Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இனப்படுகொலையை மூடிமறைக்கும் சிறிலங்கா – கனடா ஊடகம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இனப்படுகொலையை மூடிமறைக்கும் சிறிலங்கா – கனடா ஊடகம்
[ ஞாயிற்றுக்கிழமை, 10 நவம்பர் 2013, 09:18 GMT ] [ நித்தியபாரதி ]


1000 மக்களைப் படுகொலை செய்த இஸ்ரேலுக்கு எதிராக ஐக்கிய நாடுகள் சபையானது 10 தீர்மானங்களை நிறைவேற்றியது. ஆனால் இதே ஐ.நா பல பத்தாயிரக்கணக்கான பொதுமக்களின் இழப்புக்கு காரணமாக உள்ள சிறிலங்கா அரசாங்கத்திற்கு எதிராக எவ்வித தீர்மானங்களையும் நிறைவேற்றவில்லை.

இவ்வாறு Toronto Star ஊடகத்தின் பத்தி எழுத்தாளர் Rosie DiManno எழுதியுள்ள கட்டுரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனை புதினப்பலகைக்காக மொழியாக்கம் செய்தவர் நித்தியபாரதி.

Abandoned%20Conflict%20Zone.JPG



கண்ணீர்த் துளி போன்ற ஒரு வடிவத்தில் உள்ள ஒரு தீவே சிறிலங்காவாகும். சிறிலங்காத் தீவில் இடம்பெற்ற யுத்தத்தின் போது விழுந்த கண்ணீர்த் துளிகள் எண்ணுக்கணக்கற்றவை. அதேபோன்று போரின் போது உயிரிழந்த மக்களின் எண்ணிக்கை அளவற்றது.

சிறிலங்காவில் இறுதிக் கட்ட யுத்தம் நடைபெற்ற போது போரில் அகப்பட்டுத் தவித்த மக்களைப் பாதுகாக்கத் தவறிய ஐக்கிய நாடுகள் சபையானது போர் முடிவடைந்து நான்கு ஆண்டுகள் கடந்த நிலையில் இதில் 40,000 தொடக்கம் 70,000 வரையான பொதுமக்கள் படுகொலை செய்யப்பட்டதை ஏற்றுக் கொண்டுள்ளது. இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் எனவும் ஐ.நா தெரிவித்துள்ளது.

சிறிலங்காவில் தொடரப்பட்ட இறுதிக் கட்ட யுத்தத்தின் போது இடம்பெற்ற படுகொலை மற்றும் போரில் பங்குகொண்ட இரு தரப்பினராலும் இழைக்கப்பட்ட மீறல்கள் போன்றவை தொடர்பில் அனைத்துலக விசாரணை ஒன்று மேற்கொள்ளப்பட வேண்டும் என தொடர்ச்சியாக அழுத்தம் கொடுக்கப்படுகின்ற போதிலும் இது தொடர்பில் எவரும் பொறுப்பளிக்கவில்லை. போரின் முடிவில் தமிழ்ப் புலிகள் தரப்பில் 1500 உறுப்பினர்களும், சிறிலங்கா இராணுவத்தில் 50,000 வரையான வீரர்களும் போரின் முன்னரங்கில் கடமையில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.

SL-map.JPG


பெரும்பான்மை சிங்களவர்களைக் கொண்ட சிறிலங்காவில் தமிழ் மக்களுக்கென தனிநாடு கோரி மேற்கொள்ளப்பட்ட விடுதலைப் போராட்டமானது கிட்டத்தட்ட முப்பதாண்டுகள் வரை தொடர்ந்தது. தமிழ்ப் புலிகள் மரபு சார் போர் முறைமை, தற்கொலைக் குண்டுத் தாக்குதல்கள் போன்ற பல்வேறு புதிய முறைமைகளைப் பயன்படுத்தி தமது இலக்குகளை அழித்தனர். புலிகள் அமைப்பைச் சேர்ந்த ஆண் மற்றும் பெண் உறுப்பினர்கள் தாம் எதிரியின் கையில் உயிருடன் பிடிபடும் போது தம்மைத் தாமே அழிப்பதற்காக தமது கழுத்துகளில் சயனைட் வில்லைகளை அணிந்திருந்தனர்.

இவ்வாறான அம்சங்களைக் கொண்ட தமிழ்ப் புலிகள் போரின் இறுதிக்கட்டத்தில் பல ஆயிரக்கணக்கான மக்களை மனிதக் கேடயங்களாகப் பயன்படுத்தினர். இந்த மக்கள் தமது வீடுகளை இழந்து இடம்பெயர்ந்து பற்றைக் காடுகள், சதுப்பு நிலங்கள் என தமது உயிரைக் காப்பதற்காகத் தஞ்சம் புகுந்தனர். 2009ல் அதாவது போரின் இறுதிக்கட்டத்தில் 350,000 வரையான தமிழ் மக்கள் வடகிழக்கு கரையோரத்திலுள்ள நந்திக் கடல்நீரேரியின் அருகிலிருந்த ஒடுங்கிய நிலப்பரப்பிற்குள் தஞ்சம் புகுந்தனர். இந்த மக்கள் மீது மேற்கு, வடக்கு மற்றும் தெற்குத் திசைகளிலிருந்து சிறிலங்கா இராணுவத்தினர் தாக்குதல்களை மேற்கொண்டனர்.

