Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழ்க் கட்சிகள் மக்களை ஏமாற்றும் ஆதாரங்கள்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ்க் கட்சிகள் மக்களை ஏமாற்றும் ஆதாரங்கள்

07/24/2015 இனியொரு...

gajendrakumar

 

நான்கு தசாப்தங்கள் தமிழ்ப் பேசும் மக்களின் இழப்பும் தியாகமும் இன்று வெறுமனே அரசியல் பிழைப்பு நடத்துவதற்காகப் பயன்படுத்தப்படுக்கொண்டிருக்கிறது. இன்னொரு போராட்டம் ஆரம்பமாகிவிடக் கூடாது என்பதற்காக அன்னியர்களின் அடியாட்களும், பேரினவாதிகளும், தமிழ் சிங்கள அதிகாரவர்க்கங்களும் மிகவும் அவதானமாகக் காய் நகர்த்துகின்றனர்.

கடந்த காலப் போராட்ட உணர்விலிருந்து மக்களை விடுவித்து, வட கிழக்கு உட்பட இலங்கை முழுவதையும் சூறையாடும் அன்னிய நிகழ்ச்சி நிரல் அரங்கேறிக்கொண்டிருக்கிறது.

இலங்கையில் பாராளுமன்ற அரசியல்வாதிகளும், புலம்பெயர் நாடுகளில் தேசிய வியாபாரிகளும் தமிழ்ப் பேசும் மக்களை அறியாமை இருளில் அமிழ்த்தி எதிர்கால சமூகத்தை இருண்டதாக மாற்றிக்கொண்டிருக்கின்றனர்.

பேரினவாதிகளுக்கு வர்ணம் பூசி தமிழ்ப் பேசும் மக்களின் நண்பர்களாக அறிமுகப்படுத்தும் டக்ளஸ் தேவாந்தா, சசிகலா மகேஸ்வரனில் ஆரம்பித்து கஜேந்திரகுமார் சம்பந்தன் வரைக்கும் மக்களின் தலைவிதியைத் தாம் தீர்மானிக்கப் போவதாகக் கிளம்பியிருக்கின்றனர்.

முள்ளிவாய்க்கால் மூலையில் லட்சக்கணக்கில் மக்கள் அழிக்கப்பட்டனர். முள்ளிவாய்க்காலின் பின்னான காலம் முழுவதும் தேசியவிடுதலைப் போராட்டத்தின் எச்சசொச்சங்களைத் துடைதெறிந்து அழிப்பதற்காகப் பயன்படுத்தப்படுகிறது. வன்னியில் நடந்தவை மனிதப் படுகொலைகள். இன்று நடந்துகொண்டிருப்பதோ அதைவிட ஆபத்தான சுத்திகரிப்பு. இது தொடர்பாகப் பேசுவதற்குக் கூட நேர்மையான மனிதர்கள் இல்லாத வெற்றிடம் திட்டமிட்டு உருவாக்கப்பட்டுள்ளது.

வெற்றிடத்தை நிரப்ப முனைகின்ற ஒவ்வொரு அரசியலும் பிழைப்புவாதிகளால் அழித்துத் சிதைக்கப்படுகின்றன.

இந்த இருண்ட சூழலில் ஆங்காங்கே நம்பிக்கைதரும் மக்கள் பற்றுள்ள மனிதர்கள் மிக அவதானமாகச் செயற்பட வேண்டிய தேவை முன்னெப்போதும் இல்லாத அளவில் காணப்படுகின்றது.

மக்கள் மத்தியில் சரியான கருத்தை எடுத்துச் செல்வதும் நடந்துகொண்டிருக்கும் அழிவிலிருந்து அவர்களைப் பாதுகாப்பதும் இன்று ஒவ்வொருவரதும் கடமையாகும்.
மக்கள் பிச்சைக்காரர்களாகவும் அடிமைகளாகவும் வாழ்வைதை விட போராடுவதே மேல் என்ற உணர்விற்கு மறுபடி வந்து சேரவேண்டும். பாராளுமன்றப் பதவிக்காக அருவருக்கத்தக்க பொய்களை மக்களிடம் அரசியல்வாதிகள் கட்டவிழ்த்துவிட ஊடகங்கள் அவற்றை அப்படியே உமிழ்கின்றன.

