Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

தமிழ்த்தேசிய கூட்டமைப்பு: பதிவும் பின்னணியும் செல்வரட்னம் சிறிதரன்:-

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ்த்தேசிய கூட்டமைப்பைப் பதிவு செய்ய வேண்டும் என்று நீண்டகாலமாகவே வலியுறுத்தப்பட்டு வந்தது. ஆயினும், தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற குழு கூட்டத்திலும்சரி, தமிழ்த்தேசிய ஏனைய கூட்டங்களிலும்சரி, இந்த கோரிக்கைக்கு முறையான வரவேற்பு கிடைக்கவில்லை. வற்புறுத்தலின் காரணமாக ஆரம்ப நடவடிக்கைகள் எடுக்கப்பட்டதேயொழிய உளப்பூர்வமான முயற்சியாக அது மேற்கொள்ளப்படவில்லை. இதன் காரணமாகவே பதிவு விவகாரம் இழுபறி நிலையில் இருந்து வந்தது.

இந்த இழுபறி நிலைமையில் இப்போது மாற்றம் ஏற்பட்டிருப்பதைக் காண முடிகின்றது. குறிப்பாக திருகோணமலையில் நடைபெற்ற தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் இதுபற்றி விவாதிக்கப்பட்டு, பதிவு விடயங்களைக் கையாள்வதற்கான குழுவொன்றும் நியமிக்கப்பட்டுள்ளது.

தமிழ்த்தேசிய கூட்டமைப்பைப் பதிவு செய்ய வேண்டும் என்ற கோரிக்கை தேர்தல் காலங்களில் உரத்த குரலில் எழுந்திருந்ததையும் காணக் கூடியதாக இருக்கின்றது.

தமிழ்த்தேசிய கூட்டமைப்பில் பல கட்சிகள் இணைந்துள்ள போதிலும், கூட்டமைப்பின் தலைமைத்துவத்தையும் செயல்படு விசையையும் தமிழரசுக் கட்சியே கொண்டிருக்கின்றது, அத்துடன் தமிழ்த்தேசிய கூட்டமைப்புக்கென்று தனியான ஒரு சின்னம் இல்லாத காரணத்தினால் தமிழரசுக் கட்சியின் வீட்டுச் சின்னமே கூட்டமைப்பின் சின்னமாகப் பயன்படுத்தப்பட்டு வருகின்றது.

எனவே, தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் அதிகாரபூர்வமான தொடர்புகள் அனைத்தும், தமிழரசுக் கட்சியினால், குறிப்பாக அதன் செயலாளரினால் மேற்கொள்ளப்பட்டு வந்தது.

தேர்தலில் போட்டியிடுவதற்கான வேட்பாளர் பட்டியலில் இடம்பெறுபவர்களைத் தீர்மானிக்கும் பொறுப்பும், அதனை அங்கீகரிக்கின்ற பொறுப்பும் தமிரசுக் கட்சியையே சார்ந்திருக்கின்றது. இதனால், வேட்பாளர்களைப் பகிர்ந்து கொள்வதிலும் பல்வேறு சிக்கல்கள் எழுந்திருந்தன.

கூட்டமைப்பின் தலைமைக்கட்சி என்ற வகையில் வேட்பாளர் பட்டியலில் கூடிய எண்ணிக்கையான வேட்பாளர்களை தமிழரசுக்கட்சியே பெற்று வந்தது. வேட்பாளர்கள் தேர்தலில் தெரிவு செய்யப்படுவார்களா என்பதற்கு அப்பால், அந்தக் கட்சி;யினால் நியமிக்கப்படும் வேட்பாளர்கள் அதிகமாக இருக்க வேண்டும் என்ற நிலைப்பாடு தொடர்ந்து கடைப்பிடிக்கப்பட்டு வந்துள்ளது. கடைப்பிடிக்கப்பட்டு வருகின்றது. இதன் காரணமாக வேட்பாளர் பங்கீட்டு வேளைகளில் காரசாரமான கருத்து மோதல்கள் எழுவதும் வழமையாகியிருக்கின்றது. கூட்டமைப்பு என்ற வகையில் தேர்தல் காலங்களில் வேட்பாளர்களை சமமாகப் பங்கிடும் பக்குவம் ஏற்பட்டிருக்கவில்லை. அத்துடன், கள நி;லைமைகளைக் கருத்திற் கொண்டு விட்டுக் கொடுத்துச் செயற்படுகின்ற போக்கும் கூட்டமைப்பின் தலைமையிடம் கிடையாது என்ற விமர்சனமும் இருக்கின்றது.

