Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

துவக்குப்பிடியால் வாங்கிய அடி

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

துவக்குப்பிடியால் வாங்கிய அடி

இராமேஸ்வரக் கோவிலின் கோபுரம், அதிகாலை மங்கல் ஒளியில் கருஞ்சிறு மலைபோல் எழுந்து நின்றது. சுதந்திரா அந்த மணல் வெளியில் அமர்ந்தவாறு, எதிரே கிடந்த கடலை வெறித்தபடி பார்த்துக் கொண்டிருந்தாள்.

அவளோடு கூட வந்த பிள்ளைகள், உறவினர்கள், இன்னும் உதவ வந்த பணியாட்கள் என்று ஒவ்வொரு தரப்பினரும் தாம் வந்த வேலை முடிந்த நிலையில் , அன்னதானம் முடிந்ததும் அங்கிருந்து போவதற்கான ஆயத்தங்களை மேற்கொள்வதில் மும்மரமாயிருந்தனர்.

சுதந்திராவின் கணவன் பாரத் இறந்து 14வது ஆண்டு நிறைவு தினம் இம்முறை இராமேஸ்வரத்தில் அனுஷ்டிக்கப்பட்டது.

காலைக்கதிர் கடலுக்கு மேலால் தலைகாட்டும் நேரம்.

அதற்கு முன்னரே எல்லாச் சடங்குகளையும் முடித்துவிட்டு, அங்கு குழுமும் சனங்களுக்கு அன்னதானத்திற்கான ஒழுங்குகளை ஒப்படைத்துவிட்டு அவள் மணல் வெளியில் துறவிபோல் விடுபட்டவளாய் ஒரு கழித்து அமர்ந்திருந்தாள்.

சிறிது தூரத்திற்கப்பால், கடலோரத்தில் சிறுகூட்டம் ஒன்று கூடுவது அவள் கண்களில் பட்டது.

அவளுக்கு அதன் காரணம் தெரியும்.

அதிகாலையில் அவளும் அவளது கூட்டத்தினரும் கடலுக்குள் இறங்கி முழுக்காடச் சென்றபோது அந்த இடத்தில்தான் அவள் கால்கள் இடறுப்பட்டன. அவள் தன்னைச் சுதாகரித்துக் கொண்டு தன் கால்கள் இடறுப்பட்டதன் காரணத்தைக் காண முற்பட்ட போது, அவள் நெஞ்சு அதிர்ந்தது.

அங்கே அவள் கால்களை இடறியவாறு இரண்டு பிணங்கள் கிடந்தன. தாயும் பிள்ளையுமாய் இரண்டு பிணங்கள். கடலில் மிதந்து சிதம்பி, ஊதிப் பருத்தவைபோல் அவளுக்குத் தெரிந்தன.

எப்படி அவை இங்கே?

இவற்றில் 'முழி'த்துவிட்டுத்தான் அவள் கணவனின் சடங்கு ஆரம்பமாக வேண்டுமா?

"என்ன பொருத்தம்!' - அவள் தனக்குள்ளேயே சொல்லிக் கொண்டாள்.

எதுவும் சும்மா நடப்பதில்லை. எல்லாவற்றுக்கும் ஒரு தொடர்பு. அந்தத் தொடர்பைத் தொட்டுக் கொண்டு போனால் உலகின் அத்தனை நிகழ்வுகளும் - முன்னர் நடந்தது இப்போ நடப்பது, இனி நடக்கப் போவது - ஒரே நாரில் தொடுக்கப்பட்ட பூமாலையாய் எழுந்து ஒவ்வொருவரது கழுத்தையும் சுற்றுவதைக்காணலாம்.

'இதுவும் அப்படித்தான்'- அவள் விரக்தியோடு தனக்குள் சொல்லிக் கொண்டாள்.

அந்தக் காலையில், காரணத்தோடுதான் அந்தப் பிணங்கள் அவள் கால்களை இடறின என்பதுபோலவே அவள் எடுத்துக் கொண்டாள்.

அவள் பார்ப்பதற்கு அழகாய் இருந்தாள். இந்தக் காலத்துக்குரிய நாகரிகத் தோரணைகள் அவளில் தெரிந்தன. ஆனால் அவளிடம் ஊறியுள்ள சுதந்திரவேட்கை, புதுக்கோலம் கொள்வதுபோல் கண்களில் பிரகாசித்தன.

