Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வீட்டுக்கு வெளியே சகோதரிகள்...உள்ளே தம்பதிகள்! #LGBTcouples

Featured Replies

வீட்டுக்கு வெளியே சகோதரிகள்...உள்ளே தம்பதிகள்! #LGBTcouples

 

தம்பதி

வளசரவாக்கத்தில், நடுத்தர வர்க்கத்து வாழ்க்கைச்சூழல் கொண்ட லைன் வீடு. ஜான்சியும், லட்சுமியும் அங்கு தான் குடியிருக்கிறார்கள். வெளியுலகத்தைப் பொறுத்தவரை இருவரும் சகோதரிகள். உண்மையில்..? தம்பதிகள்..! 

“எட்டு வருஷமாச்சு, நாங்க வாழ்க்கையில இணைஞ்சு... லட்சுமி இல்லாத ஒரு வாழ்க்கையை என்னால நினைச்சுக்கூடப் பாக்க முடியலே...' - கண்கள் பனிக்கச் சொல்கிறார் ஜெனி. “வெளியில போகும்போது ஜெனி எனக்கு அக்கா... வீட்டுக்குள்ள என் பிரியமுள்ள மாமா.."- நெகிழ்ந்து போய் பேசுகிறார் லட்சுமி. 

ஜான்சிக்கு சொந்த ஊர் செங்கற்பட்டு. லட்சுமிக்கு காஞ்சிபுரம். ஒரு எக்ஸ்போர்ட் நிறுவனத்தின் விடுதியில் தங்கியிருந்தபோது காதல் பற்றிக்கொண்டது. இருவரும் ஒற்றை வாழ்க்கையில் இணைந்து விட்டார்கள். 

“நான் லட்சுமியை சந்திச்சது ரொம்பவே சங்கடமான தருணம். என் பிரியத்துக்கு உரிய ஒரு பெண்ணை இழந்துட்டு தனிமையில தவிச்ச நேரம். "உன் கூடப் பேசிக்கிட்டே இருக்கனும் போலருக்கு ஜெனி... உன் மடியில தலை வச்சுப் படுத்தா கவலையெல்லாம் மறந்துபோகுதுடி.."ன்னு லட்சுமி சொல்வா. அதேமாதிரி தேடல் எனக்கும் இருந்துச்சு. சமூகம் எங்களை தம்பதியா ஏத்துக்காதுன்னு தெரியும். நம்ம வாழ்க்கையைத் தீர்மானிக்க சமூகத்துக்கு என்ன உரிமை இருக்கு. நாம தானே தீர்மானிக்கனும்..." -ஜெனி முன்வைக்கிற கேள்விக்கு என்னிடம் பதில் இல்லை. 

“எனக்கு நாலைஞ்சு வயசு இருக்கும்போதே, குடும்பத்தோட தேயிலை தோட்டத்துல வேலை செய்ய இடுக்கிக்குப் போயிட்டோம். பத்தாம் வகுப்பு வரைக்கும் படிச்சேன். 13 வயசுல எல்லோருக்கும் வர்ற பருவ சிந்தனைகள் எனக்கும் வந்துச்சு. ஆனா, என் தேடல்ல ஆண்கள் இல்லை. என் வயதுள்ள பெண்கள் தான் இருந்தாங்க. குறிப்பா, உஷா என் மனதுக்கு இதமா இருந்தா. எங்க வீட்டுல எப்பவும் இருக்கமான சூழ்நிலை இருக்கும். என் பிரச்னைகளை பேசக்கூட முடியாது. யாரும் காது கொடுத்துக் கேட்க மாட்டாங்க. ஆனா, உஷா என் மேல அவ்வளவு அன்பு காட்டுனா. அவளுக்கு பூர்வீகமே இடுக்கி தான். இணை பிரியாத தோழிகளா இருந்த நாங்க, ஒரு கட்டத்துல பிரிக்க முடியாத இணைகளா மாறிட்டோம். ஒருநாள், நாங்க ரெண்டும் தனிச்சிருந்ததை அம்மா பாத்திட்டாங்க. பெரிய அதிர்ச்சி அவங்களுக்கு. அடி, உதை... தோழமையா இருந்த ரெண்டு குடும்பமும் கடும் சண்டையோட பிரிஞ்சுச்சு.

