Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உதவிப் பணியாளர்களுக்கு எதிரான வன்முறைகள்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

[22 - January - 2007] [Font Size - A - A - A]

உள்நாட்டுப் போரும் அரசியல் வன்முறைகளும் நிலவுகின்ற நாடுகளிலே தோன்றியிருக்கும் பாரதூரமான மனிதாபிமான நெருக்கடிகள் அரசாங்க சார்பற்ற தொண்டர் நிறுவனங்களின் பணிகளைக் கூடுதலான அளவுக்கு வேண்டி நிற்கின்ற இன்றைய காலகட்டத்திலே, துரதிர்ஷ்டவசமாக அந்த நிறுவனங்கள் முன்னென்றும் இல்லாத அச்சுறுத்தல்களை எதிர்நோக்குவதைக் காணக்கூடியதாக இருக்கிறது. வன்முறைகளினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மனிதாபிமான உதவிகளைச் செய்யும் அந்நிறுவனங்களின் பணியாளர்கள் பாதுகாப்பற்ற சூழ்நிலைகளில் பலவித இடர்பாடுகளுக்கு மத்தியில் செயற்பட வேண்டியிருக்கும் அதேவேளை, அவர்களுக்கு எதிராக திட்டமிட்ட முறையில் வன்முறைகளும் மேற்கொள்ளப்படுகின்றன. கெயர் இன்ரர் நாஷனல் (CARE International) நிறுவனம் கடந்தவாரம் வெளியிட்டிருக்கின்ற அறிக்கையொன்று உலகளாவிய ரீதியில் உதவிப் பணியாளர்கள் எதிர்நோக்குகின்ற வன்முறைகளின் பாரதூரத்தன்மையைத் தெளிவாக உணர்த்துவதாக அமைந்திருக்கிறது. அத்துடன், உதவிப் பணியாளர்களுக்கு எதிரான வன்முறைகளைப் பொறுத்தவரை, இலங்கை எந்தளவு தூரம் ஆபத்தானதாக இருக்கிறது என்பதையும் அந்த அறிக்கை உலகிற்கு உணர்த்தி நிற்கிறது.

2006 ஆம் ஆண்டில் ஆப்கானிஸ்தானுக்கு அடுத்தபடியாக உதவிப் பணியாளர்களுக்கு மிகவும் ஆபத்தான நாடாக இலங்கை காணப்பட்டது. கடந்த ஒரு தசாப்தகால நிலைவரங்களுடன் ஒப்பிட்டுப் பார்க்கும்போது கடந்த வருடம் உதவிப் பணியாளர்களுக்கு எதிரான வன்முறைகள் ஒரு உச்சநிலையை அடைந்திருந்தன. 83 உதவிப் பணியாளர்கள் கடந்த வருடம் கொலை செய்யப்பட்டிருந்த அதேவேளை, 778 பேர் காயமடைந்திருக்கிறார்கள். 52 பேர் கடத்திச் செல்லப்பட்டிருக்கிறார்கள். 2003 ஆம் ஆண்டுக்குப் பிறகு உலகில் கூடுதல் எண்ணிக்கையான உதவிப் பணியாளர்கள் கடந்த வருடமே வன்முறைகளுக்குப் பலியாகியிருக்கிறார்கள். ஆப்கானிஸ்தானில் 26 பேரும் இலங்கையில் 23 பேரும் சூடானில் 15 பேரும் கொலை செய்யப்பட்டதாக அறிக்கையில் குறிப்பிட்டு முதல் மூன்று இடங்களையும் `பிடித்த' நாடுகளை கெயர் இன்டர் நாஷனல் வரிசைப்படுத்தியிருக்கிறது. இலங்கையில் கொலை செய்யப்பட்ட உதவிப் பணியாளர்களில் 17 பேர் `பட்டினிக்கு எதிரான நடவடிக்கை' (Action Against Hunger) என்ற பிரெஞ்சு அரசாங்க சார்பற்ற தொண்டர் நிறுவனத்தின் உள்ளூர்ப் பணியாளர்களாவர். கடந்த ஆகஸ்டில் மூதூர் நகரில் இடம்பெற்ற இப்படுகொலைகள் சர்வதேச ரீதியில் பெருமளவு கண்டனக் குரல்களைக் கிளப்பியிருந்தன.

