Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழ் கூட்டமைப்பு எம்.பி.க்கள் தூதுக்குழு ஐரோப்பா பயணம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் கூட்டமைப்பு எம்.பி.க்கள் தூதுக்குழு ஐரோப்பா பயணம்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்களடங்கிய தூதுக் குழு ஐரோப்பிய ஒன்றிய நாடுகளின் முக்கிய பிரதிநிதிகளை சந்தித்து இலங்கைத் தமிழ் மக்களின் பிரச்சினைகள் தொடர்பாக நேரடியாக முறையிடவுள்ளது.

இது தொடர்பாக ஐரோப்பிய ஒன்றியத்தில் அங்கம் வகிக்கும் நாடுகளுக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எழுத்துமூலம் அறிவித்துள்ள நிலையிலேயே இந்தச் சந்திப்புக்கான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்படவுள்ளன.

இது தொடர்பான ஏற்பாடுகளை முன்னெடுக்க தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களான சுரேஷ் பிரேமச்சந்திரன், கஜேந்திரகுமார் பொன்னம்பலம், பத்மினி சிதம்பரநாதன் ஆகியோர் கடந்த இரு தினங்களுக்கு முன்னர் பின்லாந்துக்கு பயணமாகியுள்ளனர்.

நாளை சனிக்கிழமை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஏனைய பாராளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராஜா, செல்வம் அடைக்கலநாதன் ஆகியோர் நோர்வேக்கு செல்லவுள்ளனர்.

எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை தொடக்கம் இம்மாதம் இறுதிவரை இவர்கள் அனைவரும் ஒன்றாக இணைந்து நோர்வே உட்பட ஐரோப்பிய ஒன்றியத்தில் அங்கம்வகிக்கும் அனைத்து நாட்டு பிரமுகர்களையும் சந்தித்து விளக்கமளிக்கவுள்ளனர்.

சமாதான முயற்சிகளில் தற்போது தோன்றியுள்ள நெருக்கடியான நிலைமைகள், தமிழ் மக்கள் மீது அரச படையினரால் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்டு வரும் மிக மோசமான மனித உரிமை மீறல் சம்பவங்கள், யுத்தத்தை நோக்கிய இலங்கை அரசின் நடவடிக்கைகள் என்பவற்றுக்கு மத்தியில் தான் விடுதலைப் புலிகள் மீது ஐரோப்பிய ஒன்றியத்தின் தடை அமைந்துள்ளதையும் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு விளக்கமாக எடுத்துரைக்கவுள்ளது.

மேலும், இலங்கையின் இன நெருக்கடி விவகாரத்தில் சர்வதேச சமூகம் இலங்கை அரசுக்கு அழுத்தத்தைக் கொடுத்து நீதியான தீர்வொன்றை பெற்றுக் கொடுப்பதற்கு முன்வர வேண்டுமென்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஐரோப்பிய ஒன்றிய நாடுகளை வலியுறுத்திக் கோரவுள்ளது என்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வட்டாரங்கள் தெரிவித்தன.

ஐரோப்பிய நாடுகளில் புலம்பெயர்ந்து வாழும் இலங்கைத் தமிழ் மக்களின் பொது அமைப்புகளின் உதவியுடனேயே இந்தச் சந்திப்புக்கான ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் அறிய வருகிறது.

-புதினம்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கூட்டமைப்பு எம்.பி.க்களின் ஐரோப்பிய விஜயம்!

-அஜாதசத்ரு-

இலங்கையின் இன நெருக்கடித் தீர்வுக்கான சமாதான முயற்சிகள் மிக மோசமானதோர் கட்டத்தை எட்டி மீண்டுமோர் யுத்தத்திற்கான முஸ்தீபுகள் அதிகரித்துள்ள நிலையில் விடுதலைப் புலிகள் மீதான ஐரோப்பிய ஒன்றியத்தின் தடைவிதிப்பும் அயல்நாடான இந்தியாவின் புதியதோர் மாற்றத்தை நோக்கிய அரசியல் அணுகுமுறையும் வெளிப்பட்டு நிற்கின்றது.

