Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஈழமும் மிதவாத அரசியலும் - தீபச்செல்வன்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ஈழமும் மிதவாத அரசியலும்
தீபச்செல்வன்

ஈழத்தில் மிதவாத அரசியலின் தோல்விதான் ஆயுதப்போராட்டத்திற்குக் காரணமாக இருந்தது. சிங்கள மிதவாதத் தலைவர்கள் ஈழ மக்களின் உரிமைப் பிரச்சினையை சிங்களப் பேரினவாத நோக்கத்துடன் பயங்கரவாதமாகவே சித்தரித்து உரிமை மறுப்பு மற்றும் இன அழிப்பு அரசியலை மேற்கொண்டார்கள். அவர்களுடனான அரசியல் நடவடிக்கைகளின்மூலம் எதையும் செய்ய முடியாத நிலை தமிழ் மிதவாதத் தலைவர்களுக்கு ஏற்பட்டது. காலத்திற்குக் காலம் பல்வேறு கட்ட பேச்சுவார்த்தைகளும் போராட்டங்களும் நடந்தேறிய பொழுதும் சிங்களப் பேரினவாதிகள் தமிழ் மக்களுக்கு சிறு துறும்பைக்கூட பகிரவில்லை. ஈழம் மிதவாத அரசியால் பல்வேறு பாதிப்புகளையும் மாற்றங்களையும் சந்தித்திருக்கிறது.

இலங்கை சுதந்திரமடைந்த பின்னர் தமிழ் மக்களுக்கு எதிரான அடக்குமுறைகள் சட்டங்களாகப் பாராளுமன்றங்களில் நிறைவேற்றப்பட்டன. தனிச்சிங்களச் சட்டத்தை பண்டாரநாயக்கா கொண்டுவந்தார். மிதவாதத் தலைவர்களின் தூண்டுதல் களினாலேயே தமிழ் மக்களுக்கு எதிராகப் பல இனக்கலவரக் கொலைகள் நடத்தப்பட்டன. சிங்கள மிதவாத அரசியல் என்பது ஈழத் தமிழனத்தை ஒடுக்கும், அழிக்கும் செயற்பாட்டை மேற்கொண்ட பொழுது தமிழ் மிதவாத அரசியலால் அதைத் தடுத்து நிறுத்த முடியவில்லை. ஏனெனில் தமிழ் மிதவாத அரசியலை நாம் மேற்கொள்ளும் பாராளுமன்றம் சிங்கள அரசினுடையது.

அங்கு சிங்கள இனவாதிகளே பெரும்பான்மையர்கள். அங்கு சிறு எதிர்க்குரலை எழுப்ப முடியுமே தவிர, ஒரு மாற்றத்தைக் கொண்டு வர முடியாது. அந்தக் குரலை சிங்கள மிதவாத அரசியல் அல்லது சிங்களப் பேரினவாத அரசியல் ஏற்றுக் கொண்டது கிடையாது. எனவேதான் சிங்களப் பாராளுமன்றத்தில் தமிழ் மக்களின் பிரச்சினையைத் தீர்க்க முடியாது, சிங்களத் தலைவர்களுடன் பேசித் தீர்க்க முடியாது என்கிற நிலைமையில்தான் மிதவாத அரசியலின் தோல்வியாகவே இளைஞர்கள் ஆயுதம் ஏந்த நேரிடும் என்று தந்தை செல்வா குறிப்பிட்டிருந்தார்.

அண்மையில் நடந்த வடக்கு மாகாண சபைத் தேர்தலில் தமிழ் தேசியக் கூட்டமைப்பை 30 ஆசனங்களைப் பெறும் வகையிலும் இலங்கை அரசு படுதோல்வியை சந்திக்கும் வகையிலும் வாக்களித்திருந்தனர். மிதவாத அரசியல் எதையும் பெற முடியாது என்றதன் பின்னர் ஆயுதம் ஏந்திப் போராடினோம். அந்தப் போராட்டமும் முறியடிக்கப்பட்டு மௌனிக்கப்பட்ட பின்னர் மீண்டும் மிதவாத அரசியல் பயணத்தில் ஈடுபட்டிருக்கிறோம். மக்களைப் பொறுத்தவரையில் ராஜபக்ஷேவுக்கு எதிராக கடுமையான ஒரு பதிலடியைக் கொடுக்க நினைத்தனர். அதற்கு வடக்கு மாகாண சபைத் தேர்தலைப் பயன்படுத்திக் கொண்டார்கள். ஈழ மக்கள் இன்று வாழும் சூழலில் இலங்கை அரசை நிராகரிக்கவும் அல்லது இலங்கை அரசு மீது தமது எதிர்ப்பை வெளிப்படுத்தவும் வேறு சந்தர்ப்பங்கள் இல்லை.