அந்தப் பிணங்கள்?

'இலங்கை அகதிகள்' அவள் தனக்குள் சொல்லிக் கொண்டாள்.

'இலங்கை ராணுவத்திற்குப் பயந்து, காசைக் கொடுத்து, ஏதோ கிடைத்த மீன்பிடி வள்ளத்தின் தயவில் வந்து, இடைநடுவில் இறக்கப்பட்டு, கரைக்கு வரமுன்னரே அலைகளின் மோதலில் அகப்பட்டு அமிழ்ந்துபோன அபலைப் பெண்ணும் அவள் பிள்ளையுமாய் இருக்கலாம்.

அவள் நினைவுகள் கொந்தளிக்கத் தொடங்கின.

கரையொதுங்கும் இந்த அனாதைகளால் இந்த மண்தான் பாவமூட்டைகள் கொட்டப்படும் கழிவிடமாக மாறிக் கொண்டிருக்கிறது?

தென்னிலங்கையில் ராவணர்கள்தான் இன்னும் ஆட்சி நடத்திக் கொண்டிருக்கிறார்களா?

குவேனிபோட்ட சாபத்திலிருந்து இன்னும் தென்னிலங்கை விமோசனம் பெறவில்லையா?

சுதந்திராவின் கண்முன் விஜயனால் ஏமாற்றப்பட்ட குவேனி, கண்ணீர் பெருக்கெடுக்க நிற்கிறாள். தம்மினத்தைக் காட்டிக் கொடுத்தவளை அவளது இனத்தவர் சங்கிலியால் பிணித்து இழுத்துச் செல்கின்றனர். அப்போது அவள் போட்ட கூக்குரலும் சாபமும் பேரிடிபோல் உள் முழங்கி, தென்னிலங்கை எங்கும் பரவிக் கவிவதை அவள் காண்கிறாள்.

அந்தப் சாபத்தில் தம்மையும் பங்காளியாக்கிவிட்ட அவளது கணவன் பாரத்மேல் அவளுக்கு ஆத்திரம் பற்றிக்கொண்டு வருகிறது.

"அப்பாவை நினைக்க எனக்கு துக்கமாக இருக்கம்மா" முணுமுணுத்தவளாய் சுதந்திராவின் அருகே வந்த அவள் மகள், அவளை பழைய நினைவுகளில் இருந்து கீழ் இறக்கினாள்.

"அப்பாவைக் கொன்றவர்களுக்கு நல்ல பாடம் நாங்கள் படிப்பிக்கவில்லையே" - என்று அவள் அருகே நின்று அவள் மூத்தமகன் கோயில் கோபுரத்தைப் பார்த்தவாறு கூறினான்.

அவர்களுக்குத் தெரியும், அப்பாவைக் கொன்ற எதிரிகளைப் பழிவாங்க வேண்டும் என்று தமக்குள் குமுறியழும் ஆத்திரம் அம்மாவைப் பாதிப்பதில்லையென்று. மாறாக அவரை நினைவு கூரும் ஒவ்வொரு சமயமும் அவளுக்குச் சினமேறி முகத்தில் செம்மை படர்த்துவதையே அவர்கள் கண்டிருக்கிறார்கள். அப்பொழுதெல்லாம் அதன் காரணத்தை அறிய அவர்கள் அவளைப் போட்டுக் குடைந்தபோதும், அவளிடமிருந்து எந்தப் பிடியும் கிடைத்ததில்லை.

ஆனால் ஒருநாள், விட்டுக்கு வந்திருந்த உறவினரான ஒரு பெரியவரோடு' - அவரைப் பார்க்கும் போது காந்தியின் சாயல் தெரிந்தது - சுதந்திரா கதைத்துக் கொண்டிருந்தபோது இடையில் புகுந்த அவர்களுக்கு சில வார்த்தைகள் காதில் புகுந்தன.

"அது பெரிய அவமானம் இல்லையா?"

சுதந்திரா அந்தப் பெரியவரைப் பார்த்து கேட்டாள்.

