Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

எல்லோரும் இந்நாட்டு மந்திரிகள்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

[30 - January - 2007] [Font Size - A - A - A]

பாராளுமன்ற சந்தர்ப்பவாத அரசியல் நாடகத் தொடரின் `வனப்புமிகு' காட்சியொன்றை இலங்கை மக்கள் நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை தரிசித்தனர். சுதந்திர இலங்கையின் பிரமாண்டமான அமைச்சரவை ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ முன்னிலையில் பதவிப் பிரமாணம் செய்து கொண்டது. அமைச்சரவையின் 52 உறுப்பினர்களும் அமைச்சரவை அந்தஸ்து அற்ற 33 அமைச்சர்களும் 19 பிரதியமைச்சர்களும் ஜனாதிபதியுடன் சேர்ந்து காலிமுகத்திடல் நோக்கி புன்னகை பூத்தவண்ணம் புகைப்படங்களை எடுத்துக்கொண்டனர். பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சியின் 19 பாராளுமன்ற உறுப்பினர்களும் ஷ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் 6 பாராளுமன்ற உறுப்பினர்களும் ஆளும்தரப்புக்குத் தாவியதையடுத்து அரசாங்கத்துக்கு பாராளுமன்றத்தில் ஒரு ஆசனம் கூடுதலான பெரும்பான்மைப்பலம் கிடைத்துவிட்டது என்று அறிவிக்கப்பட்டது.

முன்னாள் பிரதித் தலைவர் கரு ஜெயசூரிய உட்பட ஐ.தே.க.விலிருந்து அரசாங்கத்துடன் இணைந்தவர்களில் 10 பேர் அமைச்சரவையில் இடம்பிடித்துக் கொண்டனர். எதிரணியில் தொடர்ந்து இருப்பதில் `அர்த்தமில்லை' என்பதைப் புரிந்துகொண்ட முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீமும் அரசாங்கத்துடன் இணைந்து அமைச்சராகிக் கொண்டார். தனது அரசியல் வாழ்வில் மிகப் பெரிய சவாலை எதிர்நோக்கும் எதிர்க்கட்சித் தலைவர், தனது தலைமையிலான ஐ.தே.க.வுக்கு நேர்ந்திருக்கும் கதி குறித்து அலட்டிக் கொள்ளாதவர் போன்று அயல் நாடுகளுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டிருக்கிறார். இலங்கை எதிர்நோக்குகின்ற பிரதான நெருக்கடிகளின் கருவூலமான கட்சி அரசியல் போட்டாபோட்டி அதன் கைவரிசையை மீண்டும் ஒரு தடவை காட்டியிருக்கிறது.

ஆளும் ஷ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும் ஐ.தே.க.வும் கடந்த அக்டோபரில் செய்துகொண்ட புரிந்துணர்வு உடன்படிக்கையை விக்கிரமசிங்க விசுவாசிகள் கிழித்து எறிந்திருக்கிறார்கள். இன நெருக்கடித் தீர்வுக்கான முயற்சிகள் உட்பட முன்னுரிமைக்குரிய 6 விவகாரங்களில் இரு பிரதான கட்சிகளும் ஒத்துழைத்துச் செயற்படுவதற்கான வரலாற்று முக்கியத்துவ ஏற்பாடு என்று வர்ணிக்கப்பட்ட இப்புரிந்துணர்வு உடன்படிக்கை நான்கு மாதங்கள் கூட நீடித்து நிலைக்கமுடியவில்லை. உண்மையிலேயே, ஜனாதிபதி ராஜபக்ஷ ஒருபோதுமே புரிந்துணர்வு உடன்படிக்கையை மானசீகமாக விரும்பியதில்லை. அவ்வாறு விரும்பியிருந்தால், அதை வெளிக்காட்டுவதற்கு அவருக்கு தாராளமாகவே சந்தர்ப்பங்கள் இருந்தன. ஐ.தே.க. பாராளுமன்ற உறுப்பினர்கள் அரசாங்கத் தரப்புக்குத் தாவிய கையோடு புரிந்துணர்வு உடன்படிக்கையை விக்கிரமசிங்க விசுவாசிகள் கிழித்தெரிந்த சம்பவம் அந்த உடன்படிக்கையில் கைச்சாத்திட்டதில் ஐ.தே.க.தலைவருக்கு இருந்த நோக்கத்தை அம்பலப்படுத்தி நிற்கிறது. ஐ.தே.க.உறுப்பினர்களை அரசாங்கத்தில் சேர்த்துக்கொண்ட ஜனாதிபதியின் செயல் புரிந்துணர்வு உடன்படிக்கையின் உணர்வுகளுக்கு எதிரானதேயல்ல என்று ஜனாதிபதி தரப்பு கூறுகிறது. இரு தரப்பினரும் சந்தர்ப்பவாத நோக்கங்களுக்காகவே உடன்படிக்கையைச் செய்து கொண்டனர்.