இந்தக் கூட்டிற்குள் அகப்பட்டுக் கொண்ட பொதுமக்கள் ஒரு பக்கத்தால் தமிழ்ப் புலிகளாலும் மறுபக்கத்தால் சிறிலங்கா இராணுவத்தினராலும் தாக்கப்பட்டனர். அதாவது இந்த மக்கள் போர் வலயத்திலிருந்து தப்பி பாதுகாப்பான இடத்திற்குச் செல்ல முற்பட்ட போது புலிகள் இவர்கள் மீது துப்பாக்கிச் சூட்டை நடாத்தினர். அதேவேளையில் இந்த மக்கள் போர் வலயத்திற்குள் தொடர்ந்தும் வாழ்ந்ததால் சிறிலங்கா இராணுவப் படைகள் இவர்கள் மீது எறிகணை வீச்சுத் தாக்குதல்களை மேற்கொண்டனர்.

தமிழ் மக்கள் பட்ட அவலத்தை இந்த உலகம் முழுவதும் வெறுமனப் பார்த்துக் கொண்டிருந்தது. இதில் குழந்தைகள் படுகொலை செய்யப்பட்டனர். கொல்லப்பட்ட மக்களின் உடலங்கள் சிதறி பனை மரங்களில் தொங்கின. தமது உயிரைப் பாதுகாப்பதற்காக பதுங்குகுழிகளுக்குள்ளும் மண்மேடைகளுக்கும் பின்னால் பதுங்கிய குடும்பங்கள் எறிகணை வீச்சுக்களால் சிதறுண்டு சின்னாபின்னமாகின. பெற்றோர்கள் தமது பிள்ளைகளைப் பாதுகாப்பதற்காக தமது உடல்களை கேடயங்களாகப் பயன்படுத்தினர். பாதுகாப்பு வலயத்தில் தஞ்சம் புகுந்த மக்களும் தாக்கப்பட்டனர். நிலம் இரத்தத்தால் தோய்ந்தது. மக்களின் அவயவங்கள் துண்டிக்கப்பட்டன. இது உலகத்தின் நரகமாகக் காணப்பட்டது.

மே 2009ல், தமிழ்ப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் இறந்ததன் பின்னர் புலிகளின் இறுதிப் பலமும் உடைந்துபோனது. இதனைத் தொடர்ந்து மக்கள் சிறிலங்கா இராணுவப் படைகளிடம் சரணடைந்தனர். 2009ன் முதல் ஐந்து மாதங்களும் இந்த மக்கள் பெண்கள், சிறார்கள், முதியோர் என எவ்வித பாகுபாடும், தயவுதாட்சண்ணியமும் காட்டப்படாது படுகொலை செய்யப்பட்டனர். தாக்கப்பட்டனர், விமானத் தாக்குதலுக்கு உள்ளாகினர். வன்னியில் உருவாக்கப்பட்ட இப்படுகொலையைக் கண்டித்து அனைத்துலக ரீதியில் ஒரு சில குரல்கள் மட்டுமே ஓங்கிஒலித்தன.

கனடாவின் ரொரன்ரோவில், வன்னியில் இடம்பெற்ற படுகொலை மற்றும் சித்திரவதைகள் தொடர்பில் அனைத்துலக சமூகம் கவனம் கொள்ள வேண்டும் எனக் கோரி புலம்பெயர் தமிழர்கள் Gardiner Expressway யில் பேரணி மேற்கொண்டனர்.

தமிழ்ப் புலிகள் பயங்கரவாத அமைப்பாக முத்திரை குத்தப்பட்டனர். 2006ல் உலகம் பூராவும் பயங்கரவாதம் மீதான யுத்தம் ஆரம்பிக்கப்பட்டது. இந்நிலையில் மிகவும் பலம் வாய்ந்த தமிழ்ப் புலிகள் அழிக்கப்பட்டதனை கருணையற்ற செயல் என எதிர்பார்க்க முடியாது. ஆனால் ஜனவரி 2009 தொடக்கம் மே 2009 வரையான காலப்பகுதியில் சிறிலங்கா இராணுவத்தினரால் அப்பாவிப் பொதுமக்கள் கொல்லப்பட்டனர். இறுதிக்கட்ட யுத்தத்தில் படுகொலைகள் இடம்பெற்றதை சிறிலங்கா அரசாங்கம் தடுத்திருக்க முடியும். சிறிலங்கா இராணுவத்தினால் முற்றுகையிடப்பட்ட புலிகள் தப்பிச் செல்வது சாத்தியமற்றிருந்த அந்தப் பொழுதில் சிறிலங்கா அரசாங்கமானது தமிழ் மக்களைப் படுகொலை செய்வதைத் தவிர்த்திருக்க முடியும். ஆனால் இதனை சிறிலங்கா அரசாங்கம் செய்யவில்லை. மாறாக மக்கள் படுகொலை செய்யப்பட்டனர்.