புலம்பெயர் ஊடகங்களின் ‘பிரேக்கிங் நியூஸ்’ இன் இரு புறங்களிலும் அரசியல் கட்சிகளின் விளம்பரங்கள் ஆக்கிரமித்துக் கொள்கின்றன.

நான்கு தசாப்தப் போராட்டத்தின் விளைபலனா இது, என துயரத்தில் புலம்பும் சமூகப்பற்றுள்ளவர்கள் நம்பிக்கை கொள்ளவேண்டியது இன்றைய காலத்தின் அவசியம்.
தேர்தலில் மக்களை எப்படியெல்லாம் ஏமற்றுகிறார்கள்?

 

1. கஜேந்திரகுமாரின் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி.

இன்றை உலகமாமான காலத்தின் ஒடுக்குமுறைகளுக்கு எதிரான போராட்டத்தில் எமது நாடுகளில் தேசியம் என்பது ஜனநாயகத்தை மீட்பதற்கான ஆரம்பப் பாத்திரத்தை வகிக்கவல்லது. ஆனால் தமிழ்ப் பேசும் மக்கள் மத்தியில் தேசியம் என்பது அயோக்கியர்கள் பிழைப்பு நடத்துவதற்கான ஆயுதமாக மாறியுள்ளது.

a) தொடரும் சர்வதேச விசாரணை:  எதற்கெடுத்தாலும் சர்வதேசம் விசாராணை செய்யும், சர்வதேசம் விசாரிக்கும், இனப்படுகொலை நடந்தது, நடக்கிறது, என்று கஜேந்திரகுமார் கூறுகின்ற அழகான வார்த்தைகளின் பின்னால் மக்களை ஏமாற்றும் வெற்றுச் சுலோகங்களே உள்ளன.

இவர்கள் சர்வதேசம் என்று இவர்கள் கூச்சலிடும் நாடுகள் மைத்திரிபாலவையும், ராஜபக்ச இல்லாத அரசை நம்புங்கள் என்று கூறுகின்றது. இலங்கை அரசோடு இணைந்து அபிவிருத்தி செய்யுங்கள் இனப்படுகொலை என்று பேசாதிர்கள் என்றெல்லாம் இவர்கள் கூறும் சர்வதேசம் ஆணையிட, இவர்களோ சர்வதேசத்தை நம்புங்கள் என்கின்றனர்.

ஆக, சர்வதேச விசாரணை நடத்துவோம் என்றும் சர்வதேசத்தைப் பிடித்து இனப்படுகொலை என்று கூறுவோம் என்றும் இக் குழுவினர் கூறுவது அப்பட்டமான பொய். மக்களை அழகான உணர்ச்சியூட்டும் வார்த்தைகளால் தேர்தலுக்காக ஏமாற்றும் வழிமுறை இது!

b) ஏமாற்றத்திற்கான குரல்:  ‘மாற்றத்திற்கான குரல்’ என்ற முழக்கத்தோடு அரசியல் கடைவிரித்திருக்கும் கஜேந்திரகுமார் இலங்கை ஒற்றையாட்சிப் பாராளுமன்றத்தில் பேரினவாதிகள் மத்தியில் என்ன மாற்றத்தை எதிர்பார்க்கிறார். காலனியத்திற்குப் பின்னான காலம் முழுவதும் பாராளுமன்றம் ஒற்றையாட்சிப் பாராளுமன்றம் என்பது குறைந்தபட்ச ஜனநாயகத்தைக் கூட உத்தவாதம் செய்யவில்லை என்பதால் தானே போராட்டமே ஆரம்பித்தது?

