Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இலங்கை அரசாங்கத்தின் செயற்பாட்டு உத்தியாக இராணுவப் பிரசன்னம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கை அரசாங்கத்தின் செயற்பாட்டு உத்தியாக இராணுவப் பிரசன்னம் – வீரகேசரி!

 

 

army-300x168.jpgஎங்கும் இராணுவம், எதிலும் இராணுவம் என்பதுதான் இலங்கை அரசாங்கத்தின் செயற்பாட்டு உத்தியாக இருக்கின்றது. முப்பது வருடங்களாகத் தொடர்ந்திருந்த யுத்தத்தை இந்த அரசாங்கம் வெற்றிகரமாக முடிவுக்குக் கொண்டு வந்துள்ளது. அது ஒரு பெரிய சாதனையாகப் பதிவாகியிருக்கின்றது. அந்த சாதனைமிக்க யுத்த வெற்றிக்காகப் பயன்படுத்தப்பட்ட இராணுவத்தையும், அதன் புலனாய்வுச் செயற்பாடுகளையும் அரசாங்கம் தனது சுயலாப அரசியல் செயற்பாடுகளுக்கு முழு அளவில் தந்திரோபாய ரீதியில் பயன்படுத்தி வருவதைக் காண முடிகின்றது. 

உள்ளுரிலும் சர்வதேச மட்டத்திலும், இந்த நடவடிக்கை பரந்த அளவில் மேற்கொள்ளபட்டு வருகின்றது. இதன் காரணமாகவே எங்கும் இராணுவம், எதிலும் இராணுவம் என்ற நிலைமை ஏற்பட்டிருக்கின்றது என்று குறிப்பிட வேண்டியேற்பட்டுள்ளது.

யுத்தம் முடிவடைந்த பின்னர், இராணுவம் யுத்தம் நடைபெற்ற பிரதேசங்களில் இருந்து விலக்கிக் கொள்ளப்பட வேண்டும். யுத்தத்தில் ஈடுபட்டிருந்தவர்கள் இராணுவ சேவையில் இருந்து ஓய்வளிக்கப்பட்டிருக்க வேண்டும். அவர்கள் சாதாரண சிவிலியன்களாக சமூக வாழ்க்கையில் ஈடுபட்டிருக்க வேண்டும். இதற்கான வழிவகைளையே அரசாங்கம் மேற்கொண்டிருக்க வேண்டும். ஆனால் அரசாங்கம் அவ்வாறு செய்யவில்லை. மாறாக இராணுவத்தையும், யுத்தச் செயற்பாடுகளில் தீவிரமாகப் பணியாற்றியவர்களைக் கௌரவிக்கும் வகையிலும், அதேநேரம், அவர்களை தனது அரசியல் நலன்களுக்குப் பயன்படுத்துவதிலும் அது மிகவும் சாதுரியமாக இந்த அரசு செயற்பட்டு வருகின்றது.

யுத்த களத்தில் முன்னணியில் நின்று கடினமாகச் செயற்பட்டிருந்த இராணுவ தளபதிகள் இன்று இராஜதந்திரிகளாக மாற்றப்பட்டிருக்கின்றார்கள். வெளிநாடுகளின் தூதுவர்களாக, ஐநா மன்றத்தின் பிரதிநிதிகளாக நியமிக்கப்பட்டிருக்கின்றார்கள். இறுதி யுத்தத்தின்போது அரச படைகள் மோசமான முறையில் மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டிருந்தன என்ற குற்றச்சாட்டுக்கள் வெளிப்படையாகவே அரசு மீது சுமத்தப்பட்டிருக்கின்றது. இருந்த போதிலும், அந்த காலப்பகுதியில் இராணுவத்தினரை யுத்த பூமியில் வழிநடத்திய இராணுவ தளபதிகளே, அவ்வாறான மனித உரிமை மீறல்கள் எதுவுமே இடம்பெறவில்லை என்று அரசாங்கத்தின் அதிகாரமுள்ள பிரதிநிதிகளாக சர்வதேச அரங்குகளில் வாதாடுவதற்காக நியமிக்கப்பட்டிருக்கின்றார்கள்.