சிறிலங்கா அரசாங்கமானது தனது நாட்டில் நிலையூன்றிய பயங்கரவாதத்தை அழித்து விட்டது என்கின்ற செய்தி முதன்மைப்படுத்தப்பட்டு புகழாரம் சூட்டப்பட்டது. பயங்கரவாதிகளை எதிர்க்கின்ற 'சிறிலங்காவின் போர் முறைமையானது' பாராட்டைப் பெற்றது. தாம் பெற்ற வெற்றிகளின் அடிப்படையில் சிறிலங்கா அரசாங்கமானது ஆப்கானில் பயங்கரவாதத்திற்கு எதிரான யுத்தத்தில் ஈடுபட்ட அமெரிக்க இராணுவத்திற்கு பயிற்சி வழங்கியது.

சிறிலங்கா அரசாங்கம், புலிகளைத் தோற்கடித்ததைத் தொடர்ந்து 'குருதி தோய்ந்த வரலாற்று முக்கியத்துவம் மிக்க யுத்தத்தின் வெற்றியை' பறைசாற்றி நற்பெயரைப் பெற்றுக் கொள்வதற்கான பரப்புரைகளில் ஈடுபட்டது. வழமைபோன்று போரில் அகப்பட்ட மக்களைப் பாதுகாப்பதற்காகவே இராணுவ நடவடிக்கையை மேற்கொண்டதாகவும் கூறியது.

ஆனால் உண்மையில் சிறிலங்கா அரசாங்கப் படைகள் யுத்தத்தின் போது மிகக் கொடூரமான மீறல்களைப் புரிந்தன. போர்க் குற்றங்கள் மற்றும் மனிதாபிமானத்திற்கு எதிரான குற்றங்கள் எனப் பல்வேறு மீறல்களை சிறிலங்காப் படைகள் மேற்கொண்டன. செறிவான எறிகணை வீச்சுக்கள், அப்பாவி மக்கள் மீதான கண்மூடித்தனமான தாக்குதல்கள், வைத்தியசாலைகள் மீதான தாக்குதல்கள், மனிதாபிமான தொடரணிகள் மீதான தாக்குதல்கள் என எவ்வித பாகுபாடுமின்றி சிறிலங்காப் படைகள் தாக்குதல்களை மேற்கொண்டன.

இறுதிக் கட்ட யுத்தம் இடம்பெற்ற ஐந்து மாதங்களில் வைத்தியசாலைகளைக் குறிவைத்து 22 தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டதாக மனித உரிமைக் கண்காணிப்பகம் உறுதிப்படுத்தியுள்ளது. யுத்தத்திற்குள் அகப்பட்டுத் தவித்த மக்களுக்கான உதவிகள் மறுக்கப்பட்டன. மக்கள் பட்டினியில் துடித்தனர். போரில் காயப்பட்ட மக்களுக்கு சிகிச்சை செய்வதற்கான அனுமதி மறுக்கப்பட்டது. பலவந்தமான காணாமற் போதல்கள் இடம்பெற்றன.

போரில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் தொடர்பில் 'நம்பகமான' விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும் என செப்ரெம்பரில் ஐ.நா மனித உரிமைகளுக்கான உயர் ஆணையாளர் நவி பிள்ளை அறிவித்திருந்தார். "சிறிலங்கா அரசாங்கம் உரிய முறையில் விசாரணையை மேற்கொள்ள முன்வராவிட்டால் அனைத்துலக சமூகமானது தனது சொந்த விசாரணைப் பொறிமுறைகளை உருவாக்க வேண்டிய கடப்பாட்டைக் கொண்டிருக்கும்" என நவி பிள்ளை அறிவித்திருந்தார்.

"மிகப் பயங்கரமான சண்டை காலை 5.30 மணிக்கு ஆரம்பமானது. காயப்பட்ட பொதுமக்கள் பலர் வைத்தியசாலைக்கு கொண்டுவரப்பட்டுள்ளனர். வைத்தியசாலை மீது செறிவான எறிகணைத் தாக்குதல்கள் இடம்பெறுவதால் வைத்திய சேவைகளை வழங்க முடியாதுள்ளது. சில பணியாளர்கள் தாம் கடமைக்கு வரவில்லை என அறிவித்துள்ளனர். கிட்டத்தட்ட 1000 வரையான நோயாளிகள் சிகிச்சைக்காகக் காத்திருக்கின்றனர். மக்களின் காயங்களை சுத்தம் செய்து மருந்திடுவதற்குத் தேவையான மருந்துகள் எதுவும் இல்லை. காயப்பட்ட மக்கள் பலர் இறக்கின்ற தறுவாயில் உள்ளனர். காயப்பட்ட நோயாளிகள் மத்தியில் இறந்த உடலங்களும் காணப்படுகின்றன. மக்கள் அழுவதைப் பார்க்க முடிகிறது. கேட்க முடிகிறது....அழிவுகள் தொடர்கின்றன" என வன்னியில் இறுதிக்கட்ட யுத்தம் இடம்பெற்றபோது மருத்துவராகக் கடமையாற்றிய வைத்திய கலாநிதி தங்கமுத்து சத்தியமூர்த்தி, மே 13 அன்று இறுதியாக போர் வலயத்திலிருந்து அனுப்பிய மின்னஞ்சலில் குறிப்பிடப்பட்டுள்ளார்.

