Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வசுந்தராதேவி - வைஜெயந்திமாலா

Featured Replies

வசுந்தராதேவி - வைஜெயந்திமாலா: 1. பாப்புக் குட்டி!

 

‘இந்தியர்கள் குடியரசு நாளை எதிர்பார்த்துக் காத்திருந்த இன்பத் தருணம். 1949ன் பனி பொழியும் மார்கழி.

‘உன் கண் உன்னை ஏமாற்றினால்
என் மேல் கோபம் உண்டாவதேன்
டடடா டடடா டடடா டடடா... ’

‘வாழ்க்கை’ சினிமா படப் பாடலின் ஆரவாரம் தென்னகமெங்கும்!

மதராஸப் பட்டணத்தின் குடிமக்கள் அண்ணாந்து பார்த்து... பார்த்து, அவர்களின் கழுத்து வலித்தது. காரணம் ‘வாழ்க்கை’ டாக்கியின் விண் முட்டும் விளம்பரங்கள்!

‘ஏவி.எம். புரொடக்ஷன்ஸ் வாழ்க்கை’ என்று கொட்டை எழுத்துக்களில் பளிச்சிட, லட்சக் கணக்கான வண்ண வண்ண பிரம்மாண்ட பலூன்கள் வானம் தொட்டன. குழந்தைகளையும் குஷிப்படுத்தும் குதூகல ஏற்பாடு!

ஃபிலிம் ரோலில் ‘26 ஜனவரி 1950 இந்திய சரித்திரத்திலே ஒரு பொன்னாள்! ’

‘சினிமா சரித்திரத்திலே ஒரு பொன் ஏடு ‘வாழ்க்கை’

‘இது ஒரு ஏவி.எம். புரொடக்ஷன்ஸ் சமூகச் சித்திரம்! ’

‘வாழ்க்கை முழுவதும் மறக்க முடியாதது!’

hqdefault.jpg 

தமிழ்நாடு, கேரளா, மைசூர் எங்கும் 50 நகரங்களில் அமோக வெற்றியுடன் ஓடிக் கொண்டிருக்கிறது!

ஏ.வி.மெய்யப்பச் செட்டியாரின் சாமர்த்தியம் அவரது ‘வாழ்க்கை’ சினிமா விளம்பரங்களில் ஒவ்வொரு வடிவத்திலும் வெளிப்பட்டது.

1950 தைத்திருநாளில் வெளியானவை - 1. ஜூபிடரின் கிருஷ்ண விஜயம், 2. பாரதிதாசனின் அற்புதக் காதல் காவியம் - மாடர்ன் தியேட்டர்ஸ் ‘பொன்முடி’. பிப்ரவரியில் சென்னையில் ரிலிசான பி.யூ. சின்னப்பா - பி. பானுமதி முதன் முதலில் ஜோடி சேர்ந்த ரத்னகுமார்...

அத்தனைப் படங்களையும் வசூலில் முறியடித்தது ஏவி.எம்.மின் வாழ்க்கை.

1950-ன் முட்டாள்கள் தினம். சென்னை பாரகன் டாக்கீஸில், டாக்டர் பி.வி. செரியன் தலைமையில் வாழ்க்கை படத்தின் 100வது நாள் விழா விமரிசையாக நடைபெற்றது.

விருதுநகர் உள்ளிட்ட ஊர்களிலும், தமிழகத்தின் முக்கிய நகரங்களிலும் வாழ்க்கை 100 நாள்களைக் கடந்து ஓடியது. விருதுநகர் ராதா தியேட்டரில் நடந்த விழாவில், ‘சிலம்புச் செல்வர் ம.பொ. சி. ’, ஏவி.எம்முடன் பங்கேற்றார்.

‘வாழ்க்கை’யின் வரலாறு காணாத வெற்றிக்குத் தவிர்க்க முடியாத ஒரே காரணம் வைஜெயந்தி மாலா!

புறாவைக் கொஞ்சி ‘பாவுரமா’ என்று பாடியவாறு, ‘ஸ்வர்க்க சீமா’வில் பானுமதி வான் புகழ் பெற்றதால், வைஜெயந்தி மாலாவின் கைகளிலும் ஒரு புறாவைத் தடவக் கொடுத்து,

சினிமா வானிலே புதிய நட்சத்திரம்
நாட்டிய மணி
வைஜெயந்தி மாலா

ஏவி.எம். புரொடக்ஷன்ஸ் வாழ்க்கை
வாழ்க்கையின் மேடு பள்ளங்களைச் சித்தரிக்கும் அற்புத சிருஷ்டி!

என்று தங்கள் அறிமுகத்தின் மீது அபரிதமான நம்பிக்கை வைத்து விளம்பரப்படுத்தியது ஏவி.எம்.

வாழ்க்கை ரிலீஸ் ஆவதற்கு மூன்று மாதங்களுக்கு முன்னமே படத்துக்கான ப்ரோமஷனைத் துவங்கியது.

வைஜெயந்தி மாலாவை நீங்கள் தெரிந்து கொள்வதற்கு முன், அவரது தாயார் - ‘திருவல்லிக்கேணி வேதவல்லி’யை அறிவது அவசியம்.

மறக்க முடியாத ‘ஜெமினியின் மங்கம்மா சபதம்’ மூலம் ‘வசுந்தரா தேவி’யாக அழியாப் புகழ் பெற்றவர் வேதவல்லி.

கேட்பவரை வசீகரிக்கும் குரலும் இளமை எழிலும் வசுந்தராவின் பிறவிப் பெருமிதம்!

கண்ணனிடம் மீராவுக்கு ஏற்படும் அளவு கடந்த அன்பையும், அதனால் உண்டாகும் அத்தனை அவஸ்தைகளையும், கேட்பவர் நெஞ்சுருக சொந்த சாஹித்யத்தில் பாடி, வசனம் பேசி குரல் மூலமாகவே ஒவ்வொன்றுக்கும் உயிரூட்டி, உண்மையான மீராவாகவே உலா வந்தவர் வசுந்தரா தேவி.

‘மீரா- ஒலிச்சித்திரம்’ கிராம ஃபோன் இசைத் தட்டுகளாக வெளியாகி விற்பனையில் உச்சம் தொட்டது. ஏறத்தாழ 40 நிமிடங்களை நெருங்கி ஓடிய அவை கலா ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தின.

‘யார் அந்த மீரா...? வெண்ணையையும் உருக்கும் சாரீரம்..! ’ என்று மயங்கி நின்றனர் சங்கீத சாம்ராட்களும் சாஹித்யகர்த்தாக்களும்.

மைசூர் - மண்டயம் என்கிற ஊரைப் பூர்வீகமாக உடையது வசுந்தராவின் வைணவக் குடும்பம். வேலை நிமித்தம் மதராஸில் குடியேறியது.

ஸ்ரீமதி பரிணயம், மைனர் ராஜாமணி, விஷ்ணு லீலா, அதிர்ஷ்டம், பாலாமணி... படங்களில் நடித்தவர் எம்.என். ஸ்ரீநிவாசன். அவரது மனைவி யதுகிரி. மகள் - வசுந்தரா என அறியப்பட்ட வேதவல்லி.

வசுந்தராவைத் தேடி சினிமா வாய்ப்புகள் வாசலில் நின்றன. சொர்க்கத்தின் கதவைத் திறக்கக் கணவரின் அனுமதி வேண்டுமே...

வேதவல்லி மீராவாகும் முன்னரே எம்.டி. ராமனின் ‘திருமதி’ ஆனவர்.

ராமன் மதராஸ் ராஜதானியின் கவுரவம் மிக்க மராமத்து இலாகா டிராஃப்ட்ஸ்மென். மு.கருணாநிதியால் பொதுப்பணித்துறை என்று பின்னாளில் தமிழ்ப்படுத்தப்பட்ட அரசாங்க உத்தியோகஸ்தர்.

ராமனின் மனைவி வேதவல்லியாக மருமகள் இருந்தால் போதும். வசுந்தராவாக மாற வேண்டாம் என்று கண்டித்துக் கூறியது புகுந்தவீடு.

எம்.கே. தியாகராஜபாகவதர் நடித்த ‘சிந்தாமணி’அழியாப் புகழ் பெற்றது. அதனை உருவாக்கியவர் ஓய்.வி. ராவ். நடிகை லட்சுமியின் தந்தை.

ராவ், வசுந்தராவை சினிமாவில் அறிமுகப்படுத்த முயற்சிகள் செய்தார். அம்மா யதுகிரிக்குக் கூடுதல் ஆசை. மகளை வெள்ளித் திரையில் கலையரசியாகக் காண.

தாயார் கொடுத்தத் தைரியம். வசுந்தரா, ராவிடம் நடிக்கச் சம்மதம் என்று தலை அசைத்தார்.

சில தினங்களில் ‘வசுந்தராதேவி நடிக்கும் பக்த மீரா தயாராகிறது!’ என்கிற விளம்பரம் வெளியானது. மதராஸப் பட்டினம் கிறுகிறுத்துப் போனது.

ராமன் அகத்தார் கொந்தளித்தார்கள். வேதவல்லி நடிக்க 144 விழுந்தது.

ஓய். வி. ராவ் பின் வாங்கவில்லை. மானப் பிரச்சனை. வேறு யுவதிக்கு வசுந்தராதேவி என்று பெயர் சூட்டி பக்த மீராவை 1938ல் வெளியிட்டார். நிஜமான வசுந்தரா இல்லாமல் நஷ்டம் நேர்ந்தது.

மதராஸ் சங்கீத வித்வத் சபை. வசுந்தராவின் ஆலாபனையில் மயங்கிக் கிடந்தது. முக்கிய விருந்தினர் மைசூர் இளவரசர். வசுந்தரா தன் தர்பாரில் பாட வேண்டும் என்று விரும்பினார்.

மைசூர் அரண்மனையில் வசுந்தரா வாய்ஸ்...!

vasundra.jpg 

எண்ணி எண்ணிப் பார்க்க மனம் இன்பம் கொண்டாடியது.

அரியணைகளின் அழைப்பை அலட்சியப்படுத்த முடியுமா..?

மகாராஜா -‘நால்வடி கிருஷ்ண ராஜ உடையார்’, யுவராஜாவின் ரசிப்புத் தன்மைக்கு சபாஷ் போட்டார். வசுந்தராவின் குரல் இருவரையும் கலக்கி விட்டது.

இரு கச்சேரிகளில் இசை மழை பொழிந்த வசுந்தராதேவியை மெச்சி ராஜாங்கப் பரிசுகளும், பாராட்டும் குவிந்தன.

இளைய பூபதி கலைக் குழுவினரோடு உலகச் சுற்றுலாவுக்குக் கிளம்பினார். கான சரஸ்வதி வசுந்தராதேவி உடன் வந்தால் தினம் குயிலும் கூவுமே. உற்சாகம் கூடுமே...

குதூகலமாகி கோகிலத்துக்கு அழைப்பு விடுத்தார்.

மண்ணாளும் மைந்தனுடன் பாரெங்கும் செல்வது பாக்கியம்!

21 வயதிலேயே வசுந்தராவுக்குக் கிடைத்திருக்கும் ராஜமரியாதை யாருக்குச் சித்திக்கும்! அன்னை யதுகிரியின் உச்சி குளிர்ந்தது.

ஆறு வயது பேத்தி வைஜெயந்திக்கும் சேர்த்து, பட்டுப்பாவாடை, ரவிக்கைகள் தைக்கக் கொடுத்தார் யதுகிரி.

அரண்மனை சிநேகிதம் சம்சார வாழ்க்கையில் சிக்கலை ஏற்படுத்தியது. வீட்டுப் பெண்கள் தூர தேசம் செல்வதில் தர்ம சங்கடம். தயக்கம். குழப்பம். வேட்டிகள் செய்வதறியாது விலகி வழி விட்டன.

பாட்டி, அம்மா, பேத்தி என மூன்று தலைமுறையினரின் முதல் கலைப் பயணம் இளவரசரோடு இனிது தொடங்கியது.

1939 ஜூலை 13. பம்பாய் துறைமுகத்தில் கோலாகலமாக யுவராஜாவின் கப்பல் புறப்பட்டது.

இத்தாலி, வாடிகன், பிரான்ஸ், ஸ்விட்சர்லாந்து, இங்கிலாந்து எல்லாவற்றையும் கப்பலிலேயேக் கடந்தனர்.

வசுந்தராவின் குரல் உப்புக் காற்றையும் இனிக்கச் செய்தது. ஓய்வற்ற இசைக் கச்சேரிகளைக் கேட்டு, யுவராஜாவின் பொன்னான பொழுது புதிதாகக் கழிந்தது.

இரண்டாம் உலகப் போர் வெடிக்கும் வரையில் திகட்டாமல் அவர்களின் பிரயாணம் தொடர்ந்தது.

சிற்றரசருடனான ‘ஐரோப்பிய விஜயம்’ குறித்து, சிறப்பு மலர் வெளியானது. அதில் திருமதி வசுந்தரா ராமனின் கட்டுரையும், வசுந்தரா - வைஜெயந்தி மாலா இருவரின் நிழற்படங்களும் இடம் பெற்றன.

சினிமா விடாது துரத்தியது வசுந்தராவை. ராமனின் சுற்றத்தார் இம்முறையும் எதிர்த்தனர். அம்மா யதுகிரி வீரியத்துடன் பெண்ணுக்குப் பச்சைக் கொடி காட்டினார்.

‘ரிஷ்யசிங்கர்’ படம் மூலம் பெருமையுடன் வசுந்தராதேவியை வெள்ளித் திரைக்கு அறிமுகப்படுத்தியது தமிழ்நாடு டாக்கீஸ். இயக்கம் ஆச்சார்யா.

முதன் முதலாக ஹீரோ வேடம் ஏற்றார் ரஞ்சன். 1941 ஆகஸ்டு 2ல் ரிலிசானது.

ரிஷ்யசிங்கரை மயக்கும் ‘ராஜநர்த்தகி’யாக வசுந்தரா...! ரஞ்சனுக்கு வீசிய மோக வலையில் வயது வித்தியாசமின்றி சகலரும் வீழ்ந்தார்கள்.

சினிமாவில் போதிய முன் அனுபவம், நாடகப் பின்புலம் ஏதுமின்றி திறமையின் ஏணியில் வசுந்தரா பிரகாசித்தார்.

‘சிறிதும் கவலைப்படாதே’ என்று கரகரப்ரியா ராகத்தில் காதலாகப் பாடி, கவர்ச்சியாக ஆடி பரபரப்பை ஏற்படுத்தினார்.

1943ல் தமிழகத்தின் தலைநகரில் ஜப்பான் குண்டு வீச்சு. உயிர் பயத்தில் சொந்த ஊருக்குத் தஞ்சம் புகுந்தனர் மதராஸிகள்.

vasan 3 600 2(1).jpg 

‘மங்கம்மா சபதம்’ ஓடிய தியேட்டர்களில் மாத்திரம், ஒட்டு மொத்த ஜனங்களையும் ஒரே கூரையின் கீழ் ஜீவனோடு பார்க்க முடிந்தது.

நாயகன் - அழகிகளை அடிமைப்படுத்தி ஆனந்தம் காணும் அயோக்கியன். மங்கம்மாவுக்கும் வலுக்கட்டாயமாக மாலையிடுகிறான்.

‘தேகம் தீண்டாமலே உன்னை வாழாவெட்டியாக்குகிறேன்’ என்று கொடூரமாகக் கொக்கரிக்கிறான்.

‘ உன் மூலமாகவே ஒரு மகனைப் பெற்றுப் பழி தீர்க்கிறேன்’ என்று மங்கம்மா சத்தியம் செய்கிறாள். அதில் வெற்றியும் காண்கிறாள்.

நயவஞ்சகத் தந்தையாகவும், நல்ல மகனாகவும் இரு வேடங்களில் ரஞ்சன் ரசிகர்களைக் கவர்ந்தார்.

யுத்த பேரிகைகள் இடை விடாமல் முழங்கிய நெருக்கடி. ‘மங்கம்மா - வசுந்தராதேவி’ யின் நவரஸ பாவனைகளே தமிழர்களுக்கு ஒரே டானிக்!

‘ஐயய்யய்யே... சொல்ல வெட்கமாகுதே’ என்கிற பாடலில் வசுந்தராவின் ஆட்டம் வெகு ஜோராக இருந்ததாம். இளசுகளை மீண்டும் மீண்டும் பார்க்கத் தூண்டியதாம்.

வசுந்தரா, மற்றும் தமிழ் சினிமாவின் அந்தஸ்தை எவரெஸ்ட்டுக்குக் கொண்டு சென்றது ஜெமினியின் மங்கம்மா சபதம்.

அந்த ஒரே படத்தின் மூலம் வசுந்தரா அன்று அடைந்த உச்சக்கட்டப் புகழை, மற்றப் பிரபலங்கள் நெருங்கப் பல ஆண்டுகள் பிடித்தது.

