நடத்தியது.

அதற்கு அடுத்த இரண்டாம் நாள், தந்தை பெரியார் பிறந்த நாளில், கொடியவன் இராஜபக்சே, மத்தியப்பிரதேச மாநிலம் சாஞ்சிக்கு வருவதை எதிர்த்து, கழகப் பொதுச்செயலாளர் வைகோ தலைமையில், 1200 கழகக் கண்மணிகளின் தன்மானப் படை புறப்பட்டுச் சென்று, இதுவரை இந்தியத் துணைக்கண்டத்தில் எந்தக் கட்சியும் செய்யத் துணியாதவிதத்தில், விந்திய மலைச்சரிவிலே அறப்போர் நடத்தி, ஈழத்தமிழர் துயரத்தையும், சிங்களவன் கொடுமையையும், அனைத்து இந்திய மக்களின் கவனத்துக்குக் கொண்டு சென்று, வெற்றியை ஈட்டியது.

உலகக் கோடீசுவரர்களுள் ஒருவரான அகர்வாலின் வேதாந்தா குழுமம் நடத்தும் நாசகார ஸ்டெர்லைட் நச்சு ஆலையை எதிர்த்து, 16 ஆண்டுகளாக அறப்போர் நடத்தி வரும் கழகம், சென்னை உயர்நீதிமன்றத்தில், ஸ்டெர்லைட் ஆலையை மூடும் தீர்ப்பைப் பெற்று இருந்த நிலையில், அதனை எதிர்த்து ஆலை நிர்வாகம் உச்சநீதிமன்றத்தில் தொடுத்த மேல்முறையீட்டு விசாரணையில், கழகப் பொதுச்செயலாளர் வைகோ, இரண்டு ஆண்டுகளாக இடைவிடாது போராடி, மிகச் சிறப்பான வாதங்களை முன்வைத்ததால், நல்லோர் மனதில் கழகம் தக்க மதிப்பைப் பெற்றது.

கூடங்குளம் அணுமின் நிலையம் அமைவதைத் தொடக்கத்தில் இருந்தே எதிர்த்துவரும் கழகம், அணு உலை எதிர்ப்பு மக்கள் இயக்கத்துக்குத் தோள் கொடுத்து, இடிந்தகரைப் போராட்டத்திலும், மக்கள் மன்றத்திலும் பங்கு ஏற்றுக் கடமை ஆற்றி வருகிறது.

சாஞ்சிப் போராட்டத்தில் பட்சி சோலை களத்தில் பொதுச்செயலாளர் அறிவித்தவாறு, ‘ஈழத்தில் இனக்கொலை; இதயத்தில் இரத்தம்’ குறுந்தட்டை, இந்தியாவின் பிற மாநில மொழிகளில் மொழி ஆக்கம் செய்தும், விளக்கக் கையேட்டை அம்மொழிகளில் அச்சிட்டும், தலைநகர் தில்லி மற்றும் மும்பை நகரிலும் நிகழ்ச்சிகளை நடத்தி, ஈழத்தமிழருக்கு ஆதரவு திரட்டும் பணியை வெற்றிகரமாகச் செய்தது.

தமிழகத்தில் வாழும் மக்களையும், வளரும் தலைமுறையையும் ஏன் எதிர்காலத்தையும் அடியோடு நாசமாக்கும் மது அரக்கனை எதிர்த்து, தொடர் போராட்டங்களை நடத்தியதோடு, உவரியில் இருந்து நான்மாடக்கூடல் மதுரை வரையிலும், டிசம்பர்த் திங்களில், பொதுச்செயலாளர் வைகோ தலைமையில், 1200 இளைஞர்கள், 432 கிலோமீட்டர்கள் மேற்கொண்ட பிரச்சார நடைபயணம், தமிழகத்தில் அனைத்து மக்களின் குறிப்பாகத் தாய்மார்களின் பரிவான நல்லாதரவை ஈட்டி இருக்கின்றது.

