Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பெண்களுக்கு எதிரான அடக்குமுறைகளும் பாலியல் வல்லுறவுகளும்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

பெண்களுக்கு எதிரான அடக்குமுறைகளும் பாலியல் வல்லுறவுகளும்

அ.நிக்ஸன் :(பெண்கள் கல்வி ஆய்வு நிறுவனம்) பெண்கள் மீதான அடக்கு முறைகள் நாளுக்கு நாள் அதிகரிக்கின்றது. இலங்கை, இந்தியா உட்பட உலகின் பல நாடுகளில் இந்த நிலைமை

காணப்படுகின்றது. இலங்கையின் போர் நடைபெற்ற வடக்கு கிழக்கு மாகாணத்தில் பாலியல் வல்லுறவுகள் தற்போது படையினரால் மாத்திரமல்ல உறவினர்கள், அரச ஊழியர்கள் என பலதரப்பட்டவர்களினாலும் இடம்பெறுகின்றது. வடக்கு ,கிழக்கில் நாளொன்றுக்கு ஐந்து பெண்கள் பாலியல் துஸ்பிரயோகத்துக்கு உட்படுகின்றனர். கொழும்பிலும் புறநகர் பகுதிகளிலும் நாளொன்றுக்கு மூன்று பெண்கள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகின்றனர். இதன் எண்ணிக்கை அதிகம் என்றே பெண்கள் அமைப்புகள் கூறுகின்றன.

கைவிடப்பட்ட நிலைமை இந்தியாவில் வருடம் ஒன்றுக்கு இரண்டு இலட்சம் பெண் குழந்தைகள் காணாமல் போவதாக மருத்துவர்; கர்மராஜன் சன் தொலைக்காட்சியின் நிகழ்ச்சி ஒன்றில் கூறியுள்ளார். பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டு கொல்லப்படும் பெண்களின் எண்ணிக்கை ஆண்டுதோறும் ஐந்து சதவீதத்தினால் அதிகரிப்பதாகவும் அவர் கூறியுள்ளார். இலங்கை, இந்தியா போன்ற நாடுகளில் வறுமைக்கு உட்பட்ட 12 சதவீதமான பெண்கள் பாலியல் தொழிலுக்கு ஈடுபடுத்தப்பட்டு ஊதியம் கொடுக்கப்படாமல் ஏமாற்றப்படுவதாகவும் அவர்கள் தொடர்ந்து அச்சுறுத்தப்பட்டு தொழிலில் ஈடுபடுத்தப்படுவதாகவும் மருத்துவர் கர்மராஜன் சன் தொலைக்காட்சிக்கு வழங்கிய சிறப்பு நேர்காணலில் குறிப்பிட்டுள்ளார்.

பெண்கள் மீதான பாலியல் வன்கொடுமைகள் அதிகரிப்பதற்குக் காரணம் என்ன? பெண்கள் அணியும் உடையா? அல்லது பெண்களும் அதற்கு காரணமா? என்ற கேள்விகள் எழுகின்றன. உடல்கள் தெரியும் வகையில் அரைகுறை ஆடையை அணியும் பெண்கள் சிங்கப்பூரில் அதிகமாக உள்ளனர். ஆனால் அந்த நாட்டில் பாலியல் வன்முறைகள் இல்லை. ஏனெனில், பாலியல் வல்லுறவுகளைத் தடுக்க அங்கு கடுமையான சட்டங்கள் அமுலில் உள்ளன. இந்தக் காரணத்தினாலும் சிங்கப்பூரில் நாகரீகம் அதிகளவு வளர்ந்துள்ளதனாலும் பாலியல் வல்லுறவுகள் அங்கு அதிகமாக இடம்பெறுவதில்லை எனக் கூறப்படுகின்றது.