களநிலைமைகள்

இவ்வறான ஒரு சூழ்நிலையில் தமிழ்த்தேசிய கூட்டமைப்பைப் பதவு செய்ய வேண்டும் என்ற முடிவுக்கு கூட்டமைப்பின் தலைமை – குறிப்பாக தமிழரசுக் கட்சியினர் இணங்கி வருவதற்கு பல காரணங்கள் இருப்பதாகச் சொல்லப்படுகின்றது.  தமிழரசுக் கட்சிக்கு எதிராக சிங்களக் கடும்போக்காளர்கள் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள வழக்கு அவற்றில் முக்கிய காரணமாகப் பேசப்படுகின்றது.

இணைந்திருந்த வடக்கையும் கிழக்கையும் இருவேறு மாகாணங்களாகப் பிரிப்பதற்கு, நீதிமன்றதத்தில் பதிவு செய்யப்பட்டிருந்த வழக்கு ஒன்றே முக்கிய காரணமாகியது. பதின் மூன்றாவது அரசியலமைப்புத் திருத்தச் சட்டத்தைக் கொண்டு வந்த இலங்கை இந்திய ஒப்பந்தத்தின் பெறுபேறாக, இந்த இணைப்பு உறுதி செய்யப்பட்டிருந்தது. இந்த இரண்டு மாகாணங்களையும் பிரிப்பதாயின், சர்வஜன வாக்கெடுப்பி;ன் மூலம் அந்தப் பிரதேசத்து பொதுமக்களின் கருத்தறியப்பட்டு, அதற்கமைவாகச் செயற்பட வேண்டும் என்ற நிபந்தனை விதிக்கப்பட்டிருந்தது. ஆயினும், வடக்கும் கிழக்கும் இரண்டு வேவ்வேறு மாகாணங்களாகப் பிரிக்கப்படுவதற்கு இந்த இணைப்பு குறித்து தாக்கல் செய்யப்பட்டிருந்த வழக்கின் தீர்ப்பே வழி சமைத்திருந்தது.

தமிழரசுக் கட்சிக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கும் இத்தகைய பாரதூரமான விளைவை ஏற்படுத்திவிடுமோ என்ற அச்ச உணர்வும் இப்போது எழுந்திருக்கின்றது. இந்த வழக்கின் மூலம், தற்செயலாக, தமிழரசுக் கட்சிக்குப் பாதிப்பு ஏற்பட்டால், தமிழரசுக் கட்சியின் தலைமைத்துவத்தில் உள்ள தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் செயற்பாடுகள் மோசமான நெருக்கடிகளுக்கு ஆளாக நேரிடும்.

எனவே இத்தகைய ஒரு நிலைமைக்குத் தங்களைத் தயார்ப்படுத்திக் கொள்ள வேண்டிய தேவை தமிழரசுக் கட்சிக்கும், அதனைத் தலைமைக் கட்சியாக ஏற்றுக்கொண்டுள்ள தமிழ்த்தேசிய கூட்டமைப்புக்கும் இப்போது ஏற்பட்டிருக்கின்றது, இதன் காரணமாகவே, நீண்டகாலமாகப் பறந்தள்ளப்பட்டு வந்த தமிழ்த்தேசிய கூட்டமைப்பைப் பதிவு செய்யும் நடவடிக்கையில் அதிரடியாக முடிவெடுக்கப்பட்டு, அது தொடர்பான செயற்பாடுகளை முன்னெடுப்பதற்கான குழு நியமிக்கப்பட்டிருக்கின்றது.   