இத்தகையதொரு பாரிய கட்சித் தாவலுக்கு உற்சாகமளித்தும்கூட, ஜனாதிபதி ராஜபக்ஷவினால் தனது அரசாங்கத்துக்கு பாராளுமன்றத்தில் 113 ஆசனங்களுக்கு மேலாக பலத்தை அதிகரிக்க முடியவில்லை. அதேவேளை, ஜனாதிபதியாக அவர் 2005 நவம்பரில் அதிகாரத்துக்கு வந்த பின்னர் செய்திருக்கும் முதலாவது பாரிய அமைச்சரவை மாற்றம் அவரது ஷ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் மூத்த உறுப்பினர்கள் மத்தியில் மனக்குமுறலை ஏற்படுத்தியிருக்கிறது என்பது ஒன்றும் இரகசியமான தல்ல. தனது அரசாங்கத்தின் பாராளுமன்றப் பலத்தை மேலும் அதிகரிப்பதற்காக ஜனாதிபதி, எதிரணியிலிருந்து வரக் கூடிய மேலும் உறுப்பினர்களுக்கு அமைச்சர் பதவிகளைக் கொடுக்கத் தயாராயிருக்கவும் கூடும். பிரதான எதிர்க்கட்சியை பல வீனப்படுத்துவதில் ஜனாதிபதி ராஜபக்ஷ கண்டிருப்பதாக வர்ணிக்கப்படும் வெற்றி எந்தளவுக்கு கனதியானது என்பதை அடுத்துவரும் நாட்களின் அரசியல் நிகழ்வுப் போக்குகளே தீர்மானிக்கும்.

புதிய அமைச்சரவை மாற்றத்தின் பின்னர் அமைச்சர் பதவிகளைப் பெற்றவர்களின் எண்ணிக்கைகள் தொடர்பில் சிறுவர், சிறுமிகளிடையே புதிர்வினாவிடைப் போட்டியொன்றே நடத்தலாம் போலத் தோன்றுகிறது. அரசாங்கத்தரப்பில் எந்தவொரு அமைச்சுப் பதவியையும் பெறாமல் வெறுமனே பாராளுமன்ற உறுப்பினர்களாக எத்தனைபேர் இருக்கிறார்கள்? ஐ.தே.க.வில் இருந்து அரசாங்கத்துக்கு மாறியவர்களில் பதவி எதையும் பெறாதவர்கள் எத்தனைபேர்? ஜனாதிபதியின் கட்சியைத்தவிர, அரசாங்கத்தில் இணைந்து கொண்ட ஏனைய கட்சிகளின் பாராளுமன்ற உறுப்பினர்களில் எத்தனைபேர் பதவி எதையும் பெறாமல் இருக்கிறார்கள்? 113 பாராளுமன்ற உறுப்பினர்களைக் கொண்ட அரசாங்கத்தில் ஏற்படுத்தப்பட்டிருக்கும் அமைச்சுப் பொறுப்புகளின் எண்ணிக்கை என்ன? இவ்வாறாக வினாக்களை அடுக்கிக்கொண்டே போகலாம்.

சனத்தொகை விகிதாசாரத்துடன் ஒப்பிடும்போது ஜனாதிபதி ராஜபக்ஷவின் அரசாங்கத்தின் அமைச்சரவை தான் உலகத்திலேயே மிகப் பெரிய அமைச்சரவையாக இருக்குமோ என்று சந்தேகிக்க வேண்டியிருக்கிறது. இத்தனை பெருந்தொகையானோருக்கு அமைச்சர் பதவிகளை வழங்கிய பின்னரும்கூட, ஜனாதிபதி வசம் இன்னும் ஐந்து அமைச்சுகள் இருக்கின்றன. இந்த `மெகா' அமைச்சரவை மேலும் விஸ்தரிக்கப்படாது என்பதற்கு எந்த உத்தரவாதமுமேயில்லை. அரசாங்க பாராளுமன்றக் குழுக் கூட்டத்துக்கும் அமைச்சரவைக் கூட்டத்துக்கும் இடையே வித்தியாசம் இல்லாமல் போகக்கூடும். எல்லோரும் இந்நாட்டு மன்னர்கள் என்று சொல்வார்களே... இலங்கையில் இவர்கள் எல்லோருமே மந்திரிகள். மக்கள் தான் பாவம்!

w3.thinakkural.com

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.