ஆக, கஜேந்திரகுமார் மட்டும் பகலில் விளக்குப் பிடித்து தேசியத்தின் பெயரால் பாராளுமன்ற வளாகத்திற்குள் ஜனநாயகத்தை எப்படித் தேடுவார்? ஆக,, கஜேந்திரகுமாரின் குரல் மாற்றத்திற்கான ஏமாற்றத்திற்கானதா?

c) விடுதலைப் புலிகள் மீதான விசாரணை: கஜேந்திரகுமாரின் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் இன்னொரு உணர்ச்சி முழக்கம் ‘விடுதலைப் புலிப் போராளிகள் விசாரிக்கப்படக்கூடாது’ என்பதாகும். அதற்கு அவர்கள் கூறுகின்ற காரணம் புலிகள் அமைப்பிலிருந்த போராளிகள் ஏற்கனவே இலங்கை அரசால் விசாரிக்கப்பட்டுத் தண்டனை அனுபவித்துவிட்டார்கள், தண்டனை அனுபவித்தவர்கள் அதே குற்றத்திற்காக மீண்டும் தண்டிக்கப்படக் கூடாது என்பதாகும். எவ்வளவு அபத்தமான காட்டிக்கொடுப்பு இது.

இதன்படி தண்டனை அனுபவிக்காமல் அகதிகளாக வேற்றுநாடுகளில் இருப்பவர்கள் போர்க்குற்றத்திற்காகத் தண்டிக்கப்படலாம் என்பது தானே இதன் உள்ளர்த்தம்?

புலம்பெயர்ந்து புலிகளின் உறுப்பினர்கள் எனக் கூறி அரசியல் தஞ்சம் கோரியவர்கள் போர்க் குற்றமிழைத்தவர்கள் என மேலை நாடுகளால் குற்றம் சுமத்தப்பட்டு தஞ்ச விண்ணப்பம் நிராகரிக்கப்படுகின்றது. இவர்கள் போர்க்குற்ற விசாரணை என்ற பெயரில் நாளை தண்டிக்கப்படலாம். இதற்கும் கஜேந்திரகுமாரின் கூற்றிற்கும் நெருங்கிய தொடர்பு உள்ளதா எனத் தெரியவில்லை. ஆனால் ஆட்சி மாற்றத்தின் பின்னர் அமெரிக்கா போன்ற ஏகாதிபத்திய நாடுகளுக்கு எதிராக எழக் கூடிய எதிர்ப்பைத் தணிப்பதற்கான அடியாளாக கஜேந்திரகுமார் பயன்படுவார் என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை.

d)சுயநிர்ணைய உரிமையை நிராகரித்தல்:  சமஷ்டித் தீர்வுஇடையில் சுயநிர்ணய உரிமையுடன் கூடிய சமஷ்டித் தீர்வு தேவை என்கிறார்கள். சுயனிர்ணைய உரிமைக்கும் சமஷ்டிக்கும் என்ன தொடர்பு? சுயநிர்ணைய உரிமை என்பதே பிர்ந்து செல்வதற்கான உரிமை. மக்கள் இதற்காகத்தானே இதுவரை தமது குடித்தொகையின் ஒரு பகுதியை இழந்துபோனார்கள்? இதற்காகத்தானே உலகமெங்கும் சிதறுண்டு போனார்கள்?

சமஷ்டி என்பதே அடிப்படையில் சுயநிர்ணையத்தை நிராகரிப்பதாகும். ‘நான் கடவுள் சத்தியமா கடவுள் நம்பிக்கை இல்லாதவன்’ என்று கூறிவது போன்ற ஏமாற்று இது.

e) யார் அழித்தாலும் அசையமாட்டோம்: எந்த நாட்டுடனும் பகையுறவு இல்லை என்கிறது இவர்களின் மற்றோரு சுலோகம். கடந்த 35 வருடங்களாக இந்தியா ஈழத்தமிழர்களின் வாழ்வின் ஒவ்வொரு அங்கத்திலும் தலையிட்டு அழித்துவருகிறது. அமெரிக்காவும் அதன் அணியும் இனப்படுகொலை நடத்தி ஈழப் போராட்டத்தை அழித்த பின்னர் மைத்திரி அரசோடு இணைந்து ‘கைவீசம்மா கைவீசு’ என பாப்பாப் பாட்டுப் பாடச்சொல்லி மிரட்டுகின்றன. புலிகளில் செயற்பாடு புலம்பெயர்ந்த அப்பாவிப் போராளிகள் மீது போர்க்குற்றம் சுமத்துகின்றன. இந்தச் சூழலில் எந்தக் கூச்சமும் இல்லாமால் எல்லா நாட்டின் அதிகாரவர்க்கங்களுடனும் பகையின்றி உறவு வைத்துக்கொள்வோம் என்கிறார் கஜேந்திரகுமார்.