மகளுக்கும் கலை மகுடம் சூட்ட விரும்பி, வழூவூர் ராமையா பிள்ளையிடம் பரதம் கற்க அனுப்பினார் வசுந்தரா. 1946ல் பதிமூன்று வயதில் வைஜெயந்தி மாலாவின் நாட்டிய அரங்கேற்றம், ஊர் மெச்சும் விதமாக வீட்டிலேயே நடந்தது.

முதல் மேடையிலேயே சுழன்று சுழன்று ஆடி, சுடர் விட்டுப் பிரகாசித்தன வைஜெயந்தி மாலாவின் மருதாணிப் பாதங்கள்.

வசுந்தராவின் நடிப்பில் 1946ல் உதயணன்-வாசவதத்தை, 1949ல் ‘நாட்டியராணி’ போன்று ஓரிரு படங்கள் வெளி வந்தன.

கணவரோடு ஏற்பட்டக் கருத்து வேறுபாடுகள் பிரிவை உண்டாக்கின.

‘தீபாவளி’ என்ற பெயரில் சொந்தப்படம் தயாரிக்கத் தொடங்கினார் வசுந்தரா. அதன் ஷூட்டிங்குக்காக அடிக்கடி பம்பாய் பயணம் வேறு.

அதைப் பயன்படுத்திக் கொண்டனர் மாமியார் யதுகிரியும், மாப்பிள்ளை எம்.டி. ராமனும். மகள் வைஜெயந்தி மாலாவைத் தங்களுடன் அழைத்துச் சென்றார்கள்.

வைஜெயந்தி மாலா குறித்த வழக்கு கோர்ட்டுக்குப் போனது. 1950 செப்டம்பர் 20.

‘மகளுக்கு கார்டியன் தந்தை எம்.டி. ராமன் ’ என்று, தீர்ப்பு யதுகிரி பாட்டிக்குச் சாதகமாக வந்தது.

பெற்ற குழந்தையை உயிரோடு பிரிய வேண்டிய வேதனை வசுந்தராவுக்கு. விளைவு அவரைத் திரையில் காண முடியாமல் போனது.

இடையில் எவரும் எதிர்பாராத விதத்தில், வைஜெயந்தி மாலாவை, ஏவி.எம். தனது படத்தில் நடிக்க அழைத்தது.

‘கல்லூரி மாணவி மோகனா’வாக முதல் படத்திலேயே முத்திரை பதித்தார் வைஜெயந்தி மாலா. அவரது ‘வாழ்க்கை’ அனுபவங்கள்:

‘ அப்ப நான் குட் ஷெப்பர்டு கான்வெண்ட்ல படிச்சிட்டிருந்தேன். சினிமா பத்தி எனக்கு ஒண்ணும் தெரியாது.

 

ஏவி.எம்.மில் இயக்குநராகப் பணியாற்றிய எம்.வி.ராமன் சாருக்கு, எங்க குடும்பத்தோட நல்ல நட்பு உண்டு.சின்னக் குழந்தையில் இருந்தே என்னைத் தெரியும்.

பார்க்கறப்பலாம் அன்போட பாப்பாம்மா... பாப்புக்குட்டின்னு கொஞ்சுவார். பாட்டி சைட்ல நான் நடிக்க அப்ஜெக்ஷன் வந்திருக்கு.

ஆனா ராமன் சார் விடல. உங்க பேத்திக்கு காலேஜ் கேர்ள் ரோல்தான்னு கன்வின்ஸ் பண்ணி, ஒரு வழியா ஒப்புதல் வாங்கிட்டாங்க.

படிப்பு அது பாட்டுக்கு இருக்க, படப்பிடிப்புக்குச் சென்றேன். தினமும் ரிகர்சல்ல ராமன் சார் கூடவே இருப்பார். அதனால் சினிமாப் பயிற்சி என்னை அந்நியப்படுத்தல.

எங்க குடும்பத்தில் ஒருத்தர் மாதிரி ராமன் சார். எந்த சந்தேகம்னாலும் ஒரு குழந்தைக்கு, அப்பா விளக்கற மாதிரிச் சொல்லித் தந்தார்.

அப்படி அமைஞ்சதால முதல் நாள் காமிரா முன்னால நின்ற போது எனக்குப் பயம் கொஞ்சமும் இல்ல. ஷூட்டிங் போறப்போ, அப்பாவும் பாட்டியும் என் கூடவே வருவாங்க.

நடிப்பு என்றால் என்ன...? எதை எப்படிச் செய்தால் சரியாக இருக்கும் என்று சொல்லித் தருவார்கள். அதை மட்டுமே செய்தேன்.

‘ஏவி.எம். அவர்கள் எப்போதாவது ஒரு முறைதான் செட்டுக்குள் வருவார். ஆனால் எப்போதும் அங்கேயே இருப்பது போன்ற ஆளுமையைப் படர விட்டிருந்தார். ’

வாழ்க்கை பெரிய வெற்றி அடைந்தது. அந்த அளவுக்கு ஓடும் என்று நான் நினைக்கவில்லை. அதை விட அதில் நடித்த ஒரே காரணத்துக்காக, எனக்கு வந்து சேர்ந்த பாராட்டைக் கண்டு பிரமித்து விட்டேன்.

ஸ்டார் அந்தஸ்து என்னை சினிமாவைத் தொடரச் செய்தது.

வாழ்க்கை படத்தைத் தெலுங்கு, இந்தியிலயும் ஏவி.எம். எடுத்தாங்க. அப்பாவுக்கு தெலுங்கு அத்துபடி. அதனால அப்பா மூலமா தெலுங்கும் எனக்குள்ள இயல்பாயிட்டது. ராமன் சார் டைரக்ஷன்ல ஆந்திரால ‘ஜீவிதமும்’ 100 நாள் போச்சு.

நான் கான்வெண்ட்ல படிச்சதால எனக்கு இந்தியும் சரளமாகப் பேச வரும். அதை டெவலப் பண்ண விரும்பி இந்தி பிரசார சபாவிலும் கத்துக்கிட்டேன்.

அந்தப் பயிற்சி எனக்கு பஹார்ல நடிக்க உதவியா இருந்துச்சு. ஆனாலும் ஏவி.எம்ல, டயலாக் கோச் கொடுத்தாங்க.

பஹார் சூப்பர் ஹிட்டாகி ஓடவே ஓவர் நைட்ல ஆல் இண்டியா ஸ்டார் ஆயிட்டேன். ’ வைஜெயந்தி மாலா.

http://www.dinamani.com

  • தொடங்கியவர்

வைஜெயந்தி மாலா: 2. சபாஷ் சரியான போட்டி...!

 

‘வாழ்க்கை’ சினிமாவில் வைஜெயெந்தி மாலாவின் வசந்த வருகை குறித்து, ஏவி.எம். எழுதியுள்ளவை.

‘சாரங்கபாணியின் மகளாக  காலேஜ் பெண் வேஷத்தில் யாரைப் போடுவது என்று யோசித்தோம். ஒரு நாள் என்னுடைய அசோசியேட் டைரக்டர் எம்.வி. ராமன் அவர்கள், ‘விக்டோரியா பப்ளிக் ஹாலில் வசுந்தராவின் மகள் வைஜெயந்தி மாலா டான்ஸ் ஆடுகிறாள். போய்ப் பார்க்கலாம் வாருங்கள், ’ என்று அழைத்தார். 

வைஜெயந்தி மாலாவின் பெர்ஃபார்மன்ஸ் மிகவும் நன்றாக இருந்தது. அவருக்கு அப்போது பதினாறரை வயதிருக்கும்.

‘பார்வைக்கு இருபது வயது வளர்ச்சி...! ’

காலேஜ் பெண் வேஷத்துக்கு மிகவும் பொருத்தமாக இருக்கும். வாழ்க்கை படத்தில் அவரை ஹீரோயினாகப் போடலாம்,  ஜனங்களும் ஒப்புக் கொள்வார்கள்’ என்று தோன்றியது.

1949 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 9ஆம் தேதி. என்னால் மூன்று வருஷங்களுக்கு வைஜெயந்தி மாலா ஒப்பந்தம் செய்யப்பட்டார். மாதம் ரூ.2350 சம்பளம். இரண்டு நடன நிகழ்ச்சிகளை நடத்த அனுமதித்திருந்தேன்.

வைஜெயந்தி மாலா அதி புத்திசாலி! பத்துப் பதினைந்து நாள்களுக்குள் தம் வசனங்களை வரப் பண்ணி நடிக்கத் தயாராகி விட்டார்.

எங்களுக்கும் மூன்று மாதத்தில்  படப்பிடிப்பு முடிந்து படம் சென்சாருக்கும் போய் வந்துவிட்டது.

படத்தைப் போட்டுப் பார்த்தோம். எங்கள் எல்லோருக்குமே மிகவும் திருப்தியாக அமைந்தது. மிகுந்த மன நிறைவோடு 1949 டிசம்பர் 22ஆம் தேதி ரிலிஸ் செய்தேன்.

hqdefault (1).jpg 

‘வாழ்க்கை’ படம் வைஜெயந்தி மாலா வாழ்விலும் ஒரு பெரிய முன்னேற்றத்தையும் மாறுதலையும் ஏற்படுத்தியது.  

சென்னை பாரகன் டாக்கீஸில் 25 வாரங்கள் ஓடியது. ஏவி.எம். ஸ்டுடியோ சென்னைக்கு வந்த பிறகு, வெளியான என்னுடைய முதல் மகத்தான வெற்றிப் படம் அது.

வாழ்க்கை என்பது ஆங்கிலத்தில் லைஃப். ‘ஏவி.எம். ஸ்டுடியோவுக்கே லைஃப் கொடுத்தது வாழ்க்கை என்கிற படம் தான்’.

பஹார் டெல்லியில் ரிலிசானது.  ‘வைஜெயந்தி மாலாவின்’ - கிராமியப் பாம்பாட்டி நடனக் காட்சி வரும் நேரம்.

வடக்கத்திய வழக்கப்படி  ஜனங்கள் மிக உற்சாகமாக  நாலணா, எட்டணா என்று காசுகளைத் திரையை நோக்கித் தூக்கி எறிந்தார்கள்.

அதை நேரில் பார்த்த வடநாட்டுப் பட முதலாளி ஒருவர், வைஜெயந்தி மாலாவிடம் காண்ட்ராக்ட் செய்து வைத்திருந்த  என்னிடம் வரவில்லை.

சென்னை வந்து வைஜெயந்தி மாலாவை நேரில் சந்தித்தார். ஒரு லட்சம் ரூபாய்க்கு  ஒப்பந்தம் பேசி, ஐம்பதாயிரத்தை உடனே கையில் கொடுத்து, தமது இந்திப் படத்தில் நடிக்க புக் செய்து கொண்டு போனார்.

ஆக வைஜெயந்தி மாலா வடநாட்டுப் பட உலகில் பிரபல்யமாவதற்கும் இந்தி பஹார்தான் காரணம்.

என் ஸ்டுடியோவில் இருந்த மூன்று ஆண்டு காலத்தில் அவர் ஒழுங்காக, குறித்த நேரத்துக்கு - காலை ஒன்பதரை அல்லது பத்து மணிக்குள் வந்து விடுவார். வசனம் மற்றும் நடன ஒத்திகை நடக்கும்.

பிற்பகல் வீட்டிலிருந்து சாப்பாடு ஸ்டுடியோவுக்கே  வந்து விடும். மாலை ஐந்தரை மணிக்குத்தான் வீட்டுக்குப் போவார்.

ஒரு காரியாலயத்துக்குச் செல்வது போலவே தினசரி வருவார்  போவார்.

எப்போதாவது ஏதாவது சினிமாவுக்குப் போக வேண்டும் என்று எண்ணினால், என்னிடம் வந்து சொல்லி என் அனுமதியுடன் சற்று முன்பாகப் புறப்படுவார்.

இங்கே என் ஸ்டுடியோவில் வைஜெயந்தி மாலா இருந்த மூன்று ஆண்டு காலத்தில் குதிரைச் சவாரியையும் பழகிக் கொண்டார்.

அவர் மீது எனக்கு எந்தவிதமான புகாரும் வந்ததில்லை.  

வைஜெயந்தி மாலாவின் திறமையைக் கண்டு பலமுறை வியந்து,

‘எதிர்காலத்தில் இவர் மிகச் சிறந்த நடிகையாக வருவார்’ என்பதை  என் சகாக்களிடம் பல முறை மனம் திறந்து சொல்லி இருக்கிறேன். ’ ஏ.வி.மெய்யப்பன்.

hqdefault (4).jpg 

‘முதல் படமாக இருந்தாலும் வைஜெயந்தி மாலா வாழ்க்கையில் பிரமாதமாகக் கூச்சமின்றியே நடித்தார். நான் தான் காதல் காட்சிகளில் அவரோடு நடிக்கக் கூச்சப் பட்டேன். ’ – ‘ஹீரோ’  டி.ஆர். ராமச்சந்திரன்.

ஜெமினி ஸ்டுடியோவின் பிரமிப்பூட்டும் படைப்பு வஞ்சிக்கோட்டை வாலிபன். எம்.ஜி.ஆரை வைத்துத் தயாரிக்க வாசன் முடிவு செய்தார்.

நாடோடி மன்னனில் எம்.ஜி.ஆர். தீவிர கவனம் செலுத்திய நேரம். வாசனுக்கு அவரது கால்ஷீட் கிடைக்கவில்லை. ஜெமினிகணேசன் நாயகன் ஆனார்.

‘காதல் மன்னன்’ ஆக்ஷன் ஹீரோவானால்...!  ஜனங்கள் படம் பார்க்க வர வேண்டுமே. ஸ்பெஷல் எபெக்ட் தேவைப்பட்டது வாசனுக்கு.  

‘அகில இந்திய நாட்டிய நட்சத்திரங்கள் பத்மினி- வைஜெயந்திமாலா இருவரையும் முதலும் கடைசியுமாக ஒரே மேடையில்  போட்டி போட்டு நடனமாட விட்டார். ’

வஞ்சிக்கோட்டை வாலிபனின் ‘கண்ணும் கண்ணும் கலந்து’ என்கிறப் பாடலுக்கான நடனம் வைஜெயந்தியின்  கலைவாழ்வில் நிச்சயம் ஒரு காலப் பெட்டகம்!

ஏறக்குறைய ஒன்பது நிமிடங்கள் பத்மினியும்-வைஜெயந்தி மாலாவும் ஆடிய ‘சாதூர்யம் பேசாதடி என் சதங்கைக்குப் பதில் சொல்லடி’ நூற்றாண்டுகள் கடந்தும் ஜீவிக்கும்.

‘வாசன் சாருக்கு  என்னையும் பப்பியம்மாவையும் வைத்து, ஒரு போட்டி நடனம் எடுக்க வேண்டும் என்று  எப்படித் தோன்றியதோ தெரியாது.

இந்த விஷயம் எங்க ரெண்டு பேருக்கும் சொல்லப்பட்டதும், ரொம்பவே தீவிரமாக டான்ஸ் பயிற்சியில் ஆர்வம் காட்ட ஆரம்பித்தோம். ஓயாமல் ஒத்திகைகள். ஒவ்வொரு நாளும் புதுப்புது முத்திரைகள்...

இப்பவும் சிலர் என்னைக் காணும் போது இந்த நடனத்துக்காகவே, வஞ்சிக்கோட்டை வாலிபன் படத்தை நாற்பது ஐம்பது தடவை பார்த்ததாகச் சொல்கிறார்கள்.

அதில் எனக்கு ஆச்சரியம் கிடையாது. காரணம் அப்பாடலுக்காக நாங்கள் உழைத்த உழைப்பு அப்படி.

எங்களுக்கான நாட்டியப் போட்டியில் யார் ஜெயிச்சாங்க என்கிற மாதிரி காட்சி இல்ல. ஆனா முழுப்பாடலுக்குள்ளும் இருவரது திறமையையும் வெளிப்படுத்தி, ரசிகர்களைக் கவர வேண்டும் என்பதே வாசன் சாரின் விருப்பம்.

அவரவர் துறையில் நானும் பத்மினியும் பேரோடும் புகழோடும் இருந்தோம். அப்ப உள்ளக் கலைஞர்களுக்குள் எந்த வித ஈகோவும் கிடையாது. அதனாலேயே அப்படியொரு அற்புதமான போட்டிப் பாட்டு அமைஞ்சது.

vanjikottaivaliban2.jpg

இன்னும் சொல்லப் போனால் போட்டா போட்டி நடனங்களே வஞ்சிக்கோட்டை வாலிபன் படத்தில் இருந்துதான் ஆரம்பித்தன.

நானும் பப்பிம்மாவும் சேர்ந்து ஆடினது ரெண்டு நாள்கள் மட்டுமே. மற்றபடி என் தனிப்பட்டக் காட்சியை  12 நாள்கள் எடுத்தார்கள்.