உடனடியா ரெண்டு பேருக்குமே திருமண ஏற்பாடு தொடங்குச்சு. "யாராவது பெண் பார்க்க வந்தா, விஷத்தை குடிச்சிட்டு செத்துருவேன்"னு சொல்லிட்டேன். உஷாவை மூணாறுல இருந்த சொந்தக்காரங்க வீட்டுல கொண்டு போய் விட்டுட்டாங்க. மூணாறு போய் வீதி வீதியா தேடுனேன். மலைப்பகுதியில ஒரு வீட்டுல இருந்தா. அவளுக்கு நிச்சயதார்த்தம் அளவுக்குப் போயிடுச்சு. "இனிமே இங்கே இருக்கக்கூடாது"ன்னு, ஒருநாள் அதிகாலையில ரெண்டு பேரும் ஊரைவிட்டு கிளம்பிட்டோம். ஆனா, பஸ் கிளம்புறதுக்கு முன்னாடியே எங்களை பிடிச்சுட்டாங்க. அவ தற்கொலைக்கு முயற்சி செஞ்சா... நான் சுவர்ல முட்டிக்கிட்டு அழுதேன். தேயிலை எஸ்டேட் பூராவும் வேடிக்கை பார்த்துச்சு. இதுக்கு மேல போராட முடியாதுன்னு தெரிஞ்சு போச்சு. “சரி... சொந்தக்காரங்கள்லாம் சந்தோஷப்படுற மாதிரி உனக்கான ஒரு வாழ்க்கையை அமைச்சுக்கோன்னு சொல்லி அவளை அமைதிப்படுத்திட்டு நான் செங்கற்பட்டுல இருந்த மாமா வீட்டுக்கு வந்துட்டேன்.

ஆனா, வீட்டுல இருக்கப் பிடிக்கலே. வெறுத்துப் போச்சு. ஒரு எக்ஸ்போர்ட் நிறுவனத்தில சேந்து, ஹாஸ்டல்லயே தங்கிட்டேன். அங்கே தான் லட்சுமியும் வேலை செஞ்சுக்கிட்டிருந்தா. ரொம்ப சீக்கிரமே என்கிட்ட ஒட்டிக்கிட்டா. மனசுக்கு உகந்த தோழியா இருந்தா. அவ கூட இருந்தா கஷ்டமெல்லாம் மறைஞ்சது போல இருந்துச்சு. பெரிய ஆறுதலா இருந்தா. ஒருநாள், "உன் வாசனை பிடிச்சிருக்குடி... நீ மட்டும் ஆம்பிளையா இருந்தா, உன்னைத்தான் கட்டியிருப்பேன்"னு சொன்னா. "ஏன்... இப்ப கல்யாணம் பண்ணிக்க மாட்டியா"ன்னு கேட்டேன். அப்படித்தான் எங்க உறவு தொடங்குச்சு.

லட்சுமியும் என்னை மாதிரி தான். அவளுக்கும் ஆண்கள் மேல ஈர்ப்பே இல்லை. நாங்க ஏன் இப்படி இருக்கோம்ங்கிற கேள்விக்கு எங்ககிட்ட பதில் இல்லை. பிறப்பிலேயே இப்படியான்னு கேட்டா, ஆமான்னு தான் சொல்லுவேன். நான் ஆண் இல்லை. பெண் தான். ஆனா, என்னை ஈர்க்கிறது பெண் தான். இது வெறும் பாலியல் மட்டும் சார்ந்த விஷயமில்லை. மனசு சம்பந்தப்பட்டது. 

ஒரு ஆணை, என் இணையா நினைச்சுக்கூடப் பார்க்க முடியலே. அண்ணனா, தம்பியா, அப்பாவா அந்த உறவை நான் மதிக்கிறேன். அதுக்கு மேல, இன்னொரு உறவா அந்த மேலாதிக்கத்தை என்னால தாங்க முடியாது..."-  உணர்வுப்பூர்வமாக பேசுகிறார் ஜான்ஸி.