பெரியவர் லேசான புன்னகையோடு அதை ஆமோதிப்பதுபோல் கேட்டுக் கொண்டிருந்தார்.

"எத்தனையோ மகான்களை உலகுக்குகளித்த என்கோத்திரத்திற்கே தாங்க முடியாத அவமானத்தை அவர் நடத்தை ஏற்படுத்திவிட்டது.அவர் அந்த இடத்திலேயே தன் வயிற்றைக் கிழித்துக் கொண்டு செத்திருக்க வேண்டும் அல்லது தனக்கு அந்த அவமானத்தை ஏற்படுத்தியவர்களைச் சாகடித்திருக்க வேண்டும்"

பிள்ளைகளின் குறுக்கீட்டால் அவள் பேச்சு நின்று விட்டது.

இடையில் நின்ற பேச்சுக்கு அர்த்தம் கொடுக்க முடியாது அவர்கள் அந்தரப்பட்டனர்.

எது பெரிய அவமானம்?

அவர்கள் தாயாரின் வாயில் இருந்து வந்த வார்த்தைகளின் அர்த்தம் என்ன?

அப்பாவுக்கு அப்படி என்ன அவமானம் ஏற்பட்டது?

அவர்களுக்கு ஒன்றும் புரிவதாய் இல்லை.

இவற்றுக்கு விடைகாண்பதாய் அம்மாவை நோக்கிய அவர்களது கேள்விகள் வெற்றுச் சுவரில் எறிந்த பந்தாகவே அவர்களை நோக்கித் திரும்பி வந்தன.

சுதந்திரா இன்னும் காலைக் கதிரையும் அதுகடலில் பட்டுத் தெறிப்பதையும் சிறு குழந்தைப்போல் பார்த்துக் கொண்டிருந்தாள். அவள் பார்வையில் எண்ணிறந்த யுக யுகாந்தங்கள் எழுந்தெழுந்து படிவதுபோல்பட்டது.

காலம் மௌனித்து அவளை தொழுவது போல்...

திடீரென அவளுக்கு, அந்தப் பெரியவரோடு அன்று விடுபட்டுப்போன பேச்சு, வேறொருநாள் தொடர்ந்தது மீண்டும் நினைவில் எழுந்தது.

......." அப்படியானால் உன் கணவனைக் கொன்றவர்கள் சரியானதையே செய்தார்கள் என்பதா உன்வாதம்?" பெரியவர் கேட்டார்.

"சரியானதைச் செய்தார்களா இல்லையா என்பதல்ல என்வாதம். தன்னை அவமானப்படுத்தியவர்கள் மேல் தீர்க்க வேண்டிய வெஞ்சினத்தை, அவரது அன்பைக் கோரியவர்கள் மேலல்லவா என் கணவர் காட்டினார்!. அந்த அப்பாவி மக்களையல்லவா கொன்றொழித்தார்! இந்த நிலையில் எந்த அற்ப உயிரும் தன்னைத் தாக்கியவர்களை எதிர்த்துத் தாக்கத்தான் செய்யும்"

"அப்போ அவர்கள் செய்தது சரியா?" மீண்டும் பெரியவர் கேட்டார்.

"சரியானது என்பதை விட அதைத்தான் எவரும் செய்வார்கள். அப்படியான ஒரு நிலையில் தானே என் மாமியும் கொல்லப்பட்டார். இல்லையா? அதனால்தான் அவர் செத்ததில் எனக்கு கவலை இல்லை. இவர்கள் கையால் சாகாமல் அவர் அன்றைக்கே செத்திருந்தால் நான் என்றைக்கும் அடி தொழும் மகாபுருஷராக அவர் இருந்திருப்பார்...."

"என்றைக்குச் செத்திருந்தால்?"

"அந்த அற்ப மூஞ்சூறு அரக்கனால் திட்டமிடப்பட்டு அவமானப்படுத்தப்பட்ட போது!".

காலைகதிர் இப்போ சுதந்திராவின் முகத்திலும் பட்டுத் தெறித்தது. அவள் முகத்தில் அரும்பிய வியர்வையை சேலைத்தலைப்பால் துடைத்துக் கொண்டே கோபுரத்தின் பக்கம் பார்வையை எறிந்தாள்.