Dr.%20Thangamuthu%20Sathiyamoorthy.JPG

Dr. Thangamuthu Sathiyamoorthy

செறிவான ஆட்லறி மற்றும் மோட்டார் எறிகணைத் தாக்குதல்களின் மத்தியில், வைத்தியசாலைகளை பல இடங்களுக்கு மாற்றி, தற்காலிக கொட்டகைகளின் கீழ் வைத்தியசாலைகளை அமைத்து கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகளாக போர் வலயத்திற்குள் தங்கிநின்று மக்களுக்கு மருத்துவ சேவையை வழங்கிய நான்கு தமிழ் வைத்தியர்களில் வைத்திய கலாநிதி சத்தியமூர்த்தியும் ஒருவராவார்.

சத்தியமூர்த்தி, போர் வலயத்திற்குள் இருந்தவாறு அங்கு மக்கள் கொல்லப்பட்ட ஒளிப்படங்கள் மற்றும் போர் அழிவுகளின் ஒளிப்படங்கள் போன்றவற்றை பதிவாக்கியிருந்தார். அத்துடன் போர் வலயத்திற்குள் மக்கள் கொல்லப்பட்டமை தொடர்பான தகவல்களை போர் இடம்பெற்றுக் கொண்டிருந்த போது வழமையாக 40 தூதரங்களுக்கும் 200 வரையான அனைத்துலக ஊடகங்களுக்கும் அனுப்பியிருந்தார். ஏனெனில் இந்தக் காலப்பகுதியில் வெளிநாட்டு ஊடகவியலாளர்கள் யுத்த வலயத்திற்குள் செல்வதற்கான அனுமதி மறுக்கப்பட்டிருந்தது. இந்தப் போரானது சாட்சியங்கள் எதுவுமின்றி இடம்பெற்றதாக சிறிலங்கா அரசாங்கம் கருதியது.

இறுதிக் கட்டப் போரின் போது ஐக்கிய நாடுகள் சபையானது தனது எல்லாப் பணியாளர்களையும் போர் வலயத்தை விட்டு வெளியேறுமாறு அழைத்தது. ஆனால் தமிழ்ப் புலிகள் அனுமதி வழங்காததால் ஐ.நா வானது தனக்குக் கீழே பணிபுரிந்த தமிழ்ப் பணியாளர்களை வெளியேற்ற முடியவில்லை. இந்நிலையில் இறுதிக் கட்ட யுத்தத்திற்குள் அகப்பட்ட மக்கள் வெளியிலிருந்தவாறு ஐ.நா தனது உணவுத் தொடரணிகளை மட்டும் அனுப்பி வைத்தது.

இறுதியாக மே 11 அன்று சிறிலங்கா படையினர் மற்றும் தமிழ்ப் புலிகளுடன் சமரசம் செய்து கொண்ட பின்னர் ஐ.நா வின் உணவுப் பொதிகள் மக்களுக்கு வழங்கப்பட்டுக் கொண்டிருந்த போது, அவ்விடத்தை நோக்கி சிறிலங்கா இராணுவத்தினரால் எறியப்பட்ட பல்குழல் எறிகணைகள் மற்றும் தமிழ்ப் புலிகளால் எறியப்பட்ட எறிகணைகள் போன்றவற்றால் நூற்றுக்கணக்கான பொதுமக்கள் படுகொலை செய்யப்பட்டனர்.

"இறுதிக் கட்டத்தில் இடம்பெற்ற யுத்த களங்கள் ஆழிப்பேரலை போன்று காணப்பட்டது. இந்த யுத்த பூமியில் ஆயிரக்கணக்கான மக்கள் படுகொலை செய்யப்பட்டனர். இந்த மக்கள் பாதுகாப்பாக வெளியேறுவதற்கான வழிகள் காணப்படவில்லை. மக்கள் இராணுவத்தால் மீட்கப்பட்ட பகுதிகளுக்குச் செல்ல முடியவில்லை. எவ்வாறு அவர்கள் அங்கு போகமுடியும்? ஏனெனில் அந்தத் திசையிலிருந்து இடைவிடாது எறிகணைகள் வீசப்பட்டுக் கொண்டிருந்தன. இதேபோன்று சிறிலங்காப் படைகள் தொடர்ச்சியாக விமானத் தாக்குதல்கள் மற்றும் கிளைமோர் தாக்குதல்களையும் மேற்கொண்டனர். போர் வலயத்திலிருந்து தப்ப முயன்ற பொது மக்கள் மீது புலிகள் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டனர்" என போர் வலயத்தில் இறுதி வரை பணியாற்றிய வைத்தியர் சத்தியமூர்த்தி அண்மையில் தான் வழங்கிய நேர்காணல் ஒன்றில் குறிப்பிட்டுள்ளார்.