பதில் கூறமுடியாது

ஆனால் இலங்கை, இந்தியா போன்ற நாடுகளில் ஏன் அதிகளவில் பெண்கள் பாலியல் வல்லுறவுக்கு உட்படுகின்றனர்? என்ற கேள்விகளுக்கு பதில் கூறுவது கடினம் என பெண் உரிமை ஆய்வாளர்கள் கவலை வெளியிட்டுள்ளனர். இலங்கையில் பாலியல் வல்லுறவுகள் சில குழுக்களினால் திட்டமிட்டு நடத்தப்படுவதாக பெண்கள் உரிமைக்கான அமைப்புகள் குற்றம் சுமத்தியுள்ளன. பெண்கள் அரைகுறை ஆடைகள் அணிவதனால் பாலியல் வல்லுறவுகள் இடம்பெறுவதாகக் கூறப்படுவது ஏற்புடையது அல்ல. ஏனெனில் நான்கு, ஐந்து, பத்து வயது குழந்தைகள், வயதுபோன பெண்களும் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்படுகின்றனர். அவர்கள் அரைகுறை ஆடைகளை அணிவது இல்லை. பாலியல் வல்லுறவுகளுக்குப் பெண்கள் அணியும் உடைகள்தான் காரணம் என்பதை பொலிஸ் மா அதிபர் இலங்கக்கோன் முற்று முழுதாக மறுக்கின்றார். பெண்கள் வரலாற்று ரீதியாகவே பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றனர். ஒவ்வொரு காலப்பகுதிகளிலும் அந்தந்த கால நடைமுறைகளுக்கு ஏற்ப பாலியல் வல்லுறவுகள் இடம்பெறுகின்றன. இது பெண்களுக்கு எதிரான திட்டமிடப்பட்ட வன்முறைகள் என்றுதான் பெண்கள் அமைப்புகள் வரைவிலக்கணம் கொடுத்துள்ளன.

உள்நாட்டு யுத்தங்கள் காரணமா?

நாடுகளுக்கிடையிலான யுத்தங்களும் உள்நாட்டு யுத்தங்களும் பெண்கள் மீதான அடக்கு முறைகளுக்குக் காரணமாகின்றன. 1991ஆம் ஆண்டு சோவியத் யூனியன் 13 நாடுகளாகப் பிரிந்தபோது லித்துவேனியா, செச்சினியா, கொசோவா போன்ற பிரதேசங்களில் உள்ளகப் போர் ஆரம்பித்தது. இதனால் பாதிக்கப்பட்டவர்கள் பெண்கள் பெண்கள் தான். படைகளில் பணியாற்றிய பெண்கள், உள்ளக போரில் இளைஞர் குழுக்களுடன் இணைந்து ஆயுதம் தூக்கிய பெண்கள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகியதாக அமெரிக்காவின் பொஸ்ரன் பத்திரிகையின் கட்டுரை ஒன்றின் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கொசோவா தனிநாடாக பிரிவதற்கு நடத்திய இறுதிப்போரில் 10ஆயிரம் பேர் கொல்லப்பட்டனர். அவர்களில் மூன்றில் ஒரு பெண்கள் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டு கொல்லப்பட்டதாகவும் பொஸ்ரன் பத்திரிகை குறிப்பிட்டுள்ளது. 2009 ஆம் ஆண்டு இலங்கையில் உள்நாட்டு போரின் இறுதியில் கொல்லப்பட்டவர்களில் பெண்களின் எண்ணிக்கை அதிகம் எனவும் அதுவும், பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டு கொல்லப்பட்ட பெண்களின் எண்ணிக்கை அதிகம் எனவும் ஐக்கியநாடுகள் சபையின் நிபுணர்குழு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. பாலியல் வல்லுறவுகளுக்கு உட்படுத்தப்பட்டு கொல்லப்பட்ட பெண்களின் உறவினர்கள் மற்றும் பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உள்ளான பெண்களுக்கு போதிய நிவாரணங்கள் வழங்கப்பட வேண்டும் எனவும் அந்த அறிக்கையில் சிபாரிசு செய்யப்பட்டிருந்தது.

ஆணைக்குழுவின் அறிக்கை

படிப்பினைகள் மற்றும் மீள் நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையில் யுத்தத்தில் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு போதிய நிவாரணங்கள் வழங்கப்படவில்லை என்பதையும் கணவனை அல்லது பிள்ளைகளை இழந்த தாய்மார் உளவியல் ரீதியாகப் பாதிக்கப்பட்டுள்ளதையும் அந்த அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது. இதேபோன்று பங்களாதேஷ் பாகிஸ்தானில் இருந்து தனிநாடாகப் பிரிந்ததும் இந்திய படையினரால் 24 மணிநேரத்தில் சுமார் ஆயிரம்; பெண்கள் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டும் ஆயிரக்கணக்கானோர் கொலை செய்யப்பட்டதாகவும் இந்தியாவின் ஸ்ரேற்மன் என்ற ஆங்கில நாளேட்டில் குறிப்பிடப்பட்டிருந்தது. ஆகவே, உள்நாட்டு யுத்தம் பெண்களைப் பாதித்திருக்கின்றது என்பதும் யுதத்தத்தை காரணமாக வைத்து படையினர் உறவினர்கள் அயலவர்கள், அதிகாரிகள் என பல துறைசார்ந்தவர்களும் பெண்கள் மீதான துஷ்பிரயோகத்தில் ஈடுபடுகின்றனர் என்பதும் கலப்படம் இல்லாத உண்மைகள். யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட முல்லைத்தீவு, கிளிநொச்சி ஆகிய மாவட்டங்களில் உள்ள சில பாடசாலைகளில் அதிபர்கள் ஆசிரியர்கள் சிலரினால் பிள்ளைகளை சேர்க்கச் சென்ற சில விதவைப் பெண்கள் பாலியல் இலஞ்சம் வழங்குமாறு வற்புறுத்தப்பட்டதாக கொழும்பில் இருந்து வெளியாகும் ஆசிரியர்களுக்கான அகவிழி சஞ்சிகையின் தைமாத இதழில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தடுப்பதற்கு வழிமுறைகள் என்ன?