அதாவது தனித்தனி ஷாட்டுகள். ஒவ்வொரு நாளும் நம்மோட பார்ட்டை நல்லபடியா செஞ்சிடணும். பப்பியம்மா பண்ணினதை விடவும் பெட்டரா பண்ணணும்னு நினைச்சிக்கிட்டே டான்ஸ் மூவ்மெண்ட் கொடுப்பேன்.

ஒவ்வொரு நடன முத்திரையையும் பார்த்துப் பார்த்துத் தனி ஈடுபாடு காட்டி அக்கறையோட செய்தேன். அப்புறம் தான் தெரிஞ்சது, பப்பியம்மாவும் அதே  மனநிலையோடத் தன் பங்களிப்பைப் பண்ணினாங்கன்னு.

பாடல் காட்சியை ரஷ் போட்டுப் பார்த்ததுமே எங்கள் இருவருக்கும் ஒரே பாராட்டு. அப்பவே வஞ்சிக்கோட்டை வாலிபன் பேசப்படுகிற அளவுக்கு, சாதுர்யம் பேசாதடி பாடலும் அதன் காட்சியும் சூப்பர் ஹிட் ஆகும்னு எண்ணினேன்.

நடனத்தின் நடுவில் பி.எஸ்.வீரப்பா,  ‘சபாஷ் சரியான போட்டி’ என்று சொல்லுவார். எங்கள் நாட்டியம் சிலாகித்து பேசப்பட அதுவும் காரணமாகி விட்டது.’ - வைஜெயந்தி மாலா.

ஏறக்குறைய ஆட்டம் பூர்த்தியாகும் தருணம். பத்திரிகையாளர் ‘நாரதர்’ ஸ்ரீனிவாசராவிடம் நயமாகக் கூறப்பட்ட விஷயம்,

‘பத்மினி போட்டியின் முடிவில் தோற்பதாகக் காட்டக் கூடாது. நாரதர் ஸார்! உங்க பாஸ் கிட்டக் கண்டிப்பாச் சொல்லிடுங்க.

எங்க பப்பி எவ்வளவு பெரிய டான்ஸர் என்பது உங்களுக்கே தெரியும்.

அவள் தோல்வி அடைவதாகக் காட்டினால், அவளுடைய பெயர் கெட்டுப் போகும் ஆமா!

அவள் ஜெயிக்காமல் போவதாக நீங்கள் எடுப்பதானால், பப்பி ஷூட்டிங் வரமாட்டாள். ’

பத்மினியின் தாயார் சரஸ்வதி அம்மாள் சர்ச்சையைக் கிளப்பினார்.

சரஸ்வதி அம்மாளுக்குக் கொஞ்சமும் சளைத்தவரில்லை. வைஜெயந்தி மாலாவின் பாட்டி யதுகிரி. அவரும் தன் பேத்திக்காக உரிமைக்குரல் கொடுத்தார்.

‘எங்க பாப்பா தோற்பதாகக் காட்டக் கூடாது.’ 

நாரதர்  நடந்ததை முதலாளியிடம் விளக்கினார்.

இரண்டு நாள்கள் படப்பிடிப்பை ரத்து செய்து விட்டார் வாசன். பப்பி - பாப்பா  இருவரில் யார் வெற்றி பெற்றாலும் தனக்குச் சங்கடம் என்பது புரிந்தது. சமயோசிதத்துடன் காட்சி மாறியது.

பத்மினியும் வைஜெயந்தியும் ஆக்ரோஷமாக ஆடிடும் உச்சக்கட்டம். ‘ சபாஷ் சரியான போட்டி’ என்பார் பி.எஸ். வீரப்பா.

2009052950371601_959681e.jpg 

 யாருக்கு வெற்றி என்பது தெரிவதற்குள், ஜெமினி விளக்கை அணைத்து விடுவார்.

தென் இந்தியாவில் வஞ்சிக்கோட்டை வாலிபனில் பத்மினியின் பெயரும், வடக்கில் அதன் இந்திப் பதிப்பான ‘ராஜ்திலக்’ கில்  வைஜெயந்தியின் பெயரும் டைட்டிலில் முதல் இடம் பிடித்தன.

‘மந்தாகினி’யாகத் தோன்றி அனைவரையும் மலைக்க வைத்த வைஜெயந்தி மாலாவை  ‘குமுதம்’ கொண்டாடியது.

‘ஜெமினி என்ற சொல்லுக்குத் திரை அகராதியில் பிரம்மாண்டம் என்று தானே பொருள்! அதை உறுதிப்படுத்த வந்திருக்கிறான் வஞ்சிக்கோட்டை வாலிபன்.

 ஜெமினி கணேசனின் ஜோடியான பத்மினியைக் காட்டிலும், வைஜெயந்தி மாலா குறிப்பிடத் தகுந்தாற் போல் நடித்திருக்கிறார்.

 ஜெமினி கணேசன், பத்மினியின் அழகை வர்ணிப்பதைக் கேள்வியுற்று, பொறாமையின் குமுறலில் மிக அமைதியாக, அதைத் தனக்குச் சொன்ன சேடியிடம்-  ‘ஓ சொன்னாரா... ’ என்று வைஜெயந்தி மாலா இழுக்கும் முறை மறக்க முடியாதது. ’

-------

ஜெமினியில் வைஜெயந்தியின் மற்றொரு இரு மொழி சாதனைச் சித்திரங்கள் : இரும்புத்திரை - பைகாம்.

இரும்புத்திரை 1960 தைத்திருநாளில் வெளியானது.

‘ஒரே சமயத்தில் நடிப்பின் இமயங்கள் சிவாஜி - திலீப்ஜி  இருவருடனும் மாறி மாறி நடித்தது மாறுபட்ட அனுபவம்.

ஜெமினி ஸ்டுடியோவில் முதலில் என்னையும் நடிகர் திலகத்தையும் வைத்து இரும்புத்திரையில் ஒரு காட்சியைப் படமாக்குவார் எஸ். எஸ்.வாசன். அடுத்து அதே சீனில் திலீப் குமாருடன் பைகாமில் நடிக்க வேண்டும்.

 தமிழ், இந்தி இரண்டிலும் நானே நாயகி என்பதால் எனக்கு எந்தப் பிரச்சனையும் எழவில்லை. ஒரே கேரக்டரைத் திரும்பத் திரும்ப தெற்கு - வடக்கு என்று வெவ்வேறு பண்பாட்டுக்கு ஏற்ப நடித்தேன்.

என் நடிப்பை இரண்டு ஹீரோக்களும் காட்சி முடிந்ததும், உடனடியாகப் பாராட்டுவார்கள் என்பதை எந்நாளும் மறக்க முடியாது.

பைகாம் ஓர் ஆண்டுக்கு மேல் வடக்கில் ஓடி என்னை மேலும் பிரகாசிக்கச் செய்தது. தமிழில் இரும்புத்திரை ஆறு மாதங்களைக் கடந்தது.

அத்தகைய அனுபவம் என்னைப் போன்ற நட்சத்திரத்துக்கு மிகப் பெரிய பாக்கியம்!  அது எனது தனிப்பட்ட மகிழ்ச்சி!’ -வைஜெயந்தி மாலா.

இரும்புத்திரையின் இன்னொரு விசேஷம் வைஜெயந்தி மாலாவின் தாயார் வசுந்தரா தேவி!

நிஜத்தில் பிரிந்து வாழ்ந்த தாயையும் மகளையும் தன் ஆளுமையால்,  திரை நிழலில் ஒன்றாக இணைத்தார் எஸ்.எஸ். வாசன்!

எஸ்.வி. ரங்காராவின் மனைவியாகவும், வைஜெயந்தி மாலாவின் அன்னையாகவும் இரும்புத்திரையில் இடம் பெற்றார் வசுந்தரா தேவி.

அதுவே வசுந்தராவின்  கடைசிப் படம். 1988ல் வசுந்தரா வைகுந்தன் அடி சேர்ந்தார்.

1959 மார்ச் 6ல் ஏ.நாகேஸ்வர ராவ் - வைஜெயந்தி மாலா ஜோடியாக நடித்து வெளியானது அதிசய பெண் அடையாளமின்றி போனது. தயாரிப்பு இயக்கம் எம்.வி. ராமன்.

1960ன் கோடை. எம்.ஜி.ஆர்.- வைஜெயந்தி மாலா இணைந்து நடித்த  ஒரே படம் பாக்தாத் திருடன். அரபு நாட்டுக் கதை. மே 6ல் வெளியானது. தோல்வியில் முடிந்தது.

raj tilak.jpg 

‘எம்.ஜி.ஆருடன் ஒரே ஒரு படத்தில் நடித்தேன். அந்த ஒரு படமே அவருடைய சிறப்பான குணத்தை வெளிப்படுத்தி விட்டது.

என்னைத் தலைக்கு மேலாகத் தூக்கி அருகில் இருக்கும் தொட்டியில் போட வேண்டும். அதை எம்.ஜி.ஆர். ஒன்றுமே சொல்லாமல் எடுத்திருக்கலாம். ஆனால் அப்படி விட்டு விடவில்லை.

காட்சி படமாக்கப்படுவதற்கு முன்பாக,  என் பாட்டியை அழைத்து,

‘அம்மா... இப்படியொரு சீன் எடுக்கப் போகிறார்கள். நான் ரொம்பவும் கவனமாகவே நடிப்பேன். எனவே உங்கள் பேத்தியைக் கீழே போடுகிற மாதிரியான கட்டத்தைப் படமாக்கும் போது, நீங்கள் பயந்து அலற வேண்டாம். ’  என்று எச்சரித்தார்.

பாட்டிக்கு ஒரே ஆச்சரியம். இருந்தாலும், ‘ஜாக்கிரதையாகப் பண்ணுங்கோ. ’ என்று உஷாராகக் கேட்டுக் கொண்டார்.

நான் பாட்டியை விடவும் எம்.ஜி.ஆரை எண்ணி வியந்தேன். அவரிடமே வாய் விட்டுக் கேட்டு விட்டேன். 

‘பாட்டியிடம் அத்தனை பாதுகாப்பு உணர்வோடு அதைச் சொல்ல வேண்டுமா... ’ என்று!

‘நமக்கு வேண்டுமானால் அது படத்தில் வருகிற ஒரு சாதாரண சீனாகத் தோன்றலாம். உங்கள் பாட்டி நீங்கள் தொட்டியில் விழும் போது, என்னவோ ஏதோ என்று பதறக் கூடாது அல்லவா... விவரம் தெரிந்த நாமே, பெரியவர்களுக்கு சிறு அதிர்ச்சியையும் தரலாமா...? ’ என்றார்.

எதையும் மனிதாபிமானத்துடன் முன் கூட்டியே திட்டமிடுகிற அவரது ஆற்றல் புரிந்தது.

‘எப்பேர்ப்பட்ட அறிவாளி எம்.ஜி.ஆர்.! என்று தோன்றியது. ’- வைஜெயந்தி மாலா.

vaijantimala.jpg 

வைஜெயந்தி மாலா நடித்த ராஜபக்தியில் பானுமதி, பத்மினி, பண்டரிபாய் என்று நான்கு நாயகிகள். சிவாஜி நாயகன். அவரைக் காதலிக்கும் ‘மிருணாளினி’யாக வைஜெயந்தி மாலா தோன்றினார்.

மே 27ல் ரிலிசான ராஜ பக்தி ரசிகர்களைக் கவராமல் போனது.

மிகுந்த எதிர்பார்ப்புகளுடன் கல்கியின் ‘பார்த்திபன் கனவு’  ஜூன் 3ல் திரையிடப்பட்டது. மாமல்லராக எஸ்.வி.ரங்காராவும் அவரது அன்பு புத்திரி குந்தவியாக வைஜெயந்தி மாலாவும் நடித்தனர்.ஜெமினி ஹீரோ.

பழகும் தமிழே பார்த்திபன் மகனே,  இதய வானின் உதய நிலவே எங்கே போகிறாய், 

வேதாவின் இசையில் கேட்கக் கேட்க மறக்க முடியாத, ஜீவனுள்ள பாடல்கள் மட்டுமே பார்த்திபன் கனவு சினிமாவை நினைவில் நிறுத்துகின்றன.

மிகுந்தத் தரத்தோடு உருவாகியும், திரைக்கதை அமைப்பில் ஏற்பட்ட குழப்பத்தால்  பார்த்திபன் கனவு   வெற்றி பெறவில்லை.

‘வைஜெயந்தி மாலா நடித்து ஜனாதிபதி பரிசு பெற்ற ஒரே தமிழ்ப்படம் பார்த்திபன் கனவு’ என்கிற சிறப்பு சேர்ந்தது.

---------------

http://www.dinamani.com

  • தொடங்கியவர்

வைஜெயந்தி மாலா: 3. ஓஹோ... எந்தன் பேபி...!

 

டைரக்டர் ஸ்ரீதரின் சொந்தப்பட நிறுவனம் சித்ராலயா. அதன் முதல் தயாரிப்பு தேன் நிலவு. ஹாஸ்யம் கலந்த காதல் கதை.

செலவைப் பார்க்காமல் ஒரே ஷெட்யூலில் படத்தை முடிக்க வேண்டி, ஒட்டு மொத்தக் கலைஞர்களையும் குடும்பத்தோடு காஷ்மீருக்குக் கூட்டிச் சென்றார் ஸ்ரீதர்.

ஜெமினியின் திருமதி- பாப்ஜி என்கிற அலமேலுவின் குடும்பம், நடிகையர் திலகம் சாவித்ரி, மகள் விஜய சாமூண்டிஸ்வரி சகிதம் ஜெமினி கணேசன் காஷ்மீருக்குப் பயணமானார்.

யாராலும் நெருங்க முடியாத உச்சாணிக் கிளையில் வைஜெயந்தி கொடி கட்டிப் பறந்த காலம்.

இரு மனைவிகள் உடன் இருக்க, வைஜெயந்தி மாலாவுடன் காஷ்மீர் டால் ஏரியில் டூயட் பாடும் அதிர்ஷ்டம் ஜெமினிக்கு.

then-nilavu.jpg 

கோலிவுட் கவிஞர்களுக்கு உச்ச நட்சத்திரங்களின் திருநாமங்களை, பட்டப் பெயர்களை, புகழை சினிமாப் பாடலுக்குள் நுழைப்பது கை வந்த கலை. கண்ணதாசனுக்கு அதில் அலாதி ருசி.

பத்மினியைப் பப்பி என்று செல்லமாக அழைத்ததைப் போல், வைஜெயந்தி மாலாவைப் பாப்பா என்று கூப்பிடுவது தொட்டில் பழக்கம்.

பாப்பா என்று வசீகரமான இளம் நாயகியை ஜெமினி வர்ணித்துப் பாடினால் எதுகை மோனை இடிபடுமே. சந்தம் உதைக்குமே... கண்ணதாசன் சாமர்த்தியமாகப் பாப்பாவை, ‘பேபியாக’ ஆங்கிலப்படுத்தினார்.

‘ஓஹோ எந்தன் பேபி... நீ வாராய் எந்தன் பேபி’ என்று பல்லவி ஆரம்பித்தது.

எஸ். ஜானகியின் அசாத்திய திறமை மீது இளையராஜாவுக்கு முன்பாகவே அதிக அக்கறை செலுத்தியவர் ஸ்ரீதர். தனக்குப் புகழ்ப் புடைவை நெய்த ஸ்ரீதரின் இயக்கத்தில், ஏராளமான இனிய பாடல்களை ஜானகி பாடியுள்ளார்.

தேன் நிலவு அதற்குப் பிள்ளையார் சுழி போட்டது. ‘சிங்கார வேலனே தேவா’ மக்களைச் சென்று மகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்துவதற்கு முன்னரே, ஏ. எம். ராஜா இசையில் தேன் நிலவில் ஒலித்த ‘ஓஹோ எந்தன் பேபி, காலையும் நீயே மாலையும் நீயே’ பாடல்கள் சூப்பர் டூப்பர் ஹிட் ஆனவை.

வைஜெயந்தி மாலாவுக்குப் பாடிய பின்பு ஜானகியின் அந்தஸ்து உயர்ந்தது.

2016 லும் நேயர் விருப்பத்தில் முதல் பாடலாக ஓஹோ எந்தன் பேபி வலம் வருகிறது.

ஓஹோ எந்தன் பேபி பாடல் படமானதே ஒரு சுவாரஸ்யமான சம்பவம்.

சரோஜாதேவியை சினிமாவில் ஜீன்ஸ் போடச் சொல்லி, வற்புறுத்தாத பட முதலாளிகளே கிடையாது. சரோ இன்று வரையில் சம்மதிக்கவில்லை.

வைஜெயந்தி மாலா தேன் நிலவில் ஜீன்ஸ் அணிந்து ஆடிப் பாடியதில் இளைஞர்கள் இன்பம் அடைந்தனர்.

ஜீன்ஸ் மட்டுமல்ல. ஸ்ரீதர் - வைஜெயந்தி மாலா இருவரது வாழ்க்கையிலும் மறக்க முடியாத சம்பவங்கள் தேன் நிலவு ஷூட்டிங்கில் நடைபெற்றன.