1996ல் தமிழீழ விடுதலைப் புலிகள் யாழ்ப்பாணக் குடாநாட்டிலிருந்து வெளியேறிய போது தம்முடன் 400,000 வரையான தமிழ் மக்களையும் வன்னிக்குக் கூட்டிச் சென்றனர். அதன் பின்னர் வன்னியில் புலிகள் தமது நிலையைப் பலப்படுத்தினர். 2007ல் சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்சவும் கோத்தபாய ராஜபக்சவும் இணைந்து புலிகளைத் தோற்கடிப்பதற்கான யுத்தத்தை தொடுத்தனர். வன்னியை யாழ்ப்பாணக் குடாநாட்டுடன் இணைக்கும் ஆனையிறவில் யுத்தம் தீவிரம் பெற்றது.

இவ்வாறு தொடர்ந்த யுத்தமானது இறுதியில் புலிகளின் நிர்வாக மையமாகவும், புலிகளின் நிழல் அரசாங்கம், நிழல் நீதிமன்றம், காவல் நிலையம் மற்றும் சுகாதார, கல்வி சார் சேவைகள் இடம்பெற்ற கிளிநொச்சியிலிருந்து புலிகள் பின்வாங்குமளவுக்கு சிறிலங்கா இராணுவத்தினர் தமது யுத்தத்தை தீவிரப்படுத்தினர். புலிகளின் நிர்வாக மையமான கிளிநொச்சியை சிறிலங்கா இராணுவத்தினர் கைப்பற்றியதானது புலிகளுக்கு எதிரான யுத்தம் முடிவடைவதற்கான ஆரம்ப சமிக்கையாகக் காணப்பட்டது.

"கிளிநொச்சிக்குள் இராணுவம் உள்நுழைந்த போது, நாங்கள் முல்லைத்தீவு மாவட்டத்திற்கு இடம்பெயர்ந்தோம். அந்தவேளையில் ஐந்து கிலோமீற்றர் நீளமான பிரதேசத்திற்குள் நாங்கள் ஏழு,எட்டுத் தடவைகள் இடம்பெயர்ந்தோம்" என்கிறார் வைத்தியர் சத்தியமூர்த்தி.

இக்காலப்பகுதியில், வைத்தியர் சத்தியமூர்த்தி, கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களுக்கான பிராந்திய சுகாதார பொறுப்பதிகாரியாகக் கடமையாற்றினார். வன்னியில் யுத்தம் தீவிரம் பெற்றபோது இவர் தனது மனைவி மற்றும் பிள்ளைகளை வவுனியாவுக்கு அனுப்பி வைத்தார். அதனைத் தொடர்ந்தும் இவர் வன்னியில் சிறிலங்கா அரசாங்க வைத்தியராகப் பணியாற்றினார்.

தமிழ்ப் புலிகள் தமது அமைப்பில் வைத்தியர்களை உருவாக்கி அவர்களுக்கான மருத்துவக் கற்கைகளை வழங்கி அவர்களை சேவையில் ஈடுபடுத்திய அதேவேளையில், தேவைப்படும் சந்தர்ப்பங்களில் இவர்கள் சத்தியமூர்த்தியிடமிருந்தும் சேவையைப் பெற்றுக் கொண்டனர். "வைத்தியசாலைக்கு வருகின்ற எவருக்கும் நாம் வைத்தியம் செய்வோம். மருந்துப் பொருட்களைப் பெற்றுக் கொள்வதற்கு நான் இராணுவத் தலைமையகம் மற்றும் புலிகளுடன் சமரசம் செய்ய வேண்டியிருந்தது. இராணுவத்தினர் என் மீது சந்தேகங் கொண்டிருந்தனர். இதேபோல் புலிகளும் என்மீது சந்தேகம் கொண்டனர். 2007 இற்குப் பின்னர், சிறிலங்கா அரசாங்கம் வன்னிப் பிராந்தியத்திற்கான மருத்துவ வளங்களை அனுப்புவதை திட்டமிட்ட வகையில் நிறுத்தியது. எம்மிடம் மருந்துகள் கைவசம் இருந்த போதிலும், மக்கள் அனைவரதும் தேவைகளைப் பூர்த்தி செய்ய முடியவில்லை. இதனால் மக்கள் இறந்தனர்" என சத்தியமூர்த்தி தனது அனுபவங்களை விபரித்தார்.