அப்படியானால் பேரினவாத இலங்கை அரசோடும் மேற்குறித்த நாடுகளைப் பகைத்துக்கொள்ளமல் உறவு வைத்துக்கொள்ள வேண்டும் அல்லவா?

f) ஒரு நாடு இரு தேசம் : இவ்வளவிற்கும் மேல் ஒரு நாடு இரு தேசம் என்ற கருத்தையும் முன்வைத்துத் தேர்தலில் போட்டியிடுவதாகக் கூறுகிறார்கள்.

சுயநிர்ணைய உரிமை கோருவதாகக் கூறும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி, ஒரு நாடு என்று கூறி சுயநிர்ணைய உரிமையைக் கொச்சப்படுத்துவது எவ்வளவு அபத்தமானது?

சுய நிர்ணைய உரிமை என்பது பிரிந்துசெல்வதற்கான உரிமை. பிரிந்து செல்லும் உரிமையை பெற்றுக்கொண்ட பின்னர் ஒரு நாடாக இணைந்திருப்பதா அன்றிப் பிரிந்து இரண்டு நாடுகள் ஆவதா என்பது மக்களைப் பொறுத்தது. இலங்கையில் ஆறாவது திருத்தச்சட்டம் பிரிவினையைத் தடை செய்வதால் இதற்கு மேல் பேச முடியாது என்கிறனர். சர்வதேசச் சட்டங்களின் அடிப்படையில் பிரிந்து செல்வதற்கான உரிமை தடைசெய்யப்பட முடியாத ஒன்று. ஆக, ஆறாவது திருத்தச்சட்டம் பிரிந்து செல்லும் உரிமை கோருவதைத் தடைசெய்ய முடியாது.

நிலமை இவ்வாறிருக்க கஜேந்திரகுமார் சுயநிர்ணைய உரிமை வேண்டாம் என்கிறார். அதேவேளை சுய நிர்ணைய உரிமைக்குப் போராடுவோம் என்கிறார்.

தவிர, வடக்குக் கிழக்குத் தமிழர்கள் சுயநிர்ணைய உரிமைக்கான தமது போராட்டத்தை ஆரம்பித்த காலப்பகுதியிலேயே மலையக மக்கள் சுயநிர்ணைய உரிமைக்கான போராட்டத்தை ஆரம்பித்தனர். சுய நிர்ணைய உரிமை கோரிப் போராடிய மலையக் மக்கள் விடுதலை முன்னணி என்ற அமைப்பு சந்திரசேகரின் தலைமையில் மலையக மக்கள் முன்னணியாக மாற்றமெடுத்து சீரழிந்து போனது.

எழுபதுகளிலேயே மலையக மக்கள் தனியான தேசிய இனம் என்ற தத்துவார்த்த அடிப்படையிலானா ஆய்வுகள் மலையகத்தவர்களால் வெளிக்கொண்டுவரப்பட்டது. இதனை முன்வைத்துப் பெருந்தோட்டத் தொழிலாளர்களின் எதிர்காலம் என்ற நூல் பீ.ஏ.காதர் இன் முதலாவது நூலாக வெளிவந்தது.

ஒரு நாடு இரு தேசம் என்ற முழக்கத்தின் கீழ் கஜேந்திரகுமார் மலையக மற்றும் முஸ்லீம் மக்களின் சுய நிர்ணைய உரிமையை மறுக்கிறார். வட கிழக்குத் தமிழர்கள் ஒரு தேசம் என்றும் ஏனைய அனைத்து மக்களும் மற்றொரு தேசம் என்ற தொனிப்பட இரண்டு தேசம் ஒரு நாடு என்கிறார்.

