Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தட்டிவான் பயணமும் இன்னும் சில நினைவுகளும்

Featured Replies

தட்டிவான் பயணமும், இன்னும் சில நினைவுகளும்!

Wednesday, 03 December 2014 11:52

‘அம்பாசடர்’ காரொன்று கடந்து சென்றதைப் பார்க்க ஆச்சரியமாக இருந்தது. கடும் நீல நிறத்தில், அந்தக்காலத்து 'சிறீ' நம்பர் கார். இதுநாட்கள்வரை கொழும்பில் ஒரு அம்பாசடரைப் பார்த்ததில்லை. பழைய கார்களில் எப்போதாவது அபூர்வமாக பழைய வோக்ஸ்வேகன் கார்களைப் பார்க்கலாம்.

பழைய கார்களின் அணிவகுப்பு போன்ற விசேட தினங்களில் ஆகப்பழைய கால ஃபுட் போர்ட் வைத்த கார்கள் எல்லாம் புதுப்பொலிவுடன் கலந்துகொள்வதைக் காணலாம். மற்றபடி இங்கே அன்றாடப் பாவனையிலுள்ள பிரபலமான பழைய கார்களில் அதிகளவானவை 'ஒஸ்டின் மினி கூப்பர்', 'மார்க்' போன்ற மினி கார்கள்தான். யாழ்ப்பாணத்துக் கார்களைக் காணக் கிடைப்பதில்லை.

ஒருமுறை சிறி அலுவலகத்திற்குத் தனது காரில் வந்திருந்திருந்தார். அது, இள நீல நிறத்தில் பளபளவென்று புதிதாகத் தோற்றமளிக்கும் ‘மொரிஸ்மைனர்’. டீம் லீடரான அன்ட்ரூ ஒரு இங்கிலாந்துக்கரர். பெரும் ஆச்சரியமும் மகிழ்ச்சியுமாக காரைச் சுற்றிச் சுற்றி வந்து பார்த்தார். மொரிஸ் மைனர், அவரது இளமைக் காலத்தில் பார்த்த காராக இருக்கக் கூடும்.

யாழ்ப்பாணத்தில் கார் என்றவுடனேயே ‘மொரிஸ்மைனர்’ தான் பலருக்கும் ஞாபகத்திற்கு வரும். யாழ்ப்பாணத்திற்கு என்று காலங்காலமாக சில நியமமான தயாரிப்புக்கள் இருக்கின்றன. 'சோனி' டீவி, 'ஆர் எக்ஸ்' ரேடியோ, 'ஹோண்டா 200' மோட்டார் சைக்கிள், ‘ரலீ’ சைக்கிள்கள், 'இஷூசு' மினி பஸ்கள், 'லம்ப்ரூட்டா' ஸ்கூட்டர், தொண்ணூறுகளின் ஆரம்பகாலம்வரை இயக்கத்தின் பாவனையிலிருந்த 'டட்சன்' பிக்கப், தொண்ணூறுகளின் முதற்பாதியில் ‘பஜிரோ’க்கள், பின்னாட்களில் ஹீரோ ஹோண்டா, பள்சர், செல்பேசி வந்த அறிமுகமான புதிதில் 'நோக்கியா' என பெரும்பான்மையானோரின் தெரிவுகள்.

பாலா சித்தப்பா ரலி சைக்கிள் ஒன்று வைத்திருந்தார். அன்றாடப் பாவனைக்கு மோட்டார் சைக்கிள்தான் எனினும், வாராவாரம் எண்ணெய் போட்டுத் தேய்த்துப் பார்க்கப் புதிதாகவேயிருக்கும். எழுபதுகளில் அவரின் பெரியப்பா கொடுத்ததாம். ரலி சைக்கிள் பற்றி யாழ்ப்பாணத்தில் அதை வைத்திருப்பதே பெருமை என்பதாகப் பெரியவர்கள் சொல்லிக் கேட்டதுண்டு. அதுவரை பார்த்ததில்லை. “தம்பி நான் எல்லா விதமான வாகனமும் ஆசைதீர ஓடியிருக்கிறன்டா!” என்று சொன்ன சித்தப்பாவின் ஆடைகளிலிருந்து, கூலிங் கிளாஸ் வரையில் அப்படித்தான், பிரபலமான தயாரிப்புகளை பயன்படுத்தியது மட்டுமன்றி நேர்த்தியாக, கவனமாக பராமரிப்பவர். அவரிடம் ஒரு பச்சைநிற ‘சோமசெட்’ கார் இருந்தது. இடம்பெயர்வுகளின்போது அவர் வெளிநாட்டில் இருந்ததால் தொலைந்துவிட்டது. கடந்த முறை யாழ்ப்பாணம் சென்றபோது ரலி சைக்கிளைக் காணவில்லை. "அதக்குடுத்துட்டன் தம்பி...அத வச்சுக்கொண்டு நிம்மதியா ஒரு கடை, தெருவில சாமான் வாங்க ஏலாது. எவன் தூக்கிட்டு போயிடுவானோண்டு அதே யோசனைலதான் இருக்கவேணும்" என்றார்.

