Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழ் தேசியக் கூட்டமைப்பு பதிவு செய்யப்படுமா? - யதீந்திரா

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் தேசியக் கூட்டமைப்பு பதிவு செய்யப்படுமா? - யதீந்திரா

சில தினங்களுக்கு முன்னர் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற குழுத் தலைவர், இரா.சம்பந்தன் வெளியிட்டிருந்த புதுவருடச் செய்தியில், தமிழ் மக்களின் ஒற்றுமையை சீர்குலைக்க சிறிலங்கா அரசின் அடிவருடிகளால் மேற்கொள்ளப்படும் சதி வேலைகளுக்குள் எமது மக்கள் சிக்கிவிடக் கூடாது என்று குறிப்பிட்டிருக்கின்றார்.

 

வடக்கு மாகாணசபைத் தேர்தலுக்கு முன்னர் தமிழ் தேசியக் கூட்டமைப்பை, ஓர் அரசியல் கட்சியாக பதிவு செய்யவேண்டும் என்னும் கோரிக்கைகள் வலுவடைந்திருக்கின்ற சூழலிலேயே இரா.சம்பந்தன் இத்தகையதொரு கருத்தை வெளியிட்டிருக்கின்றார். இப்படியொரு வைரஸ் வாதம் நீண்டகாலமாகவே தமிழ் சூழலில் உயிர்வாழ்ந்து வருகிறது. தமிழ் தேசிய அரசியலை பிரதிநிதித்துவம் செய்வதாக குறிப்பிடும் ஸ்தாபனங்கள் மீது கண்டனங்களை முன்வைப்பவர்கள் அனைவரையும் அரசின் அடிவருடிகளாக சித்தரிக்கும் ஒரு போக்கு தமிழ் சூழலில் நீண்டகாலமாக நிலவி வருகின்றது. இத்தகைய போக்கே கடந்தகாலத்தில் விமர்சனங்களற்ற ஓர் அரசியல் போக்கொன்று நிலைகொள்ளுவதற்கும் காரணமாக அமைந்தது.

 

ஆனால் இவ்வாறான குற்றச்சாட்டுக்களை பிரச்சாரப்படுத்தி வருவோர், தங்களது தவறுகள்தான் மற்றவர்கள் உள்நுழைவதற்கான வாய்ப்புக்களாக இருக்கின்றன என்பதை ஒருபோதும் ஒப்புக் கொள்வதுமில்லை, அது குறித்து சிந்திக்க முயற்சிப்பதுமில்லை. கிறிஸ்தவத்தில் ஒரு வாதம் இருக்கின்றது - இடைவெளிகளை விட்டு வைக்காதீர்கள், ஏனெனில் அந்த இடைவெளிகளில்தான் சாத்தான் குடிகொள்கிறான். இதன் அடிப்படையிலேயே கிறிஸ்தவத்தில் பிளவுண்ட ஒரு பிரிவினர் சுருவ வழிபாடுகளை எதிர்த்து வருகின்றனர். அவர்களது பார்வையில் அதுவும் ஓர் இடைவெளி.

 

ஆபிரிக்க மாக்சியரான அமில்கர் கப்ரால், தனது ஏகாதிபத்தியம் தொடர்பான உரையாடல்களின் போது, ஆபிரிக்க பழமொழியொன்றை பயன்படுத்துவதன் மூலம் இதனை பிறிதொரு வகையில் குறிப்பிடுவார். 'அரிசி பானைக்குள்தான் வேகிறது' என்னும் பழமொழியை பயன்படுத்தும் கப்ரால், ஏகாதிபத்தியம் பற்றி பேசுபவர்களே முதலில் உங்கள் மத்தியிலிருக்கும் இடைவெளிகளை கவனியுங்கள் என்பார். மேற்படி 'இடைவெளிகளை விட்டுவைக்காதீர்கள்' என்னும் கிறிஸ்தவ மொழியைத்தான் அமில்கர் கப்ரால் பிறிதொரு அர்த்தத்தில் குறிப்பிட்டிருக்கின்றார்.

