Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சம்பந்தனின் தலைமைத்துவத்தின் மீதான நெருக்கடிகள் - யதீந்திரா

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

சம்பந்தனின் தலைமைத்துவத்தின் மீதான நெருக்கடிகள் - யதீந்திரா

இன்று ஈழத்தமிழர் அரசியல் என்றால் - அது சம்பந்தன் என்னும் நிலைமை ஏற்பட்டிருக்கின்றது. சமீபத்தில் வாசித்த ஆங்கில கட்டுரை ஒன்றில் தமிழர் அரசியல் திருகோணமலையை மையப்படுத்தியிருப்பதாக குறிப்பிடப்பட்டிருந்தது. அந்த கட்டுரையாளர் திருகோணமலை என்று குறிப்பிட்டிருப்பது, இரா.சம்பந்தன் திருகோணமலையை சேர்ந்தவர் என்னும் பொருளிலாகும். அந்தளவிற்கு சம்பந்தனின் தலைமைத்துவம் இன்று உற்று நோக்கப்படுகிறது. எனவே இன்றைய அர்த்தத்தில் சம்பந்தனை தவிர்த்து எவராலும் தமிழர் அரசியலை கையாள முடியாது. எவ்வாறு 2009இற்கு முன்னர் பிரபாகரனை தவிர்த்து எவராலும் தமிழர் அரசியலை கையிலெடுக்க முடியவில்லையோ, அத்தகையதொரு நிலைமையே தற்போது சம்பந்தன் விடயத்தில் காணப்படுகிறது.

ஆனால் சம்பந்தனை ஓரங்கட்ட வேண்டும் என்னும் நோக்கிலான ஓர் அரசியல் ஓட்டமொன்றும், 2010 இலிருந்து தொடர்ந்து வருகிறது. கூட்டமைப்பிலிருந்து வெளியேறி, எதிரணி ஒன்றை கட்டியெழுப்புவதன் ஊடாக, சம்பந்தனை அரசியல் அரங்கிலிருந்து வெளியேற்ற முடியுமென்று நம்பியவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் ஆவார். இறுதியாக இடம்பெற்ற பாராளுமன்ற தேர்தலின்போது, சம்பந்தனை தோற்கடிக்க வேண்டுமென்பதே அவரது பிரதான அரசியல் கோசமாக இருந்தது. ஆனால் இறுதியில் படுமோசமான தோல்வியை தழுவினார். கஜேந்திரகுமாரின் தோல்வியின் மூலம், சம்பந்தனை ஓரங்கட்ட விரும்பியோர் ஓர் உண்மையைப் புரிந்துகொண்டனர். அதாவது, சம்பந்தனை கூட்டமைப்பிற்கு வெளியிலிருந்து தோற்கடிக்கும் முயற்சியானது முயல்கொம்பிற்கு ஒப்பானதாகும். எனவே, உள்ளுக்குள் இருந்து குழப்பங்களை ஏற்படுத்துவதன் மூலமே சம்பந்தனை வீழ்த்த முடியுமென்னும் உபாயம் சிந்திக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்தே அவ்வப்போது சம்பந்தன் மீது பல்வேறு குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டன. மேலும், பாராளுமன்றத்தில் சம்பந்தனின் அரசியல் நிலைப்பாட்டுக்கு மாறான அபிப்பிராயங்களை வெளிப்படுத்தி, அவருக்கு சங்கடங்களை ஏற்படுத்தும் முயற்சிகளும் மேற்கொள்ளப்படுகின்றன. யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற மேதின நிகழ்வின் போது, ரணில் விக்கிரமசிங்கவுடன் இணைந்து சிங்கக்கொடியை தூக்கிய சம்பவத்தை சிலர் கையிலெடுத்துக் கொண்டனர். பின்னர் பாராளுமன்றத்தில் ஆற்றிய உரையொன்றில், விடுதலைப்புலிகள் அமைப்பு எவ்வாறு பயங்கரவாத வரையறைக்குள் கொண்டுவரப்பட்டது என்பது பற்றி சம்பந்தன் பேசியபோது, அதனை சிலர் கையிலெடுத்துக் கொண்டனர். இவற்றை அடிப்படையாகக் கொண்டு சம்பந்தன் கடுமையாக தாக்கப்பட்டார். இவ்வாறு தாக்கியவர்களிடம் இருந்த நோக்கம் ஒன்றே ஒன்றுதான், அதாவது, சம்பந்தனை தளர்வடையச் செய்து அரசியலிலிருந்து ஓரங்கட்டுவதென்பதே அது.

