Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கிளிநொச்சி - கொழும்பு - புதுடில்லிஇடையில் சென்னை

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

கிளிநொச்சி - கொழும்பு - புதுடில்லிஇடையில் சென்னை -(பீஷ்மர்)

சென்ற வாரம் ஈழத் தமிழர் உரிமைப் போராட்ட வளர்ச்சிப் போக்கில் இரண்டு முக்கிய நிகழ்ச்சிகள் இடம்பெற்றுள்ளன. இவை இரண்டுமே கிளிநொச்சி- கொழும்பு- சம தலைமை நாடுகள் என்ற கோட்டின் ஓட்டத்துக்குள் நின்று விடுமோ என்ற ஐயத்துக்குள்ளாகியிருந்த இப் பிரச்சினையின் பரிமாணத்தை தீர்மானிக்கும் பிரதான சக்தி சமதலைமை நாடுகளிலும் பார்க்க புதுடில்லிக்கே உரியது என்பது இராஜதந்திர முறைமையில் நிலைநாட்டப்பட்டது. இது ஒரு நிலையாக இன்னொரு நிலையில் மாவீரர் தின உரையில் விடுதலைப் புலிகளின் தலைவர் நிர்ணய பலமுள்ள ஒரு வாக்கியத்தை பயன்படுத்தியுள்ளார். " சிங்கள பேரினவாதத்தின் கடுமையான போக்கு, தனியரசு என்ற ஒரேயொரு பாதையைத்தான் இன்று தமிழீழ மக்களுக்கு திறந்து வைத்திருக்கின்றது." இந்த வாக்கியம் 2002 முதல் நடைமுறையிலிருந்து வந்ததென கருதப்படுகின்ற பல எடுகோள்களையும் எதிர்பார்ப்புகளையும் நிராகரித்துள்ளது.

உண்மையில், மேற்கூறிய இரு நிகழ்ச்சிகளுமே தனித்தனியாக ஆராயப்பட வேண்டியவை. ஆனால், தென்னாசிய பிராந்தியத்துள் நடக்கும் இந்தியா அல்லாத ஒரு நாட்டின் தமிழர் உரிமைப் போராட்டம் ஒன்று, எத்தகைய சூழல் வட்டங்களுக்குள் தொழிற்படுகின்றது என்ற உண்மையை இந்த இரண்டு நிகழ்ச்சிகளும் எடுத்துக்காட்டுகின்றன.

இதில் மேலுமொரு சுவாரஷ்யம் என்னவென்றால், இலங்கையின் ஜனாதிபதி புதுதில்லியில், தலைமை ஆசிரியருக்கு பதிலளிக்கும் ஒரு மாணவன் போல் இருந்த வேளையிலேயே மாவீரர் தின உரை நிகழ்த்தப்பட்டுள்ளது.

உண்மையில் மாவீரர் தின உரைக்கு கொழும்பு காட்டிய முதற் பதிற்குறிகள் டில்லிப் பயண பின்புலத்திலேயே விளங்கப்படல் வேண்டும். எனவே, மாவீரர் தின உரைக்கு வருவதற்கு முதல் கொழும்பு - தில்லி உறவுகள் பற்றி ஒரு குறிப்பு அவசியமாகிறது.

