Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழகத்தின் அக்கறை

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

தமிழகத்தின் அக்கறை

இலங்கைத் தமிழர் பிரச்சினை தொடர்பில் அக்கறை காட்டுவதில் ஒரு தணிவு நிலையைக் கடைப்பிடித்து வந்த தமிழக அரசியல் கட்சிகள் மீண்டும் துடிப்புடன் குரல் கொடுக்கும் சூழ்நிலையொன்று உருவாகியிருப்பதைக் காணக்கூடியதாக இருக்கிறது.

இலங்கையில் அண்மைக் காலமாகத் தீவிரமடைந்திருக்கும் வன்முறை நிகழ்வுப் போக்குகள் காரணமாக தமிழகத்தில் தோன்றியிருக்கும் உணர்வலைகளை அவதானித்த இந்தியப் பிரதமர் கலாநிதி மன்மோகன் சிங் , மாநில முதலமைச்சர் கலைஞர் மு.கருணாநிதியுடன் நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை தொலைபேசியில் தொடர்பு கொண்டு நிலைவரங்கள் குறித்து ஆராய்வதற்காக தனது தேசிய பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே.நாராயணனை சென்னைக்கு அனுப்புவதாக அறிவித்திருக்கிறார்.

இன்று புதுடில்லி செல்லும் இலங்கை வெளியுறவு அமைச்சர் மங்கள சமரவீரவிடம் நிலைவரங்களைக் கேட்டறிந்த பின்னர் நாராயணன் கலைஞரைச் சந்திக்க சென்னைக்குப் புறப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இலங்கையில் பாதுகாப்பு நிலைவரங்கள் படுமோசமாகச் சீர்குலைந்து வன்முறைகள் தீவிரமடைந்துகொண்டிருந்த சூழ்நிலையில் சில வாரங்களுக்கு முன்னர் புதுடில்லி சென்றிருந்த முதலமைச்சர் கருணாநிதி இலங்கை நெருக்கடியைப் பொறுத்தவரை, இந்திய மத்திய அரசாங்கத்தின் நிலைப்பாடு எதுவோ அதுவே தமிழக மாநில அரசாங்கத்தினதும் நிலைப்பாடு என்று குறிப்பிட்டிருந்தார். ஆனால், மத்திய அரசாங்கம் என்ன செய்கிறதோ அதையே ஆறஅமர பொறுத்திருந்து கருணாநிதி பார்க்கக் கூடிய அளவுக்கு தமிழக நிலைவரங்கள் இருக்கவில்லை.

வேறு விதமாக தனது பிரதிபலிப்பை துரிதமாக வெளிக்காட்ட வேண்டிய நிலை அவருக்கு ஏற்படவேசெய்தது. இதற்கு அடிப்படைக் காரணம் இலங்கையில் உக்கிரமடைந்த வன்முறைகளில் அப்பாவித் தமிழ்மக்கள் படும் அவலங்கள் தொடர்பில் தமிழக மக்கள் மற்றும் அரசியல் கட்சிகள் மத்தியில் ஏற்பட்ட அனுதாபமேயாகும்.

அப்பாவித் தமிழ் மக்கள் படுகொலை செய்யப்படுவதைக் கண்டித்து தமிழர் தேசிய இயக்கத் தலைவர் பழ.நெடுமாறனின் ஏற்பாட்டில் சில வாரங்களுக்கு முன்னர் சென்னையில் நடத்தப்பட்ட பேரணிக்கு தமிழகத்தின் முக்கிய அரசியல் கட்சிகளின் ஆதரவு கிடைக்க வில்லை. ஆனால், இலங்கையில் இருந்து தமிழர்கள் அகதிகளாக தினமும் கணிசமான எண்ணிக்கையில் தமிழகத்துக்கு செல்லத் தொடங்கியதையடுத்து இலங்கை நிலைவரங்கள் தொடர்பில் அக்கறை காண்பிக்க வேண்டிய அவசியம் அங்குள்ள அரசியல் சக்திகளுக்கு ஏற்படவே செய்தது.