இங்கிலாந்துத் தயாரிப்புகளையே பொதுவாக விரும்பி வாங்கிப் பயன்படுத்தியிருந்தாலும் அதற்குள்ளும் சிலவற்றைத்தேர்வு செய்துகொள்வார்கள் போலும். பழைய மோட்டார்சைக்கிள்களில் 'ரோயல் என்ஃபீல்ட்' பார்த்த ஞாபகமில்லை. 'BSA' தான் அதிகளவில் பார்த்திருக்கிறேன். மொரிஸ்மைனர் இரண்டாயிரங்களின் ஆரம்ப காலப்பகுதியில் யாழ் வைத்தியசாலைக்கு எதிரே டாக்சிகளாக அணிவகுத்து நின்றன. ‘வோக்ஸ்வேகன்’, ‘அம்பாசடர்’ கார்கள் தனி.

பெரிய கார் என்று சின்னவயதில் நாங்கள் பார்த்தவை ‘மொரிஸ் ஒக்ஸ்ஃபோர்ட்’ கார்கள்தான். அதேபோல ‘ஒஸ்டின் கேம்பிரிட்ஜ்’ கார்கள். இவைத்தான் பெருமளவானவை. கிட்டத்தட்ட இவை யாழ்ப்பாணத்தின் அடையாளம் போன்றவை. கொழும்பில் பார்த்ததில்லை.

நம் பால்யகாலத்திற்கான, மண்ணிற்கான பிரத்தியேகமான அடையாளங்கள் சில இருக்கின்றன. அவை நம் கண்முன்னேயே காணாமல் போனவை, இப்போதும் தொலைந்துகொண்டிருப்பவை.

‘மூக்குப்பேணி’ என்றொரு குவளையை நாம் சிறுவயதில் பார்த்திருக்கிறோம். சின்ன வயதில், பாட்டியம்மா வீட்டில் இருந்தது. குசினி என்றதுமே இருண்மையும், வெம்மையுமாக கலந்த அறையில், உட்கார்ந்து சமைக்கும் நிலத்தில் மெழுகிய அடுப்பும், மண்சட்டிகளும் பாவனையிலிருந்த, நாங்கள் பார்த்த கடைசித் தமிழ்க் குசினிகள் நாம் பாட்டிகள், அம்மாக்களுடையவைதான் இல்லையா? அங்கேதான் பார்த்திருக்கிறேன். இருபது வருடங்களுக்குமுன் யாழ்ப்பாணத்தில் அநேகமாக எல்லாப் பாட்டிகளும் வைத்திருந்திருப்பார்கள்.

நாம் வீட்டில் உபயோகப் படுத்தும் சில்வர் குவளையை விட அளவில் பெரியதாக, பித்தளையில் செய்யப்பட்டிருக்கும். சிந்தாமல் ஊற்றுவதற்கு வசதியாக வாய்ப்பகுதியில் மூக்கு போல் நீண்டிருக்கும். அண்ணாந்து குடிப்பதற்காகத்தான் அப்படி உருவாக்கி பயன்படுத்தினார்களோ, என்னவோ! எனக்கு அதில் தேநீர் குடிப்பதில் அலாதிப் பிரியம். அதற்குத்தனியானதொரு ருசி. ஏதோ வித்தியாசமாக, சுவை அதிகமாக இருப்பது போன்ற ஒரு உணர்வு! கனமாக இருப்பதால் வெளியே அவ்வளவாக சூடும் தெரியாது. சொந்த ஊரை விட்டு வந்தபின் எங்கும் கண்டதில்லை.