ஆனால் வடக்கு மாகாண சபைத் தேர்தலில் வாக்களித்த கைவிரலில் பூசப்பட்ட மை காய்வதற்கு முன்பாகவே மக்களின் எதிர்ப்பார்ப்புகள் ஏமாற்றம் அடையத் தொடங்கியுள்ளன. இதுவே மிதவாத அரசியலின் குணம். வடக்கு மாகாண சபைத் தேர்தலில் வெற்றி பெற்ற தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முதலமைச்சர் விக்கினேஸ்வரன் இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷேவின் முன்னிலையில் பதவி ஏற்ற நிகழ்வு ஈழத்து மக்களின் உணர்வுக்கும் போராட்டத்திற்கும் ஈழ அரசியலுக்கும் மாறான விதத்தில் நடந்தேறியுள்ளது.இந்த நிகழ்வு வரலாற்றில் ஒரு கறுப்பு நிகழ்வே.

அரசியலுக்கும் வடக்கு கிழக்கு மக்களுக்கும் புதியவரான விக்கினேஸ்வரனைத் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் வடக்கு முதலமைச்சர் வேட்பாளராக அமர்த்தியது ஏன் என்பது புதிராக இருந்தது. அதை வெளிப்படுத்தும் வகையில் விக்கினேஸ்வரனின் தொடர் பேச்சுக்கள் வெளிவருகின்றன. தமிழ் மக்களை காயப்படுத்தும் வகையிலும் வடக்கு கிழக்கு தமிழ் மக்களின் உளவியலுக்கு மாறான வகையிலும் அமைந்துள்ளது. முதலில் அவர் தேர்தலில் நின்ற மண்ணில் மாபெரும் இனப்படுகொலை நடந்தது என்ற செய்தியை அவருக்குச் சொல்ல வேண்டும். ஈழமண்ணில் நடத்தப்பட்ட போர்க்குற்றங்கள் மற்றும் இனப்படுகொலைக்கான நீதியான தீர்வை ஈழ மக்கள் கேட்டு நிற்கிறார்கள் என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும்.

ஈழத் தமிழ் மக்களின் போராட்டத்திற்கு மாறான வகையிலேயே அவரது பேச்சுக்கள் அமைந்துள்ளன. அவரது பேச்சுக்களைப்போலவே மகிந்த ராஜபக்ஷே முன்பாகப் பதவி ஏற்ற நிகழ்வும் நடந்தது. இந்தத் தேர்தலில் யாரை மக்கள் தோற்கடிக்க வேண்டும் என்று நினைத்தார்களோ அவரின் காலடியில் விக்கினேஸ்வரன் பதவி ஏற்றுள்ளார். ஆனால் தேர்தல் பிரசாரத்தில் இனப்படுகொலை செய்த கொலை யாளியைத் தோற்கடிப்போம் என்று கூட்டமைப்பு பேசியது. இப்பொழுது அதே கொலையாளி முன்பாகப் பதவி ஏற்கும் ஒரு முடிவை எடுப்பது வாக்குறுதியை மீறும் செயல். இது ஒன்றரை லட்சம் தமிழ் மக்களைக் கொலை செய்த ஒரு போர்க் குற்றவாளியைக் காப்பாற்ற முனைகின்ற செயலாகவே உள்ளது.