“நாங்க ஒருத்தருக்கு ஒருத்தர் மனப்பூர்வமா விரும்பினோம். இது எங்க தோழிகளுக்கும் தெரியும். சில தோழிகள், “இதெல்லாம் என்னடி வாழ்க்கை... வெளியில தெரிஞ்சா, தப்பாப் பேசுவாங்க"ன்னு சொன்னாங்க. சில தோழிகள் எங்களைப் புரிஞ்சுகிட்டாங்க. அவங்க முன்னாடி மோதிரம் மாத்தி எங்க உறவை உன்னதமாக்கிக் கிட்டோம். திருமண விழாவை கொண்டாடித் தீர்த்தாங்க. தனியா வீடு பிடிச்சு வாழ்க்கையை ஆரம்பிச்சோம். வெளியில எங்க உறவைப் பத்தி யாருக்கும் தெரியாது.

ரெண்டு பேரும் பியூட்டிஷியன் தொழிலைக் கத்துக்கிட்டோம். ஒரு தெலுங்கு சீரியல் நடிகைக்கிட்ட வேலைக்குச் சேந்தோம். கை நிறைய சம்பளம் கிடைக்குது. லட்சுமிக்கு அம்மா இல்லை. அப்பா மட்டும் தான். அவருக்கு மாதாமாதம் ஒரு தொகையை அனுப்பிடுவோம். என்னைப் பெத்தவங்களுக்கும் கொஞ்சம் பணம் அனுப்புவோம். 

எந்த மனச்சிக்கலும் இல்லை. நல்ல புரிதல் உள்ள இணையா லட்சுமி இருக்கா. வீட்டுக்குள்ள என்னை மாமான்னு தான் கூப்பிடுவா. ஒரு வேலையும் செய்ய விடமாட்டா. "என்ன நீ பொம்பளை மாதிரி வேலையெல்லாம் செய்யிறே"ன்னு கேப்பா... "நான் பொம்பள தாண்டி"ன்னா சிரிப்பா.

எப்போதாவது நாங்க, எங்க எதிர்காலத்தைப் பத்தி யோசிக்கிறதுண்டு. இந்த சமூகத்தில எங்களை மாதிரி வெளியில ஒரு வாழ்க்கையும், வீட்டுக்குள்ள ஒரு வாழ்க்கையும் வாழுற எவ்வளவோ பெண்கள் இருக்காங்க. திருமணமான பெண்கள் நிறைய பேர், இப்படியான மறைமுக உறவோட வாழுறாங்க. நூத்துக்கு ஐம்பது பெண்கள் நிறைய கொடுமைகளை அனுபவிச்சுக்கிட்டு சகிப்புத்தன்மையோட வாழ்ந்துக்கிட்டிருக்காங்க. ஆண்டவன் புண்ணியத்துல எங்களுக்கு அந்தமாதிரி கொடுமையான வாழ்க்கை அமையலே. எங்களால குழந்தைகளைப் பெத்துக்க முடியாது. ஆனா, தத்தெடுக்க முடியும், அதுக்கு சில சட்ட மாற்றங்கள் வரவேண்டியிருக்கு. அதுவரைக்கும் நாங்க காத்திருப்போம்..." என்கிறார் ஜான்ஸி. தன் இல்லத்தரசியை பெருமிதமாகப் பார்த்துக் கொண்டிருக்கிறார் லட்சுமி.

IMG_8245_13420.jpg

 

பெரம்பூரில் பேருந்து நிலையத்தை ஒட்டியிருக்கும் சிறு வீட்டில் வசிக்கிறார்கள் ராஜாவும், ஜானும். வெளியில் நண்பர்களாக அறிமுகமாகியுள்ள இருவரும் தம்பதிகளாகத் தான் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். ராஜா அம்மன் பக்தர். கழுத்தில் மஞ்சள் கயிறு தொங்குகிறது. சமையல் தொடங்கி, சகல வேலைகளையும் ராஜா தான் செய்கிறார். பெயரை, தன் கணவனுக்காக ராஜ சுலோக்ஷனா என்று மாற்றி வைத்துக் கொண்டிருக்கிறார். 