இதன் தொடர்ச்சிதான் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களில் ஒருவரான சிறிதரனின் சமீபத்தைய உரையாகும். பிரபாகரன் குறித்து இலங்கை பாராளுமன்றத்தில் குறிப்பிடுவதன் மூலம் ஒரு சாதாரண தமிழ்குடிமகனுக்கு எத்தகைய நன்மைகள் கிடைக்கக் கூடும்? எந்தவொரு நன்மையும் நிகழாது என்பது சிறிதரனுக்கு நன்கு தெரியும். ஆனால் இதன் மூலம் சம்பந்தனுக்கு ஒரு நெருக்கடியை உருவாக்க முடியும். சம்பந்தன் தலைமை தாங்கும் கூட்டமைப்பிற்குள்ளேயே, அவரது அரசியல் நிலைப்பாட்டை முற்றிலுமாக நிராகரிப்பவர்களும் இருக்கின்றனர் என்பதை காண்பிப்பதே சிறிதரனின் நோக்கமாக இருந்தது. தவிர, பிரபாகரன் மீதுள்ள பற்றினாலோ, யுத்தத்தின் போது உயிர்நீத்த விடுதலைப் புலிகள் மீதுள்ள பற்றினாலோ சிறிதரன் இவற்றை கூறியிருக்கவில்லை. இன்று அரசியலில் பிரபல்யம் பெற விரும்புவோர் கைக்கொள்ளும் ஒரு சந்தைப்படுத்தல் உக்தியாகவே (Marketing Idea) பிரபாகரனின் பெயர் பயன்படுத்தப்பட்டுவருகிறது.

சிறிதரன் எதிர்பார்த்தது போன்றே, சிறிதரனின் உரை குறித்து பதிலளிக்க வேண்டிய பொறுப்பு சம்பந்தனுக்கு ஏற்பட்டது. குறிப்பிட்ட கருத்துக்கள் சிறிதரனின் தனிப்பட்ட கருத்துக்களே தவிர. கூட்டமைப்பின் நிலைப்பாடு இல்லை என்னும் பதிலை சம்பந்தன் வழங்க வேண்டிய இக்கட்டுநிலை ஏற்பட்டது. சிறிதரனைப் பொறுத்தவரையில், மேற்படி உரையின் மூலமான அறுவடையானது, ஒரு கல்லில் இரு மாங்காய்க்கு ஒப்பானது. சம்பந்தனின் தலைமைக்கு நெருக்கடி, கூடவே சிறிதரனுக்கு துணிச்சலான ஆள் என்னும் மகுடமும் கிடைத்தது. ஆனால் சற்று ஆழமாக சிந்திக்கும் ஒருவர், சிறிதரனின் இது போன்ற பேச்சுக்களால், அதிகளவு அரசாங்கமே நன்மையடைந்து வருவதை புரிந்துகொள்வார். இந்த சந்தேகத்தை சுமந்திரன் தனது பாராளுமன்ற உரையில் தொட்டுக் காட்டியிருக்கிறார்.