தமிழரசுக் கட்சிக்கு ஏதேனும் சிக்கல் எற்படுமேயானால், தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் தேர்தல் சின்னமும், தமிழரசுக் கட்சியின் தனித்துவமாக கட்சிச் சின்னமாகிய வீட்டுச் சின்னத்தைப் பயன்படுத்துவதிலும் நெருக்கடி நிலைமை ஏற்படலாம். ஆகவே, தமிழ்த்தேசிய கூட்டமைப்பைப் பதிவு செய்வதாயின், அதற்கென ஒரு சின்னத்தைத் தேடிப்பிடிக்க வேண்டும். அல்லது உருவாக்க வேண்டும். இது முக்கியமானது. அத்துடன் அதற்னெ ஒரு யாப்பு தயாரிக்க வேண்டும்.

யாப்பு ஒன்றைத் தயாரிப்பதற்கு முன்னதாக,, தமிழ்த்தேசிய கூட்டமைப்பில் இணைந்துள்ள கட்சிகள் எத்தனை, என்னென்ன கட்சி;கள் இருக்கின்றன என்ற கேள்வி இயல்பாகவே எழுகின்றது. திருகோணமலையில் நடைபெற்ற கூட்டத்தில், கூட்டமைப்பைப் பதிவ செய்வது தொடர்பிலான விவாதத்தின்போது, இந்தக் கேள்வி எழுப்பப்பட்டிருக்கின்றது. யார் யாரெல்லாம் கூட்டமைப்பில் இருக்கின்றார்கள் என்பதைத் தீர்மானித்ததன் பின்பே அதனைப் பதிவு செய்வது பற்றி சிந்திக்க வேண்டும் என்று அப்போது சுட்டிக்காட்டப்பட்டிருந்தது.

இதற்கு காரணம் இல்லாமலில்லை. தமிழ்த்தேசிய கூட்டமைப்பில், தமிழரசுக் கட்சி, ஈபிஆர்எல்எவ், டெலோ, புளொட், தமிழர் விடுதலைக் கூட்டணி ஆகிய ஐந்து கட்சிகள் இணைந்திருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ள போதிலும், அண்மைக்காலமாக தமிழர் விடுதலைக் கூட்டணி இந்தக் கூட்டமைப்பில் இருந்து ஒதுங்கியிருக்கின்றது. அல்லது ஒதுக்கப்பட்டிருக்கின்றது. கூட்டமைப்பில் இருந்து தமிழர் விடுதலைக் கூட்டணி தானே ஒதுங்கிக் கொண்டதா அல்லது ஒதுக்கப்பட்டிருக்கின்றதா என்பது ஆய்வுக்குரியது. விவாதத்திற்கும் உரியது. அது தனியாக நோக்கப்பட வேண்டிய ஒரு விடயம். இங்கு எமது கவனம் தமிழ்த்தேசிய கூட்டமைப்பைப் பதிவு செய்வது பற்றியதே. இருப்பினும்,  கூட்டமைப்பில் யார் யார் இருக்கின்றார்கள் என்பது பற்றி பார்ப்பதை விடுத்து, அதனைப் பதிவு செய்வதற்கான நடவடிக்கை பற்றி முடிவெடுக்க வேண்டும் என்று சுட்டிக்காட்டப்பட்டதையடுத்தே, அதற்கான குழு நியமிக்கப்பட்டது.