“பத்து வயசிலேயே எனக்குள்ள பெண்மை இருக்கிறதை நான் புரிஞ்சுக்கிட்டேன். ஆனா, அதை எப்படி வெளிக்காட்டுறதுன்னு தெரியலே. வீட்டுல சொல்லக்கூடிய நிலையும் இல்லை. எனக்கு ஒரு அக்கா, ஒரு தங்கச்சி. அவங்க வாழ்க்கை பாதிச்சிடுமேங்கிற பயம். எல்லா உணர்வையும் மனசுக்குள்ளேயே வச்சு தச்சுக்கிட்டு நடைபிணம் போல வாழ்ந்துக்கிட்டிருந்தேன். என்னைமாதிரியே சில சகோதரிங்க தொடர்பு கிடைச்சுச்சு. என்னால அவங்கள மாதிரி குடும்பத்தை விட்டுட்டு சுதந்திரமா போகமுடியலே. படிப்பு ஏறலே. ஒரு நிறுவனத்தில ஆபீஸ் பாயா வேலைக்குச் சேந்தேன். எல்லாருமே என்னைத் தவறா பாத்தாங்க. பேசுனாங்க. பேண்ட் சட்டை போட்டுக்கிட்டு ஆம்பிளையா உலவினாலும், மனசுக்குள்ள பரிபூரணமான ஒரு பெண்ணா தான் இருந்தேன்.

அபிராமி தியேட்டர்ல மூணு வருஷம் முன்னாடி தான் இவங்களைப் பாத்தேன். மத்தவங்க பார்த்த பார்வைக்கும், இவங்க பார்த்த பார்வைக்கும் நிறைய வித்தியாசம் தெரிஞ்சுச்சு. உங்க பேர் என்னன்னு கேட்டாங்க. சொன்னேன். சினிமாவைப் பார்க்காம என்னையே பார்த்து சிரிச்சுக்கிட்டு இருந்தாங்க. படம் முடிஞ்சதும் "உன் போன் நம்பரைக் கொடு"ன்னு கேட்டு வாங்கினாங்க. மறுநாள் பேசினாங்க. உங்களுக்கு கல்யாணம் ஆயிடுச்சான்னு கேட்டேன். இல்லேன்னாங்க. "அப்போ என்னைக் கல்யாணம் பண்ணிக்கிறீங்களா?"ன்னு கேட்டேன். “காமெடி பண்ணாதடா... ரெண்டு பேரும் பிரண்ட்ஸா இருப்போம்ன்னு சொல்லிட்டு வச்சுட்டாங்க. ஆனா, என்னால இருக்க முடியலே. ஒருநாள், அவங்க வீட்டுல போய் நின்னேன்.. என்னைப் பார்த்ததும் அதிர்ந்து போயிட்டாங்க.."-  வெட்கப்படுகிறார் ராஜா.

“எனக்கும் இவன் மேல ஈர்ப்பு இருந்துச்சு. ஆனா, இதையெல்லாம் வெளியில சொல்ல முடியுமா? வீட்டுக்கு வந்தவனை பிரண்ட்னு சொல்லி அறிமுகம் செஞ்சேன். அதுக்குப்பிறகு நிறைய வெளியில சுத்துனோம். விதவிதமா பரிசுப்பொருட்கள் கொடுப்பான். அவங்க வீட்டுக்கும் கூட்டிக்கிட்டுப் போவான். யாரும் எங்களை சந்தேகத்தோட பார்க்க மாட்டாங்க. ஒருமுறை, எனக்கு தாலி கட்டியே ஆகனும்ன்னு நின்னான். "வெளியில வரும்போது கழட்டி வச்சிடனும்"ங்கிற உறுதிமொழியோட நண்பர்கள் முன்னிலையில தாலி கட்டினேன். 

அதுக்குப் பிறகு, திருட்டுத்தனமான வாழ்க்கை வேணான்னு முடிவு செஞ்சோம். இந்த வீட்டைப் பிடிச்சோம். வெளியில யாருக்கும் எங்க உறவு தெரியாது. ஆனா, வீட்டுக்குள்ள நாங்க கணவன் மனைவி. எம்மேல உயிரையே வச்சிருக்கான் ராஜா. ஒரு பெண்ணால இப்படியொரு வாழ்க்கையை எனக்குத் தர முடியாது. என்னை உபசரிக்கிறதாகட்டும், எனக்கான தேவைகளை நிறைவு செய்யிறதாகட்டும், அவ்வளவு சந்தோஷமா செய்வான்.

எங்க அப்பா, அம்மாவை அத்தை மாமான்னு தான் கூப்பிடுவான். எனக்கு கல்யாணத்தை இன்ட்ரஸ்ட் இல்லைன்னு வீட்டுல சொல்லிட்டேன். ராஜா, நல்லா சமைக்கக் கத்துக்கிட்டான். மீன் குழம்பும், தோசையும் செஞ்சா, எண்ணிக்கை மறந்து சாப்பிடலாம்..." என்கிறார் அசீஸ்.