தமிழகத்தின் வாழ்வு ஆதாரங்களைக் காக்கவும், ஈழத்தமிழருக்கு விடியல் மலரவும், தன்னலம் இன்றி, நேர்மையைக் கவசமாகக் கொண்டு, நாளும் கிளர்ச்சிக் களத்தில் நிற்கும் மறுமலர்ச்சி தி.மு.கழகம், தொடர்ந்து தமிழகத்தில் மக்களைச் சந்திக்கின்ற பணிகளில் ஈடுபடுவது என்றும், ‘முன்னேறிச் செல்; அதிகாரத்தைக் கைப்பற்று’ என்று, கரூர் மாநாட்டில் செய்யப்பட்ட பிரகடன இலக்கை அடையும் குறிக்கோளுடன் மக்களைச் சந்திக்கின்ற வகையில், ‘முன்னேறிச் செல்’ எனும் பிரச்சாரப் பயணத்தை, பொதுச்செயலாளர் வைகோ தலைமையில் நடத்துவது என இப்பொதுக்குழு தீர்மானிக்கின்றது.

தீர்மானம் 2

சுதந்திரத் தமிழ் ஈழம் - பொது வாக்கெடுப்பு

உலக வரலாற்றில் கொடிய இனவெறித் தாக்குதல்களால் நடத்தப்பட்ட மனிதப் பேரழிவுகளுள் ஒன்றுதான், இலங்கைத் தீவில் சிங்களப் பேரினவாத, கொலைபாதக இராஜபக்சே அரசு நடத்திய ஈழத்தமிழ் இனப்படுகொலை ஆகும்.

சின்னஞ்சிறு பிஞ்சுக் குழந்தைகள், தாய்மார்கள், முதிர்வயதினர் உள்ளிட்ட, போரில் ஆயுதம் ஏந்தாத ஈழத்தமிழ் மக்களையும், மிகக் கோரமான முறையில், உலகம் தடை செய்த நாசகாரக் குண்டுகளை வீசி, இந்திய அரசும், அணு ஆயுத அரசுகளும் வழங்கிய ஆயுதங்களைப் பயன்படுத்தி, இரத்த வெள்ளத்தில் ஈழத்தமிழ் இனத்தை மூழ்கடித்த கொலைகாரப் பாவிதான் மகிந்த இராஜபக்சே ஆவான். விடுதலைப் புலிகள் உள்ளிட்ட மூன்று இலட்சம் தமிழர்கள் கொன்று குவிக்கப்பட்டனர்.

இந்த இனப்படுகொலைக் குற்றத்தைப் புரிந்த ராஜபக்சே கூட்டத்தை, அனைத்து உலக நீதிமன்றக் கூண்டில் நிறுத்த வேண்டிய கடமை, தாயகத் தமிழர்களுக்கும், தரணி வாழ் தமிழர்களுக்கும், மனித உரிமைகளைக் காக்க வேண்டிய அனைத்து உலக நாடுகளுக்கும் தலையாய கடமை என்பதால், அதற்கு உரிய அனைத்து உலக விசாரணையை நடத்துவதற்கு விரைவுபடுத்தியாக வேண்டும்.

நெஞ்சைப் பிளக்கும் ஈழத்தமிழர்கள் எழுப்பிய மரண ஓலம், இப்பொழுதுதான் மெல்லமெல்ல உலகத்தின் மனசாட்சியைத் தட்டத் தொடங்கி இருக்கின்றது.

உலகில் எங்கே இனக்கொலை நடைபெற்றாலும், அதனைத் தடுக்கவும், மேலும் தொடராமல் வழிவகை செய்யவும், குற்றம் புரிந்த கொடியோரைக் கூண்டில் நிறுத்தவும் கடமை ஆற்ற வேண்டிய ஐ.நா.வின் மனித உரிமைக் கவுன்சிலில், 2009 ஆம் ஆண்டில், இந்திய, சீன, கியூபா அரசுகள், கொலைகார சிங்கள அரசுக்கு ஆதரவாகச் செயல்பட்டு நீதியின் மென்னியை முறித்தன.

கடந்த 2012 ஆம் ஆண்டில், மனித உரிமைகள் கவுன்சில் கூடுவதற்கு முன்பாகவே, ‘ஒரு நாட்டுப் பிரச்சினையில் இன்னொரு நாடு தலையிடக் கூடாது’ என்று, இந்திய அரசின் பிரதிநிதி, ஐ.நா. அமைப்பில் அக்கிரமமான கருத்தைப் பதிவு செய்தபோது, மன்மோகன்சிங் அரசின் முகத்திரையைக் கிழித்து, முதல் கண்டன அறிக்கையை பிப்ரவரி 28 ஆம் நாள் கழகப் பொதுச்செயலாளர் வைகோ கொடுத்தார்.