 

தமிழ் தேசியக் கூட்டமைப்பிற்குள் நிலவும் இடைவெளியை கருத்தில் கொள்ளவேண்டிய பொறுப்பு இரா.சம்பந்தனுக்கு உண்டு என்னும் கருத்தொன்றை சுட்டவே மேற்படி வாதங்களை இப்பத்தி எடுத்தாண்டிருக்கிறது. கூட்டமைப்பிற்குள் காணப்படும் இடைவெளியை நிரப்பாதவரை அடுத்தவர்கள் குறித்து விமர்சிக்கும் தார்மீக உரிமையை எவரும் எடுத்துக்கொள்ள முடியாது. அந்த வகையில், தமிழ் மக்களின் ஒற்றுமையை சீர்குலைப்பதற்கு வெளியிலிருந்து சதி முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதாக கூறப்படும் வாதத்தை இப்பத்தி முற்றிலுமாக நிராகரிக்கின்றது.

 

கடந்த பத்தியில் குறிப்பிட்டதொரு விடயத்தை மீண்டும் இங்கு குறிப்பிட வேண்டியிருக்கிறது. தமிழ் தேசியக் கூட்டமைப்பு என்பது ஏலவே பிளவுண்டதொரு அமைப்புத்தான். எனவே ஏற்கனவே உடைவுண்டு கிடக்கும் ஓர் அமைப்பை சீர்குலைப்பதற்கு வெளியிலிருந்து எவரும் வரவேண்டியதில்லை. இன்றைய சூழலில் தமிழ் மக்களில் அனேகராலும், ஏனைய பெரும்பாலான தமிழ் அரசியல் தலைவர்களாலும் ஏற்றுக்கொள்ளப்படும் சிரேஸ்ட தலைவரான இரா.சம்பந்தன், தமிழ் தேசியக் கூட்டமைப்பிற்குள் நிலவும் இடைவெளியை அடையாளம் கண்டு, அதனை நிரப்ப வேண்டிய வரலாற்றுப் பொறுப்புக்குரியவராக இருக்கின்றார். ஆனால் அதனை நிரப்புவதற்கான ஆக்கபூர்வமான எந்தவொரு முயற்சியும் இதுவரை அவரால் மேற்கொள்ளப்படவில்லை என்பதே இங்கு பிரச்சனையாக இருக்கிறது.

 

இரா.சம்பந்தன் ஒற்றுமையை வலியுறுத்திவருகின்ற போதும் கூட்டமைப்பை ஒரு வலுவான அமைப்பாக தரமுயர்த்துவதில் இதுவரை முன்னேற்றம் ஏற்படவில்லை. சம்பந்தனால் ஏன் இது குறித்து ஆக்கபூர்வமாகச் செயற்பட முடியவில்லை? அவரை இது தொடர்பில் பின்நோக்கி தள்ளும் காரணி எது? தமிழரசுக் கட்சியின் மத்திய குழுவில் செல்வாக்கு செலுத்திவரும் அனேகர் யாழ் உயர்அடுக்கை சேர்ந்தவர்கள். எனவே அவர்களை மீறி சம்பந்தனால் சுயாதீனமாக முடிவுகளை எடுக்க முடியவில்லையா? அவர்கள் குறித்து சம்பந்தன் அச்சத்தில் இருக்கின்றாரா? இப்படியான கேள்விகளை தவிர்க்க முடியவில்லை.

 

விடுதலைப்புலிகள் அழிவுற்றதைத் தொடர்ந்து தலைமைத்துவ பொறுப்பிற்கு வரும் வாய்ப்பை பெற்றுக்கொண்ட கூட்டமைப்பை, ஓர் அரசியல் கட்சியாக பதிவுசெய்ய வேண்டுமென்னும் வாதம் இன்றுவரை தீர்வொன்றை காணமுடியாமல் நீளுகின்றது. தமிழ் மக்களின் பிரச்சனை தொடர்பில் சர்வதேச பொறிமுறைகளை கையாளுவதாகச் சொல்லிவரும் ஒரு கூட்டணி, தங்களுக்குள் நிலவும் பிரச்சனைகளை தீர்த்துக்கொள்ள முடியாமல் இருப்பதை என்னவென்பது? தமிழ் தேசியக் கூட்டமைப்பு மக்களுக்கானதொரு அமைப்பாக இயங்கவில்லை என்பதையே இது தெளிவுபடுத்துகின்றது. கிழக்கு மாகாணசபை தேர்தலுக்கு பின்னர் இவ்விடயம் பரீசீலிக்கப்படுமென்று கூறப்பட்டது, தற்போது வடக்கு தேர்தலுக்கு முன்னராவது பதிவு செய்யப்படுமா என்னும் கேள்வியில் தரித்து நிற்கிறது.

