Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இலங்கையில் இருந்து குமுதத்தின் நேரடி ரிப்போர்ட்...

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

மீண்டும் யுத்தம் தொடங்கிவிட்டது என்று கிட்டத்தட்ட உறுதியான நிலையில் நார்வே முயற்சியால் இலங்கையில் சமாதானம் ஏற்பட்டது. உடனே புலிகளும் புதிதாக பிடித்த இடங்களைவிட்டு வெளியேறி தங்கள் இடங்களுக்கு திரும்புவதாக அறிவித்தார்கள். கொஞ்சம் பதட்டம் குறைந்து நம்பிக்கை துளிர்த்தது. ஆனால், அன்றே இலங்கை போர் விமானங்கள் குண்டுமழை பொழிய மீண்டும் பதட்டம். எந்த நேரத்தில் எந்த இடத்திலும் குண்டு வெடிக்கலாம் என்னும் நிலை. இந்நிலையில் யாழ்ப்பாணம் எப்படி இருக்கிறது. ஒரு நேரடி ரிப்போர்ட்.

யாழ்ப்பாணம் மாநகராட்சி நூலகம் எரிக்கப்பட்ட 25ஆவது நினைவாண்டு இந்த வருடம். ஆனால், இப்போது, நூலகம் புதுப்பிக்கப்பட்டு, சிதைக்கப்பட்டதற்கான எந்தச் சுவடும் இல்லாமல் பார்க்க புத்தம் புதியதாக அழகாக இருக்கிறது. கிட்டத்தட்ட 60 ஆயிரம் தமிழ், ஆங்கிலப் புத்தகங்கள் நூலகத்தில் உள்ளன. இந்திய ஹை கமிஷனும் அமெரிக்காவும் இதில் பெரும்பகுதி புத்தகங்களை நன்கொடையாக வழங்கியுள்ளன. தினமும் காலையில் 9 மணி முதல் மாலையில் 5 மணி வரை நூலகம் திறந்திருக்கிறது. சராசரியாக தினமும் 150 முதல் 200 பேர் வரை நூலகத்துக்கு வந்து புத்தகங்களை எடுத்துப் படிக்கிறார்கள். ஆனால், நூலகம் இருக்கும் பகுதி இலங்கை ராணுவத்தின் உயர் பாதுகாப்பு வளையத்துக்குள் இருப்பதால் 5 மணிக்குப் பிறகு அப்பகுதியில் ஒருவரையும் பார்க்க முடியாது.

அதுபோல் யாழ்ப்பாணத்தில் 7 மணிக்குப் பிறகு ஒருவரையும் பார்க்க முடியாது. இதற்குக் காரணம், 7 மணிக்குப் பிறகு நடமாடுபவர்களின் உயிருக்கு உத்தரவாதம் இல்லை என்பதுதான். யாழ்ப்பாணம், திரிகோணமலை, மட்டக்களப்பு போன்ற ராணுவக் கட்டுப்பாட்டில் இருக்கும் பகுதிகளில் தினமும் குறைந்தது பத்து கொலைகளாவது நடக்கின்றன. இவற்றில் அனேகம் 7 மணிக்குப் பிறகு நடந்தவை. அமைதிப் பேச்சுவார்த்தை நடைபெற்ற சமாதான காலத்தின் போது, இந்தப் பகுதிகள், ராணுவக் கட்டுப்பாட்டில் இருந்தாலும் புலிகளின் ஆதிக்கம்தான் அதிகமும் இருந்தது. அரசு அதிகாரிகள், பல்கலைக்கழக மாணவர்கள், பேராசிரியர்கள், மருத்துவர்கள் உட்பட அனைவரும் புலிகளின் பேச்சைத்தான் கேட்டார்கள். எனவே புலிகள் அனுமதி கிடைக்கும் காரியங்கள் மட்டுமே நடைபெற்றன. இப்போது நிலைமை தலைகீழ். யாழ்ப்பாணம், திரிகோணமலை, மட்டக்களப்பு என்று ராணுவக் கட்டுப்பாட்டில் இருக்கும் பகுதிகளில் இருந்த புலிகள் அனைவரும் புலிகளின் பகுதிக்கு திரும்பிச் சென்றுவிட்டார்கள். இந்நிலையில் அமைதிக் காலங்களில் புலிகளுக்கு ஆதரவாக இருந்தவர்களைத் தேடிக் களையெடுத்து, வருகிறது, ராணுவம்.