‘மலைச் சரிவில் பனிச் சாரலில் சறுக்கி வரும் விளையாட்டுக்கு ஸ்கீயிங் என்று பெயர். கொஞ்சம் பயிற்சி பெற்றதுமே வைஜெயந்தி மாலா தைரியமாக ஸ்கீயிங் செய்ய ஆரம்பித்து விட்டார். நடனம் ஆடிப் பழகியவர் அல்லவா.

ஒரு நாள் பனிச் சறுக்கு விளையாட்டைப் படமாக்கிய சமயம். காமிரா ஓடிக் கொண்டிருக்கிறது. வீல் என்று ஓர் அலறல்!

ஸ்கீயிங்கில் வேகத்தை அதிகரிக்கவும், குறைக்கவும், பேலன்ஸ் செய்யவும் இரு கைகளிலும், ஊன்றுகோல் போல இரு கம்பிகளைப் பிடித்துக் கொள்ள வேண்டும்.

வெண்பனியில் பதிந்து கிடக்கும் அதன் கூரிய முனை, டேக்கில் வைஜெயந்தியின் தொடையில் பாய்ந்து அவரைத் துடி துடிக்க வைத்தது.

உடனடியாக பேக் ஆஃப் சொன்னேன். வைஜெயந்தியை அலுங்காமல் குலுங்காமல் அப்படியே தூக்கிக் கொண்டு காரில் ஏற்றி டாக்டரிடம் போனோம்.

வலியின் உபத்திரவத்திலும் வைஜெயந்தி என்ன சொன்னார் தெரியுமா ?

‘எனக்காக ஷூட்டிங்கை நிறுத்திடாதீங்க. ரெண்டு நாள் மற்ற காட்சிகளை எடுங்க. அப்புறம் என் சம்பந்தப்பட்ட சீன்களை எடுக்கலாம்... ’என்றார். பதற்றத்திலிருந்து விடுபட்டுச் சற்றே நான் தைரியம் அடைந்ததும்,

Vyjayantimala-now-Vyjayantimala-Bali.jpg 

‘ஸார்! தப்பித் தவறி கூட எனக்குக் காயம் பட்ட விவரம், அம்மாவுக்கு மட்டும் கண்டிப்பாத் தெரியக் கூடாது. (யதுகிரி பாட்டியை வைஜெயந்தி அம்மா என்றே அழைப்பார்.)

தெரிந்தால் ரகளை பண்ணிடுவார். மெட்ராஸுக்குத் திரும்பலாம் என்று ஆரம்பித்து விடுவார். உங்களுக்கு ரொம்ப நஷ்டமாகி விடும். ’என்ற வைஜெயந்தி மாலா, தன் நோவைப் பெரிது படுத்தாமல் எங்களுடன் ஷூட்டிங் ஸ்பாட்டிலேயே தங்கினார். ஓட்டல் அறைக்குச் சென்றால் பாட்டிக்குத் தெரிந்துவிடுமே என்கிற பயம்... - ஸ்ரீதர்.

காஷ்மீரில் படப்பிடிப்பு நடத்திய ஸ்ரீதர், கல்யாணப்பரிசின் வலுவான கதையோடு தேன் நிலவை வண்ணச் சித்திரமாக எடுக்காமல், பிளாக் அண்ட் வையிட்டில் உருவாக்கியது ரசிகர்களுக்கு ஏமாற்றம் அளித்தது.

குமுதம் ‘தேன் நிலவு வீண் செலவு’ என்று லாஸ்ட் பன்ச் வைத்தது. பத்திரிகை விமர்சனங்களையும் மீறி, வணிக நகரங்களில் பல தியேட்டர்களில் 50 நாள்களை வெற்றிகரமாகக் கடந்தது தேன் நிலவு.

வைஜெயந்தியுடன் தேன் நிலவு, நஸ்ரானா, சித்தூர் ராணி பத்மினி என்று மூன்று படங்களில் தொடர்ந்து பணி புரிகிற வாய்ப்பு ஸ்ரீதருக்குக் கிடைத்தது.

நஸ்ரானா கல்யாணப் பரிசு படத்தின் இந்தி ரீமேக். அதில் சரோஜாதேவியையே நடிக்க வைக்க முதலில் நினைத்தார் ஸ்ரீதர். சரோவினால் ஏற்பட்ட சில விரும்பத்தகாத சம்பவங்களால், தன் முடிவை மாற்றிக் கொண்டார்.

ஸ்ரீதரின் முதல் இந்திப்படம் நஸ்ரானா. ஹீரோவாக ராஜ்கபூரும், நாகேஸ்வரராவ் நடித்த வேடத்தில் ஜெமினி கணேசனும் நடித்தனர். இருவருக்கும் இடையில் நாயகியாக வைஜெயந்தி மாலா சிறப்பாக நடித்துப் பாராட்டைப் பெற்றார்.

நஸ்ரானா பிரமாதமாக ஓடி ஸ்ரீதரை ஆல் இந்தியா ஸ்டார் ஆக்கியது. அதற்கு வைஜெயந்தி மாலாவின் நட்சத்திரப் பங்களிப்புப் பெரிதும் உதவியது.

‘சித்தூர் ராணி பத்மினி’ சினிமாவில் வைஜெயந்தி மாலாவுக்கு டைட்டில் ரோல். அந்தப் படத்தின் அவுட்டோர் ஷூட்டிங்கில் நடந்த சுவாரஸ்யமான சம்பவம் ஒன்றை ஸ்ரீதர் குறிப்பிட்டுள்ளார்.

Thennilavu.jpg 

‘பெரிய அளவில் படம் எடுக்கணும்னு திட்டம் போட்டு, சிவாஜி, பத்மினி, வைஜெயந்தி மாலான்னு மெகா ஸ்டார்கள் நடிக்க, வலுவானதொரு கதையை எதிர்ப்பார்த்துக் கொண்டிருக்கிறேன்’ என்றார் என்னிடம், உமா பிக்சர்ஸ் பட முதலாளி ராமநாதன் செட்டியார். எம்.ஜி.ஆரை வைத்து சக்கரவர்த்தித் திருமகள் வெற்றிப் படத்தைத் தயாரித்தவர்.

பிரம்மாண்ட கதையை தேடியவரிடம், ‘ஹிஸ்டாரிகல் ட்ரை பண்ணலாமே... ’ என்று அவரது டைரக்டர் திரு. சி.ஹெச். நாராயணமூர்த்தி சொல்ல, ‘சித்தூர் ராணி பத்மினி’ என்கிற சரித்திரக் கதையைப் படமாக்க முடிவு செய்தார்கள்.

என்னை வசனம் எழுத அழைத்தனர். நானும் ஒப்புக் கொண்டேன்.

‘சித்தூர் ராணி பத்மினி’ எதிர்பார்த்த அளவு வேகமாக வளரவில்லை. காரணம் பணத்தட்டுப்பாடு. மாதத்தில் நாலைந்து நாள்கள் மட்டுமே படப்பிடிப்பு நடக்கும்.

ஒரு ஷெட்யூலுக்கும் அடுத்த ஷெட்யூலுக்கும் ஏகமான இடைவெளி இருக்கும். ஆதலால் விட்டு விட்டு வசனம் எழுதுவது சிரமமாக இருந்தது. எனவே எனக்கு அதில் அத்தனை ஆர்வம் ஏற்படவில்லை.

உதய்பூரில் அவுட்டோர் ஷூட்டிங் நடந்தது. நடிகர் திலகத்தின் வற்புறுத்தலால் நானும் அவருடன் சென்றேன்.

வைஜெயந்தி மாலாவின் தாயார் வசுந்தராதேவியை, சினிமாவில் அறிமுகப்படுத்தியவர் ராமநாதன் செட்டியார். அதனால் வைஜெயந்தி மாலாவுக்கு அவர் மீது மரியாதை உண்டு. அந்த அடிப்படையில் தான் அவரை, செட்டியார் தன் படத்தில் புக் செய்தார்.

வைஜெயந்தி மாலாவுடன் எப்போதும் உடன் வருபவர் யதுகிரி பாட்டி. அவருக்குக் காலையில் எழுந்தவுடன் காபி குடித்தாக வேண்டும். இல்லையெனில் எல்லாரையும் உண்டு இல்லை என்றாக்கி விடுவார்.

எங்களுக்குத் தரப்பட்ட காபியில் வித்தியாசமான ஒரு வாடை வந்தது. யதுகிரி அம்மாளிடம் யாரோ போய், பசும் பாலுக்குப் பதிலாக, ஒட்டகப் பாலில் காபி தயார் செய்வதாகச் சொல்லிவிட, பெரிய ரகளை பண்ணி விட்டார் பாட்டி.

‘இப்போதே வைஜெயந்தியை அழைத்துக் கொண்டு மெட்ராஸ் கிளம்புகிறேன்...’என்று அடம் பிடிக்க ஆரம்பித்தார்.

‘நீங்கள் குடிப்பது பசும்பாலில் போடப்பட்ட காபியே’ என்று செட்டியார் எத்தனை முறை எடுத்துச் சொல்லியும், யதுகிரி அம்மையார் சிறிதும் சமாதானமாகவில்லை.

hqdefault.jpg 

மறுநாள் முதல் தன் கண் எதிரேயே ஒரு பசு மாட்டைக் கொண்டு வந்து கட்டி, அதன் பாலைக் கறந்து காபி போட வேண்டும் என்று கண்டித்துக் கூறினார்.

பாவம் செட்டியார். ஷூட்டிங் வேலைகளை கவனிக்க முடியாமல், பசுவுக்காக உதய்ப்பூர் முழுவதும் சுற்றித் திரிந்தார்.

ஒரு தொத்தல் பசு மாட்டைப் பிடித்து வந்து, கஷ்டப்பட்டு அதன் பாலைக் கறந்து காபி போட்டுக் கொடுத்தார்கள். அதன் பிறகே யதுகிரி அம்மாள் முழுத் திருப்தி அடைந்தார். ’ - டைரக்டர் ஸ்ரீதர்.

நடிகர் திலகம் - ஸ்ரீதர் கூட்டணியில் வைஜெயந்தி மாலா நடித்தும் தோல்வியைத் தழுவியது சித்தூர் ராணி பத்மினி. அதற்கான காரணத்தை ‘கல்கி’ விமர்சனத்தில் தெரிந்து கொள்ளலாம்.

‘இதில் நடிக்க எப்படித்தான் சம்மதித்தாரோ சிவாஜி கணேசன் ..? சிவாஜிக்கும் ராஜா ராணி கதைகளுக்கும் ஏனோ ஒத்துக் கொள்ளவில்லை. மனோகரா, வீர பாண்டிய கட்டபொம்மன் இரண்டும் விதிவிலக்கு.

சித்தூர் ராணி பத்மினி நடனமாடுவது மனதுக்குக் கஷ்டமாக இருந்தாலும், வைஜெயந்தியின் அபிநயங்களும் முக பாவங்களும் நெஞ்சில் அழியா ஓவியங்களாகப் பதிந்து விடுகின்றன.

தன் அழகால் சித்தூர் அழிவதை எண்ணித் தன் எழிலை வெறுத்து வைஜெயந்தி தற்கொலைக்கு முயலும் கட்டம் உருக்கமாக இருக்கிறது.

ஆனால் வரலாற்றுப் படத்தில் வசனம் பேசும் போது வைஜெயந்தியிடம் உணர்ச்சி இல்லையே...! ’

----------------------

‘சித்தூர் ராணி பத்மினி படமே வைஜெயந்தி மாலா நடித்த கடைசி தமிழ் சினிமா. ’அதற்குப் பின்னர் அவர் கோலிவுட்டில் கோலோச்சவில்லை.

v6.jpg 

ஆனாலும் அவர் இந்தியில் நடித்தவை பிரமிக்கத்தக்கக் காலத்தை வென்ற காவியங்கள். தமிழர்கள் அனைவரும் வைஜெயந்தியின் இந்திப்படங்களுக்கு நிரந்தர விசிறிகளாகி குளுமை பெற்றனர்.

வைஜெயந்தியின் நடிப்புக்குத் தமிழகத்தில் நல்ல மதிப்பும், எதிர்பார்ப்பும், என்றும் மாறாத அபிமானமும் எப்போதும் உண்டு.

வைஜெயந்தி மாலா தொடர்ந்து தமிழில் நடிக்க வேண்டும் என்று தயாரிப்பாளர்கள் அனைவரும் விரும்பினார்கள். அவர்களில், தமிழ், தெலுங்கு, இந்தி என்று மும்மொழி சினிமாக்களில் வைஜெயந்தி மாலாவை அறிமுகப்படுத்திய ஏ.வி. மெய்யப்பச் செட்டியார் மிக முக்கியமானவர்.

காலம் அதற்கானக் கதவை அடைத்து விட்டது.

‘பெண் படத்துக்குப் பிறகு வைஜெயந்தி என் படங்களில் நடிக்கவில்லை. அவரது பாதுகாவலர்கள் கடைசிக் கட்டத்தில் என்னுடன் நடந்து கொண்ட சில செயல்பாடுகள், எனக்கு மனக் கசப்பை அளித்தது. வைஜெயந்தியை நான், மீண்டும் என் படங்களில் நடிக்க அழைக்காதபடிச் செய்தது.

ஆனால் அப்போது அதை எல்லாம் புரிந்து கொள்கிற நிலையில் வைஜெயந்தி இல்லை. எனவே அவர் மீது நான் இதற்கான குற்றத்தைச் சாட்டத் தயாராக இல்லை. தவிர, வைஜெயந்தி மீது இருந்த அபிமானமோ மதிப்போ எனக்கு என்றும் குறையவில்லை.

என் ஸ்டுடியோவை விட்டு விடை பெற்றுச் சென்ற பிறகு, வைஜெயந்தியை நான் 12 ஆண்டுகள் வரை நேரிடையாகப் பார்க்கவே இல்லை.

1965ல் பம்பாயில் ‘கிரகஸ்தி’ (தமிழில் ஜெமினியின் மோட்டார் சுந்தரம்பிள்ளை) இந்திப் படத்தின் பிரத்யேகக் காட்சியின் போது, அவரை மீண்டும் சந்தித்தேன். எனக்குப் பின்னால் கொட்டகையில் உட்கார்ந்திருந்தார் அவர்.

இடைவேளையில் என்னைப் பார்த்து, ‘மிஸ்டர் செட்டியார் சவுக்கியமாக இருக்கிறீர்களா...? ’ என்றார் கைகளைக் கூப்பி வணக்கம் தெரிவித்த படி.

நானும் ‘நன்றாக இருக்கிறேன்’ என்று பதில் சொன்னேன். மேலே எதுவும் பேசவில்லை!

வைஜெயந்தி என் படத்தில் நடிப்பாரா... ஏன் நடிக்கக் கூடாது...?

3ccf40f57960526e4cbc5dcf73ca4c96.jpg 

என்னைப் பொறுத்தவரை, அன்று முதன் முறையாக என் படத்தில் நடிக்க வந்த போது, நான் எப்படி உயர்ந்த அபிப்ராயத்தை அவர் மீது வைத்திருந்தேனோ, அதே எண்ணத்தில் தான் இன்றும் இருக்கிறேன்.

அவர் மீது எனக்கு எந்தவித மனக்கசப்பும் இல்லை. வெறுப்பும் கிடையாது.

எனவே என் படத்தில் அவரை நடிக்க வைக்க எந்த விதத் தடையும் இல்லை. என் படமொன்றில் அவர் நடிக்கக் கூடும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது.’ - ஏவி. மெய்யப்பச் செட்டியார்.

சூப்பர் ஸ்டாரும் வைஜெயந்தி மாலாவும் ஓய். ஜி. மகேந்திரன் வகையில் உறவினர்கள். ரஜினியின் மாமியாராக மாப்பிள்ளை படத்தில் வைஜெயந்தி மாலாவை நடிக்க வைக்க முயற்சிகள் நடந்தன. ஆனால் அதுவும் கை கூட வில்லை. பின்பு அந்த வேடத்தில் நடித்தவர் ஸ்ரீவித்யா.

‘ஓஹோ எந்தன் பேபி... நீ வாராய் எந்தன் பேபி... ’ என்று உற்சாகமாக லவ் டூயட் பாடிய காதல் மன்னனைப் பற்றி, வைஜெயந்தி மாலா-

‘ என்னுடன் மிக அதிகப் படங்களில் நடித்த ஒரே தமிழ் ஹீரோ ஜெமினிகணேசன்.

அவரது குழந்தைகள் கமலா, ரேவதி, இருவரும் என் பரத நாட்டியப் பள்ளியில் நடனம் கற்றுக் கொண்டார்கள். அதனால் ஜெமினி கணேசன் குடும்பத்தாருடன் எனக்கு நிறையப் பழக்கம் உண்டு.

பார்த்திபன் கனவு படத்தில் என்னைப் பொறுத்தவரையில் குந்தவியாக நடித்த அனுபவம் மறக்க முடியாதது. அது என் முதல் சரித்திரப் படமும் கூட. சகஜமாகப் பழகும் சுபாவமுடையவர் ஜெமினி கணெசன்.