விடுதலைப்புலிகளுக்கு எதிரான யுத்தமானது வெல்ல முடியாத ஒரு யுத்தம் என அநேகமாக எல்லோராலும் கருதப்பட்டு வந்தது. அந்த கருத்தியலை முறியடித்து, சாதுரியமான காய் நகர்த்தல்களின் மூலம், விடுதலைப்புலிகளை யுத்தத்தில் தோற்கடித்து, அந்த அமைப்பை இராணுவ ரீதியாக இந்த அரசாங்கம் அழித்திருக்கின்றது.

இத்தகைய ஒரு வெற்றிக்கு இராணுவத்தின் ஆளணி, அதன் மரபு வழிசார்ந்த செயற்பாடுகளுடன், ஒரு கெரில்லா அமைப்புடனான யுத்தத்தை முறியடிப்பதற்காகப் பயன்படுத்தப்பட்ட உச்ச வலு நிலையிலான தந்திரோபாயமிக்க இராணுவ புலனாய்வுச் செயற்பாடுகளும் அரசாங்கத்திற்குப் பேருதவியாக இருந்தன என்று இராணுவ ஆய்வாளர்கள் கூறியிருக்கின்றனர்.

நன்கு பயிற்றப்பட்ட இராணுவத்தினரை சிறு சிறு குழுக்களாக விடுதலைப்புலிகளின் பிரதேசத்திற்குள் ஊடுருவ விட்டு, அவர்கள் எதிர்பாராத நேரங்களில், எதிர்பாராத இடங்களில்,, எதிர்பாராத இலக்குகள் மீது அதிரடியாக மேற்கொண்ட ஊடுருவல் தாக்குதல்கள் விடுதலைப்புலிகளை பல தடவைகளில் நேரடியாகவும், மறைமுகமாகவும் நிலைகுலையச் செய்திருந்தன என்று அவர்கள் சுட்டிக்காட்டியிருக்கின்றார்கள்.

இதையும்விட, விடுதலைப்புலிகள் தமது ஆளணியைப் பெருக்குவதற்காக கட்டாய ஆட்சேர்ப்பின்போது வீதிகளில் சென்றவர்களையும், கண்ணிலகப்பட்டவர்களையும் படையில் இணைத்துக் கொண்டபோது, படைக்குச் சேர்த்துக் கொள்ளப்படுபவர்களின் சரியான பின்னணி, அவர்களுடைய மனப்போக்கு என்பவற்றைக் கவனத்திற் கொள்ளாமல் மேற்கொண்ட நடவடிக்கையானது, இராணுவம் தனக்கு வேண்டியவர்களை அல்லது தனக்கு உளவு பார்ப்பவர்களைத் தாராளமாக விடுதலைப்புலிகளுடைய அமைப்பினுள் ஊடுருவி கலந்துவிடுவதற்கு உதவியிருந்ததாகவும் அவர்கள் கூறுகின்றார்கள். இவ்வாறான ஊடுருவல் செயற்பாடானது, விடுதலைப்புலிகளின் செயற்பாடுகளைப் பலவீனப்படுத்தவும், அவர்கள் மீது அரச படையினர் தொடர்ச்சியாக அதிரடி தாக்குதல்களை மேற்கொள்வதற்கும் பேதுதவியாக இருந்தது என்பது அவர்களுடைய கூற்றாகும்.

அரசியல் ஊடுருவல் செயற்பாடுகள்

இது எந்த அளவுக்குச் சரியானது என்பது ஆய்வுக்கு உரிய விடயமாக இருந்த போதிலும், எதிரணியினர் பக்கம் ஊடுருவி, காரியங்களை முன்னெடுக்கின்ற பாணியை – உத்தியை அரசாங்கம், யுத்தம் முடிவுக்கு வந்தபின்னர், தனது அரசியல் செயற்பாடுகளில் முன்னெடுத்திருப்பதைக் காண முடிகின்றது.