 

வடக்கு மாகாணசபை தேர்தல் இவ்வருடம் இடம்பெறுவதற்கான சூழல் வெளித்தெரிகின்ற பின்னணியில், தேர்தலுக்கு முன்னர் கூட்டமைப்பு பதிவுசெய்யப்பட வேண்டுமென்னும் கருத்து வலுவடைந்திருக்கின்றது. இது தொடர்பில், ஒரு சில கலந்துரையாடல்கள் இடம்பெற்றிருந்தாலும் திடமான முடிவுகள் எதுவும் இதுவரை எடுக்கப்படவில்லை. இந்த நிலையிலேயே பிறிதொரு முடிவு எடுக்கப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளிவருகின்றன. தமிழரசுக்கட்சி தொடர்ந்தும் பதிவை புறக்கணிக்கும் பட்சத்தில் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் ஏனைய நான்கு கட்சிகளும் இணைந்து கூட்டமைப்பை பதிவுசெய்வதென்று தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் அறிய முடிகிறது. அவ்வாறு தீர்மானிக்கப்பட்டிருக்குமாயின், அதனை இப்பத்தி வரவேற்கிறது. அது ஒரு காலப்பொருத்தம் கருதிய முடிவாகும்.

 

இன்று கூட்டமைப்பில் அங்கத்துவம் வகிக்கும் ஐந்து கட்சிகளில், ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி (புளொட்) மற்றும் தமிழர் விடுதலைக் கூட்டணி ஆகியவை விடுதலைப்புலிகளினது வீழ்ச்சியின் பின்னர் கூட்டமைப்பில் இணைந்து கொண்டவை ஆகும். மேற்படி இரண்டு கட்சிகளினது இணைவுடன் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பில் முன்னாள் போராளிக் குழுக்கள் பெரும்பான்மையான இடத்தைப் பெற்றுக் கொண்டனர். தற்போது ஆயுதரீதியான அரசியலிலிருந்து ஜனநாயக வழிக்கு திரும்பிய மூன்று இயக்கங்கள் கூட்டமைப்பில் அங்கத்துவம் வகிக்கின்றன. இதன் மூலம் இயக்க அரசியல் பின்னணிகளைக் கொண்டவர்கள் பெரும்பான்மையான அங்கத்துவத்தை கொண்டுள்ளனர்.

 

ஆனால் நடைமுறையில் கூட்டமைப்பு என்பது மிதவாத பின்னணியைக் கொண்ட தமிழரசு கட்சியின் முழுமையான ஆளுகைக்குள் அகப்பட்டுள்ளது. சட்டபூர்வமான அந்தஸ்த்தை தமிழரசுக்கட்சி கொண்டிருப்பதால், எந்தவொரு கட்சி பின்னணிகளுமற்றவர்களும் கூட, சட்டரீதியான பலமுள்ள தமிழரசுக் கட்சியை சார்ந்தே தங்களை அடையாளப்படுத்திக் கொள்கின்றனர். இது தமிழரசுக்கட்சியின் மீதான பிடிப்பு அல்ல, மாறாக கதிரையின் மீதான விருப்பு ஆகும். ஒருவேளை நாளை சட்ட அந்தஸ்த்து இடம்மாறுமாயின், இதில் பலரது இன்றைய நிலைப்பாடும் மாறலாம். மேலும், நடைமுறையில் கூட்டமைப்பு என்பது ஒரு நாடாளுமன்ற குழுவாகவே தொழிற்பட்டு வருகின்றது. நாடாளுமன்றத்திற்கு தெரிவானவர்களே தலைவர்களாக கொள்ளப்படுகின்றனர். அரசியலில் நீண்ட வரலாற்றைக் கொண்டிருக்கும் சிரேஸ்ட தலைவர்களையும், அரசியலில் எந்தவிதமான அனுபவம் இல்லாதவர்களையும் சமமாக கொள்ளும் நடைமுறையொன்றே தற்போதைய கூட்டமைப்பில் காணப்படுகிறது. தவிர நாடாளுமன்ற உறுப்புரிமையை பெறாத கட்சிகளைப் புறக்கணிக்கும், கேவலப்படுத்தும் ஒரு சூழலும் நிலவி வருகிறது. இதுவே கூட்டமைப்பிற்குள் பிரச்சனையொன்று எரிந்து கொண்டிருப்பதற்கான காரணம் ஆகும்.

