Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இலங்கை மக்கள் எதிர்நோக்கும் இரு சவால்கள்

Featured Replies

சமாதானத்தை உருவாக்குவதில் இலங்கை மக்கள் எதிர்நோக்கும் இரு சவால்கள்

[18 - November - 2006]

தேசத்தைக் கட்டியெழுப்பும் அரசியல் யாப்பு அல்லது அரசியலமைப்புச் சட்டம் ஒன்றை உருவாக்க நாம் ஒவ்வொருவரும் செய்யக் கூடியது.

ஒரு அரசியலமைப்புச் சட்டம் தயாரிப்பதில் எங்கள் ஒருவருக்கும் முன் அனுபவமில்லை. கடந்த காலத்தில் எங்களுடைய நாட்டில் சட்ட நிபுணர்களும் ஒரு சில அரசியல்வாதிகளுமே சேர்ந்து எங்களுடைய யாப்பினைத் தயாரித்திருக்கிறார்கள். எம்மில் அனேகம் பேருக்கு அதில் என்ன எழுதியிருக்கின்றது என்றே தெரியாமல் இருக்கும். அதில் ஆச்சரியமுமில்லை. ஏனெனில், இந்த ஆவணம் சட்டத் துறையினர் பாவிக்கும் கடும் சொற்களில் எங்களுக்கு விளங்கக் கஷ்டமான முறையில் எழுதப்பட்டிருக்கின்றது.

ஒரு நாட்டு மக்களின் அரசியலமைப்புச் சட்டம், அந்நாட்டுக்காக மக்கள் தாங்கள் காணும் கனவைப் பிரதிபலிக்கும் ஆவணமாக வேண்டும், அது எங்களுடைய பாஷையில் எழுதப்பட்டிருக்க வேண்டும். எப்படி எங்கள் நாட்டு மக்கள் வாழ வேண்டும், அதற்காக எப்படி எங்கள் அரசியல்வாதிகள் நடந்து கொள்ள வேண்டும், அதை உறுதிப்படுத்த என்ன வகையான சட்டங்கள் எமக்கு இருக்கு வேண்டும் என மக்கள் காணும் கனவுதான் அது. அதை எங்கள் நாட்டின் ஒவ்வொரு பிரஜையும் நினைவில் கொண்டு தனது சமூக, அரசியல் வாழ்க்கையை நடத்தக் கூடியதாக இருக்க வேண்டும்.

சட்டங்கள், அவற்றை செயற்டுத்தும் நிறுவனங்கள், இச் செயற்பாடுகள் சரிவர நடப்பதை உறுதி செய்வதற்கான பொறிமுறைகள் இவை பொருத்தமான முறையில் இருந்தால் நாம் காணும் எந்தக் கனவும் நனவாகும்.

எங்கள் நாட்டுக்குரிய அரசியல் யாப்பினைத் தயாரிப்பதில் நாங்கள் எப்படிப் பங்கு கொள்ளலாம் என்பதற்கு ஒரு நல்ல உதாரணமாக இருக்கின்றது தென்னாபிரிக்கா. எத்தனையோ தசாப்தகால பிரச்சினைகளுக்குப் பிறகு 1990 களில் நெல்சன் மண்டேலாவின் தலைமையில் சமாதானத்திற்கான பாதையில் நடக்கத் தொடங்கிய நாடு அது. அந் நாட்டு மக்கள் தங்களுக்கென ஒரு புதிய அரசினைத் தாபிப்பதற்கு பல மட்டங்களில் செயற்பட்டார்கள். அந்த நடவடிக்கைகளின் ஒவ்வொரு படிகளை சிறு குறிப்புகள் வடிவில் கீழே தருகின்றோம்.

தென்னாபிரிக்காவின் புதிய அரசியலமைப்புச் சட்டம் உருவாக்கப்பட்ட நடைமுறை

* புதிய அரசுக்கான பேச்சுவார்த்தைகளை எப்படி அணுகுவது என்று தீர்மானிக்கவென கூடப்பட்ட வெகுசன மாநாடுகளும் கலந்துரையாடல்களும், இதில் எடுக்கப்பட முடிவுகளின் படி, பேச்சு வார்த்தைகளைத் தொடருவதற்காக பிரதான கட்சியாகிய ஆபிரிக்க தேசிய காங்கிரஸ் தனது கட்சி யாப்பினை மாற்றியது.