அவருடனான பார்த்திபன் கனவு அனுபவம் என் மனத்தில் அழுத்தமாகப் பதிந்து போன ஒன்று. தேவதா, நஸ்ரானா என்று இந்தியிலும் நாங்கள் இணைந்து நடித்தோம்.

வஞ்சிக்கோட்டை வாலிபன் படத்தில் கர்வமான இளவரசி மந்தாகினியாக வருவேன். பத்மினியோடு போட்டி போடுவேன். பத்மினிக்கும் எனக்கும் நடுவில் சிக்கித் தவிக்கும் பாவத்தை மிக அருமையாக வெளிப்படுத்தினார் ஜெமினி கணேசன். - வைஜெயந்தி மாலா.

http://www.dinamani.com

  • தொடங்கியவர்

வைஜெயந்தி மாலா: 4. போலு ராதா போலு சங்கம் ... !

 

 

வடக்கே வாகை சூடிய முதல் தமிழ் நடிகை டி.ஆர். ராஜகுமாரி. இந்தியில் எடுத்த எடுப்பில் உச்ச நட்சத்திரமாக ஒளி வீசியவர் வைஜெயந்தி மாலா.

வைஜெயந்தி இந்தியில் அறிமுகமான சமயம். அவருடைய சம காலத்தவர்களான பானுமதி, அஞ்சலி, பத்மினி போன்றத் தென்னிந்தியத் தாரகைகள் அங்கும் வெற்றிகரமாக மின்னினர்.

பத்மினி தவிர மற்றவர்களால் அதிக நாள்கள் தாக்குப் பிடிக்க முடியவில்லை. மிக சீக்கிரத்தில் ஆந்திராவில் அடைக்கலம் ஆயினர்.

tumblr_ngvaq2x7iR1rcl0e9o1_500.gif 

பப்பியைக் காட்டிலும் வைஜெயந்தி மாலா வடக்கு வானத்தின் எட்ட முடியாத தூரத்தில் இருந்தார். நிரந்தரமாக பம்பாய்வாசி ஆகி விட்டார்.

பத்மினியைத் தொடர்ந்து சரோஜாதேவி, தேவிகா, ராஜஸ்ரீ, காஞ்சனா, பாரதி முதலானவர்கள் இந்தியில் ஓரிரு ஹிட்களை கொடுத்ததோடு சரி.

வைஜெயந்தி மாலா விலகியதும் வடக்கே ஹேம மாலினியும் ---- ரேகாவும் சேர்ந்தாற் போல் மிக நீண்ட காலம் கொடி கட்டிப் பறந்தனர். அவர்களைப் போலவே அடுத்தத் தலைமுறையில் ஸ்ரீதேவி- ஜெயப்பிரதா மெச்சிக் கொள்ளத்தக்க வெற்றியைப் பெற்றார்கள்.

இடையில் லட்சுமி ‘ஜூலி’ மூலம் பரபரப்பை ஏற்படுத்தினார். ஊர்வசி சாரதாவும் ‘துலாபாரம்’ இந்தி ரீமேக்கில் அழுததோடு சரி.

அசினின் ஆட்டம் புதிய நூற்றாண்டில் அரங்கேறியது. மலையாள மண்ணிலிருந்து முதன் முதலாக ஒருவர், வடக்கே வாகை சூடியது வியப்பின் சரித்திரக் குறியீடு!

தற்போது ஸ்ருதி ஹாசன் - அக்ஷரா இருவரும் இந்தியில் தோன்றுகிறார்கள். இனி மேல் ஒளி வீசினால் உண்டு.

மேற்குறிப்பிட்டவர்களில் வைஜெயந்திக்கு நிகராக எவரையும் எண்ணிப் பார்க்க முடியாது.

வைஜெயந்தி மாலாவுக்குக் கிடைத்த மாதிரியான லட்டு லட்டான கேரக்டர்களும், அதில் வைஜெயந்தி காட்டிய அபார நடிப்புத் திறமையும், அவர் நாயகியாக மின்னிய படங்கள் அடைந்த மகத்தான வசூலும், ஓடிய ஓட்டமும் காலப்பெட்டகமாகிக் காண்பவர் நெஞ்சைக் கவர்கிறது இன்றும்!

34 வயதில் திருமணமாகும் வரையில் கிட்டத்தட்ட 18 ஆண்டுகள் சாதனைகள் அன்றி, சரிவையேச் சந்திக்காத ஒரே ஒரு சூப்பர் ஸ்டாரினி!

df9faf6ea548cb201e297a5974c501ce.jpg 

ஒட்டு மொத்த இந்தியத் திரையுலகில் எந்த ஒரு மாகாணத்திலும், அத்தனை வருடங்கள் எவரும் நாயகி அந்தஸ்தில் நீடித்தது கிடையாது.

வைஜெயந்தி மாலாவுக்கு எவரும் என்றும் மாற்று அல்ல. அவரது இடத்தை இனியும் இன்னொருவர் எளிதில் கைப்பற்றி விட முடியும் என்று கனவு கூட காண இயலாது.

இந்தி ஹீரோக்களின் தயவில் சில தென் இந்திய நடிகைகள், அங்கு வாய்ப்பு பெறுவது என்றும் மாறாத நடைமுறை.

ஆனால் காலில் விழாத குறையாக வடக்கின் ஜாம்பவான்கள், வைஜெயந்தி செல்லும் இடமெல்லாம் பின் தொடர்ந்து போய், வற்புறுத்தி நடிக்க வைத்தது ஆச்சரியப்படுத்தும் அரிதார வரலாறு! அதன் ஓர் துளி இங்கே உங்களுக்காக.-

‘பாப்பாவை ஒப்பந்தம் செய்யும் போது, படத்தின் கதையை வைஜெயந்தி தவிர, பாட்டி யதுகிரிக்கும் சொல்ல வேண்டும். இருவருக்கும் கதை பிடித்தால் மட்டுமே வைஜெயந்தி சம்மதிப்பார்.

வைஜெயந்தியின் ஊதியம், கால்ஷீட், கான்ட்ராக்ட் எல்லாவற்றிலும் பாட்டியின் தீர்ப்பே முடிவானது.

யதுகிரி அம்மாள் விதிக்கும் மிக முக்கிய நிபந்தனை-

‘பாப்பாவை ஆபாசமானக் காட்சிகளில் நடிக்க வைக்கக் கூடாது. அருவருக்கத்தக்கக் கவர்ச்சியான ஆடைகளை என் பேத்தி கண்டிப்பாக அணிய மாட்டார். ’

வைஜெயந்தி, திலீப்குமாருடன் மிக அதிகப் படங்களில் நடித்த நேரம். அவை யாவும் சூப்பர் டூப்பர் ஹிட்களாக அமைந்தன.

வைஜெயந்தியுடன் ஜோடி சேரும் வாய்ப்பு ராஜ் கபூருக்குக் கிடைக்கவில்லை.

நாங்கள் தேன் நிலவு ஷூட்டிங்கில் பிஸியாக இருந்தோம். எவரும் எதிர்பாராத விதத்தில் ராஜ் கபூர் அங்கே வந்தார்.

அவரது காஷ்மீர் விஜயத்துக்குக் காரணம், எப்படியாவதுத் தனது சங்கம் சினிமாவில், வைஜெயந்தியுடன் ஹீரோவாக நடித்து விட வேண்டும் என்பதே. அந்த விஷயத்தில் வைஜெயந்தியோ நழுவிக் கொண்டே இருந்தார்.

‘வைஜெயந்தியை எப்படியும் புக் பண்ணிக் காட்டுகிறேன் பாருங்கள்... ’ என்று ராஜ் கபூர் என்னிடம் சவாலே விட்டார்.

ராஜ் கபூரின் அணுகுமுறையே ரொம்ப வித்தியாசமாக இருக்கும். தினமும் நாங்கள் இருக்கும் லொகேஷனில் கையில் பொக்கேயுடன் ஆஜராகி விடுவார் ராஜ் கபூர். அன்றாடம் அதை வைஜெயந்தியிடம் நீட்டி நலம் விசாரிப்பார்.

‘இந்துஸ்தானியின் ட்ரீம் கேர்ளிடம்’ திடீரென்று ஒரு தந்தியைக் காண்பிப்பார்.

‘நாங்கள் எல்லாரும் இங்கே ‘ராதா’வுக்காகக் காத்திருக்கிறோம். ’ என்று ராஜ் கபூரின் ஆர். கே. ஸ்டுடியோவில் இருந்து டெலிகிராம் கொடுத்திருப்பார்கள்.

‘சங்கம் நாயகி ராதா’ நீங்கள் தான். என் யூனிட் மொத்தமும் உங்கள் வருகைக்காகத் தயாராகி விட்டது. உம்... தயவு செய்து ஒப்புக் கொள்ளுங்கள். ’ என்பார் வைஜெயந்தியிடம்.

வைஜெயந்தி மாலாவின் பாட்டி யதுகிரி அம்மையாரையும் விட்டு வைக்க மாட்டார். அவருடனும் நாள்தோறும் பேசி பொழுது போக்குவார் ராஜ் கபூர்.

பாட்டி மூலமாவது பேத்தியின் சம்மதத்தைப் பெற்று விட வேண்டும் என்கிற வைராக்கியம்...

இறுதியில் அசகாய சூரர் ராஜ் கபூர், வைஜெயந்தி மாலாவை சங்கம் படத்தில் சங்கமிக்கச் செய்து விட்டார்- டைரக்டர் ஸ்ரீதர்.

வைஜெயந்தி என்றாலே ஒட்டுமொத்த இந்தியப் பாமரர்களுக்கும் முதலில் நினைவுக்கு வருவது ராஜ் கபூரின் சங்கம்.

அதில் ‘போலு ராதா போலு சங்கம்’ என்ற சூப்பர் ஹிட் டூயட், தேசிய கீதத்தைப் போலவே மாணவர்களால் அதிகம் பாடப்பட்டது!

Vyjayanthimala_121012_0.jpg

மும்பை அப்ஸரா தியேட்டர். சங்கம் பட வெளியீட்டு விழா! பத்திரிகையாளர் சந்திப்பும், போட்டோ செஷனும் ஏற்பாடாகி இருந்தன.

ராஜ் கபூர், ராஜேந்திர குமார் உள்ளிட்ட ஹீரோக்கள், சகக் கலைஞர்கள் கலகலப்பும் பரபரப்புமாகக் கூடி நின்றனர். ஒட்டு மொத்த பாலிவுட்டும் வைஜெயந்தியின் வருகைக்காக வாசலில் தவம் இருந்தது.

‘நர்கீஸ், பத்மினிக்கு அடுத்து இப்போது வைஜெயந்தியும் ராஜ் கபூரின் கோட் பாக்கெட்டில்...! ’

என்பதாகக் கிசுகிசுக்கள் பரவியதால் வைஜெயந்திக்கு வருத்தம் ஏற்பட்டது.

‘வேண்டுமென்றே சங்கம் படத்தின் பிரமோஷனுக்காக, தவறானத் தகவல்களைத் தருகிறார்கள். அதில் சிறிதும் நிஜமில்லை’ என்று மறுப்பு வந்தது.

ஹீரோயின் வரக் காணோம். கடிப்பதற்கு நகங்கள் தீர்ந்து விட்டன ராஜ் கபூருக்கு.

‘வைஜெயந்தி வருவாரா...? ’ என்கிறத் தவிப்பு நொடிக்கு நொடி கூடியது. ரத்த அழுத்த மாத்திரையை காலையில் ஞாபகமாகப் போட்டுக் கொண்டோமா...?

இப்படி வியர்க்கிறதே...! கைக் குட்டையால் முகம் துடைத்தார் ராஜ்கபூர்.

நல்ல வேளை. அவர் இருதயத்துக்கு அதிக ஆபத்தை ஏற்படுத்தாமல், பிளாஷ்களின் ஓயாத மின்னலில் வைஜெயந்தியின் கார் ‘அப்ரஸரா’ வளாகத்துக்குள் நுழைந்தது.

‘அலஹாபாத்தில் கங்கை, யமுனை, சரஸ்வதி மூன்று நதிகளும் சங்கமம் ஆகின்றன. அதில் நீங்கள் கங்கையா, யமுனையா...? ’

‘ நான் அவை இரண்டுமே இல்லை. கண்களுக்குத் தெரியாமல் பூமியின் அடியில் ஓடுவதாக புராணங்கள் குறிப்பிடுகிற அந்த ‘சரஸ்வதி’ யே நான்!

ஸோ தட், உங்கள் பார்வைக்கு இத்தனை நேரம் அகப்படாமல் இருந்தேன். ’

ப்ரஸ் மீட்டில் வைஜெயந்தி அளித்த சாமர்த்தியமான பதிலில், வெளிப்பட்ட அவரது புத்திசாலித்தனத்தில் சில நொடிகள் திகைத்து நின்றனர் சினிமா நிருபர்கள்.

சங்கம் பற்றி ‘ராதா’ சொன்னவை-

ராஜ் கபூர் சங்கம் படத்தை 1960ல் எடுத்தார். அவர் தனது படங்களில் பிரம்மாண்டம் இருக்கிற அளவுக்கு, பிரமிக்கவும் வைப்பார். அதற்காக சில காட்சிகளை ஐரோப்பிய தேசங்களில் படமாக்கினார்.

அந்த நேரத்தில் அப்படியோர் பிரம்மாண்டம் யாரும் கண்டதில்லை என்கிற அளவுக்கு, அயல் நாட்டுக் காட்சிகள் ரசிகர்களைக் கவர்ந்து இழுத்தன. சங்கம் சினிமாவில் இரண்டு இடைவேளை விடுவார்கள்.

இருந்தும் அலுப்பு சலிப்பில்லாமல் ஜனங்கள் மீண்டும் மீண்டும் சங்கம் பார்த்தனர். அந்த அளவுக்கு எல்லாருக்கும் பிடித்தமானதாக இருந்தது.

1999ல் லண்டனில் முதியோர்களுக்கான ஒரு விழா. என்னைப் பங்கேற்க அழைத்தார்கள். மேடைக்கு அருகே அனைவராலும் வர முடியவில்லை. எனவே நடக்க இயலாத மிக மூத்த குடிகளுக்கு அருகே என்னைக் கூட்டிச் சென்றனர்.

அதில் ஒரு பெரியவர் நடந்து கொண்ட விதம் ரொம்பவே நெகிழ்த்தியது. மூப்பின் காரணமாக முதியவருக்குப் பார்வை சுத்தமாகப் பறி போயிருந்தது.

நான் பக்கத்தில் நிற்பதைத் தெரிந்து கொண்ட அவர் என் கைகளைப் பிடித்தவாறு,

‘அம்மா நீதான் வைஜெயந்தி மாலாவா...? சங்கம் சினிமால ராதாவா வந்த அதே வைஜெயந்தி மாலாவா...? நீ நடிச்ச எல்லாப் படத்தையும் இந்தக் கண்கள் பார்த்திருக்கு.

ஆனா இப்ப... இப்ப என் எதிர்ல நீ இருக்கிற, என்னால உன்னைப் பார்க்க முடியலியேம்மா... ’ என்று சொல்லி உள்ளம் உருகக் கண்ணீர் சிந்தினார்.

எனக்கு ஒரு மாதிரியாகி விட்டது. கடல் கடந்து சென்ற இடத்தில், என்னைத் தனது அன்பால் கலங்கடித்த அந்தப் பெரியவரை சமாதானப்படுத்துவதற்குள் நான் பட்ட பாடு..!

அத்தகைய ரசிகரின் நேசமும், அவர் என் மீது வைத்த நிஜமான பாசமும் என்றுமே மறக்க முடியாதவை. ’- வைஜெயந்தி மாலா.

லண்டன், பாரீஸ், வெனீஸ், சுவிட்சர்லாந்து, என்று சங்கம் படத்துக்கான அவுட்டோர் நடைபெற்றது இந்தியத் திரையுலகில் அன்று அதிசயமாகப் பேசப்பட்டது.

ராதாவாகத் தோன்றும் வைஜெயந்தி மாலாவும் கோபாலாக வரும் ராஜேந்திர குமாரும் காதலிக்கிறார்கள். சங்கம் படத்தில் முதல் பாதி திரைக்கதை அது.

சந்தர்ப்பவசத்தால் சுந்தரை (ராஜ் கபூர்), வைஜெயந்தி மணக்கிறார். தன் மனைவி ஏற்கனவே ஒருவனின் காதலி என்கிற நிஜம், நிம்மதியைக் கெடுக்க ராஜ் கபூர், வைஜெயந்தியை சந்தேகம் கொள்வது மீதிக் கதை.

Sangam_1964_DVDRip_2_CD_By_tamercome_010.jpg

‘மனைவி மேல் சந்தேகப் படுவதை ராஜ்கபூர் அற்புதமாகச் சித்தரிக்கிறார். அவரைக் காட்டிலும் திறம்பட வேறு யாராலும் அவ்விதம் சித்தரிக்க முடியுமா ? ’

என்று வியந்து விமர்சித்தது குமுதம். வைஜெயந்தி பற்றி ஏதும் குறிப்பிடவில்லை.