ஆக, மலையக் முஸ்லீம் மக்களை சிங்களப் பேரினவாத்த்தோடு இணைந்திருக்கச் சொல்கிறார். ஏனைய தேசிய இனங்களின் அடிப்படை ஜனநாயக உரிமையான சுய நிர்ணைய உரிமையை மறுத்துவிட்டு வட கிழக்குத் தமிழர்கள் மட்டும் எப்படி சுயநிர்ணைய உரிமை கோரலாம் என்பது எப்படிச் சரியாகும்.?

முழுமையான பொய்களை அடித்தளமாகக்கொண்டு தோற்றுவிக்கப்பட்ட தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தேர்தல்கால சுலோகங்கள் மக்களை மந்தைகளாக்குகிறது.

இவை தவிர, இன்று கஜேந்திரகுமார் குறுக்கும்மறுக்குமாக நடந்துதிரியும் மண்ணில் அவரது காலடியில் நடக்கும் இனவழிப்புக் குறித்து மூச்சுகூட விடவில்லை. முள்ளிவாய்க்கால் அழிப்பின் பின்னர் இன்று நடைபெற்றுக்கொண்டிருக்கும் மாபெரும் சதிதான் ‘சுன்னாகம் இனச்சுத்திகரிப்பு’. வலிகாமம் பகுதி மண்ணும், நீரும் மக்களின் பாவனைக்கு ஒவ்வாத இடமாக மாற்றப்பட்டுள்ளது. அரச பயங்காவாதி சம்பிக ரணவக்க என்ற இலங்கை மின்வலு அமைச்சரும் சிங்கள பௌத்த பேரினவாதியும் சுன்னாகம் பகுதி முழுவதும் கழிவு நீரை வெளியேற்றி மக்களை கொடிய நஞ்சின் மீது வாழ்கை நடத்த நிர்பந்தித்துள்ளனர்.

தேர்தல் அறிவிக்கப்பட்ட பின்னர் யாழ்பாணம் சென்ற சம்பிக்க ரணவக்க விவசாயத்திற்குப் பயன்படுத்தப்பட்ட கிருமிநாசினிகளே அழிவிற்குக் காரணம் என அப்பட்டமாகப் பொய்கூறும் போது கஜேந்திரகுமார் குழு வாக்குப்பொறுக்க அலைந்துகொண்டிருந்தது.

அழிக்கும் சர்வதேசத்தை நம்புங்கள், பேரினவாதிகளின் பாராளுமன்றத்தில் மாற்றம் எற்படும் என நம்புங்கள், சுயநிர்ணய உரிமையைத் தலைகீழாக்கி அழித்துவிடுங்கள், தண்டிக்கப்படாத போராளிகளைப் போர்க்குற்ற்வாளிகள் ஆக்குங்கள், மலையக மற்றும் முஸ்லீம் மக்களை பேரினவாத அரசுடன் இணைத்துவிடுங்கள் என்பனவே கஜேந்திரகுமாரின் தேர்தல்கால முழக்கத்தின் மறுபக்கம்.

ஏனைய கட்சிகள் தொடர்பாகவும் முடிவுரையும் நாளை பதியப்படும்….

-இனியொரு…

http://inioru.com/%e0%ae%a4%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%b4%e0%af%8d%e0%ae%95%e0%af%8d-%e0%ae%95%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%ae%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%88/

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தமிழ்க் கட்சிகள் மக்களை ஏமாற்றும் ஆதாரங்கள் (2)

07/25/2015 இனியொரு...

கஜேந்திரகுமாரின் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் வேலைத்திட்டமற்ற வெற்று முழக்கங்களின் பின்புலத்திலுள்ள ஆபத்துக்கள் முதலாவது பகுதியில் குறிப்பிடப்பட்டுள்ளது. தேர்தலை நோக்கமாகக் கொண்டு மக்களை உணர்ச்சிவசப்படுத்தும் நோக்கில் முன்வைக்கப்பட்ட முழக்கங்கள் போல இவை தோன்றினலும், இவற்றின் பின் விளைவுகள் ஆபத்தானவை. இவர்கள் தெரிந்துகொண்டே திட்டமிட்டு இவ்வாறான சுலோகங்களை முன்வைத்திருந்தால் இவற்றை மீள் பரிசீலனைக்கு உட்படுத்த மாட்டார்கள்.