மற்றுமொரு காரணம்

தமிழ்த்தேசிய கூட்டமைப்பு தேர்தல் திணைக்களத்தின் அங்கீகாரத்தைப் பெறாத ஒரு கட்சியாக இருந்த போதிலும், மற்றவர்கள் வியந்து நோக்கும் அளவுக்கு, தமிழ் மக்கள் மத்தியில் செல்வாக்கையும், ஆதரவையும் அது பெற்றுள்ளது. தேர்தல் ஒன்றில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் பெயரில் தும்புதடி யொன்றை வேட்பாளாராக வைத்தாலும்கூட, அதற்கு மக்கள் வாக்களிப்பார்கள் என்று முன்னாள் தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் மட்டக்களப்பு பிரதேச நாடாளுமன்ற உறுப்பினராகிய தங்கேஸ்வரி கூறியிருந்தார். இதனை அவர் தனது அரசியல் அனுபவத்தில் நேரடியாகக் கண்டு, அனுபவி;த்த பின்பே தெரிவித்திருந்தார். கூட்டமைப்பில் இருந்து விலகி, அரச தரப்பில் இணைந்து போட்டியிட்டபோது, தேர்தலில் அவரால் வெற்றி பெற முடியவில்லை.  

எனவே, சட்ட ரீதியாகச் சொந்தம் கொண்டாட முடியாத நிலையில் உள்ள தமிழ்த்தேசிய கூட்டமைப்பைக் கவர்ந்துவிட வேண்டும் என்பதற்கான முயற்சிகளும் பல தரப்பினரால் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன.

நடந்து முடிந்த மாகாண சபைத் தேர்தலில் இரட்டை இலைச் சின்னத்தில் போட்டியிட்டிருந்த சகாதேவன்கூட, தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் பெயரைத் தனது தேர்தல் பிரசாரத்தின்போது பயன்படுத்தியிருந்தார். அவர் தனது தேர்தல் பரப்புரைக்கான பதாதையொன்றி;ல் தனது உருப்படத்துக்கருகில் தமிழ்த்தேசிய கூட்டமைப்பு என்ற பெயரைப் பெரிய எழுத்துக்களில் பொறித்து, யாழ்ப்பாணத்தில் கட்டியிருந்தார். மேலோட்டமாகப் பார்ப்பவர்களுக்கு அவர் தமிழ்த்தேசிய கூட்டமைப்பி;ல் போட்டியிடுவதாகவே தெரியும் அளவிற்கு அது அமைந்திருந்தது. இது குறித்து தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும், தமிழரசுக் கட்சியின் செயலாளருமாகிய மாவை சேனாதிராஜா தேர்தல் ஆணையாளரின் கவனத்திற்குக் கொண்டு வந்ததையடுத்து, கூட்டமைப்பின் பெயரை அவ்வாறு பயன்படுத்த முடியாது என்று தேர்தல் ஆணையாளர் சகாதேவனுக்கு அறிவுறுத்தியிருந்ததாகத் தகவல்.

இந்த வகையில் தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் பெயரில் கூட்டமைப்பைச் சேராத கட்சிகளைச் சேர்ந்தவர்கள், தேர்தல் ஆணையகத்தில் தமது கட்சியைப் பதிவு செய்வதற்கான முயற்சி;களை மேற்கொண்டிருந்தார்கள். இப்போதும் முயற்களை முன்னெடுத்திருக்கி;ன்றார்கள். அது மட்டுமல்லாமல், சில சிங்கள அரசியல் கட்சிகளும்கூட, கூட்டமைப்பின் பெயரில் பதிவு செய்வதற்கு ஆர்வம் காட்டியிருப்பதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

அதேநேரம், தமிழ்த்தேசிய கூட்டமைப்பைப் பதிவு செய்வதற்கு தமிழரசுக் கட்சிக்கு உரிமை கிடையாது என்று தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகம் வீ.ஆனந்தசங்கரி தேர்தல் ஆணையாளருக்குக் கடிதம் எழுதியிருக்கின்றார். தமிழ்க்கட்சிகள் கூட்டாகச் செயற்பட்ட காலத்தில் தமிழரசுக் கட்சி அந்தக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கவில்லை என்றும், தமிழ்த்தேசிய கூட்டமைப்பைப் பதிவு செய்வதற்கான உரிமை தமிழர் விடுதலைக் கூட்டணிக்கே இருக்கி;ன்றது என்றும் ஆனந்தசங்கரி அந்தக் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