 

இத்தகைய குறைபாடுகள் களையப்பட வேண்டுமாயின், கூட்டமைப்பை ஓர் அரசியல் கட்சியாக பதிவு செய்வதே ஒரே வழியாகும். தவிர, கூட்டமைப்பில் அங்கத்துவம் வகிக்கும் முன்னாள் இயக்கங்களை இரத்தக்கறை படிந்தவர்கள், அவர்களை எங்களுக்கு சமதையானவர்களாகக் கருத முடியாது போன்ற அபிப்பிராயங்கள் தமிழரசுக் கட்சியின் மூத்த தலைவர்கள் மத்தியில் காணப்படுகின்றது. இப்பத்தி வன்முறைசார் அரசியல் என்னும் சொற்தொடரை பிரயோகிப்பதை தவிர்த்திருக்கிறது. அதற்கு மாறாக ஆயுத அரசியல் என்னும் சொற்தொடரை பிரயோகிக்கின்றது. இதற்கு ஒரு தெளிவான காரணம் உண்டு. ஆயுத பிரயோகத்தை மட்டும் கருத்தில் கொண்டு ஓர் அரசியல் இயக்கத்தை நாம் வன்முறைசார் இயக்கமென்று குறிப்பிட முடியுமா? வன்முறைசார் அரசியல் கருத்துக்களை மக்கள் மத்தியில் விதைப்போர், அவற்றை நியாயப்படுத்துவோர் ஆகியோருக்கு வன்முறைசார் அரசியலில் பங்கில்லையா? இது குறித்து தமிழ் சூழலில் ஒரு விரிவான விவாதம் தேவைப்படுகிறது.

 

குறிப்பாக, தமிழரசுக் கட்சியின் செயலாளராக இருக்கின்ற மாவை சேனாதிராஜா, வன்முறையை நியாயப்படுத்திய ஒருவர். இதற்கு பதிவுண்டு. பிரபல தீவிரவாத எதிர்ப்பு நிபுணராகக் கூறப்படும் றொகான் குணரட்ணவின் நூலில் இது பதிவு செய்யப்பட்டுள்ளது. வன்முறையை ஒரு தற்காப்பு உத்தியாக, மாவை சோனாதிராஜா தன்னிடம் குறிப்பிட்டதாக றொகான் தனது நூலில் பதிவு செய்திருக்கின்றார். (Subsequently, Senathirajah told the author "I believed in violence as a method of self defense" - pg 68). தான் அவ்வாறு குறிப்பிடவில்லையெனின் மாவை சேனாதிராஜா இதனை பகிரங்கமாக மறுக்கலாம். எனவே வன்முறை தற்காப்பிற்கு அவசியமென்று குறிப்பிட்ட மாவையை செயலாளராக் கொண்டிருக்கும் இலங்கைத் தமிழரசுக் கட்சியை சேர்ந்தவர்கள், எவ்வாறு ஏனையவர்களைப் பார்த்து இரத்தக்கறை படிந்தவர்கள், வன்முறையாளர்கள் என்று குறிப்பிட முடியும்? இது குறித்து முன்னேறிய பிரிவினர் சிந்திப்பது அவசியம்.