இலங்கையில் தமிழர்கள் படும் அல்லல்கள் குறித்து மத்திய அரசாங்கமும் மாநில அரசாங்கமும் கவனம் செலுத்தவில்லை என்று குற்றஞ் சுமத்தி, பாரதிய ஜனதா கட்சியின் தமிழக மாநில செயற்குழுவே முதலில் தீர்மானத்தை நிறைவேற்றியது. இலங்கைத் தமிழர்களின் பாதுகாப்புக்கு உத்தரவாதம் அளிப்பதற்கு மத்திய, மாநில அரசாங்கங்கள் உடனடி நடவடிக்கை எடுக்கவேண்டுமென்று அத் தீர்மானத்தில் வலியுறுத்தப்பட்டது.

அடுத்ததாக, நெடுமாறனும் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழக பொதுச் செயலாளர் வைகோ மற்றும் விடுதலைச் சிறுத்தைகளின் தலைவர் தொல்.திருமாவளவனும் இலங்கையில் நிலைவரங்களை அறிந்து கொள்வதற்கு மத்திய அரசாங்கம் எம்.பி.க்கள் குழுவொன்றை அனுப்பவேண்டுமென்று வலியுறுத்த ஆரம்பித்தனர்.

இந்நிலையில், தமிழக மக்கள் மத்தியில் இலங்கைத் தமிழர் பிரச்சினை தொடர்பான அக்கறைகள் மீண்டும் வலுவடையக் கூடிய சூழ்நிலை தோன்றுவதை உணர்ந்த கலைஞர் கருணாநிதி தனது திராவிட முன்னேற்றக் கழகம் தலைமையிலான கூட்டணிக் கட்சிகளை அழைத்து இலங்கை நிலைவரம் குறித்து ஆராய்ந்தார். விமானக் குண்டு வீச்சுக்களினாலும் கண்ணிவெடித் தாக்குதல்களினாலும் அப்பாவிக் குடிமக்கள் பலியாவது குறித்து கவலை தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றிய கூட்டணிக் கட்சிகள், இலங்கையில் அமைதியை உறுதிப்படுத்தத் தேவையான நடவடிக்கைகளை மத்திய அரசாங்கம் எடுக்க வேண்டுமென்று கோரிக்கை விடுத்தன.

இலங்கைத் தமிழ் அகதிகளின் தேவைகள் குறித்து ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிக்க தனது இரு அமைச்சர்களை இராமேஸ்வரம் மண்டபம் முகாம் பகுதிக்கு கருணாநிதி அனுப்பி வைத்தார். முதலமைச்சர் தலைமையிலான கூட்டணிக் கட்சிகளின் தீர்மானத்தை அறிந்த இந்தியப் பிரதமர் உடனடியாகவே தொலைபேசி மூலம் அவருடன் தொடர்புகொண்டு நிலைவரங்களை ஆராய தனது தேசியப் பாதுகாப்பு ஆலோசகரை சென்னைக்கு அனுப்புவதாக அறிவித்தார்.

இந்நிலையில், இலங்கைத் தமிழர்கள் தொடர்பில் கடுமையான எதிர்நிலைப்பாடொன்றைக் கொண்டிருக்கும் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளர் செல்வி ஜெயலலிதாவும் இலங்கையில் அப்பாவிக் குடிமக்கள் கொல்லப்படுவது குறித்து கவலை தெரிவித்ததுடன், அமைதியை ஏற்படுத்த மத்திய அரசாங்கம் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று நேற்று முன்தினம் அவசரமாக அறிக்கை விடுக்க வேண்டியேற்பட்டது.

இலங்கைத் தமிழர்களின் அல்லல்கள் தொடர்பில் அக்கறை காண்பிக்கும் போக்கு தமிழகத்தில் தீவிரமடைந்திருக்கும் தருணத்தில், வெளியுறவு அமைச்சர் சமரவீரவின் இன்றைய புதுடில்லி விஜயம் அரசியல் வட்டாரங்களில் பெரும் முக்கியத்துவத்துடன் நோக்கப்படுகிறது. இந்திய அரசாங்கம் அவசரமாக அழைத்ததன் பேரில்தான் அவர் புதுடில்லி செல்கிறாரா அல்லது நிலைவரங்களை இந்திய அரசாங்கத்துக்கு விளக்கிக் கூறவேண்டிய அவசியத்தை உணர்ந்த ஜனாதிபதி மகிந்த ராஜபக்‌ஷதான் அவரை புதுடில்லிக்கு அவசரமாக அனுப்புகிறாரா என்பது தெரியவில்லை.