இந்த வகையில்தான் சர்வதேச மட்டத்தில் இராஜதந்திரிகளாக முன்னாள் இராணுவ தளபதிகள் நியமிக்கப்பட்டிருப்பதை நோக்க வேண்டியிருக்கின்றது. அதேநேரம், முன்னாள் இராணுவ அதிகாரிகள், தளபதிகளை நிர்வாகச் செயற்பாடுகளில் ஈடுபடுவதற்காக அதிகாரிகளாகவும், சில இடங்களில் அரசாங்க அதிபர்களாகவும், மாகாணங்களின் ஆளுனர்களாகவும் அரசாங்கம் நியமித்திருக்கின்றது. வடக்கு கிழக்குப் பிரதேசங்களில் இந்த நடவடிக்கை தீவிரமாக முன்னெடுக்கப்பட்டிருக்கின்றது. அத்துடன், இராணுவத்தைப் பல இடங்களிலும் நிரந்தரமாக நிலைநிறுத்தியிருப்பதுடன், மீள்குடியேற்றம், மீள் கட்டமைப்பு என்ற புனரமைப்பு நடவடிக்கைகளில் இராணுவத்தினரை முக்கிய செயற்பாட்டாளர்களாக அரசாங்கம் மாற்றியிருக்கின்றது. இதன் மூலம் அவர்கள் சிவில் நிர்வாக நடவடிக்கைகளில் பிரித்து ஒதுக்கிச் செயற்பட முடியாத வகையில் முக்கிய பங்காளிகளாகவும், முக்கியமான விடயங்களில் தீர்மானங்கள் எடுப்பதில் முக்கியஸ்தர்களாகவும் மாற்றப்பட்டிருக்கின்றார்கள்.

இத்தகைய இராணுவ அதிகாரிகளுக்கு உதவியாக கிராம சேவை அலுவலர் பிரிவுகளில் அல்லது இராணுவ கட்டளைத் தலைமைகயங்கள் ரீதியாக பிரிக்கப்பட்டுள்ள இராணுவுச் செயற்பாட்டுப் பிரதேசங்களுக்குப் பொறுப்பாக நியமிக்கப்பட்டுள்ள இராணுவ அதிகாரிகள் மற்றும் அவர்களுக்குக் கீழ் பணியாற்றுகின்ற இராணுவத்தினர் மற்றும் புலனாய்வாளர்கள் செயற்பட்டு வருகின்றார்கள்.

தேசிய பாதுகாப்பை உறுதி செய்வதற்கும், பிரதேசங்களில் கிராம மட்டங்களில் குற்றச்செயல்கள் ஏற்படாமல் தடுப்பதற்காகவுமே இவர்கள் – பாதுகாப்பு குழுக்கள் – செயற்படுவதாகக் கூறப்பட்டிருக்கின்றது. அத்துடன் இத்தகைய வலையமைப்பில் பொலிசாரும் இணைக்கப்பட்டு, முக்கியமாக அந்தந்தப் பிரதேசத்தின் அபிவிருத்திச் செயற்பாடுகள், மக்களின் குறைகள் தேவைகளை நிறைவேற்றுதல், அத்துடன் சமூகங்களுக்கிடையிலும், இனங்களுக்கிடையிலும் நல்லிணக்கத்தைம், ஐக்கியத்தையும் உருவாக்குதல் போன்ற செயற்பாடுகளில் இராணுவத்தினரையும், பொலிசாரையும் ஈடுபடுத்தப்பட்டிருப்பதாகவும் அரசாங்கம் கூறி வருகின்றது. ஆனால் உண்மையில் அரசாங்கம் தனது அரசியல் செயற்பாடுகளைத் தான் விரும்பியவாறு முன்னெடுப்பதற்கும், அரசாங்கத்திற்கு எதிராகச் செயற்பட முற்படுபவர்களைத் தொடர்ச்சியாகக் கண்காணித்து, அவர்களின் செய்பாடுகளை முடக்குவதற்குமே, இந்த உத்தியைப் பின்பற்றிச் செயற்பட்டு வருகின்றது.

இந்த உத்தி காரணமாகவே, மீள்குடியேற்றப் பகுதிகளில் உள்ள மக்களின் சமூக ஒன்றுகூடல்கள், கிராமிய மட்டத்திலான கிராம அபிவிருத்திச் சங்கக் கூட்டங்கள், மாதர் அபிவிருத்திச் சங்கங்கள், இளைஞர் குழுக்கள், ஆலுய பரிபாலன குழுக்கள் என்பவற்றின் கூட்டங்கள் அந்தப் பிரதேசத்திற்குரிய இராணுவ பொலிஸ் அதிகாரிகளின் அனுமதி பெற்று நடத்தப்பட வேண்டும் என்ற நடைமுறை கடைப்பிடிக்கப்பட்டு வருகின்றது.