ராஜபக்ஷேவின் இணக்க அரசியல் ஈழமக்களால் நிராக ரிக்கப்பட்ட அரசியல் அணுகுமுறை. அதையே கடந்த தேர்தல் முடிவு வெளிப்படுத்தியது. இனப்படுகொலை செய்த அரசுடன் எப்படி இணக்க அரசியல் செய்வது? மகிந்த ராஜபக்ஷே வடக்கு மக்களால் நிராகரிக்கப்பட்ட ஜனாதிபதி. தமிழ் மக்களைப் பொறுத்தவரையில் எமக்கு எதிராக நடந்த போரில் இழைக்கப் பட்ட குற்றங்கள் மற்றும் இனப்படுகொலைக்கு சர்வதேச ரீதியான விசாரணைகள் இடம்பெற்று மாற்றம் ஏற்படும் எனவும், தீர்வு ஒன்று முன்வைக்கப்படும் என்றும் எதிர்பார்த்திருக்கின்றனர். அதற்காகவே தமிழ் தேசியக் கூட்டமைப்பிற்கு மக்கள் வாக்களித்தார்கள். மகிந்த ராஜபக்ஷேவுடன் இணைந்து பாலம் போடுவதற்காக மக்கள் வாக்களிக்கவில்லை.

வடக்கு கிழக்கு இணைந்த தமிழர் தாயகத்தில் தமிழ் மக்களுக்கு ஆட்சி ஒன்று தேவை என்று பிரசாரத்தில் ஈடுபட்டார்கள் கூட்டமைப்பினர். தேர்தல் விஞ்ஞாபனத்தில் அதை தமிழர் தேசத்தின் சமஷ்டி என்று முன் வைத்தார்கள். ஆனாலும் பிரசாரக் கூட்டங்களில் தனிநாடு என்ற அடிப்படையிலேயே பேசினார்கள். அத்துடன் ஈழ மக்கள் இனப்படுகொலை செய்யப்பட்ட போர்க்குற்றங்கள் தொடர்பில் சர்வதேச நீதி விசாரணை தேவை என்றும் தெரிவித்தார்கள். எதுவுமற்ற மாகாண சபைத் தேர்தலுக்கு மக்கள் வாக்களித்து முன்வைத்த கொள்கைக்கும் மேற்கொள்ளப்பட்ட பிரசாரத் திற்குமே மாகாண சபையில் ஒன்றுமில்லை. இதை ஒரு தொடக்கப் புள்ளியாகக்கூட கருதவில்லை என்று கூட்டமைப்பினர் தெரிவித்திருந்தனர். பின்னர் அந்த மாகாண சபை முதலமைச்சர் ஜனாதிபதி முன்னிலையில் பதவி ஏற்றுக் கொண்டதன் மூலம் மாகாண சபையைத் தீர்வாக ஏற்றுக் கொள்வதுடன் தேர்தல் விஞ்ஞாபனத்திற்கும் பிரசாரத்திற்கும் மாறாக நடந்துகொள்ளும் நடவடிக்கையாகவும் அமைகிறது. ராஜபக்ஷேவின் முன்பாகப் பதவி ஏற்க வேண்டும் என்று இந்தியாவே அறிவுறுத்தியதாக சொல்லப்படுகிறது. இந்த நிகழ்வைக் கூட்டமைப்பின் உறுப்பினர்கள் பலரும் எதிர்த்தார்கள். முதலில் ஆளுநருக்கு முன்னாலோ அல்லது ஜனாதிபதி முன்னாலோ பதவிப் பிரமாணம் செயயத் தேவையில்லை என்று சுமந்திரன் எம்.பி.யும் கூட்டமைப்புத் தலைவர் சம்பந்தனும் சொன்னார்கள். பிறகு அவர்களே ஜனாதிபதியின் முன்பாகப் பதவி ஏற்கப்போவதாக சொன்னார்கள். தமது தேர்தல் விஞ்ஞாபனத்திலோ அல்லது தேர்தல் பிரசாரக் கூட்டங்களிலோ ஜனாதிபதியின் முன்பாகப் பதவி ஏற்றுக்கொள்ளப்படும் என்று கூட்டமைப்பு தெரிவிக்கவில்லை. அவ்வாறு தெரிவித்திருந்தால் இந்த தேர்தலின் முடிவுகள் வேறுவிதமாக அமைந்திருக்கும்.

வல்வெட்டித்துறையில் நடந்த தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் பேசிய விக்கினேஸ்வரன் தலைவர் பிரபாகரனை மாவீரன் என்று பேசினார். அவ்வாறு பேசியவர் தேர்தலில் வென்றதும் இனக்கொலையாளி ராஜபக்ஷே முன்னால் பதவிப் பிரமாணம் செய்து கொள்வதன் மூலம் அவர் தனது இரட்டைமுகத்தை வெளிப்படுத்தியுள்ளார்.அவ்வாறு பதவி ஏற்றுக்கொண்டமை ஒரு ராஜதந்திரமான விடயம் என்று காட்ட முயற்சிக்கப்படுகிறது. இலங்கை ஈழ மிதவாத அரசியலின் வரலாற்றையும் மகிந்த ராஜபக்ஷேவின் அணுகுமுறைகளையும் வைத்துப் பார்த்தால் இது ஒரு தவறான அணுகுமுறையாகவே கருதப்படுகிறது.