இங்கு கவனிக்க வேண்டிய விடயம் ஒன்றுண்டு. சிறிதரனின் உரையை அவதானித்தபோது, அவர் அடிக்கடி தமக்கு மக்கள் ஆணை வழங்கியிருப்பதாக குறிப்பிடுகின்றார். அது எத்தகைய ஆணை? பாராளுமன்றத்தில் பிரபாகரன் குறித்து பேச வேண்டும் என்பதா? வடக்கு மாகாணசபை தேர்தலின் போது, கூட்டமைப்பு தேர்தல் விஞ்ஞாபனம் ஒன்றை வெளியிட்டிருந்தமை உங்களுக்கு நினைவிருக்கலாம். இறுதி யுத்தத்தின்போது, இடம்பெற்றதாக கருதப்படும் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் சுயாதீன சர்வதேச விசாரணை ஒன்றின் அவசியப்பாடு குறித்தும் மேற்படி விஞ்ஞாபனத்தில் குறிப்பிடப்பட்டிருக்கிறது. ஆனால் இங்கு அடிக்கோடிட வேண்டிய விடயம், 'இருதரப்பினராலும் இழைக்கப்பட்ட குற்றங்கள்' என்றே மேற்படி விஞ்ஞாபனத்தில் குறிப்பிடப்பட்டிருக்கின்றது. மேற்படி விஞ்ஞாபனத்தின் அடிப்படையில் போட்டியிட்டு வென்றவர்கள்தான் இன்று வடக்கு மாகாணசபையில் அமைச்சர்களாவும், உறுப்பினர்களாகவும் இருக்கின்றனர். வடக்கு மாகாணசபை பிரச்சாரங்களின் போது, தீவிரமாக செயற்பட்டவர்களில் சிறிதரனும் ஒருவர். அப்போது அமைதியாக பிரச்சாரங்களில் ஈடுபட்ட சிறிதரன், தற்போது திடீரென்று பிரபாகரன் மீது விசுவாசமழை பொழிவதன் பின்னணி என்னவாக இருக்க முடியும்? பதில் - சம்பந்தனின் தலைமைத்துவத்திற்கு நெருக்கடிகளை கொடுப்பது என்பதே அவரது ஒரே நோக்கம்.

ஏன் சம்பந்தனின் தலைமைத்துவத்திற்கு நெருக்கடிகள் கொடுக்கப்படுகின்றன? கடந்த அறுபது வருடங்களுக்கும் மேலாக தொடரும் தமிழர் (எதிர்ப்பு) அரசியலில், இராஜவரோதயம் சம்பந்தனின் தலைமைத்துவம் முற்றிலும் வித்தியாசமான ஒன்று. இரண்டு விடயங்களில் சம்பந்தன் முற்றிலும் வித்தியாசமான ஒருவராக இருக்கின்றார். ஒன்று, அவர் உணர்சிகரமான அரசியலுக்கு தலைமை தாங்கும் ஒருவராக எப்போதும் தன்னை அடையாளப்படுத்திக் கொண்டவரல்ல. மற்றையது, கடந்த அறுபது வருட கால தமிழர் அரசியலில் கிழக்கு மாகாணத்திலிருந்து தமிழர் அரசியலுக்கு தலைமை தாங்கும் முதல் அரசியல் தலைவர் சம்பந்தனாவார்.