இலங்கைப் பிரச்சினையில் இருந்து தூரவிலகி நின்று அவதானிக்கும் போக்கைக் கடைப்பிடித்துவரும் புதுடில்லி தற்போதைய நெருக்கடியான நிலையில், எத்தகைய நடவடிக்கையை எடுக்கக் கூடியதாகவிருக்கும் என்பது மிகப்பெரிய கேள்விக் குறி. ஆனால், தமிழகத்தில் தோன்றிவரும் உணர்வலைகளை எதுவிதத்திலும் மத்திய அரசாங்கத்தினால் அலட்சியம் செய்துவிட முடியாது என்பதற்கு தனது தேசியப் பாதுகாப்பு ஆலோசகரை சென்னைக்கு அனுப்புவதற்கு கலாநிதி மன்மோகன் சிங் மேற்கொண்ட துரித தீர்மானம் தெளிவான அறிகுறி என்பதில் சந்தேகமில்லை.

போர்ச் சூழ்நிலைக்குள் மீண்டும் தள்ளப்படுகின்ற தமிழ் மக்கள் தொடர்பில் அக்கறை காட்டி, இலங்கையில் அமைதியை உறுதிப்படுத்த நடவடிக்கை எடுக்குமாறு மத்திய அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்திருக்கும் தமிழக அரசியல் கட்சிகளின் செயற்பாடுகள் தொடர்ந்தும் ஆரோக்கியமான திசையில் அமைய வேண்டுமென்று எதிர்பார்க்கின்றோம்.

இலங்கைத் தமிழர்களின் அவலங்களுக்கு முடிவைக் காண்பதற்கு தமிழக மக்களின் உறுதியான ஆதரவும் ஒருமைப்பாடும் அவசியமானதாகும். தமிழர் பிரச்சினை அதன் வரலாற்றில் மிகவும் இடரார்ந்த ஒரு கட்டத்திற்கு வரக்கூடிய இன்றைய சூழ்நிலையில், தமிழக அரசியல் சக்திகள் குறிப்பாக, திராவிட இயக்கக் கட்சிகள் (முன்னைய காலங்களில் செயற்பட்டதைப் போலன்றி ) தங்கள் கட்சி அரசியலுக்கு அப்பால் இலங்கைத் தமிழர்களின் அல்லல்களை போக்கு வதற்கான முயற்சிகளை நோக்க வேண்டுமென்று வேண்டுகோள் விடுக்கின்றோம்.

-தினக்குரல்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இலங்கைத் தமிழர் உரிமையை இந்திய அரசு பாதுகாக்க வேண்டும்: ஜெயலலிதா

இலங்கைத் தமிழர்களின் உரிமையைப் இந்திய அரசாங்கம் பாதுகாக்க வேண்டும் என்று தமிழக முன்னாள் முதல்வரும் அ.தி.மு.க. பொதுச்செயலாளருமான ஜெயலலிதா வேண்டுகோள் விடுத்துள்ளார்.

சென்னை ஊடகவியலாளர்களிடம் ஜெயலலிதா கூறியதாவது:

இலங்கை இனப்பிரச்சனைக்கு அமைதித் தீர்வு காண இந்திய மத்திய அரசு தலையிட வேண்டும். தமிழர்களின் உரிமையைப் பாதுகாக்க உத்திரவாதம் அளிக்க வேண்டும்.

இலங்கைத் தமிழ் அகதிகள் எண்ணிக்கை அதிகரித்து வருவது கவலையளிக்கிறது. அவர்களுக்கு எத்தகைய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன என்பதை தமிழ்நாடு அரசாங்கம் அறிவிக்க வேண்டும் என்றார் ஜெயலலிதா.