கொழும்பு - தில்லி உறவில் கடந்த சில காலமாக கொழும்புக்கும் தில்லிக்குமிடையில் சென்னை என்ற ஒரு பட்டினம் உள்ளது. அது தமிழ்நாட்டின் தலைநகர் என்பது உணரப்படாமலும் உணர்ந்து கொள்ள வேண்டிய தேவை இல்லாமலும் விடயங்கள் நடைபெற்றன. ஆனால், கடந்த ஒரு வருடமாக இந்தப் போக்கில் ஒரு பெரிய மாற்றம் ஏற்பட்டது. இலங்கையிலிருந்து தமிழ் அகதிகள் தமிழ்நாட்டுக்கு செல்வதும் அவர்கள் அகதி நிலைக்கு ஆளாக்கப்பட்ட முறைமையும் தமிழகத்தின் அடிநிலையிலிருந்து சில உணர்வுகளை ஊக்குவித்தது. புதுதில்லியைப் பயன்படுத்தி இலங்கையின் தமிழர்களை நிர்ப்பந்தங்களுக்கு உள்ளாக்கும் அரசியலை தில்லி தொடர்ந்து செய்வதற்கு முடியாது போய்விட்டது. விடுதலைப் புலிகள் என்ற பெயரைச் சொல்லிக் கொண்டு கொழும்பு தன் காரணங்களுக்காகவும், தில்லியின் `சவுத் புளக்' தன் காரணங்களுக்காகவும் இலங்கைத் தமிழ் மக்களுக்கு வேண்டாதனவற்றைச் செய்வதைத் தொடர்ந்து மேற்கொள்ள முடியவில்லை. விடுதலைப் புலிகளின்பால் பெரு விருப்பம் கொள்ளாத கலைஞரால் கூட ஒரு கட்டத்துக்கு மேல் நிலைமையைச் சமாளிக்க முடியாததாயிற்று. அரசியல் தீர்வுக்கான எவ்வித முன்னெடுப்பும் இல்லாது இந்தியா ஏற்கனவே ஏற்படுத்திய ஒழுங்கையும் சீர்குலைக்கும் முயற்சிகளை (வட, கிழக்கு பிரிப்பு) தொடர்வதற்காக பயங்கரவாத எதிர்ப்பு முகமூடியை தொடர்ந்து பயன்படுத்துவதற்கு ஏலாது போயிற்று. பிரணாப் முகர்ஜி முதல், இந்தியாவின் பிரதம மந்திரி வரை இந்தியாவின் செய்தியினை அழுத்தமாகவே தெரிவித்துள்ளனர்போலத் தெரிகின்றது. மன்மோகன் சிங் சந்திப்பின் போது ஜனாதிபதி மாத்திரமே உரையாடலில் பங்குபற்ற வேண்டியிருந்ததென்பது இப்பொழுது படிப்படியாக பரகசியமாகிறது.

இத்தகைய ராஜரீக அனுபவங்கள் புதிய ஜனாதிபதிக்கு மிகக் குறைவு. இதனால் அவர் இந்தியப் பத்திரிகையாளர்களுக்கு சொன்னவை மூலம் அவருக்கு சொல்லப்பட்டவை தெட்டத்தெளிவாக தெரிந்தன. வடக்கு, கிழக்கு இணைப்பை 13 ஆவது ஆட்சி யாப்பு திருத்தத்தின்படி அப்பகுதி மக்களே தீர்மானிப்பர் என்று கூறியதிலிருந்து அதைப்பற்றி பேச வேண்டிய தேவை எவ்வாறு ஏற்பட்டது எனும் விடயம் சுலபமாகத் தெரிகின்றது.

எல்லாவற்றுக்கும் சிகரம் வைத்தால்போல அமைந்தது, 30 ஆம் திகதி கலைஞர் சென்னையிலே பத்திரிகையாளர்களுக்கு கூறியது, 29 ஆம் திகதி தில்லியிலே அவர் பார்த்தவற்றை வைத்துக்கொண்டும் 27 ஆம் திகதி மாவீரர் தின உரைபற்றிக் குறிப்பிடும்பொழுது சுதந்திர தமிழீழத்தை தான் வரவேற்பதாக முதலிலே கூறி அதனைத் தொடர்ந்து இணக்கத் தீர்வுகள் வந்தால் அதை தமிழர்கள் ஏற்றுக்கொண்டால்தான் அவற்றை எதிர்க்கப்போவதில்லை என்றும் கூறினார். கொழும்பு- தில்லி உறவில் சென்னை மீண்டும் முக்கியமாகியுள்ளது. இதனை எவ்வாறு ஈழத்தின் தமிழர் உரிமைப் போராட்டம் பயன்படுத்தப் போகின்றது என்பது தான் ஒரு முக்கியமான சவாலாகும்.