"அரசாங்கக் கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் வருமாறு இராணுவத்தினர் என்னிடம் கேட்டனர். ஆனால் அங்கு செல்வதற்கு வழியிருக்கவில்லை. சரியான பாதை இருக்கவில்லை. மக்களுக்கு நான் சேவையாற்ற வேண்டியிருந்தது. ஒவ்வொரு நாளும் நூற்றுக்கணக்கான மக்களுக்கு மருத்துவம் செய்ய வேண்டியிருந்தது" என வைத்திய கலாநிதி சத்தியமூர்த்தி மேலும் குறிப்பிட்டார்.

போர் இறுதிக் கட்டத்தை அடைந்த போது சத்தியமூர்த்தியும் ஏனைய மூன்று வைத்தியர்களும் இணைந்து ஒரு இடத்தில் பணியாற்றினர். தற்காலிக நிலையம் ஒன்றில் இவர்கள் நால்வரும் இணைந்து பணியாற்றினர். இவர்கள் காயப்பட்ட மக்களைப் பராமரிக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. இவர்களின் கீழ் பணியாற்றிய தாதியும் பிறிதொரு வைத்தியரும் படுகொலை செய்யப்பட்டனர்.

இந்த வைத்தியர்கள் மூலமே கொழும்பிலிருந்தவாறு ஐ.நா பிரதிநிதிகள் போரின் இழப்புக்கள், மக்களின் இடப்பெயர்வுகள் போன்றவற்றை அறியமுடிந்தது. "நாங்கள் மருத்துவ சேவையை மாறுபட்ட முறையில் வழங்க வேண்டியிருந்தது. எனது பணி எல்லாவற்றையும் ஒன்றிணைப்பதாக இருந்தது. பாடசாலை ஒன்றில் நாம் எமது வைத்திய நிலையத்தை தற்காலிகமாக அமைத்து அங்கே கட்டில்கள் சிலவற்றைப் போட்டு, சத்திர சிகிச்சைகள் சிலவற்றைச் செய்தோம்" என வைத்தியர் சத்தியமூர்த்தி குறிப்பிட்டார்.

"பொதுமக்கள் தாம் பாதுகாப்பு வலயத்தில் பாதுகாப்பாக இருக்க முடியும் எனக் கருதி அதற்குள் தஞ்சம் புகுந்தனர். ஆனால் சிறிலங்கா இராணுவத்தினர் பாதுகாப்பு வலயத்தின் மீதும் தாக்குதலைத் தொடுத்தனர். இந்த இடத்தில் சிறிலங்கா அரசாங்கம் மிகவும் யதார்த்தமான ஒரு அணுகுமுறையை எடுத்திருந்திருக்க வேண்டும்" என்கிறார் சத்தியமூர்த்தி.

"அது மிகவும் பயங்கரமாக இருந்தது. நான் காலையில் நித்திரை விட்டு எழும்புகின்ற ஒவ்வொரு நாளும் நான் இன்று உயிருடன் இருப்பேனா என்பது எனக்குத் தெரியாது. சூரியன் மறையும் போது, அன்றைய நாள் முழுவதும் இடம்பெற்ற துப்பாக்கிச் சூடுகள், பெண்கள், சிறார்கள் கொல்லப்பட்டமை, எல்லா இடங்களும் குண்டுகளால் எரியூட்டப்பட்டமை போன்ற பல சம்பவங்களை நினைத்துப் பார்ப்பேன். பல தடவைகள் நான் சாவின் விளிம்பிற்கு போயிருந்தேன். என்னிடமிருந்து 5மீற்றர், 10 மீற்றர் தொலைவுகளில் எறிகணைகள் வீழ்ந்து வெடித்துள்ளன. நான் ஏன் இறக்கவில்லை? நான் ஏன் உயிருடன் இருக்கிறேன்? என்றெல்லாம் நினைப்பேன்" என வைத்திய கலாநிதி தனது அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டார்.

போரின் இறுதி நாட்களில் தன்னால் பதிவு செய்யப்பட்ட கானொலியை சத்தியமூர்த்தி தனது மடிக்கணிணியில் சேமித்து வைத்திருந்தார். போரில் காயமடைந்தவர்களை ஏற்றிக் கொண்டிருந்த நோயாளர் காவு வண்டி தாக்குதலுக்கு உட்பட்டு சேதமடைந்திருந்த காட்சியை சத்தியமூர்த்தி காண்பித்தார்.

"மக்கள் போவதற்கு எந்த இடமும் இருக்கவில்லை. எமது நாம் இருந்த இடத்திற்குப் பின்புறமாக கடல் இருந்தது. அனைத்துலகத் தலையீடு ஒன்று இடம்பெறும் நாம் எதிர்பார்த்தோம்" என்கிறார் சத்தியமூர்த்தி.