தமிழர் தாயகப் பிரதேசமான வடக்கு கிழக்கில் அரச படையினரின் விமானக் குண்டு வீச்சுக்கள் எறிகணைத் தாக்குதல்கள் மற்றும் கிளேமோர் தாக்குதல்கள் காரணமாக நடந்த மூன்று மாத காலப் பகுதியில் 24 சிறுவர்கள் உட்பட 250க்கு மேற்பட்ட அப்பாவிப் பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளனர்.

இதனைவிட கிழக்கில் மட்டக்களப்பு மாவட்டத்தில் இளைஞர்கள், மாணவர்கள் வெள்ளை வானில் வரும் ஆயுதபாணிகளால் தொடர்ச்சியாக கடத்தப்படும் சம்பவங்கள் திருகோணமலை மாவட்டத்தின் கரையோரப் பிரதேசங்களிலுள்ள தமிழ்க் கிராமங்களில் அரச படையினரின் நேரடியானதும் மறைமுகமானதுமான ஆதரவுடன் பெரும்பான்மையினக் காடையர்களால் மேற்கொள்ளப்படும் நில அபகரிப்புக்கான படுகொலைச் சம்பவங்களால் பாதுகாப்புத் தேடி இடம்பெயரும் தமிழ் மக்களின் அவலநிலை உச்சக்கட்டத்தை அடைந்துள்ளது.

இவ்வாறான நிலைமையில் அயல் நாடான தென்னிந்தியாவுக்கு அகதிகளாக படகுகளில் இடம்பெயரும் தமிழர்களின் எண்ணிக்கை பல்மடங்கு அதிகரித்துள்ளது.

இவ்வருட ஆரம்பத்திலிருந்து இம்மாதம் நடுப்பகுதி வரை தமிழகத்திற்கு சுமார் மூவாயிரம் படகு அகதிகள் தப்பிச் சென்று மண்டபம் உட்பட அங்குள்ள பல அகதிமுகாம்களில் தங்கியுள்ளனர்.

கடந்த இரு மாத காலப் பகுதிக்குள் மாத்திரமே சுமார் 2,500க்கு மேற்பட்டோர் அகதிகளாக தப்பிச் சென்றுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இலங்கையில் தற்போது மிகவும் மோசமாக அதிகரித்துள்ள தாக்குதல் சம்பவங்கள் காரணமாக தமிழகத்திற்கு தப்பிச் செல்லும் அகதிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளமையானது தமிழக அரசிற்கு மாத்திரமன்றி இந்திய மத்திய அரசிற்கும் நெருக்கடியை கொடுத்துள்ளதுடன் இலங்கைத் தமிழர்கள் மீதான அனுதாப அலையும் தற்போது அதிகரித்துள்ளது.

இவ்வாறானதோர் நிலையில் தான் கடந்த திங்கட்கிழமை தமிழகத்தின் தலைநகர் சென்னை உட்பட தமிழ்நாட்டின் 40 பிரதான நகரங்களில் நடைபெற்ற ஈழத்தமிழர் ஆதரவுப் போராட்டத்தில் பல்லாயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டு தமது உணர்வலைகளை வெளிப்படுத்தியுள்ளனர்.

ஈழத்தமிழர் ஆதரவு ஒருமைப்பாட்டுக் குழுவினரால் நடத்தப்பட்ட இந்தப் பேரணியில் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக்கழகம், விடுதலைச் சிறுத்தைகள் அமைப்பு, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி உட்பட 80 அரசியல் கட்சிகள் பொது அமைப்புகள் கலந்து கொண்டன.

அத்துடன் இந்த அமைப்புகளினால் இலங்கை அரச படையினரால் தமிழர் தாயகப் பிரதேசத்தில் நடத்தப்படும் அட்டூழியங்களை நேரடியாக அறிந்துகொள்ள இந்திய பாராளுமன்ற உறுப்பினர்களின் குழுவையும் அனுப்புமாறு மத்திய அரசுக்கு கோரிக்கை விடப்பட்டுள்ளது.