தெய்வகளை அதில் கசிவது போல் தெரிந்தது.

அன்னதானத்துக்கு அடிபட்டுக் கொண்டு நிற்கும் மக்களும் அந்தத் தெய்வக்களையால் குளிப்பாட்டப்படுவதுபோல் அவளுக்குப்பட்டது.

இராமேஸ்வரம்.

எண்ணங்கள் கிளர்ந்தன, அவள் முன் தொன்மை சிலிர்த்தது.

சீதையைப் பறிகொடுத்த இராமன் இங்கு வந்துதானே சிவலிங்கம் வைத்துப் பூஜித்தான்? அதன் பின்னர் தானே இந்த இந்துமா கடலைத்தாண்டி அவனும் அவனது வானரப் படைகளும் சீதையை மீட்கச் சென்றன?

ஆனால் அரக்கரோடு பொருத வானரப் படைகளை அனுப்புவதற்கு முன்னர், சீதைக்கு தூதனுப்புகிற சாட்டில், அழிவுவராமல் பேசித்தீர்ப்பதற்காக இராமன் முதலில் அனுமனைத் தூதனுப்பினான்.

சீதையை சந்தித்த அனுமனை, அரக்கர்கள் சுற்றி வளைத்து இராவணன் முன்கொண்டு போய்இருக்கை தராது நிறுத்திய போது-

அனுமன் அவர்கள் முகத்தில் அறைவது போல் -

தன்வாலைக் கொண்டே அரச சபையில் தான் இருந்து வந்த தேசத்தின் இமயம் போல் இராவணனுக்கும் மேலாக எழுந்து நின்றான்.

அரக்கர்களை அவமானமும் ஆத்திரமும் மாறி மாறி ஆட்டுவித்தது.

அவனை அவமானப்படுத்த அவன் வாலில் அவர்கள் பற்றவைத்த தீ தென்னிலங்கையையே தீயால் குளிப்பாட்டிற்று. ஏராளமான அரக்கர்கள் வாயுமைந்தனின் வாலின் சுழற்சியில் அறைபட்டழிந்தனர்.

அவமானப்படுத்த முனைந்தவரை அவமானத்தில் வீழ்த்தி வீரனாய் மீண்டு வந்தான் வானரத்தலைவன் .

ஆனால் இவள் கணவன்?

அவள் முகம் சிவந்தது.

அவள் கணவனும் இந்துமா கடலைக் கடந்துதான் லங்காபுரிக்கு படை நடத்திச் சென்றான்.

யாரை அழிக்க?

காலத்துக்கு காலம் லங்காபுரியில் அரக்கர்கள் தோன்றிக் கொண்டுதான் இருந்தார்கள். அவர்கள் கையில் சிக்கிய சிற்றினம் சித்திரவதைக்குள்ளாகி சிறைப்பட்டனர். கொல்லப்பட்டனர்.

அவர்களைக் காப்பாற்றவா அவள் கணவன் பாரத் சென்றான்?

அப்படித்தான் இறந்து போன அவன் அம்மா திட்டமிட்டிருந்தாள்.

ஆனால் அவளின் அகாலமரணம், இவனுக்கு அவளின் திட்டத்தை எட்டச் செய்யவில்லையா?

இடையில் நின்றவர்களால் இவன் பிழையாக வழிநடத்தப்பட்டானா?

அரக்கரால் கொடுமைப்படுத்தப்பட்ட ஓர் இனத்தைக் காப்பாற்றத்தான் அவன் லங்காபுரி சென்றான் என்று இதிகாசம் கூறுகிறது. ஆனால் என்ன நடந்தது?

லங்காபுரியில் ஜயவர்த்தனபுரக்கோட்டை அரக்கன், படையுடன் சென்ற சுதந்திராவின் கணவன் பாரத்தை வரவேற்றான். தன் சிறிய நாட்டின் மேல் ஆக்கிரமிப்பு படை நடத்தி வந்த பாரத்தின் மேல் அரக்கர் தலைவனுக்கு உள்ளூரக்கோபம் பொங்கியது. ஆனால் காட்ட முடியுமா? பேரரசனான பாரத்தின் ஒற்றை விமானத்தின் இரைச்சல்கேட்டே லங்காபுரி நடுங்கியது. ஆகவே நேருக்கு நேர் பொருத முடியாத அரக்கர் தலைவன் அவனை மானபங்கப்படுத்த மறைமுகமாகச் சூழ்ச்சி செய்தான்.