‘சிங்கிள் ஃபீஸ் ஸ்விம்மிங் காஸ்ட்யூமில்’ வைஜெயந்தி சங்கம் படத்தில் தோன்றியதை, மற்றுமொருக் கொண்டாட்டமாக இளைய தலைமுறையினர் வரவேற்றனர். தியேட்டர்கள் தோறும் விசிலடித்து ஒன்ஸ் மோர் கேட்டார்கள்.

தமிழகத்தில் ‘பேசும் படம்’ தனது 1965 ஜனவரி இதழில் வைஜெயந்தியின் துணிச்சலை வன்மையாகக் கண்டித்து எழுதியது.

சங்கம் படத்தில் அருமையாக நடித்ததற்காக பிலிம் பேர், வைஜெயந்திக்கு சிறந்த நடிகை விருது வழங்கி கவுரவித்தது.

பஹாரைத் தொடர்ந்து வைஜெயந்திக்குக் கிடைத்த மகத்தான வெற்றிச் சித்திரம் நாகின்.

‘நாகின்’ பற்றி வைஜெயந்தி -

‘பஹார்’ இந்தியில் வந்தாலும் முழுக்க முழுக்கத் தமிழ்நாட்டில் தயாராச்சு. அதனால் நாகின் தான் எனக்குக் கிட்டத்தட்ட முதல் இந்திப்படம். எப்படின்னா, முழுக்க முழுக்க பம்பாய் சூழலில் படமானது. அதனாலயே நாகின் என் முதல் வடக்கு அனுபவம்னு சொன்னேன்.

நாகின்ல ஹீரோ - ஹீரோயின் ரெண்டுமே நாகங்கள். நிஜமாகவே அது ஒரு த்ரிலிங்கான அனுபவம். கதைப்படி என் உடலில் உள்ள பாம்பு விஷத்தை, அந்தப் பாம்பே வந்து உறிஞ்சி எடுக்கிற மாதிரி சீன். பாம்பை வரவழைக்க மகுடியோட ஆளும் வந்தாச்சு.

பாம்பாட்டி மகுடி எடுத்து ஊத, நாகம் வளைஞ்சி நெளிஞ்சி வர்றப்ப மனசு தடக் தடக்னு அடிச்சுக்குது. அதுவரையில் நான் அரைக் கண் விழிச்சிப் பார்த்துக் கிட்டே இருப்பேன்.

ஆனா பாருங்க ஒவ்வொரு தடவையும் பாம்பு எங்கிட்ட நெருங்கும், அதுக்கு என்ன தோணுமோ உடனே திரும்பிப் போயிடும்.

நாலஞ்சு தரம் ஷாட் வேஸ்ட் ஆச்சே தவிர நாகம் விஷத்தை உறிஞ்சல. அந்த சீன்ல நடிக்கப் பிடிக்காததைப் போல மறுபடி மறுபடி பிலிமை வீணாக்குச்சு.

இனிமே சரிப்படாதுன்னு ஷாட்டை மாத்தினாங்க. குளோசப்ல பாம்பைக் காட்டி அது விஷத்தை உறிஞ்சிற மாதிரி படமாக்கினாங்க.

இன்னொரு சீன்ல நாகப்பாம்பை கையில எடுத்து சுழற்றித் தூக்கி வீசணும். நான் எப்படி ஜாக்ரதையா நாகத்தை எடுத்து எறியணும்னு அஸிஸ்டென்ட் டைரக்டர் செஞ்சு காட்ட முன் வந்தார்.

 

01ce6ae9990e610ae22c1eb34096a91d.jpg 

அதுக்காக பாம்பாட்டி கிட்டயிருந்து பாம்பை வாங்கி, ஒரு சுத்து சுத்தி கீழே போடப் போனப்ப, ஸர்ப்பம் சுறுசுறுப்பாகி அவர் கழுத்தை வளைச்சு இறுக்கத் தொடங்குச்சு.

உதவி இயக்குநர் மூச்சுத் திணறி கண்கள் நிலை குத்தி மயக்கமாகி விழுந்துட்டார்.

செட்ல எல்லாரும் பதறிட்டாங்க. உடனே ஓடிப் போய் கஷ்டப்பட்டு பாம்பை அவர் கிட்டயிருந்து பிரிச்சி, எப்படியோ உயிரைக் காப்பாத்தினாங்க.

களேபரம் எல்லாம் நடந்து முடிஞ்சு, அஸிஸ்டென்ட் டைரக்டர் உட்பட அனைவரும் இயல்பு நிலைக்குத் திரும்பக் கொஞ்ச நேரம் ஆச்சு.

எப்படியும் அந்த சீனை எடுத்தாகணும்னு எல்லாரும் தயார் ஆனாங்க. பக்கத்துல இருந்து நடந்ததைப் பார்த்தவளாச்சே நான் ..!

‘அய்யய்யோ... என்னால இனி நடிக்க முடியாது. என்னையும் ஸர்ப்பம் சுத்தி வளைச்சிக்கிட்டா நான் என்னாவேன் ...?

நடுங்கிக் கொண்டே அதைச் சொன்னேன்.

டைரக்டர் உடனே ரப்பர் ஸ்நேக்கைக் கொண்டு வரச்சொல்லி, எனக்குரிய காட்சிகளை எடுத்து முடிச்சார். ’ - வைஜெயந்தி மாலா.

நாகினில் வைஜெயந்திக்கு ஜோடி பிரதீப் குமார். இசை ஹேமந்த் குமார். எல்லாமே சூப்பர் ஹிட் பாடல்கள். தமிழ் நாட்டிலும் சக்கை போடு போட்டது நாகின். குறிப்பாக திருச்சியில் வெள்ளி விழா கொண்டாடியது.

ஸ்ரீப்ரியாவின் தயாரிப்பில் வெகு காலம் கழித்து நாகின் தமிழில் ரீமேக் ஆனது. 1979 தைத் திருநாளில் நீயா என்ற பெயரில் வெளியாகியது. 100 நாள்கள் வெற்றிகரமாக ஓடி வசூலைக் குவித்தது. நாயகி ஸ்ரீப்ரியாவுக்கு பேரும் புகழும் பெற்றுத் தந்தது.

http://www.dinamani.com

  • தொடங்கியவர்

வைஜெயந்தி மாலா: 5. டெலிபோன் ஆபரேட்டர்!

 

 

சரத்சந்திரரின் சாஸ்வதமான படைப்பு தேவதாஸ். அநேக முறைகள் இந்தியில் தேவதாஸ் சினிமாவாகி இருக்கிறது.

1935ல் ’வடக்கின் கான சம்பந்தர்’ கே.எல். சைகாலின் நடிப்பில் முதல் தேவதாஸ் தயாரானது. சைகாலின் பாடல்களும் நடிப்பும் பிரமாதமாக பேசப்பட்டது.

பிமல்ராயின் இஷ்ட தெய்வம் தேவதாஸ். முதன் முதலில் எடுக்கப்பட்டதில், ஏற்கனவே ஒளிப்பதிவாளராகப் பணியாற்றியவர் பிமல் ராய்.

ஆழ்ந்த ஈடுபாடு, மற்றும் ஆளுமையின் அடுத்த அத்தியாயம் 1956ல் அவரது இயக்கத்தில் உருவான தேவதாஸ்.

திலீப் குமார் - சுசித்ரா சென், வைஜெயந்தி மாலா நடித்திருந்தனர்.

திலீப் குமாருக்கு நிகரான சோக நடிப்பில் பெரும் புகழ் பெற்றவர் ’வங்கத்துத் தங்கம்’சுசித்ரா சென். தாயும் மகளுமாக மாறுபட்ட இரு வேடங்களில் சுசித்ரா சென் வாழ்ந்து காட்டிய படம் ’மம்தா’.

சுசித்ரா சென்னின் மறக்க முடியாத நடிப்பைப் பார்த்து வியந்து நின்றனர் நடிகையர் திலகம் உள்ளிட்டத் தென்னக நட்சத்திரங்கள்.

வைஜெயந்தி மாலா நடிக்கத் தமிழில் வீனஸ் பிக்சர்ஸ் ‘மம்தா’வை உருவாக்க இருந்தது.

பின்பு சவுகார் ஜானகியின் சொந்தத் தயாரிப்பில், கே. பால சந்தர் இயக்கத்தில் காவியத் தலைவி’ என்ற பெயரில் ரீமேக் ஆனது. 1970 தீபாவளித் திருநாளில் வெளி வந்து வெற்றிகரமாக 100 நாள்கள் ஓடியது.

அப்படிப்பட்ட ஒப்பாரும் மிக்காரும் இல்லாத சுசித்ரா சென்னை, தேவதாஸில் ‘நோ வேர்’ஆக்கி விட்டார் ‘தாசி சந்திரமுகி’யாக சதிராடிய வைஜெயந்தி மாலா.

‘சந்திரமுகிக்கு உயிரூட்டிக் கண் முன்பு நிறுத்தியிருக்கிறார் வைஜெயந்தி மாலா...!’ என்று மலைத்தது ‘பிலிம் பேர்’.

‘சிறந்த துணை நடிகை’ விருதை மனமுவந்து வைஜெயந்தி மாலாவுக்கு முதன் முதலாக அளித்தது.

தொழில்ரீதியாக பம்பாயே தாயகம் என்றான பின்னும், மறத்தமிழச்சிகளின் வீரத்தை மறந்ததில்லை வைஜெயந்தி மாலா.

‘பிலிம் பேரின் முடிவு தவறு. ‘பெஸ்ட் சப்போர்ட்டிங் ஆக்ட்ரஸ்’ என்ற பெயரில், பரிசு வழங்கப்படுவது தன்னைச் சிறுமைப் படுத்துகிறது’ எனக் கூறி அவார்டை ஏற்க மறுத்தார் வைஜெயந்தி மாலா.

பிலிம் பேர் சரித்திரத்தில் அத்தகையத் தீவிர எதிர்ப்பும், மறுப்பும், காட்டமும் முதல் அனுபவம்!

dilip and mala.jpg 

‘நயா தவுர்’ நேற்றைய இந்தியர்களால் அத்தனைச் சீக்கிரத்தில் மறக்க முடியாத அற்புதச் சித்திரம்! பி.ஆர். சோப்ராவின் தரமானத் தயாரிப்பு.

நயா தவுரின் அட்டகாச வெற்றியால் தமிழிலும் அதனை ‘பாட்டாளியின் சபதம்’ என்ற பெயரில் டப் செய்தார்கள். தமிழகத்திலும் நன்றாக வசூலித்தது.

‘ஆனந்த விகடன்’ தன் விமரிசனத்தில் நயா தவுர் சினிமாவையும் திலீப் குமார் - வைஜெயந்தி மாலா ஜோடியின் ஒப்பற்ற நடிப்பையும் உளமாறப் பாராட்டியது.

சந்தர் - நயா தவுர்னா என்னப்பா அர்த்தம்?

சேகர் - ‘புதிய சகாப்தம்’னு அர்த்தம். ‘மனித உழைப்பைக் கபளீகரம் செய்துவிடும் எந்திர பூதத்துக்கு, இந் நாட்டில் முக்கிய இடம் கொடுத்து விடக் கூடாது’ என்ற காந்தி மகானின் அஹிம்சைக் குரலை ஆதாரமாக வைத்து இந்தப் படத்தை உருவாக்கி இருக்கிறார்கள்.

சந்தர் - திலீப் குமார் எப்படி?

சேகர் - என்னால் சொல்லவே முடியாதப்பா! முகத்திலேயே நடிப்பு! இந்தப் படத்தில் நவரஸங்களும் வருகின்றன. அனைத்தையும் அற்புதமாகச் செய்கிறார். ‘கிராமத்து ஜட்கா வண்டிக்கார சங்கரா’ வரார் அவரு. ‘சல் ராஜா சல்’ என்று குதிரையை ஓட்டுகிறார் பாரு, அதுக்கே கொடுக்கலாம் இரண்டரை ரூபாய்!

சந்தர் - வைஜெயந்தி மாலா ?

சேகர் - அவர் நடந்தால் நடிப்பு. பார்த்தால் அன்பு. கடைசியில் ஒரு டான்ஸ் ஆடுகிறார் பாரு, அப்படியே உள்ளத்தை அள்ளி விடுகிறார். விறுவிறுப்பும் ஜோரும் பிரமாதம் போ!

காலத்துக்கேற்ற நல்ல கதை. கருத்துச் செறிந்த வசனம். நல்ல பாட்டுக்கள். பாதிக்கு மேல் வெளிப்புறக் காட்சிகள்... நயா தவுர், பம்பாய்ப் பட உலகிலே ஒரு புதிய சகாப்தத்தை உண்டாக்கி விட்டது என்றே சொல்லலாம்!

----------

திலீப் குமார் - வைஜெயந்தி மாலாவின் நேச மிக்க நடிப்பில் மற்றும் ஒரு மகுடம் ‘மதுமதி’ - திகிலும் விறுவிறுப்பான திடுக்கிடும் சம்பவங்களும் நிறைந்த மாறுபட்ட பூர்வ ஜென்மக் கதை.

இந்தியத் திரையுலகின் மாபெரும் கலைஞர் பிமல் ராய் செதுக்கிய காலத்தால் அழியாத காதல் காவியம்!

மதுமதி என்கிற பெயரைக் கேட்டதும் மகுடியில் கட்டுண்ட நாகமாக மயங்குவர் இந்தி சினிமா இசை ரசிகர்கள்.

சலீல் சவுத்ரியின் இதயத்தை உருக்கும் இசையில், லதா மங்கேஷ்கரின் குரலில் ஒலித்த ‘ஆஜாரே...’ தொடங்கி, மதுமதியில் ஒலித்த அத்தனை பாடல்களும் தேனில் தோய்த்த பலாச் சுளைகள்!

‘மதுமதி’ ஏற்படுத்தியத் தாக்கத்தில் ஸ்ரீதர் இயக்கிய படம் நெஞ்சம் மறப்பதில்லை. தமிழ் சினிமாவில் புதுமையான கதையாக ரசிக்கப்பட்டது. வெற்றிகரமாகவும் ஓடியது.

‘பா’ வரிசைப் படங்களின் மூலம் தென்னகத்தை நடிகர் திலகமும்- பீம்சிங்கும் கூட்டணி சேர்ந்து அசத்திக் கொண்டிருந்தனர். அவர்களை மட்டுமல்லாமல் ஒட்டு மொத்த இந்துஸ்தானிகளையும் இன்னொரு முறையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது திலீப் குமார் - வைஜெயந்தி மாலா ஜோடி.

அவர்களது நெஞ்சம் நெகிழச் செய்யும் நடிப்பில் வைரமாக ஜொலித்து, வரலாறு காணாத வசூலில் மாணிக்கமாக இந்தியா முழுவதும் ஒளி வீசியது ‘கங்கா ஜமுனா’.

‘திலீப் குமார் கிராமத்து வாலிபனாகவே மாறி இருப்பது ஒரு புதுமை. வைஜெயந்தி மாலாவுக்குத்தான் உண்மையான வெற்றி என்று சொல்ல வேண்டும்.

தமிழில் வைஜெயந்தி மாலாவை பணக்காரியாகக் காட்டுகிறார்கள். அவர் ஏழையாக இருப்பின், கண்டிப்பாக படித்த பெண்ணாகக் காட்டுகிறார்கள்.

ஆனால் வைஜெயந்தி மாலாவுக்குக் குடியானவப் பெண் வேடம் கொடுத்து, நாட்டுப்புறத்து நங்கையாக நடிக்க வைக்கிறவர்கள் இந்திக்காரர்கள்.’

என்று குமுதம் வைஜெயந்தி மாலாவுக்காக வரிந்து கட்டிக் கொண்டு, அவரது சிறந்த நடிப்பைச் சீர்தூக்கி வாழ்த்தி விமரிசனம் எழுதியது.

நடிகர் திலகத்தின் ஆலயமணி இந்தியில் திலீப் குமார் நடிக்க ஆத்மி என்ற பெயரில் ஒலித்தது. அதன் தோல்வியில் கதி கலங்கி நின்றார் பி.எஸ். வீரப்பா.

அவரது நஷ்டத்தில் பங்கு கொள்ளும் வகையில், அன்றைய தேதியில் விலை மதிப்பற்ற ‘கங்கா ஜமுனா’ கதையை திலீப் குமார், இலவசமாகவே வீரப்பாவுக்கு வழங்கினார்.

Art-350.jpg 

கங்கா ஜமுனா, தமிழில் ஏகப்பட்ட எதிர்பார்ப்புகளோடு ‘இருதுருவம்’ என்ற பெயரில், 1971 தைத் திருநாளில் பிரம்மாண்ட வண்ணச் சித்திரமாக வெளிவந்தது.