காசி ஆனந்தன் மற்றும் வண்ணை ஆனந்தன் போன்றவர்கள் 'அல்பிரட் துரையப்பா இயற்கை மரணத்திற்குரிய ஒருவரல்ல' என்று உரைத்தபோது, அதனை அமைதியாக ஊக்குவித்துக் கொண்டிருந்த அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கத்திலிருந்து முற்றிலும் வேறுபட்ட ஒருவராகவே சம்பந்தன் இருந்திருக்கிறார். இருந்து வருகிறார். சம்பந்தன் இதுவரை எவரையும் துரோகி என்று விழித்தவரல்ல. இளைஞர்களை தூண்டிவிடுவதன் மூலம் அரசியல் செய்ய முடியுமென்னும் நம்பிக்கையை கொண்ட ஒருவராகவும் அவர் எப்போதுமே தன்னை அடையாளப்படுத்திக் கொண்டவருமல்ல. மிகவும் நிதானமான ஒரு தலைவராகவே இருந்து வருகிறார். 2009இற்கு பின்னரான அரசியல் நிலைமைகள் குறித்து துல்லியமான மதிப்பீடுகளைக் கொண்டிருக்கும் சம்பந்தன், தன்னால் என்ன செய்ய முடியும் என்பதிலும், எதனை செய்ய முடியாது என்பதிலும் தெளிவான அவதானத்தைக் கொண்டிருப்பதாகவே இப்பத்தி கருதுகிறது. தனது தெளிவான அவதானத்திலிருந்தே, தனது கருத்துக்களையும் முடிவுகளையும், அவர் வெளிப்படுத்தி வருகின்றார். ஆனால் அரசியலை அறிவுக்கு அப்பாற்பட்ட ஒன்றாக பார்க்க முற்படுவோருக்கு, இது இயலாமையாகவும், சமரசமாகவும் தெரியக் கூடும். ஆனால் 2009இற்கு பின்னரான நிலைமைகளை உற்று நோக்குவோர் எப்போதும் சம்பந்தன் அணியிலேயே நிற்க முயல்வர்.

நிலைமைகளை ஆழ்ந்து நோக்கினால், 2009இற்கு பின்னரான இலங்கையின் அரசியல் என்பது விடுதலைப் புலிகளை வெற்றி கொண்ட அரசாங்கத்திற்கும், அந்த வெற்றிக்கு பக்கபலமாக பல்வேறு வழிகளில் ஒத்துழைத்த சர்வதேச சக்திகளுக்கும் இடையிலான முறுகலாகவே நீண்டு செல்கிறது. இந்த முறுகல்கள் அனைத்தும் வல்லரசுகளின் அதிகார நலன்கள் என்னும், தமிழர் சக்திக்கு அப்பாற்பட்ட ஒரு புள்ளியில் சந்திக்கின்றன. இந்த முறுகல்களில் ஏற்படும் ஏற்ற இறக்கங்களிற்கு ஏற்பவே, தமிழர் பிரச்சனை சர்வதேச அவதானத்தை பெறக்கூடும். இதில் கூட்டமைப்பின் பங்கு என்பது, இந்த ஏற்ற இறக்கங்களை கணித்து அதற்கேற்ப உறவுகளை பேணுவதும், நிலைமைகளை கையாளுவதும்தான். இந்த இடத்தில்தான் சம்பந்தன் தமிழ் மக்களின் சார்பில் தலையீடு செய்யும் தலைவராக இருக்கின்றார். இந்த பின்னணியிலேயே, இலங்கையின் பிரச்சனையில் தலையீடு செய்துவரும் இந்திய மற்றும் அமெரிக்க மட்டத்தினர் மத்தியில் சம்பந்தனுக்கு பெரிய அங்கீகாரம் நிலவுகின்றது. அத்தகையதொரு அங்கீகாரம் கிடைப்பதற்கு சம்பந்தரின் மிதவாத பின்புலமும் ஒரு முக்கிய காரணமாகும். சம்பந்தன் புலிகளின் ஆதரவாளராக இருந்த ஒருவரா?