போரில் அகப்பட்ட மக்களைப் பாதுகாக்குமாறு சிலர் குரல்கொடுத்தனர். ஆனால் சிறிலங்கா அரசாங்கம் இதனைச் செவிமடுக்கவில்லை. காசாவில் இஸ்ரேலியர் மூன்று வாரகாலம் முற்றுகைத் தாக்குதலை நடாத்திய போது 1000 வரையான பொது மக்கள் மட்டுமே படுகொலை செய்யப்பட்டனர். ஆனால் சிறிலங்காவின் வன்னியில் நந்திக்கடல் நீரேரியில் மிகவும் ஓடுங்கிய சதுப்பு நிலப்பகுதியில் அகப்பட்ட பல பத்தாயிரக்கணக்கான பொதுமக்கள் படுகொலை செய்யப்பட்டனர்.

1000 மக்களைப் படுகொலை செய்த இஸ்ரேலுக்கு எதிராக ஐக்கிய நாடுகள் சபையானது 10 தீர்மானங்களை நிறைவேற்றியது. ஆனால் இதே ஐ.நா பல பத்தாயிரக்கணக்கான பொதுமக்களின் இழப்புக்கு காரணமாக உள்ள சிறிலங்கா அரசாங்கத்திற்கு எதிராக எவ்வித தீர்மானங்களையும் நிறைவேற்றவில்லை.

"பெப்ரவரி 2009ல், தமிழ்ப் புலிகள் அனைவரும் தாம் இறந்துவிடுவோம் என்பதை அறிந்திருந்தனர். அவர்கள் சாவை எதிர்நோக்கித் தம்மைத் தயார்ப்படுத்தினர். யுத்தம் முடிவடையப் போகிறது, இந்த யுத்தம் மிக மோசமான முடிவை எட்டவுள்ளது என்பதை நான் உணர்ந்து கொண்டேன்" என சத்தியமூர்த்தி சுட்டிக்காட்டினார்.

தமிழ்ப் புலிகள் வலுக்கட்டாய ஆட்சேர்ப்பில் ஈடுபட்டனர். சிறார்களைப் படையில் இணைத்தனர். ஒவ்வொரு குடும்பத்திலிருந்தும் ஒருவரைப் படையில் இணைப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டனர். பின்னர் போர் இறுதிக்கட்டத்தை அடைந்த போது குடும்பம் ஒன்றிலிருந்து இரண்டு, மூன்று பிள்ளைகளைப் புலிகள் படையில் இணைத்தனர். பெற்றோர்கள் தமது பிள்ளைகளை ஒழித்து வைக்க முடியவில்லை.

மே 05, புலிகளின் முக்கிய உயர் மட்டத் தலைவர்கள் மூன்று போர் சயனைட் வில்லைகளை அருந்தி இறந்ததை சத்தியமூர்த்தி அவதானித்தார். இதற்கு ஒன்பது நாட்களின் பின்னர், தான் பணியாற்றிய வைத்தியசாலையில், பல ஆயிரக்கணக்கான காயப்பட்ட நோயாளிகள் ஓலமிட்டு அழுவது அவருக்குக் கேட்டது.

"என்னிடம் காயத்தை சுத்தப்படுத்துவதற்கான சில மருந்துகளே காணப்பட்டன. அவர்களின் வலியை ஆற்றக்கூடிய மருந்துகள் என்னிடம் இருக்கவில்லை. எம்மீது மீண்டும் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது. மக்கள் பலர் கடல்நீரேரியின் ஊடாக தப்பிச் சென்றனர். இராணுவ நிலைகள் எம்மிலிருந்து 50 மீற்றர் தொலைவில் இருந்தது. எங்களுக்கும் இராணுவத்தினருக்கும் இடையில் நந்திக்கடல் நீரேரியை விட வேறு எந்தவொரு நிலப்பகுதியும் இருக்கவில்லை" என வைத்திய கலாநிதி சத்தியமூர்த்தி மேலும் தெரிவித்தார்.

"மே 15, பி.ப 2 மணி, தமிழீழ விடுதலைப் புலிகள் தாங்கள் இராணுவத்திடம் சரணடையப் போவதாக அறிவித்தனர். இதனால் அங்கு எஞ்சியிருந்த மக்கள் அரசாங்கப் பகுதிக்குள் செல்ல ஆரம்பித்தனர். அன்று பிற்பகல் நானும் அந்த இடத்தை விட்டு நகர்ந்தேன். அந்தவேளையில் 5000 வரையான மக்கள் எம்முடன் வெளியேறினர். நாங்கள் வெளியேறி 30 நிமிடங்களின் பின்னர், இராணுவம் முழுப் பிரதேசத்தையும் கைப்பற்றியது" என சத்தியமூர்த்தி மேலும் தெரிவித்தார்.

சத்தியமூர்த்தி சாரம் அணிந்து கொண்டு மக்களுடன் சேர்ந்து இராணுவத்திடம் சரணடைந்தார். அவர் பார்ப்பதற்கு சாதாரண மக்களைப் போலவே காணப்பட்டார். பார்ப்பதற்குப் புலிகள் எனச் சந்தேகிக்கப்பட்டவர்களை சிறிலங்கா இராணுவ வீரர்கள் மக்களிடமிருந்து தனியாகப் பிரித்தனர். இராணுவத்தினர், பொதுமக்களிடம் தொடர்புகொள்வதற்கு மொழி தடையாக இருந்தது. இதனால் சத்தியமூர்த்தி, மொழிபெயர்ப்பதற்காக முன்னுக்குச் சென்றார்.