பாட்டியம்மா வைத்திருந்தவற்றை எடுத்து வரவில்லையா? மறந்துவிட்டார்களா? தெரியவில்லை. அநேகமாக மூக்குப் பேணியில் தேநீர் குடித்த கடைசித்தலைமுறை நாங்களாகவே இருக்கக்கூடும். நேரில் பார்க்காத, கேள்வியேபடாத பலரும் இருக்கலாம். நம்முடைய தொலைந்து போன அடையாளச்சின்னங்கள் வரிசையில் அதுவும் சேர்ந்திருக்கலாம்.

அந்தக்காலத்துப் பாட்டிகள் அம்மம்மாக்களிடம் பனை ஓலையால் அழகாகப் பின்னப்பட்ட சிறிய தட்டையான பெட்டி ஒன்றிருக்கும். கோட்டைப் பெட்டி எனப்பட்ட அந்தப்பெட்டி இரண்டு மூடிகள் போல இருக்கும். காப்ஸ்யூல் மாதிரி ஒன்றை ஒன்றால் மூட வேண்டும். தாள் காசு முக்கியமான பொருட்கள் அதில் வைத்திருப்பார்கள் போல. சாதாரணப் பாவனைக்கு பால்மா பொதி செய்த பைக்கற்தான். ஈயமேல்லாம் உதிர்ந்து போய் வெள்ளை நிறமாயிருக்கும். அது ஒருவிதமான சுண்ணாம்பு, பாக்கு சேகரித்து வைக்கும் பை. அதனுள் அன்றாட, அவசர தேவைக்கான காசு வைத்திருப்பார்கள். அடியில் இருக்கும் சில்லறைகளைக் கைகளால் துழாவும்போதே, வாயில் வெற்றிலை அசைபோட்டபடியிருக்க, கண்கள் மேலே ஒரு கோணத்தில் ஏதோ ஆழ்ந்த யோசனையுடன் வெறித்தபடியிருக்கும்.

தீவிர ஆராய்ச்சியின் முடிவில் அந்த ஒரு ரூபாயையோ, ஐம்பது சத்தத்தையோ எடுத்துக் கொடுப்பதற்குள் நாங்கள் பதைத்துப் போய்விடுவோம். எங்கள் அவசரம் எங்களுக்கு. நிதானமாக தேடி, ஒருவழியாகப் பெரும் பிரயத்தனத்துடன் பெற்றுக் கொண்டதும் அரக்கப்பரக்க ஓட ஆரம்பிப்போம். தும்பு முட்டாஸ்காரர் போய்விட்டிருப்பாரோ என்கிற கவலையுடன் ஓடித்துரத்திப் பிடித்ததும்தான் மூச்சுவாங்கி நிம்மதியடைவோம்.

தும்பு முட்டாஸ் என வழங்கப்பட்ட மிட்டாய் இப்போது, 'பொம்பே ஸ்வீட்ஸ்' கடைகளில் நம்மிடையே மிகுந்த வரவேற்பைப் பெற்ற விருப்பத் தெரிவான 'சோன் பப்டி' என்கிற இனிப்பின் அதே சுவையைக் கொண்டது. வடிவம் மட்டும் மாறுபட்டது. சோன் பப்டியை முதன்முதல் சாப்பிட்டபோது இந்தச் சுவையை முதலிலேயே உணர்ந்திருக்கிரேனே எனக் கடுமையாக யோசித்துக் கண்டுபிடித்தேன்.

ரோஸ் நிறத்தில் தும்பு தும்பாக இருக்கும். அதற்கென விசேடமான கொள்கலன் ஒன்று வைத்திருப்பார்கள். சதுர வடிவ அடியைக் கொண்ட உயரமான நீல நிறப் பெட்டி. பக்கச்சுவரில் கண்ணாடிக்கூடாக மிட்டாய் தெரியும். மேலே வட்ட மூடி. மடித்துக் கொடுக்கக் கடதாசித்துண்டுகள் கிழித்து சொருகி வைத்திருப்பார்கள். நடந்து செல்லும் மணிச்சத்தம் ஒன்றைக் கேட்கும்போதே புரிந்துகொள்ளலாம்.

'என்ன ஃபிளைட் அது! யன்னலெல்லாம் லொட லொடன்னு சத்தம் போட்டுக்கொண்டு... தட்டிவான் மாதிரி!'

ஏ -9 வேதி மூடப்பட்டிருந்த போர்க்காலத்தில், கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் சென்ற தனது விமானப்பயண அனுபவத்தை ஒருவர் இப்படித்தான் கூறினார்.