 

எனவே விவாதத்தை நீட்டிச் செல்ல முற்பட்டால், விவாதம் நீண்டுகொண்டே செல்லும் என்பதை தமிழரசுக் கட்சியினர் விளங்கிக் கொள்வது அவசியம். எனவே முரண்பாடுகளை களைந்து முன்செல்வதற்குள்ள ஒரேயொரு தெரிவு, கூட்டமைப்பை ஓர் அரசியல் கட்சியாக பதிவு செய்வது மட்டுமே ஆகும். தமிழரசுக்கட்சி இதற்கு இணங்குவது கட்டாயமான ஒன்றாகும். ஏனெனில் இதனை மறுக்கும் உரிமை இலங்கை தமிழரசுக் கட்சிக்கு இல்லை. ஏனெனில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு என்பது, கூட்டமைப்பின் தலைவர்களது குடும்பச் சொத்தோ அல்லது வேறு எவரதும் பாட்டன் பூட்டன் சொத்தோ அல்ல. கூட்டமைப்பு என்பது, தமிழ் மக்களில் பெரும்பாலோர், தங்களது உரிமைகளை நிலைநாட்டுவதற்காக கொடுத்திருக்கும் ஒர் அரசியல் கட்டளையாகும். இதனை பதிவு செய்வதா இல்லையா என்று விவாதிப்பதற்குக்கூட தமிழரசுக் கட்சிக்கு உரிமை இல்லை.

 

எனவே விடயம் அதன் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. தமிழரசுக் கட்சி பதிவிற்கு இணங்காவிடின், ஏனைய நான்கு கட்சிகளும் ஒன்றிணைந்து கூட்டமைப்பை பதிவு செய்வதே ஒருயொரு தெரிவாகும். வடக்கு மாகாணசபை தேர்தலுக்கு முன்னர் கூட்டமைப்பை பதிவு செய்வதா இல்லையா என்னும் விவாதம் முற்றுப்பெற வேண்டும். ஏனெனில், அதன் பின்னர் கூட்டமைப்பை பதிவு செய்தல் என்பது சாத்தியமற்ற ஒன்றாகவே அமையும். எனவே இதில் தமிழரசுக்கட்சியை குற்றம் சாட்டும் ஏனைய கட்சிகளுக்கும் ஒரு முக்கிய பொறுப்புண்டு. கூட்டமைப்பை பதிவு செய்வதற்கு தமிழரசுக்கட்சி இணங்கவில்லையாயின், அதனை ஒர் ஊடகவியலாளர் சந்திப்பொன்றின் மூலம் தெளிவுபடுத்த வேண்டும். உடனடியாக கூட்டமைப்பை பதிவு செய்ய வேண்டும். இது தொடர்பில் ஏனைய கட்சிகளாலும் ஒருமித்து முடிவொன்றை காணமுடியாவிட்டால், கூட்டமைப்பை ஓர் அரசியல் கட்சியாக பதிவு செய்தல் என்னும் விடயத்தை நிரந்தரமாக கைவிட வேண்டும். பிறிதொரு அர்த்தத்தில் மக்களை மடையர்களாக கருதும் நடைமுறையை கூட்டமைப்பின் தலைவர்கள் கைவிட வேண்டும்.

http://www.ponguthamil.com/shownewscontent.aspx?sectionid=2&contentid=8ea56663-bb9b-489d-b743-44a44ce66edc

எல்லாத் தமிழ் கட்சிகளும் தத்தமது மனச்சாட்சிப்படி இயங்கினால் பதிவு என்பது தேவையற்றதாகிவிடுகிறது. அரசியலுக்கு அப்பால் தமிழ் மக்களுகு நேரடியாகவோ மறைமுகமாகவே பாதகமாக அமையும் அவர்களை அடிமை படுத்த விளையும் எல்லாவற்றையும் எதிர்ப்பதில் தார்மீக உறுதி இருக்குமாலால் பதிவு இல்லாமல் சேர்ந்து வேலை செய்யலாம்