ஐ. நா. மன்றத்தின் மார்சுகி தாருஸ்மன் தலைமையிலான மூவர் குழு அறிக்கை, சிங்கள அரசு நடத்திய இனப்படுகொலையை வெளிச்சத்துக்குக் கொண்டு வந்த போதிலும், உலகத்தின் கண்களில் மண்ணைத் தூவ, சிங்கள இராஜபக்சே அரசு, ‘கற்றுக்கொண்ட பாடங்கள் நல்லிணக்க ஆணையம்’ என்ற ஒரு மோசடிக் குழுவை அறிவித்து, உண்மைகளைக் குழிதோண்டிப் புதைத்து, அப்பட்டமான பொய்களை அறிக்கை ஆக்கியது. சிங்கள ஓநாய், ஆட்டுத்தோலைப் போர்த்திக் கொண்டது.

ஆனால், எந்தவிதத்திலும் நீதிக்கு வழிகாட்டாத மாய்மால வேலையாக, கடந்த மனித உரிமை கவுன்சில் கூட்டத்தில் அமெரிக்கா கொண்டு வந்த கண்துடைப்பு அறிக்கையைக் கூட, மேலும் நீர்த்துப் போகச் செய்கின்ற துரோகத்தை இந்திய அரசு செய்தது.

மனித உரிமை ஆர்வலர்களும், புலம் பெயர் ஈழத்தமிழர்களும், சிங்களவன் செய்த இனக்கொலை குறித்து பன்னாட்டு விசாரணை நடத்த வேண்டும் என்று, மனித உரிமை கவுன்சிலில் தற்போதைய உறுப்பு நாடுகளின் அரசுகளிடம் தக்க தகவல்களைத் தந்து ஆதரவு திரட்டி வருகின்றனர்.

ஆனால், இப்படி நீதியின் வெளிச்சம் ஈழத்தமிழர்களுக்குக் கிடைத்துவிடாமல் தடுக்க, இனக்கொலைக் கூட்டுக் குற்றவாளியான இந்திய அரசு, நயவஞ்சகமான வேலையைத் தற்போது தீவிரப்படுத்தி இருக்கின்றது.

‘இலங்கைத் தீவில், தமிழர் இனப்பிரச்சினைக்கு, சிங்கள அரசு மூலமாக, நாங்களே முன்னின்று தீர்வை ஏற்படுத்திக் கொடுப்போம்; நீங்கள் இதில் தேவைக்கு அதிகமாகத் தலையிட வேண்டாம்’ என்று, இந்திய வெளியுறவுத்துறையின் மூலம், தூதரகங்கள் மூலமும், திரைமறைவுக் காரியங்களில் வேகமாக ஈடுபட்டு வருகின்றது. இந்தியாவில் ஏழு கோடித் தமிழர்கள் உள்ளனர். எனவே, ஈழத்தமிழர் பிரச்சினையில், இந்திய அரசுக்கு அக்கறை இல்லாமல் போகுமா? என்ற எண்ணத்தைப் பரப்பி வருகின்றது.

தமிழ் இனக்கொலை யுத்தத்தை இயக்கியதும், நடத்தியதும், இந்தியாவின் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசுதான் என்பதை, சிங்கள அதிபர் ராஜபக்சே பகிரங்கமாக அறிவித்தான்.

இந்திய அரசு, ஆயுதங்கள், ரடார்களை சிங்களவனுக்கு அள்ளிக் கொடுத்தது மட்டும் அன்றி, இந்தியக் கடற்படையை நேரடியாகப் போரில் ஈடுபடுத்தியது. மேலும், தமிழர் பகுதிகள் மீது வான்வெளித் தாக்குதல் நடத்த, இந்திய விமானப் படையின் நவீன கருவிகளையும் பயன்படுத்தியது. இந்தியாவின் முப்படைத் தளபதிகளும் வரிசையாக இலங்கைக்குச் சென்று, இராணுவத் தாக்குதலை இயக்கினர். இவையெல்லாம் மன்னிக்க முடியாத துரோகம் ஆகும்.

கூட்டுக்குற்றவாளி என்பதால்தான், ஐரோப்பிய ஒன்றியம் இலங்கை மீது பொருளாதாரத் தடை விதித்தபோது, வேண்டும் என்றே அதனை எதிர்க்க, இலங்கையோடு இந்திய அரசு பொருளாதார, வணிக ஒப்பந்தங்களைச் செய்தது.