இதை நல்லெண்ண நடவடிக்கையாக சம்பந்தர் சித்தரிக்கின்றார். ஆனால் இந்த ராஜதந்திரங்களும் நல் லெண்ணங்களும் ராஜபக்ஷே மற்றும் சிங்கள இனவாதிகளால் எப்படி பயன்படுத்தப்படும் என்பதே இங்கு சிக்கலாக உள்ளது. சிங்கள அரசு நல்லெண்ணம், நல்லிணக்கம் என்று கருதுவது சரணாகதி அரசியலாகும். இணக்க அரசியல் மூலம் எல்லா வற்றையும் இழப்பதையே நல்லெண்ணமாகக் கருதுகின்றனர்.

இது மக்களின் எதிர்பார்ப்புக்கு மாறான வகையில் கூட்டமைப்பின் செயற்பாடு இருக்கின்றது. ஏனெனில் மக்கள் மகிந்தவை இனப்படுகொலையாளியாகக் கருதுகிறார்கள். கூட்டமைப்பு ஜனாதிபதியாகக் கருதுகிறது. அவர்களைத் தோற்கடிக்க நினைத்த தரப்பிடம் இப்பொழுது பதவி ஏற்பது மக்களின் உணர்வைக் கடுமையாகப் பாதிக்கும் செயல். இந்த செய்தியைக் கேட்டும் நிகழ்வுகளைப் பார்த்தும் கொந்தளித்த பலரைக் கண்டேன். மக்களிடம் வாக்கைப் பெறுவதற்கு புலிகள் சார்ந்த உணர்ச்சியும் கொழும்பில் இந்த மாதிரியான ராஜபக்ஷே சார்ந்த ராஜதந்திரமும் என்கின்ற பொழுது நேர்மையற்ற அரசியலாகவே தெரிகிறது.

மூன்றாம் கட்டப் போராட்டம் எனவும் நீதி வழியில் போராட்டம் எனவும் சட்ட நுணுக்கங்களுக்கு அமைவான போராட்டம் எனவும் வடக்கு மாகாண முதலமைச்சர் விக்கினேஸ்வரன் தேர்தல் பிரசாரத்தில் பேசி வந்தார். அவரது மூன்றாம் கட்டப் போராட்டம் ராஜபக்ஷேவின் முன்னால் பதவி ஏற்பதிலிருந்து ஆரம்பிக்கும் என்றால் அது எமது மக்களின் உரிமைகளைப் பெறும் வகையில் அமையாது. எமது மக்கள் சலுகைகளுக்கு எதிராக உரிமை வேண்டியே வாக்களித்தார்கள். வீடு, வீதி, பாலம், ரயில் கேட்கவில்லை. நாம் வசிக்கும் தாயகமே முதலில் வேண்டும். அழிக்கப்படும் எமது இனத்தையும் தாயகத்தையும் காப்பாற்றவே தீர்வு வேண்டும். அதுவே இன்று ஈழ தேச மக்களின் போராட்டமாக இருக்கிறது.

தமிழ் மக்கள் ஜனநாயகரீதியாக வெளிப்படுத்தும் செய்திகளை எல்லாம் தமது அரசியலில் பலியிடுகின்ற நடவடிக்கையையே தமிழ் அரசியல் தலைவர்கள் கடந்த காலத்தில் செய்து வந்திருக்கிறார்கள். 1977இல் வட்டுக்கோட்டை தீர்மானம் எனப்படும் தனித் தமிழீழ தீர்மானத்தை முன்வைத்து தமிழர் விடுதலைக் கூட்டணி தேர்தலில் போட்டியிட்ட பொழுது அன்று ஈழமக்கள் அமோக வெற்றி பெறச் செய்தார்கள். அதைப்போல 2004இல் விடுதலைப்புலிகள் தமிழ் மக்களின் ஏகப் பிரதிநிதிகள், வடக்கு கிழக்கு மரபுவழித்தாயகம், சுயநிர்ணய உரிமை, தமிழ் தேசியம் முதலிய கொள்கைகளை முன்வைத்து தமிழ் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டு 22 பேர் தெரிவுசெய்யப்பட்டு அமோக வெற்றி கிடைத்தது.