தன் இராஜ்ஜியத்தின் வட கிழக்கில் வாழும் தன் உள்ளூர் பகைவர்களுக்கு இவன் உதவுவதா?

மாயப்போர் புரியும் வல்லரக்கர்களின் சூழ்ச்சி தெரியாதவன் பாரத் தன்பாட்டனின் சமகாலத்தவன் தான் என்றும் அவனோடு நெருங்கிய தொடர்பு வைத்திருந்தவன் என்றும் 'உங்கள் பாட்டனோடு சுதந்திரப் போராட்டத்திலும் பங்குபற்றினேன்' என்றும் லங்காபுரி ஜயவர்த்தன புரக்கோட்டை அரக்கன் அவிழ்த்துவிட்ட சுயபுராணத்தை பெரிதாக எடுத்துக் கொண்டான் அனுபவம் ஏதுமில்லாத பாரத்.

லங்காபுரி சென்ற அவனுக்கு ராணுவ மரியாதை வழங்க ஜயவர்த்தனபுரக் கோட்டை அரக்கன் ஒழுங்கு செய்தான்.

கௌரவ வேட்டுக்கள் தீர்க்கப்பட்டன.

அதன்பின் ராணுவ மரியாதை ஏற்றல்.

பாரத் ராணுவ மரியாதையை ஏற்க, விறைத்து நின்ற ராணுவச் சிப்பாய்களான அரக்கர்கள் அருகே நடந்து கொண்டிருந்தான்.

ராணுவ மரியாதை முடியுந்தறுவாய் -

ஒரு மின்வெட்டு நேரத்தில் அது நடந்து முடிந்தது-

பாரத் , கடைசி ராணுவச் சிப்பாயான அரக்கன் அருகே சென்றபோது, அந்த ராணவ அரக்கன் தான் பிடித்திருந்த துவக்கை திடீரென மறுவளமாகத் தூக்கிப் பிடித்து பாரத்தின் தலையை நோக்கி ஒரே அடி! அவ்வேளை ஏதோ அரவம் கேட்டு உந்தப்பட்டு அவன் சற்றுச் சரிந்த போது அந்த அடி, அவன் பின்தோளிலும் கன்னத்திலும் விழுந்தது.

அடியை வாங்கிய அவன் அசடுவழிய சிரித்துக் கொண்டிருந்தபோது-

அந்த அடி சுதந்திராவின் தலையில் விழுந்தது.

"ஐயோ" என்றவளாய் சுதந்திரா தன் தலையில் அடித்தவளாய் பற்களை நறநற வென்று நறும்பினாள்.

எத்தனையோ பேரரசர்களையும் மன்னர்களையும் என்முன் மண்டியிடச் செய்த எனக்கு ஓர் அற்பன் முதுகில் அடிப்பதா? அடிவாங்கிய அந்த இடத்திலேயே என் கணவன் செத்திருக்க வேண்டும் அந்த அரக்கர் அனைவரையும் கொன்றுவிட்டு!

'சீ வெட்கக் கேடு" என்று காறியுமிழ்ந்தவளாய் சுதந்திரா சோர்ந்து போன போது அவளது பிள்ளைகள் அவளை தாங்கிக் கொண்டனர்.

கேலியாகப் பார்த்துச் சிரித்த அவள்-

"இன்னுந்தான் இவர்களுக்கு எந்தத் தெளிவும் ஏற்பட வில்லையே" என்று முணுமுணுத்த்தவளாய் தன் பிள்ளைகளைப் பார்த்து மீண்டும் சிரித்தாள், விரக்திச் சிரிப்பு.

மு. பொ

எரிமலை (யூன் மாதம்)

  • 1 year later...

கந்தப்பு நல்ல கதை... வித்தியாசமாக எழுதப்பட்டுள்ளது... ஆனால் வாசிக்க சிலது விளங்கவில்லை. குழப்பமாக உள்ளது.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.