தற்போது, இலங்கைத் தீவில் உள்ள தமிழர்களின் நிலைமை, கற்பனைக்கு அப்பாற்பட்ட அவலம் ஆகும். தமிழர் பகுதிகளில் சிங்களக் குடியேற்றம் வேகமாக நடக்கின்றது. தமிழர் தாயகமே, சிங்கள இராணுவ முகாம் ஆகிவிட்டது. மாவீரர் துயிலகங்களை இடித்து, இராணுவ முகாம் ஆக்கிவிட்டனர். தமிழர்களின் வழிபாட்டுத் தலங்களை ஆக்கிரமித்து, பெளத்த விகாரைகளைக் கட்டுகின்றனர். ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக வாழ்ந்த தமிழர்களின் மொழி, இன அடையாளமே இல்லாமல் அழிக்கின்ற கலாச்சாரப் படுகொலை நடக்கின்றது.

இத்தனைக் கொடுமைகளையும் ஏவி உள்ள கொலைபாதகன் இராஜபக்சேவை திரும்பத்திரும்ப இந்தியாவுக்கு வரவழைத்து, அவனுக்கு இந்தியாவில் எதிர்ப்பே கிடையாது என்று உலகுக்குச் சொல்ல, இந்திய அரசு வஞ்சகம் செய்கின்றது. அந்த சதித்திட்டத்தின் ஒரு கட்டம்தான், கடந்த ஆண்டு செப்டெம்பர் 21 ஆம் நாள் சாஞ்சிக்கு, இராஜபக்சே வருவதற்கு ஏற்பாடு செய்தது. மத்தியப் பிரதேச பாரதிய ஜனதா அரசும், அந்த வஞ்சகத்துக்குத் துணைபோனது.

தற்போது, மனித உரிமை கவுன்சில் கூட்டம், மார்ச் மாதத் தொடக்கத்தில் ஜெனீவாவில் நடக்க இருப்பதால், இந்திய அரசு துரோகத்தின் அடுத்த கட்டமாக, பீகாரில் உள்ள புத்த கயாவுக்கும், ஆந்திர மாநிலத்தின் திருப்பதிக்கும், பிப்ரவரி 8 ஆம் தேதி, இராஜபக்சே வருவதற்கான ஏற்பாட்டைச் செய்து இருக்கின்றது.

அன்பையும், கருணையையும் மனித குலத்துக்குப் போதித்த புத்தர் பெருமான் ஞானம் பெற்ற கயாவின் போதி மரத்தைத் தரிசிக்கக் கொலைகாரன் வருகின்றானாம். தமிழர்களைக் கொன்று குவித்த இரத்தக் காட்டேரி இராஜபக்சே, கயா மண்ணை மிதிப்பதற்கே அருகதை அற்றவன்.

செப்டெம்பர் 21 ஆம் நாள் அன்று, மத்தியப் பிரதேசத்தில் நடத்திய அறப்போரின்போது, ‘இனிமேல் இந்தியாவின் எந்தப் பகுதிக்கு இராஜபக்சே வந்தாலும், டெல்லியில் இந்தியப் பிரதமர் மன்மோகன்சிங் இல்லத்தை, மறுமலர்ச்சி தி.மு.கழகம் முற்றுகை இடும் அறப்போராட்டத்தை நடத்தும்’ என்று கழகம் அறிவித்தது.

தமிழகத்தின் தன்மான உணர்ச்சிக்குச் சவால் விடும் திமிரோடு, தமிழ் மக்களின் இருதயங்களில் சூட்டுக்கோலைத் திணிப்பது போல, இலங்கையில் இந்துக் கோவில்களை உடைத்து நொறுக்கிய கொடியவன் இராஜபக்சேவை, தமிழ்நாட்டின் தலைவாயிலில் உள்ள, இந்துக்கள் வழிபடும் திருத்தலமான திருப்பதிக்கு அழைத்து வந்து வரவேற்கும் அக்கிரமத்தையும் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு செய்கிறது.

இந்தியாவுக்கு இராஜபக்சே வர ஏற்பாடு செய்து உள்ள இந்திய அரசு, இதுகுறித்த செய்திகள் எதுவும் வெளிவர விடாமல் கள்ள மவுனம் சாதிக்கிறது.

இராஜபக்சே பீகாருக்கும் சென்றான்; ஏன், தமிழ்நாட்டின் தலைவாயிலில் உள்ள திருப்பதி கோவிலுக்கும் சென்று வழிபட்டான் என்று உலகத்துக்குச் சொல்லுவதற்காகவே,மத்திய காங்கிரஸ் அரசு திட்டமிட்டு, இந்தத் துரோகத்திலும், அராஜகத்திலும் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றது.