மேலும் இலங்கைத் தமிழர்களின் தற்போதைய அவல நிலை தொடர்பாக விளக்கமளிப்பதற்கான தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் ஒரு நடவடிக்கையாக தமிழக அரசியல் கட்சித் தலைவர்களுடனான சந்திப்பு நடைபெற்றுள்ளது.

தமிழகத்திற்கு கடந்த வாரம் விஜயம் மேற்கொண்டிருந்த தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் முக்கியஸ்தரும் யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம், விடுதலைச் சிறுத்தைகள் அமைப்பு, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, திராவிடர் கழகம் என்பவற்றின் தலைவர்களை சந்தித்து இலங்கைத் தமிழர்களின் அவலநிலை, அரசபடையினரின் அப்பாவிப் பொது மக்கள் மீதான தாக்குதல் சம்பவங்கள் என்பன தொடர்பாக தெளிவாக எடுத்துக் கூறியுள்ளார். தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் பிரதிநிதி தமிழக முதலமைச்சர் கலைஞர் மு.கருணாநிதியை சந்திப்பதற்கு அங்குள்ள அரசியல் தலைவர்கள் ஊடாக முயற்சித்த போதும் அது தட்டிக் கழிக்கப்பட்ட நிலையில் இலங்கைத் தமிழர் விவகாரத்தில் மத்திய அரசு தலையிட வேண்டுமென்றும் உயிருக்கு அஞ்சி தமிழகத்திற்கு தப்பியோடி வரும் அகதிகளின் பரிதாப நிலை தனக்கு பெரும் கவலையளிப்பதாகவும் கலைஞர் கருணாநிதி மௌனம் கலைத்துள்ளார். இதனைவிட தனது கூட்டணிக் கட்சிகளின் தலைவர்களை அவசரமாக அழைத்து இலங்கைத் தமிழர் விவகாரத்தில் இந்திய மத்திய அரசு தலையிட வேண்டுமென்று அவசர வேண்டுகோளும் கூட்டாக அறிக்கையும் விடுத்துள்ளார்.

இவ்வாறே இலங்கைத் தமிழர் விவகாரத்தில் தனது ஆட்சிக் காலத்தின் போது கடும் போக்கொன்றை கடைப்பிடித்து வந்த தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சரும் தற்போதைய எதிர்க்கட்சித் தலைவரும் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளருமான ஜெயலலிதாவும் இலங்கை விவகாரத்தில் மத்திய அரசு தலையிட வேண்டுமென்று வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இந்த நிலையில் தமிழகத்தின் அனைத்து அரசியல் கட்சிகள் மற்றும் பொது அமைப்புக்களை ஒன்றுதிரட்டி எதிர்வரும் ஜூலை 8 ஆம் திகதி இலங்கைத் தமிழர்களுக்கு ஆதரவாக அனைத்துக் கட்சி பேரணியொன்றை நடத்துவதற்கும் ஈழத்தமிழர் ஆதரவு ஒருங்கிணைப்பாளர்களால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தமிழகத்திற்கு தப்பி வரும் அகதிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளமை மற்றும் தமிழக அரசியல் கட்சிகளின் தீவிர ஆதரவுப் போக்கு என்பன மத்திய அரசின் இலங்கை விவகாரம் தொடர்பான மௌன நிலைப்பாட்டிலும் புதியதோர் அணுகுமுறைக்கு வழிவகுத்துள்ளதையே காணக்கூடியதாகவுள்ளது. இந்த நிலைமையில் தான் ஐரோப்பிய நாடுகளுக்கான விஜயமொன்றை மேற்கொண்டிருந்த இலங்கை வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர லண்டனிலிருந்து திடீரென்று புதுடில்லிக்கு புறப்பட்டுச் சென்று வியாழக்கிழமை இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்கை சந்தித்துள்ளார்.

வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர இந்தியப் பிரதமரிடம் இலங்கை அரசின் நிலைப்பாட்டை தெளிவுபடுத்தியுள்ள அதேநேரம் விடுதலைப் புலிகளுக்கு எதிரான நடவடிக்கையென்ற போர்வையில் அப்பாவித் தமிழ் மக்கள் கொல்லப்படுவதை உடனடியாக நிறுத்த வேண்டுமென்றும் புதுடில்லி வேண்டுகோள்விடுத்துள்ளது. இலங்கைப் படையினரால் நடத்தப்படும் அப்பாவிப் பொதுமக்கள் மீதான தாக்குதல்கள் காரணமாக தமிழகத்தில் எழுந்துள்ள உணர்வலைகளை சுட்டிக்காட்டிய புதுடில்லி அதிகாரப் பரவலாக்களின் அடிப்படையில் இலங்கைத் தமிழர் பிரச்சினைக்கு துரிதமாக தீர்வு காணப்பட வேண்டுமென்று வலியுறுத்தியுள்ளது.

இலங்கைத் தமிழர் விவகாரம் தொடர்பாக தமிழக முதல்வர் கருணாநிதியை பிரதமர் மன்மோகன் சிங் சார்பாக சென்று கலந்துரையாடுவதற்காக நியமிக்கப்பட்டிருந்த பிரதமரின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே.நாராயணனும் புதுடில்லியில் நடைபெற்ற இந்தச் சந்திப்பில் கலந்து கொண்டிருந்தது விசேட அம்சமாகும். இலங்கைத் தமிழர்களுக்கு ஆதரவாக தமிழகத்தில் அதிகரித்து வரும் உணர்வலைகளும் புதுடில்லியின் புதிய மாற்றங்கள் என்பவற்றுக்கு மத்தியில் தான் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுக்கு விளக்கமளிப்பதற்கான தமிழ்த் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்களது விஜயமும் அமைந்துள்ளது.

இலங்கையின் உள்நாட்டு விவகாரம் சமாதான முயற்சிகளிலிருந்து படிப்படியாக விடுபட்டு மோதல் நிலைமையொன்றுக்குள் தள்ளப்பட்டுள்ள நிலையில் விடுதலைப் புலிகள் மீதான தடையும் அதற்கு பின்னரான மோசமான நிலைமைகள் தொடர்பாக விளக்கமளிப்பதற்காகவே தமிழ்த் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்களின் இந்த விஜயம் அமைந்துள்ளது.

தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராஜா, செல்வம் அடைக்கலநாதன், சுரேஷ் பிரேமச்சந்திரன், கஜேந்திரகுமார் பொன்னம்பலம், பத்மினி சிதம்பரநாதன் ஆகியோரடங்கிய தூதுக்குழுவினர் முதலில் நோர்வே சென்று அங்கிருந்து ஏனைய ஐரோப்பிய நாடுகளுக்கு நேரடியாக விஜயம் செய்து தமிழர் தரப்பு நியாயப்பாடுகளையும் இலங்கை அரச படையினரின் அப்பாவிப்பொதுமக்கள் மீதான மனித உரிமை மீறல்கள் மற்றும் இனநெருக்கடித் தீர்வுக்கு சர்வதேச சமூகத்தின் பங்களிப்பின் அவசியம் என்பன தொடர்பாகவும் எடுத்துரைக்கவுள்ளனர்.

விடுதலைப் புலிகள் மீதான ஐரோப்பிய ஒன்றியத்தின் தடைக்கு பின்னர் இனநெருக்கடித் தீர்வு முயற்சிகள் தொடர்பில் சர்வதேச சமூகத்தின் முன் நியாயமான தீர்வொன்றை முன்வைக்க வேண்டிய கட்டாய நிலைக்கு தள்ளப்பட்டுள்ள இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்‌ஷ தன்னைச் சுற்றி வலிந்து கட்டியமைத்துள்ள இனவாதக் கூட்டமைப்பிலிருந்து விடுபட்டு நேர்மையான நியாயமான தீர்வொன்றை முன்வைக்க முன்வருவாரா? இல்லையேல் சர்வதேச சமூகத்திடமிருந்து அந்நியப்பட்டுப் போவாரா?

-தினக்குரல்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.