இன்னொரு பக்கம் ராணுவத்துக்கும் டக்ளஸ் தேவானந்தத்தின் ஈ.பி.டி.பி.க்கும் ஆதரவானவர்களை புலிகள் கொலை செய்வதும் தொடர்ந்து நடக்கிறது. எனவே கொலைச் செய்தி என்பது ஈழத்தில் இப்போது சர்வ சாதாரணமாகிவிட்டது. பத்திரிகைகள் கொலைச் செய்திகளுக்கு என்று மட்டுமே தனி இடத்தை ஒதுக்கி உள்ளன.

கொலைச் செய்திகள் போல், காணாமல் போகிறவர்கள் குறித்த செய்தியும் அதிகமாக பத்திரிகைகளில் உள்ளன. மனித உரிமை ஆணைக்குழுவின் அறிக்கைப்படி இந்த வருடத்தில் மட்டும் இதுவரை 150 பேர் காணாமல் போயிருக்கிறார்கள். இப்படி காணாமல் போகிறவர்கள் சில தினங்களுக்குப் பிறகு பிணமாக கண்டெடுக்கப்படுவதும் அடிக்கடி செய்தியாக வருகிறது. யாழ்ப்பாணத்திலிருந்து 7 கிலோமீட்டர் தொலைவில் கோப்பாய் என்னும் இடத்தில், சமீபத்தில் நான்கு பிணங்கள் தோண்டி எடுக்கப்பட்டன. இந்த நான்கு பேரும் காணாமல் போனவர்கள்.

இந்நிலையில், மக்கள் தங்களைத் தாங்களே காப்பாற்றிக் கொள்ள அவர்களுக்கு புலிகள் பயிற்சி அளித்திருக்கிறார்கள். இந்தப் பயிற்சியைப் பெற்ற மக்களின் பெரும்பகுதியினர் ரோந்து செல்லும் ராணுவ வீரர்களைத் தாக்கிக் கொல்வதும் அடிக்கடி நடக்கிறது. சாலையோரங்களில் கிளைமோர் குண்டுகளைப் பொறுத்தி, ராணுவம் ரோந்து செல்லும்போது, தூரத்திலிருந்து ரிமோட் கண்ட்ரோல் மூலம் அந்தக் குண்டுகளை இயக்குகிறார்கள். இதில் பல ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டிருகிறார்கள். ‘புலிகள் தாக்குதலில் ராணுவ வீரர்கள்’ கொல்லப்பட்டனர் என்று வரும் செய்திகளில் பல, உண்மையில் இப்படி மக்களால் கொல்லப்பட்ட வீரர்கள்தான். இதற்கு பதிலடியாக மக்கள் மீது கண்மண் தெரியாமல் ராணுவம் தாக்குவதும் தொடர்ந்து நடக்கிறது.

இவ்வளவுக்கும் நடுவில், மக்கள் இயல்பாக இருக்கிறார்கள் என்பதுதான் ஆச்சரியம். கள்ளுக்கடைகளில் கூட்டம் இருக்கிறது. கோயில் திருவிழாக்கள் தவறாமல் நடக்கின்றன. திருவிழாக்களில் பக்தர்கள் கூட்டம் நிரம்பி வழிகிறது. யாழ்ப்பாணம் மனோகரா தியேட்டரில் ‘திருப்பதி’ படமும் ராஜா தியேட்டரில் ‘புதுப்பேட்டை’ படமும் நாதன்ஸ் தியேட்டரில் இன்னொரு தமிழ்ப் படமும் ஓடிக் கொண்டிருக்கின்றன. தமிழ்நாட்டில் நடப்பது போலவே, திருப்பதி படம் ரிலீஸான முதல்நாள் அஜித் கட்_அவுட்டுக்கு மாலை அணிவித்துக் கொண்டாடுகிறார்கள் ரசிகர்கள். அனேகமாக எல்லாத் தமிழ்ப் படங்களின் திருட்டு விசிடிகளும் தாராளமாகக் கிடைக்கின்றன. யாழ்ப்பாணம் மார்க்கெட்டில் காய்கறிகள் வழக்கம்போல் கிடைக்கின்றன. இரவில் மீன்பிடிக்கத் தடை இருப்பதால் மீன் விலை மட்டும் கொஞ்சம் அதிகம். பெட்ரோல் விலை, லிட்டருக்கு 98 ரூபாய். (இந்திய மதிப்பில் 49 ரூபாய்) இப்போது யாழ்ப்பாணத்தில் 24 மணி நேரமும் மின்சார சப்ளை இருக்கிறது.