சட்டங்களினால் மட்டும் பெண்களுக்கு எதிரான பாலியல் வல்லுறவுகளைத் தடுக்க முடியாது என பெண்கள் இயக்கங்கள் கூறுகின்றன. குற்றவாளிகள் சட்டத்தைப் பயன்படுத்தி தப்பிவிடுவதாகவும் அவர்கள் கூறுகின்றனர். ஆகவே பாலியல் வல்லுறவுகள் மிக மிகக் குறைவாகக் காணப்படும் சிங்கப்பூர் போன்ற நாடுகளில் பின்பற்றப்படும் சட்டங்கள், ஒழுக்கங்கள் போன்றவற்றை அறிந்து செயற்படுவதற்கான வழிமுறைகள் இலங்கை, இந்தியா போன்ற நாடுகளில் செய்யப்பட வேண்டும். சட்டங்கள் குற்றங்களை தடுப்பதற்கான வழியாக இருந்தாலும் சட்டங்கள் மூலம் பாதிக்கப்பட்ட பெண்கள் நீதியை இலகுவில் பெற முடியாது. நீதிமன்றங்களில் பாலியல் வல்லுறவுகள் தொடர்பான விசாரணைகள் பல ஆண்டுகளாக இழுபடுகின்றன.

இதனால் பாதிக்கப்பட்ட பெண்கள் அந்த வழக்குகளை வாபஸ் பெற்றுக்கொள்ளுகின்றனர் அல்லது கைவிடுகின்றனர். ஏனெனில், பாதிக்கப்பட்ட பெண் சில காலத்திற்கு பின்னர் திருமணம் செய்தால் அல்லது திருமணம் செய்ய நேரிட்டால் இந்த பாலியல் வல்லுறவு வழக்கு விசாரணைகள் அதற்கு இடையூறாக இருக்கின்றன. ஆகவேதான் பெண்கள் மீ;தான வன்முறைகள் தொடர்பான வழக்கு விசாரணைகளைத் துரிதப்படுத்தும் சட்ட ஏற்பாடுகள் அறிமுகம் செய்யப்பட வேண்டும். இது இலங்கை இந்தியா போன்ற நாடுகளுக்கும்பொருந்தும். இலங்கையில் ஒவ்வொரு மாவட்ட நீதிமன்றங்களிலும் குறைந்தது 10க்கும் மேற்படாத பெண்களுக்கு எதிரான வழக்கு விசாரணைகள் நீண்டகாலமாகத் தேங்கிக் கிடக்கின்றன.

கணவன்மாரினால் கொலைகள்

கடந்த 2012ஆம் ஆண்டு இலங்கையில் கொழும்பு மாவட்டம் உட்பட தென்பகுதியில் மாத்திரம் 15 பெண்கள் கணவன்மாரினால் கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் திணைக்களம் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது. அவற்றில் இரண்டாவது திருமணம் அல்லது கள்ளக் காதல் போன்ற சம்பவங்களினால் இந்தக் கொலைகள் இடம்பெற்றதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டு எட்டு பெண்கள் கொல்லப்பட்டதாக அரச சார்பற்ற நிறுவனம் ஒன்று கூறியுள்ளது. பெண்களுக்கு எதிராக இடம்பெறும் பாலியல் வல்லுறவுகள், பாலியல் துஸ்பிரயோகங்கள் தொடர்பான சரியான புள்ளிவிபரங்கள் கூட இலங்கை, இந்தியா போன்ற நாடுகளில் பெறமுடியாத நிலை உள்ளது. சம்பவங்களை மூடி மறைத்து விடுகின்ற போக்கு அல்லது அரசியல் பின்னணிகளினால் அந்த சம்பங்களை வேறு குற்றச் செயல்களாகக் காண்பிப்பதும் சாதாரணமாகி வருகின்றது.

http://www.thinakkural.com/index.php?option=com_content&view=article&id=2577:2013-02-13-18-33-21&catid=293:article&Itemid=542

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.