“எனக்காக, உறவுகளையே விட்டுட்டு வாழ்க்கையை அர்ப்பணிச்சிருக்காங்க. இவங்களுக்கு நான் வேற என்ன செய்ய முடியும்..? காலம் முழுவதும் அவங்களை கஷ்டப்படாம வச்சுக்கனும்.." என்று நெகிழ்ந்து சொல்கிறார் ராஜா என்கிற ராஜசுலோக்ஷனா. 

IMG_8293_13108.jpg

ஜான்ஸி-லட்சுமி, ஜான்-ராஜா போல, சென்னையில் நிறைய தம்பதிகள் வாழ்கிறார்கள்" என்கிறார் இந்தியன் கம்யூனிட்டி வெல்ஃபேர் ஆர்கனிசேஷன் இயக்குனர் ஹரிகரன். “ஓருபால் ஈர்ப்பு உள்ளவர்கள் பல்வேறு மட்டங்களில் இருக்கிறார்கள். பெண் ஈர்ப்பாளர்கள், ஆண் ஈர்ப்பாளர்கள், திருநம்பிகள் என பலவகையினர் இருக்கிறார்கள். மேல்தட்டு, அடித்தட்டு வர்க்கங்களில் உள்ள ஒருபால் ஈர்ப்பாளர்கள், தக்க இணைகளோடு வாழும் நிலை உருவாகியிருக்கிறது. நடுத்தர வாழ்க்கையில் உள்ள ஒருபால் ஈர்ப்பாளர்கள் தான் ஒருங்கிணைப்பு இல்லாமல் வாழ்கிறார்கள். இதுமாதிரியான வாழ்க்கை வெகுஜன சமூகத்திற்கு அதிர்வு அளிப்பதாகவே இருக்கும். ஆனால், இந்த விளைவை மாற்ற முடியாது. பெண் ஒருபால் ஈர்ப்பாளர்களுக்காக நாங்கள் தொடங்கிய ஹெல்ப் லைனில் நிறைய பேர் தொடர்பு கொண்டு பேசுகிறார்கள். தகுந்த விழிப்புணர்வை உருவாக்குவது ஒன்றே நாம் செய்யக்கூடிய செயல்.." என்கிறார் ஹரிகரன். 

http://www.vikatan.com/news/life-style/74133-about-two-lgbt-couples-living-in-chennai.art

  • கருத்துக்கள உறவுகள்

இது எதோ பேய் பிசாசு கதை என்றுதான் நானும் எண்ணி வந்தேன் ....
இப்படியானவர்கள் மேல் 15-20 வருடம் முன்பு வெறுப்பும் ஆத்திரமும் எனக்கும் 
இருந்ததுதான். அதன் முக்கிய காரணம் அறியாமை என்பதை 
பின்னாளில் அறிவு சற்று வளரும்போது அறிய கூடியதாக இருந்தது.


இவர்கள் பிறப்பிலேயே அவ்வாறு பிறந்து விடுகிறார்கள்.
தங்களை போன்றவர்களுடன் வந்து எங்களை வாழுங்கள் என்று சொன்னால் .....??
நாம் எதிர்ப்பை காட்டலாம்.

தங்களை போன்றவர்களுடன் ஒத்து வாழ போகிறோம் என்பதை 
எந்த அடிப்படியில் மறுப்பது என்பது புரியவில்லை.

சமூகங்கள் அரசுகள் இது சார்ந்து மேலதிக ஆய்வுகளை செய்துவிடாவது 
இவர்களை இவர்கள் பாட்டில் விடுவது நல்லது என்றே தோன்றுகிறது.
இவர்களை தண்டிப்பதால் நாம் பெற இருக்கும் லாபம் என்று ஏதும் இல்லை. 

தாய் தந்தை பாசம் இல்லாது ஆடு மாடுகள் போல் வளர்ந்த இந்தியா 
போன்ற நாடுகளில் இப்படி அதிகம் பேர் இருக்கலாம்.
இந்தியா போன்ற நாடுகள் இது சார்ந்து விரைவாக ஒரு முடிவை எட்டுவது நன்று !

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.