சம்பந்தன் புலிகள் தொடர்பில் ஏதேனும் பேசியவுடன் சிலர் அதனை ஒரு பெரிய விடயமாக எடுத்துரைக்க முயல்கின்றனர். ஆனால் இங்கு கவனிக்க வேண்டிய விடயம் - சம்பந்தன் எக்காலத்திலும் புலிகளின் ஆதரவாளராக இருந்தவரல்ல. பிரபா-ரணில் ஒப்பந்த காலத்தில், அவர் புலிகளுக்கு சார்பான ஒருவர் போன்று ஊடகங்களால் சித்தரிக்கப்பட்டார். உண்மையில் அது ஒரு சித்தரிப்பே தவிர, உண்மையல்ல. குறித்த பேச்சுவார்த்தைக் காலத்தில் கூட்டமைப்பு என்னும் அரசியல் கட்சிகளின் கூட்டு, பேச்சுவார்த்தையில் புலிகளின் தலைமைத்துவத்தின் அவசியத்தை வலியுறுத்தியே செயற்பட்டது. அன்றைய சூழலில் புலிகள் தமது இராணுவ பலத்தின் ஊடாக ஒரு தலைமைத்துவத்தை ஏற்படுத்தியிருந்த காரணத்தினால், புலிகளையே முதன்மைப்படுத்த வேண்டிய பொறுப்பு, இலங்கை தீவில் இணக்கமான ஒரு தீர்வை ஏற்படுத்த வேண்டுமென்னும் கரிசனை உள்ளவர்களின் கடமையானது. ஊடகவியலாளர்கள், புத்திஜீவிகள் ஆகிய அனைவரும் புலிகளின் தலைமைத்துவத்திற்கு ஊடாக ஓர் இணக்கத்தைக் காண முடியுமென்று நம்பினர். ஏனெனில் அன்றைய சூழலில், புலிகளை தவிர்த்து வேறு எவரையும் முன்னிலைப்படுத்தக் கூடிய ஏது நிலை காணப்பட்டிருக்கவில்லை. இத்தகையதொரு சந்தர்ப்பத்தில்தான், அன்றைய கூட்டமைப்பின் பாராளுமன்ற குழுவிற்கு சம்பந்தன் தலைமை தாங்க நேர்ந்தது. அன்று சம்பந்தனிடம் இருந்தது சமாதானத்தின் மீதான பற்றுறுதியே அன்றி, புலிகளின் வழிமுறைகள் மீதான நியாயப்படுத்தல் அல்ல. இதனை விளங்கிக் கொண்டால், 2009இற்கு பின்னர் சம்பந்தன் புலிகள் தொடர்பில் வெளிப்படுத்திய கருத்துக்கள் குறித்து ஒருவர் ஆச்சரியம் கொள்ள வேண்டியதில்லை.

இந்த இடத்தில் பிறிதொரு கேள்வி ஒன்றையும் இப்பத்தி முன்னிறுத்த விளைகிறது - இன்றைய சூழலில் புலிகள் குறித்து புகழ்ந்துரைப்பது ஒரு புத்திசாதுர்யமான விடயமாக அமையுமா? இல்லை என்பதே இப்பத்தியின் பதிலாக இருக்கும். ஏன் அவ்வாறு? வரலாறு நெடுகிலும் பல்வேறு அமைப்புக்கள் தோற்றம் பெற்று, ஒரு குறிப்பிட்ட காலத்தில் அதிகாரத்தை தன்வசப்படுத்தி அழிவுற்றிருக்கின்றன. இவ்வாறு அழிவுற்ற அமைப்புக்களிலிருந்து அடுத்த தலைமுறை படிப்பினைகளை பெற முடியுமே தவிர, போதனைகளை பெற முடியாது. இந்த வகையில் நோக்கினால், புலிகளை முதன்மைப்படுத்தி, அரசியலை செய்யலாம் என்போர் மீண்டும் தமிழ் சமுதாயத்தை பழைய பாதைக்கு இட்டுச் செல்ல முயல்வோராகவே கணிக்கப்பட வேண்டியவர்களாவர். சிறிதரனின் பேச்சும் அத்தகைய ஒன்றுதான். இன்றைய உலக ஒழுங்கின் சிருஸ்டி கர்த்தாக்கள் என்போர், சம்பந்தன் போன்றவர்களை செவிமடுக்க விரும்புவார்களேயன்றி, சிறிதரன் போன்றவர்களை அல்ல.

http://www.ponguthamil.com/shownewscontent.aspx?sectionid=10&contentid=e4fc6561-57c5-4e40-83d4-67c7082bf44c

யதீந்திரா அரிவரிப்பிள்ளைகளை சிண்டு முடிவது போல அப்பவித்தனமான அரசியல் எழுதுகிறார். பலே தமாஸ்தான்

:lol:  :lol:  :lol:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.