என்றாலும் அவர்களுக்கு ஒருநாள் என்பது பகல்பொழுது மட்டும்தான். காலையில் 7 மணிக்குத் தொடங்கி மாலையில் 6 மணிக்குள் எல்லா வேலைகளையும் முடித்துவிட்டு வீட்டுக்குள் அடங்கிவிடுகிறார்கள். அதற்கு மேல் கடைகள் எதுவும் திறந்திருப்பதில்லை. தியேட்டரில் பகல்காட்சிகள் மட்டும்தான். மட்டக்களப்பில் மட்டும் இரவு 9 மணி வரைக்கும் வீதிகளில் மக்கள் நடமாட்டம் இருக்கிறது.

ராணுவக் கட்டுப்பாட்டில் இருக்கும் தமிழர் பகுதிகள் உட்பட மொத்த தமிழர் பகுதிகளிலும் திரையிடப்படும் சினிமாக்கள் அனைத்தும் புலிகளின் சென்ஸாருக்குப் பிறகே திரையிட அனுமதிக்கப்படுகின்றன. முத்தக் காட்சிகள் உட்பட விரசமான எல்லாப் பகுதிகளையும் அவர்கள் நீக்கிவிடுகிறார்கள். இரண்டரை மணி நேர ‘பாய்ஸ்’ படம் புலிகளின் சென்ஸாருக்குப் பிறகு ஒன்றரை மணி நேரமானது.

யாழ்ப்பாணத்தின் சாலைகளில் ஒவ்வொரு பத்தடிக்கும் ஒரு ராணுவவீரர் இருக்கிறார். வீட்டிலிருந்து எதாவது வாங்கக் கடைக்குச் சென்றுவிட்டு திரும்பும் மக்கள் இந்த வீரர்களுக்கு சிகரெட் வாங்கிக்கொண்டு வந்து கொடுக்கிறார்கள். இப்படி வீரர்களை அவ்வப்போது கவனித்தால் கொஞ்சம் தொந்தரவு குறையும். ராணுவக் கட்டுப்பாட்டில் இருக்கும் பகுதிகளில் தினமும் காலையில் 7 மணிக்கு ராணுவ ரோந்து நடக்கிறது. இந்த ரோந்து முடிந்தபிறகே மக்கள் தங்கள் அன்றாட வாழ்க்கையைத் தொடங்கிறார்கள். அப்போது திடீரென்று சுறுசுறுப்பாகும் நகரம் மீண்டும் 11 மணிக்கு அடங்கிவிடும். அந்த நேரம், ராணுவ வீரர்கள் ஒரு முகாமலிருந்து இன்னொரு முகாமுக்கு இடமாற்றம் செய்யப்படும் நேரம். எனவே இந்த நேரத்தில் சாலையோரங்களில் யாரும் இருக்கக்கூடாது. இருந்தால், பக்கத்திலிருக்கும் கடைக்குள்ளோ அல்லது சந்துகளுக்குள்ளோ சென்று மறைந்து நின்று கொள்ள வேண்டும். அப்போது நகரமே வெறிச்சென்றிருக்கும். ராணுவ வீரர்கள் இடமாற்றம் முடிந்ததும் மீண்டும் 1 மணிக்கு மக்கள் இயல்புக்குத் திரும்புகிறார்கள்.