இலங்கையில் இடம்பெற்ற உதவிப் பணியாளர்களுக்கு எதிரான வன்முறைகள் குறிப்பாக வடக்கு, கிழக்கில் அரசாங்க சார்பற்ற தொண்டர் நிறுவனங்களின் மனிதாபிமானப் பணிகளை சீர்குலைக்கும் நோக்குடன் திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்டவையாகும். அண்மைக் காலத்தில் வடக்கு, கிழக்கில் தீவிரமடைந்த மோதல்களின் விளைவாக பல்லாயிரக்கணக்கான அப்பாவிக் குடிமக்கள் பாதிக்கப்பட்டு இடம்பெயர்ந்து கொண்டிருக்கும்வேளையில், அவர்களுக்கான அவசர மனிதாபிமான உதவிகளை விரைந்து செய்வதற்கு தொண்டர் நிறுவனங்களினால் இயலாமல் போவதற்கு பிரதான காரணம் அந்நிறுவனங்களுக்கு உகந்த பாதுகாப்பு உத்தரவாதம் இல்லாதமையேயாகும். கவலைக்குரிய இந்த நிலைவரம் தொடர்பில் சம்பந்தப்பட்ட தரப்பினர் கவனம் செலுத்தி உரிய நடவடிக்கை எடுப்பதில் தங்களுக்கு இருக்கும் பொறுப்பை உணர்ந்துகொண்டதாகத் தெரியவில்லை. மூதூரில் பிரெஞ்சு தொண்டர் நிறுவனத்தின் பணியாளர்கள் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தைத் தொடர்ந்து வெளிக்கிளம்பிய கண்டனங்களையடுத்து மனித உரிமைகள் மற்றும் அனர்த்த முகாமைத்துவ அமைச்சர் மகிந்த சமரசிங்க தெரிவித்திருந்த கருத்தொன்றை இச்சந்தர்ப்பத்தில் நினைவுபடுத்த வேண்டியிருக்கிறது. `வடக்கு, கிழக்கில் செயற்படுகின்ற அரசாங்க சார்பற்ற தொண்டர் நிறுவனங்களின் பணியாளர்கள் தங்களுக்கான பாதுகாப்பை அரசாங்கத்திடமிருந்து எதிர்பார்க்க முடியாது. இந்தத் தொண்டர் நிறுவனங்களினால் மேற்கொள்ளப்படுகின்ற பெறுமதிமிக்க மனிதாபிமானப் பணிகளுக்காக அரசாங்கம் நன்றியுடையதாயிருக்கிறது. என்றாலும், அவற்றின் பணியாளர்களுக்கு அரசாங்கத்தினால் பாதுகாப்பை வழங்க முடியாது. வடக்கு, கிழக்கில் தொடர்ந்தும் தங்கியிருந்து பணியாற்றுவதா, இல்லையா என்ற தீர்மானத்தை எடுப்பதென்பது முற்றுமுழுதாக தொண்டர் நிறுவனங்களின் பணியாளர்களைப் பொறுத்ததே' என்று அமைச்சர் சமரசிங்க தெரிவித்திருந்தார்.

இலங்கையைப் பொறுத்தவரை, உதவிப் பணியாளர்களுக்கு எதிரான வன்முறைகள் அதிகரிப்பதற்கு பின்னணியில் இருக்கக்கூடிய அரசியல் காரணிகளை நாம் கவனத்திலெடுக்கத் தவறக்கூடாது. போரின் விளைவாக அல்லது இயற்கை அனர்த்தங்களின் விளைவாகத் தோன்றுகின்ற மனிதாபிமான நெருக்கடிகளின் போது அவசர உதவிப் பணிகளை மேற்கொள்ளும் விடயத்தில் முகாமைத்துவமும் ஒருங்கிணைப்பும் முன்னென்றும் இல்லாத அளவுக்கு சர்வதேச மயப்படுத்தப்பட்டிருக்கின்ற இன்றைய காலகட்டத்தில், அரசாங்க சார்பற்ற தொண்டர் நிறுவனங்களுக்கு எதிராக திட்டமிட்ட ரீதியில் பிரசார இயக்கங்கள் முழு மூச்சுடன் முன்னெடுக்கப்பட்டுக் கொண்டிருக்கும் ஒரு துரதிர்ஷ்டவசமான நிலையைக் காண்கின்றோம். இத்தகைய பிரசாரங்களுக்கு அரசாங்க இயந்திரத்தின் ஒரு கணிசமான பிரிவும் அரசாங்க கட்டுப்பாட்டில் உள்ள ஊடகங்களும் தாராளமாக உதவி செய்து வருகின்றன. இத்தகையதொரு நிலைவரம் அரசாங்க சார்பற்ற தொண்டர் நிறுவனங்களுக்கும் அவற்றின் பணியாளர்களுக்கும் பாரதூரமான பாதுகாப்பு அச்சுறுத்தல்களைத் தோற்றுவிக்க உதவிக்கொண்டிருக்கிறது.

சமாதான முயற்சிகள் முன்னெடுக்கப்பட்ட காலத்தில் தென்னிலங்கையில் குறிப்பாக, பேரினவாத அரசியல் சக்திகளினால் தீவிரமாக மேற்கொள்ளப்பட்ட தொண்டர் நிறுவனங்களுக்கு எதிரான பிரசார இயக்கங்கள் அந்தச் சமாதான முயற்சிகள் சீர்குலைந்து மீண்டும் போர் மூண்டுவிட்ட சூழ்நிலையிலும் தொடருவதைக் காணக்கூடியதாக இருக்கிறது. நாட்டில் சமாதானம் தோற்றுவிக்கப்பட வேண்டுமென்று கோரி ஒரு சிறிய கூட்டத்தைத்தானும் நடத்த முடியவில்லை. உடனடியாகவே அத்தகைய கூட்டங்கள் குழப்பியடிக்கப்படுகின்றன. ஏற்பாட்டாளர்கள் தாக்குதலுக்குள்ளாகிறார்கள். ஆனால், முற்றுமுழுதாக போர் மீண்டும் முன்னெடுக்கப்பட வேண்டும் என்று தென்னிலங்கையில் நடத்தப்படக்கூடிய எந்தக் கூட்டத்திலும் ஒரு சிறுசச்சரவைக் கூடக் காணமுடிவதில்லை. போருக்கு ஆதரவான இதே அரசியல் சக்திகளே அரசாங்க சார்பற்ற தொண்டர் நிறுவனங்களுக்கு எதிராகவும் போர்க்கொடி தூக்கி நிற்கின்றன. சமாதானத்துக்கு விரோதமான சக்திகள் தென்னிலங்கையில் வலுப்பெறுவதற்கு வகைசெய்த காரணிகளே ஒட்டுமொத்தத்தில் இலங்கையில் அரசாங்க சார்பற்ற தொண்டர் நிறுவனங்களுக்கும் அவற்றின் பணியாளர்களுக்கும் எதிரான வன்முறைகள் மேலும் தீவிரமடைவதற்கு இன்று உதவிக்கொண்டிருக்கின்றன.

thinakkural.com

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.