புலம்பெயர் நாடுகளில் தமிழ்த் தேசியத்தைப் பிழைப்பாக நடத்தும் மக்கள் விரோதிகளுக்கு இரண்டு தேவைகள் உண்டு. முதலாவதாக தமது முகவர் போலச் செயற்படும் கட்சி ஒன்றின் தேவை. இரண்டாவதாக மகிந்த ராஜபக்சவிற்கு இணையான பேரினவாதியின் இருப்பு. இதில் முதலாவது தேவையைக் கஜேந்திரகுமார் நிறைவு செய்கிறார். ஆக, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் அரசியல் முழக்கங்கள் அனைத்தும் புலம்பெயர் தமிழ்த் தேசியவாதிகளின் தேவையை ஒட்டியே முன்வைக்கப்படுகின்றன. அமெரிக்காவோடு ஓடிப்பிடித்து விளையாடுவோம் என்றும், ராஜபக்சவைப் பிடித்துத் தூக்கில் போட்டு வெடிகொழுத்துவோம் என்றும் கேலிகூத்தான வாக்குறுதிகள் மட்டுமே புலம்பெயர் குழுக்களின் அரசியல்.

அமெரிக்கா போன்ற நாடுகள், மிக நேர்த்தியாகத் திட்டமிட்டு போராட்டத்தையும், போர்குணமும் சமூகப்பற்றுமுள்ள போராளிகளையும் அழித்துக்கொண்டிருப்பதைக் குறித்து இவர்கள் மூச்சுவிடுவதில்லை.

ஜனாதிபதித் தேர்தலில் வாக்களிக்க வேண்டாமென்று கஜேந்திரகுமார் குழு பிரச்சாரங்களை முடுக்கிவிட்டிருந்தது. மக்களுக்குத் தேர்தல் ஊடாகப் போலி நம்பிக்கைகளை வழங்கும் அமைப்பு முறையை நிராகரித்து தேர்தலைப் புறக்கணிக்குமாறு பல்வேறு அரசியல் சக்திகள் கருத்தை முன்வைத்தன. தேர்தல் முறையை ஏற்றுக்கொண்டு அதனூடாக மாற்றத்தை ஏற்படுத்தலாம் எனக் கூறும் கஜேந்திரகுமார் ஜனாதிபதித் தேர்தலைப் புறக்கணிக்கக் கோரியதன் காரணம் என்ன?

தமிழ்ப் பேசும் மக்கள் கஜேந்திரகுமார் கேட்டுகொண்டதன் அடிப்படையில் தேர்தலைப் புறக்கணித்திருந்தால் மகிந்த மீண்டும் ஆட்சிபீடத்தில் அமர்ந்திருப்பார் என்பது உறுதி.

மொத்தத் தமிழ்ப் பேசும் மக்களும் மகிந்தவை எதிர்த்து வரலாறு காணத அளவில் வாக்குச் சாவடிகளுக்குச் சென்று வாக்களித்த போது தேர்தலைப் புறக்கணிக்கக் கோரியதன் காரணம் தெளிவற்றது. மகிந்தவின் இருப்பிற்கான புலம்பெயர் தமிழ்த் தேசியக் குழுக்களின் தேவைக்கான குரலாகவும் இதனைக் கருதலாம்.

சரி, அப்போது மகிந்தவை ஆட்டம்காண வைத்த தேர்தலைப் புறக்கணித்தது ஏதோ ஒரு வகையில் நியாயமானால் ஏன் இப்போது பாராளுமன்றத் தேர்தலைப் புறக்கணித்து ஒற்றையாட்சி மீது மக்களின் வெறுப்பை உணர்த்துமாறு கோரக்கூடாது.