வட்டுக்கோட்டை தீர்மானத்தை முன்வைத்து தேர்தலில் வென்ற அன்றைய தமிழ் மிதவாத அரசியல் தலைவர்கள் பின்னர் அதற்கு மாறாகச் செயற்பட்ட பொழுது இளைஞர்களின் கோபத்திற்கு ஆளாகினார்கள். 2004இல் நாடாளுமன்றத்திற்கு அனுப்பி வைத்த எம்.பி.க்களும் முள்ளிவாய்க்கால் யுத்தத்திற்குப் பின்னர் தமது அரசியல் நிலைப்பாடுகளில் உறுதியான நிலையைக் கொண்டிருக்கவில்லை. தமிழ் மிதவாத அரசியல் தலைவர்கள் ஒவ்வொரு தேர்தலையும் விடுதலைக்கான தேர்தல் என்று சொல்வதும் பின்னர் அதற்கு மாறாகச் செயற்படுவது குறித்தும் தலைவர் பிரபாகரனனும் தனது அதிருப்தியைக் குறிப்பிட்டிருக்கின்றார். தமிழ் மிதவாத அரசியலின் அல்லது அந்த அரசியல்வழியின் தோல்வியே ஆயுதப்போராட்டத்திற்கான காரணமாகும்.

இலங்கை அரசிடம் நற்சான்றிதழ் வாங்குவதன் மூலமோ அல்லது இந்தியாவின் வாய்ச்சொல்லுக்கு ஏற்ப செயற்படுவதன் மூலமோ எமது பிரச்சினைக்கான தீர்வைப் பெற இயலாது. சிங்களப் பாராளுமன்றத்தையும் சிங்களத் தலைவர்களையும் நோக்கிய மிதவாத அரசியல் தொடர்ந்தும் தோல்விகளையே வழங்குகிறது. உலக மக்களின் ஆதரவைப் பெற்று எமக்கான தீர்வைப் பெற வேண்டும்.

எமது இனம் எதிர்கொண்ட இனப்படுகொலையும் போர்க்குற்றங்களும்தான் எமது இன்றைய ஆயுதம். அதற்கு நீதி வேண்டும். அதற்கான நீதி என்பது இனியும் அவ்வாறான நிகழ்வுகள் இடம்பெறாத எதிர்காலத்தை உருவாக்க வேண்டும். அது சிங்கள அரசிடமிருந்து விடுதலை பெற்று தமிழர்களை தமிழர்கள் ஆளும் தனி ஈழ தேசத்திலேயே சாத்தியமானது.



http://www.uyirmmai.com/Contentdetails.aspx?cid=6416

ஈழமும் மிதவாத அரசியலும்

தீபச்செல்வன்

 உலக மக்களின் ஆதரவைப் பெற்று எமக்கான தீர்வைப் பெற வேண்டும்.

எமது இனம் எதிர்கொண்ட இனப்படுகொலையும் போர்க்குற்றங்களும்தான் எமது இன்றைய ஆயுதம். அதற்கு நீதி வேண்டும். அதற்கான நீதி என்பது இனியும் அவ்வாறான நிகழ்வுகள் இடம்பெறாத எதிர்காலத்தை உருவாக்க வேண்டும். அது சிங்கள அரசிடமிருந்து விடுதலை பெற்று தமிழர்களை தமிழர்கள் ஆளும் தனி ஈழ தேசத்திலேயே சாத்தியமானது.

http://www.uyirmmai.com/Contentdetails.aspx?cid=6416

தற்போதைய கால ஓட்டத்தை மையமாக வைத்து பல உண்மைகளை கொண்ட ஒரு ஆய்வு ..
 
இணைப்பிற்கு நன்றிகள் .