-புதினம்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஈழத் தமிழர்களுக்காக தமிழகத்தில் ஜூலை 8 இல் பேரணி: தொல். திருமாவளவன்

இலங்கையில் அப்பாவி தமிழர்கள் பாதிக்கப்படுவதை எதிர்த்து ஜூலை 8 ஆம் நாள் தமிழகத்தில் விடுதலைச் சிறுத்தைகளின் சார்பில் அனைத்துக் கட்சிப் பேரணி நடைபெற உள்ளது என்று அதன் பொதுச்செயலாளர் தொல். திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

சென்னையில் திருமாவளவன் வெளியிட்ட அறிக்கை:

இலங்கையில் தமிழர்களுக்கு எதிராக நாளுக்குநாள் அதிகரித்து வரும் வன்முறைச் சம்பவங்களை தடுத்து நிறுத்த வேண்டிய பொறுப்பு தமிழக அரசுக்கும் மத்திய அரசுக்கும் உள்ளது.

இது தொடர்பாக தமிழக அரசியல் கட்சிகள் மற்றும் தமிழ் அமைப்புகள் ஒன்றுபட்டு குரல் கொடுக்க வேண்டும்.

இலங்கையில் அப்பாவி தமிழர்கள் பாதிக்கப்படுவதை எதிர்த்து ஜூலை 8 ஆம் நாள் தமிழகத்தில் விடுதலைச் சிறுத்தைகளின் சார்பில் அனைத்துக் கட்சிப் பேரணி நடைபெற உள்ளது.

பேரணியில் கலந்துகொள்ளுமாறு அனைத்து கட்சித் தலைவர்களுடன் விரைவில் பேச உள்ளோம் என்றார் திருமாவளவன்.

-புதினம்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஈழத்தமிழர் நெருக்கடியில் எச்சரிக்கையுடனான அணுகுமுறையை கடைப்பிடிக்கும் திராவிட கட்சிகள்

இலங்கை நெருக்கடியானது தமிழ் நாடு மாநிலத்தின் அரசியல் விவகாரமாக முக்கிய இடத்தைப் பிடித்து வருகின்றபோதிலும் இந்த விடயம் தொடர்பாக ஆளும் திராவிட முன்னேற்றக் கழகமும் பிரதான எதிர்க்கட்சியான அகில இந்திய அண்ணா திராவிட முன்னேற்றக்கழகமும் எச்சரிக்கையுடனான அணுகு முறையையே தேர்த்தெடுத்திருக்கின்றன.

இலங்கையில் மோதல்கள் அதிகரித்து வருவதால் இராமேஸ்வரத்தை வந்தடையும் ஈழத் தமிழ் அகதிகளின் தொகையும் அதிகரித்து வருவதையடுத்து இந்த விடயம் குறித்து தி.மு.க.கூட்டணிக் கட்சிகளுடன் தமிழக முதலமைச்சர் கருணாநிதி கலந்துரையாடியுள்ளார்.

இலங்கைத் தீவில் அமைதி திரும்புவதை உறுதிப்படுத்துவதற்கான தந்திரோபாயத்தை வகுக்குமாறு மத்திய அரசாங்கத்தை வலியுறுத்தும் தீர்மானம் துரிதமாக கூட்டப்பட்ட ஆளும் கூட்டணிக் கட்சிகளின் தலைவர்களினால் நிறைவேற்றப்பட்டதற்கு மறுதினம், இந்த உணர்வுகளைப் பிரதிபலிக்கும் சுருக்கமான அறிக்கையொன்றை அ.தி.மு.க பொதுச் செயலாளரும் முன்னாள் முதலமைச்சருமான ஜெயலலிதா விடுத்திருக்கிறார்.

தி.மு.க.வும் அதன் நேச அணிகளும் தீர்மானம் மேற்கொண்டதையடுத்தே விசேட தூதுவர் ஒருவரை தமிழ் நாட்டுக்கு அனுப்பி வைப்பதாக இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் கருணாநிதிக்கு அறிவித்திருக்கிறார்.