கொடியவன் இராஜபக்சே வருகையை எதிர்க்கவும், தமிழ் இனத்துக்குத் துரோகம் இழைக்கும் இந்திய அரசுக்குக் கண்டனம் தெரிவிக்கவும், பிப்ரவரி 8 ஆம் தேதி, டெல்லியில் பிரதமர் இல்ல முற்றுகைப் போராட்டத்தையும், திருப்பதியில் கருப்புக்கொடி அறப்போரையும், கழகம் அறிவித்து உள்ளது.

ஜெனீவாவில், மார்ச் முதல் வாரத்தில் நடைபெற இருக்கின்ற ஐக்கிய நாடுகள் அவையின் மனித உரிமை கவுன்சிலின் 22 ஆவது கூட்டத்தில், ஈழத்தமிழ் இனப்படுகொலை செய்த, சிங்கள இராஜபக்சே அரசு மீது, பன்னாட்டு நீதி விசாரணை நடத்துவதற்கு, உலகெங்கும் உள்ள மனித உரிமை உணர்வாளர்களும், புலம்பெயர் ஈழத்தமிழ் மக்களும் மேற்கொள்ளும் முயற்சிகள் வெற்றி பெற்று, குற்றவாளிக் கூண்டில் சிங்கள அரசு நிறுத்தப்பட வேண்டும் என்றும்,

இனக்கொலைக் கூட்டுக் குற்றவாளியான இந்திய அரசு, இதற்கு எதிராக, மனித உரிமை கவுன்சிலில் சிங்கள அரசுக்கு ஆதரவாகச் செயல்படக் கூடாது என்றும், இதுகாறும் செய்து வந்த துரோகத்தைத் தொடரக்கூடாது என்றும் வலியுறுத்துவதோடு,

இலங்கைத் தீவில் உள்ள ஈழத்தமிழர்களும், உலகெங்கிலும் உள்ள புலம்பெயர் ஈழத்தமிழர்களும் வாக்கு அளிக்கும் விதத்தில், சுதந்திரத் தமிழ் ஈழத்துக்கான பொது வாக்கெடுப்பு நடத்துவதற்கு உரிய ஆதரவை, இந்தியத் துணைக்கண்டத்தில் வாழுகின்ற பல்வேறு தேசிய இன மக்களிடமும், உலக நாடுகளிலும் உருவாக்கும் பணியை முன்னெடுத்துச் செல்வது என்றும், இப்பொதுக்குழு தீர்மானிக்கின்றது.

தீர்மானம் 3

தமிழ்நாட்டை வறட்சி பாதித்த மாநிலமாக அறிவித்திடுக!

மத்திய அரசு நிதி உதவி அளித்திடுக!

தமிழர்கள் கொண்டாடி மகிழும் தைத் திருநாள் பொங்கல் விழா, இந்த ஆண்டு கண்ணீரோடும், துன்பத்தோடும் மகிழ்ச்சி இன்றிக் கழிந்தது. பருவமழை பொய்த்ததாலும், காவிரி நதிநீரைக் கர்நாடக மாநில அரசு அநியாயமாகத் தடுத்ததாலும், தமிழ்நாட்டின் வேளாண்மைத் தொழில் அடியோடு நசிந்து விட்டது. காவிரி பாயும் சோழ மண்டலத்தில், குறுவை சாகுபடி பதினாறு இலட்சம் ஏக்கரும் முற்றாக அழிந்து விட்டது. பிற மாவட்டங்களிலும் விவசாயம் மேற்கொள்ள முடியாத நிலைக்கு விவசாயிகள் தள்ளப்பட்டு விட்டனர். வரலாறு காணாத மின்வெட்டால், வேளாண்மைத் தொழில் உள்ளிட்ட அனைத்துத் தொழில்களும் சீரழிந்து, தமிழ்நாடு முழுவதும் கடுமையாக வறட்சியும் பொருளாதார நெருக்கடிகளும் மக்களை வாட்டி வதைக்கின்றன. இலட்சக்கணக்கான மக்கள் வருவாய் இன்றி வாடுகின்ற நிலைக்கு ஆளாகி உள்ளனர். ஆகவே, தமிழ்நாட்டை வறட்சி பாதித்த மாநிலமாக மத்திய அரசு அறிவிப்பதற்கு உரிய நடவடிக்கைகளை, தமிழக அரசு மேற்கொள்ள வேண்டும் எனவும், தமிழ்நாட்டுக்குச் சிறப்பு ஒதுக்கீடாக, வறட்சி நிவாரண நிதி அளிக்க மத்திய அரசு, முன்வர வேண்டும் எனவும் கழகப் பொதுக்குழு கேட்டுக் கொள்கின்றது.