தட்டி வான்(Van)! - ஒரு காலத்தில் தட்டிவான் பயணம் என்பது கேட்ட மாத்திரத்திலேயே மனதில் குதூகலத்தை ஏற்படுத்தும் கொண்டாட்டமான வார்த்தையாக இருந்திருக்கிறது.

ஒரு லொறி போல, அளவில் கொஞ்சம் சின்னதாக இருக்கும். முன்பாகம் ஒரு பழைய காலத்து Chevrolet காராக (அல்லது லொறி) இருக்கும். எதற்காக Chevrolet கார்களைத் தேர்ந்தெடுத்தார்கள்? ஒருவேளை அந்தக்காலத்தில் நிறைய Chevrolet கார்கள் யாழ்ப்பாணத்தில் இருந்திருக்குமோ? முன் பாகமும், பின்பாகம் ஒரு லொறியின்பெட்டி போல இரும்புச்சட்டத்தில் மரப்பலகைகளைப் பிணைத்துத் தட்டிவான் தயாரிக்கப்பட்டிருக்கும். கண்ணாடி, யன்னல் எதுவும் கிடையாது. கதவில்லாத யன்னலாக இரும்புச்சட்டத்தின்மேல் மேற்கூரை. நீளமாக மரக்கதிரை இருக்கைகள். மிக முக்கியமாக எங்களைக் கவர்ந்தது தட்டிவான்களுக்கே உரிய பிரத்தியேக சாரதியின் கைக்கு அருகாக வெளிப்புறமாக பொருத்தப்பட்ட குழாய் ஹோர்னின் 'பாப்..பாப்!' சத்தம்!

சின்ன வயதில் தெல்லிப்பளையிலிருந்து அளவெட்டி செல்லும்போது முதன்முறையாக பயணித்ததாக ஞாபகம். அதுபோல் சுன்னாகத்திலிருந்து ஊரெழு செல்லும் வீதியிலும்! கொடிகாமம், வடமராட்சி, வன்னியிலும் பாவனையிலிருந்தது. உண்மையில் அதற்கு ஏன் அப்படியொரு பெயர் வந்தது என்று தெரியவில்லை. தட்டி என்று தற்காலிகமாக அமைக்கப்படும் சிறிய கூரையைச் சொல்வார்கள். சிறு தற்காலிக கதவையும், மறைப்பையும்கூட அப்படித்தான் அழைப்பார்கள். அப்படியொரு அவசரகாலத் தயாரிப்பு Van ஆக அறிமுகமாகியிருக்கலாம்.

உள்ளே சிறுவர்கள் தவிர யாரும் நின்று கொண்டு பயணிக்க முடியாது. தாழ்வான மேற்கூரை அனுமதிக்காது. நாலரை ஐந்தடி உயரம்தான் இருக்கும். இட நெருக்கடி எப்போதுமிருக்கும். அதனால் பெண்கள், வயோதிபர்கள், சிறுவர்கள் உள்ளே அமர்ந்திருக்க, பின்பக்கம் இருக்கும் அரைக் கதவை திறந்துவிட்டு, சங்கிலியால் பிணைக்கப்பட்டிருக்கும் அந்தப்பலகையின் மேல் நின்று கொண்டு ஆண்கள் கும்பல் பயணிக்கும். பிடித்துக்கொண்டு நிற்க கயிறும் இணைக்கப்பட்டிருக்கும். நானும் எப்படியாவது அடம்பிடித்து, அந்தக்கும்பலில் அப்பாவோடு நின்று பயணித்த ஞாபகங்கள் இன்றும் பசுமையாய். சிறுவயதில் எனது ஆகச்சிறந்த சாகசப்பயணங்கள் தட்டிவான் பயணங்கள்தான்.

அது ஒரு த்ரில்லான அனுபவம். பள்ளங்களில் ஏறி இறங்கும்போது குலுங்கிக் குலுங்கி ஒருவரையொருவர் பார்த்து சிரித்தவாறு.. அது போன்ற ஒரு குதூகலமான பயண அனுபவம் வேறு எதிலுமே கிடைத்ததில்லை. அந்தச் சங்கிலி மட்டும் மாட்டப்பட்டிருக்கும் கொளுக்கியிலிருந்து கழன்றுவிட்டால் சங்குதான் என்பது வேறு விஷயம். ஒரு கதையில் சுஜாதா எழுதியிருப்பார் 'மாருதி வேன் ஒன்று குதித்துக் குதித்து ஓடி வந்து நின்றது' அது எப்படியிருக்கும் என்பதைத் தட்டி வானில் ஒருமுறையாவது சென்றவர்களால் இலகுவாக உணரமுடியும்.