நடிகர் திலகம் - நாட்டியப் பேரொளி இணைந்து நடித்தும், இருதுருவம் வெற்றி பெறவில்லை.

திலீப் குமார் - வைஜெயந்தி மாலா ஏற்படுத்தியத் தாக்கம் பத்து ஆண்டுகளுக்குப் பிறகும், தமிழர்களின் மனத்தில் மறையாமல் இருந்ததே அதன் தோல்விக்குக் காரணம்.

திலீப்குமார் - வைஜெயந்தி மாலா ஜோடியின் மற்றொரு சூப்பர் ஹிட் வசூல் சாதனை - ‘லீடர்.’ நேரு மறைந்த நேரத்தில் பாரதம் முழுவதும் பரபரப்பாக ஓடிய அரசியல் சார்ந்த சினிமா.

‘வண்ணப்படம் எடுக்க வேண்டுமா ? இந்தியாவிடம் கற்றுக் கொள்ளுங்கள் என்று மற்ற தேசத்தினர் சொல்லும் காலம் வந்தால் ஆச்சரியப்படத் தேவை இருக்காது.

ஏன் வந்தோம் என்ற எண்ணம் எழவொட்டாமல் தடுக்கும் விஷயங்கள் 1.வைஜெயந்தி மாலா 2. வண்ணம் தவிர மூன்றாவதாக, இவ்வளவு வேடிக்கையாக திலீப்குமாருக்கு நடிக்கத் தெரிந்திருப்பது...’என்று லீடர் படத்தை மனமாறப் பாராட்டி எழுதியது ‘குமுதம்’.

1967ல் வெளியானது ‘ஆம்ர பாலி’ - வரலாற்றுச் சித்திரம். ‘அமர பாலி’ என்றும் குறிப்பிடுகின்றன சில தமிழ்ப் பத்திரிகைகள்.

‘ஊர்வசி’ விருதைக் குறி வைத்துக் கடுமையாக உழைத்து வைஜெயந்தி மாலா நடித்த லட்சியப் படம்.

சுனில் தத் ஹீரோ.

மாறு வேடத்தில் வந்து மன்மதனாக கண் முன்பு நிற்கிறான் எதிரி தேசத்து இளவரசன். யுவராஜனைக் காதலித்து ஏமாந்து, இறுதியில் புத்த பிரானைச் சரண் அடையும் நாட்டியக்காரியாக நவரஸத் திலகம் வைஜெயந்தி மாலா.

சுனில்தத்துடன் காதலும் கவர்ச்சியும் ஒருங்கே மிளிர, நடிப்பும் நாட்டியமுமாக வைஜெயந்தி உயிரைக் கொடுத்து, உன்னதமாக உரு மாறியும் ஆம்ர பாலி கேட்பாரற்றுப் போனது.

தாங்க முடியாத அதிர்ச்சியில் வைஜெயந்தி மாலா துடிதுடித்த முதலும் கடைசியுமான நிகழ்வு அது!

வைஜெயந்தி மாலா ரசிகர்களின் மலரும் நினைவுகளில் நிரந்தர வாசம் தரும் மற்ற சினிமாக்கள் -

தேவ் ஆனந்துடன் ஜ்வல் தீஃப், ராஜேந்திர குமாருடன் சூரஜ், ஷம்மி கபூருடன் பிரின்ஸ், கிஷோர் குமாருடன் நியூ டெல்லி போன்றவை.

வைஜெயந்தி மாலாவின் நடிப்பாற்றலை மூலதனமாக வைத்து நடிகர் திலகம் முதன் முதலில் வடக்கே பட அதிபராக உயர்ந்தார்.

ஸ்ரீதரின் அமர தீபம் சிவாஜி பிலிம்ஸ் தயாரிப்பில் இந்தியில் ’அமர் தீப்’ ஆனது.

சாவித்ரி ஏற்ற வேடத்தில் வைஜெயந்தியும், தமிழில் தோன்றிய அதே ஜிப்ஸி நாட்டியக்காரி பாத்திரத்தில் பத்மினியும் அக்கா தங்கைகளாக நடித்தார்கள். ஹீரோ தேவ் ஆனந்த்.

வைஜெயந்தி மாலாவை அறிமுகப்படுத்திய இந்தி பஹாரில், முதன் முதலாக லலிதா- பத்மினியின் பாம்பாட்டி நடனைத்தையும் இணைத்தவர் ஏவி.எம்.

வைஜெயந்தியும் பத்மினியும் ஒரே படமான பஹார் மூலமே பம்பாயில் வலது கால் வைத்தார்கள்.

madhumati.jpg 

தமிழில் வஞ்சிக் கோட்டை வாலிபன், ராஜ பக்தி, இந்தியில் ராஜ் திலக், அமர் தீப் ஆகிய நான்கு படங்களில் இணைந்து நடித்துள்ளனர் பத்மினி- வைஜெயந்தி மாலா இருவரும்.

ராஜ் கபூரின் ராசி நாயகியாக பத்மினியும், திலீப் குமாரின் நடிப்பரசியாக வைஜெயந்தி மாலாவும் வடக்கே வாகை சூடினர்.

தீலிப் குமார் - பத்மினி இந்தியில் ஜோடி சேர்ந்ததே கிடையாது. தெற்கே இருந்து சென்றாலும் வைஜெயந்தி மாலா - பத்மினி இருவரது வழியும் தனித் தனியாக அமைந்தது.

ராஜ் கபூருடன் வைஜெயந்தி மாலாவுக்கு பரஸ்பர மரியாதை மட்டும் உண்டு. ஆனால் பத்மினி - வைஜெயந்தி மாலா இருவரிடமும் ஆரோக்கியமான நட்பை விரும்பினார் ராஜ் கபூர்.

‘திருப்பதி ஏழுமலையானை எனக்குக் காட்டியவர் பத்மினி. டைரக்டர் ஸ்ரீதர் திருமணத்துக்குச் சென்னை வந்த போது, திருமலையில் வெங்கடேசப் பெருமாளின் சந்நிதியில் அங்கப் பிரதட்சணம் செய்ய வைத்த குரு வைஜெயந்தி மாலா!’ - ராஜ் கபூர்.

அமர தீபம், கல்யாண பரிசு வரிசையில் இந்தியில் ஜூலா என்ற பெயரில் ரீமேக் ஆனது கே. சங்கரின் கைராசி வெற்றிச் சித்திரம்.

தமிழில் ஜெமினி - சரோஜாதேவி நடித்த வேடங்களில் சுனில்தத் - வைஜெயந்தி மாலா நடித்தனர்.

வீம்பும் வேடிக்கையும் வைஜெயந்தியின் உடன் பிறப்பு. வைஜெயந்தியின் வெளிப்புறப் படப்பிடிப்புகள் எப்போதும் கூத்தும் கும்மாளமுமாக இருக்கும்.

கேரளாவில் மலம்புழா அணைக்கட்டில் ஜூலா அவுட்டோர் ஷூட்டிங்.

சுனில்தத்துடன் வைஜெயந்தி மாலா யானை சவாரி செய்ய வேண்டிய டூயட் சீன். எத்தனை எடுத்துச் சொல்லியும் வைஜெயந்தி மாலா ‘கஜேந்திரன்’ மீது ஏற மறுத்து விட்டார்.

வாரணத்தின் பக்கம் நெருங்கவே பயந்தார்.

பட அதிபர் வட்டிக்கு வாங்கி போட்டப் பணம் போல வெயில் போய்க் கொண்டிருந்தது.

கடைசி முயற்சியாக ஹீரோ சுனில்தத்தும், கேமரா மேன் தம்புவும் கூட்டு சேர்ந்தார்கள். வலுக்கட்டாயமாக நாயகியை வேழத்தின் மேல் ஏற்றி, பாடல் காட்சியைப் படமாக்கினர்.

மும்பை பிலிமாலயா சினிமா ஸ்டுடியோ. தொலைபேசி என்பது அதிசயமாகக் கருதப்பட்ட 1960. கோடையில் ஒரு நாள். உச்ச நட்சத்திரங்கள் சென்னைக்குத் தொடர்பு கொள்ள வேண்டுமானால் ட்ரங்கால் போட்டுத்தான் பேச வேண்டும்.

அத்தனைப் பெரிய சினிமா ஸ்டுடியோவில் நிர்வாகி அறையில் மட்டுமே தொலைபேசி இருந்தது.

வெளியே புழுங்கியது. வைஜெயந்தி மாலாவுக்கு அன்று டெலிபோன் தேவைப் பட்டது. மேனஜர் ரூமுக்குள் நுழைந்தார். நிர்வாகி முகர்ஜி ஏதோ அவசர வேலையாக வெளியேறினார்.

காலியாக இருந்த முகர்ஜியின் நாற்காலியிலேயே அமர்ந்து கொண்டார் வைஜெயந்தி மாலா.

திலீப் குமார் திடீரென்று என்ட்ரி ஆனார். எதிர்பாராமல் வைஜெயந்தி மாலாவைப் பார்த்ததும்,

‘ ஓ...! நீங்களா...! நீங்கள் தான் இனி பிலிமாலயா நிர்வாகியா...? கடவுளே! நீ தான் பிலிமாலயாவைக் காப்பாற்ற வேண்டும்...’ என்று அலறியவாறு அங்கிருந்து அகன்றார்.

தொலைபேசி அன்று வைஜெயந்தியின் கையில் படாத பாடு பட்டது. ஒப்பனை நடிப்புடன் ஓவர் டைமாக டெலிபோன் ஆபரேட்டர் உத்யோகமும் உற்சாகம் அளித்தது.

எங்கெங்கோ இருந்து ரசிகர்கள், நட்சத்திரங்கள் குறித்து ஆவலாக விசாரிப்பது திரைத் துறையின் அன்றாட அஜந்தா.

madhumathi.jpg 

அன்றைக்கும் எக்கச்சக்க போன் கால்கள். அனைத்துக்கும் அதிரடியாகப் பதில் சொன்னவர் வைஜெயந்தி!

‘திலீப் குமார் எங்கே இருக்கிறார். பிலிமாலயாவிலா...?’

‘இப்போது தான் அவரை யாரோ கடத்திக்கொண்டு போய் விட்டார்கள்’.

‘ஹவ் ஈஸ் வைஜெயந்தி மாலா...?’

‘பேரப் பிள்ளைகளைச் சீராட்டிக் கொண்டிருக்கிறார்’.

‘ஸ்டுடியோ முக்கியஸ்தர்’ முகர்ஜியைக் குறித்து விசாரித்தவர்கள் எல்லாரையும், பிற்பகல் மூன்று மணிக்கு வரச் சொல்லி விட்டார் வைஜெயந்தி மாலா.

முகர்ஜிக்கு மூச்சுத் திணறும் அளவுக்கு மூன்று மணி முதல் அவரது அறையில் தள்ளுமுள்ளு!

----------------

சிங்கிள் பீஸ் நீச்சல் உடை அணிவதே ஆபாசமாகக் கருதப்பட்ட 1964. கமல் உலக நாயகனாக உலா வராத, நட்சத்திர உதடுகள் ஈரமாகாத இந்திய டாக்கியின் வறண்ட காலம்.

ஜெர்மன் நடிகை காரின்டோர்- வைஜெயந்தி மாலா சந்திப்பு நடந்தது.

‘உங்கள் ஊர் சினிமாவில் லவ் சீன்களில் கிஸ் அடிப்பது இருக்கவே இருக்காதா..?‘

வைஜெயந்தி மாலா வாயை இறுக மூடிக்கொண்டு, ‘நோ... நோ...’ எனத் தலை அசைத்ததும்,

‘பின்னர் காதலை நீங்கள் எப்படி வெளிக் காட்டுவீர்கள்...?’

‘அஃதொன்றும் பெரிய காரியமில்லை. லவ்வைச் சொல்ல ஒரு டூயட் போதும் எங்களுக்கு!’

http://www.dinamani.com

  • தொடங்கியவர்

வைஜெயந்தி மாலா: 6. ஸ்ரீராம ஜெயம்...!

 

 

எந்தத் தருணத்தில் உள்ளே புகுந்தது என்ற உணர்வறியாமல் சுவாசம் போல் சீராக ஓடிக் கொண்டிருந்தது காதலும். காய்ச்சல் தீர்ந்த கணத்திலா... நோய் தீர்க்க வந்த மருத்துவரை நோக்கிய முதல் நொடியிலா..?

மருந்துகளை விடவும் வைத்தியரின் புன்சிரிப்பே வியாதிகளை விரட்டக் கூடிய முதல் வலி நிவாரணி. பாலிக்கு அந்த வித்தை புரிந்திருக்கக் கூடும்.

'பாரதம் கொண்டாடும் பார் புகழும் அழகியின் பிணி தீர்க்க வந்திருக்கிறோம்...! ' என்கிற ரகசிய இறுமாப்பை, எப்படியாவது பிரதிபலித்து விடத் துடித்த உதடுகளின் அனிச்சையான செயலின் நல் விளைவு...!

இரு பாலரின் ஒருமித்த உணர்வுகளும் ஊசிகளின் ஒத்தடத்தில், ஓயாமல் இடம் மாறி ஒத்திகைகள் தேவைப்படாமல், உடனடியாக உட் புகுந்ததா காதலும்..?

ஒப்பனைகளின் ஊர்வலத்தில் நாள் தோறும் கூடு விட்டு கூடு பாய்ந்து, அன்றாடம் அரிதாரம் பூசித் தனக்குத் தானே அந்நியமாகி, எழிலைச் சிதைக்கும் செயற்கை ஒளியில் வேற்று மனிதர்களுடன் நினைவு மறந்து, காமிரா முன்பு நின்று அழுது புலம்பி கண்ணீர் விட்டு, சிரித்து வேடிக்கைக் கதைகள் பேசி... லட்சம் லட்சமாக ஊதியம் வாங்கும் கனவுக்கன்னிக்கும் நிஜத்தில் காதல் கனிந்தே விட்டது.

புண்ணைத் துடைத்த பஞ்சாக தூரத் தூக்கி வீசுவதா காதல்...? உள்ளத்தை செல் அரிக்கும் புற்று நோய் அல்லவா.

தாமதமாகவேணும் வைஜெயந்திக்கு வசந்தத்தின் அஞ்சல் வந்து விட்டது!

அகவைகளின் எண்ணிக்கையில் யவ்வனம் விடை பெற்றுப் போனாலும், கட்டுப்பாடுகளுடன் கட்டிக் காத்தத் தமிழச்சியின் தேகத்தில் இளமையின் அணைக்கட்டு நிரம்பி வழிந்தது.

பஞ்சாப்பைப் பூர்வீகமாகக் கொண்டவர் சமன்லால் பாலி. சாமர்த்தியங்கள் கை வரப் பெற்ற அனுபவசாலி! மும்பையில் ராஜ் கபூர் முதலான உச்ச நட்சத்திரங்களின் குடும்ப டாக்டர். திருமணமாகி மூன்று குழந்தைகளின் தகப்பனார்.

முதல் மனைவியோடு நெய்த நேசப் புடைவையில் கிழிசல் விழுந்த சூழல்.

கலை மாந்தர்களால் கர்வஸ்திரி என்று கிசுகிசுக்கப்பட்ட வைஜெயந்தியுடனான சந்திப்பும், நெருக்கமான தோழமையும் வாயில் சர்க்கரையைத் தூவிற்று.

இனி தன் காதல், அதற்கான காரண காரியங்கள் பற்றி வைஜெயந்தி உங்களுக்குச் சொல்வார்.

vaijayanti-mala-bali-10.jpg 

‘10.3.1968ல் ஆழ்வார்பேட்டையில் உள்ள எங்கள் வீட்டில் டாக்டர் பாலியை மணந்து கொண்டேன். எங்களுடையது ஒருவரையொருவர் புரிந்து கொண்ட காதல் திருமணம்.

ஆனால் அந்தக் காதல் கூட எனக்கு நேர்ந்த விபத்தின் மூலமாக, உடனடியான திருமண விழாவுக்கு வழி வகுத்தது.

டைரக்டர் ஸ்ரீதரின் தேன் நிலவு படத்தில் நடித்துக் கொண்டிருந்தேன். அது சரியான குளிர் சீசன். சும்மாவே காஷ்மீர் எப்படியிருக்கும் என்பது அதை அனுவித்தவர்களுக்குத் தெரியும்.

டால் ஏரியில் நானும் ஜெமினி கணேசனும் பங்கேற்ற,

'ஓஹோ எந்தன் பேபி... நீ வாராய் எந்தன் பேபி... '

பாடல் காட்சி படமாகிக் கொண்டிருந்தது.

டால் லேக் வெளிப் பார்வைக்குத்தான் ரொம்ப அழகு. உள்ளே கொடிகள் பின்னிய மாய வலை!

நான் துடுப்பு போட்டுப் படகில் போவேன். அந்தக் காட்சியை காமிரா மேன் வின்சென்ட் வெவ்வேறு கோணங்களில் படமாக்க விரும்பினார்.