* தேசிய உள்ளூர் கட்சிகள், அரசாங்கத் தலைவர்கள், தொழிற்சங்கங்கள், மத நிறுவனங்கள், வேறு அரசு சாரா நிறுவனங்கள் இணைந்து சமாதானத்தை நாடு முழுவதும் உருவாக்க என்னென்ன கட்டமைப்புகளை அங்கெல்லாம் உருவாக்க வேண்டும் என்று கலந்துரையாடி தீர்மானங்களை எடுத்தது.

* மேற்கூறிய அமைப்புகளின் பிரதிநிதிகளின் தலைமையிலான செயற்குழுக்கள் இடைக்கால அரசாங்கம் ஒன்றின் அரசியலமைப்புச் சட்டம் எப்படி இருக்கலாம் என்பதை கலந்துரையாடி சிபாரிசுகளை அனுப்பியது. இவற்றின் அடிப்படையில் தென்னாப்பிரிக்க அரசாங்கமும் ஆபிரிக்க தேசிய காங்கிரஸும் பேச்சுவார்த்தைகளில் இறங்கி இடைக்கால அரசாங்கத்தை உருவாக்கின. இதன்படி, 1994 இல் முதன் முறையாக அங்கு இன அடிப்படையில் இல்லாத சுதந்திரமான தேர்தல்கள் நடத்தப்பட்டன. புதிய இடைக் கால பாராளுமன்றத்தினது பிரதிநிதிகள் தெரிவு செய்யப்பட்டனர்.

* இடைக்கால பாராளுமன்றத்தினது ஏற்பாட்டினால் 1994 முதல் 1996 வரை நாடு முழுவதும் ஒரு பாரிய மக்கள் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது. உள்ளூர் மட்டங்களில் மக்கள் ஒன்று கூடி தங்கள் நாட்டின் புதிய அரசியலமைப்புச் சட்டம் என்னென்ன அம்சங்களுடன் இருக்க வேண்டும் என்பதைப் பற்றிய சிபாரிசுகளை எழுதினார்கள்.

இச்சிபாரிசுகள் ஒன்று சேர்க்கப்பட்டு சுமார் 490 நிறுவனப் பிரதிநிதிகள் இருந்த சபையினால் ஆராயப்பட்டது. இதில் பெறப்பட்ட முடிவுகள் மூன்று வரைபுகளுக்கூடாகச் சென்று கடைசியில் எல்லோருடைய அங்கீகாரத்தினையும் பெற்றது.

எங்கள் நாட்டு மக்களை விட சராசரி கல்வித் தகைமைகளில் குறைந்தவர்களாக இருந்தாலும் கூட, தென்னாப்பிரிக்க மக்கள் தங்கள் அரசியலமைப்புச் சட்டத்தினை உருவாக்குவதில் எவ்வளவு தூரம் பங்கெடுத்திருக்கின்றார்கள் பார்த்தீர்களா? இதிலிருந்து, அரசியலமைப்புச் சட்டத்தினை உருவாக்க பாடசாலைப் படிப்பு தேவையில்லை என்று நாம் கண்டு கொள்ளலாம்.

நீங்களும் இதற்கான முதல் நடவடிக்கைகளில் இறங்குவதற்கு,

1. எங்கள் நாட்டுக்கு சமாதானமும் அபிவிருத்தியும் வேண்டுமென்றால் புதிய அரசியலமைப்புச் சட்டம் ஒன்று தேவை என்பதைப் பரந்து பட்ட மக்களுக்குப் புரியவைக்க வேண்டும்.

நீங்கள் உங்கள் அயலில் உள்ளவர்கள் மற்றும் நண்பர்களுடன், இந்த நூலில் தரப்பட்ட விடயங்கள் பற்றியோ அல்லது வேறெங்கும் உங்களுக்கு கிடைத்த தகவல்களை வைத்துக் கொண்டோ அடிக்கடி சந்தித்துக் கலந்துரையாடுங்கள். இலங்கையின் தற்போதைய அரசியலமைப்புச் சட்டத்தின் ஒரு பிரதியையும் நீங்கள் தேவையெனில் எடுத்து ஆராயலாம். இந்நடவடிக்கையைப் படிப்படியாக உங்கள் கிராமவாசிகளுக்கும் பின்பு உங்கள் வட்டாரத்தில் உள்ளவர்களுக்கும் விரிவு படுத்துங்கள்.