பொதுவாக சந்தைக்கு காய்கறிகளை ஏற்றிப் போகும் ஆச்சிமார்தான் பெரும்பான்மையான பயணிகளாக இருப்பார்கள். நடத்துனரின் 'ரைட் ரைட்!' சத்தம் கேட்குதோ இலையோ 'கெதியா ஏறணை ஆச்சி!', 'அந்தப்பெட்டியத் தள்ளி வையுங்கோ அம்மா' என்ற சத்தம் கேட்காமல் அந்தப் பயணங்கள் சாத்தியமில்லை. கிறீச் கிறீச்சென்ற பிணைச்சல்கள், பலகைகளின் சத்தத்தோடு தாலாட்டுவதுபோல அசைந்துகொண்டு..செம்மண் புழுதியையும் தாரளமாக தெளித்துக் கொள்ளும் இனிமையான பயணங்கள் என்றும் மறக்க முடியாதவை!

தொண்ணூறாம் ஆண்டிற்குப் பிறகு யாழ் நகரப் பகுதியில் இருந்தகாலத்தில் தட்டிவானைப் பார்த்ததில்லை. அப்பப்போ அந்த நினைவுகள் வரும். சில வருடங்கள் கழித்து வன்னியில் நிறையத் தட்டிவான்களைப் பார்க்க முடிந்தது. யாழில் பார்த்தது போலன்றி கலர் கலராகப் புதுப் பொலிவுடன். ஒருநாள் மாங்குளத்திலிருந்து கனகராயன் குளம் வரை பயணிக்கச் சந்தர்ப்பம் வாய்த்தது. அப்போதுதான் முதன்முறையாக உள்ளே இருக்கையில் அமர்ந்து பயணம். காலி இருக்கைகள் இருந்தது மட்டுமல்ல. உடலும் அதைவிட மனமும் ஏற்கனவே பல பயணங்களினால் நிறையக் களைத்திருந்ததுதான் காரணம்.

பயணத்தில் கூடவே துணையாக சினிமாப்பாடல்களும் ஒலித்துக் கொண்டிருந்தன. அப்பொழுது பிரபலமாகி அடிக்கடி வானொலிகளில் ஒலிக்கும் 'ராசிதான் கை ராசிதான்' பாடல் அந்தப் பயணத்தில் கேட்ட ஞாபகம் இருக்கிறது. இப்பொழுதும் அந்தப்பாடலைக் கேட்க நேரும்போதெல்லாம் கண்களை மூடிக்கொள்ள, கடைசியாக நான் தட்டிவானில் பயணித்தது காட்சியாக மனத்திரையில் விரியும். எமது மண்ணுக்குரிய, கிராமங்களுக்குரிய அடையாளங்களில் ஒன்றாக தட்டிவானையும் கொள்ளலாம். இப்போதும் தட்டி வான்கள் எங்கேயாவது ஓடுகின்றனவா?

இப்போதும் தட்டிவான்களை பயன்படுத்தலாம். சாதாரண போக்குவரத்தில் ஈடுபடுத்தப்படுவதைத் தவிர்த்து அமைதியான, பொழுது போக்கான சவாரிக்கு, வெளிநாட்டுப் பிரயாணிகள் மெதுவாகச் சுற்றிப்பார்க்க - இப்படியான தேவைகளுக்காக புதிய, அழகிய தட்டிவான்களை தயாரித்து உபயோகப்படுத்தலாம். அது எமது பழைய அடையாளங்களை, பாரம்பரிய வாழ்க்கையை நினைவூட்டும் அதேவேளை அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் சொல்லும் ஒரு நல்ல முயற்சியாகவும் இருக்கும்.

ஒரு அழகான பனிபடர்ந்த காலை வேளையில் சூரியனின் முதற்கதிரின் இதமான வெம்மையுடன், இருபக்கமும் வயல்கள் வயல்வெளிகள் நீண்டிருக்கும் கிராமத்து வீதியில், காற்று முகத்திலறைந்து முடிகலைக்க தட்டிவானில் நின்றுகொண்டே ஒருமுறை பயணம் செய்யவேண்டும். வழியில் தும்பு மிட்டாஸ் காரரைக் கண்டால் வாங்கிக் கொள்ளவேண்டும். மறந்துவிடக் கூடாது

4tamilmedia.com

Edited by அபராஜிதன்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.