மத்திய, மாநில அரசாங்கத்திடம் இந்த விடயம் தொடர்பாக தி.மு.க.வின் நேச அணிகளான திராவிடக் கழகம், பாட்டாளி மக்கள் கட்சி ஆகியன கோரிக்கைகள், வலியுறுத்தல்களை விடுக்க ஆரம்பித்ததையடுத்தே கூட்டணிக் கட்சிகளிடம் பேசி கருத்தொருமைப்பாட்டை ஏற்படுத்தும் நடவடிக்கையை கருணாநிதி ஆரம்பித்ததாக தி.மு.க.வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இந்த முக்கியமான தருணத்தில் கூட்டணிக் கட்சிகள் மத்தியிலிருந்தும் சிறியதொரு பிளவும் ஏற்படுவதற்கு இடமளித்தால் அதனைத் தாங்கிக் கொள்ள முடியாத நிலை கருணாநிதிக்கு உள்ளதாக அந்த வட்டாரங்கள் சுட்டிக் காட்டுகின்றன.

கடந்த ஜூன் 16 இல் ம.தி.மு.க, விடுதலைச் சிறுத்தைகள் ஆகிய அ.தி.மு.க கூட்டணியிலுள்ள கட்சிகள் ஏற்பாடு செய்திருந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொள்வதற்குப் பாட்டாளி மக்கள் கட்சி ஆயத்தப்படுத்தியது.

இந்திய எம்.பி.க்கள் குழுவை இலங்கைக்கு அனுப்பி உண்மை நிலைவரத்தை நேரில் கண்டறிய வேண்டுமென வலியுறுத்துவதை நோக்கமாகக் கொண்டு இந்த ஆர்ப்பாட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஆனால் 11 மணித்தியாலயத்துக்கு முன்பாக தனது முடிவை பா.ம.க. மாற்றிக் கொண்டது. குறித்த `சில அரசியல் காரணங்களுக்காக' என்று குறிப்பிட்டு பா.ம.க. ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்கவில்லை. கருணாநிதியின் தூண்டுதல் முயற்சியே இந்த திடீர் மாற்றத்திற்குக் காரணமாக கூறப்படுகிறது.

இதேவேளை, இந்தியா மேற்கொள்ளும் எந்தவொரு முயற்சியும் இலங்கையிலுள்ள சிங்களவர்கள், தமிழர்கள் ஆகியோர் சௌஜன்யத்துடன் வாழ்வதை உறுதிப்படுத்துவதாக இருக்க வேண்டும் என்று கருணாநிதி கூட்டிய கூட்டத்தில் இரு கம்யூனிஸ்ட் கட்சிகளும் காங்கிரஸும் தெளிவாக எடுத்துக் கூறியுள்ளன.

இலங்கைத் தீவில் சமாதானத்தை ஏற்படுத்த இந்தியா முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும். இலங்கை கடற்படையிடமிருந்து தமிழக மீனவர்களைப் பாதுகாக்க வேண்டும் என்ற அழைப்புடனான தீர்மானங்கள் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டன. தி.க., பா.ம.க. என்பன வெளியிட்ட கவலைகள் சிலவற்றை உள்ளடக்கியதாக `செல்லும் வழியறிந்து' தி.மு.க. சர்ச்சைக்குப் பரிகாரம் காண முனைந்துள்ளது.

இலங்கை விவகாரத்தை எதிரணிக் கட்சிகள் முன்னெடுத்துச் செல்வதைத் தடுப்பதற்காகவே தி.மு.க. துரிதமாக தலையிட்டதாக தெரிவிக்கப்படுகிறது. இது ம.தி.மு.க. விடுதலைச் சிறுத்தைகள் போன்ற கட்சிகள் குறித்த வரையறையைத் தாண்டக்கூடாதெனவும் தாண்டினால் மிகத் தீவிரமான நிலைமைக்கு இந்த விடயம் அவர்களை இட்டுச் சென்றுவிடும் என்பது தொடர்பாக விடுக்கப்பட்ட தெளிவான செய்தியொன்று சிரேஷ்ட கம்யூனிஸ்ட் தலைவர் ஒருவர் கூறியுள்ளார்.

இலங்கை விவகாரத்தில் தி.மு.க.வும் அதன் நேச அணிகளும் கருத்தொருமைப் பாட்டுக்கு வந்தால் அ.தி.மு.க. தலைமையிலான அணியினருக்கு தி.மு.க. அணியினருடனான வேறுபாடுகள் தொடர்ந்து நீடிக்கும் என்பதும் தி.மு.க.வின் கணக்கீடாகும்.

-தினக்குரல்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.