இதுபற்றிப் பேசும்பொழுது மாவீரர் தின உரை மிக மிக முக்கியமாகின்றது. சுதந்திர தமிழீழம் என்ற நிலைமைக்கு சிங்கள பேரினவாதம் எவ்வாறு இலங்கைத் தமிழர்களைத் தள்ளியுள்ளது என்பதற்கான விளக்கமாகவே அந்த உரை அமைந்திருந்தது. வட, கிழக்கின் மீது திணிக்கப்படுகின்ற இன்னல்கள் மாத்திரமல்லாது, பயங்கரவாதம் எனும் கோஷத்தை கொழும்பு அரசாங்கம் பயன்படுத்துகின்ற முறையையும் அத்துடன் அரசியல் தீர்வுக்கான முன்னெடுப்புகளுக்கு இடமில்லை என்பதையும் எல்லாவற்றுக்கும் மேலாக யூ.என்.பி.- சுதந்திரக் கட்சி இணைவே அடிப்படையில் தமிழரது உரிமைப் போரின் நியாயமான கோரிக்கைகளுக்கு எதிரானது என்பதையும் அந்த உரை சுட்டிற்று.

அந்த உரையின் உயிர் நிலையாக உள்ள வாதம் ஒரே நேரத்தில் போரும் சமாதானமும் என்ற கொள்கை. வட, கிழக்கை நிலைகுலையச் செய்து தமிழ் மக்களை வதைக்கின்றது என்பதாகும். அந்த உரைக்கான நல்லதோர் ஆங்கில மொழிபெயர்ப்பு இருந்ததாக பலர் பேசிக் கொண்டனர். ஆனால், சிங்கள மொழி பெயர்ப்புப் பற்றி எதுவும் எவராலும் கூறப்படவில்லை. அந்தப் பேச்சு சிங்களத்திலே எடுத்துக் கூறப்பட்டு சாதாரண சிங்கள மக்களுக்கு கொண்டு செல்லப்படுவதற்கான வழிமுறைகள் மேற்கொள்ளப்படுதல் அவசியம். சிங்கள மக்களிடையே தமிழரின் இந்த உரிமைப் போராட்டத்தையும் தமிழர்களின் சுயநிர்ணய உரிமையையும் ஆதரிக்கின்ற சிறு குழுவினருக்கு (அத்ததைய ஒரு சக்தி சிறியதாயினும் உள்ளது என்று குறிப்பிடப்படாமை அவர்களின் சிலரை சிறிது மனஞ்சோர வைத்துள்ளது.) இது பெருத்த பலமாக இருந்திருக்கும். ஆயினும், அந்த உரையின் பிரதான வாதத்தினை அவர்கள் புரிந்தும் கொள்கின்றனர்- ஏற்றும் கொள்கின்றனர்.

சற்று உன்னிப்பாக நோக்கும்பொழுது, இவ்வருடத்து மாவீரர் தின உரை சில முக்கிய சில உள்ளார்த்தங்களை கொண்டிருப்பதை அவதானிக்கலாம். அதற்குள்ளும் சில அரசியல் உபாய நிலைகள் காணப்படுகின்றன. தமிழகத்து தமிழருக்கும் புலம்பெயர் தமிழருக்கும் சொல்லப்பட்டுள்ளவை மிக முக்கியமானவை.

இந்த இரண்டையும் விட அந்தப் பேச்சின் இறுதி நிலைப்பாடு கொழும்பு அரசாங்கத்துக்கும் சம தலைமை நாடுகளுக்கும் சில சங்கடங்களை ஏற்படுத்தியுள்ளது. அவற்றுள் பிரதானமானது தான் இந்த நிலைக்கு தள்ளப்பட்டிருப்பதனால் அடுத்து அது தொடர்பாக எத்தகைய நடவடிக்கைகளை மேற்கொள்ளப்படும் என்பது பற்றி எதுவுமே கூறப்படாதுள்ளதாகும்.