தீர்மானம் 4

அனைத்து விவசாயிகளுக்கும்

இழப்பு ஈட்டுத் தொகை வழங்க வேண்டும்!

காவிரி நீரைக் கர்நாடகம் தடுத்ததால், காவிரி பாசனப் பகுதிகளில் பயிரிடப்பட்டு இருந்த குறுவை, சம்பா பயிர்கள், முற்றாகக் கருகிப் போயின. கடனிலே பிறந்து கடனிலே வாழ்ந்து, கடனிலேயே வாழ்க்கையை முடித்துக் கொள்ளும் விவசாயப் பெருமக்கள், எவ்வளவுதான் துயரங்களைச் சுமந்தாலும், தாங்கள் உயிராக நேசிக்கின்ற நிலத்தையும் வேளாண்மைத் தொழிலையும் கைவிடுவது இல்லை. தளராத நம்பிக்கைகளுடன், இருந்த சொற்ப சொத்துகளை விற்றும், மேலும்மேலும் கடன் பெற்றும், பயிர்த் தொழிலைக் கடமையாக நினைத்து மேற்கொண்டனர்.

ஆனால், பருவமழை பொய்த்ததும், வறட்சிக்காலத்தில் பங்கிட வேண்டிய நீரைக் கர்நாடகம் தடுத்ததாலும், தமிழகத்தில் காவிரி வறண்டது. பயிர்கள் கருகுவதைக் கண்டு இரத்தக் கண்ணீர் வடித்த விவசாயிகள், செய்வது அறியாது கைபிசைந்து நின்றனர். கடன் சுமையும், குடும்ப பாரமும் அழுத்த தற்கொலை செய்வதைத் தவிர வேறு வழி இல்லை என்ற நிலையில், பதின்மூன்று விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டு மாண்டனர்.

“உழுவார் உலகத்தார்க்கு ஆணிஅஃது ஆற்றாது

எழுவாரை எல்லாம் பொறுத்து”

எனும் வள்ளுவன் வாய்மொழிக்கு ஏற்ப, உலகுக்கு அச்சாணியாக விளங்கும் உழவர்கள் உயிரை மாய்த்துக் கொள்ளும் கொடுமை, தமிழகத்தில் ஏற்பட்டு உள்ளது நெஞ்சைப் பிளக்கின்றது.

உயிர் இழந்த விவசாயிகளின் குடும்பங்களுக்கு, தமிழக அரசு தலா ரூபாய் பத்து இலட்சம் வழங்க வேண்டும்.

தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் சாகுபடி செய்து பயிர் கருகியதால் ஏற்பட்ட இழப்புகளை ஈடுசெய்யும் வகையில், சாகுபடி செய்த நிலங்களுக்கு ஒரு ஏக்கருக்கு ரூ. 25 ஆயிரமும், பாசனத்திற்கு வழி இல்லாமையால் தரிசாகப் போடப்பட்ட நிலங்களுக்கு ஒரு ஏக்கருக்கு ரூ. 15 ஆயிரமும் இழப்பு ஈட்டுத் தொகையாக, தமிழக அரசு வழங்க வேண்டும்.

மேலும், வேளாண் தொழிலில் உள்ள உழவுத் தொழிலாளர் குடும்பங்களுக்கு ரூ. 10 ஆயிரம் இழப்பு ஈடாக வழங்க வேண்டும். விவசாயிகள், கூட்டுறவுச் சங்கங்களிலும் வங்கிகளிலும் பெற்று உள்ள பயிர்க் கடன்கள் அனைத்தையும் தமிழக அரசு தள்ளுபடி செய்ய வேண்டும்; தேசிய வங்கிகளில் விவசாயிகள் பெற்றுள்ள கடன்களை முழுமையாகத் தள்ளுபடி செய்ய மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று, கழகப் பொதுக்குழு கேட்டுக் கொள்கிறது.

 
 

நன்றி வைகொதொண்டன் முக நூல்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.