இந்த நாட்டில் இரண்டாம் தர பிரஜைகளாக வாழ்வதற்கு நாம் தயாரில்லை, பொருளாதார கலாசார ரீதியாக நாம் தனித்துவமானவர்கள். எங்களை நாங்களே ஆளுகின்ற அதிகாரத்தை கேட்பதில் எந்த தவறும் இல்லை. எங்களுடைய நியாயமான கோரிக்கையை இனியும் நிராகரிக்க முடியாது அத்துடன் ஆயுதப் போராட்டத்தை நாங்கள் விரும்பவில்லை என்று தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின் நாடாளுமன்ற குழுக்களின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்தார்.

திருகோணமலை சம்பூர் மக்கள் அகதிகளாக தங்க வைக்கப்பட்டுள்ள கிளிவெட்டி இடைத்தங்கல் முகாமில் நேற்று சனிக்கிழமை காலை 9.00 மணிமுதல் 11 மணிவரை கவன ஈர்ப்பு போராட்டம் ஒன்று இடம்பெற்றது.

தமிழ்தேசிய கூட்டமைப்பினரும் சம்பூர் மக்களும் இணைந்து இப்போராட்டத்தை முன்னெடுத்தனர்.

மக்களும் மக்கள் பிரதிநிதிகளும் பதாதைகளை ஏந்தி கவன ஈர்ப்பு போராட்டத்தை மேற்கொள்ள முற்பட்ட போதும் பொலிசார் அவர்களை தடுத்து நிறுத்தினர். தடுத்தனர் அரச காணியில் அரசாங்கத்திற்கு எதிரான போராட்டம் நடத்த முடியாது என தடைவிதிக்கப்பட்டது .

அதனையடுத்த  அமைதியான முறையில் கவன ஈர்ப்பு போராட்டம் இடம் பெற்றது .

அங்கு தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற குழுத் தலைவரும் திருகோணமலை நாடாளுமன்ற உறுப்பினருமான இரா. சம்பந்தன் உரையாற்றும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,

எப்போதும் இல்லாத அளவிற்கு எமது பிரச்சினை சர்வதேச மயப்படுத்தப்பட்டுள்ளது. ஐக்கிய நாடுகள் சபையில் முக்கியதுவம் பெற்று மனித உரிமை பேரவையில் எமது பிரச்சினை எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளது.சம்பூர் நிலங்களில் சரித்திர ரீதியாக பல நூறு ஆண்டுகளாக நீங்கள் பரம்பரையாக வாழ்ந்து வருகின்றீர்கள்.

கொட்டியார துறைமுக வாயிலில் வெருகல் வரை தமிழ் பேசும் மக்கள் அதுவும் தமிழ் மக்கள் அதிகமாக வாழ்ந்து வருகின்றார்கள் 1881 ஆம் ஆண்டு கணக்கெடுகளின் படி பெரும்பான்மை இனத்தவர்கள் 11 பேர் மட்டுமே வாழ்ந்துள்ளார்கள் அவர்கள் அனைவரும் ஆண்கள் ஆவர்.அவர்கள் பேக்கரியில் வேலைக்கு வந்தவர்கள் என்றார்.

சம்பூர் மக்களின் பிரச்சினை தொடர்பாக நாம் நாடாளு மன்றத்தில் பேசிய போது பொருளாதார அமைச்சர் பசில் ராஜபக்ச குறுக்கிட்டு அனல் மின் நிலையத்திற்கு ஒதுக்கப்பட்ட 500 ஏக்கர் காணிகளைத் தவிர ஏனைய பகுதிகளில் மக்கள் குடியோற்றப்படுவார்கள் என உறுதி மொழி வழங்கிய போதும் அது இன்று வரை நிறைவேற்றப்பட் வில்லை.

கூனித்தீவு நவரட்ணபுரம் குடியேற்ற பட்ட போது சம்பூர் மக்களும்  குடியேற்றப்படுவார்கள் என எண்ணினோம் ஆனால் அது நடைபொறவில்லை.
உலகத் தலைவர்களுடனும் சம்பூர்விடயம் பற்றி பேசி வருகின்றோம் தென்னாபிரிக்க ஜனாதிபதியை சந்தித்து நாளை பேசவுள்ளோம் சம்பூர் மக்களான நீங்கள் உறுதியுடன் இருங்கள் இதுவே முக்கியம் எமது போராட்ம் தொடரும் நாங்கள் ஓயமாட்டோம்.எமது மக்கள் சம உரிமையுடன் வாழும் வரை நாம் ஓயப்போவதில்லை என்றார்.

tamilmirror

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.