ஓரிரு தடவை அவர் நினைத்தவாறே எடுத்து முடிக்க, வின்சென்ட்டின் மூன்றாவது முயற்சியில் விபரீதம் நிகழ்ந்தது.

வேகமாக இழுத்துச் செல்லும் ஓடத்தின் துடுப்புக் கயிறை, நான் கை நழுவி விட்டு விட எவரும் எதிர் பாராமல் படகு கவிழ்ந்து விட்டது.

ஷூட்டிங் பார்த்துக் கொண்டிருந்தவர்கள், ஓஹோ படத்தில் அதுவும் ஒரு பரபரப்பான கட்டம் என்று ரசித்தவாறு நின்றனர்.

நீந்தத் தெரிந்தும் நான் மூழ்கிக் கொண்டிருந்தேன்.

மொத்த யூனிட்டும் செய்வதறியாமல் திகைக்க, தண்ணீரில் என் தத்தளிப்பை முதலில் உணர்ந்தவர் ஒளிப்பதிவாளர் வின்சென்ட்.

தன் உயிரையும் பொருட்படுத்தாமல் சட்டென்று ஏரிக்குள் தாவிக் குதித்து, என்னை எச்சரிக்கையாகக் கைப்பற்றி இன்னொரு படகில் சேர்ப்பித்தார்.

டால் லேக்கில் தவறி விழுந்தவர்கள் பிழைப்பது அபூர்வமாம். ஏரியின் அடி ஆழத்தில் தாவரப் பாறைகளாகப் பரந்து கிடக்கும் கொடிகளுக்கு இடையில் சிக்கி, நீச்சல் வீரர்களும் இறந்து போவது உண்டாம்.

அதையெல்லாம் கேள்விப்பட்டதும் நான் பிழைத்தது தெய்வச் செயல் என்று உணர்ந்தேன். அதோடு என்னைக் காப்பாற்றிய வின்சென்ட்டுக்கு, எதுவும் நேராமல் இருந்ததை எண்ணி இறைவனுக்கு நன்றி சொன்னேன்.

அந்தச் சம்பவத்தால் எனக்கு ஜூரம் வந்து விட்டது. அதிர்ச்சி, குளிர், விஷப்பூச்சி கடியால் பாதிப்பு எல்லாம் சேர்ந்து படுக்கையில் தள்ளிவிட்டது.

முதலில் மலேரியா, அடுத்து டைபாயிட் என்று புதுசு புதுசாக, எனக்கு வந்த காய்ச்சலுக்கு விளக்கம் கொடுத்தார்கள்.

இடைவிடாத ஜுரம் இரண்டு மாதமாக என்னைப் படாதபாடு படுத்தியது.

உடல் நலக் குறைவாக இருந்த சமயம். உடனிருந்து எனக்குத் தீவிர சிகிச்சை அளித்தவர் டாக்டர் பாலி!

கையில் டாக்டர் கிட்... படு ஸ்டைலான டிரஸ்... பளிச்சென்று முகத்தில் அடிக்காமல் இதமான கலரில் சூட், அதற்கு மாட்சாக கழுத்தில் டை, பூட்ஸ்!

பாக்கெட்டில் இருக்கும் கர்ச்சீப் கூட டிரஸ்ஸூக்கு மேட்சாக இருக்கும்.

எனக்கு எப்போதுமே மிகப் பொருத்தமாக உடை அணிகிறவர்களை ரொம்பப் பிடிக்கும்.

பார்த்த அந்த நிமிஷத்திலேயே அவரையும் பிடித்தது. எங்களுக்குள் நல்ல அறிமுகமும் நட்பும் ஏற்கனவே உண்டு. என்றாலும்... நோயாளியான என்னிடத்தில் பாலி காட்டிய கனிவும், பிணி தீர்க்கச் செலுத்திய அக்கறையும், என் மீது கொண்ட தனிப்பட்ட ஈடுபாடும்...அவரையே என் வாழ்க்கைத் துணைவராக ஏற்கும் நிலையை ஏற்படுத்தியது. அன்று அரும்பிய அன்பு நிறம் மாறாமல் இறுதி வரையில் நிரந்தரமாக நீடித்தது.

v9_1384419201_640x640-960x560.jpg 

திருமணத்துக்குப் பிறகு நான் நடிப்பதை நிறுத்திக் கொண்டேன். டாப் லெவல்ல நின்ற நேரம் அது. இந்தியிலும் தமிழிலும் தொடர்ந்து படங்கள் இருந்தன. என்றாலும் விலகினேன்.

எதைச் செய்தாலும் அதைச் சரியாகச் செய்ய வேண்டும் என்ற எண்ணமே அதற்கான காரணம். குடும்ப வாழ்க்கைக்கு வந்த பிறகு முழு கவனம் செலுத்தினால் மாத்திரமே, கணவரின் தேவைகளை மிகச் சரியாக நிறைவேற்ற முடியும்.

ஆர்வக் கோளாறில் குடும்பம் - சினிமா என்று இரண்டையும் இணைத்துப் போட்டுக் கொண்டு, எதிலும் ஓர் முழுமை ஏற்படாத நிலையை நான் விரும்பவில்லை. '- வைஜெயந்தி மாலா.

ஆயிரம் இருந்தும் மரோ சரித்ரா காதல் போல வைஜெயந்தியின் நேசப்பயிரும் நீண்ட காலம் அறுவடைக்கு ஏங்கி நின்றது. காரணம் பாலியின் முதல் மனைவியுடனான விவாகரத்துக்கானக் காத்திருப்பு. கிட்டத்தட்ட ஏழு ஆண்டுகள் நெடிய தவத்தின் பலன்... முறைப்படியான வைதீக விவாஹத்தில் நிறைவு பெற்றது.

பொறுப்புள்ள மனைவியாகப் பெயர் பெற, சினிமாவில் நடிப்பதைக் கணவருக்காகக் கை விட்டு விட்டார் வைஜெயந்தி மாலா.

அன்புள்ள அத்தான் பாலி தன் பிரியசகிக்குக் காட்டிய நன்றி என்ன தெரியுமா...?

உயர் ரக மீன்களை அயல் நாட்டுக்கு அனுப்பி, அதிக லாபம் ஈட்டும் ஏற்றுமதி வணிகத்தில் ஈடுபட்டார்.

‘பாலி கோல்ட் ஸ்டோரேஜ்’ என்கிற பெயரில் பனிக்கட்டிகளைப் பாதுகாக்கும் நிறுவனத்தையும் நடத்தி வந்தார்.

வைஜெயந்தி மாலா பற்றி அவருடைய சிநேகிதி திருமதி சுசிலா பத்மநாபன் -

‘வைஜெயந்தியின் இஷ்ட தெய்வம் - ஸ்ரீஇராமபிரானுக்கு சூடாமணி தந்த சிரஞ்சீவி ஆஞ்சநேயர்’.

சீதா ராம ஸ்தோத்ரம் உள்பட அத்தனை ஸ்தோத்ரமும் வைஜெயந்திக்குத் தலை கீழ்ப்பாடம்.

Vyjayanthimala.jpg 

புதுப் படமொன்றுக்குத் தன் பூஜைகளை முடித்துக் கொண்டு, வைஜெயந்தி கையெழுத்திடும் போது நள்ளிரவு கடந்து இரண்டரை மணி ஆகி விட்டது.

கடவுளை வேண்டாமல் சுவாமி கும்பிடாமல் பகவானைத் துதித்து ஸ்லோகங்கள் சொல்லாமல் வைஜெயந்தி எந்தக் காரியத்திலும் ஈடுபட மாட்டார்.

சுசித்ரா சென், நடிகையர் திலகம் சாவித்ரி ஆகியோர் மீது அதிக அபிமானமும் மதிப்பும் கொண்டவர்.

தன் படங்களின் முதல் நாள் சிறப்புக் காட்சி பார்க்க விரும்புவதில்லை. அவரிடமும் புடவை சுரங்கம் உண்டு.

நகைகள் அணியப் பிடிக்காது பாப்பாவுக்கு. கவிதைகள் எழுதுவதில் ஆர்வம் நிறைய.

குளிர் ஒத்து வராது. சிம்லா, ஊட்டி என்று மலைப் பிரதேசங்களில் ஷூட்டிங் என்றால் அவரது எழில் முகம் வாடி விடும்.

நாட்டியப் பேரொளி பத்மினிக்கு, பாப்பா என்றால் கொள்ளை ஆசை.

‘வஞ்சிக் கோட்டைவாலிபன்’ ஷூட்டிங்கின் போது வைஜெயந்தியின் ரசிகை நான்’ என்பார் பப்பி அடிக்கடி.

‘வைஜெயந்தி மாலா எப்படித்தான் தன் உடலை இத்தனை அழகாகப் பராமரித்து வருகிறார்’ என்று பப்பி பிரமிப்பார். - திருமதி சுசிலா பத்மநாபன்.

திருமதி சுசிலா பத்மநாபன், பத்மினி கூறியதாக எழுதியதை ‘நாட்டியப் பேரொளி’யும் வழி மொழிந்துள்ளார்.

‘இந்திப்பட உலகில் நாட்டியம் ஆடக்கூடிய நடிகைகள் மிகக் குறைவு. அதில் ஒரு சாதனையைச் செய்தவர் வைஜெயந்தி மாலா.

அவருடைய இளமை குன்றாத அழகு இன்னமும் அப்படியே இருக்கிறது.

இப்போது அவர் என்னைப் போலவே நடிப்பதை விட்டு விலகி, நாட்டியப்பள்ளி நடத்திக் கொண்டிருக்கிறார். ' பத்மினி.

IMG_2846.JPG 

வைஜெயந்தி பணமே குறியாக வாழ்ந்தவர் அல்ல. பரதத்தில் அவர் காட்டிய அக்கறை, ஆர்வம், இன்பம், ஈடுபாடு, உத்வேகம், ஊக்கம், எதிர்பார்ப்பு, ஏற்றம், எல்லாமே ஐயமின்றி அவரை ஒப்பற்ற ஓர் நாட்டியத் தாரகையாக்கி நிரந்தரமாக ஒளி வீசச் செய்தன.

வடக்கின் உச்ச நட்சத்திரமாக இந்துஸ்தானியின் கலை பிரம்மாக்களுடன் அரிதாரம் பூசி நடித்த போதும் சென்னை மேடைகளை அவர் மறந்தது கிடையாது.

வைஜெயந்தியின் கலை வாழ்வின் உச்ச பட்ச ஆண்டான 1964லும், அவர் மியூசிக் அகாடமியில் ‘சண்டாளிகா’ நாட்டிய நாடகத்தை நடத்தினார்.

வைஜெயந்தி மாலாவின் நடனக்குழுவில் அங்கம் வகித்தவர் சாந்தி. இயக்குநர் ஸ்ரீதரின் அறிமுகத்துக்குப் பின்னர் அவர் ‘வெண்ணிற ஆடை நிர்மலா’வானது தமிழ் சினிமா வரலாறு.

நம்ம ஊர் நிர்மலா மட்டும் அல்ல. ஹாலிவுட் நடிகை ‘ஷெர்லிமேக்சின்’. அவரும் வைஜெயந்தியின் அன்புக்கு அடங்கி பரதம் கற்றுக் கொண்டவர்.

பொதுவாக குருதட்சணை என்பதைத்தான் நாம் கேள்விப்படுகிறோம்.

‘வைஜெயந்தி மாலா தன்னுடைய மாணவி ஷெர்லி மேக்சினின், நாட்டியக் கலை அர்ப்பணிப்புக்காக 18 பட்டுப் புடைவைகளைப் பரிசாக அளித்துள்ளார். '

இந்திய சினிமாவில் நிகரற்ற சாதனைகளை நிகழ்த்திய வைஜெயந்தி மாலாவுக்கு 1968 ல் மத்திய அரசு பத்மஸ்ரீ விருது வழங்கி கவுரவித்தது.

அந்த மிட்டாய் நொடிகளில்

‘பத்மஸ்ரீ வைஜெயந்தி மாலா’வின் அருமை பெருமைகளை சினிமா இதழ் ஒன்றில் எழுதி இன்புற்றார் ஏவி.எம்.

கங்கா ஜமுனாவில் வைஜெயந்தியின் உயரிய நடிப்பைக் கண்டு பூரித்தது உண்டு. ‘அமர்பாலி’யில் அவரது ஆடை அணிகலன்களையும், நடனம் ஆடிய வேகத்தையும் பார்த்து வியந்திருக்கிறேன்.

நமது இந்தியக் கதாநாயகிகளில் இளமைத் தோற்றத்துடன், உடலமைப்பைச் சீராக வைத்துக் கொண்டிருக்கும் ஒரே நடிகை வைஜெயந்திமாலா என்பதை நான் துணிந்து சொல்வேன்!

பாப்பாவின் திறமையும் பன்மடங்கு கூடியிருக்கிறது.

வைஜெயந்தி ஒரு பிறவிக் கலைஞர். குறிப்பாக நடனத்தில் அவருக்குள்ளப் பற்று சொல்ல முடியாதது.

பல லட்சக் கணக்கான ரூபாய் வருமானமுள்ள சினிமாத் துறையில் உள்ள அவர், சில ஆயிரம் ரூபாய் மட்டுமே கிடைக்கக் கூடிய நடனத் துறையில் நாட்டம் செலுத்தி, பல புதுப் புது நாட்டிய நாடகங்களை உருவாக்கி வருவதிலிருந்தே நடனக் கலை மீது அவருக்குள்ள ஈடுபாடு தெரியும்.’- ஏ.வி. மெய்யப்பச் செட்டியார்.

‘1969ல் ஐக்கிய நாடுகளின் சபையில் ஆடுகிற மிக அரிதான கவுரவமும் வைஜெயந்திக்குக் அமைந்தது’.

vaijayanthi and son.jpg 

சிறந்த நடிகைக்கான பிலிம்பேர் பரிசு மூன்று முறை, பிலிம்பேரின் வாழ்நாள் சாதனையாளர் விருது ஆகியன வைஜெயந்தியால் கவுரவம் பெற்றவை.

பரதம், சினிமா, நாட்டியப்பள்ளி, நடன ஆராய்ச்சி, ஆடல் கலை குறித்த இசை ஆல்பங்கள் என்று சலிக்காமல் உழைத்த சாதனைப் பெண்மணியின் அடுத்த கட்டம் அரசியல்.

வேறு எந்தத் தமிழ் நடிகைக்கும் கிடைக்காத வெற்றி, இரு முறை மக்கள் அவைத் தேர்தலில் வைஜெயந்திக்கு வாய்த்தது.

தமிழ் நாட்டில் எப்போதும் அனைவரின் கவனத்தை ஈர்க்கும் மிக கவுரவமான, கடினமான முக்கியத் தொகுதி தென் சென்னை.

1984 மற்றும் 1989 தேர்தல்களில் வைஜெயந்தி மாலா காங்கிரஸ் சார்பில் நின்றார். இரு முறையும் தென் சென்னை மக்களால் நாடாளுமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

1984ல் 48,017 வாக்கு வித்தியாசத்தில் இரா. செழியன், 1989ல் 1,25,844 கூடுதல் ஓட்டுகளில், ஆலடி அருணா போன்ற பழுத்த அரசியல்வாதிகளை வைஜெயந்தி மாலா தோற்கடித்தார்.

வைஜெயந்தி மாலாவின் கணவர் பாலி 1986 ஏப்ரல் 21 ஆம் தேதி மூளையில் ரத்தக் கசிவு ஏற்பட்டதன் காரணமாக இயற்கை எய்தினார்.

வைஜெயந்திமாலாவின் ஒரே மகன் சுசீந்திர பாலி. மாடலிங், சினிமா என்று வளர ஆரம்பித்தார். திரைத் துறையில் எதிர்பார்த்த வாய்ப்புகள் அமையாமல் போனது.

ஆரம்பத்தில் யதுகிரி பாட்டி, கல்யாணத்துக்குப் பின் கணவர் பாலி, தற்போது மகன் சுசீந்திர பாலி என்று வைஜெயந்திக்கு உற்சாகமூட்டி உறவுகள் புகழ்த் தேடித் தந்துள்ளன.

1933 ஆகஸ்டு 13ல் பிறந்த வைஜெயந்தி மாலாவுக்குத் தற்போது வயது 83.

‘லிவிங் லெஜென்ட்’ என்கிற ஆங்கில சொல்லின் முழு அர்த்தம் அவர்!

மத்திய சர்க்கார் சவுகர்யமாக வைஜெயந்தி மாலாவை மறந்து விட்டது.

சசி கபூர், மனோஜ் குமார் என்று வடக்கத்திய வேட்டிகளுக்கே தாதா சாஹிப் பால்கே விருது வழங்குகிறது மோடி அரசு.

அவ்வுயரிய கவுரவத்துக்கு வைஜெயந்தி மாலாவின் பெயரை அடுத்த ஆண்டிலாவது தமிழ்த் திரை உலகமும், மாநில அரசும், மக்களும் பலமாக சிபாரிசு செய்ய வேண்டும்.

http://www.dinamani.com/

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.