குழுக்குழுவாக மக்களைச் சந்தித்து உரையாடுவதற்கு மக்கள் அமைப்புகள் மிகவும் உதவியாகும். உங்கள் உள்ளூரில் இயங்கும் மரணாதார சங்கம், கிராம அபிவிருத்திச் சங்கம், பெண்கள் சங்கம், சிக்கனக் கடன் கூட்டுறவுச் சங்கம், பலநோக்குக் கூட்டுறவுச் சங்கம் போன்ற சங்கங்களின் தலைவர்களை அணுகி அவற்றின் சங்கக் கூட்டங்கள் நடைபெறும் நேரத்தில் சங்க அங்கத்தவர்களுடன் நீங்கள் பேசுவதற்கு அனுமதி கோருங்கள். உங்களுக்குத் தரப்பட்ட நேரத்திற்குள் விடயத்தை கூட்டத்திலிருப்பவர்களிடம் விளக்கி அவர்கள் விரும்பினால், இன்னொரு நாளில் திரும்பச் சந்தித்து இன்னும் விரிவாக இதைப் பற்றி நீங்கள் எல்லோரும் உட்கார்ந்து பேசலாம்.

இந்த முறையில் பரந்து பட்ட மக்களை நீங்கள் அணிதிரட்ட முடியும்.

2. நீங்களும் உங்களைச் சேர்ந்தவர்களும் அரசியலமைப்புச் சட்டத்தைப் பற்றி தெளிவினை உங்களுக்குள் ஏற்படுத்திய பின்னர், உங்கள் வட்டாரத்தில் உள்ள கட்சி ஏற்பாட்டாளர்களைச் சந்தியுங்கள். நீங்கள் ஒரு வட்டாரக் குழுவாக அவரைச் சந்திப்பது இன்னும் பிரயோசனமாக இருக்கும். அரசியலமைப்புச் சட்டத்தினை மாற்றியமைக்க வேண்டிய தேவையை அவருக்கு எடுத்துச் சொல்லுங்கள்.

3. உங்கள் தொகுதி பாராளுமன்ற உறுப்பினருக்கு, இலங்கையின் அரசியலமைப்புச் சட்டம் மாற்றப்பட வேண்டும் என்கின்ற உங்கள் விருப்பத்தை எழுதிப் போடுங்கள்.

உங்களைப் போன்றவர்களிடமிருந்து ஏராளமான கடிதங்கள் வருமெனில், அவர்கள் நிச்சயமாக இந்த விடயத்தைப் பாராளுமன்றத்தில் எடுத்துப் பேசவே வேண்டும்.

4. எமது ஜனாதிபதிக்கும் ஒரு கடிதத்தினை வரையலாம். இதில், ஏன் நீங்கள் அரசியலமைப்புச் சட்டத்தினை மாற்ற விரும்புகிறீர்கள் என்பதை விளக்க வேண்டும்.

நீங்கள் சந்திக்கும் நண்பர்கள், சக பணியாளர்கள் எல்லோரையும் அதே போல் ஜனாதிபதிக்கு கடிதம் எழுத ஊக்குவியுங்கள். குறைந்தது 1 இலட்சம் கடிதங்கள் ஜனாதிபதியின் செயலகத்துக்குச் சென்று சேர வேண்டும். செய்வீர்களா?

5. உங்கள் வட்டாரத்தில் அதிகமாக விற்பனை செய்யப்படும் பத்திரிகைகளுக்கும் நீங்கள் இதைப் பற்றி எழுதிப் போடலாம். உங்களையும் உங்களைப் போன்றவர்களையும் நேரில் பேட்டி கண்டு கருத்துக்களை எடுக்க பத்திரிகையாளர்களுக்கு அழைப்பு விடுங்கள். வானொலி, பத்திரிகை போன்ற ஊடகங்கள் அரசியலமைப்புச் சட்டத்தின் நுணுக்கங்களை மக்களுக்குப் புரிய வைப்பதற்கான விழிப்புணர்வு நிகழ்ச்சிகளையும் கட்டுரைகளையும் தாங்க வேண்டும் என்று அழுத்தம் கொடுங்கள்.

மேலே கூறியிருப்பது போன்ற நடவடிக்கைகள் இந் நாட்டின் ஒவ்வொரு பிரதேசமாகச் செய்து கொண்டு வரப்பட, நாடளாவிய ரீதியில் அமைப்புகளும் அரசாங்கமும் அரசியல் கட்சிகளுமாக இணைந்து ஒரு புதிய அரசியலமைப்புச் சட்டத்தினைத் தயாரிப்பதற்கு ஊக்குவிக்கப்படுவர். இந்த திருப்பம் உங்கள் முதல் கட்ட நடவடிக்கைகளுக்கு தகுந்த பயனாகும். முற்றும்.

http://www.thinakkural.com/news/2006/11/18...s_page15420.htm

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.