"நான் இராணுவ வீரர் ஒருவரிடம் நான் ஒரு வைத்தியர் எனக் கூறினேன். நான் புலிகளுக்கு உதவியிருக்க வேண்டும் என அவன் என்னிடம் கூறினான். அவன் என்னைக் கொல்ல விரும்புகிறேன் என்பது எனக்குத் தெரியும். அதனை நான் அவனது கண்களில் பார்த்தேன்" என்கிறார் சத்தியமூர்த்தி.

இதற்குப் பதிலாக, சத்தியமூர்த்தி, ஆயிரக்கணக்கான ஏனைய பொதுமக்களுடன் வவுனியாவிலிருந்த இராணுவ முகாம் ஒன்றுக்கு அனுப்பப்பட்டார். "அடுத்த நாட்காலை, ஏனைய வைத்தியர்களுடன் நான் கைதுசெய்யப்பட்டேன். நாங்கள் யுத்தம் நடந்த போது, ஊடகங்களுக்கு பொதுமக்களின் இழப்புக்கள் தொடர்பாக தகவல் வழங்கியதாக குற்றம் சாட்டப்பட்டோம்" என வைத்திய கலாநிதி சத்தியமூர்த்தி தெரிவித்தார்.

சிறிலங்கா அரசாங்கத்தின் தடுப்பில் வைக்கப்பட்ட சத்தியமூர்த்தியும் ஏனைய மூன்று வைத்தியர்களும் பாதுகாப்பு அமைச்சில் ஏற்பாடு செய்யப்பட்ட ஊடக மாநாட்டில் பலவந்தத்தின் கீழ் பொதுமக்களின் இழப்புக்களைக் குறைத்து அறிவிக்க வேண்டியேற்பட்டது. அதாவது புலிகளின் பலவந்தத்தின் பேரிலேயே யுத்த காலத்தில் கொல்லப்பட்ட மக்களின் எண்ணிக்கைகள் தொடர்பாக மிகைப்படுத்திக் கூறியதாகவும் போரின்போது ஆகக் கூடியது 750 பொதுமக்கள் மட்டுமே படுகொலை செய்யப்பட்டதாக ஊடகங்களிடம் கூறினர். சிறிலங்கா அரசாங்கத்தால் மக்களுக்கென அனுப்பப்பட்ட உணவு மற்றும் மருத்துவ வளங்களை புலிகள் பறிமுதல் செய்தனர் எனவும் வைத்தியர்கள் கூறினர்.

2009 பெப்ரவரி நடுப்பகுதியிலிருந்து மே வரை வன்னிப் போரில் அகப்பட்டுத் தவித்த கிட்டத்தட்ட 14,000 வரையான நோயாளிகளுக்கு அனைத்துலக செஞ்சிலுவைச் சங்கத்துடன் இணைந்து சத்தியமூர்த்தியும் ஏனைய மூன்று வைத்தியர்களும் மருத்துவ சேவையாற்றியிருந்தமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

"இந்த யுத்தத்தில் எத்தனை பேர் கொல்லப்பட்டனர் என்பதை என்னால் கூறமுடியாது. 20,000, 40,000 இது எதுவாகவும் இருக்கலாம். உயிர்களைப் பாதுகாத்திருக்கக் கூடிய பலர் தமது உயிர்களை இழந்தனர். ஒருநாள் இந்த மக்களுக்கு நீதி கிடைப்பதுடன், குற்றவாளிகள் தண்டிக்கப்படுவர் என நான் நம்புகிறேன்" என வைத்திய கலாநிதி சத்தியமூர்த்தி உறுதி தெரிவித்தார்.




http://www.puthinappalakai.com/view.php?20131110109405

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

Apartheid of Srilanka Government:

PM of India has taken a political decision.  Whether PM participate or not Tamils in Srilanka (Eelam) are not going to get anything as long as the Apartheid of Srilanka Government  continues. Sri Lanka is following an apartheid towards its section of citizens through its Sinhala Only Act 1956. Due to this

1) 1,47,769 people were killed or missing in the war during 2009 as per UN Report.
2) Thirty (30) years development of SriLanka is completely halted. Around 2 Lakh people were killed during the 30 year struggle. The root is still existing as it is without any change. ie) Sinhala Only Act 1956.
3) Tamils living in Eelam (Eastern & Northern) area are treated as 2nd grade citizens.
4) Srilanka had completely devastated in economics and other wealth have been in complete disorder.
5) Independent country to the Tamils is a only hope now.
6) The International Community must create this independent country.
7) The countries participating the Commonwealth are uplifting the Apartheid of Srilanka.

The root cause of the problem should be rectified or a Free Nation "Tamil Eelam" should be created by bifurcating Today's Srilanka. Could you hear this feeble voice ????????????
 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.