அது மட்டுமல்லாமல் அந்தப் பிரதேசங்களில் மேற்கொள்ளப்படுகின்ற சமூக நிகழ்வுகள், அபி;விருத்திச் செயற்பாடுகள் தொடர்பிலான அரச வைபவங்கள் எதுவாக இருந்தாலும், அந்தந்தப் பிரதேசங்களுக்குப் பொறுப்பான இராணுவ பொலிஸ் அதிகாரிகள் அவற்றில் முக்கியஸ்தர்ளாகக் கலந்து கொள்ளும் விதத்தில், அவர்களையும் விருந்தினர்களாக அழைக்க வேண்டும் என்று கட்டாயப்படுத்தப்பட்டிருக்கின்றது.

மொத்தத்தில் அதன் மூலம், அந்தந்தப் பிரதேசங்களைச் சேர்ந்த இராணுவ பொலிஸ் வலையமைப்பில் உள்ளவர்கள் அரசாங்கத்தின் கண்களாகவே செயற்பட்டு வருகின்றார்கள். அடிமட்டத்தில் யார் யார் வந்து போகின்றார்கள், என்னென்ன நடக்கின்றது, என்ன வகையில் சம்பவங்கள் நடைபெறுகின்றன, என்னென்ன நோக்கத்திற்காக நடைபெறுகின்றன என்பது போன்ற விடயங்களைத் தெட்டத் தெளிவாக அரசாங்கத்தினால் உடனுக்குடன் அறிந்து கொள்வதற்கு இது உதவுகின்றது. உண்மையான அடிமட்ட நிலைமைகளை அறிந்து, தேவையான இடங்களில் தனது அரசியல் செயற்பாடுகளை மக்கள் மத்தியில் முன்னெடுக்கவும், நி;லைமைகள் நேர்மாறாக இருந்தால் அவற்றை முறியடிப்பதற்குத் தேவையான நடவடிக்கைகளை உடனடியாகவே முன்னெடுப்பதற்கும் அரசுக்கு இது உதவியாக இருக்கின்றது.

அரசாங்கத்தின் கொள்கைகளை மக்கள் மத்தியில் பரப்புவதற்கும், அரசுக்கு எதிரான அரசியல் செயற்பாடுகளை முன்னெடுப்பவர்களின் நடவடிக்கைகளைத் தாமதப்படுத்தி வீரியமிழக்கச் செய்வதற்கு, அல்லது அத்தகைய செயற்பாடுகள் அங்கு பெரிய அளவில் இடம்பெறாமல் தடுப்பதற்கு  இந்த நடவடிக்கைகள் அரசாங்கத்திற்குப் பெரிய அளவில் உதவி வருகின்றன என்றால் அது மிகையாகாது.

மீள்குடியேற்றப் பகுதிகளில் அரச கொள்கைகளை ஏற்றுக்கொள்ளாதவர்கள் அல்லது அரச நடவடிக்கைகளை விமர்சனக் கண்ணோட்டத்துடன் கேள்வி எழுப்பி மக்களைத் திசை திருப்புவதற்கு முற்படுகின்ற தமிழ் அரசியல்வாதிகளின் செய்பாடுகள் இதன் வழியாக அரசாங்கத்தினால் மட்டுப்படுத்தப்படுகின்றது. உண்மையான கள நிலைமைகளை அறிந்து அவற்றை வெளிக் கொண்டுவருவதற்கு முயற்சிக்கின்ற ஊடகவியலாளர்கள். தொண்டு நிறுவனங்களைச் சேர்ந்தவர்கள்கூட, இத்தகைய நடவடிக்கைகளின் மூலம் புலனாய்வு பிரிவினரின் மூலம், தொடர்ச்சியாகக் கண்காணிக்கப்படுவதையும் நடைமுறையில் காணக் கூடியதாக இருக்கின்றது.

இத்தகைய ஊடுருவல் நடவடிக்கையின் பயனாகத்தான், காணாமல் போனவர்கள் நடத்துகின்ற அரசுக்கு எதிரான ஆர்ப்பாட்டங்கள், இந்திய வீடமைப்புத் திட்டத்தின் கீழ் அரச ஆதரவாளர்களுக்கு பக்கசார்பான முறையில் இடம்பெற்று வருகின்ற நடவடிக்கைகளுக்கு எதிரான போராட்டங்கள் என்பன இடம்பெறுகையில், அது பற்றிய தகவல்களை தனது ஊடுருவல் வலையமைப்பின் ஊடாக அரசு அறிந்து, அந்தப் போராட்டங்களுக்கு எதிரான – அரசாங்கத்திற்கு ஆதரவான போராட்டங்களை உடனடியாகவே மேடையேற்ற முடிகின்றது. இதனாhல் பொதுமக்கள் மத்தியில் கருத்தியல் ரீதியான ஒரு குழப்ப நிலையை ஏற்படுத்தி அரசாங்கத்தின் நடவடிக்கைகள் சரியானவை என்று அவர்களை நம்பச் செய்யவும் அரசாங்கத்தினால் முடிகின்றது.