புலம்பெயர் தமிழ்த் தேசியக் குழுக்களின் வாக்குறுதிகள் சாத்தியமற்றவை என்பது அவர்களுக்கே தெரிந்திருந்தது, இன்று அவை சேடமிழுத்துக்கொண்டிருக்கின்றன. இவ்வாறான சூழலை இலங்கையின் ஒற்றையாட்சிப் பாசிசப் பாராளுமன்றத்திற்குச் செல்வதை ‘மாற்றத்திற்கான குரல்’ என்ற மற்றொரு கோமாளித்தனத்தை புலம்பெயர் குழுக்கள் அரங்கேற்ற ஆரம்பித்துவிட்டன.

இதற்கு மிகப் பொருத்தமான தெரிவாக கஜேந்திரகுமாரைத் தவிர வேறு யாரையும் கண்டுபிடித்திருக்க முடியது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணிக்கும் மலையளவு வேறுபாடிருப்பதாக இணையங்களில் பாராளுமன்றத் தேர்தல் பிரச்சாரம் நடைபெறுகின்றது. வேறுபாடு என்பது அவர்கள் முன்வைக்கும் சுலோகங்களின் மட்டுமே காணப்படுகின்றது, நடைமுறையில் இரண்டு கட்சிகளுமே ஒரே விடையத்தைத்தான் கூறுகின்றன.

வேறுபாடுகளை விட ஒற்றுமையே இவர்கள் மத்தியில் அதிகம்:

– அழிக்கும் சர்வதேசத்தைப் பிடித்து வேண்டியத்தைப் பெற்றுத்தருவோம் என மக்களை ஏமாற்றுதல்.

– ஏனைய தேசிய இனங்களிலிருந்தும் உலகின் ஜனநாயக சக்த்திகளிருந்தும் தமிழ்ப் பேசும் மக்களைத் தனிமைப்படுத்துதல்.
– இலங்கை அரசின் பாசிசப் பாராளுமன்ற அமைப்பு முறையை நம்பக் கோருவது.

– மக்களின் அன்றாடப் பிரச்சனைகளைக் கருத்தில் கொள்ளாது தேர்தல் காலத்திற்காக மட்டும் வெற்று முழக்கங்களைத் தயார்படுத்திக் கொள்வது.(இரண்டு கட்சிகளும் அண்ணார்ந்து பார்த்துக்கொண்டிருக்கும் போதே சுன்னாகத்தில் அழிப்பு நடைபெற்றது.)

– அழிவுகளையும் பின்விளைவுகளையும் சிந்திக்காமல் வெற்று முழக்கங்களால் மக்களை உணர்ச்சிவசப்படுத்தி வாக்குப் பொறுக்க முனைவது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு:

இவர்கள் தமது பெயரை தமிழ்த் தேசியச் சாம்பார் என மாற்றிக்கொள்ளலாம். உப்புப் புளியற்ற இந்தச் சாம்பாரில் சுவையற்ற அத்தனை அம்சங்களும் கலந்திருக்கின்றன. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் ஜனநாயகம் இருப்பதால் அதிலிருந்து விலகிச் செல்லப் போவதில்லை என்று வட மாகண முதலமைச்சர் சீ.வீ.விக்னேஸ்வரன் லண்டனில் முழங்கினார். இனக் கொலையாளிகள், போர்க்குற்றவாளிகள் போன்றவர்களிலிருந்து கடை நிலைத் திருடர்கள் வரை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தூண்கள். இவர்கள் அனைவரும் சுயாதீனமாகச் செயற்பட வசதியளிக்கப்பட்டுள்ளது. இதையே ஜனநாயலம் என்று கூறிக்கொள்கின்றனர்.