தமிழ்த்தேசிய கூட்டமைப்பைப் பதிவு செய்வது தொடர்பில் தேர்தல் ஆணையகத்தில் கூட்டமைப்பினர் தொடர்புகளை மேற்கொண்டிருக்கின்றார்கள். இதன் காரணமாக, கூட்டமைப்பை, கூடிய வி;ரைவில் பதிவு செய்வதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையாளர் தமிழரசுக் கட்சியின் செயலாளராகிய மாவை சேனாதிராஜாவுக்கு நினைவூட்டியுள்ளார். கூட்டமைப்பின் பெயரில் பதிவ செய்வதற்கு, வேறு பலரும் ஆர்வம் காட்டி, தம்முடன் தொடர்புகொண்டிருப்பதனால், தமிழ்த்தேசிய கூட்டமைப்பினருக்கு அதில் ஆர்வமில்லை எனக் கருதி, வேறு யாருக்காவது அதனைக் கொடுக்க நேரிடும் என்று கூறியிருப்பதாகத் தெரிகின்றது. அரசியல் கட்சிகளின் முக்கியஸ்தர்கள் கலந்து கொண்ட ஒரு கூட்டத்தி;லேயே இதனை, தேர்தல் ஆணையாளர் தெரிவித்திருப்பதாகவும் சொல்லப்படுகின்றது.

தமிழ்த்தேசிய கூட்டமைப்பைப் பிளவுபடுத்துவதற்கு அரசு முயற்சிப்பதாக கூட்டமைப்பின் தலைவர் ஆர்.சம்பந்தன் திருகோணமலை கூட்டத்தில் கூறியிருந்ததும் குறிப்பிடத்தக்கது.  இதுவும் கூட, தமிழ்த்தேசிய கூட்டமைப்பை உடனடியாகப் பதிவு செய்வதற்கான முயற்சிகளைத் தூண்டியிருப்பதாகக் கூறலாம்.

தமிழரசுக் கட்சிக்கு நெருக்கடி ஏற்படுமேயானால், அந்தக் கட்சியின் சின்னத்தைப் பயன்படுத்துவதிலும் சிக்கல்கள் நேரிடலாம் என்பதால், தமிழர் விடுதலைக் கூட்டணியைப் பயன்படுத்தினால் என்ன என்ற ஒரு யோசனையும் கூட்டமைப்பின் தலைமைக்கு இருப்பதாகத் தெரிகின்றது,

இது குறித்து ஆனந்தசங்கரியிடம் பேச்சுக்கள் நடத்துவதற்கான பூர்வாங்க நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டிருப்பதாகவம் தகவல் கசிந்திருக்கின்றது. ஆனந்தசங்கரியுடன் நேரடியாகத் தொடர்பு கொள்வதற்கான பொறுப்பு இரண்டு முக்கியஸ்தர்களிடம் கையளிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது.

கூட்டமைப்பின் கட்சிகளுக்கிடையிலான செற்பாடுகள்

ஐந்து கட்சிகளின் கூட்டிணைவே தமிழ்த்தேசிய கூட்டமைப்பு என்று கூறப்பட்டாலும், பெரும்பான்மையான முக்கிய முடிவுகள் கூட்டமைப்பின் நாடாளுமன்ற குழு கூட்டத்திலேயே எடுக்கப்படுகின்றன. ஐந்து கட்சிகளின் தலைவர்கள் முக்கிய விடயங்கள்பற்றி பேச்சுக்கள் நடத்தியதாகத் தெரியவில்லை. இதனால் கூட்டமைப்பின் முக்கிய முடிவுகள் என்பது நாடாளுமன்ற குழு கூட்டத்தின் முடிவுகளாகவே பார்க்கப்படுகின்றது,

முக்கிய விடயங்கள் குறித்து தம்முடன் கலந்தாலோசிக்கப்படுவதில்லை என்ற குறை புளொட் அமைப்புக்கும், தமிழர் விடுதலைக் கூட்டணிக்கும் நீண்டகாலமாகவே இருந்து வருகின்றது.