யுத்தக் காலங்களில் பதிக்கப்பட்ட கண்ணிவெடிகளில் பெரும் பகுதி இப்போது அகற்றப்பட்டு விட்டது. குறிப்பாக, மக்கள் புழக்கம் அதிகமாக உள்ள பகுதிகளில் இருந்தவற்றை முற்றிலும் அகற்றிவிட்டார்கள். என்றாலும், “மிதிவெடிகள் கவனம்.’’ ‘‘தற்காப்பின்மை உங்களுக்கு மரணத்தை அல்லது உடல் அங்ககீனத்தைக் கொண்டு வரலாம்’’ என்ற அறிவிப்புப் பலகையை எல்லா இடங்களிலும் பார்க்க முடிகிறது. வெடிகள் அகற்றப்படாத பகுதிகளில் மக்கள் புழக்கத்துக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

ராணுவக் கட்டுப்பாட்டில் இருக்கும் பகுதிகளுடன் ஒப்பிடும்போது புலிகளின் கட்டுப்பாட்டில் இருக்கும் பகுதியில் மக்கள் கொஞ்சம் சுதந்திரமாகவும் நிம்மதியாகவும் இருக்கிறார்கள் என்றுதான் சொல்லவேண்டும். பாதுகாப்பான பகுதியாக மக்கள் அப்பகுதியை உணர்கிறார்கள். இதனால் பலரும் கிளிநொச்சி, முல்லைத்தீவு போன்ற புலிகள் கட்டுப்பாட்டுப் பகுதிகளுக்கு இடம்பெயர்ந்து விட்டார்கள். ‘ஒரு பகுதியில் ஒரு வருடத்தில், 800 பேர் கொல்லப்பட்டால் அப்பகுதியைப் போர் நடக்கும் பிரதேசமாக அறிவிக்க வேண்டும்’ என்று கண்காணிப்புக் குழுவின் அறிக்கைக் கூறுகிறது. இலங்கைத் தமிழர் பகுதிகளில் இதுவரை கண்காணிப்புக் குழுவின் அறிக்கைப்படி மட்டும் 600 பேர் கொல்லப்பட்டிருக்கிறார்கள். இப்போதுள்ள நிலை தொடர்ந்தால் போர்ப் பிரதேசமாக அறிவிக்கப்படுவது நீண்ட தூரத்தில் இல்லை.

ஆனால், யுத்தமே பரவாயில்லை என்பதுதான் மக்களின் நிலை. யுத்தத்துக்கு அவர்கள் தயாராகவும் இருக்கிறார்கள். எல்லோர் வீட்டிலும் சைக்கிள் இருக்கிறது. பதுங்குக் குழிகள் தோண்டப்பட்டு தயாராக இருக்கிறது. “இன்று இருக்கும் நிலையுடன் ஒப்பிடும்போது, யுத்தக் காலங்களே பரவாயில்லை என்று தோன்றுகிறது. அப்போது கோயில், சர்ச் என்று தஞ்சமடைந்து, உயிரையாவது காப்பாற்றிக் கொள்ளலாம். மேலும், சண்டையும் எல்லையில்தான் நடக்கும். இப்போதோ எப்போது, யாரால் கொல்லப்படுவோம் என்று நிச்சயிக்க முடியாத நிலை’’ என்கிறார்கள் யாழ்ப்பாணத்தவர்கள் பரிதாபமாக.

_ சோமித்ரன்

தளவாய் சுந்தரம்

கண்காணிப்புக்குழுவுக்கு முகமாலை.. முல்லைத்தீவுக் கணக்கோடு 1000 தாண்டியிருக்குமே.. (இது அறிவுக்குத்தெரிந்தது)

மண்ணுக்குள் மறைத்தவரும்.. தீக்குள்ளே அழித்தவரும்.. காணமல்போன உறவுகளை யாரோ காப்பாற்றியா வைத்திருக்க முடியும்..

கொடுங்கோல் அரசை எதிர்க்க திராணியில்லாதவர்தாம் யாவரும்..

சர்வதேசத்தையும்.. நடுவர்தரப்பையும் இனியும் கணக்கிலெடுப்பது மடமை.

இது புரிந்ததன் விளைவுதான் இன்று ஈழத்தில் தாக்குதலாக அரங்கேறிக்கொண்டிருக்கிறது

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.