விடுதலைப்புலிகளுக்கு எதிரான யுத்தத்தை முடிவுக்குக் கொண்டு வந்ததன் பின்னர் இனப்பிரச்சினைக்கு ஓர் அரசியல் தீர்வு அவசியமில்லை என்ற நிலைப்பாட்டை அரசாங்கம் பல்வேறு வழிகளில் வலியுறுத்;தி வருகின்றது. நாட்டில் இனப்பிரச்சினை என்ற ஒன்று கிடையாது. இருப்பதெல்லாம் பொருளாதாரப் பிரச்சினையே என்று அரசாங்கம் வாதாடி வருகின்றது. இதற்கான பிரசாரங்களும் பெரிய அளவில் முன்னெடுக்கப்பட்டிருக்கின்றன.

இதற்கு முண்டு கொடுக்கும் வகையில் அரச தரப்பு அரசியல்வாதிகளும் அரசியல் பிரசார நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றார்கள். அரசாங்கத்தின் இத்தகைய நுணுக்கமான அரசியல் செயற்பாட்டு நடவடிக்கைகள் சிறுபான்மை இன மக்களாகிய தமிழ் மக்கள் சார்ந்த விடயங்களில் மட்டும் மேற்கொள்ளப்படவில்லை. இது மற்றுமொரு சிறுபான்மை இனத்தவராகிய முஸ்லிம் மக்களை பொருளாதார ரீதியாக அடக்கியொடுக்குவதற்கும் இராஜதந்திர ரீதியில் பயன்படுத்தப்பட்டு வருவதையும் அவதானிக்கக் கூடியதாக இருக்கின்றது.

முஸ்லிம்கள் பௌத்தர்களை மதமாற்றம் செய்து பௌத்த மதத்தை இல்லாமல் செய்வதற்காக முயன்று வருகின்றார்கள். இதற்கான மறைமுகச் செய்பாடுகளில் அவர்கள் ஈடுபட்டு வருகின்றார்கள் என்பது பௌத்த தீவிரவாத அமைப்புக்களின் பொதுவான குற்றச்சாட்டாகும். இதன் காரணமாகவே முஸ்லிம் அடிப்படைவாதிகள் செயற்பட்டு வருகி;ன்றார்கள் எனக் கூறி, அவர்களுடைய செயற்பாடுகளைக் கட்டுப்படுத்த வேண்டும் என்று தாங்கள் போராடி வருவதாக அவர்கள் கூறுகின்றார்கள். குறிப்பாக பொதுபலசேனாவின் செயலாளராகிய கலகொட அத்தே ஞானசார தேரர் இதனை அடிக்கடி கூறி வருகின்றார்.

முஸ்லிம்களுக்கு எதிரான மதவிரோதப் பேச்சுக்களிலும்சரி, செயற்பாடுகளிலும் சரி அவரே முன்னிலை வகிக்கின்றார். இனங்கள் மற்றும் சமயங்களுக்கிடையில் ஐக்கியத்தையும் சமாதானத்தையும் உருவாக்குவதற்காக நிறுவப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகின்ற மிதவாத அமைப்பாகிய பொது பலசேனா அமைப்பின் தலைவரும் மகியங்கனை பிரதேச சபை உறுப்பினருமாகிய வட்டரக்க விஜித்த தேரரை, பகிரங்கமாக தகாத வார்த்தைகளினால் பொது இடத்தில் வைத்து ஏசி, அவர் பௌத்தர்களுக்குத் துரோகமிழைக்கின்றார் என்று ஞானசார தேரர் குற்றஞ் சுமத்தியிருந்தார்.