அவசரப்படுவதில் இதில் ஒன்றும் இல்லை. பழைய போராளிக்கட்சிகள் தங்களை தாங்கள் அவதானமாக வைத்துக்கொள்ள வேண்டும்.  அரசு இவர்களை எப்படி மடக்கலாம் என்று இவர்களின் கோவைகளை என்றும் தூசி தட்டியே வைத்திருக்கும் என்பது இவர்களுக்கு நாம் சொல்ல வேண்டியதில்லை. பிரச்சனை ஒன்றும் இல்லாத அசாத் சாலியின் முன்னேற்றங்களில் இவர்கள் கவனம் செலுத்த வேண்டும். கணகரத்தினத்தை பற்றி அறிந்து வைத்துகொள்ள வேண்டும்.  இவர்களின் ஒரு பிழையான சின்ன நகர்வு இவர்களை அரசு கணகரத்தினத்தை விட கேவலமான நிலையில் போட இடமளித்துவிடும். தங்களை கஜேந்திரகுமாருடனோ, அல்லது கஜேந்திரனுடனோ அல்லது பத்மினி சிதம்பரநாதனுடனோ சேர்த்துப் பார்க்கக்கூடாது.

 

இலங்கை அரசின் இன்றைய நிலையில் அதனிடம் கூட்டமைப்பைப் பதிந்தால் அது தேவமிர்தமாகும் என்று கூறி தமிழ் மக்களை ஏய்க்க முயலக்கூடாது. தமிழ் மக்களுக்குச் சுய நிர்ணய அதிகாரம் கேட்பதாக கூறிக்கொண்டு, அரசு  பிரித்துவைக்கும் தந்திரங்களுக்கு இடமளித்து அதன் வலையில் விழுந்து அதனிடம் கூட்டமைப்பை பதிந்தால்த்தான் எங்களுக்கு ஒற்றுமை வரும் என்ற விவாதத்தைக் கைவிட வேண்டும். சிங்கள அரசிடம் பதிந்து தேர்தலில் நிற்கத்தான் வேண்டுமாயின் அது தெளிவான பதிவிமோகமே.

 

உதய சூரியனில் போட்டியிடுவதாக கூறி அரசுக்குச் சார்பான ஆனந்தசங்கரியின், சித்தார்தனின் கையில் அதிகாரத்தை கொடுக்கப் போராளிக்கட்சிகள் தமிழரசுக்கட்சியை நிர்ப்பந்திக்கக் கூடாது.

 

வீட்டுச் சின்னத்தில் போட்டியிடுவது போராளிக்கட்சிகள் தம்மை தமிழ் மக்களுக்கு அறிமுகப்படுத்த இடைஞ்சலைக் கொடுக்கிறதாயின் போராளிக்கட்சிகளை அழித்துவிட்டு எல்லோரும் தமிழரசுக்கட்சியில் சேர நினைக்கலாம். ஒன்றுசேர்ந்த தமிழரசுக்கட்சிக்கும், கட்சியாகப் பதியப்பட்ட கூட்டமைப்புக்கும் சட்ட ரீதியில் வித்தியாசமிருக்காது. மிகுதி எல்லாம் உள்குத்து வெட்டுக்களே. 

 

ஒற்றுமையாக கூட்டமைப்பை பதிய முயன்றால் அரசு  சட்டப் பிரச்சனைகளை முன் எடுக்கும். அரசு, இவர்கள் கூட்டமைப்பை உடைக்க முயன்றால், சட்டப் பிரச்சனைகள் எல்லாவற்றையும் நீக்கி தனக்கு சாதகமாக இருக்கத்தக்கவகையில் , அதை பதிய வேண்டிய வசதிகள் எல்லாவற்றையும் செய்துகொடுக்கும். அதன் பின்னர் இவர்கள் தேர்தலில் வென்றால் இவர்கள்தான் தமிழரின் பிரதிநிதிகள் என்று மேலை நாடுகளுக்கு காட்ட இவர்களுடன் பேச்சு வார்தையும் நடத்தும். அதன் பின்னர் இவர்கள் கணகரத்தினம் மாதிரி சுவிசுக்கு ஐ.நா கூட்டங்களுக்கு போய்வரவேண்டியவர்கள் ஆவார்களே தவிர இவர்களால் ஒன்றும் செய்ய முடியாது. ஒரு தடவை இவர்கள் சம்பந்தரின் கட்டுப்பாட்டை மீறி அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்களாயின் அது இன்றைய முயற்சிகள் எல்லாவற்றுக்கும் முடிவாகும். பேச்சுவார்த்தை நிகழ்த்த முடியாமல் இவர்கள் தேர்தல் வெல்வது ஒன்றுக்கும் தேவை இல்லாதது. இவர்கள் அப்படிப்பட்ட பிரயோசனம் இல்லாத ஒரு தேர்தலை வெல்ல முயலக்கூடாது.