Sumanthiran

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை வழி நடத்துபவர் எம்.ஏ.சுமந்திரன். சுமந்திரன் சம்பந்தன் இணைந்து உருவாக்கும் திட்டங்களுக்கு நேரடியாக முரண்படாமல் ஒவ்வொருவரும் தாம் வேண்டியதைப் பேசுவதற்கு உரிமை உண்டு. ஆக, அதுவே ஜனநாயகம் என அந்த அமைப்பில் அழைக்கப்படுகின்றது.

a) மாறும் சுலோகங்களின் பின்னாலுள்ள அதிகாரவர்க்க இணக்க அரசியல்: சம்பந்தன் சிங்கக் கொடியோடு தோன்றி தமிழ்த் தேசியத்தை நல்லிணக்கத்திற்கு விற்றுவிட விக்னேஸ்வரன் நெற்றிப் பொட்டும் திருநீறுமாக ஒரு நாடும் இரு தேசமும் என்பார். அதே விக்னேஸ்வரன் இனப்படுகொலை நடந்தபின்னரே நாட்டில் ஜனநாயகம் மலர்ந்தாகக் கூறிவிட்டு பின்னர் இனப்படுகொலைக்கு எதிராகத் தீர்மானம் நிறைவேற்றுவார். கூடவே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் இதைத்தான் சொல்கிறது என்பார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தமது கட்சியின் முழக்கங்களைக் கூட எப்போதும் உறுதியாக முன்வைத்ததில்லை.

தமது வசதிக்கேற்றவாறு மாற்றிக்கொள்வார்கள். இவை எல்லாவற்றின் பின்னாலும், இலங்கைப் பேரினவாதப் பாசிச அரசுடன் இணைந்தே தமது நடவடிக்கைகள் அமைந்திருக்கும் என வெளிப்படையாகக் கூறுகிறார்கள்.

b)சுயநிர்ணைய உரிமையத் தேடித்தேடி நிராகரித்தவர்கள்:

இலங்கையில் ஆறாவது திருத்தச்சட்டம் பிரிவினையைத் தடைசெய்கிறது. பிரிந்து செல்லும் உரிமையை அது தடைசெய்யவில்லை. தமிழ்ப் பேசும் மக்கள் பிரிந்து செல்வதற்கான உரிமையைக் கோருவது சட்டப்படி இலங்கையில் குற்றமல்ல. நிலைமை இவ்வாறிருந்த போதிலும் தாம் சுயநிர்ணைய உரிமை கோரப்போவதில்லை எனத் தமிழ்த் தேசியத்தின் தலையில் அடித்து சத்தியப்பிரமாணம் எடுத்துக்கொண்டவர்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர். தமது கட்சியின் பெயரில் தேசியம் என்று பெயரை வைத்துக்கொண்டுள்ள கூட்டமைப்பு விதேசிகளின் அசைக்க முடியாத கூட்டு என்பதில் யாரும் சந்தேகம் கொள்ளத் தேவையில்லை.

c) சுயநிர்ணைய உரிமை விற்பனை செய்யப்பட்டுவிட்டது: இரண்டு முக்கியமான அழிவு நடவடிக்கைகளை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நடைமுறைப்படுத்திக்கொண்டிருக்கிறது. முதலாவதாக இலங்கைப் பாசிச அரசுகளின் அதிகாரத்திற்கு உட்பட்டே தாம் உரிமைகளைப் பெற்றுக்கொள்ள முடியும் என்கிறது. இரண்டாவதாக அவ்வாறு உரிமைகளைப் பெற்றுக்கொள்ள வேண்டுமானால் இந்தியாவுடனும் அமெரிக்கா போன்ற நாடுகளின் தயவை நாடவேண்டும் என்கிறது. இவற்றையெல்லாம் அவர்கள் மூடிமறைக்கவில்லை. வெளிப்படையாகவே மேற்கொள்கிறார்கள். இவர்கள் கேட்கும் உரிமைகளில் சுயநிர்ணையம் என்ற அடிப்படை ஜனநாயக உரிமை உள்ளடங்கவில்லை.ஆக, சில்லரை உரிமைகளுக்காக சுயநிர்ணைய உரிமையையும் நான்கு தசப்தப் போராட்டத்தையும் அன்னியர்களிடமும் இலங்கை அரசிடமும் மொத்த விற்பனை செய்துவிட்டனர்.

தொடரும் …

 

http://inioru.com/%e0%ae%a4%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%b4%e0%af%8d%e0%ae%95%e0%af%8d-%e0%ae%95%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%ae%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%88-2/

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.