நோர்வேயுடனான உறவு என்ன? கண்காணிப்புக் குழுவுடனான உறவு என்ன? என்பவை அச்சாணியான விடயங்கள். அவை பற்றிய பேச்சே இல்லை. சுதந்திர தமிழீழ தீர்மானத்துக்கு தள்ளப்பட்டிருக்கின்றோம் என்று சொல்வதன் மூலம் கொழும்பு அரசாங்கம் மீது பல பொறுப்புகளும் சுமத்தப்பட்டுள்ளன. அது மாத்திரமல்லாமல், பேச்சின் இறுதியில் சர்வதேச நாடுகள் தமிழர் உரிமைப் போராட்டத்தின் உண்மையான நியாயப்பாட்டை உணர்ந்து அதற்கு வேண்டிய அங்கீகாரத்தினை தர வேண்டுமென்ற வேண்டுகோளும் விடுக்கப்பட்டுள்ளது.

சற்று நிதானமாக நோக்கினால், கொழும்பு அரசாங்கத்துக்கு அந்த பேச்சுக்கு எத்தகைய பதிற்குறியை கொடுப்பது என்ற சிக்கல் இருந்து கொண்டே இருந்தது. விடுதலைப் புலிகளின் நிலைப்பாடுகளை கண்டிக்கின்ற அமெரிக்கத் தூதுவர், தொலைக்காட்சி நேர்காணல் ஒன்றில், அரசியல் தீர்வு பற்றிய பேச்சுவார்த்தை விடுதலைப் புலிகளுடனேயே நடத்தப்பட வேண்டும் என்று கூறியது ஒரு முக்கிய விடயமாகும். ஜனாதிபதி இந்தியாவிலிருந்து திரும்பியதன் பின்னர், உரை பற்றிய தமது நிலைப்பாட்டை எடுத்துக் கூறப்போவதாக நிமால் சிறிபால டி சில்வா கூறியிருந்தார்.

இவற்றுக்கிடையே ஒரு புதிய செல்நெறியும் காணப்படுகின்றது. தில்லியில் ஏற்பட்ட நெருக்குவாரங்களுக்கு பதில் இருக்கும் முறையிலோ என்னவோ இப்பொழுது ஜனாதிபதி விடுதலைப் புலிகள் மாத்திரமே தமிழ் மக்களின் பிரதிநிதிகள் அல்ல எனும் வாதத்தை சற்று அழுத்தமாகவே கூறத் தொடங்குகின்றார். இதை சற்று ஆழமாக நோக்கினால் இந்திய ஆராய்ச்சி, பகுப்பாய்வுச் சிறகுக்கும் ஏற்றுக்கொள்ளக் கூடிய ஒருவாதமாகக் கூட இருக்கலாம்.

இவை யாவும் இவ்வாறிருக்க வெள்ளிக்கிழமையன்று கொள்ளுப்பிட்டியில் நடந்த தற்கொலை குண்டுதாரி தாக்குதல் பற்றிய பதிற்குறிகள் மிக முக்கியமானவையாக உள்ளன. ஆனால், கொழும்பு அரசாங்கத்தை பொறுத்த வரையில் மாவீரர் தின உரையை சற்று ஒதுக்கி வைப்பவதற்கு இந்தச் சம்பவம் உதவியுள்ளது. விடுதலைப் புலிகள் இயக்கத்தைத் தடை செய்ய வேண்டுமென்ற குரல் ஜே.வி.பி., ஹெல உறுமய மூலம் மிகுந்த வலுவுடன் இப்பொழுது முன்வைக்கப்படுகின்றது. இதுபற்றி ஆலோசிப்பதற்கு அமைச்சரவையின் உப குழுவொன்று நியமிக்கப்பட்டிருப்பதாக கடைசியாகக் கிடைத்த செய்திகள் கூறுகின்றன. ?

-தினக்குரல்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.