 

அவர்கள் ஜனநாயக நீரோட்டத்தில் அல்ல மகாவலி கங்கை நீரோடத்தில் கலந்தாலும் சரி, இன்றைய அபிப்பிராயங்களின் படி, போராளிக்கட்சிகள் ஒரு போதும் மேற்கு நாடுகளால் அங்கீகரிக்கப்படப்போவதில்லை. எனவே கூட்டமைப்பை போராளிக்கட்சிகளுக்காக மட்டும் பதிந்து வெல்வது மேற்கு நாடுகளின் ஐ.நா முயற்களில் சிக்கலை ஏற்படுத்தும்.

 

அரசை மேற்கு நாடுகள் பொறுப்பு கூறவைக்க முயன்றால் அதன்போது அவர்கள் புலிகளையும்  போராளிக்கட்சிகளையும் சும்மா போக விடுவார்கள் என்று அவசரமாக எண்ணக்கூடாது. இது அணுக்கப்பட வேண்டிய முறை மேற்குநாடுகளின் "Defense" முறைகளை பாவித்தே. புலிகளின் இன்றைய ஆதரவாளர்கள் இதை விளங்கிக்கொள்கிறார்கள். அவர்கள் சர்வதேச சுயாதீன விசாரணையை வரவேற்கிறார்கள். அதற்கு மேலாக சர்வதேச சுயாதீன  விசாரணைக்கு கோரிக்கை விடுகிறார்கள். அவர்கள் விசாரணையைச் சந்தித்து அதன் பின்னால் வரும் பெறுபேறுகளை ஏற்றுக்கொள்வார்கள். ஆனால்  போராளிக்கட்சிகள் தங்களை தாங்கள் தயார்ப் படுத்தாவிட்டால் அவர்கள் தேவானந்தா, கருணா போன்றவர்களின் நிலையை அடைய வேண்டும். அல்லது தமிழ் மக்களுக்கு மேற்கு நாடுகள் மூலமாக கிடைக்ககூடிய நீதியை முடக்க வேண்டிவரும்.

 

பொறுப்புக் கூறல் என்பது இவர்கள் இன்று ஜனநாயக நீரோட்டத்தில் இணைந்துவிட்டார்களா என்பது அல்ல. அன்று என்ன செய்தார்கள் என்பது பற்றியது. இதனால்த்தான் அரசு யாழ்ப்பாணத்தில் ஆமிக்கு போடும் ரோட்டுக்களை அபிவிருத்தியாக காட்டிய போது மேற்கு நாடுகள் அதைத் தட்டிக்கழித்துவிட்டு ஜெனிவா பிரேணையை கொண்டு வந்தார்கள். அரசு யாழ்ப்பாணத்தை அபிவிருத்தி செய்தால் அது பொறுப்புக் கூறல் ஆகாது என்பது அவர்கள் சொல்லும் செய்தி. அதாவது அரசு மனச்சாட்சியான அபிவிருத்தியை இன்று எடுத்தாலும் கூட அவர்கள் சொல்லும் 40,000 மக்கள் கொல்லப்பட்ட சம்பவம் விசாரணை இன்றி மன்னிக்கப்படக்கூடாது என்பதாகும்.

 

இளைப்பாறிய நீதிபதி விக்கினேஸ்வரன் இதை போராளிக்கட்சிகளுக்கு விளங்க வைக்க வேண்டும். அவர்களை இதற்கு  எதிராக பயணிக்க நியாயம் இருப்பதாக சொல்லக்கூடாது.  கட்சிகள் தமது இருப்பை தக்க வைக்காமல் பொது நிலையில் விக்கினேஸ்வரனை முதல் அமைச்சராக போட்டு தேர்தலைச் சந்திக்க வேண்டும்.

 

 

(இன்னொரு திரிக்கு எழுதிய பதில்- சில இதற்கும் பொருந்தும்)

Edited by மல்லையூரான்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.