கூட்டமைப்பு என்பது தமிழ் மக்களின் அசைக்க முடியாத அரசியல் நம்பிக்கை. அந்த நம்பிக்கை காரணமாக கூட்டமைப்புக்கு வெளியில் இருந்து தேர்தலில் போட்டியிடுபவர்கள் வெற்றிபெறுவதென்பது இயலாத காரியம் என்பது நடைமுறை உண்மையாகும். இதன் காரணமாக தொடர்ந்து அரசியல் செய்ய விரும்புபவர்கள் கூட்டமைப்பின் நிழலில் இருப்பதையே விரும்புகின்றார்கள். இதன் காரணமாக கூட்டமைப்பின் தலைமை மற்றவர்களுடன் இணைந்து செயற்படாத வகையில் காரியங்களை முன்னெடுத்தாலும்கூட, அதனைப் பெரிதுபடுத்துவது கிடையாது. அதேநேரம் தலைமையைப் பகைத்துக் கொண்டு அரசியலில் இருந்து புறந்தள்ளப்படுவதையும் அவர்கள் விரும்புவதில்லை.

முக்கியமான கூட்டங்களில் அல்லது சந்திப்பக்களில் கலந்து கொள்கின்ற கூட்டமைப்பினர் எல்லோரும் கருத்துக்களை முன்வைப்பதில்லை. பலர் நாகாப்பது நல்லது என்ற வகையில் அமைதியாக இருப்பதையும், தலைமை ஏன்ன சொன்னாலும் அது சரி என்று ஏற்றுக் கொள்வதையும் காண முடிகின்றது. ஈபிஆர்எல்எவ் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இதற்கு விதிவிலக்காக செயற்பட்டு வருவதை அவதானிக்கலாம் முக்கியமான விடயங்களில் அவர்கள் தமது கருத்துக்களை ஆணித்தரமாக முன்வைத்து, அது குறித்து விவாதத்தில் ஈடுபடுவதையும் அனைவரும் அறிவார்கள்.

அப்படியிருந்தும்கூட, சில முக்கியமான விடயங்களில் கூட்டமைப்பின் தலைமயில் உள்ள முக்கியஸ்தர்கள் தங்களுக்குள்ளேயே முடிவுகளை மேற்கொண்டு செயற்பட்டு வருவதையும் அறிய முடிகின்றது. குறிப்பாக ஐநா மனித உரிமைப் பேரவை அமர்வின்போது, ஜெனிவாவுக்கு யார் யாரெல்லாம் செல்வது என்பது பற்றிய முடிவான தீர்மானம் எதுவும் கூட்டமைப்பிடம் இருக்கவில்லை. இதன் காரணமாக அங்கு நடைபெற்ற முக்கியமான சந்திப்பொன்றில், அந்த நேரம் அங்கிருந்த நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமச்சந்திரன்கூட கலந்து கொள்ளவில்லை. அந்தச் சந்திப்பில் யார் யார் கலந்து கொள்வது என்பது பற்றிய பெயர் விபரங்கள் ஏற்கனவே கொடுக்கப்பட்டுவிட்டதனால், சுரேஸ் பிரேமச்சந்திரனை அதில் சேர்த்துக்கொள்ள முடியவில்லை என்று காரணம் கூறப்பட்டிருந்தது.