மன்னார் மாவட்டம் முசலி பிரதேச செயலகப் பிரிவுக்கு உட்பட்ட மரைக்கார் தீவ முஸ்லிம்கள் தமது காணிகளைவிட்டு கடற்படையினர் வெளியேற வேண்டும் என்று போராட்டம் நடத்தியபோது, அங்கு சென்று அவர்களுடைய நிலைமைகளை நேரில் கண்டறிந்ததன் பின்னர் கொழும்பில் அது குறித்து ஊடகங்களிடம் தெரிவிப்பதற்காக நடத்திய பத்திரிகையாளர் மாநாட்டைக் குழப்பியடித்து, ஊடகவியலாளர்கள் முன்னிலையிலேயே ஞானசார தேரர் இவ்வாறு அநாகரிகமாக நடந்து கொண்டார். அதற்கு முன்னதாக மரைக்கார் தீவு பகுதிக்கு வட்டரக்க விஜித்த தேரர் மேற்கொண்ட விஜயத்திற்கு மறுநாள் ஞானசாரதேரரும் அங்கு சென்று அந்த முஸ்லிம் மக்களைச் சந்தித்திருந்தார். அந்தச் சந்திப்பின்போது, மரைக்கார் தீவு முஸ்லிம் மக்களின் பிரச்ச்சினைகளை அவர்களிடம் கேட்டறிவதற்குப் பதிலாக, அவர்கள் வில்பத்து சரணாலயத்திற்குரிய காணிகளை அடாத்தாக அபகரித்து அங்கு குடியேறியிருப்பதாகக் குற்றம் சுமத்தி அவர்களை அங்கிருந்து உடனடியாக வெளியேற வேண்டும் என்று அச்சுறுத்தும் வகையில் எச்சரிக்கை செய்திருந்தார்.

இது மட்டுமல்லாமல் முஸ்லிம்களுக்கு எதிரான பல நடவடிக்கைகள், ஆர்ப்பாட்டங்கள், பேரணிகள் என்பவற்றில் தீவிர அரசியல்வாதிகளிலும் பார்க்க வேகத்தோடும் உத்வேகத்துடனும் நடந்து கொண்டிருந்தார். அண்மையில் அளுத்கம பிரதேசத்தில் இடம்பெற்றிருந்த முஸ்லிம் மக்கள் மீதான தாக்குதல்களிலும் இவரே முன்னிலையில் இருந்து செயற்பட்டிருந்தார் என்று பகிரங்கமாக இவர் மீது குற்றம்சாட்டப்பட்டிருக்கின்றது. இவருடைய நடவடிக்கைகள் பல ஊடகத் தொலைக்காட்சிகளில் காணொளிகளாக ஒலிபரப்பப்பட்டிருக்கின்றன. இவற்றைப் பார்க்கும் போது,  அவர் அணிந்துள்ள காவி உடைக்கும், அவருடைய செயற்பாடுகளுக்கும் பொருத்தமில்லாதிருப்பதை உணர்ந்து கொள்ள முடியும். அஹிம்சை, கருணை, காருண்ய, நடந்துகொள்வாரா என்ற சந்தேகம் ஏற்படுவதைத் தவிர்க்க முடியாதிருக்கின்றது.

ஊண்மையிலேயே அவர் பௌத்த துறவியாக மாறுவதற்கு முன்னர் இராணுவத்தில் இணைந்து பணியாற்றியவர் என்றும், அதற்குப் பின்னர் இராணுவத்தை விட்டு தலைமறைவாகியிருந்ததன் பின்பே பௌத்த துறவியாக மாறினார் என்றும் ஒரு தகவல் கசிந்திருக்கின்றது. அளுத்கம பிரதேசத்தில் முஸ்லிம்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்கள் குறித்து எழுதியயுள்ள பத்தி எழுத்தாளர் ஒருவர் தனது கட்டுரையொன்றில் இதனைக் குறிப்பிட்டிருக்கின்றார்.

ஞானசார தேரரின் நடவடிக்கைகளும், முஸ்லிம்கள் மீதான அவருடைய வெறுப்புணர்வுகொண்ட பேச்சுக்கள் நடவடிக்கைகள் என்பனவும் இதனை உறுதிப்படுத்துவது போலவே அமைந்திருக்கின்றன. பொதுபல சேனா அமைப்பானது, மதரீதியான அமைதியின்மையைத் தூண்டும் வகையில் தொடர்ச்சியாகச் செயற்பட்டு வருகின்ற அதனைத் தடைசெய்ய முடியாது என்று ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச வெளிப்படையாகவே கூறியிருக்கின்றார். அதுவும் அளுத்கம அசம்பாவிதங்களின் பின்னர் அவர் இதனை வெளிப்படுத்தியிருக்கின்றார். அதேநேரம், பொதுபலசேனா அமைப்பு நிறுவப்பட்ட நேரம் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோட்டாபய ராஜபக்ச அந்த நிகழ்வில் முதன்மை விருந்தினராகக் கலந்து சிறப்பித்திருந்தார்.