அதேநேரம், கூட்டமைப்பின் முக்கியஸ்தர்கள் எவருக்கும் முன்கூட்டியே தெரியாத வகையில் இளம் சட்டத்தரணி ஒருவர் அந்தச் சந்திப்பில் கலந்து கொண்டிருந்ததாகத் தெரிவிக்கப்பட்டிருந்தது. போரினால் பாதிக்கப்பட்ட மக்களுடைய பிரச்சினைகள் தொடர்பாக பேசப்பட்ட ஒரு சந்திப்பில் அந்த மக்களால் தெரிவு செய்யப்பட்ட மற்றும் ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் இடம்பெறாமல் வெளியார் என்று கூறத்தக்க வகையில் ஒருவர் எப்படி கலந்து கொள்ள முடியும் என்ற வினா அப்போது எழுப்பப்பட்டிருந்தது.

இதேபோன்று தென்னாபிரிக்காவுக்குச் சென்றிருந்த கூட்டமைப்பின் குழுவில் இடம்பெறாத ஒருவர் அங்கு நடைபெற்ற சந்திப்புக்களில் கலந்து கொண்டிருந்தது பற்றியும் சர்ச்சைகள் எழுந்திருந்தன. தென்னாபிரிக்காவில் விமான நிலையத்தைச் சென்றடைந்தபோது, அங்கு வந்து இணைந்து கொண்ட பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்த ஒருவர், தமிழ்த்தேசிய கூட்டமைப்பு குழுவினருக்கு அறிமுகப்படுத்தப்பட்டார். அவரும் அங்கு நடைபெறுகின்ற சந்திப்புக்கள் கூட்டங்களில் கலந்து கொள்வார் என்றும் தெரிவிக்கப்பட்டதாம். அதேபோன்று அங்கு நடைபெற்ற அனைத்துச் சந்திப்புக்களிலும் அவர் கலந்து கொண்டிருந்தார் என்றும் கருத்துக்கள் எதனையும் அவர் முன்வைக்காமல் பார்வையாளராகவே பங்கேற்றிருந்தார் என்றும் தெரிவிக்கப்பட்டது,

தென்னாபிரிக்காவின் உதவியோடு இனப்பிரச்சினைக்கு ஓர் அரசியல் தீர்வு காண்பதற்கான முன் முயற்சியாகவே தமிழ்த்தேசிய கூட்டமைப்பினரின் தென்னாபிரிக்க விஜயம் அமைந்திருந்தது. இந்த விஜயம் ஏன் மேற்கொள்ளப்படுகின்றது, யார் யாரெல்லாம் கலந்து கொள்ளவுள்ளார்கள் என்பதுபற்றிய விபரங்களை பிரச்சினையின் முக்கிய பங்காளிகளான பொதுமக்கள் அறிந்திருக்க வேண்டும். பேச்சுவார்த்தைக்குச் செல்வதற்கு முன்னர் அதனை வெளிப்படுத்துவது இராஜதந்திர ரீதியில் உசிதமாக இருக்காமலிருந்தாலும்கூட, அங்கு போய்வந்ததன் பின்னராவது அதுபற்றிய விபரங்கள் வெளிப்படுத்தப்பட்டிருக்க வேண்டும். ஆனால் அவ்வாறு வெளிப்படுத்தப்படவில்லை.  

திருகோணமலை கூட்டத்தில் இந்த விடயம் பிரஸ்தாபிக்கப்பட்டபோது, அரசியல் தீர்வு விடயத்தில் அனுபவம் வாய்ந்த ஒருவரே அவ்வாறு அழைத்துச் செல்லப்பட்டிருந்ததாகத் தெரிவிக்கப்பட்டதாம். அப்போது கருத்துரைத்த நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா, இந்த விடயங்களில் விஷயமறிந்தவர்கள், தகுதியானவர்கள் பலர் எம்மிடையே இருக்கின்றார்கள். அதேபோன்று புலம் பெயர் தமிழர்கள் மத்தியிலும் இருக்கின்றார்கள். அவர்களில் யாருக்காவது அந்த இடம் வழங்கப்பட்டிருக்க வேண்டும் என்று குறிப்பிட்டிருக்கின்றார்.

யார் குத்தினாலும் அரிசியாகினால் சரி என்ற மனப்பாங்கில் தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு அரசியல் தீர்வு காணும் விடயத்தில் நடந்து கொள்ள முடியாது.

பல்வேறு எதிர்ப்புக்கள், நெருக்கடிகள், அச்சுறுத்தல்கள், அழுத்தங்களுக்கு மத்தியிலும், தாங்கள் தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் பின்னாலேயே அணி திரண்டிருக்கின்றோம் என்பதைத் தமது வாக்களிப்பின் மூலம் வெளிப்படுத்திய தமிழ் மக்கள் ஒருபோதும் இதனை விரும்பமாட்டார்கள். அனுமதிக்கவும் மாட்டார்கள்.

தமது தலைவர்கள் தமக்கு நம்பிக்கையானவர்கள் தமது பிரச்சினைகளைத் தீர்ப்பதில் ஈடுபட வேண்டும் என்பதையே அவர்கள் தமிழ்த்தேசிய கூட்டமைப்புக்கு வாக்களித்திருப்பதன் மூலம் வெளிப்படுத்தி யிருக்கின்றார்கள்

. எனவே, அவர்களுடைய நம்பிக்கையையும், விசுவாசத்தையும் பேணிப் பாதுகாக்கத் தக்க வகையில் தமிழ்த்தேசிய கூட்டமைப்பு நடந்து கொள்ள வேண்டும்.

கூட்டமைப்பினர் மேற்கொள்கின்ற நடவடிக்கைகள் அத்தனையும் தமிழ் மக்களுக்கு நம்பிக்கையூட்டத்தக்கதாக இருக்க வேண்டும். அவர்கள் நம்பிக்கையிழக்கும் வகையிலும், அவர்கள் சந்தேகம் கொள்ளும் வகையிலும் நடந்து கொள்வது பாதகமான விளைவுகளையே ஏற்படுத்தும்.

மூன்றாவது தமிழ் அரசியல் சக்தியொன்றிற்கான அவசியம் எழுந்துள்ளது என்று வடக்குகிழக்கு மாகாண சபையின் முன்னாள் முதலமைச்சர் வரதராஜப் பெருமாள் கூறியிருக்கின்றார். வடக்குகிழக்கு மாகாண சபையில் இருந்து வெளியேறிய நாள் முதல் அவர் இந்தியாவின் பாதுகாப்பில் இருந்து வருகின்றார்.  தமிழ்த்தேசிய கூட்டமைப்பை இறுக்கமானதோர் அரசியல் அமைப்பாகக் கட்டியெழுப்ப வேண்டிய தேவை எழுந்திருக்கின்ற ஒரு முக்கியமான சந்தர்ப்பத்தில் அவருடைய இந்த கருத்து  அங்கிருந்து வெளிப்பட்டிருக்கின்றது.

அடுத்த வருடம் பொதுத்தேர்தல் நடைபெறலாம் என்ற அரசியல் நிலைமையைக் கருத்திற்கொண்டு கூட்டமைப்பினரும் அதற்கான ஆயத்த பணிகளை முன்னெடுத்திருக்கின்றார்கள். எனவே இந்தச் சூழ்நிலையும்கூட, கூட்டமைப்பைப் பலமான ஒரு சக்தியாக வைத்திருக்க வேண்டிய தேவையை ஏற்படுத்தி;யிருக்கின்றது.

கூட்டமைப்பைப் பதிவு செய்வதில் பல்வேறு நிலைமைகள் இருக்கின்றன என்பதையும் மனதில் கொண்டு அதற்கென அமைக்கப்பட்டுள்ள குழு பொறுப்போடு செயற்பட வேண்டியது காலத்தின் தேவையாக உள்ளது. அந்தக் குழுவினர் அதற்கேற்ற வகையில் செயற்படுவார்களா?

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.