இலங்கைத் தீவென்பது பௌத்த சிங்களவர்களுக்கே உரியது. இந்த நாட்டை ஒரே நாடு, ஒரே இனம், ஒரே மதம், பௌத்த மதத்திற்கே இங்கு முன்னுரிமை என்ற கோட்பாட்டை இந்த அரசு, முன்னெடுத்துள்ளது. பௌத்த மதத்தின் உண்மையான கோட்பாடுகளைப் பின்பற்றிச் செயற்பட்டு வருகின்ற பௌத்த பிக்குகள் மற்றும் பௌத்தர்களுக்கு அழுத்தமாகவும், ஆழமாகவும் உணர்த்துவதற்காகவே முன்னர் இராணுவத்தில் பணியாற்றியதாகக் கூறப்படுகின்ற ஞானசார தேரரின் தலைமையில் பொதுபல சேனா அமைப்பை வலுவுள்ள – யாரும் எதி;ர்த்து கேள்வி கேட்க முடியாத பலமுள்ள அமைப்பாகச் செயற்படுவதற்கு அரசாங்கம் அனுமதித்திருப்பதாகத் தெரிகின்றது.

பொலிசாரையே அதட்டி, மிரட்டி, அடக்கும் அளவுக்குப் புலம் வாய்ந்த அமைப்பாக விளங்குகின்ற பொதுபலசேனா அமைப்பின் ஊடாக உண்மையான மதக் கோட்பாடுகளைக் கொண்ட பௌத்த மதச் செயற்பாடுகளில் அரசியல் உள்நோக்கத்துடன், இராணுவ ஊடறுப்புப் பாணியில் அரசு ஊடறுத்துச் செயற்படுவதாகவே சந்தேகிக்க வேண்டியிருக்கின்றது.

இந்தப் பின்னணியில் சிறுபான்மையினரின் அரசியல் உரிமைகள், மத உரிமைகள் என்பவற்றை மறுத்து பேரினனாத அரசியல் போக்கை முன்னெடுப்பதற்கும் இந்த இராணுவ ஊடறுப்பு உத்தியை அhசாங்கம் பயன்படுத்தி வருவதைத் தெளிவாக உணர முடிகின்றது. இதனை, இன்னும் சற்று ஆழமாக நோக்குகையில், ராஜபக்ச குடும்பத்தினர் அரச குடும்பமாக நீண்டகாலத்திற்கு அரசியலிலும், ஆட்சி அதிகாரத்திலும் நிதை;து நிற்பதற்காக, இந்தப் பேரினவாத சிந்தனையையும் செயற்பாடுகளையும் இந்த அரசாங்கம் பயன்படுத்துகின்ற தந்;திரேபாhய அணுகுமுறையை இனம் கண்டு கொள்ள முடியும்.

காலம் காலமாக சிங்கள மக்கள் பௌத்தர்கள், இந்த நாட்டில் தமிழ் முஸ்லிம் மக்களுடன் அன்னியோந்நியமாக ஐக்கியமாக வாழ்ந்து வந்துள்ளார்கள். யுத்தம் முடிவடைந்ததன் பின்னர், அந்த மக்கள் மீது அவர்கள் வெறுப்பு கொள்வதற்கும், அரசியல் ரீதியாகவும், மத ரீதியாகவும் அவர்களை அடக்கியொடுக்கி வைத்திருக்க வேண்டும் என்ற தேவை அவர்களுக்கு கிடையாது. இந்த நிலையில் அவர்களுடைய தாராள சிந்தையையும், சக சமூகத்தினருடன் இணைந்து வாழ வேண்டும் என்ற சமூக நற்பண்பையும் குடும்ப ஆதிக்கம் கொண்ட சுய அரசியல் இலாபத்திற்காகக் குலைப்பதற்காகவே இந்த ஊடுருவல் அரசியல் உத்தியை இந்த அரசாங்கம் நடைமுறைப்படுத்தி வருகின்றது என்றே எண்ணத் தோன்றுகின்றது.

- செல்வரட்ணம் சிறிதரன் -

http://tamilleader.com/?p=36248

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.